அகந்தை அழிவைத் தரும்





47.  அகந்தை அழிவைத் தரும்.

சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,
     துடுக்கான கஞ்சன்வலியும்,
துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,
     தொலையாத வாலி திடமும்,

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது
     பராக்ரமும், மதுகைடவர்
பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்
     பங்கில்உறு வல்லமைகளும்,

ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்
     எண்ணமும், தக்கன் எழிலும்,
இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்
     இடும்பால் அழிந்த அன்றோ?

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த
     வரபுத்ர! வடிவேலவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

     மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர --- மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்து அருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்தவரே!

     வடிவேலவா --- கூர்மையான வேலை உடையவரே!

     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

      சூரபத்மன் பலமும் --- சூரபதுமனுடைய வலிமையும்,

     இராவணன் தீரமும் --- இராவணனுடைய நெஞ்சுறுதியும்,

     துடுக்கான கஞ்சன் வலியும் --- துடுக்குத்தனம் மிகுந்த
கஞ்சனுடைய ஆற்றலும்,

     துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் --- துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும்,

     தொலையாத வாலி திடமும் --- வாலியின் அழிவற்ற வல்லமையும்,

     பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் --- கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும்,

     மதுகைடவர் பாரிப்பும் --- மதுகைடவருடைய பெருமையும்,

     மாவலி தன் ஆண்மையும் --- மாபலியின் வீரமும்,

     சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் --- சோமுகனிடத்தில் இருந்த வலிமையும்,

     ஏர் அணவு கீசகன் கனதையும் --- அழகு பொருந்திய கீசகனின் பெருமையும்,

     திரிபுரர் எண்ணமும் --- முப்புராதிகளின் நினைவும்,

     தக்கன் எழிலும் --- தக்கனுடைய அழகும்,

     இவர்களது சம்பத்தும் நின்றவோ --- இவர்களுடைய செல்வமும் நிலைபெற்று இருந்தனவோ?

     அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? --- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...