வாழ்க்கையில் இனியது எது?

 


வாழ்வில் இனியது எது?

-----

 

     இனியது எதுஎன்பது குறித்து ஔவைப் பிராட்டியார் அருளிய பாடலைச் சிந்திப்போம்.

 

     மனித வாழ்க்கையில் துன்பத்தைத் தருபவை குறித்து "இன்னா நாற்பது" என்னும் நூலிலும்இனிமை தருபவை குறித்து, "இனியவை நாற்பது" என்னும் நூலிலும் பலவாறாகச் சொல்லப்பட்டு உள்ளது.

 

"கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே"

 

என்று ஒரு பாடலில் சொல்லப்பட்டு உள்ளது.

 

     கற்றவர் முன்னிலையில் ஒருவன் தான் கற்ற கல்வியைச் சொல்லுதல் மிகவும் இனிமையானது. கல்வி அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டவரைச் சார்ந்து இருத்தல் மிகவும் மாட்சிமைப்பய இனிது. 

 

     இனிமை தராதவை குறித்துப் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது.

 

"பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;

அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா;இன்னா

பெரியோர்க்குத் தீய செயல்."      

 

      ஒருவன் தம்மினும் கல்வி அறிவுநற்குண நல்லொழுக்கங்களில் சிறந்த பெரியாரோடு கொண்ட தொடர்பை விட்டுவிடுதல் துன்பத்தைத் தரும். செய்தற்கு அரிய செயல்களைச் செய்து முடித்து வெளிப்படுத்துவதை விடுத்து,செய்து முடிப்பேன் என்று வாயளவில் சொல்வது துன்பத்தைத் தரும். அன்பு இல்லாவதரிடத்தில் சென்று தமக்கு உற்ற துன்பங்களைப் பற்றிக் கூறுதல் துன்பத்தைத் தரும். பெரியார்க்குத் தீய செயலைச் செய்வது துன்பத்தைத் தரும்.

 

     ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாகவே பெரியாரொடு தொடர்பு உண்டாகும். இதன் அருமையை உணர்ந்து பெரியாரோடு கொண்ட தொர்பினால் ஆன்ற பயனைப் பெற்றுக் கொள்ளுதல் அறிவுடைமை ஆகும். அல்லாது போனால்பலரோடும் பகைத்துக் கொள்வதால் உண்டாகும் தீமையை விடப் பலமடங்குத் தீமையை ஒருவன் அனுபவிக்க நேரிடும் என்கின்றார் திருவள்ளுவ நாயானர்.

 

"பல்லார் பகை கொளலில் பத்து அடுத்த தீமைத்தே 

நல்லார் தொடர்கை விடல்"              --- திருக்குறள்.

 

மேலும்,

 

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்,ய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்"           --- திருக்குறள்.

 

என்று பெரியோருக்குத் துன்பம் செய்தலின் தீமையைப் பற்றித் திருவள்ளுவ நாயனார் எச்சரிக்கை செய்கின்றார்.  நெருப்பினால் சுடப்பட்டாலும் ஒருவகையில் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால்பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைக்க மாட்டார்.

 

     ஔவைப் பிராட்டியைப் பார்த்தமுருகப் பெருமான் இனியது எதுஎன்று கேட்டார்பாடல் வழி ஔவையார் பின்வருமாறு சொன்னார்.

 

இனியது கேட்கின்,தனிநெடு வேலோய்!

இனிது! இனிது,ஏகாந்தம் இனிது;

அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்;

அதனினும் இனிது அறிவு உள்ளோரைக்

கனவிலும் நனவிலும் காண்பதுதானே"

 

இதன் பொருள் ---

 

     ஒப்பற்ற வேலை உடைய முருகப் பெருமானே! தனிமையில் இருப்பது இனிது. அதைவிட இனிது அந்தத் தனிமையிலும் இறைவனைத் தொழுவது. அதைவிட இனிது நல்லறிவு படைத்த நல்லோரைச் சேர்ந்து வாழ்வது. எல்லாவற்றையும் விட இனிது கனவிலும் நனவிலும் அறிவு உள்ள பெரியோரைக் கனவிலும் நினைப்பதும்நனவில் அவர்களைப் பின்பற்றி வாழ்வதும் ஆகும்.

 

     ஏக+அந்தம் = ஏகாந்தரம். ஏகம் என்பது, ஒன்று எனப்படும் பரம்பொருள் ஒன்றையே குறிக்கும். உலகியல் வாழ்வில் நாம் சார்ந்துள்ள அத்தனையில் இருந்தும் விடுபட்டுஒருமித்த சிந்தனையோடு வழிபாட்டில் ஈடுபட்டுஇறைவன் ஒருவனையே சிந்தித்து இருத்தல் வேண்டும். ஏகாந்தம் என்பது மன ஒருமைப்பாட்டைக் குறிக்கும். "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     காரைக்கால் அம்மையார் "அற்புதத் திருவந்தாதி"யில் மிக அற்புதமாகப் பாடி இருப்பார்.

 

"ஒன்றே நினைந்து இருந்தேன்ஒன்றே துணிந்து ஒழிந்தேன்,

ஒன்றே என் உள்ளத்தின் உள்அடைத்தேன்,- ஒன்றேகாண்

கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்குஒளிசேர்

அங்கையாற்கு ஆளாம் அது."  

 

இதன் பொருள் ---

 

     ஒப்பற்ற பரம்பொருளாகிய ஒன்றையே மனத்தில் எப்போதும் நினைந்து இருந்தேன். ஒன்றாகிய அதுவே வேண்டத் தக்கது என்று நிச்சயித்து,  (மற்றவற்றை எல்லாம் விட்டொழித்து,)  ஒன்றாகிய அந்த ஒன்றையே எனது உள்ளத்தில் உறுதிப் பொருளாகப் பற்றிக் கொண்டேன். அந்த ஒன்று என்பது கங்கையைச் சடையில் பரித்தவனும். திங்களைச் சடையில் தாங்கியவனும்தனது அழகிய திருக்கையில் ஒளிமிகுந்த அனலை எந்தி ஆடுபவனுமாகிய பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பது ஒன்றேதான்.  

 

     ஏகாந்தமாகத் தான் இறைவனை வழிபடுதல் வேண்டும் என்பதற்குப் பிரமாணங்கள் பின்வருமாறு....

 

"கல்லினால் புரமூன்று எய்த கடவுளைக் காத லாலே

எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும்

பல்இல்வெண் தலைகை ஏந்திப் பல்இலந் திரியும் செல்வர்

சொல்லும் நன்பொருளும் ஆவார் திருச்சோற்றுத் துறையனாரே."

 

இதன் பொருள் ---

 

     மலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் அழித்த சிவபெருமானை அன்போடு தனித்திருந்து இரவும் பகலும் உள்ளத்தில் தியானியுங்கள். பல் இல்லாத வெள்ளிய மண்டை ஓட்டை உண்கலமாக ஏந்திப் பல வீடுகளிலும் பிச்சைக்காகத் திரியும் செல்வராய்வேதமாயும் வேதத்தின் விழுப்பொருள் ஆகவும் உள்ள அவர் உங்களால் தியானிக்கத் தக்க திருச்சோற்றுத்துறையனாரே.

 

"காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே."

 

இதன் பொருள் ---

 

     உலக வாழ்வில் பல பற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப் பெறாமல் சாமவேத கீதனும்,தான்தோன்றி நாதனும் ஆகிய சிவபரம்பொருளை பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்து இருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத் தீயாகக் காட்சி வழங்குவான் .

 

"சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து

            தரணியொடு வான்ஆளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம்

            மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்,

அங்கம்எலாம் குறைந்துஅழுகு தொழு நோயராய்

            ஆவுரித்துத் தின்றுஉழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்

            அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே."

 

இதன் பொருள் ---

 

     சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்துஆட்சி செய்ய இந்தப் பூவுலகத்தையும்வானுலத்தையும்,  ஒருசேரத் தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பு இல்லாதவர்கள் நிலையில்லாமல் அழியக் கூடியவர்கள். அவர்களது செல்வத்தை நாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையும் தொழுநோயினை உடையவராய்,பசுவை உரித்துத் தின்று திரியும் புலையராக இருந்தாலும்கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின்அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

 

     அடுத்து, "அறிவினர்ச் சேர்தல் இனிது" என்கின்றார் ஔவைப் பிராட்டியார். திருக்குறளில்"சேர்தல்" என்னும் சொல்லுக்கு, "இடைவிடாது நினைத்தல்" என்று பரிமேலழகர் பொருள் தந்து உள்ளது சிந்தையில் கொள்ளத் தக்கது. இது குறித்து"மூதுரை" என்னும் நூலில்மேலும் தெளிவாகப் பின்வருமாறு சொல்கிறார் ஔவைப் பிராட்டியார்.

 

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே;நலம் மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றேநல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே;அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று"

 

     நல்லாரைச் சேர்ந்து இருப்பது என்ற முன்னே சொன்ன ஔவைப் பிராட்டியார்இங்கே "இணங்கி இருப்பதுவும் நன்று" என்கின்றார். இணங்குதல் என்னும் சொல்லுக்குஉடன்படுதல்மனம் பொருந்தி இருத்தல் என்று பொருள்.

 

     "நல்லாரைக் காண்பதுவம் நன்றுஅவர் சொல்லை ஒருவன் கேட்பதுவும் நன்றுஅவர் குணங்களை ஒருவன் சொல்லுவதும் நன்றுஅவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று" என்று சொல்லி உள்ளார். அது போலவேதீயோரைக் குறித்தும் ஒரு செய்யுள் உண்டு. காண்பதுகேட்பதுஉரைப்பது என்னும் செயல்களுக்கு வேறாகஇணங்கி இருப்பது என்னும் செயல் ஒன்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால்ஒருவரைக் காண்பதும்அவர் சொல்லைக் கேட்பதும்அவரைப்பற்றிச் சொல்லுவதும் செய்த அளவிலேயே அவரோடு இணங்கிவிட்டதாக எண்ண முடியாது. ஒருவர் கொள்கைப்படிஒருவர் நடந்துகொள்ளுவதே "இணங்கி நடப்பது" ஆகும். ஒருவருக்குத் துணை செய்ய வேண்டுமானால்அவரோடு இணக்கம் கொண்டு இருக்க வேண்டுவது இல்லை. அவரைப் பார்ப்பதும்அவர் சொல்லைக் கேட்பதும் போதும்."இணக்கம்" என்பதைச் சொல்லும் செயலும் ஒத்ததாகக் கொள்ளலாம்.

 

     திருவள்ளுவ நாயனார்ஒருவன் அடையும் பேறுகள் எல்லாவற்றிலும் அரிய பேறு எனப்படுவது தம்மைவிட மூத்த ஆறிவுடையோரப் போற்றித் தமக்கு சுற்றமாகக் கொள்ளும் செயலாகும் "அரியவற்றுள் எல்லாம் அரிதேபெரியாரைப் பேணித் தமராக் கொளல்" என்கின்றார். மேலும்அறத்தின் கூறுபாடுகளை அறிந்த மூத்த அறிவுடையவர்களின் அரிய நட்பினைக் கொள்ளும் வகையினை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டும் (அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மைதிறன் அறிந்து தேர்ந்து கொளல்) என்றும் உற்ற துன்பத்தை முதலில் நீக்கிமீண்டும் அந்த துன்பம் வராமல் முன்கூட்டியே காக்கவல்ல பெரியோர்களை போற்றி நட்பாகக் கொள்ள வேண்டும் (உற்ற நோய் நீக்கிஉறாமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்)என்றும் அறிவுறுத்துகின்றார்.

 

     "விவேக சிந்தாமணி" என்னும் பழைய நூல் ஒன்று உண்டு. அதன் ஆசிரியர் யார் என யாருக்கும் தெரியாது. ஆனாலும்அந்நூலில் அடங்கிய நீதிகள் யாவரும் அறிந்து கடைப்படிக்கத் தக்கதே ஆகும். உடம்போடு கூடி வாழும் காலத்திலேயே சுவர்க்க இன்பத்தை ஒருவன் அனுபவிக்காலம் என்று அந்த நூலில் ஒரு பாடல் வழிகாட்டுகின்றது.

 

"நற்குணம் உடைய வேந்தை

     நயந்து சேவித்தல் ஒன்று;

பொற்பு உடை மகளிரொடு

     பொருந்தியே வாழ்தல் ஒன்று;

பற்பலரோடு நன்னூல்

     பகர்ந்து வாசித்தல் ஒன்று;

சொற்பெறும் இவைகள் மூன்றும்

     இம்மையில் சுவர்க்கம் தானே!"—(விவேக சிந்தாமணி)

 

இதன் பொருள் ---

 

     நல்ல குணங்கள் பொருந்தப் பெற்ற அரசனை விரும்பிஅவருக்குப் பணி புரிதல் என்பது ஒன்றும்நற்குண நற்செய்கைகள் பொருந்தி உள்ள பெண்ணை மணம் செய்துகொண்டுஅவளோடு சேர்ந்து வாழ்தல் என்பது ஒன்றும், பலப்பல அறிவு நூல்களைக் கற்று வல்லவர்களோடு கூடி இருந்துஅந்த நூல்களைச் சொல்லிப் படித்தல் என்பது ஒன்றும் ஆகபுகழ்ந்து கூறப்பெறும் இந்த மூன்று செயல்களும் இந்தப் பிறவியில்சுவர்க்க இன்பத்தைப் போன்று இனிமை தருவன ஆகும்.

 

     உடம்பை விட்ட பின் சென்று அனுபவிக்கத் தக்கது சுவர்க்க இன்பம். சுவர்க்கத்தில் இன்ப அனுபவத்தைத் தவிரதுன்பம் என்பது சிறிதும் இல்லை. அத்தகைய இன்பத்தைஇப் பாடலில் கூறிய செயல்கள் இந்தப் பிறவியிலேயே தரும் என்று சொல்லப்பட்டது அருமை.

 

"அறிவு உ(ள்)ளோர் தமக்கு நாளும் 

     அரசரும் தொழுது வாழ்வார்,

நிறையொடு புவியில் உள்ளோர் 

     நேசமாய் வணக்கம் செய்வார்,

அறிவு உ(ள்)ளோர் தமக்கு யாதோர் 

     அசடு அது வருமே ஆகில்,

வெறியர் என்று இகழார் என்றும் 

     மேதினி உள்ளோர் தாமே."   --- விவேக சிந்தாமணி

 

இதன் பொருள் ---

 

     அறிவு உடைய நல்லோருக்குநாள்தோறும்யாரையும் வணங்காத மன்னரும் வணக்கம் செய்து வாழ்வார்கள். நிறையுள்ள உலகத்தாரும் அவர்களிடத்திலே அன்புடன் வணக்கம் செய்வார்கள்அத்தகைய அறிவு உடைய பெரியார்களின் செயலிலே ஏதேனும் ஒரு தாழ்வு வந்து விட்டால்எக்காலத்தும் உலகத்தில் உள்ளோர்அவரைப் பித்தர் என்றும் வெறியர் என்றும் என்று இகழ்ந்து கூற மாட்டார்கள்.

 

     பெரியோருக்கும் அசடு என்பது வரும். அதற்காக அவரை இகழ்ந்து கூறுதல் கூடாது.

 

     பின் வரும் ஔவையார் அருளிய மூதுரைப் பாடலை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

 

"சீரியர் கெட்டாலும் சீரியரே,சீரியர் மற்று

அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும்?- சீரிய

பொன்னின் குடம் உடைந்தால் பொன் ஆகும்,என்ஆம்

மண்ணின் குடம் உடைந்தக் கால்?"

 

     ஆகவேகற்றறிவு உடையோர் யாராலும் மதிக்கப்படுவர். வினை வயத்தால் அவர்களிடத்திலே யாதானும் ஒரு தாழ்வு காணப்படுமானால்அறிவு உடைய நல்லோர் இகழ மாட்டார்கள். அறிவில்லாதவர்களே இகழ்ந்து கூறுவார்கள்.

 

     "அறிவினர்ச் சேர்தல்" என்பதுமேலே குறித்தபடி அறிவு உள்ளவர்களை எப்போதும் நினைத்தல் என்பதோடுஅறிவுடையோர் கூடியுள்ள அவையில் பொருந்தி இருத்தல் என்பதையும் குறிக்கும். அடியார்கள் திருக்கூட்டத்தில் சேர்ந்து இருப்பதும்அடியார்களை எப்போதும் நினைவு கூர்வதும் சிறப்பைத் தரும். அடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து இருப்பது ஒன்றுதான் தனது இச்சை என்கின்றார் வள்ளல்பெருமான்.

 

"தங்கமே அனையார் கூடிய ஞான

     சமரச சுத்தசன் மார்க்கச்

சங்கமே கண்டு களிக்கவும்,சங்கம்

     சார்திருக் கோயில் கண்டிடவும்,

துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி

     துலங்கவும்,சங்கத்தில் அடியேன்

அங்கமே குளிர நின்தனைப் பாடி

     ஆடவும் இச்சைகாண் எந்தாய்".   --- திருவருட்பா.

 

     சாதுக்கள் சங்கத்தின் பெருமையைக் குறித்துப் பாடிதுக்கம் நீங்கி வாழவேண்டும் என்றால்அவர்கள் சங்கத்தில் கூடி இருந்து வழிபாடு இயற்ற வேண்டும் என்றும் வள்ளல்பெருமான் "நெஞ்சறுவுறுத்தல்" என்னும் பகுதியில் பாடி உள்ளார்.

 

"சாதுக்கள் ஆம் அவர்தம் சங்க மகத்துவத்தைச்

சாதுக்கள் அன்றி எவர் தாம் அறிவார் - நீ துக்கம்

நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந்து ஏத்திநிதம்

ஆங்கு அவர்தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி- ஓங்குசிவ

பஞ்சாட் சரத்தைப் பகர் அருளே நாவாக

எஞ்சாப் பரிவுடனே எண்ணி,அருள் - செஞ்சோதித்

தாதுஒன்று தும்பைமுடித் தாணு அடி ஒன்றிமற்றை

யாது ஒன்றும் நோக்காது அமைந்திடுக - தீது என்ற

பாழ்வாழ்வு நீங்கி,பதிவாழ்வில் எஞ்ஞான்றும்

வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து."

 

     எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையானது ஒன்றை ஔவைப் பிராட்டியார் தமது பாட்டின் இறுதியில் "அதனினும் இனிது அறிவு உள்ளோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே" என்று தெரிவிக்கின்றார். 

     அறிவு உள்ளவர்களோடுஅடியார் திருக்கூட்டத்தோடு நனவு நிலையில் பொருந்தி இருந்து வந்தால்அவர்களை இடைவிடாது நினைத்து வந்தால்அவர்கள் திருவுருவமும்அவர்களது அறிவுரைகளும் ஒருவனுக்குக் கனவிலும் கூட வந்து சித்திக்கும். நம்மால் கண்ணால் காண முடியாத அடியார் பெருமக்களும்ஆன்றோர் பெருமக்களும் நமக்கு அவர்கள் அருளிய நூல் வடிவில் காணக் கிடக்கின்றார்கள். அந்த அருட்பாடல்களைப் பொருள் உணர்ந்து ஓதிவருதலே நனவில் நாம் செய்யவேண்டியது ஆகும். நூல் வடிவில் அவர்கள எப்போதும் நம்மை விட்டு நீங்காமல் இருப்பார்கள். நாமும் அவர்கள் நினைவுடனே வாழ்ந்து இருப்போம். அருள்நூல்களை ஓதுவதும்அவற்றின் பொருளை அடியார் திருக்கூட்டத்தோடும்தனிமையிலும் இருந்து சிந்திப்பது பேரானந்தம் தரும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...