பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உற்பாதப் பூதக் காயத்தே (பொது)


முருகா! 

மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


உற்பா தப்பூ தக்கா யத்தே

     யொத்தோ டித்தத் ...... தியல்காலை


உட்பூ ரித்தே சற்றே சற்றே

     யுக்கா ரித்தற் ...... புதனேரும்


அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ

     லப்பா வித்துத் ...... திரிவேனுக்


கப்பா சத்தா லெட்டா அப்பா

     லைப்போ தத்தைப் ...... புரிவாயே


பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா

     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்


புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்

     பொட்டா கக்குத் ...... தியவேலா


முற்பா டப்பா டற்றா ருக்கோர்

     முட்கா டற்கப் ...... பொருளீவாய்


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உற்பாதப் பூதக் காயத்தே

     ஒத்து ஓடித் தத்து, ...... இயல் காலை


உள் பூரித்தே, சற்றே, சற்றே,

     உக்காரித்து அற் ...... புதன் நெரும்


அற்பாய் இல் தாய், நிற்பாரைப் போ-

     லப் பாவித்துத் ...... திரிவேனுக்கு,


அப் பாசத்தால் எட்டா அப்பா-

     லைப் போதத்தைப் ...... புரிவாயே.


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்கா-

     கப் போய் முட்டிக் ...... கிரிசாடி,


புக்கு ஆழிச் சூழ் கிட்டாகிச் சூர்

     பொட்டாகக் குத் ...... திய வேலா!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஒர்

     முள் காடு அற்கப் ...... பொருள் ஈவாய்!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக் கிரி சாடி --- அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, 


புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா ---கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!


        முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        சுத்தா --- தூயவரே!


        முத்தா --- பற்று அற்றவரே!


        முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


உற்பாதம் பூதக் காயத்தே ஒத்து --- பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து,


        ஓடி --- பொருளை ஒடித் தேடி வைத்து,


        தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, 


அற்புதன் நேரும் அற்பாய் --- கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு,


        இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு, 


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---அந்தப் பாசங்களால் எட்ட முடியாது, அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


பொழிப்புரை


        அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்துக் கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தி நிலைக்கு அதிபரே!


        ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        தூயவரே!


        பற்று அற்றவரே!


        உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து, பொருளை ஒடித் தேடி வைத்து, மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு, இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு,  அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல், அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


விரிவுரை


உற்பாதம் பூதக் காயத்தே --- 


உற்பாதம் – கொடுமை, தீ நிமித்தம், பின்வரும் தீமைகளை முன் அறிவிக்கும் குறி.

பூதக் காயம் – ஐந்து பூதங்களின் கூட்டுறவால் உண்டானது இந்த உடம்பு.

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்

          ஆகின்ற ஆக்கை, நீர் மேல்

அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்

          அறியாத காலம் எல்லாம்

புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே

          போந்த நெறி என்று இருந்தேன்,

பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை

          போனவழி தெரியவில்லை..         --- தாயுமானார்.


“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவம் அலால், உடல் ஒன்று எனல் ஆமே?” -- திருமந்திரம்.

    சோற்றின் சத்து, இரத்தம், மாமிசம், தோல், கொழுப்பு, பொருந்திய எலும்பு, நிணம், மூளை, பரவிய இந்திரியம் ஆகிய இவற்றின் காரியத்தினுல் அமைந்தது. உடம்பின் உருவம் இவற்றைத் தவிர்த்து வேறு என்அ கூறமுடியுமோ? முடியாது.  நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாகிய பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.

    இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.  அந்த உயிர் அறிவு விளக்கம் பெறுவதற்காக இறைவன் தனது பெருங்கருணையால் வைத்தவையே அந்தக் கரணங்கள் என்னும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை ஆகும்.

    இந்த உடம்பு “வேற்று விகார விடக்கு உடம்பு” என்கிறார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பு ஆன்மாவின் வேறு. இந்த உட்முபே ஆன்மா அல்ல. ஆன்மா குடியிருப்பதற்கு இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது. எனவே, “வேற்று உடம்பு”. இந்த உடம்பு தோன்றியபோது இருந்தபடியே இராது. மாற்றத்தை அடைந்துகொண்டே இருக்கும். எனவே, இதை “விகார உடம்பு” என்றார். விடக்கு – ஊன். இது ஊன் உடம்பு. இந்த உடம்பு விகாரம் அடைந்து அடைந்து பின்னர் அழியக் கூடியது. இந்த உற்பாதத்தை உடம்பில் உண்டாகும் விகாரங்கள் அறிவிக்கும்.


தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- 

தத்து – சாதகத்தின்படி நேரும் ஆபத்து, மனக்கவலை.

பூரித்தல் - நிறைவு அடைதல். களித்தல்.

    ஒருகால் உள்ள நிறைவும், பூரிப்பும், ஒருகால் மனக்கவலையும் நிறைந்ததே இந்த வாழ்க்கை ஆகும். சற்றே சற்றே பூரிக்கும் சற்றே சற்றே உக்காரிக்கும்.  இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளைநிலமாகவும் உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டும். முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.


“வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,

புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,

மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    

பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து         

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.”



“சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்று ஏறப் பார்த்து,சிலபணி ...... விடை ஏவி,

 சில் தாபத்து ஆக்கைப் பொருள்கொடு

     பித்துஏறி,கூப்பிட்ட அவர் பரிசு

          எட்டாமல்,தூர்த்தத்து அலைபடு ...... சிறுகாலை,

 

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு

     பற்று ஆயப் பூட்டுக் கயிறுகொடு,

          உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு ...... தடுமாறி,

 உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி,

     காய் அத் தீப் பட்டு எரி உடல்

          உக்கேன், மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே?”   --திருப்புகழ்.



அற்புதன் நேரும் அற்பாய் --- 

அற்புதன் – இறைவன். “அற்புதன் காண்க, அநேகன் காண்க” என்கிறது மணிவாசகம்.

அற்பு – அன்பு. அன்பு என்பது உயிருக்கு உள்ள பண்பு. “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது பொய்யாமொழி.


இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- 

இல் - இல்லறம்.

தாய் - பொருந்தி இருத்தல்.

உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், அன்பு உடையவனைப் போலப் பாவித்து, இல்லறத்தில் பொருந்தி இருத்தல் கூடாது. தன்னைச் சார்ந்தவர்களிடத்திலேயே அன்பைக் காட்டாத வன்மனம் படைத்தவன், இறைவனிடத்து அன்பைக் காட்டுவது பாவனையாகத் தான் இருக்க முடியும்.


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---

பாசம் – ஆசை, அன்பு, கயிறு, தளை, மும்மலம், ஆணவமலம், பற்று. 

பாசமாகிய பற்று நம்மிடத்தே குடிகொண்டு உள்ளது. அந்தப் பாசமாகிய பற்றை அறுக்கத் துணை புரிவது இறைவன் திருவருளே. “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்பது மணிவாசகம்.

உண்மை அறிவு என்னும் மெய்யறிவு விளங்கினால், அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அடையலாம். பாச அறிவினால் அடைய முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அறியும் உண்மை அறிவைப் “போதம்” என்றார். அதனை இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து அருள்புரிய வேண்டுகிறார்.


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- 

இந்த வரலாறு பொய்யாமொழிப் புலவருக்கு வேடன் வடிவில் வந்து முருகப் பெருமான் திருவருள் புரிந்தததைக் குறிக்கும்.

பொய்யாமொழிப் புலவர் வரலாறு 

      சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருந்தார்.  அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து பொய்யாமொழிப் புலவர் தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

       பொய்யாமொழிப் புலவர்  தொண்டை மண்டலத்தில் சைவவேளாளர் குடியில் தோன்றியவர். இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

      ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார். வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார். பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணி, மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த கொடிய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றி, ‘இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார் பொய்யாமொழிப் புலவர். அப்போது, ‘நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன்  "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் வேடனாக வந்த முருகவேள். "தெரியும்" என்றார் புலவர்.   முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல் பாடுக"  என்று கூறினார். புலவர் உன் பெயர் யாது எனக் கேட்டார். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவில் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார்.  இந்தப் பாலையைப் சிறப்பித்து “நல் தாய் இரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக என்றார் வேடனாக வந்த வேலவர். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"


என்னும் பாடலைப் பாடினார் பொய்யாமொழிப் புலவர்.

 

     இப் பாடலைக் கேட்ட முருகவேடன்,   "இச் செய்யுளில் பொருள் குற்றம் உள்ளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோ?  நான் பாடுகிறேன். கேட்டிடுக" என்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

      அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்று கூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  வேட உருவில் வந்துள்ளது  கந்தக் கடவுளே எனத் துணிந்து, தமது பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலத்தைக் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

“முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”     --- (பத்தித்தரள) திருப்புகழ்.

                                                                              

"பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்து, எனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”            --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.


கருத்துரை


முருகா! மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும்,

ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே!

மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில்

இன்பு ஆரும் சீதளம் ஆமே.”


சித்திரம் போன்ற பெண்ணே அல்லிக் குளத்தில் உள்ள நீரும், ஆலமரத்தின் நிழலும், கடப்பைக் கல் பதித்த வீடும், அம்பு போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் இளங்கொங்கையும், மென்மையான குளிர்ச்சி பொருந்திய காலங்களில் வெப்பத்தைக் கொடுக்கும்.  வெப்பமான காலத்தில் இன்பம் நிறைந்த குளிர்ச்சியைத் தரும்.


        (வாவி - குளம்.  வடநிழல் - ஆலமர நிழல்.  பாவகம் - பாவு அகம்.  ஏ- அம்பு.  சீதம் - குளிர்ச்சி.)


பாடல் 16

 


“இட்ட குடிநீர் இருநாழி ஒர்உழக்காச்

சட்டஒரு முட்டைநெய் தான்கலந்து அட்ட

அருவாய்ச்சா றுஎன்றுஅங்கு அழாமுன்னம் பாச்சில்

திருவாச்சி ராமமே சேர்.”


இதன் பொருள் ---


        இட்ட குடிநீர் – மருந்துப் பண்டங்களைக் கூட்டிய குடிநீரில், சட்ட - செம்மையாக, ஒரு முட்டை நெய்தான் கலந்து – ஒரு சிறிய கரண்டி அளவுக்கு விளக்கெண்ணையைக் கலந்து, இருநாழி ஓர் உழக்கா – இரண்டு கால்படி நீரானது ஒரு கால்படி அளவுக்குச் சுருங்கும் அளவில், அட்ட அருவாய்ச் சாறு – அடுப்பில் வைத்துச் சுவறக் காய்ச்சி எடுக்கப்பட்ட அரிய கசாயச் சாற்றை, என்று – இதனைக் குடியுங்கள் என்று கொடுத்து, அங்கு அழா முன்னம் – அங்கே கூடியுள்ளவர்கள் அழும் நிலை வருவதற்கு முன்பாகவே, பாச்சில் திரு ஆச்சிராமமே சேர் – திருப்பாசிலாச்சிராரமம் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, அங்கு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வழிபட்டு உய்வாயாக.


        நாழி, உழக்கு என்பது அக்கால முகத்தல் அளவைகள். ஒரு முட்டை - முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. நெய் – நெய்ப்புத் தன்மை உள்ளது நெய் எனப்படும். இங்கே விளக்கெண்ணையைக் குறித்து வந்ததாகக் கொள்ளலாம். அருவாய்ச் சாறு – அரிய சாறு, கசாயம். என்று – நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரை எந்து உபாயத்தினாலாவது காப்பாற்ற எண்ணி, சுற்றி உள்ளவர்கள், இந்தக் கசாயத்தைக் குடியுங்கள் என்று அழுதுகொண்டே தருவார்கள். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே இறைவனை வழிபட்டு உய்தல் வேண்டும்.


        திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருத்தலம், திருச்சி-சேலம் வழித தடத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம். திருவாசிராமம் என்பது மருவி, இன்று திருவாசி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.


        இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயினால் பீடிஇக்கப்பட்டாள். மணி, மந்திர ஔடத முறைகளால் முயன்றும் நோய் தீராவில்லை. கொல்லி மழவன் சைவ வழி வந்தவன். ஆதலால், சிவசந்நிதி முன்னர் தனது அருமை மகளைக் கிடாத்தினான். அவ்வேளையில் திருஞானசம்பந்தர் வருகையைக் கேள்வியுற்ற கொல்லிமழவன், நகரை அலங்கரித்துப் பிள்ளையாரை எதிர்கொண்டு, அவர்தம் சிவிகையின் முன் விழுந்து வணங்கினான். பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார்.  அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுள் சென்றார். அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன இது?" என்று கேட்டார். கொல்லிமழவன் திருஞானசம்பந்த வள்ளலாரை வணங்கி, "இவள் அடியேன் புதல்வி. இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பீடித்து இருக்கிறது. அந் நோய் மணி, மந்திர, மருந்துகளால் தீரவில்லை. இவளைச் சிவசந்நிதி முன்னே கிடத்தினேன்" என்றான். ஆளுடைய பிள்ளையார் ஆகிய திரலுஞானசம்பந்தர், திருவருளைச் சிந்தித்து, "துணிவளர் திங்கள்" என்று எடுத்து, "மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று பாடியருளினார். உடன் அக் கன்னியும் பிணி தீர்ந்து எழுந்தாள். கொல்லிமழவன் பெருமகிழு எய்திப் புதல்வியோடும் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள் செய்து அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரை வரதீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இப் பெயர் வழங்கக் காரணமாக ஒரு வரலாறு உள்ளது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. சுந்தரர், "இவர் அல்லாது இல்லையோ பிரானார்?" என்று "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்தின் கடைசி பாடலில் "திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று பாடிப் பொன் பெற்றார். இது பெரிய புராணம் நமக்கு அறிவுறுத்துவது.


வழக்கம் போலவே, சில தலங்களுக்கு உள்ள செவிவழிச் செய்தியும் உண்டு. அது வருமாறு, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், திருமால் அவருடன் வந்ததையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரை வரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.


இத் திருத்தல இறைவரை வழிபட்டு, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் தீராத நோய் தீரும் என்பது அடியவர்களின் நம்பிக்கை.


103. முலைமீது கை வைத்த முறைமை

‘இதுகருமம், இதனாலே இதை முடிப்பாய்!'

     எனத் தொழிலை யெண்ணிச் செய்தால்

அதுகருமம் பாராமல், திருடியும் அள்

     ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்

மதியணியும் தண்டலையார் வளநாட்டில்

     நீராடும் மாதர் தங்கள்

முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது

     கையிட்ட முறைமை தானே.


இதன் பொருள் ---


    மதி அணியும் தண்டலையார் வளநாட்டில் – பிறைச்சந்திரனைத் திருச்சடையில் முடித்துள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரமத்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில், இது கருமம், இதனாலே இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இதுதான் உனக்குள்ள செயல்; இந்த வழியில் இதனைச் செய்திடு' என்று விதிக்கப்பட்ட ஒரு செயலை எண்ணிச் செய்தால்,  அது கருமம் – அது செம்மையாக முடியும். பாராமல் – அந்த வழியில் சிந்தித்து முயன்று செயல்ப்படுப் பொருளை ஈட்டாமல், திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் – பிறர் பொருளைக் கவர்ந்தும், எடுத்தும், மாறுபானாகவும், வஞ்சகமாகவும் செயல்களைச் செய்து திரிவது எல்லாம், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச் சொன்னால் - நீரில் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச் சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே – முதுகைத் தேய்ப்பது தொடங்கி, வஞ்சகமாக முலைமீது கையை வைத்த செயலாக முடியும்.


      புரட்டு – மாறுபாடு, வஞ்சகம். புரட்டரிடத்திலே ஒரு தொழிலைக் கொடுத்தால்,  அதைப் பலவகையிலும் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக் கொள்ள முயன்று கேட்டினைத் தேடிக் கொள்வர்.


102. கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்

     உபகாரம் தருமம் செய்து

கொண்டபொருள் விலைவாசி காணிதே

     டிக்கோடி கொடுப்ப தல்லால்

வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி

     அநியாய வட்டி வாங்கிக்

கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக்

     கெடுக்குமிது கருமந் தானே.”


இதன் பொருள் ---


தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, தவம் தானம் உபகாரம் தருமம் செய்து கொண்ட பொருள் - தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி காணி கோடி தேடிக் கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும் கோடியாகத் தேடிக் கொடுக்குமே அல்லாமல், வண்டருமாய் – (இறைவனுக்கு ஏவல் செய்யாது) பிறருக்கு ஏவல் செய்வோராக வாழ்ந்து, ஒன்று பத்து விலை கூறி – பொருள்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லியும், அநியாய வட்டி வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை வாங்கிச் சிக்கனமாகச் சேர்த்து வைத்த பொருளானது, கண்ணை அறக் கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் - இதுதான் உலகில் நடப்பது.


விளக்கம் ---

 

வாசி – வேறுபாடு. பொருளுக்கான விலையிலே உயர்வு, தாழ்வு. பொருள் வணிகம் செய்யும்போது ஒன்றுக்குப் பத்தாக விலைகூறிப் பொருளைக் குவிப்பது கூடாது. அநியாய வட்டிக்கு விட்டுப் பொருளைச் சேர்ப்பதே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்வோரை, “வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர்” என்கிறார் திருமூல நாயனார்.


மனிதனுக்குப் பொருளானது அவன் செய்யும் சிவபுண்ணியம் காரணமாக, இறைவன் திருவருளால் இயல்பாகவே வந்து சேரும். தான தருமங்களைச் செய்து வாழ்வோருக்கும் இறையருளால் பொருள் வந்து குவியும் என்பது காட்டப்பட்டது. “இறைக்கிற கிணறு ஊரும், இறைக்காத கிணறு நாறும்” என்பார்கள். பிறருக்குப் பொருளைக் கொடுப்பதனால், தமது செல்வம் குறைந்து விடும் என்று எண்ணுவது அறியாமை. ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமே பசித்தவன் வயிறுதான் என்பார் திருவள்ளுவ நாயனார். “அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி” என்பது திருக்குறள். “இரப்பவர்க்கு ஊய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்” என்பது அப்பர் தேவாரம். 


“இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக்

கரப்பவர் கண்டு அறியார் கொல்லோ? - பரப்பில்

துறைத்தோணி நின்று உலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தோறும் ஊறும் கிணறு.”. – பழமொழி நானூறு.


கடலில் உள்ள துறையில், தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரை உடைய கடல் நாடனே! தன்னிடம் வந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வமு குறைவுபடும் என்று எண்ணி, ஈயாது மறைப்பவர்கள், இறைக்கும் தோறும் நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்து அறியாதவர் போலும்.


எனவே, பொருளைச் சேர்த்து வைப்பதோடு, அது மேலும் வளரும் அருள்வழியை விடுத்து, தீயவழியில் ஒன்றுக்குப் பத்தாகப் பொருளுக்கு விலை கூறியும், அநியாய வட்டிக்குப் பொருளைக் கொடுத்தும் வாழ்வது கூடாது என்று அறிவிக்க, “கடும் தேட்டு, கண்ணை அறக் கெடுக்கும்” என்று சொல்லப்பட்டது.  தேட்டு – சம்பாத்தியப் பொருள். கண்ணைக் கெடுக்கும் – நல்லறிவை மழுங்கச் செய்து வாழ்வைக் கெடுக்கும்.


பாடல் 15

“அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்

குஞ்சி வெளுத்து,உடலம் கோடாமுன், - நெஞ்சமே!

போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்

சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.”


இதன் பொருள் ---

    அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய் - மைதீட்டிய கண்களை உடைய பெண்கள் அருவருக்கும் அந்த நிலையில், குஞ்சி வெளுத்து - மயிர் நரைத்து; உடலம் கோடாமுன் - உடல் வளைந்துபடா முன்னமே; போய் காடு கூட – சுடுகாடு போய்க் கூடும் நிலை வருதலால், புலம்பாது – அந்நிலையை எண்ணி மனக் கலக்கம் கொள்ளாமல், பூம்புகார்ச் சாய்க்காடு சார்ந்து கைதொழு நீ – பூம்புகார் என்னும் நகரை அடுத்து உள்ள திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளைச் சார்ந்து கைதொழுது நீ வாழ்வாயாக.

விளக்கம் ---

    அஞ்சனம் – மை. அஞ்சனம் சேர் கண்ணார் – மை தீட்டிய கண்களை உடைய பெண்கள். மனைவி முதலானவர்களைக் குறிக்கும். நோயால் வருந்தி நொடிந்து கொண்டு இருக்கும்போதே அன்பாக இருந்த உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியர் போல் ஆகிவிடுவார்கள். உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வயது முதிர்ந்தால் தலைமுடி நரைத்துப் போகும். (குஞ்சி – தலைமுடி) தோல் திரங்கிப் போகும். நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி, பிறரை நாடியே வாழவேண்டும் என்னும் நிலை வரும்போது, எல்லோரும் வெறுக்கத்தான் செய்வார்கள். தனியாகவும், ஒன்று கூடியும் பழித்துப் பேசுவார்கள். உடல் கோடுதல் – கூன் விழுதல்.

"தமரும் அமரும் மனையும் இனிய 

தனமும் அரசும்       அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு 

தலையை வளைய  எறியாதே”   --- திருப்புகழ்.


"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக

     மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்

     வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை

அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்

     அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று

அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,

     அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.: --- திருப்புகழ்.


"இல்லும் இளையோரும் மெல்ல அயலாக,

     வல் எருமை மாயச் ...... சமனாரும்

எள்ளி, எனது ஆவி கொள்ளை கொளும் நாளில்,

     உய்ய ஒரு நீ பொன் ...... கழல்தாராய்."   --- திருப்புகழ்.


"மனைவிதாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சி னீரே." --- அப்பர்.

திருச்சாய்க்காடு – திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுப் பாடி அருளிய திருத்தலம். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு அடுத்து கி.மீ. தொலைவில் உள்ளது. 

சாய் என்பதற்குக் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் திருச் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு திருத்தலங்களில் திருசாய்க்காடும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதரித்து முக்தி அடைந்த திருத்தலம். “இல்லையே என்னாத இயற்பகை” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தில் வைத்துப் போற்றி உள்ளார். இவரது அன்பை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் "உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று, ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அளிக்க, நீர் இசைவீர் ஆயின், அதனை இன்னது என்று சொல்லுவோம்" என்றார். அன்பில் சிறந்த நாயனார், "எப் பொருளாயினும் ஆக, அது என்பால் இருப்பின், அது அடியவர் உடைமை. அதை அருளிச் செய்க" என்றார். வேதியர், முன்பின் சிந்தியாது, "உமது மனைவியை வேண்டி வந்தோம்" என்றார்.  இயற்பகையார், "அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன்" என்று அகமகிழ்ந்து, உள்ளே விரைந்து எய்தி, இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தமது கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனம் கலங்கி, உடனை தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி அவரைத் தொழுதார். நாயனாரும் அவரை வணங்கினார். இயற்பகையாரும் தன் மனைவியை வேதியருடன் அனுப்பி வைத்தார். "அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்" என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்குக் காவலாக வ வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவரையும் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்றார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.

சிவபெருமான், "இவன் மனைவியை விட்டுவிட்டுத் திரும்பியும் பாராமல் செல்கின்றான். இவனுடைய அன்பின் நிலை என்னே, என்னே" என்று வியந்து, "இயற்பகை முனிவா ஓலம், ஓலம், இவ்விடம் விரைந்து வருக" என்று ஓலமிட்டார். அந்த ஓலத்தைக் கேட்ட நாயனார், "வந்தேன், வந்தேன், இன்னும் துன்பம் செய்பவர்கள் இருக்கின்றார்களா, அவர்களைத் தொலைத்து விடுகிறேன்" என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். வந்தவர் மறையவரைக் காணவில்லை, மனைவியை மட்டுமே கண்டார். அந் நிலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் விடைமேல் காட்சி தந்து, "அன்பனே, உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வைத் தந்தது.  நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். நாயனார் விழுந்து, விழுந்து, வணங்கி, வணங்கி, வாழ்த்தி, வாழ்த்தி, ஆனந்தக் கூத்து ஆடினார். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோகம் எய்தி, இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினர்களும் விண்ணுலகை அடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள்.

இறைவன் திருவடியைச் சரண் புகுந்தோர் பெறும் பேறு குறித்து, இத் திருத்தலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளார்.


“மண்புகார், வான்புகுவர், மனம்இளையார், பசியாலும்

கண்புகார், பிணிஅறியார், கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் எனவேண்டா, வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டுஎம் தலைவன்தாள் சார்ந்தாரே.”

இதன் பொருள் ---

    வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மை பொருந்திய பூம்புகாரில் விளங்கும் திருச்சாய்க்காட்டுள் எழுந்தருளிய எமது தலைவரின் திருவடிகளைச் சார்ந்து வழிபாடு செய்து, அவன் திருப்புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் வந்து பிறவார். பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வு அடையமாட்டார்கள். பசியாலும் துன்பம் அடையார். நோய் அற்று வாழ்வார்கள்.

அப்படிப்பட்ட பெருவாழ்வை நமக்கு அருளுகின்ற பெருமானை நாளும் நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார். நாம் வாழ்கின்ற நாள்கள் இவ்வளவு என்றும், எப்போது சாகப் போகின்றோம் என்பதும் யாரும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று. எனவே, உயிர் உள்ளபோதை நாளும் இறைவனை வழபிட வேண்டும் என்றும்  அறிவுறுத்துகின்றார்.  இந்த இருபாடல்களும் நாளும் ஓதவேண்டியவை என்பதை அறிக.


“நீ நாளும், நல்நெஞ்சே! நினைகண்டாய், யார்அறிவார்

சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,

நாநாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.”

இதன் பொருள் –

    நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் இறைவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச்சாய்க்காட்டை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன்  பொருள்சேர் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரைக் கூறி வழிபட்டும் வந்தால் நல்வினைப்பயன் பெறலாம். (நாளும் வழிபட்டால், நாளும் நல்வினைப்பயனைப் பெறலாம். இருப்பும், இறப்பும் அறியாமையால், இருக்கும்போதே சிவபுண்ணியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பு)



பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே,

சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல

கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே!

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.”


இதன் பொருள் ---

    இல்லும் பொருளும் இருந்த மனை அளவே - (உயிர் பிரிந்த பின்னர்) மனைவியும் பொருள்களும் குடி இருந்த மனையின் அளவே நின்று விடுவன. சொல்லும் அயலார் துடிப்பு அளவே - அயலார்களின் சொல்லின் துணையும் உயிர்ப்புத் துடிப்பு உள்ள அளவும், இறந்த பின்னர் சொல்லும் இரக்கச் சொல்லலின் அளவும்தான். நல்ல கிளை குளத்து நீர் அளவே - நல்ல சுற்றத்தார்களது தொடர்ச்சியும் சுடுகாடு வரை பின்தொடர்ந்து, பின்னர் நீர்மூழ்கும் குளத்தின் மட்டுமே. கிற்றியே நெஞ்ச – மனமே இதனை நீ அறியவல்லையானால், வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து – திருவளைகுளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபரம்பொருளையே வாழ்த்துவாயாக.


பட்டினத்து அடிகளார் பாடியருளிய இந்தப்பாடலையும் இங்கு வைத்து ஓதி உணர்க.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மிவிம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."

இதன் பொருள் –

    ஈட்டிய செல்வமும், அதனால் வாழ்கின்ற வாழ்வும் அவரவர் வீட்டின் அளவே. சூழ்ந்திருந்த பெண்களும் கண்களில் நீர் சோர அழுதுகொண்டு வீதி அளவே வருவார்கள். தந்தையின் அருமையை எண்ணி எண்ணி இருகரம் கூப்பி அழுகின்ற மைந்தர்களும் சுடுகாட்டு அளவே. இறந்துவிட்டவனைப் பின் தொடர்ந்து செல்வன அவன் செய்த புண்ணியமும் பாவமும் ஆகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளே.

    இறந்தவரது உடலைச் சுடுகாட்டில் கொண்டு போய் பெதைத்த பின்னர் அல்லது எரியூட்டிய பின்னர், நீரில் மூழ்கித் திரும்பவும் வராத சுற்றத்தார்கள் உண்டு. “நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே” என்றார் திருமூலதேவ நாயனார்.


    வளைகுளம் என்பது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. 


“மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்,

விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்,

வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.”


“வானவர்கோன் தோள்இறுத்த மைந்தன் தன்னை,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை”


எனவும் வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்கள் காண்க.


    தொண்டை நாட்டில் அரக்கோணம் – திருத்தணி சாலையில் உள்ள வளர்புரம் என்னும் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வூர்த் திருக்கோயில் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேச்சரமுடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. சோழநாட்டில் தஞ்சை – திருச்சி சாலையில் உள்ள வல்லம் என்னும் ஊர் என்று கூறுவர். திரு ராம. சொ. சொக்கலிங்கம் சேட்டியார் என்பவரால் பாடப்பெற்ற “வளைகுளம் நாகேசுரர் பதிகம்” என்று ஒரு நூல் 1921-ல் வெளியிடப்படு உள்ளது. திருத்தலம் எங்குள்ளது என்பது குறித்து இந்நூலில் இல்லை.


42. தாயர் ஐவர்

“தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்

பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப்

பெற்றாள், இவர்ஐவர் பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில்.” -- நீதிவெண்பா


பேசுமிடத்து, தன்னை ஈன்றவள், தன் மூத்த சகோதரனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனுக்குரிய மனைவி, தன் மனைவியைப் பெற்றவள் (மாமியார்) ஆகிய இவ் ஐந்து வகையாரையும் எவர்க்கும் பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.


    (பன்னி - பத்தினி, மனைவி.  நற்றாய் - பெற்றெடுத்த தாய்.)


101. வம்பருக்குத் தலைமை

 வம்பரெல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால்

     என்ன? அதுமாறி ஓய்ந்த

பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்

     என்ன? அதிற் பலன்உண் டாமோ?

கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்

     வருந்துபல கழுதை தாமும்

அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந்

     தனிற்கிடந்தென் ஆகுந் தானே?


இதன் பொருள் ---


கம்பு உலவும் தண்டலையார் வளநாட்டில் - சங்குகள் உலவும் நீர்வளம் பொருந்திய திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்தல் நாட்டிலே, வருந்து பல கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - திறனற்று வருந்துகின்ற பல கழுதைகள் அழகிய இந்த உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என் ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்), வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லாம் செல்வாக்கு மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால் என்ன - ஆதிக்கம் கெட்டு ஆடி ஓய்ந்த பம்பரம்போல மூலையில் முடங்கிக் கிடந்தால் என்ன?, அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா? (நலம் ஏதும் விளைவதில்லை)


பாடல் 13

"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும்

பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள்

ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை

மாகாளம் கைதொழுது வாழ்த்து."


இதன் பொருள் ---


    காளையர்கள் ஈளையர்கள் ஆகி - காளைப் பருவம் உடையவர்கள், முதுமையில் ஈளை நோய் உடையவர்களாகி, கருமயிரும் கூளை எனப் பொங்கிப் பொலிவு அழிந்து - கரிய மயிரும் பூளைப் பூவினைப் போல வெண்மயிராக மாறி, நல்ல தோற்றம் அழிந்து; சூளையர்கள் ஓகாளம் செய்யா முன் - தோழியர்கள் பெருமூச்சு விட்டு அழாத முன்னே; உஞ்சேனை மாகாளம் கைதொழுது வாழ்த்து - உஞ்சேனை மாகாளத்தில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நீ கைதொழுது வாழ்த்துவாயாக.


குறிப்புரை --- ஈளை – கோழை, இளைப்பு, காசநோய். முதுமையில் கபம் மேலிட்டு இருமல் வருவதால் உண்டாகும் இளைப்பு நோய். பூளைப் பூ – வெண்ணிறம் உடையதொரு மலர். முந்திய பாடலையும் காண்க. பொங்குதல் என்பது, நரைத்த தலைமுடியானது படியாது விரிந்து கிடத்தலைக் குறிக்கும். 


    சூளையர்கள் – பரத்தையர், விலைமாதர். விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. "துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.


    உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சாரப் பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடுவர்.  விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர். இளமைக் காலத்தில், இன்பத்தைத் தந்து பொருளைப் பெற்றுச் சென்ற விலைமாதர் முதுமைக் காலத்தில் வெறுப்புக் கொள்வர். ஓகாளம் – அருவருப்புக் கொள்ளுதல். முன் உண்டதைக் கக்குதல்.


“வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச்  செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.”   --- திருவாசகம்.


“பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!”   --பட்டினத்தார்.


“சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!”      -- பட்டினத்தார்.


“பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?” -- கந்தர் அலங்காரம்.


மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.”         -- பட்டினத்தார்.


“மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.”                         --திருப்போரூர்ச் சந்நிதி முறை.


    விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். அகலிகையின் அழகில் மயங்கி இந்திரன் தனது நிலையில் இழிவினை அடைந்தான். தனது பாகன் ஆகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கிப் புணர்ந்தான் சூரியன். சந்திரன் தனது குருவின் பத்தினியாகிய தரையைக் கண்டு மயங்கினான். பராசரர் மச்சகந்தியைக் கண்டு மயங்கினார். திருநீலகண்ட நாயனார், “இளமை மீதூர, இன்பத் துறையில் எளியர் ஆனார்” என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டி உள்ளதை அறிக.


    சூளையர்கள் என்பதற்கு, நோய்வாய்ப்பட்ட காலத்தில் சூழ்ந்து இருந்து உதவிபுரிவோர் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களும் அருவருப்புக் கொள்ளுகின்ற நிலை முதுமையில் உண்டாகும்.


    உஞ்சேனை மாகாளம் என்பது வடநாட்டில் உள்ளதோர் சிவத்தலம்.  காளி பூசித்த தலமாதலால், மாகாளம் எனப்பட்டது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. “நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்” என்று இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானும்,  “மதில் உஞ்சை மாகாளம்” என்றும், “உஞ்சேனை மாகாளம்” என்று ஆறாம் திருமுறையில் இரண்டு இடங்களில் அப்பர் பெருமானும், வைத்துப் போற்றி உள்ளனர். இக்காலத்தில் உச்சயினி என்று வழங்கப்படும் சோதிர்லிங்கத் தலம். உச்சியினி என்பது தலம். மாகாளம் என்பது திருக்கோயில்.


41. நல்லார் அயல் மாதரை நினையார்

 “கன்னியரை, பொன்நாண் கழிந்தோரை, மற்ற அயலார்

பன்னியரை, மாயப் பரத்தையரை, - முன்ன அரிய

தாதியரை, நல்லோர் தழுவ நினையார், நரகத்

தீதுவரும் என்றே தெரிந்து.” -- நீதிவெண்பா.


அறிவுடைய பெரியோர்கள் மணமாகாத கன்னிப் பெண்களையும், பொன்னால் ஆன தாலியை இழந்த விதவைப் பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை பொருந்திய பொதுமகளிரையும், விரும்பக் கூடாத வேலைக்காரிகளையும் சேர்தலால் நரகத் துன்பமே வரும் என உணர்ந்து, அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்.


(நாண் - தாலி. பன்னியர் - மனைவியர். மாயம் - வஞ்சனை.  தாதியர் - பணிப் பெண்கள்.)


100. பித்தளை நாற்றம் போகாது

 


“நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்

     ஒருதீது நேர வந்தால்,

அத்தனையும் தீதென்பார்! பழிகருமக்

     கயவர்குணம் அகற்றல் ஆமோ?

வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்

     சாம்பர்இட்டு விளக்கி னாலும்

எத்தனைசெய் தாலும்என்ன? பித்தளைக்குத்

     தன்நாற்றம் இயற்கை ஆமே.”


இதன் பொருள் ---


வித்தகம் சேர் தண்டலையார் வளநாட்டில் - அறிவுத் துறையுடைய திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டிலே, சாம்பர் இட்டு விளக்கினாலும் எத்தனை செய்தாலும் என்ன - சாம்பலைக் கொண்டு தேய்த்தாலும் என்ன செய்தாலும், பயன் ஏது? பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை ஆம் - பித்தளையின் களிம்பு நாற்றம் இயல்பானதே ஆகும்; (அதுபோல), பழி கருமக் கயவர் - பழிப்புக்குரிய செயலைச் செய்யுந் தீயவர்களுக்கு, நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும் - நாள்தோறும் நூற்றுக்கணக்கான நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு தீது நேர வந்தால் அத்தனையும் தீது என்பார் - (நம்மை அறியாமலே) ஒரு தீமை நேர்ந்து விட்டால் அவ்வளவு நன்மையையும் தீது என்றே கூறிவிடுவர்; குணம் அகற்றல் ஆமோ - (அவர்) பண்பை மாற்ற இயலுமோ?


      தீமை பல செய்தாலும், ஒரு நன்றி செய்தால், தீமையை மறந்து நன்றியை நினைவில் வைப்பது நல்லோர் இயல்பு "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த, ஒன்று நன்(று) உள்ளக் கெடும்” என்பது திருவள்ளுவ நாயனார் வாய்மொழி. ஆனால், எத்துணை நன்றி செய்யினும் ஒரு தீமை செய்தால் அத்துணை நன்றியையும் மறந்து தீமையை மறவாதிருத்தல் தீயோர் இயல்பு. ‘பித்தளை நாற்றம் போகாது' என்பது பழமொழி. 


    ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. 


“ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்

எழுநூறும் தீதாய் விடும்.”              --நாலடியார்


"கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்

     காஞ்சிரம் கைப்புவிடுமோ?

கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்

     கதிபெறும் குதிரை ஆமோ?


குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்

     கொடுவிடம் அலாது தருமோ?

குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்

     கோணாமலே நிற்குமோ?


ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா

     யோனிகண் ஆகிவிடுமோ?

உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்

     உள்ளியின் குணம் மாறுமோ?


மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்

     மார்க்க மரியாதை வருமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே." -- குமரேச சதகம்.


இதன் பொருள் ---


     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     கட்டி எரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ - வெல்லக்கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது.


     கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ - கழுதையைக் கட்டிப் போட்டு, வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது.


     குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ - பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது.


     குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ - நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது.


     ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ - நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது.


     உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ - இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும், பூண்டின் குணம் மாறுமா? மாறாது.


அது போலத்தான்,


      மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ - அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.


      பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தை, இப் பாடலோடு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.


“தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை

எக்காலும் குன்றல் இலர்ஆவர்,  - அக்காரம்

யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.”


    தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப, தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.      


    மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது நீதிவெண்பா என்னும் நூல்.


“அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது

கந்தம் மெடுமோ கரை.” -- நீதிவெண்பா


    பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.


“நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்

     நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

     பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

     சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;

ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;

     எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.”


    நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.


“தூம்பினில் புதைத்த கல்லும்

     துகள் இன்றிச் சுடர் கொடாது;

பாம்புக்குப் பால் வார்த்து என்றும்

     பழகினும் நன்மை தாரா;

வேம்புக்குத் தேன் வார்த்தாலும்

     வேப்பிலை கசப்பு மாறா;

தாம்பல நூல் கற்றாலும்

     துர்ச்சனர் தக்கோர் ஆகார்.”


    வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.


“கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,

      கமழ்நீர் பாய்ச்சி,

பொற்பு ஊரர உள்ளியினை விதைத்தாலும் 

அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக

      வரும் எனவே சொல்லினாலும்,

நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே

      மேலாக நடக்கும்தானே.”


    என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர்.


    கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.


கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். 


உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம்.


உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். 


உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். 


அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். 


பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். 


கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். 


மணலையும் கயிறாத் திரிக்கலாம் -  மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். 


கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.


எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் அதிகாரத்துள், 


"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.


"தேவர் அனையர் கயவர், அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 


பொருளை அருளாக மாற்றும் வழி

“பொருளை அருளாக மாற்றும் வழி”

-----


    “அருளுடைமை” என்னும் அதிகாரத்துள் ஏழாம் திருக்குறளில்,  "பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லை என்பது போன்று, உயிர்களின்மேல் அருள் இல்லாதவர்க்கு முத்தி உலக இன்பம் இல்லை" என்றார் நாயனார். 

“அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு

இவ் உலகம் இல்ஆகி ஆங்கு.”    --திருக்குறள்.

    இவ்வுலக இன்பத்தை அடைதற்கு, பொருள் காரணமானது போல், அவ்வுலக இன்பத்தை அடைவதற்கு அருள் காரணம் ஆயிற்று என்று கொள்ளவேண்டும். அதிகார முழுமையும் ஓதி உணர்ந்தால் இந்த உண்மை விளங்கும். இவ்வொரு திருக்குறளை மட்டும் படித்துவிட்டு, திருவள்ளுவரே பொருள் இல்லை என்றால் இவ்வுலக இன்பம் இல்லை என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார் எனத் தவறாகப் புரிந்துகொண்டு, பொருளைச் செய்வதிலேயே வாழ்நாளைச் செலவிடுவோர் உண்டு.

    பொருள் இல்லாதவர்க்கு, இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் என்றைக்காவது அவர்களின் நல்வினைப் பயனாகவும், அயராத உழைப்பின் காரணமாகவும் பொருள் வரும். செல்வத்தில் பூத்துப் பொலிவார்கள். அருள் இல்லாதவர்க்கு என்றைக்குமே அது வரும் வாய்ப்பில்லை. முந்திய திருக்குறளில், பொருள் இல்லாமையோடு அருள் இல்லாமையை ஒருவிதத்தால் ஒப்பாக்கிச் சொன்ன நாயனார், அதனை மறுத்து, மற்றொரு விதத்தினால், பொருள் இல்லாமையினும், அருள் இல்லாமை கொடிது என்றும், தீவினையின் பயனாக வறுமையை அடைந்தோர், அத் தீவினையின் பயன் நீங்கிய காலத்து, பின்னர் நல்வினைப் பயனால் செல்வத்தை உடையவர் ஆகலாம் என்றும், அருள் இல்லாதவர் எக்காலத்தும் மேம்பாடு அடைவதில்லை என்றும் அடுத்த திருக்குறளில் தெளிவுபடுத்தினார் நாயனார்.

“பொருள் அற்றார் பூப்பர் ஒருகால், அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது.” --திருக்குறள்.


    தற்போதைய சமூக நிகழ்வுகள் திருவள்ளுவ நாயனார் காட்டியதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. பொருள் இல்லாமல் வாழ்வைத் தொடங்கியவர்கள் எப்படியோ பொருளைப் பெறுகிறார்கள். ஏதும் இல்லாமல் வந்தோம். எதும் இல்லாமல்தான் போகப் போகிறோம். கொண்டு போவது ஏதும் இல்லை என்பதை அறியாமல், அஞ்ஞானத்தின் வயப்பட்டு, பொருளைக் குவித்து வைப்பதற்கு வழிமுறைகளை ஆராய்ந்து ஆராய்ந்து செயல்படுத்துகிறார்கள் சிலர். இதனால், அருள் வருமா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

    “புண்ணியம் புரி பூமி பார்; அதில் வரு போகம் நண்ணி இன்புறு பூமி வானாடு” என்று திருவிளையாடல் புராணம் கூறும். அறத்தைச் செய்தவற்கு இடமாக அமைந்தது இந்த உலகம். அறத்தின் பயனால் வரும் புண்ணியத்தின் பயனை அனுபவித்தற்கு இடமாக அமைந்தது வானுலகம். இவ்வுலகத்தில் ஈட்டிய பொருளைக் கொண்டு, அறத்தைப் புரிந்து புண்ணியத்தைத் தேடி வைத்துக் கொண்டால், அது மறுமைக்கு இன்பம் ஆகும். எனவே, பொருளை கொண்டு அருளைத் தேடவேண்டும் என்பது விளங்கும். அறத்தை விளக்கி அறிவுறுத்திய திருவள்ளுவ நாயனார், அருள் என்பது குறித்தும் விளக்கம் தருகிறார். அருள் என்பது அன்பின் குழந்தை. அன்பு இல்லாமல் அருள் பிறக்காது. (“அருள் என்னும் அன்பு ஈன் குழவி”) அன்பு என்பது தொடர்பு உடையவர்கள் மேல் காட்டுவது. அருள் என்பது தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மேலும் காட்டுவது.

    வள்ளற்பெருமான் அருளை இரண்டாக வகுத்துக் காட்டுகிறார். மனிதர்கள் மேல் வைக்கும் அருள், “ஆன்ம நேய ஒருமைப்பாடு”. அது, “ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்துதல்” என்றார். பிற உயிரினங்கள் மேல் வைக்கும் அருளை, “சீவகாருண்ணியம்” என்றார். பொதுவாக உயிர் அருள் என்று கொள்ளலாம். இறையருளை ஒருவன் பெறவேண்டுமானால், அவனிடத்து உயிர் அருள் இருக்கவேண்டும். “எவ்வுயிரும் என் உயிர்போல் எண்ணி இரங்கவும், நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே”  எனவும், “எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தபோதனர்கள் செவ்வறிவை நாடி மிகச் சிந்தை வைப்பது எந்நாளோ” எனவும் தாயுமான அடிகளார் பாடினார். “எத்துணையும் பேதம் உறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி, உள்ளே ஒத்து, உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர், அவர் உள்ளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் என நான் தெரிந்தேன்” என்று வள்ளல்பெருமான் பாடுகிறார். “எவ்வுயிரும் பொது எனக் கண்டு, இரங்கி உபகரிக்கின்றார் யாவர், அந்தச் செவ்வியர் தம் செயல் அனைத்தும் திரு அருளின் செயல் எனவே தெரிந்தேன்” என்றும் பாடுகிறார்.

    உடல்களால் வேறுபாடுகள் காணப்பட்டாலும், உயிர்கள் என்ற நிலையில் வேறுபாடு இல்லை. இறைவன் உயிர்களைப் படைப்பது இல்லை. உயிர்களுக்கு உடம்பையே படைத்து அருள்கிறான். ஒரு தாயின் வழியாக வந்தவர்கள் எல்லோரும் உடன்பிறந்தார் ஆவதுபோல, இறைவன் அருள் வழியாக உடம்பினை எடுத்து வந்தவர்களும் உடன்பிறந்தோரே ஆவர். உடன்பிறப்புகளில் ஒருவர் துன்புறும்போது, மற்றவர் தானும் அத் துன்பத்தில் பங்கு கொள்வது இயற்கை. தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள். அதுபோல, ஓர் உயிர் துன்பமடைகிறபோது, மற்றோர் உயிர் அதற்காக உருகவேண்டுவதும் இயற்கையே. பலரும் அப்படி உருகுவதில்லை. காரணம், உயிரில் அறியாமை அல்லது அஞ்ஞானம் என்னும் அழுக்குப் படிந்து கிடக்கிறது. அழுக்குப் படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது. அதுபோல, அஞ்ஞானம் நிறைந்த உள்ளத்தில் உண்மை அன்பு விளங்காது. உண்மை அறிவு இருந்தால், உண்மை அன்பு இருக்கும்.

    உண்மை எது – பொய் எது,  நல்லது எது – கெட்டது எது, நிலையானது எது – நிலையற்றது எது எனப் பகுத்து அறிந்து, “நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் உள்ளவாறு தெளிந்து உணர்தல்” உண்மை அறிவு என்னும் இயற்கை அறிவு ஆகும். அந்த உண்மை அறிவை விளங்கவொட்டாமல் தடுப்பது பசி என்னும் தீராப் பிணி ஆகும். பசிப்பிணி என்னும் பாவி, ஒருவருடைய குடிப் பிறப்பை அழிக்கும். சிறப்புகளை ஒழிக்கும். கற்றவற்றையெல்லாம் கைவிடச் செய்யும். நாணவேண்டியவைகளுக்கு நாணம் கொள்ளுவது ஒருவனுக்கு அணிகலம். “அணி அன்றோ சான்றோர்க்கு நாணுடைமை” என்றார் திருவள்ளுவ நாயனார். அந்த நாணத்தை இல்லாதவாறு செய்யும்.  மாண்பைச் சீர்குலைக்கும். அப்படிப்பட்ட பசிப்பிணியைத் தீர்த்தவர்களின் புகழைச் சொல்வதற்கு என் நாவுக்கு ஆற்றல் இல்லையாதலால், அது எழாது என்கிறது “மணிமேகலை”


“குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்;

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;

நாண்அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி! அது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது”


நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார், உயிர் அருள் மூலம் இறையருளைப் பெறுவதற்கு அருமையான வழியைக் காட்டுகின்றார்.


“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”


இதன் பொருள் ---


    மாடங்களை உடைய இயங்காக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால், அது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குச் சேராமல், படைக்கப்பட்ட இடத்திலேயே இருந்துவிடும். எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால், அது அந்த இறைவனுக்கு ஆதல் மட்டும் அல்லாது, கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்கும் போய்ச் சேர்வதாகும். மிக எளியமுறையில் இறையருளைப் பெறும் வழினையும், அதற்கான உபாயத்தையும் திருமூலதேவ நாயனார் காட்டுகிறார்.


“யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.”  – திருமந்திரம்.


    இறைவனுக்கு ஒரு பச்சிலையைக் கொண்டு வந்து சாத்தலாமே, நமக்குப் பாலைப் பொழிந்து காக்கின்ற பசுவிற்கு ஒருவாய்ப் புல்லாவது கொடுக்கலாமே என்றால், எங்களுக்கு இருக்கும் வேலையில், நாங்கள் பச்சிலையும் புல்லும் தேடிக்கொண்டு வந்து தருவது இயலாத செயல் என்று சொல்லலாம். அது இயலாத செயல் என்றால், பசித்து வருகின்றவர்க்கு ஒரு கைப்பிடி உணவாவது இடலாமே. உண்ணும் வேளையில் இடமுடியவில்லையானாலும், உண்ட பிறகாவது இடலாமே. இதுவும் முடியாது என்றால், இனிய சொல்லாவது சொல்லிப் பிறரை மகிழ்விக்கலாமே. 


    இவ்வாறு எந்த வகையிலும் பிறருக்கு உதவி புரியாமல், ஈட்டிய செல்வத்தைக் கொண்டு, உண்டு, உடுத்து, இடம்பமாக வாழுகின்றவர்களைப் பற்றியும் திருமூலதேவ நாயனார் ஒன்றைச் சொல்லுகிறார். ஈயாத உலோபியை எட்டி மரம் என்றும், அவன் படைத்த செல்வத்தை எட்டிப்பழம் என்றும் சொல்கிறார். 


“எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,

ஒட்டிய நல்அறம் செய்யாதவர் செல்வம்

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்,

பட்டிப் பதகர் பயன் அறியாரே” -- திருமந்திரம்.


    எட்டி மரத்திலும் பழங்கள் பழுக்கின்றன. அவற்றை யார் விரும்பி உண்பார். பழுத்துப் பழுத்து மண்ணில் உதிர வேண்டியதுதான். பொருளை ஈட்டி, உலோபியாக வாழ்ந்து, அருளைச் சேர்க்கும் உபாயத்தை அறிந்துவாழாமல், வட்டிக்கு மேல் வட்டி இட்டுப் பாவிகள் சேர்க்கும் பொருளால் யாருக்குப் பயன்?  அறத்தின் பயனை அறியாத பாவிகள் இவர்கள்.


திருமூலதேவ நாயனார் கூறும் எட்டி மரங்களைப் பற்றி, வள்ளற்பெருமான் வேறுவிதமாகப் பாடி, உலகமக்களுக்கு இம்மை மறுமைக்கு நலம் பயக்கும் நல்லுரை கூறுகின்றார்.


“கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்,

கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்,

பட்டோடே பணியோடே திரிகின்றீர், தெருவில்

      பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்,

கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர்,

      குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்,

எட்டோடே இரண்டுசேர்த்து எண்ணவும் அறியீர்,

      எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.”


    உலகியல் வாழ்வில் பித்துக் கொண்ட பெருமக்களே! இனத்தோடு கூடி, சாதி ஆசாரக் கட்டுப்பாட்டில் அன்பு கொண்டு, அதுதான் உங்களுக்குப் பெருந்தன்மை எனக் கருதி வாழ்கின்றீர்கள்.  ஆனால், உங்களுக்குக் கண்ணைப் போன்றும், உங்களின் கருத்திலும் உறைகின்ற இறைவனை நினைக்கின்றீர் இல்லை.  பட்டாடையும் பொன் ஆபரணமும் அணிந்து திரிகின்றீர்கள். (இவை யாவும் இம்மை மறுமைக்குத் துணை புரிவன அல்ல) தெருவில் பசியுடன் வந்தவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். கொட்டும் முழக்கமும் கொண்டு தெருக்களில் கோலம் வருகின்றவர்களைப் பார்க்கின்றீர்கள், நீங்களும் கோலம் வந்துகொண்டு இருக்கின்றீர்கள். நற்குணங்கள் உடைய பெரியோர், நல்ல கருத்துக்களோடு கூறும் நல்ல அறிவுரைகளை நினைக்கின்றீர்கள் இல்லை.  எட்டோடு இரண்டு சேர்த்தால் பத்து என்பதும், அது இறைவன்பால் கொள்ளுகின்ற பற்று என்பதும் தெரியாதவர்களாகிய நீங்கள், எதனைத் துணையாகக் கொண்டு உய்தி பெறப் போகின்றீர்கள்?


“வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்,

வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்,

பெட்டிமேல் பெட்டிவைத்து ஆள்கின்றீர், வயிற்றுப்

     பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டிஉள் இருந்தீர்,

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்,

     பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்,

எட்டிபோல் வாழ்கின்றீர், கொட்டிபோல் கிளைத்தீர்,

     எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.”


     உலக வாழ்வில் பித்து மிகுந்து உறையும் பெருமக்களே! நீங்கள் பெற்ற பணத்தைப் பெருக்குவதற்காக, வட்டி மேல் வட்டி வாங்குகின்ற நெறியில் நிற்கின்றீர்கள். இறைவனை அடையும் வட்டியைப் (வழியைப்) பெருக்கிக் கொள்கின்ற வழியை அறியாதவர்களாய் இருக்கின்றீர்கள். பெட்டி மேல் பெட்டிகளை வைத்து அடுக்கிப் பயன் கொள்ளும் வழியைத் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள். வயிற்றுப் பெட்டியை நிரப்பிக் கொண்டு அதனோடு சேர்ந்து மகிழ்ந்து இருக்கின்றீர்கள். அதே சமயத்தில் உணவு இல்லாமையால் பட்டினி கிடக்கின்றவர்களைக் கண்ணால் பார்க்கவும் விரும்புகின்றீர்கள் இல்லை. பழங்கஞ்சியையாவது கொடுத்து, அவர்களது பசித் துன்பத்தைத் தீர்க்க எண்ணுகின்றீர்கள் இல்லை.  தொட்ட இடம் எல்லாம் கசக்கும் இயல்பினை உடைய எட்டி மரம் போல் வாழ்ந்துகொண்டு, நீரில் கிளை கிளையாய்த் தழைத்து வளரும் குட்டிச் செடி போல், மக்களையும் சுற்றத்தையும் கொண்டு வாழ்கின்றீர்கள்.  இறுதி நாளில் எதனைத் துணைக் கொண்டு உய்வீர்கள்?


    பைத்தியக்காரர்களே!  பொன், பொருளை, பெண் என்னும் மூவாசை கொண்டு இன்னும் எவ்வளவு சேர்த்தால் மனநிறைவு கொள்வீர்கள்?  பொருளை அருளாக மாற்றிக் கொள்ளும் வழியை அறியாமல் இன்னும் எவ்வளவு காலம் இப்படியே வாழ்ந்து மடியப் போகிறீர்கள்? “ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளைக் கற்காதவர்களா நீங்கள்? கற்று எழுதாதவர்களா நீங்கள்? மேடையில் முழங்காதவர்களா நீங்கள்? கற்றவர் சொல்லக் கேட்காதவர்களா நீங்கள்? என்று  அருளாளர்கள் கேட்கின்றார்கள். இதை நாம் யாரிடமும் கேட்டுவிட முடியாது. காரணம், நம்மிடமும் இதற்கு விடை இல்லை. 


அறிவு

அறிவு

---


    பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதனுக்குத் தனியான, தலையான அறிவு ஒன்று உண்டு. அதுவே ஆறாவது அறிவு. நல்லதன் நலனும் அல்லதன் தீமையும் எண்ணிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதைச் செய்யுமாறு அந்த அறிவு வழி காட்ட வேண்டும். அதற்குத் துணை நிற்பது கல்வி அறிவு. “தாயாய் முலையைத் தருவானே! தாராது ஒழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ?” என்றார் மணிவாசகப் பெருமான். தாய்ப்பால் இல்லாத குழந்தை சவலைக் குழந்தை ஆகிவிடும். கல்வி அறிவு எனப்படுவது, ஆன்றோர்கள் நமக்குப் பருகத் தந்த தாய்ப்பால். அதனை உண்டவன் உள்ளம் வளம்பெற வேண்டும். அதற்கு உண்டது செரிக்க வேண்டும். செரிமானம் ஆகவில்லையானால், உண்டதை வாந்தி எடுக்க நேரிடும். அதுபோலவே, கற்றதன் உண்மைப் பொருளை, உய்த்து உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அனுபவித்தால், “நிற்க அதற்குத் தக" என்பது சாத்தியம் ஆகும். கற்றதையே பிதற்றிக் கொண்டு இருப்பது அறிவு ஆகாது. “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே” என்றார் மணிவாசகப் பெருமான். நல்லறிவு விளங்கி, அஞ்ஞானம் தொலைய வேண்டும். அதுதான் அறிவுபெற்ற நிலை. அப்படிப்பட்ட அறிவு பெற்றவர் உலகை வழிநடத்திச் செல்வாரானால், உலகம் செழிக்கும்.


    புத்தகங்களை வாங்கி அழகுபெற அடுக்கி வைத்தும், பட்டங்களை வாங்கி வைத்தும், வாழ்க்கையின் வசதிகள் எல்லாவற்றையும் வளைத்துப் போட்டும் வாழ்வதால் ஒருவனுக்கு நல்லறிவு துலங்குவது இல்லை. 


“புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும், - மற்றவற்றைப் 

போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து 

தேற்றும் புலவரும் வேறு.”. --- நாலடியார்.


இதன் பொருள் ---


    புத்தகங்களை மாத்திரமே மிகுதியாகத் தொகுத்து வைத்திருந்தும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நுண்பொருள்களை அறியாதவராகி, அவற்றைக் கொண்டு வந்து வீடெல்லாம் நிறைத்தாலும், அப்புத்தகங்களைப் பாதுகாக்கும் புலவரும் வேறாயிருப்பார்கள். அவற்றின் பொருள்களை அறிந்து பிறருக்குத் தெளிவிக்கும் அறிவுடையோரும் வேறாகவே இருப்பார்கள்.


    புத்தகங்களைத் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறரையும் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமை ஆகும். “பக்கத்தில் இருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி. ஒக்கத் திருந்தி உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி” என்று பாடுவார் பாரதியார். பட்டங்கள் பெற்று, பதவிகளில் இருந்து, பெரும்பணத்தைக் குவித்து வைத்திருக்கும் பெரியவர்கள் புண்ணியவாளர்கள் அல்ல. தோற்றத்தால் அருளாளர் போன்று இருக்கும் ஆன்மிகவாதிகள் யோகியர் அல்ல. பக்கத்தில் இருக்கும் சாதாரண மனிதன் படுகின்ற துன்பத்தைப் பார்த்துப் பொறுக்காதவனே புண்ணியமூர்த்தி. உலகோர் நலம் உற்றிடும் வண்ணம் உழைப்பவனே யோகி.


“அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;

பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;

வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்

பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.”   – நாலடியார்.


இதன் பொருள் --- 


நீதிநெறிமுறைகளை அறிந்து நடந்து கொள்ளுங்கள். எமன் ஒருநாள் வருவான் என்கிற அச்சம் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். மற்றவர் கூறும் கடுஞ்சொற்களைக் கேட்டுச் சினம் கொள்ளாது பொறுத்துக் கொள்ளுங்கள். யாரையும் வஞ்சிக்காதீர்கள். தீயவர்களின் நட்பை விட்டு ஒழியுங்கள். எப்போதும் நல்லோர் கூறும் அறவுரைகளைக் கேட்டு வாழுங்கள்.


    இக்காலத்தில் அறநெறி இது என்று காட்டும் அறிவின் நிலையைச் சற்றே எண்ணிப் பார்க்க வேண்டும்.  நூல்களைப் படிப்பது – மனப்பாடம் செய்வது - தேர்வில் வெற்றி பெறுவது  அறிவு என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகம் அதைத்தான் போற்றுகின்றது. நூலறிவு உண்மை அறிவு ஆகாது. அது வெற்றறிவு. நூலறிவு நுண்ணறிவாக மாறவேண்டும். நூலறிவு இல்லாத நமது மூதாதையர் வாழ்ந்த அமைதியான வாழ்க்கையை, நூலறிவு பெற்றுள்ள நம்மால் வாழமுடிவதில்லை. யாருக்கும் அறிவு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. "மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு” என்று திருவள்ளுவ நாயனார் சொல்லுகிறார். அறிவின் நிலையில் பலபடிகள் உண்டு. மேல் மாடிக்குச் செல்வதற்குப் பலபடிகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பது முறை. இன்று மின்தூக்கிகள் வந்த போதிலும் படிக்கட்டுதான் இக்கட்டில் எப்போதும் பெரிதும் உதவுகின்றது. பல படிகளைக் கடந்துதான் நாம் மேலே செல்ல வேண்டும். அந்தப் படிகளின் அமைப்பைப் போலத்தான் அறிவின் பல படிகளும் அமைகின்றன. அப்படி, அறிவானது படிநிலையில் வளரவளர, நாம் அறிந்ததைக் காட்டிலும் அறியாதவை பலப்பல என்ற உண்மை விளங்கும். 


    புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. கற்றதை "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். அது கிடைத்தால் உய்தி உண்டு.


படித்தல் --- எழுத்தை மேலெழுந்தவாரியாக வாசித்தல்.

கற்றல் --- கருத்து ஊன்றித் திருத்தம் உறக் கவனித்தல்.

அறிதல் --- சொல்லின் பொருளைத் தோய்ந்து தெளிதல்.

உணர்தல் --- சொல்லின் உட்குறிப்புகளை ஆராய்ந்து தெளிதல்.

உய்தல் --- தெளிந்தபடி சீலமாய் ஒழுகி உயர்தல்.


    அறிதல், தெரிதல், கற்றல்,  என்ற சொற்களை எல்லாம் விட்டுவிட்டு, "உணர்தல்" என்னும் அருமையான சொல்லைக் கையாண்டு உள்ளார் தெய்வச் சேக்கிழார் பெருமான். சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், அம்மே அப்பா என்று அழுதுகொண்டு இருந்த திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பணிக்க, எண்ணரிய சிவஞானத்து இன்னமுதைக் குழைத்து உமையம்மையார் கொடுத்த பாலைக் குடித்தவுடன்,


"சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம்,

தவமுதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்"


என்கின்றார் தெய்வச் சேக்கிழார். "சம்பந்தர் அறிந்தார்" என்று சொல்லவில்லை. "உணர்ந்தார்" என்றுதான் சொன்னார். "தாம் உணர்ந்தார்" என்றார். உணர்த்த வேண்டிய ஒருவர் உணர்த்த உணர்தலை இது குறிக்கும். உணர்த்தியது சிவபரம்பொருள். உணர்ந்தவர், அவரது திருவருள் பெற்ற திருஞானசம்பந்தர். இதைத் தான், "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று அருளினார் மணிவாசகப் பெருமான். 


     மணல்கேணியைத் தோண்டுவது போல, சிறுமுயற்சியோடு நூல்களைக் கற்கவேண்டும். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல. எந்த வயதிலும் கற்கலாம். நூலறிவு நுண்ணறிவாக மாறியது என்றால் கற்றதன் பலன் விளைந்தது என்று பொருள். நுண்ணறிவு சிறக்கவேண்டுமானால், கற்கின்ற நூல்களின் பொருளை உணர்ந்து ஓதவேண்டும். நூல்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று உலகநூல். இன்னொன்று அறிவுநூல். உலகநூல் வயிற்றுப் பாட்டுக்கு உதவும். அறிவுநூல் ஆன்ம வளர்ச்சிக்கு உதவும். வாழ்வில் உண்டாகும் தடுமாற்றத்தைத் தவிர்க்கும். அட்டைப் பகட்டோடு வருகின்ற நூல்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவுவது இல்லை.


     கலையறிவு என்பது நூல்களைப் படிப்பதால் உண்டாகும் அறிவு. அருளறிவு என்பது திருவருளை முன்னிட்டுப் படிப்பதால் உண்டாகும் மெய்யறிவு. "பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரம் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்தசிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்" என்கின்றார் திருக்குறளைப் பதிப்பித்து, திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளல்பெருமான்.


     நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் தோண்டுகின்றோமோ, அந்த ஆழத்திற்குத் தகுந்தவாறு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்கு அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவு, கலையறிவு எனப்படும். 


    இந்தக் கலையறிவைக் கொண்டே அவரவர்க்கு விருப்பமான அல்லது வாய்க்கின்ற துறைகளில் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடிகின்றது. அப்படிப் பயணிப்பவர்கள், தாம் எடுத்த இந்தப் பிறவியில் ஆயிரம் நூல்களைப் படிப்பதோடு நில்லாமல், மேலும் அறிவு நூல்களைக் கற்று அறிந்தால் அவர்களது அறிவு மேலும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை. ஆயிரம் நூல்கள் என்பது எடை அளவிலா, அல்லது பக்க அளிவிலா?  வள்ளல்பெருமான் சொன்ன கணக்கைப் போட்டுப் பார்ப்போம்.


    ஒரு ஆள்சுமை என்பது சராசரியாக 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். பத்து ஆள்சுமை என்பது 500 கிலோ ஆகும். அது ஒரு வண்டிப் பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரம், அதவாது 2,00,000 கிலோ ஆகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது என்றால், 20,00,00,000 கிலோ ஆகும். ஆக, 20 கோடி கிலோ எடையுள்ள (2,00,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில், அதிதீவிர முயற்சியை மேற்கொண்டால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளல்பெருமானாரின் கணக்கு.


    நமக்குத் தெரிந்த, பிடித்தமான, பரிச்சயமான ஒரு நூல் என்பது சுமார் ஐந்து கிலோ எடை இருப்பதாகக் கொண்டால், அது போன்று எடையுள்ள 4 கோடியே 20 லட்சம் நூல்களை நாம் இந்தப் பிறவியில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம். அதாவது, நாம் விரும்புகின்ற ஒரு நூலை, 4,20,00,000 முறை முழுதும் படிப்பதற்குச் சமம். நம்மில் பலருக்கும் அதிதீவிர முயற்சி என்பது அறிவைப் பெறுவதில் இல்லை என்பது மட்டும் அல்லாமல், சுத்தசிவ நோக்கமும் (திருவருள்) இல்லை என்பதுதான் நிதரிசனம். இன்னொரு காரணம், நமது வாழ்நாள் குறுகியது. போராட்டங்கள் நிறைந்தது. வாழ்நாள் குறுகியது என்றால், முயற்சியை நீட்டிக்க வேண்டும். வாழ்நாளை நீட்டிக்க முடியாது.


"வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியும் உறங்கிப் போகும், நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகனது ஆகும், பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே."


என்கின்றார் தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதாகவே வேதநூலின்படி கொண்டாலும், அதில் பாதி, 50 ஆண்டுகள் உறக்கத்திலேயே கழிந்துவிடும். எஞ்சி உள்ளது, 50 ஆண்டுகளே. அதில் 15 ஆண்டுகள் பேதை, பாலகன் என்ற நிலையில் கழியும். எஞ்சி உள்ளது 35 ஆண்டுகள். இதிலும் தாகம், பிணி, பசி, மூப்பு, துன்பம் எனப் பலகாலம் போய்விடும். (நூறு வயது என்று சொல்லப்பட்டு, அதிலே பலகாலம் இப்படிக் கழிந்தால், மீதி உள்ளதை வைத்துக் கொண்டு உருப்படியாக என்ன செய்வது?) ஆதலால், எனக்குப் பிறவி வேண்டாம் என்று அரங்கனிடம் சலிப்போடு முறையிடுகின்றார் ஆழ்வார். இப்படி, சின்னாள், பல்பிணி கொண்ட வாழ்நாளில், வயிற்றுப் பாட்டுக்குப் படிப்பதற்கே (கலையறிவு பெறுவதற்கே) போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது. இதில், அருளறிவுக்கு முயல்வது எப்படி? இதுதான், பிரச்சினையா? முயற்சி இன்மைதான் பிரச்சினை. “முயற்சி திருவினை ஆக்கும்” என்றார் திருவள்ளுவ நாயனார்.


     தண்ணீர் வேண்டும் என்றால் தோண்டித்தான் ஆகவேண்டும். அருளறிவு வேண்டும் என்றால் முயன்றுதானே ஆகவேண்டும். முயன்று பாருங்கள். உங்களது முயற்சிக்குத் திருவருள் துணை நிற்கும். நிலையில்லாத பொருட்செல்வத்தைத் தேடி வாழ்நாள் முழுக்க உழைக்கின்றோம். கேடு இல்லாத மேன்மையைத் தருவதாகிய கல்விச் செல்வத்தையும் வாழ்நாள் முழுதும் தேடவேண்டும். தேடிய செல்வம் போதும் என்று யாரும் இருப்பது இல்லை. ஆனால், கற்ற கல்வி போதும் என்று அமைந்துவிட்டு, கற்றதை வைத்துச் செருக்குக் கொண்டு இருப்போரைக் காணலாம். "முற்றும் உணர்ந்தவர் இல்லை; முழுவதும் கற்றனம் என்று களியற்க" என்கின்றார் குமரகுருபர அடிகள். "கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு. கலைமகளும் தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஏதோ கொஞ்சும் படித்துவிட்டு, நான் நிரம்பக் கற்றவன், நீ கற்றவனா என்று வாதம் செய்து கொண்டு இருக்காதீர்கள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்" என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.


“கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு என்று

உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; – மெத்த

வெறும் பந்தயம் கூற வேண்டாம், புலவீர்!

எறும்பும் தன் கையால் எண்சாண்.”


    கண்ணால் காணும் சிறு துாரத்தை எண்ணும்போது, அது அதிகமாகத் தெரிகிறது. ஆனால், ஒரு சிறிய தொலைநோக்கியில் அந்த அளவைக் காணும்போது, காணாத தூரம் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. பின்னர் அந்த தூரத்தையும் பிறிது ஒரு பெரிய தொலைநோக்கியைக் கொண்டு நோக்கும் போது, காணாது பரந்து நிற்பது இன்னும் விரிவடைகிறது. அறிவும் அத்தகையதே ஆகும். அறிய அறிய இன்னும் அறிய வேண்டுவது அதிகமாகின்றது. இதையே திருவள்ளுவ நாயனார் “அறிதோறு அறியாமை கண்டற்றால்” என உவமை முகத்தால் தெளிவிக்கின்றார். எனவே, அறிவுக்கு எல்லை இல்லை. எல்லையற்ற பரம்பொருளை ஓர் எல்லைக்குள் கொண்டு வந்து சிறுச்சிறிதாக அறிய முனைவது சமயம் சார்ந்த நெறிப்பட்ட வாழ்க்கை ஆகும். சட்டம் தவறு செய்த மனிதனைத் தண்டித்துத் திருத்த முயல்கிறது. சமயம் சார்ந்த, அறிவு சார்ந்த வாழ்க்கையானது, மனிதனை அறநெறியில் செலுத்தி வாழ்வாங்கு வாழச் செய்கிறது.


    சமயத் தலைவர்களும் சமுதாயத்தைச் சீர்திருத்த வருபவரும் உயிர்கள் வாழ வழிவகுக்கும் நல்லவரும் காட்டும் அந்த அறிவுப் பாதையை,அறநெறியை நாம் அனைவரும் படிக்கிறோம், படிக்கக் கேட்கிறோம். ஆனால் பின்பற்றுகிறோமா? அவ்வாறு பின்பற்றாத மனிதனைப் பார்த்துப் பெரியவர்கள் அறிவற்றதென நாம் கருதும் மரத்தை, விலங்கை, பறவையை நமது மனக்கண் முன் நிறுத்திக் காட்டி அறிவுறுத்துகின்றனர். 


“சாந்தனையும் தீயனவே செய்திடினும், தாம்அவரை 

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் 

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து 

மறைக்குமாம் கண்டீர் மரம்.” 

என்பது ஒளவையார் அருள்வாக்கு. மனிதனால் மரம் வெட்டப்படுகிறது. பின் துளிர்த்து நிழல் தருகிறது. கோடை வெப்பத்தில் வெட்டிய அந்த மனிதனே அந்த மரத்தின் நிழலில் ஒதுங்குகிறான். “என்னை வெட்டிவிட்டு, எனது நிழலிலேயே வந்து ஒதுங்குகின்ற மனிதா!” என்று கூறி எந்த மரமும் நிழல் தர மறுப்பது இல்லை. அதுபோல அறிவுடையவர் தமக்குத் தீங்கு இழைக்கும் கொடியவனாக இருந்தாலும், துன்பம் வருங்கால் தம்மால் கூடிய வரையில் அவனைக் காத்து ஒம்புவர் என்கிறார் ஔவையார். 


    அதுதான், உண்மையான அறிவு உள்ள மனிதனின் நிலை. அதுதான் அறவாழ்வும் கூட. தொல்காப்பியர் காலம் தொடங்கி, இந்நாள் வரை அறிவுள்ள பெரியோர்களும் அருளாளர்களும் இதைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்த்து, மனிதகுலத்தின் மீது அளவற்ற கருணை கொண்டு திருவள்ளுவ நாயனார், “அறிவினுள் எல்லாம் தலை என்ப, தீய செறுவார்க்கும் செய்யாவிடல்” என்று தெளிவாக அருளினார். திருக்குறளைக் கற்று எழுதுவதோடு, மேடைகளிலும் முழங்கிப் பணம் பண்ணுவதையே அறிவு என்று எண்ணிக் கொள்ளுகின்ற அவலநிலை இன்றும் தொடர்கிறது. இதனாலேயே மனிதகுலம் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்துக் கொண்டு வருகிறது. பிற உயிர்கள் படும் துன்பத்தை, தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான்பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று கூறி மனிதகுலத்தைச் சிந்திக்க வைத்தார் திருவள்ளுவ நாயனார். “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை” என்பது திருக்குறள். மனிதகுலம் இதைச் சிந்தக்கத் தவறிவிட்டது என்றே இக்கால நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன.


    ஒத்தாரும், உயர்ந்தாரும், தாழ்ந்தாரும், எவரும் ஒருமை உள்ளவர் ஆகி உலகியலை நடத்திடல் வேண்டும் என விழைந்த திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் காட்டிய வழியில் மனித இனமானது வாழ்ந்து ஓங்கி விளங்கிட வேண்டும். 'நாம் செய்த நல்வினையே நமக்குப் பலன்தரும்’  என்ற அறிவுரையைப் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் மனிதன், அதற்கு நேர்மாறான காரியங்களையே செய்து வருகிறான். 


    ஆறறிவு படைத்த மனிதன் பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பிதற்றிக் கொண்டு, உண்மையில் பகுத்தறிவு என்பதை உணர்ந்து திருந்தாத அவலநிலையை அன்றே உணர்ந்து, தனது காலத்திற்கு முன்னர் எத்தனையோ சான்றோர்களும் அருளாளர்களும் காட்டிச் சென்ற நெறியை உணராமல், நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைத்துக் கெடுகின்ற மனிதனை எப்படித்தான் திருத்துவது என்று சிந்தித்த ஔவையார், ஓரறிவு உடைய உயிர்களைக் காட்டியாகிலும் மனிதகுலத்தை நல்வழிப்  திருத்தலாம் என எண்ணி, மரத்தைக் குறித்து மேலே காட்டிய பாடலைப் பாடினார். 


    சாலை ஓரத்தில் வானோங்கிய நல்ல மரங்கள் நிழலைத் தந்து கொண்டிருக்கின்றன. அதன் தழைகளையும் கிளைகளையும் வெட்டுவதற்கு ஒரு மனிதன் வருகிறான். மொட்டை ஆகிய அந்த மரம் முன்னிலும் மேலாகத் தழைக்கிறது. கோடைக் காலம் வந்தபோது, அந்த மரத்தை வெட்டிய மனிதன், அதன் நிழலை அடைகிறான். இவன் தனது அங்கங்களையெல்லாம் வெட்டிச் சிதைத்தவனாயிற்றே என்று எண்ணி அவனுக்குத் நிழலைத் தர மறுக்கவில்லை மரம். அவனுக்குக் குளிர் நிழலைத் தந்து வெம்மையைத் தடுத்து அவனுக்கு இதம் செய்கிறது. (ஆனால், இன்றைய மனிதன் மனசாட்சி சிறிதும் இல்லாமல், அதிகாரம் தன்னிடத்து இருக்கின்றது என்ற செருக்குக் காரணமாக, மரங்களை வேரோடு வெட்டிச் சாய்த்துக் கொண்டு இருக்கிறான்.)


    திருந்தாத மனிதனைத் திருத்த எண்ணி, ஔவையார் இந்தக் காட்சியினை ஒளவையார் எடுத்துக்காட்டினார். ஆனாலும் அந்த மனிதன், ஔவையார் பாடல்களையும் படித்துக் கொண்டு, படித்தவற்றை மற்றவர்க்கு உபதேசித்துக் கொண்டே, அழிவுப் பாதையில் போய்க்கொண்டுதான் இருக்கின்றான். அவன் பேசுவதையும் அறிவு அறிவு என்று பாராட்டுகின்ற ஒரு கூட்டம், அவனோடு அழிவுப் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. 


    அறிவு என்பது வெறும் ஏட்டுப் படிப்பால் மட்டும் வருவது அல்ல. அது உண்மையானால்,  படித்த பலர் வாழும் இன்றைய உலகில் கொடுமைகள் பெருகிக் கொண்டே போவது ஏன்? எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத ஓரறிவு உயிராகிய மரத்துக்கே இவ்வளவு கேட்டினை விளைவிக்கும் மனிதனால், மனிதகுலத்துக்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?  எனவேதான் திருவள்ளுவ நாயனார்,  “அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை'” என்று பாடினார். இந்த உண்மையினைத்தான் பிற்கால ஒளவையார் மரத்தைச் சான்றாக வைத்துக் காட்டி மனிதனுக்கு விளக்கம் செய்தார். 


    தீமை செய்வார்க்கும் நன்மை செய்வதே மனிதன் பெற்ற அறிவின் பயன் ஆகும். நல்லவருக்கும் கூடத் தீமை இழைத்து மகிழும் மனித சமுதாயத்தில் வாழும் நமக்கு, இந்த உண்மை  விளங்காமல் போனதுதான் வருத்தத்திற்கு உரியது. அறிவு என்பது பிறர் எக்கேடு கெட்டாலும் தான்மட்டும் சாமர்த்தியாமகப் பிழைப்பு நடத்துவது அல்ல. எவ்வுயிருக்கும் தீங்கு நினையாமல் வாழ்வதுதான். 


    திருக்குறளில், “அறிவுடைமை” என்னும் அதிகாரத் தலைப்புக்கு, அறிவுடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவும் உடையவராய் இருத்தல் ஆகும் என விளக்கம் கண்டு உள்ளார் பரிமேலழகர். அதிகார முறைமைப்படி, கல்வியும், கேள்வியும் உடையவராய் இருந்தாலும், கற்றதையும், கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். “அறிவாவது, நல்லதன் தலனும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்” என்று நச்சினார்க்கினியர் கூறி உள்ளார். “செய்யுள் நிகழ் சொல் தெளிவும், செவ்விய நூல் பலநோக்கும், மெய் உணர்வின் பயன் இதுவே” என்பது பெரியபுராணம். நோக்கும் என்பதற்கு, கருத்து ஊன்றி உணர்தல் எனப் பொருள் கண்டனர் முன்னோர். கற்கின்ற நூல்களைக் கருத்து ஊன்றி உணர்பவருக்கு மெய்யறிவு விளங்கும். மெய்யறிவு பெற்றோர் பிற உயிர்க்குத் தீங்கு செய்யார். அவரால் மனித குலம் தழைக்கும்.









பாடல் 12


"குயில்ஒத்து இருள்குஞ்சி கொக்குஒத்து, இருமல்

பயிலப் புகாமுன்னம், நெஞ்சே! -  மயிலைத்

திருப்புன்னை அம்கானல் சிந்தியாய் ஆகில்,

இருப்பின்னை அங்காந்து இளைத்து."


இதன் பொருள் --- 


    நெஞ்சே – மனமே! குயில் ஒத்து இருள் குஞ்சி கொக்கு ஒத்து – குயிலின் நிறம் போன்று கருமை நிறைந்து இருந்த தலைமயிரானது, நரைத்து கொக்கின் நிறம் போன்று வெண்மயிர் ஆகவும், இருமல் பயிலப் புகாமுன்னம் – இருமல் அடிக்கடி வருத்துகின்ற முதுமைப் பருவம் வந்து அடையும் முன்னரே, மயிலைத் திருப்புன்ன அம்கானல் சிந்தியாய் ஆகில் – திருமயிலாப்பூரிலே உள்ள திருப்புனை அம்கானல் என்னும் திருத்தலத்தை நினைக்கமாட்டாய் என்றால், பின்னை அங்காத்து இளைத்து இரு – முதுமையில் வாய் திறந்து இளைப்பினை அடைந்து இருப்பாய். (வாய் திறந்து இறப்பினையும் அடைந்து இருப்பாய்)

    இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல், கொக்கின் நிறம்போல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி இறைவன் அமைத்து இருகுகலாம்.  அது அவனுக்கு அருமையானது அல்ல. அதானல் இறைவனுக்கு நட்டமும் இல்லை.  இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

“கறுத்து தலை வெளிறு மிகுந்து” எனவும், “தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து” எனவும் வரும் திருப்புகழ்ப் பாடல்களை இங்கு வைத்து எண்ணுக. முதுமையில் கோழை மிகுவதால், இருமல் அடிக்கடி உண்டாகும். மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. அதுவும் இரவு நேரத்தில் இருமல் வாட்டும். “உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து” என்பார் அருணகிரிநாதர். பின்னை – முதுமைக் காலத்தில். அங்காத்தல் – வாயைத் திறத்தல். துயரத்தால் வாயைத் திறந்தபடி இருந்து, வாயைத் திறந்தபடியே இறந்து போவாய் என்றார்.

    புன்னை அம் கானல் - புன்னை மரங்கள் மிகுந்து உள்ள அழகிய கடற்ரை. மயிலை – திருமயிலை என வழங்கும் திருமயிலாப்பூர். இது தொண்டை நாட்டுத் திருத்தலம். சென்னைமாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. திருக் கபாலீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத் திருப்பதிகம் திருஞானசம்பந்தரால் அருளப்பட்டது.


40. அடியவர்களிடத்தில் கடவுள் தன்மை விளங்கும்

 


“முற்றும் இறைசெயலே முற்றிடினும், தன்அருளைப்

பெற்றவர்தம் பாலே பெரிதாகும்; - பற்றுபெருந்

தாபத்து இடத்தே தழன்றிடினும், நற்சோதி

தீபத்து இடத்தே சிறப்பு.”


நல்ல ஒளி விட்டு எரியக்கூடிய பெரிய காட்டுத் தீயினிடத்தில் ஒளிவிட்டாலும், சிறிய விளக்கிடத்திலேயே அவ் ஒளி சிறப்பு உடையதாகும். அது போல, உலகமெங்கும் கடவுள் அருள் நிறைந்து இருந்தாலும், அவ் இறைவன் அருளைப் பெற்ற அடியார்கள் இடத்திலேயே அவ் அருட்செயல் நிறைந்திருப்பது மிகுதியாகும்.

    (இறை - கடவுள்.  தாபம் - காடு.  தீபம் - சிறுவிளக்கு.) 

    “திரி அழல் காணின் தொழுப; விளகின் எரி அழல் காணின் இகழ்ப" என்பது “நான்மணிக்கடிகை”. திரியில் எரியும் நெருப்பைக் கண்டால் வணங்குவார்கள். விளகில் எரியும் நெருப்பைக் கண்டால் இகழ்வார்கள் என்பது இதன் பொருள்.


99. அச்சியிலே போனாலும்...

 கொச்சையிலே பாலுமுண்டோ? கூத்தியர்கள்

     தம்மிடத்திற் குணந்தான் உண்டோ?

துச்சரிடத் தறிவுண்டோ? துச்சரெங்கே

     போனாலும் துரையா வாரோ?

நச்சரவத் தொடையாரே! தண்டலையா

     ரே! இந்த நாட்டல் லாமல்

அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக்

     காசதன்மேல் ஆர்கொள் வாரே?


இதன் பொருள் ---


    நச்சு அரவத் தொடையாரே – நஞ்சை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே! இந்த நாட்டு அல்லாமல் அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசதன் மேல் யார் கொள்வாரே - இந்த நாட்டிலே அன்றி அச்சிக்குச் சென்றாலும் அகப்பை அரைக் காசுக்கு மேல் விலை போகாது, (ஆகையால், எங்கே சென்றாலும்) கொச்சையிலே பாலும் உண்டோ – வறட்டு ஆட்டிலே பால் கிடைக்குமா?, கூத்தியர்கள் தம்மிடத்தில் குணம்தான் உண்டோ - கூத்தாடும் மாதரிடம் நற்பண்பைத்தான் காணமுடியுமா?, துச்சர் இடத்து அறிவு உண்டோ - தீயருக்கு அறிவு உண்டாகுமா?, துச்சர் எங்கே போனாலும் துரை ஆவரோ - தீயவர் எங்கே சென்றாலும் தலைமைக்கு ஏற்றவர் ஆவாரோ?


      கூத்தி – நாடகக் கணிகை. கூத்தியர் என்பவர் முற்காலத்தில் கூத்தாடும் தொழிலை மேற்கொண்டு, ஒழுக்கமின்றி ஊருராகச் சென்று கொண்டிருந்தவர்கள்.துச்சர் -இழிந்த குணம் உடையவர். ‘துச்சர் துரை ஆவாரே' துச்சரிடத்துத் துரைக்கு உரிய பண்பு பொருந்தி இருக்காது. ‘அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு தான்' என்பது பழமொழி.


39. அடியார்களைப் பகைத்தால் அழிவு

 “ஈசன்எதிர் நின்றாலும், ஈசன்அருள் பெற்று அயர்ந்த

நேசர்எதிர் நிற்பது அரிதாமே; - தேசுவளர்

செங்கதிர்முன் நின்றாலும், செங்கதிரவன் கிரணம்

தங்குமணல் நிற்க அரிதே தான்.” -- நீதிவெண்பா


ஒளி விளங்குகின்ற சிவந்த கிரணங்களை உடைய சூரியனுக்கு முன்னே வெயிலைப் பொறுத்துக் கொண்டு நின்றாலும், அந்தச் சூரியனின் கிரண வெப்பம் தாங்கியுள்ள மணலில் நிற்றல் என்பது இயலாது. அதுபோல, எல்லாம் வல்ல இறைவன் முன் பகைத்து நின்றாலும், அவ் இறைவனின் பேரருளைப் பெற்று உயர்ந்த அடியார்கள் எதிரே பகைத்து நிற்றல் இயலாது. பகைக்கின் விரைவில் அழிவு ஆகும்.


98. முழுதும் அனுபவிக்க யாராலும் முடியாது

 


ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்

     அன்னமயம் ஆனால் என்ன?

சூழவரும் இரவலர்க்குப் பசிதீர

     உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ!

ஏழுலகும் பணியவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! எந்தநாளும்

நாழிநெல்லுக்கு ஒருபுடைவை விற்றாலும்

     நிருவாணம் நாய்க்குத் தானே.


இதன் பொருள் ---


    ஏழு  உலகும் பணியவரும் தண்டலையாரே - ஏழுலக மக்களும் வணங்கத் தேடிவரும் திருத் தண்டலை இறைவரே! எந்த நாளும் நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு நிருவாணந்தான் - எக்காலத்திலும் ஒரு படி நெல்லுக்கு ஒரு புடைவை என்று விற்றபோதிலும், நாய் ஆடையின்றித்தான் இருக்கவேண்டும். (அதுபோல), ஆழி எல்லாம் பாலாகி அவனி எல்லாம் அன்ன மயம் ஆனால் என்ன - எல்லாக்  கடல்களும் பாற்கடல்களாகவும், உலகம் முற்றும் சோற்றுக் குவியலாகவும் ஆனாலும் என்ன பயன்?, சூழ்வரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ - (உலகைச்) சுற்றி அலையும் பிச்சைக்காரர்களுக்குப் பசி தீர பாலைக் குடித்தும், உணவை உண்டு களிக்கும் நலம் உண்டாகுமா? (உண்டாகாது)


      ஆழமாக இருப்பது பற்றி, கடலானது ஆழி என வழங்கப்படும். அனைத்துக் கடலுமே பாற்கடலாக மாறினாலும், அதைப் பார்த்து வரும் இரவலருக்கு, பாற்கடலை முழுமையாகக் குடித்து மகிழ முடியாது. உலகம் எங்கும் சோற்றுப் பெருக்கு இருந்தாலும் அதைப் பார்த்து வரும் இரவலர்க்கு சோறு முழுவதையும் உண்டு மகிழ முடியாது. இதை விளக்கவே, ‘நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிருவாணமாகத் தான் இருக்கும் என்னும் பொருள்பட ஒரு பழமொழி இருந்திருத்தல் வேண்டும்.


        பின்வரும் பாடல்களை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்பேம் எனினே தப்புந பலவே. “.      – புறநானூறு

இதன் பொருள் ---

  தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள இந்த உலகில், "எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது" என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த மாமன்னர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவில் கணி விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது --- உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு விதமானவர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து கிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.


 “சேவித்தும், சென்று இரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.”            -- நல்வழி.

 

இதன் பொருள் ---

      வயிற்றுப் பசியின் கொடுமையால் பிறரைத் தேடிச் சென்று வணங்கியும், பலரிடத்தில் சென்று யாசித்தும், தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து, வேற்ற நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களை எல்லாம் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும்,  செல்வர்களைப்  புகழ்ந்து பாடியும், இப்படிப் பலவிதமாக உடம்பினை ஓம்புவதற்கு வேண்டிய படி அரிசிக்காகவே உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.



பாடல் 11

 


“குழீஇ இருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட,

வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாந் தழீஇஇருந்தும்

என்ஆனைக்கு ஆவா இதுதகா துஎன்னாமுன்

தென்ஆனைக் காஅடைநீ சென்று.”


இதன் பொருள் ---


    குழீஇ இருந்த சுற்றம் குணங்கள் பாராட்ட - சுற்றிக் கூடியிருந்த சுற்றத்தார்கள் குணங்களை எடுத்துப் பாராட்டிக்கூற; வழீஇ இருந்த அங்கங்கள் எல்லாம் தழீஇ இருந்தும் – மரண காலத்தில் நழுவிக் கிடந்த அங்கங்களை எல்லாம் தழுவிச் சேர்த்து இருந்து கொண்டும்; என் ஆனைக்கு இது தகாது என்னா முன் – எனது ஆனைபோன்ற (தோற்றமும் நடையும் உடைய) இவருக்கு இவ்வாறு நேர்ந்தது தகாது என்று சொல்லித் துக்கப்படாத முன்னே; நீ சென்று தென் ஆனைக்கா அடை – மனமே! அழகிய திருவானைக்காவினை நீ சென்று அடைவாயாக.


    எவர் ஒருவர் இறப்பினும் இறந்தவருடைய சுற்றத்தார்கள் இறந்தவரது மிகுதியான குற்றங்களை எல்லாம் மறைத்து விட்டுக் குணம் சிலவேயாயினும் அவற்றை எடுத்துக் கூறிப்பாராட்டுதல் வழக்கம்.  வழீஇ இருந்த அங்கங்கள் – (வழுவுதல் - நிலைகெடுதல்.) அங்கங்கள் - உடல் உறுப்புக்கள். இது – மரணம். இந்தக் கதி.


சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம் ஆகிய திருவானைக்கா திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக உள்ள திருத்தலம். இறைவர், செழுநீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர். இறைவியார், அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி. தேவார மூவர் முதலிகள் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்) பாடி வழிபட்ட திருத்தலம். பஞ்சபூதங்களில் நீருக்கு உரிய திருத்தலம். நடராசர் சந்நிதிக்கு எதிரில் கோட்செங்கட்சோழ நாயனாரின் திருவுருவம் தனிச் சந்நிதியில் அமையப்பெற்றுள்ளது. இது, நாயனாரின் அவதாரத் திருத்தலம் ஆகும்.


கோச்செங்கண் சோழ நாயனார் வரலாறு


சோழ நாட்டிலே, காவிரிக் கரையிலே ஒரு தீர்த்தம் உண்டு. அதன் பெயர் சந்திர தீர்த்தம். அதன் அருகே ஒர் அழகிய வனம் இருந்தது. அவ் வனத்தில் ஒரு வெண்நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அது, ஒரு வெள்ளானைக்குப் புலப்பட்டது. அந்த யானை துதிக்கையால் நீரை முகந்து வந்து  சிவலிங்கத்தை அபிடேகம் செய்யும். மலரைச் சாத்தும்.  இவ்வாறு நாள்தோறும் அந்த யானை சிவபெருமானை வழிபட்டு வந்தது. அதனால், அத் திருப்பதிக்குத் "திரு ஆனைக்கா" என்னும் திருப்பெயர் உண்டாயிற்று.


அங்கே ஞான உணர்வு உடைய ஒரு சிலந்தியும் இருந்தது.  சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை அச் சிலந்தி கண்டது.  அதைத் தடுக்கும் பொருட்டு, அச் சிலந்தி, தனது வாய் நூலால் மேல்கட்டி அமைத்தது. பூசைக்கு வரும் வெள்ளானை, அம் மேற்கட்டியைக் கண்டு, அனுசிதம் என்று அதனை அழித்தது.  சிலந்தி அதைப் பார்த்து, துதிக்கை சுழன்றமையால் விதானம் அழிந்தது போலும் என்று கருதி, மீண்டு விதானம் அமைத்தது.  அடுத்த நாளும் யானை விதானத்தை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. யானையின் துதிக்கயுள் புகுந்து கடித்தது.  யானை விழுந்து, துதிக்கையை நிலத்தில் மோதி மோதி இறந்தது. சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி வழங்கினார். சோழர் குலத்தில் பிறக்குமாறு சிலந்திக்குத் திருவருள் புரிந்தார்.


சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார். அவர்  மனைவியார் கமலவதியார். அவர்க்குப் புத்திரப் பேறு இல்லாமல் இருந்தது. அப் பேறு குறித்து அம்மையார் தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம். தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார். அக் கருவில் திருவானைக்காச் சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது.


கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது. "பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின், அது மூவுலகங்களையும் ஆள்வதாகும்" என்று காலக் கணக்கர்கள் சொன்னார்கள். அது கேட்ட கமலவதியார், "அப்படியானால், என்னைத் தலை கீழாகக் கட்டுங்கள்" என்று கூறினார். அவ்வாறே செய்ய, ஒரு நாழிகை கழிந்தது. பிள்ளை காலம் தாழ்த்துப் பிறந்தமையால், சிவந்த கண்ணை உடையதாய் இருந்தது. அதைக் கண்ட அன்னையார், "என் கோச்செங்கண்ணானோ?" என்று சொல்லிக் கொண்டே இறந்தார்.


சுபதேவர் பிள்ளையை வளர்த்தார். தக்க வயதில் பிள்ளைக்கு முடி சூட்டினார். பின்னே, அவர் தவநெறி நின்று சிவனடி சேர்ந்தார். கோச்செங்கண் சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்த்து இருந்தது. அவர் திருக்கோயில்கள் கட்டுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்று, அங்கே திருக்கோயில் அமைத்தார். சோழநாட்டிலேயே பல திருக்கோயில்களைக் கட்டுவித்தார். எழுபது மாடக் கோயில்களை அவர் சமைத்தார். இவற்றில் திருமால் கோயில்களும் அடங்கும். இதனை ஆழ்வாரும் சிறப்பித்து உள்ளார். கோச்செங்கண் சோழ நாயனார் தில்லை சேர்ந்தார்.  தில்லைக் கூத்தனை வழிபட்டார். தில்லைவாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். இவ் வழியில் திருத்தொண்டுகள் பல செய்து நாயனார், சிவபெருமான் திருவடி நிழலைச் சேர்ந்தார்.


வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நால் திசையும் தேனை, காவுள் மலர்கள், தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே" என்று போற்றி உள்ளார்.


அப்பர் பெருமான் இத் திருத்தலத்து இறைவர் மீது பாடியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகம், அனைவரும் ஓதி வழிபடுவதற்கு உரியது.


“எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,

எம்மாடு சும்மாடுஆம், ஏவர் நல்லார்,

செத்தால்வந்து உதவுவார் ஒருவர் இல்லை,

சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,

சித்துஆய வேடத்தாய், நீடு பொன்னித்

திருவானைக் காஉடைய செல்வா, என்தன்

அத்தா,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    (அடியேன் பல பிறவிகளை எடுத்து உள்ளேன். பிறவிகள் தோறும் எனக்குத் தாய்தந்தயர், சுற்றத்தார் அமைந்து உள்ளனர். அவர்களுள்) எந்த தாய், எந்த தந்தை, எந்த சுற்றத்தார் நமக்கு நல்லவர்கள்? எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடிய நல்ல செல்வம் ஆகும்? யார் நல்லவர்? நாம் இறந்தால் நமது உறவினர்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின் உடலுக்கு உறவாக அமைந்தவர்கள் மீது கொள்ளும் பற்றினை விடுத்து,  உயிருக்கு உறவாக அமைந்துள்ள “என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவைத் தமக்கு இடமாக விரும்பி எழுந்தருளியிருக்கும் செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை நான் அடைவேனோ? (கூ கா என என் கிளை கூடி, அழப் போகா வகை உண்டாகும்)


“ஊன்ஆகி, உயிர்ஆகி, அதன்உள் நின்ற

உணர்வுஆகி, பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்,

நான்ஏதும் அறியாமே என்உள் வந்து

நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்,

தேன்ஆரும் கொன்றையனே, நின்றி யூராய்,

திருவானைக் காவில்உறை சிவனே, ஞானம்

ஆனாய்,உன் பொற்பாதம் அடையப் பெற்றால்,

அல்லகண்டம் கொண்டு அடியேன் என்செய் கேனே.”


இதன் பொருள் ---


    திருவானைக்காவில் உறையும் சிவபெருமானே! ஞானவடிவினனே! என் உடம்பாய் உயிராய், உயிருள் இருக்கும் ஞானமாய்ப் பிற எல்லாமாகவும் நீயே உள்ளாய். நான் ஏதும் அறியாத நிலையில் என்னுள் வந்து சேர்ந்து, எனக்கு நல்ல செயல்களையும் தீய செயல்களையும் அறிவிக்கின்றாய். தேன் நிறைந்த கொன்றை மலர் மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் உறைபவனே! உன் அழகிய திருவடிகளை அடியேன் அடையப் பெறுவேனானால் துன்பத்தால் வருந்தும் நிலை எனக்கு ஏற்படாது.


பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...