திருக் கலயநல்லூர்





திருக் கலயநல்லூர்
(சாக்கோட்டை)


     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் சாக்கோட்டை என்று சொல்லப்படுகின்றது.

      கும்பகோணம் - மன்னார்குடி பேருந்துச் சாலையில் உள்ள தலம். கும்பகோணத்திலிருந்து 5 கி. மீ. தொவில் கோயில் உள்ளது.


இறைவர்              : அமிர்தகலசநாதர், 

இறைவியார்           : அமிர்தவல்லி.

தல மரம்                : வன்னி (தற்போதில்லை)

தேவாரப் பாடல்கள்    : சுந்தரர் - குரும்பைமுலை மலர்க்குழலி.

      ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் பெற்றதாக தலவரலாறு சொல்லப்படுகிறது.

          மக்கள் இக்கோயிலை "கோட்டைச் சிவன்கோயில்" என்று சொல்கின்றனர். ஒரு காலத்தில் கோயிலைச் சுற்றிக் கோட்டை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்று அதன் இடிபாடுகளே மேடாகக் காணப்படுகின்றன. கோயிலுக்கு வெளியிலும் உள்ளுமாக இரு அகழிகள் உள்ளன. இதனால் பண்டை நாளில் இது சோழ மன்னர்களின் முக்கிய இடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
   
         இத்தலத்தில் உள்ள சப்தமாதர் சிற்பங்கள் ஒரே கல்லில் புடைச்சிற்பமாகவுள்ளன; தரிசிக்கத்தக்கது.

          இங்குள்ள தட்சிணாமூர்த்தி - புதிய திருமேனி அதிசயமான அமைப்புடையது. இத்திருமேனி வலது மேற்கையில் ருத்ராக்ஷ மாலையும், இடது மேற்கையில் அக்கினியும், வலக்கையில் சின் முத்திரையும், இடக்கையில் சுவடியும், தலைமுடி சூரியபிரபை போலவும் அமைப்புடையதாகி விளங்குகின்றது.

          லிங்கோற்பவர் - பச்சைக்கல்லால் ஆனது. இதன் பாதத்தில் திருமால் மகுடமணிந்த வராகமாகவும், மேலே அன்னமும் பக்கத்தில் திருமாலும், பிரமனும் (சுமார் 2 அடி உயரத்தில்) வணங்கி நிற்கின்றனர். இங்குள்ள அர்த்தநாரி வடிவமும், தபஸ்வியம்மன் வடிவமும் புடைப்புச் சிற்பங்களே.

          இக்கோயில் இராசராசனுக்கு முன்பே கற்கோயிலாகக் கட்டப்பட்டது. எனினும் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் குலோத்துங்க மன்னனாலும், மீண்டும் 16 (அ) 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்க மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மாலும் கொள் வெப்பும் கலைய, நல்லோர் மென் மதுரச் சொல் மாலை செப்பும் கலயநல்லூர்ச் சின்மயனே" என்று போற்றி உள்ளார்.

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நம்பியாரூரர், திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், சிவபுரம் முதலான பல பதிகளையும் வணங்கிப் போற்றித் திருக்கலய நல்லூரில் இறைவரைத் தொழுது பாடியருளியது இத்திருப் பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 66 - 67)


பெரிய புராணப் பாடல் எண் : 66
பெருகும் பதிகம் "பிறைஅணிவாள்
         நுதலாள்" பாடிப் பெயர்ந்து, நிறை
திருவின் மலியும் சிவபுரத்துத்
         தேவர் பெருமான் கழல்வணங்கி,
உருகும் சிந்தை உடன்போந்தே,
         உமை ஓர் பாகர் தாம்மகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து,
         கலய நல்லூர் மருங்குஅணைந் தார்

         பொழிப்புரை : வணங்கி அருள்பெருகும், `பிறையணி வாள் நுதலாள்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப்போற்றி, அங்கிருந்து நீங்கிக் குறைவற்ற செல்வமாய சிவம் நிறைந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருப்பதியில் இருந்தருளும் தேவர் தலைவனாய சிவபெருமானின் திருவடிகளையும் வணங்கி, உருகிய சிந்தையுடன் வந்து, உமையொரு கூறராய பெருமான் மகிழ்ந்து உறையும் பதிகள் பிறவும் பணிந்து, திருக்கலயநல்லூர் என்னும் திருப்பதியின் அருகாக வந்தருளினர்.

         `பிறையணி வாள் நுதலாள்\' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.99). சிவபுரத்தில் அருளிய பதிகம் கிடைத் திலது. சிவபுரத்திற்கும் கலயநல்லூருக்கும் இடைப்பட்ட பதிகள் எவையெனத் தெரிந்தில.


பெ.பு. பாடல் எண் : 67
செம்மை மறையோர் திருக்கலய
         நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறஇறைஞ்சி,
         முன்பு பரவித் தொழுதுஎழுவார்,
கொம்மை மருவு "குரும்பைமுலை"
         உமையாள் என்னும் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச்
         சிறப்பித்து, இசையின் விளம்பினார்.

         பொழிப்புரை : செம்மை வாய்ந்த அந்தணர்கள் வாழும் திருக்கலயநல்லூரில் அமர்ந்தருளிய பெருமானின் சேவடிக் கீழ் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளானும் வணங்கி, பெருமானின் திருமுன்பு நின்று போற்றித் தொழுதெழும் அவர், தலைமை பொருந்திய `குரும்பை முலை மலர்க்குழலி\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் மெய்ம்மையான வரலாறுகள் பலவும் வைத்து, இறைவனைச் சிறப்பித்து இசை மிக்க அப்பதிகத்தைப் பாடியருளினார்.

         `குரும்பைமுலை மலர்க்குழலி' எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.16). இப்பதிகத்தில் இறைவன் உமையம்மையாரை மணந்ததும், சலந்தரன், அந்தகாசுரன், முப்புரத்தவர், தக்கன், இராவணன், தாருகன் முதலியோரை அழித்ததும் ஆகிய செய்திகளை அருளியுள்ளார். இதனால், `மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து' என்றார்.


7. 016   திருக்கலயநல்லூர்                    பண் - தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
குறிப்பினொடும் சென்றுஅவள்தன் குணத்தினைநன்கு அறிந்து
விரும்பும்வரம் கொடுத்துஅவளை வேட்டுஅருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்,
அரும்புஅருகே சுரும்புஅருவ, அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்புஅருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` தென்னங் குரும்பை போலும் தனங்களையும் , பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து , அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து , அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து , அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?` என்று வினவின் , பேரரும்புகளின் அருகே சென்று, ` சுரும்பு ` என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப் பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில் , கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 2
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி,
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி,
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்,
பெருமேதை மறைஒலியும் பேரிமுழவு ஒலியும்,
பிள்ளைஇனம் துள்ளிவிளை யாட்டுஒலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலம்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` போரை விரும்பிய சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை , தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி , வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து , இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து , இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது?` என்று வினவின் , மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் , முரசு , மத்தளம் ஆகிய வாச்சியங்களது ஓசையும் , சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால் , கரிய எருமை நீரிற் புக , அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் , தாமரை மலரின்மேல் நெருங்கி விழ , தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 3
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்துஆவின் பால்ஆட்ட, இடறியதா தையைத்தாள்
துண்டம்இடு சண்டிஅடி அண்டர்தொழுது ஏத்தத்
தொடர்ந்துஅவனைப் பணிகொண்ட விடங்கனது ஊர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழஒலியும் மறுகுநிறைவு எய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்துஆடும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` இண்டை மாலையும் விடுபூவும் திரட்டிக்கொண்டு சென்று மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து , கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய , அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி , அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனதுஊர் யாது ?` என்று வினவின் , மண்டபங்களிலும் , கோபுரங்களிலும் , மாளிகைகளிலும் , சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும் , மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற , தாமரைப் பொய் கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 4
மலைமடந்தை விளையாடி, வளைஆடு கரத்தால்
மகிழ்ந்துஅவள்கண் புதைத்தலுமே, வல்இருளாய் எல்லா
உலகுஉடன்தான் மூட, இருள் ஓடும்வகை, நெற்றி
ஒற்றைக்கண் படைத்துஉகந்த உத்தமன்ஊர் வினவில்,
அலைஅடைந்த புனல்பெருகி, யானைமருப்பு இடறி,
அகிலொடுசந் துஉந்திவரும் அரிசிலின்தென் கரைமேல்
கலைஅடைந்து கலிகடிஅந் தணர்ஓமப் புகையால்
கணமுகில்போன்று அணிகிளரும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` மலைமகள் , விளையாட்டை மேற்கொண்டு , மகிழ்ச்சி மேலிட்டவளாய் , அவளது வளைபொருந்திய கைகளால் தனது கண்களை மூடினமையால் , எல்லா உலகங்களையும் ஒருங்கே வலிய இருள் பரந்து மூடிக்கொள்ள , அவ்விருள் நீங்கும்படி நெற்றியிடத்து ஒரு கண்ணைத் தோற்றுவித்து அருள் புரிந்த மேலானவனது ஊர் யாது ?` என்று வினவின் , அலை பொருந்திய நீர் பெருக்கெடுத்து , யானைத் தந்தத்தைப் புரட்டி அகில் மரத்தையும் , சந்தன மரத்தையும் தள்ளிக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென்கரைமேல் உள்ள , நூல்களை யுணர்ந்து அந்நெறியானே வறுமையை ஓட்டுகின்ற அந்தணர்களது வேள்விப்புகையால் , கூட்டமாகிய மேகத்தின் தோற்றம் போன்ற அழகு மிகுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 5
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்துஅமரர் குறைந்துஇரப்ப ,நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால், விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்துஇறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய், எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` தன்னை வழிபடுவோர்க்கு நின்ற கோலமாய்த் தோன்றுபவனாகிய திருமாலும் , தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க , அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக , மலையாகிய வில்லும் , பாம்பாகிய நாணியும் , தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த , உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது ?` என்று வினவின் , சொல்வகைகள் பலவற்றையும், பொருள் வகைகள் பல வற்றையும் உடைய வேதங்கள் நான்கையும், தோத்திரங்கள் பல வற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று , எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண் .


பாடல் எண் : 6
பெற்றிமைஒன்று அறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரம்,தோள்,பல், கரங்கள்பீடு அழியச்
செற்று,மதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்து
அருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்,
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண் பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` தக்கது சிறிதும் அறியாத தக்கனது வேள்வியில் பெரிய தேவர்கள் , தங்கள் தலை , தோள் , பல் , கை , கண் என்னும் உறுப்புக்கள் வலிமையழிந் தொழியுமாறு ஒறுத்து , சந்திரனது கலைகள் சிதையும்படி கால் திருவிரலால் தேய்த்து , பின்பு அவர் எல்லாரிடத்தும் கருணையை மிக வழங்கிய சிவபெருமான் சேர்ந்திருக்கும் ஊர் யாது ?` என்று வினவினால் , பின்னிக்கிடக்கின்ற முல்லைக் கொடியோடு , ` மல்லிகைக் கொடி , சண்பகமரம் ` என்னும் இவைகளும் அலைகளால் உந்தப்பட்டு வருகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில் , கன்றுக்கூட்டம் நல்ல கரும்பின் முளையில் கறித்தலைப் பழக , பசுக் கூட்டம் , மணம் வீசுகின்ற செங்கழுநீர்க் கொடியை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 7
இலங்கையர்கோன் சிரம்பத்தோடு இருபதுதிண் தோளும்
இற்றுஅலற ஒற்றைவிரல் வெற்புஅதன்மேல் ஊன்றி,
நிலங்கிளர்நீர் நெருப்பொடுகாற்று ஆகாசம் ஆகி,
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்,
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரிசந்து அகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` இலங்கைக்கு அரசனாகிய இராவணன் தனது பத்துத் தலைகளும் , இருபது தோள்களும் சிதைந்து அரற்றுமாறு ஒரு விரலைக் கயிலை மலையின்மேல் ஊன்றி , ` நிலம் , மிக்க நீர் , நெருப்பு , காற்று , வானம் , என்னும் பெரும் பொருள்களாகியும் , நிற்பனவும் நடப்பனவுமாகிய உயிர்களாகியும் நிற்கின்ற தூயவனுடைய ஊர் யாது ?` என்று வினவினால் , அலைகளால் பல பழங்களைத் தள்ளி, பெரிய மாணிக்கங்களையும் பொன்னையும் கொழித்து, `பாதிரி, சந்தனம் , அகில்` என்ற மரங்களையும் , தாழம் புதர்களையும் உள்வாங்கி , இவற்றால் எல்லாம் கலங்கல் பொருந்திய நீர் , ஆரவாரித்து வருகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கயல் மீன்கள் பிறழும் வயல்கள் புடை சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .

  
பாடல் எண் : 8
மால்அயனும் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்,
வன்னிமதி சென்னிமிசை வைத்தவன், மொய்த்து எழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன், விடை ஊரும்
விமலன், உமை அவளோடு மேவியஊர் வினவில்,
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடு வண்டுஇசைமுரலப் பசுங்கிளிசொல் துதிக்க,
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலும் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` திருமாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய் நீண்டு நின்றவனும் , வன்னியும் , பிறையும் சடையிற் சூடியவனும் கடலிற் றோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும் , இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது ?` என்று வினவினால் , சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் , அழகிய மயில்கள் ஆடவும் , சுரும்பும் வண்டும் இசை கூட்டவும், பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி , காலை , மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி , உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருக் கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 9
பொரும்பலம் அதுஉடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துஉகந்த புனிதன்,
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்.
இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம்இல வங்கம்
இருகரையும் பொருதுஅலைக்கும் அரிசிலின்தென் கரைமேல்
கரும்புனைவெண் முத்துஅரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` போர் செய்கின்ற வலிமையையுடைய அசுரனாகிய , ` தாரகன் ` என்பவனைப் போர் செய்து அழியச் செய்த முதல்வனாகிய முருகனை முன்பு படைத்து , அவனைத் தன் மகனாக விரும்பிக்கொண்ட தூயவனும் , கரும்பினால் இயன்ற வில்லையும் , மலர்களால் இயன்ற அம்புகளையும் உடையவனாகிய மன்மதன் உடம்பு வெந்தொழியுமாறு நெருப்பாக நோக்கிய கண்ணையுடைய நெற்றியையுடையவனும் ஆகிய சிவபெருமான் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளும் ஊர் யாது ?` என்று வினவினால் , மிக்க நீரினது அலைகள் மேல் எழுந்துசென்று , ` ஏலம் , இலவங்கம் ` என்னும் மரங்களோடே இருகரைகளையும் மோதியழிக்கின்ற அரிசிலாற்றின் தென் கரையில் , பசிய புன்னை மரங்கள் வெள்ளிய முத்துக்களை அரும்பி , பொன்னை மலர்ந்து , பவளத்தினது அழகைக் காட்டுகின்ற நறுமணச் சோலைகள் சூழ்ந்த திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 10
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்துஅழகார் தலத்தில்
தடங்கொள்பெரும் கோயில்தனில் தக்கவகை யாலே,
வண்கமலத்து அயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்துஅருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்,
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசம் கலந்த
கமழ்தென்றல் புகுந்துஉலவு கலயநல்லூர் காணே.

         பொழிப்புரை : ` குளிர்ச்சியை உடைய தாமரைக் குளங்கள் நாற்புறத்தும் சூழப்பெற்ற ஊரில் , திருக்குளத்தைக் கொண்ட பெருங் கோயிலின்கண் முறைப்படி , வளவிய தாமரை மலரில் இருக்கும் பிரம தேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய , அதற்கு மகிழ்ச்சியுற்று இருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது ?` என்று வினவினால் , வெண்மையான கவரி மயிரும் , நீலமான மயில் இறகும் , வேங்கை மரம் , கோங்கமரம் இவற்றினது வாசனை பொருந்திய மலர்களும் கலந்து வருகின்ற நீரையுடைய அரிசிலாற்றின் தென்கரையில் , கணுக்களையுடைய கமுக மரத்தின் அழகிய பாளையில் வண்டுகள் சேர்த்த தேனினது வாசனையோடு கலந்த பல மணங்களை வீசும் தென்றற் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரே ; அறிக .


பாடல் எண் : 11
தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்,
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண்டு உழல்பரமன் உறையும்ஊர், நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை,
நண்புஉடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்,
நாவலர்கோன், ஆரூரன், நாவில்நயந்து உரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.

         பொழிப்புரை : குளிர்ந்த நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் இலராவர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...