அறிவு

அறிவு

---


    பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதனுக்குத் தனியான, தலையான அறிவு ஒன்று உண்டு. அதுவே ஆறாவது அறிவு. நல்லதன் நலனும் அல்லதன் தீமையும் எண்ணிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைச் செய்யுமாறு அந்த அறிவு வழி காட்ட வேண்டும். அதற்குத் துணை நிற்பது கல்வி அறிவு. “தாயாய் முலையைத் தருவானே! தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ?” என்றார் மணிவாசகப் பெருமான். தாய்ப்பால் இல்லாத குழந்தை சவலைக் குழந்தை ஆகிவிடும். கல்வி அறிவு எனப்படுவது, ஆன்றோர்கள் நமக்குப் பருகத் தந்த தாய்ப்பால். அதனை உண்டவன் உள்ளம் வளம்பெற வேண்டும். அதற்கு உண்டது செரிக்க வேண்டும். செரிமானம் ஆகவில்லையானால், உண்டதை வாந்தி எடுக்க நேரிடும். அதுபோலவே, கற்றதன் உண்மைப் பொருளை, உய்த்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அனுபவித்தால், “நிற்க அதற்குத் தக" என்பது சாத்தியம் ஆகும். கற்றதையே பிதற்றிக் கொண்டு இருப்பது அறிவு ஆகாது. “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே” என்றார் மணிவாசகப் பெருமான். நல்லறிவு விளங்கி, அஞ்ஞானம் தொலைய வேண்டும். அதுதான் அறிவுபெற்ற நிலை. அப்படிப்பட்ட அறிவு பெற்றவர் உலகை வழிநடத்திச் செல்வாரானால், உலகம் செழிக்கும்.


    புத்தகங்களை வாங்கி அழகுபெற அடுக்கி வைத்தும், பட்டங்களை வாங்கி வைத்தும், வாழ்க்கையின் வசதிகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டும் வாழ்வதால் ஒருவனுக்கு நல்லறிவு துலங்குவது இல்லை. 


“புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றவற்றைப் 

போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து 

தேற்றும் புலவரும் வேறு.”. --- நாலடியார்.


இதன் பொருள் ---


    புத்தகங்களை மாத்திரமே மிகுதியாகத் தொகுத்து வைத்திருந்தும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நுண்பொருள்களை அறியாதவராகி, அவற்றைக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்தாலும், அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறாயிருப்பார்கள். அவற்றின் பொருள்களை அறிந்து பிறருக்குத் தெளிவிக்கும் அறிவுடையோரும் வேறாகவே இருப்பார்கள்.


    புத்தகங்களைத் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறரையும் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமை ஆகும். “பக்கத்தில் இருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி. ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி” என்று பாடுவார் பாரதியார். பட்டங்கள் பெற்று, பதவிகளில் இருந்து, பெரும்பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பெரியவர்கள் புண்ணியவாளர்கள் அல்ல. தோற்றத்தால் அருளாளர் போன்று இருக்கும் ஆன்மிகவாதிகள் யோகியர் அல்ல. பக்கத்தில் இருக்கும் சாதாரண மனிதன் படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்காதவனே புண்ணியமூர்த்தி. உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவனே யோகி.


“அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.”   – நாலடியார்.


இதன் பொருள் --- 


நீதிநெறிமுறைகளை அறிந்து நடந்து கொள்ளுங்கள். எமன் ஒருநாள் வருவான் என்கிற அச்சம் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். மற்றவர் கூறும் கடுஞ்சொற்களைக் கேட்டுச் சினம் கொள்ளாது பொறுத்துக் கொள்ளுங்கள். யாரையும் வஞ்சிக்காதீர்கள். தீயவர்களின் நட்பை விட்டு ஒழியுங்கள். எப்போதும் நல்லோர் கூறும் அறவுரைகளைக் கேட்டு வாழுங்கள்.


    இக்காலத்தில் அறநெறி இது என்று காட்டும் அறிவின் நிலையைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.  நூல்களைப் படிப்பது – மனப்பாடம் செய்வது - தேர்வில் வெற்றி பெறுவது  அறிவு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகம் அதைத்தான் போற்றுகின்றது. நூலறிவு உண்மை அறிவு ஆகாது. அது வெற்றறிவு. நூலறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். நூலறிவு இல்லாத நமது மூதாதையர் வாழ்ந்த அமைதியான வாழ்க்கையை, நூலறிவு பெற்றுள்ள நம்மால் வாழமுடிவதில்லை. யாருக்கும் அறிவு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. "மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்று திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். அறிவின் நிலையில் பலபடிகள் உண்டு. மேல் மாடிக்குச் செல்வதற்குப் பலபடிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பது முறை. இன்று மின்தூக்கிகள் வந்த போதிலும் படிக்கட்டுதான் இக்கட்டில் எப்போதும் பெரிதும் உதவுகின்றது. பல படிகளைக் கடந்துதான் நாம் மேலே செல்ல வேண்டும். அந்தப் படிகளின் அமைப்பைப் போலத்தான் அறிவின் பல படிகளும் அமைகின்றன. அப்படி, அறிவானது படிநிலையில் வளரவளர, நாம் அறிந்ததைக் காட்டிலும் அறியாதவை பலப்பல என்ற உண்மை விளங்கும். 


    புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. கற்றதை "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் உய்தி உண்டு.


படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.


    அறிதல், தெரிதல், கற்றல்,  என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அம்மே அப்பா என்று அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,


"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்"


என்கின்றார் தெய்வச் சேக்கிழார். "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 


     மணல்கேணியைத் தோண்டுவது போல, சிறுமுயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால் கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்கவேண்டுமானால், கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலகநூல். இன்னொன்று அறிவுநூல். உலகநூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவுநூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.


     கலையறிவு என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. அருளறிவு என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு. "பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்" என்கின்றார் திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான்.


     நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவு, கலையறிவு எனப்படும். 


    இந்தக் கலையறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது. அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், மேலும் அறிவு நூல்களைக் கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா?  வள்ளல்பெருமான் சொன்ன கணக்கைப் போட்டுப் பார்ப்போம்.


    ஒரு ஆள்சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள்சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல்பெருமானாரின் கணக்கு.


    நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் ஐந்து கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 4 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 4,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கமும் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்க வேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.


"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."


என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில் 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார். இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலையறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? முயற்சி இன்மைதான் பிரச்சினை. “முயற்சி திருவினை ஆக்கும்” என்றார் திருவள்ளுவ நாயனார்.


     தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித்தான் ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும். நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையைத் தருவதாகிய கல்விச் செல்வத்தையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரைக் காணலாம். "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.


“கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு என்று

உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; – மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்!

எறும்பும் தன் கையால் எண்சாண்.”


    கண்ணால் காணும் சிறு துாரத்தை எண்ணும்போது, அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால், ஒரு சிறிய தொலைநோக்கியில் அந்த அளவைக் காணும்போது, காணாத தூரம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. பின்னர் அந்த தூரத்தையும் பிறிது ஒரு பெரிய தொலைநோக்கியைக் கொண்டு நோக்கும் போது, காணாது பரந்து நிற்பது இன்னும் விரிவடைகிறது. அறிவும் அத்தகையதே ஆகும். அறிய அறிய இன்னும் அறிய வேண்டுவது அதிகமாகின்றது. இதையே திருவள்ளுவ நாயனார் “அறிதோறு அறியாமை கண்டற்றால்” என உவமை முகத்தால் தெளிவிக்கின்றார். எனவே, அறிவுக்கு எல்லை இல்லை. எல்லையற்ற பரம்பொருளை ஓர் எல்லைக்குள் கொண்டு வந்து சிறுச்சிறிதாக அறிய முனைவது சமயம் சார்ந்த நெறிப்பட்ட வாழ்க்கை ஆகும். சட்டம் தவறு செய்த மனிதனைத் தண்டித்துத் திருத்த முயல்கிறது. சமயம் சார்ந்த, அறிவு சார்ந்த வாழ்க்கையானது, மனிதனை அறநெறியில் செலுத்தி வாழ்வாங்கு வாழச் செய்கிறது.


    சமயத் தலைவர்களும் சமுதாயத்தைச் சீர்திருத்த வருபவரும் உயிர்கள் வாழ வழிவகுக்கும் நல்லவரும் காட்டும் அந்த அறிவுப் பாதையை,அறநெறியை நாம் அனைவரும் படிக்கிறோம், படிக்கக் கேட்கிறோம். ஆனால் பின்பற்றுகிறோமா? அவ்வாறு பின்பற்றாத மனிதனைப் பார்த்துப் பெரியவர்கள் அறிவற்றதென நாம் கருதும் மரத்தை, விலங்கை, பறவையை நமது மனக்கண் முன் நிறுத்திக் காட்டி அறிவுறுத்துகின்றனர். 


“சாந்தனையும் தீயனவே செய்திடினும், தாம்அவரை 

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் 

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து 

மறைக்குமாம் கண்டீர் மரம்.” 

என்பது ஒளவையார் அருள்வாக்கு. மனிதனால் மரம் வெட்டப்படுகிறது. பின் துளிர்த்து நிழல் தருகிறது. கோடை வெப்பத்தில் வெட்டிய அந்த மனிதனே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்குகிறான். “என்னை வெட்டிவிட்டு, எனது நிழலிலேயே வந்து ஒதுங்குகின்ற மனிதா!” என்று கூறி எந்த மரமும் நிழல் தர மறுப்பது இல்லை. அதுபோல அறிவுடையவர் தமக்குத் தீங்கு இழைக்கும் கொடியவனாக இருந்தாலும், துன்பம் வருங்கால் தம்மால் கூடிய வரையில் அவனைக் காத்து ஒம்புவர் என்கிறார் ஔவையார். 


    அதுதான், உண்மையான அறிவு உள்ள மனிதனின் நிலை. அதுதான் அறவாழ்வும் கூட. தொல்காப்பியர் காலம் தொடங்கி, இந்நாள் வரை அறிவுள்ள பெரியோர்களும் அருளாளர்களும் இதைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்த்து, மனிதகுலத்தின் மீது அளவற்ற கருணை கொண்டு திருவள்ளுவ நாயனார், “அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யாவிடல்” என்று தெளிவாக அருளினார். திருக்குறளைக் கற்று எழுதுவதோடு, மேடைகளிலும் முழங்கிப் பணம் பண்ணுவதையே அறிவு என்று எண்ணிக் கொள்ளுகின்ற அவலநிலை இன்றும் தொடர்கிறது. இதனாலேயே மனிதகுலம் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்துக் கொண்டு வருகிறது. பிற உயிர்கள் படும் துன்பத்தை, தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான்பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று கூறி மனிதகுலத்தைச் சிந்திக்க வைத்தார் திருவள்ளுவ நாயனார். “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை” என்பது திருக்குறள். மனிதகுலம் இதைச் சிந்தக்கத் தவறிவிட்டது என்றே இக்கால நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.


    ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும் ஒருமை உள்ளவர் ஆகி உலகியலை நடத்திடல் வேண்டும் என விழைந்த திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் காட்டிய வழியில் மனித இனமானது வாழ்ந்து ஓங்கி விளங்கிட வேண்டும். 'நாம் செய்த நல்வினையே நமக்குப் பலன்தரும்’  என்ற அறிவுரையைப் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் மனிதன், அதற்கு நேர்மாறான காரியங்களையே செய்து வருகிறான். 


    ஆறறிவு படைத்த மனிதன் பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பிதற்றிக் கொண்டு, உண்மையில் பகுத்தறிவு என்பதை உணர்ந்து திருந்தாத அவலநிலையை அன்றே உணர்ந்து, தனது காலத்திற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்களும் அருளாளர்களும் காட்டிச் சென்ற நெறியை உணராமல், நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைத்துக் கெடுகின்ற மனிதனை எப்படித்தான் திருத்துவது என்று சிந்தித்த ஔவையார், ஓரறிவு உடைய உயிர்களைக் காட்டியாகிலும் மனிதகுலத்தை நல்வழிப்  திருத்தலாம் என எண்ணி, மரத்தைக் குறித்து மேலே காட்டிய பாடலைப் பாடினார். 


    சாலை ஓரத்தில் வானோங்கிய நல்ல மரங்கள் நிழலைத் தந்து கொண்டிருக்கின்றன. அதன் தழைகளையும் கிளைகளையும் வெட்டுவதற்கு ஒரு மனிதன் வருகிறான். மொட்டை ஆகிய அந்த மரம் முன்னிலும் மேலாகத் தழைக்கிறது. கோடைக் காலம் வந்தபோது, அந்த மரத்தை வெட்டிய மனிதன், அதன் நிழலை அடைகிறான். இவன் தனது அங்கங்களையெல்லாம் வெட்டிச் சிதைத்தவனாயிற்றே என்று எண்ணி அவனுக்குத் நிழலைத் தர மறுக்கவில்லை மரம். அவனுக்குக் குளிர் நிழலைத் தந்து வெம்மையைத் தடுத்து அவனுக்கு இதம் செய்கிறது. (ஆனால், இன்றைய மனிதன் மனசாட்சி சிறிதும் இல்லாமல், அதிகாரம் தன்னிடத்து இருக்கின்றது என்ற செருக்குக் காரணமாக, மரங்களை வேரோடு வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருக்கிறான்.)


    திருந்தாத மனிதனைத் திருத்த எண்ணி, ஔவையார் இந்தக் காட்சியினை ஒளவையார் எடுத்துக்காட்டினார். ஆனாலும் அந்த மனிதன், ஔவையார் பாடல்களையும் படித்துக் கொண்டு, படித்தவற்றை மற்றவர்க்கு உபதேசித்துக் கொண்டே, அழிவுப் பாதையில் போய்க்கொண்டுதான் இருக்கின்றான். அவன் பேசுவதையும் அறிவு அறிவு என்று பாராட்டுகின்ற ஒரு கூட்டம், அவனோடு அழிவுப் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. 


    அறிவு என்பது வெறும் ஏட்டுப் படிப்பால் மட்டும் வருவது அல்ல. அது உண்மையானால்,  படித்த பலர் வாழும் இன்றைய உலகில் கொடுமைகள் பெருகிக் கொண்டே போவது ஏன்? எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஓரறிவு உயிராகிய மரத்துக்கே இவ்வளவு கேட்டினை விளைவிக்கும் மனிதனால், மனிதகுலத்துக்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?  எனவேதான் திருவள்ளுவ நாயனார்,  “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை'” என்று பாடினார். இந்த உண்மையினைத்தான் பிற்கால ஒளவையார் மரத்தைச் சான்றாக வைத்துக் காட்டி மனிதனுக்கு விளக்கம் செய்தார். 


    தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே மனிதன் பெற்ற அறிவின் பயன் ஆகும். நல்லவருக்கும் கூடத் தீமை இழைத்து மகிழும் மனித சமுதாயத்தில் வாழும் நமக்கு, இந்த உண்மை  விளங்காமல் போனதுதான் வருத்தத்திற்கு உரியது. அறிவு என்பது பிறர் எக்கேடு கெட்டாலும் தான்மட்டும் சாமர்த்தியாமகப் பிழைப்பு நடத்துவது அல்ல. எவ்வுயிருக்கும் தீங்கு நினையாமல் வாழ்வதுதான். 


    திருக்குறளில், “அறிவுடைமை” என்னும் அதிகாரத் தலைப்புக்கு, அறிவுடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவும் உடையவராய் இருத்தல் ஆகும் என விளக்கம் கண்டு உள்ளார் பரிமேலழகர். அதிகார முறைமைப்படி, கல்வியும், கேள்வியும் உடையவராய் இருந்தாலும், கற்றதையும், கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். “அறிவாவது, நல்லதன் தலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்” என்று நச்சினார்க்கினியர் கூறி உள்ளார். “செய்யுள் நிகழ் சொல் தெளிவும், செவ்விய நூல் பலநோக்கும், மெய் உணர்வின் பயன் இதுவே” என்பது பெரியபுராணம். நோக்கும் என்பதற்கு, கருத்து ஊன்றி உணர்தல் எனப் பொருள் கண்டனர் முன்னோர். கற்கின்ற நூல்களைக் கருத்து ஊன்றி உணர்பவருக்கு மெய்யறிவு விளங்கும். மெய்யறிவு பெற்றோர் பிற உயிர்க்குத் தீங்கு செய்யார். அவரால் மனித குலம் தழைக்கும்.









பாடல் 12


"குயில்ஒத்து இருள்குஞ்சி கொக்குஒத்து, இருமல்

பயிலப் புகாமுன்னம், நெஞ்சே! -  மயிலைத்

திருப்புன்னை அம்கானல் சிந்தியாய் ஆகில்,

இருப்பின்னை அங்காந்து இளைத்து."


இதன் பொருள் --- 


    நெஞ்சே – மனமே! குயில் ஒத்து இருள் குஞ்சி கொக்கு ஒத்து – குயிலின் நிறம் போன்று கருமை நிறைந்து இருந்த தலைமயிரானது, நரைத்து கொக்கின் நிறம் போன்று வெண்மயிர் ஆகவும், இருமல் பயிலப் புகாமுன்னம் – இருமல் அடிக்கடி வருத்துகின்ற முதுமைப் பருவம் வந்து அடையும் முன்னரே, மயிலைத் திருப்புன்ன அம்கானல் சிந்தியாய் ஆகில் – திருமயிலாப்பூரிலே உள்ள திருப்புனை அம்கானல் என்னும் திருத்தலத்தை நினைக்கமாட்டாய் என்றால், பின்னை அங்காத்து இளைத்து இரு – முதுமையில் வாய் திறந்து இளைப்பினை அடைந்து இருப்பாய். (வாய் திறந்து இறப்பினையும் அடைந்து இருப்பாய்)

    இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல், கொக்கின் நிறம்போல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி இறைவன் அமைத்து இருகுகலாம்.  அது அவனுக்கு அருமையானது அல்ல. அதானல் இறைவனுக்கு நட்டமும் இல்லை.  இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

“கறுத்து தலை வெளிறு மிகுந்து” எனவும், “தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து” எனவும் வரும் திருப்புகழ்ப் பாடல்களை இங்கு வைத்து எண்ணுக. முதுமையில் கோழை மிகுவதால், இருமல் அடிக்கடி உண்டாகும். மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. அதுவும் இரவு நேரத்தில் இருமல் வாட்டும். “உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து” என்பார் அருணகிரிநாதர். பின்னை – முதுமைக் காலத்தில். அங்காத்தல் – வாயைத் திறத்தல். துயரத்தால் வாயைத் திறந்தபடி இருந்து, வாயைத் திறந்தபடியே இறந்து போவாய் என்றார்.

    புன்னை அம் கானல் - புன்னை மரங்கள் மிகுந்து உள்ள அழகிய கடற்ரை. மயிலை – திருமயிலை என வழங்கும் திருமயிலாப்பூர். இது தொண்டை நாட்டுத் திருத்தலம். சென்னைமாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. திருக் கபாலீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத் திருப்பதிகம் திருஞானசம்பந்தரால் அருளப்பட்டது.


40. அடியவர்களிடத்தில் கடவுள் தன்மை விளங்கும்

 


“முற்றும் இறைசெயலே முற்றிடினும், தன்அருளைப்

பெற்றவர்தம் பாலே பெரிதாகும்; - பற்றுபெருந்

தாபத்து இடத்தே தழன்றிடினும், நற்சோதி

தீபத்து இடத்தே சிறப்பு.”


நல்ல ஒளி விட்டு எரியக்கூடிய பெரிய காட்டுத் தீயினிடத்தில் ஒளிவிட்டாலும், சிறிய விளக்கிடத்திலேயே அவ் ஒளி சிறப்பு உடையதாகும். அது போல, உலகமெங்கும் கடவுள் அருள் நிறைந்து இருந்தாலும், அவ் இறைவன் அருளைப் பெற்ற அடியார்கள் இடத்திலேயே அவ் அருட்செயல் நிறைந்திருப்பது மிகுதியாகும்.

    (இறை - கடவுள்.  தாபம் - காடு.  தீபம் - சிறுவிளக்கு.) 

    “திரி அழல் காணின் தொழுப; விளகின் எரி அழல் காணின் இகழ்ப" என்பது “நான்மணிக்கடிகை”. திரியில் எரியும் நெருப்பைக் கண்டால் வணங்குவார்கள். விளகில் எரியும் நெருப்பைக் கண்டால் இகழ்வார்கள் என்பது இதன் பொருள்.


99. அச்சியிலே போனாலும்...

 கொச்சையிலே பாலுமுண்டோ? கூத்தியர்கள்

     தம்மிடத்திற் குணந்தான் உண்டோ?

துச்சரிடத் தறிவுண்டோ? துச்சரெங்கே

     போனாலும் துரையா வாரோ?

நச்சரவத் தொடையாரே! தண்டலையா

     ரே! இந்த நாட்டல் லாமல்

அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக்

     காசதன்மேல் ஆர்கொள் வாரே?


இதன் பொருள் ---


    நச்சு அரவத் தொடையாரே – நஞ்சை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே! இந்த நாட்டு அல்லாமல் அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசதன் மேல் யார் கொள்வாரே - இந்த நாட்டிலே அன்றி அச்சிக்குச் சென்றாலும் அகப்பை அரைக் காசுக்கு மேல் விலை போகாது, (ஆகையால், எங்கே சென்றாலும்) கொச்சையிலே பாலும் உண்டோ – வறட்டு ஆட்டிலே பால் கிடைக்குமா?, கூத்தியர்கள் தம்மிடத்தில் குணம்தான் உண்டோ - கூத்தாடும் மாதரிடம் நற்பண்பைத்தான் காணமுடியுமா?, துச்சர் இடத்து அறிவு உண்டோ - தீயருக்கு அறிவு உண்டாகுமா?, துச்சர் எங்கே போனாலும் துரை ஆவரோ - தீயவர் எங்கே சென்றாலும் தலைமைக்கு ஏற்றவர் ஆவாரோ?


      கூத்தி – நாடகக் கணிகை. கூத்தியர் என்பவர் முற்காலத்தில் கூத்தாடும் தொழிலை மேற்கொண்டு, ஒழுக்கமின்றி ஊருராகச் சென்று கொண்டிருந்தவர்கள்.துச்சர் -இழிந்த குணம் உடையவர். ‘துச்சர் துரை ஆவாரே' துச்சரிடத்துத் துரைக்கு உரிய பண்பு பொருந்தி இருக்காது. ‘அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு தான்' என்பது பழமொழி.


39. அடியார்களைப் பகைத்தால் அழிவு

 “ஈசன்எதிர் நின்றாலும், ஈசன்அருள் பெற்று அயர்ந்த

நேசர்எதிர் நிற்பது அரிதாமே; - தேசுவளர்

செங்கதிர்முன் நின்றாலும், செங்கதிரவன் கிரணம்

தங்குமணல் நிற்க அரிதே தான்.” -- நீதிவெண்பா


ஒளி விளங்குகின்ற சிவந்த கிரணங்களை உடைய சூரியனுக்கு முன்னே வெயிலைப் பொறுத்துக் கொண்டு நின்றாலும், அந்தச் சூரியனின் கிரண வெப்பம் தாங்கியுள்ள மணலில் நிற்றல் என்பது இயலாது. அதுபோல, எல்லாம் வல்ல இறைவன் முன் பகைத்து நின்றாலும், அவ் இறைவனின் பேரருளைப் பெற்று உயர்ந்த அடியார்கள் எதிரே பகைத்து நிற்றல் இயலாது. பகைக்கின் விரைவில் அழிவு ஆகும்.


98. முழுதும் அனுபவிக்க யாராலும் முடியாது

 


ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்

     அன்னமயம் ஆனால் என்ன?

சூழவரும் இரவலர்க்குப் பசிதீர

     உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ!

ஏழுலகும் பணியவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! எந்தநாளும்

நாழிநெல்லுக்கு ஒருபுடைவை விற்றாலும்

     நிருவாணம் நாய்க்குத் தானே.


இதன் பொருள் ---


    ஏழு  உலகும் பணியவரும் தண்டலையாரே - ஏழுலக மக்களும் வணங்கத் தேடிவரும் திருத் தண்டலை இறைவரே! எந்த நாளும் நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு நிருவாணந்தான் - எக்காலத்திலும் ஒரு படி நெல்லுக்கு ஒரு புடைவை என்று விற்றபோதிலும், நாய் ஆடையின்றித்தான் இருக்கவேண்டும். (அதுபோல), ஆழி எல்லாம் பாலாகி அவனி எல்லாம் அன்ன மயம் ஆனால் என்ன - எல்லாக்  கடல்களும் பாற்கடல்களாகவும், உலகம் முற்றும் சோற்றுக் குவியலாகவும் ஆனாலும் என்ன பயன்?, சூழ்வரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ - (உலகைச்) சுற்றி அலையும் பிச்சைக்காரர்களுக்குப் பசி தீர பாலைக் குடித்தும், உணவை உண்டு களிக்கும் நலம் உண்டாகுமா? (உண்டாகாது)


      ஆழமாக இருப்பது பற்றி, கடலானது ஆழி என வழங்கப்படும். அனைத்துக் கடலுமே பாற்கடலாக மாறினாலும், அதைப் பார்த்து வரும் இரவலருக்கு, பாற்கடலை முழுமையாகக் குடித்து மகிழ முடியாது. உலகம் எங்கும் சோற்றுப் பெருக்கு இருந்தாலும் அதைப் பார்த்து வரும் இரவலர்க்கு சோறு முழுவதையும் உண்டு மகிழ முடியாது. இதை விளக்கவே, ‘நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிருவாணமாகத் தான் இருக்கும் என்னும் பொருள்பட ஒரு பழமொழி இருந்திருத்தல் வேண்டும்.


        பின்வரும் பாடல்களை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்பேம் எனினே தப்புந பலவே. “.      – புறநானூறு

இதன் பொருள் ---

  தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள இந்த உலகில், "எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது" என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த மாமன்னர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவில் கணி விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது --- உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு விதமானவர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து கிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.


 “சேவித்தும், சென்று இரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.”            -- நல்வழி.

 

இதன் பொருள் ---

      வயிற்றுப் பசியின் கொடுமையால் பிறரைத் தேடிச் சென்று வணங்கியும், பலரிடத்தில் சென்று யாசித்தும், தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து, வேற்ற நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களை எல்லாம் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும்,  செல்வர்களைப்  புகழ்ந்து பாடியும், இப்படிப் பலவிதமாக உடம்பினை ஓம்புவதற்கு வேண்டிய படி அரிசிக்காகவே உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.



பாடல் 11

 


“குழீஇ இருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட,

வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇஇருந்தும்

என்ஆனைக்கு ஆவா இதுதகா துஎன்னாமுன்

தென்ஆனைக் காஅடைநீ சென்று.”


இதன் பொருள் ---


    குழீஇ இருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட - சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார்கள் குணங்களை எடுத்துப் பாராட்டிக்கூற; வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇ இருந்தும் – மரண காலத்தில் நழுவிக் கிடந்த அங்கங்களை எல்லாம் தழுவிச் சேர்த்து இருந்து கொண்டும்; என் ஆனைக்கு இது தகாது என்னா முன் – எனது ஆனைபோன்ற (தோற்றமும் நடையும் உடைய) இவருக்கு இவ்வாறு நேர்ந்தது தகாது என்று சொல்லித் துக்கப்படாத முன்னே; நீ சென்று தென் ஆனைக்கா அடை – மனமே! அழகிய திருவானைக்காவினை நீ சென்று அடைவாயாக.


    எவர் ஒருவர் இறப்பினும் இறந்தவருடைய சுற்றத்தார்கள் இறந்தவரது மிகுதியான குற்றங்களை எல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம்.  வழீஇ இருந்த அங்கங்கள் – (வழுவுதல் - நிலைகெடுதல்.) அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். இது – மரணம். இந்தக் கதி.


சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம் ஆகிய திருவானைக்கா திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக உள்ள திருத்தலம். இறைவர், செழுநீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர். இறைவியார், அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி. தேவார மூவர் முதலிகள் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடி வழிபட்ட திருத்தலம். பஞ்சபூதங்களில் நீருக்கு உரிய திருத்தலம். நடராசர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட்சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது. இது, நாயனாரின் அவதாரத் திருத்தலம் ஆகும்.


கோச்செங்கண் சோழ நாயனார் வரலாறு


சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது. அந்த யானை துதிக்கையால் நீரை முகந்து வந்து  சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும்.  இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் "திரு ஆனைக்கா" என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.


அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது.  சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது.  அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்தி, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது. பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டு, அனுசிதம் என்று அதனை அழித்தது.  சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது.  அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது.  யானை விழுந்து, துதிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்குத் திருவருள் புரிந்தார்.


சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர்  மனைவியார் கமலவதியார். அவர்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.


கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூவுலகங்களையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அது கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்ய, ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை காலம் தாழ்த்துப் பிறந்தமையால், சிவந்த கண்ணை உடையதாய் இருந்தது. அதைக் கண்ட அன்னையார், "என் கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.


சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார். கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். எழுபது மாடக் கோயில்களை அவர் சமைத்தார். இவற்றில் திருமால் கோயில்களும் அடங்கும். இதனை ஆழ்வாரும் சிறப்பித்து உள்ளார். கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார்.  தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.


வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நால் திசையும் தேனை, காவுள் மலர்கள், தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே" என்று போற்றி உள்ளார்.


அப்பர் பெருமான் இத் திருத்தலத்து இறைவர் மீது பாடியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகம், அனைவரும் ஓதி வழிபடுவதற்கு உரியது.


“எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,

எம்மாடு சும்மாடுஆம், ஏவர் நல்லார்,

செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை,

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,

சித்துஆய வேடத்தாய், நீடு பொன்னித்

திருவானைக் காஉடைய செல்வா, என்தன்

அத்தா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    (அடியேன் பல பிறவிகளை எடுத்து உள்ளேன். பிறவிகள் தோறும் எனக்குத் தாய்தந்தயர், சுற்றத்தார் அமைந்து உள்ளனர். அவர்களுள்) எந்த தாய், எந்த தந்தை, எந்த சுற்றத்தார் நமக்கு நல்லவர்கள்? எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடிய நல்ல செல்வம் ஆகும்? யார் நல்லவர்? நாம் இறந்தால் நமது உறவினர்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் உடலுக்கு உறவாக அமைந்தவர்கள் மீது கொள்ளும் பற்றினை விடுத்து,  உயிருக்கு உறவாக அமைந்துள்ள “என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவைத் தமக்கு இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை நான் அடைவேனோ? (கூ கா என என் கிளை கூடி, அழப் போகா வகை உண்டாகும்)


“ஊன்ஆகி, உயிர்ஆகி, அதன்உள் நின்ற

உணர்வுஆகி, பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,

நான்ஏதும் அறியாமே என்உள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,

தேன்ஆரும் கொன்றையனே, நின்றி யூராய்,

திருவானைக் காவில்உறை சிவனே, ஞானம்

ஆனாய்,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீயே உள்ளாய். நான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய். தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.


பாடல் 10

 "படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு

தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்ப துஉறும்."


இதன் பொருள் ---


    படிமுழுதும் - நில உலகம் முழுவதையும், வெண்குடைக் கீழ் – தமது வெண்கொற்றக் குடையின்கீழ், பார் எலாம் ஆண்ட முடி அரசர் செல்வத்து – உலகை எல்லாம் ஆட்சி செய்த முடிமன்னர் செல்வத்து - உலகமெல்லாம் தமது வெண்கொற்றக் குடையின் கீழே தங்கும்படி எல்லா உலகங்களையும் ஆட்சி புரிந்த முடிமன்னர்களது செல்வத்தினும், கடி இலங்கு தோடு ஏந்து – மணம் மிகுந்த இதழ்களை உடைய, கொன்றை அம் தார் சோதிக்கு – அழகிய கொன்றை மாலையினை அணிந்த சோதி வடிவினர் ஆகிய சிவபரம்பொருளுக்கு, தொண்டுபட்டு – திருத்தொண்டு புரிந்து, ஓடு ஏந்தி உண்பது மும்மை உறும் – தருவோட்டினை ஏந்தி இரந்து உண்பது, மூன்று மடங்கு உயர்ந்தது ஆகும்.

    இத் திருப்பாடலை அருளிய நாயனார், மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரச பாரத்தை இன்னல் தருவது எனக் கருதித் துறந்தர் என்பதை அறிக.  “ஓடு ஏந்தி உண்பது” வீடுபேற்றினை அடைவதற்கு வழி ஆகும். 


“பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்து உணி என்பர்கள், எற்றுக்கு இரக்கும்;

நிரந்தர மாக நினையும் அடியார்

இரந்து உண்டு தன்கழல் எட்டச்செய்தானே.” --திருமந்திரம்.

    எழுவகை உலகம் முழுமையும் வழுவின்றிப் படைத்த விழுப்பொருளாகிய சிவபெருமானை இரந்து உண்பவன் என்று கூறுவர் உண்மையறியாதார். சிவனை உலக முதல்வனாக எண்ணுபவர், அவன் எதன்பொருட்டு இரக்கின்றான் என்பதனை உய்த்து உணர்தல் வேண்டும். இடைவிடாது தன்னையே பூசிக்கின்ற மெய்யடியார்கள் தன்னையே நினைந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உலகியலில் ஈடுபடாது, பசி நீக்குதல் பொருட்டாக இரந்து உண்டு, பற்றின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அவர்கள் உண்ணும் உணவு தன் திருவருளால் வழங்கப்படுவது என்னும் மெய்ம்மையை இறைவன் உள்ளிருந்து உணர்த்த உணர்கின்றனர். அதனால் தனது செயலைப் போலவே, தனது அடியார்களும் பிச்சை ஏற்று உண்டு, முடிவில் தனது திருவடியை அடைதல் வேண்டும் என்னும் திருக்குறிப்பு, இறைவன் பிச்சை ஏற்று உண்பதாகும்.

    அரச செல்வம் பற்றினை விளைத்துப் பிறவிக்கே ஏது ஆகும். இறைவனுக்குத் தொண்டுபட்டு ஓடு ஏந்தி உண்பது வீடுபேற்றுக்கு ஏது ஆகும்.


38. நம்பினவர்க்கே இறைவன்

 


“மந்திரமும், தேவும், மருந்தும், குருவருளும்,

தந்திரமும், ஞானம், தரும்முறையும், - யந்திரமும்,

மெய் எனில் மெய்யாய் விளங்குமே; மேதினியில்

பொய்எனில் பொய்யாகிப் போம்.” -- நீதிவெண்பா


உலகத்தில் மறைமொழிகளும், தெய்வமும், மருந்துகளும், ஆசானிடத்துப் பெறும் அருளும், நூல்களும், அறிவைத் தரும் வழிபாட்டு முறைகளும், மறைமொழியைப் பொருந்திய கட்டங்களும் ஆகிய இவ் ஏழும் உண்மை என்று நம்பினால், உண்மையாக விளங்கிப் பயன்கொடுக்கும்.  பொய் என்று நினைத்தால், பொய்யாகிப் பயன்படாது போகும்.


(மந்திரம் - மறைமொழி.  தேவு - தெய்வம்.  தந்திரம் - நூல்.  யந்திரம் - மறைமொழியைக் கட்டத்துள் அடக்கிப் பூசித்தல்.)


97. பிறர் வருத்தம் அறியாதவர்

 


"நொந்தவரும், பசித்தவரும், விருந்தினரும்,

     விரகினரும், நோயுள் ளோரும்,

தந்தமது வருத்தமல்லாற் பிறருடைய

     வருத்தமது சற்றும் எண்ணார்!

இந்துலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன் ஈன்ற தாயின்

அந்தமுலைக் குத்துவலி சவலைமக

     வோசிறிதும் அறிந்தி டாதே."


இதன் பொருள் ---


இந்து உலவும் சடையாரே – பிறைச்சந்திரன் உலாவுகின்ற திருச்சடையினை உடையவரே! தண்டலையாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! 


ஈன்ற தாயின் அந்த முலைக் குத்துவலி சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே - பெற்ற தாயின் முலையில் உண்டாகும் குத்து நோயைச் சவலைப் பிள்ளையோ கொஞ்சமும் அறியாது; (அதுபோல), நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும் விரகினரும் நோய் உள்ளோரும் – உள்ளம் வருந்தினோரும், பசியோடு இருப்பவரும், விருந்துண்ண வந்தோரும், காம உணர்வு கொண்டவரும், நோய்வாய்ப் பட்டோரும் ஆகிய இவர்கள், தந்தமது வருத்தம் அல்லால் பிறருடைய வருத்தமது சற்றும் எண்ணார் - தங்கள் வருத்தத்தை அன்றி மற்றவர்களின் வருத்தத்தைச் சிறிதும் நினையார்.


பிறர் வருத்தம் அறியாதவர் இன்னின்னார் என்பது கூறப்பட்டது. இதனால், இவர்களைத் தவிர, பிறர் யாவரும், பிறர் வருத்தத்தை உணர்ந்து, அதனைப் போக்க உதவுகின்ற மனம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்பது கருத்து.


பொது --- 1122. மக்கள் ஒக்கல் தெரிவை

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மக்கள் ஒக்கல் (பொது)


முருகா! 

தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.


தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

     தத்தனத் தத்ததன ...... தனதான


மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

     மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும்


வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

     மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும்


புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

     பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே


புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

     புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே


செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

     செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி


சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

     சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே


கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

     கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா


கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

     குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


மக்கள், ஒக்கல், தெரிவை, பக்கம் மிக்கத் துணைவர்,

     மற்றும் உற்றக் குரவர், ......அனைவோரும்


வைத்த செப்பில் பணமும், ரத்ன முத்தில் பணியும்,

     மட்டும் அற்றுப் பெருகும் ...... அடியாரும்,


புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது

     பொய்க்கு மெய்க்குச் செயலும் ...... உருகாதே,


புஷ்பம் இட்டு, கருணை நற்பதத்தைப் பரவு,

     புத்தி மெத்தத் தருவது ...... ஒருநாளே?


செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கில் சிறகு,

     செக்கம் உற்றச் சலமும், ...... மதிசூடி,


சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழும்,

     சித்த முத்திச் சிவமும் ...... அருள்வோனே!


கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை

     கொத்தின் ஒக்கக் கொலை செய் ...... வடிவேலா!


கொற்ற வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது

     குத்தி வெட்டிப் பொருத ...... பெருமாளே.

பதவுரை

செக்கர் கற்றைச் சடையில் --- சிவந்து திரண்டுள்ள திருச்சடையில்,


மிக்க கொக்கின் சிறகு --- நிரம்ப கொக்கின் இறகையும்,


செக்கம் உற்றச் சலமும் --- பூதலத்தில் வரும் கங்கை நதியையும்,


மதி சூடி --- பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு,


சித்தம் உற்றுத் தெளிய --- அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக,


மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே --- மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே! 


கொக்கு உறுப்புக் கொடு --- மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி,


மை நிற்கும் வட்டத்து அசுரரை --- கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும்,


கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா --- ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!


கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே --- வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!


மக்கள் ஒக்கல் தெரிவை --- பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி, 


பக்கம் மிக்கத் துணைவர் --- பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர்,


மற்றும் உற்ற குரவர் அனைவோரும் --- மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும்,


வைத்த செப்பில் பணமும் --- அடியேன் சேர்த்து வைத்த பணமும்,


ரத்னம் முத்தில் பணியும் --- இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும், (ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய)


மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் --- (எனது பிணத்தின் பின்னே) அளவில்லாது  திரண்டு கூடுகின்ற அடியார்களும்,


புக்கு துக்கித்து --- கூடித் துக்கம் கொண்டு,


எரிகள் தத்த வைக்கப் புகுது --- கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற


பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே --- நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற் பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல், 


புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே --- மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?


பொழிப்புரை


சிவந்து திரண்டுள்ள திருச்சடையில், நிரம்ப கொக்கின் இறகையும், பூதலத்தில் பாயும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு, அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக, மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே! 

மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி, கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும், ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!

வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர், மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும், அடியேன் சேர்த்து வைத்த பணமும், இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும் ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய,

எனது பிணத்தின் பின்னே அளவில்லாது  திரண்டு கூடுகின்ற அடியார்களும் கூடித் துக்கம் கொண்டு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற்பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல், மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?


விரிவுரை


செக்கர் கற்றைச் சடை --- 

சிவபரம்பொருளினது திருச்சடையானது சிவந்து திரண்டுள்ளது என்பதை, “செஞ்சடைக் கற்றை” என்னும் அப்பர் வாக்கால் அறிக.


மிக்க கொக்கின் சிறகு --- 

“கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே” என்பதும்

“கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்” என்பதும் அப்பர் அருள்வாக்கு. “கொக்கு இறகும் பாடி” என்பது மணிவாசகம்.


“கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும்,

மிக்க வெண்டலை மாலை விரிசடை

நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு,

அக்கின் ஆரமும், அம்ம அழகிதே.”.  – திருஞானசம்பந்தர்.


கொக்கின் வடிவில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதன் அடையாளமாக கொக்கின் இறகினை ஆபரணமாகச் சிவபெருமான் என்பது புராண வரலாறு. 


செக்கம் உற்றச் சலமும் --- 

“செகம்” என்னும் சொல், “செக்கம்” என்று வந்தது.  செகம் – உலகம்.

சலம் – நீர். இங்கே கங்கை நதியைக் குறிக்கும். சிவபிரான் கங்கையைத் தமது திருச்சடையில் தாங்கியவர். 

சிவபரம்பொருள் கங்கையைத் திருச்சடையில் தாங்கிய வரலாறு

திருக்கயிலாய மலையில் திருநந்தனவனத்தில் சிவபெருமான் ஒரு சமயம் வீற்றிருந்து அருளினார்.  உமாதேவியார் திருவிளையாட்டாக மெல்லப் பின்புறமாக ஓசை உண்டாகாமல் வந்து, எம்பெருமான் திருக்கண் மலர்களைக் கரமலர்களால் மூடினர்.  அதனால் உலகமெல்லாம் இருண்டன. சந்திர சூரியர் முதலிய எல்லா ஒளியும் எம்பெருமான் திருக் கண்களினின்றே வெளிப்படும்.  ஆதலினால், 

எல்லா ஒளியும் மாய்ந்து இருண்டன.  அம்பிகை கண் புதைத்த அந்த ஒரு கணம், அமரர் முதலியோர்க்குப் பல யுகங்கள் ஆயின. அக் காலம் எம்பெருமான் உலகங்கட்கு அருள் புரியக் கருதி நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்கட்கு ஒளியை அருளினார். அவ் ஒளியால் உயிர்கள் யாவும் உவகை உற்றன.  கண்ணுதற்பெருமான் செயலைக் கண்ட உமாதேவியார் அஞ்சி, கண்களை மூடிய கரங்களை எடுத்தார்.  அப்போது, அம்பிகையின் விரல்களில் வியர்வை உண்டாக, பத்து விரல்களினின்றும்  பத்து கங்கைகள் கடல் போலத் தோன்றின.


சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை

அங்குலி அவை ஈர்ஐந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற

மங்கையைத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து

கங்கையோர் பத்தாய் ஆண்டுக் கடல்களில் செறந்த அன்றே.       --- கந்தபுராணம்.


ஆயிரம் கோடி முகங்களுடன் தோன்றிய கங்கை எங்கும் தண்ணீர் மயமாகப் பரவியது கண்ட அமரர்கள் அஞ்சி, திருக்கயிலை மலையை அடுத்து, ஆலமுண்ட நீலகண்டப் பெருமானை நெடிது வணங்கி, "ஐயனே! எம்மை ஆட்கொள்வாய். முன்னொரு வந்த விடம்போலப் பரவி எம்மையும் உலகங்களையும் அழிக்கும் கங்கையைத் தடுத்து ஆட்கொள்ளும்" என்று வேண்டினார்கள்.   உடனே, இறைவன் உலகமெல்லாம் பரவியுள்ள நீரை அழைத்து, தனது சடாமகுடத்தில் ஒரு உரோமத்தில் அமைத்தனர்.  அது கண்ட அமரர் முதலானோர் வணங்கி, "ஐயனே! இக் கங்கை ஞானாம்பிகையின் கர மலரில் தோன்றி தேவரீர் சடையில் தங்கினமையால் புனிதம் ஆயிற்று.  

எங்கள் நாட்டிலும் இக் கங்கை இருந்து புனிதமாக்குமாறு திருவருள் புரியும்" என்று வேண்டினார்கள்.  சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி, தமது சடைமுடியில் உள்ள கங்கையைச் சிறிது எடுத்து இந்திரன், பிரமதேவர், திருமால் ஆகிய மூவருடைய கைகளில் தந்தருளினார்.  அதனை அவர்கள் தத்தம் ஊர்களில் விடுக்க, மூன்று உலகங்களிலும் கங்கை பெருகியது.

பின்னர், மாதவத்தின் மிக்க பகீரதன் வேண்ட சத்திய உலகில் உள்ள கங்கை வானில் இருந்து வர, சிவபெருமான் மீண்டும் உலகம் உய்ய அதனைச் சடையில் தாங்கி சிறிது உலகிற்கு உபகாரமாக விடுத்தனர்.  அது கடல் வழியே சகரர் எலும்பில் தோய்ந்து, அவர்கட்கு நற்கதி நல்கியது.  ஏனைய நதிகளும் அவ்வவ் உலகில் பரவி ஆங்காங்கு புண்ணிய மயமாகி விளங்கின.


மதி சூடி --- 

சிவபிரான் திருச்சடையில் மதி சூடிய வரலாறு

மலர்மிசை வாழும் பிரமதேவனது மானத புத்திரருள் ஒருவனாகிய தக்கன் தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்குத் திருமணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே தனது மனைவியருடன் வாழ்ந்தான். பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராதவன் ஆயினான். மற்றைய மாதர்கள் மனம் வருந்தி, தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் எல்லோராலும் நீ இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களைக் கூறி  “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறு, அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் பிரமதேவனைச் சரண்புகுந்தான். “சந்திரா! தக்கன் என்னைத் தந்தையாக மதித்து, எனது சொல்லைக் கேளான்.  நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுந்தால், அப்பரம்பொருள் உனது அல்லலை அகற்றுவார்” என்று பிரமதேவன் சொன்னார். சந்திரன் திருக்கயிலைமலை சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறைப்படி வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றான். மலைமகள் மணாளன் மனமிரங்கி, “அஞ்சேல்” என அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தமது திருமுடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும், குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போதும் ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.


“எந்தை அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்

சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்

அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும், அதனால்

வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். “   ---  கந்தபுராணம்.


சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே --- 


சிவபிரானுக்கு உண்மைப் பொருளை உபதேசித்த வரலாறு

திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான். சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக்கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த பிரமதேவனை முருகப் பெருமான் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து, “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்கும் முகத்தால், எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, 

புன்முறுவல் பூத்த முகத்தினராய் ஆறுமுகவள்ளலை நோக்கி, “அமரர் வணங்கும் குமரநாயகா! அறியாமை காரணமாகவாவது, உரிமைக் குறித்தாவது நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்ய்யமாட்டார். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், 

அறியாமலும் பெரும்பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால், பிரமனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் புன்முறுவல் பூத்து, “தந்தையே! ஓம் என்னும் ஓர் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் எப்படி உலகங்களைச் சிருட்டி செய்யலாம். அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு தேவரீர் கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்று வேண்டினர். குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் சொல்வேன்” என்றனர்.

அது கேட்டு “செல்வக் குமரா! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எப்போதும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைமலையை நாம் அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு விடையினைஉ ஊர்ந்து, தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலது என்று உலகவர் தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு மாணவ பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.


“எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.” --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”              --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.


மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.


சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின்முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


“அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


தேவதேவன் ஆகிய சிவபெருமான், மாணவ பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையில் சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.


“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.”  ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,

         வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,

         எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,

         தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!

     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!


என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையில் இருந்து, முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம்,  சுத்தவித்தை 

ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்தமாயையில் இருந்து தோன்றுவன. இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


“வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. “          --- திருமந்திரம்.


“கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்.... “          --- குமரகுருபரர்.


“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.” --- அபிராமி அந்தாதி.

 

“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி,ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.”  --- அபிராமி அந்தாதி.

  

“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.” --- சிவஞான சித்தியார்.


கொக்கு உறுப்புக் கொடு --- 

கொக்கு – மாமரம். மாமரத்தின் அங்கங்களோடு சூரபதுமன் கடலில் நின்றான்.

இது குறித்த வரலாறு

மாயையின் மகனாகிய சூரபதுமன் சிவமூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளம் தருக்கி, அறநெறிப் பிறழ்ந்து அமரர்க்குத் துன்பம் விளைத்தான். குமாரக்கடவுள் தேவர்களை சிறைமீட்கும் பொருட்டு, போர் புரிந்து அசுரர் அனைவரையும் அழித்தார். முடிவில் சூரபதுமன் போர்க்கோலம் கொண்டு ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு வந்தான். அப்பெருஞ் சேனையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள் அளக்க ஒண்ணாத் துன்பத்தை அடைந்தனர். முருகப் பெருமானார் அப்பெருஞ் சேனைகளையெல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபதுமனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபதுமனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. முடிவில் “இக்குமரனைக் கொணர்ந்து போரை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது சினந் தணிந்தபின் இக்குமரனோடு போர்புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து, உலகமுழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளையேந்தித் தேவர்களைக் கொல்லுதற் பொருட்டு விண்ணில் பாய்ந்தனன். அதனைக் குறிப்பாலுணர்ந்த அரிபிரமாதி தேவர்கள்....

“தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்

மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்

பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”

என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிருமுகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேயின் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் வைகும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபதுமனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருவாய்” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதில் அழித்தது.

“அரியும் அயனோடு அபயம் எனவே

  அயிலை இருள்மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.

சூரபதுமன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை என்ன செய்யும்?  இதன் திறத்தை தான் அழிப்பேன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில், நெருப்புப் போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர்வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத் தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினான்.

“வன்னியின் அலங்கல் கான்று, வான்தழை புகையின் அல்கிப்

பொன்னென இணர்கள் ஈன்று, மரகதம் புரையக் காய்த்து,

செந்நிற மணிகள் என்னத் தீப்பழம் கொண்டு, கார்போல்

துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.”

அட்ட நாகங்களும் திக்கு யானைகளும் சந்திர சூரியரும் எல்லா உயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன.  குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாம் தகர்ந்தன. நாரணன் உலகும் நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவித் திருக்கயிலையை நாடி ஓடினர். அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி அண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பெருநெருப்பு வடிவு தாங்கிச் சென்று,

“தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து  

ஆயிரகோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன

மீயுயர்ந்து ஒழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றங் கொண்டு

நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.”

மூதண்ட முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை எல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை வேற்படையானது இரு கூறாகப் பிளந்தது.

 “விடம்பிடித்த அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி

இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன

உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி

மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.”


மை நிற்கும் வட்டத்து அசுரரை --- 

மை – கருமை. மை நிற்கும் வட்டம் – கருமைலநிறம் பொருந்திய வட்ட வடிவான கடல்.


மக்கள் ஒக்கல் தெரிவை --- 

மக்கள் – ஈன்றெடுத்த பிள்ளைகள்.

ஒக்கல் – சுற்றத்தார்.

தெரிவை – இருபத்தைந்து முதல் முப்பது வயதிற்கு உட்பட்ட பெண். இங்கே மனைவியைகு குறிக்கும். 


ரத்னம் முத்தில் பணியும் --- 

பணி – அணிகலன். இரத்தினம் முத்து ஆகியவற்றால் செய்யப்பெற்ற அணிகலன்கள்.


மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் --- 

மட்டு – அளவு, எல்லை, குறைவு.

அளவின்றி, எல்லை இல்லாது, குறைவு இன்றிப் பெருகி உள்ள அடியவர்கள்.


துக்கித்து, எரிகள் தத்த வைக்கப் புகுது --- 

மேலே சொன்ன அனைவரும், உடலில் இருந்து உயிர் நீங்கிப் பிணமான பின்னர் துக்கத்தோடு சுடுகாட்டிற்குக் கொண்டு வந்து கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் இடுவர்.


பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே --- 

இப்படி நிலையில்லாத உடலை ஓம்பிச் சுகித்து இருப்பதற்குப் பொன்னையும் பொருளையும் தேடி அலைதல் கூடாது என்பதை அடிகளார் உணர்த்துகிறார்.


புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே --- 

நிலையான இன்பத்தில் உயிர்களை ஆழ்த்துவதற்காக, நிலையில்லாத இந்த உடம்பையும் படைத்து அளித்து, அதில் கருவிகளையும் கரணங்களையும் பொருந்த வைத்து அளித்த  இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி, “வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி” என்று மதித்து, வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதித்திடல் வேண்டும். “புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு, நீர் உண்டு. அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்” என்று அருளினார் அப்பர் பெருமான். 

உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய,காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவைகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமணம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள்.

குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையைப் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

“மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.”

 என்பது அப்பர் தேவாரம்.

 இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி ஆகும். பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால்,  இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.

“நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"

என்கிறார் தாயுமானார்.

 இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு,  விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமி, நான் என்ன சொல்லி, எப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க, "முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலே, என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான், 

திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம், திருமாலை அணிவித்தல்,  திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபாடுகளிலும்,  மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவே, சொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்? சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவே, அவர் அறிந்த மொழியால் பாடுவது,அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவே, 

இறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.

 இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். 

 

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.          ---  அப்பர்.

 

நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.

 நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.

 

"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 இதன் பொருள் ---

பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும்,  மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும், வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

 இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை.

 வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

 இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

“எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.”

 இதன் பொருள் ---

 கரும்புக் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனாருடைய திருவடியைச் சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

 நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை. 

 பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம். 

 பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".

 அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் கொல்லாமை, ஐம்பொறியடக்கம்,  பொறை,  அருள்,  அறிவு,  வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

 அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார்.

 மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர்.

 மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

 காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.

 மந்திரமலர்களை "அன்பு" என்ற நூலினால் அழகுறத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான். 

 அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.

 இம் மந்திரப் பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.

 இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

 உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம்,  மணிபூரகம், அநாகதம்,  விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம்.  "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான

 

வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?”

 

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

"வீண்பொழுது போக்காமலே,

நேயமுடனே தெளிந்து, அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து,இரு போதினும்

  நீர்கொண்டு,மலர்கொண்டு,பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்".

                                                                                    

என்கின்றது அறப்பளீசுர சதகம்.

 

நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார் சிவபரம்பொருள் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

 

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்

சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.

 

இப் பாடலில், இறைவனுக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்" என்று அருளி உள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்

"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே!" என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலி மகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

 

“அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

 

எத்தனை விதம் சொல்லி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கம் செ(ய்)யார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,

 

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி, அப்

பேய்ச்சிமுலை உண்ட கள்வன் மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

 

சித்தம் மகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!"       ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ் 

 

பெறுதற்கு அரிய பிறவியாகிய இந்த மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

“விரைவிடை இவரும் நினை, பிறவாமை

      வேண்டுநர் வேண்டுக, மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே! கைலைநா யகனே!”

 இதன் பொருள் ----          

 சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

 

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.

பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

 

கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை. கிரியை என்பது யோகத்தில் சென்று, ஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது, அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,

 

“உருகியும்,ஆடிப் பாடியும்,இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும்,...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற,நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?”

 

என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால், 

இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.

 

“யான் எனது என்று அற்ற இடமே திருவடியா”--- கந்தர் கலிவெண்பா.

 

ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.

 

நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானது, இறை ஆற்றலைத் தரும்.நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும். 

 

இறைவனை நினைந்து உருகி, திருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரை, அறிவு, உயிர், உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில், உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே,சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.

 

“உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்

     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு

     ஒன்றாக என்று ...... பெறுவேனோ”

                                                                                                

என்றார் அருணகிரிநாதர்.

 

சொல்லுகின்ற சொல்லையும்,அறிவையும்,உயிரையும், உணர்வையும் இறைவனது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் இட்டு அர்ச்சிக்க நினைக்கும் அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினைப் பெறுதல் வேண்டும். ஒன்றுபட்டு நினைத்தல் கூட்டு வழிபாடு. தனியாக வழிபடுவதை விட, கூட்டாக வழிபடுவது சிறப்பு.

எனவே,  இறைவனது பெருமையையும், தமது சிறுமையையும் உணர்ந்து, அன்போடு இறைவனது திருவடிகளை, சிறந்த சொல்மலர்களால் அடியார்களுடன் கூடி இருந்து வழிபடுவதே சிறந்த அர்ச்சனை ஆகும். அவ்வாறு இறைவன் திருவடிக்கு அருச்சனை புரிந்து வழிபட்டு உய்கின்ற புத்தியைத் தனக்கு அருளும் நாள் வன்று உண்டாகுமா? என்று முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிறார் அருணை வள்ளலார். நாமும் முறையிட்டுக் கொள்வோம்.


கருத்துரை


முருகா! தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.









ஔவையார் தனிப்பாடல்

ஔவையார் தனிப்பாடல்        


விநாயகப் பெருமானை வணங்குவார்க்கு அனைத்தும் எளிது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் திருக்கயிலைக்குச் செல்லும்போது ஔவையாரையும் அழைத்தனர். அவர் அப்போது தாம் செய்து கொண்டிருந்த விநாயகர் பூசையை முடித்துக் கொண்டு கயிலாயம் வருவதாகக் கூறி, பூசையை விரைவாகச் செய்யத் தொடங்கினார். அதை அறிந்த விநாயகர் ஔவையாரை நிதானமாகப் பூசை செய்யும்படியும், அவ்விருவருக்கும் முன்னதாக, தாம் அவரைத் திருக்கயிலாயத்தில் கொண்டு சேர்ப்பதாகவும் சொன்னார். ஔவையார், "சீதக் களப" என்று தொடங்கும் அகவற்பாவைப் பாடிப் பூசனையை நிறைவு செய்தார். விநாயகர் தமது துதிக்கையால் தூக்கி, ஔவையாரைத் திருக்கயிலாயத்தில் சேர்த்தார். தங்களுக்கு முன்னதாகவே எப்படித் திருக்கயிலாயத்திற்கு வந்து சேர முடிந்தது என்று கேட்ட சேரமான்பெருமாளுக்கு, பதிலாக ஔவையார் பாடல் ஒன்றைப் பாடினார். இப்படி ஒரு கதை உலவுகிறது. இதற்குப் பெரியபுராணத்தில் சான்று இல்லை. எப்படியாயினும் சரி. ஔவையார் பாடியதாகச் சொல்லும் தனிப் பாடலைப் பார்ப்போம்....


“மதுரமொழி நல்உமையாள் சிறுவன் மலர்அடியை

முதிரநினைய வல்லார்க்கு அரிதோ, முகில்போல் முழங்கி

அதிரவருகின்ற யானையும், தேரும், அதன் பின்சென்ற

குதிரையும் காதம், கிழவியும் காதம், குலமன்னனே.”


இதன் பொருள் ---


உயர்ந்த சேரர் குலத்தில் பிறந்த மன்னனே!  இனிய சொற்களைப் பேசும் உமாதேவியாரின் மகனாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்க்கு எந்தச் செயலும் செய்வதற்கு அரியது ஆகாது. ஆதலால், நான் இங்கு வந்து இருப்பது அரியது அல்ல. நிலம் அதிரச் செல்லும் யானையும்,  அதற்குப் பின்னர் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்குக் காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காதவழியே ஆகும்.


"நிலைகெட விண்அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலையிடை யானை ஏறி வழியே வருவேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத் திருப்பாட்டில் அருளியது காண்க.

37. நம்பினவர்க்கே இறைவன் அருள் உண்டு

“மந்திரமும், தேவும், மருந்தும், குருவருளும்,

தந்திரமும், ஞானம், தரும்முறையும், - யந்திரமும்,

மெய் எனில் மெய்யாய் விளங்குமே; மேதினியில்

பொய்எனில் பொய்யாகிப் போம்.” -- நீதிவெண்பா


உலகத்தில் மறைமொழிகளும், தெய்வமும், மருந்துகளும், ஆசானிடத்துப் பெறும் அருளும், நூல்களும், அறிவைத் தரும் வழிபாட்டு முறைகளும், மறைமொழியைப் பொருந்திய கட்டங்களும் ஆகிய இவ் ஏழும் உண்மை என்று நம்பினால், உண்மையாக விளங்கிப் பயன்கொடுக்கும்.  பொய் என்று நினைத்தால், பொய்யாகிப் பயன்படாது போகும்.


(மந்திரம் - மறைமொழி.  தேவு - தெய்வம்.  தந்திரம் - நூல்.  யந்திரம் - மறைமொழியைக் கட்டத்துள் அடக்கிப் பூசித்தல்.)


96. இளைத்தவன் மனைவி என்றால்...

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு!

     மிடியருக்குக் கனந்தான் உண்டோ?

வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ்

     தரும்உலக வழக்கம் பாரீர்!

ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்

     கண்டவரும் ஒன்றும் பேசார்!

இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்

     மச்சினியாய் இயம்பு வாரே.


இதன் பொருள் ---


    வளைத்த மலை எ(ன்)னும் சிலையார் தண்டலை சூழ்தரும் உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்  எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில் பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ வலிமை உடையோர் வீட்டில் உள்ள பெண்களைக் கண்டு ஒளித்திடுவார்; ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச்சினியாய் இயம்புவார் – ஆற்றலு அற்றவன்  மனைவி என்றாலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்; (ஆகையால்), களித்து வரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும் செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ - ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?


      சிவபெருமான் மேருமலையை திரிபுர தகனத்தின்போது) வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார். (சிலை – மலை) ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி' என்பது பழமொழி.


பாடல் 9

“அழுகு திரிகுரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவி

ஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா; - கழுகு

கழித்துஉண்டு அலையாமுன், காவிரியின் தென்பாற்

குழித்தண் டலையானைக் கூறு.”

இதன் பொருள் ---

    அழுகு திரி குரம்பை ஆங்கு அது விட்டு - அழுகும் இயல்புடைய திரிந்து கெட்டுப் போதற்கு இடமாகிய உடம்பை விட்டு, ஆவி ஒழுகும் பொழுது அறிய ஒண்ணா - உயிர் நீங்கும்போது அறிய ஒண்ணாது. கழுகு கழித்து உண்டு அலையா முன் - கழுகு உண்டு கழித்துச் சிதைந்து உடல் அலைபடாத முன்னம்; காவிரியின் தென்பால் – காவிரியின் தென்கரையில் அமைந்து உள்ள, குழித் தண்டலையானைக் கூறு – குழித்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோஇல் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவரின் திருநாமத்தைக் கூறுவாயாக.

    அழுகு திரி குரம்பை – அழுகு குரம்பை, திரி குரம்பை எனத் தனித்தனி கூட்டுக. அழுகுதல் – கெடுதல். கணம் தோறும் வளர்தலும், கணம் தோறும் கெடுதலும் உடைய உடம்பு இது. திரிதல் – விகாரப் படுதல். “வேற்று விகார விடக்கு உடம்பு” என்றார் மணிவாசகப் பெருமான். ஒழுகுதல் – ஓட்டைக் குடத்தில் இருந்து நீர் நீங்குவது போல, உடலில் இருந்து உயிர் பிரிதல். “திருத்தண்டலை” என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். “நீள்நெறி” என்பது அத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர். தற்காலத்தில் ‘தண்டலைச்சேரி’ என்றும் ‘தண்டலச்சேரி’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது.  இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானார் பாடி வழிபட்ட திருத்தலம். 

    குழித்தண்டலை என்பதை, குழித்தலை என்று கொள்வோரும் உண்டு. குளித்தலை என்றும் வழங்கப்படுகிறது. இது கடம்பர் கோயில் என விளக்கமாய் அறியப்படுவது. திருக் கடம்பந்துறை என்று திருமுறையில் அறியப்படுவது. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் குளித்தலை என்னும் நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்தும், திருச்சியில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் உள்ளது.


36. தீயவரிடம் இருந்து விலகி இருத்தல்

“பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறி அன்றோ? - காதுமத

மாகரத்த யானை வழிவிலகல், புன்மலம்தின்

சூகரத்துக்கு அஞ்சியோ? சொல்.” -- நீதிவெண்பா


போரில் கொல்லுகின்ற மதம் பொருந்திய பெரிய துதிக்கையினை உடைய யானையானது வழிவிட்டுச் செல்லுதல், மலம் தின்னுகிற தாழ்ந்த பன்றிக்கு அச்சப்பட்டோ? அன்று. தனது பெருந்தன்மையால் விலகிச் செல்கின்றது. அதுபோல, அறிவில்லாத கீழோரைக் கண்டால், அறிவு மிக்க பெரியோர்கள் பெருந்தன்மையோடு வழி விலகிச் செல்லுதல் நீதிநெறி ஆகும், கீழ்மக்களுக்கு அஞ்சிச் செல்கின்றார் என்பதன்று.


(காதுதல் - கொல்லுதல்.  கரத்த – கையை உடைய.  சூகரம் - பன்றி.)


96. பிடாரி மனைவி ஆனால்....


அடுத்தமனை தொறும்புகுவாள்! கணவன்உணும்

     முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!

கடுத்தமொழி பேசிடுவாள்! சிறுதனம்தே

     டுவள்! இவளைக் கலந்து வாழ்தல்

எடுத்தவிடைக் கொடியாரே! தண்டலையா

     ரே! எவர்க்கும் இன்பம் ஆமோ?

குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப்

     பெண்டுவைத்துக் கொண்ட தாமே.


இதன் பொருள் ---


    எடுத்த  விடைக் கொடியாரே - இடபக்கொடியினை உயர்த்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! அடுத்த மனைதொறும் புகுவாள் - அயல் வீடுகளிலெல்லாம் நுழைவாள், கணவன் உ(ண்)ணும் மு(ன்)னம் உண்பாள் - கணவன் உண்பதற்குமுன் தான் உண்பாள், அடக்கம் இல்லாள் – அடங்கி இருக்கமாட்டாள், கடுத்தமொழி பேசிடுவாள் - வெறுப்பாகவே  உரையாடுவாள், சிறு தனம் தேடுவள் - (தனியே) சிறு சேமிப்புச் செய்வாள், இவளைக் கலந்து வாழ்தல் எவர்க்கும் இன்பம் ஆமோ - இப்படிப்பட்டவளைக்  கூடி வாழ்வது  யாருக்குத்  தான் மகிழ்ச்சியாக இருக்கும்? (இப்படிப்படவளை மணந்து வாழ்வது) குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டு வைத்துக் கொண்டது - குடிகெடுவதற்குப் பிடாரியை மனைவியாகக் கொண்டதை, ஆம் – ஒத்த செயல் ஆகும்.


     “பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” என்பது கலித்தொகை. ஐந்தறிவு உள்ள விலங்குக்கே இந்த அன்பு விளங்குகிறது. விலங்கினும் மேம்பட்ட எப்படி இருக்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். “கறுத்தமுலைச் சூல் பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக் கைந் நீட்டும்” என்பது பதினொன்றாம் திருமுறை. கறுத்த முலையினை உடைய பெண்யானைக்கு, ஆண் யானையானது சந்தன மரத்தை ஒடித்துத் தன் துதிக்கையால் நீட்டிக் கொடுக்கிறதாம். “சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து, யானை மந்தண் மடப்பிடியின் வாய்க் கொடுப்ப வந்து, அதன் கண்களிக்கத் தான் களிக்கும்” என்பதும் பதினொன்றாம் திருமுறை. ஆண்யானையானது, சந்தன மரத்தின் அழகிய பசுமையான தழையை தேனில் தோய்த்து பெய்யானையின் வாயில் கொடுக்கிறதாம். அந்த அன்பினை நோக்கிப் பெண்யானையில் கண்களில் நீர் துளித்தது. பெண்யானை மகிழ்ந்ததைப் பார்த்து, ஆன்யானை மகிழ்ந்தது. மனிதனுக்கு அமைந்து இருக்க வேண்டிய நற்பண்புகள் இவை இவை என்று நமது முன்னோர்கள், விலங்கினங்களைக் காட்டி நமக்கு அறிவுறுத்திய அற்புதக் காட்சிகள் இவை ஆகும். எனவே, முன் ஊட்டிப் பின் ஊட்டுதல் அன்பு மிகுந்தோர் செய்யும் செயல் ஆகும் என்பதனை அறிக. 


பிடாரி - காளி. இவள் சிவனுடன் வாதாடினாள்  என்று கூறுவதால், அடங்கா மனைவியை, ‘அடங்காப்பிடாரி' என்று கூறுவது மரபு.  பின்வரும் பாடல்களின் கருத்தை இங்கு. ஐத்து எண்ணுக.


“எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.” --- நாலடியார்.


தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.


"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்." -- மூதுரை


இதன் பொருள் ---


    நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ, மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.


நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 


பாடல் 8


தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது,

பெட்டப் பிணம்என்று பேர்இட்டு, கட்டி

எடுங்கள்,அத்தா! என்னாமுன், ஏழைமட நெஞ்சே!

நெடுங்களத்தான் பாதம் நினை.


        ஏழை மட நெஞ்சே! – அறிவில்லாத நெஞ்சமே! தொட்டுத் தடவி – உடலைத் தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும், துடிப்பு ஒன்றும் காணாது – நாடித் துடிப்பு ஒரு சிறிதும் அறியப்படாமையால்,  பெட்ட பிணம் என்று பேர் இட்டு – வெறும் பிணம் என்று பேரைச் சூட்டி;  அத்தா கட்டி எடுங்கள் என்னாமுன் – அத்தா! பிணத்தைப் பாடை கட்டி எடுங்கள் என்று சொல்லும் நிலை வருவதன் முன்னம், நெடுங்களத்தான் பாதம் நினை – திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நினைப்பாயாக.

விளக்கம் --- தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது – கணை பார்வை இழந்து, செவி கேட்பதும் அடங்கி, கேச்சும் மூச்சும் இன்றி உணர்வு இழந்து கிடக்கின்ற நிலையில், உயிர் உள்ளதா என்று அறிந்து கொள்வதற்குக் கையாளும் முறை நாடித் துடிப்புப் பார்த்தல். உடலை விட்டு உயிர் பிரிந்த நிலையில் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு இருக்காது. அந்த நிலையில் முன்பு பலராலும் விரும்ப்பபட்உ, ஒரு பெயர் இட்டு அழைக்கப்பட்ட இந்த உடலைப் பிணம் என்று கூறுவர். “பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு” என்பது திருமூரல் திருமந்திரம். உயிருள்ளபோது ஒவ்வோர் உடம்புக்கும் வெவ்வேறு பெயர். உயிர் பிரிந்தபின் எல்லா உடம்புகளுக்கும் பிணம் என்பதே பொதுப் பெயர். 

        அத்தா – அக்காள் கணவன், அத்தை மகன், அம்மான் மகன்,உடன்பிறந்தாள் கணவன், கணவன் ஆகியோரைக் குறிக்கும் சொல். தலைவன் எனவும் பொருள்படும். “அத்தா உனக்கு ஆளாய்” என்பது சுந்தரர் தேவாரம்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.


    உடம்பை விட்டு உயிர் பிரிந்தது, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் செய்தி அறிந்து, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, வந்து, வாய்க்கு வந்த்தை எல்லாம் பேசி முழக்கம் இட்டும், அழுதும், ஓய்ந்து போவார்கள். பலவிதமாகப் பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்ட பாடையின் மீது பிணத்தைக் கிடத்துவார்கள்.

     பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும். பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று, தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இது" என்றார் அருணகிரிநாதர்.

    “கட்டி எடுங்கள்” பாடயைக் கட்டிப் பிணத்தை எடுங்கள். “ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு” என்பது திருமூலர் திருமந்திரம். பாடை என்பது விதவிதமாக இருக்கும் என்பதால், “நானாவிதச் சிவிகை” என்றார் அருணகிரிநாதர்.

        பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம், அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்து, உண்மைப் பொருளை உணராமல், உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும், அதை உணரும் பக்குவம் இன்மையால், தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

 

“உணர்த்தும் உனை உணராமல்,உணர்ந்தவையே நாடி

இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.”   --- தாயுமானார்.


      கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்து, பிறவி பொய் எனவும், வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருக, பிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும். அந்த நிலையில், பிறவி நோய்க்கு மாமருந்தாக உள்ளவன் இறைவன். அவனே பவரோக வயித்தியநாதன் என்னும் நினைப்பு வந்து வழிபடவேண்டும் என்னும் எண்ணம் மிகும். இறைவன் தலங்கள் தோறும் எழுந்தருளி உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறான். திருநெடுங்களம் என்பது ஒரு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய இத்தலத் திருப்பதிகம், அதனை ஓதுவோர்க்கு வரும் பலவகை இடையூறுகளையும் நீக்கிக் காக்க வல்லது. 


35. அறம் செய்யக் காலம் ஏன்?


“உள்ளபொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லாமல்,ஓர்

எள்ளளவும் ஈய இசையுமோ? - தெள்ளுதமிழ்ச்

சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத்துக்கு அருந்த

நீரளித்த தோமுந்நீர் நின்று.” -- நீதிவெண்பா


தெளிவான தமிழ் இலக்கணத்தை இயற்றித் தந்தவராகிய அகத்தியர், தனது நீர் முழுவதையும் அருந்தி விட்ட காலத்தில், கடலானது நீரைக்கொண்டு நின்று தன்னிடம் வந்தடைந்த மேகத்துக்கு அருந்த நீர் கொடுத்ததோ? இல்லை.  அதுபோல, தன்னிடத்துப் பொருள் உள்ள காலத்தில் எதுவொன்றும் மகிழ்ந்து கொடுக்க இயலுமே அல்லாமல், பொருள் இல்லாத காலத்தில் ஓர் எள் அளவாயினும் இரப்பார்க்கு ஈய முடியுமோ? முடியாது. (பொருள் உள்ள போதே அறம் செய்தல் வேண்டும். இல்லாதபோது, எண்ணினாலும் செய்ய முடியாது)


(சீர் - இலக்கணம்.  அளித்தோன் - அகத்திய முனிவர்.  முந்நீர் - கடல்.)


95. நாணம் அற்றார் நிலை

சேணிலகு மதிச்சடையார் தண்டலையார்

     வளநாட்டிற் சிறந்த பூணின்

காணவரும் நாணுடையார் கனமுடையார்

     அல்லாதார் கருமம் எல்லாம்

ஆணவலம்! பெண்ணவலம்! ஆடியகூத்து

     அவலம்! என அலைந்து கேடாம்!

நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்

     வாயிலெனும் நடத்தை ஆமே.


இதன் பொருள் ---

    சேண்  இலகும்  மதிச்  சடையார்  தண்டலையார் வளநாட்டில் - வானில் உலவும் பிறைத் திங்கள் அணிந்த திருச்சடையினை உடையவரும், திருதண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டில், சிறந்த பூணின் காண வரும் நாணுடையார் கனம் உடையார் அல்லாதார் கருமம் எல்லாம் - சிறப்பு மிக்க அணிகலன் போலக் காணப்படும் நாணமும் பெருமையும் இல்லாதவரின் செயல்கள் யாவும், ஆண் அவலம் பெண் அவலம் ஆடிய கூத்து அவலம் என அலைந்து கேடு ஆம் - ஆடவரும் வீணர், பெண்டிரும் வீணர், அவர்கள் நடத்திய கூத்தும் வீண், என்னும்படியாக அலைவுற்றுக் கேடு ஆகும்.(அச்செயலானது, நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும் வாயில் எனும் நடத்தை ஆம் - வெட்கம் அற்ற கூத்தாடிச்சிகளுக்கு நான்கு திசையினும் வழி என்னுமாறு ஆய்விடும்.

      நன்றாகக் கூத்தாடும் திறமையற்ற கூத்தாடும் பெண்டிர் தம்மைப் பலரும் பழிக்கும்போது வெட்கித் திசை நோக்காமல் தப்பித்து ஓடுவர். அதுபோல நாணமும் மானமும் இல்லார் செயலும் பலரும் பழிக்கும்படி வீணாகும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “‘நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்” என்பது என்பது பழமொழி போலும்.

ஆண் ஒருவன் பெண் வேடம் இட்டாலும் அவலமாகவே முடியும். பெண் ஒருத்தி ஆண்வேடம் புனைந்தாலும் அவலமாகவே முடியும். அடியார் போல வேடமிட்டுக் கொண்டு திரியும் அவலர்களைக் குறித்து இப்பாடல் எழுந்ததாகக் கொள்ளலாம். “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்?” என்பார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார். “சிவ வேடம்”, “அவ வேடம்” என இரண்டு பகுதிகளைத் திருமந்திரத்தில் நாயனார் வகுத்து இருப்பது காண்க.

வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவில் உள்ள பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“நிலைகாட்டி ஆண்டநின் தாட்கு அன்பு

    இலாது, அன்பில் நீண்டவன்போல்

புலைகாட் டியமனத் தேன்கொண்ட

     வேடம், புனைஇடைமேல்

கலைகாட்டி, கட்டு மயிர்த்தலை

     காட்டி, புன் கந்தைசுற்றி

முலைகாட்டி, ஆண்மகன் பெண்வேடம்

     காட்டும் முறைமை அன்றே.”.  – திருவருட்பா.


     பெருமானே! உலகின் நில்லாத இயல்பு கண்டு உணர்ந்து, தேவரீரது திருவடிக் கூழ் பெறும் இன்பமே நிலையான இன்பம் அடியேனது உணர்வில் இருந்து உணர்த்தி ஆட்கொண்டாய். அந்த நன்றிநினை உணர்ந்து உம்மிடத்துப் பேரன்பினைச் செலுத்த வேண்டும். தேவரீரது திருவடிக்கு உண்மையில் அன்பு இல்லாமல், மிக்க அன்பினை உடையவன்போல் புறத்தார் காணுமாறு, அடியேன் பூண்டு இருக்கும் அடியவர் வேடம் பூண்டு உலாவுகின்றேன். இது ஆண்மகன் ஒருவன், பெண்ணின் இடுப்பினைப் போலப் புனையபட்ட இடுப்பில் புடைவையைச் சுற்றிக் கொண்டு, கட்டு மயிரை வைத்துக்  கூந்தல் போலக் காட்டி, இல்லாத முலைக்காக, கந்தைத் துணியைப் பந்துபோல் சுருட்டிக் கட்டி, பெண்வேடம் பூண்டு தோன்றும் முறைமையாக இருக்கிறது. 


அறிவு

அறிவு ---      பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதனுக்குத் தனியான, தலையான அறிவு ஒன்று உண்டு. அதுவே ஆறாவது அறிவு. நல்லதன் நலனும் அல்லதன் ...