இறைவழிபாட்டால் எல்லா நலமும் வரும்

 


ஔவையார் அருளிய

முதுரை

-----

இறைவழிபாட்டால் எல்லா நலமும் வரும்

-----

 

     ஔவைப் பிராட்டியார் அருளிய அருந்தமிழ் நூல்களுள் "மூதுரை"என்பதும் ஒன்று. மூதுரை என்பதற்கு மூத்த உரை அல்லது அறிவுரை என்று பொருள். மூதுரை என்று வழங்கப்பட்டு வந்த இந்த அருமையான நூல் பிற்காலத்தில், "வாக்குண்டாம்" என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. "வாக்குண்டாம்" என்று இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் தொடங்குவதால்முதலில் வந்த சொல்லே நூலின் பெயராக அமைந்து விட்டது. 

 

     இந் நூலின் கடவுள் வாழ்த்தாக உள்ள பாடல் வருமாறு...

 

"வாக்குண்டாம்,நல்ல மனமுண்டாம்,மாமலராள்

நோக்குண்டாம்,மேனி நுடங்காது,-பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு."

 

இப் பாடலின் அன்னுவயம் - கொண்டு கூட்டுதல் ---

 

     பூக்கொண்டுதுப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்குவாக்கு உண்டாம்;நல்ல மனம் உண்டாம்;மாமலராள்  நோக்கு உண்டாம்மேனி நுடங்காது.

 

இதன் பதவுரை ---

 

     துப்பு ஆர் திருமேனித் தும்பிக்கையான் பாதம் - பவளத்தைப் போலும் (சிவந்ததிருமேனியையும்துதிக்கையையும் உடைய விநாயகப் பெருமானின் திருவடிகளைபூக் கொண்டு - (அருச்சனைக்கு உகந்த நறுமண) மலர்களை எடுத்துக் கொண்டுதப்பாமல் சார்வார் தமக்கு - நாள்தோறும் தவறாமல்அடைந்து பூசை செய்வோருக்குவாக்கு உண்டு ஆம் - வாக்கு வன்மை உண்டாகும்நல்ல மனம் உண்டு ஆம் - நல்ல சிந்தனை உண்டாகும்மாமலராள் நோக்கு உண்டு ஆம் - பெருமை பொருந்திய செந்தாமரை மலரைத் தனக்கு இருப்பிடாமாகக் கொண்டு இருக்கும் திருமகளின்அருட்பார்வை உண்டாகும்மேனி நுடங்காது - (அப்படி வழிபடுவோரது) உடம்பு(பிணிகளால்) வாட்டம் அடையாது.

 

     இந்தப் பாடலில் அருமையானதொரு செய்தியை நமக்கு அறிவுறுத்திக் காட்டுகின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

     "வாக்கு" என்பது கல்வி நலத்தைக் குறிக்கும். "நல்ல மனம்" என்பது நற்குண நற்செய்கைகளைக் குறிக்கும். "மாமலராள் நோக்கு"என்பதுதிருமகளின் கடைக்கண் பார்வையால் உண்டாகும் செல்வ வளத்தைக் குறிக்கும். "மேனி நுடங்காது" என்பது உடல் நலத்தைக் குறிக்கும்.

 

     மக்களாகப் பிறந்தோர்க்குவாழ்க்கையில் நல்ல கல்வி நலமும்நல்ல குணமும்செல்வ வளமும்நல்ல உடல் நலமும் அமைந்து விட்டால்பின் வேண்டத் தக்கது எதுவும் இல்லை. இதனால் உயிர் நலம் பெறும். 

 

     கல்வி என்பது கலைமகள் திருநோக்கால் உண்டாவது. மனநலம் என்பது மலைமகள் திருநோக்கால் உண்டாவது. செல்வம் என்பது திருமகள் திருநோக்கால் உண்டாவது.

 

     பொதுவாக உலகியலில்கல்வி இருந்தால்,செல்வம் இருக்காது. செல்வம் இருந்தால் கல்வி இருக்காது என்று சொல்லக் கேட்டுள்ளோம். இதற்குகூறப்படும் நியாயத்தை எண்ணினால்வெட்கக் கேடாக இருக்கும். கலைமகள் என்பவள்திருமகளின் மருமகள். மாமியாரும் மருமகளும் ஒன்று கூடமாட்டார்கள். இது அப்பட்டமான அறியாமையால் உண்டானது. 

 

     செல்வம் யாரைச் சேர்ந்து இருக்கும் என்பதற்குவிடையாககுலசேகர ஆழ்வார் பாடியருளிய ஒரு பாடலைக் காணலாம்.

 

நின்னையே தான் வேண்டி,நீள் செல்வம் வேண்டாதான்

தன்னையே தான் வேண்டும் செல்வம்போல்,மாயத்தால்

மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே!

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே.

 

இதன் பொருள் ---

 

     மிக்க ஒளியினை உடைய ஆழிப் படையினைத் திருக்கையில் கொண்டுள்ள வித்துவக்கோட்டு அம்மானே! உலகில் மிகுந்த செல்வத்தை விரும்பாதுஉன்னையே விரும்பி இருப்பவரிடம் தானாகவே வந்து சேருகின்ற செல்வத்தைப் போஉனது மாயையால் நீ என் மீது பரிவு காட்டவில்லையானாலும்உனது அடியவன் ஆன நான் உன்னை அடைவதையே விரும்பி நிற்பேன்.

 

     செல்வத்தை வேண்டாதவரிடம் செல்வம் வந்து சேரும். கல்விச் செல்வத்தால் அறிவு நிரம்பப் பெற்று,  பிறப்பின் பயன் பரம்பொருளை வழிபட்டுநற்கதியை அடைவதே என்று தெளிந்தவர்கள்அருட்செல்வத்தையே விரும்பி இருப்பார்கள். பொருட்செல்வத்தை விரும்பி இருக்கமாட்டார்கள். ஆனால்இறைவன் அவர்களை வறுமையில் வாடவிட மாட்டான். தன்னை நம்பும் அடியவர்களை வறுமையில் வாடவிட்டால்அவரைப் பார்க்கின்ற மற்றவர்க்குகடவுள் நம்பிக்கை உண்டாகாது.  அடியவர்கள் தமக்கு வந்த செல்வமானதுஇறையருளால்தாம் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தின் பலனாக வந்தது என்று தமது கல்வி அறிவால் உணர்ந்துநிலையற்ற செல்வத்தைக் கொண்டுநிலையான அறத்தைப் புரிவதிலேயே கருத்தாக இருப்பார்கள். எனவேஅடியார்களிடம் வருகின்ற செல்வம் அவர்களிடத்தில் நிலைத்து இருப்பதில்லை. கல்வி அறிவு நிரம்பப் பெறாதவன்,பொருளாசை கொண்டு,பொருளைச் சேர்த்து வைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்துகொண்டுநல்லறமும் புரியாமல்நற்கதிக்கு வழி தேடிக் கொள்ளமாட்டான்.

 

     இறைவனே தன்னை வழிபடும் அடியவர்க்கு ஏவல் புரிபவன் தானே. அடியவர்க்குத் திருமகள் ஏவல் புரிவாள் என்கின்றார் திருஞானசம்பந்தர்பின்வரும் தேவாரப் பாடலின் மூலம்..

 

"கொய்த அம் மலரடி கூடுவார்தம்

மை திகழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழைஉலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே"

 

இதன் பொழிப்புரை ---

 

     அன்பர்களால் கொய்து அணியப் பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைபலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும்பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

 

     அடியார்களைப் பிரியாது திருமகள் இருப்பாள் என்கின்றார் அப்பர் பெருமான்...

 

"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்

வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்

கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்காரோணம் என்றும்

சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே".

 

இதன் பொழிப்புரை ---

 

     சிவந்த பவளம் போன்ற வாயையும்கரிய இருகண்களையும்வெண்மையான பற்களையும்தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறுசெல்வம் மிகுந்ததும்நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.

 

     ஆகதிருமகள் என்பவள்அறவழியில் முயல்பவர் இடத்தில் இருப்பாள். சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்தில் அவள் இருப்பாள். இறை அடியார்களை நீங்காமல் இருப்பாள் என்பது தெளிவாகும். 

 

     பொருளை ஈட்டவேண்டுமானால்நன்னெறியில் வாழத் திருவருள் வேண்டும். திருவருள் இருக்குமானால்திருமகள் அருளும் இருக்கும். திருமகள் இருப்பது எங்குஅவளது இருப்பால் என்ன விளையும்?என்பது குறித்து, "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...

 

சத்தியம் அது இருப்பவர் இடத்தினில்

     சார்ந்து திருமாது இருக்கும்;

சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்

     தனது பாக்கியம் இருக்கும்;

 

மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்

     விண்டுவின் களைஇருக்கும்;

விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்

     மிக்கான தயைஇருக்கும்;

 

பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்

     பகர்தருமம் மிகஇருக்கும்;

பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு

     பலாயனத் திறல்இருக்கும்;

 

வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு

     மன்னுயிர் சிறக்கும் அன்றோ?

மயில் ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!

 

            இதன் பொருள் --- 

 

     மயில் ஏறி விளையாடு குகனே- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

            சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில்திருமகள் சேர்ந்து இருப்பாள்;  திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம்இருக்கும் மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடந்தனில் விண்டுவின் களை இருக்கும் - உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம்இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும் பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடந்தனில் பகர் தருமம் மிக இருக்கும் திருமாலிடத்து வைத்துள்ள அன்பும்இனியஇரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் புகழ்ந்து கூறப்படும் அற உணர்வு உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும் இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?

 

     கருத்து --- சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும்இறைவன் அருளும்தானமும்தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பு இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.

 

     மாமலராள் நோக்கு உண்டாம் என்றார் ஔவைப் பிராட்டியார். திருமகளின் கடைக்கண் பார்வை உண்டானால் வருகின்ற சிறப்புக்கள் குறித்து, "குமரேச சதகம்" கூறுவது...

 

திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்

     சிறப்புண்டு,கனதை உண்டு,

சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்,

     செல்லாத வார்த்தைசெல்லும்

 

பொருளொடு துரும்பு மரியாதைஆம்,செல்வமோ

     புகல் பெருக்காறு போல் ஆம்,

புவியின் முன் கண்டு மதியாதபேர் பழகினவர்

     போலவே நேசம் ஆவார்,

 

பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும்,அனுதினம்

     பேரும் ப்ரதிட்டை உண்டாம்,

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான்,

     பேச்சினில் பிழை வராது,

 

வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும்அதிக

     வல்லமைகள் மிகவும் உண்டாம்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு யாவருக்கும் திருமகளின் கிடைக்கண் நோக்கம் உண்டானால் கீர்த்தி உண்டு கனதை உண்டு - பெருமை உண்டு சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய் விடும் - வாழ்ந்து காட்டும் வழி எல்லாம் எல்லோரும் பின்பற்றும் பெரிய ஒழுக்கநெறி ஆகிவிடும்செல்லாத வார்த்தை செல்லும் ஏற்றுக் கொள்ளத்தகாத சொற்களும் பிறரால்ஏற்றுக் கொள்ளப்படும்பொருள் ஒரு துரும்பு - எல்லாப் பொருளும் அவருக்கு எளிதில் கிடைக்கும் மரியாதை ஆம் பிறர் போற்றும் சிறப்பு உண்டாகும் செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் அவரிடத்தில் செல்வமானது வற்றாத ஆற்று வெள்ளம் போல் வந்து சேரும்புவியில் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் இந்த உலகில் வறுமை உடையவனாய் இருந்தபோதுகண்டும் காணாதது போல்மதியாமல் சென்றவர் எல்லாம்முன்பே நெடுநாள் பழகினவர் போல் வந்து நட்புக் கொண்டாடுவர்சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - பிறந்த குலத்தில் பெருமையும்உயர்வும் உண்டாகும்அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் பேரும் புகழும் உண்டாகும்;பகையாளி கூட பிரியமொடு உறவாகுவான் பகைவனும் கூட அன்போடு உறவு கொண்டாடுவான்;  பேச்சினில் பிழை வராது பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்;  (வந்தாலும் பிழையாக யாரும் கொள்ளமாட்டார்)வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் வரவேண்டும் என்று எண்ணிய பொருள் யாவும் தவறாமல் கிட்டும்அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த செயலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.

 

     எனவேஇறைவனை வழிபட்டால்கல்வி நலமும்செல்வ நலமும்உடல் வளமும் ஒருங்கே வாய்க்கும் என்பதை வலியுறுத்தஔவையார் மேற்குறித்த பாடலைக் காட்டினார்.

 

     யாராவது கல்வி நலம் வாய்க்கப் பெற்றுகடவுள் வழிபாடு இல்லாதவராக இருந்தால்அவர் கல்வியின் பயனைப் பெற்றவராக மாட்டார். "கற்றதனால் ஆய பயன் என்கொல்வாலறிவன் நல்தாள் தொழார் எனின்" என்னும் திருக்குறள் இக் கருத்துக்கு அரண் செய்யும். 

 

     கல்வி நலமும் வாய்க்கப் பெற்றுகடவுள் வழிபாடும் உடையவர்கள்உடல் நலமும்செல்வ நலமும் இல்லாதவர்களாய் இருந்தால்அவர்களுடைய கல்வி முறையிலும்கடவுள் வழிபாட்டு முறையிலும் தவறு உண்டு என்று கொள்ளலாம். "கற்றபின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவ நாயனார் காட்டியபடிகற்றபடி நில்லாமைஇறைவனை வழிபட்டுப் புண்ணியப் பேறு இல்லாமை ஆகியவை காரணமாக இருக்க வேண்டும். இதனைபின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் அறியலாம்...

 

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,

    தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,

ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்,

    உண்பதன்முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்,

அருநோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்,

    அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்

    பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே

 

இதன் பொருள் ---

 

     இறைவனுடைய திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் சொல்லாதவர் ஆனால்தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாதவர் ஆனால்திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வராதவராக இருந்தால்உண்பதற்குமுன் பல மலரைப் பேர் அரும்பாய் உள்ள நிலையில் பறித்து,அவற்றை இறைவனுக்கு இட்டுபின் உண்ணதவராக இருந்தால்கொடுமையான நோய்கள் கெடும்படியாக திருவெண்ணீற்றை அணியாதவராக இருந்தால்இவர்கள் எல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர். அவர்கள் பிறவி எடுத்து வந்தது எதற்காக என்றால்தீராத கொடுநோய்கள் மிகவும் துன்புறுத்தச் செத்துவரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்துமீளவும் பிறப்பதற்குஅதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலே தான்.

 

உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே,

அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு.

 

உடம்பினால் பெற்ற பயன் ஆவ எல்லாம்

திடம்பட ஈசனைத் தேடு.

 

என்னும் ஔவைக் குறள் பாக்களைச் சிந்திக்கஉடம்பினை பெற்றதன் பயன்அதன் உள்ளே இருக்கும் உயிருக்கு நன்மையைத் தேடிக் கொள்வதே ஆகும். அந்த நன்மையைப் பெறவேண்டுமானால்இறைவனை நாட வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

     எனவேஇறைவனுடைய திருவடிகளைத் தப்பாமல் வழிபட்டு வருவோர்க்கு,கல்வி நலமும்,செல்வ நலமும்,உடல் நலமும் ஒருங்கே வாய்க்கும் என்பது ஔவையார் காட்டிய பாடலால் தெளிவாகும்.

கடமையைச் செய்தலே கடவுள் வழிபாடு

 


கடமையைச் செய்தலே கடவுள் வழிபாடு.

-----

 

     "கடமையைச் செய். அதுவே போதும்கடவுள் வழிபாடு அவசியமில்லைஎன்று ஒருபுறம் குரல் கேட்கிறது. இது பகுத்தறிவு வாதம் எனப்படுகின்றது.  "இறைவனை வழிபடுவதே கடமை. அவனை வழிபடாமல் எந்தக் கடமையைச் செய்தாலும் பயனில்லை" என்று இன்னொரு புறம் இப்படி ஒரு குரல் கேட்கிறது! இப்படிக் குரல் கொடுப்பவர்கள் பழைமைவாதிகள். பழைமையாக இருப்பது ஒரு குறை அல்ல. ஆனால்முன்னோர் வகுத்துக் காட்டிவாழ்ந்து காட்டிய நெறி என்ன என்பதை உள்ளவாறு உணரவேண்டும். "கடமையைச் செய்கடவுளை வழிபடுஎன்று மூன்றாவது குரல் கேட்கிறது! இந்தக் குரல்தான் நடைமுறை வாழ்க்கையோடு கூடியது. 

 

     கடமை - இந்த உலகத்தின் இயக்கத்திற்குரிய அச்சாணி. கடமை என்ற அச்சாணியில்தான் உலகம் சுழல்கிறதுஇயங்குகிறது. வாழ்தலுக்கும்சாதலுக்கும் இடையே உள்ள போராட்டம் கடமையை மையமாகக் கொண்டது. சுவர்க்கத்தை அடைய வேண்டுமானாலும் படிப்படியாக நகர்ந்து சென்றுதான் அடையவேண்டும். சுவர்க்கத்தை அடையும் காலம் வரையில் வாழ்கின்ற வாழ்க்கை என்ற ஒன்று உண்டு. அந்த வாழ்க்கையை மனிதன் கடன் படாமல் நிகழ்த்த வேண்டும். களவு செய்யாமல் நடத்தவேண்டும். வாழ்க்கையைக் கடன் படாமலும் களவு செய்யாமலும் நடத்த வேண்டுமானால்கடமை செய்தலைத் தவிர வேறு வழி இல்லை.  உழைக்காமல் ஒருவன் உண்கின்றான் என்றால்அவன் உழைத்துப் பொருளை விளைத்தவனுடைய உழைப்பை அல்லவா உண்கின்றான்?  அது கடன் தானே. கடனை எப்போதாவது திருப்பிக் கொடுத்துத் தானே ஆகவேண்டும்உழைப்பைச் சுரண்டுகின்றவனுக்கும் இறைவன் அருள் புரிவான் என்றால்அது நகைப்புக்கு இடமானதே.

 

     "என்கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். அதன் காரணத்தை அப் பாடலிலேயே நாம் உணர வைத்துள்ளார். "திருக்கரக் கோயிலான்தன் கடன் அடியேனையும் தாங்குதல்என்கடன் பணி செய்து கிடப்பதே". கடமையாகப் பணியைச் செய்துபலனை எதிர்பாராமல் கிடப்பவர்களைத் தாங்குவது இறைவன் கடமை அல்லது தொழில் ஆகிறது. "தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.  இறைவனுக்கு ஒரு தொழில் உள்ளது என்றால்அது தன்னைத் தொழுபவர்கள் துன்பத்தைத் தீர்த்தலே ஆகும். திருக்கரக் கோயிலான் ஆகிய இறைவன் நம்மைத் தாங்கி அருள் புரியவேண்டும் என்றால்நமது கடமைநமக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்துபலனை எதிர்பாராமல் கிடப்பது ஒன்றே வழி ஆகும். இறைவன் அவனது கடமையை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்றால்நமது கடமையை நாம் ஒழுங்காகச் செய்யவேண்டும். அதுதான் "பணிவிடை" என்று சொல்லப்படுவது. "கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுள்ளம் அறியாதோ?" என்பது அருணகிரிநாதர் திருப்புகழ்.

 

     கடமையைச் செய்யாதவன் உரிமைக்குப் பாத்திரம் ஆக முடியாது. முப்பது நாட்கள் பணி செய்தால்தான்முப்பதாவது நாள் பணிசெய்தமைக்கு உரிய ஊதியம் கிடைக்கும். முதலிலேயே ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு கடமையைச் செய்கின்றேன் என்று சொன்னால்அது நடக்குமாநடக்காதுநடக்காது. முப்பது நாட்களும் பணியே செய்யவில்லை என்றால்பணியில் நிலைத்து இருக்கவும் முடியாது.

 

     திருஞானசம்பந்தர் இறைவன் தமது தொழிலைச் செம்மையாகச் செய்வதாகச் சொல்கின்றார். இறைவன் தொழில் என்னஅருள் வழங்கும் தொழில் ஆகும்.  செய்தொழில் பேணுபவர்க்குச் செல்வமாக இறைவன் இருக்கின்றான் என்கின்றார். இறைவன்தனது கடமையைச் செவ்வனே செய்பவனைத் தேடி வந்து தோழமை கொள்வான்.  துணை நிற்பான். இறைவன் செல்வனாக வீற்றிருப்பான்இன்பம் தருவான். யாருக்குபூவும் நீரும் இட்டவர்க்கு மட்டுமாஇல்லைசெய்தொழில் பேணியோர்க்கும் என்கின்றார் திருஞானசம்பந்தர்.

 

"பைம்மா நாகம் பன்மலர் கொன்றை 

     பன்றிவெண் கொம்பு ஒன்று பூண்டு,

செம்மாந்து ஐயம் பெய்க என்று சொல்லிச் 

     செய்தொழில் பேணியோர் செல்வர்,

அம்மான் நோக்கிய அந்தளிர் மேனி 

     அரிவை ஒர் பாகம் அமர்ந்த

பெம்மான் நல்கிய தொல்புக ழாளர் 

     பேணுபெருந்துறை யாரே".

 

இதன் பொருள் ---

 

     திருப்பேணு பெருந்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவர்படம் பொருந்திய பெரிய நாகம்பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர்வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று "பிச்சைஇடுக"என்று கேட்டுஐயம் இட்ட கடமையைச் செய்தவர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்அழகிய மான்விழி போன்ற விழிகளையும்தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்நிலைத்த பழமையான புகழை உடையவர்.

 

     உடம்பு எடுத்து வந்த பிறவியின் பயனாகசெய்ய வேண்டிய தொழில்களைத் தவறாது செய்யும் அடியார்களுக்குஒர் செல்வம் போன்றவர் பேணுபெருந்துறையார். கடமை தவறாதவர்க்குச் செல்வத்துள் செல்வமாய் இருக்கின்றார் என்பதை "தொழில் பேணியோர்க்குச் செல்வர்" என்னும் சொற்றொடர் குறிக்கும். செய்ய வேண்டிய தொழிலைப் பேணிச் செய்தல் வேண்டும். பேணுதல் என்னும் சொல்லுக்குமதித்தல்விரும்புதல்பாதுகாத்தல்வழிபடுதல்பொருட்படுத்துதல் என்று பொருள்கள் உண்டு.

 

     திருஞானசம்பந்தர் காட்டும் நெறியே செம்மைநெறி. அதுவே உண்மையான புதிய நெறியும் கூட,கடமையைச் செய்! கடமையைக் கடவுள் வழிபாடு எனச் செய்தல் வேண்டும். செய்யும் பணி எதையும் ஒன்றிய உணர்வுடன் செய்ய வேண்டும். ஏனோதானோ என்று செய்வது கூடாது.

 

     "திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல்என கடன் பணி செய்து கிடப்பதே" என்று அப்பர் பெருமான் காட்டிய நெறியே உண்மைச் சைவநெறி. வாழ்வியல் நெறி.இதுவே திருமுறை காட்டும் செந்நெறி.

 

"தவம் செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்

அவம் செய்வார் ஆசையுள் பட்டு"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     தமது கடமையைச் செவ்வனே செய்வரே தவத்தைச் செய்பவர் ஆவார். அவ்வாறு அல்லாதவர் பேராசையுள் விழுந்து தவம் அல்லாஅவச் செயல்களைச் செய்பவர் ஆவார்.

 

     திருமுருகாற்றுப்படையில், "தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகன்" என்று முருகப் பெருமானுடைய ஒரு முகத்தைப் பற்றிக் கூறுகிறார் நக்கீரதேவ நாயனார். குற்றம் இல்லாத கொள்கையை உடைய தங்கள் தொழிலை முடிப்பவரது மனத்தை ஏற்று அங்கே தோன்றுகின்ற ஒளிவீசும் நிறத்தை உடைய முகம் என்று கூறுகிறார்.

 

     உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் பொன் பொருள் என்று நிலையாதவற்றில் ஆசை வைத்து உழல்பவர்கள் தமது கடமையைச் செய்ய மாட்டார்கள். அதனால் வரும் துன்பத்தைத் தீர்க்க எண்ணி சாத்திரம் சோதிடம் என்று அலைந்து கொண்டு இருப்பார்கள் என்கிறது "நாலடியார்" என்னும் நூல். நிலையாதவற்றை உணர்ந்து கொண்டால்நிலையான ஒன்றின் மீது விருப்பம் வரும். அது தவ உணர்ச்சி ஆகும். அதனைத் தமது கடமையாகச் செய்வார்கள்.

 

நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்று எண்ணித்

தலையாயார் தம் கருமம் செய்வார் --- தொலைவு இல்லாச்

சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும்

பித்தரின் பேதையார் இல்.                  --- நாலடியார்.

 

இதன் பதவுரை ---

 

     நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமை இயல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்துதலையாயார் - சிறந்த அறிவு உள்ளவர்கள்தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள்தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதல் இல்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரை விடபேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை.

 

            கோள் நூல் என்பது சோதிடத்தை. இலக்கண நூல் என்பது சாத்திரங்களை. இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றும் கற்றுக் கொண்டிராமல்நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும். கடமையைச் செய்யாமல்சாத்திரங்களையும்சோதிட நூல்களையும் அலசிக் கொண்டு இருத்தல் பயன் தராது.

 

     நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவர்மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவர். பிறவியையே அஞ்சிப் பயன் கருதாதுதம் கடமை என்று கடைப்பிடித்துத் தவம் செய்வார் தலையானவர். 

 

 

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...