053. சுற்றம் தழால் - விருப்பு அறாச் சுற்றம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அன்பு நீங்காத சுற்றமானது ஒருவனுக்கு அமையப் பெற்றால், அந்த சுற்றமானது கிளைத்தல் நீங்காத செல்வங்கள் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

உள்ளத்தில் பகைமை உணர்வைக் கொண்டிருந்து, புறத்தில் அன்பு உள்ளவரக்ளைப் போல் காட்டிக் கொள்ளுதல் இல்லாத சுற்றத்தாரைக் குறித்து இங்குச் சொன்னார் நாயனார். சுற்றத்தார் பலர் கூடி வளர்த்தலால், செல்வம் மேலும் மேலும் கிளைக்கும் என்றார்.

"புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வேறு ஆதல் வேண்டும்" என்றார் குமரகுருபர அடிகள். "முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா, வஞ்சகரை அஞ்சப்படும்" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில்.

அரும்புதல் - சிறிதாகத் தோன்றி வளர்தல். அரும்பு என்னும் சொல், விகாரப்பட்டு, "அருப்பு" என வந்தது.


இதற்குத் திருக்குறள்.....

விருப்பு அறாச் சுற்றம் இயையின், அருப்பு அறா

ஆக்கம் பலவும் தரும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்,  அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....


“வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர்அரக்கு

இல்உற்றும் உய்ந்தார், இரங்கேசா! - நல்ல

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.”


இதன் பொருள் --- 


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வில்லுக்கு அதிபன் - வில்வித்தையில் தன்னை ஒப்பார் இல்லாத விதுரனுடைய, விரகினால் – முன் உபாயத்தினால், ஐவர் - பஞ்சபாண்டவர், அரக்கு இல் உற்றும் - (துரியோதனன் கட்டின வஞ்சக) அரக்கு மாளிகைக்குள் இருந்தும், உய்ந்தார் - பிழைத்துப் போனார்கள்,  (ஆகையால், இது) நல்ல விருப்பு அறா சுற்றம் இயையின் - என்றும் ஒருபடித்தான அன்பு அகலாத சுற்றம் ஒருவனுக்குப் பொருந்தி இருக்குமானால், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - (அது) வளர்ந்துகொண்டே இருக்கும் பலவித செல்வங்களையும் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- ஒருவனைப் பற்றி ஓரகத்திரு. அன்புடைய சுற்றத்தால் ஆக்கம் பலவும் வளரும்.

விளக்கவுரை - எக்காலத்தும் தன் பிள்ளைகளும் பாண்டவர்களும் பகைத்து இருக்கிறார்கள் என்று அறிந்த திருதராட்டின், தருமராசனை நோக்கி, "தம்பீ! நீங்கள் அனைவரும் வாரணாவதம் போய் உங்கள் பிதாவுக்குச் சரம கைங்கரியங்களைச் செய்துகொண்டு, ஒராண்டு தங்கியிருந்து திரும்பி வாருங்கள்" என்று அனுப்பினான். ஐவரும் அப்படியே அங்குப் போயிருந்தார்கள். அதுதான் சமயம் என்று துரியோதனன் அவர்களைக் கொல்ல, வாரணாவதத்தில் ஓர் அரக்கு மாளிகையைக் கட்டுவித்து, அவர்களை அதில் குடியிருக்க வேண்டினான். கள்ளம் கவடு அறியா உள்ளம் உடையவர்களாகிய ஐவரும் அவன் அன்பிற்கு வியந்து, அதற்கு உடன்பட்டு, நாள் ஏற்படுத்தி இருந்தார்கள். ஐவர்மேல் உண்மை அன்புடைய அவர்கள் சிற்றப்பனான விதுரன், துரியோதனனுடைய வஞ்சகச் சூழ்ச்சியை அறிந்து, அம் மாளிகையை நிருமித்த சிற்பிக்கு அந்தரங்க பரிதானம் செய்து, அதிலிருந்து தப்பியோடிப் பிழைக்க ஓர் அந்தரங்கச் சுரங்கம் யார்க்கும் தெரியாமல் அவனைக் கொண்டே செய்வித்து, அதைப் பற்றி வீமனுக்கு மட்டும் சேதி தெரிவித்து இருந்தான். தாங்கள் ஏற்படுத்தியிருந்த நன்னாளில் ஐவரும் குந்தியோடு அரக்கு மாளிகையில் குடி புகுந்தார்கள். குடி புகுந்த அன்றிரவிலேயே துரியோதனன் தன் மந்திரி புரோசனன் என்பவனை அனுப்பி மாளிகையைக் கொளுத்தக் கட்டளை இட்டு இருந்தான்.  அவனும் அப்படியே கொஞ்சமேனும் பழிக்கு அஞ்சாமல் அரையிரவில் ஐவரும் தூங்கும்போது, அதைக் கொளுத்திவிட்டான். ஆயினும் சங்கேதப்படி விழிப்பாயிருந்த வீமன் தன்னுடன் இருந்த ஐவரில் தாயையும் தமயனையும் தோள்களின் மேலும், தம்பியரில் அர்ச்சுனனை ஓர் அக்குளிலும், நகுல சகாதேவர் இருவரையும் மற்றோர் அக்குளிலும் அடக்கித் தூக்கிக்கொண்டு அநாயாசமாய், அந்தரங்க சுரங்க வழியே வெளியேறிப் பிழைத்துப் போனான். விருப்பறாச் சுற்றமாகிய விதுரன் ஒருவன் இருந்ததனால், ஐவருக்கும் அருப்பு அறா ஆக்கம் தந்தது காண்க. 

'அரும்பு அறாத ஆக்கம்' எனப் பிரித்து, என்றும் அரும்புதலை நீங்காத, அதாவது என்றும் அரும்பி வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் பொருள் உரைக்கலாம். 'வில்லுக்கு அதிபன்' என்று விதுரனைக் குறித்தது, அவன் வில்லெடுத்தால் வெல்ல வல்லுநர் ஒருவரும் இல்லாதிருந்தமையால். ஆகையால்,  கண்ணபிரானைப் போலவே அவனும் வில் எடேன் என்று சபதம் கூறி விடுத்தான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“எய்த்து மகத்து இறந்தும் சூரன்இளையோரால்

மொய்த்தவளம் பெற்றான், முருகேசா! --- மெய்த்த

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.


இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே,  சூரன் - சூரபதுமனானவன், எய்த்து மகத்து இறந்தும் - வருந்தி வேள்வியிலே மாண்ட பின்னரும்,  இளையோரால் - தன்னுடைய தம்பிமார்களால், மொய்த்த வளம் பெற்றான் - மிகுந்த செல்வ நலத்தை அடையப் பெற்றான். மெய்த்த - உண்மை பொருந்திய, விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்கப் பெறாத உறவினர்களைப் பெற்றால், அருப்பு அறா - வளர்ச்சி குறையாத, ஆக்கம் பலவும் தரும் - செல்வம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சூரபதுமனானவன் வேள்வியிலே வருந்தி இறந்தும், தன்னுடைய தம்பிமார்களால் மிகுந்த செல்வ வளத்தைப் பெற்றான். ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றத்தார்கள் அமைவார்களானால் அவனுக்கு வளர்ச்சி குறையாத செல்வம் பலவும் உண்டாகும் என்பதை இந்த வரலாறு விளக்கும்.

சூரபதுமன் மிகவும் முயன்று அரிய வேள்வியைச் செய்தான். அவ்வாறு செய்தும் சிவபிரான் எழுந்தருளவில்லை. அதனால் வருந்தி வேள்வித் தீயில் விழுந்து இறந்தான். பிறகு அவனிடத்திலே அன்புள்ள சிங்கமுகன், தாரகன் என்னும் தம்பிமார்கள் அவ் வேள்வியை முடித்தார்கள். அதனால் சிவபிரான் எழுந்தருளி இறந்துபோன சூரபதுமன் உயிர் பெற்று எழச் செய்தார். ஆயிரத்தெட்டு அண்டங்களின் அரசுரிமையையும் பிறவற்றையும் வழங்கினார். அதனால் சூரபதுமன் தன் உடன் பிறந்தார்களோடு மேன்மையுடன் வாழ்ந்தான். அன்புடைய உறவினர்களைப் பெற்றால் அவர்களால் நலமெலாம் உண்டாகும் என்பது சூரபதுமனிடம் நன்கு விளங்கியது.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.விருப்பு அறாச் சுற்றத்தை, "பண்பின் விரவிய கிளை" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பாடலைக் காண்க...


"அரசுகொள் கடன்கள் ஆற்றி

மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி

குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி

விளங்கிய குடிகள் ஓங்கி

வரைபுரை மாடம் நீடி

மலர்ந்து உள பதிகள் எங்கும்" --- பெரியபுராணம்.


இதன் பொருள் ---

தொகுத்த நெற்குவியல்களுள், அரசர்க்குரிய ஆறில் ஒரு பங்கை அரசுக்கு இறையாகக் கொடுத்து, எஞ்சிய ஐந்து பங்குகளில், தாம் செய்தற்குரிய அறங்களைச் செய்தும், வணங்குதற்குரிய இறை வழிபாட்டைச் செய்தும். குரவர்க்கும் விருந்தினர்க்கும், நற்குணம் அமைந்த சுற்றத்தார்க்கும் கொடுத்தும், இவ்வாற்றான் புகழ் விளங்கிய குடிகள் மிக்கு, மலை போலும் உயர்ந்த மாளிகைகள் விளங்க இருந்தன அந்நாடுகள் எல்லாம்.



"ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று; நட்பு அன்று - சினேகமும் அன்று.



“வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு

அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும். --- நாலடியார்.

இதன் பொருள் ---

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய் மறந்தாங்கு – கருவுற்றிருந்த போது தோன்றிய மசக்கைத் துன்பமும், இடையில் கருவைச் சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும் தாய் தன் தொடையில் மகனைக் கண்டு மறந்து விட்டாற்போல,  அசா தான் உற்ற வருத்தம் --- முயற்சிகளின் இடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் - ஆய்ந்து சூழ்தற்கு உரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கும்.

முயற்சிகளினிடையே தோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்கு அவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரிய சுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின், அவரை எஞ்ஞான்றும் தழுவி ஒழுகுதல் வேண்டும்.

மகன் என வழக்கு நோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப் பாலுக்கும் அது ஒக்கும்.


053 - சுற்றம் தழால் - 01. பற்றற்ற கண்ணும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


அதாவது, வினை செய்பவர்களைப் பற்றிக் கூறிய பிறகு, தனது செயலில் தன்னோடு சூழ்ந்து துணை புரியும் சுற்றத்தார் தன்னை விட்டு நீங்காது இருக்குமாறு தழுவிக் கொள்ளுதலைக் கூறுகின்றார் நாயனார்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தொடர்புடைய செல்வம் நீங்கிவிட்ட நிலையிலும், பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உள்ளதொரு பண்பு ஆகும்" என்கின்றார் நாயனார்.

உலகத்தில் மக்கள் தம் சுற்றத்தவர் செல்வத்தோடு கூடி இருக்கின்ற காலத்தில் அவர்களைத் தழுவி அவர்களிடத்தில் உறவு கொண்டாடுவது இயல்பு. அவ்வாறு இல்லாமல், செல்வம் அற்ற காலத்திலும், முன்னர் அவர் தமக்குச் செய்த உதவிகளை எண்ணி, அவரோடு பற்று அறாமல் இருந்து, தழுவிக் கொள்ளுவார்களானால், அதுவே, சுற்றத்திற்கு அழகு. அதுவே சுற்றத்தைத் தழுவுதல் ஆகும்.

இதற்குத் திருக்குறள்....

பற்று அற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்,

சுற்றத்தார் கண்ணே உள.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்,  சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.

(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின் கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


“அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே

மனைமரம் ஆய மருந்து. --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் - ஒருவர்க்குத் துன்பம் வந்து அமையுமானால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் - நல்ல செயல் முறையால் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அது – அச்செயல் அல்லல் உற்றார்க்கு, மனைமரம் ஆய மருந்து - வீட்டில் உள்ள மரமாகிய மருந்தினை ஒக்கும்.

அல்லல் உற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார். ஒருவன் அல்லலுற்ற காலத்து அவன் வருந்தாது அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையின்கண் உள்ள மருந்து மரத்திற்கு ஒப்பாவார்.


“முன் இன்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்

பின் இன்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்,

பொன்னாச் செயினும் புகாஅர், புனல் ஊர!

துன்னினார் அல்லார் பிறர். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


புனல் ஊர - நீர்நாடனே!, ஒரு குடியார் - ஒரு குடியில் பிறந்தவர்கள், முன் இன்னார் ஆயினும் - முன்னர் இனிமையுடையவர் அல்லவராய் இருப்பினும், மூடும் இடர் வந்தால் - மிக்க துன்பம் வந்து உற்ற இடத்து, பின் இன்னார் ஆகிப் பிரியார் - பின்னரும் இனிமை உடையவர் அல்லராகிப் பிரிந்து இரார், துன்னினார் அல்லார் பிறர் - ஒரு குடிப்பிறந்தவர் அல்லாது அயலார் ஆகிய பிறரை, பொன்னா(க)ச் செயினும் புகார் - பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனை நீக்கப்புகுதல் இலர்.

ஒரு குடியில் பிறந்தவர்கள் தம்முள் ஒருவர்க்குத் துன்பம் வந்து நேர்ந்த பொழுது, உள்ளத்தில் முன்பு கொண்டு இருந்த மாறுபாடு நீங்கி உதவி செய்வர் என்பது கருத்து.



“காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலர் ஆவர், - ஏலா

இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்பு உடையேம் என்பார் சிலர்.” --- நாலடியார்.


இதன் பொருள் ---


ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டாகி வளமாக வாழுகின்ற காலத்தில், மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப் போல நெருங்கிய உறவினர் பலர் ஆக இருப்பர்.  ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஆனால் ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், தொடர்பு உடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில் உறவு என்று சொல்லிக் கொண்டு வந்து உரிமை பாராட்டுவோர் மிகச் சிலரே.

சாய்கால் உள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலக இயற்கை.


“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர்,-அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு. --- மூதுரை.


இதன் பொருள் ---


அற்ற குளத்தின் - நீர்வற்றிய குளத்தினின்றும், அறு - நீங்கிப் போகின்ற, நீர்ப் பறவைபோல் - நீர்வாழ் பறவைகள் போல, உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவினர் ஆகார். அக்குளத்தில் - அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல - கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார் உறவு - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவினராவர்.

வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பத்தை அனுபவிப்போரே உறவினராவர்.


நாய்க்கு நிகரானவர்கள்

 


நாய்க்கு நிகரானவர்கள்.

-----

    காரியாசான் என்பவர் பாடியது “சிறுபஞ்சமூலம்” என்னும் நூல். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் ஆகிய பஞ்சமூலங்கள் (வேர்கள்) மக்கள் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்து உணர்கின்றவர் பிறவி நோயைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்டவல்லதாக இந்நூல் விளங்குகிறது.

        இந்நூலில் நாய்க்கு நிகராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்கள் ஐவர் குறித்துப் பாடப்பட்டுள்ள பாடல்...

“நாணில னாய்,நன்கு நள்ளாதா னாய், பெரியார்ப்

பேணில னாய்,பிறர் சேவகனாய் - ஏண்இல்

பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்

பருத்தி பகர்வுழி நாய்.”


இதன் பொருள் ---

    நாண் இலன் நாய் – நாணமில்லாதவன் நாய்க்கு நிகரானவன், நன்கு நள்ளாதான் நாய் – நன்மை ஆகப் பிறரோடு நட்புக் கொள்ளாதவன் நாயோடு ஒப்பாவன், பெரியார்ப் பேணிலன் நாய் - தாய் தந்தையர் முதலிய பெரியாரைப் போற்றிக் காக்காதவன் நாயோடு ஒப்பாவான். பிறர் சேவகன் நாய் - பிறருடைய பணியாளனாய் இருந்து வாழ்பவன் நாயைப் போல்வன், ஏண் இல் பூண் பொருந்திய முலையார் சேரி -  உயர்வு இல்லாத, பூண் பொருந்திய நகைகளை அணிந்த முலைகளை உடைய பரத்தையரது தெருவில், (அவர்களது ஆசையால் திரியும்) கைத்து இல்லான் - கைப்பொருள் இல்லாதவன், பருத்தி பகர்வுழி நாய் - பருத்தி விலை கூறுமிடத்தில் போய் நிற்கின்ற நாய்க்கு நிகரானவன்.

இப் பாடலுக்கான விளக்கத்தைச் சிந்திப்போம்.....


1. நாண் இலன் நாய் – நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பு ஆவான். “நாணம்” என்னும் சொல்லுக்கு, வெட்கம், அறிவு, பயபக்தி, மானம், தணிகை, கூச்சம், பெண்களுக்கு உரிய குணங்களுள் ஒன்று என்று பொருள். “நாணுதல்” என்னும் சொல்லுக்கு, வெட்கப்படுதல், மனம் குன்றுதல், பயபக்தி காட்டுதல், அஞ்சுதல், பிணங்குதல், அடங்குதல், குவிதல் என்று பொருள். திருவள்ளுவ நாயனார், பொருட்பாலில், “நாணுடைமை” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து உள்ளார். நாணுடைமை என்பது, சால்பு முதலிய பண்புகளில் உயர்ந்தோர், தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையாம் தன்மை என்றார் பரிமேலழகர். அறம் பொருள் இன்பங்களில் பிறர் பழியாமல் ஒழுகுதல் என்றார் மணக்குடவர்.சுருங்கச் சொன்னால், தவறி நடத்தலுக்கு மனம் ஒடுக்கம் கொள்ளுதல் என்பர் பெரியோர்.

    உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மற்றவையும் மனினுக்குச் சிறப்பைத் தருவன அல்ல. மனிதனுக்குச் சிறப்பு நாணம் உடைமை என்பதால்,  “ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறு அல்ல, நாணுடைமை மாந்தர் சிறப்பு” என்றும், உயிரினங்கள் அனைத்தும் உடம்பை நிலைக்களமாகக் கொண்டவை. சிறந்த மக்களின் சான்றாண்மை நாணம் என்னும் நலத்தினை நிலைக்களமாக உடையது என்பதால், “ஊனைக் குறித்த உயிர் எல்லாம், நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு” என்றும், நாணத்திற்கு உறைவிடம் என்று கருதப்படுபவர், பிறரிடத்தில் உண்டாகும் பழியினையும், தம்மிடையே உண்டாகும் பழியினையும் ஒப்பிட்டு நாணுபவரே என்பதால், “பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி என்னும் உலகு.” என்றும், உள்ளத்தில் நாணம் இல்லாதவரது நடமாட்டம், மரத்தினால் உருவாக்கப்பட்ட பாவையானது கயிற்றினால் உயிர் உள்ளது போல் கண்டாரை மயக்குவதைப் போன்றது என்பதால், “நாண் அகத்து இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டி அற்று” என்றும் அருளிச் செய்த திருவள்ளுவ நாயனார்.

     “நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” என்கிறது முதுமொழிக் காஞ்சி என்னும் நூல். வெட்கங்கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கையானது பசித்தலாகிய துன்பத்தின் நீங்கி ஒழியாது என்பது இதன் பொருள். வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால் உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறானது அல்ல. அதனோடு ஒத்ததே. துன்ப அளவால் இரண்டும் ஒக்கும் என்றாலும், பசிக்குப் பரிகாரம் உண்டு, அழிந்த நாணுக்கு உயிர்விடுவதன்றி வேறு பரிகாரமில்லை. ஆகவே "உயிரினும் சிறந்தன்று நாணே" என்பது பெறப்படும். “மானம் அழிந்தபின் வாழாமை முனி இனிதே” என்பது இனியவை நாற்பது. பெருமை அழிந்த பிறகு உயிர் வாழாது இருப்பது இனிமையானது. எனவே, நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பானவன் என்பது பெறப்படும்.


2. நன்கு நள்ளாதான் நாய் ---

    நன்கு – நலம் விளையும்படி. நள்ளுதல் – நட்புச் செய்தல். நட்பு என்பது இரத்த உறவுகளைக் கடந்து, அன்பால் பிணைக்கப்பட்ட உன்னதமான உறவு ஆகும். சாதி, மதம், வயது மற்றும் இனம் கடந்து, நம்பிக்கை மற்றும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு, துன்பத்தில் கைகொடுத்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் ஒரு தூய உறவுதான் நட்பு. ஒருவரை நல்வழிப்படுத்தி, வாழ்க்கையை அழகாக்கும் நல்ல நண்பர்கள், வாழ்வில் பாதுகாப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றனர். இன்ப துன்பங்களை சமமாகப் பகிர்ந்து, சுமையைக் குறைப்பது உண்மை நட்பு. தவறு செய்யும்போது திருத்தி, நல்வழிப்படுத்துபவன் உண்மையான நண்பன். ஒரு நல்ல நண்பன் நம்பகமான ஆலோசகராகவும், குடும்ப உறுப்பினரைப் போலவும் செயல்படுவான். இக்கட்டான காலங்களில், “உடுக்கை இழந்தவன் கை போல" துணையாக நிற்பது நட்பு.

நட்பினது சிறப்பை உணர்த்த, திருவள்ளுவ நாயனார், “நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். ஆராய்ந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்த, “நட்பு ஆராய்தல்” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தீமை தரும் நட்புக் கூடாது என்பதை உணர்த்த, “தீநட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தகாத நட்பு கூடாது என்பதை உணர்த்த, “கூடா நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் பழகி இருக்க வேண்டுவதில்லை. புறத் தொடர்பும் அவசியம் இல்லை. ஒத்த உள்ளுணர்வு இருந்தால் போதும். பிசிராந்தையார் என்னும் புலவரிடையேயும், கோப்பெருஞ்சோழன் என்னும் அரசரிடையேயும் இருந்த நட்பும், அப்பர் பெருமானும், அப்பூதி அடிகாளரும் கொண்டிருந்த நட்பும் சிந்தனைக்கு உரியவை ஆகும். நல்லாரோடு கொண்ட நட்பு, இன்பத்திலும், துன்பத்திலும் ஒரு தன்மைத்தாகவே இருக்கும். நல்லார் அல்லாரோடு கொண்ட நட்பானது ஆக்கம் உள்ளபோது அகம் மகிழ்ந்து, கொஞ்சிக் குலாவி இருக்கும். அல்லாத காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். நண்பனும் பகைவனாக மாறிப் போகும் நிலையும் வரும். நட்பு செய்வதற்கு உரியவரை அவரது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கங்களால் தெளிந்து கொள்ளவேண்டும்.


நல்லோர் நட்பு குறித்து, "குமரேச சதகம்" கூறுவதைக் காணலாம்.

“மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,

     வளரும் அப்போது வளரும்;

வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்

     வற்றிடும், பெருகில்உயரும்;


பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,

     பொங்கு காலம் தழைக்கும்;

புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,

     போது உதயம் ஆகில்மலரும்;


தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது

     தேறில் உயிரும் சிறக்கும்;

சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்

     சிநேகம் அப்படி ஆகுமே;


வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய

     வால! குருபர! வேலவா!

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய - குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே! வால - குமாரக் கடவுளே! குருபர – மேலான குருநாதனே! வேலவா - வேலாயுதக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் - பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும். வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் - குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும், அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும். பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் - நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும். புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் - தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்; சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும். தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் - இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும்,  உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும்.  சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் - தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.

ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்தபொழுது தவளைகள் பல வந்து சேரும். நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ளபொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி, எல்லாரும் வந்து ஒருவனை அடுத்து நிற்பர். செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர். 

“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் 

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில் 

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.”  

இது ஔவையாரின் "முதுரை". இங்கு நினைவு கூரத் தக்கது.

நீர் உள்ளபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும். அது அற்றபோது அவை அயலே பறந்துபோகும். குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும், அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார். 

பற்று அற்ற நிலைக்கு, நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்து உள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவாக விளக்கியுள்ளது. 


பின்வரும் நாலடியார் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.

“கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,

வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.”

இதன் பொருள் ---

மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒருமுறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.

நட்பின் அருமையை உணராதவர், ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயைப் போன்றவர் என்பது தெளிவு. ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயானது அதனையும் நக்கும் என்பதால், அந்தப் பானையைப் பரண்மீது வைத்திருப்பர்.


3. பெரியாரைப் பேணாதவன் நாய் ---

"பெரியாரைப் பிழையாமை" என்பது திருக்குறளிலும், நாலடியாராலும் கூறப்பட்டுள்ளது. கல்வி அறிவு ஒழுக்கங்களால் தம்மினும் உயர்ந்த பெரியவர்களை இகழாமல் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்." --- திருக்குறள்.

கற்று உணர்ந்த பெரியவர்கள் உலகத்தில் இருப்பதே மிக அருமையானது. கற்று உணர்ந்த பெரியவர்களின் தொடர்பு கிடைப்பது மிகமிக அருமையானது. நல்வாய்ப்பாகக் கிடைத்தாலும், அந்த நட்பை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை" என்று தள்ளி வைத்து விட்டு, "தாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்" என்று இகழ்ந்து,  அருமையான வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்கிறது "நாலடியார்".

“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை, 

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, 

பயம்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல, 

நயம் இல் அறிவினவர்” 

இதன் பொருள் ---

தம்மிடத்து உள்ள பொன்னைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வதற்கு அரிய பெரியோர்கள் நட்புத் தமக்குக் கிடைக்கப் பெற்று இருந்தும், அவர்களின் அரிய நட்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, அந்தோ! நல்லறிவு இல்லாத கீழ்மக்கள் பொழுதை வீணாகக் கழிப்பர்.

செல்வத்தை முயன்று தேடினால் பெறலாம். பெரியவர்கள் நட்பு முயன்று தேடினாலும் கிடைக்கப் பெறாது. கற்று உணர்ந்த பெரியோர்கள் நட்பு ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது என்றால், அது அவன் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயன் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைத்த அருமையான நட்பை உரிய முறையில் பயன்படுத்தி, தமக்கு உறுதியைத் (நன்மையைத்) தேடிக்கொள்ளமால், வாழ்நாளை வீணாக்குவோர் அறிவு அற்ற (நயம் இல்லாத) மூடர்கள் ஆவார். மூடர்களிடத்திலும் அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார். பொருளையும் புகழையும் தேடி அலவைதால் பயனில்லை. நன்னெறியில் நடவாமையால் புகழானது நாளடைவில் தேய்ந்து போகும். பொருள் நிலையில்லாமல் நீங்கும்.


வள்ளல்பெருமான் இப்படிப்பட்டவர்களைக் கண்கெட்ட குருடர் என்றும், பாழாகிப் போன குட்டிச்சுவர் என்றும் இகழ்ந்து கூறுகிறார்.


"கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்தமைக்

காண்பதே அருமை, அருமை;

கற்பதரு மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்

     கருணையால் அவர் வலியவந்து,


இற்புறன் இருப்ப அது கண்டும் அந்தோ! கடிது

எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு

இயல்உறுதி வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்

     ஏமாந்து இருப்பர், இவர்தாம்

     

பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்று,மேல்

     புல் ஆதி உ(ண்)ணும் உயிர்களும்

போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்

     புறச்சுவர் எனப் புகலலாம்;

     

வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா

     மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

     வளர் வயித்திய நாதனே."              --- திருவருட்பா.


இதன் பொருள் ---

     நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டி உயரும் தவத்தோர்க்குச் சிகாமணி ஆக விளங்கும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வைத்தியநாதப் பெருமானே! கற்பதற்கு உரிய நன்னூல்களைக் கற்று உணர்ந்து ஒழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன் இருக்கும் இடம் தேடி கற்பகமரம் வந்ததுபோல, அருள் மிகுதியால் பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப் புறத்தே நிற்பார்கள் என்றால்,  விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது, தங்களுக்கு உறுதியானவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்து ஒழிகின்றார்கள்.  இவர்கள் அழகிய சுவையை அறியும் அறிவு உடையவர் ஆகார். மேலும், புல் முதலியவற்றை மேய்ந்து உண்ணும் விலங்குகளுக்கும் இவர் ஒப்பாகார். இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். 

கற்ப தரு - கற்பக மரம். இது விண்ணுலகத்தில் உள்ளது என்று கூறுவர். தன்னை அடைந்தவர் விரும்பியதை அளிக்கும் வல்லமை வாய்ந்த மரம் இது என்று கூறுவர். இதனால் பயன் அடைய வேண்டுமானால், அது இருக்கும் இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். கற்கபக மரம் யாரையும் தேடி வராது. (மிடியன் - வறியவன், வறுமை நிலையில் உள்ளவன்) கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த மிக அருமை வாய்ந்த பெரியவர்களை அறிவில்லாத ஒருவன் தேடிச் சென்று, வலம் வந்து வணங்கி, அழைத்துப் போற்றவேண்டும். கற்பக மரமே இருக்கும் இடம் தேடி வறுமையாளன் ஒருவனிடம் வந்ததைப் போன்று, கற்ற பெரியோர் தாமே ஒருவன் இருக்கும் இடம் தேடி வலிய வருவாராயின், அது எவ்வளவோ உயர்ந்த பேறு என்பதை உணர்த்த, “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அப்படி வந்தவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது ஒருவனது கடன் என்பதை உணர்த்த,  “கடிது எழுந்து போய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளை அவர்களிடத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தங்கட்கு இயல் உறுதி வேண்டாது, கண் கெட்ட குருடர்போல் ஏமாந்து இருப்பர்" எனவும் அருளிச் செய்தார் வள்ளல்பெருமான்.

நயம் இல்லாத அறிவினை உடையவர், புலன் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அதையும் ஒழுங்காக அனுபவிக்க அறியாதவர்கள் இவர்கள். எனவே, சுவை அறியாத மக்கள் இனத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். புல்லை உண்ணுகின்ற ஆடு, மாடு முதலிய விலங்கினத்திலும் சேர்த்து எண்ணப்படுபவர்கள் அல்லர்.  இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்று எண்ணல் வேண்டும் என்பதை, “பொற்பினது சுவை அறியும் அறிவு உடையர் அல்லர்;  புல் ஆதி உண்ணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் காட்டுகின்றார். 

     ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' எனவும், ‘பிள்ளையின் அருமையை மலடி அறிவாளோ?'  எனவும், ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தது போல' எனவும் வழங்கப்படும் பழமொழிகளை வைத்து, பெரியோர்களின் அருமையை மூடர்கள் அறியமாட்டார் என்பதைக் கூறுகிறது “குமரேச சதகம்” என்னும் நூல்.


"மணமாலை அருமையைப் புனைபவர்களேஅறிவர்,

     மட்டிக் குரங்கு அறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,

     மலடிதான் அறிவது உண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள்,

     கணிகை ஆனவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை வரும்

     களவான நாய் அறியுமோ?


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,

     கொடிய பூனையும் அறியுமோ?

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்,

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர

     வனம் ஊடு தழுவும் அழகா!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

இதன் பொருள் ---

மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனம் ஊடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மைபின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே! மயிலேறி விளையாடு குகனே - மயில்மதீது இவர்ந்து அருள் விளையாடல்களைப் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலைமீது எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே! 

மணம் மாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ - மணம் பொருந்திய மலர்மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களே அறிவர், அறிவற்ற குரங்கு அறியுமோ?  மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களே அல்லாமல், மலடியானவள் அறிவாளோ?  கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகை ஆனவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்;  விலைமகள் அறிவாளோ? கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர், கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர், கொடு மூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினை உடையவரே அறிவார்,  கொடிய கயவர்கள் அறிவார்களோ?

ஒருசந்தி - ஒருவேளை. நோன்பு இருக்கும் நாள் அன்று ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒரு சந்தி,  ஒருவேளை என்பது வழக்கம். நோன்பு நாளன்று ஒரு வேளைக்குச் சமைப்பதற்கு மட்டுமே பயன்படும் "பாண்டத்தை, ஒரு சந்தியின் பாண்டம்" என்று சொல்லப்பட்டது. நாய்க்கு  எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' என்று "தண்டலையார் சதகம்" என்னும் நூலிலும் சொல்லப்பட்டு உள்ளது.

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல்பெருமான் பிறிதோர் இடத்தில் பாடி உள்ளார். எனவே, கற்ற மேலோரைப் போற்றி, அவருடன் கூடி இருந்து, வாழ்நாளை வீணாகப் போக்காமல், நல்லறிவு பெற்று, குற்றம் அற வாழ்வதே வாழ்க்கை ஆகும். 

4. பிறர் சேவகன் நாய் --- இது சிந்தனைக்கு உரியது. ஒருவரை அண்டிப் பிழைக்காமல் வாழவேண்டும் என்று அறிவுறுத்தியாதகக் கொள்ளலாம்.

5. பருத்தி விற்குமிடத்தில் அங்குக் காத்துக் கிடக்கும் நாய்க்கு ஏதும் உணவுப் பண்டம் கிடைக்காது. அதுபோலப் பொருளுக்குத் தம் உடம்பை விற்கும் பொருட்பெண்டிர் வாழுகின்ற இடத்தில், பொருள் இல்லாதவன் போய் ஆசைப்பட்டு நிற்பது பயன் அற்றது. ஆகலின் அவரைப் பருத்தி பகர்வுழி நாய் என்றார். (சேரி - ஒரு வகுப்பார் சேர்ந்திருக்கும் இடம். இது தாழ்ந்த குலத்தினர் வாழும் இடமாக இக்காலத்தில் கற்பிக்கப்பட்டு விட்டது அறிவீனம்)


பாடல் 20

 


“என்னெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன்,

கன்னம்செய் வாய்ஆகில்; காலத்தால் வல்நெஞ்சுஏய்

மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி

ஏகம்பத் தானை இறைஞ்சு.”


இதன் பொருள் ---


    என்னெஞ்சே - எனது நெஞ்சமே! கன்னம் செய்வாயாகில் – காது கொடுத்துக் கேட்பாயாகில்; உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னைக் கெஞ்சியும் வேண்டிச் சொல்கின்றேன்; காலத்தால் – உயிருள்ள காலத்திலேயே, வல் நெஞ்சு ஏய் மா கம்பத்து ஆனை உரித்தானை --- வலிய கொடிய நெஞ்சினை உடைய பெரிய அசைகின்ற (மலைபோன்ற) யானையின் தோலை உரித்தப் போர்த்துக் கொண்டவரும், வண் கச்சி ஏகம்பத்தானை இறைஞ்சு – வளப்பம் பொருந்திய திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவரும் ஆகிய திருவேகம்ப நாதரை வணங்குவாயாக.

கன்னம் - காது; கன்னஞ் செய்தல் - செவிகொடுத்துக் கேட்டல்; இரந்தும் - மிகக் கெஞ்சியும்; காலத்தால் - உயிரும் ஆற்றலும் உள்ள காலத்திலே. "காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்" என்பது மணிவாசகம். காலம் உள்ளபோதே இறைவரை வணங்கு. வன்னெஞ்சு - மாறுபட்ட வலிய கொடிய நெஞ்சு; மா - பெரிய; உருவுடைய; கம்பத்து ஆனை - கம்பம் - அசைவு; எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது யானையின் இயல்பு.  கம்பம் - நடுக்கம் என்று கொண்டு பெரிய நடுக்கத்தை விளைக்கும் யானை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பம் - கட்டுத்தறி என்றாலும் பொருந்தும். வண் - வளப்பமாவது முத்தி அறிக்கும் ஏழு திருத் தலங்களுள் ஒன்று திருக்காஞ்சி. ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செய்கின்ற அம்மைக்கு இருப்பிடமாக உள்ளதும் திருக்காஞ்சி. 

    காஞ்சிபுரம், தொண்டை நாட்டில் உள்ள முதல் திருத்தலம். சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவு. சென்னையில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. பிற நகரங்களில் இருந்தும் வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். "நகரேஷு காஞ்சி" என்று வடமொழியில் மகாகவி காளிதாசரால் சிறப்பித்துக் கூறப் பெற்றது.  தொண்டை நல்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடையது. முக்தி தரும் தலங்கள் ஏழில் ஒன்று. வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “கண் ஆர்ந்த நாகம் பராம் தொண்ட நாட்டில், உயர் காஞ்சி ஏகம்பம் மேவும் பேரின்பமே” என்று போற்றி உள்ளார். மூவர் முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம். இத் திருத்தலத்தில் எந்தக் கோழிலிலும் அம்புகைக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது சிறப்பு. நகரின் நடுநாயகமாக அம்மை வீற்றிருக்கும் காமக் கோட்டம் அமைந்து உள்ளது. மூவர் முதலிகளும், காமக் கோட்டம் சென்று அம்பிகையை வழிபட்டனர் என்பது பெரும் சிறப்பு. பாடல் பெற்ற திருத்தலங்கள் ஆகிய திருமேற்றளி, திரு ஓணகாந்தன்தளி, திருக்கச்சி அனேகங்காவதம், திருக் கச்சிநெறிக் காரைக்காடு ஆகியவை இந்நகரில் அமைந்து உள்ளன. சிறந்த வைணவத் தலமாகவும் விளங்குகின்றது. குமரக் கோட்டம் இங்கு அமைந்துள்ளது. பலவேறு திருக்கோயில்கள் உள்ளன.

இப் பாடல் ஆசிரியர் ஆகிய, ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றிய திருத்தலம். குருபூசை நாள் - ஐப்பசி - மூலம். காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தாவண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

“திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் 

பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்

தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்

அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்”

என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துத் திருத் தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே “சேத்திரத் திருவெண்பா” எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம். இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவநெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி. குருபூசை நாள் - வைகாசி - பரணி. கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவில் குறியாதவர்.  வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணை நாயனார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு "அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?" என வினவினார். அருகே நின்ற செருத்துணையார், "இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்" என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, "பூவை எடுத்த கையை அல்லவா முதலில் வெட்டுதல் வேண்டும்?" என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி. குருபூசை நாள் - சித்திரை - சுவாதி. காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் உள்ளத் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். இவர் செவ்விய அன்புடையவர். நல் ஒழுக்க நெறி நிற்பவர். சிவனடித்தொண்டு புரிபவர்.  மன, மொழி, மெய்யாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பு அழுக்கும் போக்குவார் ஆயினர்.

இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள், திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இளைத்திருக்கின்றதே?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக் கந்தையைத் துவைப்பதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் "நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக" என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், "அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக" என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராது ஒழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புழுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி "இனி நான் யாது செய்வேன்" என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப் போயிற்றே’"என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. "முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்" என்று எழுந்து "துணி துவைக்கும் கல்லிலேயே எனது தலை சிந்தும்படி மோதுவேன்" என்று தமது தலையை மோதினார்.

அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க, மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

        திருக்கயிலாயத்தில் ஆகமங்களைஎல்லாம் இறைவர் அருளிச் செய்ய அம்மையார் கேட்டருளினர். எண்ணில் ஆகமங்களை அருளிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனையே ஆகும் என்று அருளிச் செய்ய, அவ்வாறே தாம் பூசைசெய்ய அம்மையார் மனம் கொண்டனர். அதற்கேற்ற இடம் காஞ்சிபுரத்தின் மாவடியே ஆகும் என்று இறைவர்பால் அறிந்த இறைவியார் அங்கு நின்றும் போந்து, மலையரசன் வந்து விடுத்த பரிசனங்களுடன் சென்று காஞ்சியில் பதும மாநாகம் வேண்டியபடி அதன் பிலத் துவாரத்தில் எழுந்தருளியிருந்து, கம்பையாற்றின் கரையில் மாவின் மூலத்தில், தவஞ்செய்து, சிவனுரு வெளிப்படக் கண்டு, பூசிக்கத் தொடங்கி மெய்ப்பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தருளினர். அப்போது இறைவனார் ஒரு திருவிளையாட்டினால் அம்மையாருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, கம்பையாற்றில் பெருவெள்ளம் வர அருளினர். ஆறு பெருக்கெடுத்து மேலெழுந்து வரக் கண்டு தம் திருக்கையால் தடுத்து நில்லாமையால், அம்மையார் வெருக்கொண்டு காதலால் முலைக்குவட்டொடு வளைக்கையால் நெருக்கி இறுகச் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். இறைவர் அதனை விரும்பியவராய், யானையை உரித்துப் போர்த்த தமது திருமேனி குழைந்து காட்டி முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்துகொண்டு அத்திருமேனி காட்டி வெளிப்பட்டருளினர். எல்லா உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி இறைவரருளை ஏத்திப் போற்றின. கம்பையாறு  வெள்ளந் தவிர்ந்து வணங்கியது. மணவாள நற்கோலங் காட்டி நின்ற இறைவனார், அம்மையாரை நோக்கி, "வேண்டும் வரம் கொள்க" என்றருள, அம்மையார், இறைஞ்சி நின்று, "இன்றைய என் பூசை இன்னும் முடிந்ததில்லையாதலின் அதனைக் குறை நிரம்பிடக் கொண்டருளல் வேண்டும்" ன்று விண்ணப்பிக்க, அதற்கு இறைவனார் “நம்பால் நின்பூசனை என்றும் முடிவதில்லை" என்றருளவே, அம்மையார் இறைவர்பால் வரம் கேட்கலாயினர். அவையாவன : - "இந்தப் பூசை என்றும் மாறாது நிலைத்திருக்கும்படி தேவரீர் மகிழ்ந்து கொண்டருளுதல் வேண்டும். இந்தப் பதியில் எல்லா அறங்களும் யான்செய்யும்படி அருளுதல்வேண்டும். திருவடிப் பிழைத்தல் ஒன்றொழிய இங்குள்ளவர் வேறு செய்வினை எதுவேயாயினும் மாதவப்பயன் கொடுத்தருளப் பெறவும் வேண்டும்" என்ற மூன்றுமே ஆம். எல்லா வுயிர்களின் பிறப்பையும் ஒழிக்கும் பேரருட் செல்வியாகிய அம்மையார் கேட்டருள, அவ்வாறே இறைவனார் அந்தப் பூசனையை விரும்பி வீற்றிருந்தும், இடையறாத அறங்களை யெல்லாம் வளர்க்கும் வித்தாக இகபரத்து இருநாழி நெல்லை அளித்தும், காஞ்சி வாழ்பவர் செய்த தீவினையும் தடையின்றி மெய்ந்நெறியடையச் செய்யும் தவங்களாகவும் வரங்களை மகிழ்ந்து தந்தருளினர்.

அவ்வாறே அம்மையார் நித்தமாகிய பூசனை செய்து கொண்டு உயிர்களிடத்து இல்லறம் பெருக்கும் கருணையினால் புண்ணியத் திருக்காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து முப்பத்திரணடு அறங்களையும் அளித்தருள்கின்றனர்.


107. பொன்மலரில் நறுமணம்

 


கற்பூர வல்லியொரு பாகர்செழுந்

     தண்டலையார் கடலேழ் சூழ்ந்த

நற்பூமி தனிற்பிறந்தோர் எல்லோரும்

     மக்களென நாட்ட லாமோ?

அற்பூரும் பண்புடையார் நற்குணமும்

     பண்பிலார் அழகும் காணின்

பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்

     பூவுமெனப் புகலல் ஆமே.


இதன் பொருள் ---


கற்பூரவல்லி ஒருபாகர் – கற்பூரவல்லியாகிய உமாதேவியாரைத் தனது திருமேனியின் வொரு பாகத்தில் கொண்டவரும், செழுந்தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த நற்பூமிதனில் – வளப்பம் மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரும் ஆன சிவபரம்பொருளின், எழுகடலால் சூழப்பெற்ற இந்த நல்ல நிலவுலகத்தில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ - தோன்றியவர் யாவரும் மக்கட்பண்பு உடையவர் என உறுதியாகக் கூறுதல் பொருந்துமோ?, அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் – உள்ளத்தில் அன்பு மிக்கு உள்ள நற்பண்பு கொண்டோரின் தன்மையும், பண்பு இலார் அழகும் -  மக்கட் பண்பு இல்லாதாரின் உடலழகும், காணின் - ஆராய்ந்தால், பொன்பூவில் வாசனையும் – பொன்னால் ஆன மலரிலே நறுமணமும், புன்முருக்கம் பூவும் – மணம் அற்ற புல்லிய முருக்கமலரும் போல இருக்கும், எனப் புகலல் ஆம் - என்று சொல்லலாம்.


     அற்பு – அன்பு. அன்புடைமையே மனிதப் பண்பு ஆகும். அன்பு தழைக்கும் உள்ளத்தினை உடைய மனிதர்களை பொன்னால் ஆன பூவில் நறுமணம் என்று புகழத்தக்கது ஆகும். அன்புடையாரின் உள்ளத்தைக் கூறிய ஆசிரியர், அன்பு அற்றவரின் உடலழகைக் கூறி, அது மணம் அற்ற புல்லிய முருக்கம் பூவினைப் போலப் பயன் அற்றது என்று கூறினார்.


இதையே குமரகுருபர அடிகள் வேறுவிதமாக, “நீதிநெறி விளக்கம்” என்னும் நூலில் கூறி உள்ளார். என்றும்  ஒருபடித்தாக வாடாமல் இருக்கின்ற மலரைப் "பொன்மலர்" என்றார். ஒருவர் கற்ற கல்வி எவ்வளவு பெரிய அளவினதாக இருந்தாலும், கற்ற நூலின் தரம் அறிந்து, நூற்பொருளை ஆராய்ந்து உணரும் உணர்வு இல்லையானால், அவர் கற்ற கல்வி பயன்றறதாகும். ஒருகால், உணர்ந்து இருந்தாலும், பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இல்லையானால், கற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை. ஏனவே, ஆராய்ந்த அறிவோடு, சொல்வன்மையும் இருக்குமானால், அது, பொன்னால் செய்யப்பட்ட மலருக்கு, நறுமணமும் பொருந்தி இருப்பது போல் ஆகும் என்று பின்வரும் பாடலை அருளிச் செய்தார்.


“எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து

உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும், - உய்த்து உணர்ந்தும்

சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்

பொன்மலர் நாற்றம் உடைத்து. “ --- நீதிநெறி விளக்கம்.


கல்வி அறிவு செயற்கை அறிவு. இயற்கை அறிவு என்பது கற்ற நூலின் பொருளை உய்த்து உணர்ந்து, சொல்லவேண்டிய இடம் அறிந்து, பிறருக்கும் எடுத்து உரைக்கும் வன்மையை உடையது. அப்படிச் சொன்னால், அது பொன்னால் ஆன மலர் நறுமணமும் பொருந்தியது போல் ஆகும். பொன்னால் ஆன மலர் எப்போதும் வாடாது. வாடாத மலரில் மணம் இருந்துகொண்டே இருக்கும்.

எனவே, "இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், கற்றது உணர விரித்து உரையாதார்" என்றார் திருவள்ளுவ நாயனார். தாம் கற்ற நூற்பொருளைத் தெளிந்து பிறருக்கும் பயன்படுமாறு விரித்துச் சொல்லமாட்டாதவர், மணம் அற்ற மலரைப் போன்றவர்கள்.

பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ, அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்று உடல் அழகை மதிப்பவர்கள் புல்லிய முருக்கமலர் போன்றவர்கள் என்றார் ஆசிரியர். முருக்கமலர் மணம் அற்றது. மலர்ந்து சில நேரத்திலேயே அது வாடிவிடும். அதை யாரும் விரும்பார்கள்.


46. பொருட்பற்று துன்பம் தரும்

“இன்னல் தரும்பொருளை ஈட்டுதலும் துன்பமே,

பின் அதனைப் பேணுதலும் துன்பமே, - அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ! பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்.” -- நீதிவெண்பா


    துன்பத்தைத் தரக் கூடிய செல்வத்தைச் சம்பாதித்தாலும் துன்பம்.  அங்ஙனம் சம்பாதித்த பின்பு அச் செல்வத்தைக் காத்தலும் துன்பமே.  அப்படி ஈட்டிய பொருளைச் செலவழித்தலும் துன்பமே. அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போதலும் துன்பமே தருவதாகும்.


பாடல் 19


“உள்ளிடத்தான் வல்லையே, நெஞ்சமே! ஊழ்வினைகள்

கள்ளிடத்தான் வந்து கலவாமுன், -  கொள்ளிடத்தின்

தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்

தன்திருவாய்ப் பாடியான் தாள்.”


இதன் பொருள் ---

        ஊழ்வினைகள் கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - முன்செய்த ஊழ்வினைகள் உயிரைக் கொள்ளை கொள்ளுவதற்காக, தம்மை அறியாமலே வந்து இருந்து, வாழ்நாள் இறுதியில் உயிரைக் கொண்டு போவதன் முன்னே; கொள்ளிடத்தின் தென்திரு ஆப்பாடியான் - கொள்ளிடத் திருநதியின் தென்கரையில் உள்ள திருஆப்பாடி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய இறைவரும்; தெய்வமறை நான்கினையும் தன் திருவாய்ப் பாடியான்தாள் - தெய்வத் தன்மை பொருந்திய வேதங்கள் நான்கினையும் தமது திருவாயினாலே பாடியவரும் ஆகிய சிவபரம்பொருளினது திருவடியை, நெஞ்சமே – நெஞ்சே! உள்ளிடத்தான் வல்லையே - நினைக்க வல்லாயோ? (நினைப்பாயாக)

உள்ளுதல் - நினைத்தல். உள்ளிட வல்லையே - நினைக்க வல்லாயோ. ஊழ்வினைகள் கள் இட வந்து கலவாமுன்– ஊழ்வினைகள், திருடுதல் போல, நம்மை அறியாதவாறு நம்மோடு பொருந்தி இருந்து, நம்மை அறியாமலே உயிரைக் கொண்டு போக. கள்ளம் செய்ய. திருவாய்ப் பாடியான் - திருவாயால் பாடினவன். 

      திரு ஆப்பாடி - சோழ நாட்டு காவிரி வடகரையில் உள்ள திருத்தலம். மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது; சண்டேச நாயனார் பசுக்களை மேய்த்த இடமாயும், அங்கு இறைவர் வெளிப்பட்ட இடமாயும் உள்ளதால் இப்பெயர் பெற்றது.  இரண்டும் காவிரியின் பிரிவுகளாதலானும், காவிரியின் கிளையாதலாலும், மண்ணி, கொள்ளிடம் என்று உபசரிக்கப்பட்டது. 

        கும்பகோணம் - அணைக்கரை தடத்தில் அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருப்பனந்தாள் அருகில் உள்ளது.  கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. தொலைவில் உள்ளது.  இறைவர் திருநாமம்,  பாலுகந்த நாதர், பாலுகந்தீசுவரர். இறைவியார் திருநாமம், பிருகந்நாயகி, பெரியநாயகி. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம்.

சண்டேசுவர நாயனார் வரலாறு: 

        திரு ஆப்பாடிக்கு அருகிலுள்ள திருச் சேய்ஞலூர் என்பது நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசாரசருமருக்கு முற்பிறவி உணர்ச்சி முறுகி விளைந்ததனால், ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் ஒதுகிடைக்குப் புறப்பட்டார். அவ் வேளையில் அவ்வூர்ப் பசுக்களும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார்.  'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள்.  புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச் சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்' என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.  

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார்.  நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள், தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும்தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது.  மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு சிவலிங்கம் அமைத்தார்.  திருமதில்கள் எழுப்பினார். கோபுரங்கள் வகுத்தார்.  சுற்றாலயங்கள் எடுத்தார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வந்தார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத் தீண்டினார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொண்டு சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டி அருச்சித்தார்.  பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்பிக் கொள்வார். இவர் செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் அன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக் குறையாதபடி வழங்கி வந்தன.

இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள்  ஊரான் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத் தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று வணங்கி  விடைபெற்றுச் சென்றான்.

அடுத்த நாள் காலையில் விசாரசருமர் வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குராமரத்தில் ஏறி ஒளித்து இருந்தான்.  விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி வந்து, ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில் திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப் புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத் துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார்.  சிவபெருமான் உமாதேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.

சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால் எடுத்து, "நம் பொருட்டு உன் தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன் பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில் உள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.

எச்சதத்தன் சண்டீசப் பெருமானால் வெட்டுண்டதால், அவன் குற்றம் நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.

        வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தினம் தாளில் சூழ் திரு, வாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப வாரிதியே" என்று போற்றி உள்ளார்.


106. குங்குமம் சுமந்த கழுதை

 “பேருரைகண் டறியாது தலைச்சுமைஏ

     டுகள்சுமந்து பிதற்று வோனும்,

போரில்நடந் தறியாது பதினெட்டா

     யுதம்சுமந்த புல்லி யோனும்

ஆரணிதண் டலைநாதர் அகமகிழாப்

     பொருள்சுமந்த அறிவி லோனும்

காரியமொன் றறியாக்குங் குமம் சுமந்த

     கழுதைக்கொப் பாவர் தாமே.”


இதன் பொருள் ---


ஆர் அணி தண்டலைநாதர் அகம் மகிழாப் பொருள் சுமந்த அறிவு இலோனும் – ஆத்திமாலையைத் தரித்தவரும், திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருவுள்ளம் விரும்பாத பொருள்களைச் சுமந்த மூடனும், தலைச் சுமை ஏடுகள் பேர் உரை கண்டறியாது சுமந்து பிதற்றுவோனும் – நூல்களின் சிறந்த பொருளை அறியாமல், அவற்றைத் தலைச் சுமையாகச் சுமந்து, பிதற்றிக் கொண்டு திரிகின்றவனும், போரில் நடந்து அறியாது பதினெட்டு ஆயுதம் சுமந்த புல்லியோனும் - போருக்குச் சென்ற பழக்கமின்றி எல்லாப் படைக்கலங்களையும் சுமந்த இழிஞனும், காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த கழுதைக்கு ஒப்பாவர் - (எதனைச் சுமக்கிறோம் என்ற) தன் அலுவல் ஒன்றையும் உணராமல் குங்குமத்தைச் சுமந்த கழுதைக்குச் சமம் ஆவர்.


      திருத் தண்டலை இறைவர் திருவுள்ளம்  மகிழாப் பொருள்கள் சிவசின்னம் அல்லாதவை. ‘குங்குமம் சுமந்த கழுதை' என்பது பழமொழி.


“கழுதை குங்குமம் தான்சுமந்து எய்த்தால்

கைப்பர் பாழ்புக, மற்றுஅது போலப்

பழுது நான் உழன் றுஉள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன், எந்தாய்!

அழுது நீஇருந்து என்செய்தி மனனே!

அங்க ணாஅர னேஎன மாட்டா

இழுதை யேனுக்கு ஒர் உய்வகை அருளாய்

இடைம ருது உறை எந்தைபி ரானே!”


என்பது சுந்தரர் தேவாரம்.


இதன் பொருள் ---


என் அப்பனே!  திருவிடைமருதூரில் எழுந்தருளி இருக்கின்ற சிவபரம்பொருளே! கழுதையானது  குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர். அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேன் ஆயினேன்; `மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்` என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், ` அங்கணனே, அரனே` என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியினை வழங்கியருளாய் .


வாலாயமாகக் கழுதை சுமந்து செல்வது அழுக்கு மூட்டையைத்தான். அதனால் அதற்குத் தாழ்வு ஏதும் இல்லை. உயர்ந்த குங்கும மூட்டையை சுமந்தாலும் அதற்கு ஒரு வேறுபாடும் தெரியாது. அதனால் அதற்கு உயர்வு ஏதும் உண்டாகாது. அதுபோலத்தான், நம்மில் பலரும் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இறைபணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற பணியின் பொருள் என்ன என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்வார்கள். இறைவனைக் குறித்துப் பாடப்படுகின்ற பாடல்களின் பொருளை உணராது ஓதுகின்றவர்கள், “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்” என்னும் மணிவாசகத்தை ஓதிக் கொண்டுதான் இருப்பார்கள். இறைவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லுபவர்களிலும் பலரும் பொருள் தெரியாமல்தான் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். கேட்டால், பொருள் தெரியாமல் சொன்னாலும் இறைவன் அருள் புரிவான் என்று சமாதானம் கூறுவார்கள். "கக்கத்தில் வையாதே, கருத்தில் வை" என்பது முதுமொழி..


"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்,

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே! பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு"                     -- நாலடியார்.


கண்ணில் காணும் புத்தகங்களை எல்லாம் வாங்குவர். புத்தகத்தை யாராவது தந்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி வந்து விடுவர். ஆனால் அவற்றைப் படித்துப் பயன் கொள்ளமாட்டார். வீடு நிறைய புத்தகங்களைத் தொகுத்து வைத்து இருப்பவர்கள் எல்லோரும் படித்துப் பயன் கொண்டுவர் என்று சொல்ல முடியாது. புத்தகங்களைப் பொருள் உணர்ந்து படித்துத் தானும் பயன் பெற்று, பிறரும் பயனுற எடுத்துச் சொல்பவர்கள் மிகச் சிலரே. 

புத்தகம் தொகுப்பது மட்டுமே புலமை ஆகாது; அவற்றைக் கற்றுத் தாம் தெளிந்து, பிறருக்கும் சொல்லித் தெளிவுறுத்தும் அறிவுச் செழுமையே புலமையாகும் என்பது கருத்து.


45. ஆபத்து வரும்போது செல்வமும் தொலையும்

“ஆபத்து வந்தால் அரும்பொருள் தான்வேண்டுமே,

ஆபத்து ஏன் பூமாது அருகு இருந்தால்! - ஆபத்து

வந்தால், அவளும் மருவாமல் எப்பொருளும்

அந்தோ உடன்போம் அறி.” -- நீதிவெண்பா


    ஒருவனுக்கு ஆபத்துக் காலம் வந்தால் அதனை நீக்க அருமையான செல்வம் வேண்டப்படும்.  திருமகள் உடன் இருப்பாளானால் ஆபத்து இல்லை. அந்த இக்கட்டான காலம் ஏன் வருகிறது எனின், இடுக்கண் நேரிட்டால் அத் திருமகளும் சேராமல், ஐயோ, எல்லாப் பொருள்களும் நில்லாது அவளோடு போய்விடும்.  இதனை நீ புரிந்துகொள்.


    (பூமாது - இலக்குமி.  மருவாமல் - சேராமல்.)


பாடல் 18


“இழவுஆடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி

விழவுஆடி ஆவி விடாமுன்னம், மழபாடி

ஆண்டானை, ஆரமுதை, அன்றுஅயன்மால் காணாமை

நீண்டானை, நெஞ்சே! நினை.”


இதன் பொருள் ---


    இழவு ஆடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி - உயிரினை இழக்கும் நிலை கருதிச் சுற்றத்தார்கள் எல்லாரும் கூடி, விழவு ஆடி ஆவி விடாமுன்னம் – பிணத்தின் மேல் விழுந்து அழுகின்ற நிலை உண்டாகும் முன்னரே, மழபாடி ஆண்டானை – திருமழபாடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள ஆண்டவரை, ஆரமுதை – உயிர்கட்கு நிறைந்த அமுதம் போன்றவரை, அன்று அயன் மால் காணாமை நீண்டானை – முன்னொரு காலத்தில் பிரமனும், திருமாலும் காணமுடியாதபடி நெருப்பு உருவமாய் மேலும் கீழும் நீண்டவரை, நெஞ்சே நினை – நெஞ்சமே நினைப்பாயாக.


        திரு மழபாடி, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். இத் திருத்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது.  அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். இறைவர் திருநாமம், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேசுவரர். இறைவியார் திருநாமம், சுந்தராம்பிகை, அழகம்மை. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர் ஆகிய தேவார மூவர்முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம்.


இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை புருடாமிருகம் பிரமலோகத்தில் இருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிட்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரமாவால் எவ்வளவு முயன்றும் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.


இதையே திருநாவுக்கரசர் தமது பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரத்தூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது திருப்பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.


இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிட்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம்தோறும் நடைபெறுகிறது. திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.


வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே" என்று போற்றி உள்ளார்.


105. இல்லது வாராது - உள்ளது போகாது

 


“வல்லமையால் முடிவதுண்டோ? தலைகீழாய்

     நின்றாலும் வருவ துண்டோ?

அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்

     தன்செயலால் ஆவதுண்டோ?

புல்லறிவால் மயங்காமல், தண்டலையார்

     அடிபணிந்து, புத்தி உண்டாய்,

இல்லது வாராது! நமக் குள்ளதுபோ

     காதெனவே இருக்க லாமே.”


இதன் பொருள் ---

        வல்லமையால் முடிவது உண்டோ - நமது ஆற்றலாலே எந்த செயலும் முடியுமா? தலைகீழாய் நின்றாலும் வருவது உண்டோ - எவ்வளவு முயன்றாலும் நமக்கு வாராதது வருமா?, அல்லது - மேலும், அவன் செயலே அல்லாமல் தன் செயலால் ஆவது உண்டோ - இறைவன் ஆணைப்படியே நடக்குமன்றி ஒருவன் முயற்சியால் மட்டும் ஏதாவது முற்றுப் பெறுமா? (ஆகையால்), புல்லறிவால் மயங்காமல் - சிற்றறிவினாலே சிந்தை கலங்காமல், தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, புத்தி உண்டாய் – நல்லறிவு உண்டாகப் பெற்று, நமக்கு இல்லது வாராது - நமக்கு (ஊழினாலே) வரத் தகாதது கிடைக்காது, உள்ளது போகாது - (ஊழினாலே) வரக் கூடியது வீணாகாது, என இருக்கலாம் - என்று முயற்சியுடன் மட்டும் இருத்தல் நலம்.


    ‘ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று - சூழினும் தான்முந் துறும்' என்ற திருவள்ளுவ நாயனார், ‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்' என்றும் அருளிச் செய்துள்ளதால், முயற்சியை வலியுறுத்திக் கூறப்பட்டது. ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதனாலே பயனை எதிர்பாராமல் முயற்சியைச் செய்க என்பதே கருத்தாகக் கொள்ளல் வேண்டும். ‘இல்லாதது வராது உள்ளது போகாது' என்பது சத்காரிய வாதம். 

இக் கருத்து திருவள்ளுவ நாயனாரால் மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. திருக்குறளில் அறுத்துப்பாலில் ஊழ் என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஊழ் வசத்தால் தமக்கு உரியவை அல்லாத பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும், அவை நில்லாது போகும். ஊழ்வசத்தால் தமது உடைமையாக வேண்டிய பொருள்களை வெளியில் கொண்டு போய்ப் போட்டாலும், அவை தம்மை விட்டுப் போகமாட்டா" என்கின்றார் நாயனார். அனுபவிக்கும் ஊழ் உள்ளவன் பொருளைக் காப்பாற்ற வேண்டுவது இல்லை, அது அவனை விட்டு நீங்காமல் இருக்கும். அனுபவிக்கும் ஊழ் இல்லாதவன், எவ்வளவுதான் வருந்திக் காத்தாலும், பொருளானது அனுபவிப்பதற்கு இல்லாமல் போய்விடும்.

“பரியினும் ஆகாவாம் பால் அல்ல, உய்த்துச்

சொரியினும் போகா தம.” -- திருக்குறள்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காண்க...

“வருந்தி அழைத்தாலும் வாராத வாரா,

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண் ஆக நெடுந்தூரம் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.” --- நல்வழி.

இதன் பொருள்  ---

ஊழால் வரக் கூடாதவைகள், பரிந்து அழைப்பினும் வாராவாம். ஊழால் வரக் கூடியவை, போயிடுங்கள் என வெறுப்பினும், போகாவாம். இவ்வுண்மை அறியாமல் இருந்து ஏக்கமுற்று, மனம் புண்ணாகும்படி அவற்றைத் தாம் நெடுந்தூரம் சிந்தித்து, மாண்டு போவதே மனிதர் தொழிலாக உள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கது அன்று.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினை உலந்தக் கால். “ --- நாலடியார்.

இதன் பொருள் ---

        பொருளானது, பிறர்க்குக் கொடுத்துத் தானும்  நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலும்மேலும் திரளும், நல்வினை முடிந்துவிட்டபோது, அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும்,  இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.


“வளம்பட வேண்டாதார் யார்? யாரும் இல்லை;

அளந்தன போகம் அவரவர் ஆற்றான் ;

விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்

கார்எனச் செய்தாரும் இல்.” ---  நாலடியார்.

இதன் பொருள்  ---

செழுமையாக வாழ விரும்பாதவர் உலகில் ஒருவரும் இல்லை. ஆனால் இன்ப நுகர்வு என்பது அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளது.  விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல.


“ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்

வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது.” ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

        மிக்க நீரையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில், யாரும் சிறிதும் துன்பந்தரும் தீயவற்றை விரும்பமாட்டார்கள். எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே,  மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாது ஒழிதல் இல்லை. (இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும் என்பது கருத்து)


“ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்,

போகும் பொறியார் புரிவும் பயன் இன்றே,

ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்

ஆகாதார்க்கு ஆகுவது இல். ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

உயர்ச்சியை உடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்து எய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு, செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை. செல்வம் போக்கும் போகூழ் வந்து எய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு, அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை.  எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும், செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவது ஒன்றில்லை.


“கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்

விழுமியோன் மேல் சென்றதனால் - விழுமிய

வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

தீண்டா விடுதல் அரிது." ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சீகாழியின்கண் கட்டப்பட்டிருந்த யானையும், கருவூரின்கண் இருந்த சிறப்புடையவனாகிய கரிகால் சோழனிடத்துச் சென்று அவனைக் கொண்டு வந்து அரசுரிமையை எய்துவித்ததால், சிறந்த பொருள்களை விரும்பினும் விரும்பாது ஒழியினும், அடைதற்கு உரியவாய் நின்ற நன்மைகள் ஒருவனை அடையாது நிற்றல் இல்லை.

கழுமலம் : இது சோழநாட்டு உள்ளது ஓர் ஊர். கருவூர் : இது சேரநாட்டு உள்ளதோர் ஊர். இவ்விரண்டும் வெகு தொலைவில் இருந்தாலும், ஊழ் கருவூரில் உள்ளவனை அரசனாக்கியது. 

கரிகாலன் நெடுந்தொலைவின்கண் இருந்து விரும்பாது இருப்பினும் ஊழ் விழுமிய பயனை அடைவித்தது. சீகாழியை ஆட்சிசெய்தான் இறந்து படவே, அவன் வழியில் யாரும் அவ்வரசாட்சியை ஏற்க இன்மையால் அமைச்சர்கள் பட்டத்து யானையை விட்டு அவ்யானை யாரைக் கொண்டு வருகின்றதோ அவனுக்கே முடிசூட்டுவது என்று உறுதிசெய்து யானையை விட்டனர். அவ் யானை கருவூரிலிருந்த கரிகாலனைக் கொண்டு வந்து முடிசூடுமாறு செய்தது என்பதாம்.


'ஆகுவது ஆகும், காலத்து அழிவதும், அழிந்து சிந்திப்

போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்;

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது,

ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!' 

                            ---  கம்பராமாயணம், கும்பகர்ணன் வதைப் படலம்.

 இதன் பொருள் ---

எக்காலத்தும் அழியாது வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது  ஆகியே  தீரும். அழிய வேண்டியது அழிந்து சிதறிப் போகும்.  அவ்வாறு அழிந்து போவதைப் பக்கத்தில் நின்று பாதுகாத்தாலும் அது அழிந்து  போயே தீரும். குற்றமற அதை உணர்ந்து தெளிந்தவர்கள் உன்னைக் காட்டிலும் யாவர் உலகில் உளர்? துன்பப்படாமல் எம்மைக் குறித்து இரங்கலையாய்ச் செல்வாய்.

நடப்பதை ஏற்கும் பக்குவம் பெற்ற மனிதனாக கும்பகருணன் விளங்குகிறான். நடைமுறை உலகில் வாழ்பவர்க்கு இத்தகைய மனநிலை துன்ப  நீக்கத்துக்கு உறுதுணையாக அமையும் என்பது குறிக்கத்தக்கது. 


44. இன்னின்னார்க்கு இதுவிது இல்லை

 “உற்றதொழில் செய்வோர்க்கு உறுபஞ்சம் இல்லையாம்,

பற்று செபத்தோர்க்கு இல்லை பாவங்கள், - முற்றும்

மவுனத்தோர்க்கு இல்லை வருகலகம், துஞ்சாப்

பவனத்தோர்க்கு இல்லை பயம்.” -- நீதிவெண்பா


தமக்கேற்ற தொழிலைப் பொறுப்போடு செய்துகொண்டு இருப்பவர்களுக்கு உண்டாகின்ற பஞ்சம் எதுவும் இல்லை.  அன்போடு தெய்வத்தை வழிபாடு செய்கின்றவர்களுக்குத் தீவினை இல்லை.  சிறிதும் பேசாமல் மௌனமாக இருப்பவர்களுக்கு வரக்கூடிய கலகம் ஒன்றும் இல்லை. கண் இமைத்தல் இல்லாத தேவர்களுக்கு அச்சமே இல்லை.


(பற்று செபம் - அன்புடைய வழிபாடு.  துஞ்சா - உறங்காத, கண் இமைத்தல் இல்லாத.  பவனத்தோர் - தேவர்.  "இமையாரின் வாழினும் பாடிலரே" --- திருக்குறள்.)


104. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது.

 


“பார்க்குள் அறிவிருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும் பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும்அருங் கதியுதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தானுயரப் பறந்தாலும்

     பருந்தாகா துண்மை தானே.”


இதன் பொருள் ---

        ஆர்க்கும் அருங்கதி உதவும் தண்டலையாரே - எல்லோருக்கும் நல்ல நிலையை அருளுகின்றவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ளவரும் ஆன சிவபரம்பொருளே!  ஊர்க்குருவிதான் ஆகாயத்தில் உயரப் பறந்தாலும் பருந்து ஆகாது - ஊர்க்குருவி வானத்தில் உயரமான தொலைவில் பறந்தாலும் அது பருந்தின் மதிப்பை அடைய முடியாது, உண்மை தானே - இது உண்மையே ஆகும்; (ஆகையால்), அறிவு இருந்தாலும் படித்தாலும் கேட்டாலும் – அறிவு இருந்தாலும், இருக்கின்ற அறிவைப் பெருக்கிக் கொள்ள நூல்களைக் கற்றாலும், நூற்பொருளைக் கற்றார் வாய்க் கேட்டாலும், பணிந்து வேதமார்க்கமுடன் நடந்தாலும் – பணிவுடன், வேதநெறியில் ஒழுகினாலும், பார்க்குள் சிறியவர்க்குப் பெரியவர் தம் மகிமை உண்டோ - உலகிலே கீழ்மக்களுக்குச் சான்றோருக்கு உரிய சிறப்பு உண்டாகுமோ?

        “உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்பது பழமொழி. "சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் – அங்கண் உலகில் சிறியோர் தாம் அடங்கி நடந்து கதி அடையமாட்டார்” என்று முன்னே ஒரு பாடலில் கூறப்பட்டுள்ளது காண்க. “வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ?” என்பது குமரேச சதகம்.


ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்.                ---  மூதுரை


எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை.               ---  மூதுரை.


வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.        --- திருக்குறள்.


பாடல் 17

 "கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு, நாறி

ஒழிந்தது, உடல்இரா வண்ணம் - அழிந்தது

இராமல்,ஐயா, கொண்டுபோ என்னாமுன், நெஞ்சே!

சிராமலையான் பாதமே சேர்."

இதன் பொருள் ---

        கழிந்தது நென்னெற்று கட்டுவிட்டு - நல்ல நெற்றுப்போல வறண்ட உடலானது நேற்று உயிர் போன பின்னர் கட்டுவிட்டுக் கழிந்தது, நாறி ஒழிந்தது உடல் – உடலானது அழுகும் பதமாய் நாறுகிறது. அது இராவண்ணம் – இனி வைத்து இருக்க முடியாதபடி, அழிந்தது இராமல் – அழிந்து போன உடலை இன்னமும் வீட்டில் வைத்து இராமல், ஐயா – ஐயா!, கொண்டு போ என்னாமுன் -  எடுத்துக்கொண்டு போ என்று சொல்லாத முன்னே; நெஞ்சே – நெஞ்சமே! சிராமலையான் பாதமே சேர் -  திருச்சிராமலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளினது திருவடிகளை இடைவிடாது நினைப்பாயாக.


        நெற்றுப் பதம் வந்த பிறகு காய்கள் மரத்தில் இருந்து தன்னால் உதிர்வது போல, வற்றிப் போன உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றது. நேரம் செல்லச் செல்ல பிணமானது அழுகி நாற்றம் எடுக்கும். உறவினர்களைப் பார்த்து, ஐயா, இனிச் சிறிது நேரமும் வைத்து இருக்காமல், அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் சொல்லுவார்கள். இந்த நிலை வந்து சேராத முன்னம், திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவன் திருவடிகளை எப்போதும் நினைப்பாயாக என்று உபதேசம் செய்யப்பட்டது. 

        சேர்தல் என்னும் சொல்லுக்கு இடைவிடாது நினைத்தல் என்றும் பொருள். எனவே, திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவாயாக என்பதோடு, இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பாயாக என்பதாகவும் பொருள் கொள்ளலாம். “மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்” என்னும் திருக்குறளில், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் என்று பரிமேலழகர் உரை கண்டுள்ளார் என்பதை அறிக.

        இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. உடம்பானது,  இரதம்,  உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை,  சுக்கிலமாகிய விந்து என்னும் ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. மாயையின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடம்பு தோன்றி, நின்று அழியும் தன்மை உடையது. இது  நெடுநாளைக்கு நிற்பது அல்ல. 

 

“என்பினால் கழிநிரைத்து இறைச்சிமண் 

     சுவர் எறிந்த இதுநம் இல்லம்,

புன்புலால் நாறுதோல் போர்த்து, பொல்- 

     லாமையால் முகடு கொண்டு,

முன்பு எலாம் ஒன்பது வாய்தலார் 

     குரம்பையின் மூழ்கி டாதே

அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம் 

     மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.”. --- திருஞானசம்பந்தர்.

 

“புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடி

ஒழுக்குஅறா ஒன்ப துவாய் ஒற்றுமை ஒன்றும்இல்லை

சழக்குஉடை இதன்உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய

அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.”   --- அப்பர்.

                                        

“கால்கொடுத்து இருகை ஏற்றிக்

     கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து 

தோல்படுத்து உதிர நீரால்

     சுவர்.எடுத்து இரண்டு வாசல் 

ஏல்வுடைத்தா அமைத்து அங்கு 

     ஏழு சாலேகம் பண்ணி 

மால்கொடுத்து ஆவி வைத்தார்

     மாமறைக் காடனாரே.”                 --- அப்பர்

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"  --- திருப்புகழ்.

                                                                                                            

“தோல்,எலும்பு,சீ,நரம்பு,பீளை,துன்று கோழை,பொங்கு

     சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,

தூல பங்க காயம் வம்பிலே சுமந்து,நான் மெலிந்து

     சோரும், இந்த நோய் அகன்று,...... துயர்ஆற,” --- திருப்புகழ்.

 

“தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற

     தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு

     வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்..” --- திருப்புகழ்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய, 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.”  – திருப்புகழ்.


“தோலால் சுவர்வைத்து,நால்ஆறு காலில் சுமத்தி, இரு

காலால் எழுப்பி,வளைமுதுகு ஓட்டி, கைந் நாற்றி, நரம்-

பால் ஆர்க்கை இட்டு,தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்,

வேலால் கிரிதொளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே.” - கந்தர் அலங்காரம்.


    திருச்சி என வழங்கும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்துள்ளது. தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. 

    இது பற்றி வழங்கும் ஒரு கதை உண்டு. ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானை வணங்க ஆதிசேடனும் வாயுவும் வந்தனர். ஆதிசேடன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேடன் திருக்கயிலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச திருக்கயிலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இதன்படி, திருச்சிராப்பள்ளி மலை தென்கயிலாயம் என்ற பெயர் பெற்றது.

திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென்கயிலாயம் என்றும் போற்றப்படும் சிறப்பை உடையது.

இத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியவள் இரத்தினாவதி. பேறு காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவளுடைய தாய் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த தாயால் இக்கரைக்கு வந்து இரத்தினவதியைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தனது அடியவளின் துயரத்தைப் போக்கி உதவி புரிய இறைவன் அவளது தாய் உருவில் வந்து சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனால், இறைவன்  திருப்பெயர் தாயுமானசுவாமி என்று வழங்கப்படுகின்றது. பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த, “நன்றுடையானை தீயது இல்லானை” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் சுகப் பிரசவம் ஆகும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. அது உண்மையும் கூட. அன்பர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளுகின்றனர். கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதைச் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு, பிறகு அங்கு வரும் அடியவர்களுக்கு வாழைப்பழங்களை வழங்குவார்கள்.

திருஞானசம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் செய் அராப்பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே" என்று போற்றி உள்ளார். 


பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

உற்பாதப் பூதக் காயத்தே (பொது)


முருகா! 

மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


உற்பா தப்பூ தக்கா யத்தே

     யொத்தோ டித்தத் ...... தியல்காலை


உட்பூ ரித்தே சற்றே சற்றே

     யுக்கா ரித்தற் ...... புதனேரும்


அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ

     லப்பா வித்துத் ...... திரிவேனுக்


கப்பா சத்தா லெட்டா அப்பா

     லைப்போ தத்தைப் ...... புரிவாயே


பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா

     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்


புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்

     பொட்டா கக்குத் ...... தியவேலா


முற்பா டப்பா டற்றா ருக்கோர்

     முட்கா டற்கப் ...... பொருளீவாய்


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


உற்பாதப் பூதக் காயத்தே

     ஒத்து ஓடித் தத்து, ...... இயல் காலை


உள் பூரித்தே, சற்றே, சற்றே,

     உக்காரித்து அற் ...... புதன் நெரும்


அற்பாய் இல் தாய், நிற்பாரைப் போ-

     லப் பாவித்துத் ...... திரிவேனுக்கு,


அப் பாசத்தால் எட்டா அப்பா-

     லைப் போதத்தைப் ...... புரிவாயே.


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்கா-

     கப் போய் முட்டிக் ...... கிரிசாடி,


புக்கு ஆழிச் சூழ் கிட்டாகிச் சூர்

     பொட்டாகக் குத் ...... திய வேலா!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஒர்

     முள் காடு அற்கப் ...... பொருள் ஈவாய்!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை


பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக் கிரி சாடி --- அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, 


புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா ---கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!


        முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        சுத்தா --- தூயவரே!


        முத்தா --- பற்று அற்றவரே!


        முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


உற்பாதம் பூதக் காயத்தே ஒத்து --- பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து,


        ஓடி --- பொருளை ஒடித் தேடி வைத்து,


        தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, 


அற்புதன் நேரும் அற்பாய் --- கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு,


        இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு, 


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---அந்தப் பாசங்களால் எட்ட முடியாது, அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


பொழிப்புரை


        அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய், அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்துக் கடலிடைப் புகுந்து மாமரமாக நின்ற சூரபதுமன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலாயுதரே!


பொய்யாமொழிப் புலவர் முன்னதாகப் பாடிய பாட்டைக் குற்றமின்றிப் பாடாத காரணத்தால் அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் உள்ள பிழையைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவரே!


முத்தி நிலைக்கு அதிபரே!


        ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


        தூயவரே!


        பற்று அற்றவரே!


        உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பின்னர் விளையும் தீமைகளைக் காட்டவல்ல பஞ்சபூதங்களின் கூட்டுறவால் ஆன இந்த உடலில் பொருந்தி இருந்து, பொருளை ஒடித் தேடி வைத்து, மனக்கவலை நிரம்பிய காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தில் (பொய்யான) அன்பு பூண்டு, இல்லறத்தைப் பொருந்தி இருப்பாரைப் போலப் பாவித்து ஏமாற்றித் திரிகின்ற அடியேனுக்கு,  அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல், அப்பாற்பட்டு நிற்கும் உண்மை அறிவை உபதேசித்து அருள்வீராக.


விரிவுரை


உற்பாதம் பூதக் காயத்தே --- 


உற்பாதம் – கொடுமை, தீ நிமித்தம், பின்வரும் தீமைகளை முன் அறிவிக்கும் குறி.

பூதக் காயம் – ஐந்து பூதங்களின் கூட்டுறவால் உண்டானது இந்த உடம்பு.

ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால்

          ஆகின்ற ஆக்கை, நீர் மேல்

அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான்

          அறியாத காலம் எல்லாம்

புந்திமகிழுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே

          போந்த நெறி என்று இருந்தேன்,

பூராயம் ஆக நினது அருள் வந்து உணர்த்த, இவை

          போனவழி தெரியவில்லை..         --- தாயுமானார்.


“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை

மருவிய அத்தி வழும்பொடு மச்சை

பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி

உருவம் அலால், உடல் ஒன்று எனல் ஆமே?” -- திருமந்திரம்.

    சோற்றின் சத்து, இரத்தம், மாமிசம், தோல், கொழுப்பு, பொருந்திய எலும்பு, நிணம், மூளை, பரவிய இந்திரியம் ஆகிய இவற்றின் காரியத்தினுல் அமைந்தது. உடம்பின் உருவம் இவற்றைத் தவிர்த்து வேறு என்அ கூறமுடியுமோ? முடியாது.  நிலையாய் இராமல் நிலை அழிந்து ஒழிந்து போவன ஆகிய குருதி, இறைச்சி முதலிய அழுக்குப் பொருள்களாகிய பருப் பொருள்களது தொகுதியைத் தவிரத் தூல உடம்பு வேறு ஏதுவாதல் கூடும் என்கின்றார் திருமூல நாயனார்.

    இவ்வாறு பஞ்சபூதங்களின் கூட்டால் ஆன உடம்பில் பொருந்தி இருப்பது உயிர்.  அந்த உயிர் அறிவு விளக்கம் பெறுவதற்காக இறைவன் தனது பெருங்கருணையால் வைத்தவையே அந்தக் கரணங்கள் என்னும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை ஆகும்.

    இந்த உடம்பு “வேற்று விகார விடக்கு உடம்பு” என்கிறார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பு ஆன்மாவின் வேறு. இந்த உட்முபே ஆன்மா அல்ல. ஆன்மா குடியிருப்பதற்கு இறைவனால் படைத்து அளிக்கப்பட்டது. எனவே, “வேற்று உடம்பு”. இந்த உடம்பு தோன்றியபோது இருந்தபடியே இராது. மாற்றத்தை அடைந்துகொண்டே இருக்கும். எனவே, இதை “விகார உடம்பு” என்றார். விடக்கு – ஊன். இது ஊன் உடம்பு. இந்த உடம்பு விகாரம் அடைந்து அடைந்து பின்னர் அழியக் கூடியது. இந்த உற்பாதத்தை உடம்பில் உண்டாகும் விகாரங்கள் அறிவிக்கும்.


தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே உக்காரித்து --- 

தத்து – சாதகத்தின்படி நேரும் ஆபத்து, மனக்கவலை.

பூரித்தல் - நிறைவு அடைதல். களித்தல்.

    ஒருகால் உள்ள நிறைவும், பூரிப்பும், ஒருகால் மனக்கவலையும் நிறைந்ததே இந்த வாழ்க்கை ஆகும். சற்றே சற்றே பூரிக்கும் சற்றே சற்றே உக்காரிக்கும்.  இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளைநிலமாகவும் உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால், வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டும். முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவது, குற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது.  புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம், கவலை, துன்பம், கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்து, இந்த உடம்பை, கைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.


“வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,

புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,

மூத்து விளிவு உடையது, தீப்பிணி இருக்கை ,    

பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து         

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்.”



“சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்று ஏறப் பார்த்து,சிலபணி ...... விடை ஏவி,

 சில் தாபத்து ஆக்கைப் பொருள்கொடு

     பித்துஏறி,கூப்பிட்ட அவர் பரிசு

          எட்டாமல்,தூர்த்தத்து அலைபடு ...... சிறுகாலை,

 

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு

     பற்று ஆயப் பூட்டுக் கயிறுகொடு,

          உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு ...... தடுமாறி,

 உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி,

     காய் அத் தீப் பட்டு எரி உடல்

          உக்கேன், மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே?”   --திருப்புகழ்.



அற்புதன் நேரும் அற்பாய் --- 

அற்புதன் – இறைவன். “அற்புதன் காண்க, அநேகன் காண்க” என்கிறது மணிவாசகம்.

அற்பு – அன்பு. அன்பு என்பது உயிருக்கு உள்ள பண்பு. “அன்பின் வழியது உயிர்நிலை” என்பது பொய்யாமொழி.


இல் தாய் நிற்பாரைப் போலப் பாவித்துத் திரிவேனுக்கு --- 

இல் - இல்லறம்.

தாய் - பொருந்தி இருத்தல்.

உள்ளத்தில் உண்மை அன்பு இல்லாமல், அன்பு உடையவனைப் போலப் பாவித்து, இல்லறத்தில் பொருந்தி இருத்தல் கூடாது. தன்னைச் சார்ந்தவர்களிடத்திலேயே அன்பைக் காட்டாத வன்மனம் படைத்தவன், இறைவனிடத்து அன்பைக் காட்டுவது பாவனையாகத் தான் இருக்க முடியும்.


அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ---

பாசம் – ஆசை, அன்பு, கயிறு, தளை, மும்மலம், ஆணவமலம், பற்று. 

பாசமாகிய பற்று நம்மிடத்தே குடிகொண்டு உள்ளது. அந்தப் பாசமாகிய பற்றை அறுக்கத் துணை புரிவது இறைவன் திருவருளே. “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்பது மணிவாசகம்.

உண்மை அறிவு என்னும் மெய்யறிவு விளங்கினால், அப்பாலைக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அடையலாம். பாச அறிவினால் அடைய முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் உள்ள இறைவனை அறியும் உண்மை அறிவைப் “போதம்” என்றார். அதனை இறைவன் குருவடிவாக எழுந்தருளி வந்து அருள்புரிய வேண்டுகிறார்.


முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப் பொருள் ஈவாய் --- 

இந்த வரலாறு பொய்யாமொழிப் புலவருக்கு வேடன் வடிவில் வந்து முருகப் பெருமான் திருவருள் புரிந்தததைக் குறிக்கும்.

பொய்யாமொழிப் புலவர் வரலாறு 

      சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருந்தார்.  அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து பொய்யாமொழிப் புலவர் தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

       பொய்யாமொழிப் புலவர்  தொண்டை மண்டலத்தில் சைவவேளாளர் குடியில் தோன்றியவர். இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

      ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார். வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார். பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணி, மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த கொடிய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றி, ‘இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார் பொய்யாமொழிப் புலவர். அப்போது, ‘நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன்  "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் வேடனாக வந்த முருகவேள். "தெரியும்" என்றார் புலவர்.   முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல் பாடுக"  என்று கூறினார். புலவர் உன் பெயர் யாது எனக் கேட்டார். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவில் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார்.  இந்தப் பாலையைப் சிறப்பித்து “நல் தாய் இரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக என்றார் வேடனாக வந்த வேலவர். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"


என்னும் பாடலைப் பாடினார் பொய்யாமொழிப் புலவர்.

 

     இப் பாடலைக் கேட்ட முருகவேடன்,   "இச் செய்யுளில் பொருள் குற்றம் உள்ளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்க இயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோ?  நான் பாடுகிறேன். கேட்டிடுக" என்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

      அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்று கூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  வேட உருவில் வந்துள்ளது  கந்தக் கடவுளே எனத் துணிந்து, தமது பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலத்தைக் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

“முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”     --- (பத்தித்தரள) திருப்புகழ்.

                                                                              

"பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்து, எனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”            --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.


கருத்துரை


முருகா! மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும்.


053. சுற்றம் தழால் - விருப்பு அறாச் சுற்றம்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அன்பு நீங்காத சுற்ற...