உன்னிடத்தில் குறை இருக்க, பிறரைப் பழி கூறாதே

 


பிறரைப் பழி கூறும் முன்தன்னிடத்து உள்ள பழியை எண்ணிப் பார்க்க வேண்டும்

-----

 

 

            திருக்குறளில் "புறங்கூறாமை" என்னும் ஓர் அதிகாரம். பிறரைக் கண்டபோது அவரைப் புகழ்ந்து பேசுவதும்காணாத இடத்தில்அவரை இகழ்ந்து பேசுவதும் குற்றம் ஆகும். புறம் பேசுதல் "புறங்கூறுதல்" ஆகும். பொறாமை காரணமாகப் பிறர் பொருளைக் கவர விருப்பம் கொள்ளுதல் மனத்தின் குற்றம் ஆகும். புறம் பேசுதல் என்பது மனத்தின் குற்றத்தை அடுத்துவாக்கின் குற்றமாக வருவது.

 

            இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறள், "பிறன் ஒருவனைக் காணாத இடத்துமற்றொருவனிடத்தில் அவனைப் பழித்துக் கூறுகின்றவன்தன்னிடத்திலும் அவ்விதமான குற்றங்கள் உள்ளதை ஆராய்ந்துபின்னர் அவனும் சொல்லுவான் என்பதை உணரவேண்டும்" என்கின்றது.

 

            தன்னைக் காணாத இடத்தில்பிறன் ஒருவனைப் பழித்துக் கூறியதைக் கேட்டவனும்பின்னர் தன் மீது பழியினைக் கூறுவான் என்பதை அறிதல் வேண்டும். 

 

            புறங்கூறுபவரின் உறவை விட்டொழிக்க வேண்டும் என்பதால், "உள் ஒன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்றருளினார் வள்ளல்பெருமான்.

 

"பிறன் பழி கூறுவான்தன் பழி உள்ளும்

திறன் தெரிந்து கூறப்படும்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

            இத் திருக்குறளுக்கு விளக்கமாககமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்... 

 

சங்கு அறுக்கும் சாதிசொ(ல்)லும் சங்கரனை,நக்கீரன்

அன்றுபழி சொன்னதுபோல் ஆர்சொல்வார்? --- என்றும்

பிறன் பழி கூறுவான்தன் பழி உள்ளும்

திறன் தெரிந்து கூறப்படும்.

 

இதன் பொருள் ---

 

            சங்கு அறுக்கும் சாதி சொல்லும் சங்கரனை --- சங்கை அறுக்கின்ற இழிந்த சாதியில் பிறந்தவன் நக்கீரன் என்று பழித்துக் கூறும் சிவபெருமானை.  அன்று --- தருமிக்காகச் சிவபெருமான் புலவராகி வந்த அந்நாளில்.  பழி சொன்னது போல் --- நக்கீரரைப் பழித்துக் கூறிய சிவபெருமான் மீது நக்கீரர்  பழித்துக் கூறியது போல்ஆர் சொல்லுவார் --- வேறு யார் சொல்லமுடியும்?

 

(எனவேஇந்த நிகழ்வு)

 

என்றும் --- எக்காலத்திலும்பிறன் பழி கூறுவான் --- பிறரைப் பழித்துக் கூறுகின்றவன்,தன் பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் --- தன்னிடத்தில் உள்ள குற்றங்களையும் ஆராய்ந்த பின்னர் கூறவேண்டும் (என்னும் திருக்குறளை ஒத்து இருக்கின்றது)

 

            நக்கீரரைப் பழித்துச் சிவபெருமான் கூறியதாக வரும் செய்யுள் வருமாறு ---

 

அங்கம் குலுங்க அரிவாளின் நெய்தடவிப்

பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் --- சங்கு அதனை

கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியைப்

பாரில் பழுது என்பவன்.

 

            அதற்கு மாறாக நக்கீரர்சிவபெருமானைப் பழித்துப் பகர்ந்த பாட்டும் கீழ் வருவதாகும்...

 

சங்கு அறுப்பது எங்கள் குலம்சங்கரனார்க்கு ஏது குலம்,

பங்கம்உறச் சொன்னால் பழுது ஆமோ? ---சங்கை

அரிந்து உண்டு வாழ்வோம்,  அரனாரைப் போல்

இரந்து உண்டு வாழ்வது இ(ல்)லை.

 

            இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்தில்தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் வருகிறது.

 

            வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரையைத் தலைமைப் பதியாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மீனாட்சியம்மை உடனாய சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும்மலர்ச் செடிகளையும் வைத்து பராமரித்தான். அந்த நந்தவனத்தில் செண்பகப் பூச் செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தான். அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், "செண்பகசுந்தரர்" என்று அழைக்கப்பட்டார். மன்னன் "செண்பகப் பாண்டியன்" என்று அழைக்கப்பட்டான்.

 

            செண்பக தோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோதுஅவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டாசெயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதாஎன்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. தன்னுடைய சந்தேகத்தினைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்துசபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.

 

            மதுரை சொக்கநாதரை வணங்கும் தருமி என்ற ஆதிசைவர் இருந்தார். அவர் உறவுகள் இல்லாத அனாதையாக இருந்தார். அவருக்கு திருமணம் செய்துஇறைவனைப் பூசித்துஇறைவன் அடி சேர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. காரணம்திருமணம் ஆகாதவர் இறைவன் திருமேனியைத் தொட்டுப் பூசனை புரிய ஆகமத்தில் உரிமை இல்லை. இன்றைய காலத்தில்அந்த முறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை. திருவிளையாடல் புராணத்தைக் கருத்தூன்றிப் படித்தால் இது விளங்கும். ஆனால்தருமி என்னும் ஏழை அந்தணர்காசுக்கு ஆசைப்பட்டு அலைவதைப் போலக் காட்டப்பட்டது வருந்தத் தக்கது.

 

     பின் வரும் திருவிளையாடல் புராணப் பாடல்கள் இதனைத் தெளிவிக்கும்.

 

தந்தை தாய் இ(ல்)லேன்,தனியன் ஆகிய

மைந்தனேன்,புது வதுவை வேட்கையேன்,

சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்கு

எந்தையே இது பதம் என்று ஏத்தியே.

 

இதன் பொருள் ---

 

     எமது தந்தை ஆகிய சொக்கலிங்கப் பெருமானே!  தந்தை தந்தை தாய் அற்றவனாய்ஒரு பற்றுக்கோடும் இல்லாதவனாய் உள்ள சிறியேன்ஆகிய நான்திருமணம் புரியும் விருப்பம் கொண்டுள்ளேன். அது முடித்தற்கு என்னிடம் பொருள் இல்லாமையால் நான் வருந்துகின்றேன். எனது மனத்தை வருத்தும் வறுமைத் துன்பத்தைப் போக்குதற்கு நீக்குவதற்குஇது நல்ல தருணம் என்று  கூறித் துதித்து. (தனது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகின்றான் தருமி)

 

நெடிய வேதநூல் நிறைய ஆகமம்

முடிய ஓதிய முறையில் நிற்கு எ(ன்)னும்

வடு இல் இல்லற வாழ்க்கை இன்றி,நின்

அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ?.

 

இதன் பொருள் ---

 

     உயர்ந்த வேத நூல்கள் முழுமையும்ஆகமங்கள் முழுமையும் ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும்குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல்தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்).

 

     குறிப்பு --- இல்லற வாழ்க்கை உற்றோரே சிவபெருமானை அருச்சித்தற்கு உரியவர் என்பது வேதாகமங்களின் துணிபு என்பது இதனால் அறியப் பெறும்.

 

ஐய! யாவையும் அறிதியே கொலாம்,

வையை நாடவன் மனக் கருத்து உணர்ந்து

உய்ய ஓர்கவி உரைத்து,எனக்கு அருள்

செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்.

 

இதன் பொருள் ---

 

     ஐயனேஎல்லாவற்றையும் (இல்வாழ்க்கையில் ஈடுபட்டேஉனது திருவடியை அர்ச்சனை புரியவேண்டும் என்பதையும்அதற்கேற்பநான் மணம் முடிப்பதற்குப் பொருள் இல்லாது வருந்தி இருத்தலையும்) நீ அறிவாய். வைகை நாட்டை உடைய பாண்டியனது உள்ளக் கருத்தை ஆராய்ந்துநான் உய்தி பெறஒரு கவியினைப் பாடிஅடியேனுக்கு அருள் செய்யவேண்டும் என்று,  (ஆலவாய்ச் சொக்ககேசப் பெருமானிடம்) குறையிரந்து கூறினான்.

 

     தருமி என்னும் அந்தணன்தந்தைதாய் இல்லாதவனாகவும்வேதாகமங்களை முறைப்படி கற்று இருந்தும்இல்வாழ்க்கை அமையாமையால்இறைவனைத் தான் கற்றறிந்த வேதாகமங்களின் வழி நின்று பூசிக்க முடியாமல் வருத்தம் கொண்டு இருந்தார்.ஏழையாக இருந்தமையாலும்அனாதையாக இருந்தமையாலும் பெண் கிடைக்காமல் சிரமம் கொண்டார். தன்னுடைய மணவாழ்க்கைக்காக காத்திருந்தவருக்கு மன்னன் அறிவித்த ஆயிரம் பொற்காசுகள் போட்டியைப் பற்றிய செய்தி தெரிந்துஇறைவனிடம் முறையிட்டார். தருமி தன் மீது கொண்டிருந்து பத்திக்கு இரங்கிசொக்கநாதர், ஒரு புலவராக மாறி வந்துஒரு ஓலையை தருமிக்குத் தந்தார். இதை மன்னிடம் கொடுத்தால் பரிசு கிடைக்கும் எனக் கூறினார்.

 

            தருமியும் மன்னரின் அவைக்கு சென்று இறைவன் கொடுத்த பாடலைப் படித்தார். அதில் பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே மணம் உண்டு என்ற செய்தி மறைமுகமாக கூறப்பட்டிருந்தது. தருமியின் பாடல் மன்னன் கொண்டிருந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது. மன்னன் பரிசினை தருமிக்குக் கொடுத்தான். ஆனால் அவையிலிருந்த புலவர் நக்கீரர் என்பவர்,தனக்கே அனைத்துப் புலமையும் தெரியும் என்ற ஆணவத்தால்,அந்தப் பாடலில் பொருட்குற்றம் இருப்பதாக கூறி பரிசினைத் தருவதைத் தடுத்துவிட்டார்.

 

            ஏழை அந்தணர் ஆகிய தருமி சொக்கநாதர் திருக்கோயில் சென்று,இறைவன் திருமுன்னிலையில் நடந்ததைக் கூறி முறையிடஇறைவன் மீண்டும் புலவராக வந்து தருமியுடன் இணைந்து பாண்டியனுடைய அவைக்குச் சென்றார். அங்கு நக்கீரனுடன் வாதம் செய்தார். நக்கீரன் இயற்கையாக கூந்தலுக்கு மணமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். அதனால் கோபம் கொண்ட சொக்கநாகப் புலவர் "இறைவியின் கூந்தலுக்குமா மணமில்லை?" என்று கேட்க "ஆம் இறைவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை" என்றார் நக்கீரர். பிழையான செய்தியை நக்கீரர் தன்னுடைய ஆணவத்தினால் சரியானது என்றே மறுப்பு தெரிவித்து வந்தார். அதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணால் அவரை எரித்தார்.

 

            அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

குந்திமகார் பேறு உரைத்த கொற்றவனும் தன்வரவும்

சிந்தை செயாது உற்றான்சிவசிவா! - நிந்தை

பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.

 

இதன் பொருள் ---

 

            துரியோதனன் தனது பிறப்பின் இயல்பினை எண்ணாது,

குந்திதேவியின் மக்களான பாண்டவர்களின் பிறப்பு இயல்பை பழித்துக் கூறினான். பிறரைப் பழி கூறுவதற்கு முன்னர்தன்னிடத்து உள்ள பழியை ஒருவன் எண்ணிப் பார்க்கவேண்டும். 

 

            கொற்றவன் --- துரியோதனன். தன்வரவு --- துரியோதனனுடைய பிறப்பியல்பு.

 

            பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்புமையாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 

இழுக்கல் இயல்பிற்று இளமைபழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை, --- யாண்டும்

செறுவொடு நிற்கும் சிறுமை,இம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.         --- திரிகடுகம்.

 

இதன் பதவுரை ---

 

            இளமை இழுக்கல் இயல்பிற்று --- இளமைப் பருவம்வழுவுதலை இயல்பாக உடையதுபேதைமை பழித்தவை சொல்லுதல் வற்று ஆகும் --- அறியாமை உடையவர்கள் அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதலில் வல்லவர்களாக இருப்பார்கள். சிறுமை யாண்டும் செறுவொடு நிற்கும் --- ஈனத் தன்மை எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும் (ஆதலால்)இ மூன்றும் அறிவு உடையார் குறுகார் --- இம் மூவகையினையும்மேல் விளைவை அறிதலை உடையார் நெருங்கார்.

 

            இயல்பாக தவறுதல் செய்யும் இயல்பினை உடையது இளமைப் பருவம்;  அறிவு உடையோர் வெறுப்பவைகளைச் சொல்லுதல் மூடத்தனம்எப்போதும் சினத்தோடிருப்பது சிறுமைஇவை ஒருவனுக்கு இருந்தால் பெரியோர் அவனைச் சேரார்.

 

நம்மைப் பிறர்சொல்லும் சொல் இவை,நாம் பிறரை

எண்ணாது சொல்லும் இழுக்கு இவை என்று எண்ணி

உரைகள் பரியாது உரைப்பாரில் யாரே

களைகணது இல்லா தவர்.      ---  அறநெறிச்சாரம்.

      

 இதன் பதவுரை ---

 

            நம்மைப் பிறர் சொல்லும் சொல் இவை --- நம்மைக் குறித்துப் பிறர் இவ்வாறு சொல்லவேண்டும் என்று நாம் கருதும் சொற்கள் இவைநாம் எண்ணாது பிறரைச் சொல்லும் இழுக்கு இவை --- நாம் ஆராயாது பிறரைக் குறித்து இகழ்ந்து கூறும் சொற்கள் இவைஎன்று எண்ணி --- என்று ஆராய்ந்து உரைகள் பரியாது உரைப்பாரில் --- தாம் பிறர்பால் இரங்காது கடுஞ்சொல் கூறுவராயின் அவரைப் போல்யாரே களைகணது இல்லாதவர் --- பற்றுக் கோடு (ஆதரவு) இல்லாதவர் பிறர் யார்ஒருவரும் இல்லை.

 

 

பொல்லாத சொல்லி மறைத்து ஒழுகும் பேதைதன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும், - நல்லாய்!

மணல்உள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்.     ---  பழமொழி நானூறு.

 

இதன் பதவுரை ---

 

            நல்லாய் --- நற்குணம் உடையவளே!மணல் உள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் --- மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும்தன் வாயால் கெடும் --- தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்து ஒழியும், (அதுபோல) பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை --- தீயனவற்றைக் கூறி ஒளித்து நிற்கும் அறிவில்லாதவன்தன் சொல்லாலே தன்னைத் துயர் படுக்கும் --- தான் கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண் அகப்படுத்திக் கொள்வான்.

 

            புறங்கூறுதலால் தன் இயல்பைத் தானே வெளிப்படுத்திக் கொள்வதால்அது காரணமாக வரும் தீங்கு தன்னால் செய்து கொள்ளப்பட்டமையின், 'தன் சொல்லாலே தன்னைத் துயர்ப் படுக்கும்என்றார்.

 

     குறை இல்லாதவன் மனிதன் இல்லை. ஒருவரிடத்தில் உள்ள குறை பிறரிடத்தில் இருக்காது. குறை என்பது ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும். பிறரைப் பழி கூறத் தொடங்கும் முன்ஒருகணம்தம்மிடத்தில் பிழை ஏதும் இல்லையா என்பதை ஆராயவேண்டும்.

பொது --- 1005. நாலிரண்டு இதழாலே

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

நாலிரண்டு இதழாலே (பொது)

 

முருகா! 

அடியேனது வினை தீர அருள்வாய்.

 

 

தான தந்தன தானா தானன

     தான தந்தன தானா தானன

          தான தந்தன தானா தானன ...... தனதான

 

 

நாலி ரண்டித ழாலே கோலிய

     ஞால முண்டக மேலே தானிள

          ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே

 

ஞால முண்டபி ராணா தாரனும்

     யோக மந்திர மூலா தாரனு

          நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக

 

மேலி ருந்தகி ரீடா பீடமு

     நூல றிந்தம ணீமா மாடமு

          மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக

 

வீசி நின்றுள தூபா தீபவி

     சால மண்டப மீதே யேறிய

          வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய்

 

ஆல கந்தரி மோடா மோடிகு

     மாரி பிங்கலை நானா தேசிய

          மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும்

 

ஆன சம்ப்ரமி மாதா மாதவி

     ஆதி யம்பிகை ஞாதா வானவ

          ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி

 

கால சங்கரி சீலா சீலித்ரி

     சூலி மந்த்ரச பாஷா பாஷணி

          காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி

 

காம தந்திர லீலா லோகினி

     வாம தந்திர நூலாய் வாள்சிவ

          காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

நால் இரண்டு இதழாலே கோலிய

     ஞால் அமுண்டக மேலே தான்,

          ஞாயிறு என்று உறு கோலா காலனும்,....அதின்மேலே

 

ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்,

     யோக மந்திர மூல ஆதாரனும்,

          நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனும் ...... நடுவாக,

 

மேல் இருந்த கிரீடா பீடமும்,

     நூல் அறிந்த மணீ மா மாடமும்,

          மேதகும் ப்ரபை கோடா கோடியும் ...... இடமாக

 

வீசி நின்று உள தூபா தீபவி-

     சால மண்டப மீதே ஏறிய

          வீர பண்டித! வீர! ஆசாரிய! ...... வினைதீராய்.

 

ஆல கந்தரி,மோடா மோடிகு-

     மாரி,பிங்கலை,நானா தேசி,

          அமோகி,மங்கலை,லோகா லோகி,.....எவுயிர் பாலும்

 

ஆன சம்ப்ரமி,மாதா,மாதவி,

     ஆதி அம்பிகை,ஞாதா ஆனவர்

          ஆட மன்றினில் ஆடா நாடிய ...... அபிராமி,

 

கால சங்கரி,சீலா சீலித்ரி

     சூலி,மந்த்ர சபாஷா பாஷணி,

          காள கண்டிகபாலீ,மாலினி,...... கலியாணி,

 

காம தந்திர லீலா லோகினி,

     வாம தந்திர நூல் ஆய்வாள்சிவ

          காம சுந்தரி வாழ்வே! தேவர்கள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

      ஆல கந்தரி--- ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை உடையவள்,

 

     மோடா மோடி --- பெருமிதம் மிக்க துர்க்கை,

 

     குமாரி--- கன்னிகை,

 

     பிங்கலை--- பொன்னிறம் உடையவள்,

 

     நானா தேசி--- எல்லாவிதமான ஒளி வடிவங்களும் பொருந்தியவள்,

 

     அமோகி--- மோகம் அற்றவள்,

 

     மங்கலை--- மங்கலம் ஆனவள்,

 

     லோக லோகி--- எல்லா உலகங்களையும் ஈன்று அளிப்பவள்,

 

     எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி--- எல்லா உயிர்களிலும் நிறைந்து விளங்குபவள், (சம்பிரமம் --- நிறைவு)

 

     மாதா --- தாய்,

 

     மாதவி --- துர்க்கை

 

     ஆதி அம்பிகை --- முதற்பொருள் ஆனவள்,

 

     ஞாதா ஆனவர் ஆட--- மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரி,

 

     மன்றினில் ஆடா நாடிய அபிராமி---  அவருடன் திருநடனம் புரிய விரும்பிய பேரழகி,

 

      கால சங்கரி--- காலனை அழித்தவள்,

 

     சீலா சீலி--- யாவரிலும் தூயவள்,

 

     த்ரிசூலி --- முத்தலைச் சூலத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவள்,

 

     மந்த்ர சபாஷா பாஷிணி--- மந்திரங்களின் பொருளாக விளங்குபவள்,

 

      காளகண்டி--- கறுத்த கண்டத்தை உடையவள்,

 

     கபாலி--- பிரம காபலத்தை ஏந்தியவள்,

 

     மாலினி --- மாலைகளை அணிந்தவள்,

 

     கலியாணி --- நன்மை நிறைந்தவள்,

 

      காம தந்திர லீலா லோகினி--- காமநூல்கள்  கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள்

 

      வாம தந்திர நூல் ஆய்வாள்--- சத்தி வழிபாட்டுக்குரிய நூங்களின் பொருளாக விளங்குபவள்,

 

     சிவகாம சுந்தரி வாழ்வே --- சிவகாம சுந்தரியாகிய உமாதேவியின் பெருஞ்செல்வமே! 

 

      தேவர்கள் பெருமாளே--- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!.

 

     நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான்--- ஆறு இதழ்க் கமல வடிவில் பொன்னிறம் கொண்ட சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தின் மீது,

 

       இளஞாயிறு என்று உறு கோலாகாலனும்--- உதயசூரியன் என கோலாகலமாக விளங்கும் பிரமனும்

 

      அதின் மேலே --- அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்,

 

     ஞாலம் உண்ட பிராண ஆதாரனும்--- (மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் ஆகிய) இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமாலும்,

 

      யோக மந்திர மூலாதாரனும்--- (அதற்கும் மேலேஉயிர்கள் புரியும்யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் (அனாகதம் என்ற ஆதார நிலையில்) விளங்குகின்ற உருத்திரனும், (அகிய இம்மூவரும்)

 

      நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்)--- தேடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தியும் 

 

     நடுவாக--- நடு நிலையில் வீற்றிருக்க

 

     மேல் இருந்த கிரீடா பீடமு(ம்)--- இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு உரிய இருப்பிடமும்

 

      நூல் அறிந்த மணீ மாமாடமும் --- சாத்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும்,

 

      மேதகு ப்ரபை கோடா கோடியும் இடமாக--- மேன்மை வாய்ந்த,கோடானு கோடி ஒளி விளங்கும் இடத்தை தேவரீரது இடமாகக் கொண்டு

 

      வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித--- வீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதரே!

 

      வீர ஆசாரிய--- வீரம் மிக்க குருமூர்த்தியே!

 

     வினை தீராய்--- அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

 

பொழிப்புரை

 

     ஆலகால விடம் பொருந்திய கண்டத்தை உடையவள்பெருமிதம் மிக்க துர்க்கைகன்னிகைபொன்னிறம் உடையவள்எல்லாவிதமான ஒளி வடிவங்களும் பொருந்தியவள்மோகம் அற்றவள்மங்கலம் ஆனவள்எல்லா உலகங்களையும் ஈன்று அளிப்பவள்எல்லா உயிர்களிலும் நிறைந்து விளங்குபவள், (சம்பிரமம் --- நிறைவு)தாய்துர்க்கை,  முதற்பொருள் ஆனவள்மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிஅவருடன் திருநடனம் புரிய விரும்பிய பேரழகி,காலனை அழித்தவள்யாவரிலும் தூயவள்முத்தலைச் சூலத்தைத் திருக்கரத்தில் ஏந்தியவள்மந்திரங்களின் பொருளாக விளங்குபவள்கறுத்த கண்டத்தை உடையவள்பிரம காபலத்தை ஏந்தியவள்மாலைகளை அணிந்தவள்நன்மை நிறைந்தவள்காமநூல்கள்  கூறும் லீலைகளை உலகில் நடத்தி வைப்பவள்,  சத்தி வழிபாட்டுக்குரிய நூங்களின் பொருளாக விளங்குபவள்,சிவகாம சுந்தரியாகிய உமாதேவியின் பெருஞ்செல்வமே! 

 

       தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!.

 

     ஆறு இதழ்க் கமல வடிவில் பொன்னிறம் கொண்ட சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தின் மீதுஉதயசூரியன் என கோலாகலமாக விளங்கும் பிரமனும் அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்,மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் ஆகிய இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமாலும்,அதற்கும் மேலேஉயிர்கள் புரியும் யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் அனாகதம் என்ற ஆதார நிலையில் விளங்குகின்ற உருத்திரனும்அகிய இம்மூவரும்நாடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தியும்  நடு நிலையில் வீற்றிருக்க,  இவர்களுக்கு மேலான நிலையில் இருந்த (உனது) லீலைகளுக்கு உரிய இருப்பிடமும்,  சாத்திர நூல்கள் இறைவன் வீற்றிருக்கும் இடம் இது என்று அறிந்து கூறுவதுமான இரத்தின மயமான அழகிய மண்டபமும்மேன்மை வாய்ந்த,கோடானு கோடி ஒளி விளங்கும் இடத்தை தேவரீரது இடமாகக் கொண்டுவீசி நின்று காட்டப்படும் தூபங்களும் தீபங்களும் விளங்கும் விசாலமான மண்டபத்திலே ஏறி அமர்ந்துள்ள வீர பண்டிதரே!

 

     வீரம் மிக்க குருமூர்த்தியே!

 

     அடியேனது வினைகளைத் தீர்த்து அருள்வாயாக.

 

விரிவுரை

 

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இளஞாயிறு என்று உறு கோலாகாலனும்--- 

 

நாலிரண்டு --- நான்கோடு இரண்டுஆறு.

 

ஞால் --- தொங்குகின்ற,

 

முண்டகம் --- தாமரை.

 

சுவாதிட்டானம் என்னும் ஆதாரத்தில் தொங்குகின்ற ஆறு இதழ்க் கமலத்தின் மீது,பொன்ற நிற வடிவத்தோடுஇளஞைசூரியனைப் போல விளங்குபவர் பிரமதேவர்.

 

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்

கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்?.

 

நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவைஉள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது.

                                                            ---பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்

சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே!

 

எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில்அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.         --- பட்டினத்தார் பூரணம்

 

அதின் மேலே ஞாலம் உண்ட பிராண ஆதாரனும் --- 

 

அந்தச் சுவாதிட்டனத்திற்கு மேல்மணிபூரகம் என்னும் ஆதாரத்தில் விளங்குகின்றவர் இந்த உலகத்தை விழுங்கியவரும்உயிர்களைக் காக்கும் தொழிலை உடையவரும் ஆகிய திருமால்.

 

அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்?.

 

மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவைஉப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது.

                                                     --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்

ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.

 

எங்கும் நிறைந்த பொருளேமணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.                   --- பட்டினத்தார் பூரணம்

 

யோக மந்திர மூலாதாரனும்--- 

 

அனாகதம் என்னும் ஆதாரத்தில்உயிர்கள் புரியும்யோகத்துக்கும் மந்திரங்களுக்கும் மூலமான இருதய கமலத்தில் விளங்குபவர்  உருத்திரமூர்த்தி.

 

மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?.

 

முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது?        ---பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்

கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.

 

எங்கும் நிறைந்த பொருளேஅநாகதத்தில்அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன்.             --- பட்டினத்தார் பூரணம்

 

 

நாடி நின்ற ப்ரபாவ ஆகாரனு(ம்)--- 

 

இம்மூவரும் நாடி நிற்பது அனாகதம் என்னும் ஆதாரத்திற்கு மேல் உள்ள புருவ தேடி நிற்கின்ஒளியும் மேன்மையும் கொண்ட வடிவத்தோடு (புருவ மத்தியில் விளங்குகின்ற) சதாசிவ மூர்த்தி.

 

வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்

கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.

 

வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது.

                                                          ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்

புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே

 

எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவதுநெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல்ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.

                                                                                    ---  பட்டினத்தார் பூரணம்.

 

மேல் இருந்த கிரீடா பீடமு(ம்) நூல் அறிந்த மணீ மாமாடமும் மேதகும் ப்ரபை கோடா கோடியும் இடமாகவீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய வீர பண்டித--- 

 

கிரீடம் --- தலைமை நிலை.

 

பீடம் --- இருப்பிடம்.

 

மணி மாமாடம் --- ஒளி பொருந்திய இடம்.

 

பிரபை --- ஒளி.  கோடி சூரிய ஒளி.

 

இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்க் கமலம். சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவஇவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.

 

"உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்ழ".

 

ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.

 

"ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை

பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்"?

 

ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்துஅதனை அடையப் பெறுவது எப்போது.

                                                            --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.

 

"உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்

அச்சமுடன்  நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே".

 

எங்கும் நிறைந்த பொருளேஉச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல்பயத்துடனே புத்தி கெட்டேன்.                    ---பட்டினத்தார் பூரணம்.

 

இந்த நிலையில் விளங்கும் அருட்காட்சியினை வள்ளல்பெருமான் அனுபவித்து விளக்குவதைக் காணலாம்...

 

ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்

     அற்புதக் காட்சி அடி - அம்மா

    அற்புதக் காட்சி அடி.              ---  திருவருட்பா.

 

ஆணிப் பொன்னம்பலம் --- மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சபை.

 

ஜோதி மலைஒன்று தோன்றிற்றுஅதில்ஒரு

     வீதி உண்டாச்சுது அடி - அம்மா

     வீதி உண்டாச்சுது அடி                ---  திருவருட்பா.    

                       

சோதி மலை --- சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார்.                                  

 

வீதியில் சென்றேன்அவ் வீதி நடுஒரு

     மேடை இருந்தது அடி - அம்மா

     மேடை இருந்தது அடி                 ---  திருவருட்பா.                      

மேடைமேல் ஏறினேன்,மேடைமேல் அங்கு ஒரு

     கூடம் இருந்தது அடி - அம்மா

     கூடம் இருந்தது அடி.                 ---  திருவருட்பா.                              

கூடத்தை நாடஅக் கூடமேல் ஏழ்நிலை

     மாடம் இருந்தது அடி - அம்மா

     மாடம் இருந்தது அடி.                 ---  திருவருட்பா.                           

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம்

     என் என்று சொல்வன் அடி - அம்மா

     என் என்று சொல்வன் அடி.       ---  திருவருட்பா. 

 

இந்த அற்புத அருளனுபவத்தை அருணை வள்ளலார் அருளுமாறு காண்க.

 

கற்பகந் தெருவில் வீதி கொண்டுசுடர்

பட்டி மண்டபம் ஊடாடி இந்துவொடு

கட்டி விந்து பிசகாமல் வெண்பொடிகொடு ...... அசையாமல்

                                                                                    --- (கட்டிமுண்ட) திருப்புகழ்.

 

                                                ….                   ….       வானின்கண்

நாம மதி மீதில் ஊறுங்கலா இன்பம்

நாடிஅதன் மீதுபோய் நின்ற ஆனந்த

மேலைவெளி ஏறி,நீஇன்றி நான்இன்றி

நாடியினும் வேறு தான்இன்றி    வாழ்கின்றது ஒருநாளே.      ---  (மூளும்வினை) திருப்புகழ்.

 

வீர ஆசாரிய--- 

 

தன்னை நம்பியவர்களை என்றும் கைவிட்டு விடாத வீரம் மிக்க குருமூர்த்தி முருகப் பெருமான்.

 

ஆல கந்தரி--- 

 

ஆலம் -- விடம். கந்தரம் --- கழத்து,  கண்டம்.

 

குமாரி--- 

 

எல்லா உலகங்களையும்உயிர்களையும் ஈன்று அளித்தும்,இன்னமும் கன்னியாகவே விளங்குபவள்.

 

"அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறைபேசும் ஆனந்த ரூப மயிலே!" என்று தாயுமானவரும், "கருதரிய கடலாடை உலகு பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி'"என்றும் சிவப்பிரகாச சுவாமிகளும் பாடி இருத்தல் காண்க.

 

நானா தேசி--- 

 

நானா பலவிதமாஎல்லாவிதமான.

 

தேசி --- தேசு --- ஒளி.

 

எவ்வுயிர் பாலும் ஆன சம்ப்ரமி--- 

 

சம்பிரமம் --- நிறைவு

 

எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பவள்.

  

ஞாதா ஆனவர் ஆட--- 

 

ஞாதா --- மெய்ப்பொருள். 

 

மெய்ஞ்ஞானப் பொருளான இறைவன் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரி,

 

காம தந்திர லீலா லோகினி--- 

 

உயிர்களுக்குப் போகத்தை ஊட்டுபவள்.

 

வாம தந்திர நூல் ஆய்வாள்--- 

 

வாமம் --- சத்தி.

 

வாம தந்திரம் --- சத்தி வழிபாட்டுக்கு உரிய நூல்கள்.

 

கருத்துரை

 

முருகா! அடியேனது வினை தீர அருள்வாய்.

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...