தீராத குறை





20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்தும் மதி
     தேகவடு நீங்கவில்லை;
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன்
     செறும்பகை ஒழிந்தது இல்லை;

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரைவேறு
     இலாமலே வாயு ஆகும்;
இனியகண் ஆகிவரு பரிதி ஆனவனுக்கு
     இராகுவோ கனவிரோதி;

ஆசிலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும்
     அமைத்தபடி அன்றிவருமோ?
அவரவர்கள் அனுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
     அல்லால், வெறுப்பது எவரை?

வாசவனும் உம்பர் அனை வரும்விசய சயஎன்று
     வந்துதொழுது ஏத்து சரணா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

        இதன் பொருள் ---

     வாசவனும் உம்பர் அனைவரும் வந்து விசய சய என்று தொழுது ஏத்து சரணா --- இந்திரனும் பிற தேவர்களும் சந்நிதியில் வந்து, ‘வெல்க! வெல்க' என்று வணங்கித் துதிக்கும் திருவடிகளை உடையவனே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தேசு பெறு மேரு பிரதட்சணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை --- ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் சந்திரனில் உள்ள களங்கம் ஒழியவில்லை;

     திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும்பகை ஒழிந்தது இல்லை ---- திருமால் அறிதுயில் கொள்ளும் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கு, பாம்பு குலத்திற்குப் பகையான கருடனின் பகைமை ஒழியவில்லை;

     ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் --- சிவபிரானின் கழுத்திலே அணியாக இருக்கும் பாம்புக்குக் காற்றைத் தவிர வேறு உணவு இல்லை;

     இனிய கண் ஆகி வரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி --- சிவபெருமானுக்கு இனிய வலக்கண்ணாக உள்ள சூரியனுக்கு அற்பனான இராகுவே பெரும் பகைவன்;

(இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால்),

     ஆசு இலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ --- குற்றமற்ற பெரியோரைச் சார்ந்து இருந்தாலும் கூ, விதிக்கப்பட்டபடி அல்லாமல் வேறு வருமோ? வராது.

     அவரவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும் அல்லால் எவரை வெறுப்பது --- அவரவருடைய வினைப் பயனை அவரவர்களே அனுபவித்தல் வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.

        விளக்கம் --- வசு - பொன். வாசவன் - பொன்னுலகத் தலைவன். தேவலோகத்தைப் பொன்னுலகம் வன்பர். உம்பர் - மேலிடம். மேருமலையைச் சூரியனும் திங்களும் பிற கோள்களும் வலம் வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும். பாம்புக்கும் கருடனுக்கும் இயல்பாகவே பகை உணர்வு உண்டு. பாம்பு சிவபெருமானது திருக்கழுத்தில் இருந்தும், அதற்கு இரை கிடைக்கவில்லை. காற்றையே உண்டு வாழுகின்றது.

     பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும் அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடுக்காமல், தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார். மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும் மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு மோகினியை விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம் பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் மட்டும் உணர்வுபெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான். அவன் அவுணன் என சூரியனும் திங்களும் மோகினியிடம் சொன்னார்கள். மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு கூறாக ஆனான். எனினும் அமுதம் உண்டதனால் அவன் இறக்கவில்லை. இரு கூறுகளும் இராகு கேது என்னும் பெயருடன் கதிரவனையும் திங்களையும் ஆண்டுதோறும் விழுங்குவதுஎன்று தவத்தின் மூலம் வரம் பெற்ற பாம்புகள் ஆகின. அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல் வேண்டும். அவர்கள் எந்த நிலையினர் ஆயினும் விலக்கு அல்ல.
 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...