பலரில் அரியவர் ஒருவரே

                                                                பலரில் அரியர் ஒருவர்

-----

 

     உலகில் கற்றறிந்தவர்கள் பலர் இருக்கலாம். எல்லோராலும் தான் கற்றதைப் பலரும் கூடி உள்ள சபையில் விரித்துப் பேச முடியாது. பாடத் தெரிந்தவர் பலர் இருக்கலாம். ஆனாலும்பலரும் கேட்டு மகிழும்படியாக சபை ஏறிப் பாட முடியாது. செல்வந்தர்கள் பலர் இருக்கலாம். எல்லாரும் வள்ளல் ஆக முடியாது.

 

     உலகில் புலவர்கள்,அறிஞர்கள்,வீரர்கள்பலப் பலர் இருந்தார்கள்இருக்கின்றார்கள். வள்ளல்கள் மட்டும் சிலர் தான். உலகம் தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை இருபத்தொரு வள்ளல்கள் இருந்த்தாகச் சொல்லப்படுகின்றது. 

 

ஆர்த்தசபை நூற்று ஒருவர்ஆயிரத்து ஒன்றாகும் புலவர்,

வார்த்தை பதினாயிரத்து ஒருவர், - பூத்தமலர்த்

தண் தாமரைத் திருவே! தாதா கோடிக்கு ஒருவர்

உண்டாயின் உண்டு என்று உறு.

 

என்பது ஔவையார் பாடிய பாடல்.

 

இதன் பொருள் ---

 

தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! நூறு பேர்களில் ஒருவர்தான் கற்றோர் கூடி இருக்கும் சபையில் வீற்றிருப்பதற்கு உரியவர். ஆயிரம் பேர்களில் ஒருவர் தான் கல்வி அறிவில் சிறந்தவராக விளங்குவர். அவர்கள் உள்ளும்சொல்லும் வகை அறிந்து சொல்ல வேண்டிய சொல்லைக் கேட்பவர் செவிச் செல்லும் வகையில் சொல்லும் ஆற்றல் உடையவர் பதினாயிரத்தில் ஒருவரே. செல்வந்தர்கள் பலர் இருக்கலாம். ஆனால்கோடி பேர்களில் ஒருவரே வள்ளலாக இருக்கமுடியும்.

 

     செயற்கரிய செயல்களைச் செய்பவர் பலரில் ஒருவராகத் தான் இருக்கமுடியும்.

 

     இது பற்றிஅறப்பளீசுர சதகம் கூறுமாறு காண்க....

 

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!

     பாடுவோர் நூற்றில் ஒருவர்!

  பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி தப்பாது

     பாடிப்ர சங்கம் இடுவோர்!

 

இதன்அருமை அறிகுவோர் பதினா யிரத்துஒருவர்!

     இதை அறிந்து இதயம் மகிழ்வாய்

  ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே

     இலக்கத்திலே ஒருவராம்!

 

துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்

     தூயர் கோடியில் ஒருவர் ஆம்.

  தொல்உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை

     சூழும்அவி நாசி பேரூர்

 

அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     தொல் உலகு புகழ் --- பழைமையான உலகம் புகழுகின்றகாசி ஏகாம்பரம் கைலை சூழும் அவிநாசி பேரூர் அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி அத்தனே--- காசி, காஞ்சிபுரம், திருக் கயிலை, அடியவர்கள் சூழுகின்ற அவிநாசி,திருப்பேரூர், பெருமையுடைய திருவெண்காடு, திருச்செங்கோடு, திருக்காளத்தி ஆகிய திருத் தலங்களை இருப்பிடமாகக் கொண்ட முதல்வனே!,  அருமை மதவேள்--- அருமை மதவேள் என்பான்,  அனுதினமும் மனதில் நினைதரு--- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர்--- சபையில் உள்ளோர் புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர்

 

     பாடுவோர் நூற்றில் ஒருவர்--- இனிமையாகப் பாடுவோர் நூற்றுக்கு ஒருவர்

 

     விதி தப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார் மீதில் ஆயிரத்து ஒருவர்--- முறை தவறாமல் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர்

 

     இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர்--- இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரம் பேரில் ஒருவர்

 

     இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம்--- இதன் அருமையை உணர்ந்து உள்ளம் மகிழ்ந்து பொருளை அளிப்பவர்கள்உலகில் அருமையாக இலட்சத்தில் ஒருவர் ஆவர்

 

     துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த் தூயர் கோடியில் ஒருவர் ஆம்--- துதித்துப் போற்றுகின்ற முக்காலமும் உணர்ந்த உண்மையான உள்ளத் தூய்மை உடையவர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...