பிள்ளை பெற்றவரைப் பார்த்துப் பெருமூச்சு விடல்





18.  பிள்ளை பெற்றார் தமைப் பார்த்து...

அள்ளித்தெள் நீறு அணியும் தண்டலையார்
      வளநாட்டில் ஆண்மை உள்ளோர்,
விள்ளுற்ற கல்வி உள்ளோர், செல்வம் உள்ளோர்,
      அழகு உடையோர் மேன்மை நோக்கி,
உள்ளத்தில் அழன்று அழன்று, நமக்கு இல்லை
      என உரைத்து இங்கு உழல்வார் எல்லாம்,
பிள்ளைபெற் றவர்தமைப் பார்த்து இருந்துபெரு
      மூச்சு எறியும் பெற்றி யாரே.

            இதன் பொருள் ---

     தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில் ---தூய திருநீற்றை அள்ளி எடுத்து அணிகின்ற திருத்தண்டலை நீள்நெறி நாதரின் வளப்பம் பொருந்திய நாட்டில்,

     ஆண்மை  உள்ளோர் --- வீரம்  உடையோர்,

     விள்ளுற்ற கல்வி உள்ளோர் --- விளக்கம் பெற்ற கல்வி அறிவு உள்ளோர்,

     செல்வம் உள்ளோர் --- செல்வம் உடையோர்,

     அழகு உடையோர் --- அழகு மிக்கவர்

     (ஆகிய இவர்களின்),

     மேன்மை நோக்கி --- உயர்வைக் கண்டு,

     நமக்கு இல்லை என உள்ளத்தில் அழன்று அழன்று இங்கு உழல்வார் எல்லாம் --- இந்த ஆண்மை, இந்த அறிவு, இந்த செல்வம், இந்த அழகு நமக்குக் கிடைக்க வில்லையே என்று மனத்தில் வெதும்பி வெதும்பித்  திரிபவர்கள் எல்லோரும்,

     பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து --- பிள்ளை பெற்றவர்களைப் பார்த்து,

     இருந்து பெருமூச்சு எறியும் பெற்றியார் --- இது போன்ற பிள்ளை நமக்கு வாய்க்கவில்லையே என்று பெருமூச்சு விடும் தன்மை உள்ளவர்கள் ஆவர்.
          
     கருத்து --- பொறாமை : பிறர் ஆக்கம் கண்டு மனம் வெதும்புதல். 


தீராத குறை





20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்தும் மதி
     தேகவடு நீங்கவில்லை;
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன்
     செறும்பகை ஒழிந்தது இல்லை;

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரைவேறு
     இலாமலே வாயு ஆகும்;
இனியகண் ஆகிவரு பரிதி ஆனவனுக்கு
     இராகுவோ கனவிரோதி;

ஆசிலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும்
     அமைத்தபடி அன்றிவருமோ?
அவரவர்கள் அனுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
     அல்லால், வெறுப்பது எவரை?

வாசவனும் உம்பர் அனை வரும்விசய சயஎன்று
     வந்துதொழுது ஏத்து சரணா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     வாசவனும் உம்பர் அனைவரும் வந்து விசய சய என்று தொழுது ஏத்து சரணா --- இந்திரனும் பிற தேவர்களும் சந்நிதியில் வந்து, ‘வெல்க! வெல்க' என்று வணங்கித் துதிக்கும் திருவடிகளை உடையவனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தேசு பெறு மேரு பிரதட்சணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை --- ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் சந்திரனில் உள்ள களங்கம் ஒழியவில்லை;

     திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும்பகை ஒழிந்தது இல்லை ---- திருமால் அறிதுயில் கொள்ளும் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கு, பாம்பு குலத்திற்குப் பகையான கருடனின் பகைமை ஒழியவில்லை;

     ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் --- சிவபிரானின் கழுத்திலே அணியாக இருக்கும் பாம்புக்குக் காற்றைத் தவிர வேறு உணவு இல்லை;

     இனிய கண் ஆகி வரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி --- சிவபெருமானுக்கு இனிய வலக்கண்ணாக உள்ள சூரியனுக்கு அற்பனான இராகுவே பெரும் பகைவன்;

(இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்),

     ஆசு இலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ --- குற்றமற்ற பெரியோரைச் சார்ந்து இருந்தாலும் கூ, விதிக்கப்பட்டபடி அல்லாமல் வேறு வருமோ? வராது.

     அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் எவரை வெறுப்பது --- அவரவருடைய வினைப் பயனை அவரவர்களே அனுபவித்தல் வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.

        விளக்கம் --- வசு - பொன். வாசவன் - பொன்னுலகத் தலைவன். தேவலோகத்தைப் பொன்னுலகம் வன்பர். உம்பர் - மேலிடம். மேருமலையைச் சூரியனும் திங்களும் பிற கோள்களும் வலம் வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும். பாம்புக்கும் கருடனுக்கும் இயல்பாகவே பகை உணர்வு உண்டு. பாம்பு சிவபெருமானது திருக்கழுத்தில் இருந்தும், அதற்கு இரை கிடைக்கவில்லை. காற்றையே உண்டு வாழுகின்றது.

     பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும் அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடுக்காமல், தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார். மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும் மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு மோகினியை விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம் பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் மட்டும் உணர்வுபெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான். அவன் அவுணன் என சூரியனும் திங்களும் மோகினியிடம் சொன்னார்கள். மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு கூறாக ஆனான். எனினும் அமுதம் உண்டதனால் அவன் இறக்கவில்லை. இரு கூறுகளும் இராகு கேது என்னும் பெயருடன் கதிரவனையும் திங்களையும் ஆண்டுதோறும் விழுங்குவதுஎன்று தவத்தின் மூலம் வரம் பெற்ற பாம்புகள் ஆகின. அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல் வேண்டும். அவர்கள் எந்த நிலையினர் ஆயினும் விலக்கு அல்ல.
 

உடல் நலம் பேணுதல்





19. உடல் நலம் பேணுதல்

மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
     மறுவறு விரோசனந்தான்
வருடத்து இரண்டுவிசை, தைலம் தலைக்கிடுதல்
     வாரத்து இரண்டுவிசையாம்,

மூதறிவி னொடுதனது வயதினுக்கு இளையஒரு
     மொய்குழ லுடன்சையோகம்,
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
     முதிரா வழுக்கையிள நீர்,

சாதத்தில் எவளாவு ஆனாலும்பு சித்தபின்
     தாகந் தனக்குவாங்கல்,
தயையாக உண்டபின் உலாவல்,இவை மேலவர்
     சரீரசுகம் ஆம் என்பர்காண்,

மாதவகு மாரிசா ரங்கத்து உதித்தகுற
     வள்ளிக்கு உகந்த சரசா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     மாதவ குமாரி சாரங்கத்து உதித்த குறவள்ளிக்கு உகந்த
சரசா --- (உன்னை மணம் புரிய வேண்டும் என்று) பெருந்தவம் புரிந்த மங்கையும், மான் வயிற்றிலே உதித்தவளும் ஆன வேடர் குலத்திலே வளர்ந்தவளும் ஆன வள்ளியம்மையின் மனத்திற்கு இனிமையானவனே!,

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     மாதத்து இரண்டு விசை மாதரைப் புல்குவது --- மாதத்திற்கு இரண்டு முறை பெண்களைக் கூடுவது,

     மறு அறு விரோசனம் தான் வருடத்து இரண்டு விசை --- குற்றமற்ற வயிற்றுக் கழிவுக்கு மருந்து இடுதல் ஆண்டுக்கு இருமுறை,

     தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசை ஆம் --- எண்ணெய் தலையில் தேய்த்து முழுகுவது வாரத்துக்கு இரண்டு முறை,

     மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்குழலுடன் சையோகம் --- பேரறிவு கொண்டு, தனக்கு வயதில் இளையவளும், அடர்ந்த கூந்தலையுடையவளும் ஆகிய ஒரு பெண்ணுடன் சேர்க்கை,

     முற்று தயிர் --- முதிர்ந்த தயிர்,

     காய்ச்சு பால் --- காய்ச்சிய பால்,

     நீர் மோர் --- நீர் மிகுந்த மோர்,

     உருக்கு நெய் --- உருக்கிய நெய்,

     முதிரா வழுக்கை இளநீர் --- முற்றாத வழுக்கையை உடைய இளநீர்,

     சாதத்தில் எவ்வளவு ஆனாலும் புசித்தபின் தாகம் தனக்கு வாங்கல் --- எவ்வளவு உணவானாலும் உண்ட பிறகே நீர் குடித்தல்,

     தயையாக உண்டபின் உலாவல் --- உடம்பின் மேல் இரக்கம் வைத்து உண்ட பிறகு சிறிதே உலாவுதல்,

     இவை --- இவற்றை,

     மேலவர் சரீரசுகம் ஆம் என்பர் --- பெரியோர் உடலுக்கு நலத்தைத் தருபவை ஆகும் என்று மேலோர் கூறுவர்.

        விளக்கம் --- திருமாலின் பெண்கள் இருவர் முருகனை அடையத் தவஞ்செய்தனர். வானவரிடம் தெய்வயானையாக இந்திரனின் வெள்ளானையால் வளர்க்கப்பட்ட ஒருவரும், மான் வயிற்றில் பிறந்து வேடர்குடியில் வள்ளியம்மை என்னும் ஒருவருமாக வளர்ந்தனர்.

சங்கரி தன் மருமகளை, சங்கு அரி தன் மகளை,
     சங்கரிக்கும் சங்கரனை மாமன் என்னும் தையலை,
வெங்கரி தந்திடு பிடியை, விண்ணவர் கோன் சுதையை,
     விண்ணவர்கள் பணிந்து ஏத்தும் விண்ணுலகத்து அணங்கை,
பைங்கழு நீர் விழியாளைப் பைங்கழுநீர் நிறமே
     படைத்தாளை, கைங்கழு நீர் செங்கரம் கொண்டவளை,
செங்கமலை தரும் அமுதை, கந்தர் இடத்து அமரும்
     தெய்வயானையைத் தொழுது திருவருள் பெற்றிடுவாம்.

என்னும் பாடலால், தெய்வயானை அம்மை பற்றி விளங்கும்.

மாதவனோர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
     வனமானாய் வந்தெதிர் மலர் மானை புணரப்
பூதல மங்கையர் உருவாய் அவதரித்து வள்ளிப்
     பொருப்புறையும் பொருப்பர் மணை விருப்பமுடன் வளர்ந்து
தீதகலும் திணை காத்து வேங்கை உருவெடுத்த
     செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருக்கை கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வளர் பாகத்தருளும்
     கன்னி எனும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.

என்னும் பாடலால், வள்ளியம்மை மானின் வயிற்றில் உதித்தவர் என்பது தெளிவு.

     சாரங்கம் - மான். சரசன் - இனியவன். புல்குதல் - தழுவுதல். மறு - குற்றம். விரோசனம் - வயிற்றுப் போக்கு மருந்து. மொய்த்தல் - நெருங்குதல். குழல் - கூந்தல். சையோகம் - சேர்க்கை.

     உடம்பினிடம் உழைப்பு வாங்குவோர், அது நீடித்து இருக்கவும் நினைக்க வேண்டும். எனவே, உடம்பிடம் இரக்க்க்க காட்டவேண்டும் என்பதற்காகத் "தயையாக உலாவல்" என்று கூறினார்.

     ஒருவன் போற்றிக் காக்க வேண்டியவைகளுள் அவனது உடம்பும் ஒன்று.  அதனைக் காக்கா விட்டால் துன்பம் தரும் என்னும் பொருள்பட அமைந்த ஆசாரக் கோவைப் பாடல் பின்வருமாறு.....

தன் டம்பு, தாரம், அடைக்கலம், தன் யிர்க்கு என்று
ன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும்
பொன்னினைப் போல் போற்றிக் காத்து உய்க்க, உய்க்காக்கால்
மன்னிய ஏதம் தரும்.                      

         தன்னுடைய உடம்பும், மனைவியும், அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு உதவியாகும் என்று, நினைத்துச் சேர்த்து வைத்த பொருளும்,  ஆகிய இந்த நான்கையும் பொன்னைக் காப்பதுபோல, ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக. அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடில் மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும்.


திருவண்ணாமலை - 0559. சிவமாது உடனே





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிவமாது உடனே (திருவருணை)


அடியேனுடைய வறுமையும், நோயும் தொலைய
அண்ணாமலையில் எழுந்தருளிய முருகா!
உனது வேலையும் மயிலையும் எனக்குத் தந்து அருள்.


தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான


சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித்

திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி

இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத

இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே

தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத்

தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே

கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா

கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சிவமாது உடனே அநுபோகம் அதுஆய்,
     சிவஞான அமுதே ...... பசியாறி,

திகழ்வோடு இருவோர் ஒரு ரூபம் துஆய்
     திசை லோகம் எலாம், ......அநுபோகி

இவனே என, மால் அயனோடு, மரோர்
     இளையோன் எனவே ...... மறை ஓத,

இறையோன் இடமாய் விளையாடுகவே,
     இயல் வேலுடன் மா ...... அருள்வாயே.

தவலோகம் எலாம் முறையோ எனவே,
     தழல்வேல் கொடு போய், ...... அசுராரைத்

தலைதூள் பட, ஏழ் கடல்தூள் பட, மா-
     தவம் வாழ்வு உறவே ...... விடுவோனே!

கவர் பூ வடிவாள் குறமாதுடன் மால்
     கடன் ஆம் எனவே ...... அணைமார்பா!

கடையேன் மிடிதூள் பட, நோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.


பதவுரை


      தவலோகம் எலாம் முறையோ எனவே --- மிகுந்துள்ள உலகங்கள் எல்லாம் முறையோ என்று ஓலமிட,

     தழல்வேல் கொடு போய் --- நெருப்பை வீசும் வேலுடன் சென்று

     அசுராரைத் தலைதூள் பட --- அசுரர்களின் தலைகள் தூள் படவும்,

     ஏழ்கடல் தூள்பட --- எழுகடல்களும் தூள் படவும்,

     மாதவம் வாழ்வு உறவே விடுவோனே --- முனிவர்களின் சிறந்த தவமானது வாழ்வு பெறுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

      கவர் பூ வடிவாள் குறமாது உடன் --- கவர்ச்சியை உடைய மலர் போன்ற வடிவை உடையவளாகிய வள்ளி நாயிகியின் மீது

     மால் கடனாம் எனவே அணை மார்பா --- அன்பு கொள்வது கடன் ஆகும் என்று அவரை அமைந்த திருமார்பினரே!

     கடையேன் மிடி தூள் பட --- கடைப்பட்டவனாகிய அடியேனுடைய வறுமை தூள்பட்டு ஒழியவும்,

     நோய் விடவே --- நோய் தொலையவும் அருள் புரிந்து,

     கனல் மால் வரை சேர் பெருமாளே --- பெருமையுடைய நெருப்பு மலையாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

      சிவமாது உடனே அநுபோகம் அது ஆய் --- சிவம் என்கின்ற தலைவியுடன் இன்பு நுகர்ச்சி கொண்டவனாய்,

     சிவஞான அமுதே  பசியாறி --- சிவஞானம் என்கின்ற அமுதத்தை உண்டு பசி நீங்கி,

      திகழ்வோடு இருவோர் ஒரு ரூபமதாய் --- விளக்கத்துடன் அடியேனும் சிவமாகிய தலைவியும் ஆகிய இருவரும் ஒரு வடிவமாய் ஒன்றி,

     திசை லோகம் எலாம் அநுபோகி இவனே என ---  திசையில் உள்ளோரும் உலகில் உள்ள அனைவரும் சுகாநுபவம் உடையவன் இவன் ஒருவனே என்று வியந்து கூறும்படி,

     மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத  --– திருமால், பிரமன், தேவர் என்ற யாவரும் இவன் இளையோன் என்றும், வேதமும் அவ்வாறே எடுத்துக் கூறவும்,

      இறையோன் இடமாய் விளையாடுகவே --- சிவபெருமானிடத்தில் அடியேனும் உம்மைப் போல் விளையாடி மகிழ

     இயல் வேலுடன் மா அருள்வாயே --- அழகிய வேலையும், மயிலையும் தந்து அருளுவீராக.


பொழிப்புரை


     மிகுந்துள்ள உலகங்கள் எல்லாம் முறையோ என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் தூள் படவும், எழுகடல்களும் தூள் படவும், முனிவர்களின் சிறந்த தவமானது வாழ்வு பெறுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

         கவர்ச்சியை உடைய மலர் போன்ற வடிவை உடையவளாகிய வள்ளி நாயிகியின் மீது அன்பு கொள்வது கடன் ஆகும் என்று அவரை அமைந்த திருமார்பினரே!

         கடைப்பட்டவனாகிய அடியேனுடைய வறுமை தூள்பட்டு ஒழியவும், நோய் தொலையவும் அருள் புரிந்து, பெருமையுடைய நெருப்பு மலையாகிய திருவண்ணாமலையில் எழுந்தருளி உள்ள பெருமையில் சிறந்தவரே!

         சிவம் என்கின்ற தலைவியுடன் இன்பு நுகர்ச்சி கொண்டவனாய், சிவஞானம் என்கின்ற அமுதத்தை உண்டு பசி நீங்கி,  விளக்கத்துடன் அடியேனும் சிவமாகிய தலைவியும் ஆகிய இருவரும் ஒரு வடிவமாய் ஒன்றி, திசையில் உள்ளோரும் உலகில் உள்ள அனைவரும் சுகாநுபவம் உடையவன் இவன் ஒருவனே என்று வியந்து கூறும்படி, திருமால், பிரமன், தேவர் என்ற யாவரும் இவன் இளையோன் என்றும், வேதமும் அவ்வாறே எடுத்துக் கூறவும், சிவபெருமானிடத்தில் அடியேனும் உம்மைப் போல் விளையாடி மகிழ அழகிய வேலையும், மயிலையும் தந்து அருளுவீராக.


விரிவுரை

சிவமாதுடனே அநுபோகமதாய் ---

சிவம் - நன்மை, அன்பு என்பவை.  சிவம் என்ற பெண்மணியுடன் கலந்து இன்புறுதல். இதனைச் சிவபோகம் என்பர்.

இந்தக் கருத்தைப் பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் கூறியுள்ளார்.

சிவசுடர் அதனைப் பாவை மணம் என மருவி.... --- (திருநில) திருப்புகழ்.

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் கலவி
சுகபோக மன்பருக அறியாதே....      ---   திருப்புகழ்.

சிவஞானமுதே பசியாறி ---

உலகை அறிவது - பாசஞானம்.
தன்னை அறிவது - பசுஞானம்
இறைவனை அறிவது - பதிஞானம்.

பதிஞானம் சிறந்தது. இதனைச் சிவஞானம் என்பர்.  இந்தச் சிவஞானமாகிய அமுதத்தை உண்ணுதல் வேண்டும்.  அதனால் பசியாறி பரகதி சித்திக்கும்.

குகனெ குருபர னெஎன நெஞ்சில்
புகழ அருள்கொடு நாவினில்இன்பக்
குமுளி சிவஅமுது ஊறுக உந்திப் பசியாறி....   ---  திருப்புகழ்.

இருவோர் ஒருரூபமதாய் ---

சிவமாகிய தலைவியும் ஆன்மாவாகிய தலைவனும் இரண்டும் ஒன்றாகி நிற்றல் .

இருவரும் உருகிக்காய நிலையென மருவித் தேவர்
இளையவன் எனவித்தாரம் அருள்வாயே ..  ---  (திருநில) திருப்புகழ்.


திகைலோக மெலாம் அநுபோகி இவனே என ---

திகை - திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், அடியேனுடைய சிவானுபவத்தைக் கண்டு விம்மிதம் அடைந்து, "இவனே சுகாநுபவச் செல்வம் உடையவன்" என்று புகழ்ந்து கூறுவர்.

மாலயனோடு அமரர் இளையோன் எனவே மறை ஓத ---

திருமாலும் திசைமுகனும் ஏனைய தேவர்கள் யாவரும் ஏளியேனைப் பார்த்து, "இவன் என்றும் இளையோன்" என்று வியந்து கூறுவர்.  வேதமும் அவ்வாறே வியந்து கூறும்.

இறையோன் இடமாய் விளையாடுகவே இயல்வேலுடன் மா அருள்வாயே ---

"அடியேன் என்றும் அகலாத இளமை பெற்று தேவரீர் சிவபிரானிடம் விளையாடுவது போல் அடியேனும் விளையாடி மகிழ, உமது வேலையும் மயிலையும் எனக்குத் தந்தருள்" என்று வேண்டுகின்றார்.

குறித்து நீ அருகு அழைத்து, மாதவர்
கணத்தின் மெவுஎன அளித்து, வேல்மயில்
கொடுத்து, வேதமும் ஒருத்தன்ஆம் என அருள்வாயே...  ---  (வெடித்த) திருப்புகழ்.

மா - குதிரை.  இது ஆகுபெயராக மயலைக் குறித்து நின்றது.
  
கவர் பூ வடிவாள் குறமாது ---

கவர் - கவர்ச்சி.  வசீகரிப்பு. பூவைப்போன்ற கவர்ச்சி உள்ள திருமேனி உடையவர் வள்ளி பிராட்டியார்.

மால் கடன்ஆம் எனவே அணைவோனே ---

மனமொழிகளால் தன்னையே நினைந்து தவம் புரிந்தவர் வள்ளி நாயகியார்.

குருவி ஓட்டித் தரிந்த தவமானை ---   (அறிவிலா) திருப்புகழ்.

அடியவரை ஆட்கொள்வது இறைவனது கடப்பாடு ஆகும். "தன்கடன் அடியேனையும் தாங்குதல்" என்பார் அப்பர் பெருமான்.

எனவே, வள்ளி எம்பிராட்டியை ஆண்டது முருகனுடைய கருணைத் திறத்தின் சிகரம் ஆகும்.

வள்ள பிறந்தது குறவர் குலம் என்ற சிறுமையைப் பாராது, அவர் புரிந்த தினைப்புனக் காவல் என்ற எளிமையைப் பாராமல், மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வனான முருகவேள் அவரை ஆட்கொண்டார்.

கடையேன் மிடி தூள்பட நோய்விடவே ---

அருணகிரிநாதருடைய வறுமை போன்ற சிறுமையும், தொழுநோய் முதலிய துன்பங்களும் ஒரு கணத்தில் அகலுமாறு அருணாசலத்தில் ஆறுமுகப் பெருமான் ஆட்கொண்டு அருளினார்.

கருத்துரை

அருணை மேவும் அரசே! வேல் மயில் தந்து என்னைக் காத்தருள்.


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...