ஆத்திசூடி --- 12. ஔவியம் பேசேல்

 

 

12. ஒளவியம் பேசேல்.

 

பதவுரை --- ஒளவியம் --- அழுக்காறு, பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.

 

(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

 

     பொறாமை அல்லது அழுக்காறு, மனம் கோணுவதால் உண்டாகும். மனம் கோணுதல் பாவம். மனக் கோணல் காரணமாகப் பேசுதல், பழியையும், பாவத்தையும் விளைப்பதாக முடியும். ஆதலால், யாரிடத்தும் மனத்தால் பொறாமை கொண்டு, வாக்கால் தகாத மொழிகளைப் பேசாதே என்றார்.

 

     மேலே, ஔவைப் பாட்டியார் அருளிய வாக்கின்படிக்கு, ஐயம் இடுவாரும், ஒப்புரவு ஒழுகுவாரும், ஓதுவது ஒழியாதாரும் ஆக உலகில் உள்ள பல்லோரும் ஆக்கம் பெற்று விளங்குவர். அவரது ஆக்கம் கண்டு உள்ளத்தில் பொறாமை அல்லது அழுக்காறு கொள்ளுதல் கூடாது. காரணம், உள்ளத்தல் பொறாமை கொண்டவர் யாரும் வளமாக வாழ்ந்தது இல்லை.

 

இதனை,

 

"அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்"

 

(அழுக்காறு அல்லது பொறாமை கொண்டு வாழ்வு பெருகியவரும் இல்லை. அழுக்காறு இல்லாத நல்லோர் பெருவாழ்வு பெறுவதில் இருந்து நீங்கியவரும் இல்லை)

 

என்னும் திருக்குறளால் திருவள்ளுவ நாயனார் காட்டினார்.

 

மேலும்,

 

"அழுக்காறு என ஒரு பாவி, திருச்செற்றுத்

தீயுழி உயத்து விடும்"

 

(பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒப்பற்ற பாவியானவன், தன்னை உடையவனது ஆக்கத்தைக் கெடுத்து, அவனைத் தீய வழியில் இயக்கிவிடும்)

 

என்றும் காட்டி, நெறிப்படுத்தினார் நாயனார்.

 

     மேலே, "ஈவது விலக்கேல்" என்று கூறி, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கொண்டு, உள்ளத்தில் பொறாமை கொண்டு, கொடுப்பதை விலக்கித் தீங்கு செய்யாதே, உனக்கும் தீங்கினைத் தேடிக் கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாட்டியார், இங்கே, அந்தப் பொறாமை காரணமாகத் தீமை தரும் சொற்களைப் பேசாதே என்று அறிவுறுத்தும் முகத்தான், "ஔவியம் பேசேல்" என்றார்.

 

     "ஔவியம் பேசினால்" என்ன? என்று ஆத்திசூடியினைப் பயிலும் சிறுகுழந்தைகளுக்கு ஐயம் உண்டாகும். வயதானவர்களில் கூட, சிறுபிள்ளைத்தனம் மாறாத சிலருக்கும், தனக்கே அறிவு மிக உள்ளதாக எண்ணும் சிலருக்கும் இவ்வித ஐயம் தோன்றுதல் கூடும்.

 

     ஔவைப் பிராட்டியார் தாம் அருளிய "கொன்றைவேந்தன்" என்னும் நூலில் இதற்கு,

 

"ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு"

 

என்று விடை பகருகின்றார்.

 

இதன் பொருள் ---

 

     ஒளவியம் --- பொறாமை வார்த்தைகளை, பேசுதல் --- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு --- (அவன்) செல்வத்திற்கு, அழிவு --- கேட்டைத் தருவதாகும்.

 

     ஆக்கம் என்பது உலகியல் செல்வமாகிய பொருளைக் குறிக்கும். அருளியல் செல்வம் ஆகிய மோட்சம் அல்லது வீடுபேற்றைக் குறிக்கும்.

 

"ஊக்கமும் உணர்ச்சியும், ஒளிதரும் ஆக்கையும்,

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி"

 

என்று வள்ளல்பெருமான் அருளியது காண, "ஆக்கம்" என்பது உலகியல் நலத்தையும், அருளியல் நலத்தையும் குறிக்கும் என்பது தெளிவாகும்.

 

     பொறாமை காரணமாகத் தகாத வார்த்தைகளைப் பேசுவது, உலகியல் நலத்தை அழித்து, அருளியல் நலத்தையும் கெடுக்கும் என்பது கருத்து.

 

     பொறாமை என்பது அறவாழ்வினைக் கெடுக்கும் என்பதால், பிறர் பொருளை வவ்வக் கருதுல் கூடாது. மாறாக, உண்ணுகின்றபோது, சிறிதாயினும் பிர்க்குக் கொடுத்து உதவுங்கள் என்று நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளுமாறு காண்க.

 

அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்;

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்;

செவ்வியன் ஆகி, சிறந்து உண்ணும் போது ஒரு

தவ்வி கொடுமின் தலைப்பட்ட போதே.

 

இதன் பொருள் ---

 

     வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்டது என்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கவர எண்ணாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்நெறியில் நின்று ஒழுகி, நீங்கள் உண்ணும்போது ஒரு சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

 

     பொறாமை காரணமாக உண்டாகும் சொற்களை ஒருவன் பேசாமல் இருப்பது நல்லது என்கின்றது, "இனியவை நாற்பது" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே;

செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;

கவ்வித்தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று

வவ்வார் விடுதல் இனிது.

 

இதன் பதவுரை ---

 

     அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது --- மனக்கோட்டம் செய்து பொறாமைச் சொற்களைச் சொல்லாமை மிக இனிது; செவ்வியனாய் சினம் செற்று கடிந்து வாழ்வு இனிது --- மனக்கோட்டம் இல்லாதவனாய் கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது;  கவ்விக்கொண்டு தாம் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, அதற்கேற்ற சமயம் பார்த்து அபகரியரதவராய், அதனை மறந்து விடுதல் இனிது.

 

     பொறாமை உள்ளவன் கெட்டுப் போவான் என்பதற்குப் பிரமாணம்....

 

மாங்கனி வாயில் கவ்வி

     மரத்திடை இருக்கும் மந்தி

பாங்கர் நீர் நிழலை வேறோர்

         பழம் உணும் குரங்கு என்று எண்ணித்

தாங்க அரும் அவாவில் தாவிச்

         சலத்திடை இறந்தது ஒப்ப,

நீங்க அரும் பொறாமை உள்ளோர்

         நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே.     --- நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.

 

     பொறாமை உள்ளவன் தனது வல்லமையாலேயே தனக்குச் சுகமாகத் தோன்றுவதைச் செய்து, துக்கத்தை அடைவான் என்பதற்குப் பிராமணம்......

 

தாரணியில் எவரேனும் துயர் உறில், ன்

          தலையின் முடி தரித்தது ஒப்பாம்,

சீரணியுஞ் செல்வம் அவர் படைத்திடில் தன்

          தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,

காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்

          தன்வலியால் கணத்துக்கு உள்ளே

பூரணமா ஆக்கிடுவோன் பொறாமை உளோன்

          அன்றி, வர் புவியின் கண்ணே.     ---  நீதிநூல்.

        

இதன் பொருள் ---

 

     பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு, உலகில் யார் துன்புற்றாலும், தமத் தலையில் முடி சூடியது ஒப்பாக மகிழ்ச்சி உண்டாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்ததற்கு ஒப்பாக எண்ணித் துக்கம் அடைவர். இப்படி ஒரு காரணமும் இல்லாமல், நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வல்லமை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

 

     பொறாமை கொள்வதால் மட்டுமே, ஒருவனிடத்தில் உள்ள பொருள், பொறாமைப் படுபவனுக்கு வந்து சேராது (பாவமே வந்து சேரும்) என்பதற்குப் பிரமாணம்.

 

ஆண்டு எலாம்பிறர் ஆக்கம் நோக்கியே

மீண்டு மீண்டு நெட்டுயிர்ப்பு வீங்கினும்

தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கைமிசை

ஈண்டுச் சேருமோ? இதயமே! சொலாய்.   ---  நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

     ஆண்டு முழுவதும் பிறர் வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டு வயிறு பொருமினாலும், அவ்வாழ்வு அவரை விட்டு விலகி, உனது கைக்கு வந்து சேராது; நெஞ்சமே இதைக் கருதிப்பார்.

 

         ஆக்கம் --- செல்வம்; வாழ்வு. நெட்டுயிர்ப்பு --- பெருமூச்சு. வீங்கினும் --- பொருமினாலும்.

 

     உள்ளத்தில் பொறாமை என்னும் தீக்குணம் இல்லாதவர்கள் போற்றி வணங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்று வள்ளல்பெருமான் பாடுகின்றார்...

 

ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்தபேர்,

அவ்இயல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி.

 

     ஔவியம் என்பது உயிருக்கு உள்ள உட்பகைகளுள் ஒன்றான மாச்சரியத்தைக் குறிக்கும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறும் மக்களுக்கு உள்ள உட்பகை ஆகும். வெளிப்பகையை விட உட்பகை மிகவும் கொடியது. வெளிப்பகை வெளிப்படையாகத் தெரியும். உட்பகை அதுபோல் தெரியாது. உடன் இருந்தே கொல்லும் தன்மையை உடையது. வெளிப்படை பகிரங்க விரோதி என்றால், உட்பகை, அந்தரங்க விரோதி ஆகும்.

 

காமம் --- அவா, ஆசை.

குரோதம் --- கோபம், வெறுப்பு.

மோகம் --- பேராசை, பேரவா.

மதம் --- செருக்கு, ஆணவம்.

மாச்சரியம் --- பகைமை உணர்வு, செற்றம், பொறாமை.

 

இவற்றுள் பொறாமை என்பது பெருங்கேட்டை விளைக்கும் என்பதால், "அழுக்காறாமை" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருக்குறளில் வைத்து அருளினார் நாயனார்.


மெய்யினைப் பொய் என்பவனே பேய்

 

 

மெய்யைப் பொய் என்பவனே பேய்

----

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "உலகத்து உயர்ந்தோர் பலரும் உண்டு என்று சொல்லுவதை, தனது புல்லறிவால் இல்லை என்று சொல்லுபவன், மனிதன் என்று நினைக்கப் படாமல், பூமியில் கண்ணால் காணப்படுகின்ற பேய் என்று நினைக்கப்படுவான்" என்கின்றார் நாயனார்.

 

     "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" என்பது கொண்டு, உலகத்து உயர்ந்தோரைக் கொள்ளப்பட்டது.

 

     கடவுள் உண்டு என்றும், மறுபிறப்பு உண்டு என்றும், நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும், அவற்றின் பயன்களும் உண்டு என்றும் உயர்ந்து ஞானியர் கூறுவதை மனத்துள் கொள்ளாது, தனது அறியாமையால் தான் எண்ணிய ஒன்றையே வலியுறுத்திக் கொள்பவன், தான் கெடுவது மாத்திரம் அல்லமால், உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஒழுக்கத்தில் நின்று உய்யலாம் என்று எண்ணுபவரையும் கெடுப்பான். இத்தகைய மக்களை, மக்கள் வடிவில் காணப்படுகின்ற பேய் என்று நாயனார் காட்டினார்.

 

     மக்கள் உடம்பில் தோன்றி, தனது உடம்பை வெளிக்காட்டாது மறைந்து நின்கின்ற பேயைப் போல, இந்தப் புல்லறிவாளன், உயர்ந்தோர் கூறும் ஒழுக்கத்தில் நிற்பவனைப் போல் இருந்துகொண்டு, கடவுள், மறுபிறப்பு, இருவினைப் பயன்கள் ஆகியவற்றை மறுத்துப் பேசுகின்றான். உருவத்தால் மனிதனாகவும், உள்ளத்தால் பேயாகவும் இருக்கின்ற இவனைப் பேயாகவே கருதவேண்டும்.

 

     இறைபரம்பொருளுக்கு ஒரு பெயரோ, ஒரு உருவோ இல்லை என்பது அருளாளர்கள் எல்லோரும் அறிவித்த உண்மை. கடவுள் அறிவுப் பொருள். ஆற்றல் நிறைந்தது. கருணை வடிவானது. "ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்பது திருவாசகம். யார் யார் எந்த எந்த வடிவில் நினைக்கின்றார்களோ, அந்த அந்த வடிவத்தை மேற்கொள்ளும் அளப்பரிய ஆற்றல் நிறைந்தது.

 

     ஆற்றலாக விளங்குவதை, "சத்தி" என்றும், ஆற்றலுக்கு இருப்பிடமாக விளங்குவதை "சிவம்" என்றும் கொள்கின்றோம். சத்தி என்பது இயங்கு ஆற்றல் (KINETIC ENERGY), சிவம் என்பது இயக்கு ஆற்றல் (POTENTIEL ENERGY).

 

     கண்ணால் காணப் படாத மின்சாரமானது, நாம் கைக்கொள்ளும் கருவிகளுக்கு ஏற்ப வந்து பயன் தருதல் போல, இயற்கை வடிவில் தானாகவும்,, மக்கள் கற்பனை செய்துகொண்ட வடிவில் அவரவர் வேண்டுதலின்படியும் கடவுள் நின்று அருள்புரியும். கண்ணால் காணப்படாத இறைவனின் இருப்பை, கண்ணால் காணப்படும் பொருள்களைக் கொண்டு அறியலாம் என்பதற்குப் பின்வரும் பாடல்கள் எடுத்துக்காட்டு.

 

மண்டபம் ஆதி கண்டோர்

     மயன்உளன் என்னல் போலும்,

குண்டலம் முதல் கண்டோர் பொற்

     கொல்லன் உண்டு என்னல் போலும்,

ஒண்துகில் கண்டோர் நெய்தோன்

     ஒருவன்உண்டு என்னல் போலும்,

அண்டம்மற்று அகண்டம் செய்தோன்

     உளன் என அறிவாய் நெஞ்சே.      

 

         மண்டபம் முதலான அழகிய கட்டுமானங்களைக் காண்பவர், அவற்றைக் கட்டிய வேலைப்பாடு உடைய ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், குண்டலம் முதலிய அழகிய அணிகலன்களைக் கண்டால், அவற்றை அழகுற வடித்த பொற்கொல்லன் ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், ஆடை முதலிய செயப்படுபொருள்களைக் கண்டதும், அவற்றை அழகுற நெய்து அமைத்தவன் ஒருவன் உண்டு என்று உய்த்து உணர்வது போலவும், இந்த உலகமும் பிறவும் கண்டதும், இவற்றைப் படைத்தருளிய முழுமுதல் ஒன்று உண்டு என்று நெஞ்சே உய்த்து உணர்வாயாக.

 

     ஒரு முதல்வன் இல்லாமல், தானே எதுவும் உருவாவது இல்லை. பெற்றெடுத்த தாய் தந்தையரைக் காண்ணால் காணவில்லை என்பதற்காக, தனக்குத் தாயோ தந்தையோ இல்லை என்று ஒருவன் கூறுவது எத்தகைய அறிவின்மை.

 

 

தீட்டுவோன் இன்றி ஆமோ

     சித்திரம்? திகழ்பொற் பாவை

ஆட்டுவோன் இன்றித் தானே

     ஆடுமோ? திவவி யாழின்

மீட்டுவோன் இன்றிக் கீதம்

     விளையுமோ? சராச ரங்கள்

நாட்டுவோன் ஒருவன்இன்றி

     நன்கு அமைந்து ஒழுகும் கொல்லோ?       

 

         தீட்டுபவன் ஒருவன் இல்லாமல் சித்திரம் உண்டாகுமோ? இல்லை. பொம்மையை ஒருவன் கயிற்றினால் ஆட்டினால் அன்றி, அது ஆடுமோ? இல்லை. சிறப்பான யாழினை ஒருவர் மீட்டினால் அன்றி, அதில் இனிய இசை தோன்றுமோ? இல்லை. அதுபோலவே, இந்த அண்டத்தில் உள்ள அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் அனைத்தும் கடவுள் என்னும் ஒரு பொருள் இல்லாமல் இந்த இலகத்தில் இயக்கம் கொள்ளமாட்டா.

 

மரமுதல் அசைதலால் கால்

     உளது என மதிப்பார், ங்கும்

பரவிய புகையால் செந்தீ

     உளது எனப் பகர்வார், சுற்றும்

விரவிய மணத்தால் பாங்கர்

     வீ உளது என்று தேர்வார்,

பரன் உளன் எனும் உண்மைக்குப்

     பார் எலாம் சான்றும் மன்னோ.

 

     மரம் முதலானவைகளை அசைவதைக் கொண்டு காற்று வீசுகின்றது என்றும், எங்கும் பரவுகின்ற புகையைக் கொண்டு, நெருப்பு உண்டு என்றும், சுற்றிலும் வீசுகின்ற நறுமணத்தால், மலர்கள் உண்டு என்றும் அறிந்து கொள்வர். அதுபோலவே, இயங்குகின்ற இந்த உலகத்தைக் கொண்டு, அதனை இயக்கும் மேலான ஒரு பொருள் உண்டு என்று கொள்ளலாம்.     

 

 

நாதன் இல்லாத வீடு

     நாளுமே நடவாது என்னில்,

வேத நாயகன் இலானேல்

     விரிகதிர் மீன் உதித்தல்,

சீதநீர் பெயல், தருக்கள்

     சீவ ராசிகள் கதித்தல்

பூத பௌதீகம் எல்லாம்

     புரை அற ஒழுகற் பாற்றோ.   

 

     வீடு என்றால் வீட்டுத் தலைவன் ஒருவன் இருத்தல் வேண்டும். தலைவன் இல்லாத வீடு நடவாமைபோலக், கடவுளில்லாத உலகமும், உலகத்தில் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியன தோன்றலும், மழைபெய்தலும், உயிர்கள் வாழ்தலும் நிகழமாட்டா.

 

பூதம் யாவுக்கும் ஏணாய்ப்

         பொருந்திய விசும்பைக் காற்றை,

வேத நூல் அதனை மண்ணோர்

         மெய்யுரை உயிரை நெஞ்சை

ஏதம் இல் அறத்தைக் கண்ணால்

         பார்த்திலோம் எனினும் உண்டு என்று

ஓதல்போல், தெய்வந்தான் ஒன்று

         உளது எனல் தேற்றம் அம்மா.           

 

         நீலம், நீர், தீ முதலிய பூதங்களுக்கு ஆதராமாய் உள்ள காற்றை, வானத்தை, அறிவை, உயிரை, அறத்தைக் கண்ணால் பார்ப்பதில்லை. ஆனால் உண்டென்று ஒப்புக்கொள்கின்றோம். அதுபோன்று தெய்வம் உண்டு என்பதும் தெளிவு.

 

வாசம் மூக்கு அறியும், ன்றி

     வாய்செவி விழிமெய் தேரா;

பேச வாய் அறியும் அன்றிப்

     பின்னை ஓர் புலன் தேராது;

நேசம் ஆர் தொண்டர் ஞான

     நேத்திரம் கொண்டு காணும்

ஈசனை, முகத்தில் கண்ணால்

     இகத்தில் யார் காண வல்லார்.               

 

         வீசுகின்ற நறுமணத்தை மூக்கு அறியுமே அல்லாமல், காது முதலிய ஏனைப் புலன்கள் அறியமாட்டா. பேச வாய் அறியுமே அல்லாது, மற்றவை அறியமாட்டா. அதுபோலக் கடவுளை மெய்யன்பர்கள் ஞானக்கண் கொண்டு காண்பர். அப்படியிருக்க உலகத்தில் முகக்கண்ணால் காண்பவர் யார்?

 

வான் இன்றி மழையும் இல்லை;

     வயல் இன்றி விளைவும் இல்லை;

ஆன் இன்றி கன்றும் இல்லை;

     அரி இன்றி ஒளியும் இல்லை;

கோன் இன்றிக் காவல் இல்லை;

     குமரர் தாய் இன்றி இல்லை;

மேல் நின்ற கடவுள் இன்றி

     மேதினி இல்லை மாதோ.                

 

         மேகம் இல்லாமல் மழை இல்லை; வயல் இல்லாமல் விளைவு இல்லை; பசு இல்லாமல் கன்று இல்லை; ஞாயிறு இல்லாமல் வெளிச்சமில்லை; அரசன் இல்லாமல் காவல் இல்லை. தாய் இல்லாமல் மக்கள் இல்லை. இவைபோலக் கடவுள் இல்லாமல் உலகம் இல்லை (என்று உணர்தல் வேண்டும்)

 

     இக் கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி, தெய்வத் திருவள்ளுவ நாயனார்,

 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.              

 

என்று அருளிச் செய்தார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

எறும்பு கடை யானை தலை ஈசனைப் பூசித்துப்

பெறும் கதி கண்டும் தேறார் பேய்கள், ---  அறிந்த

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான், வையத்து

அலகையா வைக்கப் படும்.

 

இதன் பொருள் ---

 

     எறும்பு முதல் யானை வரை உள்ள உயிர்களுமே இறைவனைப் பூசித்துப் பேறு பெற்றன என்பதை அறிந்து இருக்கின்றோம். அவைகளை ஈசனைப் பூசித்து நற்கதியை அடையும்போது, மேலான ஆறறிவு உள்ள மனிதவர்க்கமும் அவ்வாறு ஒழுகி நற்கதியை அடைதல் வேண்டும். அந்த உண்மையைத் தெளியமாட்டாதவர்கள் பேய்கள் எனப்படுவார்.

 

     எறும்பு ஈசனைப் பூசித்துப் பெறு பெற்ற தலம் திருஎறும்பியூர். யானை பூசித்துப் பேறு பெற்ற தலம் திருக்காளத்தி. தேறார் --- சிவபெருமானை வழிபட்டு நாம் உய்ய வேண்டுமென்று தெளியமாட்டார். அலகை --- பேய். தெளியாதாரைப் பேய்கள் என்றார்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.

 

     தன்னை அடைக்கலமாக வந்து அடைந்த விபீடணனை ஏற்றுக் கொண்டதற்கு, இராமபிரான் காட்டிய விளக்கம். மெய்யைப் பொய் என்பவன் மீளாத நரகில் வீழ்வான்.

                                                                   

'உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான்

     உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கய்யனும், ஒருவன் செய்த

     உதவியில் கருத்திலானும்,

மய் அற, நெறியின் நோக்கி,

     மாமறை நெறியில் நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்,

     மீள்கிலா நரகில் வீழ்வார். --- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன் உயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும்;  ஒருவன் செய்த உதவியைக்  கருத்தில் கொள்ளாது மறந்தவனும்;   உயிர்க் குற்றம் நீங்க, அறநெறியை அறிந்து, சிறந்த வேத நெறிப்படி நின்று ஒழுகும்  உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும், மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.

 


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...