இறையருள் கிட்ட எளிய வழி

                                                           இறையருள் கிட்ட எளிய வழி

-----

 

     இருக்கின்ற ஒன்றுதான் வெளிப்படும். இல்லாத ஒன்று வெளிப்படுவதற்கு இல்லை. "உள்ளது போகாதுஇல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். எல்லோர் உள்ளத்திலும் ஆண்டவன் இல்லாமல் இல்லை. புதிதாக அவன் வெளிப்படுவதில்லை. மறைந்திருந்தவன் வெளிப்படுகிறான். "ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்கின்றார் மணிவாசகப் பெருமான். தூய்மையான உள்ளம் உடையவர்களாக இருந்தால்இறைவன்அருள் வந்து தானே வெளிப்படும்அது வெளிப்பட முடியாமல்நம்மிடத்தில் உள்ளஅகங்கார மமகார அழுக்குகள் அதற்குத் தடையாக இருக்கின்றன. அந்த அழுக்கைக் கழுவி விட்டால்அருள் தானே வெளிப்படும் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

"தடுங்கோள் மனத்தை,விடுங்கோள் வெகுளியைதானம் என்றும்

இடுங்கோள்,இருந்தபடி இருங்கோள்,எழுபாரும் உய்யக்

கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத்  தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே".

 

என்பது "கந்தர் அலங்காரம்" என்னும் பகுதியில் அருணகிரிதாநர் பாடியருளிய ஓர் அற்புதமான பாடல். இந்தப் பாடலின் மூலம் முருகப் பெருமானின் இன்னருளைப் பெறுவதற்கு ஓர் உபாயத்தை நமக்கு அருளிச் செய்கின்றார்.

 

இதன் பொருள் ---

 

     அன்பர்களே! உங்கள் மனத்தைப் பொறி புலன்களின் வழியே போகவிடாமல் தடுத்து வையுங்கள். கோபத்தை அறவே விட்டு விடுங்கள். எக்காலத்திலும் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல்தானம் கொடுத்துக் கொண்டு இருங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தி இருந்தவண்ணம் இருங்கள். இப்படிச் செய்தீர்களானால்ஏழு உலகங்களும் பிழைக்கும்படியாககொடிய கோபத்துடன் இருந்த சூரபதுமனோடுகிரவுஞ்ச மலையும் பிளந்து அழியும்படியாக கூர்மை பொருந்திய வேலை விடுத்து அருளிய முருகப் பெருமானது திருவருளானது தானாகவே வந்து உமக்கு வெளிப்பட்டு ஆட்கொள்ளும்.

 

     மற்றவர்களுக்கு அறிவுரை கூற வருகின்றவர்கள்அந்த அறிவுரையின் படி வாழ்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். வெறும் வாய்வேதாந்தம் உதவாது. உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உபதேசம் செய்யலாம். உயர்ந்த நிலையில் இருக்கிறவர்களில் இரண்டு வகையினர் உண்டு. தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும்மற்றவர்கள் கீழான நிலையில் இருப்பது போலவும் எண்ணிக் கொண்டுஉபதேசம் செய்ய வருவோர் சிலர். தாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற நினைவே இல்லாதவர்கள் சிலர். அவர்கள் பின்னும் உயர்ந்த நிலைக்கு ஏறிவிடுகிறார்கள். செருக்கு எந்த நிலையிலும் வந்து விடும். செருக்குக் கூடாதென்று பிறருக்குச் சொல்லச் சொல்ல,அந்த அறிவைப் பிடித்துக்கொண்டே செருக்கு வந்துவிடும். தாம் உயர்ந்த நிலையில் உள்ளோம் என்னும் நினைவு தோன்றவே கூடாது. 

 

     தாம் பெற்ற பேற்றாலே உயர்ந்த நிலை உண்டு.  அப்படிப் பெற்றோம் என்பதையும் மறந்து விடுவதனாலே மேலும் உயர்ந்த நிலையும் ஒன்று ஆக இரண்டு உயர்வு கிடைக்கும். அருணகிரிநாதப் பெருமான்,உலகத்து உயிர்கள் மீது வைத்த அன்பின் காரணமாக உபதேசம் புரிகின்றார்.அடியார்கள் பலரும் இறைவன் அருளைப் பெறத்தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துஅவர்களுக்கு எளிமையான வழியைக் காட்டிஅறிவுரை கூறுகின்றார். 

 

     இறைவன் திருவருளைப் பெறவேண்டும் என்ற ஆசை இருந்தாலும்அதற்கு ஏற்ற வகையில் உழைக்கும் ஆற்றல் நம்மில் பலருக்கும் இல்லை. மனைவி மக்களிடையே வாழவேண்டும். தினமும் வயிறார உண்ண வேண்டும். எந்த எந்தக் காரியங்களைச் செய்து வருகிறோமோ,அந்த அந்தக் கடமைகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதே இறைவன் திருவருள் வந்து வாய்க்குமாநாளும் உண்ணுகின்ற உணவில்அணிகின்ற ஆடையில்நுகர்கின்ற உலகியல் இன்பத்தில் சிறிதும் குறைவுபடாமல் இருக்கும்போதேஇறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமென்ற ஆசை உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் இருக்கிறது. 

 

     தவநெறியில் செல்ல வேண்டுமானால்இப்பொழுது அனுபவித்து வரும் இன்பங்களைக் கைவிட வேண்டும். இறைவனது திருவருள் பெற்று விட்டால் அழிவே இல்லாதஎல்லையே இல்லாத பேரின்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்கள். இப்பொழுது நாம் அடைகின்ற உலக இன்பம் கையின் மேல் இருக்கிறது. பேரின்பம் கிடைப்பது உண்மையாக இருந்தால் கையில் கிடைப்பதை விட்டு விடலாம். 

 

     நாம் வாழுகின்ற வாழ்க்கை முறையிலேயே இறையருளை எளிதாகப் பெறுவதற்கு வழி ஏதேனும் உண்டா? இந்தக் கேள்வி எல்லாக் காலத்தும் எழுந்தது உண்டு. இப்படிக் கேட்பவர்களைப் பார்த்து"உனக்கும் வழி உண்டு" என்று சொன்னால்அவரைவிட அருள் உள்ளம் படைத்தவர் யாரும் இல்லை. "நீ இப்பொழுது இருக்கிறபடியே இருந்தால்இறைவன் அருள் தானே உனக்கு வந்து வெளிப்படும்" என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 

 

     "இறைவனுடைய திருவருள்  எப்படிக் கிடைக்கும் என்ற ஆராய்ச்சி வேண்டாம். அதைத் தேடி அலையவும் வேண்டாம். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தானாக அவன் அருள் வந்து கிடைக்கும்"என்று அவர் சொல்கிறார். அருணகிரிநாதர்"இருந்தபடி இருங்கள்" என்று மாத்திரம் சொல்லி இருந்தால்,எல்லா மக்களும் அந்த இன்பத்தை அடைய முடியும். ஆனால், அதற்கு முன்னாலே செய்யவேண்டிய சிலவற்றைச் சொல்லுகின்றார்.

 

     "அறம் செய்ய விரும்பு" என்று குழந்தைகளுக்கு உபதேசத்தை வைத்த ஔவைப்பாட்டி,  அகர வரிசையில் சொல்லத் தொடங்கிஅடுத்தபடி "ஆறுவது சினம்" என்று அறிவுரை கூறுகின்றார். இவை இரண்டும் மனித வாழ்க்கைக்குப் பயன் தருகின்ற செயல்கள்.  வாழ்க்கையில் மனிதர்கள் பெறவேண்டியவை அறம்பொருள்இன்பம்வீடு ஆகிய நான்கும் ஆகும். இவற்றையே தர்மர்த்த,காம,மோட்சம் என்று வடமொழியில் கூறுகின்றார்கள். 

 

     "அறம் செய விரும்பு" என்று அறத்தையும்,  "பொருள்தனைப் போற்றி வாழ்" என்று பொருளையும், "மெல்லியலார் தோள் சேர்" என்று இன்பத்தையும், "வீடு பெற நில்" என்று வீட்டு நெறியையும் காட்டினார் ஔவைப் பிராட்டியார். ஆகஅறம்பொருள்இன்பம்வீடு என்னும் நான்கு நெறிகளையும் கடைப்பிடித்தால் இறைவன் அருள் தானாக வந்து சேரவேண்டும். அதற்கான சாதனங்கள் என்னவென்று சொல்ல வருகிறார் அருணகிரிநாதர். 

 

     நன்னெறியில் நிற்பது என்றால்மனமானது புலன்களின் வழியே செல்லாமல் இருக்கவேண்டும். மனமானது இயல்பாக அப்படி இருக்காது. மனத்தை நன்னெறியில் பழக்கவேண்டும். அதற்கு அறிவு மட்டும் துணை செய்யாது. உள்ளத்தில் அன்பு மேலிட வேண்டும். "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்றார் தாயுமான அடிகளார். 

 

"மனம்ஆன ஒருசிறுவன் மதிஆன குருவையும்

                        மதித்திடான்நின்அடிச்சீர்

            மகிழ்கல்வி கற்றிடான்சும்மா இரான்காம

                        மடுவின் இடை வீழ்ந்து சுழல்வான்,

சினம்ஆன வெம்சுரத்து உழலுவான்உலோபம்ஆம்

                        சிறுகுகையின் ஊடு புகுவான்,

            செறுமோக இருள்இடைச் செல்குவான்மதம் எனும்

                        செய்குன்றில் ஏறி விழுவான்,

இனம்ஆன மாச்சரிய வெம்குழியின் உள்ளே

                        இறங்குவான்சிறிதும் அந்தோ

            என்சொல் கேளான்எனது கைப்படான்மற்றுஇதற்கு

                        ஏழையேன் என் செய்குவேன்?"

 

என்று வள்ளல்பெருமான் மனத்தின் சேட்டைகளை விரிவாக எடுத்துக் காட்டி உள்ளார். நம்மிடத்திலும் அரக்க குணம் பொருந்தி மறைந்து உள்ளது. அது அவ்வப்போது தலை தூக்கும். எப்போது தூக்கும் என்பது தெரியாது. ஆணவத்தின் வலி அப்படிப்பட்டது. 

 

     சூரபதுமன் தவம் செய்தான்அறிவை வளர்த்தான்ஆனால் அன்பு என்பது அவனிடத்தில் இல்லை. அன்புகருணைஇரக்கம் ஆகிய அடிப்படைக் குணங்கள் இல்லாமல் வளர்ந்து கொண்டே போன அறிவினால்அவன் தன்னைவிட உயர்ந்தவர்கள் இல்லை என்று எண்ணி உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பத்தைத் தருகின்ற ஆற்றல் படைத்தவனாக இருந்தான். அவனது தவத்திற்கு ஆதாரபீடமாக அன்பு அமைந்திருந்தால் அவனது அறிவு நன்மையை உண்டாக்கி இருக்கும். வெற்று அறிவினால் நன்மை விளையாது என்பதைத் திருவள்ளுவ நாயனார் நிறுவி உள்ளார். "அறிவினால் அவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை" என்பது அவர் அருள்வாக்கு. இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமானால் அறத்தோடு இணைந்த தவம் செய்ய வேண்டும். அருளுக்குத் தாயாக இருப்பது அன்பு என்பதும் திருவள்ளுவ நாயனார் காட்டியதே.

 

     அன்பு உள்ளத்தில் இருந்தால் அற உணர்வும் அங்கே இருக்கும். அதற்கு மனத்தைப் புலன்களின் வழியே போகாமல் தடுத்து நிறுத்திஒருமுகப் படுத்தவேண்டும். எனவே, "தடுங்கோள் மனத்தை" என்று முதலிலேயே சொன்னார் அடிகளார். "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறன்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     அறம் செய்வது புறத்தில் மட்டும் இருந்தால் போதாது. மனத்திலிருந்து அந்த அற நினைவு உண்டாக வேண்டும். அறமல்லாத வகையிலே புகும் மனத்தைஅறத்திலே செலுத்த வேண்டும். மனம் தூய்மை உடையதாகஅன்பு உடையதாக இருந்தால்அங்கே உண்டாகின்ற எண்ணங்கள் உண்மையான செயலாக மாறும். ஒன்று மனத்தைத் தடுப்பது. மற்றொன்று மனத்தை நிறுத்துவது. "அறம் செய விரும்பு" என்று ஔவைப் பிராட்டி முதலில் சொன்னதன் பொருள் இதுவே.

     

     அடுத்துஔவைப் பிராட்டி சொன்னது, "ஆறுவது சினம்". அருணகிரிநாதப் பெருமான் "விடுங்கோள் வெகுளியை" என்றார். மனத்தை ஒரு நிலைப்படுத்த முயலும்போதுஅப்போதைக்கு கொஞ்சம் வசப்பட்டது போலத் தோன்றும். ஆனால்பல நேரங்களில் நமது இச்சைப்படி போக முடியாத காரணத்தினால் நம்மை நாமே சினந்து கொள்வோம். பிறரை அடித்துப் பழகின கைஅடிக்க ஆள் அகப்படாவிட்டால் தன்னையே அடித்துக் கொள்ளும். வெறிபிடித்த நாய்கடிப்பதற்கு வேறு எதுவும் அகப்படாவிட்டால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். எனவேசினத்தை விட வேண்டும் என்றார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     அறிவுரை கூற எத்தனையோ இருக்ககோபத்தை விடுங்கள் என்று சொன்னாரே என்று எண்ணலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனத்திற்கு உண்டு. இப்படிப் பற்றிக் கொள்ள நினைப்பதைத் தான் காமம் என்பர். காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்" என்று திருவள்ளுவர் பேசுகின்றார். மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவா. மற்றொன்று வெகுளி. அடுத்ததாக இருப்பதுஒன்றை ஒன்றாக நினைக்கின்ற மயக்கம். மனத்தை நிறுத்த வேண்டுமானால் காமத்தை நிறுத்த வேண்டும். மனத்தின் சஞ்சாரம் அவாவின் வெளியீடு. அவா என்பதுதான் எல்லாப் பிறப்புக்கும் மூல வித்து.  காமத்தை அடக்கு என்று சொல்வதும்மனத்தைத் தடு என்று சொல்வதும் ஒன்றுதான். ஆசையினால் கோபம் உண்டாகிறது. காமம்வெகுளி இரண்டும் ஒழிய வேண்டும். முதலில் அதை அப்படியே சொல்லாமல், 'தடுங்கோள் மனத்தைஎன்றும்,அடுத்து 'விடுங்கோள் வெகுளியைஎன்றும் சொன்னார்.

 

     பலப்பல பொருள்களிடத்தில் பற்றுக் கொண்டுள்ள மனத்தினிடம், பற்றை விட்டுவிடு என்று சொன்னால் பயன் இல்லை. தேடின பொருள்களிடத்தில் பற்று இருப்பது போலஅந்தப் பொருள்களைப் பிறருக்குக் கொடுப்பதிலும் விருப்பம் வைக்க வேண்டும். பலப்பல பொருள்களை ஈட்டிப் பற்று வளர்கிறது அவற்றை உள்ளம் மகிழ்ந்து பிறருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பற்றுக் குறைந்து விடுகிறது. 

 

     ஒரு குழந்தை காகிதத்தை நிறையக் கிழிக்கிறது. கிழிக்காதே என்று சொன்னால்,  அப்போதைக்குப் பயந்து கொண்டு நம் முன் சும்மா இருந்தாலும்,நாம் இல்லாதபோது அது எல்லாப் புத்தகங்களையும் கிழித்து விடும். ஆகவேகிழிக்காதே என்று அச்சுற்றுத்துவதற்குப் பதிலாக,'கிழித்துப் போட்டவைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போடுஎன்று சொல்ல வேண்டும். கிழித்துப் போட்டபோதுசுத்தம் இல்லாமல் இருந்த இடம்மீண்டும் சுத்தமாகி விடும். பொருள்களை ஈட்டுவதன் மூலம் மனம் அழுக்கு அடைகிறது. ஈட்டிய பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதன் மூலம்அழுக்கு ஏறிய மனம் தூய்மை ஆகிவிடுகிறது. 

 

     எனவே, "தானம் என்றும் இடுங்கோள்" என்று சொன்னார் அருணகிரிநாதப் பெருமான். தானம் என்பது ஈட்டிய பொருளைக் கொடுப்பது மட்டும் அல்ல. மனம்வாக்குகாயம் என்னும் மூன்று கரணங்களாலும் முறையே நல்லதை நினைப்பதும்நல்லதையே பேசுவதும்நல்லதையே செய்வதும் வேண்டும். மனத்தின் அடியாக நினைவும்அதன் வழியாகச் சொல்லும்அதன் வழியாகச் செயலும் நிகழும். எனவேஎல்லாவற்றிற்கும் அடிப்படை மனமே. மனத்தில் எப்போதும் நல்ல நினைவுகள் இருக்கவேண்டும்.

 

     செயலைக் காட்டிலும் சொல் நுட்பமானதுஅதைக் காட்டிலும் எண்ணம் நுட்பமானது. அவற்றின் விளைவுகளும் அப்படியே வரவர நுட்பமானவையாகவே இருக்கும். பிறருக்குத் தானம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளத்தின் விளைவு. உள்ளத்தில் அன்பு இருந்தால்தான் கொடுக்கத் தோன்றும். உள்ளத்தில் பற்று மெல்ல மெல்ல நழுவிதன்னிடம் உள்ள பொருள்களை எல்லாம் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்ற அன்பு நினைவு எப்பொழுது உண்டாகிறதோஅப்பொழுது இறைவன் நமக்கு அருள் பாலிக்க வருகிறான். "இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார்கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்" என்ற அப்பர் பெருமான் அருள்வாக்கை நினைவில் கொண்டு பார்த்தால், "தானம் என்றும் இடுங்கோள்" என்ற அருணகிரிதாநப் பெருமான் அருள்வாக்கின் அருமை விளங்கும்.  

 

     அடுத்து,  "இருந்தபடி இருங்கோள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். இருந்தபடியே இருந்து கொண்டு சனகாதி முனிவர்க்கு ஞானத்தைப் போதித்தார் தென்முகக் கடவுள் ஆகிய சிவபரம்பொருள். மனத்தின் துடிப்பும் அற்றுப் போய் இருப்பதுதான் இருந்தபடி இருக்கின்ற நிலை. அப்போதுதான் அருள் விளக்கம் தோன்றும். "நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்" என்று தமது அனுபவத்தை அப்பர் பெருமான் காட்டினார்.  எப்படி இருந்தால்இறையருள் தானாக வந்த பதியுமோஅப்படி இருக்கவேண்டும். நமது முயற்சி எதுவும் அங்கே பலிக்காது. இறைவன் சொல்லும் பொருளும் கடந்த நிலையில் விளங்கும் அனுபவப் பொருளாக இருப்பவன். அவன் எப்படி இருப்பான் என்பதை வார்த்தைகளால் விரித்துக் கூறலாம். அது முற்றுப் பெறாது. மனத்திலே சலனம் இருக்கின்ற வரையில் இப்படி இருக்குமாஅப்படி இருக்குமாஎன்ற சிந்தனையும்கற்பனையும் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனால்இறைவனோ "கற்பனை கடந்த சோதி"

 

     அப்பர் பெருமான் இந்த அனுபவத்தை அற்புதமாக ஒரு தேவாரப் பாடலால் காட்டி உள்ளார்.

 

"மைப்படிந்த கண்ணாளும் தானும்,கச்சி

    மயானத்தான்,வார்சடையான்,என்னின் அல்லால்,

ஒப்பு உடையன் அல்லன்,ஒருவன் அல்லன்,

    ஓர்ஊரன் அல்லன்,ஓர் உவமன் இல்லி;

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

    அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

    இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே"

 

இதன் பொருள் ---

 

     இறைவன் மைபூசிய கண்ணள் ஆகிய உமாதேவியும் தானுமாககச்சிமயானம் என்னும் திருத்தலத்தில் வாழ்பவனும்நீண்ட சடையினை உடையவனும் ஆவான் என்று சொன்னால்அவன் அப்படிப்பட்டவன் மட்டுமே அல்ல. அவன் ஒப்பாக எப்பொருளையும் உடையவன் இல்லை. உலகப் பொருள்களில் அவன் ஒரு பொருளாக இருப்பது இல்லை. ஒரு ஊருக்கே உரியவனும் அவன் இல்லை. எந்த ஒரு பொருளையும் அவனுக்கு உவமையாக நிறுவ முடியாது. அதனால் அவனுடைய தன்மை எப்படிப்பட்டது என்பதையும்அவன் எந்த வடிவத்தோடு உள்ளவன் என்பதையும் காணவேண்டுமானால்அவனுடைய திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காண முடியும். அல்லாமல்,மற்றப் பொருள்களைக் குறிப்பட்டுச் சொல்வதைப் போல அவன் இப்படிப்பட்டவன்இன்ன நிறத்தை உடையவன்இன்ன வடிவத்தை உடையவன் என்று சொல்லோவியாகவோஎழுத்தோவியமாகவோ எழுதிக் காட்ட முடியாது.

 

     "பொங்கு பல சமயம் என்னும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே" என்று வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்துஇறைவனது சொரூபத் தன்மையைக் காட்டினார். கங்கு என்றால், "வரம்பு" என்று பொருள். கடலுக்கு வரம்பு இல்லை. கரையும் இல்லை. கரையாக உள்ளவை எல்லாம் நிலப் பரப்புக்களே. கடலுக்குக் கரை இருப்பதாக எண்ணுவது பொருளற்றது. கடலிலே அலைகள் ஓயாது இருந்துகொண்டே இருக்கும். கடலின் அடியில் வளம் நிறைந்து உள்ளது. ஆனால்அலைகள் தொடர்ந்து வீசிக் கொண்டே இருப்பதால் அடியில் இருப்பதை நம்மால் காண இயலாது. கடலைப் போலவேநம்முடைய மனமானது எப்போதும் ஏதவாது ஒரு வியாராபத்திலே இருந்துகொண்டே இருக்கும். மனம் அலை பாய்கின்றதாக நம்முடைய பெரியவர்கள் கூறுவார்கள். அலை இல்லாத ஒரு கடலும் உண்டு. அது சிவஞானக் கடல் என்கின்றார் வள்ளல் பெருமான். "அலை இலாச் சிவஞான வாரியே" என்பது அவரது அருள்வாக்கு. அலைகின்ற நீரில் அடியில் உள்ளது எதவும் தெளிவாகத் தெரியாது. சலனம் அற்ற நீரில்தான் அடியில் உள்ளது தெளிவாகத் தெரியும். மனோவியாபாரத்தில் திளைத்துக் கொண்டு இருக்கின்ற வரையில்உண்மைப் பொருள் விளங்காது. மனோவியாபாரம் அற்றுஅலை அற்ற நீர் போல் உள்ளம் தெளிவடைந்து இருந்தால்மெய்ப்பொருள் அனுபவம் விளங்கும். இதை,

 

"உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்!

கரை அற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ?

திரை அற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரை அற்று இருந்தான் புரிசடையோனே".

 

என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

     கடலைப் போலபரம்பொருளானது பரந்து விரிந்த பொருள். அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து காட்ட முடியாது. அது சொல்லுக்குள் அடங்குவது அல்ல. கடலுக்குக் கரை இருப்பதாக எண்ணிக் கொண்டு கரையைக் காண முயலுவது அறிவுடைமை ஆகாதது போல்சொல்லால் அளக்கமுடியாத ஒரு பொருளை சொல்லால் உணர்த்த முயலுவதுஊமை ஒருவன் தனது மனக் கருத்தைப் பிறர் உணரச் சொல்லுவது போலவே அமையும். அலைகளே இல்லாத கடல் ஒன்று இருக்குமானால்அதற்கு ஒப்பாக உங்களது மனமானது சலனம் அற்று இருக்குமானால்தெளிந்த அறிவு உண்டாகும். அந்த அறிவில் சிவபரம்பொருள் ஒளிரும்.

 

     கடலானது அலைகள் இல்லாமல் இருக்கமுடியாது. ஆனால்அலைகின்ற மனித மனமானது அலைபாயாமல் இருக்க முடியும். அலைகள் ஒழியாத பிரபஞ்சக் கடலை நீந்திமுத்தி என்னும் கரை ஏறிஅலை இல்லாத சிவஞானக் கடலில் படிந்து என்றும் இன்புறலாம். அதற்கு மனம் அழுக்கு அற்று இருக்கவேண்டும்.

 

     எனவேமனத்தில் பலகாலமாக ஏறி இருக்கிற அழுக்கைத் துடைக்க வேண்டும். காமம் அற்றுப் போக மனத்தைத் தடுக்க வேண்டும். சினத்தை ஓட்ட வேண்டும். பல காலமாக இருந்த பற்றுக் கழிவதற்காகத் தானம் செய்ய வேண்டும். இந்த மூன்று முயற்சியும் தீவிரமாக இருந்தால் மனத்தில் ஏறியுள்ள மாசு நீங்கிசுத்தமாகும். சுத்தமாக இருக்கின்ற இடத்தில்தான் நாமும் இருக்க விரும்புவோம். சுத்தமாக இருக்கின்ற மனத்தைத் தான் இறைவன் தனது கோயிலாக்கிக் கொள்ள விரும்புகின்றான். 

 

     ஒரு விளக்கை ஏற்றி வைத்து அதன்மேல் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் விளக்கின் ஒளியைப் பார்க்க முடியாது. பாத்திரம் விளக்கின் ஒளியை மறைத்துவிளக்கை நமக்குக் காட்டாமல் தன்னை மட்டுமே காட்டுகிறது. இதைப்போல்அகங்காரமமகாரம் உடைய மனத்தில் இறைவன் இருந்தாலும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவன் அருள் ஒளியானது வெளிப்படுவதற்கு அகங்கார மமகாரங்களே தடையாக இருக்கின்றன. அகங்காரம்மமகாரம் நீங்கிய மனத்தில்தூய கண்ணாடி போல் தம்முள் இருக்கும் ஆண்டவன் அருள் ஒளி வெளிப்படும்.அருள் ஒளியானது வெளிப்பட முடியாமல் தடையாக உள்ள அகங்கார மமகார அழுக்கைக் கழுவி விட்டால்இறை அருள் தானே வெளிப்படும்.

 

     ஆற்று நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கரையில் உள்ள மேடான வயலில் ஆற்று நீர் தானாகப் பாய்வதில்லை. ஆற்றோரத்தில் உள்ள மேட்டை வெட்டி,நடுவில் இருக்கிற புதர்களை எடுத்துப் பள்ளமாக்கி விட்டால்ஆற்று நீர் தானாகப் பாயும். அதைவிடுத்துஆற்று நீரை குடம் குடமாக எடுத்து ஊற்றினாலும்வயல் முழுதும் பாயாது.

 

      நான் என்னும் அகங்காரம் ஆகிய அகப்பற்றும்எனது என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றும் நீங்கினால்அந்த உள்ளத்தில் இறையருள் தானாகவே வந்து வெளிப்பட்டுத் தோன்றும். பற்று அறுக்க வேண்டுமானால் மனமானது புலன்வழிப் போதல் கூடாது. உள்ளத்தில் தோன்றுகின்ற காமம்அதன் வெளிப்பாடான வெகுளிஉலகத்துப் பொருளை உண்மையாகக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் மயக்கம் ஆகிய மூன்றையும் நாம் ஒழித்துவிட்டால் அருள் மயமாக இருக்கிற ஆண்டவன் வெளிப்படுவான்.

 

     உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பது இறைவன் கருணை. சூரபதுமனும் கிரெளஞ்சாசுரனும் அழிந்தால்அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால்உலக மக்கள் இன்புறுவார்கள். தான தருமங்கள் நடைபெறும். தவம் செய்ய முடியும்என்பதற்காக வேலை விடுத்து அருளினார் முருகப் பெருமான். இவ்வாறு கூர்மையான வேலை விட்ட முருகனுடைய அருள் வந்து தானே,உமக்கு வெளிப்படும். மனத்தைத் தடுத்துகோபத்தை அழித்துவிட்டு ஈட்டி வைத்திருக்கின்ற பொருள்களைத் தானம் செய்துநீங்கள் இருந்தபடி இருங்கள்என்பது அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்த உபதேசம். 

 

     இந்த எளிஅரியஉபதேசத்தைக் கடைப்பிடித்தால் இறைவன் அருள் தானாக வந்து வெளிப்படும்.

 

வாழ்க்கையில் இனியது எது?

 


வாழ்வில் இனியது எது?

-----

 

     இனியது எதுஎன்பது குறித்து ஔவைப் பிராட்டியார் அருளிய பாடலைச் சிந்திப்போம்.

 

     மனித வாழ்க்கையில் துன்பத்தைத் தருபவை குறித்து "இன்னா நாற்பது" என்னும் நூலிலும்இனிமை தருபவை குறித்து, "இனியவை நாற்பது" என்னும் நூலிலும் பலவாறாகச் சொல்லப்பட்டு உள்ளது.

 

"கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே"

 

என்று ஒரு பாடலில் சொல்லப்பட்டு உள்ளது.

 

     கற்றவர் முன்னிலையில் ஒருவன் தான் கற்ற கல்வியைச் சொல்லுதல் மிகவும் இனிமையானது. கல்வி அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டவரைச் சார்ந்து இருத்தல் மிகவும் மாட்சிமைப்பய இனிது. 

 

     இனிமை தராதவை குறித்துப் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது.

 

"பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;

அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா;இன்னா

பெரியோர்க்குத் தீய செயல்."      

 

      ஒருவன் தம்மினும் கல்வி அறிவுநற்குண நல்லொழுக்கங்களில் சிறந்த பெரியாரோடு கொண்ட தொடர்பை விட்டுவிடுதல் துன்பத்தைத் தரும். செய்தற்கு அரிய செயல்களைச் செய்து முடித்து வெளிப்படுத்துவதை விடுத்து,செய்து முடிப்பேன் என்று வாயளவில் சொல்வது துன்பத்தைத் தரும். அன்பு இல்லாவதரிடத்தில் சென்று தமக்கு உற்ற துன்பங்களைப் பற்றிக் கூறுதல் துன்பத்தைத் தரும். பெரியார்க்குத் தீய செயலைச் செய்வது துன்பத்தைத் தரும்.

 

     ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாகவே பெரியாரொடு தொடர்பு உண்டாகும். இதன் அருமையை உணர்ந்து பெரியாரோடு கொண்ட தொர்பினால் ஆன்ற பயனைப் பெற்றுக் கொள்ளுதல் அறிவுடைமை ஆகும். அல்லாது போனால்பலரோடும் பகைத்துக் கொள்வதால் உண்டாகும் தீமையை விடப் பலமடங்குத் தீமையை ஒருவன் அனுபவிக்க நேரிடும் என்கின்றார் திருவள்ளுவ நாயானர்.

 

"பல்லார் பகை கொளலில் பத்து அடுத்த தீமைத்தே 

நல்லார் தொடர்கை விடல்"              --- திருக்குறள்.

 

மேலும்,

 

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்,ய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்"           --- திருக்குறள்.

 

என்று பெரியோருக்குத் துன்பம் செய்தலின் தீமையைப் பற்றித் திருவள்ளுவ நாயனார் எச்சரிக்கை செய்கின்றார்.  நெருப்பினால் சுடப்பட்டாலும் ஒருவகையில் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால்பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைக்க மாட்டார்.

 

     ஔவைப் பிராட்டியைப் பார்த்தமுருகப் பெருமான் இனியது எதுஎன்று கேட்டார்பாடல் வழி ஔவையார் பின்வருமாறு சொன்னார்.

 

இனியது கேட்கின்,தனிநெடு வேலோய்!

இனிது! இனிது,ஏகாந்தம் இனிது;

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்;

அதனினும் இனிது அறிவு உள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பதுதானே"

 

இதன் பொருள் ---

 

     ஒப்பற்ற வேலை உடைய முருகப் பெருமானே! தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது. அதைவிட இனிது நல்லறிவு படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அறிவு உள்ள பெரியோரைக் கனவிலும் நினைப்பதும்நனவில் அவர்களைப் பின்பற்றி வாழ்வதும் ஆகும்.

 

     ஏக+அந்தம் = ஏகாந்தரம். ஏகம் என்பது, ஒன்று எனப்படும் பரம்பொருள் ஒன்றையே குறிக்கும். உலகியல் வாழ்வில் நாம் சார்ந்துள்ள அத்தனையில் இருந்தும் விடுபட்டுஒருமித்த சிந்தனையோடு வழிபாட்டில் ஈடுபட்டுஇறைவன் ஒருவனையே சிந்தித்து இருத்தல் வேண்டும். ஏகாந்தம் என்பது மன ஒருமைப்பாட்டைக் குறிக்கும். "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     காரைக்கால் அம்மையார் "அற்புதத் திருவந்தாதி"யில் மிக அற்புதமாகப் பாடி இருப்பார்.

 

"ஒன்றே நினைந்து இருந்தேன்ஒன்றே துணிந்து ஒழிந்தேன்,

ஒன்றே என் உள்ளத்தின் உள்அடைத்தேன்,- ஒன்றேகாண்

கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்குஒளிசேர்

அங்கையாற்கு ஆளாம் அது."  

 

இதன் பொருள் ---

 

     ஒப்பற்ற பரம்பொருளாகிய ஒன்றையே மனத்தில் எப்போதும் நினைந்து இருந்தேன். ஒன்றாகிய அதுவே வேண்டத் தக்கது என்று நிச்சயித்து,  (மற்றவற்றை எல்லாம் விட்டொழித்து,)  ஒன்றாகிய அந்த ஒன்றையே எனது உள்ளத்தில் உறுதிப் பொருளாகப் பற்றிக் கொண்டேன். அந்த ஒன்று என்பது கங்கையைச் சடையில் பரித்தவனும். திங்களைச் சடையில் தாங்கியவனும்தனது அழகிய திருக்கையில் ஒளிமிகுந்த அனலை எந்தி ஆடுபவனுமாகிய பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது ஒன்றேதான்.  

 

     ஏகாந்தமாகத் தான் இறைவனை வழிபடுதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணங்கள் பின்வருமாறு....

 

"கல்லினால் புரமூன்று எய்த கடவுளைக் காத லாலே

எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும்

பல்இல்வெண் தலைகை ஏந்திப் பல்இலந் திரியும் செல்வர்

சொல்லும் நன்பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறையனாரே."

 

இதன் பொருள் ---

 

     மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த சிவபெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள். பல் இல்லாத வெள்ளிய மண்டை ஓட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய்வேதமாயும் வேதத்தின் விழுப்பொருள் ஆகவும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத் தக்க திருச்சோற்றுத்துறையனாரே.

 

"காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே."

 

இதன் பொருள் ---

 

     உலக வாழ்வில் பல பற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப் பெறாமல் சாமவேத கீதனும்,தான்தோன்றி நாதனும் ஆகிய சிவபரம்பொருளை பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்து இருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத் தீயாகக் காட்சி வழங்குவான் .

 

"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து

            தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்

            மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்,

அங்கம்எலாம் குறைந்துஅழுகு தொழு நோயராய்

            ஆவுரித்துத் தின்றுஉழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்

            அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே."

 

இதன் பொருள் ---

 

     சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்துஆட்சி செய்ய இந்தப் பூவுலகத்தையும்வானுலத்தையும்,  ஒருசேரத் தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பு இல்லாதவர்கள் நிலையில்லாமல் அழியக் கூடியவர்கள். அவர்களது செல்வத்தை நாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையும் தொழுநோயினை உடையவராய்,பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராக இருந்தாலும்கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின்அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

 

     அடுத்து, "அறிவினர்ச் சேர்தல் இனிது" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். திருக்குறளில்"சேர்தல்" என்னும் சொல்லுக்கு, "இடைவிடாது நினைத்தல்" என்று பரிமேலழகர் பொருள் தந்து உள்ளது சிந்தையில் கொள்ளத் தக்கது. இது குறித்து"மூதுரை" என்னும் நூலில்மேலும் தெளிவாகப் பின்வருமாறு சொல்கிறார் ஔவைப் பிராட்டியார்.

 

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே;நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றேநல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே;அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று"

 

     நல்லாரைச் சேர்ந்து இருப்பது என்ற முன்னே சொன்ன ஔவைப் பிராட்டியார்இங்கே "இணங்கி இருப்பதுவும் நன்று" என்கின்றார். இணங்குதல் என்னும் சொல்லுக்குஉடன்படுதல்மனம் பொருந்தி இருத்தல் என்று பொருள்.

 

     "நல்லாரைக் காண்பதுவம் நன்றுஅவர் சொல்லை ஒருவன் கேட்பதுவும் நன்றுஅவர் குணங்களை ஒருவன் சொல்லுவதும் நன்றுஅவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று" என்று சொல்லி உள்ளார். அது போலவேதீயோரைக் குறித்தும் ஒரு செய்யுள் உண்டு. காண்பதுகேட்பதுஉரைப்பது என்னும் செயல்களுக்கு வேறாகஇணங்கி இருப்பது என்னும் செயல் ஒன்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால்ஒருவரைக் காண்பதும்அவர் சொல்லைக் கேட்பதும்அவரைப்பற்றிச் சொல்லுவதும் செய்த அளவிலேயே அவரோடு இணங்கிவிட்டதாக எண்ண முடியாது. ஒருவர் கொள்கைப்படிஒருவர் நடந்துகொள்ளுவதே "இணங்கி நடப்பது" ஆகும். ஒருவருக்குத் துணை செய்ய வேண்டுமானால்அவரோடு இணக்கம் கொண்டு இருக்க வேண்டுவது இல்லை. அவரைப் பார்ப்பதும்அவர் சொல்லைக் கேட்பதும் போதும்."இணக்கம்" என்பதைச் சொல்லும் செயலும் ஒத்ததாகக் கொள்ளலாம்.

 

     திருவள்ளுவ நாயனார்ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக் கொள்ளும் செயலாகும் "அரியவற்றுள் எல்லாம் அரிதேபெரியாரைப் பேணித் தமராக் கொளல்" என்கின்றார். மேலும்அறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மைதிறன் அறிந்து தேர்ந்து கொளல்) என்றும் உற்ற துன்பத்தை முதலில் நீக்கிமீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (உற்ற நோய் நீக்கிஉறாமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்)என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

     "விவேக சிந்தாமணி" என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதன் ஆசிரியர் யார் என யாருக்கும் தெரியாது. ஆனாலும்அந்நூலில் அடங்கிய நீதிகள் யாவரும் அறிந்து கடைப்படிக்கத் தக்கதே ஆகும். உடம்போடு கூடி வாழும் காலத்திலேயே சுவர்க்க இன்பத்தை ஒருவன் அனுபவிக்காலம் என்று அந்த நூலில் ஒரு பாடல் வழிகாட்டுகின்றது.

 

"நற்குணம் உடைய வேந்தை

     நயந்து சேவித்தல் ஒன்று;

பொற்பு உடை மகளிரொடு

     பொருந்தியே வாழ்தல் ஒன்று;

பற்பலரோடு நன்னூல்

     பகர்ந்து வாசித்தல் ஒன்று;

சொற்பெறும் இவைகள் மூன்றும்

     இம்மையில் சுவர்க்கம் தானே!"—(விவேக சிந்தாமணி)

 

இதன் பொருள் ---

 

     நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பிஅவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டுஅவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும், பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்துஅந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும் ஆகபுகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில்சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

 

     உடம்பை விட்ட பின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிரதுன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தைஇப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும் என்று சொல்லப்பட்டது அருமை.

 

"அறிவு உ(ள்)ளோர் தமக்கு நாளும் 

     அரசரும் தொழுது வாழ்வார்,

நிறையொடு புவியில் உள்ளோர் 

     நேசமாய் வணக்கம் செய்வார்,

அறிவு உ(ள்)ளோர் தமக்கு யாதோர் 

     அசடு அது வருமே ஆகில்,

வெறியர் என்று இகழார் என்றும் 

     மேதினி உள்ளோர் தாமே."   --- விவேக சிந்தாமணி

 

இதன் பொருள் ---

 

     அறிவு உடைய நல்லோருக்குநாள்தோறும்யாரையும் வணங்காத மன்னரும் வணக்கம் செய்து வாழ்வார்கள். நிறையுள்ள உலகத்தாரும் அவர்களிடத்திலே அன்புடன் வணக்கம் செய்வார்கள்அத்தகைய அறிவு உடைய பெரியார்களின் செயலிலே ஏதேனும் ஒரு தாழ்வு வந்து விட்டால்எக்காலத்தும் உலகத்தில் உள்ளோர்அவரைப் பித்தர் என்றும் வெறியர் என்றும் என்று இகழ்ந்து கூற மாட்டார்கள்.

 

     பெரியோருக்கும் அசடு என்பது வரும். அதற்காக அவரை இகழ்ந்து கூறுதல் கூடாது.

 

     பின் வரும் ஔவையார் அருளிய மூதுரைப் பாடலை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

 

"சீரியர் கெட்டாலும் சீரியரே,சீரியர் மற்று

அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும்?- சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்,என்ஆம்

மண்ணின் குடம் உடைந்தக் கால்?"

 

     ஆகவேகற்றறிவு உடையோர் யாராலும் மதிக்கப்படுவர். வினை வயத்தால் அவர்களிடத்திலே யாதானும் ஒரு தாழ்வு காணப்படுமானால்அறிவு உடைய நல்லோர் இகழ மாட்டார்கள். அறிவில்லாதவர்களே இகழ்ந்து கூறுவார்கள்.

 

     "அறிவினர்ச் சேர்தல்" என்பதுமேலே குறித்தபடி அறிவு உள்ளவர்களை எப்போதும் நினைத்தல் என்பதோடுஅறிவுடையோர் கூடியுள்ள அவையில் பொருந்தி இருத்தல் என்பதையும் குறிக்கும். அடியார்கள் திருக்கூட்டத்தில் சேர்ந்து இருப்பதும்அடியார்களை எப்போதும் நினைவு கூர்வதும் சிறப்பைத் தரும். அடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து இருப்பது ஒன்றுதான் தனது இச்சை என்கின்றார் வள்ளல்பெருமான்.

 

"தங்கமே அனையார் கூடிய ஞான

     சமரச சுத்தசன் மார்க்கச்

சங்கமே கண்டு களிக்கவும்,சங்கம்

     சார்திருக் கோயில் கண்டிடவும்,

துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி

     துலங்கவும்,சங்கத்தில் அடியேன்

அங்கமே குளிர நின்தனைப் பாடி

     ஆடவும் இச்சைகாண் எந்தாய்".   --- திருவருட்பா.

 

     சாதுக்கள் சங்கத்தின் பெருமையைக் குறித்துப் பாடிதுக்கம் நீங்கி வாழவேண்டும் என்றால்அவர்கள் சங்கத்தில் கூடி இருந்து வழிபாடு இயற்ற வேண்டும் என்றும் வள்ளல்பெருமான் "நெஞ்சறுவுறுத்தல்" என்னும் பகுதியில் பாடி உள்ளார்.

 

"சாதுக்கள் ஆம் அவர்தம் சங்க மகத்துவத்தைச்

சாதுக்கள் அன்றி எவர் தாம் அறிவார் - நீ துக்கம்

நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந்து ஏத்திநிதம்

ஆங்கு அவர்தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி- ஓங்குசிவ

பஞ்சாட் சரத்தைப் பகர் அருளே நாவாக

எஞ்சாப் பரிவுடனே எண்ணி,அருள் - செஞ்சோதித்

தாதுஒன்று தும்பைமுடித் தாணு அடி ஒன்றிமற்றை

யாது ஒன்றும் நோக்காது அமைந்திடுக - தீது என்ற

பாழ்வாழ்வு நீங்கி,பதிவாழ்வில் எஞ்ஞான்றும்

வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து."

 

     எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையானது ஒன்றை ஔவைப் பிராட்டியார் தமது பாட்டின் இறுதியில் "அதனினும் இனிது அறிவு உள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே" என்று தெரிவிக்கின்றார். 

     அறிவு உள்ளவர்களோடுஅடியார் திருக்கூட்டத்தோடு நனவு நிலையில் பொருந்தி இருந்து வந்தால்அவர்களை இடைவிடாது நினைத்து வந்தால்அவர்கள் திருவுருவமும்அவர்களது அறிவுரைகளும் ஒருவனுக்குக் கனவிலும் கூட வந்து சித்திக்கும். நம்மால் கண்ணால் காண முடியாத அடியார் பெருமக்களும்ஆன்றோர் பெருமக்களும் நமக்கு அவர்கள் அருளிய நூல் வடிவில் காணக் கிடக்கின்றார்கள். அந்த அருட்பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதிவருதலே நனவில் நாம் செய்யவேண்டியது ஆகும். நூல் வடிவில் அவர்கள எப்போதும் நம்மை விட்டு நீங்காமல் இருப்பார்கள். நாமும் அவர்கள் நினைவுடனே வாழ்ந்து இருப்போம். அருள்நூல்களை ஓதுவதும்அவற்றின் பொருளை அடியார் திருக்கூட்டத்தோடும்தனிமையிலும் இருந்து சிந்திப்பது பேரானந்தம் தரும்.

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...