பொது --- 1084. முழுமதி அனைய

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

முழுமதி அனைய (பொது)


முருகா! 

திருவடி அருள்வாய்.


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தந்ததான


முழுமதி யனைய முகமிரு குழையில்

     முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா


முதலறி வதனை வளைபவர் கலவி

     முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்


வழிவழி யடிமை யெனுமறி வகல

     மனமுறு துயர்கள் ...... வெந்துவாட


மதிதரு மதிக கதிபெறு மடிகள்

     மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய்


எழுதிட அரிய எழில்மற மகளின்

     இருதன கிரிகள் ...... தங்குமார்பா


எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி

     இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய்


அழகிய குமர எழுதல மகிழ

     அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே


அமருல கிறைவ உமைதரு புதல்வ

     அரியர பிரமர் ...... தம்பிரானே.


                     பதம் பிரித்தல்


முழுமதி அனைய முகம், இரு குழையில்

     முனிவிழி முனைகள் ...... கொண்டு, மூவா


முதல் அறிவு அதனை வளைபவர், கலவி

     முழுகிய வினையை ...... மொண்டு, நாயேன்


வழிவழி அடிமை எனும் அறிவு அகல,

     மனம்உறு துயர்கள் ...... வெந்து வாட,


மதிதரும் அதிக கதிபெறும் அடிகள்

     மகிழ்வொடு புகழும் ...... அன்பு தாராய்.


எழுதிட அரிய எழில்மற மகளின்

     இருதன கிரிகள் ...... தங்குமார்பா!


எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி

     இமையவர் சிறையை ...... அன்று மீள்வாய்!


அழகிய குமர! எழுதலம் மகிழ

     அறுவர்கள் முலையை ...... உண்ட வாழ்வே!


அமர் உலகு இறைவ! உமை தரு புதல்வ!

     அரிஅர பிரமர் ...... தம்பிரானே.

பதவுரை

எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும் மார்பா --- ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!

எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் --- எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!

அழகிய குமர --- அழகு மிக்க குமாரக் கடவுளே!

  எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே --- ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!

அமர் உலகு இறைவ --- தேவலோகத்துக்குத் தலைவரே!

  உமை தரு புதல்வ --- உமையம்மையின் திருப்புதல்வரே!

அரிஅர பிரமர்தம் பிரானே --- திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!

முழுமதி அனைய முகம் --- முழுமதியை ஒத்த முகத்தையும், 

இரு குழையில் முனிவிழி முனைகள் கொண்டு --- காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு,

மூவா முதல் அறிவு அதனை வளைபவர் --- முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின்,

கலவி முழுகிய வினையை மொண்டு --- கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய,

நாயேன் --- நாயினும் கடையான நான்,

வழிவழி அடிமை எனும் அறிவு அகல --- தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும்,

மனம்உறு துயர்கள் வெந்து வாட --- மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும்,

மதிதரும் --- நல்லறிவைத் தருவதும், 

அதிக கதிபெறும் அடிகள் --- உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை,

மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் --- உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.

பொழிப்புரை

ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!

எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!

அழகு மிக்க குமாரக் கடவுளே!

ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!

தேவலோகத்துக்குத் தலைவரே!

  உமையம்மையின் திருப்புதல்வரே!

திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!

முழுமதியை ஒத்த முகத்தையும், காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு, முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின், கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய, நாயினும் கடையான நான் தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும், மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும் நல்லறிவைத் தருவதும், உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.


விரிவுரை


இரு குழையில் முனிவிழி முனைகள்  --- 

காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்கள். காது அளவு ஓடிய கண்கள். நீண்ட கண்கள்.


மூவா முதல் அறிவு அதனை வளைபவர் --- 


மூவா -- முற்றாத, நிரம்பாத.

முதல் அறிவு - தொடக்க அறிவு, அறிவின் ஆரம்ப நிலை.


வழிவழி அடிமை எனும் அறிவு அகல --- 


உயிர்கள் இறைவனுக்கு அடிமைகள் என்பது நூல்களின் துணிபு. சிற்றறிவு காரணமாக, உலகியல் நிலைகளில் ஈடுபடும்போது அந்த அறிவு சுருங்கிவிடும். தீவினையின் காரணமாக நிகழ்வது இது. அந்த அறிவு இறைவன் திருவருளால் விசாலப்பட வேண்டும். அதற்கு நல்வினை வாய்க்க வேண்டும். "ஆறிவு அகற்றும் ஆகல் ஊழ் உள்ளக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார்.


எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும்  மார்பா --- 


"எழுத அரியவள், குறமகள் இருதன கிரியில் முழுகின இளையவன்" எனத் திருவாரூர்த் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.


எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே --- 


"கார்த்திகை முலை நுகர் பார்த்திப" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.


"மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக" --- சீர்பாத வகுப்பு.


"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி" --- கந்தர் கலிவெண்பா.


"வனிதையர் அறுவரும்

எனது மகவு என உமைதரும் இமையவர் ...... பெருமாளே."  --- நெடியவட (திருப்புகழ்).


கருத்துரை

முருகா! திருவடி அருள்வாய்.




பொது --- 1083. புழுககில் களபம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புழுககில் களபம் (பொது)


முருகா! 

மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தனதான


புழுககில் களப மொளிவிடு தரள

     மணிபல செறிய ...... வடமேருப்


பொருமிரு கலச முலையினை யரிவை

     புனையிடு பொதுவின் ...... மடமாதர்


அழகிய குவளை விழியினு மமுத

     மொழியினு மவச ...... வநுராக


அமளியின் மிசையி லவர்வச முருகி

     அழியுநி னடிமை ...... தனையாள்வாய்


குழலிசை யதுகொ டறவெருள் சுரபி

     குறுநிரை யருளி ...... யலைமோதுங்


குரைசெறி யுததி வரைதனில் விறுசு

     குமுகுமு குமென ...... வுலகோடு


முழுமதி சுழல வரைநெறு நெறென

     முடுகிய முகிலின் ...... மருகோனே


மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புழுகு, அகில், களபம், ஒளிவிடு தரளம்,

     மணிபல செறிய, ...... வடமேருப்


பொரும் இருகலச முலையினை அரிவை,

     புனைஇடு பொதுவின் ...... மடமாதர்,


அழகிய குவளை விழியினும், அமுத

     மொழியினும், அவச, ...... அநுராக


அமளியின் மிசையில் அவர்வசம் உருகி,

     அழியும்நின் அடிமை ...... தனை ஆள்வாய்.


குழல் சை அதுகொடு அற வெருள் சுரபி

     குறுநிரை அருளி, ...... அலைமோதும்


குரைசெறி உததி, வரைதனில் விறுசு

     குமுகுமு குமுஎன, ...... உலகோடு


முழுமதி சுழல, வரைநெறு நெறுஎன

     முடுகிய முகிலின் ...... மருகோனே!


மொகுமொகு மொகு என ஞிமிறு இசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


பதவுரை

குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி --- மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்து, 

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்த திருமாலின் திருமருகரே!

மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய --- புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து,

வடமேருப் பொரும் இரு கலச முலையினை --- வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து உள்ள இரு குடம் போன்ற முலைகளை உடைய,

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின்,

அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் --- அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும்,

அவச அநுராக அமளியின் மிசையில் --- தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து,

அவர் வசம் உருகி அழியு(ம்) நின் அடிமை தனை ஆள்வாய் ---  விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்தவரும்,  அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து, வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து, இரு குடம் போன்ற முலைகளை உடைய, பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின், அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து, விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- 

விலைமகளிரின் வீட்டில் பெண்கள் பலரும் இருப்பார்கள் என்பது 

"வாரும் இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம்,

     மால் கடந்தே போம் ...... என்இயல் ஊடே,

வாடி பெண்காள், பாயை போடும் என்று ஆசார

     வாசகம் போல் கூறி, ...... அணை மீதே

சேரும் முன், காசு ஆடை வாவியும் போதாமை,

     தீமை கொண்டே போம் ...... என் அட மாதர்

சேர் இடம் போகாமல், ஆசுவந்து ஏறாமல்,

     சீதளம் பாதாரம் ...... அருள்வாயே."

என்னும் திருப்புகழ்ப் பாடலால் அறியப்படும்.


குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறுநிரை அருளி --- 

சுரபி - காமதேனு, வெள்ளைப்பசு.

குறு நிரை - சிறிய பசுக்கூட்டம்.

பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான். அவன் நல்ல மேய்ப்பன்.

கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால், இறைவனாகிய கண்ணனுக்கும், அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்து, அவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

எனவே, பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம், அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்து, பருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டி, தக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்து, அவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல், கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள், ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

"தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார். இந்த விசாரசருமர் தான், பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, சண்டீச நாயனார் ஆனார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்" என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான்.  விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

வேதம் ஓதுவதன் பலன், எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது. 

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- 

அமுதம் வேண்டிப் பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தர மலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்தார மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.


மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- 

ஞிமிறு - வண்டு, தேனீ.

முளரி - தாமரை. தாமரையைத் தனது ஆதனமாகக் கொண்டு உள்ளவர் பிரமதேவர்.

பிரமனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த முதல்வர் முருகப் பெருமான்.


கருத்துரை


முருகா! மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


பொது --- 1082. திரிபுரம் அதனை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

திரிபுர மதனை (பொது)


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தனதான


திரிபுர மதனை யொருநொடி யதனி

     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே


சினமுடை யசுரர் மனமது வெருவ

     மயிலது முடுகி ...... விடுவோனே


பருவரை யதனை யுருவிட எறியு

     மறுமுக முடைய ...... வடிவேலா


பசலையொ டணையு மிளமுலை மகளை

     மதன்விடு பகழி ...... தொடலாமோ


கரிதிரு முகமு மிடமுடை வயிறு

     முடையவர் பிறகு ...... வருவோனே


கனதன முடைய குறவர்த மகளை

     கருணையொ டணையு ...... மணிமார்பா


அரவணை துயிலு மரிதிரு மருக

     அவனியு முழுது ...... முடையோனே


அடியவர் வினையு மமரர்கள் துயரு

     மறஅரு ளுதவு ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


திரிபுரம் மதனை ஒருநொடி அதனில்

     எரிசெய்து அருளிய ...... சிவன்வாழ்வே!


சினம் உடை அசுரர் மனம் அது வெருவ

     மயில் அது முடுகி ...... விடுவோனே!


பருவரை அதனை உருவிட எறியும்

     அறுமுகம் உடைய ...... வடிவேலா!


பசலையொடு அணையும் இளமுலை மகளை

     மதன்விடு பகழி ...... தொடல் ஆமோ?


கரிதிரு முகமும் இடம் உடை வயிறும்

     உடையவர் பிறகு ...... வருவோனே!


கனதனம் உடைய குறவர் தம் மகளை

     கருணையொடு அணையும் ...... மணிமார்பா!


அரவு அணை துயிலும் அரிதிரு மருக!

     அவனியும் முழுதும் ...... உடையோனே!


அடியவர் வினையும் அமரர்கள் துயரும்

     அற அருள் உதவு ...... பெருமாளே.


பதவுரை

கரிதிரு முகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே ---  யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!

கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா --- பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!

அரவு அணை துயிலும் அரிதிரு மருக --- பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!

அவனியும் முழுதும் உடையோனே --- உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!

அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே --- அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!

திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே --- முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!

சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே --- சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!

பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா --- பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!

பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ --- விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?

பொழிப்புரை

        யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!

பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!

பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!

உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!

அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!

முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!

சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!

பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!

விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?


விரிவுரை


கரி திருமுகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே ---

கரி - யானை. யானையின் முகத்தை உடையவர் மூத்த பிள்ளையார். 

இடம் உடை வயிறு - பெருத்த வயிறு. 


கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா --- 

கனதனம் --- பருத்த மார்பகங்கள்.

கனம்+தனம் --- சிறந்த செல்வம். சிறந்த செல்வத்தை உடைய வேடர்களின் திருமகளாக வளர்ந்தவர் வள்ளிநாயகியார் என்றும் பொருள் கொள்ளலாம்.  


அவனியும் முழுதும் உடையோனே --- 

உலகையும், உலகப் பொருள்களையும் தனக்கு உடைமையாக உடையவர் இறைவன். எல்லாப் பொருள்களும் ஆனவன். எல்லாப் பொருள்களையும் உடையவன். "எல்லாம் ஆம் எம்பெருமான்" எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என அப்பர் பெருமானும், "எல்லாம் உடையான் என்று ஊதுஊது சங்கே - எல்லாமும் ஆனான் என்று ஊதுஊது சங்கே" சென்று வள்ளல்பெருமானும் பாடியுள்ளது காண்க.


அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே --- 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய நீடுதனி வேல்விடும் மடங்கல் வேலா" எனப் பழனித் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க. நீசர்கள் ஆகிய அரக்கர்கள் அழியவும், அடியவர்களின் வினைத்துயர் ஒழியவும் முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு. "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே --- 

திரிபுரம் அதனை என்று கொண்டால், முப்புர தகனத்தைக் குறிக்கும்.

திரிபுரம் மதனை என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. அவ்வாறு கொண்டால், முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளியவர் சிவபெருமான் என்று கொள்ள வேண்டும்.

திரிபுரங்களை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு

கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுரவாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.


"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்

எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப

வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. ---  திருஞானசம்பந்தர்.


"வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்

கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே." ---  திருஞானசம்பந்தர்.


"குன்ற வார்சிலை நாண் அராஅரி

வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே."    ---  திருஞானசம்பந்தர்.


"கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே."  ---  அப்பர்.


"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே." ---  சுந்தரர்.


மன்மதனை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு


இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார். 

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."

"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார்.

மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி

நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்."

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடையவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு

யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே."

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.  


பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா --- 

பருவரை - பெருத்த மலை, கிரவுஞ்ச மலையைக் குறித்தது. பொன் மயமாக இருந்து அனைவரையும் மயக்கியது கிரவுஞ்ச மலை.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறையிட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில்.


பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ --- 

தலைவியின் துயரைக் கண்டு அவளுடைய தாய் இரங்குவதாக அகத்துறையில் அமைந்த பாடல் இது.

பசலை --- தலைவனைப் பிரிந்த துயரால் தலைவியின் உடலில் உண்டாகும் நிறமாற்றம்.

மன்மதன் விடுக்கின்ற மலர்க்கணைகள் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரத்தை மிகுக்கும் என்று சொல்லுவர்.

மன்மதனுடைய மலர்க்கணைகள். அது பரிமளம் மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம். மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

"வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;


வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;


நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,


அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


      தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;


வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;


சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;


அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!"


ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......


--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

--- யானை அழியாத இருளாகும்.

--- மிகுபடை பெண்கள் ஆவர்.

--- உடைவாள் தாழை மடல் ஆகும்.

--- போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும், 

--- கொடி மகர மீன் ஆகும்.

--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

--- குடை சந்திரன் ஆவான்.

--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.

--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.








பற்றற்ற பெருநிலை

 


பற்றற்ற பெருநிலை.

-----

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும். அவையாவன உள்ளம், உடம்பு, சூழல். உள்ளம் நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. உடம்பு நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும். சூழல் அல்லது சுற்றுப்புறம் நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இன்று சுற்றுப்புறமும் நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை. நல்ல கல்வி அமைந்தால் நல்லறிவு சிறக்கும். நல்லறிவு வாழ்த்தால் நற்பண்புகள் நிறைந்து இருக்கும். கல்வி கற்கவில்லை என்றாலும், கற்ற பெரியவரிடத்திலாவது கூடி இருந்து கழகவேண்டும். "கற்ற மேலவரோடும் கூடி நில்லேன், கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்பார் வடலூர் வள்ளல்பெருமான். 

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு." --- நாலடியார்.

சிறந்த அழகும் மணமும் நிறைந்த பாதிரிப் பூ வைக்கப்பட்டு இருந்த மண்மாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைக்கும். அதுபோல, கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றாலும், கற்றறிந்த பெரியோர்ளுடன் கூடிப் பழகினால், அவர்களுக்கும், அப் பெரியோரின் சேர்க்ககையால் நாளாக நாளாக நல்ல அறிவு வாய்க்கப் பெறும் என்கிறது நாலடியார்.

தனிமனிதன் இன்பற்று வாழவேண்டுமானால், சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் என்ற சொல்லே ஆறறிவு படைத்த மக்களினத்தைக் குறிக்கும். "மக்கள் தாமே ஆறு அறிவினவே" என்பது தொல்காப்பியம். அறிவு எனப்படுவது நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் அறிந்து அதற்கு ஏற்ப, நன்மையை நாடி, தீயதே விலக்கி ஒழுகுதல் ஆகும். ஆறு அறிவு படைத்தவர்களே மக்கள் எனப்படுவர்.  இன்று நம் கண்முன்னால் நடைபெறுகிற வாழ்க்கை முழுதும், நல்லறிவும் நற்பண்பும் நிறைந்த நமது முன்னோர்களின் உள்ளங்களில் பிறந்த எண்ணங்களின் விளைவுதான்.

நம்முடைய அரசியல் நெறிகள், சமுதாய ஒழுக்கக் கோட்பாடுகள், பொருளாதார அமைப்புகள், நம் பண்பாடுகள், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அணியும் அணிகலன்கள் என யாவுமே பன்னெடுங்காலமாக முன்னோர் வகுத்துத் தந்து சென்றவைதான். ஒவ்வொரு காலத்திலும் அவற்றில் சிற்சில மாறுதல்களை நாம் செய்து வருகிறோம்.

மனித குலத்தின் ஒப்பற்ற பெரியோர்களின் பூதவுடல் மட்டுமே மறைந்தது. அவர்கள் சொல்லிச் சென்ற கருத்துகள், நடை உடை பாவனைகளால் அவர்கள் உயிர்த்தன்மை பெற்று நம்முடனேயே நிலவுகிறார்கள். அவர்களின் நிறைவேறாத கனவுகளையும், முழுமை பெறாத முயற்சிகளையும், அருமையான நூல்களின் வழியாக விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் வித்தகர்கள். "நத்தம்போல் கேடும், உளது ஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார். புகழ் செழிக்கும் அளவுக்கு வறுமையை அடைதலும், புகழ் நிலைக்கும் அளவுக்கு சாக்காடு அடைதலும் இந்த வித்தகர்களிடத்தே உண்டு. 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒரு துறையில் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கின்றது. அந்தத் துறையில் ஆழ்ந்த கல்வியும் பயிற்சியும் பெற்று வல்லுநர் ஆகலாம். துறையறிவோடு, உலகியல் அறிவு முழுமை பெற வேண்டுமானால், கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும். கற்ற பெரியோர்களோடு கூடிக் கலந்து உள்ளம் மகிழவும் பழகிக்கொள்ள வேண்டும். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமே அறிவுடைமை ஆகாது. அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. 

கல்வியின் பயன் அறிவு மிகுவதாக இருக்கவேண்டும். அறிவின் பயன் அன்பு நிறைவதாக அமைய வேண்டும். உள்ளத்தில் அன்பு என்னும் உயிர்ப் பண்பு இல்லாமல், வெறும் அறிவால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. ("அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதன் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை" - திருக்குறள்.) பிற உயிர்படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று நாயனார் வினவுவதில் இருந்தே அறிவின் பயன் உயிர்களிடத்தில் அன்பு வைப்பதுதான் என்பது விளங்கும். அறிவு என்பது என்னவென்று கேட்டால், "போகின்ற இடங்களில் எல்லாம் மனத்தைச் செலுத்தாமல், தீமையை நீக்கி, நன்மையை நோக்கிச் செலுத்துவதே அறிவு ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ("சென்ற இடத்தால் செ(ல்)ல விடாது, நன்றின்பால் உய்ப்பது அறிவு" - திருக்குறள்.) "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் "நுண்பொருள் காண்பது அறிவு" என்றும் அறிவுறுத்துகிறார்.

"புத்தகப் பிதற்றை விட்டு, வித்தகத்து உனைத் துதிக்க, புத்தியில் கலக்கம் அற்று நினையாதே" என்பார் அருணகிரிநாதப் பெருமான். புத்தகங்களைப் படித்து விட்டு, அவற்றில் உள்ளதைப் பிதற்றிக் கொண்டு இருப்பது கூடாது. நான் மெத்தப் படித்தவன் என்னும் செருக்கு இருக்கக் கூடாது. புத்தியில் கலக்கம் இருத்தல் கூடாது. "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” என்பார் மணிவாசகப் பெருமான். உண்பதற்கு வாழை இலை உதவுகின்றது. உண்டபின் வாழை இலையை எடுத்து எறிந்து விடுகிறோம். அதுபோல், உயிர்கள்பால் அன்பு செலுத்துவதற்கும், அதன் பயனாக இறைவனை அடைவதற்கும் கல்வி துணை செய்யவேண்டும். அந்தப் பயனை அடைந்தவுடன், எச்சில் இலையைத் தூக்கி எறிவதுபோல், 'நான் படித்தேன்' என்னும் அகந்தையை விட்டு ஒழிக்கவேண்டும். அடைந்த பின் கல்வியை விட்டுவிட வேண்டும். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைப்பதாலேயே ஒருவருக்கு நல்லறிவு நிறைந்துவிடாது. நூல்களின் கருத்தினை அறிந்து அவற்றால் நலம் பெறுதல் வேண்டும். தானும் தெளிந்து பிறரையும் தெளிவித்தல் வேண்டும்.

"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்று அவற்றைப்

போற்றும் புலவரும் வேறே, பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு."             --- நாலடியார்.

இதன் பொருள் ---

புத்தகங்களை எல்லாம் சிலர் சேகரித்து, அவற்றை வீடு முழுதும் நிறைத்து வைத்து, அவற்றின் பொருளை உணராமலேயே அழகு பார்த்துக் கொண்டு இருப்பவர் சிலர். ஆனால், சிலர் புத்தகங்களைப் பொருள் அறிந்து படித்துப் பயன் அடையும் புலவர்கள் சிலர். அந்தச் சிலருள்ளும் தாம் படித்து அறிந்த கருத்துக்களை மற்றவர் மனம் கொள்ளுமாறு எடுத்து விளக்கிப் புரிய வைப்பவர்கள் மிகச் சிலரே.

இந்த நல்லறிவைப் பெறாதவர்களுக்கு, இந்தப் பெரிய உலகம், பட்டப்பகலிலும் ஒரே இருட்டாகத் தோன்றும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவ நாயனார்.

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டு அன்று இருள்" --- திருக்குறள்.

இதன் பொருள் ---

பண்புடன் கூடி கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இவ்வுலகத்தின் ஒளி உள்ள பகல்பொழுதும் இருளின்பால் பட்டது ஆகும்.

'இந்த நல்லறிவு விளக்கம் பெறாமையால், சமுதாய நல்லொழுக்கம் சீர் குலைந்துவிட்டது, நடுவுநிலைமை, நியாய உணர்வு, நீதிநெறி, நாவடக்கம் எல்லாம் தேய்ந்து மாய்ந்துக் கிடக்கின்றன' என்று திரும்பத் திரும்ப வாய்கிழியப் பேசுவதாலோ, எழுதுவதாலோ பயன் பெரிதும் விளைந்து விடாது. நடக்கும் சாலையிலே ஒருவருக்கு விபத்து நடந்து வீழ்ந்து கிடக்கும்போது எரிகிற வீட்டில் அகப்பட்டது இலாபம் எனச் சுருட்டிக் கொண்டு ஒடும் பான்மையில், அருகே சிதறிக் கிடப்பதைக் கவர்ந்துகொண்டு நடக்க முயலும் விட்டேற்றி மனப்பான்மை மாற வேண்டும். இது சமுதாயச் சீர்குலைவு, மனிதநேயச் சிதைவு. இவைகளைக் கண்டும் காணாமல் போகின்ற போக்கு எல்லா நிலைகளிலும் உள்ளது.

மனிதனை உண்மையான மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பது கல்வி. கல்விப் பயிற்சியே மனிதனை நிமிர்ந்து நிற்கச் செய்யும். ஒரு தனி மனிதனுக்குக் கல்வியறிவு மிகப் பயன்படும். அவன் வழிச் சமுதாய மறுமலர்ச்சி தழைக்கும். உலகப் பேரறிஞர்கள் மனித நேயத்தை அறிவியல் கண்கொண்டு பேசி, அதுவே வழி என்று காட்டி, வாழ்ந்து உள்ளனர். மனித நேயம் மிக்க பண்பாளர்கள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை இனம் கண்டு பின்பற்றியே ஆகவேண்டும். மனித நேயத்தை வளர்ப்பதற்குக் கற்கும் கல்வி மிகவும் பயன்படும். இலக்கியத்தின் இலக்கும், இசையின் குறிக்கோளும் மனித நேயம் அன்றி வேறு இல்லை. ஆகவே, கல்வி மூலம் மனித நேயத்தை பரவச் செய்வது அவசியம் ஆகின்றது.

வளரும் இளம் செடிக்கு உரம் இட்டு, களை களைந்து, நீர்பாய்ச்சி காவல் செய்தால், கதிரவன் ஒளியின் துணையுடன் அப்பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, வாழ்க்கையின் அருமையை உணரவைக்க வேண்டும்.

நாள் என்பது ஒரு காலவரையறை போல் தோன்றுகின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு பலரும் மகிழ்கின்றார்கள். நாள் என்பது ஒரு காலவரையறை போல் காட்டினாலும், அந்த வரையறை முடிவதற்குள் செய்யத்தக்க நல்வினை எல்லாம் விரைந்து செய்ய வேண்டும். வாழ்நாள் உள்ளபோதே பயனுள்ளவற்றை எண்ணி அறத்தைப் போற்ற வேண்டும். உயிர் உடம்பில் வாழும் இயல்பை உணர்ந்தால் இந்த அறநினைவு மாறாது. விழிப்பு உள்ளபோது கடமைகளைச் செய்து முடிப்பதுபோல், வாழ்வு உள்ளபோதே அறத்தைப் போற்றி உயரவேண்டும்.

அருளுணர்வு மிகுந்து தன்னலம் தேய்ந்து அழிந்த பின், வாழ்க்கையில் பற்று எல்லாம் அற்றுப் போகும்.  இல்லறத்தில் இருந்து கொண்டு அகத் துறவோடு வாழுதல் வேண்டும். பிறரால் பழிக்கப்பபடாத புறத்துறவும் நன்றுதான். 

"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"

என்று நாயனார் அருளிய திருக்குறளைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். 

"இல்லறம் துறவறம் என்று சொல்லப்பட்ட இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ் இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று" என்று பரிமேலழகர் வகுத்து உரையைக் காண்க. அல்லாமல், அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது எல்லாம் இல்வாழ்க்கைதான். அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் எவனும் பழிப்பதற்கு இடம் இல்லாது இருக்குமானால்தான் சிறந்த அறம் ஆகும் என்றும் பொருள் கொள்ளலாம்.

துறவு என்றாலே பற்று அற்று இருத்தல் என்பதுதான் பொருள். துறத்தல் என்று சொன்னாலே, துறப்பதற்கு இடமாக ஒன்று இருக்கு வேண்டும். பற்றுக்களைத் துறப்பதற்கான பக்குவத்தை உண்டாக்கிக் கொடுப்பதே இல்லறம்தான் என்பதை மறத்தல் ஆகாது. ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ்கின்றானோ, அதனால் துன்பத்தை அடைவான். எதிலிருந்து எதிலிருந்து பற்று நீங்கி வாழ்கின்றானோ அதனால் அதனால் அவனுக்குத் துன்பம் இல்லை, ஆகையால் துன்பம் அற்ற இன்ப வாழ்வை விரும்பினால், எல்லாம் உள்ளபோதே, இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். துறந்த வாழ்க்கையில் கைகூடும் இன்பங்கள் பல உண்டு.

"யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்"

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

உள்ளத்தில் அன்பு உள்ளோரிடத்திலேயே உண்மைத் துறவு மிகுந்து இருக்கும். மனித நேயமே உண்மைத் துறவுக்கு இருப்பிடம் ஆகும். காவி ஆடையை உடுத்துக் கொண்டு காடுகளில் சென்று உழல்வது அவசியம் இல்லை. அதில் விழுமிய பயனும் இல்லை.

"காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும்

     காடுகள் புக்கும் ...... தடுமாறி;

காய்கனி துய்த்தும், காயம் ஒறுத்தும்,

     காசினி முற்றும் ...... திரியாதே;


சீவன் ஒடுக்கம், பூத ஒடுக்கம்

     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண, எனக்கு உன்

     சீதள பத்மம் ...... தருவாயே."     

என்பது அருணகிரிதாநர் அருளிய திருப்புகழ்.

இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும், செம் பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்று குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு. நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான்.  நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்

பழித்தது ஒழித்து விடின்."                     ---  திருக்குறள்.

நாட்டை விட்டு காடு போய்,  மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், தண்ணீரில் நின்றும், வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும் தவம் இயற்றுதல் துறவு என்று சொல்லப்படுவது மரபு. காட்டுக்குச் சென்று தவ வாழ்வை மேற்கொள்ள விரும்புகின்றவன், தன் துணையோடுதான் செல்லவேண்டும். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.

"காடே திரிந்து என்ன, காற்றே புசித்து என்ன, கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன, உள்ளன்பு இலாதவர்ய; ஓங்கு விண்ணோர்

நாடே, இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!"   

என்பது ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த அருட்பெரும் செல்வராகிய பட்டினத்து அடிகளாரின் அருள்வாக்கு.  

இதன் பொருள் ---

உள்ளத்தின் அன்பு இல்லாதவர்கள் காட்டிலே திரிவதால் என்ன பயன்? காற்றையே புசிப்பதால் என்ன பயன்? கந்தைத் துணியை அரையிலே சுற்றிக் கொண்டு, திருவோட்டைக் கையில் ஏந்தித் திரிவதால் என்ன பயன்? உயர்ந்த தேவர் உலகத்தை நிகர்த்த திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள பெருமானுக்கு உண்மை அன்பராக உள்ளவர்கள், மாதரோடு கூடி இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தாலும், உண்மை ஞானத்தால் அடைதற்கு உரிய வீடுபேற்றுப் பேரின்பத்தைப் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாது. அது  உயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடைய சாக்கிய நாயனார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்று அருள் புரிந்தான். அன்பு இல்லாதவர் மலர் விட்டு அருச்சனை புரிவதாகப் பாவகம் புரிந்தாலும், இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். 

"மனத்து அகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகாள்

வனத்து அகத்து இருக்கினும் மனத்து அகத்து அழுக்கு அறார்;

மனத்து அகத்து அழுக்கு அறுத்த மவுனஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே."

என்பது சிவவாக்கியர் காட்டிய அருள்நெறி.

இதன் பொருள் ---

உள்ளத்திலே முற்பிறப்பு வாசனையாகப் படிந்து உள்ள அகங்கார மமகாரங்களால் உண்டான மாயாபாசங்களை அறுத்து ஒழிக்காமல், மவுனஞானத்தை உடையவர் போலக் காட்டிக் கொள்ளும் யோகிகள் காட்டில் இருந்தாலும், உள்ளத்திலே பொருந்தி உள்ள அழுக்கினை அறுத்து ஒழித்தவர் ஆகமாட்டார்கள். உள்ளத்திலே உள்ள மாயாபாசங்களை அறவே ஒழித்த மவுனஞானத்தை உண்மையாகவே உடைய யோகிகள் பெண்களுடைய முலைத்தடத்தில் முழுகி இருந்தாலும் (சிற்றின்ப நிலையில் இருந்தாலும்) பிறப்பு அற்ற பெருநிலையை அடைந்து பேரின்பத்தில் திளைத்து இருப்பவர் ஆவார்.

உள்ளத்தில் அழுக்கை அறுக்காமல் யோகிகள் போல வாழ்பவர்களைக் காட்டிலும், உள்ளத்தில் அழுக்கை அறுத்து, போகிகளாக வாழ்பவர்களே சிறந்தவர்கள். 

ஒருவனுக்கு நல்லறிவு வளர நல்ல கல்வி அவசியம். கல்வி கற்கவில்லையானாலும், கற்ற பெரியோருடன் கூடி இருந்தால் நல்லறிவு நாளும் வளரும். நல்லறிவு நல்லொழுக்கத்திற்குத் துணை புரியும். நல்லொழுக்கமே பற்றற்ற நிலையை உண்டாக்கும். அதற்கு நிலைக்களன் இல்லறமே.


பொது --- 1081. இசைந்த ஏறும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இசைந்த ஏறும் (பொது)


முருகா! 

அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.


தனந்த தானந் தனதன தானன ...... தனதான


இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்

இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்

அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.


                                 பதம் பிரித்தல்


இசைந்த ஏறும், கரி உரி போர்வையும், ...... எழில்நீறும்,

இலங்கு நூலும், புலிஅதள் ஆடையும்,...... மழுமானும்,

அசைந்த தோடும், சிரம் அணி மாலையும், ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா!

உசந்த சூரன் கிளையுடன் வேர்அற ...... முனிவோனே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் ...... நலியாதே,

அசந்த போது என் துயர் கெட மாமயில் ...... வரவேணும்,

அமைந்த வேலும் புயம் மிசை மேவிய ...... பெருமாளே.


பதவுரை


இசைந்த ஏறும் --- விருப்பமுடன் ஏறுகின்ற காளை வாகனமும், 

கரி உரி போர்வையும் --- யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், 

எழில் நீறும் --- அழகிய திருநீறும், 

இலங்கு நூலும் --- விளங்குகின்ற பூணூலும், 

புலி அதள் ஆடையும் --- புலித்தோல் ஆடையும், 

மழு மானும் --- மழுவாயுதமும், மானும், 

அசைந்த தோடும் --- திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும், 

சிரமணி மாலையும் --- தலைமாலையையும்,

முடிமீதே அணிந்த ஈசன் --- திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான்

பரிவுடன் மேவிய குருநாதா --- அன்போடு விரும்பிய குருநாதரே! 

உசந்த சூரன் கிளையுடன் வேர் அற முனிவோனே --- ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே --- அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் நலியாதே --- விருப்போடு பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, 

அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை

விரும்பி ஏறுகின்ற காளை வாகனமும்,  யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும்,  திருமேனியில் விளங்கும் அழகிய திருநீறும்,  விளங்குகின்ற பூணூலும்,  புலித்தோல் ஆடையும்,  திருக்கையில் தரித்துள்ள மழுவாயுதமும், மானும்,  திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும் ஆகிய இவைகளோடு, தலைமாலையையும் திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான் அன்போடு விரும்பிய குருநாதரே! 

ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

விருப்போடு கையில் பிடித்துள்ள பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

விரிவுரை


இசைந்த ஏறும் --- 

இசைந்த, இசைவு - விருப்பம்.

"அயிராவணம் ஏறாதே, ஆனை ஏறு ஏறி" வென்று அப்பர் பெருமானு பாடி இருப்பது காண்க.

ஏறு என்னும் சொல், ஆண் விலங்கினைக் குறிக்கும். இங்கே காளையாகிய எருதினைக் குறிக்கும். 

"இடபம் உகந்து ஏறியவாறு" என்று மணிவாசகப் பெருமானும், "விடை உகந்து ஏறுதிர்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும் பாடி அருளினமை காண்க. 


கரி உரி போர்வையும் --- 

கரி - யானை. உரி - தோல். யானையில் தோலை உரித்துப் போர்த்தியவர் சிவபெருமான். 

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் பெற்றவன். அவன் மேருமலையில் நான்முகனை நினைத்துக் கடும்தவம் மேற்கொண்டான். நான்முகன் தோன்றினான். கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான நிபந்தனையும் கிடைத்தது. அவன் தனது வேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான்.

இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான அயிராவதத்தின் வாலைப் பிடித்வத்து இழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான். பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். 

வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன், "இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் பெற் கயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான். அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும்" என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதவர் சிவபரம்பொருள் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடூரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார்.

அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீயின் சுவாலைகள் தெரித்தது. கயாசுரனைத் தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச் சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்தம் அடைந்தார். 


"புரத்தையும் எரித்து, அம் கயத்தையும்உரித்து, ஒண்

     பொடிப்பணி என் அப்பன் ...... குருநாதா."      ---  திருத்தணிகைத் திருப்புகழ்.


"தலத் தனுவைக் குனித்து, ஒரு முப்-

     புரத்தை விழக் கொளுத்தி, மழுத்

     தரித்து, புலி, கரி, துகிலைப் ...... பரமாகத் 

தரித்து, தவச் சுரர்க்கள் முதல்

     பிழைக்க, மிடற்று அடக்கு விடச்

     சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே!" ---  திருத்தணிகைத் திருப்புகழ்.

                                                               

எழில் நீறும் --- 

அணிபவருக்கு அழகினைத் தருவது என்பதால் எழில் நீறு என்றார் அடிகளார். "கவினைத் தருவது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். 


இலங்கு நூலும் --- 

சிவபரம்பொருள் திருமார்பில் பூணூலைத் தரித்தவர்.  "வேதம் ஓதி, வெண்ணூல் பூண்டு" என்று திருஞானசம்பந்த்ப் பெருமான் அருளியது அறிக.


புலி அதள் ஆடையுமெ மழு மானும் --- 

அதள் - தோல்.

தாருகவனத்து முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள். கர்மாவே பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை என்று கூறும் கொள்கையர்.

“விரதமே பரம் ஆக வேதியரும்

   சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்” --- திருவாசகம்.

தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்களென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.

முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே, அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு முனிபத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். 

சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள். புலியை உரித்து அதன் தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் திருக்கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார்.


அசைந்த தோடும் --- 

உமையம்மையத் தனது திருமேனியின் இடப்பபாகத்தில் கொண்டு இருப்பதால், சிவபரம்பொருளின் இடது திருச்செவியில் தோடு அசைந்தாடுகின்றது. "தோடு உடைய செவியன்" ஆனார். 


சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் --- 

தலையில் அணிந்த மாலை, நூறுகோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணல் எண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. "தலைக்குத் தலைமாலை அணிந்த்து என்னே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "வெண்தலைமாலை விரவிப் பூண்ட மெய் உடையார்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும், "தலைமாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவன்" என்று அப்பர் பெருமானும் பாடியருளியது காண்க.


ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா --- 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணிவிளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

கேட்டு "செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்" என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

"எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்."     --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”.  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே"  --- (கொடியனைய) திருப்புகழ்.


"மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா...." --- (விறல்மாரன்) திருப்புகழ்.


"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா..." --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

"அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே."  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்." ---  தணிகைப் புராணம்.


"மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

"தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே."

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

"வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. " --- திருமந்திரம்.


"கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்...." --- குமரகுருபரர்.


"பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே." --- அபிராமி அந்தாதி.


"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே." --- அபிராமி அந்தாதி.


"சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே."    --- சிவஞான சித்தியார்.


அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- 

அயர்ந்த என்னும் சொல் அசந்த என்று வந்தது. 

அயர்தல் - மறத்தல். அசதியில் மறதி உண்டாவது இயல்பு.

"அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே" என அப்பர் பெருமானும், "நம்பர் திருவுள்ளம் அறியாதே அயர்த்தேன்" என தெய்வச் சேக்கிழார் பெருமானும் கூறி அருளியது காண்க.

"மயில் வரவேனும்" என்றது, மயிலின் மீது முருகப் பெருமான் வந்து அருள வேண்டும் என்றதை உணர்த்தியது.

கருத்துரை

முருகா! அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.











பொது --- 1080. கலந்த மாதும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கலந்த மாதும் (பொது)


தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான


கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்

கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி

உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா

உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே

மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே

மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா

சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்

சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.


                                   பதம் பிரித்தல்


கலந்த மாதும், கண் களி உற வரு ...... புதல்வோரும்

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகு இடை ...... கலிமேவி

உலந்த காயம் கொண்டு, உளம் உறு துயர் ...... உடன்மேவா.

உகந்த பாதம் தந்து உனை உரைசெய ...... அருள்வாயே.

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி ...... மருகோனே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீச,

சிவந்த காலும் தண்டையும் அழகிய ...... பெருமாளே.

பதவுரை

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே --- மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய மணவாளா ---(விலங்குகளைக்) கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீசச் சிவந்த காலும் தண்டையும் --- சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும்,

அழகிய பெருமாளே --- அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

கலந்த மாதும் --- அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும்,

கண் களி உற வரு(ம்) புதல்வோரும் --- அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும்,

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகிடை --- கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,

கலி மேவி --- வறுமைத் துன்பத்தை அடைந்து,

உலந்த காயம் கொண்டு --- வாடிய மேனியுடன்,

உளம் துயருடன் மேவா --- உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல்,

உகந்த பாதம் தந்து உனை உரைசெய அருள்வாயே --- விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

பொழிப்புரை

மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

விலங்குகளைக் கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும் அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும், அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும், கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,வறுமைத் துன்பத்தை அடைந்து, புறத்தில் வாடிய மேனியுடனும், அகத்தில் உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல், மெய்யடியார்கள் விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

விரிவுரை

மலர்ந்த பூவின் மங்கை ---

பூ என்று சொன்னாலே, தாமரையைத் தான் குறிக்கும்.  பூவின் மங்கை - மலர்மகள் என்னும் திருமகள்.

"பூ எனப்படுவது பொறி வாழ் பூவே" என்று "நால்வர் நான்மணி மாலை"யில் கூறப்பட்டு உள்ளது காண்க. பொறி - திருமகள்.


மறம் செய்வார் ---

மறம் - கொலைத் தொழில். அத் தொழிலைச் செய்பவர் மறவர் எனபட்டனர். வேடர் என்றும் சொல்லப்படுவர்.


கலி --- 

துன்பம், வறுமை.


கருத்துரை


முருகா! மெய்யடியார்கள் துதித்துப் போற்றும் திருவடி இன்பத்தை அடியேனுக்கும் தந்து அருளவேண்டும்.





நிலையான பெருந்தவம்

நிலையான பெருந்தவம்

-----

அறம் எல்லோரும் செய்வதற்கு உரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே, மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாக அமையும். அறவழியில் சேராத பொருள் பொருளாகாது. இன்பமும் அறத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்பமாகாது. ஆகவே, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் உயிர்நாடியாக இருப்பது. அறம் என்பது, நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரிவிப்பது. செய்யக் கூடியவை விதி. செய்யக் கூடாதவை  விலக்கு என்று சொல்வார்கள். 

"அறு" என்னும் சொல்லை அடியாக உண்டானது அறம். இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடாதென்று வரையறுப்பதும் அதுவே. அப்படி வரையறுத்த நெறியே, அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் "அறத்துப்பால்" என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரங்களில் முறையாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் நாடியாக இருப்பது ஈகை. எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றார் திருவள்ளுவ நாயனார். 

நூல்கள் யாவும் தருமம் (அறம்) அர்த்தம் (பொருள்) காமம் (இன்பம்) மோட்சம் (வீடு) என்ற புருஷார்த்தங்கள் நான்கைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. ஔவைப் பாட்டி சுருக்கமாக எதையும் சொல்வதில் வல்லவர். பெருக்கமாகவும் சொல்வார். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்பமாக இருக்கவேண்டும் என்பது இல்லை. சுருக்கிச் சொல்லத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக் கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும்.  

சுருக்கமாகப் பாடுகிற ஆற்றலலைத் திருவருளால் பெற்ற ஔவைப் பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாக ஒரு பாட்டில் காட்டினார். "ஈதல் அறம்" என்றார். அறம் செய்ய வேண்டுமானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது?  "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். பணம் ஈட்டுவதற்கு இக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாளுகின்றார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால், நமது முன்னோர் இப்படி ஈட்டுவதைப் பொருளாகக் கொள்ளவில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்றார்.

எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மட்டுமே அல்ல.  உள்ளமும் இணைய வேண்டும். கருத்து ஒருமித்து ஆதரவுபடும் இன்பத்தை எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல். பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும்.  எனவே,, ஒளவைப் பாட்டி, "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்"  என்று சொன்னார். பல பிறவிகளிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். "பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு."

இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தை, மிகச் சுருக்கமாக "ஈதல் அறம்" பாட்டி என்று சொல்லிவிட்டார். ஈதல் - கொடுப்பது. ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார்கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும். 

எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூல நாயனார். இந்த உடம்பு சோற்றுப் பிண்டம். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். 

உயிர் வாழ, உடம்பு வேண்டும். உடம்பை உணவால் ஓம்புதல் வேண்டும். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும் விடக் கொடியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. துறவிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ மக்கள் பசியினால் பிள்ளையை விற்றும் பிழைக்கிறார்கள். 

தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்" என்று பாடினார் திருவள்ளுவ நாயனார். மணிமேகலைக் காப்பியம், பசியை, "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைச் சொல்வது மட்டும் அல்லாமல், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் அன்னதானத்தின் சிறப்பையும் சொல்கிறது.

மணிமேகலை என்னும் துறவி பிறருக்கு உபதேசம் செய்வதை மேற்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற்கொண்டாள். அவளுக்கு "அமுதசுரபி" ஒன்று கிடைத்தது. பசித்தோர் எல்லோருக்கும் சோறு கொடுத்தார். அமுதசுரபியில் சோறு அளித்த, ஆதிரை என்பாளும், "பாரகம் முழுவதும் பசிப்பிணி அறுக" என்று சொல்லி இட்டாள் என்கின்றது காப்பியம். ஆதிரைக்கு எவ்வளவு பேராசை பாருங்கள். உலகம் முழுவதும் பசி இல்லாமல் வாழவேண்டுமாம்.

நமது நாட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும், அன்னதானம் இல்லாமல் இருக்காது. பசித்து வந்தவர்க்கு அன்னம் அளிப்பது சிறந்த தானம். ஒருவன் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கின்ற இடமே பசித்தவர் வயிறுதான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்றார். தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால், அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"  என்பது திருக்குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான். அந்த உண்ணா நோன்பிற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்கள். இவர்கள் பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர்களுடைய பசியையும் போக்கி விடுகிறான். 

'இடம்பட வீடு எடேல்' என்று ஔவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்று பொருள். ஒரு பக்கத்தில் விளைச்சலை அதிகப் படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். விளைநிலம் அழிந்து போகிறது. உடம்பை வளர்த்தற்கு உரிய அன்னத்திற்கு உரிய நெல் விளையாமல் போகின்றது. இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத்தார்கள். நிறைய நெல் விளைந்தால்தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி.  இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தமது கலைத் திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களை அன்றிப் பிறரிடம் பிச்சை என்று இரப்பவர்கள் மிக அரிது. நாளடைவில் அந்த நிலை மாறிப் பலரும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டது. 

உயிர் வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தால் ஆனது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லை என்றால் மற்றத் தொழில்களினால் பலன் இல்லை. "உழந்தும் உழவே தலை" என்றார் நாயனார்.

சடையப்ப வள்ளல் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல் மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல்மணிகள் சிந்தி இருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர் ஒருவர்,  "வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டுமென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவிதமாகப் பார்த்தார். நெல்லை விடப் பொன் உயர்ந்தது அல்ல என்று காட்டவே,  பொன்னைக் கொண்டுவந்து இலையில் இட்டார். புலவருக்கு உண்மை விளங்கியது. "பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர்.

தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கியமான இடத்தில் அந்த வள்ளலைப் பற்றிய புகழை அமைத்திருக்கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள் இராம பட்டாபிடேகத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராம பட்டாபிடேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். இராம பட்டாபிடேகத்தன்று விசுவாமித்திரர், வசிட்டர், அநுமன், சீதாதேவி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலுக்கு அங்கே இடமே இல்லை. ஆனால், இடத்தை உண்டாக்கி, சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாகப் புகுத்தி விட்டார். 

"அரியணை அனுமன் தாங்க,

    அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க,

    இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க,

    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுஉ(ள்)ளார் கொடுக்க வாங்கி,

    வசிட்டனே புனைந்தான் மௌலி". --- கம்பராமாயணம்.

சிங்காதனத்தை அனுமன் தாங்கினான். அங்கதன் உடைவாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமபிரான் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் கம்பர். "வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபு உள்ளோர் கொடுக்க வாங்கி" இராமபிரானுக்கு வசிட்டர் திருமுடியைச் சூட்டினார் என்கிறார். இராமபிரானுக்குச் சூட்டிய மகுடத்தை சடையப்பருக்கு முன்னோர்கள் ஆகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார்.  கம்பருடைய அன்புக்கு மூலகாரணம் சடையப்ப வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 

என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லை. எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவ பூர்வமான முறையில் ஒரு தந்திரத்தை அருள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகிவிடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறது. அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு, கட்டுச் சோறாகி, வந்து சேரும் என்று அவர் சொல்கிறார். அரிசியில் பிளவு பட்டால் உண்டாவது நொய் அரிசி. அந்த நொய் அரிசியில் ஒரு பாதியையாவது பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று சொன்னார்.

பலவித பண்டங்களோடுதான் விருந்து படைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. வறுமை நிலையில் இருந்தவர்கள் கீரையைக் கறி ஆக்கி உண்டார்கள். தம்மிடம் இருந்த பொருள் அனைத்தும் வற்றிய நிலையில், தன்னை நாடி வந்த அடியவர்க்கு அமுது படைக்க, இளையான்குடி மாற நாயானார் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைத் தான் தேர்ந்து எடுத்தார். வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்  என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து,  நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும், வெறும் கீரையாக இருந்தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு.

பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி என வந்தவனுக்கு ஒரு பிடி அன்னம் இட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அருணகிரிநாதர் வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று சொல்லவில்லை. இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள்  என்றே சொல்கிறார். 

இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். அதை "அன்பின் நிலையான மாதவம்" என்கின்றார். புலன்களை அடக்கிச் செய்வதுதான் தவம் என்று எண்ணவேண்டாம். தவம் செய்கிறவனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்னும் திருவள்ளுவர் கருத்தை மேலே கண்டோம். ஆகவே பசியைப் போக்கும் தவத்தை அன்போடு செய்து வந்தால், அதுவே "நிலையான மாதவம்" என்கின்றார் அருணை வள்ளலார்.

பசித்து வந்தவருக்கு இலையாவது, வெந்தது ஏதாவது அன்போடு கொடுத்தால், அது பின்னால் பின்பு பொதி சோறாக விளையும்  என்கின்றார். மரணம் வந்தபோது, உயிரானது தான் இருக்கும் உடலை விட்டுப் போகின்றது. இனிக் கவலை இல்லை என்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. இப்போது செய்கிற "நிலையான மாதவம்" அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், உற்ற துணையாகவும் வந்து சேரும்.

அறிவை மழுங்க அடிக்கிற, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால், அதுவே தவமாகிவிடும். பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர்களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற பொறாமையினால் சிலர் செய்கிறார்கள். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் ஏசுவார்களே என்று எண்ணிச் செய்கிறார்கள். இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றும், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்றும் சொன்னார் திருவள்ளுவ நாயனார்.

அறத்தின்வழி ஈட்டிய பொருள் இறைவன் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தி, அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறை திருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். வழங்காத வன்னெஞ்சர்கள்ப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

"நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே".  ---  பட்டினத்தார்.

    இறைவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் "நிலையான மாதவம்" ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது, நம்மை நினைத்தால் ஆசை வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே "கர்மயோகம்" ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவம்தான்.  ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறைவனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும். அன்பு இருந்தால் ஏழையைக் கண்டு ஏளனம் செய்யத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்றார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். 

நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறைவன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத்திருக்கும் குடை சிறிதாகத் தோன்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோன்றுகிறது. 

"மலைஆறு கூறுஎழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின் 

நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்; 

இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்நு ஏற்றவர்க்கே". 

என்று அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருள் உபதேசம் புரிந்து நல்வழியைக் காட்டுகின்றார்.

இதன் பொருள் --- 

உலகத்தவர்களே! பசியோடு வந்தவர்க்கு நீங்கள் வழங்கியது நீங்கள் இறுதியில் தொலையாத வழியில் செல்லும் நெடிய பயணத்துக்கு, உங்களைத் தேடிக்கொண்டு வருகின்ற கட்டுச் சோறும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலால், உம்மிடத்தில் வந்து யாசித்தவர்க்கு இலைக் கறியையாவது, வெந்தது வேறு எதையாவது பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிகாணப் பிளக்குமாறு வேலை விட்டு அருளிய முருகப்பெருமானை அன்புடன் பணிந்து, நிலைபெற்ற பெருந்தவத்தைச் செய்து வருவீர்களாக.


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...