பாடல் 20

 


“என்னெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன்,

கன்னம்செய் வாய்ஆகில்; காலத்தால் வல்நெஞ்சுஏய்

மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி

ஏகம்பத் தானை இறைஞ்சு.”


இதன் பொருள் ---


    என்னெஞ்சே - எனது நெஞ்சமே! கன்னம் செய்வாயாகில் – காது கொடுத்துக் கேட்பாயாகில்; உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னைக் கெஞ்சியும் வேண்டிச் சொல்கின்றேன்; காலத்தால் – உயிருள்ள காலத்திலேயே, வல் நெஞ்சு ஏய் மா கம்பத்து ஆனை உரித்தானை --- வலிய கொடிய நெஞ்சினை உடைய பெரிய அசைகின்ற (மலைபோன்ற) யானையின் தோலை உரித்தப் போர்த்துக் கொண்டவரும், வண் கச்சி ஏகம்பத்தானை இறைஞ்சு – வளப்பம் பொருந்திய திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவரும் ஆகிய திருவேகம்ப நாதரை வணங்குவாயாக.

கன்னம் - காது; கன்னஞ் செய்தல் - செவிகொடுத்துக் கேட்டல்; இரந்தும் - மிகக் கெஞ்சியும்; காலத்தால் - உயிரும் ஆற்றலும் உள்ள காலத்திலே. "காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்" என்பது மணிவாசகம். காலம் உள்ளபோதே இறைவரை வணங்கு. வன்னெஞ்சு - மாறுபட்ட வலிய கொடிய நெஞ்சு; மா - பெரிய; உருவுடைய; கம்பத்து ஆனை - கம்பம் - அசைவு; எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது யானையின் இயல்பு.  கம்பம் - நடுக்கம் என்று கொண்டு பெரிய நடுக்கத்தை விளைக்கும் யானை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பம் - கட்டுத்தறி என்றாலும் பொருந்தும். வண் - வளப்பமாவது முத்தி அறிக்கும் ஏழு திருத் தலங்களுள் ஒன்று திருக்காஞ்சி. ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செய்கின்ற அம்மைக்கு இருப்பிடமாக உள்ளதும் திருக்காஞ்சி. 

    காஞ்சிபுரம், தொண்டை நாட்டில் உள்ள முதல் திருத்தலம். சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவு. சென்னையில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. பிற நகரங்களில் இருந்தும் வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். "நகரேஷு காஞ்சி" என்று வடமொழியில் மகாகவி காளிதாசரால் சிறப்பித்துக் கூறப் பெற்றது.  தொண்டை நல்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடையது. முக்தி தரும் தலங்கள் ஏழில் ஒன்று. வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “கண் ஆர்ந்த நாகம் பராம் தொண்ட நாட்டில், உயர் காஞ்சி ஏகம்பம் மேவும் பேரின்பமே” என்று போற்றி உள்ளார். மூவர் முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம். இத் திருத்தலத்தில் எந்தக் கோழிலிலும் அம்புகைக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது சிறப்பு. நகரின் நடுநாயகமாக அம்மை வீற்றிருக்கும் காமக் கோட்டம் அமைந்து உள்ளது. மூவர் முதலிகளும், காமக் கோட்டம் சென்று அம்பிகையை வழிபட்டனர் என்பது பெரும் சிறப்பு. பாடல் பெற்ற திருத்தலங்கள் ஆகிய திருமேற்றளி, திரு ஓணகாந்தன்தளி, திருக்கச்சி அனேகங்காவதம், திருக் கச்சிநெறிக் காரைக்காடு ஆகியவை இந்நகரில் அமைந்து உள்ளன. சிறந்த வைணவத் தலமாகவும் விளங்குகின்றது. குமரக் கோட்டம் இங்கு அமைந்துள்ளது. பலவேறு திருக்கோயில்கள் உள்ளன.

இப் பாடல் ஆசிரியர் ஆகிய, ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றிய திருத்தலம். குருபூசை நாள் - ஐப்பசி - மூலம். காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தாவண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

“திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 

பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்

தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்

அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்”

என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துத் திருத் தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே “சேத்திரத் திருவெண்பா” எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம். இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவநெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி. குருபூசை நாள் - வைகாசி - பரணி. கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவில் குறியாதவர்.  வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணை நாயனார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு "அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?" என வினவினார். அருகே நின்ற செருத்துணையார், "இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்" என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, "பூவை எடுத்த கையை அல்லவா முதலில் வெட்டுதல் வேண்டும்?" என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி. குருபூசை நாள் - சித்திரை - சுவாதி. காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் உள்ளத் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். இவர் செவ்விய அன்புடையவர். நல் ஒழுக்க நெறி நிற்பவர். சிவனடித்தொண்டு புரிபவர்.  மன, மொழி, மெய்யாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பு அழுக்கும் போக்குவார் ஆயினர்.

இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள், திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இளைத்திருக்கின்றதே?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக் கந்தையைத் துவைப்பதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் "நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக" என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், "அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக" என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராது ஒழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புழுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி "இனி நான் யாது செய்வேன்" என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப் போயிற்றே’"என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. "முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்" என்று எழுந்து "துணி துவைக்கும் கல்லிலேயே எனது தலை சிந்தும்படி மோதுவேன்" என்று தமது தலையை மோதினார்.

அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க, மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

        திருக்கயிலாயத்தில் ஆகமங்களைஎல்லாம் இறைவர் அருளிச் செய்ய அம்மையார் கேட்டருளினர். எண்ணில் ஆகமங்களை அருளிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனையே ஆகும் என்று அருளிச் செய்ய, அவ்வாறே தாம் பூசைசெய்ய அம்மையார் மனம் கொண்டனர். அதற்கேற்ற இடம் காஞ்சிபுரத்தின் மாவடியே ஆகும் என்று இறைவர்பால் அறிந்த இறைவியார் அங்கு நின்றும் போந்து, மலையரசன் வந்து விடுத்த பரிசனங்களுடன் சென்று காஞ்சியில் பதும மாநாகம் வேண்டியபடி அதன் பிலத் துவாரத்தில் எழுந்தருளியிருந்து, கம்பையாற்றின் கரையில் மாவின் மூலத்தில், தவஞ்செய்து, சிவனுரு வெளிப்படக் கண்டு, பூசிக்கத் தொடங்கி மெய்ப்பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தருளினர். அப்போது இறைவனார் ஒரு திருவிளையாட்டினால் அம்மையாருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, கம்பையாற்றில் பெருவெள்ளம் வர அருளினர். ஆறு பெருக்கெடுத்து மேலெழுந்து வரக் கண்டு தம் திருக்கையால் தடுத்து நில்லாமையால், அம்மையார் வெருக்கொண்டு காதலால் முலைக்குவட்டொடு வளைக்கையால் நெருக்கி இறுகச் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். இறைவர் அதனை விரும்பியவராய், யானையை உரித்துப் போர்த்த தமது திருமேனி குழைந்து காட்டி முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்துகொண்டு அத்திருமேனி காட்டி வெளிப்பட்டருளினர். எல்லா உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி இறைவரருளை ஏத்திப் போற்றின. கம்பையாறு  வெள்ளந் தவிர்ந்து வணங்கியது. மணவாள நற்கோலங் காட்டி நின்ற இறைவனார், அம்மையாரை நோக்கி, "வேண்டும் வரம் கொள்க" என்றருள, அம்மையார், இறைஞ்சி நின்று, "இன்றைய என் பூசை இன்னும் முடிந்ததில்லையாதலின் அதனைக் குறை நிரம்பிடக் கொண்டருளல் வேண்டும்" ன்று விண்ணப்பிக்க, அதற்கு இறைவனார் “நம்பால் நின்பூசனை என்றும் முடிவதில்லை" என்றருளவே, அம்மையார் இறைவர்பால் வரம் கேட்கலாயினர். அவையாவன : - "இந்தப் பூசை என்றும் மாறாது நிலைத்திருக்கும்படி தேவரீர் மகிழ்ந்து கொண்டருளுதல் வேண்டும். இந்தப் பதியில் எல்லா அறங்களும் யான்செய்யும்படி அருளுதல்வேண்டும். திருவடிப் பிழைத்தல் ஒன்றொழிய இங்குள்ளவர் வேறு செய்வினை எதுவேயாயினும் மாதவப்பயன் கொடுத்தருளப் பெறவும் வேண்டும்" என்ற மூன்றுமே ஆம். எல்லா வுயிர்களின் பிறப்பையும் ஒழிக்கும் பேரருட் செல்வியாகிய அம்மையார் கேட்டருள, அவ்வாறே இறைவனார் அந்தப் பூசனையை விரும்பி வீற்றிருந்தும், இடையறாத அறங்களை யெல்லாம் வளர்க்கும் வித்தாக இகபரத்து இருநாழி நெல்லை அளித்தும், காஞ்சி வாழ்பவர் செய்த தீவினையும் தடையின்றி மெய்ந்நெறியடையச் செய்யும் தவங்களாகவும் வரங்களை மகிழ்ந்து தந்தருளினர்.

அவ்வாறே அம்மையார் நித்தமாகிய பூசனை செய்து கொண்டு உயிர்களிடத்து இல்லறம் பெருக்கும் கருணையினால் புண்ணியத் திருக்காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து முப்பத்திரணடு அறங்களையும் அளித்தருள்கின்றனர்.


107. பொன்மலரில் நறுமணம்

 


கற்பூர வல்லியொரு பாகர்செழுந்

     தண்டலையார் கடலேழ் சூழ்ந்த

நற்பூமி தனிற்பிறந்தோர் எல்லோரும்

     மக்களென நாட்ட லாமோ?

அற்பூரும் பண்புடையார் நற்குணமும்

     பண்பிலார் அழகும் காணின்

பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்

     பூவுமெனப் புகலல் ஆமே.


இதன் பொருள் ---


கற்பூரவல்லி ஒருபாகர் – கற்பூரவல்லியாகிய உமாதேவியாரைத் தனது திருமேனியின் வொரு பாகத்தில் கொண்டவரும், செழுந்தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த நற்பூமிதனில் – வளப்பம் மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரும் ஆன சிவபரம்பொருளின், எழுகடலால் சூழப்பெற்ற இந்த நல்ல நிலவுலகத்தில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ - தோன்றியவர் யாவரும் மக்கட்பண்பு உடையவர் என உறுதியாகக் கூறுதல் பொருந்துமோ?, அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் – உள்ளத்தில் அன்பு மிக்கு உள்ள நற்பண்பு கொண்டோரின் தன்மையும், பண்பு இலார் அழகும் -  மக்கட் பண்பு இல்லாதாரின் உடலழகும், காணின் - ஆராய்ந்தால், பொன்பூவில் வாசனையும் – பொன்னால் ஆன மலரிலே நறுமணமும், புன்முருக்கம் பூவும் – மணம் அற்ற புல்லிய முருக்கமலரும் போல இருக்கும், எனப் புகலல் ஆம் - என்று சொல்லலாம்.


     அற்பு – அன்பு. அன்புடைமையே மனிதப் பண்பு ஆகும். அன்பு தழைக்கும் உள்ளத்தினை உடைய மனிதர்களை பொன்னால் ஆன பூவில் நறுமணம் என்று புகழத்தக்கது ஆகும். அன்புடையாரின் உள்ளத்தைக் கூறிய ஆசிரியர், அன்பு அற்றவரின் உடலழகைக் கூறி, அது மணம் அற்ற புல்லிய முருக்கம் பூவினைப் போலப் பயன் அற்றது என்று கூறினார்.


இதையே குமரகுருபர அடிகள் வேறுவிதமாக, “நீதிநெறி விளக்கம்” என்னும் நூலில் கூறி உள்ளார். என்றும்  ஒருபடித்தாக வாடாமல் இருக்கின்ற மலரைப் "பொன்மலர்" என்றார். ஒருவர் கற்ற கல்வி எவ்வளவு பெரிய அளவினதாக இருந்தாலும், கற்ற நூலின் தரம் அறிந்து, நூற்பொருளை ஆராய்ந்து உணரும் உணர்வு இல்லையானால், அவர் கற்ற கல்வி பயன்றறதாகும். ஒருகால், உணர்ந்து இருந்தாலும், பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இல்லையானால், கற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை. ஏனவே, ஆராய்ந்த அறிவோடு, சொல்வன்மையும் இருக்குமானால், அது, பொன்னால் செய்யப்பட்ட மலருக்கு, நறுமணமும் பொருந்தி இருப்பது போல் ஆகும் என்று பின்வரும் பாடலை அருளிச் செய்தார்.


“எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து

உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும், - உய்த்து உணர்ந்தும்

சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்

பொன்மலர் நாற்றம் உடைத்து. “ --- நீதிநெறி விளக்கம்.


கல்வி அறிவு செயற்கை அறிவு. இயற்கை அறிவு என்பது கற்ற நூலின் பொருளை உய்த்து உணர்ந்து, சொல்லவேண்டிய இடம் அறிந்து, பிறருக்கும் எடுத்து உரைக்கும் வன்மையை உடையது. அப்படிச் சொன்னால், அது பொன்னால் ஆன மலர் நறுமணமும் பொருந்தியது போல் ஆகும். பொன்னால் ஆன மலர் எப்போதும் வாடாது. வாடாத மலரில் மணம் இருந்துகொண்டே இருக்கும்.

எனவே, "இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், கற்றது உணர விரித்து உரையாதார்" என்றார் திருவள்ளுவ நாயனார். தாம் கற்ற நூற்பொருளைத் தெளிந்து பிறருக்கும் பயன்படுமாறு விரித்துச் சொல்லமாட்டாதவர், மணம் அற்ற மலரைப் போன்றவர்கள்.

பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ, அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்று உடல் அழகை மதிப்பவர்கள் புல்லிய முருக்கமலர் போன்றவர்கள் என்றார் ஆசிரியர். முருக்கமலர் மணம் அற்றது. மலர்ந்து சில நேரத்திலேயே அது வாடிவிடும். அதை யாரும் விரும்பார்கள்.


46. பொருட்பற்று துன்பம் தரும்

“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே,

பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்.” -- நீதிவெண்பா


    துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம்.  அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே.  அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.


பாடல் 19


“உள்ளிடத்தான் வல்லையே, நெஞ்சமே! ஊழ்வினைகள்

கள்ளிடத்தான் வந்து கலவாமுன், -  கொள்ளிடத்தின்

தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்

தன்திருவாய்ப் பாடியான் தாள்.”


இதன் பொருள் ---

        ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - முன்செய்த ஊழ்வினைகள் உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்காக, தம்மை அறியாமலே வந்து இருந்து, வாழ்நாள் இறுதியில் உயிரைக் கொண்டு போவதன் முன்னே; கொள்ளிடத்தின் தென்திரு ஆப்பாடியான் - கொள்ளிடத் திருநதியின் தென்கரையில் உள்ள திருஆப்பாடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவரும்; தெய்வமறை நான்கினையும் தன் திருவாய்ப் பாடியான்தாள் - தெய்வத் தன்மை பொருந்திய வேதங்கள் நான்கினையும் தமது திருவாயினாலே பாடியவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருவடியை, நெஞ்சமே – நெஞ்சே! உள்ளிடத்தான் வல்லையே - நினைக்க வல்லாயோ? (நினைப்பாயாக)

உள்ளுதல் - நினைத்தல். உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. ஊழ்வினைகள் கள் இட வந்து கலவாமுன்– ஊழ்வினைகள், திருடுதல் போல, நம்மை அறியாதவாறு நம்மோடு பொருந்தி இருந்து, நம்மை அறியாமலே உயிரைக் கொண்டு போக. கள்ளம் செய்ய. திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். 

      திரு ஆப்பாடி - சோழ நாட்டு காவிரி வடகரையில் உள்ள திருத்தலம். மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது; சண்டேச நாயனார் பசுக்களை மேய்த்த இடமாயும், அங்கு இறைவர் வெளிப்பட்ட இடமாயும் உள்ளதால் இப்பெயர் பெற்றது.  இரண்டும் காவிரியின் பிரிவுகளாதலானும், காவிரியின் கிளையாதலாலும், மண்ணி, கொள்ளிடம் என்று உபசரிக்கப்பட்டது. 

        கும்பகோணம் - அணைக்கரை தடத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருப்பனந்தாள் அருகில் உள்ளது.  கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. தொலைவில் உள்ளது.  இறைவர் திருநாமம்,  பாலுகந்த நாதர், பாலுகந்தீசுவரர். இறைவியார் திருநாமம், பிருகந்நாயகி, பெரியநாயகி. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம்.

சண்டேசுவர நாயனார் வரலாறு: 

        திரு ஆப்பாடிக்கு அருகிலுள்ள திருச் சேய்ஞலூர் என்பது நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி முறுகி விளைந்ததனால், ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் ஒதுகிடைக்குப் புறப்பட்டார். அவ் வேளையில் அவ்வூர்ப் பசுக்களும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார்.  'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள்.  புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்' என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.  

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார்.  நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள், தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும்தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது.  மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார்.  திருமதில்கள் எழுப்பினார். கோபுரங்கள் வகுத்தார்.  சுற்றாலயங்கள் எடுத்தார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வந்தார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத் தீண்டினார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டி அருச்சித்தார்.  பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்பிக் கொள்வார். இவர் செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் அன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக் குறையாதபடி வழங்கி வந்தன.

இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள்  ஊரான் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று வணங்கி  விடைபெற்றுச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்து இருந்தான்.  விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி வந்து, ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார்.  சிவபெருமான் உமாதேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.

சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.

எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால், அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.

        வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தினம் தாளில் சூழ் திரு, வாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப வாரிதியே" என்று போற்றி உள்ளார்.


106. குங்குமம் சுமந்த கழுதை

 “பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ

     டுகள்சுமந்து பிதற்று வோனும்,

போரில்நடந் தறியாது பதினெட்டா

     யுதம்சுமந்த புல்லி யோனும்

ஆரணிதண் டலைநாதர் அகமகிழாப்

     பொருள்சுமந்த அறிவி லோனும்

காரியமொன் றறியாக்குங் குமம் சுமந்த

     கழுதைக்கொப் பாவர் தாமே.”


இதன் பொருள் ---


ஆர் அணி தண்டலைநாதர் அகம் மகிழாப் பொருள் சுமந்த அறிவு இலோனும் – ஆத்திமாலையைத் தரித்தவரும், திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருவுள்ளம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர் உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் – நூல்களின் சிறந்த பொருளை அறியாமல், அவற்றைத் தலைச் சுமையாகச் சுமந்து, பிதற்றிக் கொண்டு திரிகின்றவனும், போரில் நடந்து அறியாது பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன் அலுவல் ஒன்றையும் உணராமல் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம் ஆவர்.


      திருத் தண்டலை இறைவர் திருவுள்ளம்  மகிழாப் பொருள்கள் சிவசின்னம் அல்லாதவை. ‘குங்குமம் சுமந்த கழுதை' என்பது பழமொழி.


“கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால்

கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்

பழுது நான் உழன் றுஉள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன், எந்தாய்!

அழுது நீஇருந்து என்செய்தி மனனே!

அங்க ணாஅர னேஎன மாட்டா

இழுதை யேனுக்கு ஒர் உய்வகை அருளாய்

இடைம ருது உறை எந்தைபி ரானே!”


என்பது சுந்தரர் தேவாரம்.


இதன் பொருள் ---


என் அப்பனே!  திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற சிவபரம்பொருளே! கழுதையானது  குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர். அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேன் ஆயினேன்; `மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், ` அங்கணனே, அரனே` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியினை வழங்கியருளாய் .


வாலாயமாகக் கழுதை சுமந்து செல்வது அழுக்கு மூட்டையைத்தான். அதனால் அதற்குத் தாழ்வு ஏதும் இல்லை. உயர்ந்த குங்கும மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வேறுபாடும் தெரியாது. அதனால் அதற்கு உயர்வு ஏதும் உண்டாகாது. அதுபோலத்தான், நம்மில் பலரும் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இறைபணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற பணியின் பொருள் என்ன என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். இறைவனைக் குறித்துப் பாடப்படுகின்ற பாடல்களின் பொருளை உணராது ஓதுகின்றவர்கள், “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்னும் மணிவாசகத்தை ஓதிக் கொண்டுதான் இருப்பார்கள். இறைவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லுபவர்களிலும் பலரும் பொருள் தெரியாமல்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். கேட்டால், பொருள் தெரியாமல் சொன்னாலும் இறைவன் அருள் புரிவான் என்று சமாதானம் கூறுவார்கள். "கக்கத்தில் வையாதே, கருத்தில் வை" என்பது முதுமொழி..


"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு"                     -- நாலடியார்.


கண்ணில் காணும் புத்தகங்களை எல்லாம் வாங்குவர். புத்தகத்தை யாராவது தந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வந்து விடுவர். ஆனால் அவற்றைப் படித்துப் பயன் கொள்ளமாட்டார். வீடு நிறைய புத்தகங்களைத் தொகுத்து வைத்து இருப்பவர்கள் எல்லோரும் படித்துப் பயன் கொண்டுவர் என்று சொல்ல முடியாது. புத்தகங்களைப் பொருள் உணர்ந்து படித்துத் தானும் பயன் பெற்று, பிறரும் பயனுற எடுத்துச் சொல்பவர்கள் மிகச் சிலரே. 

புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும் என்பது கருத்து.


45. ஆபத்து வரும்போது செல்வமும் தொலையும்

“ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே,

ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால்! - ஆபத்து

வந்தால், அவளும் மருவாமல் எப்பொருளும்

அந்தோ உடன்போம் அறி.” -- நீதிவெண்பா


    ஒருவனுக்கு ஆபத்துக் காலம் வந்தால் அதனை நீக்க அருமையான செல்வம் வேண்டப்படும்.  திருமகள் உடன் இருப்பாளானால் ஆபத்து இல்லை. அந்த இக்கட்டான காலம் ஏன் வருகிறது எனின், இடுக்கண் நேரிட்டால் அத் திருமகளும் சேராமல், ஐயோ, எல்லாப் பொருள்களும் நில்லாது அவளோடு போய்விடும்.  இதனை நீ புரிந்துகொள்.


    (பூமாது - இலக்குமி.  மருவாமல் - சேராமல்.)


பாடல் 18


“இழவுஆடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி

விழவுஆடி ஆவி விடாமுன்னம், மழபாடி

ஆண்டானை, ஆரமுதை, அன்றுஅயன்மால் காணாமை

நீண்டானை, நெஞ்சே! நினை.”


இதன் பொருள் ---


    இழவு ஆடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி - உயிரினை இழக்கும் நிலை கருதிச் சுற்றத்தார்கள் எல்லாரும் கூடி, விழவு ஆடி ஆவி விடாமுன்னம் – பிணத்தின் மேல் விழுந்து அழுகின்ற நிலை உண்டாகும் முன்னரே, மழபாடி ஆண்டானை – திருமழபாடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள ஆண்டவரை, ஆரமுதை – உயிர்கட்கு நிறைந்த அமுதம் போன்றவரை, அன்று அயன் மால் காணாமை நீண்டானை – முன்னொரு காலத்தில் பிரமனும், திருமாலும் காணமுடியாதபடி நெருப்பு உருவமாய் மேலும் கீழும் நீண்டவரை, நெஞ்சே நினை – நெஞ்சமே நினைப்பாயாக.


        திரு மழபாடி, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். இத் திருத்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.  அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். இறைவர் திருநாமம், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேசுவரர். இறைவியார் திருநாமம், சுந்தராம்பிகை, அழகம்மை. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர் ஆகிய தேவார மூவர்முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம்.


இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை புருடாமிருகம் பிரமலோகத்தில் இருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிட்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரமாவால் எவ்வளவு முயன்றும் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.


இதையே திருநாவுக்கரசர் தமது பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரத்தூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது திருப்பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.


இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிட்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம்தோறும் நடைபெறுகிறது. திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.


வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே" என்று போற்றி உள்ளார்.


105. இல்லது வாராது - உள்ளது போகாது

 


“வல்லமையால் முடிவதுண்டோ? தலைகீழாய்

     நின்றாலும் வருவ துண்டோ?

அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்

     தன்செயலால் ஆவதுண்டோ?

புல்லறிவால் மயங்காமல், தண்டலையார்

     அடிபணிந்து, புத்தி உண்டாய்,

இல்லது வாராது! நமக் குள்ளதுபோ

     காதெனவே இருக்க லாமே.”


இதன் பொருள் ---

        வல்லமையால் முடிவது உண்டோ - நமது ஆற்றலாலே எந்த செயலும் முடியுமா? தலைகீழாய் நின்றாலும் வருவது உண்டோ - எவ்வளவு முயன்றாலும் நமக்கு வாராதது வருமா?, அல்லது - மேலும், அவன் செயலே அல்லாமல் தன் செயலால் ஆவது உண்டோ - இறைவன் ஆணைப்படியே நடக்குமன்றி ஒருவன் முயற்சியால் மட்டும் ஏதாவது முற்றுப் பெறுமா? (ஆகையால்), புல்லறிவால் மயங்காமல் - சிற்றறிவினாலே சிந்தை கலங்காமல், தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, புத்தி உண்டாய் – நல்லறிவு உண்டாகப் பெற்று, நமக்கு இல்லது வாராது - நமக்கு (ஊழினாலே) வரத் தகாதது கிடைக்காது, உள்ளது போகாது - (ஊழினாலே) வரக் கூடியது வீணாகாது, என இருக்கலாம் - என்று முயற்சியுடன் மட்டும் இருத்தல் நலம்.


    ‘ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று - சூழினும் தான்முந் துறும்' என்ற திருவள்ளுவ நாயனார், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்றும் அருளிச் செய்துள்ளதால், முயற்சியை வலியுறுத்திக் கூறப்பட்டது. ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதனாலே பயனை எதிர்பாராமல் முயற்சியைச் செய்க என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும். ‘இல்லாதது வராது உள்ளது போகாது' என்பது சத்காரிய வாதம். 

இக் கருத்து திருவள்ளுவ நாயனாரால் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. திருக்குறளில் அறுத்துப்பாலில் ஊழ் என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஊழ் வசத்தால் தமக்கு உரியவை அல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாது போகும். ஊழ்வசத்தால் தமது உடைமையாக வேண்டிய பொருள்களை வெளியில் கொண்டு போய்ப் போட்டாலும், அவை தம்மை விட்டுப் போகமாட்டா" என்கின்றார் நாயனார். அனுபவிக்கும் ஊழ் உள்ளவன் பொருளைக் காப்பாற்ற வேண்டுவது இல்லை, அது அவனை விட்டு நீங்காமல் இருக்கும். அனுபவிக்கும் ஊழ் இல்லாதவன், எவ்வளவுதான் வருந்திக் காத்தாலும், பொருளானது அனுபவிப்பதற்கு இல்லாமல் போய்விடும்.

“பரியினும் ஆகாவாம் பால் அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.” -- திருக்குறள்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண் ஆக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.” --- நல்வழி.

இதன் பொருள்  ---

ஊழால் வரக் கூடாதவைகள், பரிந்து அழைப்பினும் வாராவாம். ஊழால் வரக் கூடியவை, போயிடுங்கள் என வெறுப்பினும், போகாவாம். இவ்வுண்மை அறியாமல் இருந்து ஏக்கமுற்று, மனம் புண்ணாகும்படி அவற்றைத் தாம் நெடுந்தூரம் சிந்தித்து, மாண்டு போவதே மனிதர் தொழிலாக உள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கது அன்று.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினை உலந்தக் கால். “ --- நாலடியார்.

இதன் பொருள் ---

        பொருளானது, பிறர்க்குக் கொடுத்துத் தானும்  நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலும்மேலும் திரளும், நல்வினை முடிந்துவிட்டபோது, அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும்,  இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.


“வளம்பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

கார்எனச் செய்தாரும் இல்.” ---  நாலடியார்.

இதன் பொருள்  ---

செழுமையாக வாழ விரும்பாதவர் உலகில் ஒருவரும் இல்லை. ஆனால் இன்ப நுகர்வு என்பது அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளது.  விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல.


“ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.” ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

        மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தரும் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே,  மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாது ஒழிதல் இல்லை. (இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும் என்பது கருத்து)


“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல். ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

உயர்ச்சியை உடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்து எய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு, செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்து எய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை.  எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவது ஒன்றில்லை.


“கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேல் சென்றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது." ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகால் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டு வந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாது ஒழியினும், அடைதற்கு உரியவாய் நின்ற நன்மைகள் ஒருவனை அடையாது நிற்றல் இல்லை.

கழுமலம் : இது சோழநாட்டு உள்ளது ஓர் ஊர். கருவூர் : இது சேரநாட்டு உள்ளதோர் ஊர். இவ்விரண்டும் வெகு தொலைவில் இருந்தாலும், ஊழ் கருவூரில் உள்ளவனை அரசனாக்கியது. 

கரிகாலன் நெடுந்தொலைவின்கண் இருந்து விரும்பாது இருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. சீகாழியை ஆட்சிசெய்தான் இறந்து படவே, அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு அவ்யானை யாரைக் கொண்டு வருகின்றதோ அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ் யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது என்பதாம்.


'ஆகுவது ஆகும், காலத்து அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 

                            ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்.

 இதன் பொருள் ---

எக்காலத்தும் அழியாது வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது  ஆகியே  தீரும். அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும்.  அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து  போயே தீரும். குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர்? துன்பப்படாமல் எம்மைக் குறித்து இரங்கலையாய்ச் செல்வாய்.

நடப்பதை ஏற்கும் பக்குவம் பெற்ற மனிதனாக கும்பகருணன் விளங்குகிறான். நடைமுறை உலகில் வாழ்பவர்க்கு இத்தகைய மனநிலை துன்ப  நீக்கத்துக்கு உறுதுணையாக அமையும் என்பது குறிக்கத்தக்கது. 


44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம்,

பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும்

மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப்

பவனத்தோர்க்கு இல்லை பயம்.” -- நீதிவெண்பா


தமக்கேற்ற தொழிலைப் பொறுப்போடு செய்துகொண்டு இருப்பவர்களுக்கு உண்டாகின்ற பஞ்சம் எதுவும் இல்லை.  அன்போடு தெய்வத்தை வழிபாடு செய்கின்றவர்களுக்குத் தீவினை இல்லை.  சிறிதும் பேசாமல் மௌனமாக இருப்பவர்களுக்கு வரக்கூடிய கலகம் ஒன்றும் இல்லை. கண் இமைத்தல் இல்லாத தேவர்களுக்கு அச்சமே இல்லை.


(பற்று செபம் - அன்புடைய வழிபாடு.  துஞ்சா - உறங்காத, கண் இமைத்தல் இல்லாத.  பவனத்தோர் - தேவர்.  "இமையாரின் வாழினும் பாடிலரே" --- திருக்குறள்.)


104. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.

 


“பார்க்குள் அறிவிருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும் பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும்அருங் கதியுதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்

     பருந்தாகா துண்மை தானே.”


இதன் பொருள் ---

        ஆர்க்கும் அருங்கதி உதவும் தண்டலையாரே - எல்லோருக்கும் நல்ல நிலையை அருளுகின்றவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ளவரும் ஆன சிவபரம்பொருளே!  ஊர்க்குருவிதான் ஆகாயத்தில் உயரப் பறந்தாலும் பருந்து ஆகாது - ஊர்க்குருவி வானத்தில் உயரமான தொலைவில் பறந்தாலும் அது பருந்தின் மதிப்பை அடைய முடியாது, உண்மை தானே - இது உண்மையே ஆகும்; (ஆகையால்), அறிவு இருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் – அறிவு இருந்தாலும், இருக்கின்ற அறிவைப் பெருக்கிக் கொள்ள நூல்களைக் கற்றாலும், நூற்பொருளைக் கற்றார் வாய்க் கேட்டாலும், பணிந்து வேதமார்க்கமுடன் நடந்தாலும் – பணிவுடன், வேதநெறியில் ஒழுகினாலும், பார்க்குள் சிறியவர்க்குப் பெரியவர் தம் மகிமை உண்டோ - உலகிலே கீழ்மக்களுக்குச் சான்றோருக்கு உரிய சிறப்பு உண்டாகுமோ?

        “உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்பது பழமொழி. "சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் – அங்கண் உலகில் சிறியோர் தாம் அடங்கி நடந்து கதி அடையமாட்டார்” என்று முன்னே ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளது காண்க. “வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ?” என்பது குமரேச சதகம்.


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.                ---  மூதுரை


எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை.               ---  மூதுரை.


வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.        --- திருக்குறள்.


பாடல் 17

 "கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு, நாறி

ஒழிந்தது, உடல்இரா வண்ணம் - அழிந்தது

இராமல்,ஐயா, கொண்டுபோ என்னாமுன், நெஞ்சே!

சிராமலையான் பாதமே சேர்."

இதன் பொருள் ---

        கழிந்தது நென்னெற்று கட்டுவிட்டு - நல்ல நெற்றுப்போல வறண்ட உடலானது நேற்று உயிர் போன பின்னர் கட்டுவிட்டுக் கழிந்தது, நாறி ஒழிந்தது உடல் – உடலானது அழுகும் பதமாய் நாறுகிறது. அது இராவண்ணம் – இனி வைத்து இருக்க முடியாதபடி, அழிந்தது இராமல் – அழிந்து போன உடலை இன்னமும் வீட்டில் வைத்து இராமல், ஐயா – ஐயா!, கொண்டு போ என்னாமுன் -  எடுத்துக்கொண்டு போ என்று சொல்லாத முன்னே; நெஞ்சே – நெஞ்சமே! சிராமலையான் பாதமே சேர் -  திருச்சிராமலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளினது திருவடிகளை இடைவிடாது நினைப்பாயாக.


        நெற்றுப் பதம் வந்த பிறகு காய்கள் மரத்தில் இருந்து தன்னால் உதிர்வது போல, வற்றிப் போன உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றது. நேரம் செல்லச் செல்ல பிணமானது அழுகி நாற்றம் எடுக்கும். உறவினர்களைப் பார்த்து, ஐயா, இனிச் சிறிது நேரமும் வைத்து இருக்காமல், அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் சொல்லுவார்கள். இந்த நிலை வந்து சேராத முன்னம், திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவன் திருவடிகளை எப்போதும் நினைப்பாயாக என்று உபதேசம் செய்யப்பட்டது. 

        சேர்தல் என்னும் சொல்லுக்கு இடைவிடாது நினைத்தல் என்றும் பொருள். எனவே, திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவாயாக என்பதோடு, இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பாயாக என்பதாகவும் பொருள் கொள்ளலாம். “மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்” என்னும் திருக்குறளில், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் என்று பரிமேலழகர் உரை கண்டுள்ளார் என்பதை அறிக.

        இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. உடம்பானது,  இரதம்,  உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை,  சுக்கிலமாகிய விந்து என்னும் ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. மாயையின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடம்பு தோன்றி, நின்று அழியும் தன்மை உடையது. இது  நெடுநாளைக்கு நிற்பது அல்ல. 

 

“என்பினால் கழிநிரைத்து இறைச்சிமண் 

     சுவர் எறிந்த இதுநம் இல்லம்,

புன்புலால் நாறுதோல் போர்த்து, பொல்- 

     லாமையால் முகடு கொண்டு,

முன்பு எலாம் ஒன்பது வாய்தலார் 

     குரம்பையின் மூழ்கி டாதே

அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம் 

     மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.”. --- திருஞானசம்பந்தர்.

 

“புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடி

ஒழுக்குஅறா ஒன்ப துவாய் ஒற்றுமை ஒன்றும்இல்லை

சழக்குஉடை இதன்உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய

அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.”   --- அப்பர்.

                                        

“கால்கொடுத்து இருகை ஏற்றிக்

     கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து 

தோல்படுத்து உதிர நீரால்

     சுவர்.எடுத்து இரண்டு வாசல் 

ஏல்வுடைத்தா அமைத்து அங்கு 

     ஏழு சாலேகம் பண்ணி 

மால்கொடுத்து ஆவி வைத்தார்

     மாமறைக் காடனாரே.”                 --- அப்பர்

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"  --- திருப்புகழ்.

                                                                                                            

“தோல்,எலும்பு,சீ,நரம்பு,பீளை,துன்று கோழை,பொங்கு

     சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து,நான் மெலிந்து

     சோரும், இந்த நோய் அகன்று,...... துயர்ஆற,” --- திருப்புகழ்.

 

“தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற

     தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு

     வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்..” --- திருப்புகழ்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய, 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.”  – திருப்புகழ்.


“தோலால் சுவர்வைத்து,நால்ஆறு காலில் சுமத்தி, இரு

காலால் எழுப்பி,வளைமுதுகு ஓட்டி, கைந் நாற்றி, நரம்-

பால் ஆர்க்கை இட்டு,தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்,

வேலால் கிரிதொளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே.” - கந்தர் அலங்காரம்.


    திருச்சி என வழங்கும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்துள்ளது. தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. 

    இது பற்றி வழங்கும் ஒரு கதை உண்டு. ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானை வணங்க ஆதிசேடனும் வாயுவும் வந்தனர். ஆதிசேடன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேடன் திருக்கயிலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச திருக்கயிலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இதன்படி, திருச்சிராப்பள்ளி மலை தென்கயிலாயம் என்ற பெயர் பெற்றது.

திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென்கயிலாயம் என்றும் போற்றப்படும் சிறப்பை உடையது.

இத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியவள் இரத்தினாவதி. பேறு காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவளுடைய தாய் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த தாயால் இக்கரைக்கு வந்து இரத்தினவதியைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தனது அடியவளின் துயரத்தைப் போக்கி உதவி புரிய இறைவன் அவளது தாய் உருவில் வந்து சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனால், இறைவன்  திருப்பெயர் தாயுமானசுவாமி என்று வழங்கப்படுகின்றது. பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த, “நன்றுடையானை தீயது இல்லானை” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் சுகப் பிரசவம் ஆகும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. அது உண்மையும் கூட. அன்பர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளுகின்றனர். கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதைச் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு, பிறகு அங்கு வரும் அடியவர்களுக்கு வாழைப்பழங்களை வழங்குவார்கள்.

திருஞானசம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் செய் அராப்பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே" என்று போற்றி உள்ளார். 


பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உற்பாதப் பூதக் காயத்தே (பொது)


முருகா! 

மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


உற்பா தப்பூ தக்கா யத்தே

     யொத்தோ டித்தத் ...... தியல்காலை


உட்பூ ரித்தே சற்றே சற்றே

     யுக்கா ரித்தற் ...... புதனேரும்


அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ

     லப்பா வித்துத் ...... திரிவேனுக்


கப்பா சத்தா லெட்டா அப்பா

     லைப்போ தத்தைப் ...... புரிவாயே


பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா

     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்


புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்

     பொட்டா கக்குத் ...... தியவேலா


முற்பா டப்பா டற்றா ருக்கோர்

     முட்கா டற்கப் ...... பொருளீவாய்


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உற்பாதப் பூதக் காயத்தே

     ஒத்து ஓடித் தத்து, ...... இயல் காலை


உள் பூரித்தே, சற்றே, சற்றே,

     உக்காரித்து அற் ...... புதன் நெரும்


அற்பாய் இல் தாய், நிற்பாரைப் போ-

     லப் பாவித்துத் ...... திரிவேனுக்கு,


அப் பாசத்தால் எட்டா அப்பா-

     லைப் போதத்தைப் ...... புரிவாயே.


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்கா-

     கப் போய் முட்டிக் ...... கிரிசாடி,


புக்கு ஆழிச் சூழ் கிட்டாகிச் சூர்

     பொட்டாகக் குத் ...... திய வேலா!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஒர்

     முள் காடு அற்கப் ...... பொருள் ஈவாய்!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக் கிரி சாடி --- அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, 


புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா ---கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!


        முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        சுத்தா --- தூயவரே!


        முத்தா --- பற்று அற்றவரே!


        முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


உற்பாதம் பூதக் காயத்தே ஒத்து --- பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து,


        ஓடி --- பொருளை ஒடித் தேடி வைத்து,


        தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, 


அற்புதன் நேரும் அற்பாய் --- கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு,


        இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு, 


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---அந்தப் பாசங்களால் எட்ட முடியாது, அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


பொழிப்புரை


        அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்துக் கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தி நிலைக்கு அதிபரே!


        ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        தூயவரே!


        பற்று அற்றவரே!


        உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து, பொருளை ஒடித் தேடி வைத்து, மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு, இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு,  அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல், அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


விரிவுரை


உற்பாதம் பூதக் காயத்தே --- 


உற்பாதம் – கொடுமை, தீ நிமித்தம், பின்வரும் தீமைகளை முன் அறிவிக்கும் குறி.

பூதக் காயம் – ஐந்து பூதங்களின் கூட்டுறவால் உண்டானது இந்த உடம்பு.

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்

          ஆகின்ற ஆக்கை, நீர் மேல்

அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்

          அறியாத காலம் எல்லாம்

புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே

          போந்த நெறி என்று இருந்தேன்,

பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை

          போனவழி தெரியவில்லை..         --- தாயுமானார்.


“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவம் அலால், உடல் ஒன்று எனல் ஆமே?” -- திருமந்திரம்.

    சோற்றின் சத்து, இரத்தம், மாமிசம், தோல், கொழுப்பு, பொருந்திய எலும்பு, நிணம், மூளை, பரவிய இந்திரியம் ஆகிய இவற்றின் காரியத்தினுல் அமைந்தது. உடம்பின் உருவம் இவற்றைத் தவிர்த்து வேறு என்அ கூறமுடியுமோ? முடியாது.  நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாகிய பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.

    இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.  அந்த உயிர் அறிவு விளக்கம் பெறுவதற்காக இறைவன் தனது பெருங்கருணையால் வைத்தவையே அந்தக் கரணங்கள் என்னும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை ஆகும்.

    இந்த உடம்பு “வேற்று விகார விடக்கு உடம்பு” என்கிறார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பு ஆன்மாவின் வேறு. இந்த உட்முபே ஆன்மா அல்ல. ஆன்மா குடியிருப்பதற்கு இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது. எனவே, “வேற்று உடம்பு”. இந்த உடம்பு தோன்றியபோது இருந்தபடியே இராது. மாற்றத்தை அடைந்துகொண்டே இருக்கும். எனவே, இதை “விகார உடம்பு” என்றார். விடக்கு – ஊன். இது ஊன் உடம்பு. இந்த உடம்பு விகாரம் அடைந்து அடைந்து பின்னர் அழியக் கூடியது. இந்த உற்பாதத்தை உடம்பில் உண்டாகும் விகாரங்கள் அறிவிக்கும்.


தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- 

தத்து – சாதகத்தின்படி நேரும் ஆபத்து, மனக்கவலை.

பூரித்தல் - நிறைவு அடைதல். களித்தல்.

    ஒருகால் உள்ள நிறைவும், பூரிப்பும், ஒருகால் மனக்கவலையும் நிறைந்ததே இந்த வாழ்க்கை ஆகும். சற்றே சற்றே பூரிக்கும் சற்றே சற்றே உக்காரிக்கும்.  இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளைநிலமாகவும் உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டும். முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.


“வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,

புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,

மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    

பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து         

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.”



“சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்று ஏறப் பார்த்து,சிலபணி ...... விடை ஏவி,

 சில் தாபத்து ஆக்கைப் பொருள்கொடு

     பித்துஏறி,கூப்பிட்ட அவர் பரிசு

          எட்டாமல்,தூர்த்தத்து அலைபடு ...... சிறுகாலை,

 

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு

     பற்று ஆயப் பூட்டுக் கயிறுகொடு,

          உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு ...... தடுமாறி,

 உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி,

     காய் அத் தீப் பட்டு எரி உடல்

          உக்கேன், மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே?”   --திருப்புகழ்.



அற்புதன் நேரும் அற்பாய் --- 

அற்புதன் – இறைவன். “அற்புதன் காண்க, அநேகன் காண்க” என்கிறது மணிவாசகம்.

அற்பு – அன்பு. அன்பு என்பது உயிருக்கு உள்ள பண்பு. “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது பொய்யாமொழி.


இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- 

இல் - இல்லறம்.

தாய் - பொருந்தி இருத்தல்.

உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், அன்பு உடையவனைப் போலப் பாவித்து, இல்லறத்தில் பொருந்தி இருத்தல் கூடாது. தன்னைச் சார்ந்தவர்களிடத்திலேயே அன்பைக் காட்டாத வன்மனம் படைத்தவன், இறைவனிடத்து அன்பைக் காட்டுவது பாவனையாகத் தான் இருக்க முடியும்.


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---

பாசம் – ஆசை, அன்பு, கயிறு, தளை, மும்மலம், ஆணவமலம், பற்று. 

பாசமாகிய பற்று நம்மிடத்தே குடிகொண்டு உள்ளது. அந்தப் பாசமாகிய பற்றை அறுக்கத் துணை புரிவது இறைவன் திருவருளே. “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்பது மணிவாசகம்.

உண்மை அறிவு என்னும் மெய்யறிவு விளங்கினால், அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அடையலாம். பாச அறிவினால் அடைய முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அறியும் உண்மை அறிவைப் “போதம்” என்றார். அதனை இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து அருள்புரிய வேண்டுகிறார்.


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- 

இந்த வரலாறு பொய்யாமொழிப் புலவருக்கு வேடன் வடிவில் வந்து முருகப் பெருமான் திருவருள் புரிந்தததைக் குறிக்கும்.

பொய்யாமொழிப் புலவர் வரலாறு 

      சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருந்தார்.  அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து பொய்யாமொழிப் புலவர் தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

       பொய்யாமொழிப் புலவர்  தொண்டை மண்டலத்தில் சைவவேளாளர் குடியில் தோன்றியவர். இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

      ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார். வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார். பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணி, மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த கொடிய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றி, ‘இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார் பொய்யாமொழிப் புலவர். அப்போது, ‘நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன்  "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் வேடனாக வந்த முருகவேள். "தெரியும்" என்றார் புலவர்.   முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல் பாடுக"  என்று கூறினார். புலவர் உன் பெயர் யாது எனக் கேட்டார். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவில் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார்.  இந்தப் பாலையைப் சிறப்பித்து “நல் தாய் இரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக என்றார் வேடனாக வந்த வேலவர். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"


என்னும் பாடலைப் பாடினார் பொய்யாமொழிப் புலவர்.

 

     இப் பாடலைக் கேட்ட முருகவேடன்,   "இச் செய்யுளில் பொருள் குற்றம் உள்ளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோ?  நான் பாடுகிறேன். கேட்டிடுக" என்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

      அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்று கூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  வேட உருவில் வந்துள்ளது  கந்தக் கடவுளே எனத் துணிந்து, தமது பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலத்தைக் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

“முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”     --- (பத்தித்தரள) திருப்புகழ்.

                                                                              

"பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்து, எனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”            --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.


கருத்துரை


முருகா! மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும்,

ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே!

மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில்

இன்பு ஆரும் சீதளம் ஆமே.”


சித்திரம் போன்ற பெண்ணே அல்லிக் குளத்தில் உள்ள நீரும், ஆலமரத்தின் நிழலும், கடப்பைக் கல் பதித்த வீடும், அம்பு போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் இளங்கொங்கையும், மென்மையான குளிர்ச்சி பொருந்திய காலங்களில் வெப்பத்தைக் கொடுக்கும்.  வெப்பமான காலத்தில் இன்பம் நிறைந்த குளிர்ச்சியைத் தரும்.


        (வாவி - குளம்.  வடநிழல் - ஆலமர நிழல்.  பாவகம் - பாவு அகம்.  ஏ- அம்பு.  சீதம் - குளிர்ச்சி.)


பாடல் 16

 


“இட்ட குடிநீர் இருநாழி ஒர்உழக்காச்

சட்டஒரு முட்டைநெய் தான்கலந்து அட்ட

அருவாய்ச்சா றுஎன்றுஅங்கு அழாமுன்னம் பாச்சில்

திருவாச்சி ராமமே சேர்.”


இதன் பொருள் ---


        இட்ட குடிநீர் – மருந்துப் பண்டங்களைக் கூட்டிய குடிநீரில், சட்ட - செம்மையாக, ஒரு முட்டை நெய்தான் கலந்து – ஒரு சிறிய கரண்டி அளவுக்கு விளக்கெண்ணையைக் கலந்து, இருநாழி ஓர் உழக்கா – இரண்டு கால்படி நீரானது ஒரு கால்படி அளவுக்குச் சுருங்கும் அளவில், அட்ட அருவாய்ச் சாறு – அடுப்பில் வைத்துச் சுவறக் காய்ச்சி எடுக்கப்பட்ட அரிய கசாயச் சாற்றை, என்று – இதனைக் குடியுங்கள் என்று கொடுத்து, அங்கு அழா முன்னம் – அங்கே கூடியுள்ளவர்கள் அழும் நிலை வருவதற்கு முன்பாகவே, பாச்சில் திரு ஆச்சிராமமே சேர் – திருப்பாசிலாச்சிராரமம் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, அங்கு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வழிபட்டு உய்வாயாக.


        நாழி, உழக்கு என்பது அக்கால முகத்தல் அளவைகள். ஒரு முட்டை - முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. நெய் – நெய்ப்புத் தன்மை உள்ளது நெய் எனப்படும். இங்கே விளக்கெண்ணையைக் குறித்து வந்ததாகக் கொள்ளலாம். அருவாய்ச் சாறு – அரிய சாறு, கசாயம். என்று – நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரை எந்து உபாயத்தினாலாவது காப்பாற்ற எண்ணி, சுற்றி உள்ளவர்கள், இந்தக் கசாயத்தைக் குடியுங்கள் என்று அழுதுகொண்டே தருவார்கள். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே இறைவனை வழிபட்டு உய்தல் வேண்டும்.


        திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருத்தலம், திருச்சி-சேலம் வழித தடத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம். திருவாசிராமம் என்பது மருவி, இன்று திருவாசி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.


        இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயினால் பீடிஇக்கப்பட்டாள். மணி, மந்திர ஔடத முறைகளால் முயன்றும் நோய் தீராவில்லை. கொல்லி மழவன் சைவ வழி வந்தவன். ஆதலால், சிவசந்நிதி முன்னர் தனது அருமை மகளைக் கிடாத்தினான். அவ்வேளையில் திருஞானசம்பந்தர் வருகையைக் கேள்வியுற்ற கொல்லிமழவன், நகரை அலங்கரித்துப் பிள்ளையாரை எதிர்கொண்டு, அவர்தம் சிவிகையின் முன் விழுந்து வணங்கினான். பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார்.  அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுள் சென்றார். அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன இது?" என்று கேட்டார். கொல்லிமழவன் திருஞானசம்பந்த வள்ளலாரை வணங்கி, "இவள் அடியேன் புதல்வி. இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பீடித்து இருக்கிறது. அந் நோய் மணி, மந்திர, மருந்துகளால் தீரவில்லை. இவளைச் சிவசந்நிதி முன்னே கிடத்தினேன்" என்றான். ஆளுடைய பிள்ளையார் ஆகிய திரலுஞானசம்பந்தர், திருவருளைச் சிந்தித்து, "துணிவளர் திங்கள்" என்று எடுத்து, "மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று பாடியருளினார். உடன் அக் கன்னியும் பிணி தீர்ந்து எழுந்தாள். கொல்லிமழவன் பெருமகிழு எய்திப் புதல்வியோடும் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள் செய்து அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரை வரதீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இப் பெயர் வழங்கக் காரணமாக ஒரு வரலாறு உள்ளது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. சுந்தரர், "இவர் அல்லாது இல்லையோ பிரானார்?" என்று "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்தின் கடைசி பாடலில் "திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று பாடிப் பொன் பெற்றார். இது பெரிய புராணம் நமக்கு அறிவுறுத்துவது.


வழக்கம் போலவே, சில தலங்களுக்கு உள்ள செவிவழிச் செய்தியும் உண்டு. அது வருமாறு, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், திருமால் அவருடன் வந்ததையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரை வரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.


இத் திருத்தல இறைவரை வழிபட்டு, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் தீராத நோய் தீரும் என்பது அடியவர்களின் நம்பிக்கை.


103. முலைமீது கை வைத்த முறைமை

‘இதுகருமம், இதனாலே இதை முடிப்பாய்!'

     எனத் தொழிலை யெண்ணிச் செய்தால்

அதுகருமம் பாராமல், திருடியும் அள்

     ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்

மதியணியும் தண்டலையார் வளநாட்டில்

     நீராடும் மாதர் தங்கள்

முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது

     கையிட்ட முறைமை தானே.


இதன் பொருள் ---


    மதி அணியும் தண்டலையார் வளநாட்டில் – பிறைச்சந்திரனைத் திருச்சடையில் முடித்துள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரமத்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில், இது கருமம், இதனாலே இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இதுதான் உனக்குள்ள செயல்; இந்த வழியில் இதனைச் செய்திடு' என்று விதிக்கப்பட்ட ஒரு செயலை எண்ணிச் செய்தால்,  அது கருமம் – அது செம்மையாக முடியும். பாராமல் – அந்த வழியில் சிந்தித்து முயன்று செயல்ப்படுப் பொருளை ஈட்டாமல், திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் – பிறர் பொருளைக் கவர்ந்தும், எடுத்தும், மாறுபானாகவும், வஞ்சகமாகவும் செயல்களைச் செய்து திரிவது எல்லாம், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச் சொன்னால் - நீரில் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச் சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே – முதுகைத் தேய்ப்பது தொடங்கி, வஞ்சகமாக முலைமீது கையை வைத்த செயலாக முடியும்.


      புரட்டு – மாறுபாடு, வஞ்சகம். புரட்டரிடத்திலே ஒரு தொழிலைக் கொடுத்தால்,  அதைப் பலவகையிலும் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக் கொள்ள முயன்று கேட்டினைத் தேடிக் கொள்வர்.


102. கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்

     உபகாரம் தருமம் செய்து

கொண்டபொருள் விலைவாசி காணிதே

     டிக்கோடி கொடுப்ப தல்லால்

வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி

     அநியாய வட்டி வாங்கிக்

கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக்

     கெடுக்குமிது கருமந் தானே.”


இதன் பொருள் ---


தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, தவம் தானம் உபகாரம் தருமம் செய்து கொண்ட பொருள் - தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி காணி கோடி தேடிக் கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும் கோடியாகத் தேடிக் கொடுக்குமே அல்லாமல், வண்டருமாய் – (இறைவனுக்கு ஏவல் செய்யாது) பிறருக்கு ஏவல் செய்வோராக வாழ்ந்து, ஒன்று பத்து விலை கூறி – பொருள்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லியும், அநியாய வட்டி வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை வாங்கிச் சிக்கனமாகச் சேர்த்து வைத்த பொருளானது, கண்ணை அறக் கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் - இதுதான் உலகில் நடப்பது.


விளக்கம் ---

 

வாசி – வேறுபாடு. பொருளுக்கான விலையிலே உயர்வு, தாழ்வு. பொருள் வணிகம் செய்யும்போது ஒன்றுக்குப் பத்தாக விலைகூறிப் பொருளைக் குவிப்பது கூடாது. அநியாய வட்டிக்கு விட்டுப் பொருளைச் சேர்ப்பதே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்வோரை, “வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர்” என்கிறார் திருமூல நாயனார்.


மனிதனுக்குப் பொருளானது அவன் செய்யும் சிவபுண்ணியம் காரணமாக, இறைவன் திருவருளால் இயல்பாகவே வந்து சேரும். தான தருமங்களைச் செய்து வாழ்வோருக்கும் இறையருளால் பொருள் வந்து குவியும் என்பது காட்டப்பட்டது. “இறைக்கிற கிணறு ஊரும், இறைக்காத கிணறு நாறும்” என்பார்கள். பிறருக்குப் பொருளைக் கொடுப்பதனால், தமது செல்வம் குறைந்து விடும் என்று எண்ணுவது அறியாமை. ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமே பசித்தவன் வயிறுதான் என்பார் திருவள்ளுவ நாயனார். “அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி” என்பது திருக்குறள். “இரப்பவர்க்கு ஊய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்” என்பது அப்பர் தேவாரம். 


“இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக்

கரப்பவர் கண்டு அறியார் கொல்லோ? - பரப்பில்

துறைத்தோணி நின்று உலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தோறும் ஊறும் கிணறு.”. – பழமொழி நானூறு.


கடலில் உள்ள துறையில், தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரை உடைய கடல் நாடனே! தன்னிடம் வந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வமு குறைவுபடும் என்று எண்ணி, ஈயாது மறைப்பவர்கள், இறைக்கும் தோறும் நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்து அறியாதவர் போலும்.


எனவே, பொருளைச் சேர்த்து வைப்பதோடு, அது மேலும் வளரும் அருள்வழியை விடுத்து, தீயவழியில் ஒன்றுக்குப் பத்தாகப் பொருளுக்கு விலை கூறியும், அநியாய வட்டிக்குப் பொருளைக் கொடுத்தும் வாழ்வது கூடாது என்று அறிவிக்க, “கடும் தேட்டு, கண்ணை அறக் கெடுக்கும்” என்று சொல்லப்பட்டது.  தேட்டு – சம்பாத்தியப் பொருள். கண்ணைக் கெடுக்கும் – நல்லறிவை மழுங்கச் செய்து வாழ்வைக் கெடுக்கும்.


பாடல் 15

“அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்

குஞ்சி வெளுத்து,உடலம் கோடாமுன், - நெஞ்சமே!

போய்க்காடு கூடப் புலம்பாது பூம்புகார்ச்

சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.”


இதன் பொருள் ---

    அஞ்சனம் சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய் - மைதீட்டிய கண்களை உடைய பெண்கள் அருவருக்கும் அந்த நிலையில், குஞ்சி வெளுத்து - மயிர் நரைத்து; உடலம் கோடாமுன் - உடல் வளைந்துபடா முன்னமே; போய் காடு கூட – சுடுகாடு போய்க் கூடும் நிலை வருதலால், புலம்பாது – அந்நிலையை எண்ணி மனக் கலக்கம் கொள்ளாமல், பூம்புகார்ச் சாய்க்காடு சார்ந்து கைதொழு நீ – பூம்புகார் என்னும் நகரை அடுத்து உள்ள திருச்சாய்க்காடு என்னும் திருத்தலத்தில் திருகோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளைச் சார்ந்து கைதொழுது நீ வாழ்வாயாக.

விளக்கம் ---

    அஞ்சனம் – மை. அஞ்சனம் சேர் கண்ணார் – மை தீட்டிய கண்களை உடைய பெண்கள். மனைவி முதலானவர்களைக் குறிக்கும். நோயால் வருந்தி நொடிந்து கொண்டு இருக்கும்போதே அன்பாக இருந்த உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு அன்னியர் போல் ஆகிவிடுவார்கள். உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வயது முதிர்ந்தால் தலைமுடி நரைத்துப் போகும். (குஞ்சி – தலைமுடி) தோல் திரங்கிப் போகும். நாடி நரம்புகள் எல்லாம் ஒடுங்கி, பிறரை நாடியே வாழவேண்டும் என்னும் நிலை வரும்போது, எல்லோரும் வெறுக்கத்தான் செய்வார்கள். தனியாகவும், ஒன்று கூடியும் பழித்துப் பேசுவார்கள். உடல் கோடுதல் – கூன் விழுதல்.

"தமரும் அமரும் மனையும் இனிய 

தனமும் அரசும்       அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு 

தலையை வளைய  எறியாதே”   --- திருப்புகழ்.


"மனையவள் நகைக்க, ஊரின் அனைவரும் நகைக்க, லோக

     மகளிரும் நகைக்க, தாதை ...... தமரோடும்

மனமது சலிப்ப, நாயன் உளம்அது சலிப்ப, யாரும்

     வசைமொழி பிதற்றி, நாளும் ...... அடியேனை

அனைவரும் இழிப்ப, நாடு மனஇருள் மிகுத்து, நாடின்

     அகம்அதை எடுத்த சேமம் ...... இதுவோ? என்று

அடியனும் நினைத்து, நாளும் உடல்உயிர் விடுத்த போதும்,

     அணுகி முன் அளித்த பாதம் ...... அருள்வாயே.: --- திருப்புகழ்.


"இல்லும் இளையோரும் மெல்ல அயலாக,

     வல் எருமை மாயச் ...... சமனாரும்

எள்ளி, எனது ஆவி கொள்ளை கொளும் நாளில்,

     உய்ய ஒரு நீ பொன் ...... கழல்தாராய்."   --- திருப்புகழ்.


"மனைவிதாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை மன்னு காரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில், உய்யலாம் நெஞ்சி னீரே." --- அப்பர்.

திருச்சாய்க்காடு – திருஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுப் பாடி அருளிய திருத்தலம். சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு அடுத்து கி.மீ. தொலைவில் உள்ளது. 

சாய் என்பதற்குக் கோரை என்று பொருள். கோரை என்ற ஒரு வகைப் புல் அடர்ந்து வளர்ந்த காடாக இத்தலம் இருந்ததால் திருச் சாய்க்காடு என்று இத்தலம் பெயர் பெற்றது. காவிரிக் கரையில் உள்ள காசிக்கு சமானமாக கருதப்படும் ஆறு திருத்தலங்களில் திருசாய்க்காடும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

கோச்செங்கட்சோழ நாயனாரால் கட்டப்பெற்ற மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் அவதரித்து முக்தி அடைந்த திருத்தலம். “இல்லையே என்னாத இயற்பகை” என்று சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தில் வைத்துப் போற்றி உள்ளார். இவரது அன்பை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம் "உமது திருத்தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று, ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அளிக்க, நீர் இசைவீர் ஆயின், அதனை இன்னது என்று சொல்லுவோம்" என்றார். அன்பில் சிறந்த நாயனார், "எப் பொருளாயினும் ஆக, அது என்பால் இருப்பின், அது அடியவர் உடைமை. அதை அருளிச் செய்க" என்றார். வேதியர், முன்பின் சிந்தியாது, "உமது மனைவியை வேண்டி வந்தோம்" என்றார்.  இயற்பகையார், "அடிகள் என்னிடம் உள்ள பொருளையே நாடியது எனது புண்ணியப் பயன்" என்று அகமகிழ்ந்து, உள்ளே விரைந்து எய்தி, இல்லக் கிழத்தியாருக்கு அடிகள் விருப்பத்தையும் தமது கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனம் கலங்கி, உடனை தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி அவரைத் தொழுதார். நாயனாரும் அவரை வணங்கினார். இயற்பகையாரும் தன் மனைவியை வேதியருடன் அனுப்பி வைத்தார். "அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்" என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், "நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்குக் காவலாக வ வேண்டும்" என்றார். இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். தடுத்த சுற்றத்தார் அனைவரையும் வென்றார். ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், "நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்"' என்றார். இயற்பகையாரும் அதன்படி திரும்பிக் கூட பார்க்காமல் தன் ஊரை நோக்கி செல்லத் தொடங்கினார்.

சிவபெருமான், "இவன் மனைவியை விட்டுவிட்டுத் திரும்பியும் பாராமல் செல்கின்றான். இவனுடைய அன்பின் நிலை என்னே, என்னே" என்று வியந்து, "இயற்பகை முனிவா ஓலம், ஓலம், இவ்விடம் விரைந்து வருக" என்று ஓலமிட்டார். அந்த ஓலத்தைக் கேட்ட நாயனார், "வந்தேன், வந்தேன், இன்னும் துன்பம் செய்பவர்கள் இருக்கின்றார்களா, அவர்களைத் தொலைத்து விடுகிறேன்" என்று முழங்கிக் கொண்டு விரைந்து ஓடி வந்தார். வந்தவர் மறையவரைக் காணவில்லை, மனைவியை மட்டுமே கண்டார். அந் நிலையில் சிவபெருமான் உமாதேவியாரோடும் விடைமேல் காட்சி தந்து, "அன்பனே, உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ்வைத் தந்தது.  நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக் கடவாய்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். நாயனார் விழுந்து, விழுந்து, வணங்கி, வணங்கி, வாழ்த்தி, வாழ்த்தி, ஆனந்தக் கூத்து ஆடினார். இயற்பகை நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சிவலோகம் எய்தி, இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினர்களும் விண்ணுலகை அடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள்.

இறைவன் திருவடியைச் சரண் புகுந்தோர் பெறும் பேறு குறித்து, இத் திருத்தலத் திருப்பதிகத்தில் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வருமாறு பாடி உள்ளார்.


“மண்புகார், வான்புகுவர், மனம்இளையார், பசியாலும்

கண்புகார், பிணிஅறியார், கற்றாரும் கேட்டாரும்

விண்புகார் எனவேண்டா, வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டுஎம் தலைவன்தாள் சார்ந்தாரே.”

இதன் பொருள் ---

    வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மை பொருந்திய பூம்புகாரில் விளங்கும் திருச்சாய்க்காட்டுள் எழுந்தருளிய எமது தலைவரின் திருவடிகளைச் சார்ந்து வழிபாடு செய்து, அவன் திருப்புகழைக் கற்றவரும் கேட்டவரும் நில உலகில் வந்து பிறவார். பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வு அடையமாட்டார்கள். பசியாலும் துன்பம் அடையார். நோய் அற்று வாழ்வார்கள்.

அப்படிப்பட்ட பெருவாழ்வை நமக்கு அருளுகின்ற பெருமானை நாளும் நினைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் திருஞானசம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார். நாம் வாழ்கின்ற நாள்கள் இவ்வளவு என்றும், எப்போது சாகப் போகின்றோம் என்பதும் யாரும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று. எனவே, உயிர் உள்ளபோதை நாளும் இறைவனை வழபிட வேண்டும் என்றும்  அறிவுறுத்துகின்றார்.  இந்த இருபாடல்களும் நாளும் ஓதவேண்டியவை என்பதை அறிக.


“நீ நாளும், நல்நெஞ்சே! நினைகண்டாய், யார்அறிவார்

சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே

பூநாளும் தலைசுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,

நாநாளும் நவின்றுஏத்தப் பெறலாமே நல்வினையே.”

இதன் பொருள் –

    நல்ல நெஞ்சமே! நீ நாள்தோறும் இறைவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள்? ஆதலின், திருச்சாய்க்காட்டை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும், செவிகளால் அவன்  பொருள்சேர் புகழ் மொழிகளைக் கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரைக் கூறி வழிபட்டும் வந்தால் நல்வினைப்பயன் பெறலாம். (நாளும் வழிபட்டால், நாளும் நல்வினைப்பயனைப் பெறலாம். இருப்பும், இறப்பும் அறியாமையால், இருக்கும்போதே சிவபுண்ணியத்தைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பு)



பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே,

சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல

கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே!

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.”


இதன் பொருள் ---

    இல்லும் பொருளும் இருந்த மனை அளவே - (உயிர் பிரிந்த பின்னர்) மனைவியும் பொருள்களும் குடி இருந்த மனையின் அளவே நின்று விடுவன. சொல்லும் அயலார் துடிப்பு அளவே - அயலார்களின் சொல்லின் துணையும் உயிர்ப்புத் துடிப்பு உள்ள அளவும், இறந்த பின்னர் சொல்லும் இரக்கச் சொல்லலின் அளவும்தான். நல்ல கிளை குளத்து நீர் அளவே - நல்ல சுற்றத்தார்களது தொடர்ச்சியும் சுடுகாடு வரை பின்தொடர்ந்து, பின்னர் நீர்மூழ்கும் குளத்தின் மட்டுமே. கிற்றியே நெஞ்ச – மனமே இதனை நீ அறியவல்லையானால், வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து – திருவளைகுளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபரம்பொருளையே வாழ்த்துவாயாக.


பட்டினத்து அடிகளார் பாடியருளிய இந்தப்பாடலையும் இங்கு வைத்து ஓதி உணர்க.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மிவிம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."

இதன் பொருள் –

    ஈட்டிய செல்வமும், அதனால் வாழ்கின்ற வாழ்வும் அவரவர் வீட்டின் அளவே. சூழ்ந்திருந்த பெண்களும் கண்களில் நீர் சோர அழுதுகொண்டு வீதி அளவே வருவார்கள். தந்தையின் அருமையை எண்ணி எண்ணி இருகரம் கூப்பி அழுகின்ற மைந்தர்களும் சுடுகாட்டு அளவே. இறந்துவிட்டவனைப் பின் தொடர்ந்து செல்வன அவன் செய்த புண்ணியமும் பாவமும் ஆகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளே.

    இறந்தவரது உடலைச் சுடுகாட்டில் கொண்டு போய் பெதைத்த பின்னர் அல்லது எரியூட்டிய பின்னர், நீரில் மூழ்கித் திரும்பவும் வராத சுற்றத்தார்கள் உண்டு. “நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே” என்றார் திருமூலதேவ நாயனார்.


    வளைகுளம் என்பது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. 


“மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்,

விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்,

வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.”


“வானவர்கோன் தோள்இறுத்த மைந்தன் தன்னை,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை”


எனவும் வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்கள் காண்க.


    தொண்டை நாட்டில் அரக்கோணம் – திருத்தணி சாலையில் உள்ள வளர்புரம் என்னும் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வூர்த் திருக்கோயில் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேச்சரமுடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. சோழநாட்டில் தஞ்சை – திருச்சி சாலையில் உள்ள வல்லம் என்னும் ஊர் என்று கூறுவர். திரு ராம. சொ. சொக்கலிங்கம் சேட்டியார் என்பவரால் பாடப்பெற்ற “வளைகுளம் நாகேசுரர் பதிகம்” என்று ஒரு நூல் 1921-ல் வெளியிடப்படு உள்ளது. திருத்தலம் எங்குள்ளது என்பது குறித்து இந்நூலில் இல்லை.


42. தாயர் ஐவர்

“தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்

பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப்

பெற்றாள், இவர்ஐவர் பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில்.” -- நீதிவெண்பா


பேசுமிடத்து, தன்னை ஈன்றவள், தன் மூத்த சகோதரனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனுக்குரிய மனைவி, தன் மனைவியைப் பெற்றவள் (மாமியார்) ஆகிய இவ் ஐந்து வகையாரையும் எவர்க்கும் பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.


    (பன்னி - பத்தினி, மனைவி.  நற்றாய் - பெற்றெடுத்த தாய்.)


101. வம்பருக்குத் தலைமை

 வம்பரெல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால்

     என்ன? அதுமாறி ஓய்ந்த

பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்

     என்ன? அதிற் பலன்உண் டாமோ?

கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்

     வருந்துபல கழுதை தாமும்

அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந்

     தனிற்கிடந்தென் ஆகுந் தானே?


இதன் பொருள் ---


கம்பு உலவும் தண்டலையார் வளநாட்டில் - சங்குகள் உலவும் நீர்வளம் பொருந்திய திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்தல் நாட்டிலே, வருந்து பல கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - திறனற்று வருந்துகின்ற பல கழுதைகள் அழகிய இந்த உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என் ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்), வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லாம் செல்வாக்கு மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால் என்ன - ஆதிக்கம் கெட்டு ஆடி ஓய்ந்த பம்பரம்போல மூலையில் முடங்கிக் கிடந்தால் என்ன?, அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா? (நலம் ஏதும் விளைவதில்லை)


பாடல் 13

"காளையர்கள் ஈளையர்கள் ஆகி, கருமயிரும்

பூளைஎனப் பொங்கிப் பொலிவு அழிந்து, --சூளையர்கள்

ஓகாளம் செய்யாமுன், நெஞ்சமே! உஞ்சேனை

மாகாளம் கைதொழுது வாழ்த்து."


இதன் பொருள் ---


    காளையர்கள் ஈளையர்கள் ஆகி - காளைப் பருவம் உடையவர்கள், முதுமையில் ஈளை நோய் உடையவர்களாகி, கருமயிரும் கூளை எனப் பொங்கிப் பொலிவு அழிந்து - கரிய மயிரும் பூளைப் பூவினைப் போல வெண்மயிராக மாறி, நல்ல தோற்றம் அழிந்து; சூளையர்கள் ஓகாளம் செய்யா முன் - தோழியர்கள் பெருமூச்சு விட்டு அழாத முன்னே; உஞ்சேனை மாகாளம் கைதொழுது வாழ்த்து - உஞ்சேனை மாகாளத்தில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நீ கைதொழுது வாழ்த்துவாயாக.


குறிப்புரை --- ஈளை – கோழை, இளைப்பு, காசநோய். முதுமையில் கபம் மேலிட்டு இருமல் வருவதால் உண்டாகும் இளைப்பு நோய். பூளைப் பூ – வெண்ணிறம் உடையதொரு மலர். முந்திய பாடலையும் காண்க. பொங்குதல் என்பது, நரைத்த தலைமுடியானது படியாது விரிந்து கிடத்தலைக் குறிக்கும். 


    சூளையர்கள் – பரத்தையர், விலைமாதர். விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. "துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.


    உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சாரப் பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடுவர்.  விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர். இளமைக் காலத்தில், இன்பத்தைத் தந்து பொருளைப் பெற்றுச் சென்ற விலைமாதர் முதுமைக் காலத்தில் வெறுப்புக் கொள்வர். ஓகாளம் – அருவருப்புக் கொள்ளுதல். முன் உண்டதைக் கக்குதல்.


“வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச்  செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.”   --- திருவாசகம்.


“பெண்ஆகி வந்து,ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!”   --பட்டினத்தார்.


“சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!”      -- பட்டினத்தார்.


“பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை,கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?” -- கந்தர் அலங்காரம்.


மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.”         -- பட்டினத்தார்.


“மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை,போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.”                         --திருப்போரூர்ச் சந்நிதி முறை.


    விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். அகலிகையின் அழகில் மயங்கி இந்திரன் தனது நிலையில் இழிவினை அடைந்தான். தனது பாகன் ஆகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கிப் புணர்ந்தான் சூரியன். சந்திரன் தனது குருவின் பத்தினியாகிய தரையைக் கண்டு மயங்கினான். பராசரர் மச்சகந்தியைக் கண்டு மயங்கினார். திருநீலகண்ட நாயனார், “இளமை மீதூர, இன்பத் துறையில் எளியர் ஆனார்” என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டி உள்ளதை அறிக.


    சூளையர்கள் என்பதற்கு, நோய்வாய்ப்பட்ட காலத்தில் சூழ்ந்து இருந்து உதவிபுரிவோர் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படிப்பட்டவர்களும் அருவருப்புக் கொள்ளுகின்ற நிலை முதுமையில் உண்டாகும்.


    உஞ்சேனை மாகாளம் என்பது வடநாட்டில் உள்ளதோர் சிவத்தலம்.  காளி பூசித்த தலமாதலால், மாகாளம் எனப்பட்டது. இது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. “நளிர்சோலை உஞ்சேனை மாகாளம்” என்று இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானும்,  “மதில் உஞ்சை மாகாளம்” என்றும், “உஞ்சேனை மாகாளம்” என்று ஆறாம் திருமுறையில் இரண்டு இடங்களில் அப்பர் பெருமானும், வைத்துப் போற்றி உள்ளனர். இக்காலத்தில் உச்சயினி என்று வழங்கப்படும் சோதிர்லிங்கத் தலம். உச்சியினி என்பது தலம். மாகாளம் என்பது திருக்கோயில்.


41. நல்லார் அயல் மாதரை நினையார்

 “கன்னியரை, பொன்நாண் கழிந்தோரை, மற்ற அயலார்

பன்னியரை, மாயப் பரத்தையரை, - முன்ன அரிய

தாதியரை, நல்லோர் தழுவ நினையார், நரகத்

தீதுவரும் என்றே தெரிந்து.” -- நீதிவெண்பா.


அறிவுடைய பெரியோர்கள் மணமாகாத கன்னிப் பெண்களையும், பொன்னால் ஆன தாலியை இழந்த விதவைப் பெண்களையும், பிறர் மனைவியரையும், வஞ்சனை பொருந்திய பொதுமகளிரையும், விரும்பக் கூடாத வேலைக்காரிகளையும் சேர்தலால் நரகத் துன்பமே வரும் என உணர்ந்து, அவர்களை நினைக்கவும் மாட்டார்கள்.


(நாண் - தாலி. பன்னியர் - மனைவியர். மாயம் - வஞ்சனை.  தாதியர் - பணிப் பெண்கள்.)


100. பித்தளை நாற்றம் போகாது

 


“நித்தம்எழு நூறுநன்றி செய்தாலும்

     ஒருதீது நேர வந்தால்,

அத்தனையும் தீதென்பார்! பழிகருமக்

     கயவர்குணம் அகற்றல் ஆமோ?

வித்தகஞ்சேர் தண்டலையார் வளநாட்டிற்

     சாம்பர்இட்டு விளக்கி னாலும்

எத்தனைசெய் தாலும்என்ன? பித்தளைக்குத்

     தன்நாற்றம் இயற்கை ஆமே.”


இதன் பொருள் ---


வித்தகம் சேர் தண்டலையார் வளநாட்டில் - அறிவுத் துறையுடைய திருத்தண்டலை இறைவரின் வளமிக்க நாட்டிலே, சாம்பர் இட்டு விளக்கினாலும் எத்தனை செய்தாலும் என்ன - சாம்பலைக் கொண்டு தேய்த்தாலும் என்ன செய்தாலும், பயன் ஏது? பித்தளைக்குத் தன் நாற்றம் இயற்கை ஆம் - பித்தளையின் களிம்பு நாற்றம் இயல்பானதே ஆகும்; (அதுபோல), பழி கருமக் கயவர் - பழிப்புக்குரிய செயலைச் செய்யுந் தீயவர்களுக்கு, நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும் - நாள்தோறும் நூற்றுக்கணக்கான நன்மைகளைப் புரிந்தாலும், ஒரு தீது நேர வந்தால் அத்தனையும் தீது என்பார் - (நம்மை அறியாமலே) ஒரு தீமை நேர்ந்து விட்டால் அவ்வளவு நன்மையையும் தீது என்றே கூறிவிடுவர்; குணம் அகற்றல் ஆமோ - (அவர்) பண்பை மாற்ற இயலுமோ?


      தீமை பல செய்தாலும், ஒரு நன்றி செய்தால், தீமையை மறந்து நன்றியை நினைவில் வைப்பது நல்லோர் இயல்பு "கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த, ஒன்று நன்(று) உள்ளக் கெடும்” என்பது திருவள்ளுவ நாயனார் வாய்மொழி. ஆனால், எத்துணை நன்றி செய்யினும் ஒரு தீமை செய்தால் அத்துணை நன்றியையும் மறந்து தீமையை மறவாதிருத்தல் தீயோர் இயல்பு. ‘பித்தளை நாற்றம் போகாது' என்பது பழமொழி. 


    ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. 


“ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்

எழுநூறும் தீதாய் விடும்.”              --நாலடியார்


"கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்

     காஞ்சிரம் கைப்புவிடுமோ?

கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்

     கதிபெறும் குதிரை ஆமோ?


குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும்

     கொடுவிடம் அலாது தருமோ?

குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்

     கோணாமலே நிற்குமோ?


ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம்இலா

     யோனிகண் ஆகிவிடுமோ?

உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்

     உள்ளியின் குணம் மாறுமோ?


மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில்

     மார்க்க மரியாதை வருமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே." -- குமரேச சதகம்.


இதன் பொருள் ---


     மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


     கட்டி எரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ - வெல்லக்கட்டியை எருவாக இட்டு, நல்ல தேனை நீராக ஊற்றி வளர்த்தாலும் எட்டிக் காயின் கசப்பு நீங்குமா? நீங்காது.


     கழுதையைக் கட்டி வைத்து ஓமம் வளர்க்கினும் கதிபெறும் குதிரை ஆமோ - கழுதையைக் கட்டிப் போட்டு, வேள்வியைச் செய்தாலும், பல கதிகளிலும் செல்லும் குதிரை ஆகுமோ? ஆகாது.


     குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடுவிடம் அலாது தருமோ - பாம்புக் குட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் கொடிய விடத்தை அல்லாமல் வேறு நல்லது எதையாவது தருமா? தராது.


     குக்கல் நெடுவாலுக்கு மட்டையைக் கட்டினும் கோணாமலே நிமிருமோ - நாயின் நீண்ட வாலுக்கு மட்டையை வைத்துக் கட்டினாலும், அதனுடைய கோணல் தன்மை மாறுமோ? மாறாது.


     ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயமிலா யோனி கண் ஆகி விடுமோ - நிறைய மையினை நன்றாக இட்டாலும் பெண்குறியானது கண் ஆகுமா? ஆகாது.


     உலவு கன கற்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ - இனிய மணம் கொண்ட கர்ப்பூரம் முதலான நறுமணப் பொருள்களோடு கூட்டினாலும், பூண்டின் குணம் மாறுமா? மாறாது.


அது போலத்தான்,


      மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ - அறிவில்லாத பேதைகளுக்குப் பலமுறையும் நல்ல அறிவு புகட்டினாலும், அதனால் அவருக்கு ஒழுங்கான நடத்தை வருமோ? வராது.


      பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தை, இப் பாடலோடு ஒப்பிட்டு உணர்ந்து கொள்ள வேண்டும்.


“தக்காரும் தக்கவர் அல்லாரும் தம் நீர்மை

எக்காலும் குன்றல் இலர்ஆவர்,  - அக்காரம்

யாவரே தின்னினும் கையாதாம், கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு.”


    தகுதி உடைய பெரியவர்கள் நன்மை செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். தகுதியே இல்லாத தீயவர்கள் அவர்களின் இயல்புக்கு ஏற்ப, தீமையும் செய்யும் தன்மையில் இருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் கசக்காது. இனிக்கவே செய்யும். ஆனால், வேப்பங்காயை யார் தின்றாலும் இனிக்காது. கசக்கவே செய்யும்.      


    மேலான நறுமணப் பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும், உள்ளிப் பூண்டினுடைய தீயநாற்றம் நீங்காதது போல, பொறாமைக் குணம் கொண்ட நெஞ்சத்தை உடைய அறிவிலிகளை நல்லவர்களாக ஆக்க முடியாது என்கிறது நீதிவெண்பா என்னும் நூல்.


“அவ்விய நெஞ்சத்து அறிவுஇலாத் துர்ச்சனரை

செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? -- திவ்வியநல்

கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது

கந்தம் மெடுமோ கரை.” -- நீதிவெண்பா


    பின்வரும் விவேக சிந்தாமணிப் பாடல்களையும் அவற்றின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் தகும்.


“நாய்வாலை அளவு எடுத்து பெருக்கித் தீட்டின்

     நல் தமிழை எழுத எழுத்தாணி ஆமோ?

பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்

     பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடுஅது ஆமோ?

தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்

     சாற்றிடினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;

ஈவாரை ஈயவொட்டான், இவனும் ஈயான்;

     எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.”


    நாயினது வாலை எழுத்தாணிக்கு உரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.


“தூம்பினில் புதைத்த கல்லும்

     துகள் இன்றிச் சுடர் கொடாது;

பாம்புக்குப் பால் வார்த்து என்றும்

     பழகினும் நன்மை தாரா;

வேம்புக்குத் தேன் வார்த்தாலும்

     வேப்பிலை கசப்பு மாறா;

தாம்பல நூல் கற்றாலும்

     துர்ச்சனர் தக்கோர் ஆகார்.”


    வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.


“கற்பூரப் பாத்தி கட்டி, கத்தூரி எருப்போட்டு,

      கமழ்நீர் பாய்ச்சி,

பொற்பு ஊரர உள்ளியினை விதைத்தாலும் 

அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;

சொல் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக

      வரும் எனவே சொல்லினாலும்,

நற்போதம் வாராது, அங்கு அவர் குணமே

      மேலாக நடக்கும்தானே.”


    என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப் பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில்லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர்.


    கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.


"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,


உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்


பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,


மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் - நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.


கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் - கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். 


உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் - நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம்.


உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் - தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம். 


உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் - பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். 


அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் - அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். 


பிணியையும் அகற்றலாம் - நோயையும் அகற்றலாம். 


கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் - காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். 


மணலையும் கயிறாத் திரிக்கலாம் -  மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். 


கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ - கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.


எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் அதிகாரத்துள், 


"மக்களே போல்வர் கயவர், அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.


"தேவர் அனையர் கயவர், அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"


என்னும் திருக்குறளின் வழி, கீழ்மக்கள் என்பவர் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 


பாடல் 20

  “என்னெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன், கன்னம்செய் வாய்ஆகில்; காலத்தால் வல்நெஞ்சுஏய் மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி ஏகம்பத் தானை இறை...