நிலை மாறிப் போனால்...




பாடல் எண். 62
நிலை தளர்ந்திட்ட போது நீள்நிலத்து உறவும் இல்லை,
சலம் இருந்து அகன்றபோது தாமரைக்கு அருக்கன் கூற்றம்,
பல வனம் எரியும்போது பற்று தீக்கு உறவாம் காற்று,
மெலிவது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம்.    

இதன் பொருள் ----

தாமரைக்கு --- குளத்திலே உள்ள தாமரைக் கொடிக்கு, (நீர் உள்ள வரையில் சூரியன் நன்மையைச் செய்யும்)

சலம் இருந்து அகன்றபோது --- அது செழித்து வளர்வதற்குத் துணை புரிந்த தண்ணீரானது குளத்தில் இருந்து வற்றிய பொழுது,

அருக்கன் கூற்றம் --- (முன்பு தன்னைச் செழித்து வளரச் செய்த) சூரியனே அதனைக் கொல்லுகின்ற இயமன் ஆவான்.

பல வனம் எரியும்போது --- பலனைத் தருகின்ற காடானது தீப் பற்றி எரிகின்ற போது,

பற்று தீக்கு உறவாம் காற்று --- அதில் பற்றுகின்ற நெருப்புக்கு காற்று துணை நின்று, எரிவதை அதிகப்படுத்தும்,

மெலிவு அது விளக்கே ஆகில் மீண்டும் அக் காற்றே கூற்றம் --- அந்தக் காற்று மெலிந்து விட்டால், சிறு நெருப்பு விளக்குப் போல ஆகும்போது, முன்னர் காட்டுத் தீயாய் இருந்தபோது, பற்றி எரியத் துணை செய்த காற்றே, அதனை அணைத்து விடும்.

அது போல,

நிலை தளர்ந்திட்ட போது --- மனிதர்கள் தமது உயர்ந்த நிலைமை கெட்டு ஒழிந்த காலத்தில்,

நீள் நிலத்து உறவும் இல்லை --- இந்தப் பரந்த உலகத்தில் உதவியாக யாரும் இல்லாமல் போய்விடும்.

கருத்துரை ---

குளத்தில் உள்ள தாமரை நீரோடு சேர்ந்து செழிப்பாய் இருக்கும்போது, அது மலர்வதற்குத் துணை புரிந்த சூரியனே, குளத்தில் உள்ள நீர் வற்றியபோது, அந்தத் தாமரையை வாடச் செய்வது போலவும், காட்டில் பற்றியது பெருநெருப்பாய் இருந்தபோது, அதனை மேலும் மூளும்படித் துணை புரிந்த காற்றே, அந்த நெருப்புக் குறுகிச் சிறியதாய் இருக்கும்போது, அதனை அணைத்து விடுவது போலவும், இந்தப் பரந்த உலகத்தில், மனிதர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருந்த காலத்தில் அவர்களுக்கு இருந்து வந்த உறவும் நட்பும், அவர் தமது நிலையில் தாழ்ந்த போது இல்லாமல் போய்விடும்.

உலகப் பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும்.





43.  உலகப் பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும்.

வர்க்கத்தார் தமைவெறுத்த விருத்தருமாய்
      மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்,
கல்கட்டு ஆகிய மடமும், காணியும், செம்
      பொனும் தேடும் கருமம் எல்லாம்,
பொன்கொத்து ஆம் செந்நெல் வயல் தண்டலையா
      ரே! சொன்னேன் பொன்நாடு ஆகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
      ராட்டினத்தைச் சுமந்த வாறே.

இதன் பொருள் ---

     பொன் கொத்து ஆம் செந்நெல் வயல் தண்டலையாரே --- பொன்கொத்துப் போல கொத்துக் கொத்தாக விளைந்துள்ள செந்நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டருளிய சிவபெருமனே!

     வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய் மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர் --- உறவினர்களை வெறுத்த அறிவிலே முதியவராய் உண்மை அறிவே ஒரு வடிவம் எனக் காணப்படுவோர்,

     கல்கட்டு ஆகிய மடமும் --- கல்லால் கட்டப்பட்ட மடத்தையும்,

     காணியும் --- காணி நிலத்தையும்,

     செம்பொனும் --- செழுமையான பொன்னையும்,

     தேடும் கருமம் எல்லாம் --- தேடுகின்ற செய்கைகள் எல்லாம்,

     பொன் நாடு ஆகும் சொர்க்கத்தே போம்போதும் --- பொன்னுலகம் என்னும் தேவலோகத்திற்குப் போகும்போதும்,

     கக்கத்தே ராட்டினத்தைச் சுமந்த ஆறே --- கை அடியில் இராட்டினத்தைக் கொண்டு செல்லும் தன்மயைப் போல் ஆகும்.

விளக்கம் ---

பொன் நாடு எனப்படும் தேவலோகத்தில், நினைத்தவை எல்லாவற்றையும் தருகின்ற கற்பக மரம் உள்ளது. சிந்தாமணி உள்ளது. காமதேனு என்னும் தெய்வப் பசு உள்ளது. அப்படி இருக்க, பூவுலகில் வறுமையில் வாடும்போது பிழைப்புக்காக வைத்திருந்த இராட்டினத்தை ஏன் கொண்டு செல்லவேண்டும். இது அறியாமை அல்லவா? உலகப் பொருள்களில் பற்று வைக்கலாமா?

இராட்டினம் என்பது நூல் நூற்கும் கருவி. நூல் நூற்பதனாலே கிடைக்கும் வருவாய் சிறிதாகும். அது வறுமையின் அடையாளம். அக் கருவியைப் பொன்னாட்டிற்கும் சுமந்து செல்வது நகைப்புக்கு இடமானது.

பேரின்ப வீட்டிற்குச் செல்லும் நிலையிலுள்ள உண்மை அறிவினர், உலகியல் நிலையில் உழலுங்கால் ஒரோவழி உலகியல் பொருளில் மயங்குவர். அஞ்ஞான கன்மப் பிரவேசம் நிகழும். அதனைத் திருவருள் வலத்தால் ஒழித்தல் வேண்டும்.
  
‘சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே இராட்டினத்தைச் சுமத்தல்' என்பது பழமொழி.

வர்க்கத்தார் --- சுற்றத்தார். விருத்தர்  --- முதியவர். கற்கட்டு --- கருங்கல் கட்டடம். கக்கம் --- தோளின்கீழ்ப் பகுதி, அக்குள். இராட்டினம் --- நூல் நூற்கும் சக்கரம்.

 

அகந்தை அழிவைத் தரும்





47.  அகந்தை அழிவைத் தரும்.

சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,
     துடுக்கான கஞ்சன்வலியும்,
துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,
     தொலையாத வாலி திடமும்,

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது
     பராக்ரமும், மதுகைடவர்
பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்
     பங்கில்உறு வல்லமைகளும்,

ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்
     எண்ணமும், தக்கன் எழிலும்,
இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்
     இடும்பால் அழிந்த அன்றோ?

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த
     வரபுத்ர! வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

     மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர --- மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்து அருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்தவரே!

     வடிவேலவா --- கூர்மையான வேலை உடையவரே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

      சூரபத்மன் பலமும் --- சூரபதுமனுடைய வலிமையும்,

     இராவணன் தீரமும் --- இராவணனுடைய நெஞ்சுறுதியும்,

     துடுக்கான கஞ்சன் வலியும் --- துடுக்குத்தனம் மிகுந்த
கஞ்சனுடைய ஆற்றலும்,

     துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் --- துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும்,

     தொலையாத வாலி திடமும் --- வாலியின் அழிவற்ற வல்லமையும்,

     பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் --- கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும்,

     மதுகைடவர் பாரிப்பும் --- மதுகைடவருடைய பெருமையும்,

     மாவலி தன் ஆண்மையும் --- மாபலியின் வீரமும்,

     சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் --- சோமுகனிடத்தில் இருந்த வலிமையும்,

     ஏர் அணவு கீசகன் கனதையும் --- அழகு பொருந்திய கீசகனின் பெருமையும்,

     திரிபுரர் எண்ணமும் --- முப்புராதிகளின் நினைவும்,

     தக்கன் எழிலும் --- தக்கனுடைய அழகும்,

     இவர்களது சம்பத்தும் நின்றவோ --- இவர்களுடைய செல்வமும் நிலைபெற்று இருந்தனவோ?

     அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? --- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?


பலரில் அரியவர் ஒருவரே





59. பலரில் அரியர் ஒருவர்

பதின்மரில் ஒருத்தர்சபை மெச்சிடப் பேசுவோர்!
     பாடுவோர் நூற்றில் ஒருவர்!
  பார்மீதில் ஆயிரத்து ஒருவர்விதி தப்பாது
     பாடிப்ர சங்கம் இடுவோர்!

இதன்அருமை அறிகுவோர் பதினா யிரத்துஒருவர்!
     இதை அறிந்து இதயம் மகிழ்வாய்
  ஈகின்ற பேர்புவியி லேஅருமை யாகவே
     இலக்கத்திலே ஒருவராம்!

துதிபெருக வரும்மூன்று காலமும் அறிந்தமெய்த்
     தூயர் கோடியில் ஒருவர் ஆம்.
  தொல்உலகு புகழ்காசி ஏகாம்பரம் கைலை
     சூழும்அவி நாசி பேரூர்

அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

இதன் பொருள் ---

     தொல் உலகு புகழ் --- பழைமையான உலகம் புகழுகின்ற,

     காசி ஏகாம்பரம் கைலை சூழும் அவிநாசி பேரூர் அதிகம் உள வெண்காடு செங்காடு காளத்தி அத்தனே --- காசி, காஞ்சிபுரம், திருக் கயிலை, அடியவர்கள் சூழுகின்ற அவிநாசி, திருப்பேரூர், பெருமையுடைய திருவெண்காடு, திருச்செங்கோடு, திருக்காளத்தி ஆகிய தலங்களை இருப்பிடமாகக் கொண்ட முதல்வனே!,

     அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

     சபை மெச்சிடப் பேசுவோர் பதின்மரில் ஒருத்தர் --- சபையில் உள்ளோர் புகழும்படி பேசுவோர் பத்துக்கு ஒருவர்,

     பாடுவோர் நூற்றில் ஒருவர் --- இனிமையாகப் பாடுவோர் நூற்றுக்கு ஒருவர்,

     விதி தப்பாது பாடி பிரசங்கம் இடுவோர் பார் மீதில் ஆயிரத்து ஒருவர் --- முறை தவறாமல் பாடிச் சொற்பொழிவு செய்வோர் உலகில் ஆயிரத்தில் ஒருவர்,

     இதன் அருமை அறிகுவோர் பதினாயிரத்து ஒருவர் --- இந்தச் சொற்பொழிவின் சிறப்பைத் தெரிந்தவர் பதினாயிரம் பேரில் ஒருவர்,

     இதை அறிந்து இதயம் மகிழ்வாய் ஈகின்ற பேர் --- இதன் அருமையை உணர்ந்து உள்ளம் மகிழ்ந்து பொருளை அளிப்பவர்கள்,

     புவியிலே அருமையாகவே இலக்கத்திலே ஒருவர் ஆம் --- உலகில் அருமையாக இலட்சத்தில் ஒருவர் ஆவர்,

     துதி பெருக வரும் மூன்று காலமும் அறிந்த மெய்த் தூயர் கோடியில் ஒருவர் ஆம் --- துதித்துப் போற்றுகின்ற முக்காலமும் உணர்ந்த உண்மையான உள்ளத் தூய்மை உடையவர் கோடி மக்களில் ஒருவர் ஆவர்.

உத்தரமேரூர் - 0728. மாதர் கொங்கையில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாதர் கொங்கையில் (உத்தரமேரூர்)
  
முருகா!
ஆசைக் கடலில் இருந்து முத்திக் கரை ஏற அருள்.


தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன ...... தனதான

மாதர் கொங்கையில், வித்தா ரத்திரு
     மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
     வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்

மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
     வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
     வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி

ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
     ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
     ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ

ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
     ஆயி ரங்கலை கத்தா மத்திப
     னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே

சாத னங்கொடு தத்தா மெத்தென
     வேந டந்துபொய் பித்தா வுத்தர
     மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே

தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
     நீதி தந்திர நற்சார் புற்றருள்
     சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
     வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
     வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ்.....மறையோர்வாழ்

மேரு மங்கையி லத்தா வித்தக
     வேலொ டும்படை குத்தா வொற்றிய
     வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மாதர் கொங்கையில், வித்தா ரத்திரு
     மார்பு இலங்குஇயல் முத்து ஆரத்தினில்,
     வாச மென்குழலில், சேலைப் பொரும் ...... விழிவேலில்,

மாமை ஒன்று மலர்த்தாள் வைப்பினில்,
     வாகு வஞ்சியில், மெய்த் தாமத்தினில்,
     வான் இளம்பிறையைப் போல் நெற்றியில், ......மயலாகி,

ஆதரம் கொடு கெட்டே, இப்படி
     ஆசையின் கடலுக்கே மெத்தவும்
     ஆகி நின்று, தவித்தே நித்தலும் ...... அலைவேனோ?

ஆறு இரண்டு பணைத்தோள் அற்புத!
     ஆயிரம் கலை கத்தா! மத்திப-
     னாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் ...... புரிவாயே!

சாதனங்கொடு தத்தா மெத்தென-
     வே நடந்து, பொய் பித்தா, உத்தரம்
     ஏது எனும்படி தற் காய் நிற்பவர், ...... சபையூடே,

தாழ்வுஇல் சுந்தரனைத் தான் ஒற்றிகொள்
     நீதி தந்திர நற்சார்பு உற்று அருள்
     சால நின்று சமர்த்தா வெற்றிகொள் ...... அரன்வாழ்வே!

வேதமும் கிரியைச்சூழ் நித்தமும்
     வேள்வியும் புவியில் தாபித்து,ருள்
     வேர் விழும்படி செய்த்து, ர் மெய்த்தமிழ் ...மறையோர்வாழ்

மேரு மங்கையில் அத்தா! வித்தக!
     வேலொடும் படை குத்தா ஒற்றிய
     வேடர் மங்கைகொள் சித்தா! பத்தர்கள் ...... பெருமாளே!


பதவுரை

      ஆறு இரண்டு பணை தோள் அற்புத --- பன்னிரண்டு பெருமை வாய்ந்த திருத்தோள்களை உடைய அற்புதமானவரே!

     ஆயிரம் கலை கத்தா --- பல கலைகளுக்குத் தலைவரே!

      சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து --- ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மெதுவாகத் தத்தி தத்தி நடந்து போய்,

     பொய் பித்தா உத்தரம் ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபை ஊடே --- பொய் பேசும் பித்தனே, மறுமொழி என்ன என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி திருமணப் பந்தலின் கீழ் நிற்பவர் சபை நடுவில்,

      தாழ்வு இல் சுந்தரனை --- தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை,

     தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள் ---  தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, தந்திரமான  நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, உள்ளத்தில் மிகவும் அருள் கொண்டு

     சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே --- சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவபெருமானின் செல்வக் குழந்தையே!

      வேதமும் கிரியைச் சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து --- வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி,

     அருள் வேர் விழும்படி செய்த ஏர் மெய்த்தமிழ் மறையோர் வாழ் --- இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த பெருமை மிக்க உண்மைச் செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற

     மேருமங்கையில் அத்தா --- உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவரே!

     வித்தக --- பேரறிவாளரே!

      வேலொடும் படை குத்தா ஒற்றிய வேடர் மங்கை கொள் சித்தா --- வேற்படை முதலியவைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளிநாயகியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே,

     பத்தர்கள் பெருமாளே  --- பக்தர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      மாதர் கொங்கையில் --- விலை மாதர்களுடைய மார்பகங்களிலும்,

     வித்தாரத் திருமார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில் --- அழகிய மார்பில் விளங்கும் முத்து மாலையிலும்,

     வாசமென் குழலில் --- நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும்,

     சேலைப் பொரும் விழி வேலில் --- சேல் மீன் போன்று சுழல்கின்ற, வேலை ஒத்த கண்களில்,

      மாமை ஒன்று மலர்த்தாள் வைப்பினில் --- அழகு பொருந்திய மலருக்கு ஒப்பான பாதங்களிலும்,

     வாகு வஞ்சியில் --- வஞ்சிக் கோடி போன்ற இடையிலும்,

     மெய்த் தாமத்தினில் --- உடலில் அணிந்துள்ள மாலையிலும்,

     வான் இளம் பிறையைப் போல் நெற்றியில் மயலாகி --- வானில் தோன்றும் இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மையல் கொண்டவனாய்,

      ஆதரம் கொடு கெட்டே --- அவர்கள் மேலேயே பற்று வைத்துக் கெட்டுப் போய்,

     இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும் ஆகி நின்று --- இப்படியாக ஆசைக் கடலிலேயே உழல்பவனாகி

     தவித்தே நித்தலும் அலைவேனோ --- நாள்தோறும் தவித்து அலைவேனோ?

     மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே  --- சாமானிய மனிதனாய் உழன்று அலைகின்ற அடியேனுக்கு அருள் புரிவாயாக.


பொழிப்புரை


     பெருமை வாய்ந்த பன்னிரண்டு திருத்தோள்களை உடைய அற்புதமானவரே!

     எண்ணில்லாத கலைகளுக்குத் தலைவரே!

      ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மெதுவாகத் தத்தி தத்தி நடந்து போய்பொய் பேசும் பித்தனே, மறு மொழி என்ன என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி திருமணப் பந்தலின் கீழ் நிற்பவர் சபை நடுவில், தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, தந்திரமான நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, உள்ளத்தில் மிகவும் அருள் கொண்டு, சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவபெருமானின் செல்வக் குழந்தையே!

     வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி,  இறைவனது அருள் பதியும்படிச் செய்த பெருமை மிக்க உண்மைச் செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவரே!

     பேரறிவாளரே!

     வேற்படை முதலியவைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளிநாயகியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே,

     பக்தர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      விலை மாதர்களுடைய மார்பகங்களிலும், அவரது அழகிய மார்பில் விளங்கும் முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்று சுழல்கின்ற, வேலை ஒத்த கண்களில், அழகு பொருந்திய மலர் போல்ம் மென்மையான பாதங்களிலும், வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடம்பில் அணிந்துள்ள மாலையிலும், வானில் தோன்றும் இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மையல் கொண்டவனாய், அவர்கள் மேலேயே பற்று வைத்துக் கெட்டுப் போய்,  இப்படியாக ஆசைக் கடலிலேயே உழல்பவனாகி, நாள்தோறும் தவித்து அலைவேனோ? சாமானிய மனிதனாய் உழன்று அலைகின்ற அடியேனுக்கு அருள் புரிவாயாக.

விரிவுரை

சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா.............. சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் ----

சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதிசைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரர் என்பதாகும். நம்பியாரூரர் என்பதை ஆரூரர் என்று சுருக்கி அழைப்பர். சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையார் கண்டார். இவருடைய அழகினையும் பொலிவினையும் கண்டு, சிறுவன் சுந்தரனை மகன்மையாகக் கொண்டு, அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். வைதிகத் திருவும் மன்னர் திருவும் பொலிய நம்பியாரூரர் வளர்ந்து வந்தார்.

மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

நம்பியாரூரர் திருமணக் கோலம் கொண்டு மணம் வந்த புத்தூரில் திருமணப் பந்தருக்கு வந்து சேர்ந்தார். மணவறையில் அமர்ந்தார்.

அந்த வேளையில், திருக்கயிலாயத்திலே, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு வாக்களித்தபடியே, அவரைத் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு, சிவபெருமான் ஒரு முதிய வேதியர் கோலம் தாங்கித் தண்டு ஊன்றி திருமணப் பந்தருள் நுழைந்து, அங்கிருந்த சபையாரை நோக்கி, "இந்த நாவல் நகர் ஊரன் எனது அடிமை" என்றார். சுந்தரர் வெகுண்டு, "அந்தணர் வேறு ஒர் அந்தணருக்கு அடிமை ஆவதில்லை. பித்தனோ மறையோன்" என்றார். வேதியர், "அந்தக் காலத்தில் எனது பாட்டன் எனக்கு எழுதித் தந்த அடிமை ஓலை இருக்கிறது. என்னை இகழாதே" என்றார். "அந்த அடிமை ஓலையைக் காட்டும்" என்றார் சுந்தரர். சபை முன்னே காட்டுவேன் என்றார் வேதியர். சுந்தர்ர் அவரைத் தொடர்ந்து ஓடி, ஓலையைப் பிடுங்கிக் கிழித்து எறிந்தார்.

அங்கிருந்தவர்கள் அந்தணரைப் பார்த்து, "ஐயரே இந்த உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டு வந்தீர். நீர் இருப்பது எங்கே" என்று கேட்டனர். அதற்கு, "நான் இருப்பது திருவெண்ணெய்நல்லூர். இவன் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்து எறிந்தான். அதனாலேயே இவன் எனது அடிமே என்பது உறுதி ஆயிற்று" என்றார். அதுகேட்ட சுந்தரர் "உமது ஊரிலேயே இந்த வழக்கைப் பேசலாம்" என்றார். வேதியரும் "அப்படியே செய்வோம். அங்கே மூல ஓலையைக் காட்டி சாதிப்பேன்" என்றார்.

எல்லோரும் திருவெண்ணெய்நல்லூரை அடைந்து, வேதியர்கள் நிறைந்த சபையில் தனது வழக்கை வேதியர் சொன்னார். சபையார் வேதியரைப் பார்த்து, "அந்தணர் அடிமை ஆகும் வழக்கம் இல்லையே" என்றனர். வேதியர் "என் வழக்கு நியாயமானது. இவன் வலிந்து கிழித்த ஓலை படியோலை. மூல ஓலை இதோ பாருங்கள்" என்று காட்டினார். அதில், "திருநாவலூரிலே வாழும் ஆதிசைவனாகிய ஆரூரன் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் மரபினரும் திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு வழித்தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகின்றோம். இங்ஙனம் ஆரூரன்" என்ற வாசகம் இருந்தது. 

சபையார், அந்த ஓலையையும், சுந்தரரின் பாட்டனாருடைய வேறு கையெழுத்துக்களையும் ஒப்பு நோக்கி, சுந்தரரைப் பார்த்து, இந்த வேதியருக்கு அடிமையாய் இருப்பது உமது கடன் என்றனர்.

இவ்வாறு, சமர்த்தாக வெற்றி கொண்டு சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட சிவபெருமானுடைய திருக்குமாரரே என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானைப் பாடிப் பரவுகின்றார்.

வேதமும் கிரியைச்சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து ருள் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா! ---

"வேள்வி நல் பயன் வீழ்புனல் ஆவது" என்பார் தெய்வச் சேக்கிழார். "வீழ்க தண்புனல்" என்பார் திருஞானசம்பந்தர். உலக நன்மைக்காக வேதியர்கள் வேள்விக் கடனை நாளும் ஆற்றுவார்கள்.

"கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை" என்பார் திருஞானசம்பந்தர்.


ஓர்ஆறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி
     ஒன்று தப்பாது புரிவார்;
  உதயாதி யில்சென்று நீர் படிகுவார்; காலம்
     ஒருமூன்றி னுக்கும் மறவாது

ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
     அதிதி பூசைகள் பண்ணுவார்;
  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்
     இன்றியே செய்து வருவார்;

பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே
     பிழையாது இருக்கும் மறையோர்
  பெய்யெனப் பெய்யும் முகில்; அவர் மகிமை எவர்களும்
     பேசுதற்கு அரிது அரிதுகாண்!

ஆர்ஆர் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

"வேதம் ஓதிய வேதியருக்கு ஓர் மழை" என்பது விவேகசிந்தாமணி.

மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்
தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்
அரசன் நிலாவழி இல்லை, அரசனும்
இல்வாழ்வார் இல்வழி இல்.     ---  நான்மணிக்கடிகை.


மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் ---

மிகவும் கீழானவனும் அல்ல. ஞான நிலையை அடைந்த மேலானவனும் அல்ல. சாதாரண மனிதனாக வாழுகின்ற அடியேனுக்கு அருள்.

கருத்துரை

முருகா! ஆசைக் கடலில் இருந்து முத்திக் கரை ஏற அருள்.

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...