054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செயலை நன்கு மதித்து எண்ணிச் செய்தால், செய்வதற்கு அரிய செயல்கள் என ஆகாதவை எவையும் இல்லை" என்கின்றார் நாயனார்.

உள்ளத்தில் மறதி இல்லாதவர்களுக்கு, செயலின்மேல் இடைவிடாத நினைப்பு இருக்கும். இருக்கவே, அதனை முடித்தற்கு உரிய உபாயங்களைத் தேடிக் கொள்வர். கருமத்தில் கண்ணாக உள்ளவர்க்கு, செயலானது எளிதில் முடியும்.


இதற்குத் திருக்குறள்...

“அரிய என்று ஆகாத இல்லை, பொச்சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அரிய என்று ஆகாத இல்லை --- இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, 

பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.

(பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளலாகா

மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே! -சிறந்த

ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே

புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து. ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மாண்பு ஒழியும் நெஞ்சே – பெருமை இல்லாத நேஞ்சே!, பிறந்த இடம் - இதற்கு முன் பிறந்த இடங்களை, நினைப்பின் - நீ நினைந்து பார்த்தாயானால், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா - அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து - புழுக்கள் கூடி வாழும் இடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டான மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி - பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப் போதி - துன்பத்தினின்றும் உய்தி பெறுவாயாக.


054. பொச்சாவாமை - 05. முன்னுறக் காவாது

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வரக் கூடிய துன்பங்களை முன்னரே அறிந்து, தன்னைக் காத்துக் கொள்ளமால் மறந்து இருந்தவன், பின்னர் துன்பம் வந்த காலத்தில் அவற்றைத் தடுத்துக் கொள்ள இயலாமையால், தனது பிழைக்கு வருந்துவான்" என்கின்றார் நாயனார்.

முன்னரே அறிந்து காக்காவிட்டால், அவனது சோர்வினை எதிர்பார்த்து இருந்த பகைவர் காலம் அறிந்து தாக்குதல் கூடும். பகைவர் தாம் வரும்போது சொல்லிவிட்டு வரமாட்டார். அக்காலத்தில், இவனுக்கு ஆற்றல் இருந்தாலும், தக்க துணையைத் தேடிக்கொள்ள அவகாசம் இல்லாமையால், காத்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.


இதற்குத் திருக்குறள்...

“முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை

பின் ஊறு இரங்கி விடும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முன்னுறக் காவாது இழுக்கியான் --- தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், 

பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் --- பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.

(காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மறந்து மறந்து ஈசன் மலரடியைப் பேணாது

இறந்து இறந்து மாலும் இடர் எய்தும், ---  அறிந்துஅறிந்து

முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை

பின் ஊறு இரங்கி விடும்.”

திருமால் தசாவதாரங்கள் எடுத்தமையை நினைந்து, இவ்வாறு பாடினார்.

ஒருகாலத்திலே தேவர்கட்கும் அசுரர்கட்கும் போர் மூண்டது.  அப்போரில் தேவர்கள் தோல்வியடைந்து திருமாலிடம் சென்று தங்களுடைய துன்பங்களைக் கூறி முறையிட்டுக் கொண்டார்கள்.  திருமால் அசுரர்களோடு போருக்குச் சென்று அசுரர்களை விரட்டியடித்தார். திருமாலோடு போர் செய்ய முடியாத அசுரர்கள் தங்களுடைய குலகுருவாகிய சுக்கிராசாரியரின் தந்தையான பிருகு முனிவருடைய இருப்பிடத்தை அடைந்து, முனிவருடைய மனைவியாகிய கியாதி என்பவளிடம் அடைக்கலம் புகுந்தனர்.  கியாதி அவர்களைக் காப்பதாகக் கூறி மறைத்து வைத்தனள்.  திருமால் துரத்திக்கொண்டே அங்கு வந்தார். கியாதி உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அவள் தமக்கு மாமியாக இருத்தலோடு முனிவருடைய மனைவியாகவும் உள்ளாள் என்பதையும் நோக்காமல் அவளையும் கொன்று உள்ளே போய் அசுரரையும் கொன்று சென்றார். இச் செய்தியை உணர்ந்த பிருகு முனிவர், "திருமாலே, நீ நிலவுலகத்தின்கண் பத்துப் பிறவிகளை எடுப்பாயாக" என்று வசவுரை வழங்கினார். இவ்வசவுரையை உணர்ந்த திருமால் இதனைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபிரானைப் பூசித்து வழிபட்டார். ஆயினும் முனிவருடைய தீ மொழியிலிருந்து விடுபட முடியவில்லை. நிலவுலகில் பத்துப் பிறப்புக்கள் எடுக்க வேண்டியதாகவே முடிந்துவிட்டது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“கோடியர்தன் போல்தோன்ற குன்றிமதர்க் கும்பமுனி

மூடுவெண் நோய்உற்றான், முருகேசா! - நாடுங்கால்

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்ஊறு இரங்கி விடும்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, மதர்க் கும்பமுனி - களிப்பினை உடைய அகத்திய முனிவர், கோடியர் தன் போல் தோன்ற குன்றி - கோடி அகத்தியர்கள் தம்போல் காணப்பட, அதனால் மனம் சோர்ந்து, மூடு வெண்நோய் உற்றான் - உடலெல்லாம் மூடுவதாகிய வெண்குட்ட நோயைப் பெற்றார்.  நாடுங்கால் - ஆராயுமிடத்திலே, முன் உறக் காவாது - காக்கப்பட வேண்டிய துன்பங்களை எல்லாம் அவை வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளாது, இழுக்கியான் - மறந்து சோர்ந்து இருந்தவன், பின் தன் பிழை ஊறு இரங்கி விடும் - பிறகு தன் தவற்றினாலே இடையூறு உண்டாகியதை எண்ணி வருந்துவான்.

ஆணவக் களிப்புக் கொண்டிருந்த அகத்திய முனிவர், தம்போல் கோடிக்கணக்கான அகத்தியர் தோன்றக் கண்டு அதனால் உள்ளம் குன்றி வெண்நோய் அடைந்தார். காக்க வேண்டிய இடையூறுகளை எல்லாம் முன்னரே காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன் பிறகு தன் பிழையால் இடையூறு ஏற்பட்டதைக் கண்டு உள்ளம் இரங்குவான் என்பதாம்.

அகத்திய முனிவர் பல சிவப்பதிகளையும் வணங்கித் திருக்கோடிகா என்னும் பதியை அடைந்தார். மனத் தூய்மையோடு நாளும் சிவபெருமானைப் பூசித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்குள்ள பெரியோர்களைத் தாம் பணியாமல் அவர்களை ஏவல் கொண்டார். 'கற்பில் சிறந்த மனைவி வாய்க்கப்பெற்ற நம் போல் சிறந்தவரில்லை' என்னும் செருக்கையும் உள்ளத்திலே கொண்டார்.  

ஒருநாள் சிவபெருமானைப் பூசிக்கும்போது சிவபெருமான் அகத்தியருடைய செருக்கை அடக்க எண்ணினார். சிவலிங்கத்திலே கோடி அகத்திய முனிவர் மனைவியரோடு விரைவாகத் தோன்றி அதைப் பூசித்து அதிலே மறையும்படி ஒரு புதுமையைக் காட்டி அருளினார். அதனை நோக்கிய அகத்திய முனிவர் நாணம் கொண்டார். அதனால் உடல் முழுவதும் விளர்த்தது. தம்முடைய தீய எண்ணத்தைப் பலவாறாக இகழ்ந்து கொண்டார். உருவிலி (அசரீரி) வாக்குப்படி திருவாவடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு அந்நோய் நீங்கப் பெற்றார்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்

றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்

பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்

மன்னிய ஏதந் தரும்.” --- ஆசாரக்கோவை.

இதன் பொருள் ---

தன் உடம்பு - தன்னுடைய உடம்பும், தாரம் - மனைவியும். அடைக்கலம் - அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு என்று - தன் உயிர்க்கு உதவியாகுமென்று, உன்னித்து - நினைத்து, வைத்த பொருளோடு – சேர்த்து வைத்த பொருளும், இவை நான்கும் - இந்த நான்கையும், பொன்னினைப் போல் - பொன்னைக் காப்பதுபோல, போற்றி காத்து உய்க்க - ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக, உய்க்காக்கால் - அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடின், மன்னிய - மிகுந்த. ஏதம் - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.



054. பொச்சாவாமை - 04. அச்சம் உடையார்க்கு

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "உள்ளத்தில் அச்சம் உடையவர்க்கு எந்த ஒரு அரணாலும் பயனில்லை; அதுபோல, நல்ல செல்வத்தைப் படைத்தவராக இருந்தாலும், உள்ளத்தில் மறதியை உடையவர்க்கு, அவர் படைத்துள்ள செல்வத்தால் எவ்வகையிலும் நன்மை இல்லை" என்கின்றார் நாயனார்.

பிற காவல்கள் ஒருவனுக்கு அமைந்து இருந்தாலும், உள்ளத்தில் சோர்வு உடையவனுக்கு அவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை. அதுபோலவே, நிறைந்த செல்வம் உடையனாய் இருந்தாலும், அதன் பயனை அறியாது உள்ளத்தில் சொர்வு கொண்டு இருப்பவனுக்கு, அவனது செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை.


இதற்குத் திருக்குறள்..

“அச்சம் உடையார்க்கு அரண் இல்லை, ஆங்கு இல்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அரண் அச்சம் உடையார்க்கு இல்லை --- காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, 

ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.

(நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)



பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்.

“அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற

இலையின்கண் நீர் நி(ல்)லாது ஆகும்--அலைவில்

புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே,

மலங்கடி வாளா தவர்க்கு.”    ---  அறநெறிச்சாரம்

இதன் பொருள் ---

அலை புனலுள் நிற்பினும் - அலைகளையுடைய நீரிலே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண் - தாமரை இலையிடத்து, நீர் நில்லாது ஆகும் - நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவில் புலன்களில் நிற்பினும் -சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு - முனிவர்களை, கடிவு மலம் ஆளா - அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமை கொள்ள மாட்டா; பொச்சாப்பு இலர் – அந்த அறவோர்களும் மறதியால் கூட அவற்றின் வயப்படுதலும் இலர்.


47. வினையின் பயன் செய்தவனையே சாரும்

 “தானே புரிவினையால் சாரும் இருபயனும்,

தானே அனுபவித்தல் தப்பாது, - தான்நூறு

கோடிகற்பம் சென்றாலும், கோதையே! செய்தவினை

நாடிநிற்கும் என்றார் நயந்து.” -- நீதிவெண்பா.


பெண்ணே! எண்ண முடியாத கோடி கோடி யுகங்கள் கடந்து விட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகளின் பயன் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் கூறுவர். ஆதலால், ஒருவன் தானே செய்த நல்வினை தீவினை என்னும் இருவினையினால் வந்து சேரக் கூடிய புண்ணிய பாவப் பயன்களும், செய்த அவனே அடைந்து அனுபவித்தல் தவறாது.


(புரிவினை - செய்த நல்வினை தீவினை இரண்டும்.  இருபயன் - இன்பமும் துன்பமும். கற்பம் - ஊழி, யுகம்.)


108. கல்யாணப் பஞ்சம் இல்லை

 


சலியாமல் தண்டலையில் தாயகனார்

     அருள்கொண்டு தருமம் செய்யப்

பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்

     ஈந்தவைதாம் போக மீந்தால்

மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்

     விளைந்திடும் நன்மாரி ஆகும்!

கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்

     இல்லையொரு காலுந் தானே.


இதன் பொருள் ---

        தண்டலையில் தாயகனார் அருள்கொண்டு சலியாமல் தருமம் செய்ய – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்  எழுந்தருளிய தாயகனார் ஆகிய சிவபரம்பொருளின் திருவருளை வாழ்த்தி உள்ளத்தில் சோஓர்வு கொள்ளாமல் அறச் செயல்களைச் செய்ய, கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள் - உழவுத் தொழிலிலே அழகுறக் கிடைத்த செல்வத்தில், ஈந்தவை தாம் போக மீந்தால் - (தென்புலத்தாருக்கும் தெய்வத்திற்கும் விருந்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தனக்கும் அரசனுக்கும் என ஆறு பங்காக்கிக்) கொடுத்தவை போக மிச்சமானால், மலிவாகிச் செல்வம் உண்டாம் - மிகுதியாகிச் செல்வம் கிடைக்கும்; வயல்முழுதும் விளைந்திடும் நன்மாரி ஆகும் - நிலம் எங்கும் விளையத் தக்க மாரியாக அந்த அறம் இருக்கும், கலியாணப் பஞ்சம் இலை - அவர்கள் வீட்டிலே மங்கல நிகழ்வுகள் குறைவில்லாமல் நடைபெறும், களப்பஞ்சம் ஒருகாலும் இல்லை - விளைவு கொண்டு நெல்லடிக்கும் களத்திற்கும் ஒருபோதும் வறுமை இராது.

அறநெறியில் வழுவாமல் வாழ்வோர் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வர் என்பது சொல்லப்பட்டது. நமது பழந்தமிழரின் வாழ்வியல் நெறி இதுவே ஆகும். இல்லறத்தில் நிற்கின்ற ஒருவர், மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினர் இடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே தலையானது ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

 

"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்றுஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை".

 என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 தென் --- அழகு, ஞானம், சிறப்பு. புலம் --- அறிவு.

         தென்புலத்தார் என்பது, மெய்யறிவு உடையவர், சான்றோரைக் குறித்தது என்கின்றார், கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

         தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையில் இருப்பவர் என்பது பொருள். இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதனால், நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களைத் தென்திசையில் உள்ளவர் எனக் கூறுவது மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு என்பது, ஓர் ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம்.

         நம்மோடு வாழ்ந்து இருந்து மறைந்த முன்னோர்களைத் தென்புலத்தார் அல்லது பிதிரர் என்போம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் தேவசாதியர் என்கின்றார் பரிமேலழகர். அவர்க்கு இருக்கும் இடம் தெற்கு என்பதால் தென்புலத்தார் எனப்பட்டார். இறந்து போனவரது புத்திரர் முதலியோர் செய்யும் கருமங்களினால் மகிழ்ச்சி உற்று, இறந்தவர்க்கும் அவரது இனத்தவர்க்கும் நேர்ந்த துர்க்கதியை நீக்கவும், நற்கதியை அளிக்கவும் வல்ல ஒருவகை தேவசாதியார் பிதிர்க்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைத் தேவர்களில் ஒரு வகையினராய் இருத்தல் பற்றி, பிதிரராவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி என்று கூறப்பட்டது. இயற்கைத் தேவர்கள் அல்லாதார், கருமத் தேவர்கள் எனப்படுவர். அவர்கள், புண்ணியத்திற்கு ஏற்ப, சுவர்க்காதி போகங்களை அனுபவித்து, புண்ணியம் கழிந்த உடனே, அவ்விடத்தினின்றும் நீங்கி விடுபவர்கள். 

        இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று, நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை, குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் ஆகும். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினை ஆகும். தென்புலத்தாரை நினைத்து அடையாள முறையில் சில உணவுகளைப் படைத்து, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். நம்முடைய வாழ்க்கை முறையில், முன்னோர்களை என்றும் மறத்தல் கூடாது. எனவேதான், திருவள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார். "தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்" என்பது புறநானூறு. இதனால்,முன்னோரை வழிபடுகின்ற நல்ல புதல்வர்களைப் பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

     விருந்து என்பது சுற்றத்தாரையும், நண்பர்களையும் குறிக்காது. விருந்து என்ற சொல்லுக்கு, புதிதாய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் என்று பொருள். விருந்தினர் என்றால், புதியவர், அதிதி என்ற பொருள். 

 “அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர், --- அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்,

வீழ்வார்க்கு வீழ்வார் துணை. “      --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் --- 

        சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு, விருந்தினர் என்போர், எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, அவ்வாறு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல், மலை உச்சியில் இருந்து நிலத்தின் மீது விழுகின்றவர்க்கு, அவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று எண்ணுதல் போன்றது ஆகும்.

     "ஓர் இராத்திரி பரியந்தம் புதிதாக வந்தவன் அதிதி எனத் தக்கவன். நாள்தோறும் வாராது, ஒரு காலத்து வருபவனுக்கு அதிதி என்று பெயர்" என்று மனுநூல் சொல்லுகின்றது. "அறவோர்க்கு அளித்தலும்,அந்தணர் ஓம்பலும்,தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், தொன்றுதொட்டே விருந்தினரை எதிர் கொள்ளுதல் இல்லறத்தானுடைய கடமை ஆயிற்று என்பது பெறப்படும்.

     இல்லறத்திற்கு உரிய நெறிகளிலே நின்று வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள் என்பதை,

 

“அரசுகொள் கடன்கள் ஆற்றி 

      மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி 

      குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி 

      விளங்கிய குடிகள்ஓங்கி

வரைபுரை மாடம் நீடி மலர்ந்து 

      உள பதிகள் எங்கும்.”

 எனப் பெரியபுராணத்தில், திருநாட்டுச் சிறப்பு என்னும் பகுதியில் வரும் பாடல் கூறும்.

 இதன் பொருள் --- 

        (உழவர்கள் தாங்கள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல்லில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின், எஞ்சிய விளைவைக் கொண்டு,முதலில் செய்யத் தக்கன ஆகிய அறங்களை விரும்பிச் செய்து, வழிபாட்டிற்கு உரிய கடவுள் பூசையைப் பாராட்டிச் செய்து, தென்புலத்தார்களையும் விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால் விளக்கம் பெறும் குடிகளால் செழுமையாக அமைக்கப்பட்ட மலைபோன்ற மாடங்களை உடைய ஊர்கள் எங்கும் நிறைந்திருப்பது சோழ நாடு.

      அரசுகொள் கடன்கள் ஆற்றுதல், அரசுக்குச் சேரவேண்டிய பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துவது ஆகும். இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாகும். அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும், வேறு வரி வகைகளும் கூட்டி,மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிக்கக் கூடும் என்பதால் "கடன்கள்" என்றும் சொல்லப்பட்டது. இது குடிகளின் கடமைகளில் முதல் கடமையாகும். எனவேதான், தெய்வத்தின் முன்னர் வைத்து முதலில் கூறப்பட்டது. 

      வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள், அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடு அல்ல என்பது இதனால் விளங்கும்.

      வருவாயில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியாகச் செலுத்தி, எஞ்சியதைக் கொண்டு,  தென்புலத்தார்,  தெய்வம், விருந்து ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்து ஆறினை ஓம்பினார்கள் மக்கள் என்று அறியப்படுகின்றது. ஆக, வருவாயை ஆறு பங்காகப் பிரித்து, ஒரு பங்கினை அரசுக்குச் செலுத்தி,  எஞ்சியதைக் கொண்டு அறநெறியில் வாழ்ந்தார்கள்.

 

      திருவிளையாடல் புராணத்தில் வரும் பாடல்களாலும்,  நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு உணரலாம்.

 

“கற்றை வை களைந்து தூற்றி,

         கூப்பி, ஊர்க் காணித் தெய்வம்,

அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து,

         அளவை கண்டு, ஆறில் ஒன்று

கொற்றவர் கடமை கொள்ள,

         பண்டியில் கொடுபோய்த் தென்னாடு

உற்றவர்,சுற்றம்,தெய்வம்

         விருந்தினர்க்கு ஊட்டி உண்பார்.”

 

        பாண்டி நாட்டிலே வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறுகின்ற இப் பாடலின் பதப்பொருள் ---

       கற்றை வை களைந்து தூற்றி - அறுவடை செய்து கற்றையாக வைக்கப்பட்டுள்ள வைக்கோலைக் கட்டு நீக்கி அடித்து, பதர் போகத் தூற்றி,  கூப்பி - நெல்லைப் பொலிகளாகக் குவித்து வைத்து, (அவ்விடத்திலேயே) ஊர்க் காணித் தெய்வம் - கிராம தேவதைகளுக்கும்,  அற்றவர்க்கு - வறியவர்களுக்கும்,  அற்றவாறு ஈந்து - வரையறுத்தபடி கொடுத்து, அளவை கண்டு - அளந்து பார்த்து, கொற்றவர் கடமை ஆறில் ஒன்று கொள்ள - மன்னருக்கு இறைப்பொருளாக ஆறில் ஒரு கூறு கொள்ளக் கொடுத்து,  பண்டியில் கொடுபோய் - மிகுதியை வண்டிகளில் கொண்டு போய் தமது இருப்பிடத்திலே சேர்த்து,  தென்னாடு உற்றவர் - தென்புலத்தைச் சேர்ந்தவர்களையும், சுற்றம் - சுற்றத்தாரையும்,  தெய்வம் - தேவரையும்,  விருந்தினர்க்கு - விருந்தினரையும்,  ஊட்டி  -உண்பித்து,  உண்பார் - (அந்நாட்டினர்) தாமும் உண்பார்.

 

“பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த

நன்மலை மானக் கூப்பி நல்கிப் பல் குடியும் ஓம்பித்

தென்மலைக் கிழவன் தெய்வம் தென்புல வாணர் ஒக்கல்

தன்மனை விருந்து காத்துத் தருக்கினால் இருக்கும் நாளில்.

                  --- தி.வி.புராணம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.

 இதன் பொருள் --- 

      பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை - மேருமலைத் தெய்வம் ஆகிய சிவபரம்பொருள் கொடுத்த அத் தூய்மையாகிய பொருளை, அந்த நல்மலை மானப் கூப்பி - அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்து, பல் குடியும் நல்கி ஓம்பி - பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து, தென்மலைக் கிழவன் -பொதிகை மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி, தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து - தெய்வத்தையும், தென்புலத்தாரையும், சுற்றத்தாரையும், தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் - களிப்புடன் இருக்கும் காலத்தில்.         

 

“மின்னார் சடையான் தமர்,ஆய்ந்தவர், வேதச் செல்வர்,

தென்னாடர் தெய்வம், விருந்து, ஒக்கல்,செறிந்து நட்டோர்,

முன்னாம் எவர்க்கும் முகில்போல் வரையாமல் நல்கி,

எந்நாளுநம் நோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான்.”

                     --- தி.வி.புராணம், உலவாக்கோட்டை அருளிய படலம்.

இதன் பொருள் ---

         மின் ஆர் சடையான் தமர் - மின் போன்ற சடையை உடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர் - வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் - பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து நட்டோர் - நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் - முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி - மேகம் போல் வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய் இன்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான் - எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான்.

    இல்லறத்தார்க்கு உரிய இந்தத் தலையாய கடமைகளை ஆற்றாமல், ஒருவன் தனியாக இருந்து உண்பது, கொக்கு தான் பிடித்த மீனைத் தனியாக இருந்து தின்பதற்கு ஒப்பாகும் என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.       

                        

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு

இன்புறத்தான் உண்டல் இனிதாமே --- அன்புறவே

தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர்மீன்

கொக்கு அறுத்தல் என்றே குறி. “         --- நீதிவெண்பா.


பாடல் 23

"நூற்றுஅனைத்து ஓர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்

வீற்றுஇருந்த செல்வம் விழையாதே, கூற்றுதைத்தான்

ஆடுஅரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான்தன்

பாடுஅரவம் கேட்ட பகல்."

இதன் பொருள் ---

    கூற்று உதைத்தான் – மார்க்கண்டேயருக்காகு இயமனைத் தனது திருவடியால் உதைத்து அருள் புரிந்தவரும், ஆடு அரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான் - ஆடுகின்ற பாம்பினைக் கச்சாக இடையிலே கட்டிய அம்மானாரும் ஆகிய, தன் பாடு அரவம் கேட்ட பகல் - சிவபெருமானது அருட்புகழைப் போற்றும் படலாகிய வேத கீதத்தினைக் கேட்ட ஒரு பகலின் விளைவுக்கு ஈடாகிய பயனாக, நூற்றனைத்து ஓர் பல் ஊழி - நூற்றுக் கணக்காகிய பல ஊழிக் காலம், நுண் வயிர வெண்குடைக் கீழ் வீற்று இருந்த செல்வம் விழையாதே -- நுண்ணிய வயிரமணிகள் வரிசை பெறக்  வெண்கொற்றக் குடையின் நிழலின் கீழே வீற்றிருந்து அரசாண்ட அரசச் செல்வம் பெற்றபயனை ஏற்றுக் கொள்ளாது.


விளக்கம் --- 

அனைத்து - அளவு; ஊழி - நீண்ட கால அளவு – யுகம். காலத்தின் பேரெல்லை. பகல் – காலத்தின் ஒரு சிற்றெல்லை. பாடு அரவம் – பாட்டின் ஒலி.   வயிரமணிகள் பதிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் பல ஊழிக் காலம் வீற்றிருந்த அரச போகமானது, காலத்தின் ஒரு சிறு கூறாகிய பகல் பொழுதில் சிவபரம்ப்பொருளின் அருட்புகழைக் கூறும் பாடலைக் கேட்டதால் உண்டான இன்பத்துக்கு ஈடாகாது என்றார்.


054. பொச்சாவாமை - 02. பொச்சாப்புக் கொல்லும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறிவினை நித்திய வறுமை கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்கின்றார் நாயனார்.

நாள்தோறும் பிச்சை எடுப்பதால் வருத்தம் அடைந்து, தனது வயிற்றினை நிறைத்து வருகின்ற ஒருவன், அறிவு உடையவனாக இருந்தாலும், அவன் பிச்சை எடுக்கின்ற காரணம் பற்றி, இழித்துக் கூறப்படுகின்றான். எனவே, அவனுடைய மதிப்பினை அவன் இழக்க நேர்கின்றது. அதுபோல், ஒருவனுடைய மறப்பு அல்லது சோர்வும், அவன் புகழை அடையக் கூடியவனாய் இருந்தாலும், அவன் தன்னை மறதி அல்லது சோர்வில் இருந்து காத்துக் கொள்ளாததால் உண்டாகும் காரியக் கேட்டால், அவனுக்கு இழிவை உண்டாக்கி, அவனுக்கு உள்ள நன்மதிப்பையும் கெடுக்கும்.


இதற்குத் திருக்குறள்....

“பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை

நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் --- ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு --- அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.

(நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

“இப்புவிமேல் கோயில் இறந்தது அயனார் மறந்து

செப்புதலால் அன்றோ, சிவசிவா! --- எப்பொழுதும்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்சல் நிரப்புக்கொன் றாங்கு.”

அயன் --- நான்முகன். அவனுக்கு உலகத்தில் கோயில் இல்லை. அவன் செருக்கால் தன்னை மறந்து சிவனுக்குப் பெருமையை மறுத்தல்.

ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். அது முற்றிப் போரில் முடிந்தது. இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் அனற்பிழம்பாய் காட்சி அளித்தது. ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று கூறி போர்புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச்சோதிப் பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

“பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.”   --- திருவாசகம்.

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரமனோ அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காண முடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் அத்தீப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"   --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம் அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்து, பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், திருமால் பிரமன் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 

திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள்.

(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7) பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

பிரமன் தனது அறிவுச் செருக்கால், புகழினை இழந்தான் என்பது அறியப்படும்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"உறுதியுள் வள்ளுவர் ஓதல் பொச்சாப்புக் கொல்லும் புகழை 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு எனலால், உனது

நறுமலர்ப் பாதத்தை நான்மறந்தால் புகழ் நன்மை இனிப்

பெறுவதற்கு ஓர்செயல் காணேன் புல்லாணிப் பெருந்தகையே".

இதன் பொருள் ---

"அறிவினை நித்திய வறுமையால் கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்று உயிர்களுக்கு உறுதி பயக்கும் சொல்லாகத் திருவள்ளுவர் அருளி இருப்பதால், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் கோயில் கொண்டு இருக்கும் பெருமாளே! உனது தாமரை மலர் போன்ற திருவடிகளை நான் மறப்பேனானால், புகழையும், நன்மையையும் அடைவதற்கு வேறு ஒரு செயலையும் நான் அறியமாட்டேன்.

உறுதியுள் - உறுதிச் சொல்லான திருக்குறளுள். நறு மலர்ப்பாதம் - நறிய மலர் போன்ற திருவடி. செயல் - செய்கை. பெருந்தகை - பெரிய தன்மைகளை உடையவன்.


054. பொச்சாவாமை - 01. இறந்த வெகுளியின்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


அதாவது, தொழிலில் மறதி கொள்ளாமல் இருத்தல். அழகு, செல்வம், ஆற்றல் முதலியவற்றால் மகிழ்ந்து தன்னைக் காத்துக் கொள்ளுதலிலும், மாற்றாரை ஆழித்தல் முதலிய காரியங்களிலும் மறதி கொள்ளாமல் இருத்தலைக் குறித்தது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "மிக்க இன்பக் களிப்பால் உண்டாகும் மறதியானது, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது" என்கின்றார் நாயனார்.

அதாவது பகைவரை வெல்வதற்கும், கொடியவரைத் தண்டிப்பதற்கும் வேண்டுவதாகிய அளவான கோபம், அளவு கடந்து போகுமானால் எத்தகைய தீமையை அது விளைக்குமோ, அத்தகைய தீமை ஒருவனுக்குத் தன்னிடத்து உள்ள பெருஞ்செல்வம், அழகு, ஆற்றல் முதலியவற்றால் ஆன அளவிறந்த மகிழ்ச்சியானல் உண்டாகும் மறதி அல்லது சோர்வினால் உண்டாகும்.


இதற்குத் திருக்குறள்.....


“இறந்த வெகுளியின் தீதே, சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு --- மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, 

இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.

(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்,  இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை அறியலாம்...


“வெகுளியே உயிர்க்கு எல்லாம் விளைக்கும் தீவினை,

வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்,

வெகுளியே அறிவினைச் சிதைக்கும், வெம்மைசால்

வெகுளியில் கொடும்பகை வேறொன்று இல்லையால். --- காஞ்சிப் புராணம்.


இதன் பொருள் ---

கோபமே உயிர்களுக்கெல்லாம் பாபமாகிய பைங்கூழை விளைவிக்கும்  வித்தாம். மேலும், கோபமே நற்குணம், தவம், நோன்பு முதலிய புண்ணியச் செயல்களை அழிக்கும் கருவியாம்; கோபமே அறிவினை அழிக்கும் மயக்கப் பொருளாம். கொடுமை மிக்க கோபத்தினும் கொடிய பகை ஒருவற்குப் பிறிதொன்றும் இல்லை. (அதுவே என்க)


“சில்சொல் பெருந்தோள் மகளிரும், பல்வகையுந்

தாளினால் தந்த விழுநிதியும், --- நாடோறும்

நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும், இம்மூன்றும்

காப்பு இகழல் ஆகாப்பொருள். ---  திரிகடுகம்.


இதன் பொருள் ---


சில்சொல் பெருந்தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும், பெரிய தோள்களையுமுடைய, பெண்டிரும்; பல்வகையும் தாளினால் தந்த விழுநிதியும் - பலவகையாலும் தமது முயற்சியினால் தேடிய சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்பொழுதும் நாக்கில் நீர் அருந்தும்படி சமைத்த உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு இகழல் ஆகாப் பொருள் - காத்தலைத் தாழ்த்திக் கூறுதலாகாத பொருள்களாம்.


பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்ற வேண்டி முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி.


ஏவா மக்கள் மூவா மருந்து


ஏவா மக்கள் மூவா மருந்து

-----


        எளிய சிறுசிறு தொடர்களே மக்களின் தேவையைக் குறித்து உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை என்று வால்ட்டர் பேட்டர் என்னும் மேனாட்டு அறிஞர் ஒருவர் பின்னாளில் கூறியதை, அந்நாளிலேயே காட்டியவர் நமது ஔவைப் பிராட்டியார். எளிய சொற்களால் வாழ்க்கைப் பாடத்தை மக்களுக்குப் புகட்டியவர் பிராட்டியார்.

    தாயும் தந்தையும் நமது கண் எதிரில் காணும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களே நமது கண் கண்ட தெய்வங்கள். இவர்களைப் போற்றினால், தெய்வத்தைப் போற்றியதாகும் என்பதை அறிவுறுத்த, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று சொன்னார். தாயும் தந்தையுமே நமது கண்முன்பு காணப்படும் தெய்வங்களாவார்.

எங்கும் நீக்கம் அற நிறைந்து விளங்கும் பரம்பொருள் பொதுவான தெய்வம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக அது விளங்குகின்றது. அதுவே உயிர்களைப் படைத்துக் காத்து, அருளுகின்றது. அதனை நம்பி பயபத்தியுடன் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால், யாரும் நேரில் காணவில்லை. கண்டவரைக் கேட்டும் யாரும் அறிந்தது இல்லை. “கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டு அறியோம் உன்னைக் கண்டு அறிவாரை” என்கிறார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட பரம்பொருள்தான், தாயாகியும் தந்தையாகியும் வந்து, நம்மை ஈன்று, புறம் தந்து, இனிய கல்வியினைத் தந்து சான்றோக்கி, நல்லோர் போற்றச் சபை நடுவே வீற்றிருக்கச் செய்து, நலம் பலவும் தந்து அருளுகின்றது. "ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்" என்று அருளினார் அப்பர் பெருமான். நாம் நமது கண் எதிரில் காணுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையர் என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தாயாகி, தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.

தந்தை தாயைப் பேணும் ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, இயல்பாகவே, தந்தைக்கு ஒப்பவும், தாய்க்கு ஒப்பவும் மதித்துப் போற்றுதற்கு உரியவர்களையும் மதித்துப் போற்றும் நற்குணம் விளங்கும். இராமன் பரதனுக்கு அறிவுறுத்தியதாக வரும் கம்பராமாயணப் பாடல்களால் தாய்தந்தையரின் பெருமை அறியப்படும்.

“பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,

விரவு சீலமும், வினையின் மேன்மையும்,

உர வி(ல்)லோய்! தொழற்கு உரிய தேவரும்,

குரவரே எனப் பெரிது கோடியால்.” – கம்பராமாயணம்

வலிமை பொருந்திய வில்லை உடையவனே! புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; குற்றமற்ற நல்லுணர்வும்;  உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; செய்தொழிலின் சிறப்பும்; வணங்குதற்கு உரிய தேவர்களும்; பெரியோர்களே என்று மிகவும் மனத்தில் கொள்வாய்.

“அந்த நல் பெருங் குரவர் ஆர்? எனச்

சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,

தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்,

எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.” --கம்பராமாயணம்.

(என் அன்பில் சிறந்த பரதனே! நான் கூறிய) சிறந்த பெருமையுடைய குரவர்கள் யார் என்று மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால், தந்தையும் தாயுமே அல்லாமல், சிறப்பித்துக் கூற வேறு ஒருவரும் இல்லை. அத்தகைய பெற்றோர் துயரம் இன்றி வாழ்வதற்கு ஒரு அருமருந்தாக, அமுதமாக உதவுவது, அவர்கள் ஈன்றெடுத்த நல்ல மக்களே ஆவர். “ஏவா மக்கள் மூவா மருந்து” என்று அருளினார் ஔவைப் பிராட்டியார். பெற்றவர் இதைச் செய் என்று ஏவுதற்கு முன்பாகவே அவர்தம் குறிப்பு அறிந்து செய்கிற பிள்ளைகள் பெற்றவருக்குத் தேவாமிர்தம் போல்வார்.

இதைத் தசரத மன்னன் கூற்றாக நமக்குத் தெளிவுபடுத்துகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

‘மன்னர் ஆனவர் அல்லர் ;  மேல் வானவர்க்கு அரசு ஆம்

பொன்னின் வார் கழல்  புரந்தரன் போலியர் அல்லர் ; 

பின்னும், மா தவம் தொடங்கி, நோன்பு இழைத்தவர் அல்லர் ; 

சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்.  -- கம்ப. அயோத்தியா. மந்திரப் படலம்

        (தசரதன் இராமனுக்குச் சொல்லியது)  அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்;  மன்னர் ஆனவர் அல்லவர் – அரசர்களாக வாழ்கின்றவர்கள் அல்லர்; மேல் வானவர்க்கு அரசு ஆம் பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் - மேலுலகில் உள்ள தேவர்களுக்கு அரசனாகிய பொன்னாலான நீண்ட வீரக்கழல் அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர்;  பின்னும் – அன்றியும்; மாதவம் தொடங்கி நோன்பு இழத்தவர் அல்லர் - பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி, பல விரதங்களைச் செய்தவரும் அல்லர்;  சொல் மறா மகப் பெற்றவர் - (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத் தட்டாத மக்களைப் பெற்றவரே ஆவர்.

    நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கி வாழ்வர் என்பது அழகாக விளக்கப்பட்டது.  


நல்லோர் தொடர்பு நன்மையைத் தரும்

 நல்லோர் தொடர்பு நன்மையைத் தரும்

-----


     பெரியோர்களாடு சேர்ந்து இருந்தால்,  ஒருவனுக்கு நல்ல அறிவானது நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும் என்று அறிவுறுத்துகின்ற "நாலடியார்" பாடல்....

“கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.”  

இதன் பொருள் ---

     கல்வி அறிவு இல்லாதவராக இருந்தாலும், கற்று அறிந்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், அவர்களுக்கும் அப் பெரியோரது சேர்க்கையால் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல அறிவானது வாய்க்கப் பெறும். எப்படி என்றால், சிறந்த மணமும் அழகும் நிறைந்த பாதிரிப் பூவானது, புதிய மண் பாத்திரத்தில் இருந்தால், அந்த மண் பாத்திரத்திற்கும், அதில் இருந்த தண்ணீருக்கும், பாதிரிப் பூவின் மணம் கிடைப்பது போல. 

பெரியோர்களோடு கூடிப் பழக ஒருவனுக்கு, பவ்வியம் வேண்டும். விநயம் வேண்டும். பவ்வியம் - தாழ்மை, அடக்கம், பணிவு. விநயம் - வணக்கம், மரியாதை, ஒழுக்கம்.

    "கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்பது போலத்தான். கம்பர் வீட்டிலே உள்ள கட்டுத்தறி என்ன செய்யும்? கம்பர் என்ன செய்கின்றாரோ அதைச் செய்யும். செய்வதைப் புரிந்து கொள்ளும் தன்மையும், சொன்னதைச் செய்யும் திறமும் இருந்தால் போதும்.

    பெரியோர்களோடு சகவாசம் செய்தால், அவர்க்கு உள்ள  குணம் வரும் என்பதை, பின்வரும் பாடலால் அறியலாம்....


“சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல

     தருவும் அவ் வாசனை தரும்;

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்

     சாயல்பொன் மயமே தரும்;


பந்தம்மிகு பாலுடன்  வளாவிய த(ண்)ணீர் எலாம்,

     பால்போல் நிறம் கொடுக்கும்;

படிகமணி கட்குளே நிற்கின்ற வடமும்அப்

     படியே குணங்கொடுக்கும்;


அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்,

     அடுத்ததும் பசுமையாகும்;

ஆன பெரியோர்களொடு சகவாசம் அதுசெயின்,

     அவர்கள் குணம் வரும் என்பர்காண்;


மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி

     மருக!மெய்ஞ் ஞானமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.”


இதன் பொருள் ---

     முன் மந்தர நெடுங்கிரியின் கடல் கடைந்த அரி மருக - முன்னொரு காலத்தில் மந்தரம் எனும் பெரிய மலையினை மத்தாக நிறுவிக் கடலைக் கடைந்த திருமாலின் திருமருகரே! மெய்ஞ்ஞான முருகா - உண்மையறிவான முருகக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     சந்தன விருட்சத்தை அண்டி நிற்கின்ற பல தருவும் அவ்வாசனை தரும் - சந்தன மரத்தைச் சார்ந்து நிற்கின்ற பலவகையான மரங்களும் சந்தன மணத்தையே பெறும். தங்க மகமேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன்மயமே தரும் - பொன்மயமான மகாமேரு மலையைச் சேர்ந்த காக்கையும் பொன் நிறத்தைப் பெறும்; பந்தம் மிகு பாலுடன் வளாவிய த(ண்)ணீர் எ(ல்)லாம் பால்போல் நிறம் கொடுக்கும் - பாலுடன் சேர்த்து வளாவிய தண்ணீரும் பால் போலவே வெண்ணிறம் கொடுக்கும். படிகமணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் - படிகமணிகளைக் கோத்த நூலும் படிகம் போலவே நிறம் கொடுக்கும். அந்தம் மிகு மரகதக் கல்லைத் திரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் - அழகு மிகுந்த மரகதக் கல்லை அணிந்தால் அதனைச் சார்ந்ததும் பசுமை நிறமாகவே இருக்கும். ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின், அவர்கள் குணம் வரும் என்பர் - அறிவு மிக்க பெரியோர்களுடன் நட்புக் கொண்டால், அவர்களுடைய குணமே வரும் என்பர் பெரியோர்.

    “கனக மலை அருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே” என்பது பதினொன்றாம் திருமுறையில் வரும் “பொன்வண்ணத்து அந்தாதி”யில் சொல்லப்பட்டது. தன்னைச் சார்ந்த பொருளைத் தன் வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையேயுள்ள பொதுத் தன்மை. “சேர்வார் தாமே தானாகச் செயும் அவன்” என்பது திருஞானசம்பந்தர் அருள்வாக்கு.

     பெரியோர் இணக்கம் செய்யும் நன்மையைக் குறித்து, "நீதி வெண்பா" என்னும் நூல் கூறுமாறு காண்க.

“கங்கைநதி பாவம், சசி தாபம், கற்பகம் தான்

மங்கல் உறும் வறுமை மாற்றுமே, --- துங்கமிகும்

இக்குணம்ஓர் மூன்றும் பெரியோரிடம் சேரில்

அக்கணமே போம் என்று அறி.”      --- நீதிவெண்பா.

    கங்கை நதியானது பாவத்தையும், திங்கள் வெப்பத்தையும், கற்பக மரம் எல்லா நன்மைகளையும் மங்குமாறு செய்யும் வறுமையையும் நீக்கும். ஒருவனிடத்து உள்ள பாவம் தாபம் வறுமை ஆகிய இந்த மூன்று தீய குணங்களும் உயர்வு மிக்க பெரியோரிடம் சேர்ந்தால், அந்தக் கணத்திலேயே அழிந்து போகும் என்று நீ அறிந்து கொள்வாயாக.


     அவ்வாறே, தீயோர் கூட்டுறவால் விளையும் தீமை குறித்தும் "நீதி வெண்பா" கூறுமாறு காண்க.

“நன்று அறியாத் தீயோர்க்கு இடம் அளித்த நல்லோர்க்கும்,

துன்று கிளைக்கும் துயர் சேரும்; --- குன்றிடத்தில்

பின்இரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம் கொடுத்த

அன்னம் முதல் பட்டது போல்ஆம்.”   --- நீதிவெண்பா.

     முன்னொரு காலத்து மலையில் இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.


இதில் அமைந்த கதை ---

     ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று, அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது. அன்னமும் தங்க இடம் கொடுத்தது. காக்கையானது தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஓர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரம் ஆகி, விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.


     நல்லோரது கூட்டுறவால் நன்மை எப்படி விளையும் என்பதைக் கம்பர், தான் இயற்றிய இராமாயணத்தில் பின்வரும் பாடல்களால் தெளிவிக்கின்றார். இராமன், மிதிலையில் வில்லை ஓடித்து, சீதாதேவியை மணந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அயோத்தியில் இருந்து தசரதன் முதலானவர்கள் எல்லோருமாக, அவரவர் தேரில் ஏறிக் கொண்டு மிதிலை நோக்கிச் செல்லுகின்றார்கள். தேரில் இருந்தவை பொன்னால் ஆன சக்கரங்கள். அந்தப் பொன்னால் ஆன சக்கரங்கள் வேகமாக உருண்டு தமது பொன்னை உரைத்துக் கொண்டே சென்றதால், வழியில் இருந்த பாறைகள் எல்லாம் பொன்னிறம் ஆயின. இந்தக் காட்சியானது, தெளிந்த அறிவினை உடைய பெரியோர் சிறியவர்களிடத்தில் இருந்தால், அவர்களுடைய சொல்லை நாளும் கேட்டு, சிறியவர்களும் தமது புன்மைக் குணம் நீங்கி, தெளிந்த அறிவினைப் பெறுவர் என்னும் உண்மையைப் புலப்படுத்தி நின்றது. (பொன்னால் ஆன தேர்ச் சக்கரம் - தெளிந்த அறிவினை உடைய பெரியோர். கருமையான பாறாங் கற்கள் - அறிவில்லாத சிறியோர்.)


"தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும், அவர்தம்

மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே;

உருண்ட வாய்தொறும் பொன்உருள் உரைத்து உரைத்து ஓடி.

இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம்".


     தெருண்ட மேலவர் - தெளிந்த அறிவுடைய பெரியோர்; சிறியவர்ச் சேரினும் - சிறியவர்களை (தாம் போய்ச்) சேர்ந்திருந்தாலும்; மருண்ட அவர் தம் - அறிவுத் தெளிவில்லாமல் மயங்கிய அவர்களுடைய; புன்மையை -  இழி குணத்தை; மாற்றுவர் எனும் இது - போக்குவர் என்று சொல்லுகின்ற இந்த வார்த்தை; வழக்கே - முறைமையானதே (உலக இயல்புதான்);  இரதம் - (ஏனெனில்) இரதங்கள்; பொன் உருள் உருண்ட - பொன்னால்   இயன்ற சக்கரங்கள் உருண்டு சென்ற; வாய்தொறும் – இடங்கள் தோறும்;   உரைத்து உரைத்து ஓடி - (தம்) பொன்னை உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட கல்லையும் - கருமையான பாறாங் கற்களையும்; தம் நிறம் ஆக்கிய - (தம்) பொன்னிறமாகவே செய்யலாயின. தேரின் பொன்னிற உருளை சென்றதால் அங்குள்ள பாறைக் கற்கள் பொன்னிறத்தை அடைந்தன.


"ஆன தூயவரோடு உடன் ஆடினார்

ஞான நீரவர் ஆகுதல் நன்றுஅரோ! -

தேனும். நாவியும். தேக்கு. அகில் ஆவியும்.

மீனும். நாறின; வேறு இனி வேண்டுமோ?"     --கம்பராமாயணம்.

 

ஆன தூயவரோடு- தூய்மையான ஞானியரோடு; உடன் ஆடினார் -  கூடியிருந்து பழகியவரும்;  ஞான  நீரவர் ஆகுதல் நன்று – நல்ல ஞான  குணத்தையுடையவர் ஆவது தக்கது. (அதுபோல); மீனும் - (மகளிர் நீராடிய நீர்நிலைகளில் உள்ள) மீன்களும்;  தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் நாறின - தேன் மணமும், கத்தூரி மணமும், தேக்கின் புகைமணமும்,  அகிலின் புகைமணமும் வீசல் ஆயின;  வேறு இனி வேண்டுமோ?  (இக்கருத்தை  விளக்க) வேறு உவமையும் இனிவேண்டுமோ? (வேண்டா.)


“மொய் கொள் சீறடியைச் சேர்ந்த

   முளரிக்கும் செம்மை ஈந்த

தையலாள் அமிழ்த மேனி

   தயங்கு ஒளி தழுவிக்கொள்ள.

வெய்ய பூண்முலையில் சேர்ந்த

   வெண் முத்தம் சிவந்த; - என்றால்.

செய்யவர்ச் சேர்ந்துளாரும்

   செய்யராய்த் திகழ்வர் அன்றே?”  --- கம்பராமாயணம்.

 

        மொய்கொள்  சீறடியைச் சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த தையலாள் - செம்பஞ்சுக் குழம்பு முதலிய சாந்துகள் மொய்த்துக் கிடக்கின்ற (தனது) சிறிய அடிகளை (ஒப்பாக இயலாமல்) சரண் அடைந்த தாமரை மலர்களுக்கும். (தனது) அடிகளின் செம்மை நிறத்தைக் கொடுத்துள்ள சீதையினுடைய; அமிழ்த மேனி  அங்கு ஒளி தழுவிக்கொள்ள - அமுதம் போன்று அரிய செந்நிறத் திருமேனியிலே விளங்குகின்ற செம்மைநிற ஒளி (தம்  மேலே) வந்து படுதலால்; வெய்ய பூண்முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் - விருப்பத்தை நல்கும் அணிகள் அணிந்த    மார்பகங்களில் பொருத்தியுள்ள வெண்ணிறம் அமைந்த  முத்துக்களும்  செந்நிறம் அடைந்தன என்றால்;  செய்யவர்ச்  சேர்ந்துளாரும் செய்யராய்த் திகழ்வர்  அன்றே?  -   செம்மைக்   குணம் பொருந்தியவரைச் சேர்ந்தவகளும் செம்மைக்  குணம்  பெற்றுத் திகழ்வார்கள்  (என்பது உண்மை) அன்றோ?  

    இதனை இரத்தினச் சுருக்கமாக,  "நீரானது தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினாலே தனது தன்மை வேறுபட்டு, அந் நிலத்தினது தன்மையைச் சாரும்.  அதுபோல, மனிதரது அறிவும் தான் சேர்ந்துள்ள இனத்தினது தன்மையாலே மாறுபட்டு, அந்த இனத்தினது தன்மையை அடையும்" என்கின்றார் நாயனார்.

வானில் இருந்து இழிந்த நீரானது, யாதொரு நிறமும், சுவையும் இல்லாமல், தனது தன்மையோடு கூடி இருந்தும், நிலத்தில் வந்து சேர்ந்த காலத்து, எந்த எந்த நிலத்தில் சேருகின்றதோ, அந்த அந்த நிலத்தின் குணத்திற்குத் தக்க அளவாக, நிறத்தினையும், சுவையினையும் கொள்ளுவது போல, மிகப் பெரியோராக இருந்தாலும், சிற்றினத்தைச் சார்ந்து இருந்தால், தமது இயல்பாகிய குணம் கெட்டு, சார்ந்த இனத்தினது குணம் செயல் முதலியவைகளை அடைவார்கள். எனவே, உவர் நிலத்தைச் சேர்ந்த நீர், உவர்ப்புத் தன்மையை அடைவது போல, சிற்றினத்தைச் சேர்ந்து சிற்றறிவு விளங்கப் பெறாது இருத்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்த, “நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும், மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு” என்று அருளினார்.


    இதையும் கவிச்சக்கரவர்த்தி எதிர்மறையாக ஒரு பாடலின் வழி தெளிவுற விளக்குகின்றார்.

'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?

வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். --- கம்பராமாயணம்.

புலத்தியன் வழிமுதல் வந்த - புலத்தியனுடைய மரபிலே  வந்த ; பொய் அறு குலத்து இயல்பு அழிந்தது - தருமவழி  நீங்காத குலத்தின் தன்மை, உனது செயலால் அழிந்துவிட்டது;  வலத்து இயல் அழிவதற்கு ஏது - அதுவே வெற்றித் தன்மை  அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ - அதனால்  உனக்கு வெற்றி கிட்டுமோ?   மையறு நிலத்து இயல்  நீர் இயல்  என்னும் நீரதால் - இது குற்றமற்ற நிலத்தின்  இயல்பே நீரின் இயல்பு என்ற முறைமைக்கு ஏற்று உள்ளது.

 




பொது --- 1124. எற்றா வற்றா

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

எற்றா வற்றா (பொது)

முருகா!

அடியேனுக்கு உற்ற துணை நீயே. அருள் புரிவாய்


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


எற்றா வற்றா மட்டா கத்தீ

     யிற்காய் செக்கட் ...... பிறைவாளே


யிற்றார் கைப்பா சத்தே கட்டா

     டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன்


உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா

     ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென்


றுற்றோ துற்றே பற்றா நிற்பா

     ரக்கா லத்துக் ...... குறவார்தான்


பற்றார் மற்றா டைக்கே குத்தா

     பற்றா னப்பிற் ...... களைவோனே


பச்சே னற்கா னத்தே நிற்பாள்

     பொற்பா தத்திற் ...... பணிவோனே


முற்றா வற்றா மெய்ப்போ தத்தே

     யுற்றார் சித்தத் ...... துறைவோனே


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.



                  பதம் பிரித்தல்



எற்றா வற்றா மட்டாகத் தீ-

     யில் காய் செம் கண், ...... பிறை வாள்,


எயிற்றார் கைப் பாசத்தே கட்டு,

     ஆடிக் கோபித்துக் ...... கொடுபோமுன்,


உற்றார், பெற்றார், சுற்றா நிற்பார்,

     ஒட்டோம், விட்டுக் ...... கழியீர் என்று,


உற்று ஓதுற்றே பற்றா நிற்பார்,

     அக் காலத்துக்கு ...... உறவு ஆர் தான்?


பற்றார் மல் தாடைக்கே குத்தா,

     பல் தான் அப்பில் ...... களைவோனே!


பச்சு ஏனல் கானத்தே நிற்பாள்

     பொன் பாதத்தில் ...... பணிவோனே!


முற்றா வற்றா மெய்ப் போதத்தே

     உற்றார் சித்தத்து ...... உறைவோனே!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை

பற்றார் மல் தாடைக்கே குத்தா பல்தான் அப்பில் களைவோனே --- பகைவர்களின் வலிமை மிக்க தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிபவரே!

பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற் பாதத்திற் பணிவோனே --- பசுமையான தினைப்புனத்தினைக் காவல் கொண்டு நிற்கும் வள்ளிநாயகியின் அழகிய திருவடிகளில் பணிபவரே! 

முற்றா வற்றா மெய்ப்போதத்தே உற்றார் சித்தத் துறைவோனே --- மெய்யறிவு முற்றி சிறிதும் வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!

        முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

        முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

        சுத்தா --- தூயவரே!

        முத்தா --- பற்று அற்றவரே!

        முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண் --- உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் குறைவுறும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், 

பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு --- பிறைச் சந்திரனைப் போல் வளைந்து, வாள் போலக் கூர்மையாக உள்ள பற்களை உடையவர்களுமான இயம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, 

ஆடிக் கோபித்துக் கொடுபோமுன் --- எனது உயிரை அலைத்துக் கோபித்துக் கொண்டு போவதற்கு முன்பாக, 

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர் என்று --- உற்றாரும், பெற்றோரும், சூழ்ந்து நிற்பவர்களும், “உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர்” என்று

உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் --- அருகில் இருந்து கொண்டு கூறி அன்பு காட்டி நிற்பார்கள்.

அக் காலத்துக்கு உறவு ஆர்தான் --- அந்தக் காலத்தில் அடியேனுக்கு உறவு ஆவார் யார்?


பொழிப்புரை


        பகைவர்களின் வலிமை மிக்க தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிபவரே!

        பசுமையான தினைப்புனத்தினைக் காவல் கொண்டு நிற்கும் வள்ளிநாயகியின் அழகிய திருவடிகளில் பணிபவரே! 

மெய்யறிவு முற்றி சிறிதும் வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!

        முத்தி நிலைக்கு அதிபரே!

        ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

        தூயவரே!

        பற்று அற்றவரே!

        உயிர்களுக்கு முத்தியை வழங்கும் பெருமையில் மிக்கவரே!

உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் குறைவுறும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறைச் சந்திரனைப் போல் வளைந்து, வாள் போலக் கூர்மையாக உள்ள பற்களை உடையவர்களுமான இயம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, எனது உயிரை அலைத்துக் கோபித்துக் கொண்டு போவதற்கு முன்பாக, உற்றாரும், பெற்றோரும், சூழ்ந்து நிற்பவர்களும், “உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர்” என்று அருகில் இருந்து கொண்டு கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அக் காலத்துக்கு உறவு ஆர்தான் --- அந்தக் காலத்தில் அடியேனுக்கு உறவு ஆவார் யார்?

விரிவுரை

முற்றா வற்றா மெய்ப்போதத்தே உற்றார் சித்தத் துறைவோனே --- 

        இறைவன் மெய்யடியார்களின் உள்ளத்தில் வீற்றிருக்கின்றான்.  இறைவன்  தன்னை  அன்போடு வழிபடுபவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு  விளங்குவான்  என்பதை, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன்அமர்ந்த அன்பினர் ஆய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து உள் இருக்கும் புராணர்" புறத்தே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் திருவீழிமிழலை என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.  இறைவனை “மெய்ப்போதப் போது அமர்ந்தார்” என்று குறிப்பிடுவார் தெய்வச் சேக்கிழா பெருமான். 

    புறத்தே கோயில் மற்றும் பிற இடங்களில் நமது வேண்டுதலுக்கு ஏற்ப எழுந்தருளி அருள் புரிகின்ற, பரம்பொருளுக்கு, நிரந்தரமான இடம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

நஞ்சத்தை உண்டதனால்  இருள் ஒத்த செறிந்த அழகினை உடைய கண்டத்தை உடைய எம்பெருமானை, வானோர் உலகத்தான், தேவர் உலகத்தான் என்று சொல்பவர்கள் எல்லாம்  அவர்கள் அறிந்தவாறே சொல்லிக்கொள்ளட்டும். ஞானமே வடிவாகிய அவன் என் நெஞ்சத்தான் என்றே நான் சொல்வேன் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.

வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாம் என்க; - ஞானத்தான்,

முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்,

என்நெஞ்சத் தான்என்பன் யான்.

என்பது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி.

        இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், பொருளின் இயல்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டும். எந்தப் பொருளுக்கும் பொது இயல்பு என்றும் சிறப்பு இயல்பு என்றும் இருநிலைகள் உண்டு. இயல்பு என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றே. ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாகவே உள்ள இயல்பு "சிறப்பு இயல்பு" என்றும், வேறு ஒரு பொருளின் சார்பினால் உண்டாகி, அந்தச் சார்பு நீங்கியதும், நீங்குகின்ற இயல்புக்கு "பொது இயல்பு" என்றும் பொருள். சிறப்பு இயல்பு என்பது "சொரூப இலக்கணம்" ஆகும். பொது இயல்பு என்பது, "தடத்த இலக்கணம்" ஆகும்.

        ஆன்மாவானது, எந்தப் பொருளைச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையை அடைந்து நிற்கும். காரணம், அது தற்சுதந்தரம் இல்லாதது. ஆனால், இறைவனோ, வந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல் என்றும் ஒரே தன்மையனாய் இருப்பான். இது பற்றியே, இறைவனை "மெய்ப்பொருள்" என்றும் "செம்பொருள்" என்றும் பெரியோர் வழங்குவர். குணம், குறி, பெயர், செயல், ஆகிய ஒன்றும் இல்லாமல், தன் நிலையில் தானாகவே விளங்கும் ஒரு பொருள்தான் இறைவன். அது மெய்ப்பொருளின் சொரூப நிலை ஆகும்.

        புற உலகில் மக்களால் அமைக்கப்பட்டு உள்ள குடிசைகள் மட்டுமல்லாது மாடமாளிகைகள் கூட காலவெள்ளத்தில் அழிந்து போகக் கூடியவை.  அதுபோலவே, நமது உடலும் நாளடைவில் நைந்து சிதைந்து போகும். உடல் நைந்து போகும் முன், நமது உள்ளம் நைந்து போகவேண்டும். நைந்த உள்ளமே இறைவனுக்கு உகந்த கோயில் ஆகும். "காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம்" என்றார் அப்பர் பெருமான். "காலை எழுந்து் தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

"நகம் எல்லாம் தேயக் கையால், நாள்மலர் தொழுது தேவி,

முகம் எல்லாம் கண்ணீர் சோர, முன்பணிந்து ஏத்தும் தொண்டர்

அகம் அல்லால் கோயில் இல்லை, ஐயன் ஐயாறனார்க்கே"

என்னும் அப்பர் பெருமான் அருட்பாடலின்படி,  "காதலாகி, கண்ணீர் மல்கி" வழிபடுகின்ற அடியார்கள் உள்ளமே ஆண்டவன் உறையும் கோயில் ஆகும். பல்லவன் மன்னன் எழுப்பிய அழகான கோயிலுக்கு எழுந்தருளுவதை விடுத்து, பேசலார் நாயனார் எழுப்பிய மனக் கோயிலுக்கே முதலிடம் கொடுத்தார் இறைவர்.

"நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே

மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே"

என்றார் தாயுமான அடிகளார்.


எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செங்கண்.... அக் காலத்துக்கு உறவு ஆர்தான் --- 

    மாயையின் காரியமாக உலகத்தில் உடம்பினை எடுத்து வந்த அத்தனை உயிர்களும், படைக்கப்பட்ட அத்தனை உயிரில்லாத பொருட்களும் அழியக் கூடியவையே. நாம் துணை என்று கொண்டாடுகின்ற எதுவும், எப்போதும் உற்ற துணையாக மாட்டா.  அவர்கள் யாவரும் நமது வினையின் ஈட்டத்தால், ஈட்டிய வினைகளால் ஆன இன்பத்தையோ துன்பத்தையோ கழிப்பதற்குத் துணைபுரிய இறையருளால் வந்தவர்களே. அவர்கள் மீது பற்றுக் கொள்வதால் வேதனையே மிஞ்சும்.  பின்வரும் அருட்பாடல்களைச் சிந்திக்கவும்.


“மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்

வினை உளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத்தானை

நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சினீரே.” --- அப்பர்.


“எத்தாயர்? எத்தந்தை? எச்சுற்றத்தார்?

எம்மாடு சும்மாடாம்? ஏவர் நல்லார்?

செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை,

சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,

சித்தாய வேடத்தாய்! நீடு பொன்னித்

திருஆனைக்கா உடைய செல்வா! என்தன்

அத்தா! உன் பொற்பாதம் அடையப் பெற்றால்

அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய்கேனே.”--- அப்பர்.


“உற்றார் ஆர் உளரோ? - உயிர்

கொண்டு போம்பொழுது,

குற்றாலத்து உறை கூத்தன் அல்லால், நமக்கு

உற்றார் ஆர் உளரோ?” --- அப்பர்.


“கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும், காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்,

கொட்டி முழக்கி அழுவார், மயானம் குறுகிய அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா! கச்சி ஏகம்பனே!” --- பட்டினத்தார்.


“மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே,

இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?

தினையாம் அளவு, எள் அளவு ஆகினும் முன்பு செய்த தவம்

தனை ஆள, என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.” --- பட்டினத்தார்.


“ஊரும் சதம் அல்ல, உற்றார் சதம் அல்ல, உற்றுப் பெற்ற

பேரும் சதம் அல்ல, பெண்டிர் சதம் அல்ல, பிள்ளைகளும்

சீரும் சதம் அல்ல, செல்வம் சதம் அல்ல, தேசத்திலே

யாரும் சதம் அல்ல, நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே!” --- பட்டினத்தார்.

    இறைவன் என்பது, எங்கு தங்கும் பொருளைக் குறித்தது. இறை, இறைத்தல் என்னும் சொல்லடியாக வந்தது. பெண்டிரையும் மக்களையும் கட்டி அணைப்பது அன்பால். மிக நெருங்கிய உறவு முறை இது. நெருங்கிய உறவினரே சுடுகாடு வரையில் வந்து, அதற்கு மேல் நம்மோடு வரமுடியாது என்னும்போது, அவர்களே அதற்குமேல் உதவ முடியாது என்னும்போது, நாம் தேடிக்கொண்ட ஏனைய உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவு தூரம் துணை போவார் என்பதையும், நாம் தேடி வைத்த அஃறிணைப் பொருள்கள் எத்துணை உதவி செய்யும் என்பதையும் ஆராய்ந்து தெளிந்துக் கொள்ள வேண்டும். 

கருத்துரை


முருகா! அடியேனுக்கு உற்ற துணை நீயே. அருள் புரிவாய்



053. சுற்றம் தழால் - 10 உழைப் பிரிந்து

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து காரணம் இல்லாமல் பிரிந்து போய், பின்பு ஒரு காரணம் பற்றித் திரும்பி வந்த சுற்றத்தவனை, விரும்பிய உதவியைச் செய்து, பொறுத்துப் பார்த்து, ஆராய்ந்து தழுவிக் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

யாதொரு காரணமும் கருதாது, எவனாயினும் ஒரு சுற்றத்தவன், தன்னைப் பிரிந்து போய், பின்னர் தனக்கு ஏதேனும் ஒரு நன்மை கருதித் தன்னிடத்து வருவானாயின், அவனுக்கு ஆவன செய்தால் ஒழிய தன்னிடத்து இருக்கமாட்டான். எனவே, அவனுக்கு அவன செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து போய், ஆகாதவர்களோடு கூடி, தனக்குத் தீங்கு செய்ய முயல்வான். எனவே, ஆவன செய்வதுடன், எக்காரணத்தால் தன்னை வந்து இப்போது கூடினான் என்பதை ஆராயவும் வேண்டும் அவ்வாறு ஆராயுங்கால், இவனைப் போலப் பிரிந்து சென்ற சுற்றத்தாரோடு கூடி, தனக்குத் தீமை செய்யச் சென்று, அத் தீமையை செய்வதற்கு இல்லாதபோது தன்னிடம் வந்தானோ? அல்லது ஒரு காரணமும் இல்லாது போய், மீண்டும் தனக்கு நன்மை செய்ய வந்தானோ என்றும் ஆராய்வதுடன், பகை செய்யச் சென்றவனையும் தழுவிக் கொள்ளுதல் வேண்டும். நன்மை செய்தவனையும் அவனது நன்மைக்காகத் தழுவிக் கொள்ளவேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன்

இழைத்து இருந்து எண்ணிக் கொளல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை --- காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்து போய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, 

வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் --- அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.

(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப் போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மை செய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“அன்றுதமர் உள்ளம் அறிந்துஅடைந்த வீடணற்குச்

சென்றுஉறுதி சொன்னான், சிவசிவா! --- ஒன்றும்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.”

இதன் பொருள் ---

முன்னர் தமது சுற்றத்தாராகிய இராவணன் முதலானோரின் தீய உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரிடத்து இருந்து நீங்கி, தன்னைச் சரணாக அடைந்த விபீடண ஆழ்வாரை நன்றாக ஆராய்ந்து, நன்மையானதை இராமபிரான் சொல்லி, அடைக்கலம் தந்து காத்தார்.

தமர் - சுற்றத்தார். தமருள்ளம் - இராவணன் முதலியோர் உள்ளம். வீடணன் - விபீடணன். உறுதி - அடைக்கலம். சொன்னவன் - இராமன்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“பலநாளும் பக்கத்தார் ஆயினும். நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்

நீத்தார் எனக் கைவிடல் உண்டோ? தந்நெஞ்சத்

தியாத்தாரோடு யாத்த தொடர்பு.” ---  நாலடியார்

இதன் பொருள் ---

பலநாளும் பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்து பழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும் நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர் சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப் பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர் பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்று கைவிடப் படுதலுண்டோ?

நெஞ்சுப் பிணிப்பு உடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.



“நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்,

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்; - பூக்குழலாய்

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம்.”   ---  நன்னெறி.

இதன் பொருள் ---

        மலரணிந்த கூந்தலை உடையவளே,!நெல்லினின்றும் உமியானது சிறிதளவு நீங்கி, முன்போலவே ஒட்டிக் கொண்டாலும், முளைத்தற்கு ஏற்ற வலிமை இல்லாது போய்விடும். அதுபோல, பிரிதல் இல்லாத நண்பர் இருவர், மன வேறுபாட்டால் பிரிந்து, முன்போலவே கூடினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவர் பெருமா அற்பம் உடையதாகவே விளங்கும்.

திண்மை - வலிவு. நொய்து - சிறுமை, இங்கு அற்பமாம். புல்லினும் - தழுவினாலும்.


“தன்னை மதித்துத் தமர் என்று கொண்டக்கால்,

என்ன படினும் அவர்செய்வ செய்வதே,

இன்னொலி வெற்ப! இடர் என்னை? துன்னூசி

போம்வழி போகும் இழை.”    --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

இன் ஒலி வெற்ப - இனிய ஓசையை உடைய மலைநாடனே!, தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து, என்ன படினும் - எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும், அவர் செய்வ செய்வதே - சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே, துன் ஊசி போம்வழி போகும் இழை - தைக்கின்ற ஊசி போகின்ற வழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; இடர் என்னை - வரும் குற்றம் யாது உள்ளது?


053. சுற்றம் தழால் - 09. பொது நோக்கான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "பொதுவாகப் பார்க்காதவனாய், அவரவர் தனிச் சிறப்புக்கு ஏற்றமுறையில் அரசனது பார்வை அமையுமானால், அந்தப் பண்பை விரும்பிப் பலரும் சுற்றி இருப்பர்" என்கின்றார் நாயனார்.

உயர்ந்தார் இழிந்தார் என்று கருதாது, யாவரையும் ஒரு தன்மையராகக் கருதி நடந்தால், அதனை நோக்கி, உயர்ந்தார் தம்மை இழிவு படுத்தியதாக எண்ணி நீங்கி விடுவது பற்றி, பொது நோக்கு கூடாது என்று விலக்கி, சிறப்பு நோக்கு விதிக்கப்பட்டது. சிறப்பு நோக்கு என்பது, உயர்ந்தார் இழிந்தார் என்று அறிந்து, அவரவரது தகுதிக்கு ஏற்றவண்ணம் நடத்தல்.

சுற்றத்தவரில் உயர்ந்த தகுதியில் இருக்கும் ஒருவன், 'தாழ்ந்த நிலையில் இருப்பவன் ஒருவனையும் என்னையும் ஒன்றாக நடத்தினால், என் பெருமை குறைகின்றது, இனி இவனிடத்தில் இருத்தல் ஆகாது' என்று கருதி விலகிப் போவான். அவ்விதம் ஒவ்வொருவராக விலகிப் போவது சுற்றம் இன்மையில் முடியும். எனவே, சுற்றத்தைத் தழுவும் உபாயம் கூறப்பட்டது. 

இதற்குத் திருக்குறள்...

“பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின்,

அதுநோக்கி வாழ்வார் பலர்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் --- எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், 

அது நோக்கி வாழ்வார் பலர் --- அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.

(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப் பொது நோக்கை விலக்கி,  எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சோமாசிமாற நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...

“சோமாசி மாறனார் சுந்தரரால் யாகம் இனிது

ஆமாறு அரனை அழைப்பித்தார், --- ஆமாம்

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.”

இதன் பொருள் ---

சோழமண்டலத்திலே, திரு அம்பர் என்னும் திருத்தலத்தில், அந்தணர் குலத்திலே சோமாசிமாற நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். இவர் திருவைந்தெழுத்தை அன்பினோடு செபித்து வரும் நித்த நியமம் உடையவர். எக்குலத்தினராயினும் எக்குணமுடையராயினும் சிவபத்தி உடையாராயின் அவரே நம்மை ஆளுடையார் என்னும் உறுதியான மெய்யறிவு உடையவர். அடியவர்கள் தம் வீட்டுக்கு வந்தால் அவர்களை எதிர்கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர்.  சிவபிரானுக்குப் பிரீதியாகிய யாகங்களைப் புகழ் கருதாமலும், பயன் கருதாமலும் நிட்காமியமாக வேதவிதிப்படி செய்பவர்.  இவர் திருவாரூரில் சென்று சைவசமய ஆசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து அவர் திருவடிகளிலே பத்தி பண்ணினார். இவர் இயற்றிய யாகத்திலே சிவபெருமான் நேரே அவிர்ப்பாகத்தை ஏற்று அருளினார். அதனாலே நாயனார் சிவபதத்தைப் பெற்றார்.  

எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

“ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப்

பலரும் வருவர் பரிசில் மாக்கள்,

வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்

ஈதல் எளிதே மாவண் தோன்றல்

அதுநற்கு அறிந்தனை ஆயின்

 பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” --- புறநானூறு.

இதன் பொருள் ---

அள்ளிக் கொடுக்கின்ற ஒருவனை நம்பி நால்திசையில் இருந்து பரிசில் பெறப் பலரும் வருவர். அப்படி ஒருவோருக்கு அள்ளிக் கொடுப்பது மிக எளிது. ஆனால், அவரவர் தரம் அறிந்து பிசில் அளிப்பது மிகவும் அரிய செயல் ஆகும். ஏனவே, வள்ளல் புகழ் உடையவனே! பரிசில் வேண்டி வருவோரின் வரிசை அறிந்து, நீ பரிசில் தர நினைப்பாயானால், எல்லோரையும் ஒன்றாகக் கருதுவதை விட்டு ஒழிப்பாயாக.

 

“மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குஉடைய - மாகொல்

பகைமுகத்த வெல்வேலான் பார்வையில் தீட்டும்

நகைமுகத்த நன்கு மதிப்பு.”    --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

பகை முகத்த - பகைப்புலத்து உள்ள, மா - (தன் பகைவராகிய) விலங்குகளை எல்லாம்,  கொல் - கொல்லுந் திறனுடைய, வெள் வேலான் - ஒளிமிக்க வேலேந்திய அரசன், நகை முகத்த - (தன்) மலர்ந்த முகத்திற் காணும், பார்வையின் - பார்வையில், தீட்டும் - தோற்றுவிக்கும், நன்கு மதிப்பு - நன்மதிப்புக்கள், மாகம் - வானும், சிறுக - குறையும்படி, நிதிக் குவை குவித்து - (அவ்வளவு பெரிய) பொருட்குவியலைக் குவித்து, ஈகையின் - அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப் பார்க்கிலும், ஏக்கழுத்தம் - செம்மாப்பு, மிக்குடைய – பெரிது உடையவாகும்.


“ஊன் உண்டு உழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்

புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்

அரசியான் இன்புறூஉங் கீழ் எல்லாம், தத்தம்

வரிசையான் இன்புறூஉம் மேல்.”   ---  நான்மணிக் கடிகை.

இதன் பொருள் ---

ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்துப் புல்லினான் இன்புறூஉம் காலேயம் - ஊன் உணவை உட்கொண்டு புலி,  மேனி இன்புறும்; ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள புல்லினை மேய்ந்து ஆனிரைகள் இன்புறும்; நெல்லின் அரிசியான் கீழ் எல்லாம் இன்புறூஉம் - நெல்லரிசிச் சோற்றினால்  கீழ்மக்களெல்லாரும் இன்புறுவர்; மேல் தத்தம் வரிசையால் இன்புறூஉம் - மேன்மக்கள் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற மதிப்புச் செயல்களால் இன்புறுவர்.



பாடல் 22

“தஞ்சாக மூவுலகும் ஆண்டு, தலையளித்திட்டு,

எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்

கரந்துஉண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி

இரந்துஉண் டுஇருக்கப் பெறின்.”

இதன் பொருள் ---

    நஞ்சம் கரந்து உண்ட கண்டர் தம் ஒற்றியூர் பற்றி – திருப்பாற்கடலிலே வந்து எழுந்த ஆலாகால விடமானது மறைந்து இருக்கும்படி, திருவமுது செய்த திருக்கழுத்தினை உடைய சிவபரம்ப்பொருள் எழுந்தருளி உள்ள திருவொற்றியூரினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இரந்து உண்டு இருக்கப் பெறின் – அங்கே பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து இருக்கும் பெரும்பேற்றினை அடியேன் பெற்றால், தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு – அடியேனிடத்து ஒப்படைக்கப் பெற்ற அடைக்கலப் பொருளாக ஏற்று மூன்று உலகங்களையும் குடிகளை நன்கு காப்பாற்றி ஆட்சி புரியும் செல்வத்தை, எஞ்சாமை பெறினும் யான் வேண்டேன் – குறைவு இன்றிப் பெற்றாலும் அதனை யான் விரும்பமாட்டேன். 

    `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறிக்கும். 


“படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பார் எலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து, மும்மைக் கடியிலங்கு

தோடு ஏந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்பது உறும்.”\

என்று மேலே நாயனார் பாடி அருளியதைக் கருத்தில் கொள்க.


மெய்யடியார்கள் இறைவன் திருவடி இன்பம் ஒன்றையே விரும்பி இருப்பார்கள். மண்ணுலக இன்பமும் விண்ணுலக இன்பமும் அவர்க்கு ஒரு பொருட்டு அல்ல. “மலர்க் கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே” என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் அருள்வாக்கு. “கூடும் அன்பினில் கும்பிடலே ஆன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று மெய்யடியவர்கள் குறித்துத். தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி அருளி இருப்பது அறிக.  

“அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்

கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்

வண்டு சேர் மயிலாடுதுறை அரன் 

தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.”

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.


“யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்,

வானேயும் பெறில் வேண்டேன், மண்ணாள்வான் மதித்தும் இரேன், 

தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்

மானே! உன் அருள் பெறும் நாள் என்று என்று இருப்பனே”

என்பர் மணிவாசகப் பெருமான்.


“பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண் 

அச்சுதா!. அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும், 

இச்சுவை தவிர, யான்போய் இந்திர லோகம் ஆளும், 

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகர் உளானே”

என்பது தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருள் வாக்கு.  


    தொண்டை நன்னாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான “திரு ஒற்றியூர்” சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் உள்ளது. மெட்ரோ இரயில் நிலயமும் உள்ளது. இறைவர் திருநாமம்  - ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர். இறைவியார் திருநாமம் - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை. தல மரம், மகிழ மரம்.

        தேவார மூவர் முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடி வழிபட்டுத் திருப்பதிங்கள் அருள்ப் பெற்ற திருத்தலம்.

        வருடத்தில்மூன் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இலிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஆண்டுதோறும், கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு வழிபடலாம்.

    சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலியார் திருமணம் நடைபெற்ற சிறப்புக்கு உரிய திருத்தலம். ஞாயிறு என்னும் ஊரிலே, ஞாயிறுகிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் கண்ணுற்ற மாதர் இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறுகிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார்.  அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. சங்கிலியார் சிவனிடத்து அன்பு உடையவராக வளர்ந்தார்.  திருமணப் பேச்சு வந்தபோது,  "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார்.  மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள்.  இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார்.  பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஞாயிறுகிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது.  அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள். ஒருவாறு இனியமொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறுகிழார். அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது.  இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார்.  அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று.  பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.

திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார். “மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்” என்பது பெரியபுராணம். அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள். அவள் யார்" என்று வினவினார்.  அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள். அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை. மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார். திருக்கோயிலுக்குச் சென்றார். "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார். வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார்.  மாலைக் காலம் வந்தது.  

சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம். கவலையை ஒழி" என்றார். நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர். இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.

சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார்.  "நம்பியாரூரன் என்பவன் மேருமலையின் மேம்பட்ட தவத்தான். நம் மாட்டுப் பேரன்பு உடையவன். நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை வேண்டினான்.  அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார். சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன். ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர். இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.    சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.

சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறை உண்டு.  அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார்.  நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன். உமது அருள் வேண்டும்" என்றார்.

இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர்,  சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன்.  அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அதற்கிசைந்த இறைவர், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான். உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.

சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார்.  தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள். திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார். சந்நிதியை அடைந்தனர்.

நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர்.  "சபதம் எங்கே செய்து தருவது" என்றார். "மகிழின் கீழ் அமையும்" என்றனர்.  நம்பியாரூரர் மருண்டார். வேறு வழியில்லை.  "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கிலியைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார்.  அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார். "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார்.  நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார். அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார். தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.

வசந்த காலம் வந்தது. தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது. "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன.  நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்

     நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.


கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

அவதாரத் தலம் : திருவொற்றியூர்.

வழிபாடு : இலிங்க வழிபாடு.

முத்தித் தலம் : திருவொற்றியூர்.

குருபூசை நாள் : ஆடி - கேட்டை.

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலைகூறி வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

முற்றத் துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம். பட்டினத்தடிகளின் சமாதிக் கோயில் கடற்கரையில் உள்ளது. பட்டினத்து அடிகளார் அருளிய பினவரும் பாடல்களைச் சிந்தித்தால் திருவொற்றியூரின் சிறப்பு நன்கு விளங்கும்.

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."

        மனமே!  முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பதுதான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


"ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு

இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் - கடுஅருந்தும்

தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்

போவார் அடியில் பொடி."

        புண்கள் உண்டாகி, சீழானது ஒழுகுகின்ற, ஒன்பது துளைகளை உடைய உடலாகிய இந்தப் புண்ணுக்கு இடவேண்டிய மருந்தினை நான் கண்டுகொண்டேன். அது என்னவென்றால், பால்கடலில் வந்த ஆலகால விடத்தை உண்ட, தேவர்களுக்கு எல்லாம் தலைவனான, சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் வீதிகளில் நடப்பவர்களுடைய பாத தூளியே ஆகும்.


"வாவி எல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் சிவலிங்கம்,

காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்

ஈது சிவலோகம் என்றுஎன்றே மெய்த்தவத்தோர்

ஓதும் திருவொற்றி யூர்."

        இது பூலோக சிவலோகம் என்று உண்மைத் தவம் உடையார் சொல்லுகின்ற திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உள்ள  குளங்கள் எல்லாம் தீர்த்தங்கள்.  மணல் அனைத்தும் சிவலிங்கம்.  சோலைகளும், நந்தனவனங்களும் சிவகணநாதர்கள்.


           வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வோடு இயைந்த பதி. எழுத்தறியும் பெருமான் மீது பல திருவருட்பாக்களையும், வடிவுடை அம்மை மீது, “வடிவுடைமாணிக்க மாலை” என்னும் அற்புத நூலையும் பாடி உள்ளார் வள்ளற்பெருமான். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சரமே" என்று போற்றி உள்ளார்.


053. சுற்றம் தழால் - 08. தமராகி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "முன்னே சுற்றத்தாராக இருந்து, ஏதேனும் ஒரு காரணத்தால் தன்னோடு பொருந்தாமல், தன்னைப் பிரிந்து போனவர், மீண்டும் வந்து சுற்றத்தார் ஆகுதல், அப் பொருந்தாமைக்கான காரணம் தன்னிடத்து இல்லாமையால், தானே உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

ஒருவன் தான் ஒழுகவேண்டிய நெறியைக் கடந்து தீயவழியில் நடப்பதாலும், எல்லோரும் வெறுக்கக் கூடிய செயல்களைச் செய்வதாலும், சுற்றத்தார் நீங்குவர்.  பின்னர், அவன் நன்னெறியில் ஒழுகுவானாயின், முன்னே அவர்கள் நீங்கிய காரணம் இப்போது ஒழியவே, சுற்றத்தவர்க்கு உள்ள அன்பின் மிகுதியால் பழைய முறைப்படி மீண்டும் சுற்றத்தாராக வந்து நிற்பர்.

தீய வழியில் நடத்தலாவது, அறநூல், பொருள் நூல், நீதிநூல் கூறியவாறு நடக்காது, தான் விரும்பியவாறு நடத்தல்; அறிவு உடையார் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தல்.


இதற்குத் திருக்குறள்....

“தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம், அமராமை

காரணம் இன்றி வரும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் --- முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், 

அமராமைக் காரணம் இன்றி வரும் --- அவ் அமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.

('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனை யொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ள வேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தமர் என்று தாம் கொள்ளப் பட்டவர் தம்மைத்

தம் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை

தம்முள் அடக்கிக் கொளல்.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம் அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக் கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத் தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரது நண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல் தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

நட்பில் பிழைபடுவாரைத் தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்.


“மெய்யா உணரில் பிறர்பிறர்க்குச் செய்வதென்?

மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர், பெய்யுமாம்

பெய்யாது எனினும் மழை.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மை ஆர் இரும் கூந்தல் பைந்தொடி - கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையவளே! மெய்யா(க) உணரின் - உண்மையாக ஆராயின், பிறர் பிறர்க்குச் செய்வது என் - உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?, எக்காலும் செய்யார் எனினும் - ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், தமர் செய்வர் - உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், பெய்யாதெனினும் பெய்யும் மழை - குறித்த ஒரு பருவகாலத்தில் பெய்யாது ஒழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான்.

உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக வேண்டும். 


054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 54 -- பொச்சாவாமை இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செ...