அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விலை அறுக்கவும்
(மாடம்பாக்கம்)
முருகா!
விலைமாதர் மயலில் முழுகி,
உன்னை வழிபட்டு உய்ய அறியாத
அடியேனையும் ஆண்டு கொள்வாயாக.
தனன
தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந்
தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா
விலைய
றுக்கவு முலைம றைக்கவு
மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
விடங்கஞ்
சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ
ருடனே
வெளியி
னிற்கவும் வலிய முட்டரை
யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
திரும்பும்
பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா
யலின்மேல்
கலைநெ
கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
வரும்பங் கங்கு ணங்கோர் ......
புதியபே ருடனே
கதைகள்
செப்பவும் வலச மர்த்திகள்
குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
நினைந்துங்
கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா
ளுவையோ
சிலைத
னைக்கொடு மிகஅ டித்திட
மனந்தந் தந்த ணந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா
முருகா
செருவி
டத்தல கைகள்தெ னத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
டிகுண்டிங்
குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ ......
யெனஇரா வணனீள்
மலையெ
னத்திகழ் முடிகள் பத்தையு
மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
திறந்தங் கம்பி ளந்தே ......
மயிலின்மேல் வருவாய்
வயல்க
ளிற்கய லினமி குத்தெழு
வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
நிறைந்தெங்
குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ......
இளையநா யகனே.
பதம் பிரித்தல்
விலை
அறுக்கவும், முலை மறைக்கவும்,
மணம் துன்றும் செழும் தார்
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும்,
விடம்
கஞ்சம் சரம் சேர்
விழி வெருட்டவும், மொழி புரட்டவும்,
நிணம் துன்றும் சலம் பாய் ...... உதிர நீர்
உடனே
வெளியில்
நிற்கவும், வலிய முட்டரை
எதிர்ந்தும், பின் தொடர்ந்தே,
இலை சுணப்பொடி பிளவு எடுத்து, இடை ......
திரும்பும்
பண்பர் அன்றே
என உரைத்து, அவர் தமை வரப் பணி,
உடன் கொண்டு, அன்புடன் போய், ...... சயன பாயலின்மேல்,
கலை
நெகிழ்க்கவும், மயல் விளைக்கவும்,
நயம் கொண்டு, அங்கு இருந்தே
குணுகி இட்டு, உள பொருள் பறித்து, அற
முனிந்து, அங்கு ஒன்று கண்டே,
கலகம் இட்டு அவர் அகல அடித்தபின்,
வரும் பங்கு அங்கு உணங்க, ஓர் ...... புதிய பேர்
உடனே
கதைகள்
செப்பவும் வல சமர்த்திகள்,
குணம் கண்டும் துளங்கா
மனிதனில், சிறு பொழுது முற்று உற
நினைந்தும்
கண்டு உகந்தே,
கடி மலர்ப்பதம் அணுகுதற்கு, அறிவு
இலன், பொங்கும் பெரும் பா ...... தகனை ஆளுவையோ?
சிலைதனைக் கொடு மிக அடித்திட,
மனம் தந்த அந்தணன், தா-
மரை மலர்ப் பிரமனை நடுத்தலை
அரிந்தும் கொண்டு இரந்தே,
திரிபுரத்து எரி புக நகைத்து அருள்
சிவன் பங்கு அங்கு இருந்தாள் ......அருளு
மாமுருகா!
செரு
இடத்து அலகைகள் தெனத்தென
தெனந்தெந் தெந்தெ னந்தா
என, இடக்கைகள், மணி, கணப்பறை,
டிகுண்டிங்
குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
டிகுண்டிங் குண்டி குண்டீ ...... என, இராவ ணன்நீள்
மலை
எனத் திகழ் முடிகள் பத்தையும்,
இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய்
பணை புயத்தையும், ஒரு வகைப்பட
வெகுண்டு, அம்பு ஒன்று எறிந்தோன்,
மதலை மைத்துன! அசுரரைக் குடல்
திறந்து அங்கம் பிளந்தே ......
மயிலின்மேல் வருவாய்!
வயல்களில்
கயல் இனம் மிகுத்து எழு
வரம்பின் கண் புரண்டே,
பெருகு அயல்கொடு சொரியும் நித்திலம்
நிறைந்து
எங்கும் சிறந்தே,
வரிசை பெற்று உயர் தமனியப் பதி
இடம் கொண்டு இன்புறும் சீர் ......
இளையநா யகனே.
பதவுரை
சிலைதனைக் கொடு மிக அடித்திட
மனம் தந்து
--- அருச்சுனன் தனது கையில் உள்ள வில்லைக் கொண்டு மிகுதியாகத் தன்னை அடித்த செயலை
மனதார ஏற்றுக் கொண்டும்,
அந்தணன் தாமரை மலர்ப் பிரமனை நடுத்தலை
அரிந்தும் கொண்டு இரந்தே
--- மறையோனும்
தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரம தேவனுடைய உச்சித் தலையை அரிந்து, அந்தத் தலையில் பிச்சை ஏற்றும்,
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன்
பங்கு அங்கு இருந்தாள் அருளும் மாமுருகா --- திரிபுரங்கள் எரியில் முழுகுமாறு
சிறுநகை புரிந்தும் திருவிளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய திருமேனியின் ஒரு
பாகத்தில் இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய சிறந்த முருகப் பெருமானே!
செருஇடத்து அலகைகள்
தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என --- போர்க்களத்தில் பேய்கள் தெனத்தென
தெனந்தெந்தெந் தெனந்தா என்னும் ஓசை நயத்தோடு ஆட,
இடக்கைகள், மணி, கணப்பறை டிகுண்டிங்குண் டிகுண்டா
டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ என --- இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண்
டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ என ஒலிக்க,
இராவணன் நீள்மலை எனத்
திகழ்முடிகள் பத்தையும் --- இராவணனுடைய, பெரிய மலை போல விளங்கிய பத்துத்
தலைகளையும்
இரண்டு அஞ்சு, ஒன்பது, ஒன்று ஏய் பணை புயத்தையும் --- பருத்த இருபது
புயங்களையும்
ஒரு வகைப்பட வெகுண்டு --- ஒரு
வழிப்பட்டு ஒழியச் சினந்து,
அம்பு ஒன்று எறிந்தோன் மதலை மைத்துன ---
ஒப்பற்ற அம்பினை எறிந்தவனாகிய இராமபிரானாகிய திருமாலின் மகனான மன்மதனுக்கு மைத்துனரே!
அசுரரைக் குடல்
திறந்து அங்கம் பிளந்தே --- குடல் சரியும்படி அசுரர்களுடைய உடலைப்
பிளந்து
மயிலின் மேல் வருவாய் --- மயிலின்
மேல் வருபவரே!
வயல்களில் கயல் இன மிகுத்து
எழு வரம்பின் கண் புரண்டே --- வயல்களில் கயல் மீன்கள் மிக்கு
எழுந்து வரப்பில் புரண்டு
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம்
நிறைந்து எங்கும் சிறந்தே --- பெருகும் பக்கங்களில் எல்லாம், சங்குகள் சொரிகின்ற முத்துக்கள்
நிறைந்து விளங்கும் சிறப்பினை உடைய
வரிசை பெற்று உயர் தமனியப் பதி இடம் கொண்டு இன்புறும் சீர் இளைய நாயகனே --- உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய திருத்தலத்தைப்
பதியாகக் கொண்டு இன்புறுகின்ற அழகும் இளமையும் வாய்ந்த தலைவரே!
விலை அறுக்கவும் --- காம இன்பத்தைத்
தருகின்ற தமது உடம்பிற்கான விலையைப் பேசி முடிவு செய்யவும்,
முலை மறைக்கவும் --- முலைகளை மேலாடையால்
மறைக்கவும்,
மணம் துன்றும் செழும்தார் புனை முகில்
குழல்தனை அவிழ்க்கவும் --- மணம் நிறைந்து, செழுமை கொண்ட மலர்களால் ஆன மாலையை
அணிந்துள்ள, மேகம் போல்
கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும்,
விடம், கஞ்சம், சரம் சேர் விழி
வெருட்டவும்
--- நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண்களைக் கொண்டு ஆடவர்களைத் திகைக்கச் செய்யவும்,
மொழி புரட்டவும் --- வார்த்தைகளால்
மாயம் செய்யவும்,
நிணம் துன்றும் சலம்பாய் உதிர நீருடனே
வெளியில் நிற்கவும் --- கொழுப்பு நிரம்பிய நீருடன், உதிர நீரும் கலந்த உடலைக்
காட்டி வீட்டின் வெளியில் வந்து நிற்கவும்,
வலிய முட்டரை எதிர்ந்தும் --- ஆணவம் மிகுந்து
உள்ளதால் இயல்பாகவே மூடராக உள்ளவர்களை எதிர்ப்பட்டும்,
பின் தொடர்ந்தே --- அவர்களைப் பின் தொடர்ந்தும்,
இலை சுணப் பொடி பிளவு எடுத்து --- வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து
இடை திரும்பும் பண்பர் அன்றே என உரைத்து
--- நீங்கள்
நற்குணத்தவர்
அல்லவா? உங்கள் பணிக்கு
இடையில் அப்படியே எமது வீட்டுக்கும் சற்றுத் திரும்பி வாருங்கள் என்று சொல்லி
அவர் தமை வரப் பண்ணி --- அவர்களை
வீட்டுக்கு வரச்செய்து,
உடன் கொண்டு --- தம்முடன் கொண்டு
அன்புடன் போய் --- அன்புடன் வீட்டின்
உள் போய்
சயன பாயிலின்மேல் கலை நெகிழ்க்கவும் ---
படுக்கையின் மீது இருந்து தமது மேல் ஆடையைத் தளர விடவும்,
மயல் விளைக்கவும் --- மையலை விளைக்கவும்,
நயம் கொண்டு அங்கு இருந்தே குணுகியிட்டு ---
படுக்கையில் இருந்தபடி நயத்துடன் உபசாரமாகக் கொஞ்சிப் பேசி,
உள்ள பொருள் பறித்து --- அவர்கள்
கையில் உள்ள பொருளைப் பறித்து,
அற முனிந்து --- பொருள் வற்றிப் போகவும், அவரிடம் மிகவும் கோபம் கொண்டு,
அங்கு ஒன்று கண்டே
கலகம் இட்டு
--- அந்த நேரத்தில் மனத்தில் தோன்றுகின்ற ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்து, அவரோடு கலகம் இட்டு,
அவர் அகல அடித்த பின் --- அவர்
இங்கிருந்து அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர்,
வரும் பங்கு அங்கு உணங்க --- அது
வரையில் வந்த பொருள் சுருங்கவும்,
ஓர் புதிய பேருடனே கதைகள் செப்பவும் வல்ல
சமர்த்திகள் --- புதிய ஆடவர் ஒருவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல
சாமர்த்தியசாலிகள் ஆகிய விலைமாதர்களின்
குணம் கண்டும்
துளங்கா மனிதனில் --- குணத்தைக் கண்டும் வருந்தாத மனிதர்களைப் போல
சிறுபொழுதும் உற்று உற நினைந்தும் ---
சிறு பொழுதேனும் மனம் பொருந்தி தேவரீரை நினைந்தும்,
கண்டு உகந்தே --- தரிசித்து மனம் மகிழ்ந்தும்,
கடிமலர்ப் பதம் அணுகுதற்கு அறிவிலன் ---
ஞானமணம் கமழும் தேவரீரது திருவடித் தாமரைகளைச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனும்,
பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ ---
பாதகச் செயல்களையே மிகவும் புரிகின்ற அடியேனை ஆட்கொள்ளுவாயோ?
பொழிப்புரை
அருச்சுனன் தனது கையில் உள்ள வில்லைக்
கொண்டு மிகுதியாகத் தன்னை அடித்த செயலை மனதார ஏற்றுக் கொண்டும், மறையோனும் தாமரை மலரில்
வீற்றிருப்பவனும் ஆகிய பிரம தேவனுடைய உச்சித் தலையை அரிந்து, அந்தத் தலையில் பிச்சை ஏற்றும், திரிபுரங்கள் எரியில் முழுகுமாறு
சிறுநகை புரிந்தும் திருவிளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய திருமேனியின் ஒரு
பாகத்தில் இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய சிறந்த முருகப் பெருமானே!
போர்க்களத்தில் பேய்கள் தெனத்தென
தெனந்தெந்தெந் தெனந்தா என்னும் ஓசை நயத்தோடு ஆட, இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண்
டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ என ஒலிக்க, இராவணனுடைய, பெரிய மலை போல விளங்கிய பத்துத்
தலைகளையும், பருத்த இருபது
புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியச் சினந்து, ஒப்பற்ற அம்பினை
எறிந்தவனாகிய இராமபிரானாகிய திருமாலின் மகனான மன்மதனுக்கு மைத்துனரே!
குடல் சரியும்படி அசுரர்களுடைய உடலைப்
பிளந்து மயிலின்
மேல் வருபவரே!
வயல்களில் கயல் மீன்கள் மிக்கு எழுந்து
வரப்பில் புரண்டு பெருகும்
பக்கங்களில் எல்லாம், சங்குகள் சொரிகின்ற
முத்துக்கள் நிறைந்து விளங்கும் சிறப்பினை உடைய உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய திருத்தலத்தைப்
பதியாகக் கொண்டு இன்புறுகின்ற அழகும் இளமையும் வாய்ந்த தலைவரே!
காம இன்பத்தைத் தருகின்ற தமது
உடம்பிற்கான விலையைப் பேசி முடிவு செய்யவும், முலைகளை மேலாடையால் மறைக்கவும், மணம் நிறைந்து, செழுமை கொண்ட மலர்களால் ஆன மாலையை
அணிந்துள்ள, மேகம் போல்
கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும், நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண்களைக் கொண்டு ஆடவர்களைத் திகைக்கச் செய்யவும், வார்த்தைகளால்
மாயம் செய்யவும், கொழுப்பு நிரம்பிய
நீருடன், உதிர நீரும் கலந்த உடலைக்
காட்டி வீட்டின் வெளியில் வந்து நிற்கவும், ஆணவம்
மிகுந்து உள்ளதால் இயல்பாகவே மூடராக உள்ளவர்கள் வர, அவர்களை எதிர்ப்பட்டும், அவர்களைப் பின் தொடர்ந்தும்,வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து, "நீங்கள் நற்குணத்தவர் அல்லவா? உங்கள் பணிக்கு இடையில் அப்படியே எமது
வீட்டுக்கும் சற்றுத் திரும்பி வாருங்கள்" என்று சொல்லி, அவர்களை வீட்டுக்கு வரச்செய்து, தம்முடன்
கொண்டு அன்புடன் வீட்டின் உள் போய், படுக்கையின்
மீது இருந்து தமது மேல் ஆடையைத் தளர விடவும், மையலை விளைக்கவும், படுக்கையில் இருந்தபடியே நயத்துடன்
உபசாரமாகக் கொஞ்சிப் பேசி, அவர்கள் கையில் உள்ள பொருளைப் பறித்து, பொருள் வற்றிய பிறகு, அவரிடம் மிகவும் கோபம் கொண்டு, அந்த நேரத்தில் மனத்தில் தோன்றுகின்ற
ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்து, அவரோடு கலகம் இட்டு, அவர் இங்கிருந்து
அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர், அது வரையில் வந்த பொருள் சுருங்கவும், புதிய ஆடவர் ஒருவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள் ஆகிய விலைமாதர்களின் குணத்தைக் கண்டும் வருந்தாத மனிதர்களைப் போல, சிறு பொழுதேனும்
மனம் பொருந்தி தேவரீரை நினைந்தும்,
தரிசித்து
மனம் மகிழ்ந்தும், ஞானமணம் கமழும்
தேவரீரது திருவடித் தாமரைகளைச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனும், பாதகச்
செயல்களையே மிகவும் புரிகின்ற அடியேனை ஆட்கொள்ளுவாயோ?
விரிவுரை
விலை
அறுக்கவும்
---
விலை
மாதர் தாம் தருகின்ற காம இன்பத்திற்கு இடமாக உள்ள தமது உடம்பிற்கான விலையைப் பேசி
முடிவு செய்வார்கள்.
மேகம்
ஒத்த குழலார், சிலைப் புருவ,
வாளி ஒத்த விழியார், முகக் கமலம்
மீது பொட்டுஇடு, அழகார் களத்தில் அணி......வடம்ஆட
மேரு
ஒத்த முலையார், பளப்பள என
மார்பு துத்தி புயவார், வளைக் கடகம்
வீறு இடத் துவளும் நூலொடு ஒத்த இடை ......உடை
மாதர்,
தோகை
பட்சி நடையார், பதத்தில் இடு
நூபுரக் குரல்கள் பாட, அகத் துகில்கள்
சோர, நல் தெருவுடே நடித்து, முலை
......விலைகூறி,
சூதகச்
சரசமோடெ எத்தி, வரு-
வோரை நத்தி, விழியால் மருட்டி, மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள்......உறவுஆமோ? --- திருப்புகழ்.
முலை
மறைக்கவும்
---
முலைகளை
மேலாடையால் மறைத்து வைப்பார்கள். மேலாடை சரியுமாறு பாசாங்கு செய்து ஆடவரை
மயக்குவார்கள். "முலையில் உறு துகில் சரிய நடுவீதி நிற்பவர்கள்" என்றார்
அடிகளார் சுவாமிமலைத் திருப்புகழில். "மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு
சிலை திறந்த மழுங்கிகள்" என்றார் பிறிதொரு திருப்புகழில்.
மணம்
துன்றும் செழும்தார் புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் ---
மணம்
நிறைந்து, செழுமை கொண்ட மலர்களால்
ஆன மாலையை அணிந்துள்ள, மேகம் போல்
கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடுவார்கள் விலைமாதர்கள். "கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள்"
என்றார் திருத்தணிகைத் திருப்புகழில். "கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட"
என்றார் சிதம்பரம் திருப்புகழில்.
விடம், கஞ்சம், சரம் சேர் விழி
வெருட்டவும்
---
விடமானது
உண்டாரைக் கொல்லும். பெண்களின் கண்கள் கண்டாரைக் கொல்லும். எனவே, பெண்களின் கண்களை விடத்துக்கு
ஒப்பிட்டார்கள். தாமரை மலரைப் போன்று அழகும் ஒளியும் மிகுந்து இருப்பதால்
பெண்களின் கண்களைத் தாமரை மலருக்கு ஒப்பிடார்கள். கூர்மையான பார்வையால் ஆடவரின்
மனதைத் தைப்பதால், பெண்களின் கண்கள் அம்புக்கு நிகராகச் சொல்லப்பட்டன.
"கூர்வேல் பழித்த விழியாலே" என்றார் திருத்தணிகைத் திருப்புகழில்.
மொழி
புரட்டவும்
---
முன்
இன்பத்துக்கு உரிய சரச வார்த்தைகளால் மாயம் செய்யக் கற்றவர்கள் விலைமாதர்கள்.
நிணம்
துன்றும் சலம் பாய் உதிர நீருடனே வெளியில் நிற்கவும் ---
கொழுப்பு
நிரம்பிய நீருடன், உதிர நீரும் கலந்த உடலைக்
காட்டி வீட்டின் வெளியில் வந்து நின்று வருகின்ற ஆடவரை மயக்கும் தொழிலைப்
புரிபவர்கள் விலைமாதர்கள். "தெருவில் அனவரதம் அன்னம் எனவே நடப்பவர்கள்"
என்றார் சுவாமிமலைத் திருப்புழில்.
வலிய
முட்டரை எதிர்ந்தும் ---
முட்டர்
- மூடர். செல்வம் மிகப் படைத்து இருந்தும், ஆணவ மிகுதியினால், தக்கதொரு ஆசிரியரை நாடி
அறிவு நூல்களை ஓதி நல்லறிவு பெறாத மூடர்களை இவ்வாறு கூறினார். பொருளான் ஆம் எல்லாம் என்னும் மருள் அறிவு
படைத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் தெருவில் வருவதைப் பார்த்து, அவரை
எதிர்ப்பட்டு நிற்பவர் விலைமாதர்.
பின் தொடர்ந்தே ---
ஒருக்கால்
நடையைத் தொடர்ந்தாலும், அவர்களைப் பின்
தொடர்ந்து சென்று சரச வார்த்தைகளைப் பேசி மயக்க முற்படுவார்கள். வருபவர்கள் பணம்
படைத்து இருந்தால் போதும். அவர்கள் புலையர்களாக இருந்தாலும் அவர்களோடும்
கூடுபவர்கள் விலைமாதர்கள் என்பதால், "புலையர் மாட்டு மறாதே கூடிகள்"
என்றார் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில்.
பொருளின்
மேல் ப்ரிய காம ஆகாரிகள்,
பரிவு போல் புணர் க்ரீடா பீடிகள்,
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள், ......கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்,
மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்,
புலையர் மாட்டும் மறாதே கூடிகள், ...... நெஞ்சமாயம்
கருத
ஒணாப் பல கோடா கோடிகள்,
விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்,
கலவி சாத்திர நூலே ஓதிகள், ...... தங்கள் ஆசைக்
கவிகள்
கூப்பிடும் ஓயா மாரிகள்,
அவசம்
ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்,
கருணை நோக்கம் இலாமா பாவிகள்.....இன்பம்ஆமோ? --- திருப்புகழ்.
இலை சுணப்பொடி பிளவு எடுத்து, இடை திரும்பும்
பண்பர் அன்றே என உரைத்து,
அவர்
தமை வரப் பண்ணி ---
வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்துத்
தாம்பூலம் தரிக்கச் செய்து, அவர்களுடன் சரச
வார்த்தைகளைப் பேசி, அன்பு உள்ளவர்போல் காட்டி, தமது வீட்டிற்கு
வரப்பண்ணி மயக்குவார்கள் விலைமாதர்கள்.
அங்கை
மென்குழல் ஆய்வார் போலே,
சந்தி நின்று அயலோடே போவார்,
அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ...... அறியீரோ?
அன்று
வந்து ஒரு நாள் நீர் போனீர்,
பின்பு கண்டு அறியோம் நாம், ஈதே?
அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ......துயில்வாரா,
எங்கள்
அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
பண்டு தந்தது போதாதோ? மேல்
இன்று தந்து உறவோதான்? ஈதுஏன்? ......இதுபோதாது?
இங்கு
நின்றது என்? வீடே வாரீர்,
என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே. ---
திருப்புகழ்.
எங்கேனும்
ஒருவர்வர அங்கேகண் இனிதுகொடு
இங்குஏவர் உனதுமயல் தரியார்என்று
இந்தாஎன்
இனியஇதழ் தந்தேனை உறமருவ
என்றுஆசை குழைய,விழி இணையாடி
தங்காமல்
அவருடைய உண்டான பொருள்உயிர்கள்
சந்தேகம் அறவெபறி கொளுமானார்
சங்கீத
கலவிநலம் என்றுஓது முத்திவிட
தண்பாரும் உனதுஅருளை அருள்வாயே. ---
திருப்புகழ்.
அம்கை
நீட்டி அழைத்து, பாரிய
கொங்கை காட்டி மறைத்து, சீரிய
அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ...... உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை
பங்கம்
ஆக்கி அலைத்து, தாடனை
கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு
இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே. --- திருப்புகழ்.
உயிர்க்கூடு
விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்
ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவே, சூள்
உரைத்தே, முன் மருவினரை வெறுத்து, ஏம திரவியம்
அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்
பயில்
பேசி, இரவுபகல் அவர்க்கான
பதமை பல
படப்பேசி, உறுபொருள் கொள்
...... விலைமாதர்,... ---
திருப்புகழ்.
பழிப்பர்
வாழ்த்துவர் சிலசில பெயர்தமை,
ஒருத்தர் வாய்ச் சுருள் ஒருவர் கை உதவுவர்,
பணத்தை நோக்குவர், பிணம் அது தழுவுவர்,...... அளவளப்பு அதனாலே,
படுக்கை
வீட்டின் உள் அவுஷதம் உதவுவர்,
அணைப்பர், கார்த்திகை வருது என உறுபொருள்
பறிப்பர், மாத்தையில் ஒருவிசை வருக என,......அவரவர்க்கு உறவாயே
அழைப்பர், ஆஸ்திகள் கருதுவர், ஒருவரை
முடுக்கி ஓட்டுவர், அழிகுடி அரிவையர்,
அலட்டினால் பிணை எருது என, மயல் எனும்......நரகினில் சுழல்வேனோ?
சயன
பாயிலின்மேல் கலை நெகிழ்க்கவும், மயல்
விளைக்கவும், நயம் கொண்டு அங்கு
இருந்தே குணுகியிட்டு, உள்ள பொருள்
பறித்து, ---
படுக்கையின்
மீது இருந்து, தமது மேல் ஆடையைத்
தளர விட்டு, மையலை விளைத்து, உபசாரமாகப் பேசி, வந்தவர் கையில்
உள்ள பொருகளைப் பறித்துக் கொள்வர் விலைமாதர்.
அற
முனிந்து, அங்கு ஒன்று கண்டே
கலகம் இட்டு, அவர் அகல அடித்த பின், வரும் பங்கு அங்கு
உணங்க, ஓர் புதிய பேருடனே
கதைகள் செப்பவும் வல்ல சமர்த்திகள் ---
பொருள்
உள்ளவரையில் அன்பு உள்ளவர் போல் காட்டிக் கொள்வர். பொருள் வற்றிப் போவது
தெரிந்தும், ஆசையோடு
வந்தவரோடு ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, கலகம் விளைத்து அவரை
விரட்டி அடிப்பார்கள். பொருள் தீர்ந்து போனால், புதிதாக வேறு ஒரு
ஆடவரைத் தேடி அவருடன் கதைகதையாகப் பேசி மயக்குவதில் வல்லவர்கள்.
காம
மயக்கம் கொண்டு, விலைமாதரைக்
கூடுபவர் செல்வமானது வற்றிப் போகத்தான் செய்யும். அது அவருடைய தீவினைப் பயன்
ஆகும். செல்வம் சுருங்க வரும் காலத்து, மாதர் மேல் மனம் வைக்கத் தோன்றும்.
மாதர்மேல் மனம் வைத்தார்க்கு ஞானம் கல்வி ஒழுக்கம் ஆகிய அனைத்தும் அழியும்
என்பதை ஔவைப் பிராட்டியார் அருளிய பாடலால் தெளியலாம்.
“நண்டு,சிப்பி, வேய்,கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண் தொடீ
போதம், தனம், கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.” ---
ஔவையார்.
திரு நீக்கப்பட்டார் தொடர்புகள் என்று திருவள்ளுவ நாயனார் அருளியவை மூன்று
ஆகும்.
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தே உடைய மனம் கொண்டவர் இருமனப்
பெண்டிர் எனப்பட்டார். கள் குடித்தலும் சூதாடுதலும் விலைமாதர் தொடர்புக்கு ஒத்த
குற்றம் உடையவை.
அன்னையே
அனைய தோழி!
அறம் தனை வளர்க்கும் மாதே!
உன்னை
ஓர் உண்மை கேட்பேன்,
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்,
என்னையே
புணருவோர்கள்
எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும்
கொடுத்துப் பாதப்
போதினில் வீழ்வது ஏனோ?
பொம்
எனப் பணைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர்
முலையினாளே!
கூறுவேன் ஒன்று கேண்மோ,
செம்மையில்
அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும்
சூதும்
நான்முகன் படைத்தவாறே! ---
விவேக சிந்தாமணி.
குணம்
கண்டும் துளங்கா மனிதனில் சிறுபொழுதும் உற்று உற நினைந்தும், கண்டு உகந்தே, கடிமலர்ப் பதம்
அணுகுதற்கு அறிவிலன் ---
துளங்குதல்
- வருந்துதல், நிலைகலங்குதல், அசைதல், தளர்தல்.
விலைமாதர்களின்
குணத்தினை அனுபவமாக அறிந்து வைத்தும், அதற்காக
சிறிதும் வருத்தம் கொள்ளாமல் உள்ள மனிதர்கள், காம இன்பத்தையே கருதி
இருப்பார்கள். இறைவன் திருவடியை ஒரு கணப் பொழுதும் கூட நினைக்க மாட்டார்கள். அவன்
திருமேனியைக் கண்ணாரக் கண்டு வழிபட்டு உள்ளம் மகிழ மாட்டார்கள்.
பிறவியை
எடுத்ததன் பலன், இனிப் பிறவாத
நிலையைப் பெற்று, இறைவன் திருவடியில் மகிழ்ந்து இருத்தல் என்னும் அறிவு
இல்லாதவன் அடியேன் என்கின்றார் அடிகளார்.
பொங்கும்
பெரும் பாதகனை ஆளுவையோ ---
இறைவன்
திருவடியை வணங்கி வழிபடாத உள்ளமானது, பாதகச்
செயல்களைப் புரிவதிலேயே ஆழ்ந்து இருக்கும். புண்ணியம் பாவம் என்னும் நன்மை தீமைகளை
அறிய ஆறியாது.
சிலைதனைக் கொடு மிக அடித்திட மனம் தந்து ---
இது
அருச்சுனன் தனது கையில் இருந்த வில்லால் சிவபெருமானை அடித்த வரலாற்றைக்
குறிக்கும். அருச்சுனன் தன்னை அடித்ததைப் பிழையாகக் கொள்ளவில்லை இறைவன்.
அருச்சுனன் வில்லால் அடித்த
வரலாறு
பாண்டவர்
ஐவரும் நாடு இழந்து காடு புகுந்தனர். வனவாசம் செய்து வருங்கால் விசயன் ஈசனிடம்
பாசுபதம் பெற விரும்பினான். இமயமலை அடைந்தான். இனிய ஒரு சாரலில் நின்று அரிய தவம்
செய்தான். அவ் வீரன் வெற்றிபெறப் புரிகின்ற வித்தக நிலையைத் துரியோதனன்
அறிந்தான். அதனைக் கெடுக்க விரைந்தான்.
மூகன் என்னும் அசுரனை ஏவினான். அவன் ஏனமாய் மாயவடிவம் கொண்டு மண்டி வந்தான். தீய
நினைவோடு வருகிற அவனைத் தொலைத்து ஒழிக்கத் தூய பரமன் ஒரு வேடனாய்த் தொடர்ந்து
வந்தான். வென்றி வீறோடு வந்த பன்றி தன்
அருகு நெருங்கவே, அருச்சுனன் கடுத்து
ஒரு பகழி தொடுத்தான். அடுத்து வந்த கயிலை வேடனும் அதன் மேல் ஓர் அம்பை ஏவினான்.
பன்றி மாண்டு வீழ்ந்தது. வீழவே,
கிட்ட
நெருங்கிய கிரீசன் விசயனோடு வாதாட நேர்ந்தான். வாதாட்டம் போராட்டமாய்ப் பொங்கி
மூண்டது.
வேடன்:- என் வேட்டையில் தப்பி வந்த பன்றியை நீ ஏன் வம்பாய் அம்பு எய்தாய்?
விசயன்:- அது என்மேல் வேகமாய்ப் பாய வந்தது. அதனை நான்
மாய வீழ்த்தினேன்.
வேடன்:- தவம் செய்கின்ற நீ, இவ்வாறு அவம் செய்யலாமா?
விசயன்:- என் தவத்தைக் கெடுக்க விரைந்தது. அதனால் நான் கடுத்து ஒழித்தேன்.
வேடன்:- உனது வேடமும் தவமும் விசித்திரம் உடையன. புல்லையும்
நோக மிதியாத எல்லையில் நின்று புனிதமாகத்
தவம் செய்ய உரியவன், இந்தப் பொல்லாத கொலையைச் செய்தாயே.
இது நல்லதா?
விசயன்:- அல்லல் செய்ய நேர்ந்ததை ஒல்லையில் கொன்று தொலைத்துள்ளமையால்
இது மிகவும் நல்லதே.
வேடன்:- பசுவின் தோலைப் போர்த்த நீ, சமர்த்தாய்ப் பேசப் படித்து இருக்கிறாய். என்
பன்றியை ஏன் கொன்றாய்? தக்கபடி பதில் சொல்.
இல்லையேல் அமர் மூண்டு, அடல் நீண்டு அல்லலே விளையும்.
விசயன்:- ஏ, வேடா, நீ வீணே வம்பு பேசுகிறாய். வெய்ய சண்டையை விளைக்கிறாய்.
இந்தப் பன்றியை எடுத்துக்
கொண்டு போ. அடுத்து நின்று தொந்தரவு செய்யாதே.
மேலும் செய்தால் துயரே காண்பாய்.
வேடன்:- நீ பெரிய சுத்த வீரன் போல் என்னை வெருட்டி மருட்டுகிறாய்.
நீ யார்? எந்த ஊர்? என் சொந்தமான மலைக்கு ஏன் வந்தாய்? உன் பேர் என்ன?
விசயன்:- அருச்சுனன் என்பது என் பேர்.
வேடன்:- சரிதான். என் குல விரோதி. என் சாதியான் ஆன ஏகலைவனை
நீ அநியாயமாய் விரலைத் துணித்தவன்
அல்லவா. உன் கையைத் துணிக்க வேண்டாமா?
விசயன்:- காட்டுத் தனமாய் உளறாதே. விரைந்து விலகிப் போய்விடு. போகாமல் நின்றால் சாகவே
நேர்வாய்.
வேடன்:- உன் வீரத்தையும் தீரத்தையும் இன்று அளந்து பார்த்துவிட வேண்டும்.
என்னோடு நேரே போருக்கு வா. எடு
வில்லை. இதோ ஒல்லையில் தொடுக்கிறேன்.
விண்ணில்உறை
வானவரில் யார்அடி படாதவர்?
விரிஞ்சன் முதலோர், உததிசூழ்
மண்ணில்உறை
மானவரில் யார்அடி படாதவர்?
மனுக்கள் முதலோர்கள், அதலக்
கண்ணில்உறை
நாகர்களில் யார்அடி படாதவர்?
கட்செவி மகீபன் முதலோர்,
எண்ணில்பல
யோனியினும் யாஅடி படாதன?
இருந்துழி இருந்துழி அரோ.
வேதம்அடி
உண்டன, விரிந்தபல ஆகம
விதங்கள்அடி உண்டன, ஓர்ஐம்
பூதம்அடி
உண்டன, விநாழிகை
முதல்புகல்செய்
பொருளொடு சலிப்பில் பொருளின்
பேதம்அடி
உண்டன, பிறப்பிலி இறப்பிலி
பிறங்கல் அரதன்தன் மகளார்
நாதன்அம
லன்சமர வேடவடி வங்கொடு
நரன்கை அடிஉண்ட பொழுதே. --- வில்லிபாரதம்.
கங்காளன், பார்த்தன் கையில் அடி
உண்டே, திண்டாட்டம் கொளு, நெடு
கல் சாபம் சார்த்தும் கரதலன், ...... எருது ஏறி...--- (மங்காது) திருப்புகழ்.
அந்தணன்
தாமரை மலர்ப் பிரமனை நடுத்தலை அரிந்தும் கொண்டு இரந்தே ---
வேதங்களை
ஓதுகின்றவனும், தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரம தேவனுடைய உச்சித் தலையை
அரிந்து, அந்தத் தலையில் பிச்சை
ஏற்றவர் சிவபெருமான்.
நான் படைப்பவன் என்று பிரமன் தருக்குற்றான். சிவமூர்த்தி அவனுடைய தலையை
நகத்தால் கிள்ளி அருளினார்.
நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற. ---
திருவாசகம்.
நெகத்திலே
அயன் முடி பறி இறை, திரி
புரத்திலே நகை புரி பரன், அடியவர்
நினைப்பிலே அருள் தருசிவன் உதவிய ......
புதல்வோனே!
--- (பெருக்கம் ஆகிய)
திருப்புகழ்.
கைவேழ
முகத்தவனைப் படைத்தார் போலும்;
கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்;
செய்வேள்வித்
தக்கனை முன் சிதைத்தார் போலும்;
திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்;
மெய்வேள்வி
மூர்த்தி தலை அறுத்தார் போலும்;
வியன்வீழி மிழலை இடம் கொண்டார் போலும்;
ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும்;
அடியேனைஆள் உடைய அடிகள் தாமே. -- அப்பர்.
குண்டரொடு
பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்;
குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்;
புண்டரிகப்
புதுமலர் ஆதனத்தார் போலும்;
புள்அரசைக் கொன்று உயிர்பின் கொடுத்தார் போலும்;
வெண்தலையில்
பலி கொண்ட விகிர்தர் போலும்;
வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்;
அண்டத்து
அப்புறத்து அப்பால் ஆனார் போலும்;
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. --- அப்பர்.
திரிபுரத்து
எரிபுக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மாமுருகா ---
திரிபுரங்கள்
எரியில் முழுகுமாறு சிறுநகை புரிந்தும் திருவிளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய
திருமேனியின் ஒரு பாகத்தில் இருப்பவளாகிய பார்வதிதேவி அருளிய சிறந்த முருகப்
பெருமானே என்கின்றார் அடிகளார்.
திரிபுரம் எரித்த வரலாறு
தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள்
வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி இருந்தனர்.
அவர்கள் பிரமதேவனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில், கலைமகள் நாயகன் அவர்கட்கு முன் தோன்றி
"யாது வரம் வேண்டும்?" என்ன, மூவரும்
பத்மயோநியைப் பணிந்து நின்று பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியா வரம் அருள வேண்டும்?” என்றனர். மலரவன், “மைந்தர்களே!
அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழியின்
யானும் இறப்பேன். எந்தையும் அப்படியே! கங்கைக் கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ
அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர்
ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும்
இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை
வேண்டில் தருதும்” என, தானவர் பொன், வெள்ளி
இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம்
என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரவருடத்திற்கு ஒருமுறை விரும்பிய
இடத்திற்குப் பெயர வேண்டும். அப் புரமூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு
கணையால் அழித்தால் அன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை
சேர்ந்தனன்.
தாரகாக்ஷன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவ தச்சனைத் தருவித்து தங்கள்
விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை
உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையைக் காலம் தவறாது புரிந்து
வந்தார்கள். ஆயினும், அசுர
குலத்தின் தன்மைப் படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர்
கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று
எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதியென்றுன்னி தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின்
வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத் தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள்
விடையின் மேல் தோன்ற,
விண்ணவர்கள் பன்முறை பணிந்து, திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.
திருமால் தேவர்களே அஞ்சாதீர்கள் என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம்
அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து
அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரேயாதலின் திருமால்
ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம் மூவர்களையும் பாராதொழிமின்கள்.
அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலையடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து
தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அஃதறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து
“அமரற்பாற் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதமுதலிய யுத்தக் கருவிகளைச்
சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி யண்ணல் மேருவரை சேர்ந்து சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர்.
அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.
மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதயாஸ்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும்
நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப்பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்குயானைகள் இடையிற்றாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக்
கொண்டு கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமுஞ் சாமரை யிரட்டவும், துப்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அட்சரசுகள் நடனமாடவும் அமைத்து
மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணியாகவும், பைந்துழாயலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லிற்கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பிற்கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை யடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க்கருவிகளை யமைத்துக்
கொண்டடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.
நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக்
கூற, இறைவர்
இமவரை தருங்கருங் குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை யடைந்து இமையவர் எண்ணத்தின் படி
அதிற் காலூன்ற, அதன்
அச்சு முறிந்தது.
தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற --- திருவாசகம்.
உடனே நாராயணர் இடபமாக, அவ் இடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாக்கும் சக்தி அற்றுத்
தரைமேல்விழ, சிவபெருமான்
திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர
சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார்
மறைமொழியாலும் காண்க.
கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
விரிஞ்சன் விநாயக பூசனை புரிய அவர் அருளால் இரதம் முன்போல் ஆக, சிவபெருமான் தேவியாருடன் தேர் மேல்
எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து
இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள்
வாச்சியமிசைக்கவும், கறைமிடற்றண்ணல்
இரத ஆரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.
அண்டர்கள் அரனாரைப் பணிந்து “அண்ணலே!
வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று
பிரார்த்திக்க, அழல் உருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்தேந்திய மேருமலையாகிய
வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின்
அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள்
தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும்)
இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே
புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த
மூவரும் யாதொரு தீமையும் இன்றிப் பெருமான் பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கனுப்பி வெள்ளிமாமலைக்
கெழுந்தருளினார். இமையவர் இடுக்கணகன்று இன்புற்றனர்.
“சிலையெடுத்து மாநாக நெருப்பு கோத்துத்
திரிபுரங்கள் தீஇட்ட செல்வர்
போலும்” ---அப்பர்
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற.
--- மணிவாசகர்.
ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற. --- மணிவாசகர்.
“உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
உருளை இருசுடர் வலவனும்
அயன்என மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும்
அருள்பெற ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
--- (அருவமிடை)
திருப்புகழ்.
மூவெயில் செற்ற ஞான்று
உய்ந்த மூவரில்
இருவர் நின்திருக்
கோயிலின் வாய்தல்
காவ லாளர்என்று ஏவிய
பின்னை
ஒருவன் நீகரி காடு அரங்
காக
மானை நோக்கிஓர் மாநடம்
மகிழ
மணிமு ழாமுழக் க அருள்
செய்த
தேவ தேவநின் திருவடி
அடைந்தேன்
செழும்பொ ழில்திருப்
புன்கூர் உளானே. --- சுந்தரர்.
இராவணன்
நீள்மலை எனத் திகழ்முடிகள் பத்தையும், இரண்டு அஞ்சு, ஒன்பது, ஒன்று ஏய் பணை புயத்தையும், ஒரு வகைப்பட
வெகுண்டு, அம்பு ஒன்று எறிந்தோன் மதலை மைத்துன ---
இரண்டு
அஞ்சு = பத்து. ஒன்பது+ஒன்று = பத்து.
ஆக
இருபது தோள்களை உடையவன் இராவணன்.
இராவணனுடைய, பெரிய மலை போல விளங்கிய பத்துத்
தலைகளையும் பருத்த இருபது புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியச் சினந்து, ஒப்பற்ற அம்பினை
எறிந்தவனாகிய இராமபிரானாகிய திருமாலின் மகனான மன்மதனுக்கு மைத்துனர் முருகப் பெருமான்.
உமாதேவியார்
முருகப் பெருமானின் தாயாரும், திருமாலின் தங்கையும் ஆவார். எனவே, திருமால் முருகப்
பெருமானுக்கு மாமன் முறை. திருமாலின் மகன் மன்மதன். எனவே, மன்மதனின் மைத்துனர் முருகப்
பெருமான்.
வரிசை
பெற்று உயர் தமனியப் பதி இடம் கொண்டு இன்புறும் சீர் இளைய நாயகனே ---
தமனியம்
- பொன். மாடு என்னும் சொல்லுக்குப் பொன் என்றும் பொருள் உண்டு.
தமனியப்
பதி என்பது மாடையம்பதி ஆகிய மாடம்பாக்கத்தைக் குறிக்கும். "மாடையம்பதி" என்று
முந்தைய திருப்புகழில் அடிகளார் கூறியருளினார்.
உயர்ந்த
மாடம்பாக்கம் என்னும் அழகிய திருத்தலத்தைப் பதியாகக் கொண்டு இன்புறுகின்ற அழகும் இளமையும்
வாய்ந்த தலைவர் முருகப் பெருமான்.
சென்னையை
அடுத்த வண்டலூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், கிழக்குத் தாம்பரத்தில் இருந்து ஆறு கி.மீ.
தொலைவிலும்,
இராஜகீழ்ப்பாக்கம்
என்னும் ஊரில் இருந்து மூன்று கி.மீ. தொலைவிலும் உள்ள மாடம்பாக்கம் என்னும்
திருத்தலத்தினை,
அடிகளார்
"மாடையம்பதி" என்றார்.
இறைவர்
தேனுபுரீசுவரர், இறைவி
தேனுகாம்பாள்,
தலமரம்
வில்வம்,
தீர்த்தம்
கபில தீர்த்தம். மூலவர் கருவறையில் சதுர
பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில்
மூன்று விரல்கிடை அகல இலிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன்
தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கஜபிருஷ்ட விமானத்துடன்
அமைந்த கருவறை. (யானையின் பின்புறம் - மாடம் போன்ற அமைப்பு)
கபில
முனிவர் சிவபூசை செய்வதற்கு இலிங்கத்தை இடது கையில் வைத்து, வலது கையால் மலர்தூவி
வழிபட்டதாகவும், கையில் இலிங்கத்தை வைத்து
வழிபட்ட முறை சரியல்ல எனக் கூறி, சிவன் அவரை பசுவாகப் பிறக்கச்
சாபம் அளித்ததாகவும், பசுவாகப் பிறந்த கபிலர்
இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றதாகவும் வரலாறு உள்ளது. பசு வடிவில் கபிலர்
வழிபட்ட தலம் என்பதால் சுவாமி,
"தேனுபுரீசுவரர்' எனப்பட்டார்.
கருத்துரை
முருகா!
விலைமாதர் மயலில் முழுகி, உன்னை வழிபட்டு உய்ய அறியாத அடியேனையும் ஆண்டு கொள்வாயாக.
No comments:
Post a Comment