பொது --- 1122. மக்கள் ஒக்கல் தெரிவை

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மக்கள் ஒக்கல் (பொது)


முருகா! 

தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.


தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

     தத்தனத் தத்ததன ...... தனதான


மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

     மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும்


வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

     மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும்


புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

     பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே


புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

     புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே


செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

     செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி


சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

     சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே


கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

     கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா


கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

     குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


மக்கள், ஒக்கல், தெரிவை, பக்கம் மிக்கத் துணைவர்,

     மற்றும் உற்றக் குரவர், ......அனைவோரும்


வைத்த செப்பில் பணமும், ரத்ன முத்தில் பணியும்,

     மட்டும் அற்றுப் பெருகும் ...... அடியாரும்,


புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது

     பொய்க்கு மெய்க்குச் செயலும் ...... உருகாதே,


புஷ்பம் இட்டு, கருணை நற்பதத்தைப் பரவு,

     புத்தி மெத்தத் தருவது ...... ஒருநாளே?


செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கில் சிறகு,

     செக்கம் உற்றச் சலமும், ...... மதிசூடி,


சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழும்,

     சித்த முத்திச் சிவமும் ...... அருள்வோனே!


கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை

     கொத்தின் ஒக்கக் கொலை செய் ...... வடிவேலா!


கொற்ற வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது

     குத்தி வெட்டிப் பொருத ...... பெருமாளே.

பதவுரை

செக்கர் கற்றைச் சடையில் --- சிவந்து திரண்டுள்ள திருச்சடையில்,


மிக்க கொக்கின் சிறகு --- நிரம்ப கொக்கின் இறகையும்,


செக்கம் உற்றச் சலமும் --- பூதலத்தில் வரும் கங்கை நதியையும்,


மதி சூடி --- பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு,


சித்தம் உற்றுத் தெளிய --- அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக,


மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே --- மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே! 


கொக்கு உறுப்புக் கொடு --- மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி,


மை நிற்கும் வட்டத்து அசுரரை --- கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும்,


கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா --- ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!


கொற்றம் வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத பெருமாளே --- வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!


மக்கள் ஒக்கல் தெரிவை --- பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி, 


பக்கம் மிக்கத் துணைவர் --- பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர்,


மற்றும் உற்ற குரவர் அனைவோரும் --- மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும்,


வைத்த செப்பில் பணமும் --- அடியேன் சேர்த்து வைத்த பணமும்,


ரத்னம் முத்தில் பணியும் --- இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும், (ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய)


மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் --- (எனது பிணத்தின் பின்னே) அளவில்லாது  திரண்டு கூடுகின்ற அடியார்களும்,


புக்கு துக்கித்து --- கூடித் துக்கம் கொண்டு,


எரிகள் தத்த வைக்கப் புகுது --- கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற


பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே --- நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற் பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல், 


புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே --- மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?


பொழிப்புரை


சிவந்து திரண்டுள்ள திருச்சடையில், நிரம்ப கொக்கின் இறகையும், பூதலத்தில் பாயும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபரம்பொருளுக்கு, அவரது சித்தத்தில் பதிந்து தெளிவு உண்டாகும்படியாக, மிகவும் சிறந்து விளங்கும் திடமான முக்தி நிலையை அருள்வதாகிய நன்மைப் பொருளை உபதேசித்து அருளியவரே! 

மாமரத்தின் உறுப்புக்களோடு கூடி, கறுத்த வட்டமாகிய கடலில் நின்ற சூரபதுமனையும், அவனைச் சார்ந்தவர்களையும், ஒரே கொத்தாக மொத்தமாக அழித்த கூர்மை பொருந்திய வேலாயுதத்தை ஏந்தியவரே!

வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை வேலால் குத்தியும், சிலரை வாளால் வெட்டியும் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!

பிள்ளைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் உள்ள உடன்பிறந்தார்கள், நண்பர்கள் முதலியோர், மற்றும் உள்ள பெரியோர்கள் முதலிய எல்லோரும், அடியேன் சேர்த்து வைத்த பணமும், இரத்தினம், முத்து ஆகியவைகளால் செய்யப்பட்ட அணிகலன்களும் ஆகிய இவை யாவும் என்னுடன் வராது ஒழிய,

எனது பிணத்தின் பின்னே அளவில்லாது  திரண்டு கூடுகின்ற அடியார்களும் கூடித் துக்கம் கொண்டு, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வைக்கப் போகின்ற நிலையில்லாத இந்த உடலினை ஓம்புதற்பொருட்டும், உலக இன்பங்களை அனுபவித்தற்பொருட்டும் ஆகிய செயல்களில் மனத்தை ஈடுபடுத்தாமல், மலர்களை இட்டு, தேவரீருடைய கருணைக்கு இருப்பிடமான திருவடிகளைப் போற்றிப் பரவுகின்ற புத்தியை அடியேனுக்கு நிரம்பக் கொடுக்கும் நாள் ஒன்று உண்டாகுமா?


விரிவுரை


செக்கர் கற்றைச் சடை --- 

சிவபரம்பொருளினது திருச்சடையானது சிவந்து திரண்டுள்ளது என்பதை, “செஞ்சடைக் கற்றை” என்னும் அப்பர் வாக்கால் அறிக.


மிக்க கொக்கின் சிறகு --- 

“கொக்கிறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு

அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே” என்பதும்

“கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்” என்பதும் அப்பர் அருள்வாக்கு. “கொக்கு இறகும் பாடி” என்பது மணிவாசகம்.


“கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும்,

மிக்க வெண்டலை மாலை விரிசடை

நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு,

அக்கின் ஆரமும், அம்ம அழகிதே.”.  – திருஞானசம்பந்தர்.


கொக்கின் வடிவில் இருந்த குரண்டாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதன் அடையாளமாக கொக்கின் இறகினை ஆபரணமாகச் சிவபெருமான் என்பது புராண வரலாறு. 


செக்கம் உற்றச் சலமும் --- 

“செகம்” என்னும் சொல், “செக்கம்” என்று வந்தது.  செகம் – உலகம்.

சலம் – நீர். இங்கே கங்கை நதியைக் குறிக்கும். சிவபிரான் கங்கையைத் தமது திருச்சடையில் தாங்கியவர். 

சிவபரம்பொருள் கங்கையைத் திருச்சடையில் தாங்கிய வரலாறு

திருக்கயிலாய மலையில் திருநந்தனவனத்தில் சிவபெருமான் ஒரு சமயம் வீற்றிருந்து அருளினார்.  உமாதேவியார் திருவிளையாட்டாக மெல்லப் பின்புறமாக ஓசை உண்டாகாமல் வந்து, எம்பெருமான் திருக்கண் மலர்களைக் கரமலர்களால் மூடினர்.  அதனால் உலகமெல்லாம் இருண்டன. சந்திர சூரியர் முதலிய எல்லா ஒளியும் எம்பெருமான் திருக் கண்களினின்றே வெளிப்படும்.  ஆதலினால், 

எல்லா ஒளியும் மாய்ந்து இருண்டன.  அம்பிகை கண் புதைத்த அந்த ஒரு கணம், அமரர் முதலியோர்க்குப் பல யுகங்கள் ஆயின. அக் காலம் எம்பெருமான் உலகங்கட்கு அருள் புரியக் கருதி நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்கட்கு ஒளியை அருளினார். அவ் ஒளியால் உயிர்கள் யாவும் உவகை உற்றன.  கண்ணுதற்பெருமான் செயலைக் கண்ட உமாதேவியார் அஞ்சி, கண்களை மூடிய கரங்களை எடுத்தார்.  அப்போது, அம்பிகையின் விரல்களில் வியர்வை உண்டாக, பத்து விரல்களினின்றும்  பத்து கங்கைகள் கடல் போலத் தோன்றின.


சங்கரன் விழிகள் மூடும் தனாதுகை திறக்கும் எல்லை

அங்குலி அவை ஈர்ஐந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற

மங்கையைத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து

கங்கையோர் பத்தாய் ஆண்டுக் கடல்களில் செறந்த அன்றே.       --- கந்தபுராணம்.


ஆயிரம் கோடி முகங்களுடன் தோன்றிய கங்கை எங்கும் தண்ணீர் மயமாகப் பரவியது கண்ட அமரர்கள் அஞ்சி, திருக்கயிலை மலையை அடுத்து, ஆலமுண்ட நீலகண்டப் பெருமானை நெடிது வணங்கி, "ஐயனே! எம்மை ஆட்கொள்வாய். முன்னொரு வந்த விடம்போலப் பரவி எம்மையும் உலகங்களையும் அழிக்கும் கங்கையைத் தடுத்து ஆட்கொள்ளும்" என்று வேண்டினார்கள்.   உடனே, இறைவன் உலகமெல்லாம் பரவியுள்ள நீரை அழைத்து, தனது சடாமகுடத்தில் ஒரு உரோமத்தில் அமைத்தனர்.  அது கண்ட அமரர் முதலானோர் வணங்கி, "ஐயனே! இக் கங்கை ஞானாம்பிகையின் கர மலரில் தோன்றி தேவரீர் சடையில் தங்கினமையால் புனிதம் ஆயிற்று.  

எங்கள் நாட்டிலும் இக் கங்கை இருந்து புனிதமாக்குமாறு திருவருள் புரியும்" என்று வேண்டினார்கள்.  சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளின்படி, தமது சடைமுடியில் உள்ள கங்கையைச் சிறிது எடுத்து இந்திரன், பிரமதேவர், திருமால் ஆகிய மூவருடைய கைகளில் தந்தருளினார்.  அதனை அவர்கள் தத்தம் ஊர்களில் விடுக்க, மூன்று உலகங்களிலும் கங்கை பெருகியது.

பின்னர், மாதவத்தின் மிக்க பகீரதன் வேண்ட சத்திய உலகில் உள்ள கங்கை வானில் இருந்து வர, சிவபெருமான் மீண்டும் உலகம் உய்ய அதனைச் சடையில் தாங்கி சிறிது உலகிற்கு உபகாரமாக விடுத்தனர்.  அது கடல் வழியே சகரர் எலும்பில் தோய்ந்து, அவர்கட்கு நற்கதி நல்கியது.  ஏனைய நதிகளும் அவ்வவ் உலகில் பரவி ஆங்காங்கு புண்ணிய மயமாகி விளங்கின.


மதி சூடி --- 

சிவபிரான் திருச்சடையில் மதி சூடிய வரலாறு

மலர்மிசை வாழும் பிரமதேவனது மானத புத்திரருள் ஒருவனாகிய தக்கன் தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும், அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்குத் திருமணம் புணர்த்தி, அவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே தனது மனைவியருடன் வாழ்ந்தான். பின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால், அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்து, ஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராதவன் ஆயினான். மற்றைய மாதர்கள் மனம் வருந்தி, தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி வருந்தி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டு, சந்திரனை விளித்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் எல்லோராலும் நீ இகழப்படுவாய்” என்று சபித்தனன்.

அவ்வாறே சந்திரன் நாளுக்கு நாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்தி, இந்திரனிடம் சென்று தனக்கு உற்ற இன்னல்களைக் கூறி  “இடர் களைந்து என்னைக் காத்தருள்வாய்” என்று வேண்டினன். இந்திரன், “நீ பிரமதேவர்பால் இதனைக் கூறு, அவர் தன் மகனாகிய தக்கனிடம் சொல்லி சாபவிமோசனம் செய்தல் கூடும்” என, அவ்வண்ணமே சந்திரன் பிரமதேவனைச் சரண்புகுந்தான். “சந்திரா! தக்கன் என்னைத் தந்தையாக மதித்து, எனது சொல்லைக் கேளான்.  நீ திருக்கயிலையை அடைந்து கருணாமூர்த்தியாகியக் கண்ணுதற்கடவுளைச் சரண்புகுந்தால், அப்பரம்பொருள் உனது அல்லலை அகற்றுவார்” என்று பிரமதேவன் சொன்னார். சந்திரன் திருக்கயிலைமலை சென்று, நந்தியெம்பெருமானிடம் விடைபெற்று மகா சந்நிதியை அடைந்து, அருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறைப்படி வணங்கி, தனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளுவே! இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றான். மலைமகள் மணாளன் மனமிரங்கி, “அஞ்சேல்” என அருள் உரை கூறி அவ்வொரு கலையினைத் தமது திருமுடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கொரு கலையாக வளர்ந்தும், குறைந்தும் இருக்கக் கடவாய், எப்போதும் ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணைப் பாலித்தனர்.


“எந்தை அவ்வழி மதியினை நோக்கி, நீ யாதும்

சிந்தை செய்திடேல், எம்முடிச் சேர்த்திய சிறப்பால்

அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும், அதனால்

வந்து தோன்றும் நின் கலையெலாம் நாள்தொறும் மரபால். “   ---  கந்தபுராணம்.


சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்) சித்த முத்திச் சிவமும் அருள்வோனே --- 


சிவபிரானுக்கு உண்மைப் பொருளை உபதேசித்த வரலாறு

திருமால், பிரமன், இந்திரன், சிவபெருமான் முதலியோருக்கு முருகப் பெருமான் அறம், பொருள் இன்பம் முத்திறத்து உறுதிப் பொருள்கை விளக்கும் மனு நூலை ஓதிய பெருமையை உடையவர் முருகப் பெருமான். சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக்கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த பிரமதேவனை முருகப் பெருமான் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து, “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்கும் முகத்தால், எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, 

புன்முறுவல் பூத்த முகத்தினராய் ஆறுமுகவள்ளலை நோக்கி, “அமரர் வணங்கும் குமரநாயகா! அறியாமை காரணமாகவாவது, உரிமைக் குறித்தாவது நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்ய்யமாட்டார். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், 

அறியாமலும் பெரும்பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால், பிரமனும் அறிவின்மையால் உன்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் உனக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் புன்முறுவல் பூத்து, “தந்தையே! ஓம் என்னும் ஓர் எழுத்தின் உட்பொருளை உணராத பிரமன் எப்படி உலகங்களைச் சிருட்டி செய்யலாம். அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழிலை எவ்வாறு தேவரீர் கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்தா! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்று வேண்டினர். குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் சொல்வேன்” என்றனர்.

அது கேட்டு “செல்வக் குமரா! உண்மையே உரைத்தனை. ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எப்போதும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகைமலையை நாம் அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு விடையினைஉ ஊர்ந்து, தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலது என்று உலகவர் தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு மாணவ பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.


“எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.” --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”              --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.


மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.


சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின்முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


“அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


தேவதேவன் ஆகிய சிவபெருமான், மாணவ பாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையில் சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.


“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.”  ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,

         வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,

         எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,

         தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!

     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!


என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையில் இருந்து, முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம்,  சுத்தவித்தை 

ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்தமாயையில் இருந்து தோன்றுவன. இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


“வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. “          --- திருமந்திரம்.


“கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்.... “          --- குமரகுருபரர்.


“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.” --- அபிராமி அந்தாதி.

 

“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை, மங்கலமாம்

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி,ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.”  --- அபிராமி அந்தாதி.

  

“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.” --- சிவஞான சித்தியார்.


கொக்கு உறுப்புக் கொடு --- 

கொக்கு – மாமரம். மாமரத்தின் அங்கங்களோடு சூரபதுமன் கடலில் நின்றான்.

இது குறித்த வரலாறு

மாயையின் மகனாகிய சூரபதுமன் சிவமூர்த்தியின்பால் பற்பல வரம் பெற்று உள்ளம் தருக்கி, அறநெறிப் பிறழ்ந்து அமரர்க்குத் துன்பம் விளைத்தான். குமாரக்கடவுள் தேவர்களை சிறைமீட்கும் பொருட்டு, போர் புரிந்து அசுரர் அனைவரையும் அழித்தார். முடிவில் சூரபதுமன் போர்க்கோலம் கொண்டு ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் உள்ள சேனைகளைத் திரட்டிக்கொண்டு வந்தான். அப்பெருஞ் சேனையைக் கண்ட பூதவெள்ளங்களும் சேனாதிபதிகளும் வீரபாகு ஒழிந்த ஏனைய வீரர்களும் உள்ளம் நடுங்கினர். தேவர்கள் அளக்க ஒண்ணாத் துன்பத்தை அடைந்தனர். முருகப் பெருமானார் அப்பெருஞ் சேனைகளையெல்லாம் அழித்தனர். முருகவேளும் சூரபதுமனும் நெடுநேரம் போர் புரிந்தனர். சூரபதுமனுடையப் பற்பல ஆயுதங்களும் மாயத் திறங்களும் ஒழிந்தன. முடிவில் “இக்குமரனைக் கொணர்ந்து போரை விளைவித்த தேவர்களை முதலில் கொன்று சிறிது சினந் தணிந்தபின் இக்குமரனோடு போர்புரிவேன்” என்று நினைத்து ஒரு மாயமந்திரத்தைச் செபித்து, உலகமுழுவதும் பெரிய இருள் சூழுமாறு செய்து, அவ்விருளில் வாளையேந்தித் தேவர்களைக் கொல்லுதற் பொருட்டு விண்ணில் பாய்ந்தனன். அதனைக் குறிப்பாலுணர்ந்த அரிபிரமாதி தேவர்கள்....

“தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்

மேவலர்க்கு இடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்

பாவலர்க்கு எளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்

மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்”

என்று முறையிட்டனர். அம்முறையைக் கேட்டு மூவிருமுகங் கொண்டுள்ள முழுமுதற்கடவுள், சேயின் அழுகை கேட்ட தாயைப்போல் தண்ணருள் சுரந்து, தமது திருக்கரத்தில் வைகும் செங்கதிர் வேலாயுதத்தை நோக்கி, “நீ விரைந்து சென்று சூரபதுமனுடைய மாயைகளையும் ஆற்றலையும் அழித்து அவனது உடலைப் பிளந்து வருவாய்” என்று ஆணை தந்தனர். உடனே வேற்படையானது ஆயிரங்கோடி சூரியர்கள் ஒருங்கு கூடினாற் போலத் திகழ்ந்து அக்கினி மழையைப் பொழிந்து கொண்டு சூரன் கொண்ட இருளுருவத்தை இமைப்பொழுதில் அழித்தது.

“அரியும் அயனோடு அபயம் எனவே

  அயிலை இருள்மேல் விடுவோனே” --- (இருவர்) திருப்புகழ்.

சூரபதுமன் “முடிவில்லாத வரத்தையுடைய என்னை இவ்வேற்படை என்ன செய்யும்?  இதன் திறத்தை தான் அழிப்பேன்” என்று அண்ட முகடுகள் நடுங்கச் சிரித்து, மிகுந்த சீற்றங்கொண்டு “சமுத்திரம், பூதலம், பிரமாதி தேவர்களது உலகங்கள், உயிர்கள் முதலிய அனைத்தையும் இப்பொழுதே அழிப்பேன்” என்று விரைந்து சென்றுகடல் நடுவில், நெருப்புப் போலும் தளிர்களும், புகைபோன்ற இலைகளும், மேகக்கூட்டங்கள் போன்ற கிளைகளும், மரகதக் கற்கள் போன்ற பிஞ்சுகளும், மாணிக்கத்தை ஒத்த பழங்களும் கொண்டு பிரமாண்டச் சுவர்வரையிலும் வேரோடி, இலக்க யோசனைத் தூரமளவும் விசாலித்த தலைகீழான மாமர வடிவங்கொண்டு, சகல லோகங்களையும் நடுநடுங்க மோதினான்.

“வன்னியின் அலங்கல் கான்று, வான்தழை புகையின் அல்கிப்

பொன்னென இணர்கள் ஈன்று, மரகதம் புரையக் காய்த்து,

செந்நிற மணிகள் என்னத் தீப்பழம் கொண்டு, கார்போல்

துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்.”

அட்ட நாகங்களும் திக்கு யானைகளும் சந்திர சூரியரும் எல்லா உயிர்களும் அஞ்சி ஓலமிட்டன. அந்த மாமரம் சிறிது அசைந்தபொழுது எல்லா உலகங்களும் அசைந்தன.  குலகிரிகள் பொடிபட்டன. உலகத்தைத் தாங்கும் கூர்மமும் ஆதிசேடனும் புரண்டனர். நட்சத்திரங்கள் உதிர்ந்தன, அண்டங்களெல்லாம் தகர்ந்தன. நாரணன் உலகும் நான்முகனுலகும் அழிந்தன. தேவர்களெல்லாம் வெருவித் திருக்கயிலையை நாடி ஓடினர். அறுமுகப் பெருமான் விடுத்த அயிற்படை, ஆயிரங்கோடி அண்டத்து அக்கினியும் ஒன்று சேர்ந்தாற்போல் பெருநெருப்பு வடிவு தாங்கிச் சென்று,

“தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து  

ஆயிரகோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன

மீயுயர்ந்து ஒழுகி ஆன்றோர் வெருவரும் தோற்றங் கொண்டு

நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே.”

மூதண்ட முகடுவரை வளர்ந்தோங்கி கிளைகளை அசைத்து உலகங்களை எல்லாம் அசைத்து அழிக்கின்ற மாமரத்தை வேற்படையானது இரு கூறாகப் பிளந்தது.

 “விடம்பிடித்த அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி

இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன

உடம்பிடித் தெய்வம் இவ்வாறு உருகெழு செலவின் ஏகி

மடம் பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே.”


மை நிற்கும் வட்டத்து அசுரரை --- 

மை – கருமை. மை நிற்கும் வட்டம் – கருமைலநிறம் பொருந்திய வட்ட வடிவான கடல்.


மக்கள் ஒக்கல் தெரிவை --- 

மக்கள் – ஈன்றெடுத்த பிள்ளைகள்.

ஒக்கல் – சுற்றத்தார்.

தெரிவை – இருபத்தைந்து முதல் முப்பது வயதிற்கு உட்பட்ட பெண். இங்கே மனைவியைகு குறிக்கும். 


ரத்னம் முத்தில் பணியும் --- 

பணி – அணிகலன். இரத்தினம் முத்து ஆகியவற்றால் செய்யப்பெற்ற அணிகலன்கள்.


மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும் --- 

மட்டு – அளவு, எல்லை, குறைவு.

அளவின்றி, எல்லை இல்லாது, குறைவு இன்றிப் பெருகி உள்ள அடியவர்கள்.


துக்கித்து, எரிகள் தத்த வைக்கப் புகுது --- 

மேலே சொன்ன அனைவரும், உடலில் இருந்து உயிர் நீங்கிப் பிணமான பின்னர் துக்கத்தோடு சுடுகாட்டிற்குக் கொண்டு வந்து கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பில் இடுவர்.


பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே --- 

இப்படி நிலையில்லாத உடலை ஓம்பிச் சுகித்து இருப்பதற்குப் பொன்னையும் பொருளையும் தேடி அலைதல் கூடாது என்பதை அடிகளார் உணர்த்துகிறார்.


புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு நாளே --- 

நிலையான இன்பத்தில் உயிர்களை ஆழ்த்துவதற்காக, நிலையில்லாத இந்த உடம்பையும் படைத்து அளித்து, அதில் கருவிகளையும் கரணங்களையும் பொருந்த வைத்து அளித்த  இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி, “வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி” என்று மதித்து, வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதித்திடல் வேண்டும். “புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு, நீர் உண்டு. அண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்” என்று அருளினார் அப்பர் பெருமான். 

உயிருக்கு உள்ள ஆறுவகையான குற்றங்கள் ஆகிய,காமம், குபோதம், உலோபம், மகம், மதம், மாச்சரியம் என்பவைகளை அறுத்தவர்களை குற்றமற்ற மனத்தை உடைய அடியவர்கள் அவர்கள் இறைவன் நறுமணம் மிக்க மலர்களைக் கொண்டு வழிபடுகின்றார்கள்.

குற்றமற்ற அடியவர்கள் உள்ளத்தை இறைவன் தனக்குக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்றான். அவனை அகமலரில் வைத்துப் போற்றும் அடியார்கள் ஞானபூசையைப் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

“மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்

கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்

ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.”

 என்பது அப்பர் தேவாரம்.

 இறைவனைப் பூமாலை கொண்டு வழிபடுதல் கிரியை நெறி ஆகும். பாமலைகளைச் சூட்டி, அன்போடு உருகி வழிபடுதல் ஞானநெறி ஆகும். பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், அருளாளர்கள் பாடிய அருளிய சிறந்த பாமாலைகளால்,  இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.

“நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே"

என்கிறார் தாயுமானார்.

 இறைவனுக்கு நாவால் போற்றிப் பாடுகின்ற சொல்மலர் விருப்பமானதா? அல்லது நாள்தோறும் மலரும் மலர்கள் விருப்பமானதா? என்று தாயுமான அடிகளார் கேட்டதற்கு,  விடை பெரியபுராணத்தில் வருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல்தமிழ் பாடுக" என்று அருளிச் செய்தார் இறைவர். "சுவாமி, நான் என்ன சொல்லி, எப்படி உம்மைப் பாடுவது?" என்று நாயனார் கேட்க, "முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை. ஆதலாலே, என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்" என்றார் இறைவர். அன்பினால் செய்யப்படுபவை தான், 

திருமுழுக்காட்டுதல் என்னும் அபிடேகம், திருமாலை அணிவித்தல்,  திருவிளக்கிடுதல் முதலான வழிபாடுகள். அந்த அன்பு வழிபாடுகளிலும்,  மேலான வழிபாடாவது இறைவனைப் போற்றி உரைக்கும் புகழுரைகளே ஆகும். எனவே, சொல் தமிழால் பாடுக என்று அருளினார் இறைவர். ஏன் தமிழால் பாடுக என்றார்? சுந்தரரின் தாய்மொழி தமிழ். எனவே, அவர் அறிந்த மொழியால் பாடுவது,அவரது உள்ளன்பை வெளிப்படுத்தும் சாதனமாக இருக்கும். எனவே, 

இறைவனை அவரவருக்குத் தெரிந்த மொழியினால் ஆன சொற்களைக் கொண்டு வழிபடலாம் என்பது தெளிவாகும். "வேற்று மொழியால் என்னைப் பாடாதே?" என்று இறைவர் அறிவிக்கவே இல்லை. அப்படி அறிவித்தால் அவர் இறைவர் இல்லை. நான் சொல்லுகின்ற மொழியில் தான் இறைவனை வழிபடவேண்டும் என்று யாரும் வற்புறுத்துவது அழகல்ல.

 இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான். 

 

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.          ---  அப்பர்.

 

நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.

 நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.

 

"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 இதன் பொருள் ---

பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும்,  மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும், வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

 இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மணம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை.

 வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

 இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

“எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.”

 இதன் பொருள் ---

 கரும்புக் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனாருடைய திருவடியைச் சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

 நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை. 

 பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம். 

 பூக்களைக் கொண்டு வழிபடுவது "புறப்பூசை". அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை".

 அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் கொல்லாமை, ஐம்பொறியடக்கம்,  பொறை,  அருள்,  அறிவு,  வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

 அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தார்.

 மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர்.

 மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

 காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் விளைகின்றன. மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் மட்டுமே விளையும்.

 மந்திரமலர்களை "அன்பு" என்ற நூலினால் அழகுறத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான். 

 அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுகின்றார்.

 இம் மந்திரப் பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கவும்.

 இறைவனும் அடியவர் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலிலேயே "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்று கூறியருளினார். இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

 உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம்,  மணிபூரகம், அநாகதம்,  விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஆழ்ந்து சிந்தித்தல் நலம்.  "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

“ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான

 

வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?”

 

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

"வீண்பொழுது போக்காமலே,

நேயமுடனே தெளிந்து, அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து,இரு போதினும்

  நீர்கொண்டு,மலர்கொண்டு,பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்".

                                                                                    

என்கின்றது அறப்பளீசுர சதகம்.

 

நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார் சிவபரம்பொருள் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

 

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்

சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.

 

இப் பாடலில், இறைவனுக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்" என்று அருளி உள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்

"முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே!" என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலி மகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

 

“அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

 

எத்தனை விதம் சொல்லி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கம் செ(ய்)யார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சி எனை ஏத்த வேண்டாம்,

 

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி, அப்

பேய்ச்சிமுலை உண்ட கள்வன் மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

 

சித்தம் மகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!"       ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ் 

 

பெறுதற்கு அரிய பிறவியாகிய இந்த மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்குச் சூட்டி மகிழ்கின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 அண்ணாமலையார் மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

“விரைவிடை இவரும் நினை, பிறவாமை

      வேண்டுநர் வேண்டுக, மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே! கைலைநா யகனே!”

 இதன் பொருள் ----          

 சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே! விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

 

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.

பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

 

கிரியை என்பது தயிரைப் போன்றது. தயிர் வெண்ணெய் ஆகவேண்டும். அது யோக நிலை. வெண்ணெயும் நெய்யாக வேண்டும். அது ஞானநிலை. கிரியை என்பது யோகத்தில் சென்று, ஞானத்தில் நிலைபெறவேண்டும். ஞானத்தில் நிலைபெற வேண்டும் என்றால், அடியார் திருக்கூட்டத்தோடு கூடி இருக்கவேண்டும். அந்த நிலையை அருள்வது, அன்பு வழிபாடே ஆகும் என்பதால்,

 

“உருகியும்,ஆடிப் பாடியும்,இருகழல் நாடிச் சூடியும்,

     உணர்வினோடு ஊடிக் கூடியும்,...... வழிபாடு உற்று,

உலகின் ஒர் ஆசைப் பாடு அற,நிலைபெறு ஞானத்தால் இனி,

     உனது அடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே?”

 

என்று வேண்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இறைவனுடைய திருவடிகள் நான் எனது என்ற அகப்பற்று புறப்பற்று அற்ற இடமே ஆகும். திருவடிகளை நாடுதல் சூடுதல் என்றால், 

இருவகையான பற்றுக்களையும் விடுவதே ஆகும். பற்று அறுதலே பரமனடி சார்தலாகும்.

 

“யான் எனது என்று அற்ற இடமே திருவடியா”--- கந்தர் கலிவெண்பா.

 

ஞானம் ஒன்றே என்றும் நிலைபெற்று நிற்கும். ஏனைய எல்லாம் நிலைபேறு இல்லாதவை. எனவே, "நிலைபெறு ஞானம்" என்றார் அடிகளார்.

 

நெய்யானது உணவின் வழி உடம்பில் கலந்து ஆற்றலைத் தரும். வேள்வியில் இடப்படும் நெய்யானது, இறை ஆற்றலைத் தரும்.நிலையான சானத்தைப் பெற்ற பின் அடியாரொடு கூடி இருத்தலே சிறந்த பேறு ஆகும். 

 

இறைவனை நினைந்து உருகி, திருவருள் மயமாக நிற்பவர்கள் அடியார்கள். அவர்கள் தமது உரை, அறிவு, உயிர், உணர்வு என்ற நான்கையும் இறைவனுடைய திருவடியில் புனைவார்கள். இந்த நான்கில், உரையைப் புனைபவர் சரியையாளர். அறிவைப் புனைபவர் கிரியையாளர். உயிரைப் புனைபவர் யோகிகள். உணர்வைப் புனைபவர் ஞானிகள். எனவே,சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு படிகளில் நின்று தொண்டு புரிவார்கள்.

 

“உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்

     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு

     ஒன்றாக என்று ...... பெறுவேனோ”

                                                                                                

என்றார் அருணகிரிநாதர்.

 

சொல்லுகின்ற சொல்லையும்,அறிவையும்,உயிரையும், உணர்வையும் இறைவனது பாத தாமரை மலர் மீது உறுதியுடன் இட்டு அர்ச்சிக்க நினைக்கும் அடியார்களுடன் ஒன்றுபடும் பேற்றினைப் பெறுதல் வேண்டும். ஒன்றுபட்டு நினைத்தல் கூட்டு வழிபாடு. தனியாக வழிபடுவதை விட, கூட்டாக வழிபடுவது சிறப்பு.

எனவே,  இறைவனது பெருமையையும், தமது சிறுமையையும் உணர்ந்து, அன்போடு இறைவனது திருவடிகளை, சிறந்த சொல்மலர்களால் அடியார்களுடன் கூடி இருந்து வழிபடுவதே சிறந்த அர்ச்சனை ஆகும். அவ்வாறு இறைவன் திருவடிக்கு அருச்சனை புரிந்து வழிபட்டு உய்கின்ற புத்தியைத் தனக்கு அருளும் நாள் வன்று உண்டாகுமா? என்று முருகப் பெருமானிடம் முறையிட்டுக் கொள்கிறார் அருணை வள்ளலார். நாமும் முறையிட்டுக் கொள்வோம்.


கருத்துரை


முருகா! தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக.









ஔவையார் தனிப்பாடல்

ஔவையார் தனிப்பாடல்        


விநாயகப் பெருமானை வணங்குவார்க்கு அனைத்தும் எளிது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான்பெருமாள் நாயனாரும் திருக்கயிலைக்குச் செல்லும்போது ஔவையாரையும் அழைத்தனர். அவர் அப்போது தாம் செய்து கொண்டிருந்த விநாயகர் பூசையை முடித்துக் கொண்டு கயிலாயம் வருவதாகக் கூறி, பூசையை விரைவாகச் செய்யத் தொடங்கினார். அதை அறிந்த விநாயகர் ஔவையாரை நிதானமாகப் பூசை செய்யும்படியும், அவ்விருவருக்கும் முன்னதாக, தாம் அவரைத் திருக்கயிலாயத்தில் கொண்டு சேர்ப்பதாகவும் சொன்னார். ஔவையார், "சீதக் களப" என்று தொடங்கும் அகவற்பாவைப் பாடிப் பூசனையை நிறைவு செய்தார். விநாயகர் தமது துதிக்கையால் தூக்கி, ஔவையாரைத் திருக்கயிலாயத்தில் சேர்த்தார். தங்களுக்கு முன்னதாகவே எப்படித் திருக்கயிலாயத்திற்கு வந்து சேர முடிந்தது என்று கேட்ட சேரமான்பெருமாளுக்கு, பதிலாக ஔவையார் பாடல் ஒன்றைப் பாடினார். இப்படி ஒரு கதை உலவுகிறது. இதற்குப் பெரியபுராணத்தில் சான்று இல்லை. எப்படியாயினும் சரி. ஔவையார் பாடியதாகச் சொல்லும் தனிப் பாடலைப் பார்ப்போம்....


“மதுரமொழி நல்உமையாள் சிறுவன் மலர்அடியை

முதிரநினைய வல்லார்க்கு அரிதோ, முகில்போல் முழங்கி

அதிரவருகின்ற யானையும், தேரும், அதன் பின்சென்ற

குதிரையும் காதம், கிழவியும் காதம், குலமன்னனே.”


இதன் பொருள் ---


உயர்ந்த சேரர் குலத்தில் பிறந்த மன்னனே!  இனிய சொற்களைப் பேசும் உமாதேவியாரின் மகனாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்க்கு எந்தச் செயலும் செய்வதற்கு அரியது ஆகாது. ஆதலால், நான் இங்கு வந்து இருப்பது அரியது அல்ல. நிலம் அதிரச் செல்லும் யானையும்,  அதற்குப் பின்னர் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்குக் காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காதவழியே ஆகும்.


"நிலைகெட விண்அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய, மலையிடை யானை ஏறி வழியே வருவேன்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத் திருப்பாட்டில் அருளியது காண்க.

37. நம்பினவர்க்கே இறைவன் அருள் உண்டு

“மந்திரமும், தேவும், மருந்தும், குருவருளும்,

தந்திரமும், ஞானம், தரும்முறையும், - யந்திரமும்,

மெய் எனில் மெய்யாய் விளங்குமே; மேதினியில்

பொய்எனில் பொய்யாகிப் போம்.” -- நீதிவெண்பா


உலகத்தில் மறைமொழிகளும், தெய்வமும், மருந்துகளும், ஆசானிடத்துப் பெறும் அருளும், நூல்களும், அறிவைத் தரும் வழிபாட்டு முறைகளும், மறைமொழியைப் பொருந்திய கட்டங்களும் ஆகிய இவ் ஏழும் உண்மை என்று நம்பினால், உண்மையாக விளங்கிப் பயன்கொடுக்கும்.  பொய் என்று நினைத்தால், பொய்யாகிப் பயன்படாது போகும்.


(மந்திரம் - மறைமொழி.  தேவு - தெய்வம்.  தந்திரம் - நூல்.  யந்திரம் - மறைமொழியைக் கட்டத்துள் அடக்கிப் பூசித்தல்.)


96. இளைத்தவன் மனைவி என்றால்...

களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு!

     மிடியருக்குக் கனந்தான் உண்டோ?

வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ்

     தரும்உலக வழக்கம் பாரீர்!

ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்

     கண்டவரும் ஒன்றும் பேசார்!

இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்

     மச்சினியாய் இயம்பு வாரே.


இதன் பொருள் ---


    வளைத்த மலை எ(ன்)னும் சிலையார் தண்டலை சூழ்தரும் உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்  எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில் பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ வலிமை உடையோர் வீட்டில் உள்ள பெண்களைக் கண்டு ஒளித்திடுவார்; ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச்சினியாய் இயம்புவார் – ஆற்றலு அற்றவன்  மனைவி என்றாலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்; (ஆகையால்), களித்து வரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும் செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ - ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?


      சிவபெருமான் மேருமலையை திரிபுர தகனத்தின்போது) வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார். (சிலை – மலை) ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி' என்பது பழமொழி.


பாடல் 9

“அழுகு திரிகுரம்பை ஆங்குஅதுவிட்டு ஆவி

ஒழுகும் பொழுதுஅறிய ஒண்ணா; - கழுகு

கழித்துஉண்டு அலையாமுன், காவிரியின் தென்பாற்

குழித்தண் டலையானைக் கூறு.”

இதன் பொருள் ---

    அழுகு திரி குரம்பை ஆங்கு அது விட்டு - அழுகும் இயல்புடைய திரிந்து கெட்டுப் போதற்கு இடமாகிய உடம்பை விட்டு, ஆவி ஒழுகும் பொழுது அறிய ஒண்ணா - உயிர் நீங்கும்போது அறிய ஒண்ணாது. கழுகு கழித்து உண்டு அலையா முன் - கழுகு உண்டு கழித்துச் சிதைந்து உடல் அலைபடாத முன்னம்; காவிரியின் தென்பால் – காவிரியின் தென்கரையில் அமைந்து உள்ள, குழித் தண்டலையானைக் கூறு – குழித்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருகோஇல் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவரின் திருநாமத்தைக் கூறுவாயாக.

    அழுகு திரி குரம்பை – அழுகு குரம்பை, திரி குரம்பை எனத் தனித்தனி கூட்டுக. அழுகுதல் – கெடுதல். கணம் தோறும் வளர்தலும், கணம் தோறும் கெடுதலும் உடைய உடம்பு இது. திரிதல் – விகாரப் படுதல். “வேற்று விகார விடக்கு உடம்பு” என்றார் மணிவாசகப் பெருமான். ஒழுகுதல் – ஓட்டைக் குடத்தில் இருந்து நீர் நீங்குவது போல, உடலில் இருந்து உயிர் பிரிதல். “திருத்தண்டலை” என்பது தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். “நீள்நெறி” என்பது அத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர். தற்காலத்தில் ‘தண்டலைச்சேரி’ என்றும் ‘தண்டலச்சேரி’ என்றும் வழங்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டியிலிருந்து 3 கி. மீ. தொலைவில் உள்ளது.  இத்தலத்திற்கு பக்கத்தில் 'மணலி ' புகைவண்டி நிலையம் உள்ளது. திருஞானசம்பந்தப் பெருமானார் பாடி வழிபட்ட திருத்தலம். 

    குழித்தண்டலை என்பதை, குழித்தலை என்று கொள்வோரும் உண்டு. குளித்தலை என்றும் வழங்கப்படுகிறது. இது கடம்பர் கோயில் என விளக்கமாய் அறியப்படுவது. திருக் கடம்பந்துறை என்று திருமுறையில் அறியப்படுவது. அப்பர் பெருமான் பாடி வழிபட்ட சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். இத்திருத்தலம் குளித்தலை என்னும் நகரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கரூரில் இருந்தும், திருச்சியில் இருந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். குளித்தலை இரயில் நிலையம் திருச்சி - கரூர் - ஈரோடு வழித்தடத்தில் உள்ளது.


36. தீயவரிடம் இருந்து விலகி இருத்தல்

“பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி

நீதியொடு போதல் நெறி அன்றோ? - காதுமத

மாகரத்த யானை வழிவிலகல், புன்மலம்தின்

சூகரத்துக்கு அஞ்சியோ? சொல்.” -- நீதிவெண்பா


போரில் கொல்லுகின்ற மதம் பொருந்திய பெரிய துதிக்கையினை உடைய யானையானது வழிவிட்டுச் செல்லுதல், மலம் தின்னுகிற தாழ்ந்த பன்றிக்கு அச்சப்பட்டோ? அன்று. தனது பெருந்தன்மையால் விலகிச் செல்கின்றது. அதுபோல, அறிவில்லாத கீழோரைக் கண்டால், அறிவு மிக்க பெரியோர்கள் பெருந்தன்மையோடு வழி விலகிச் செல்லுதல் நீதிநெறி ஆகும், கீழ்மக்களுக்கு அஞ்சிச் செல்கின்றார் என்பதன்று.


(காதுதல் - கொல்லுதல்.  கரத்த – கையை உடைய.  சூகரம் - பன்றி.)


96. பிடாரி மனைவி ஆனால்....


அடுத்தமனை தொறும்புகுவாள்! கணவன்உணும்

     முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!

கடுத்தமொழி பேசிடுவாள்! சிறுதனம்தே

     டுவள்! இவளைக் கலந்து வாழ்தல்

எடுத்தவிடைக் கொடியாரே! தண்டலையா

     ரே! எவர்க்கும் இன்பம் ஆமோ?

குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப்

     பெண்டுவைத்துக் கொண்ட தாமே.


இதன் பொருள் ---


    எடுத்த  விடைக் கொடியாரே - இடபக்கொடியினை உயர்த்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! அடுத்த மனைதொறும் புகுவாள் - அயல் வீடுகளிலெல்லாம் நுழைவாள், கணவன் உ(ண்)ணும் மு(ன்)னம் உண்பாள் - கணவன் உண்பதற்குமுன் தான் உண்பாள், அடக்கம் இல்லாள் – அடங்கி இருக்கமாட்டாள், கடுத்தமொழி பேசிடுவாள் - வெறுப்பாகவே  உரையாடுவாள், சிறு தனம் தேடுவள் - (தனியே) சிறு சேமிப்புச் செய்வாள், இவளைக் கலந்து வாழ்தல் எவர்க்கும் இன்பம் ஆமோ - இப்படிப்பட்டவளைக்  கூடி வாழ்வது  யாருக்குத்  தான் மகிழ்ச்சியாக இருக்கும்? (இப்படிப்படவளை மணந்து வாழ்வது) குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டு வைத்துக் கொண்டது - குடிகெடுவதற்குப் பிடாரியை மனைவியாகக் கொண்டதை, ஆம் – ஒத்த செயல் ஆகும்.


     “பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” என்பது கலித்தொகை. ஐந்தறிவு உள்ள விலங்குக்கே இந்த அன்பு விளங்குகிறது. விலங்கினும் மேம்பட்ட எப்படி இருக்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். “கறுத்தமுலைச் சூல் பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக் கைந் நீட்டும்” என்பது பதினொன்றாம் திருமுறை. கறுத்த முலையினை உடைய பெண்யானைக்கு, ஆண் யானையானது சந்தன மரத்தை ஒடித்துத் தன் துதிக்கையால் நீட்டிக் கொடுக்கிறதாம். “சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து, யானை மந்தண் மடப்பிடியின் வாய்க் கொடுப்ப வந்து, அதன் கண்களிக்கத் தான் களிக்கும்” என்பதும் பதினொன்றாம் திருமுறை. ஆண்யானையானது, சந்தன மரத்தின் அழகிய பசுமையான தழையை தேனில் தோய்த்து பெய்யானையின் வாயில் கொடுக்கிறதாம். அந்த அன்பினை நோக்கிப் பெண்யானையில் கண்களில் நீர் துளித்தது. பெண்யானை மகிழ்ந்ததைப் பார்த்து, ஆன்யானை மகிழ்ந்தது. மனிதனுக்கு அமைந்து இருக்க வேண்டிய நற்பண்புகள் இவை இவை என்று நமது முன்னோர்கள், விலங்கினங்களைக் காட்டி நமக்கு அறிவுறுத்திய அற்புதக் காட்சிகள் இவை ஆகும். எனவே, முன் ஊட்டிப் பின் ஊட்டுதல் அன்பு மிகுந்தோர் செய்யும் செயல் ஆகும் என்பதனை அறிக. 


பிடாரி - காளி. இவள் சிவனுடன் வாதாடினாள்  என்று கூறுவதால், அடங்கா மனைவியை, ‘அடங்காப்பிடாரி' என்று கூறுவது மரபு.  பின்வரும் பாடல்களின் கருத்தை இங்கு. ஐத்து எண்ணுக.


“எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.” --- நாலடியார்.


தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.


"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்." -- மூதுரை


இதன் பொருள் ---


    நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ, மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.


நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 


பாடல் 8


தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது,

பெட்டப் பிணம்என்று பேர்இட்டு, கட்டி

எடுங்கள்,அத்தா! என்னாமுன், ஏழைமட நெஞ்சே!

நெடுங்களத்தான் பாதம் நினை.


        ஏழை மட நெஞ்சே! – அறிவில்லாத நெஞ்சமே! தொட்டுத் தடவி – உடலைத் தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும், துடிப்பு ஒன்றும் காணாது – நாடித் துடிப்பு ஒரு சிறிதும் அறியப்படாமையால்,  பெட்ட பிணம் என்று பேர் இட்டு – வெறும் பிணம் என்று பேரைச் சூட்டி;  அத்தா கட்டி எடுங்கள் என்னாமுன் – அத்தா! பிணத்தைப் பாடை கட்டி எடுங்கள் என்று சொல்லும் நிலை வருவதன் முன்னம், நெடுங்களத்தான் பாதம் நினை – திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நினைப்பாயாக.

விளக்கம் --- தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது – கணை பார்வை இழந்து, செவி கேட்பதும் அடங்கி, கேச்சும் மூச்சும் இன்றி உணர்வு இழந்து கிடக்கின்ற நிலையில், உயிர் உள்ளதா என்று அறிந்து கொள்வதற்குக் கையாளும் முறை நாடித் துடிப்புப் பார்த்தல். உடலை விட்டு உயிர் பிரிந்த நிலையில் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு இருக்காது. அந்த நிலையில் முன்பு பலராலும் விரும்ப்பபட்உ, ஒரு பெயர் இட்டு அழைக்கப்பட்ட இந்த உடலைப் பிணம் என்று கூறுவர். “பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு” என்பது திருமூரல் திருமந்திரம். உயிருள்ளபோது ஒவ்வோர் உடம்புக்கும் வெவ்வேறு பெயர். உயிர் பிரிந்தபின் எல்லா உடம்புகளுக்கும் பிணம் என்பதே பொதுப் பெயர். 

        அத்தா – அக்காள் கணவன், அத்தை மகன், அம்மான் மகன்,உடன்பிறந்தாள் கணவன், கணவன் ஆகியோரைக் குறிக்கும் சொல். தலைவன் எனவும் பொருள்படும். “அத்தா உனக்கு ஆளாய்” என்பது சுந்தரர் தேவாரம்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.


    உடம்பை விட்டு உயிர் பிரிந்தது, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் செய்தி அறிந்து, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, வந்து, வாய்க்கு வந்த்தை எல்லாம் பேசி முழக்கம் இட்டும், அழுதும், ஓய்ந்து போவார்கள். பலவிதமாகப் பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்ட பாடையின் மீது பிணத்தைக் கிடத்துவார்கள்.

     பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும். பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று, தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இது" என்றார் அருணகிரிநாதர்.

    “கட்டி எடுங்கள்” பாடயைக் கட்டிப் பிணத்தை எடுங்கள். “ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு” என்பது திருமூலர் திருமந்திரம். பாடை என்பது விதவிதமாக இருக்கும் என்பதால், “நானாவிதச் சிவிகை” என்றார் அருணகிரிநாதர்.

        பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம், அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்து, உண்மைப் பொருளை உணராமல், உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும், அதை உணரும் பக்குவம் இன்மையால், தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

 

“உணர்த்தும் உனை உணராமல்,உணர்ந்தவையே நாடி

இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.”   --- தாயுமானார்.


      கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்து, பிறவி பொய் எனவும், வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருக, பிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும். அந்த நிலையில், பிறவி நோய்க்கு மாமருந்தாக உள்ளவன் இறைவன். அவனே பவரோக வயித்தியநாதன் என்னும் நினைப்பு வந்து வழிபடவேண்டும் என்னும் எண்ணம் மிகும். இறைவன் தலங்கள் தோறும் எழுந்தருளி உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறான். திருநெடுங்களம் என்பது ஒரு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய இத்தலத் திருப்பதிகம், அதனை ஓதுவோர்க்கு வரும் பலவகை இடையூறுகளையும் நீக்கிக் காக்க வல்லது. 


35. அறம் செய்யக் காலம் ஏன்?


“உள்ளபொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லாமல்,ஓர்

எள்ளளவும் ஈய இசையுமோ? - தெள்ளுதமிழ்ச்

சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத்துக்கு அருந்த

நீரளித்த தோமுந்நீர் நின்று.” -- நீதிவெண்பா


தெளிவான தமிழ் இலக்கணத்தை இயற்றித் தந்தவராகிய அகத்தியர், தனது நீர் முழுவதையும் அருந்தி விட்ட காலத்தில், கடலானது நீரைக்கொண்டு நின்று தன்னிடம் வந்தடைந்த மேகத்துக்கு அருந்த நீர் கொடுத்ததோ? இல்லை.  அதுபோல, தன்னிடத்துப் பொருள் உள்ள காலத்தில் எதுவொன்றும் மகிழ்ந்து கொடுக்க இயலுமே அல்லாமல், பொருள் இல்லாத காலத்தில் ஓர் எள் அளவாயினும் இரப்பார்க்கு ஈய முடியுமோ? முடியாது. (பொருள் உள்ள போதே அறம் செய்தல் வேண்டும். இல்லாதபோது, எண்ணினாலும் செய்ய முடியாது)


(சீர் - இலக்கணம்.  அளித்தோன் - அகத்திய முனிவர்.  முந்நீர் - கடல்.)


95. நாணம் அற்றார் நிலை

சேணிலகு மதிச்சடையார் தண்டலையார்

     வளநாட்டிற் சிறந்த பூணின்

காணவரும் நாணுடையார் கனமுடையார்

     அல்லாதார் கருமம் எல்லாம்

ஆணவலம்! பெண்ணவலம்! ஆடியகூத்து

     அவலம்! என அலைந்து கேடாம்!

நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்

     வாயிலெனும் நடத்தை ஆமே.


இதன் பொருள் ---

    சேண்  இலகும்  மதிச்  சடையார்  தண்டலையார் வளநாட்டில் - வானில் உலவும் பிறைத் திங்கள் அணிந்த திருச்சடையினை உடையவரும், திருதண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டில், சிறந்த பூணின் காண வரும் நாணுடையார் கனம் உடையார் அல்லாதார் கருமம் எல்லாம் - சிறப்பு மிக்க அணிகலன் போலக் காணப்படும் நாணமும் பெருமையும் இல்லாதவரின் செயல்கள் யாவும், ஆண் அவலம் பெண் அவலம் ஆடிய கூத்து அவலம் என அலைந்து கேடு ஆம் - ஆடவரும் வீணர், பெண்டிரும் வீணர், அவர்கள் நடத்திய கூத்தும் வீண், என்னும்படியாக அலைவுற்றுக் கேடு ஆகும்.(அச்செயலானது, நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும் வாயில் எனும் நடத்தை ஆம் - வெட்கம் அற்ற கூத்தாடிச்சிகளுக்கு நான்கு திசையினும் வழி என்னுமாறு ஆய்விடும்.

      நன்றாகக் கூத்தாடும் திறமையற்ற கூத்தாடும் பெண்டிர் தம்மைப் பலரும் பழிக்கும்போது வெட்கித் திசை நோக்காமல் தப்பித்து ஓடுவர். அதுபோல நாணமும் மானமும் இல்லார் செயலும் பலரும் பழிக்கும்படி வீணாகும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “‘நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்” என்பது என்பது பழமொழி போலும்.

ஆண் ஒருவன் பெண் வேடம் இட்டாலும் அவலமாகவே முடியும். பெண் ஒருத்தி ஆண்வேடம் புனைந்தாலும் அவலமாகவே முடியும். அடியார் போல வேடமிட்டுக் கொண்டு திரியும் அவலர்களைக் குறித்து இப்பாடல் எழுந்ததாகக் கொள்ளலாம். “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்?” என்பார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார். “சிவ வேடம்”, “அவ வேடம்” என இரண்டு பகுதிகளைத் திருமந்திரத்தில் நாயனார் வகுத்து இருப்பது காண்க.

வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவில் உள்ள பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“நிலைகாட்டி ஆண்டநின் தாட்கு அன்பு

    இலாது, அன்பில் நீண்டவன்போல்

புலைகாட் டியமனத் தேன்கொண்ட

     வேடம், புனைஇடைமேல்

கலைகாட்டி, கட்டு மயிர்த்தலை

     காட்டி, புன் கந்தைசுற்றி

முலைகாட்டி, ஆண்மகன் பெண்வேடம்

     காட்டும் முறைமை அன்றே.”.  – திருவருட்பா.


     பெருமானே! உலகின் நில்லாத இயல்பு கண்டு உணர்ந்து, தேவரீரது திருவடிக் கூழ் பெறும் இன்பமே நிலையான இன்பம் அடியேனது உணர்வில் இருந்து உணர்த்தி ஆட்கொண்டாய். அந்த நன்றிநினை உணர்ந்து உம்மிடத்துப் பேரன்பினைச் செலுத்த வேண்டும். தேவரீரது திருவடிக்கு உண்மையில் அன்பு இல்லாமல், மிக்க அன்பினை உடையவன்போல் புறத்தார் காணுமாறு, அடியேன் பூண்டு இருக்கும் அடியவர் வேடம் பூண்டு உலாவுகின்றேன். இது ஆண்மகன் ஒருவன், பெண்ணின் இடுப்பினைப் போலப் புனையபட்ட இடுப்பில் புடைவையைச் சுற்றிக் கொண்டு, கட்டு மயிரை வைத்துக்  கூந்தல் போலக் காட்டி, இல்லாத முலைக்காக, கந்தைத் துணியைப் பந்துபோல் சுருட்டிக் கட்டி, பெண்வேடம் பூண்டு தோன்றும் முறைமையாக இருக்கிறது. 


கருணை மதம் பொழியும் யானை

கருணை மதம் பொழியும் யானை

-----


சிவனுடைய கோயிலிலே இரண்டு யானைகள் இருக்கும். ஒன்று அசையும் யானை. மற்றொன்று அசையாத யானை. அசையும் யானை இல்லை என்றாலும், அசையாத யானை இல்லாத கோயில் இராது. அசையும் யானை மதம் கொள்ளும்.  துதிக்கையாகிய ஒரே கை அதற்கு உள்ளது. அசையாத யானையானது, மதத்தை அழிப்பது; ஐந்து கைகளை உடையது. அசையும் யானை விலங்கு வகையைச் சேர்ந்தது. அசையாத யானை கடவுள் வரிசையைச் சேர்ந்தது. மூத்த பிள்ளையார் என்றும் கணபதி என்றும் போற்றப்படும் ஆனைமுகக் கடவுளே அந்த யானை. 

சைவர்கள் மூத்தபிள்ளையாரை வணங்கிய பிறகே எந்தக் காரியத்தையும் தொடங்குவது வழக்கம். சைவ நூலாசிரியர்களை மூத்தபிள்ளையாருக்குத் துதியினைப் பாடிய பின்பே நூலைப் பாடுவார்கள். மூத்தபிள்ளையாருடைய துதிகளாகப் பாடியவர்களின் ஆற்றலுக்கும், கற்பனைக்கும் ஏற்றபடி தமிழில் பல பாடல்கள் அமைந்து உள்ளன. 

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர், விநாயகரைச் சித்திவேழம் என்று பாடுகிறார். விநாயகருக்கு யானைமுகம் மட்டுமே உண்டு. யானைக்கு உரிய உடம்பு இல்லை. ஆனாலும், அவரை யானை என்றும், வேழம் என்றும் பாடுவது வழக்கமாக உள்ளது. அந்த விநாயகரை யானை என்று சொல்வதோடு, யானை கட்டும் கூடம், அதைக் கட்டும் தறி, சங்கிலி, அதற்கு இடும் கவளம் ஆகியவற்றையும் வைத்துப் பாடுகிறார். இந்த யானையானது உலகத்தில் உள்ள பிற யானையைப் போல, மனிதன் கட்டிய பெரிய கூடத்தில் வளர்வது அல்ல. மற்ற யானைகளை விட இது மிகப் பெரிய யானைதான். ஆனாலும், மிகச் சிறிய இடத்திலும் நுழைந்து கொள்ளும். இதற்குப் புதிதாக ஒரு கூடத்தை அமைக்க வேண்டுவது இல்லை. எவ்வளவு சிறியதானாலும், நாம் இருக்கிற இடத்தைக் கொடுத்தாலே போதும். அடியவர்கள் தம்மிடம் உள்ள சிறிய இடத்தில் இந்த யானையைக் கட்டிப் போடுகிறார்கள். அந்தக் கூடம் அடியவர்கள் உள்ளம் ஆகும். அன்பினால் சிறந்த தூய்மையான உள்ளம் அது. இதற்கு இணையான கூடம் வேறு ஒன்றுமே இல்லை. உள்ளமாகிய கூடத்தில் சித்தி வேழத்தைக் கட்டுவதற்கு அன்பர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மனவுறுதி ஆகிய முளையை அடிக்கிறார்கள். அந்த முளையிலே மிகவும் விருப்பத்தோடு கட்டிப்போடுகின்ற சங்கிலி அன்பே ஆகும். அன்பு இருந்தால்தான் இந்த வேழத்தைக் கட்டலாம். அன்பு என்னும் சங்கிலித் தொடரை அந்த யானையால் தள்ள முடியாதாம். அடியவர்க்குச் சாதுவான இந்த யானையால் தீங்கு இல்லை. அது கட்டுத்தறியை முறிக்காது. மதம் கொள்ளாது. 

சாதுவான யானையாக இருந்தாலும், தீனி தின்னாமல் இருக்க முடியாது. ஆனை கட்டித் தீனி போட ஆராலே முடியும்? என்று ஒரு பழமொழி உள்ளது. யானைக்கு உணவளித்துப் பாதுகாப்பது எவ்வளவு அருமை என்பதை இந்தப் பழமொழி விளக்கும். ஆனை அசைந்து தின்னும் என்பார்கள். இந்த யானை அசையாமலே இருந்து தின்னும். மூத்த பிள்ளையாருக்குத் ‘தொப்பையப்பன்’ என்பது ஒரு பெயர். எத்தனை நிவேதனம் செய்தாலும் வாரிச் சுருட்டி வயிற்றுக்குள் திணிக்கும் இயல்புடையவர் அவர். “கப்பிய கரிமுகன்” என்கிறார் அருணகிரிநாதர். கப்புதல் என்றால், விரைவாக விழுங்குதல் என்று பொருள். அவர் விரைவாக விழுங்குபவை, எவை என்று “கைத்தல நிறைகனி” எனத் தொடங்கும் திருப்புகழில் காணலாம்.

அப்படி விரைவாக விழுங்குகின்ற இயல்பை உடையது அல்ல இந்த சித்திவேழம். அதற்கு உணவு இடவேண்டுமே என்று அஞ்சவேண்டியது இல்லை. ஒரு கவளம் உணவு கொடுத்தாலே போதுமாம். அதற்குக் கவளமாகக் கொடுக்க எதையும் தேடவேண்டியதில்லை. இருக்கிற பொருளையே கொடுக்கலாம். நம்மிடம் உள்ள ஒரு பொருளால் நமக்குத் துன்பமே விளைகிறது. துன்பத்தைத் தருகின்ற அந்தப் பொருளை இந்த யானைக்குக் கொடுத்தால், மிக மகிழ்ந்து உண்டு, திருவருளைப் பொழியும். எல்லா வகையான துன்பங்களுக்கும் விளைவிடமாக இருந்து, மேலும் மேலும் பிறந்து பிறந்து சாவதற்குக் காரணமாக நம்மிடம் உள்ள அந்தப் பொருளுக்குப் “பசுபோதம்” என்று பெயர். 

ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பதனால், வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று ஆன்மா மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாக உள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேகபடலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் பசுபோதம் கூறப்படும். 

இவ்வாறு கருவியறிவாகிய பாசஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு, ‘பசு அறிவு’ அல்லது ‘பசுஞானம்’ எனப்படும். இதனைப் ‘பசுபோதம்’ எனவும் குறிப்பிடுவர். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசுஅறிவு அல்லது பசுபோதம் எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரியவொளி அதனுடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

இந்தப் பசுபோதமானது, நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து பல தீவினைளைச் செய்யச் செய்து அலைக்கழிக்கும். இறைவனை உணர ஒட்டாமல், இந்த உலக வாழ்வே நித்தியம் என்று நினைக்கச் செய்யும். செம்பிலே களிம்பு இருப்பது போல நம்மிடம் இது இருக்கிறது. இது கழன்று போனால் நமக்கு உண்மை இன்பம் உண்டாகும். இந்தக் கள்ள வினைப் பசுபோதத்தையே, சித்தி வேழத்துக்குக் கவளமாக இட்டுவிட்டால், நமக்குத் துன்பம் தரும் பொருள் நம்மை விட்டுப் போகிறது. இது வேடிக்கையாகத் தோன்றும். அழுகல் பழம் ஐயருக்கு என்பது போல, நமக்கு வேண்டாத, துன்பம் தருகின்ற ஒன்றை விநாயகருக்குக் கொடுக்கலாமா? அதனால் அவருக்குக் கோபம் பிறக்காதா?  என்று தோன்றும். கவளம் இடும்போது கல்லை இட்டால், யானை நெடுநாள் நினைவில் வைத்திருந்து இட்டவனைச் சாடும் என்று சொல்வார்களே! நமக்கு வேண்டாத, அழுக்கான பண்டத்தைச் சித்தி வேழத்துக்குக் கொடுப்பது தகுமா? கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளுமா? - இவ்வாறு பல ஐயவினாக்கள் எழுவதற்கு இடம் உண்டு. உண்மையில், நமக்குத் தீங்கு பயக்கின்ற கள்ளமாகிய வினைகளுக்குக் காரணமாகிய பசுபோதத்தை (சிற்றறிவை)க் கவளமாக்கி விட்டால், இந்த யானை மகிழ்ச்சியோடு உண்ணும். நல்ல உணவை மிகுதியாக உண்டு வளரும் விலங்கு யானைக்குக் கொழுப்பு அதிகமானல் மதம் உண்டாகும். அந்த மதம் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும். இந்தத் தெய்வ யானையானது, நாம் அளிக்கும் பசுபோதக் கவளத்தை உண்டு களிப்பை அடையும். அதனால் அதற்கும் மதம் வெள்ளம் போல உண்டாகும். ஆனால், அது கருணை என்னும் மதம். 

நாம் அளிப்பது, நமக்குக் கொடுமையைச் செய்யும் அழுக்குப் பண்டம். அதை உவந்து பெற்றுக் கொண்டு, அந்த யானை தருவதோ, யமக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கும் கருணை. இதில் வியப்பு ஒன்றும் இல்லை. நறுமணம் மிகுந்த மலர்ச் செடியைத் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறோம். அதற்கு மணமுள்ள எருவை இடுவது இல்லை. தீநாற்றம் உள்ள எருவை இடுகிறோம். அதனை ஏற்றுக்கொண்டு வளர்கின்ற செடியானது மிகவும் மணமான மலரை அளிக்கின்றது. ஒரறிவுடைய செடியே நமக்குப் பயன்படாத நாற்றப் பொருளை அளித்தால், நேர்மாறான நறுமணமுள்ள மலரை அது நமக்குத் தருகிறது. அப்படியானால், நிறை அறிவு எனப்படும்  ஞானமயமான விநாயகப் பெருமான், நாம் அளிக்கும் பசுபோதத்தை உள்ளம் உவந்து ஏற்றுக் கொண்டு, நமக்குக் கருணையை வெள்ளமாகப் பொழிவதில் வியப்பு இல்லை. 

திருவிளையாடல் புராணத்தில், பரஞ்சோதி முனிவர் அருளிய பாடலை இனிக் காணலாம்.


“உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந்

     தறிநிறுவி யுறுதி யாகத்

தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி

     யிடைப்படுத்தித் தறுகட் பாசக்

கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்

     களித்துண்டு கருணை யென்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

     நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.”

இதன் பொருள் ---

உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில், ஊக்கம் எனும் தறி நிறுவி – மன உறுதியாகிய கட்டுத் தறியை நிறுத்தி, தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி – பேதித்தல் இல்லாத அன்பாகிய சங்கிலியை உறுதியாக வலிமை பெறப் பூட்டி, இடைப்படுத்தி - அதில் அகப்டுத்தி, தறுகண் பாச - வன்கண்மையை உடைய ஆணவ சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை உடைய. பசுபோதம் – சீவபோதம் (அல்லது ஆன்மபோதம்) ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து உண்டு – மகிழ்ந்து உண்டு, கருணை என்னும் மத வெள்ளம் பொழி - அருளாகிய, மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை நினைந்து - சித்திவிநாயகக் கடவுளாகிய யானையைத் தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் - பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற வினைகளை நீக்கிக் கொள்வோம்.

விநாயகக் கடவுளை வேழம் என்றதற்கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம். கவளம் - யானை உணவு. ஆணவத்தால் பசுபோதமும், அதனால் கள்ளவினையும் நிகழும். பசுபோதக் கவளம் இடுதலாவது யான் எனது என்னும் செருக்கற்று வணங்குதல். 

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு புராண வரலாறு ---

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டித் திருக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், மூத்த பிள்ளையார் ஆகிய கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.


“விழிமலர்ப் பூசனை உஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்.”  --- காஞ்சிப் புராணம்.

இதன் பொருள் ---

திருமால் சிவபூசையில் தனது கண்மலரைச் சாத்திப்பெற்ற சக்கரத்தை, விநாயகர் ஓர்வழியால் கொண்டு, அறவழி ஒழுகாத சலந்தரனைத் தடிந்த முடைநாற்றம் நீங்க மதநீரால் மணம் ஏற்றி விகடநடப் பூசை கொண்டு புதிதாக்கித் தந்து பழியை நீக்குகின்ற தனது தந்தையாகிய சிவபரம்பொருளினும் புகழ் படைத்த அவ்விநாயகரை வணங்குவாம்.



திருமகள் வாழிடம்

திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது.....


1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


    வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு விருந்து செய்பவனுடைய வீட்டில், உள்ளம் மகிழ்ந்து திருமகள் தங்கி வாழ்வாள். (Goddess Lakshmi, with joyous mind, shall dwell in the house of that man who with cheerful countenance entertains the good as guests)


2. அறன்அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.


    அறத்தின் பயனை உணர்ந்து, பிறருடைய பொருளை விரும்பாத மேலோரைச் சென்று அடையும் வகையை அறிந்து, அவரிடத்தில் திருமகள் சென்று சேர்வாள். (Goddess Lakshmi, knowing the manner in which she may approach, will immediately come to those wise men who knowing that it is virtue, covet not the property of others)


3. மடிஉளாள் மாமுகடி என்ப, மடிஇலான்

தாள்உளாள் தாமரையினாள்..


    சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் செந்தாமரைச் செல்வியாகிய திருமகள் இருப்பாள். சோம்பல் உள்ளவனிடத்தில் கருமை நிறம் பொருந்திய மூதேவி இருப்பாள். (They say that the black Moodevi (the goddess of adversity) dwells with laziness and that Lakshmi (the Goddess of Prosperity) dwells with the labour of the industrious.)


    நன்னெறியில் வாழப் பொருளை ஈட்டவேண்டுமானால், இறைவன் திருவருள் வேண்டும். திருவருள் இருக்குமானால், திருமகள் அருளும் இருக்கும். திருமகள் இருப்பது எங்கு? அவளது இருப்பால் என்ன விளையும்? என்பது குறித்து, "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...


"சத்தியம் அது இருப்பவர் இடத்தினில்

     சார்ந்து திருமாது இருக்கும்;

சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்

     தனது பாக்கியம் இருக்கும்;


மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்

     விண்டுவின் களைஇருக்கும்;

விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்

     மிக்கான தயைஇருக்கும்;


பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்

     பகர்தருமம் மிகஇருக்கும்;

பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு

     பலாயனத் திறல்இருக்கும்;


வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு

     மன்னுயிர் சிறக்கும் அன்றோ?

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


      இதன் பொருள் --- 


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் - உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில் திருமகள் சேர்ந்து இருப்பாள்,  திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் - திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம் இருக்கும்,  மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்தனில் விண்டுவின் களையிருக்கும் - உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம் இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்,  விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் - திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும்,  பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடந்தனில் பகர் தருமம் மிக இருக்கும் - திருமாலிடத்து வைத்துள்ள அன்பும், இனிய இரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்,  பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் - புகழ்ந்து கூறப்படும் அற உணர்வு உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும்,  இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ - புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?

கருத்து --- சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும், இறைவன் அருளும், தானமும், தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பு இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.


திருமகளின் கடைக்கண் பார்வை உண்டானால் வருகின்ற சிறப்புக்கள் குறித்து, "குமரேச சதகம்" கூறுவது...


"திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்

     சிறப்புண்டு, கனதை உண்டு,

சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்,

     செல்லாத வார்த்தைசெல்லும்


பொருளொடு துரும்பு மரியாதைஆம், செல்வமோ

     புகல் பெருக்காறு போல் ஆம்,

புவியின் முன் கண்டு மதியாதபேர் பழகினவர்

     போலவே நேசம் ஆவார்,


பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும், அனுதினம்

     பேரும் ப்ரதிட்டை உண்டாம்,

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான்,

     பேச்சினில் பிழை வராது,


வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும், அதிக

     வல்லமைகள் மிகவும் உண்டாம்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் திருமகளின் கிடைக்கண் நோக்கம் உண்டானால் கீர்த்தி உண்டு;  கனதை உண்டு - பெருமை உண்டு;  சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும் - வாழ்ந்து காட்டும் வழி எல்லாம் எல்லோரும் பின்பற்றும் பெரிய ஒழுக்கநெறி ஆகிவிடும்; செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக் கொள்ளத்தகாத சொற்களும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும்;  பொருள் ஒரு துரும்பு - எல்லாப் பொருளும் அவருக்கு எளிதில் கிடைக்கும்;  மரியாதை ஆம் - பிறர் போற்றும் சிறப்பு உண்டாகும்;  செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் - அவரிடத்தில் செல்வமானது வற்றாத ஆற்று வெள்ளம் போல் வந்து சேரும், புவியில் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் - இந்த உலகில் வறுமை உடையவனாய் இருந்தபோது, கண்டும் காணாதது போல், மதியாமல் சென்றவர் எல்லாம், முன்பே நெடுநாள் பழகினவர் போல் வந்து நட்புக் கொண்டாடுவர். சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - பிறந்த குலத்தில் பெருமையும், உயர்வும் உண்டாகும், அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் பேரும் புகழும் உண்டாகும்,  பகையாளி கூட பிரியமொடு உறவாகுவான் - பகைவனும் கூட அன்போடு உறவு கொண்டாடுவான்; பேச்சினில் பிழை வராது - பேசும்போது பிழையில்லாத பேச்சு வரும்;  (வந்தாலும் பிழையாக யாரும் கொள்ளமாட்டார்) வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் - வரவேண்டும் என்று எண்ணிய பொருள் யாவும் தவறாமல் கிட்டும், அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த செயலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.


இவ்வளவு சிறப்புக்களையும் அருளுகின்ற திருமகள்  வீற்றிருக்கும் இடங்கள் குறித்து, பின்வரும் பாடல்கள் காட்டும்...


"கடவா ரணத்திலும், கங்கா சலத்திலும்,

     கமலா சனந்தன்னிலும்,

காகுத்தன் மார்பிலும், கொற்றவ ரிடத்திலும்,

     காலியின் கூட்டத்திலும்,


நடமாடு பரியிலும், பொய்வார்த்தை சொல்லாத

     நல்லோ ரிடந்தன்னிலும்,

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்,

     ரணசுத்த வீரர்பாலும்,


அடர்கே தனத்திலும், சுயம்வரந் தன்னிலும்,

     அருந்துளசி வில்வத்திலும்,

அலர்தரு கடப்பமலர் தனிலும்,இர தத்திலும்,

     அதிககுண மானரூப


மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது

     மாறாது இருப்பள் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே." --- குமரேச சதகம்.


      இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கட வாரணத்திலும் -  மதயானையின் இடத்திலும், கங்கா சலத்திலும் - கங்கையின் தூய நீரிலும், கமல ஆசனம் தன்னிலும் - தாமரை மலராகிய ஆசனத்திலும்,  காகுத்தன் மார்பிலும் - திருமாலின் மார்பிலும்,  கொற்றவர் இடத்திலும் - அரசர் இடத்திலும்,  காலியின் கூட்டத்திலும் - பசுக்களின் கூட்டத்திலும்,  நடம் ஆடு பரியிலும் - நடையில் சிறந்த குதிரையின் இடத்திலும், பொய் வார்த்தை சொல்லாத நல்லோர் இடம் தன்னிலும் - பொய் கூறாத நல்லவர்கள் இடத்திலும்,  நல்ல சுபலக்கணம் மிகுந்த மனை தன்னிலும் - சிறந்த சுப இலக்கணங்கள் பொருந்தி உள்ள வீட்டிலும்,  இரண சுத்த வீரர்பாலும் - போருக்கு உரிய உயர்ந்த வீரர் இடத்திலும், அடர் கேதனத்திலும் - மிகுந்த வெற்றிக் கொடியின் இடத்திலும்,  சுயம்வரம் தன்னிலும் - சுயம் வரத் திருமணத்திலும், அருந் துளசி வில்வத்திலும் - அரிய துளசி மற்றும் வில்வ பத்திரத்திலும், அலர் தரு கடப்ப மலர் தனிலும் - மலர்ந்த கடப்ப மலரிலும்,  இரதத்திலும் - தேரிலும்,  அதிக குணமான ரூப மடவாரிடத்திலும் - நற்குணம் வாய்ந்த அழகிய பெண்கள் இடத்திலும்,  திருமாது குடிகொண்டு மாறாது இருப்பள் அன்றோ - திருமகள் குடிகொண்டு எப்போதும் நீங்காமல் இருப்பாள் அல்லவா?


"நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,

     நாகரிகர் மாமனை யிலே,

  நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,

     நறைகொண்ட பைந்துள விலே,


கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,

     கல்யாண வாயில் தனிலே,

  கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,

     கதிபெறு விளக்க தனிலே,


பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே

     பொய்யாத பேர்பா லிலே,

  பூந்தடம் தன்னிலே, பாற்குடத்து இடையிலே

     போதகத் தின்சிர சிலே


அற்பெரும் கோதைமலர் மங்கைவாழ் இடம் என்பர்

     அண்ணல்எமது அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!" --- அறப்பளீசுர சதகம்.


  இதன் பொருள் --- 


அண்ணல் - தலைவனே! எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - எமது அரிய மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

நல் பரி முகத்தில் - அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் - அரசரின் இடத்திலும்,  நாகரிகர் மாமனையில் - நயத்தகு நாகரிகம் அறிந்தவர்கள் வாழும் வீட்டிலும்,  நளின மலர் தன்னில் - தாமரை மலரிலும், கூவிளந் தருவில் - வில்வ மரத்திலும், நறை கொண்ட பைந் துளவில் - மணமுடைய பசிய திருத் துழாயிலும்,  கற்புடையர் வடிவில் - கற்புடைய பெண்களின் வடிவத்திலும், கடலில் - கடலிலும்,  கொடியில் - துகில் கொடியிலும், கல்யாண வாயில்தனில் - திருமண வீட்டின் வாயிலிலும்,  கடி நகர் இடத்தில் - காவலை உடைய நகரத்திலும், நல் செந்நெல் விளைவில் - நல்ல செந்நெல் விளைவிலும்,  கதிபெறு விளக்கு அதனில் - ஒளி வீசுகின்ற விளக்கிலும்,  பொற்பு உடைய சங்கில் - அழகுள்ள சங்கிலும்,  மிக்கோர்கள் வாக்கில் - பெரியோர் வாயிலிருந்து பிறக்கும் சொல்லில்,  பொய்யாத பேர்பாலில் - பொய் சொல்லாதவர் இடத்திலும், பூந் தடம் தன்னில் - மலர்கள் நிறைந்துள்ள குளத்திலும்,  பால் குடத்திடையில் - பால் குடத்திலும்,  போதகத்தின் சிரசில் - யானையின் மத்தகத்திலும், அல் பெரும் கோதை மலர்மங்கை வாழ் இடம் என்பர் - இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமகள் வாழுகின்ற இடம் என்பர் பெரியோர்.

ஆனால், திருமகள் வாழும் இடம் எது என்று திருவள்ளுவ நாயனார் கூறுவது,

"மடி உளாள் மாமுகடி என்ப, மடி இலான்

தாள் உளாள் தாமரையினாள்" --- திருக்குறள்.

சோம்பல் இருக்கும் இடத்திலே மூதேவி இருப்பாள். சோம்பல் இல்லாதவன் இடத்திலே திருமகள் இருப்பாள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"தாள்" என்னும் சொல்லுக்கு முயற்சி அல்லது சோம்பல் இல்லாமை என்பதைப் பொருளாக் கொண்டால், மேற்படி பொருள் வரும். முயற்சி என்பது, நன்னெறியில் முயலுவதையே குறிக்கும்.  "தாள்" என்னும் சொல்லுக்கு, காலடி, பாதம் என்றும் பொருள் உண்டு. அவ்வாறு கொண்டால், நன்னெறியில் முயலுபவனது காலடியில் திருமகள் தவழ்ந்து கொண்டு இருப்பாள் என்பது பொருளாய் வரும்.

இரண்டாவதாகச் சொன்னதே பொருந்தும் என்பது, பின்வரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலால் அறியலாம்....

"கொய்த அம் மலரடி கூடுவார், தம்

மை திகழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை, உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே"

இதன் பொருள் ---

அன்பர்களால் கொய்து அணியப் பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களை, பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

திருமகள் சிவனடியாரைப் பிரியாது இருப்பாள் என்று தெளிவிக்கும், பின்வரும் அப்பர் தேவாரப் பாடலையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்

வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்

கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக் காரோணம் என்றும்

சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே".

இதன் பொருள் ---

சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த திருநாகைக் காரோணத்தை  என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.

ஆக, திருமகள் எங்கு இருப்பதாகக் கொண்டாலும் சரி. நல்லோர் நினைக்கும் இடத்தில் அவள் இருப்பாள். அறவழியில் முயலும் இடத்தில் அவள் இருப்பாள். சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்தில் நிச்சயம் அவள் இருப்பாள். இறை அடியாருடைய காலடியில் நீங்காமல் இருப்பாள்.

    பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினை உடையவள் திருமகள் என்பதை “தவழ் திருமகள்” என்று காட்டினார் திருஞானசம்பந்த நாயனார். இது சிந்தனைக்கு உரியது. எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனின் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் திருவடிகளைத் திருமகள் வணங்குவாள் என்பதால், “மடி இலான் தாள் உளாள் தாமரையினாள்” என்று சொல்லப்பட்டது. பின்வரும் கம்பராமாயணப் பாடல் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

“கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்

படி உளாளோ? கடல் படை உளாளோ? பகர்

மடி இலா அரசன் மார்பினில் உளாளோ? வளர்

முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம், முளரியாள். --- கம்பராமாயணம், எதிர்கோள் படலம்.

இதன் பொருள் ---

முளரியாள் - செந்தாமரை மலரில் வதியும் திருமகள்;  பகர் மடி இலா அரசினான் - (புகழ்ந்து) கூறப்படுகிற சோம்பல் இல்லாத அரசாட்சி செய்யும் தசரத மன்னனுடைய;  கொடி உளாளோ - கொடியில் உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ?  - ஒப்பற்ற வெண் கொற்றக் குடையிலே இருக்கின்றாளோ;   குலப்படி உளாளோ - பரம்பரை பரம்பரையாக வருகின்ற அவனது இராச்சியத்தில் இருக்கின்றாளோ;  கடல் படை உளாளோ? - கடல் போன்ற அவன் சேனையிலே  இருக்கின்றாளோ?;  மார்பு உளாளோ? - அம் மன்னர் மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? - அழகு வளரும் அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?;  தெரிந்து உணர்கிலாம் - திருமகள் இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக் கூடவில்லை.

மன்னர்களிடம் திருமகள் வாசம் புரியத்தக்க இவையனைத்திலும் ஏதோ ஓரிடத்தில் வசிப்பது அவள் வழக்கம்.  தரசதன் ஆட்சியில் அவள் இன்ன இடத்தில் உள்ளாள் என்று உறுதியாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், அனைத்திலும் உள்ளாள் என்றதால், “மடியிலான் தாள் உளாள் தாமரையினாள்”என்னும் திருக்குறளை இப்படி வைத்துச் சிந்தித்தால், திருஞானசம்பந்த நாயனார் அருளியது போல, அடியவர்களின் திருவடியில் வணங்கிப் பொருந்தி உள்ளாள் திருமகள் என்பது விளங்கும்.


பின் நிற்பார் இன்மை பேணுதல்


பின் நிற்பார் இன்மை பேணுதல்

-----


    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘நாலடியார்’ சமண சமயத்தைச் சார்ந்த பண்டைத் தமிழ்ப் பெரும்புலவர்களால் அருளிச் செய்யப்பட்டது. துறவறத்தையே பெருநெறியாக உடையவர்களf, இல்லறநெறியின் இன்றியமையாமையையும் சிறப்பாக உணர்த்தி, மகளிர்க்குச் சிறந்த கற்புநெறியைக் காட்டி உள்ளனர். “பெறுநசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை” என்று வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுகின்றனர். தன்னைப் பிறர் நோக்காதவாறு நடந்து கொள்ளுதலே கற்புடைமை என்பது இதன் பொருள்.

    கற்புடைமை என்பது, ‘தன் மனம் நெறி தவறாமல் பாதுகாத்தல்’ மட்டுமல்லாமல், ‘பிறர் மனம் தன்னை விரும்பாமல் அமைதியாய் நடந்துகொள்ளுதல்’ என்பது அறிவுறுத்தப்பட்டது. பிறர் மனத்தைத் திரித்த பாவம் இதனால் உண்டாகும். கணவனைத் தவிர்த்த மற்ற யாருடைய மனமும் தன்னை நாடாதவாறு அமைந்த தன்மையுடன் ஒழுகுதல் கற்புடைமை ஆகும் என்கிறது நாலடியார்.

    இக்கலாத்தில் பலரும் காணுமாறு பகட்டு உடை அணிதல் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. பின்நிற்பார் இல்லாமையை விரும்புபவர் பகட்டு உடையைத் தவிர்ப்பர். பின் நிற்பாரைப் பேணுதலும் இக்கால நாகரிகம் போலும். பகட்டு உடை அணிந்து பெருமை தேடிக் கொள்ள நினைப்பது சிறுமையையே உணர்த்தும். இனி, யாவரோடும் கலந்து பழகுதலும் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஏழை எளியர்வர்களோடு கலந்து பழகுகின்றார்களா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.

    பின் நிற்பார் இன்மையைப் பேணுதல் என்பது தமிழர் வாழ்வியல் என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சிறப்பாகச் சொல்லப்பட்டு உள்ளது. காவிரிப் பூட்பட்டினத்து அரசனாகிய ககந்தன் என்பவனது இளைய மகன், காவிரியில் நீராடிவிட்டுத் தனியே வந்த மருதி என்னும் பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுற்று அவளை அழைத்தான். அவள் மனம் கலங்கினாள். “கற்புடையை மகளிர் என்றால், அவர் பிறர் நெஞ்சில் புகமாட்டார்கள். நானோ இவன் உள்ளத்தில் புகுந்தேன். எனவே, எனக்கு என் கணவருடன் கூடி முத்தீப் பேணும் தகுதி எனக்கு இல்லை” என்று எண்ணி, பெருந்துயரத்தோடு தனது வீட்டிற்குச் செல்லாது, அவ்வூரில் தீயொழுக்கம் உடையவரை அறைந்து உண்ணும் பூதம் உறையும் கோயிலுக்குச் சென்று, “நான் எனது கணவனுக்கு யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருக்க பிறன் ஒருவனுடைய நெஞ்சில் எளிமையாகப் புகுந்தேன். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குப் புலனாகவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டிக்காது இருப்பதால், நீ கோயிலில் இருப்பது பொய்யோ?” என்று அழுது அரற்றினாள். இதனை மணிகேமலையில் பின்வருமாறு காண்க.


“தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்

யாப்பறை என்றே எண்ணின் ஆகிக்

காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்

நீவா என்ன, நேரிழை கலங்கி,


மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்

பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்,

புக்கேன் பிறன் உள்ளம், புரிநூன் மார்பன்

முத்தீப் பேணும் முறை எனக்கு இல் என,

மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாஅள்,


பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்

கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இ்(ல்)லேன்,

கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிது ஆயினேன்,

வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்

யான்செய் குற்றம் யான் அறிகில்லேன்

பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்

தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்


மாபெரும் பூதம் தோன்றி, மடக்கொடி!

நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்,


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்,

பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு

விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்

கடவுள் பேணல் கடவியை ஆகலின்,

மடவரல் ஏவ மழையும் பெய்யாது,

நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்

பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை,

ஆங்கவை ஒழிகுவை ஆயின், ஆயிழை

ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது;


பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

கட்டாது உன்னை என் கடுந்தொழிற் பாசம்,

மன்முறை எழுநாள் வைத்தவன் வழூஉம்

பின்முறை அல்லது என்முறை இல்லை,

ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்

ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என

இகந்த பூதம் எடுத்துரை செய்தது, அப்

பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்

தாதை வாளால் தடியவும் பட்டனன்.”


இதன் பொருள் ---


    தெளிந்த நீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்தில் உள்ளோர் ஒருவரும் இல்லாமையால், அவளை மன உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன், நீ வா என அழைக்க, அவள் கலக்கமுற்று, அணுச்செறிந்த நிலவுலகத்தில், வேண்டியபோது மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிர் ஆயின், பிறர் உள்ளத்தில் புகுதல் இலர். நானோ அயலான் உள்ளத்தில் புகுந்தேன். ஆதலின் முந்நூலணிந்த மார்பினை உடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மிகப் பெரிய துன்பத்துடன் தனது மனைக்குச் செல்லாதவளாய், பூத சதுக்கத்தை அடைந்து வருந்தி, கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், அயலானுடைய உள்ளத்தில் எளிதில் புகுந்தேன், மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்தில் பொருந்தியவளாகிய நான் செய்த குற்றம் ஒன்றையும் அறியேன், நெறியல்லன செய்தோரைப் புடைத்து உண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கத்துக் கடவுளாகிய நீ இங்கு இருப்பது பொய்ம்மையோ என மருதி பலவாறு புலம்புதலும்; மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடியே நீ கேட்பாயாக, பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை, பெய் என்று சொல்லப் பெருமழை பெய்யும் என உரைத்த, தெய்வப் புலவராகிய திருவள்ளுவ நாயனாரது அப் பொருண்மொழியை நீ தெளியவில்லை. பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விழாக் காண்டலை விரும்பி, வேறு கடவுளை வணங்கும் தன்மை உடையவள் நீ ஆனாய். எனவே, நீ ஏவினால் மழையும் பெய்யாது, பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையை உடையவளும் நீ அல்ல. முற்கூறிய நினது செயல்களை நீங்குவாயானால்,  உயர்ந்த வானத்து மழையும் நீ ''பெய்'' எனச் சொன்னால் பெய்யும்.

    தான் விரும்பியவாறே ஒழுகுகின்ற பெண்களைக் கட்டுவதுபோல,  எனது கொடிய தொழிலையுடைய பாசமானது உன்னைக் கட்டாது. அரசன் முறை செய்யத் தவறினால் ஒழிய, நான் அவனை முறைசெய்வது இல்லை. இன்றைக்கு ஏழாம் நாளில் உன்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோன், ககந்தன் கேள்வியுற்று வாளினால் தண்டிக்கப்படுவான் என்று பூதம் எடுத்துக் கூறியது. பூதம் உரைத்த நாளில் அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டான்.

    ஆடம்பரமாக ஒழுகுதலே பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணம் ஆகிறது என்பது இதனால் சொல்லப்பட்டது. ஒருவனும் ஒருத்தியுமாய் வாழ்கின்ற காதல் வாழ்க்கை சிறப்புற்று மேம்படுவது, நாணம் என்னும் நல்லியல்பினால்தான். பெண்மை தன்மை கெட்டு, ஆண் தன்மையே மிகுந்து, நாணம் அற்று வாழ்வது பொதுமகளிரின் இயல்பு. மகளிர்க்கு நாணமே உயிர்க்குணம் என்பதை நாலடியார் பின்வருமாறு கூறும்.


“எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேற் சேர்ந்து எழினும்,

அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்

என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்

பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.


அன்றாடம் என் கணவர் என்னோடு கூடி மகிழ்கின்றார். என்றாலும், அவர் என்னோடு முதன்முதலாக்க் கூடியபோது உண்டான நாணம் என்னை இன்னும் விட்டபாடில்லை. ஆனால், அன்றாடம் பலரோடு கூடி, பணத்துக்காகப் பரத்தையர் இன்றுபுகிறார்களே. இவர்கள் எல்லாம் எப்படித்தான் நாணத்தை விட்டு அனைவரோடும் கூடி இன்புறுகின்றார்களோ? இது எனக்கு விந்தையாய் உள்ளது, என்று தனது நாணுடைமையின் பெருமையை வெளிப்படுத்தினாள் தலைவி.


    இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவின் அளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றம் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பன. இல்லறத்தில் நிற்கும் பெண்டிரின் இயல்பைப் பின்வருமாறு எடுத்து ஓதுகின்றன நமது பண்டைய நூல்கள்.


“கொண்டான் குறிப்பொழுகல், கூறிய நாணுடைமை

கண்டது கண்டு விழையாமை,--விண்டு

வெறுப்பன செய்யாமை, வெஃகாமை நீக்கி

உறுப்போடு உணர்வு உடையாள் பெண். --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், மகளிர்க்குக் கூறிய நாணினை உடைமையும், எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையும் ஆகிய இவற்றை விரும்பி மேற்கொள்ளுதலோடு உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.


“கட்கு இனியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,

உட்கு உடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி

இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்.”          --- நாலடியார்


இதன் பொருள் ---


    பார்வைக்கு இனிய இயற்கையழகு உடையவளாய்த் தன் காதலன் விருப்பப்படி ஆடை அணிகலன்களைப் புனைந்து தன்னை அழகுபடுத்திக் கொள்பவளும், தனது கற்பொழுக்கச் சீரினால் கண்டார் எவரும் அஞ்சும் மதிப்பு உடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ள மகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின் திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்கு உரிய மாட்சிமை உடையாளும், தன் கணவன்பால் உள்மதிப்புக் கொண்டு செவ்வியறிந்து ஊடியும், அது இனிது ஆகும்படி அவ்வூடல் நீங்கியும் இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடைய பெண்ணே, இல்வாழ்க்கைக்குரியவள் ஆவாள். 


    இங்ஙனம் ஊடியும், உணர்ந்தும், கூடியும் வாழ்வதே நிறைந்த காதல் வாழ்க்கை எனக் காட்ட, “ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்” என்றும், “துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று” என்றும் அருளினார் திருவள்ளுவ நாயனார். நினைத்ததற்கு எல்லாம் ஊடுதலும், மனம் கனிந்து தேற்றியும் ஊடல் ஒழியாது நிற்றலும் காதல் வாழ்க்கைக்கே அழிவு செய்யும் என்பதால், “இடன் அறிந்து ஊடி, இனிதின் உணரும் மாதராள்” என்று சொல்லப்பட்டது.



பொது --- 1122. மக்கள் ஒக்கல் தெரிவை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மக்கள் ஒக்கல் (பொது) முருகா!  தேவரீரது திருவடி மலர்களை வழிபட்டு உய்யும் புத்தியை அடியேனுக்கு அருள்வாயாக. த...