தலைமைக்கு உரிய தகுதி

 


தலைமையின் தகுதி

-----

 

     தலைமை என்றால்அதற்குரிய தகுதிகள் பொருந்தி இருத்தல் வேண்டும். தலைமைக்குரிய தகுதிகள் சிறந்த குணங்கள் ஆகும். சிறந்த குணங்கள் பொருந்தி உள்ளவர் சான்றோர் ஆவர். சான்றோரே தலைமைக்குத் தகுதி உள்ளவர். "அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண்" என்பார் திருவள்ளுவ நாயனார். உள்ளத்தில் அன்புதகாத எண்ணங்களில்செயல்களில் மனத்தைச் செலுத்தாமல் ஒடுங்கி இருத்தல்உலகத்தோடு ஒத்த உயர்ந்த நடை (ஒழுக்கம்)பிறர் தவறு செய்தபோதும் பழமை கருதி கண்ணோட்டம் செய்தல்மெய்ப்பொருள் உணர்ச்சி ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்கள். சான்றாண்மைக்கு உரிய தகுதிகளாக இன்னும் பல செய்திகளைத் திருவள்ளுவ நாயனார் "சான்றாண்மை" என்னும் அதிகாரத்தில் அருளிச் செய்து உள்ளார்.

 

     தகுதிகள் அனைத்தும் பெற்ற தலைமை உலகில் கிடைப்பது மிக அரிது. தேவர் உலகத்தும் அது கிடைப்பதில்லை. பொதுவாகப் பலர் தம்முடைய தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால்தலைமைக்கு மட்டும் முந்திக்கொண்டு போட்டி போடுகின்றனர்.

 

     தக்கன் ஒரு வேள்வியினைச் செய்தான். வேள்வியில் இடப்படும் திருவமுதுப் படையல் பொருள்களைப் பெறுவதற்கு தகுதிப்பாடு சிவபரம்பொருளுக்கே உள்ளது. அத்தகைய தலைமையை தக்கன் மதிக்கவில்லை. "நான்" என்னும் ஆணவம் அவனிடத்தில் மிகுந்து நின்றது. அதனால்சிவபரம்பொருளின் தலைமையை ஒதுக்கிவேள்வியைச் செய்யத் தலைப்பட்டான். சிவபரம்பொருளைத் தவிர மற்றவர்க்கு எல்லாம் அழைப்பு விடுத்தான். ஆசிரியர் இருக்கும் வரையில் அடங்கி இருந்துஇல்லாதபோது கொட்டம் அடிக்கும் சிறுபிள்ளைத்தனம் தேவர்களிடமும் இருந்தது. சிவபெருமான் இல்லாத இடத்தில் தமக்கு முன்னிலை வாய்க்கும் என்ற ஆசை இருந்தது. தலைவனை மதிக்காத இடத்திற்குத் தாம் போகலாமா என்னும் ஆராய்ச்சி அறிவு மங்கியது.

 

     அண்ணன் செத்தால் திண்ணை காலி ஆகும் அல்லவாமண்ணில் வாழ்வோர்க்கு இருப்பதைப் போலவே பிரமனுக்கும்திருமாலுக்கும் தலைமை வேட்கை வந்து விட்டது. தலைமை வேட்கை மிகவும் வெறி பிடித்தது. அது எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றது. சதி பிறந்தது. வேள்விக்குச் சிவன் அழைக்கப் பெறவில்லை. பிரமனும் திருமாலும் தலைமைக்குரிய இன்பத்தை அனுபவித்தார்கள். இன்பத்தைத் தூய்த்தலும்மகிழ்தலும் தலைமைக்குரிய இலக்கணமே அல்ல. பிறர் துய்க்கத் தான் மகிழ்வதே தலைமைக்கு உரிய உயர்ந்த பண்பு. தலைமை என்றால் இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது அல்ல. துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, பிறர்க்கு நலம் புரிவதே தலைமைப் பண்பு. 

 

     அமுதம் வேண்டித் தேவர்கள் பாற்கடலைக் கடைய முற்பட்டனர். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருளைப் பெற்றுஅத் தொழிலைச் செய்யவேண்டும் என்னும் பாங்கு தேவர்களிடத்தில் இல்லாமல் போய்விட்டது. ஆசை கண்ணையும்அறிவையும் மறைத்தது.  அலைகடலில் இருந்து ஆலகால விடம் எழுந்தது. தலைமையைத் தேடிப் பற்றிக்கொண்ட நான்முகனும் திருமாலும் நஞ்சினை ஒடுக்கி உலகைக் காப்பாற்ற முடியாமல் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அலறினர். அப்போதுதான் அவர்களுக்குத் தலைவனான சிவனைப் பற்றிய எண்ணமே வந்தது. ஓடி வந்து ஈசனிடம் முறையிட்டனர். அவன் தனக்கு உவமையில்லாத தலைவன் அல்லவாதன்னை நம்பியவர்களைக் காப்பதுதானே தலைவன் கடமை. எனவேயாரும் விரும்பாத நஞ்சை உண்டு எல்லோரையும் காத்து அருள் புரிந்தான். 

 

     இன்றும் பலர் தலைமையை விரும்புகின்றனர். ஆனால் அதற்குரிய தகுதியை முயன்று அடைய முயல்வதில்லை. தலைமைக்கு உரிய தகுதிகள் உடையாரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றனர். இழித்தும் பேசுகின்றனர். அவர்களை எப்படியாவது அகற்றச் சூழ்ச்சியும் புரிகின்றனர். பல நேரங்களில் இந்தச் சூழ்ச்சி வெல்வதுதான் வேதனைக்கு உரிய செய்தி. இதனால் எல்லாம் தலைமை வந்துவிடாது. வந்தாலும் நிலைத்து இருக்காது. தலைமைக்கு உரிய தகுதி உடையாரை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் தலைவர் அல்ல என்று ஆகிவிட மாட்டார்கள். தலைமைதலைமைதான்!

 

     தலைமைக்குரிய பண்புபோகத்தைத் துய்த்தல் அல்ல. புகழில் மயங்கித் திரிதல் அல்ல. ஆன்ற ஆள்வினையே தலைமைக்குரிய தகுதியை நிலைநாட்டும். கொலையே தொழில் எனக் கொண்டுகோட்டை கொத்தளங்கள் கட்டிவாழ்ந்த திரிபுர அரக்கர்களின் செம்மாந்த வாழ்வி நெடுநாளைக்கு நிலைக்கவில்லை.அளவற்ற செல்வத்தாலும்வலிமையினாலும் அரக்கர்கள் கை ஓங்கி நின்றது. தேவர்களும் கூட அவர்களுக்கு ஏவல் செய்யும் திலை உண்டாகியது. அறத்தின் சார்பு இன்மையால்அந்தத் தலைமை தற்காலிகமானது ஆயிற்று. அதுதானே நியதி. மேருமலையை வில்லாகக்கொண்டுமுப்புரங்களை அழித்துமூவுலகையும் காத்தது சிவபரம்பொருள். ஆயினும் தலைமைக் கிறுக்குப் பிடித்த இந்த அமரர்கள் சிவபெருமானை நாள்தோறும் - வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் "இவரா தலைவர்! இல்லைஇல்லை! இவர் தலைவர் அல்ல"என்றெல்லாம் பேசுகின்றனர். இவர்கள் எதைப் பேசினாலென்னஅவன் தனக்கு உவமையில்லாத தலைவனே. இன்றைக்கு உலகியல் நிலையில் கூசில தலைமைப் பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்தலைவர்கள் நிலையும் கூட இப்படித்தான் அமைந்து உள்ளது.

 

     தலைமைப் பண்புகளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தனக்கு உவமையில்லாத் தலைவன் திருவடிகளைப் பணிந்து அவன் இயல்புகளைப் பெறவேண்டும். தகுதியால் வருவதே தலைமை. மற்றபடி இடத்தால்,பொருளால்,வாய்ப்பால்,அதிட்டத்தால்மற்றவர் ஏமாற்றத்தால் வரும் தலைமைசிறந்த தலைமையாகாது. நீடித்த தலைமையும் ஆகாது. சான்றாண்மைக்கு உரிய பண்புகள் பொருந்தி இருந்தால்தலைமைக்கு முயற்சி செய்யலாம். 

 

"கொலைவரையாத கொள்கையர் தங்கள் மதில்மூன்றும்

சிலைவரையாகச் செற்றனரேனும்,சிராப்பள்ளித்

தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்

நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே!"

 

என்னும் தேவாரப் பாடலின் வழிஇந்த அரிய சிந்தனையை நமக்குத் தந்து அருள் புரிகின்றார் திருஞானசம்பந்தர். தேவாதி தேவன் ஆகிய சிவபரம்பொருளின் தன்மையை உணராமல்செத்துச் செத்து பிழைக்கின்ற சிறுதெய்வங்களை வணங்குகின்ற புறச்சமயிகளைப் பார்த்து இவ்வாறு தெரிவிக்கின்றார்.

 

இதன் பொருள் ---

 

     கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கையினர் ஆகிய அவுணர்கள் மும்மதில்களையும் மேருமலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும்,திருச்சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவர் அல்ல என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தைவெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல,நீங்கள் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலாது.

 

     அற்ப அறிவினை உடையோர் தாம் உண்மையாகவே ஒன்றும் அறியாதவர்களாக இருந்தும்தமக்கு உள்ள கர்வத்தினால்எல்லாம் அறிந்தவர்களாகத் தம்மை எண்ணிக் கொள்ளுகின்றார்கள். தலைமைப் பொறுப்புக்கும் எப்படியவாது வந்துவிட வேண்டும் என்று துடிக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்க்கு நல்லறிவு இருக்காது. காரணம் அவர்கள் உள்ளமானது நீலம் ஏற்றப்பட்ட துணியாகி விட்டது. ஒருவனுக்கு நல்லறிவைப் புகட்ட,ஒருவர் சென்று உண்மையை உபதேசித்தாலும்அது அவனுக்குப் பயனைத் தராததோடுசொன்னவர்க்கும் இழுக்கு உண்டாகும். அந்த அற்ப அறிவாளன் தான் உணர்ந்ததையே உண்மை என்று தீர்மானித்து,அதன் வழியே ஒழுகுவான். எனவேபுல்லறிவாளனுக்கு நல்லறிவை எவ்வழியாலும் புகட்ட முடியாது என்று அறியப்படும் என்பதை உணர்த்த,

 

"காணாதான் காட்டுவான் தான் காணான்காணாதான்

கண்டான் ஆம் தான் கண்ட ஆறு".          

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

"ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத

மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க,- மூர்க்கன்தான்

கொண்டதே கொண்டு விடான் ஆகும்,ஆகாதே

உண்டது நீலம் பிறிது".  

 

என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "பழமொழி நானூறு".

 

இதன் பொருள் ---

 

     தான் ஆராய்ந்த உணர்ந்த உயர்ந்த கருத்துக்களையும்உலக ஒழுக்கத்தினையும் உணராத மூர்க்கனுக்கு எந்த ஒரு உறுதிப் பொருளையும் சொல்லவேண்டாம். மூர்க்கன் ஆனவன்தான் கொண்டதையே பற்றிக் கொண்டுவிடாதவனாக இருப்பான்.

 

     நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல)மூர்க்கனும் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு இருப்பான்.

 

      மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார். ஆராய்ந்த கருத்தும்,ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோர் ஆவர். பிறர் கூறுகின்றகருத்தின் உண்மையையும் தம் கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டும். இதுஉண்மையை ஆராயும் உணர்வு,அறிவுடையோர்க்கு இன்றியமையாதது. நீலம் உண்ட பொருள் தன்னை அடுத்த பொருளையும் நீலமாக்குதல் போலமூர்க்கன் தான்கொண்ட தவறுடைய அப்பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவான்.

 

     "மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா" என்பது பழமொழி.

 

 

இறைவன் பெற்ற வெற்றி

 


இறைவன் பெற்ற வெற்றி

-----

 

     இறைவன் போற்றிப் புகழ்தற்கு உரியவன். ஏன் அவன் இறைவன் என்ற காரணத்திற்காகவாஅவன் பலவற்றைத் தந்தருளுபவன் என்பதினாலாஅழித்து விடுவான் என்ற அச்சத்தினாலாஅச்சத்தில் தொடங்கும் வழிபாடுஉண்மை வழிபாடு அல்ல. பின் ஏன் இறைவனை வழிபடவேண்டும். நம்மை அழியாத ஆனந்த நிலையில் வைத்து அருள்வான் என்பதற்காகவே இறைவனை வழிபாடு செய்யவேண்டும். அத்தகு நிலையை நமக்கு அருள,அவன் நம்மை வெற்றிகொள்ள வேண்டும்.

 

     இறைவனுடைய வெற்றியைத்தான் பாடிப் பரவுகின்றோம். "போற்றி சயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன்அவன் பெற்ற வெற்றிக்காகவே வாழ்த்தப் பெறுகிறான். யாரை வெற்றி கொண்டான்வெற்றி கொள்ளப்பட்டவன் பகைவனாவெற்றி கொள்ளவேண்டும் என்றால்பகைவன் ஒருவன் வேண்டுமே! இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்! குணம் குறி இல்லாதவன்! அப்படியானால் அவனுக்கு ஏது பகைவன்?

 

     இறைவனுக்குப் பகைவன் இல்லை என்றால் புராணங்கள் கூறுவன எல்லாம் பொய்யாஐம்முகச் சிவனார் முப்புரம் எரித்த வரலாறு வெகுவாகப் போற்றபடுகின்றதேஅது பொய்யா?அறுமுகச் சிவனார் சூரபதுமனுடன் போர் புரிந்தது போற்றப்படுகின்றதேஇதுவும் பொய்யாசூரபதுமன் முருகப் பெருமானோடு எதிர்த்துப் போர் புரிந்தவன் தானே. அரக்கர்கள் என்று சொல்லப்படுவோர் எல்லாம் இறைவனோடு மலைந்தவர்கள் தானே.

 

     புராணங்களைப் படித்து ஒரு புறம் இருக்கஅவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை உணர்ந்து கொள்வது ஒரு அற்புதமான கலை ஆகும்.புராணங்களுக்கு வெறும் சொற்பொருள் காண்பது கூடாது. உய்த்து உணர்தலுக்கு உரிய செய்திகள் நிரம்ப உண்டு. அரக்கர் அரனாருக்குப் பகைவரில்லை! சூரபதுமன் முருகனுக்குப் பகைவன் இல்லை.

 

     சூரபதுமனுக்குப் பகையாக இருந்து அவனுடைய ஆக்கத்தைக் கெடுத்ததுஅவனுடைய அறிவை மயக்கியது அவனிடத்தில் இருந்த ஆணவம் என்னும் அறியாமையே ஆகும். அது இருக்கும் வரையில் அவன் என்னயாருமே ஈடேற முடியாது. அந்த ஆணவத்தை ஒழித்துக் கொள்ள உயிர்களால் முடியுமாஎன்றால்முடியாது என்றே கொள்ளவேண்டும். உயிரோடு ஒன்றிப் பிறந்த ஆணவமானதுஆணவ வல்லிருளானதுஇறையருள் என்னும் பூரணச் சோதியால் மட்டுமே நீங்கும்.

 

     இறைவனை அடைய எண்ணுகின்றோர்க்கு ஆணவம் பகை என்றால்அது இறைவனுக்கும் பகையே. தனக்குப் பகையாகஉடன் பிறந்தே கொல்லும் பகையாக விளங்கும் அறியாமையின் மேலீட்டால் அரக்கர்கள் மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளவில்லை. ஆணவச் சேர்க்கையால்அவர்களிடத்தில்அதிகாரச் செருக்கு மிகுந்து விளங்கியது. மதிக்க வேண்டிவர்களையும் அவமதித்துஅவர்களையும் கூட ஏவல் கொள்ளத் தூண்டுவது ஆணவம் ஆகும். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டான். இராவணன்தனது நாட்டின் மீது சூரியனே இயங்கக் கூடாது என்னும் அளவுக்கு ஆணவத்தில் மிகுந்து இருந்தான்.ஆணவம்தாயில் சிறந்த இறைவனைக் கூட எதிர்க்கும்படியாக அரக்கர்களைத் தூண்டுகிறதுஅதனால் அவர்களிடத்தில் அமைதிக் குணம் இல்லாமல்,முரட்டுத்தனம் சேர்கிறது.

 

     இறைவன் எழுந்தருளி உள்ள திருக்கயிலையைத் தூக்க முயல்கிறான் இராவணன். ஏன்?தன் வலிமையைக் காட்ட! இராவணன் வலிமையுடையவன் தான்! ஆனால் அவன் வலிமைக்கும் எல்லை உண்டு. இறைவனின் வலிமை எல்லை இல்லாதது. வலிமையின் எல்லை கடந்து விளங்கும் இறைவனோடு மோதுகிறான் இராவணன். இராவணனா மோதினான். அவனது ஆணவம் அப்படிச் செய்ய வைத்தது. தீய பண்புகள் அவனிடத்தில் மிகுந்து விளங்கின. 

 

     இராவணன் தவத்தில் சிறந்தவன்நாள்தோறும் சிவபூசனை செய்பவன். இராவணன் மேலது நீறு” என்று திருஞானசம்பந்தரால் பாராட்டப் பெறும் அளவுக்கு உயர்ந்தவன். "முக்கோடி வாழ்நாளும்முயன்றுடையபெருந் தவமும்முதல்வன்முன்நாள் எக் கோடியாராலும் வெலப்படாய்என்ற வரத்தினைப் பெற்ற பிறகு அவனிடத்தில் செருக்கு மிகுந்து நின்றது. இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலையையே தனது வல்லமையால் பேர்த்து எறிய முற்பட்டான்.

 

     இறைவன் எழுந்தருளி இருக்கும் மலையை தூரத்தில் கண்டதுமே கைகூப்பி வணங்கிஅண்மையில் வந்ததும்,வலம் வந்து தொழுதல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது பாவம். இராவணன்சிவபெருமான் எழுந்தருளி உள்ள திருக்கயிலையை வணங்கவில்லை. பெருமான் இருக்கின்ற மலையாயிற்றே என்று அதன் பெருமையை உணர்ந்து வலமாகவும் வரவில்லை.

 

"கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்

இருந்த மலை என்று இறைஞ்சாதுஅன்று எடுக்கல் உற்றான்

பெரும்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற,

இருந்து அருளிச் செய்ததேமற்றுச் செய்திலன் எம் இறையே."  --- அப்பர்.

 

வள்ளல் இருந்த மலைஅதனை 

     வலம் செய்தல் வாய்மை என

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து

     அன்று எடுத்தோன் உரம் நெரிய

மெள்ள விரல் வைத்து,என் உள்ளம் 

     கொண்டார் மேவும் இடம் போலும்,

துள்ஒலி வெள்ளத்தினை மேல் 

     மிதந்த தோணிபுரம் தானே.   --- திருஞானசம்பந்தர்.

 

 

     பெற வேண்டியவற்றை எல்லாம் பெற்று விளங்கும் போது பெறும் எளிமையே எளிமைப் பண்பு. இராவணன்இயற்கையில் நல்லவன்.ஆனால் அவனிடத்தில் தருக்கு வந்து சேர்ந்து விட்டது. வந்தடைந்த தருக்கு இராவணனுக்கு நலம் தருவதற்கு வரவில்லை. மரத்தோடு ஒட்டி வளர்ந்து மரத்திலேயே பின்னிக் கிடந்துமரம் போலவே விளங்கினாலும்புல்லுருவி மரத்துக்குப் பகையே. புல்லுருவி வளர்ந்த மரம் வளம் குன்றும்வலிமை குன்றும்.பூக்காது - காய்க்காது. புல்லுருவிஒரு "பூர்ஷ்வா". அதாவதுமரம் உழைத்து எடுத்துக்கொண்டு வரும் உணவை இடைமறித்துப் பறித்துக் கொள்வது அது. அதுபோல அறிவின் பயனை உயிர்க்குச் சேரவிடாமல் ஆணவம் தடுத்துப் பறிக்கும். அதனால் ஆணவத்தை உடையவன் செய்வன அறிந்து செய்யமாட்டான்.

 

     இராவணனை இறைவன் வெற்றி கொள்ளவில்லை. அவனுக்கு இருந்த ஆணவத்தை வெற்றி கொண்டார். முருகப் பெருமான் சூரபதுமனை வெற்றி கொள்ளவில்லை. அவனிடத்தில் குடிகொண்டு இருந்து ஆணவத்தை வெற்றி கொண்டுமரமாக உணர்ச்சி இன்றி இருந்த அவனைஇருகூறாக்கிசேவலும் மயிலும் ஆக்கி ஆட்கொண்டார். இன்று நாம் சேவல் வடிவிலும்மயில் வடிவிலும் வணங்குவதுஆணவம் நீங்கப் பெற்று இறைவனால் ஆட்கள்ளப் பெற்ற சூரபதுமனைத் தான். நூசபதுன் பெற்ற வெற்றியால்சூரபதுமனுக்கே பயன். அதுவே எல்லோருக்கும் பயன் தரும் வெற்றியாக ஆனது. இறைவன் பெறுகின்ற வெற்றி அப்படிப்பட்டதே ஆகும். அதனால்,இறைவனுக்கு வெற்றி உண்டாகட்டும் என்று, "செயசெய" என்று வாழ்த்துகின்றோம். இறைவன் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றோம். 

 

     முப்பரங்களைச் சிவபரம்பொருள் எரித்தார் என்று புராணம் கூறும். அதை அப்படியே கொள்வது மூடத்தனம் என்றார் திருமூல நாயனார். அந்த வரலாற்றின் உட்பொருளை உய்த்து உணர்ந்து கொள்ளாமல்வரலாற்றை மட்டுமே பேசுபவர்களை மூடர் என்றார். "முப்புரமாவது மும்மல காரியம்" இறைவனால் அழிக்கப்பட்ட முப்புரம் என்றதுஉயிரைப் பிணித்துள்ள ஆணவம்கன்மம்மாயை என்னும் மும்மலங்களின் காரியமாகிய செயலினையே. இறைவன் அத்தகைய புரங்களை அழித்த நுட்பத்தை உள்ளவாறு அறிய வல்லவர் யார்என்ற வினாவினை எழுப்பிநம்மை உய்த்து உணர வைக்கின்றார் திருமூல நாயானர்.

 

     எனவேஇறைவன் பெற்ற வெற்றிஉயிர்கள் பெற்ற வெற்றியே ஆகும் என்பதை உய்த்து உணர்தல் வேண்டும்.

 

 

 

 

 

எது திருத்தலம்?

 


எது திருத்தலம்?

-----

 

     "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. திருக்கோயில் இல்லாத ஊர் திரு இல்லாத ஊர் என்பதால், "திருக்கோயில் இல்லாத திரு இல் ஊர்" என்றார் அப்பர் பெருமான். திருக்கோயிலும் அதைச் சார்ந்த நிலைகளையும் பின்வருமாறு காட்டிஅவைகள் இல்லாவிட்டால்அந்த ஊர்ஓர் ஊரே அல்ல. அது பெருங்காடு ஆகும் என்கின்றார்.

 

"திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்;

            திருவெண்ணீறு அணியாத திருஇல் ஊரும்;

பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும்;

            பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்;

விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்;

            விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்;

அருப்போடு மலர்பறித்துஇட்டு உண்ணா ஊரும்;

            அவை எல்லாம் ஊர்அல்ல அடவி காடே.

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமானது திருக்கோயில் இல்லாததால் நன்மை இல்லாத ஊரும்திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மை இல்லாத ஊரும்உடம்பு வணங்கிப் பத்தி மிகுதியால் மக்கள் பாடாத (மக்கள் வாழ்கின்ற) ஊரும்அழகான பலதளிகள் இல்லாத ஊரும்விருப்புடன் வெண்ணிற வலம்புரிச் சங்கினை ஊதாத ஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லாத ஊரும்மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையில் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணுதல் முறையாய் இருக்க,அங்ஙனம் உண்ணாத (மக்கள் வாழுகின்ற) ஊரும்ஆகிய அவை எல்லாம் ஊரல்லஅடவியாகிய பெருங்காடே.

 

     இத் திருத்தாண்டகப் பாடல்மக்கள் வாழுகின்ற ஊருக்கு உரிய இயல்புகளைப் பற்றிக் கூறி,அங்கு வாழும் நன்மக்களுக்கு உரிய ஒழுக்க நெறியை வகுத்து அருளியது. 

 

     "திரு" என்பது பொதுவாகச் செல்வம் என்று கூறப்பட்டாலும்,பொருட்செல்வமானது கீழ்மக்களிடத்தும் உள்ளது என்னும் பொருளில், "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" எனத் திருவள்ளுவ நாயானார் அருளியபடியால்நன்மக்களிடத்துநல்ல வழியில் வந்த செல்வத்தையே "திரு" என்ற சொல் குறிக்கும் என்று கொள்ளுதல் வேண்டும். "திரு" என்பது உலகியல் இன்பத்திற்கு உரிய பொருட்செல்வத்தையும்அருளியல் இன்பத்திற்கு உரிய அருட்செல்வத்தையும் குறிக்கும். எனவேநன்மக்கள் வாழாத ஊர் "திரு இல் ஊர்" என்றார். 

 

     நன்மக்கள் வாழுகின்ற ஊர் "திருத்தலம்" எனப் பாராட்டப் பெற்றுமக்களால் வணங்கப் பெறுவது."திருத்தலம்" என்பது சிறந்த பெயர்! ஊர்கள் எல்லாம் திருத்தலங்கள் ஆகா. திருக்கோயில் இருக்கும் இடம் எல்லாம் திருத்தலம் ஆகி விடுவதில்லை.  திருவருள் துணையுடன் வளர்ந்த மனிதர்கள் படைப்பதுவாழ்வதுதிருத்தலம். 

 

     திருத்தலங்களை வழிபட்டுப் பாடிய அருளாளர்கள் எல்லாம்அங்கு வாழும் மக்களின் இயல்பினை எடுத்துக் காட்டத் தவறியது இல்லை. பொய்ம்மை என்பது புண்ணியத்திற்கு மாறான பாவத்திற்கு உரியது. பொய்ம்மை உயிரின் வளர்ச்சிக்கு ஊறு செய்வது.பொய்ம்மைஉயிர்க்கு ஊதியம் சேர்ப்பதற்குத் தடைஆக இருப்பது. உயிர்ஊதியமற்றுப் போனால்அதன்உள்ளீடு இல்லாமல் போகும். உயிரின் உள்ளீடாகிய அன்போடு கூடிய பத்தி முதலிய இனிய பண்புகள் இல்லாதவர்கள் பொய்ம்மையே பேசுவர்.பொய்ம்மையே செய்வர்.  பொய்ம்மை செய்யாதவர் வாழும் பதியே திருத்தலமாகும்.

 

     பொய்ம்மையின் விளைவு வஞ்சகம்வஞ்சகத்து இன்னொரு பெயர் சலம் செய்தல். சலம் செய்தால் சஞ்சலமே மிஞ்சும். சலம் என்றால் என்னநல்லது போலக் காட்டித் தீமை செய்தல். அன்புடன் பழகுவது போல நடித்துப் பகைமையை வளர்த்தல். இதுவே வஞ்சகம். உள்ளம் ஒன்று வைத்துப் புறம்ப் ஒன்று பேசுதல். விரைந்து செய்வார் போலக் காட்டி,ஏதும் செய்யாது இருத்தல் சலம். வார்த்தைகளில் காட்டும் அக்கறை வாழ்க்கையில் இருக்காது. இத்தகையதோர் மனித உருவில் உலாவினாலும் இவர்கள் மனிதர்கள் அல்லர். இத்தகையோர் வாழும் ஊர்வளர்ச்சி குன்றி இருக்கும். மனவளமும் குன்றியே இருக்கும்.

 

     யாக்கை ஆக்கத்தைத் தருவதாக மாறினால், "ஆக்கை" எனப்படும். உயிருக்கு உரிய ஆக்கமாகிய வீடுபேற்றைக் கருதாமல்யாக்கைக்கே இரைதேடி அலைபவர்கள் இந்தப் பொய்யர்கள். எப்படியாவது பிழைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள். இவர்களுக்கு மெய்யறிவில் ஆர்வம் இருக்காது. எதையும் பேசுவர். எதையும் செய்வர். இவர்களுக்கு நினைத்ததே விதி. இவர்களைத் திருவள்ளுவர் கயவர் என்பார். கொல்லாமை பற்றிக் கூறவந்த திருவள்ளுவ நாயனார்,கயவரைக் கொன்றால்தான் பயன் என்றால் கொல்லலாம் என்னும் பொருளில், "கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல்பைங்கூழ் களை கட்டதனோடு நேர்" என்று அருளினார்.இத்தகைய கயவரை "நீதர்" என்று குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர். நீதித் தன்மையிலாதவர் நீதர். இவர்கள் வாழும் ஊரும் சுடுகாடாகலாமே தவிர,ஊர் கூட ஆகாது. ஊர் என்றே மதிக்கப்படாத ஒன்று எப்படித் திருத்தலம் ஆகும்கோயில் உள்ளதாலாஅல்லகோயிலாகத் தமது உள்ளத்தை ஆக்கிக் கொண்ட தூயர்கள் உள்ளதால்.

 

     திருத்தலம் என்றால்அங்குள்ள திருக்கோயிலை மட்டுமே குறிப்பது அல்ல. திருக்கோயிலும் திருக்கோயிலைச் சூழந்து தக்காரும் வாழும் ஊரே திருத்தலம். தக்கவர்கள் "தக்கார்" எனப்படுவர். எனவேதான்திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ளவர்க்கு, "தக்கார்" என்று பெயர் வழங்கப்பட்டது. தகுதி உடையவர் வாழும் பதியே திருத்தலம். அவர்களால் மட்டுமே தனக்கு உவமை இல்லாத தலைவன் ஆகிய இறைவனை வழிபட முடியும். வழிபடுவோர்க்கு வழி காட்ட முடியும். சிந்தனை இறைநலத்தில் தோய்ந்தால் புலன்கள் அழுக்கினின்றும் அகன்று தூய்மை பெறும். தூய்மையான உள்ளத்தைத் திருக்கோயிலாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்வான். தூய்மையான மனத்தவர் பாவிக்கின்ற வடிவில் இறைவன் எழுந்தருள்வான். அவர்களைத் தேடிச் சென்று அங்கேயே குடியிருப்பான் இறைவன் என்பதை, "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடிவிளையாடிஅங்ஙனே நின்று வாழும் மயல் வீரனே" என்னும் அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ் வரிகளால் அறிந்துகொள்ளலாம். எனவேமனமாசு இல்லாத அடியவர்கள் வாழ்வதே ஊர். அந்த ஊரைத் தேடி இறைவன் செல்வான். அல்லாதவை எல்லாம் ஊர் அல்ல. காடுதான்.

 

     திருத் தலைச்சங்காடு என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தப் பெருமான்அத் திருத்தலத்து இறைவரைப் பாடிய திருப்பதிகத்தில்அங்கு வாழ்ந்திருந்த தகுதி வாய்ந்த பெருமக்களைச் சிறப்பித்துப் பாடினார்.

 

"நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்றுஐந்து

புலநீர்மை புறம்கண்டார்பொக்கம் செய்யார்போற்று ஓவார்,                                                    

சல நீதர் அல்லாதார்தக்கோர்வாழும் தலைச்சங்கை

நலநீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே".

 

இதன் பொருள் ---

 

     நிலம்நீர்ஆகாயம்நெருப்புகாற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று,ஐம்புலன்களை வென்று நிற்பவர்களும்,பொய்யில்லாத உள்ளத்தை உடையவர்களும்,வழிபாட்டை ஓவாமல் செய்பவர்களும்,வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாதவர்களும் ஆகிய தக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

 

     இப்பாடலில் திருத் தலைச்சங்கை என்னும் திருத்தலத்தில் வாழுகின்ற அடியவர்களின் சிறப்புக் கூறப்பட்டது. அவர்கள் ஐந்து புலன்களையும் வென்றவர்கள். உள்ளதிலும்செயலிலும் பொய்ம்மை இல்லாதவர்கள்,இறைவழிபாட்டில் என்றும் நிற்பவர்கள்உள்ளத்திலும் செயலிலும் வஞ்சகத் தன்மை இல்லாதவர்கள் ஆகிய தக்கார் என்றார் திருஞானசம்பந்தர். இப்படிபட்ட மெய்யடியார்கள் வாழுகின்ற ஊரிலே இறைவன் நிச்சயம் எழுந்தருளி இருப்பான்.

 

     திருஒமாம்புலியூர் என்னும் திருத்தலத்திற்கு வந்தார் திருஞானசம்பந்தர். மண்ணுலகில் உள்ளவர்களும்வானுலகை ஆள்பவர்களும்பாதாள உலகத்தினர் ஆகிய மூவுலகத்தவர்களும் அனுபவித்துக் கொண்டிருந்த துயரத்திற்குக் காரணமான அரக்கர்கள் அழிந்து ஒழியவேண்டிதிருமாலுக்குச் சக்கரப்படையை அளித்தவர் ஆகிய சிவபரம்பொருள் இனிதாக வீற்றிருக்கின்ற இடம் எது தெரியுமாஎன்று ஒரு வினாவை எழுப்பிஅது தீய செயல்களின் வழியே பொருள்களைச் சேர்ப்பதைச் செய்யாத ஒழுக்க சீலர்களும்பெரும்புகழினைத் தருகின்ற செயல்களைச் செய்பவர்களும் ஆகிய சான்றோர்கள் வாழுகின்ற ஓமாம்புலியூர் என்று அத் திருத்தலத்தை நமக்குக் காட்டுகின்றார்.

 

"நிலத்தவர்வானம் ஆள்பவர்கீழோர்,

            துயர்கெடநெடியமாற்கு அருளால்

அலைத்தவல் அசுரர் ஆசுஅறஆழி

            அளித்தவன் உறைவிடம் வினவில்,

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

            தன்மையார்நன்மையால் மிக்க

உலப்புஇல்பல் புகழார் ஓமமாம் புலியூர்

            உடையவர் வடதளி அதுவே".

 

     உலகில் வாழப் பொருள் வேண்டியதுதான். அறத்தைச் செய்துஅருளைப் பெற்றுஆண்டவன் அடிநிழல் அடைந்து எக்காலமும் இன்புற்று இருப்பதற்குப் பொருள் வேண்டியதுதான். பொருளுக்காகவே வாழ்வது ஒன்று. அறவழியில் பொருளை ஈட்டிதானும் துய்த்துஅதனை அறவழியில் செலவழித்துபோகின்ற வழிக்குப் புண்ணியமாகச் சேர்த்துக் கொள்வதும் ஒன்று. பின்னதைச் செய்பவர்கள் தக்கார். அவர்களை உள்ளத்தை மட்டுமல்லாதுஅவர்கள் விரும்பி வழிபடும் திருக்கோயில்களைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளி இருப்பான். அப்படிப்பட்ட ஊர் திருத்தலம் ஆகின்றது. கோயில் இருப்பதாலேயே ஓர் ஊர் திருத்தலம் ஆகிவிடுவது இல்லை.

 

     தீய வழியில் பொருளை ஈட்டிப் பாதுகாத்து வைத்தாலும்அது எப்படியாவது அழிந்துபோகும்அது பச்சை மண்ணால் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிமூடி வைத்ததைப் போன்றது என்று காட்ட,

 

"சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்,பசுமண்

கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று"

 

என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். திருக்குறளின் வழி அருள்வாழ்க்கையை வாழுகின்ற அடியவர்கள் வாழுகின்ற ஊர் திருத்தலம் ஆகும்.           

 

     பச்சை மண்ணால் ஆன பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால்நீரும் வீணாகும். பாத்திரமும் கரைந்து அழிந்து போகும். அதுபோலதீய செயல்களால் வந்த பொருளைப் பாதுகாத்தலும் முடியாது. பழியும் வந்து சேரும் என்பதை உணர்ந்து நன்னெறியில் ஒழுகுபவர்கள் தக்கார் ஆவர். தக்கவர் ஆக ஒழுகுபவர்கள் தக்கார் எனப்படுவர்.

 

 

 

 

 

 

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...