055. செங்கோன்மை - 06. வேல் அன்று

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் போரில் வெற்றியைத் தருவது அவனது வேற்படை அல்ல. அவனுடைய கோடாத செங்கோலே ஆகும்" என்கின்றார் நாயனார்.

இதற்குத் திருக்குறள்....

“வேல் அன்று வென்றி தருவது, மன்னவன்

கோல், அதுவும் கோடாது எனின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் --- மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், 

அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்.

(கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல் மேல் நின்றதாக உரைக்க)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“கண்கொண்டான் பொன்னிக் கரைகட்ட வாரானை

எண்கொண்ட சோழன், இரங்கேசா! --- மண்கொண்ட

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.”

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! பொன்னிக் கரை - காவேரிக் கரையை, கட்ட வாரானை - அடைக்க வாராத பிரதாபருத்திரன் என்னும் அரசனை, எண் கொண்ட சோழன் - செங்கோலரசன் என்று யாவரும் மதித்து இருந்த சோழ மகாராஜன், கண் கொண்டான் - அவனுடைய மூன்று கண்களில் ஒரு கண்ணைக் குத்தி அபராதமாகக் கொண்டான், (ஆகையால், இது) வென்றி தருவது - வெற்றியைத் தருவது, மண் கொண்ட - பூமியைத் தன் ஆட்சியில் கொண்ட, மன்னவன் வேல் அன்று - அரசனுடைய வேலாயுதம் அல்ல, கோல் - அவனுடைய கோலாகும், அதுவும் - அந்தக் கோலும், கோடாது எனின் - ஒரு பக்கம் சாயாமல் செங்கோலாய் இருக்குமாயின் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- அரசனுக்கு வேலாயுதத்தினும் கோலாயுதம் சிறந்ததாம்.

விளக்கம் --- காவேரிக் கரைகொண்ட சோழமகாராஜன் அரசாளும் காலத்தில், அந் நதியின் கரையைக் கட்ட ஐம்பத்தாறு தேசத்தரசர்களுக்கும் அளந்து விட்டிருந்தான். எல்லாரும் தத்தம் அளவின்படி கரை கட்டி முடித்தார்கள். ஒருவன் மட்டும் சற்றே அசட்டையாய்த் தன் பங்கைக் குறித்த காலத்தில் கட்டி முடிக்காமல் சும்மா இருந்தான். அவன்தான் பிராதபருத்திரன்.  சோழன் கரை கட்டி முடிந்ததை மேற்பார்த்து வரும்போது, கட்டி முடியாதிருந்த கரையைக் கண்டு, "இது யார் பங்கு" என்றான்.  கூட இருந்தவர்கள், "இது பிராதபருத்திரன் பங்கு" என்றார்கள். அது கேட்ட சோழன், அவன் படத்தை வரவழைத்து உருவத்தைக் கவனித்து நோக்கினான். அவனுக்கு எல்லார்க்கும் இருப்பதுபோல இரண்டு கண்கள் இன்றி, முன்று கண்கள் இருந்தன். "இதனால் தான் இவனுக்குச் செருக்கு அதிகம்" என்று சோழன் அவ் உருவத்தில் இருந்த மூன்றாம் கண்ணாகிய நெற்றிக் கண்ணைத் தன் கை வாளால் குத்திக் குருடாக்கினான். சோழன் செங்கோலன் ஆகையால், அவன் செய்த தண்டனை படத்திற்கு ஆயினும், அம் மன்னனும் ஒரு கண் இழந்து, அவமானப்பட்டு, விரைந்து வந்து தன் பங்குக் கரையைக் கட்டிச் சோழனை வணங்கி வேண்டிக் கொண்டான். அது கண்டார் யாவரும் சோழன் செங்கோன்மைக்கு வியந்து மகிழ்ந்தார்கள்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மங்காத மங்குல்தனை மாறன்விலங்கு இட்டதுஅவன்

செங்கோன்மை மகிமை சிவசிவா --- எங்கேனும்

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்

கோல்அதூஉம் கோடாது எனின்.”

மங்குல் - மேகம். மாறன் - பாண்டியன். 

இதன் பொருள் ---

ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள்.  சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள்.  உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான்.  இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான் போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான்.  பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு முகில்கள் பொதிய மலைச் சாரலில் மேயக்கண்டு அவைகளைச் சிறையிலிட்டான்.  இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்பு கூர்ந்து முகில்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான்.  அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான்.  உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“அங்கோல் அவிர்தொடி!ஆழியான் ஆயினும்

செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்

செங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்

தண்கோல் எடுக்குமாம் மெய்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

அம் கோல் அவிர் தொடி - அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!, வேந்தர்கண் - அரசன் பகையரசர்மாட்டு, வெம் கோன்மை சிறிது வேண்டும் எனினும் - கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினான் என்றாலும், செங்கோலன் அல்லாக்கால் - தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாதவிடத்து, ஆழியான் ஆயினும் - ஆழிப்படையை உடைய திருமாலே என்றாலும், சேர்ந்தாரும் - தன்னைச் சேர்ந்தவர்களும், எள்ளுவர் - இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே, மெய் - உண்மையாக, எடுக்கும் - வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.

        அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலே காரணமாம்.


“மன்னவன் வலிசெங் கோலினால் அன்றி,

வாளினால், சேனையால் இல்லை;

நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு

நாடெலாம் பேரரண், உலகின்

மன்னுயிர் எல்லாம் அவன்படை, அன்னோர்

மனம் எலாம் அவன் உறை பீடம்

இன்ன தன்மையனாய் அரசு அளிப்பவனை

இகல்செயுந் தெறுநரும் உளரோ.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  வாளும் காலாளும் மன்னனுக்கு வலியும் வெற்றியும் தருவன அல்ல. அவன் செங்கோலே அவனுக்கு வலியாகும்; வெற்றியாகும். முறை தவிரா மன்னனுக்கு நாடெல்லாம் கோட்டை; குடிகளெல்லாம் படை; குடிகள் மனமெல்லாம் இருக்கை; இத்தகைய மன்னனுக்குப் பகைவரும் உண்டாவரோ? (உண்டாகார்.) 


“உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,

மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்

தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,

அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?” ---  கம்பராமாயணம், மந்தரை சூழ்ச்சிப் படலம்.

இதன் பதவுரை ---

உருளும் நேமியும் - (வட்ட வடிவாய் இருத்தலின்) உருண்டு செல்லும் சக்கரத்தையும்;  ஒண் - ஒள்ளிய;  கவர் எஃகமும் - முக்கிளையாய் உள்ள வேலாகிய சூலவேலையும்;  மருள் இல் - மயக்கமற்ற;  வாணியும் - சொல் மகளையும்;  வல்லவர் - உடைமையாகக் கொண்டு வல்லமை பெற்றவராய; மூவர்க்கும் - முக்கடவுளர்களுக்கும்; தெருளும் - தெளிந்த ;நல் அறமும் -  நல்ல தருமமும்;  மனச் செம்மையும் - கோடுதல் இல்லாத நேரிய மனமும்; அருளும் - இரக்கமாகிய கருணையும்;  நீத்தபின் - விட்ட பிறகு;  ஆவது - நன்மை;  உண்டாகுமோ - உளதாகுமோ?’  (ஆகாது என்றபடி).

     ஆற்றல் படைத்த முத்தேவரும் தம் ஆற்றலால் அன்றி, அறம், நடுவு நிலைமை,  அருள் என்னும் நற்பண்புகளைக் கொண்டே அனைத்தையும் சாதிக்க இயலும் என்பதை உணர்ந்து,  நீயும் இம்மூன்றையும் பற்றி  இரு என்று வசிட்டன் இராமனுக்குக் கூறினன். 

     


055. செங்கோன்மை - 05. இயல்புளிக் கோலோச்சும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "இயற்கையான நீதிமுறையில் ஆட்சி புரிகின்ற மன்னனுடைய நாட்டில் மழை தவறாமல் பெய்யும், விளைபொருள்களும் மிகும்" என்கின்றார் நாயனார்.

மேகம் பெய்யவேண்டிய காலத்துத் தவறாது மழையைப் பொழிதலும், விளை நிலங்கள் விளையவேண்டிய காலத்து, குறைவு இல்லாமல் விளைதலும் நல்லரசாட்சியால் உண்டு என்றார்.


வேதம் ஓதிய வேதியர்க்கு ஒர் மழை;

    நீதி மன்னர் நெறியினுக்கு ஓர் மழை;

    மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர் மழை;

    மாதம் மூன்று மழைஎனப் பெய்யுமே.


    அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை;

    வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை;

    புருடனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை;

    வருடம் மூன்று மழையெனப் பொய்க்குமே.


என வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களால் இதனைத் தெளிக.


இதற்குத் திருக்குறள்...

“இயல்புஉளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட,

பெயலும் விளையுளும் தொக்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பெயலும் விளையுளும் தொக்கு --- பருவமழையும் குன்றாத விளைவும் ஒருங்கு கூடி, 

இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட --- நூல்கள் சொல்லிய இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின் கண்ணவாம்.

('உளி' என்பது மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு வளம் சுரக்கும் என்பதாம்.)



பின்வரும் பாடலும் இதனையே குறித்திருப்பது காண்க.


“வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்

     வாழ்வுதரும் உதவி புவனம்,

  வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவி

     வாழ்வுபெற் றிடுமன் னராம்!


தேன்அமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குஉதவி

     சேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;

  சேர்குடி படைக்குஉதவி விளைபயிர்! பயிர்க்குஉதவி

     சீர்பெற வழங்கு மழையாம்!


மேல்நிமிர் மழைக்குஉதவி மடமாதர் கற்புஒன்று;

     வேந்தர்தம் நீதி ஒன்று;

  வேதியர் ஒழுக்கம்ஒன்று; இம்மூன்று மேஎன்று

     மிக்கபெரி யோர்உரை செய்வார்,


ஆன்அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே!

     அதிபனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!” -- அறப்பளீசுர சதகம்.


      இதன் பொருள் ---

    ஆன் அமர் நெடுங்கொடி உயர்த்த எம் இறைவனே - ஏறு எழுதிய நீண்ட கொடியை உடைய எமது இறைவனே! அதிபனே - உயிர்களுக்கு அரசனே! அருமை மதவேள் - அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு - எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

வானவர் பிதிர்க்கள் முச்சுடர் மூவர் கோள்கட்கும் வாழ்வு உதவி தரும் புவனம் - தேவர்களுக்கும், தென்புலத்தாருக்கும், ஞாயிறு திங்கள் அக்கினி என்னும் முச்சுடர்களுக்கும், பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூன்று கடவுளர்க்கும், ஒன்பது கோள்களுக்கும் வாழ்வதற்கு பூசனை முதலானவைகளை இயற்றி , நிவேதனப் பொருள்களை அளித்து உதவி செய்வது இந்த உலகம், 

வளம் மிக்க புவனம் தனக்கு மேன்மேல் உதவி வாழ்வு பெற்றிடும் மன்னர் ஆம் - வளம் நிறைந்த இந்த உலகத்திற்கு மேலும் மேலும் வளம் சிறக்க உதவியாக இருப்பவர்கள் வாழ்வில் சிறந்த அரசர்கள் ஆவர், 

தேன் அமர் நறுதொடையல் புனை மன்னவர்க்கு உதவி சேர்ந்த குடிபடை வர்க்கம் ஆம் - தேன் பொருந்திய மணம் மிக்க மலர்களால் ஆன மாலைகளை அணிந்த அரசர்கட்குத் துணையானவை, அந்த அரசரைச் சார்ந்த குடி மக்ககளும் படைகளும் ஆகும், 

சேர் குடி படைக்கு உதவி விளை பயிர் - அந்த அரசரைச் சார்ந்து இருக்கக்கூடிய குடிகளுக்கும், படைகளுக்கும் துணையாக விளங்குவது விளைந்த பயிராகும், 

பயிர்க்கு உதவி சீர்பெற வழங்கும் மழை ஆம் - பயிர்களுக்குத் துணையாக விளங்குவது சிறப்புறப் பெய்யும் மழை ஆகும், மேல் நிமிர் மழைக்கு உதவி - வானத்தில் இருந்து பரவிப் பெய்யும் மழைக்குத் துணையாக இருப்பன, மடமாதர் கற்பு ஒன்று - இளமங்கையரின் கற்பு ஒன்றும், வேந்தர் தம் நீதி ஒன்று - அரசர்களின் நீதி தவறாத முறைமை ஒன்றும், வேதியர் ஒழுக்கம் ஒன்று - அந்தணர்களின் ஒழுக்கம் ஒன்றும், ஆகிய, இம் மூன்றுமே என்று மிக்க பெரியோர் உரை செய்வார் --- இவை மூன்றுமே என்று அறிவில் சிறந்த பெரியோர் சொல்லுவர்.

வாழ்க்கைத் துணையும், ஊரிலே உள்ள அந்தணர்களும், நாட்டை ஆளும் மன்னவரும் தத்தமது நெறியிலே தவறாமல் ஒழுகினால், உலகில் மழை வளம் சிறக்கும். அதனால்,உலக உயிர்கள் பசிப்பிணி இன்றி வாழும். விழாக்களும், வழிபாடும் சிறக்கும். தானமும் தவமும் சிறக்கும். 


     


பொது --- 1125. செட்டாகத் தேனை

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

செட்டாகத் தேனை (பொது)


முருகா! 

உலுத்தரைப் பாடி உழலாமல், 

உன்னைப் பாடி உய்ய அருள்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


செட்டா கத்தே னைப்போ லச்சீ

     ரைத்தே டித்திட் ...... பமதாகத்


திக்கா மற்பா டுற்றா ரிற்சீ

     ருற்றா ருக்குச் ...... சிலபாடல்


பெட்டா கக்கூ றிப்போ தத்தா

     ரைப்போல் வப்புற் ...... றுழலாதே


பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்

     சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ


எட்டா நெட்டா கத்தோ கைக்கே

     புக்கோ லத்திட் ...... டிமையோர்வா


னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா

     னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா


முட்டா மற்றா ளைச்சே விப்பார்

     முற்பா வத்தைக் ...... களைவோனே


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


செட்டாகத் தேனைப் போலச் 

     சீரைத் தேடித் திட் ...... பம் அதாக,


திக்காமல் பாடு உற்றாரில், சீர்

     உற்றாருக்கு, ...... சிலபாடல்


பெட்டாகக் கூறிப் போதத்தா-

     ரைப் போல் வப்புற்று ...... உழலாதே,


பெற்றாரில் சார்வு உற்றாய்! நல் தாள்

     சற்று ஓதப் பெற் ...... றிடுவேனோ?


எட்டா நெட்டாகத் தோகைக்கே

     புக்கு ஓலத்து இட்டு, ...... இமையோர், வா-


னில் பாரில் சூழச் சூரைத்தான்

     நெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா!


முட்டாமல் தாளைச் சேவிப்பார்

     முன் பாவத்தைக் ...... களைவோனே!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை

எட்டா நெட்டாகத் தோகைக்கே புக்கு --- நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது ஆரோகணித்து,

ஓலத்திட்டு இமையோர் வானில் பாரில் சூழ --- எங்களைக் காத்தருள்க என்று ஓலம் இட்ட தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் சூழ்ந்து இருக்க,

சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா --- சூரபதுமனை அணுகி அவனை வெட்டிப் போர் புரிந்த வேலாயுதரே!

முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே --- தடைபடாமல் தேவரீரது திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவரே!

முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்

என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

சுத்தா --- தூயவரே!

முத்தா --- பற்று அற்றவரே!

முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடி --- சிறுகச் சிறுகத் தேனைப் போல இனிமை தரும் சொற்களையும் கருத்தையும் நாடி, 

திட்பம் அதாக –-- திட்பமான சொற்களால்,

திக்காமல் பாடு உற்றாரில் --- தடை இல்லாமல் பாடுகின்ற திறம் கொண்டவர்களைப் போல,

சீர் உற்றாருக்குச் சில பாடல் பெட்டாகக் கூறி --- செல்வம் படைத்தவர்கள் மீது பொய்யாகச் சில பாடல்களைக் கூறி,

போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே --- அறிவு மிக்கவனைப் போல போலியாக உழன்று திரியாமல்,

பெற்றாரில் சார்வுற்றாய் --- ஈன்ற தாய் தந்தையரைப் போல அடியேன் மீது அன்பைப் பொழிகின்ற பெருமானே!

நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ --- தேவரீரது நல்ல திருவடிளைச் சற்றேனும் புகழ்ந்து வழிபடும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?


பொழிப்புரை


“எங்களைக் காத்தருள்க” என்று ஓலம் இட்ட தேவர்கள் விண்ணிலும், மண்ணிலும் சூழ்ந்து இருக்க, நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது ஆரோகணித்துச் சூரபதுமனை அணுகி அவனை வெட்டிப் போர் புரிந்த வேலாயுதரே!

தடைபடாமல் தேவரீரது திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவரே!

முத்தி நிலைக்கு அதிபரே!

ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்

என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

தூயவரே!

பற்று அற்றவரே!

உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

சிறுகச் சிறுகத் தேனைப் போல இனிமை தரும் சொற்களையும் கருத்தையும் நாடி, திட்பமான சொற்களால், தடை இல்லாமல் பாடுகின்ற திறம் கொண்டவர்களைப் போல, செல்வம் படைத்தவர்கள் மீது பொய்யாகச் சில பாடல்களைக் கூறி, அறிவு மிக்கவனைப் போல போலியாக உழன்று திரியாமல், ஈன்ற தாய் தந்தையரைப் போல அடியேன் மீது அன்பைப் பொழிகின்ற பெருமானே! தேவரீரது நல்ல திருவடிளைச் சற்றேனும் புகழ்ந்து வழிபடும் பேற்றினை அடியேன் பெறுவேனோ?

விரிவுரை

முற்காலத்தில் தமிழ்ப் புலவர்கள் பாடி வைத்த அருமையான பாடல்களில் பொதிந்து உள்ள இனிய சொற்களைத் தேடித் திருடி, அவற்றைத் தமது பாடலில் வைத்து, அருமையான தமிழால், இறைவனைப் பாடாமல்,  காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியது போல்,  தனமுடையவர்களைத் தேடிச் சென்று அருமையினும் அருமையான இனிய தமிழை, இறைவனுக்கு அர்ப்பணியாமல் அழிந்து போகின்றவர்களும், பரமலோபிகளும், மகா மூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள்.  அருளாளர்கள் பாடி வைத்த பாடல்களில் சொற்களைத் தேடுவது, சிறிது சிறிதாகப் பல பாடல்களை நாடிச் சென்று தேனைத் தேருகின்ற நிலைக்குக் காட்டி “செட்டாகத் தேனைபோலச் சீரைத் தேடி” என்று சொல்லி, இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பாடல்களில் உள்ள பொருத்தமான சொற்களைத் தேடி என்று அடிகளார் குறிப்பிட்டார்.  இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழின் முற்பகுதியில் குறிப்பிட்டு, அத்தகைய நிலையைத் தவிர்த்து இறைவனைப் பாடி உய்யும் அறிவை அருளுமாறு வேண்டுகின்றார்.

மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அர்ச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனமிரங்கி அரைக்காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.


“அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கஞ் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி,அப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!”               ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்


“நலம்இலாதானை நல்லனே என்றும்,

         நரைத்த மாந்தரை இளையனே,

குலமிலாதானைக் குலவனே என்று

         கூறினும் கொடுப்பார்இலை,

புலம்எலாம்வெறி கமழும் பூம்புக

         லூரைப் பாடுமின் புலவீர்காள்,

அலமராது அமருலகம் ஆள்வதற்கு

         யாதும் ஐயுறவு இல்லையே”. -- சுந்தரர் தேவாரம்.


ஓலத்திட்டு இமையோர் வானில் பாரில் சூழ சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா --- 

முருகப் பெருமானுடைய விசுவரூபத்தைக் கண்டு வெருண்ட சூரபதுமன், "முருகப் பெருமானை வெல்லுவதும் கொல்லுவதும் பின்னர் ஆகட்டும். இக் குமரனைக் கொணர்ந்து என்னுடன் போர் புரிய விடுத்த தேவர் யாவரையும் முன்னே கொல்லுவன்" என்று சீறினான். கதிரவனும் அஞ்ச, உலக முழுதும் ஓரே இருள் வடிவாக நின்று ஆர்த்தான். ஆலாலவிடம் போல் தோன்றிய அவ் இருளைக் கண்டு அமரர் அஞ்சினர். அவ் இருளில் சூரபதுமன் மலை போன்ற பேருருவம் கொண்டு வானவரை விழுங்குமாறு வானிடை எழுந்தான். அதனைக் குறிப்பினால் அறிந்த வானோரும் ஏனோரும் திசைதொறும் ஓடி திக்கு வேறு இன்றி திகைத்துக் கூற்றை எதிர்ந்த உயிர்களைப் போல் பதறிக் கதறித் துதிக்கலுற்றார்கள்.


“நண்ணினர்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,

பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,

எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,

கண்ணுதல் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.”


“தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,

மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,

பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம், ஓலம்.”


"எம்பெருமானே! அடியேங்களைக் காத்து அருளும்" என்று வேண்டினார்கள். முருகவேள் தமது திருக்கரத்தில் உள்ள வேற்படையை நோக்கி, "இங்கு இவன் உடலைப் பிளந்து எய்துதி இமைப்பில்" என்று பணித்து அருளினர். முருகப் பெருமான் விடுத்த வேலாயுதம் ஆயிரகோடி சூரிய ஒளியை உடையதாய், நெருப்பைச் சிந்திக்கொண்டு சென்றது. அதனால் சூரபன்மன் கொண்ட இருளுருவம் அழிந்தது.


“ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்

ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்

தீஅழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட

மாஇருள் உருவம் முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே.”


அதுகண்ட சூரபதுமன், வேலாயுதத்தினது வெம்மையை ஆற்றாது கடலுக்கு நடுவில் ஒளித்தான். வேல் கடலின் அருகில் சென்றவுடன் கடல் வற்றி வறண்டு விட்டது.


"திரைக்கடலை உடைத்துநிறை புனல்கடிது குடித்துஉடையும்

உடைப்புஅடைய அடைத்துஉதிரம் நிறைத்துவிளை யாடும்."        ---  வேல் வகுப்பு.


சூரபதுமன் அண்ட முகடு முட்ட, நூறாயிர யோசனை அளவுடைய பெரு மரமாகி நின்று, மண்ணும் விண்ணும் விழல் பரப்பி, கிளைகளை அசைத்து, உலகங்களுக்கு எல்லாம் பேரிடர் விளைத்தான்.  அப்போது உடுக்கள் உதிர்ந்தன. சூரியசந்திரர் கதி மாறினர். மண்ணுலகம் இடிந்தது. குலமலைகள் பொடிபட்டன. திசை யானைகள் மடிவுற்றன. அது கண்ட வேலாயுதம் வெகுண்டு ஆயிரகோடி அக்கினி அண்டங்களின் தீப்பிழம்பு முழுவதும் ஒன்றுபட்டது போலாகி, மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்தது. வேலாயுதத்தால் மாமரம் பிளக்கப்பட்டதும், மாளா வரம் பெற்ற சூரன் மடிந்திலன் ஆகி, பழைய அசுர வடிவம் கொண்டு, வாள் கொண்டு எதிர்த்துச் சீறினான். ஒப்பற்ற வேற்படை அவனுடைய உடம்பை இருகூறாகப் பிளந்து கடலிடை அவன் அடலை மாய்த்து, வேதங்கள் ஆரவாரிக்க, தேவர்கள் துதித்துச் சிந்தும் பூமழைக்கு இடையே சென்று, அங்கியின் வடிவம் நீங்கி, அருள் வடிவைத் தாங்கி, வான கங்கையில் முழுகி கந்தக் கடவுளது கரமலரில் வந்து அமர்ந்தது.


“புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை இடையின் ஏகி

அங்கியின் வடிவம் நீங்கி, அருள்உருக் கொண்டு, வான்தோய்

கங்கையில் படிந்து மீண்டு, கடவுளர் இடுக்கண் தீர்த்த

எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற்று இருந்ததுஅன்றே.”


சிவபெருமான் தந்த வர பலத்தால், சூரபதுமன் அழிவில்லாதவன் ஆகி, மீட்டும் எழுந்து ஒரு கூறு சேவலும், மற்றொரு கூறு மயிலுமாகி, மிக்க சினத்துடன் சிறகுகளை வீசி, அதனால் உலகங்களைத் துன்புறுத்தி, முருகவேள் திருமுன் வந்தான்.


“தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா

மேவலன் எழுந்து மீட்டு மெய்பகிர் இரண்டு கூறும்

சேவலும் மயிலும் ஆகி சினங்கொடு தேவர் சேனை

காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான்.”


அவ்வாறு மீட்டும் அமர் புரிய வந்த ஆற்றலின் மிக்க அந்த இரு பறவைகளையும் எம்பெருமான் கருணை நாட்டத்துடன் நோக்கி அருளினார். உடனே சேவலும் மயிலும் போர் புரியும் எண்ணமும் சீற்றமும் செற்றமும் நீங்கி, தெளிந்த உள்ளமும், சிவஞானமும், அன்புருவமும் பெற்றன. செவ்வேள் பரமன் சேவலைக் கொடியாகவும், மாமயிலை வாகனமாகவும் கொண்டருளினார். ஆயிரத்தெட்டு அண்டங்களும் வணங்க வாழ்ந்த சூரபதுமன் சேவலும் மயிலும் ஆகி அகிலாண்ட கோடி எல்லாம் வணங்கி வாழ்த்தும் வரம்பிலாப் பேறு பெற்றான். அவனது தவத்தின் பெருமை அளப்பரியது! முருகப் பெருமானது அருட் பார்வையின் பெருமையும் அளப்பரியது. ஞானிகளது பார்வையால் இரும்பு பொன்னாவது போல், கந்தவேள் கருணை நோக்கால், சூரன் மறவடிவு நீங்கி, அறவடிவு பெற்றான்.


“மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன், எந்தை

அருள்கெழு நாட்டம் சேர்ந்த ஆங்குஅவன் இகலை நீங்கித்

தெருள்கெழு மனத்தன் ஆகி நின்றனன், சிறந்தார் நோக்கால்

இருள்கெழு கரும்பொன் செம்பொன் ஆகிய இயற்கை யேபோல்.”


“தீயவை புரிந்தா ரேனும் முருகவேள் திருமுன் உற்றால்

தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டும் கொல்லோ, அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்புஇலா அருள்பெற்று உய்ந்தான்.”


.....           .....           .....  சகம்உடுத்த

வாரிதனில், புதிய மாவாய்க் கிடந்த, நெடும்

சூர்உடலம் கீண்ட சுடர்வேலோய்! - போர்அவுணன்

அங்கம் இருகூறுஆய், அடல் மயிலும், சேவலுமாய்த்

துங்கமுடன் ஆர்த்து, எழுந்து தோன்றுதலும், - அங்குஅவற்றுள்

சீறும் அரவைப் பொருத சித்ரமயில் வாகனமா

ஏறி நடாத்தும் இளையோனே! -  மாறிவரு

சேவல் பகையைத் திறல்சேர் பதாகை என

மேவத் தனித்து உயர்த்த மேலோனே!        --- கந்தர் கலிவெண்பா.


தழைந்து எழும் தொத்துத் தடங்கை கொண்டு அப்பி,

     சலம் பிளந்து எற்றிப் ...... பொருசூர், அத்

தடம் பெரும் கொக்கைத் தொடர்ந்து, இடம் புக்குத்

     தடிந்திடும் சொக்கப் ...... பெருமாளே.      --- பொதுத் திருப்புகழ்.


கடல் சலம் தனிலே ஒளி சூரனை

     உடல் பகுந்து, இரு கூறு எனவே, அது

     கதித்து எழுந்து, ஒரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா!     --- அவிநாசித் திருப்புகழ்.


கொடியநெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக்

     குரைகடல் செம்ப, சக்- ...... கரவாளச்

சிலை பக, எண் திக்குத் திகிரிகளும் பத்துத்

     திசைகளினும் தத்த, ...... செகம் ஏழும்

திருகு சிகண்டிப் பொன் குதிரை விடும் செட்டி!

     திறல! கொடும்பைக்கு உள் ...... பெருமாளே.    --- கொடும்பாளூர்த் திருப்புகழ்.


கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி

     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு

     கொதிவேல் படையை ...... விடுவோனே!      --- திருச்செந்தூர்த் திருப்புகழ்.


முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே --- 


முட்டு – தடை, தட்டுப்பாடு. நாள்தோறும் தடைபடாமல் திருவடிகளை வாழ்த்தி வழிபடுவோர் முற்பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கி அருள் புரிபவர் முருகப் பெருமான். “தப்பாமற் பாடிச் சேவிப்பார் தத்தாம் வினையைக் களைவோனே” எனத் திருத்தணிகைத் திருப்புகழில் அடிகளார் காட்டி அருளியது காண்க.  

"தவமே புரிந்திலன், தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்” என்பது மணிவாசகம். உடலுக்கு உணவு இன்றியமையாதது போல உயிருக்கு இறைவழிபாடு இன்றியமையாதது ஆகும். அதனை உள்ளம் ஒன்றி உருகி நாள்தோறும் இயற்றுதல் வேண்டும். அப்படி வழிபட்டால் உயிருக்கு ஊனம் ஏதும் இல்லையாகும். “ஒன்றி இருந்து நினைமின்கள், உந்தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பர் பெருமான்.

 “நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்” என்று உந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிதும் அறிக. உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய, காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமடம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள் என்கின்றார் அருணைவள்ளலார். குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையை எக்காலத்தும் புரிந்துகொண்டு இருப்பார்கள்.


“மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.”


என்பது அப்பர் தேவாரம்.


இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி.  பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால், இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.


“நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"

என்கிறார் தாயுமானார்.


இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு,  விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமி, நான் என்ன சொல்லி, எப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க, "முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலே, என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான், திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம், திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபடாகளிலும், மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவே, சொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்? சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவே, அவர் அறிந்த மொழியால் பாடுவது, அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவே, இறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.


இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். 


“பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே. ---  அப்பர்.


நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.


நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.


"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"


என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.


இதன் பொருள் ---


பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும், மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும், வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை. வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபடவேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

“எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.”

இதன் பொருள் ---

கன்னல் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன:- புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை. 

பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம். 

பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".

அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார். மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்கவிடுகின்றனர்.

மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.

மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும். "அன்பு" என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான். 

அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.

இம் மந்திர பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.

இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம் "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

"ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான


வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?"


என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.


"வீண்பொழுது போக்காமலே,

நேயமுடனே தெளிந்து, அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து, இரு போதினும்

  நீர்கொண்டு, மலர்கொண்டு, பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்".     ---  அறப்பளீசுர சதகம்.


பெறுதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.


அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

விரைவிடை இவரும் நினை, பிறவாமை

      வேண்டுநர் வேண்டுக, மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே! கைலைநா யகனே!.

இதன் பொருள் ----          

சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை. கிரியை என்பது யோகத்தில் சென்று, ஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது, அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,

"உருகியும், ஆடிப் பாடியும், இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும், ...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற, நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?"

என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால், இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.

யான் எனது என்று அற்ற இடமே திருவடியா..... --- கந்தர் கலிவெண்பா.

ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.

நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானது, இறை ஆற்றலைத் தரும். நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும். 

இறைவனை நினைந்து உருகி, திருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரை, அறிவு, உயிர், உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில், உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.

"உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்

     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு

     ஒன்றாக என்று ...... பெறுவேனோ...."

என்றார் அருணகிரிநாதர்.

கருத்துரை


முருகா! உலுத்தரைப் பாடி உழலாமல், உன்னைப் பாடி உய்ய அருள்.







055. செங்கோன்மை - 04. குடிதழீஇக் கோலோச்சும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்,  "குடிமக்களின் கருத்தை அறிந்து, நீதியோடு பொருந்தி, ஆட்சி செலுத்திப் பெருநிலம் காக்கும் மன்னனின் கொற்றக்குடை நிழலில், இந்த உலகம் பொருந்தி நிலைப்பது ஆகும்" என்கின்றார் நாயனார்.

அரசன் ஒருவன், தனது குடிகள் குறையிரந்து நின்ற காலத்தில், அவர்களுக்கு இனிய சொல்லைச் சொல்லியும், அவர்கள் வறுமை உற்ற காலத்தில் வேண்டும் பொருள்களைக் கொடுத்தும் நல்லாட்சி புரிவானாயின், அவ்வித அரசனை மக்கள் தங்களின் உயிராக மதித்துப் போற்றுவர்.


இதற்குத் திருக்குறள்...

“குடிதழீஇக் கோல் ஓச்சும் மன்னன்

அடி தழீஇ நிற்கும் உலகு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி - தன்குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை, 

தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.

(அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின்,  'அடிதழீஇ நிற்கும் உலகு'  என்றும் கூறினார்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“வெண்குடைக் கீழ்வாழும் குடிகட்கு வேந்தனும்

செங்கோலன் அல்லாக்கால் செய்வதென், பொங்கு

படுதிரைச் சேர்ப்ப! மற்று இல்லையே யானை

தொடு உண்ணின் மூடுங் கலம்.”  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

படுதிரை பொங்கு சேர்ப்ப - மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே! யானை தொடு உண்ணின் மூடுங்கலம் மற்று இல்லை - யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனை மூடுங்கலம் வேறொன்றும் இல்லையாதல் போல, வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு - தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்கட்கு, வேந்தனும் செங்கோலன் அல்லாக்கால் - அரசன் செம்மையான கோலையுடையவன் அல்லாதவிடத்து, செய்வது என் -அவர்கள் செய்வது யாது? 



“பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்,

அருத்தம் அடிநிழ லாரை --- வருத்தாது,

கொண்டாரும் போலாதே கோடல், அதுவன்றோ

வண்டு ஊதாது உண்டு விடல்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் - அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள், அருத்தம் - இறைப் பொருளுக்காக, அடி நிழலாரை - தன்னடியின் கீழ் வாழும் குடிகளை, வருத்தாது - (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச் செய்யாமலும், கொண்டாரும் போலாதே கோடல் - பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய, அது - காலமறிந்து கொள்ளுதல், வண்டு - வண்டுகள், ஊதாது - (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது, உண்டுவிடல் - தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத் தேனை எளிதாக உண்ணும் விதத்தை (ஒக்கும்).

அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குதல் வேண்டும்.


“குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா

மடிகொன்று பால்கொளல் மாண்பே, - குடிஓம்பிக்

கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மாநிதியம்

வெள்ளத்தின் மேலும் பல.”   ---நீதிநெறி விளக்கம்.  

இதன் பொருள் ---

குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்கு - குடிமக்களை வருத்தி வருத்தி வாங்கும் அரசனுக்கு, கன்று ஆ மடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றையுடைய ஆவின் மடியினை வருத்திப்பால் கறப்பதும் நல்ல செயலாகும். (இவ்வாறு வருத்தி வரி வாங்கும் அரசனிடத்தில் செல்வம் சேர்ந்திருக்கிறதோ எனில் அதுவுமில்லை. ஆனால்.) குடி ஓம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்கு - குடிமக்களை அவர்கள் நலத்தில் கருத்து வைத்துப் பாதுகாத்து நல்ல முறையில் வாங்கும் (வகையாக வரியினை வாங்கும்) அரசர்க்கு, மா நிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும் - பெருமையுடைய பணம் வெள்ளத்தினும் மேலும் பலவாகக் காண்கின்றோம்.


055. செங்கோன்மை - 03. அந்தணர் நூற்கும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "நல்லவர் ஓதும் திருமறைக்கும், நீதிநெறி முறைமைக்கும், முதன்மைக் காரணமாய் நிலைத்து நிற்பது அரசனின் செம்மையான ஆட்சி முறை ஆகும்" என்கின்றார் நாயனார்.

வேதமானது அரசர் வணிகர் என்னும் மற்றையவர்க்கும் உரியது. ஆயினும், தலைமை பற்றி அதனை, "அந்தணர் நூல்" என்றார். வேதமானது இறைவனால் திருவாய் மலர்ந்து அருளப்பட்டவை. அரசனது செங்கோல் முறையாக நடக்கவில்லையானால், வேத்ததை ஓதுதலும், ஓதுவித்தலும் ஆகிய செயல்கள் நிகழாமல் போவதோடு, ஏனைய தொழில்களும் முறையாக நடக்காமல் போகும்.


இதற்குத் திருக்குறள்...

“அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது --- அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, 

மன்னவன் கோல் --- அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.

(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“அந்திவண்ணன் நூலால் அருகர் பிறர் கோள் சிதைய

வந்த திருவள்ளுவர்தம் வாய்மொழிகேள் --- இந்தநிலத்து

அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.”

அந்திவண்ணன் - சிவபெருமான். பிறர் என்றது உலகாயதரையும், புத்தரையும். சிதைய வந்த -  சிதையும்படி அதற்குப் பிரமாணமாக வந்த. அந்தணர் நூலையும் அறத்தையும் திருவள்ளுவர் இத் திருக்குறளில் கூறி இருப்பதனால், புறச்சமயிகளின் கோட்பாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் நெடுமாற நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி அருளி ஒரு பாடல்...

“பழுதறுசம் பந்தர்எதிர் பாழ்அமணர் தாழ,

வழுஅறநெல் வேலிவென்ற மாறன் --- கழுஇட்டான்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.”

இதன் பொருள் ---

பாண்டி நாட்டிலே, மதுராபுரியிலே கூன்பாண்டியன் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனை காரணமாக பொய்மார்க்கமாகிய ஆருகமதத்திலே சேர்ந்தார். சோழமன்னருடைய திருமகளாரும் சைவசிகாமணியும் ஆகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும், குலச்சிறை நாயனாரை மந்திரியாகவும் அவ்வரசர் முன்னைப் பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தால் பெற்றிருந்தார். அதனால், சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக்கரத்தினால் தீண்டித் திருநீறு சாத்தப்பட்டார். அந்த நாயனார் அருளிச் செய்த உண்மை உபதேசத்தைப் பெற்றார். உயிர்க்கூனும் உடற்கூனும் அவருக்கு நிமிர்ந்தன. நெடுமாற நாயனார் என்னும் பெயரைப் பெற்றார். தம்மோடு போர் செய்ய வந்த வடபுலத்து அரசரோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே போர் செய்து வென்றார்.  சைவசமயம் தழைத்து ஓங்கும்படி நெடுங்காலம் அரசு செய்திருந்து சிவபதம் அடைந்தார்.

அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, அரசனால் செலுத்தப்படுகின்ற செங்கோல் எனத் திருவள்ளவ நாயனார் அருளியமை காண்க.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“அயாஎன்று உனைப்புகழ் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆ--

தியாய் நின்றது மன்னவன் கோல் புல்லாணித் திருவரசு

தயாநிதி முன் நின்கைச் செங்கோல் இராக்கதரை வென்றன்றோ

மெயாய் ஒலிவேதந் தருமம் எக்காலும் விளங்குவதே.”

இதன் பொருள் ---

அயா வென்று - தளர்ச்சியை வென்று.  வேதமும் தருமமும் உலகத்தில் விளங்குவது, திருப்புல்லாணியில் எழுந்தருளி இருக்கும் பெருமாள், இராமாவதாரம் எடுத்து, இராவணன் முதலிய அர்க்கர்களை வென்றதனால் என்றபடி.



055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை எதிர்நோக்கி உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; அரசனுடைய செங்கோன்மையை எதிர்நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள்" என்கின்றார் நாயனார்.

உலகத்தில் உள்ள உயிர்கள் மழையின் தகுதியால் உணவினைக் கொண்டு பிழைப்பதும், நீரையே உணவாகக் கொண்டு பிழைப்பதும், உணவில்லாதபோது இறப்பதும் இயல்பாக உள்ளது. மழை இருந்து உணவு கிடைத்த காலத்தும், அரசாட்சியானது முறை தவறியதாக இருக்குமானால், குடிமக்கள் உணவால் பயன் அடைந்து வாழ்தல் என்பது கூடாது. முறை தவறிய ஆட்சியில், உண்ணும் உணவானது உயிர்கள் எல்லாவற்றிற்கும் கிடைப்பது அரிதாகும். உணவுப் பொருள் பதுக்கல், விலையேற்றம் முதலியவைகளால், பொருள் கிடைப்பது எல்லோருக்கும் சாத்தியாமாகாது. பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்து ஆடும்.


இதற்குத் திருக்குறள்...

“வான்நோக்கி வாழும் உலகு எல்லாம், மன்னவன்

கோல் நோக்கி வாழும் குடி.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் --- உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், 

குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.

(நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“கோல்நோக்கி வாழுஙம்குடியெல்லாம், தாய்முலைப்

பால்நோக்கி வாழுங் குழவிகள், - வானத்

துளிநோக்கி வாழும் உலகம், உலகின்

விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.” --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

குடி எல்லாம் கோல் நோக்கி வாழும் - குடிமக்கள் எல்லோரும் அரசனது ஆட்சியை நோக்கி உயிர் வாழ்வார்; குழவிகள் தாய்முலைப் பால் நோக்கி வாழும் - குழந்தைகள் எல்லாரும் தாயின் முலைப்பாலை நோக்கி உயிர் பிழைக்கும்; உலகம் வானத் துளி நோக்கி வாழும் - உலகத்து உயிர்கள், வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி உயிர் வாழும்; கூற்று உலகின் விளி நோக்கி இன்புறூஉம் - எமன் உயிர்களின் சாவை நோக்கி மகிழ்வான்.

குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.



“மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.” --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை - மழையில்லாமல், இப் பேருலகத்தின் மக்கட்கு  நலமில்லை; மழையும் தவம் இலார் இல்வழி இல்லை - அம்மழை தானும், தவஞ் செய்தல் இல்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை; தவமும் அரசன் இலாவழி இல்லை - அவ் வியல்பினதான தவஞ்செய்தலும்  செங்கோலரசன்  இல்லாதவிடத்து நிகழ்தல் இல்லை; அரசனும் இல்வழ்வார் இல்வழி இல் - அச் செங்கோலரசனும் குடிமக்கள் இல்லாதவிடத்து இல்லாதவன் ஆவான்.

மழையில்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலம் இல்லை. அம் மழையும் தவம் உடையார் இல்லாத இடத்துப் பெய்தல் இல்லை. அத் தவஞ் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை. அவ்வரசனும் குடிகள் இல்லாத இடத்தில் இருப்பது இல்லை.


“வான் நோக்கி நிற்கும் உலகு என்னவும், மன்னவன் செம்

கோன் நோக்கி நிற்கும் குடி என்னவும், கோது உம்பர்

ஆனோர்க்கும் நாகர் உலகோர்க்கும் அவனியோர்க்கும்

ஏனோர்க்கும் நாடும் நகராகி இருந்தது அவ்வூர். “ ---  கந்தபுராணம்.

இதன் பொருள் --- 

உலகத்து உயிர்கள் எல்லாம் வானத்து மழையை நோக்கி வாழ்வது போலவும், குடிமக்கள் எல்லாரோம் மன்னனுடைய செங்கோல் முறையை நோக்கி வாழ்வது போலவும், தேவர்களுக்கும், நாகர் உலகைச் சார்ந்தவர்களுக்கும், பூதலத்தில் உள்ளோர்க்கும், மற்றும் பிறர்க்கும் நாடிச் செல்கின்ற நகரமாக விளங்கியது காஞ்சி மாநகரம்.


“மீன் நோக்கும் நீள் வயல் சூழ் 

வித்துவக்கோட்டு அம்மா என்-

பால் நோக்காயாகிலும் உன் 

பற்று அல்லால் பற்று இலேன்

தான் நோக்காது எத்துயரம் 

செய்திடினும் தார்-வேந்தன்

கோல் நோக்கி வாழும் 

குடி போன்று இருந்தேனே.” --- குலசேகர ஆழ்வார்.

இதன் பொருள் ---

மீன்கள் எல்லாம் தாம் உயிர் வாழ மிகவும் தகுதியான இடம் என்று ஆசையோடு பார்க்கின்ற, நீர்வளம் மிக்க அகன்ற கழனிகள் சூழ்ந்து விளங்கும் வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமனே! அடியேன்பால் நீ உனது கருணை நோக்கம் செய்யாது இருந்தாலும், உன்னையே சரணாக வந்து பொருந்துதலை விட்டு, வேறு ஒருவரைச் சரணாக நான் அடையமாட்டேன். குடிமக்களைக் காப்பதற்கு என்று மாலை அணிந்துள்ள அரசன் துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கின்ற குடிமக்களை ஒத்து நான் இருந்தேன்.


“எத்தனையும் வான் மறந்த 

காலத்தும் பைங்கூழ்கள்

மைத்துஎழுந்த மாமுகிலே 

பார்த்திருக்கும் மற்று அவைபோல்

மெய்த் துயர் வீட்டாவிடினும் 

வித்துவக்கோட்டு அம்மா என்

சித்தம் மிக உன்பாலே 

வைப்பன் அடியேனே.”       ---  குலசேகர ஆழ்வார்.

இதன் பொருள் ---

வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! மேகமானது எவ்வளவு காலம் மழை பொழியாமல் ஒழிந்தாலும், பசுமையான பயிர்கள், கருநிறம் கொண்டு வான் வெளியில் திரளுகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்து இருக்கும். அந்தப் பயிர்கள் போலத் தவறாமல், எனது துன்பங்களை நீ போக்காவிட்டாலும், எனது மனத்தை உன்னிடத்திலேயே வைத்து இருப்பேன்.


“வான் நோக்கி நிற்கும்பைங் கூழ்போலவும், ஒரு மன்னவன்செங்

கோல் நோக்கி நிற்கும் குடிபோலவும்,  தடங்கோட்டு, இமையத்

தேன் நோக்கி நிற்கும் எழில் உடையாள்  வெங்கைச் செல்வி உனைத்

தான் நோக்கி நிற்கும் நல் ஆயத்துளே  சென்று சார்ந்தருளே.”       ---  திருவெங்கைக் கோவை.


வேந்தனே இல்லாவிடின், உலகத்து

மேலது கீழதா மணஞ்செய்

காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள்,

காதலர் தந்தைசொல் கேளார்,

மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய

வளமைகூர் தொழில்களின் முயலார்,

சாந்தருந் தீயர் ஆவரேல், தீயர்

தன்மையைச் சாற்றுமாறு எவனோ. --- நீதிநூல்

 இதன் பொருள் ---

நாடும் மொழியும் நலமுறக் கூடிவாழ்வதே குடிகள் இயல்பு. செங்கோல் மன்னன் இல்லாவிட்டால், மேன்மை தாழ்வை அடையும். குடும்பம் குலையும். மக்கள் தந்தைசொல் பேணார். உழவர் பயிர்த் தொழில் செய்யார். அமைதியினரும் கொடியவர் ஆவர்.

 

 

“நம்மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம்

நரபதியால், அவன் இலனேல்

அம்மனை தீயர் கைவசம் ஆவள்,

அருநிதி கொள்ளையாம், நாளும்

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்,

மேலவர் அசடரால் மெலிவர்,

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசாணைக்கு

அமைதல் நற்குடிகளின் இயல்பே.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  மனையாள் மக்கள் வாழ்வு எல்லாம் மன்னவனாலேயே நிலைக்கும். அவன் இல்லாவிட்டால் கற்பு அழிவும் கொள்ளையும் கொலையும், உயர்ந்தவரைத் தாழ்ந்தவர் துன்புறுத்தும் கொடுமையும் பெருகும். அதனால், அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதே பெருமை.



055. செங்கோன்மை - 01. ஓர்ந்து கண்ணோடாது

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


அரசன் நீதிமுறையுடன் அரசினை ஆளுதல் சொல்லப்பட்டது. அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல்போல் இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது.

இது, நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், பொச்சாவாமை என்னும் அதிகாரத்தின் பின்னர் இது வைக்ககப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்தால், அக்குற்றத்தை ஆராய்ந்து, முகம் கொடாமல், நடுவுநிலைமையோடு இருந்து, உரிய தண்டனையைத் தேர்ந்து அளிப்பதே நீதி ஆகும்" என்கின்றார் நாயனார்.

"முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்" என்பது கலித்தொகை. முகம் கொடுத்தல் என்பது பழகியவர்க்குக் காட்டும் தாட்சண்ணியம் ஆகும்.

இதற்குத் திருக்குறள்... 

“ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஓர்ந்து --- தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: 

யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து --- யாரிடத்தும் தாட்சண்ணியம் காட்டாது, நடுவு நிலைமையைப் பொருந்தி, 

தேர்ந்து --- அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, 

செய்வஃதே முறை --- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.

(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“இறைமகிழ வேந்தன் இளம் கன்றிற்காக

மகவினையும் தேர் ஊரும் ஆற்றால்

ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.”

இறை - சிவபெருமான்.  வேந்தன் - மனுநீதிச் சோழன். தன் மகனுடைய தேர்க்காலில் அகப்பட்டு இறந்த ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு, தானே தனது மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழனின் செங்கோன்மையைத் தெரிவிக்கும் இவ்வரலாறு வருமாறு... 

சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில்லாத வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடை சூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றான். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ நான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.


“தன்உயிர்க் கன்று வீயத்

தளர்ந்தஆத் தரியாது ஆகி

முன்நெருப்பு உயிர்த்து விம்மி

முகத்தினில் கண்ணீர் வார

மன்உயிர் காக்கும் செங்கோல்

மனுவின்பொன் கோயில் வாயில்

பொன்அணி மணியைச் சென்று

கோட்டினால் புடைத்தது அன்றே.” --- பெரியபுராணம்.


அம் மணி ஓசை, மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.


“அவ்வுரை கேட்ட வேந்தன்

ஆஉறு துயரம் எய்தி

வெவ்விடம் தலைக்கொண் டால்போல்

வேதனை அகத்து மிக்குஇங்கு

இவ்வினை விளைந்த வாறுஎன்று

இடர்உறும் இரங்கும் ஏங்கும்

செவ்விதுஎன் செங்கோல் என்னும்

தெருமரும் தெளியும் தேறான்.”    --- பெரியபுராணம்.


“மன்உயிர் புரந்து வையம்

பொதுக்கடிந்து அறத்தில் நீடும்

என்நெறி நன்றால் என்னும்

என்செய்தால் தீரும் என்னும்

தன்இளம் கன்று காணாத்

தாய்முகம் கண்டு சோரும்

அந்நிலை அரசன் உற்ற

துயரம்ஓர் அளவிற்று அன்றால்.”   --- பெரியபுராணம்.


இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள். 


“மந்திரிகள் அதுகண்டு

மன்னவனை அடிவணங்கிச்

சிந்தை தளர்ந்து அருளுவது

மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்

கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்

கோவதை செய்தார்க்கு மறை

அந்தணர்கள் விதித்த முறை

வழிநிறுத்தல் அறம்என்றார்.”   --- பெரியபுராணம்.


அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, தனது பரிசனங்களாலாவது, பகைவர்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார். 


“வழக்குஎன்று நீர்மொழிந்தால்

மற்றுஅதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்துஅலறுங்

கோஉறுநோய் மருந்துஆமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்று

எல்லீரும் சொல்லியஇச்

சழக்குஇன்று நான்இயைந்தால்

தருமம் தான் சலியாதோ?”   --- பெரியபுராணம்.


“மாநிலம்கா வலன்ஆவான்

மன்உயிர்காக் கும்காலைத்

தான்அதனுக்கு இடையூறு

தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால்

கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும் தீர்த்து

அறம் காப்பான் அல்லனோ?”   --- பெரியபுராணம்.


“என்மகன்செய் பாதகத்துக்கு

இருந்தவங்கள் செயஇசைந்தே

அன்னியன்ஓர் உயிர்கொன்றால்

அவனைக்கொல் வேன்ஆனால்

தொன்மனுநூல் தொடைமனுவால்

துடைப்புஉண்டது எனும்வார்த்தை

மன்உலகில் பெறமொழிந்தீர்

மந்திரிகள் வழக்கு என்றான்.”   --- பெரியபுராணம்.


மன்னரின் மனோநிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.


“அவ்வுரையில் வருநெறிகள்

அவைநிற்க அறநெறியின்

செவ்விய உண்மைத்திறம் நீர்

சிந்தை செயாது உரைக்கின்றீர்

எவ் உலகில் எப் பெற்றம்

இப்பெற்றித்து ஆம் இடரால்

வெவ் வுயிர்த்துக் கதறிமணி

எறிந்து விழுந்தது விளம்பீர்.”  --- பெரியபுராணம்.


“போற்றி இசைத்துப் புரந்தரன்மால்

அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச

வீற்றுஇருந்த பெருமானார்

மேவிஉறை திருவாரூர்த்

தோற்றம்உடை உயிர்கொன்றான்

ஆதலினால் துணிபொருள்தான்

ஆற்றவும் மற்று அவற்கொல்லும்

அதுவே ஆம் எனநினைமின்.”  --- பெரியபுராணம்.


அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.


“ஒருமைந்தன் தன்குலத்துக்கு

உள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை

கடன்என்று தன்மைந்தன்

மருமம் தன் தேர்ஆழி

உற ஊர்ந்தான் மனுவேந்தன்

அருமந்த அரசாட்சி

அரிதோ மற்று எளிதோதான்.”  --- பெரியபுராணம்.


கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.


“தண்அளிவெண் குடைவேந்தன்

செயல்கண்டு தரியாது

மண்ணவர்கண் மழைபொழிந்தார்

வானவர்பூ மழைசொரிந்தார்

அண்ணல்அவன் கண்எதிரே

அணிவீதி மழவிடைமேல்

விண்ணவர்கள் தொழநின்றான்

வீதிவிடங் கப்பெருமான்.”    --- பெரியபுராணம்.


“சடைமருங்கில் இளம்பிறையும்

தனிவிழிக்கும் திருநுதலும்

இடம் மருங்கில் உமையாளும்

எம்மருங்கும் பூதகணம்

புடைநெருங்கும் பெருமையும்முன்

கண்டுஅரசன் போற்றிஇசைப்ப

விடைமருவும் பெருமானும்

விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான்.” --- பெரியபுராணம்.


“அந்நிலையே உயிர்பிரிந்த

ஆன்கன்றும் அவ்அரசன்

மன்உரிமைத் தனிக்கன்றும்

மந்திரியும் உடன்எழலும்

இன்னபரிசு ஆனான் என்று

அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்

முன்னவனே முன்நின்றால்

முடியாத பொருள்உளதோ.”   --- பெரியபுராணம்.



அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்துள் வரும் கழற்சிங்க நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை

விழச்சென்று அரிந்து விடுத்தார் --- கழற்சிங்கர்,

ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.”

இதன் பொருள் ---

கழற்சிங்க நாயனார் காடவர் குலத்தில் அவதரித்தவர்.  சிவபெருமான் திருவடிகளையே அன்றி மற்றொன்றும் அறியாத வாய்மையாளர். சிவபெருமானது திருவருளால் வடபுலத்தார்களைப் போரில் வென்றார். எங்கும் சைவசமயம் தழைத்து ஓங்குமாறு அரசு புரிந்தார். அவர் தனது மாதேவியோடு சிவதரிசனம் செய்யுமாறு தலங்கள்தோறும் சென்று வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்தார். பூங்கோயிலின் உள்ளே சென்று புற்றிடங்கொண்டாரை வணங்கினார். அவருடைய மாதேவி திருக்கோயிலை வலம் வந்தாள். திருமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப் பூவை எடுத்து மோந்தாள். அதனைச் செருத்துணை நாயனார் கண்டு விரைந்து ஓடிவந்து, பூமண்டபத்திலிருந்த பூவை எடுத்து மோந்ததாகக் கருதி அவளைக் கூந்தலைப் பிடித்து இழுத்து வீழ்த்தி அவளுடைய மூக்கை அரிந்தார். திருக்கோயில் வலம் வந்துகொண்டிருந்த கழற்சிங்க நாயனாரும் இதனைக் கண்டார். நடந்ததை விசாரித்து அறிந்து, பூவை எடுத்த பூவை கையை அன்றோ முதலில் துணிக்கவேண்டும் என்றார். உடைவாளை உருவிக் கையைத் துணித்தார்.  

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராயந்து அவ்வளவிற்றாகச் செயவதே முறையாம் என்று திருவள்ளுவ நாயனார் அருளியச் செவ்வியை நோக்குக.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த்துளதை அறியலாம்...

“வழிபடு வோரை வல் அறிதீயே,

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே,

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி...”  --- புறநானூறு

இதன் பொருள் ---

நின்னை வழிபட்டு ஒழுகுவோரை நீ விரைவில் அறிந்து கொள்வாய். புறங்கூறுவோர் பிறர்மேல் சொல்லும் பழிச் சொற்களை நீ சற்றும் ஏற்றுக் கொள்ளமாட்டாய். தவறு உடையது என்று நீ ஆராய்ந்து தெளிந்த தீமையை யாரேனும் செய்யக் கண்டால், முறை தவறாது, நடுநிலையோடு நின்று, அவர்க்குத் தண்ட்னை தருவாய்.



“எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்,

தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்

வன்கண்ணன் ஆகி ஒறுக்க, ஒறுக்கல்லா

மென்கண்ணன் ஆளான் அரசு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

எம்கண் இனையர் என கருதின் - அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நண்பர், பகைவர்) இத்தன்மையை உடையார் என்று கருதுவானாயின், ஏதம் - அது செங்கோன்மைக்குக் குற்றமாகும். தம் கண்ணரானும் - தமது கண்போல்வார் ஆயினும், தகவு இல கண்டக்கால் - தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது, வன்கண்ணனாகி – மனக் கொடுமையை உடையவன் ஆகி, ஒறுக்க - அவர்களைத் தண்டிக்கவேண்டும்.  ஒறுக்கல்லா மென் கண்ணன் - தண்டஞ் செய்யாத கண்ணோட்டம் உடையான், அரசு ஆளான் - அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான்.


“சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலைக் கழிந்ததன் பின்றையும், - மேலைக்

கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

முறைமைக்கு மூப்பிளமை இல்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சான்றவர் - அறிவு நிரம்பிய அமைச்சர்கள். சால மறைத்து ஓம்பி கை கரப்பவும் - மிகுதியானவைகளைக் கூறி இது பெருங் குற்றமல்ல என்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், காலை கழிந்ததன் பின்றை - அன்றிரவு கழிந்த பின்னர், மேலை - முன்னாள், கறவை கன்று ஊர்ந்தானை - பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, தந்தையும் ஊர்ந்தான் - அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்), முறைமைக்கு மூப்பு இளமை இல் - செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி, இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுட .....

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்”

--- சிலப்பதிகாரம்.

“பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார்,

கிழமை பிறிதுஒன்றும் கொள்ளார், வெகுளின்மன்

காதன்மை உண்டே, இறைமாண்டார்க்கு ஏதிலரும்

ஆர்வலரும் இல்லை அவர்க்கு.”   --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால், பழமை - (இவர் நமக்கு அரசியலில்) தொன்றுதொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும், கடைப்பிடியார் - நிலைநிறுத்தார்,  கேண்மையும் பாரார் - (இவர் நமக்கு) நண்பர் என்பதையும் கவனியார், பிறிது - (அவை) ஒழிய, கிழமை - (இவர் நமக்கு) உரியவர் என்பதையும், ஒன்றும் கொள்ளார் – சிறிதும் நினையார், (ஆதலால்) இறை - அரசியலில், மாண்டார்க்கு - அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமை உண்டோ?,அவர்க்கு - அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலார் எனவும், ஆர்வலரும் - (இவர்) அன்பு உடையர் எனவும், இல்லை - கிடையாது.

அரசர் சினம் கொள்வாராயின், அயலார் எனவும் அன்புடையார் எனவும் பாரார் என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினது கன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். 


“மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன

மகிழ்வொடு தாங்கி, யாரேனும்

இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்,தன்

இருவிழி நீரினை உகுப்பான்,

அன்ன வெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று

அயின்றிடான், துயின்றிடான், எவரும்

நன்னகர் எங்கும் உளன் எனப் பகர

நாடொறும் இயங்குவோன் கோனே. ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகரெங்கும் காணும்படி வருவோன் மன்னன்.


 

“காது இறைவனுக்குக் கண் எனலான்,மெய் 

காண்குறான் எனுமொழி மாற்றி,

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் 

வகைவகை இனிதுகேட்டு அமைந்த

மேதினிக்கிழமை நீங்கிடுந் தன்மை 

விளையினும் நடுவில் நீங்காது

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே

பார்த்திபன் கடமையாம் அன்றோ.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  ஒற்றர் சொல்லுவது அன்றிப் பிறர் மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.

 



அன்பு என்பது மனிதப் பண்பு

அன்பு என்பது மனிதப் பண்பு

---


"துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்,

பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு"


கலித்தொகை என்னும் நூலில், புலவர் கபிலர் பாடிய பாடல் வரிகளின் விளக்கம் --- நெருப்புப் போலும் வெப்பம் உடைமையால் அடிபொறுக்க இயலாத கொடுமை உடைய காட்டில், துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கிச் சேறாக்கிய சிறிது நீரையும், காதலியாகிய பெண்யானைக்கு முன்னே ஊட்டிவிட்டு, பிறகே தான் உண்ணும் ஆண்யானையும் உள்ளது.


ஐந்தறிவு உடைய விலங்குக்கே இத்தகைய அன்பு விளங்கும் என்றால், ஆறு அறிவு உடைய மனிதனுக்கு உள்ளத்தில் அன்பு விளங்கத்தானே வேண்டும். உண்மை அன்பு தன்னலம் கருதாது. தனது துயரைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன்னைச் சேர்ந்தோரின் துயரைத் துடைப்பது உயர்ந்த மனிதப் பண்பு ஆகும். 


“அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை, வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று” என்றார் திருவள்ளுவ நாயனார்.  உள்ளத்தில் அன்பு இல்லாமல், இல்லறத்தில் ஒருவன் பொருந்தி வாழ்வது என்பது, கொடிய பாலை நிலத்தில் உலர்ந்து வற்றிப் போய் நிற்கும் ஒரு மரமானது தளிர்த்து விளங்கியது என்பதைப் போன்றதாகும்.  பாலை வனத்தில் பட்ட மரம் தளிர்க்காது. அன்பு என்பது புறத்தில் காணப்படுவது அல்ல. “யாக்கை அகத்து உறுப்பு அன்பு” என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்பது உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய உறுப்பு ஆகும். அது புறத்து உறுப்பு அல்ல.


“அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இல்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை கருத்துப் பொருந்தி உணர்தல் வேண்டும்.  உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய அன்பு ஒன்றுதான் உயிர்நிலை ஆகும். அன்பு இல்லாத ஒருனுக்குப் பொருந்தி உள்ள உடம்பு என்பது, உயிர் இல்லாத்தும், எலும்பைத் தோலால் மூடி இருப்பதும் ஆகிய உடம்பு. அப்படி என்றால், அது நடைப்பிணம் தானே.


பேச வராத ஊமைகளுக்கு, பழைமையான நூல்கள் என்ன பயனைத் தரும்? பார்வை அற்றவனுக்கு விளக்கால் என்ன பயன் விளையும்? அதுபோல, இந்த உலகில் பெரிய இடமும், நிறைந்த பொருளும், எவல் தொழில் செய்பவர்களும் நிறைந்து இருந்தாலும், அன்பு இல்லாதவனுக்கு அவைகளால் ஒரு பயனும் இல்லை என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.


இராமாயணத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஒரு பாடலின் மூலம் கலித்தொகையில் கூறிய நிகழ்வைக் காட்சிப் படுத்தி நமக்குக் காட்குகிறார். பம்பை வாவிப் படலத்தில் ஒரு பாடல்....


“வார் அளித் தழை மாப் பிடி வாயிடை,

கார் அளிக் கலுழிக் கருங் கைம் மலை

நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன்,

பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான்.”


இதன் பொருள் ---


மிக்க பெருங்கருணைக்குப் பிறப்பிடமாக உள்ள இராமபிரான், கரிய வண்டுகள் மொய்க்கப் பெற்ற மதநீர்ப் பெருக்கை உடைய கரிய ஆண்யானைகள், நீண்ட குளிர்ந்த தழைகளை உண்ணும் பெரிய பெண்யானைகளின் வாயில் தண்ணீரை முகந்து கொடுத்து ஊட்டுவதை நோக்கி நின்றான்.

இராமபிரான் கருணையின் பிறப்பிடமானவன். 'கருணையின் நிலையும் அன்னான்' என்று கூறுவார் கம்பர். மதநீர்ப் பெருக்குடைய ஆண்யானை, தனது துணையாகிய பெண்யானை வருந்தா வண்ணம் நீர் ஊட்டி அன்பு காட்டுவதைக் கண்ட இராமன், அறிவும் ஆண்மையும் மிக்க தன்னால் சீதையின் துயர் நீக்கிப் பாதுகாக்க இயலாமை எண்ணி வருந்தி நின்றான் என்பதைக் குறித்த பாடல் இது.


054. பொச்சாவாமை - 09. இகழ்ச்சியின் கெட்டாரை

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அளவு கடந்த மகிழ்ச்சியின் காரணமாக ஒருவன் மிகுந்த செருக்குக் கொள்ளும்போது, முற்காலத்தில், அந்த மகிழ்ச்சியினால் உண்டாகிய மறதியால் கெட்டவர்களை நினைவில் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தமக்குப் பெரியதோர் செல்வம் கிடைக்குமானால், அந்த செல்வத்தின் மிகுதியால், அளவு கடந்த மகிழ்ச்சியை அடைந்து, செய்யவேண்டிய காரியங்களை மறந்து, செருக்குக் கொண்டு இருப்பதால், ஒருவன் கேட்டினை அடைவது திண்ணம். எனவே, அவ்வித மறப்பும், அதனால் உண்டாகின்ற கேடும் உண்டாகாது இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற நல்லறிவினை உடையவன், முற்காலத்தில் இவ்வாறான அளவு கடந்த களிப்பினால், செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாது கேட்டினை அடைந்தவர்களது வரலாறுகளை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆற்றலின் களிப்பால் இரணியன் கெட்டான்.

வீரக் களிப்பால் சூரபதுமன் கெட்டான்.

காமக் களிப்பால் இராவணன் கெட்டான்.

மமதைக் களிப்பால் துரியோதனன் கெட்டான்.


களிப்பினால் கெட்டவர் வரலாற்றை, பின்வரும் பாடல் காட்டுவது காண்க.


“சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன்வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,


பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,


ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?


மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.”


    இப் பாடலில் குறித்துள்ளவர்கள் எல்லாருக்கும் அளவில்லாத செல்வமும் ஆற்றலும் வந்து அடைந்தது அவரவருடைய தவலிமையாலும், பிறப்பினாலுமே. அவர்கள் கேடு அடைந்த்தும் அவரவர் கொண்டு இருந்த அகந்தையால் தான். ஆக, இடும்பு, இடும்பைக்கு இடமாகும் என்பதை அறிக.


இதற்குத் திருக்குறள்...

“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம் தம்

மகிழ்ச்சியின் மைந்து உறும் போழ்து.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து --- அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, 

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக --- முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.

(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து'  என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“முப்புரத்தோர் வேவ உடன்இருந்த மூவரே

துப்பினால் கண்டுஅறிந்தார், சோமேசா! --- வெப்பால்

இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.”

இதன் பொருள்---

சோமேசா! தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனின் ஆய சோர்வால் கெட்டவர்களை நினைக்க,  வெப்பால் முப்புரத்தோர் வேவ - சிவபெருமானுடைய புன்சிரிப்பில் தோன்றிய தீயினால் திரிபுரத்தசுரர்கள் வெந்தொழிய, உடன் இருந்த மூவரே - அத் திரிபுரத்தசுரர்களுடன் வாழ்ந்திருந்த சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்னும் மூன்று அசுரர்களுமே, துப்பினால் கண்டு அறிந்தார் - சிவபூசை வலிமையினாலே உண்மையைக் கண்டு அறிந்து உய்ந்தனர் ஆகலான் என்றவாறு.

துப்பு - வலிமை. சிவபூசையின் பயனால் அவர்கட்கு அது விளைந்தது.

தாருகாட்சன், கமலாட்சன், வித்தியுன்மாலி என்னும் அசுரர் மூவர் மிக்க சிவபத்தியுடையார். தேவர்களைத் துன்புறுத்தியதுடன், பொன், வெள்ளி, இரும்பு ஆகிய இவற்றாலாகிய மூன்று அரண்களில் இருந்து எங்கெங்கும் பறந்து சென்று கீழிறங்கி உயிர்களுக்குக் கேடு செய்தனர். திருமால் புத்தனாய்த் தோன்றி அவர்கள் சிவபத்தி கெடப் போதித்தார்.  அதனால் அவர்களும் மயங்கினார்கள். அதன் பின் திருமாலாதி தேவர்கள் திருக்கயிலை சென்று சிவபெருமானை அடைந்து, அவர்கள் செய்யும் துன்பத்தை விண்ணப்பித்து அவர்களை அழிக்கவேண்டினார்கள். சிவபெருமான் அதற்கு இன்றியமையாத கருவிகள் அமைக்க என ஏவத் தேவர்கள் பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களை உருளைகளாகவும், மேலுவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும், அக்கினியை அம்பின் நுனியாகவும் செய்து கருவிகள் அமைத்தார்கள்.  பெருமான் அவை கொண்டு பூரதமீது ஏறிச் சென்று திரிபுரத்தை அடைந்து, நகைத்த அளவில், அப்புரம் மூன்றும் வெந்து நீறாயின. அவ்வாறாக, அப்புரத்தாருள் மற்றையோரெல்லாம் வெந்து அழியவும், புத்தன் போதனையால் மயங்கிச் சிவபூசையைக் கைவிடாத சுதன்மன், சுபுத்தி, சிசீலன் என்னும் மூவரே பிழைத்துப் பெருமான் பணித்தவாறே காஞ்சியில் இலிங்கப் பிரதிட்டை செய்து பூசித்தபின் கயிலையில் இருவர் துவாரபாலகர்களாகவும், மற்றொருவர் முழா முழக்குபவராகவும் நியமிக்கப் பெற்றனர்.


இதனை,


“பூஆர்மலர் கொண்டு அடியார் தொழுவார் 

புகழ்வார் வானோர்கள்

மூவார்புரங்கள் எரித்த அன்று 

மூவர்க்கு அருள்செய்தார்

தூமாமழைநின்று அதிரவெருவித் 

தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணைவந்து அணையும்சாரல் 

அண்ணா மலையாரே.”


என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருட்பாடலாலும்,


“மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என்று ஏவிய பின்னை

ஒருவன் நீகரி காடு அரங் காக

மானை நோக்கிஓர் மாநடம் மகிழ

மணிமு ழாமுழக்க அருள் செய்த

தேவ தேவநின் திருவடி அடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.”


என்னும் நம்பியாரூர் திருவாக்காலும்,


“உய்யவல் லார் ஒரு மூவரைக் காவல்கொண்டு,

எய்யவல் லானுக்கே உந்தீபற!

இளமுலை பங்கன் என்று உந்தீபற.”


என்னும் திருவாசகப் பாடலாலும்


“முப்பு ரங்களின் மூவர் புத்தன்

மொழித்தி றத்தின் மயங்கிடாது

அப்பு அணிந்தவர் தாள் பணிந்து அருள்

ஆற்றின் நின்றனர், ஆதலால்

பொய்ப்புரம் தபு காலை, நீற்றறை

நாவின் மன்னவர் போல்,எரி

தப்பி வாழ்ந்தனர், ஈசன் ஆணையில்

நிற்பவர்க்கு இடர் சாருமோ?.”


“சுதன்மன் என்று சுசீலன் என்று

சுபுத்தி என்று சொலப்படும்

அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்

அருள் சுரந்து, உமை பாகனார்

இதம் விளங்க வரங்கள் வேட்ட

விளம்புமின் என, அங்கு அவர்

பதம் வணங்குபு நின் திருப்பணி

வாயில் காப்பருள் என்றனர்.”

எனவரும் காஞ்சிப் புராணச் செய்யுட்காளாலும் அறிக.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“தண்ணார் சடைமுடியைத் தக்கன் இழ்ந்தான், அரனை

எண்ணாமல் அன்றோ? இரங்கேசா! --- மண்ணோர்

இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக, தாம்தம்

மகிழ்ச்சியில் மூந்து உறும் போழ்து.”

இதன் பொருள் ---

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! தக்கன் - தட்சப் பிரஜாபதி, அரனை எண்ணாமல் அன்றோ - சிவனை இகழ்ந்து மதிக்காமையினால் அல்லவோ, தண் ஆர் சடைமுடியை இழந்தான் - (தனது) குளிர்ச்சி பொருந்திய சடைத் தலையை இழந்தான், (ஆகையால், இது) தாம் தம் மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து - ஒருவர் தமது செல்வச் செருக்கில் இறுமாந்து இருக்கும்போது, இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - அதனாலாகிய மறதியினால் இகழ்ந்து விட்டவர்களை (எப்படியேனும்) நினைக்கக் கடவர் (என்பதை விளக்குகின்றது).

கருத்து --- செல்வச் செருக்கினால் யாரையும் இகழ்ந்து மறந்து விடக் கூடாது.

விளக்கம் --- தக்கன் என்பவன் பரமசிவனுக்கு மாமன்.  அவன் தன் செல்வச் செருக்கினால் பரமசிவனை இகழ்ந்து மறந்து விட்டு ஓர் யாகம் செய்யத் தொடங்கினான். யாகம் நல்ல காரியம். ஆனாலும் அதைச் செய்தவன் அழுக்காறை மேற்கொண்டு இருந்தமையால்,  அவனுக்கு அது கெட்ட காரியமாகவே முடிந்தது. பரமசிவனைத் தவிர மற்றைத் தேவர்களுக்கெல்லாம் அவிப்பாகம் தரவேண்டி அவர்களை வரவழைத்திருந்தான். அவர்களும் அவனைப் போலவே எண்ணித் துணியாமல் யாகத்துக்கு வந்திருந்தார்கள். அது தெரிந்த சிவபிராற்குக் கோபம் மூண்டது. கோபமே உருவெடுத்து வந்து போல அகோர வீரபத்திரர் தோன்றினார். அவரை ஏவி யாகத்தை அழிக்கக் கட்டளை இட்டார் சிவபிரான். அவர் அவ்விடத்திற்குப் போய், யாகத்தை அழித்ததும் அன்றித் தக்கன் தலையையும் அறுத்து எறிந்தார். அவரைக் கண்டவுடனே மற்றைத் தேவர்கள் எல்லாம் கை இழந்தவர்களும் - கண் இழந்தவர்களும் - பல் இழந்தவர்களும் - மூக்கு இழந்தவர்களும் - நாக்கு இழந்தவர்களும் ஆகி ஓட்டம் பிடித்தார்கள். ஆகையால், ஒருவன் தன் மகிழ்ச்சியில் மைந்துறும்போது இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளவேண்டும். இல்லாவிட்டால் தக்கனுக்கு வந்த கேடு வரும் என்க.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையினால்

பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை--மெச்சா(து)

அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்

விலங்குகள் நல்ல மிக.”    --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையின் - இவ்வுடல் இப்பொழுதே அழியும் தன்மையாயிருத்தலை அறிந்து, பொச்சாவாப் போற்றி நோற்பாரை - மறவாமல் குறித்துக் கொண்டு பாவம் தங்கண் நிகழாவழித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை, மெச்சாது - புகழாமல், அலந்து - நொந்து, தம் வாய் வந்த கூறும் அவரின் - தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும், விலங்குகள் மிக நல்ல - மிருகங்கள் மிக நல்லனவாகும்.


055. செங்கோன்மை - 06. வேல் அன்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் போரில் வெற்ற...