057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன் கொடுங்கோலன் என்று சொல்லுகின்ற துன்பம் தரும் சொல்லை உடையவன், அவனது வாழ்நாள் குறைந்து, விரைவில் ஏனைய நலங்களும் கெட்டு அழிவான்" என்கின்றார் நாயனார்.

மக்கள் வருந்திக் கூறும் சொற்களே, மன்னனது வாழ்நாளைக் குறைக்கும் கூரிய படைக்கலமாக, ஆயுளைக் குறைப்பதோடு, செல்வத்தையும் போக்கிவிடும்.


இதற்குத் திருக்குறள்...

இறைகடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல்,வேந்தன்

உறை கடுகி, ஒல்லைக் கெடும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் --- குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், 

உறை கடுகி ஒல்லைக் கெடும் --- ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.

(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


காத்தகபி லற்குஇடும்பை செய்து கணன்அழிந்தான்

மூத்தோன் மழுவால், முருகேசா! --- ஏத்தும்

இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, கணன் - கணன் என்னும் அரசன், காத்த கபிலற்கு இடும்பை செய்து - மெலிவைப் போக்கப் பாதுகாத்த கபிலமுனிவருக்குத் துன்பம் செய்து, மூத்தோன் மழுவால் அழிந்தான் - உனக்கு மூத்தவரான ஆனைமுகக் கடவுளுடைய மழுப் படையினாலே இறந்து ஒழிந்தான்,  ஏத்தும் - போற்றப் பெறுகிற, இறைகடியன் என்று உரைக்கும் - நம்முடைய அரசன் மிகவும் கொடியவன் என்று குடிகளால் கூறப்படுகின்ற, இன்னாச் சொல் - துன்பச் சொல்லைப் பெறுகின்ற, வேந்தன் உறை கடுகி - அரசன் தன் ஆயுள் குறைந்து, ஒல்லை கெடும் - விரைவில் அழிவான்.

மெலிவைப் போக்கிக் காத்த கபிலருக்குத் துன்பம் செய்து கணன் என்பவன் ஆனைமுகக் கடவுளுடைய மழுப்படையால் இறந்து ஒழிந்தான். நம்முடைய அரசன் மிகவும் கொடியவன் என்று குடிமக்களால் கூறப்படுகின்ற துன்பச் சொல்லைப் பெறுகிற அரசன் தன் ஆயுள் விரைவில் குறைந்து அழிவான் என்பதாம்.

                                                              கணன் கதை

முன்னாளில் கணன் என்னும் பெயருடைய ஓர் அரசன் இருந்தான். அவன் வேட்டைக்குச் சென்ற பொழுது பசியாலும் தாகத்தாலும் மெலிந்து கபிலமுனிவருடைய இருப்பிடத்திற்குச் சென்றான். அரசனுடைய நிலையைக் கண்டு அவர் இரங்கினார்.  தாம் இந்திரன்பால் பெற்ற சிந்தாமணியைக் கொண்டு ஒரு நகரத்தையும் பல புதுமை மிக்க உணவையும் உண்டாக்கிக் கணனையும் அவனுடைய படையினரையும் உணவு கொள்ளச் செய்தார். பிறகு அரசன், பெருஞ்சிறப்புக்குக் காரணமாகவுள்ள சிந்தாமணியைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டான். அவர் உடன்படவில்லை. வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு தன்னுடைய நகரத்திற்குச் சென்றான். தான் கவர்ந்து வந்த சிந்தாமணியைத் தந்தைக்குக் காட்டினான். தந்தை மனம் நடுங்கினான். "முனிவர்கட்குக் கேடு செய்தால் தீமை உண்டாவது திண்ணம். இதை மீண்டும் அவர்பால் கொடுத்து விடுவாயாக" என்று வற்புறத்தினான். கணன் அம்மொழியை மறுத்துவிட்டுச் சிந்தாமணியைக் கொடுக்காமலிருந்தான். பிறகு முனிவருடைய வழிபடு கடவுளாகிய ஆனைமுகக் கடவுள் கணனைக் கொன்றார்.  பொல்லாத மன்னன் விரைவில் கெடுவான் என்பது இவனிடம் உண்மையாகியது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காண்க.

அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்

செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்

செங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்

தண்கோல் எடுக்குமாம் மெய். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


அம் கோல் அவிர் தொடி - அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!, வேந்தர்கண் - அரசன் பகையரசர்மாட்டு, வெம் கோன்மை சிறிது வேண்டும் எனினும் - கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும், செங்கோலன் அல்லாக்கால் – தனது ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் அல்லாத இடத்து, ஆழியான் ஆயினும் - ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும், சேர்ந்தாரும் - தன்னைச் சேர்ந்தவர்களும், எள்ளுவர் - இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே, மெய் - உண்மையாக, எடுக்கும் - வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.





057. வெருவந்த செய்யாமை - 03. வெருவந்த செய்து

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "அரசன் குடிமக்கள் அஞ்சி ஒழுகும்படியாகச் செய்கின்றவனாக இருப்பானாயின், அவன் நிச்சயமாக வெகுவிரைவில் எல்லா நலங்களும் நீங்கப் பெற்று கெடுவான்" என்கின்றார் நாயனார். ஒருவந்தம் --- நிச்சயம், ஒருதலை.


இதற்குத் திருக்குறள்...


"வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்,

ஒருவந்தம் ஒல்லைக் கெடும். "


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின் --- குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; 

ஒருவந்தம் ஒல்லைக் கெடும் --- அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.

(வெங்கோலன் என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


தாடகைதன் மைந்தர் தவமுனியை அச்சுறுத்தி

ஈடுஅரக்கர் ஆனார், இரங்கேசா! --- நாடி

வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! தாடகை தன் மைந்தர் - தாடகை மக்களாகிய மாரீசன், சுவாகு என்பார், தவ முனியை அச்சுறுத்தி - தவத்தில் சிறந்த அகத்திய முனிவரைப் பயப்படுத்தி (அதனால்), ஈடு அரக்கர் ஆனார் - அரக்கருக்கு சமானமானார்கள், (ஆகையால், இது) வெருவந்த - (குடிகள்) அஞ்சுகின்ற காரியங்களை, செய்து ஒழுகும் - செய்து நடக்கின்ற, வெம் கோலன் ஆயின் - கொடுங்கோலனாய் (அரசன்) இருந்தால், ஒருவந்தம் - நிச்சயமாகவே, ஒல்லை - விரைவில், கெடும் - கெட்டுப் போவான் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- கொடுங்கோலரசன் விரைவில் அழிந்து போவான்.

விளக்கவுரை - சுகன் என்று ஓர் யட்சன் (இயக்கன்) பொதியமலையைச் சார்ந்த வனத்தில் வந்து, அகத்திய முனிவரின் ஆச்சிரமத்தில் இருந்த பூமரங்களைப் பிடுங்கி நாசமாக்கிச் சேட்டை செய்தான். அதுகண்ட அகத்திய முனிவர், அவனைக் கோபத் தீயினால் எரித்துச் சாம்பராக்கி விட்டார். அவன் மாண்டது தெரிந்த அவனுடைய மனைவி மக்களாகிய தாடகை, மாரீசன், சுவாகு என்பார், பொதியமலையில் வந்து, பழிக்குப் பழி வாங்க முனிவரைப் பயமுறுத்தினார்கள். அவர்களை அவர் மசகங்களாக (மசகம் - கொசு) எண்ணிக் கோபித்து, நீவிர் மூவரும் அரக்கர் ஆகுவீர்களாக எனக் கடும் சாபமிட்டார். ஆகையால், அம்மூவரும் அநாதை அரக்கர்களாய்ப் பாதலத்தில் புகுந்து மாலியவான் ஆதரவில் அடங்கியிருந்து, பிறகு, அரக்கருக்குரிய கொடுங்குணத்தைக் காட்டியதால் இராமபிரான் கைவில்லுக்கு இரையாகி மாண்டார்கள்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

வண்ண மகள்நோவ வருகீச கன்மடிந்தான்

திண்ணம்இது அன்றோ சிவசிவா --- எண்ணின்

வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்

ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.


திரௌபதி விராடபுரத்தில் விராட மன்னனின் மனைவியாகிய சுதேட்டிணைக்கு வண்ணமகளாக இருந்தாள். கீசகன் அவளை ஒருதலையாகக் காதலித்தான். அவன் வீமனால் கொல்லப்பட்டான்.

கீசகன் மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேட்டிணையின் தம்பியும், நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். விராட நாட்டு மன்னனின் மைத்துனன் என்ற அகங்காரம் அவனிடம் இருந்தது.

பாண்டவர்கள் சூதாடி நாடிழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலே வாழ்ந்து, கரந்துறைதல் வேண்டி மாறுவேடமும் வேறு பெயரும் கொண்டு, விராட ராசனைச் சார்ந்து, ஒவ்வொரு தொழிலில் அமர்ந்து வாழ்கையில், திரௌபதி விராடராசனுடைய மனைவியாகிய சுதட்டிணைக்குப் பணிப்பெண் ஆனாள். ஒருநாள் அச் சுதட்டிணையின் உடன் பிறந்தானாகிய கீசகன் தனது தமக்கையைக் காணவந்த இடத்தில், திரௌபதியைக் கண்டு மோகம் கொண்டு, சுதேட்டிணை என்ன சொல்லியும் கேளாது அவளை அணுகினான். அவள் ஓடிப்போய் விராடராசனது சபையின் முன் விழுந்தாள். அங்கும் அவளை விடாது தொடர்ந்து வந்த கீசகன் கைப்பற்றும்முன் சூரியனால் ஏவப்பட்ட ஓர் ஏவலாளன் அவனை எடுத்து அப்பால் எறிந்தான். அதுகண்டு, பலாயனன் என்னும் பெயரோடு மடைத்தொழில் தலைவனாய் இருந்த வீமன் அவனைக் கொல்லுதற்கு ஒரு மரத்தைப் பெயர்த்தெடுக்கச் சென்றபோது, கங்கபட்டர் என்னும் பெயரோடு சந்நியாசியாய்ச் சபையில் விராடன் அருகில் இருந்த தருமபுத்திரர், 'இம் மரம் எரியாது' என்ற குறிப்பினை உணர்ந்து அப்போது ஒன்றும் சொல்லாது வாளா இருந்தான். மறுநாள் நள்ளிரவில் திரௌபதியைக் கொண்டு ஆசைகாட்டிக் கீசகனை ஒரு சோலைக்கு வருவித்துக் கொன்றான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"சங்கோடு சக்கரம் சேர் புல்லைமால் கஞ்சன் ஆருயிரை

அங்கு ஓட மாய்த்தது அறியார் கொலோ, வெருவந்தசெய்வார்,

செங்கோல் நெறிஒன்று இலனாய் வெருவந்த செய்தொழுகும்

வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும் என்பதே".

இதன் பொருள் ---

கொடுங்கோலன் ஆகிய கம்சனது அரிய உயிரை, சங்கும் சக்கரமும் திருக்கரத்தில் தரித்துள்ள திருமால் மாய்த்தது கொண்டு, செங்கோல் நெறியில் நில்லாமல் கொடுங்கோல் நெறியில் ஆட்சி புரிபவர், தாம் விரைவில் கெட்டு அழிவோம் என்பதை அறியமாட்டார்கள் போலும்.

திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகிய கண்ணபிரானுடைய தாய் தேவகி. அவள் கம்சனுடைய தங்கை. எனவே, கண்ணனுடைய அம்மான் கம்சன். அப் பாதகன் அறநெறி விடுத்து, மறநெறி அடுத்து, தீமை பல புரிந்து வந்தான்.

கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டு, எங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்று, மாயை சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை எங்கு உள்ளது என்று அறியானாய், உலகில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டு, கண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து, பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டு, கண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.


கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்

வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்

புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்

கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.


குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி

வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,

மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்

உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.


யசோதையின் திருமாளிகையின் முன், இளங்கொண்டல் மேகம்போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு அவள் மனம் கரையவில்லை. இரு கரங்களால் எடுத்தாள். மடியில் இருத்தி, நஞ்சுடன் கூடிய தனது முலையை மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருட்டிணர் அவளுடைய பால், உணர்வு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர். மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும், அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.

கம்சன் கண்ணனை மதுரைக்கு அழைத்து, அவரைக் கொல்லும் பொருட்டு, தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி வாயிலில் வைத்திருந்தான்.

கஜேந்திரம் என்ற யானையைக் காத்தருளிய கண்ணபிரான் அந்த யானையுடன் பொருது, அதன் தந்தத்தை ஒடித்து வெற்றி பெற்றனர்.

கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு இரண்டு அரக்கர்களைக் கம்சன் ஏவினான். ஒரு அரக்கன் கண்ணன் மேய்க்கின்ற பசுவின் கன்றுகளுடன் தானும் ஒரு கன்றாக வடிவெடுத்து,சமயம் பார்த்து, தன் கொம்பினால் குத்திக் கொல்லுதற்கு ஆயத்தமாக இருந்தான். மற்றொரு அரக்கன், கண்ணபிரான் கன்று மேய்த்து வெய்யிலுக்கு ஒதுங்கும் சோலையில் ஒரு விளாமரமாக நின்றான். அதன் நிழலில் வந்து ஒதுங்கியவுடன் வேருடன் சாய்ந்து கொல்லக் கருதி இருந்தான்.

இந்த இருவருடைய மாயச் சூழ்ச்சியையும் ஆயர்குலக் கொழுந்தாகிய அண்ணல் உணர்ந்தார். ஆயர் சிறார்களுடன் கன்றுகளை மேய்த்து அவ் விளாமரத்தின் நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்கினார். அடே கோபாலர்களே! இந்த விளா மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்து நிறைந்திருக்கின்றன. இங்கே இவைகளை அடித்து உதிர்க்கக் கல்லும் இல்லை என்று கூறி, கன்றின் உருவமாக மாறி வந்துள்ள அரக்கனை எடுத்து விளாமரத்தின் மீது சாடினார். விளாமரமாக நின்ற அரக்கனும், கன்றாக வந்த அரக்கனும் ஒருங்கே மாண்டு ஒழிந்தார்கள்.  இந்த அற்புதத்தைக் கண்ட ஆயச் சிறுவர்கள் தூய மாதவனை வாயார வாழ்த்தி வணங்கினார்கள்.


இந்தச் செய்தி, திருவாசகப் பாடலிலும் கூறப்பட்டுள்ளது.

"என்றும் பிறந்துஇறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்

கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பரிய

குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்

துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ".


கம்சன் கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, ஒரு இரக்கமில்லாத அரக்கனை ஏவினான். அவன் பசுவினை மேய்த்து வரும் கண்ணன் எதிரில் பெரிய பறவை வடிவாக வாயில் அனல் பொறிகள் பறக்க எதிர்ந்தான். கண்ணபிரான் அஞ்சாது சென்று அப் பறவையின் அலகுகளை இரு கரங்களாலும் பற்றிப் பிளந்து எறிந்தார்.

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை நீத்து, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்று வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள். பூபாரம் தீர்க்க் கண்ணபிரானாகத் திருமால் அவதரிப்பார். அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார். அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள்.  எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.

யசோதை தன் குலக்கொழுந்தாகிய கண்ணனை வாயில் முற்றத்தில் கண்வளரச் செய்து, அந்தப்புரத்தில் குடும்ப அலுவலில் ஈடுபட்டிருந்தாள். கமசனால் அனுப்பப்பட்ட ஒரு அரக்கன், அருகில் இருந்த ஒரு வண்டியில் மறைந்து, அச் சகடத்தைக் கண்ணபிரான் மீது உருட்டினான். கண்துயின்று கொண்டு இருந்த கமலக்கண்ணர், சட்டென்று கண் விழித்து, சகடத்தைச் சிறிது திருவடியால் உதைத்தருளினார்.  அரக்கன் அழிந்தனன்.

கண்ணபிரான் பலராமருடன் கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் இனிது வளர்கின்றபோது, கம்சன் அவர்களை அக்ரூரரை ஏவி அழைத்தான். கார்வண்ணமூர்த்தியும், சங்கவண்ண மூர்த்தியும் கம்சனைக் காணும் பொருட்டு, மதுரையம்பதியை அடைந்தார்கள். அரண்மனை வாயிலில் அவர்களைத் தடுத்துக் கொல்லும் பொருட்டு, மிகப் பெரிய மல்லர்களாகிய சாணூரன், முட்டிகன் என்ற இருவரை கம்சன் நியமித்து இருந்தான்.  மலைகள் இரண்டு எதிர்ப்பது போல் இருவர்களும் இருபாலகர்களை எதிர்த்தார்கள். சாணூரன் கண்ணபிரானுடனும், முட்டிகன் பலராமருடனும் பொருதார்கள். இவர்கள் இருவரையும் மல்யுத்தத்தில் கூறிய முறைப்படி வலசாரி இடசாரியாகத் திரிந்தும், சுழன்றும் போராடி, முடிவில் கண்ணபிரானும் பலராமரும் அம் மல்லர்களைக் கொன்றார்கள்.

கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண-பலராமரை பாராட்ட மனமில்லாதது மட்டுமின்றி, "வீரர்களே! இந்த கண்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும்"  என ஆணையிட்டான்.

சற்றும் நியாயமின்றி நடந்து கொள்ளும் கம்சனின் மீது கோபம் கொண்ட கிருஷ்ணர், அதே வேகத்தில் அவன் வீற்றிருந்த சிம்மாசனம் நோக்கி ஓடினார். தலையில் இருந்த கிரீடத்தை தள்ளி விட்டவர், அவன் முடியை பற்றி மல்யுத்த மைதானத்திற்கு இழுத்து வந்தார்.

பின்னர் கம்சனை கீழே தள்ளி மார்பின் மீது ஏறி அமர்ந்து முகத்தில் ஒரு குத்து விட்டார். அந்த ஒரு அடியை தாங்க முடியாமல் அந்த அரக்கன் உயிரை விட்டான். கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் பலராமர், ஒருவர் பின் ஒருவராக கொன்றார்.

தனது நலத்தை மட்டுமே கருதி குடிமக்கள் அஞ்சுமாறு கொடுங்கோல் புரிந்த கம்சனது செல்வமும், செல்வாக்கும் ஒருங்கே அழிந்து போயின.

கஞ்சன் ஆருயிரை - கம்சனுடைய அரிய உயிரை. அங்கு ஓட - உடலைவிட்டு ஓட. செங்கோல் நெறி - செவ்விய அரசாட்சி முறை.


மூலம் 6

“படைதனக்கு யானை வனப்பாகும், பெண்ணின்

இடைதனக்கு நுண்மை வனப்பாம், - நடைதனக்குக்

கோடா மொழிவனப்பு, கோற்குஅதுவே, சேவகர்க்கு

வாடாத வன்கண் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


    நால்வகைப் படைக்கு, யானைப் படையே அழகாகும். பெண்ணினுடைய இடைக்கு நுண்மை அழகாகும். ஒருவனுடைய ஒழுக்கத்திற்கு  நடுநிலை தவறாத சொல்லே அழகாகும். செங்கோலுக்கும் அந்தக் கோடாத மொழியே அழகாகும். போர் வீரர்க்கு, கெடாத வீரமானது, அழகாகும்.


கடுகம் 6

 “பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன்வேறு கூறில் பொறையும், - அறவினையைக்

காரண்மை போல ஒழுகுதலும், இம்மூன்றும்

ஊராண்மை என்னுஞ் செருக்கு.” -- திரிகடுகம்.


மற்றவர் தன்னை விரும்பி உயர்த்திப் பேசும்போது நாணம் கொள்ளுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழும்போது வெகுளாமல் பொறுத்துக் கொள்ளுதலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும்.


பிறர் ஒருவர் தன்னை உயர்த்திப் பேசும்பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழ்ந்தபோது கோபம் கொள்ளாமல் பொறுமை காத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவிசெய்தலும் சிறந்த செல்வமாகும். 


57. புண்ணியத்தாலேயே நல்வாழ்வு

 “புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே,

மத்தமிகு பாவத்தால் வாழ்வு ஆமோ? - வித்துபயிர்

தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது,

தீயால் வளருமோ செப்பு?” -- நீதிவெண்பா.


விதைத்து உண்டாகும் நெற்பயிரானது, தாயைப் போலவே இருந்து தன்னை வளர்க்கும் குளிர்ந்த நீரால் விளைவது அல்லாமல், நெருப்பினால் வளருமோ? நீ சொல். அதுபோலத்தான், அறிவையும் வீடுபேற்றையும் கொடுக்கும் நல்வினையால் அல்லாமல், அறியாமை மிகுகின்ற தீவினையால் ஒருவருக்கு நல்வாழ்வு உண்டாகுமோ? உண்டாகாது. நல்வினையாலேயே உண்டாகும்.


(முத்தி - வீடுபேறு.  மத்தம் - அறியாமை.  தண்புனல் - தண்ணீர்.)


057. வெருவந்த செய்யாமை - 02. கடிதோச்சி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பெருஞ்செல்வமானது நெடுங்காலம் தம்மை விட்டு நீங்காமல்  இருக்கவேண்டும் என்று விரும்புவோர், ஒருவன் செய்த குற்றத்திற்குத் தண்டனை வழங்க முற்படும்போது, அளவு கடந்து செய்வது போலக் காட்டி, அளவு கடவாமல் செய்யவேண்டும்" என்கின்றார் நாயனார்.

குற்றம் செய்த ஒருவன் மேன்மேலும் குற்றம் செய்யாமல் இருக்கவேண்டும் என்னும் எண்ணம் உருவாதல் பொருட்டு, மிகப் பெரியதோர் தண்டனை விதிக்கப்படுவது போல் தொடங்கி, பின்னர் தொடங்கிய அளவில் செய்யாது குறைத்துச் செய்வானாயின், அந்த எண்ணத்தால் குடிகள் அவன் வழி நிற்பார்கள், செல்வ வளங்களும் நிலைத்து நிற்கும். மாறுபட்டுச் செய்வானாயின், கொடுங்கோலன் என்று குடிமக்கள் அஞ்சுவார்கள்.


இதற்குத் திருக்குறள்...

“கடிது ஓச்சி, மெல்ல எறிக, நெடிது ஆக்கம்

நீங்காமை வேண்டு பவர்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கடிது ஒச்சி --- அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி,

மெல்ல எறிக --- செய்யுங்கால் அளவிறவாமல் செய்க, 

ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர் --- ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.


(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்..


பேதைமைப் பாலின் ஆதல், 

பெருங் கிழமையினால் ஆதல்,

மேதக நட்டோர் மாட்டும் 

விரவிடும் பிழைகள் எல்லாம்

காதுதற் பால அல்ல, 

காதிடில் கண்ணின் ஓடி,

நோதக ஓச்சி, மெல்ல 

நோன்றவே எறிகுவாரால். --- தணிகைப் புராணம்.


இதன் பொருள் ---


அறியாமை காரணமாகவாவது, பெரிய நட்பின் உரிமை பற்றியாவது, மேன்மை பொருந்திய நட்பினரிடத்துப் பொருந்தும் குற்றங்கள் எல்லாம் தண்டிக்கும் தரம் உடையன அல்ல. அவற்றினுக்கு ஒறுக்க வேண்டின், கண்ணோட்டம் செய்து, வருந்தத் தக்கதாக ஓங்கி, மெல்லப் பொறுக்கும் வண்ணம் அடித்தலைச் செய்வார்.


காதுதற் பால அல்ல - ஒறுக்கும் பகுதி உடைய அல்ல. காதிடின் - தண்டிக்கப் புகின். கண்ணினோடி - கண்ணோட்டஞ் செய்து. நோதக - வருந்த. ஓச்சி - ஓங்கி. நோன்ற - பொறுக்க. 


057. வெருவந்த செய்யாமை - 01. தக்காங்கு நாடி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


அதாவது, குடிமக்கள் பயப்படக்கூடியதும், அதிகாரிகள் பயப்படக்கூடியதும், தான் பயப்படக்கூடியதும் ஆகிய செயல்களைச் செய்யாது இருத்தல். கொடுங்கோன்மையால் நிகழும் செயல்கள் இவை. ஆகையால், கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தின் பின் இது வைக்கப்பட்டது.


இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "நடுநிலையாக ஆராய்ந்து, குற்றத்தில் மீண்டும் தலைப்படாத முறையில், செய்த குற்றத்திற்குத் தக்கபடி தண்டனை வழங்குதல் அரசனின் கடமை ஆகும்" என்கின்றார் நாயனார்.


செய்த குற்றத்திற்கு ஏற்ப தண்டை வழங்குதல் வேண்டும். தக்கபடி விசாரித்து, குற்றம் செய்தவனைத் தண்டிக்காமல் விடுவதும், செய்த குற்றத்திற்கு ஏற்ப அல்லாமல், ஏதேனும் ஒரு காரணம் பற்றி, மிகையாகத் தண்டனை வழங்குவதும் கூடாது எனப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...

தக்குஆங்கு நாடி, தலைச் செல்லா வண்ணத்தால்

ஒத்துஆங்கு, ஒறுப்பது வேந்து.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

'தக்காங்கு' நாடி --- ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: 

தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து --- பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.

(தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்லபவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“இசைபயின்றார் வாதத்து இறைவரும் ஒன்றேனும்

இசைவன்றி ................  வியற்றான் -- இசைவொன்றத்

தக்குஆங்கு நாடி, தலைச் செல்லா வண்ணத்தால்

ஒத்துஆங்கு, ஒறுப்பது வேந்து.”


முதலிரண்டடிகளின் உண்மை உருவம் புலப்படவில்லை. இப்பாடில் குறிப்பிட்ட வரலாறு திருவிளையாடல் புராணத்துள் இசைவாது வென்ற படலத்துள் கண்டதுபோலும் எனத் தோன்றுகிறது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காண்க.

“வழிபடு வோரை வல் அறிதீயே,

பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே,

நீ மெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி,

வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்

தண்டமுந் தணிதி நீ பண்டையில் பெரிதே,

அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை

மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்

மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப!

செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும்புகழ்

நெய்தல் அம் கானல் நெடியோய்

எய்த வந்தனம் யாம், ஏத்துகம் பலவே! --- புறநானூறு.


இதன் பொருள் ---


உன்னை வழிபடுவோர் யார் என்பதை நீ விரைவில் அறிந்து கொள்வாய். புறங்கூறுவோர் பிறர் மேல் சொல்லும் பழிமொழிகளை நீ சற்றும் ஏற்றுக் கொள்ள மாட்டாய். தவறு உடையது என்று நீ உண்மையாக நம்பும் ஒரு தீமையை யாரேனும் செய்யக் கண்டால், முறை தவறாது, நடுநின்று ஆராய்ந்து, அவர்க்குத் தண்டனை தருவாய். தண்டைக்கு ஆளானோர், தமது தவறு உணர்ந்து வருந்தி, உன் முன் வந்து வணங்கி நின்றால், அவர்க்கு அளித்த தண்டனைக்கும் மேலாக, அவரிடம் அன்பு காட்டி அருள் செய்வாய். அமுதைப் பழிக்கின்ற, உண்ண உண்ணத் தெவிட்டாத, மணம் மிக்க, சுவை உணவை விருந்தாய் வருவோர்க்கு எல்லாம் வாரி வழங்குகின்ற, குறையில்லா நிறை உடைய உனது மனைவியர் தோள்களைத் தழுவுவதே அல்லாமல், பகை அரசர் நெருங்க அஞ்சுகின்ற, வானவில் போலும், வண்ண மலர் மாலை புரளும் மார்பினை உடையவனே! செய்துவிட்டுப் பின் வருந்தாமல், எதையும் முதலிலேயே சீர்தூக்கிப் பார்த்துச் செய்யும் இயல்பும், பரந்து விரிந்து சிறந்த புகழும் உடையவனே! நெய்தல் அம் கானல் என்னும் பெயருடைய ஊரினை உடைய பெரியவனை! இளஞ்சேட்சென்னியே, உன்னைச் சரண் அடைகின்றோம். உன் புகழே பாடுகின்றோம். எமக்கு நீ இன்னருள் புரிவாய்.



மூலம் 5

“உடம்புஒழிய வேண்டின் உயர்தவம் ஆற்று,ஈண்டு

இடம்பொழிய வேண்டுமேல் ஈகை, - மடம்பொழிய

வேண்டின் அறிமடம், வேண்டேல் பிறர்மனை,

ஈண்டின் இயையும் திரு.” -- சிறுபஞ்சமூலம்.


பிறந்து இறந்து உழலும் அல்லல் வாழ்க்கைக்கு இடமாக உள்ள உடம்பை (இனிப் பிறவி வாராமல்) ஒழிக்க வேண்டினால், உயர்ந்த தவத்தைச் செய்வாயாக. வாழும் காலத்தில் நீ இருக்கும் இடம் புகழோடு மேன்மையை அடைய வேண்டுமானால் இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவுவாயாக. மெல்லிய வீரம் உனக்குள்ளே நிறைய வேண்டுமானால் அறிய வேண்டுவனவற்றை அறிந்து, தான் அறிந்தமையைப் பிறருக்கு வெளிக் காட்டிக் கொள்ளாமல், மனம் அடங்கி ஒழுகுதல் வேண்டும். பிறர்மனைவியை விரும்பாது ஒழிய வேண்டும். வருவாய் சிறிதே ஆனாலும், நாளும் வந்து சேருமானால், அதுவே நாளடைவில் பெரும் செல்வம் ஆகிவிடும்.


“ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை இங்கு வைத்து எண்ணுதல் நலம். "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்றும், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும், "உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே" என்றும், "செல்வத்துப் பயனே ஈதல்" என்றும் புறநானூறு கூறும். "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல்" என்று கலித்தொகை கூறும். "ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" என்று மணிமேகலை அறிவுறுத்தும். இதனால், இசைபட வாழ்தலை ஈகை அறிவிக்கின்றது என்று அறியலாம். பின்வரும் பாடல்களையும் ஓதி உணர்தல் நலம்.


“இல்லா இடத்தும் இயைந்த அளவினால்

உள்ள இடம்போல் பெரிது உவந்து - மெல்லக்

கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்(கு)

அடையாவாம் ஆண்டைக் கதவு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

பொருளில்லாத காலத்திலும் இயன்ற அளவில், பொருளுள்ள காலத்தில் மிகவும் மகிழ்ந்து கொடுத்தது போலவே, ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் ஆகிய நற்பண்போடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு சுவர்க்க உலகத்தின் கதவுகள் மூடப்படாது திறந்தே இருக்கும்.


ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து. ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

சொல்லப்பட்ட அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல் ஆகும். அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல் ஆகும்.  இவ்விரு செயல்களாலும் நிறைந்த புகழை அடைந்தவனை, வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கும்.


“ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு.” ---  நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

பிறர்க்கு கொடுத்து உண்பவன் உலகத்தில் புகழை நிறுத்துவான். அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான். விரும்பாதவர் முன்,ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சி உண்டாக்கும். தனது தகுதி அறியாதவனை இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.


மடம் என்பது மென்மையைக் குறிக்கும். அது மென்மையின் பயனாகிய இணக்கத்தை உணர்த்துகின்றது. தான் கூறுவதை அறியமாட்டாத ஒருவரிடத்தில் அவரது அறியாமையைக் கூறுவதால் பயனில்லை. அறிமடம் என்பது, தான் கூறுவதை அறியும் அறிவு இல்லாதவரிடத்தில் அவரது அறியாமையை அறிந்திருந்தும் அறியாதவர் போன்று இலுத்தல். 


பாவங்களில் கொடியது பிறர்மனை விரும்பல். எனவே,  பிறர்மனை வேண்டேல் என்றார் இந்நூலாசிரியர். வள்ளுவரும், “பகை பாவம் அச்சம் பழி என நான்கும், இகவாவாம் இல் இறப்பான் கண்” என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை இங்கு வைத்து எண்ணுக. “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என ஔவைப் பிராட்டியார் அருளிதையும் அறிக.


கடுகம் 5

“வழங்காத் துறை இழிந்து நீர்ப்போக்கும், ஒப்ப

விழைவிலாப் பெண்டீர்தோள் சேர்வும், - உழந்து

விருந்தினனாய் வேற்றூர் புகலும், இம் மூன்றும்

அருந்துயரம் காட்டு நெறி. -- திரிகடுகம்.


ஆறு முதலியவற்றில் யாவரும் இறங்க விரும்பாத துறையில் இறங்கி, பெரும் நீரில் செல்லுதலும்; தனக்கு விருப்பமில்லாத வேசையர் தோளைத் தழுவி மகிழ்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் விருந்துக்குச் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும் ஒருவனுக்குத் துன்பத்தைக் காட்டும் வழி ஆகும்.


ஆறு முதலியவற்றிற் பழகாத துறையில் இறங்கிச் செல்லுதலும், தன்மேல் பற்றில்லாதவளைச் சேர்தலும், வயிற்றை நிரப்பும்பொருட்டு அடுத்த ஊர் செல்லுதலும் இன்பமன்றித் துன்பத்தையே செய்யும்.

56. சிவனடியார்க்கு அல்லல் இல்லை

“காளவிடப் பாந்தள் கருடனைக் கட்டுமோ?

வாள் எரியைக் கட்டுமோ வன்கயிறு? - நீளும்

பவம் அருளும் பாசம்வெம் பஞ்சேந் திரியம்

சிவயோகியைப் பிணியாவே.” -- நீதிவெண்பா


கருமையான நஞ்சினை உடைய பாம்பு கருடனைக் கட்டுமோ? வலிமையான கயிறு ஒளி மிகுந்த நெருப்புக் கொழுந்தைக் கட்டுமோ? கட்ட முடியாது. அவைபோல, வளரும் தீவினையைக் கொடுக்கும் பாசங்களும், அப் பாசங்களுக்கு உதவியாக இருக்கும் கொடிய ஐம்பொறிகளும், சிவனை நோக்கித் தவம் புரியும் அடியார்களைத் துன்புறுத்த மாட்டா.


(காளம் - கருமை.  பாந்தள் - பாம்பு.  வாள் - ஒளி.  பவம் - தீவினை.  பாசம் - மலக்கட்டு, ஆணவம் மாயை கன்மம்.   பஞ்சேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகிய ஐந்து பொறிகள்.)


056. கொடுங்கோன்மை - 10. ஆபயன் குன்றும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், " நாட்டை ஆளும் அரசன் குடிமக்களைக் காக்கத் தவறினால், அறநெறி இல்லாத அந்த நாட்டில் பசுக்கள் பால் தருவது சுருங்கும். உயிர்களின் துயர் போக்கும் அறவோர் தமது நேர்மையை மறந்து விடுவர்" என்கின்றார் நாயனார்.

மழை பெய்தால் பசுக்கள் புல்லினை மேய்ந்து பால் கறக்கும். பால் இல்லையாயின் ஓதுதலும், வேட்டலும் இல்லையாய் விடும். அதற்குரிய அந்தணர் மந்திரம் கற்பம் என்பவைகளை ஓதாமையால், யாகம் நடக்காது. அது நடக்காது போகவே, மழை பொழிதலும் இல்லையாகும். 


"மழைஇன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவமில்லார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்".


என்னும் நான்மணிக்கடிகைப் பாடலும்,


"தானம் தவம் இரண்டும் தங்கா, வியன்உலகம்

வானம் வழங்காது எனின்"


"சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு"


என்னும் திருக்குறள் கருத்தையும் நோக்குக.


“வேள்வி நற்பயன் வீழ்புனல் ஆவது,

நாளும் அர்ச்சனை நல் உறுப்பு, ஆதலால்,

ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை

மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.”


எனவரும் பெரியபுராணப் பாடல் கருத்தையும் நோக்குக.


மன்னனின் ஆட்சி, உயிரினங்கள் வாழ்வாங்கு வாழ்தற்கும், அவை இறைவழிபாடாற்றி இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மை நலங்களையும் அடைதற்கு ஏதுவாகவும் இருத்தல் வேண்டும். 


இதற்குத் திருக்குறள்...

“ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல் மறப்பர்,

காவலன் காவான் எனின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

காவலன் காவான் எனின் --- காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், 

ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், 

அறு தொழிலோர் நூல் மறப்பர் --- அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.

(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இதனால், அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“ஆவையும் பாவையும் மற்று அறவோரையும்

தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும்

காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல்

மேவும் மறுமைக்கு மீளா நரகமே.”    --- திருமந்திரம்.

 இதன் பொருள் ---

பசுக்களையும், பெண்டிரையும், துறவறத்தாரையும், தேவர்களாலும் வணங்கப்படும் சிவனடியாரையும் பிறர் நலியாமல் காத்தற்குரியவன் அரசன். அவன் அதனைச் செய்யாது ஒழிவானாயின், மறுமையில் மீளா நரகம் புகுவன்.



“காவலனை ஆக வழிபட்டார் மற்றவன்

ஏவல் வினைசெய்து இருந்தார்க்கு உதவுஅடுத்தல்

ஆ அணைய நின்று அதன் கன்று முலைஇருப்பத்

தாய் அணல் தான்சுவைத் தற்று.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

காவலனை ஆக - அரசனைத் தனக்குத் துணையாகக் கொண்டு, வழிபட்டார் - அவனைச் சார்ந்தொழுகினார், அவன் ஏவல் வினை செய்திருந்தார்க்கு - அவனால் ஏவப்பட்ட வேலையைச் செய்பவர்க்கு, உதவு அடுத்தல் - உதவிசெய்து அவரால் காரியம் பெறலாமென்று நினைத்தல், ஆ - பசுவினை, அணைய நின்ற - அணைந்து நின்ற, தன் கன்று - பசுவின் கன்று, முலையிருப்ப - தாயினது மடி இருக்கவும், தாய் அணல் சுவைத் தற்று - தாயினது அணலைச் சுவைத்தாற் போலும். (அணல் – கீழ்வாய், தாடி, அலைதாடி, கழுத்து)



என்னஉறு துயர்கண்டும் இடர்உறும் இவள் என்னீர்,

பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ?

மன்னுறு துயர்செய்த மறவினை அறியாதேற்கு

என்உறு வினைகாணா இதுவென உரையாரோ?

யாரும்இல் மருள்மாலை இடர்உறு தமியேன்முன்

தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ?

பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப

ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ?

கண்பொழி புனல்சோரும் கடுவினை உடையேன்முன்

புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ?

மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறு இழைப்ப

உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ?

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம்

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

---  சிலப்பதிகாரம், ஊர்சூழ் வரி.

இதன் பொருள் ---


என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் - என்னுடைய மிக்க துயரத்தினைக் கண்டு வைத்தும் நம் காதலியாகிய இவள் இதற்கு இடர் உறுவாள் என எண்ணுகின்றிலீர், பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ - அது நிற்க, மணம் பொருந்திய சந்தன முதலிய பூசப்பட்ட நுமது பொன் போன்ற மேனி புழுதி படிந்து கிடக்கத்தக்கதொன்றோ, மன் உறு துயர் செய்த மறவினை அறியாதேற்கு - மிக்க துயரத்துக்குக் காரணமான அரசன் செய்த இக் கொலைத் தொழில் எத் தன்மையால் நிகழ்ந்ததென அறியவொண்ணாத எனக்கு, என் உறுவினை காண் ஆ இது என உரையாரோ - இக் கொலைத் தொழிற்குக் காரணம் யான் முற்பிறப்பிற் செய்த என் தீவினையே காண் என எனக்கு இந் நாட்டிற் சொல்லார்களோ?

யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் - எனக்குத் துணையாக ஒருவருமில்லாத மயக்கத்தினைச் செய்யும் இம் மாலைக் காலத்தே துயருறுகின்ற தனியேன் கண் முன்னரேயே, தார் மலி மணி மார்பம் தரை மூழ்கிக் கிடப்பதோ - நிறைந்த மலர்மாலைக்குள் முழுகும் உமது அழகிய மார்பு வெறு நிலத்தே படிந்து கிடக்கத் தக்க தொன்றோ, பார் மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறு இழைப்ப ஈர்வதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - உலகத்தார் மிக்க பழிச்சொல் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இந் நிகழ்ந்த நிகழ்ச்சி வெட்டுவிப்பதோர் நின் தீவினையின் பயன்காண் என ஒருவரும் சொல்லாரோ?

      கண்பொழி புனல் சோரும் கடுவினை உடையேன் முன் - கண்கள் பொழிகின்ற நீர் சோராநிற்கும் திவினை உடையேன் கண் முன்னரேயே, புண்பொழி குருதியிராய்ப் பொடி யாடிக் கிடப்பதோ - நீவிர் புண்ணினின்றும் ஒழுகுகின்ற செந்நீரை உடையீராய்ப் புழுதி படிந்து கிடத்தல் தகுவதொன்றோ? மன்பதை பழி தூற்ற மன்னவன் தவறு இழைப்ப உண்பதோர் வினைகாண் ஆ இது வென உரையாரோ - மக்கள் பலரும் தன் பழியினைக் கூறித் தூற்றும் வண்ணம் பாண்டியன் தவற்றினைச் செய்ய இது நிகழ்ந்தது நீ நுகர்வதோர் தீவினையின் பயன்காண் என ஒருவரும் கூறாரோ?

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - கோல் கோடிய மன்னனை உடைய இக் கூடல் நகரிடத்துக் கற்புடை மகளிரும் உள்ளார்களோ?  கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் - தாம் உள்ளத்துக் கொண்ட கணவருடைய மிக்க குறையினைப் பொறுக்கின்ற கற்புடைய மகளிரும் உளர் கொல்லோ?

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டு கொல் - இக் கூடல் நகரிடத்துப் பெரியோரும் உளரோ?  ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் - பிறர் ஈன்று போகட்ட குழவியைத் தாங்கி வளர்க்கின்ற பெரியோரும் உளரோ?

தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல் - என் கணவனைக் கூரிய வாளால் வெட்டியதனால் கோல் கோடிய பாண்டியன் கூடல் நகரிடத்துத் தெய்வமும் உளதோ?



056. கொடுங்கோன்மை - 09. முறைகோடி மன்னவன்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "நீதிநெறிமுறை தவறி அரசன் ஆட்சி புரிவானானால், அவனது நாட்டில் மேகமானது மழை பொழிதலைச் செய்யாது" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்....

“முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னவன் முறை கோடிச் செய்யின் --- மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், 

உறைகோடி வானம் பெயல் ஒல்லாது --- அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.

(இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமீந்துள்ளதை அறியலாம்....

“சிறையில் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;

முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா

மறையின்றிச் செய்யும் வினை.” --- இன்னா நாற்பது.

இதன் பொருள் ---

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா - வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம்; உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா - மழைத்துளி ஒழுகுதலை உடைய பழைய கூரையை உடைய மனையில் பொருந்தி வாழ்தல் துன்பமாம்; முறை இன்றி ஆளும் அரசு இன்னா - நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாம்; மறை இன்றி செய்யும் வினை இன்னா - சூழ்தலில்லாமல், செய்யுங் கருமம் துன்பந் தருவதாகும். 


“செந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்,

வெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்,

பெண்பால் கொழுநன் வழிச்செலவும், இம்மூன்றும்

திங்கள்மும் மாரிக்கு வித்து.” --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

செந்தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் - வேள்விச் செந்தீயை வளர்க்கின்ற அந்தணர்கள் தமக்கு உரிய அறத்தை மறவாது வாழ்தலும்; வெம் சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும் - கொடுமையாகிய கோபத்தைக் காட்டுகின்ற அரசன் முறையாக ஆளும் வழியில் சேர்ந்து நடத்தலும்; பெண்பால் கொழுநன் வழிச் செலவும் - பெண்ணுக்கு உரிய குணம் அமைந்தவள், தன் கணவனுடைய குறிப்பின் வழியில் நடத்தலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், திங்கள் மும்மாரிக்கு வித்து - மாதந்தோறும் பெய்யவேண்டிய மூன்று மழைக்கும் காரணங்களாம்.

அந்தணர் மறைவழி நடத்தலாலும், அரசன் செங்கோல் நெறி பிறழாததாலும், மனைவி கணவனுக்கு இசைந்து நடப்பதாலும் திங்கள் மும்மாரி பொழிந்து நாடு செழிக்கும் என்பது.



“கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்,

உள்பொருள் சொல்லாச் சலம் மொழி மாந்தரும்,

இல் இருந்து எல்லை கடப்பாளும், இம்மூவர்

வல்லே மழை அருக்குங் கோள்.”  --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும் - தான் கொள்ளுதற்குரிய பொருளை விரும்பி குடிகளை வருத்துகின்ற அரசனும்; உள்பொருள் சொல்லா சலம் மொழி மாந்தரும் - உண்மை நிகழ்ச்சியைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்ற மனிதரும்; இல் இருந்து எல்லை கடப்பாளும் - ஒருவனுக்கு மனையாளாய் வீட்டிலிருந்து, அவன் சொல், மனை என்னும் இரண்டின் எல்லையைக் கடந்து நடப்பவளும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், வல்லே மழை அருக்கும் கோள் - விரைந்து மழையைக் குறைக்கின்ற கோள்களாம்.

குடிகொன்று இறைகொள்ளும் கொடுங்கோல் மன்னனும், பொய் பேசுகின்றவனும், பெண் தன்மையை மீறி நடக்கின்ற பெண்ணும் இருக்கும் நாட்டில் மழை பெய்யாதென்பது.

மணிபல்லவத்தினின்றும் நீங்கிய மணிமேகலா தெய்வம், ''இரவு கழிந்தால் மணிமேகலை என் கையகப்படுவாள்'' என்று வேட்கை நோயால் துயிலாது இருந்த உதயகுமரன் முன் தோன்றி, "மன்னவன் மகனே! கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும், மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை, மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னும் தகுதியின்றாகும், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த, அவத்திறம் ஒழிக" என்று அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு, உவவனம் சென்று அங்கே துயிலும் சுதமதியை எழுப்பி, "யான் மணிமேகலா தெய்வம்; இந்திர விழாக் காண்பற்கு வந்தேன்; நீ அஞ்சாதே, மணிமேகலைக்குப் புத்தன் அறநெறியில் செல்லும் நற்பொழுது வந்து உற்றதாகலின் அவளை எடுத்துச் சென்று மணிபல்லவத்தில் வைத்தேன் என்று சொன்னது....

மணிமேகலை என்னும் காப்பியம், "துயில் எழுப்பிய காதை"யில் கூறும் செய்தியைக் காண்போம். 


மணிமேகலை தனை மணிபல்லவத்து இடை

மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி,

மணிமேகலை தனை மலர்ப்பொழில் கண்ட

உதயகுமரன் உறுதுயர் எய்திக்

கங்குல் கழியில் என கையகத்தாள் எனப்


பொங்குமெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்

முன்னர்த் தோன்றி, "மன்னவன் மகனே!


கோல்நிலை திரிந்திடில், கோள்நிலை திரியும்,

கோள்நிலை திரிந்திடின், மாரிவறங் கூரும்,

மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை,

மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்

தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்.."

இதன் பொருள்.... 

மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவத்தின்கண் வைத்து, அதனைவிட்டு நீங்க, மணிமேகலையைப் பூஞ்சோலையில் கண்ட (அரசிளம் குமரனான) உதயகுமரன், மிக்க துன்பமுற்று,  "இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள்" என்று,  சிறந்த மெல்லிய படுக்கையில் கண் துயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி, "அரசன் புதல்வனே!  அரசனது கோல் கோடுவதாயின் கோள்களின் நிலை வேறுபடும். அங்ஙனம் கோள்கள் நிலை தவறினால் மழை பொய்யாமல் கழியும் காலம் மிகும். மழை வளம் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம். நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர் என்று கூறப்படும் தகைமை இல்லாமல் ஆகும். ஆகலின், தவத்தினை மேற்கொண்ட மணிமேகலைபால்  நீ வைத்த,  தீய விருப்பத்தின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர்.... ;


மூலம் 4


“கல்லாதான் தான்காணும் நுட்பமும், காதுஇரண்டும்

இல்லாதாள் எக்கழுத்தம் செய்தலும், - இல்லாதான்

ஒல்லாப் பொருள்இல்லார்க்கு ஈத்துஅளியான்என்றலும்,

நல்லார்கள் கேட்பின் நகை.” -- சிறுபஞ்சமூலம்.


ஆசிரியனிடத்து கற்கவேண்டிய முறைப்படி நூல்களைக் கல்லாத ஒருவன், தானே நூல்களை ஆராய்ந்து காண்கின்ற நுண்பொருளும்; இரண்டு காதுகளும் இல்லாத ஒருத்தி, தான் மிக்க அழகுடையவள் என்று இறுமாப்பு அடைதலும்; கையில் பொருள் இல்லாதவன்,  தன்னைப் போல் பொருளற்ற வறியவர்கட்கு, அவர்களின் விருப்பம் தணிவதற்குப் பொருந்தாத பொருளைக் கொடுத்து, தான் வறியவரிடத்து மிகவும் அருளுடையவன் என்று தற்பெருமை சொல்லுதலும்; அறிவு உடைய நல்லவர்கள் கேட்டால், அவர்கட்குச் சிரிப்பை உண்டாக்கும்.

    ஆசிரியனிடத்து நூல்களை முறைப்படிக் கல்லாதவன் நுண்பொருளை ஆராய்ந்து சொல்லத் தொடங்கினால், நேர் பொருள் அல்லாமல், அவையில் சொல்லத் தகாத சொற்களைக் கூற முற்பட்டு இகழ்ச்சிக்கு உரியவனாவன். குருவின் அருள் இல்லாமல் எந்த நூலையும் யாரும் முறைப்படக் கற்றுவிட முடியாது. “கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும், கொள்ளார் அறிவு உடையார்” என்னும் திருக்குறள் கருத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்

பெற்றதாம் பேதையோர் சூத்திரம், --- மற்றதனை

நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லி, தன்

புல்லறிவு காட்டி விடும். ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தாம் ஆழ்ந்து பயின்றதும் இல்லாமல், தக்க கேள்வியும் இன்றிப் பள்ளி ஆசிரியர் நெட்டுருச் செய்வித்த மனப்பாடத்தால் தெரிந்து கொண்டதாகிய ஒரு நூற்பாவினை, நற்புலவர் கூடியுள்ள அவையில் சென்று நாணம் இன்றி விரித்துரைத்து, அறிவில்லாதவன் தனது சிற்றறிவினைக் காட்டிக் கொள்வான்.


கடுகம் 4

 “பகைமுன்னர் வாழ்க்கை செயலும், தொகைநின்ற

பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும்; - முன்தன்னைக்

காய்வனைக் கைவாங்கிக் கோடலும், இம்மூன்றும்

சாவ உறுவான் தொழில்.” -- திரிகடுகம்.


    தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்; தொகுதியாக நின்ற மாடுகளின் நடுவே கோல் இல்லாமல் செல்லுதலும்; முன்னே நின்று தன்னை வருத்துபவனை,  முன் விட்டு நீக்கி, பின் அவனோடு நட்புக் கொள்ளுதலும் ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய செய்கைகளாம். (சாவினை ஒத்த துன்பம் தரும் செயல்கள் என்றபடி)


பகைவர்களுக்கு எதிரில் தனது செல்வநிலையைக் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோல் இல்லாது மாட்டு மந்தையில் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும். 


55. பெண் மனதை யார் அறிவார்?

 


“அத்தி மலரும், அருங்காக்கை வெண்ணிறமும்,

கத்துபுனல் மீன்பதம் கண்டாலும், - பித்தரே!

கானார் தெரியல் கடவுளரும் காண்பரோ?

மானார் விழியார் மனம்.” -- நீதிவெண்பா.


காம மயக்கம் கொண்ட பித்தர்களே! காண்பதற்கு அரிய அத்திமலர் என்பது இல்லை. வெண்ணிறம் பொருந்திய காக்கை இல்லை. ஒலிக்கின்ற கடலில் உள்ள மீன்களுக்குக் கால்கள் இல்லை. இவற்றை ஒருகால் பார்க்க முடிந்தாலும், பெண்களின் உள்ளத்தை நம்மால் அறிய முடியாது. நம்மால் மட்டுமோ எனில், மணம் பொருந்திய மாலைகளை அணிந்த தேவர்களும் மானின் பார்வை போலும் மருண்ட விழிகளை உடைய அப் பெண்களின் உள்ளத்தைக் காண்பார்களோ? அவர்களாலும் காண இயலாது.


(அத்தி - பூவாத மரம்.  கத்து - ஒலி. புனல் - நீர்.  பதம் - பாதம், அடி.  கான் - மணம். தெரியல் - மாலை.)


பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுக...


"வாரியா ழத்தையும், புனலெறியும் அலைகளையும்,

     மானிடர்கள் சனனத்தையும்,

மன்னவர்கள் நினைவையும், புருடர்யோ கங்களையும்,

     வானின்உயர் நீளத்தையும்,


பாரில்எழு மணலையும், பலபிரா ணிகளையும்,

     படியாண்ட மன்ன வரையும்

பருப்பதத் தின்நிறையும், ஈசுரச் செயலையும்,

     பனிமாரி பொழி துளியையும்,


சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்,

     சித்தர்தம துள்ளத்தையும்,

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி

     தெரிந்தள விடக்கூடுமோ?


வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு

     மருகனென வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"               -- குமரேச சதகம்.


 இதன் பொருள் ---


வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வாழும் மார்பனான திருமாலுக்கு மருகன் என்ற முறையிலே வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் - கடலின் ஆழத்தையும் அது வீசும் அலைகளையும், மானிடர்கள் சனனத்தையும் - மக்களின் பிறப்பையும்,  ("எழுகடல் மணலை அளவிடின் அதிகம், எனது இடர்ப் பிறவி அவதாரம்" என்பது அருணகிரிநாதர் திருப்புகழ். கடற்கரை மணலை அளவிட முடியாது. ஒருக்கால் அளிவிட்டுக் கூளக் கூடுமானால், அந்த எண்ணிக்கையை விடவும் அதிகம்ர மானிடப் பிறவியின் எண்ணிக்கை) மன்னவர்கள் நினைவையும் - அரசர்கள் எண்ணத்தையும்,  புருஷர் யோகங்களையும் - ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும், வானின் உயர் நீளத்தையும் - வானத்தின் உயரத்தையும் நீளத்தையும், பாரில் எழு மணலையும் - உலகில் தோன்றும் மணலையும்,  பல பிராணிகளையும் - பலவகையான உயிர்களையும்,  படி ஆண்ட மன்னவரையும் - உலகினை ஆண்ட அரசர்களையும், பருப்பதத்தின் நிறையும் - மலையின் நிறையையும், ஈசுரச் செயலையும் - இறைவன் அருள் விளங்கும் நிலையையும், பனிமாரி பொழி துளியையும் - பனித் துளிகளையும், மழைத் துளிகளையும்,  சீரிய தமிழ்ப் புலவர் வாக்கில் எழு கவியையும் - சிறந்த தமிழ்ப் புலவருடைய நாவிலிருநது விளையும் பாடல்களின் சிறப்பையும்;  சித்தர் தமது உள்ளத்தையும் - சித்தருடைய நினைவின் உறுதியையும்,  தெரிவையர்கள் சிந்தையையும் - பெண்களின் உள்ளத்தையும்,  இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ - இவ்வளவு என்று கூறும் முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக் கூற முடியுமோ? (முடியாது).


056. கொடுங்கோன்மை - 06. மன்னர்க்கு மன்னுதல்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "அரசனுக்குப் புகழ் நிலைக்கக் காரணம் அவனது நல்லாட்சி. அது இல்லையானால் அவனுக்குப் புகழ் பொருந்துவது இல்லை" என்கின்றார் நாயனார்.

ஒளி --- புகழ்.

ஒருவன் அறத்திற்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்தால், அவற்றால் புகழ் நிலைக்கும். அதற்கு எதிராக பழியை உண்டாக்கக் கூடிய பாவச் செயல்களைச் செய்வானாயின், புகழ் நிலைபெறாது. வெற்றி, கொடை முதலியவைகளும் செங்கோலனாக இல்லாதபோது நிலைத்து இருக்கா.


இதற்குத் திருக்குறள்...

“மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃது இன்றேல்

மன்னா ஆம் மன்னர்க்கு ஒளி.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை --- அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், 

அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் --- அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.

(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக'  (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வேர்த்துஇடுக்கண் செய்து விளிந்தான் கருநாடன்

மூர்த்திபால் மேனாள், முருகேசா! --- கூர்த்துஉணரில்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, கருநாடன் - கருநாட நாட்டு அரசன், மேனாள் - முன்னாளில், மூர்த்திபால் - மூர்த்தி நாயனாரிடத்திலே, வேர்த்து இடுக்கண் செய்து - சினந்து துன்பத்தைச் செய்து, விளிந்தான் - மாண்டொழிந்தான். கூர்த்து உணரில் - ஆராய்ந்து பார்த்தால், மன்னர்க்கு மன்னுதல் - அரசர்க்குப் புகழ்கள் நிலைபெறுதல், செங்கோன்மை - செங்கோன்மையினாலேயாம், அஃது இன்றேல் - செங்கோல்முறை இல்லாவிடில், மன்னர்க்கு ஒளி - அரசர்க்குப் புகழானது, மன்னாவாம் - நிலைபெறமாட்டாவாம்.

கருநாட நாட்டு அரசன் மூர்த்தி நாயனார்க்கு முன்னாளில் இடையூறுகள் செய்து அழிந்தொழிந்தான். அரசருக்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோன்மையினாலேயாம். செங்கோன்மை இல்லாது ஒழியின் அரசர்கட்குப் புகழ் நிலைபெறமாட்டாது என்பதாம்.

மும்மையால் உலகாண்ட மூர்த்தி  நாயனார் வரலாறு


பாண்டி நாட்டிலே, மதுரைப்பதியிலே, வணிகர் குலத்திலே மூர்த்தி நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவபத்தியில் சிறந்தவர். அன்பையே திருவுருவாக் கொண்டவர்.

நாயனார் சொக்கலிங்கப் பெருமானுக்குத் சந்தனக் காப்பு அணிவதைத் தமக்கு உரிய திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். வரும் நாளில், வடுகக் கருநாடக மன்னன் ஒருவன் தென்னாடு போந்து, பாண்டியனை வென்று, மதுரைக்கு அதிபதியானான். அவன், சமண சமயத்தைத் தழுவித் திருநீறு அணியும் சிவனடியார்களுக்குத் தீங்கு இழைத்து வந்தான்.  அவன், தீங்குக்கு இடையே மூர்த்தி நாயனாரின் திருத்தொண்டும் நடந்து வந்தது.

கருநாடக மன்னன், மூர்த்தியாருக்குப் பல இடையூறுகள் புரியத் தொடங்கினான். மூர்த்தியார் தம் திருத்தொண்டில் வழுவினாரில்லை. அது கண்ட மன்னன், நாயனார் சந்தனக் கட்டைகளைப் பெறாதவாறு தடைகளை எல்லாம் செய்தான்.  நாயனார் மனம் வருந்தலாயிற்று. வருத்த மேலீட்டால், "இக் கொடுங்கோலன் என்று மாய்வான்? இந் நாடு திருநீற்று நெறியினைத் தாங்கும் வேந்தனை என்றே பெறும்?" என்று எண்ணி எண்ணிச் சந்தனக் கட்டையைத் தேடிப் பகல் முழுவதும் திரிந்தார். சந்தனக் கட்டை எங்கும் கிடைக்கவில்லை.  திருக்கோயிலுக்குச் சென்று, "இன்று சந்தனக் கட்டைக்கு முட்டு நேர்ந்தால் என்ன? அதைத் தேய்க்கும் என் கைக்கு எவ்வித முட்டும் நேரவில்லை" என்று கருதி, ஒரு சந்தனக்கல் மீது தமது முழங்கையை வைத்துத் தேய்த்தார். இரத்தம் பெருகிப் பாய்ந்தது. எலும்பு வெளிப்பட்டது.  எலும்புத் துளைகள் திறந்தன. மூளை ஒழுகிற்று. அதைக் கண்டு பொறாத ஆண்டவன் அருளால், "ஐயனே! மெய்யன்பின் முனிவால் இதைச் செய்யாதே.  இராச்சியம் எல்லாம் நீயே கைக்கொண்டு கொடுங்கோலனால் விளைந்த தீமைகளை ஒழித்து, உன் திருப்பணியைச் செய்து, நமது சிவலோகத்தை அடைவாயாக" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார் நடுக்குற்றுக் கையைத் தேய்த்தலை நிறுத்தினார். அவரது கை ஊறு நீங்கிப் பழையபடி ஆயிற்று.

மூர்த்தியார் "இறைவன் திருவருள் சுரப்பின், இவ் வையத்தை நான் தாங்குவேன்" என்று நினைந்து, திருக்கோயில் புறத்தில் நின்றார். அன்று இரவே அக் கொடிய மன்னன் இறந்துபட்டான். அடுத்த நாள் காலை அவனுக்குத் தகனக் கிரியைகள் செய்யப்பட்டன. அவனுக்குப் புதல்வர்கள் முதலிய அரசுரிமைத் தாயத்தார் எவரும் இல்லாமையால், எவரை அரசராக்குவது என்று அமைச்சர்கள் ஆலோசித்து, முடிவாக, ஒரு யானையைக் கண்கட்டி விடுதல் வேண்டுமென்றும், அது எவரை எடுத்துக் கொண்டு வருகிறதோ, அவர் அரசராதல் வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அவர்கள் தீர்மானித்தவாறே, ஒரு யானையை முறைப்படி அருச்சித்து, ஓர் ஏந்தலை எடுத்து வருமாறு பணித்துத், துகிலால் அதன் கண்ணைக்கட்டி விட்டார்கள். யானை தெருக்களிலே திரிந்து, மூர்த்தி நாயனார் முன்னே போய்த் தாழ்ந்து, அவரை எடுத்துப் பிடரியில் வைத்தது.  அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை அரசராகக் கொண்டு அவர் திருவடியில் விழுந்து வணங்கி, அவரை மண்டபத்திற்கு அழைத்துச் சென்று சிங்காசனத்தில் வீற்றிருக்கச் செய்தார்கள்.

முடிசூட்டற்குரிய கிரியைகள் தொடங்கப்பட்டன. அப்போது, நாயனார், மந்திரிகளை நோக்கி, "சமணம் அழிந்து, சைவம் ஓங்கினால் நான் அரசாட்சியை ஏற்றல் கூடும்" என்றார்.  அதற்கு எல்லாரும் இசைந்தனர். பின்னும் நாயனார், "எனக்குத் திருநீறு அபிடேகப் பொருளாகவும், கண்டிகை கலனாகவும், சடைமுடி முடியாகவும் இருத்தல் வேண்டும்" என்று கூறினார். அதற்கும் அமைச்சர் முதலானோர் உடன்பட்டனர். அம் முறையில் முடி சூட்டு விழா நன்கு நடைபெற்றது. நாயனார் திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரைத் தொழுது யானை மீது ஏறி அரண்மனை சேர்ந்தார்.

மூர்த்தி நாயனார், பிரமசரியத்தில் உறுதிகொண்டு, திருநீறு, கண்டிகை, சடைமுடி ஆகிய மூன்றையும் அணிந்து, சைவம் ஓங்கப் பன்னெடு நாள் ஆட்சி புரிந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.


056. கொடுங்கோன்மை - 05. அல்லல் பட்டு ஆற்றாது

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்தில் ஒரும் ஐந்தாம் திருக்குறளில், "துன்பமுற்று, அத் துன்பத்தைத் தாங்க மாட்டாமல் தனது குடிமக்கள் அழுத கண்ணீரானது, அரசனுடைய செல்வத்தை அழிக்கும் படைக்கலம் ஆகும்" என்கின்றார் நாயனார்.

"ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளினை ஒக்கும்" என்பது முதுமொழி. அல்லல் படுத்திய பாவத்தால் உண்டான வருத்தம், கண்ணீராய் வெளிப்பட்டது.  அது செல்வத்தைத் தேய்க்கும் படையாக மாறியது.


இதற்குத் திருக்குறள்....

"அல்லல்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே,

செல்வத்தைத் தேய்க்கும் படை."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே --- அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, 

செல்வத்தைத் தேய்க்கும் படை --- அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.

(அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“ஐவர்இல் லாள்அழுத அன்றேகண்டு ஏக்குற்றார்

துய்யகங்கை சேய்முதலோர், சோமேசா! --- மெய்யேயாம்

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.”


இதன் பொருள்---


சோமேசா! அல்லல்பட்டு - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று, ஆற்றாது - அதனைப் பொறுக்கமாட்டாது,   அழுத கண்ணீர் அன்றே - அழுத கண்ணீரல்லவோ, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி, மெய்யே ஆம் - அஃது உண்மையே,

ஐவர் இல்லாள் அழுத அன்றே - பஞ்சபாண்டவரது மனைவியாகிய திரௌபதி அரசவையில் தன்னைத் துரியோதனன் மானபங்கம் செய்த காலத்தில் மனம் நொந்து அழுதபோதே, கண்டு -அதனைப் பார்த்து, துய்ய கங்கை சேய் முதலோர் - தூய கங்கையின் மைந்தனான வீடுமன் முதலிய பெரியோர்கள், ஏக்குற்றார் - துரியோதனன் முதலியோருக்கு நேரும் அழிவைக் குறித்து மிகவும் ஏங்கினார்கள் ஆகலான் என்றவாறு.


“நெடுமா நகரில் சனம் அனைத்தும்

நேயம் பெறக் கண்டு, இவை கூற

வடுமா மரபிற்கு உறத்தேடும்

மன்பேர் அவையின் முன்புக்காள்,

கொடுமா மலர்க்கண் புனல் சோர,

குலைந்தே கிடந்த குழல் சோர,

தடுமாறு உள்ளம் தனிசோர,

தலைநாள் அளித்த தழல் போல்வாள்”


“நாணே முதலாம் நாற்குணனும்

நண்ணும் கற்பும் நயந்து அணிந்த

பூணே அனையாள் அழுது அரற்றி,

புன்பேர் அவையில் புகும் சோகம்

காணேம் என்று, நிலன்நோக்கி

கதிர்வேல் நிருபர் இருந்து இரங்க,

கோணே நேர்பாடாய் இருந்தான்

குருடு என்று உரைக்கும் கொடியோனே.”


“வாரும் கண்ணீர் வளர் கொங்கை

வரைமேல் அருவி எனவீழ,

தாரும் குழலும் மின்னுடனே

தலம்சேர் கொண்டல் எனவீழ,

கூரும் துயரினுடன் வீழ்ந்து,

கோகோ என்று கோச்சபையில்

சோரும் கொடியை மெய்நோக்கி,

துச்சாதனன் மெய் சுடச்சொன்னான்.”

--- வில்லிபாரதம், சூதுபோர்ச் சருக்கம்.

தருமபுத்திரன் சகுனியுடன் சூதாடி அரசு முதலிய செல்வம் யாவும் தோற்றபின், துரியோதனன் ஏவலால் துச்சாதனன் திரௌபதியைத் தலைமயிர் பற்றி இழுத்து வந்து சபையில் நிறுத்தித் துகிலுரிந்து மானபங்கம் செய்ய முயன்றபோது, அவள் கண்ணீர் ஆறாய்ப் பெருக அழுதமை கண்டு பீஷ்மர், துரோணர், முதலிய பெரியோர்கள் துரியோதனனுக்கு அஞ்சிச் செயலற்று இருந்தாரேனும், இக்கண்ணீர் அத் துரியோதனன் குலம் அழிதற்கு ஏதுவாகும் என்று ஏங்கினார்கள். "ஆறாகி இரு தடங்கண் அஞ்சன வெம்புனல் சோர, அளகம் சோர, வேறான துகில் தளைந்த கை சோர, மெய்சோர வேறுஓர் சொல்லும், கூறாது கோவிந்தா! கோவிந்தா! என்று அரற்றிக் குளிர்ந்து நாவின் ஊறாத அமுது ஊற உடல் புளகித்து உள்ளமெலாம் உருகினாளே" என்னும் பாரதக் கவியை நோக்குக.


அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதி சூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“துன்று புவிக்கு இடும்பை சூழ்ந்து புரவேந்தர்

இன்றி எரிந்தார், இரங்கேசா! --- கன்றியே

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை”

இதன் பொருள் --- 

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! புரவேந்தர் - திரிபுராதிகள், புவிக்கு - பொருந்திய பூலோகத்திற்கு, இடும்பை சூழ்ந்து - துன்பம் செய்து, இன்றி எரிந்தார் - (அதனால்) இல்லாமல் வெந்து சாம்பார் ஆனார்கள், (ஆகையால், இது)  செல்வத்தை - அரசனுடைய செல்வமாகிய மரத்தை, தேய்க்கும் படை - குறைக்கும் வாளாவது, கன்றி - மனம் நொந்து, அல்லல் பட்டு - குடிகள் துன்பப்பட்டு, ஆற்றாது - (அதைப்) பொறுக்க மாட்டாமல், அழுத கண்ணீர் அன்றே - அழுது உகுத்த கண்ணீர் அல்லவோ (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளோடு ஒக்கும்.

விளக்கவுரை --- திரிபுராதிகள் முறையே செம்பொன், வெண்பொன், கரும்பொன்களால் ஆகிய மூன்று கோட்டைகளில் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கோட்டைகள் பறக்கும் தன்மை உடையன. ஆகையால், அவர்கள் தமது வர பலத்தால், அங்கங்கும் பறந்து சென்று பட்டணங்களையும், கோட்டைகளையும் பாழாக்கி உயிர்களுக்குத் துன்பம் செய்து வந்தார்கள். தேவர்களும் அவர்கள் துன்பத்தைச் சகியாமல் முறையிட்டதனால், சிவபெருமான், பூமியே தேராகவும்,  சந்திர சூரியர்களே அதன் சக்கரங்களாகவும்,  மேருவே வில்லாகவும், ஆதிசேஷனே நாணாகவும், விஷ்ணுவே பாணமாகவும் கொண்டு வந்து, இடையில் தேர் அச்சு முறிந்ததனால், சிரித்து அம் மூன்று பட்டணங்களையும் எரித்ததனால், அவர்களின் முப்புரமும் சாம்பாரய்ப் போனது. அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், திரிபுராதிகளின் வர பலத்தையும் செல்வத்தையும் தேய்த்த படையாயினமை காண்க.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“தாதை சிறையிருக்கத் தங்கைஅழக் கஞ்சன்உறும்

தீதைஎவர் சொல்வார், சிவசிவா! --- மேதினியில்

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.”

தாதை - கம்சனின் தந்தை, உக்கிரசேனன். தேவகி - கம்சனின் தங்கை. கண்ணன் தந்தை - வசுதேவன். யாவரையும் சிறை வைத்துத் தங்கை பிள்ளைகளைக் கொன்றான்.

திருமாலின் ஒன்பதாவது அவதாரமாகிய கண்ணபிரானுடைய தாய் தேவகி. அவள் கம்சனுடைய தங்கை. எனவே, கண்ணனுடைய அம்மான் கம்சன். அப் பாதகன் அறநெறி விடுத்து, மறநெறி அடுத்து, தீமை பல புரிந்து வந்தான்.

கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டு, எங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்று, மாயை சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை எங்கு உளது என்று அறியானாய், உலகில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டு, கண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டு, கண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.

“கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்

வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்

புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்

கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.”


“குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி

வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,

மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்

உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.”


யசோதையின் திருமாளிகையின் முன், இளங்கொண்டல் மேகம்போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு பூதனையின் மனம் கரையவில்லை. இரு கரங்களால் எடுத்தாள். மடியில் இருத்தி, நஞ்சுடன் கூடிய தனது முலையை மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருஷ்ணர் அவளுடைய பால், உணர்வு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர். மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும், அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.

கம்சன் கண்ணனை மதுராபுரிக்கு அழைத்து, அவரைக் கொல்லும் பொருட்டு, தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி வாயிலில் வைத்திருந்தான்.

கஜேந்திரம் என்ற யானையைக் காத்தருளிய கண்ணபிரான் அந்த யானையுடன் பொருது, அதன் தந்தத்தை ஒடித்து வெற்றி பெற்றனர்.

கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு இரண்டு அரக்கர்களைக் கம்சன் ஏவினான். ஒரு அரக்கன் கண்ணன் மேய்க்கின்ற பசுவின் கன்றுகளுடன் தானும் ஒரு கன்றாக வடிவெடுத்து,சமயம் பார்த்து தன் கொம்பினால் குத்திக் கொல்லுதற்கு ஆயத்தமாக இருந்தான். மற்றொரு அரக்கன், கண்ணபிரான் கன்று மேய்த்து வெய்யிலுக்கு ஒதுங்கும் சோலையில் ஒரு விளாமரமாக நின்றான். அதன் நிழலில் வந்து ஒதுங்கியவுடன் வேருடன் சாய்ந்து கொல்லக் கருதி இருந்தான்.

இந்த இருவருடைய மாயச் சூழ்ச்சியையும் ஆயர்குலக் கொழுந்தாகிய அண்ணல் உணர்ந்தனர். ஆயர் சிறார்களுடன் கன்றுகளை மேய்த்து அவ் விளாமரத்தின் நிழலில் வெய்யிலுக்கு ஒதுங்கினார். அடே கோபாலர்களே! இந்த விளா மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்து நிறைந்திருக்கின்றன. இங்கே இவைகளை அடித்து உதிர்க்கக் கல்லும் இல்லை என்று கூறி, கன்றின் உருவமாக மாறி வந்துள்ள அரக்கனை எடுத்து விளாமரத்தின் மீது சாடினார். விளாமரமாக நின்ற அரக்கனும், கன்றாக வந்த அரக்கனும் ஒருங்கே மாண்டு ஒழிந்தார்கள்.  இந்த அற்புதத்தைக் கண்ட ஆயச் சிறுவர்கள் தூய மாதவனை வாயார வாழ்த்தி வணங்கினார்கள்.

இந்தச் செய்தியை, சிவரகசியம் என்ற பெருநூல் படிக்கும்தொறும் தித்திக்கும் தமிழில் பேசுகின்றது. அப் பாடல் அடியில் வருகின்றது.


“கன்றெடுத்து விளவெறிந்து காலெடுத்த

மழைக்கு உடைந்த காலிகாக்கக்

குன்றெடுத்த மால்விடையின் கொடிஎடுத்து

வடிவெடுத்துக் கூறஒணாத

மன்றெடுத்த சேவடியின் மலரெடுத்துச்

சாத்தியன்பின் வழிபட்டோர்கள்

இன்றெடுத்த உடற்பிறவி இனிஎடா

வண்ணம் எண்ணம் எய்துவாரே.”


பின்வரும் திருவாசகப் பாடலிலும் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது.


“என்றும் பிறந்துஇறந்து ஆழாமே ஆண்டுகொண்டான்

கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பரிய

குன்றாத சீர்த்தில்லை அம்பலவன் குணம்பரவித்

துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ.”


கம்சன் கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டு, ஒரு இரக்கமில்லாத அரக்கனை ஏவினான். அவன் பசுவினை மேய்த்து வரும் கண்ணன் எதிரில் பெரிய பறவை வடிவாக வாயில் அனல் பொறிகள் பறக்க எதிர்ந்தான். கண்ணபிரான் அஞ்சாது சென்று அப் பறவையின் அலகுகளை இரு கரங்களாலும் பற்றிப் பிளந்து எறிந்தார்.

குபேரனுடைய புதல்வர்களாகிய நளகூபரன் மணிக்ரீவன் என்று இருவர்களும், அரம்பையர்களுடன் களிப்பு மிகுதியால் காதலுடன் ஆடை நீத்து, நீரில் விளையாடினார்கள். அவ்வழி வந்த நாரதமுனிவர், "இது அறிவுடையோர்க்கு அடாது. நீங்கள் மரங்கள் ஆகக் கடவீர்கள்" என்று சபித்தார். அவர்கள் அஞ்சி அஞ்சலி செய்து பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

"ஆயர்பாடியிலே நந்தகோபன் மாளிகையில் மருதமரங்களாகத் தோன்று வளர்ந்து, தேவயாண்டு நூறுவரை நிற்பீர்கள்.  பூபாரம் தீர்க்க கோபாலகிருஷ்ணராகத் திருமால் அவதரிப்பார்.  அவருடைய பாதகமலம் தீண்ட உமது சாபம் தீரும்" என்று வரம் தந்து நீங்கினார்.  அவர்கள் அவ்வாறே நந்தகோபன் வீட்டிலே மருதமரங்களாக முளைத்துக் கிளைத்து நின்றார்கள்.

கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உரியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள். வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள்.  எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. அந்தோ இது என்ன அதிசயம் இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங்கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உரல் அச் சிறிய சந்தில் வரத் தடைபட்டதனால், தமது செம்பவளத் திருவடித் தாமரையால் அம்மருத மரங்களை உதைத்தருளினார். இடி இடித்ததுபோல் அம்மரங்கள் இரண்டும் வேருடன் வீழ்ந்தன. நளகூபரன், மணிக்ரீவன் என்ற குபேர புதல்வர்கள் தொல்லுருவமாகிய நல்லுருவம் பெற்று, தாமோதரனைப் போற்றி செய்து, தங்கள் பதவியை அடைந்தார்கள்.

யசோதை தன் குலக்கொழுந்தாகிய கோபாலகிருஷ்ணனை வாயில் முற்றத்தில் கண்வளரச் செய்து, அந்தப்புரத்தில் குடும்ப அலுவலில் ஈடுபட்டிருந்தாள். கமசனால் அனுப்பப்பட்ட ஒரு அரக்கன், அருகில் இருந்த ஒரு வண்டியில் மறைந்து, அச் சகடத்தைக் கண்ணபிரான் மீது உருட்டினான். கண்துயின்று கொண்டு இருந்த கமலக்கண்ணர், சட்டென்று கண் விழித்து, சகடத்தைச் சிறிது திருவடியால் உதைத்தருளினார்.  அரக்கன் அழிந்தனன்.

கண்ணபிரான் பலராமருடன் கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் இனிது வளர்கின்றபோது, கம்சன் அவர்களை அக்ரூரரை ஏவி அழைத்தான். கார்வண்ணமூர்த்தியும், சங்கவண்ண மூர்த்தியும் கம்சனைக் காணும் பொருட்டு, மதுரையம்பதியை அடைந்தார்கள். அரண்மனை வாயிலில் அவர்களைத் தடுத்துக் கொல்லும் பொருட்டு, மிகப் பெரிய மல்லர்களாகிய சாணூரன், முட்டிகன் என்ற இருவரை கம்சன் நியமித்து இருந்தான்.  மலைகள் இரண்டு எதிர்ப்பது போல் இருவர்களும் இருபாலகர்களை எதிர்த்தார்கள். சாணூரன் கண்ணபிரானுடனும், முட்டிகன் பலராமருடனும் பொருதார்கள். இவர்கள் இருவரையும் மல்யுத்தத்தில் கூறிய முறைப்படி வலசாரி இடசாரியாகத் திரிந்தும், சுழன்றும் போராடி, முடிவில் கண்ணபிரானும் பலராமரும் அம் மல்லர்களைக் கொன்றார்கள்.

கம்சன் அதிர்ந்து போனான். கிருஷ்ண-பலராமரை பாராட்ட மனமில்லாதது மட்டுமின்றி, "வீரர்களே! இந்த கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரியை விட்டு விரட்டி அடியுங்கள். இவர்களது தந்தை நந்தகோபன், தாய் யசோதா, இவர்களுக்கு ஆதரவளித்த எனது தந்தை உக்ரசேனன் உட்பட அனைவரும் கொல்லப்பட வேண்டும்"  என ஆணையிட்டான்.

சற்றும் நியாயமின்றி நடந்து கொள்ளும் கம்சனின் மீது கோபம் கொண்ட கிருஷ்ணர், அதே வேகத்தில் அவன் வீற்றிருந்த சிம்மாசனம் நோக்கி ஓடினார். தலையில் இருந்த கிரீடத்தை தள்ளி விட்டவர், அவன் முடியை பற்றி மல்யுத்த மைதானத்திற்கு இழுத்து வந்தார்.

பின்னர் கம்சனை கீழே தள்ளி மார்பின் மீது ஏறி அமர்ந்து முகத்தில் ஒரு குத்து விட்டார். அந்த ஒரு அடியை தாங்க முடியாமல் அந்த அரக்கன் உயிரை விட்டான். கம்சனுக்கு கங்கர் என்பவர் உள்ளிட்ட எட்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் கிருஷ்ணரை பழி வாங்க விரைந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரையும் பலராமர், ஒருவர் பின் ஒருவராக கொன்றார்.

தேவகியும், நந்தகோபரும் அல்லல்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீர், கம்சனை அடியோடு அழித்தது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"மாற்றார் படைஅன்றி வன் கொடுங்கோலவரை அல்லல்பட்டு

ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும்படை

கால் தாமரைப் புல்லை மாயோன் அளக்கும் இக்காசினியின்

மேல்தான் இவையன்றி என்சொல்வர் சீரற்ற வேந்தரையே".

இதன் பொருள் ---

பகைவரின் படைகள் மட்டுமல்லாது, கொடுங்கோல் புரிந்த அரசனால், துன்பப்பட்டு குடிமக்கள் அழுத கண்ணீரானது, செல்வத்தைத் தேய்க்கும் படைக்கலமாகும் என்பதைத் தவிர, திருப்புல்லாணியில் எழுந்தருளி உள்ள திருமாலால் தனது திருவடியால் அளக்கப்பட்ட இந்த உலகத்தில் கொடுங்கோல் அரசு புரிகின்ற அரசர்க்கு வேறு என்ன சொல்ல உள்ளது?

மாற்றார் படையன்றி - பகைவர்களுடைய படையே அல்லாமல்.  வன்கொடுங்கோல் - வலிய கொடிய கோல். காசினியின் மேல்தான் - உலகத்திலே. சீரற்ற வேந்தரை - முறைப்படி அரசு செலுத்தாத அரசர்களை.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்

மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்

ஆற்றா(து) அவர் அழுத கண்ணீர் அவைஅவர்க்குக்

கூற்றமாய் வீழ்ந்து விடும்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

தோற்றத்தால் பொல்லார் - குடிப்பிறப்பால் தீய செயல்களை உடையவர், துணையில்லார் - ஒரு துணையும் இல்லாதவர், நல்கூர்ந்தார் - வறுமையுடையார், மாற்றத்தால் செற்றார் - சொற்களால் பகைவரை ஒத்தார், என - என்று இங்ஙனம் நினைத்து, வலியார் ஆட்டியக்கால் - குடிப் பிறப்பு, துணை, செல்வம் முதலிய வலிமை உடையார் அவை இல்லாதாரை நலிந்த இடத்து, ஆற்றாது அவர் அழுத கண்ணீர் அவை - தாங்க இயலாது அவர்கள் தம் கண்களினின்றும் பரப்பிய கண்ணீராகிய அவையே, அவர்க்கு கூற்றமாய் வீழ்ந்துவிடும் - தம்மை நலிந்த அவர்க்குக் கூற்றாய் விழாநிற்கும்.


எளியார் அழுத கண்ணீர், அவர் தம்மை நலிந்தார்க்குக் கூற்றாய் முடியும்.


அருவினள் சேறலும் அற் புதத்து அவண்

வரு பொருள் யாவையும் மறைந்து போயின

வெரு அரு முறை புரி வேந்தை விட்டு அகல்

திருவொடு பெயர்வது ஓர் செல்வம் போலவே.

--- கந்தபுராணம், மாயை நீங்கு படலம்.

குடிமக்களை அச்சுறுத்தி ஆட்சி புரியும் அரசனை விட்டு. அவனிடத்து இருந்து செல்வம் அனைத்தும் நீங்கினது போன்று, காசிப முனிவரை விட்டு மாயை என்பாள் நீங்கியதும், அதிசயிக்கத்தக்க வகையில் அங்கே இருந்த செல்வங்கள் அனைத்தும் மறைந்து போயின. 


மூலம் 3

“கற்புஉடைய பெண்அமிர்து, கற்றுஅடங்கி னான்அமிர்து,

நற்புடைய நாடுஅமிர்து,அந் நாட்டுக்கு - நற்புடைய

மோகமே சேர்கொடி வேந்துஅமிர்து, சேவகனும்

ஆகவே செய்யின் அமிர்து.” -- சிறுபஞ்சமூலம்


கற்புள்ள பெண்ணானவள் தன் கணவனுக்கு அமிர்தம் போல்பவள். அறிவு நூல்களைக் கற்று, அவற்றின் வழியில் அடங்கி நிற்பவன் உலகத்தார்க்கு அமிர்தம் போன்றவன். நன்மையுள்ள நாடு அந்நாட்டரசனுக்கு அமிர்தம் போன்றது. அந்த நாட்டுக்கு நன்மையைச் செய்கின்ற மேகத்தை அளாவுகின்ற கொடியை உடைய அரசன் அமிர்தம் போல் இன்பம் செய்வான். அவ்வேந்தனது சேவகனும், வேந்தனுக்கு நன்மையானவற்றையே செய்வானாயின்,  அவன் அவ்வேந்தனுக்கு அமிர்தம் போல்வான்.


கடுகம் 3


“கல்லார்க்கு இனனாய் ஒழுகலும், காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும், - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலும், இம் மூன்றும்

அறியாமையால் வருங் கேடு.”  – திரிகடுகம்


அறிவுநூல்களைக் கற்று அறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மன உறுதிகொண்ட மனைவியைக் கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை உடன் கொண்டு புகுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும், ஒருவனது அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.

மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் கேட்டைத் தருவன என்பது கருத்து.


அட்டைப் பகட்டுடன் வணிக நோக்கில் மக்களைக் கவரும் விதமாக வருகின்ற நூல்கள் பல உள்ளன. அவற்றால் உண்மை அறிவு விங்குவது இல்லை. எனவே, அறிவுநூல்களைப் பயிலுதல் வேண்டும். 

அறிவு, வாழ்க்கைக்கு இன்றியமையாதது. எது அறிவு என்று இனம் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பலரிடத்தில் அறியாமையே அறிவுபோலக் காட்சியளிக்கிறது. தம்மிடமுள்ள அறியாமையையே அறிவு என நம்பி நிலைதடுமாறி நிற்பவர்கள் அகந்தை கொண்டவர்களாக நடமாடுகிறார்கள். 

    பன்றிகளைக் கட்டு அவிழ்த்து விட்டால் சந்தனக் குழம்பை அவை நாடமாட்டா. மலக்குவியலை நோக்கியே ஓடும். அதுபோல் அறியாமையையே அறிவென நம்பித் திரிபவர்கள் எதிலும் அறிவை நாடமாட்டார்கள், ஆபாசங்களையே தேடுவர். அதையே விரித்து விரித்து உரைப்பர். ஆனால், தமது அறியாமையை மறைக்க "அறிவு, அறிவு” என்று சொல்லிக் கொள்வர். இது அறிவு என்ற பெயரில் உலா வரும் ஒருவகை அறியாமை. வேறுசிலர், சில செய்திகளை அறிந்துகொண்டு அவற்றைக் கிளிப்பிள்ளை போலச் சொல்வர். சொல்லும் செய்திக்கும் அவர்களுக்கும் உணர்வு அடிப்படையில் யாதொரு விதமான தொடர்பும் இராது. இதுவும் ஒருவகை அறியாமையே. வேறு சிலர், புத்தகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பர். இவர்கள் ஒருவகையான அஜீரணவாதிகள். இவர்களுக்கு அறிவினுடைய வாசனையே இருப்பதில்லை.  அறிவு என்பது நுட்பமானது, திட்பமானது. ஒருவர் அறிவுடையவர் அல்லது அறிவில்லாதவர் என்பதை அவருடைய பேச்சுக்களைக் கொண்டும் அறிய முடியாது. அவர் எழுதும் நூல்களைக் கொண்டும் அறிய முடியாது. அவருடைய வாழ்க்கையே அறிவையும் அறியாமையையும் காட்டும். பிறர்க்குத் துன்பம் செய்யாதவர்கள் அறிவுடையோர்கள். இதனைத் திருவள்ளவு நாநனார், “அறிவினால் ஆகுவது உண்டோ, பிறிதன் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை” என்று காடினார். “அறிவு அற்றம், காக்கும் கருவி” என்றும் காட்டினார். உயிர்களைத் துன்பத்தொடக்கில் இருந்து பாதுகாப்பதே அறிவு. இத்தகைய அறிவைப் பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது, அறிவு நூல்களைப் பயிலுவதை விடவும், அறிவு நூல்களைக் கற்று வல்லாருடைய தொடர்பு ஆகும். எனவே, “கல்லார்க்கு இனன் ஆய் ஒழுகுதல்” தவிர்க்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டது. உண்மை அறிவு விளங்கினாலே, இல்லாளைப் புடைத்தல் கூடாது என்பதும், சிற்றறிவினரைத் தமது இல்லத்தில் புகவிடுதல் கூடாது என்பதும் விளங்கும்.


54. நல்ல பிள்ளை ஒன்று போதும்

 


“பொற்பு அறிவு இல்லாத பல புத்திரரைப் பெறலின்,ஓர்

நற்புதல்வனைப் பெறுதல் நன்றாமே, - பொற்கொடியே!

பன்றிபல குட்டி பயந்ததினால் ஏதுபயன்?

ஒன்றமையாதோ? கரிக்கு ஒன்று ஓது.” -- நீதிவெண்பா


பொன்னால் ஆன கொடியைப் போன்றவளே! பன்றி பல குட்டிகளைப் போட்டதனால் என்ன பயன்? யானை ஒரே குட்டியைப் போட்டாலும் அது போதாதோ? நீ சொல். அதனால், நல்ல அறிவில்லாத பல பிள்ளைகளைப் பெறுதலைக் காட்டிலும், நல்ல அறிவுள்ள புதல்வன் ஒருவனைப் பெறுதல் நலமாகும்.

(பொற்பு அறிவு - அழகிய அறிவு.  பயத்தல் - ஈனுதல்.  கரி - யானை.)


"தண்டலையார் சதகம்" என்னும் நூலில் இதே கருத்து அமைந்த பாடல் ஒன்று....


"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்

     குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு

     நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வருடந் தோறும்

பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே."


இதன் பொருள் ---


மன்றில் நடம் புரிவாரே - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் - யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல),  நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் - நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ - நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).


"நன்றி தரும் பிள்ளை ஒன்று, அறிவு இல்லாத பிள்ளை நூறு" இந்த வாசகம் சிந்தனைக்கு உரியது.


திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள்தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவும் இல்லை. நல்லறிவு சொன்னவர்களை அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.


இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை ஒன்று வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவதும், வணங்குவதும் காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.


மிருகண்டு முனிவர் பிள்ளைப் பேறு வேண்டி, சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். பெருமான் அவரது தவத்திற்கு இரங்கி, அவர் முன் தோன்றி, பின்வருமாறு கேட்கின்றார்...


1. தீய குணங்களே நிறைந்து, கொஞ்சமும் மெய்யறிவு இல்லாமல், ஊமையும், செவிடும், முடமும், குருடும் ஆகிய தன்மைகளோடு, நோயில் உழல்பவனாக, நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ள வேண்டுமா?


"தீங்கு உறு குணமே மிக்கு, 

சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி, 

முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும்

உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை 

ஈதுமோ மாதவத்தோய்".           ---  கந்தபுராணம்.


(மூங்கை --- ஊமை. வெதிர் --- செவிடு)


2. அழகான உடம்போடு, சிறிதும் உறுப்புக் குறைவு இல்லாமல், நோய் நொடிகளில் வாடாமல், எனக்கும் பத்தி உடையவன் ஆகி, சாத்திரங்கள் பலவற்றையும் பயின்று, பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக் கூடிய பிள்ளை வேண்டுமா? 


"கோலமெய் வனப்பு மிக்கு, 

குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி, 

எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று,

கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின்

எண்ணம் என் பகர்தி" என்றான்.  --- கந்தபுராணம்.


சிவபெருமான் இவ்வாறு இரண்டு OPTION-களை மிருகண்டு முனிவர்முன் வைத்தார். மிருகண்டு முனிவர், இறைவர் கூறியதை ஆராய்ந்து, பார்த்தார். தீய குணங்களோடு, ஊமையும், செவிடும், முடமுமாக, அறிவில்லாமல், நூறு ஆண்டுகள் வாழுகின்ற பிள்ளையைப் பெறுவதால் பலனில்லை என்பதை உணர்ந்து, "ஆயுள் குறைந்து இருந்தாலும், அறிவு உடையவன் ஆகவும், உடம்பில் ஒரு குறைவும் இல்லாதவனாகவும், பெருமானே! உன்னிடத்தில் அன்பு பூண்ட புதல்வனை எனக்கு அருள் புரியவும்" என்று OPTION-2-ஐயே வேண்டினார்.


"மாண்தகு தவத்தின் மேலாம் 

மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் 

அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி,

எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே 

வேண்டினன், புரிக" என்றான். --- கந்த புராணம்.


அவ்வரத்தின் படி அவதரித்தவர்தான் மார்க்கண்டேயர். சற்புத்திரனாக விளங்கினபடியால், சிவன் அருளால், "என்றும் பதினாறு" என்று சிரஞ்சீவியாக விளங்கினார்.

எனவே, வாழ்வில் ஒருவருக்கு அவசியமான பேறுகளில் (பாக்கியங்களில்) ஒன்று, "சற்புத்திர பாக்கியம்" எனப்படும் "நன்மக்கள் பேறு" ஆகும். அறிவார்ந்த, நற்குணமுள்ள மக்கள் பேற்றினை ஒருவன் பெற்றிருந்தால், அவனுக்கு இனிவரும் பிறவிகளில் எல்லாம் தீயவை வந்து சேரமாட்டா என்று திருவள்ளுவ நாயனார் அருளியதைக் கருத்தில் கொள்க. "ஆஸ்திக்குப் பிள்ளை" என்ற எண்ணம் வேண்டாம்.


056. கொடுங்கோன்மை - 04. கூழும் குடியும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 56 -- கொடுங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "மேல் விளைவை அறியாமல், முறை தவறி நடக்கும் அரசு, முன்னர் ஈட்டிய பொருளையும், அப் பொருள் வருவாய்க்குக் காரணமான குடிமக்களையும் ஒருசேர இழந்து விடும்" என்கின்றார் நாயனார்.

இதற்குத் திருக்குறள்...

“கூழும் குடியும் ஒருங்கு இழக்கும், கோல்கோடி

சூழாது செய்யும் அரசு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு --- மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், 

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் --- அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.

('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கோல்நிலை திரிந்திடில் கோள்நிலை திரியும்;

கோள்நிலை திரிந்திடில் மாரிவறங் கூரும்;

மாரிவறங் கூரில் மன்னுயிர் இல்லை;

மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்று ஆகும்; ---  மணிமேகலை.


இதன் பொருள் ---


கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும் - அரசனது கோல் கோடுவதாயின் கோள்களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும் - அங்ஙனம் கோள்கள் நிலை தவறினால் மழை பொய்யாமல் கழியும் காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும் - நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமை இலதாம்.



கொடியமன் னவர்க்குக் குடிகளே ஒன்னார்;

கோட்டையே அமர்க்களம்; அவர்தம்

அடிகள்தோய் நிலம் எங்கணும் படு குழியாம்;

அயின்றிடும் அன்னமும் விடமாம்;

நெடிய ஆசனமே காசன மேடை;

நிமிர் உழையோர் நமன் தூதர்;

கடிமனை மயானக் காடு, எனில் கொடுங்கோற்

காரணர் உய்யுமாறு உளதோ. ---  நீதிநூல்.


இதன் பொருள் ---


  முறை தவறிய மன்னர்களுக்குக் குடிகளே பகைவர்; போர்முனையே கோட்டை; அவர்கள் நடக்கும் இடங்களெல்லாம் படுகுழி; உண்ணும் ஊண் நஞ்சு; இருக்கை கொலை மேடை; பணியாளர் கூற்றுவன் தூதுவர்; அரண்மனை சுடுகாடு. இந்நிலையிலுள்ள மன்னர்கள் ஒருகாலும் ஈடேறார்கள்.


057. வெருவந்த செய்யாமை - இறைகடியன் என்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தன் நாட்டு அரசன...