மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா,

தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா,

கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே

கொண்ட விரதம் குறைவு.”.      – சிறுபஞ்சமூலம்


தாழைமலர் முடிக்கப்பட்டு விளங்குகின்ற அழகிய கூந்தலை உடையவளே! நண்பர்களிடத்துத் துன்பம் செய்தலும், அவர்கள் துன்புறும் காலத்தில் அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடாதிருத்தலும், பகைவரிடத்து நட்புக் கொள்ளுதலும், உள்ளத் தூய்மை உடையவரின் தொடர்பை விட்டுநீங்குதலும், கைக்கொண்ட நோன்பில் குறைவுபடுதலும் ஆகிய இவைகள் தீய பயன்களையே தரும்.


கடுகம் 13

“சீலம் அறிவான் இளங்கிளை, சாலக்

குடியோம்பல் வல்லான் அரசன், - வடுவின்றி

மாண்ட குணத்தான் தவசி, என்று இம்மூவர்

யாண்டும் பெறற்கு அரியார்.” -- திரிகடுகம்.


பிறர் குணத்தை அறிந்து நடக்கிறவன்  இளமைதொட்டு வந்த சுற்றத்தான் ஆவான். குடிகளை நன்கு பேணுதலில் வல்லவன் அரசன் ஆவான். குற்றம் இல்லாத மாட்சிமைப்பட்ட குணத்தை உடையவன் தவசி ஆவான். இப்படிப்பட்ட மூன்று திறத்தாரும் எவ்விடத்தும் பெறுதற்கு அரியவர் ஆவார். (தேடிப் பெற வேண்டியவர் ஆவார்.)


059. ஒற்றாடல் - 02. எல்லார்க்கும் எல்லாம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "எல்லார் இடத்தும் நடப்பவற்றை எல்லாம், நாள்தோறும் ஒற்றரால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.


எல்லார் இடத்தும் என்றது, பகைவர், நண்பர், அயலார் ஆகிய மூவரிடத்தும். எல்லாம் என்றது, நாட்டில் நிகழும் நல்லனவும் தீயனவும் ஆகிய எல்லா நிகழ்வுகளையும், தெரிந்து கொள்ளுதலும், 


வல்லறிதல் ஆவது, தெரிந்துகொண்ட பொழுதே, நல்ல செயல்களுக்கு உண்டான அருளைச் செலுத்தி, அதற்கு உரியோரைக் காத்தலும், தீய செயல்களுக்கு உரியோரைத் தக்க முறைப்படி தண்டித்தல் செய்வதும். காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.


இதற்குத் திருக்குறள்...

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல், வேந்தன் தொழில்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் --- எல்லார் கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்;

வேந்தன் தொழில் --- அரசனுக்கு உரிய தொழில்.

('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விரு தொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“சீர்படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்

பேர்படைத்த சேரர் பெருமான்போல் --- பார்மிசையின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”

இதன் பொருள் ---

சேரர்பெருமான் - சேரமான் பெருமாள் நாயனார்.  பாணபத்திரருடைய வறுமையைத் தீர்த்தல் பொருட்டுச் சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரம் வருமாறு......

திருச்சிற்றம்பலம்

மதிமலி புரிசை மாடக் கூடல்,

பதிமிசை நிலவு பால் நிறவரிச் சிறகு

அன்னம் பயில்பொழில், ஆலவாயில்

மன்னிய சிவன், யான் மொழிதரு மாற்றம்,


பருவக் கொண்மூப்படி எனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்

செருமா உகைக்கும் சேரலன் காண்க,


பண்பால்  யாழ் பயில் பாணபத்திரன்,

தன்போல் என்பால் அன்பன், தன்பால்

காண்பது கருதிப் போந்தனன்,

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.

திருச்சிற்றம்பலம்

இதனைக் கொண்டு சென்ற பாணபத்திரரைச் சேரர் பல உபசாரங்களுடன் வரவேற்று, அவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினார் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“வேதன்இல்லாள் வீந்ததிறம் மீனவற்கு நீதெரித்தாய்,

சோதி,பழி அஞ்சும் சோமேசா - பூதலத்தின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”


இதன் பொருள் ---

சோதி - பரஞ்சோதி வடிவமாகவுள்ளவரே,  பழி அஞ்சும் சோமேசா - முன்பு பாண்டிய மன்னனுக்கு வர வின்ற பழிக்கு அஞ்சிய சோமேசப் பெருமானே! பூதலத்தின் - நிலவுலகத்தில், எல்லார்க்கும் - எல்லார்கண்ணும், நிகழ்பவை எல்லாம் - நிகழ்வன எல்லாவற்றையும், எஞ்ஞான்றும் வல் அறிதல் - நாள்தோறும் ஒற்றான் விரைந்து அறிதல், வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்,

வேதன் - ஓர் அந்தணணுடைய, இல்லாள் வீந்த திறம் - மனைவி இறந்த விதத்தை, மீனவற்கு - குலோத்துங்க பாண்டியனுக்கு, நீ தெரித்தாய் - நீயே தெரிவித்து அருளினாய் ஆகலான் என்றவாறு.

அரசர்க்கு உற்றார் உறவினர் நண்பினர் பகைவர் எல்லாரானும் தீமை விளையக் கூடும் ஆகலின், அவர்கள் செயலையும் ஒற்றான் அறியவேண்டுவது அரசர்க்கு இன்றி அமையாதது ஆயிற்று. காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.

குலோத்துங்க பாண்டியன் என்பான் செங்கோல் செலுத்தும் நாள், ஓர் அந்தணன் தன் மனைவியோடும் கைக் குழந்தையோடும் திருப்புத்தூரினின்றும் புறப்பட்டு மாமனார் வீடு செல்ல மதுரைக்கு வருகிற வழியில் தாகவிடாய் கொண்ட மனைவியைக் குழந்தையுடன் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் விட்டு, நீர் கொணரச் சென்றான். அவ் ஆலமரத்தில் நெடுங்காலமாய்ச் சிக்குண்டு இருந்த ஓர் அம்பு காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து அப் பார்ப்பனியின் வயிற்றில் ஊடுருவிற்று. அவளும் உயிர் இழந்தாள். அத் தருணத்தில் அம்பினைத் தொடுத்த வில் ஏந்தியவனான வேடன் ஒருவன் வெயிற்கு ஒதுங்கி அந்த ஆலமரத்தின் அடியில் நின்றான். நீர் கொணரச் சென்ற அந்தணன் நீரொடு திரும்பி வந்து, தன் மனைவி இறந்து கிடப்பதைக் கண்டான். இது யார் செய்தார் என்று சுற்றிப் பார்த்தான். வேடன் ஒருபுறம் நிற்கின்றான். அவனே செய்தானென்று துணிந்து அரசன் ஆணை கொண்டு அவன் தன்னுடன் வரும்படி செய்து இறந்த மனைவியைத் தன் முதுகில் இட்டுக் குழந்தையை இடுக்கி மதுரை நோக்கி வழி நடந்து வந்து பாண்டியன் அரண்மனை வாயிலில் வேடனை விட்டு, மனைவியின் சவத்தை இட்டு, "நீதி தவறாத மன்னவ! இது முறையோ?" என்று கதறினான். வாயில் காப்போர் நிகழ்ந்தன யாவும் பாண்டியற்குத் தெரிவித்தார்கள். பாண்டியன் உடனே தன் அரியணையினின்றும் போந்து அந்தணன் நிலை கண்டு வருந்தி விசாரித்தான். அந்தணன் நிகழ்ந்தன கூறி "அவ் வேடனே கொன்றான்" என்றான். அதன்பின் அரசன் வேடனது வாய்ப் பிறப்பைக் கேட்டான். அவன் "தான் கொன்றதுமில்லை, கொன்றாரைக் கண்டதுமில்லை" என்றான். மேல் தான் இட்ட கட்டளைப்படி அவ் வேடனைச் சிறையிலிட்டுத் தண்டலாளர்கள் பலவாறு கடும் தண்டனை செய்தும் அவன் ஒரு சொல்லாகச் சொன்னமையானும், கொன்ற குறிப்பு முகத்தில் தோன்றாமையானும், ஒன்றும் தோன்றாது பாண்டியன் சுந்தரேசப் பெருமான் திருமுன் புகுந்து, "மன்றாடு மணியே! ஒன்றாலும் என் ஐயம் தீர்தற்கு இடனில்லை. நீரே என் தாழ்வு கெட நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கவேண்டும்" என்று பிரார்த்தித்தான்.  உடனே, "வணிக வீதியில் ஒரு வீட்டில் மணம் நடக்கிறது. அந்தணனோடு நீ அங்கு வருவாய். உனது ஐயம் தெளியும்" என்று ஆகாயவாணி கூறக்கேட்டு, அவ்வாறே அன்று இரவு அந்தணனோடு அவ் வீட்டில் ஒரு பக்கம் மறைந்து இருந்தான். அன்று அம் மணமகன் ஆயுள் முடிய, யமதூதர்கள் அவனுடைய உயிரைக் கவர வந்தார்கள். பாண்டியனும் அந்தணனும் கேட்கும்படி, வந்த தூதர்களில் ஒருவன், "யாம் எவ்வாறு இம் மணமகன் உயிரைக் கொள்வது? அவன் உடம்பில் பிணி ஏதும் இல்லையே? காரணமின்றி உயிர் கொள்ளப்படாதே" என்றான். அதற்கு மற்றவன், "அன்று ஆலமரத்தில் சிக்குண்டு இருந்த அம்பைக் காற்றால் விழும்படி செய்து எவ்வாறு பார்ப்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ, அவ்வாறு ஓர் உபாயத்தால் இவன் உயிரையும் கவரவேண்டும். ஒன்று செய்க. வாத்திய முழக்கொலியால் அவ் ஈன்றணிமையுடைய இப்பசுவை வெருட்டித் தாம்பு அறுத்துவிட்டு இவன் உயிரைக் கவர்க" என்றான். பாண்டியன் அந்தணனை நோக்கி, "கேட்டீரோ, மனம் தெளிந்ததோ" என்றான். அதற்கு அந்தணன், "நிற்க இம் மணமகன் இவ்வாறு இறப்பானேல், என் மனைவி இறந்தது அவ்வாறெனக் கொள்வன்" என்றான். மணவினை தொடங்கினார்கள். பல வாத்தியங்களும் முழங்கின.  அம்முழக்கொலியால் வெருண்டு கட்டிய தாம்பு அறுந்து போக அப் பசுவானது ஓடிப்போய் மணமகனை முட்டியது. அவன் அக்கணமே உயிர் துறந்தான். ஐயம் நீங்கி யாவர்க்கும் இது கூறி மகிழ்ந்து, அந்தணனுக்கு மறுமணம் முடிக்கப் பொருளுதவி, விடை தந்து,  சிறையிலிருந்த வேடனுக்கு இடப்பட்ட விலங்கைக் கழற்றுவித்து, "தெளியாது யாம் கடும் தண்டம் செய்தோம். பொறுத்துக் கொள்க" என்று இரந்துவேண்டி அவனுக்கு வேண்டியன கொடுத்து விட்டான் பாண்டியன். இது திருவிளையாடல் புராணத்து உள்ளது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...

"நெறிவார் சடையாரைப் போல், நீள்திலத்தோர் செய்கை

அறிவார் கழிறிற்று அறிவார் --- அறிவார்ஆர்

எல்லார்க்கு எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்"

இதன் விளக்கம் ---

மலைநாட்டிலே உள்ள மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே பெருமாக்கோதையார் என்பவர் அவதரித்தார். இளம் வயதிலேயே அவர் வைராக்கியம் உடையவராய்ச் சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டும் என்னும் கருத்தினராய் விளங்கினார்.  திருவஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தை அடைந்தார். பரமசிவனே சுவதந்திரர். நாம் பரதந்திரர் என்று உணர்ந்தார். சிவாதீனமாய் நின்றார். நாள்தோறும் நியமமுடன் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். அப்போது செங்கோல் பொறையன் என்னும் சேர அரசன் தபோவனத்தை அடைந்தான். மன்னன் ஒருவன் இல்லாமல் நாடு இருத்தல் கூடாது என்று எண்ணிய, மந்திரிமார்கள் திருத்தொண்டு செய்துகொண்டு இருக்கும் பெருமாக்கோதையாரிடம் வந்து இம்மலை நாட்டை நீரே முடிசூடி அரசியற்றல் வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.  பெருமாக்கோதையார் அதனைக் கேட்டு ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வணங்கி விண்ணப்பித்தார்.  அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்தி வழுவாது அரசியற்றும் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகள் அனைத்தையும் அறியும் அறிவையும், நாசம் இல்லாத மகா பராக்கிரமத்தையும், பெருங்கொடையையும், அரசருக்கு உரிய படை வாகனம் முதலிய எல்லாவற்றையும் கைவரப் பெற்றார். மீட்டும் இறைவனை வணங்கி விடைபெற்று வெளிப் போந்து, முடிசூடி அரசியற்றினார் சேரமான் பெருமாள். எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

தாய் அறியாத சேய் இருந்தாலும்

தான் அறியாதவர் இல்லை,

ஆய தன்மையினால் அறவழி நிற்கும்

அறிஞரை அறிந்து, அவர்க்குரிய

தேய ஆதிக்கம் தந்து நல் நீதி

செலுத்தி, எங்கணும், மருந்தினுக்கும்

தீயவர் இலர் என்று இசையுற மடக்குந்

திறல்உளோன் பூதல வேந்தே. ---  நீதிநூல்.


  எல்லாக் குடிகளையும் தானறிந்து, நல் அறிவாளரைக் கொண்டு அரசு நடத்தித், தீயவர் பெயருமில்லாமல் நீக்கிப் புகழுடன் ஆள்வோனே மன்னன்.


059. ஒற்றாடல் - 01. ஒற்றும் உரைசான்ற

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


அதாவது, பகைவர், நட்பினர், அயலார் ஆகிய மூன்று சாராரிடத்தும் நிகழுபவைகளை அறிந்து கொள்வதற்கு ஒற்றரை வைத்து ஆளும் முறைமையைச் சொன்னது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒற்றரும், புகழ் சார்ந்த நூல்முறைகளும் ஆகிய இவை இரண்டும் தன்னிரண்டு கண்களாகக் கொண்டு ஒருவன் தெளிவு பெறவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் சென்று, அங்கு நிகழ்வனவற்றை அறிந்து அறிவிப்பதால் ஒற்றரும், அவ் ஒற்றர் சொன்ன செய்திகளை நீதிநூலில் சொல்லப்பட்டுள்ள வழியே சென்று ஆராய்ந்து தெளியவேண்டி உள்ளதால், அந்த நீதிநூல்களும் ஒருவனுக்கு இரு கண்களைப் போன்றவை ஆகும்.

ஒற்றரை ஊனக் கண் என்றும், நீதிநூல்களை ஞானக்கண் என்றும் கொள்வது சிறப்பாக அமையும்.


இதற்குத் திருக்குறள்...

ஒற்றும், உரைசான்ற நூலும், இவை இரண்டும்

தெற்று என்க மன்னவன் கண்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் --- ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; 

மன்னவன் கண் தெற்றென்க --- அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.

(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந் நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளை எல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக் கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாக வந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"எற்றுஇன்றி ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்

தெற்றென்க மன்னவன்கண் என்பர், ஈதுஉன் செயல்பொருந்தும்

முற்றின்ப மன்னர் முறைமை, நின்பாத முளரியின்மேல்

பற்று என்று நான் பெறுவேனோ புல்லாணிப் பதிக்கொண்டலே".

இதன் பொருள் ---

என்னவோ என்று தெளிய முடியாதவைகளை அறிந்து சொல்லுகின்ற ஒற்றரும்,  புகழமைந்த நீதிநூல்களும் ஆகிய இவை இரண்டும், தெளியத் துணை புரிவன என்று பெரியோர் சொன்னதால், உனது தொழிலாகிய காத்தல் தொழிலைப் புரிகின்ற மன்னருக்கு இவை இரண்டும் பொருந்தும். ஒற்று, நீதிநூல் ஆகிய இரண்டில் பற்று வைத்துத் தெளிகின்ற, எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற மன்னர்களைப் போல், திருப்புல்லாணிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருமாலே! அடியேன் உனது திருவடித் தாமரையின் மேல் அன்பு வைத்துத் தெளிந்த ஞானத்தை எப்போது பெறுவேனோ?

முற்றின்ப மன்னர் - எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற அரசர்கள். பாதமுளரி - திருவடித் தாமரை. பற்று - அன்பு.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“எள்ளப் படுமரபிற்று ஆகலும், உள்பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டின்றி

உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும், இம்மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, முறையை உடையதாதலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தைக் கேட்டுப் பின் மறவாத, கூரறிவுடைமையும்; உள் பொருள் முட்டு இன்றி சொல்லும் உணர்ச்சியும் - அப் பொருளை, தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய ஒற்று ஆள் குணம் - அறிவுள்ள வேவுகாரனது தன்மையாம்.


64. நல்லவர் துன்புற்றாலும்...

“பொன்னும், கரும்பும், புகழ் பாலும், சந்தனமும்,

சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்இருந்த

நற்குணமே தோன்றும்; நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து.” -- நீதிவெண்பா


இனிமையானது என்று யாவராலும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற பொன், கரும்பு, பால், சந்தனம் என்னும் இந்நான்கு பொருள்களையும் உருக் குலைந்து வருந்தும்படி துன்புறுத்தினாலும், முன்னே இருந்த ஒளி, இனிமை, சுவை, நறுமணம் என்னும் நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும். அதுபோல, நல்லோரிடத்தும், அவர்கள் எவ்வளவு துன்புற்றாலும், அவர்களது பழைய நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும்.


(சின்னம்பட – நிலைகுலைய.  நலிந்தாலும் - துன்புற்றாலும்.)


மூலம் 12

“கோறலும் நஞ்சு, ஊனைத் துய்த்தல் கொடுநஞ்சு,

வேறலும் நஞ்சு, மாறு அல்லானை, - தேறினான்

நீடாங்கு செயதலும் நஞ்சுஆம், இளங்கிளையை

நாடாதே தீதுரையும் நஞ்சு.”    -- சிறுபஞ்சமூலம்.


ஓர் உயிரை உள்ளத்தில் அருள் இல்லாமல் கொல்லுதலும், ஒருவனுக்கு உயிரைக் கொல்லும் நஞ்சு போன்றது. அங்ஙனம் கொல்லப்பட்ட உயிரின் தசையைத் தின்னுதலும் கொடிய நஞ்சு போன்றது. தனக்கு எதிர் அல்லாதவனை, எதிர்த்து வெல்லுதலும் நஞ்சு போன்றது. ஒரு காரியத்துக்கு உரியவனென்று ஆராய்ந்து தெளியப்பட்டவனாகிய ஒருவன், அக் காரியத்தின் மேல் கால நீட்டிப்பு செய்தலும் நஞ்சு போன்றது. இளைத்த சுற்றத்தாரை ஆராயாமலே பழுது சொல்லுதலும் நஞ்சு போன்றது. (துன்பம் செய்பவை இவை என்று கூறப்பட்டது)


கடுகம் 12

“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்,

கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது.” -- திரிகடுகம்.


நன்முயற்சியை உடையவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன் படாமல் வாழ்க்கையை நடத்துபவன். உதவியாளன் என்று சொல்லப்படுவோன், வந்த விருந்தினர் பசித்து இருக்கையில், தான் மட்டும் தனித்து உண்ணாதவன். ஆசிரியர் சொல்லக் கேட்டவற்றை மறவாது மனத்தில் கொண்டு இருக்கும் நற்சிந்தை உடையவன் நல்ல கொள்கையாளன் ஆவான்.  இம் மூவரும் தனக்கு நட்பினராயிருக்க ஒருவன் வாழ்வது, அவனுக்கு நன்மை தருவதாகும்.


(தாளாண்மை – ஊக்கம், விடாமுயற்சி. வேளாண்மை -உதவி புரிதல், கொடை. கோள் – கொள்ளுதல். கேள் – உறவு, நட்பு)


கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி. வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி. ஆசிரியர் சொல்லியவற்றை மறவாது மனத்தில் கொண்டிருத்தலே நற்சிந்தை. 


“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே, செக்காரப்

பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே,- முட்டிபுகும்

பார்ப்பாரகத்தை எட்டிப் பாரோமே, எந்நாளும்

காப்பாரே வேளாளர் காண்.”         -- ஏர் எழுபது. (கம்பர்)


63. தீயோர் செல்வம் நல்லோர்க்கு ஆகாது

“பாவிதனம் தண்டிப்போர் பால்ஆகும் அல்லது, அருள்

மேவுசிவன் அன்பர்பால் மேவாதே, - ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்குஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ சொல்.” -- நீதிவெண்பா


சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகுமல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். (ஆகாது) அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.


(தனம் - செல்வம்.  மேவாது - சேராது, பொருந்தாது.)


058. கண்ணோட்டம் - 10. பெயக் கண்டும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர்" என்கின்றார் நாயனார்.

தம்மோடு பழகியவர் தமக்கு விடத்தையே கலந்து உண்ணச் செய்தாலும்,  தாம் சாதற்கு அது இடமாகும் என்று அறிந்து இருந்தும், அவரிடத்தே உள்ள அன்பின் மிகுதியால், "நீர் நஞ்சு வைத்தீர்" என்று கூறாமலும், தாம் இறப்பதை எண்ணாமலும், அவர் கொடுத்த நஞ்சை உண்டு, பின்னும் அன்போடு பழகுவர். எல்லோராலும் விரும்பத்தக்க கண்ணோட்டம் என்னும் நற்பண்பினை உடையவர் இவர் ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் --- பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; 

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் --- யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.

(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"செயத்தக்க பாவத்தினும் மேல்செய்தேனைத் திருவருள்கூர்ந்து

உயத் தக்கவாறு செய்யாய், பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனப் புகன்றார்

பயத்தக் கராசலங் காத்து அருள் புல்லைப் பதிக்கொண்டலே".


இதன் பொருள் ---


பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர் என்று திருவள்ளுவ நாயனார் சொன்னார். எனவே, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள முகில்வண்ணனே! ஆதிமூலமே என்ற யானைக்கு அபயம் தந்த காத்தவனே! செய்யக்கூடிய பாவத்தினை விடவும் மேலான பாவத்தைப் புரிந்து என் மீது திருவருள் வைத்து, பிழைக்க வைத்து அருள்வாய்

மேற்செய்தேனை - மிகுதியாகச் செய்த என்னை.  திருவருள் கூர்ந்து - திருவருள் பொருந்தி. உயத் தக்கவாறு - பிழைக்கத் தக்கபடி. பயத்த - அச்சத்தை அடைந்த. கராசலம் - ஆதிமூலமே என்ற யானை. (கரம் – கை. இங்கே துதிக்கை குறித்தது. அசலம் – மலை. துதிக்கையினை உடைய மலை. அது நானை) புல்லைப் பதிக் கொண்டல் - திருப்புல்லாணியில் எழுந்தருளிய முகில்வண்ணன்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...



“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்     

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர், 

அஞ்சில் ஓதி என் தோழி தோள்துயில் 

நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ 

என்கண் ஓடி அளிமதி, 

நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே.”  ---  நற்றிணை. 


இதன் பொருள் ---

நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டம் உடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீவிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்சு எனக் கண்டு வைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் --- நீ அத்தகைய நட்புடையனாய் இருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயே ஆயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்.

நாகரிகர் - கண்ணோட்டம் உடையவர். 



“செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார்

நயத்தகு நாகரிகம் என்ஆம்? - செயிர்த்து உரைப்பின்

நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்

எஞ்சாது எடுத்து உரைக்கல் பாற்று.”  --- நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---

செயக்கடவ அல்லனவும் செய்தும்மன் - செய்தற்கரிய செயல்களையும் மிகுதியும் செய்து முடிப்போம், என்பார் - (என்று செயலில் காட்டாது) சொல்லளவில் சொல்லி நிற்பாரின், நயத்தகு நாகரிகம் என்ஆம் - முகமனான கண்ணோட்டம் என்ன பயனைத் தரும்? (இச் செய்கை) செயிர்த்து உரைப்பின் - ஒருவரைக் கோபித்துச் சொன்னால், நெஞ்சு நோம் என்று - அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல் - அவர் தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - அது கூசாமல் கூறுந்தன்மையதாகும்.


தன்னை வந்து அடுத்துத் தன் உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவில் சொல்லிச் செயலில் அவ்வாறு செய்யாது ஒழிவது நாகரிகமாகாது.       


058. கண்ணோட்டம் - 09. ஒறுத்து ஆற்றும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தம்மை வருத்தும் வல்லியல்பு உடையாரிடத்தும், கண்ணோட்டம் செய்து, பொறுத்துக் கடமை புரியும் பண்பே தலை சிறந்தது" என்கின்றார் நாயனார்.

தன்னைத் துன்புறுத்துகின்றவர்களைத் துன்புறுத்தாது பொறுத்துக் கொள்வது, கண்ணோட்டத்தின் பயன் ஆகும். அதுவே, தலைசிறந்த குணம்.


இதற்குத் திருக்குறள்...

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும், கண்ஓடி,

பொறுத்து ஆற்றும் பண்பே தலை.


இதற்குப் பரிமேழலழகர் உரை ---

ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் --- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; 

கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை --- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மாலான் முதல்இகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்

தோலா விடம்உண்டாய், சோமேசா! --- சால

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன்பொருள்---


சோமேசா! சால ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை மிகுதியும் வருத்தும் தன்மையுடையாரிடத்தும், கண் ஓடி - கண்ணோட்டம் உடையராய், பொறுத்தாற்றும் பண்பே - குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே, தலை - அரசர்க்குத் தலையாய இயல்பாவது,


மாலான் முதல் - திருமால் முதலிய, இகழ்ந்த வானவர் தீங்கு - தேவரீரை முழுமுதற்கடவுள் என நினையாது செருக்கால் மயங்கி அவமதித்த தேவர்களுடைய குற்றத்தை, பொறுத்தும் - பொறுத்துக் கொண்டும், தோலா விடம் உண்டாய் - தோல்வி அடையாமல் யாவரையும் அழித்தற் பொருட்டு எழுந்து வந்த ஆலகால விடத்தை உண்டு பாதுகாத்து அருளினீர் ஆகலான் என்றவாறு.


சுராசுரர்கள் அமுதம் வேண்டித் திருப்பால் கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி, வாசுகியைக் கயிறாகப் பூட்டிக் கடைந்து இளைத்தார்கள். மந்தரகிரியும் நிலைபெறாது தாழ்ந்தது. அப்போது அங்கு வந்த வாலி உதவியாய் நின்று மேலும் கடையத் திருமால் கூர்வடிவம் கொண்டு மந்தரகிரியைத் தாங்கினார். மிக்க கடுமையாகக் கடையும்போது வாசுகி வருத்தம் பொறாது விடத்தைக் கக்கிப் பெருமூச்செறியக் காளகூடம் என்னும் விடம் கடலினின்றும் எழுந்து கடல் நீரைச் சுவற்றி அண்டகடாகத்தையும் எரித்து உயிர்த் தொகைகளை எல்லாம் சுட்டு வருத்த, வாலி அஞ்சி ஓடினான். பிரம விட்டுணுக்கள் உருக்குலைந்தார்கள். இறைவனை மறந்தமையால் எடுத்த காரியம் இடையூறு உற்றதன்றித் தமக்கெல்லாம் இறுதியும் வரநின்றது என அஞ்சித் திருக்கயிலை புகுந்து நிகழ்ந்தனவற்றை விண்ணப்பித்து, "இது பொழுது காத்திலையேல், எமக்கு இறுதி இன்றே ஆம், விதுமுடித்த பெருங்கருணை வெள்ளமே" என்று இரக்க, பெருமான் இருந்த நிலையில் திருக்கரத்தை நீட்ட, அவ் விடம் திரண்டு அதனுள் அடங்க, அக்கணமே அதனை உண்டு கண்டத்தின் வைத்தார்.



அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“சொல்லுக என்று அங்கதனைத் தூதுஏவி, மாதைவிடல்

இல்லைஅவன் என்றான், இரங்கேசா! --- மெல்ல

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! அங்கதனை - வாலிகுமாரனாகிய அங்கதன் என்பவனை, சொல்லுக என்று - (இராவணனுக்குப் புத்தி) சொல்லி வா என்று, தூது ஏவி - (நீ) தூது அனுப்பியும், (அவன் போய்த் திரும்பி வந்து), அவன் மாதை விடல் இல்லை என்றான் - (நான் என்ன சொல்லியும்) அவன் பிராட்டியை விடுகிற விஷயம் இல்லை என்று சொன்னான், (ஆகையால், இது) ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் - தம்மோடு தண்டம் செய்யும் தன்மையை உடைய பகைவரிடத்தும், மெல்ல கண்ணோடி - நிதானமாய் தாட்சணியம் செலுத்தி, பொறுத்து ஆற்றும் பண்பே தலை - (அவர் குற்றத்தைப்) பொறுத்துக் கொள்ளும் குணமே (அரசர்க்கு) முதன்மையான குணமாகும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- பகைவரிடத்தும் தாட்சணியம் செலுத்துதல் பார்வேந்தர் கடனாம்.


விளக்கவுரை --- இராம்பிரான் சுக்கிரீவனைத் தமக்குப் படைத் துணைவனாகக் கொண்டு, சேதுபந்தனம் செய்து, இலங்கையில் சேர்ந்த போது, இராவணன் அபசாரம் செய்தவனாயிருந்தும், அவனுக்குப் புத்தி சொல்ல, மெத்தப் பொறுமையோடு, அங்கதனைத் தூது அனுப்பினார். அவன் போய் எத்தனையோ திறமான அறிவூட்டியும், "எத்தனைதான் தேய்த்தாலும் பித்தளைக்கு தன்னிறம் இயற்கை" என்றபடி, அவன் ஒரே பிடிவாதமாய்ப் பிராட்டியை விடேன் என்று சொல்லிவிட்டான். அதை அங்கதன் திரும்பி வந்து உரைக்கக் கேட்ட பிறகே, தாசரதி இராவணனோடு போர் புரிகையிஙல், முதற்போரில் இராவணன் சோர்வு பட்டமை அறிந்து, நிராயுதபாணியாக நிற்கும் அவனைக் கொல்லாமல், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி அவனை அனுப்பினார். பின்னர் நிகழ்ந்த போரில் அவனைக் கொன்றார். ஒறுத்தாற்றும் பண்பினான் ஆகிய இராவணனிடத்தும் இராம்பிரானுக்கு கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பு இருந்தமை சால வியக்கற்பாலது.


மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு,

ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான்

சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்,

நாவகமே நாடின் நகை.”          -- சிறுபஞ்சமூலம்


பழிப்புக்கு இடமாகிய செயல்களுக்கு நாணம் இல்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட நல்ல விரதமும், தனக்கே உண்பொருள் இல்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமை இல்லாதவனது வீரத் தொழிலும், செந்தமிழில் தன் மனதைத் தெளியச் செய்யாதவன் பாட்டுக்களைச் செய்தலும், ஆராய்ந்து பார்த்தால் சிரிப்புக்கு இடமாகும்.


சால்பு என்பது சான்றாண்மை ஆகும். அது நல்ல குணங்களைப் கடைப்பிடித்தல் ஆகும். பழிப்புக்கும் பாவத்துக்கும் இடம் தரும் செயல்களைச் செய்வதற்கு நாணப்படுதல் சிறந்த பண்பு ஆகும். அது ஞான்றோர்களுக்குச் சிறந்த அணிகலம் ஆகும். “அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல் பிணி அன்றோ பீடு நடை” எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க. 


நடை என்பது நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நல்லொழுக்கம் இல்லாத ஒருவன் விரதம் மேற்கொள்வது நகைப்புக்கு இடமாகவே முடியும். விரதம் மேற்கொண்டு இறையருளைப் பெற எண்ணுபவன், தன்னிடத்து உள்ள தீய குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.


சேவகம் என்னும் சொல்லுக்கு வீரம் என்றும் பொருள் உண்டு. ஏண் என்னும் சொல்லுக்கு, திண்மை, வலிமை என்று பொருள். உள்ளத் திண்மையும் உடல் வலிமையும் இல்லாதவன் சேவகம் செந்வது நகைப்புக்கு இடம் ஆகும் என்றார்.


கடுகம் 11

 “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும், இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவது உடைத்து.” -- திரிகடுகம்.


தன்னை அழையாதவன் ஆடுகின்ற கூத்தாட்டத்தைச் சென்று பார்ப்பதும், தளர்ந்து விழும்படி மதுவுண்டு களிக்காதவனாய் இருந்தும், கள்ளுண்டவன் போல் வழுப்படப் பேசுதலும், தன்னை நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறையும் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும், ஊரிலுள்ளோர் எல்லாரும் துன்பப்படும் குற்றத்தை  உடையன ஆகும். 


62. காணத் தக்கன - தகாதன

 “ஓதுபொருள் கண்டோர்க்கு உறும்ஆசை, நீதியிலாப்

பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம், - சீதமலர்

கண்டோர்க்கு உறும்வாசம், கற்றுஅமைந்த நற்றவரைத்

கண்டோர்க்கு உடன் ஆம் கதி.” -- நீதிவெண்பா.


யாவராலும் சொல்லப்படுகின்ற செல்வத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் ஆசை மிகுதியாகும். நேர்மை இல்லாத தீயவரைக் கண்டவர்களுக்குத் தீமை உண்டாகும். குளிர்ச்சியான மலர்களைப் பார்த்தவர்களுக்கு மணம் உண்டாகும். கற்று அடங்கிய பெரியோர்களைக் கண்டவர்களுக்கு நல்ல கதி உடனே உண்டாகும்.


(பாதகர் - தீயோர்.  கற்று அமைந்த – கற்று அடங்கிய.  கதி - நல்லநிலை.)


058. கண்ணோட்டம் - 08. கருமம் சிதையாமல்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முறைசெய்தலாகிய தமது தொழில் சிதையாமல் கண்ணோட்டம் செய்ய வல்லவர்க்கு, இந்த உலகம் உரிமை உடையதாகும்" என்கின்றார் நாயனார்.

நடுநிலையாக நின்று, நட்பினர், பகைவர், அயலார் என்று எண்ணாது, குற்றம் செய்தவர்களைத் தண்டித்தும், குணம் செய்தவர்களைக் காத்தும் வரவேண்டும். அவ்விதம் செய்யாது, கண்ணோட்டம் வைத்து ஒருவனுக்கு அளவு கடந்த நன்மைகளைச் செய்துவிட்டாலும், குற்றத்திற்காகத் தண்டிக்காவிட்டாலும், "இவன் நடுவுநிலைமை அற்றவன்" என்று, பிறர் அவனை விட்டு நீங்குவார். அவ்வாறு இல்லாமல், கருணை காட்டவேண்டிய இடத்துக் கருணை காட்டியும், தண்டிக்க வேண்டிய இடத்து தக்க வகையில் தண்டித்தும் ஒழுகுதல் வேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு --- முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; 

உரிமை உடைத்து இவ்வுலகு --- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.

(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல், மேல் 'ஓர்ந்து கண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வாணன் இருகரமும் வைத்துப் பணிகருதி

நாதன் அறுப்பித்தரும் நன்னயத்தைப் போலக்

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.”


இதன் பொருளி ---


மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வனாகிய வாணன் என்னும் வாணாசுரன் சிவபெருமானைப் பூசித்து மிகுந்த வலிமை பெற்று, அவரைத் தன் கோட்டைக்குக் காவலாக வைத்து, வலிமையில் தனக்கு ஒப்பார் எவருமில்லை என்று செருக்குற்று இருந்தான். ஒருசமயம் தன் மகள் உஷையின் காரணமாகக் கண்ணபிரானுடைய பேரன் அநிருத்தன் வாணன் ஊர்க்குக் கொண்டு வரப்பெற, அவன் வாணனால் சிறை வைக்கப்பட்டான். இதனை அறிந்த கண்ணபிரான், வாணன் ஊர் வந்து, சிவபிரானை வழிபட்டு உள்ளே நுழைந்து வாணனுடைய ஆயிரம் கைகளுள், சிவனைப் பூசித்துவரும் இரண்டினை வைத்து, எஞ்சியவற்றைக் களைந்து மீண்டார். பிறகு வாணன், திருக்கயிலையில் சிவபிரானுக்கு மத்தளம் கொட்டும் பணியைப் பூண்டான் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“முப்புரத்தை நீறு ஆக்கி, மூவரையும் காத்தநலம்

செப்ப முடியாதே, சிவசிவா! --- ஒப்பில்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் உலகு.”


முப்புரம் - மூன்று கோட்டைகள், இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய வானத்து இயங்கும் கோட்டைகள்.  சிவபெருமான் அவற்றை நகைத்து எரித்தருளினர். முப்புரங்களையும் எரித்து அழிக்கும் கருமமானது, சிதையாமல்படிக்கு, அவற்றை அழித்து, அங்கே சிவபூசையைக் கைவிடாத மூவரையும் காத்தனர்.


058. கண்ணோட்டம் - 07. கண்ணோட்டம் இல்லவர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "கண்ணோட்டம் என்பது இல்லாவதர் கண் என்பதும் இல்லாதவர். கண் உடையவர் என்பவர் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடரே ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர், கண் உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; 

கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.

(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கண்இல் கயவர் கருத்து உணர்ந்து, கைமிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்

எண்ணி இடர்வரும் என்னார், புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.        --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கண்ணில் கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து, கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் - செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) எண்ணி இடர் வரும் என்னார் - துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, புலிமுகத்து உண்ணி பறித்துவிடல் - இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்து விடுதலோடு ஒக்கும்.


கண்ணோட்டம் இல்லாத தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக் கொள்ளுதலாக முடியும். புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றே தீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


058. கண்ணோட்டம் - 06. மண்ணோடு இயைந்த

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொருந்தி இருக்க வேண்டியதாகிய கண்ணோட்டம் இல்லாவதர், மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தைப் போன்றவர்" என்கின்றார் நாயனார்.

மரத்திற்குக் கணுக்கள் இருந்தாலும், காணக் கூடிய கண்கள் இல்லை. கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடர் ஆவார். உள்ளம் உருகாத கண்கள் மரத்திற்குச் சமம்.


இதற்குத் திருக்குறள்...

 மண்ணொடு இயைந்த மரத்து அனையர், கண்ணொடு

இயைந்து கண்ணோடா தவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் --- ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்தி வைத்து அஃது ஓடாதவர்; 

மண்ணொடு இயைந்த மரத்து அனையர் --- இயங்கா நின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.

('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதை மண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.) 


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

    பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்

    பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்

குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்

    உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா

வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்

    கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே."    ---  திருவாசகம்.


இதன் பொருள் ---


கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே ஆம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.



"தன்னெஞ்சம் நினைப்பு ஒழியாத அறிவிலிநான்

ஞானமெ் எனும் தன்மை பேச

உன் நெஞ்சம் மகிழ்ந்து, ஒருசொல் உரைத்தனையே!

     அதனைஉன்னி உருகேன், ஐயா!

வன்நெஞ்சோ? இரங்காத மர நெஞ்சோ?

     இருப்பு நெஞ்சோ? வைரம் ஆன

கல் நெஞ்சோ? அலது மண்ணாங் கட்டிநெஞ்சோ?

    எனதுநெஞ்சம் கருதில் தானே. " --- தாயுமானவர்.


இதன் பொருள் ---


"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல" என்பது போன்று எளியேன் மனமானது (தான் முன் நினைந்த பிறவிக்கு வித்தாகிய பயனில்லாத) தன் எண்ணங்களை நீக்காத நிலையிலுள்ள அறியாமையை அணிகலமாகக் கொண்டவன் அடியேன். திருவடி உணர்வு எனப்படும் மெய்யுணர்வின் தன்மையினைப் பேசுமாறு தேவரீர் திருவுள்ளம் மகிழ்ந்து ஒருசொல் மொழிந்தருளினீர். அத் திருமொழியினை இடையறாது எண்ணி எண்ணி உள்ளம் உருகேன். ஐயோ! எளியேன் மனமானது கருதுமிடத்து இரக்கம் வாய்க்கப்பெறாத மரநெஞ்சமோ? இரும்பாலாகிய வன்னெஞ்சமோ? வைரம் பொருந்திய கல்நெஞ்சமோ? அல்லது ஒன்றுக்கும் பற்றாத மண்ணாங்கட்டி நெஞ்சமோ? இன்னது என்று அறியேன்.


 


058. கண்ணோட்டம் - 05. கண்ணுக்கு அணிகலம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "கண்ணுக்குப் பூணும் நகை போன்றது கண்ணோட்டம். அது இல்லாவிட்டால், அந்தக் கண் ஒரு புண் என்று உணரப்பட வேண்டும்" என்கின்றார் நாயனார்.

கண்ணாகத் தோன்றினாலும், புலனைப் பற்றுதலாலும், நோய்களாலும் தன்னை உடையவனுக்குத் துயர் விளைத்தல் பற்றி, "புண் என்று உரணப்படும்" என்றார்.

இதற்குத் திருக்குறள்...

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல்

புண் என்று உணரப்படும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ---- ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; 

அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் --- அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.

(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.” ---  நல்வழி.


இதன் பொருள் ---


தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.


நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.



“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டுள.)


கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை. அது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.


“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் --- 


கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் கண்ணோடுதல் ஆகும்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமை ஆகும்;

எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல் ஆகும்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தல் ஆகும்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல் ஆகும்.


“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும், - சொல்லின்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.”  --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப - செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை கேட்டறிதும் - காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி - அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.


அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.


“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும், 

பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

கோடையினும், மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' 

என்பது எல்லாம் கருணை அன்றோ?”    --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.


இதன் பொருள் ---


பண் உக்கு வாம் பரித் தேர் ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் – கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?


    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். அருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது.  சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.



மூலம் 10

 “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் தன்பார்ப்பு,

நாவிற்கு நன்றல் வசை.” -- சிறுபஞ்சமூலம்.


சிலந்திப் பூச்சிக்குத் தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும். எருது முதலிய மிருகங்களுக்கு நீண்ட கொம்புகளே எமனாகும். வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும். நண்டுக்குத் தன் குஞ்சுகளே எமனாகும். ஒருவனுடைய நாவுக்கு, நன்மையல்லாத பழியைக் கொடுக்கும் பிறரை நன்று அல்லாத வசைமொழிகள் சொல்லுதல்  எமனாகும்.


சிலந்திப்பூச்சி முட்டை இட்டவுடன் அழிதலால், “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்’’ என்றார். “நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில் கொண்ட கரு அளிக்கும்” என்பது ஔவையார் அருளிய நல்வழி. விலங்குகளுக்கு நீண்ட கொம்பு இருந்தால், மரங்கள் முதலியவற்றில் குத்தி முறிந்து, அதனால் அவை வருத்தம் அடைய நேரும். அல்லது பிற உயிர்களின் மீதோ, மனிதர் மீதோ பட்டாலும் கேடு விளைவிக்கும் என்பதாலும், “நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம்” என்றும் கொள்ளலாம். கவரிமான் முட்செடி முதலியவற்றில் பட்டுத் தனது உடம்பில் உள்ள மயிர் ஒன்று உதிர்ந்தால், அது உழிரை விட்டுவிடும் என்பதால், “மயிர்தான் வலம்படா மாவிற்குக் கூற்றம்” என்றார். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா” என்பது திருக்குறள்.  


கடுகம் 10

“கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும், - பாத்து உண்ணும்

தன்மை இலாளர் அயல் இருப்பும், இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல.” -- திரிகடுகம்.


நெடுங்கணக்கு முதலியன கற்பிக்கின்ற ஆசிரியர் இல்லாத  ஊரில் இருத்தலும், பிணக்கை நீக்கி உதவுகின்ற, கல்வி கேள்விகளில் முதிர்ந்தோர் இல்லாத சபையில் இருத்தலும், பகுத்து உண்ணும் குணம் இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும், ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு நன்மையைத் தருவன அல்லவாம். (தீமை பயப்பனவாம்) 


கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு - இது இலக்கணம் முதலியவற்றிற்கும் உபலட்சணம். ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் – ஆராய்.


பிணக்கு – பிணங்குதல், மாறுபடுதல். இருவருக்கும் இடையில் உண்டாகும் மாறுபாடு. அவையில் ஒருவர் சொல்லும் கருத்தால் உண்டாகும் மாறுபாடு. அறுத்தல் – ஐயம் திரிபு அற நீக்குதல். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர். "அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை" என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “நான்மணிக்கடிகை” கூறும். 


பாத்து உண்ணும் தன்மை – தன்னிடத்து உள்ளதைப் பிறருக்கும் பகிர்ந்து அளித்துப் பின் உண்ணுதல். “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" என்கிறது நாலடியார். “பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனவும், “பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது” எனவும் திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிக.


61. இவர் பிரிவால் இது இல்லை

“மாதா மரிக்கின் மகன்நாவின் நற்சுவைபோம்,

தாதா எனில்கல்வி தாம்அகலும், - ஓதில்உடன்

வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம், மனையேல்,

அந்தோ, இவை யாவும் போம்.” -- நீதிவெண்பா


செல்லப் புகுந்தால், தாயார் இறந்து விட்டால், மகனின் நாவிற்குச் சிறந்த சுவைப் பொருள்களை அனுபவிக்க முடியாமல் போகும்.  தந்தை இறந்தான் என்றால், அம் மகனுக்குக் கல்வி கற்க முடியாமல் போகும். உடன்பிறந்தவன் இறந்து விட்டால், தோள் வலிமை கெட்டுப் போகும். மனைவியே இறந்து விட்டாள் என்றால், ஐயோ! மேற்சொன்னவைகள் எல்லாம் ஒருங்கே இல்லாமல் கெட்டுப் போகும்.


(மாதா - தாய்.  தாதா - தந்தை. உடன் வந்தோன் - சகோதரன். வாகுவலி - தோள் வலிமை.)


பின்வரும் ஔவையார் தனிப்பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தாயோடு அறுசுவைபோம், தந்தையொடு கல்விபோம்,

சேயோடு தான்பெற்ற செல்வம்போம், – ஆயவாழ்(வு)

உற்றா ருடன்போம், உடற்பிறப்பால் தோள்வலிபோம்,

பொற்றாலி யோடு எவையும் போம்.”.    – ஔவையார்.


இதன் பொருள் ---

 

தாயோடு அறு சுவை உணவு கிடைப்பது இல்லாது போகும். தந்தை இல்லாவிட்டால் கல்வியைப் பயிலுவது நின்று போகும். தான் பெற்ற பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும். (மனிதன் ஒருவன் பெறவேண்டிய பேறுகளில் பிள்ளைப் பேறும் ஒன்று. அதை “நன்மக்கள் பேறு” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெறும் அவற்றுள் யாம் அறிந்தது இல்லை, அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்னும் திருக்குறளைக் காண்க.) வாழுகின்ற பெரிய வாழ்க்கையானது உறவினர்கள் இல்லாவிடில் பொருள் அற்றதாக அமையும். (“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு.) உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய்விடும். தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


058. கண்ணோட்டம் - 04. உளபோல் முகத்து

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த அளவில் கண்ணோட்டம் இல்லாத கண்களானவை, பார்ப்பவர்க்கு முகத்தில் உள்ளது போல் தோன்றுமே அல்லாமல், வேறு என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.

"எவன் செய்யும்" என்றதால், ஒரு பயனையும் செய்யாது என்பது பெறப்படும்.

இதற்குத் திருக்குறள்...

“உளபோல் முகத்து எவன் செய்யும், அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முகத்து உளபோல் எவன் செய்யும் --- கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; 

அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் --- அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.

('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.” ---  நல்வழி.


இதன் பொருள் ---


தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.


“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டு.)

கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது.

கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை;. அஃது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி கண்ணோட்டம் என்று காரண ஆகுபெயர் ஆயிற்று. நாணம் - பெண்களுக்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.


“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும், 

பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

கோடையினும், மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' 

என்பது எல்லாம் கருணை அன்றோ?”   --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.

இதன் பொருள் ---

பண் உக்கு வாம் பரி ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் –கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?

    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை (பிரசித்தம்) என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். இவ்வருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது.  சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.


058. கண்ணோட்டம் - 03. பண் என்னாம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "இசையானது பாடல் தொழிலோடு பொருந்துவது இல்லையாயின், என்ன பயனைச் செய்யும்? அதுபோல, கண்ணானது கண்ணோட்டம் இல்லாதபோது என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.

இசையானது கேட்போர் மகிழும்வண்ணம் பாடப்படுதல் வேண்டும். பொருத்தம் இல்லாத பண் ஒன்றினால் பாடுகின்ற பாடல் பாடுகின்றவருக்கும் கேட்போர்க்கும் பயன்படாது. 

அதுபோல, கண் இருந்தால், கண்ணோட்டம் இருக்கவேண்டும். அது இல்லையானால், கண்ணால் பயன் இல்லை.


இதற்குத் திருக்குறள்... 

"பண் என்ஆம் பாடற்கு இயைபு இன்றேல்,  கண் என்ஆம்

கண்ணோட்டம் இல்லாத கண்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் --- பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; 

கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் --- அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.

('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம்.. இவற்றோடு இயையாத வழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு. --- சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் --- 

கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேற் கண்ணோடுதலாம்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்; எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம்.



பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;

எண் இறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்று இன்னா;

மண்ணில் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா

தண்மை யிலாளர் பகை. --- இன்னா நாற்பது.

இதன் பொருள் ---

பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா - இசை கூடாத யாழின் கீழிருந்து பாடுதல் மிகவும் துன்பமாம்; எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள் ஒழுகுதற்குரிய நாள் கூறுதல் துன்பமாம்; மண் இல் முழவின் ஒலி இன்னா - மார்ச்சனை இல்லாத மத்தளத்தினது ஓசை துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் பகை இன்னா - தண்ணிய குணம் இல்லாதவரது பகையானது துன்பமாம். 


மூலம் 9

“கொன்றுஉண்பான் நாச்சாம், கொடுங்கரிப் போவான் நாச்சாம்,

நன்றுஉணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம், - ஒன்றானுங்

கண்டுழி நாச்சாம், கடவான் குடிப்பிறந்தான்

உண்டுழி நாச்சாம் உணர்ந்து.” -- சிறுபஞ்சமூலம்.


ஓருயிரைக் கொன்று அதன் தசையைத் தின்பவனுடைய நாக்கானது அற்று விழும். பொய்ச்சாட்சி கூறப்போகின்றவனுடைய நாக்கானது அற்று விழும். நன்றாகக் கற்று அறிந்தவர்களுக்கு எதிரில், கற்று உணராதவனுடைய நாக்கானது வர்கள் வினாவுக்கு விடை கூறமுடியாமல் அடங்கிப் போகும். தான் சொல்லிய சொல்லைக் கடவாத நெறியில் நடப்போன்,  கடன் தண்ட வேண்டி வந்தானொருவனைப் பார்த்த இடத்து, தான் வாக்குச் சொன்னவனிடம் பேசுவதற்கு நாக்கு எழாது. உயர்குடியில் பிறந்தவன், தான் யாதானும் ஒருவனிடத்து ஒரு நன்மையைப் பெற்றுப் பின் அவன் குற்றஞ் செய்ததாக அறிந்தபொழுது, அதனை உணர்ந்து, தன் நாவால் அதனைப் பிறர்க்குச் சொல்லான்.


கடுகம் 9

“பெருமை உடையார் இனத்தின் அகறல்,

உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,

விழுமிய அல்ல துணிதல், இம் மூன்றும்

முழுமக்கள் காதல் அவை.” -- திரிகடுகம்.


பெருமைக்கு உரியவர் இனத்தில் இருந்து நீங்கி வாழ்தலும், தமக்கு உரியர் அல்லாத மாதரை விரும்பி அவரோடு வாழ்தலும், சிறந்தவை அல்லாத செயல்களைச் சிறந்தவையாகத் துணிந்து செய்தலும், ஆகிய இம் மூன்றும் அறிவற்ற மூடர்கள் செயல்கள் ஆம். (முழுமக்கள் என்றது மங்கல வழக்கு என்றும் கொள்ளலாம். இதற்கு அறிவில்லாத மூடன் என்பதே பொருள். “முழுமகன் சிதடன், இழுதை, மூடன்” என்பது திவாகரம்)


60. கொடுப்போரை வருத்தாதே

“ஆயும் மலர்த் தேன்வண்டு அருந்துவது போல் இரப்போர்

ஈயும் அவர் வருந்தாது ஏற்றல் அறம்; - தூயஇளம்

பச்சிலையைக் கீடம் அறப் பற்றி அரிப்பதுபோல்

அச்சம் உற வாங்கல் அகம்.” -- நீதிவெண்பா.


தான் ஆராய்ந்து கண்ட பூவில் உள்ள தேனை, வண்டு உண்பது போல, பிச்சை எடுப்போர், தனக்குக் கொடுப்பவர்களை வருத்தாதபடி, அவர் குறிப்பு அறிந்து பெற்றுக் கொள்ளுதல் அறம் ஆகும். புழுவானது தூய்மையான இளந்தளிரைப் பற்றி நின்று, அதனை இடையில்லாமல் அரித்து விடுவது போல, கொடுப்பவர்கள் அஞ்சும்படி வாங்குதல் தீமையாகும்.


(இரப்போர் - பிச்சை எடுப்போர்.  கீடம் - புழு.  அகம் - திமிர், முனைப்பு.)


058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்தில் உள்ளது. அது இல்லாதவர் உயிர்வாழ்ந்து கொண்டு இருத்தல் நிலத்திற்குச் சுமை" என்கின்றார் நாயனார்.

உலகநடை என்பது, உயிர்களுக்கு உபகாரம் செய்தல், காப்பாற்றுதல், குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் முதலானவை. நடை என்பது ஒழுக்கம் ஆகும். உலகநடை என்பது உலக ஒழுக்கம். 

கண்ணோட்டம் இல்லாதவர் தனக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பது பற்றி, "நிலக்குப் பொறை" என்றார்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல், அஃது இலார்

உண்மை நிலக்குப் பொறை.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது --- உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; 

அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை --- ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.

(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..


“ஓவில்உழ வன்வேண்ட உக்கிரனார் இந்திரன்கொண்

மூவைவிடு வித்தார், முருகேசா! --- தாவல்இலா

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்

உண்மை நிலக்குப் பொறை.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, ஓவில் உழவன் வேண்ட - ஒழிதலில்லாத வேளாளன் வேண்டிக் கொள்ள, உக்கிரனார் - உக்கிர பாண்டியன், இந்திரன் கொண்மூவை விடுவித்தார் - இந்திரனுடைய மேகங்களைச் சிறையில் இருந்து விடுவித்தார்.  தாவல் இலா - அழிதல் இல்லாத, உலகியல் - உலக நடையானது, கண்ணோட்டத்து உள்ளது - அருளினிடத்திலே உள்ளதாம். அஃது இலார் - கண்ணோட்டமாகிய அருள் இல்லாதவர்கள், உண்மை - நிலவுலகில் இருத்தல், நிலக்குப் பொறை - நிலத்திற்குச் சுமையாகும்.

வேளாளன் வேண்டிக் கொள்ள உக்கிர பாண்டியன் இந்திரனுடைய முகில்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். உலகநடையானது அருளுடைமையோடு விளங்குதலில்தான் உள்ளது. அருளில்லாதவர்கள் உலகத்திலே இருப்பது நிலத்துக்குச் சுமையாகும் என்பதாம்.

                          உக்கிரபாண்டியன் கதை

ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள். சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான். இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான்போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான். பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு மேகங்கள் பொதிய மலைச் சாரலில் மேயக் கண்டு அவைகளைச் சிறையிலிட்டான். இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்புகூர்ந்து மேகங்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான். அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான்.  உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான். இதன் விரிவைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.


058. கண்ணோட்டம் - 01. கண்ணோட்டம் என்னும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


அதாவது, தன்னோடு பழகியவர் சொல்லுவதை மறுக்கமாட்டாமல், குற்றம் குறைகளை மறந்து, அவர்க்கு இணங்கச் செய்வது. பழகியவர்மீது கண் சென்றபோது உண்டாவதால், "கண்ணோட்டம்" எனப்பட்டது. இது முகம் கொடுத்தல் என்றும், தாட்சண்ணியம் என்றும் சொல்லப்படும்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், “கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிக்க பேரழகு மக்களிடம் இருத்தலால், இந்த நிலவுலகமானது தொன்றுதொட்டு நிலைபெற்று இயங்கி வருகின்றது" என்கின்றார் நாயனார்.

குடிமக்கள் அஞ்சும் செயல்களை அரசன் புரிவானாயின், குடிமக்கள், புலியைக் கண்ட மான் கூட்டம் போல, அரசனை விட்டு விலகிப் போவார்கள். அதனால் உலகியல் சரிவர நடக்காது. அதனால், அரசனுக்குக் கண்ணோட்டம் என்னும் தாட்சண்ணியம் அவசியமாகின்றது.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

உண்மையான், உண்டு இவ் உலகு.


இதற்குப் பரிமேலகர் உரை ---

கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் --- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; 

இவ்வுலகு உண்டு --- இவ்வுலகம் உண்டாகாநின்றது.

('கழிபெருங் காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகு உண்டு' என்றார்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்... 


“தெற்றப் பகைவர்இடர்ப்பாடு கண்டக்கால்,

மற்றும் கண் ஓடுவர் மேன்மக்கள், --- தெற்ற

நவைக்கப் படுந்தன்மைத்து ஆயினும், சான்றோர்

அவைப்படின் சாவாது பாம்பு. --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


பாம்பு - பாம்பானது, தெற்ற நவைக்கப்படுந் தன்மைத்து ஆயினும் - தெளிவாகத் துயர் செய்யப்படும் தன்மையது ஆயினும், சான்றோர் அவை படின் சாவாது - அறிவுடையோர் கூட்டத்தில் சென்றால் அது இறவாது; (அதுபோல), மேன் மக்கள் - உயர்குடிப் பிறந்தோர், தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் - தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.


சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.


இங்ஙனம் கண்ணோட்டம் செலுத்துவது ஊராண்மை எனப்படும். அதாவது, இலங்கை அரசனான இராவணன்  இராமனுடன் செய்த போரில் தனது சேனை முழுவதும் அழிந்து தனியனாய் நின்ற நிலைமை நோக்கி, அயோத்தியர் இறையான இராமபிரான் மேற்கொண்டு போர் புரியாது, 'இன்று போய் நாளை வா'  என விட்டது போல்வது என்பர் பரிமேலழகர்.


'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி.


கர்ணனைப் படைத் தலைவனாகக் கொண்டு பதினாறாம் நாள் பாரதப் போர் நடைபெறுகிறது. அருச்சுனனோடு போர் புரிந்த கர்ணன் சிறிதே தளர்ச்சி அடைகிறான். முதல்நாள் போரிலே இராணவன் தளர்ச்சி அடைந்தமை கண்டு கருணைவடிவினன் ஆன இராமபிரான் அவனோடு மேலும் போர் புரிய விரும்பாது, பகைவனான அவன் மீதும் கண்ணோட்டம் வைத்து,  “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று கூறி அனுப்பியதைப் போலவே, பதினாறம் நாள் போரில் கர்ணன் தளர்ச்சி அடைந்ததைக் கண்ட அருச்சுனன், மேலும் அவனோடு போர் புரிதலை விடுத்து, அவன் மீது கண்ணோட்டம் வைத்து, “நீ இனி இன்று போய் நாளை வா” என்று இனிமையாகச் சொல்லி அனுப்பினான் என்பதை வில்லிபாரதம் பின் வரும் பாடலால் தெளிவிக்கும். 


“அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, 'நீ

இன்று போய் இனி நாளை வா' என இனிது இயம்பினனால்-

வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்

கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.“


இதன் பொருள் –


அப்பொழுது போர் செய்த, சேனையின் கௌரவ சேனைத் தலைவனான  கர்ணனை நோக்கி, “நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய் பின்பு நாளைக்குப் போர்க்கு வருவாயாக” என்று இனிமையாகச் சொன்னான். அவர் யார் என்றால், வெற்றி மிகுந்த, கட்டமைந்த வில்லின் தொழிலால், வலிமையை உடைய கொடிய இராக்கதரை,  முன்னே [திரோதாயுகத்தில்] கொன்ற வீரனாகிய இராமபிரானை, ஒத்த மிக்க புகழைக் கொண்ட பராக்கிரமம் பொருந்திய அருச்சுனன் ஆவான்.


     


மூலம் 8

 “கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” -- சிறுபஞ்சமூலம்.


கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் குற்றம் குறைகளை மறந்து அருள் உடையவன் ஆதல். கால்களுக்கு அழகாவது, பிறரிடத்தில் இரக்கப் போகாமை. ஆராய்ச்சிக்கு அழகாவது, பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல். இசைக்கு அழகாவது, அதனைக் கேட்டவர்கள், இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம். புகழினால் விளங்குகின்ற, அரசனுக்கு (தலைவனுக்கு) அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தமாட்டான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம். 


கடுகம் 8

“தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கிருந்த

நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் ,- வெல்சமத்து

வேந்து உவப்ப வாட்டார்த்த வென்றியும், இம்மூன்றும்

தாம் தம்மைக் கூறாப் பொருள்.” -- திரிகடுகம்.

    பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தானாக விளங்கித் தோன்றும் குடிப்பிறப்பு; பலவகை நூலோரும் கூடியிருந்த நல்ல சபையினிடத்தே மேன்மைப்பட்ட கல்வி;போரிடத்தே தமது அரசன் மகிழும்படியாகப் பகைவரைக் கொன்று நிறைத்த வெற்றி; ஆகிய இம் மூன்றையும் ஒருவன் தானே புகழ்ந்து கூறுதல் தகாது.

இதுபற்றிப் பிற நூல்கள் கூறுவதையும் இங்குப் பொருத்தி வைத்துப் பார்த்தல் நல்லது.

"உன்பால் உறும் உயர்வை ஓர்ந்துபிறர் பாராட்டின்

இன்பாம், நீ சொன்னால் இளிவாமே --- பொன்புனைந்த

தன்முலையைத் தன்கையால் தான்வருடின் ஒருமங்கைக்கு

உள்மலி இன்பு உண்டோ உணர்".   --- தருமதீபிகை.

     ஒருவனுடைய உயர் நலங்களை உலகத்தார் பலமுறையும் கூர்மையாக ஆராய்ந்து, உணர்ந்து பாராட்டிப் புகழ்ந்து கொண்டாடினால்,அது இன்பத்தைத் தரும். தன்னைக் குறித்துப் பிறர் பெருமையாகப் பேசவேண்டும், எண்ணிக் கொள்ளவேண்டும் என்பது மனித இயல்பு. தானே தனது பெருமையைச் சொல்ல நேர்ந்தால், அழகிய மங்கை ஒருத்தி, தனது கொங்கையைத் தானே வருடியது போல் நகைப்புக்கே இடமாகும்.

     ஒரு மனிதனுடைய உயர்வை அறிவுடைய பிறர் கூறினால், அது இருபாலார்க்கும் இனிமை தரும். அவ்வாறு அல்லாமல், தானே தனது பெருமையைப் பேசப் போவது யாருக்கும் இனிமையைத் தராது.


"எம்மை அறிந்திலிர், எம்போல்வார் இல் என்று

தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று: - தம்மை

அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள்".       ---  நாலடியார்.

 இதன் பொருள் ---

     "எமது தகுதியை நீர் அறிந்திருக்கவில்லை, எம்மைப் போன்ற தகுதி உடையார் பிறர் யாரும் இல்லை"என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துப் பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது. தம்மை அருமைஉடையவர் என்று, அறவழியைஉணர்ந்த சான்றோர் மதித்து ஏற்றுக் கொள்ளுதலே பெருமையாகும்.

      தம்மைச் சான்றோர் பெரியர் என மற்றவர் மதித்து ஏற்குமாறு தமது செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே நல்லது. தம்மைத் தாமே பெரியர் என வாயுரையாகப் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது.


 

"கற்றனவும்,கண்அகன்ற சாயலும்,இற்பிறப்பும்,

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்".        --- நாலடியார்.

இதன் பொருள் ---

     தனக்கு உள்ள கல்வி அறிவு,  தனது நெடிது உயர்ந்த தோற்றம், தனது உயர் குடிப் பிறப்புப் பெருமை ஆகியவற்றைத் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பாராட்டிப் பேசினால் அது பெருமை ஆகும். அவ்வாறன்றித் தன்னைத் தானே புகழ்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டால்,  அப்படிப்பட்டவனை, கண்டபோது முகமன் கூறி விளையாடி உடன் இருந்து, அப்பால் சென்று, மருத்துவர் பலர் கூடி மருந்து கொடுத்தால் கூடத் தேற்ற முடியாத பித்தன் இவன் என்று இகழுபவர்கள் மிகப் பெருகுவார்கள். 

     அறிவுடையோர் நன்னெறியில் ஒழுகி வருவதால், அவரது தன்மையைப் பிறர் என்றுமே பாராட்டுவர். அறிவில்லாதவர் அவ்வாறு இல்லாமையால் அவரைப் பாராட்டுவார் இல்லை. தம்மைத் தாமை புகழ்ந்து கூறுவது இழிவு என்பது அறிவிலிக்குத் தோன்றாது. எனவே, தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்ளுகின்ற இவரது பித்துத் தன்மையானது, மருந்தினால் தீராது என்றார்.



"தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்".           --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

     தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் என்பது, குளிர்ந்த நீரை விட்டு எரிகின்ற நெருப்பை வளர்க்க நினைத்தது போல ஆகும். தீ வளரும் என்று குளிர்ந்த நீரை விட்டால், முன் இருந்த தீயும் எவ்வாறு அணைந்து போகுமோ, அதுபோல, தனது மதிப்பு உயரும் என்று நினைத்து, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொண்டால், தனக்கு முன்னர் இருந்த நன்மதிப்பும் அழிந்து போகும். எனவே, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பது மதிப்பை உண்டாக்கும்.


 

"சடம் அதைக் கழுவ உன்னிச் சகதியில் தோய்தல் போலும்,

சுடரினைத் தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும்,

மடமையால் தன்னைத் தானே புகழுவோன் வசைகள் எல்லாம்

புடவியே எடுத்து உரைக்கப் பூணுவன் நிந்தை அம்மா".   --- நீதிநூல்.

இதன் பொருள் ---

     உடம்பைக் கழுவுவதற்காக் குளிக்கவேண்டும் என்று நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும், விளக்கைத் தூண்ட விரும்பி அதனை ஊதி அணைத்தலும் போல, ஒருவன் அறியாமையால் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வானானால் உலகோர் அவனுடைய பழியையே எடுத்து உரைப்பர். அதனால் இகழ்வு பெறுவான்.


"தற் புகழ்வோன்தனைப் பழிக்கும் தாரணி,

சொற்புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்

நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு

அற்பமும் தற் புகழாமை ஆகுமே".        --- நீதிநூல்.            

இதன் பொருள் --

     தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு செருக்குபவனை உலகில் உள்ளவர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். எனவே, நல்ல புகழை ஒருவன் பெறுவதற்குச் சிறந்த உபாயம், பிறருக்கு நன்மை செய்தலும், தன்னைத் தானே சிறிதும் புகழ்ந்து கொள்ளாமையுமே ஆகும்.

     தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவதோடு, தன்னைத் துதி பாடுவதற்காகவே ஒரு கூட்டத்தையும் சிலர் வைத்து இருப்பர். இதனால், அவரது செல்வ நிலை மற்றும் அதிகார நிலையை வைத்து, அவரைக் கண்டபோது வேண்டுமானால், இச்சகம் பேசுவார்களே ஒழிய, புறத்திலே சென்று தூற்றிப் பேசுபவர்களும், இகழ்பவர்களுமே இருப்பார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

     புகழ் என்பது மலரில் இருந்து வீசுகின்ற நறுமணம்,காற்று வீசுகின்ற திசைகளில் எல்லாம் தன்னாலேயே பரவுவது போல அமைந்து இருக்கவேண்டும். சரி, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுகின்றான் என்றால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது குறித்துத் திருவள்ளுவ நாயனார் கூறுவது காண்போம்.


"அமைந்தாங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை

வியந்தான் விரைந்து கெடும்".

இதன் பொருள் ---

     சூழலுக்கு ஏற்றபடி பொருந்தி வாழாதவன், தனது வலிமை என்னவென்று அறியாதவன், தன்னைத் தானே வியந்து கொள்ளுவான். அப்படிப்பட்டவன் விரைந்து கெட்டுப் போவான்.


59. கொடுப்பதைத் தடுப்பது

 “தாமும் கொடார், கொடுப்போர் தமையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலர் உண்டே; - ஏமநிழல்

இட்டுமலர் காய்கனிகள் ஈந்து உதவும் நன்மரத்தைக்

கட்டுமுடை முள்எனவே காண்.” -- நீதிவெண்பா.


தாங்களும் ஒருவர்க்கும் ஒன்றும் கொடுக்காமல், கொடுக்கக் கூடிய நல்லவர்களையும் இனிய நிழலைக் கொடுத்துப் பூவும் காயும் பழமும் தந்து உதவக் கூடிய நல்ல மரத்தைச் சுற்றிக் கொண்டுள்ள உடை வேலமுள்ளைப் போல, கொடுக்காதவாறு தடுத்துக் காவல் செய்பவரும் உலகில் சிலர் உள்ளனர்.


(சேமம் - பாதுகாவல்.  ஏமம் நிழல் - இனிய நிழல்.  உடைமுள் - கருவேலமுள்.)


பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பட்டு ஆடைக்கே (பொது)


முருகா! 

திருவடியில் அணுக வரம் அருள்வாயே


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


பட்டா டைக்கே பச்சோ லைக்கா

     துக்கே பத்தித் ...... தனமாகும்


பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே

     பட்டா சைப்பட் ...... டுறவாடி


ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே

     சுற்றே முற்றத் ...... தடுமாறும்


ஒட்டா ரப்பா விக்கே மிக்கா

     முற்றாள் கிட்டத் ...... தகுமோதான்


கட்டா விப்போ துட்டா விப்பூ

     கக்கா விற்புக் ...... களிபாடுங்


கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்

     கத்தா சத்தித் ...... தகவோடே


முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்

     முற்றா மற்கொட் ...... குமரேசா


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                 பதம் பிரித்தல்


பட்டு ஆடைக்கே, பச்சு ஓலைக் கா-

     துக்கே, பத்தித் ...... தன மா கும்-


பக்கே, நிட்டூரப் பார்வைக்கே,

     பட்டு ஆசைப்பட்டு ...... உறவாடி,


ஒட்டார் நட்டார் வட்டாரத்து

     ஏசு உற்றே, முற்றத் ...... தடுமாறும்


ஒட்டாரப் பாவிக்கே, மிக்குஆம்

     உன் தாள் கிட்டத் ...... தகுமோதான்?


கள் தாவிப் போது உள் தாவிப் 

பூகக் காவில் புக்கு ...... அளிபாடும்


கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் 

கத்தா, சத்தித் தகவோடே,


முட்டாகக் கூரிட்டு ஏனல் தாள்

     முற்றாமல் கொள் ...... குமரேசா!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.

பதவுரை

கள் தாவி, போது உள் தாவிப் பூகக் காவில் புக்கு அளிபாடும் --- தேனை நாடி அலைந்து, மலர்களின் உள்ளே பாய்ந்து,  பாக்கு மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற,

கற்பு ஊர் நற்சார் --- இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் ஆகியவை பொருந்திய நல்லோர் சார்பினை உடைய,

அக் காழித் தோய் கத்தா --- அந்தச் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முதல்வரே!

சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு --- இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளிநாயகியின் முன்னே எதிர்ப்பட்டு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் மிகுதிப்பட்டு,

ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா --- தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னமேயே அந்த வள்ளிநாயகிக்கு அருள் புரிந்து ஆட்கொண்ட குமாரக் கடவுளே!

முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

சுத்தா --- தூயவரே!

முத்தா --- பற்று அற்றவரே!

முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பட்டு ஆடைக்கே --- பட்டுப் புடைவையின் அழகுக்கும்,

பச்சை ஓலைக் காதுக்கே --- பசும்பொன்னினால் ஆன தோட்டினை அணிந்துள்ள காதுகளின் அழகுக்கும்,

பத்தித் தன மா கும்பக்கே --- ஒழுங்காக அமைந்துள்ள பெரிய கலசங்களை ஒத்த முலைகளின் மீதும்,

நிட்டூரப் பார்வைக்கே பட்டு --- உள்ளத்தில் காமக் கொடுமையை விளைவிக்கும் பார்வையில் அகப்பட்டு,

ஆசைப்பட்டு உறவாடி --- விலைமாதர் மீது ஆசை வைத்து, அவர்களோடு உறவாடி,

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு உற்றே --- பகைவர்கள், மட்டுமல்லாது  நண்பர்கள் சூழலிலும் பழிச் சொல்லுக்கு ஆளாகி,

முற்றத் தடுமாறும் ---முழுதும் மனத் தடுமாற்றத்தை அடைந்துள்ள,

ஒட்டாரப் பாவிக்கே --- பிடிவாதக்காரன் ஆகிய இந்தப் பாவிக்கு, 

மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான் --- மேலான தேவரீரது திருவடிகளைக் கிட்டும்படியான தகுதி உண்டோ?


பொழிப்புரை

தேனை நாடி அலைந்து, தேன் உள்ள மலர்களின் உள்ளே பாய்ந்து,  பாக்கு மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற சோலைகளை உடையதும், இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் ஆகியவை பொருந்திய நல்லோர் சார்பினை உடையதும் ஆகிய அந்தச் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முதல்வரே!

இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளிநாயகியின் முன்னே எதிர்ப்பட்டு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் மிகுதிப்பட்டு, தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னமேயே அந்த வள்ளிநாயகிக்கு அருள் புரிந்து ஆட்கொண்ட குமாரக் கடவுளே!

முத்தி நிலைக்கு அதிபரே!

ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

தூயவரே!

பற்று அற்றவரே!

உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பட்டுப் புடைவையின் அழகிலும், பசும்பொன்னினால் ஆன தோட்டினை அணிந்துள்ள காதுகளின் அழகிலும், ஒழுங்காக அமைந்துள்ள பெரிய கலசங்களை ஒத்த முலைகளின் மீதும்,மனதை வைத்து, உள்ளத்தில் காமக் கொடுமையை விளைவிக்கும் விலைமாதரின் பார்வையில் அகப்பட்டு, ஆசை வைத்து, அவர்களோடு உறவாடி, பகைவர்கள், மட்டுமல்லாது  நண்பர்கள் சூழலிலும் பழிச் சொல்லுக்கு ஆளாகி, முழுதும் மனத் தடுமாற்றத்தை அடைந்துள்ள, பிடிவாதக்காரன் ஆகிய இந்தப் பாவிக்கு, மேலான தேவரீரது திருவடிகளைக் கிட்டும்படியான தகுதி உண்டோ?


விரிவுரை


பலபாடல்களிலும் விலைமாதரால் உண்டாகும் கேடு குறித்துப் பாடி நம்மை அறிவுறுத்தியுள்ள அடிகளார், இப் பாடலிலும் அதை வலியுறுத்தியுள்ளார். நெறி தவறி நடந்தால் ஆகாதவர்கள் ஆனவர்கள் என்று எல்லோராலும் இகழப்படும் நிலை உருவாகும் என்பதை இந்தப் பாடலில் காட்டி உள்ளார்.

காமத்துள் அழுந்தி நின்று  கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே.    ---  அப்பர்.

தம் மனைவி அல்லாத மற்றப் பெண்களை எல்லாம் இந்நாட்டவர், 'அம்மா' என்று அழைப்பது மரபு. மனைவியையும் 'அம்மா' என்றே அழைக்கும் பக்குவம் உள்ளவர்களும் உண்டு. அம்மா என்று அழைக்கும் உள்ளத்திலே அவகாமம் தோன்றாது. சிவகாமம் தோன்றும். எல்லாப் பற்றுக்களையும் அறத் துறந்து, தவநிலையில் வாழ்பவர்களின் உள்ளத்தையும் வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கின்ற வல்லமை பொதுமகளிரின் கண் பார்வைக்கு உண்டு. விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான் ஒரே வழி. பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.


மணிவாசகப் பெருமானும், திருவாசகத்தில் பின்வருமாறு பாடி அருளினார்....

"வேனில்வேள் மலர்க்கணைக்கும், 

வெண்ணகைச் செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் 

பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் 

புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ 

மாளா வாழ்கின்றாயே".    ---  திருவாசகம்.


"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"


"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."  


என்று பாடுகின்றார் பட்டினத்து அடிகளார்.


மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.         


என்கின்றார் (திருப்போரூர்ச் சந்நிதி முறை) திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால், இவை இறையருள் வாய்க்கப் பெறாத முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய அருளாளரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வானமாதர்கள் வந்து அவர் முன்னே,


"ஆடுவார், பாடுவார், அலர்மாரி மேல்பொழிவார்,

கூடுவார் போன்று அணைவார், குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார், மாரவேளுடன் மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்"  


என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய "பெரியபுராணம்" கூறுகின்றது. இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால், இறைடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். "ஞான வேலைப் படையாக உடைய கந்தப் பெருமானே" என்று ஓலமிட்டு அழைத்து அலறினால், வேற்படை துணையாக வரும். இளைத்துத் தவிக்கின்ற நிலை வராது.


கற்பு --- 

கற்பு என்னும் சொல், இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் என்னும் பொருள்களையும் உடையது.


காழித் தோய் கத்தா --- 

கர்த்தர் என்னும் சொல் பாடலின் சந்தம் நோக்கி, “கத்தா” என வந்தது. காழி என்பது சீகாழி என்னும் திருத்தலத்தைக் குறிக்கும். சோழ நாட்டில் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் புரிந்தது. குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீசுவரர் இலிங்கமாகவும்,திரு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.


இத் திருத்தலத்திற்கு வழங்கப்படும் பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.


பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்

பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்

வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்

பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.      ---  பெரியபுராணம்.


1.    பிரமபுரம் –  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.


தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி

காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


சேவுயரும் திண்கொடியான் திருவடியே

         சரண் என்று சிறந்த அன்பால்

நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்

         வழிபட்ட நலம் கொள் கோயில்

வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்

         செங்குமுதம் வாய்கள் காட்டக்

காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்

         கண்காட்டும் கழுமலமே


எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.


2.    வேணுபுரம் –  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.


3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.


4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.


5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.


6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.


7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.


8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.


9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.


10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.


11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.


12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.


சத்தித் தகவு ---

தகவு – தகுதி, உரிமை, குணம், பெருமை, அருள், அறிவு, தெளிவு, கற்பு, நன்மை, நல்லொழுக்கம். இத்தகு நற்பண்புகள் அனைத்தும் பொருந்தியவர் வள்ளிநாயகியார். அவர் இச்சாசத்தி ஆவார்.

கருத்துரை

முருகா! திருவடியில் அணுக வரம் அருள்வாயே.





மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா, தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா, கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே கொண்ட விரதம் குறைவ...