055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை எதிர்நோக்கி உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; அரசனுடைய செங்கோன்மையை எதிர்நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள்" என்கின்றார் நாயனார்.

உலகத்தில் உள்ள உயிர்கள் மழையின் தகுதியால் உணவினைக் கொண்டு பிழைப்பதும், நீரையே உணவாகக் கொண்டு பிழைப்பதும், உணவில்லாதபோது இறப்பதும் இயல்பாக உள்ளது. மழை இருந்து உணவு கிடைத்த காலத்தும், அரசாட்சியானது முறை தவறியதாக இருக்குமானால், குடிமக்கள் உணவால் பயன் அடைந்து வாழ்தல் என்பது கூடாது. முறை தவறிய ஆட்சியில், உண்ணும் உணவானது உயிர்கள் எல்லாவற்றிற்கும் கிடைப்பது அரிதாகும். உணவுப் பொருள் பதுக்கல், விலையேற்றம் முதலியவைகளால், பொருள் கிடைப்பது எல்லோருக்கும் சாத்தியாமாகாது. பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்து ஆடும்.


இதற்குத் திருக்குறள்...

“வான்நோக்கி வாழும் உலகு எல்லாம், மன்னவன்

கோல் நோக்கி வாழும் குடி.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் --- உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், 

குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.

(நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“கோல்நோக்கி வாழுஙம்குடியெல்லாம், தாய்முலைப்

பால்நோக்கி வாழுங் குழவிகள், - வானத்

துளிநோக்கி வாழும் உலகம், உலகின்

விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.” --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

குடி எல்லாம் கோல் நோக்கி வாழும் - குடிமக்கள் எல்லோரும் அரசனது ஆட்சியை நோக்கி உயிர் வாழ்வார்; குழவிகள் தாய்முலைப் பால் நோக்கி வாழும் - குழந்தைகள் எல்லாரும் தாயின் முலைப்பாலை நோக்கி உயிர் பிழைக்கும்; உலகம் வானத் துளி நோக்கி வாழும் - உலகத்து உயிர்கள், வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி உயிர் வாழும்; கூற்று உலகின் விளி நோக்கி இன்புறூஉம் - எமன் உயிர்களின் சாவை நோக்கி மகிழ்வான்.

குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.



“மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை, மழையும்

தவம் இல்லார் இல்வழி இல்லை, தவமும்

அரசன் இலாவழி இல்லை, அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.” --- நான்மணிக்கடிகை.

இதன் பொருள் ---

மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை - மழையில்லாமல், இப் பேருலகத்தின் மக்கட்கு  நலமில்லை; மழையும் தவம் இலார் இல்வழி இல்லை - அம்மழை தானும், தவஞ் செய்தல் இல்லாதவர்கள் இருப்பிடங்களில் பெய்தலில்லை; தவமும் அரசன் இலாவழி இல்லை - அவ் வியல்பினதான தவஞ்செய்தலும்  செங்கோலரசன்  இல்லாதவிடத்து நிகழ்தல் இல்லை; அரசனும் இல்வழ்வார் இல்வழி இல் - அச் செங்கோலரசனும் குடிமக்கள் இல்லாதவிடத்து இல்லாதவன் ஆவான்.

மழையில்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலம் இல்லை. அம் மழையும் தவம் உடையார் இல்லாத இடத்துப் பெய்தல் இல்லை. அத் தவஞ் செய்தலும் முறையான அரசன் இல்லாத நாட்டில் நிகழ்தல் இல்லை. அவ்வரசனும் குடிகள் இல்லாத இடத்தில் இருப்பது இல்லை.


“வான் நோக்கி நிற்கும் உலகு என்னவும், மன்னவன் செம்

கோன் நோக்கி நிற்கும் குடி என்னவும், கோது உம்பர்

ஆனோர்க்கும் நாகர் உலகோர்க்கும் அவனியோர்க்கும்

ஏனோர்க்கும் நாடும் நகராகி இருந்தது அவ்வூர். “ ---  கந்தபுராணம்.

இதன் பொருள் --- 

உலகத்து உயிர்கள் எல்லாம் வானத்து மழையை நோக்கி வாழ்வது போலவும், குடிமக்கள் எல்லாரோம் மன்னனுடைய செங்கோல் முறையை நோக்கி வாழ்வது போலவும், தேவர்களுக்கும், நாகர் உலகைச் சார்ந்தவர்களுக்கும், பூதலத்தில் உள்ளோர்க்கும், மற்றும் பிறர்க்கும் நாடிச் செல்கின்ற நகரமாக விளங்கியது காஞ்சி மாநகரம்.


“மீன் நோக்கும் நீள் வயல் சூழ் 

வித்துவக்கோட்டு அம்மா என்-

பால் நோக்காயாகிலும் உன் 

பற்று அல்லால் பற்று இலேன்

தான் நோக்காது எத்துயரம் 

செய்திடினும் தார்-வேந்தன்

கோல் நோக்கி வாழும் 

குடி போன்று இருந்தேனே.” --- குலசேகர ஆழ்வார்.

இதன் பொருள் ---

மீன்கள் எல்லாம் தாம் உயிர் வாழ மிகவும் தகுதியான இடம் என்று ஆசையோடு பார்க்கின்ற, நீர்வளம் மிக்க அகன்ற கழனிகள் சூழ்ந்து விளங்கும் வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமனே! அடியேன்பால் நீ உனது கருணை நோக்கம் செய்யாது இருந்தாலும், உன்னையே சரணாக வந்து பொருந்துதலை விட்டு, வேறு ஒருவரைச் சரணாக நான் அடையமாட்டேன். குடிமக்களைக் காப்பதற்கு என்று மாலை அணிந்துள்ள அரசன் துன்பங்களைச் செய்தாலும், அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கின்ற குடிமக்களை ஒத்து நான் இருந்தேன்.


“எத்தனையும் வான் மறந்த 

காலத்தும் பைங்கூழ்கள்

மைத்துஎழுந்த மாமுகிலே 

பார்த்திருக்கும் மற்று அவைபோல்

மெய்த் துயர் வீட்டாவிடினும் 

வித்துவக்கோட்டு அம்மா என்

சித்தம் மிக உன்பாலே 

வைப்பன் அடியேனே.”       ---  குலசேகர ஆழ்வார்.

இதன் பொருள் ---

வித்துவக்கோடு என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள பெருமானே! மேகமானது எவ்வளவு காலம் மழை பொழியாமல் ஒழிந்தாலும், பசுமையான பயிர்கள், கருநிறம் கொண்டு வான் வெளியில் திரளுகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்து இருக்கும். அந்தப் பயிர்கள் போலத் தவறாமல், எனது துன்பங்களை நீ போக்காவிட்டாலும், எனது மனத்தை உன்னிடத்திலேயே வைத்து இருப்பேன்.


“வான் நோக்கி நிற்கும்பைங் கூழ்போலவும், ஒரு மன்னவன்செங்

கோல் நோக்கி நிற்கும் குடிபோலவும்,  தடங்கோட்டு, இமையத்

தேன் நோக்கி நிற்கும் எழில் உடையாள்  வெங்கைச் செல்வி உனைத்

தான் நோக்கி நிற்கும் நல் ஆயத்துளே  சென்று சார்ந்தருளே.”       ---  திருவெங்கைக் கோவை.


வேந்தனே இல்லாவிடின், உலகத்து

மேலது கீழதா மணஞ்செய்

காந்தனுக்கு அடங்கிக் களத்திரம் நடவாள்,

காதலர் தந்தைசொல் கேளார்,

மாந்தர் வேளாண்மை முதல் தமக்கு உரிய

வளமைகூர் தொழில்களின் முயலார்,

சாந்தருந் தீயர் ஆவரேல், தீயர்

தன்மையைச் சாற்றுமாறு எவனோ. --- நீதிநூல்

 இதன் பொருள் ---

நாடும் மொழியும் நலமுறக் கூடிவாழ்வதே குடிகள் இயல்பு. செங்கோல் மன்னன் இல்லாவிட்டால், மேன்மை தாழ்வை அடையும். குடும்பம் குலையும். மக்கள் தந்தைசொல் பேணார். உழவர் பயிர்த் தொழில் செய்யார். அமைதியினரும் கொடியவர் ஆவர்.

 

 

“நம்மனை மைந்தர் கிரகவாழ்வு எல்லாம்

நரபதியால், அவன் இலனேல்

அம்மனை தீயர் கைவசம் ஆவள்,

அருநிதி கொள்ளையாம், நாளும்

வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்,

மேலவர் அசடரால் மெலிவர்,

அம்ம ஈது எல்லாம் உணர்ந்து அரசாணைக்கு

அமைதல் நற்குடிகளின் இயல்பே.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  மனையாள் மக்கள் வாழ்வு எல்லாம் மன்னவனாலேயே நிலைக்கும். அவன் இல்லாவிட்டால் கற்பு அழிவும் கொள்ளையும் கொலையும், உயர்ந்தவரைத் தாழ்ந்தவர் துன்புறுத்தும் கொடுமையும் பெருகும். அதனால், அரசன் ஆணைக்கு அடங்கி நடப்பதே பெருமை.



055. செங்கோன்மை - 01. ஓர்ந்து கண்ணோடாது

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


அரசன் நீதிமுறையுடன் அரசினை ஆளுதல் சொல்லப்பட்டது. அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல்போல் இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது.

இது, நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், பொச்சாவாமை என்னும் அதிகாரத்தின் பின்னர் இது வைக்ககப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்தால், அக்குற்றத்தை ஆராய்ந்து, முகம் கொடாமல், நடுவுநிலைமையோடு இருந்து, உரிய தண்டனையைத் தேர்ந்து அளிப்பதே நீதி ஆகும்" என்கின்றார் நாயனார்.

"முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்" என்பது கலித்தொகை. முகம் கொடுத்தல் என்பது பழகியவர்க்குக் காட்டும் தாட்சண்ணியம் ஆகும்.

இதற்குத் திருக்குறள்... 

“ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஓர்ந்து --- தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: 

யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து --- யாரிடத்தும் தாட்சண்ணியம் காட்டாது, நடுவு நிலைமையைப் பொருந்தி, 

தேர்ந்து --- அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, 

செய்வஃதே முறை --- அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.

(நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“இறைமகிழ வேந்தன் இளம் கன்றிற்காக

மகவினையும் தேர் ஊரும் ஆற்றால்

ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.”

இறை - சிவபெருமான்.  வேந்தன் - மனுநீதிச் சோழன். தன் மகனுடைய தேர்க்காலில் அகப்பட்டு இறந்த ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு, தானே தனது மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழனின் செங்கோன்மையைத் தெரிவிக்கும் இவ்வரலாறு வருமாறு... 

சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். ஊனமில்லாத வேள்வி பல நிகழ்த்தியவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடை சூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றான். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ நான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரை தாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.


“தன்உயிர்க் கன்று வீயத்

தளர்ந்தஆத் தரியாது ஆகி

முன்நெருப்பு உயிர்த்து விம்மி

முகத்தினில் கண்ணீர் வார

மன்உயிர் காக்கும் செங்கோல்

மனுவின்பொன் கோயில் வாயில்

பொன்அணி மணியைச் சென்று

கோட்டினால் புடைத்தது அன்றே.” --- பெரியபுராணம்.


அம் மணி ஓசை, மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.


“அவ்வுரை கேட்ட வேந்தன்

ஆஉறு துயரம் எய்தி

வெவ்விடம் தலைக்கொண் டால்போல்

வேதனை அகத்து மிக்குஇங்கு

இவ்வினை விளைந்த வாறுஎன்று

இடர்உறும் இரங்கும் ஏங்கும்

செவ்விதுஎன் செங்கோல் என்னும்

தெருமரும் தெளியும் தேறான்.”    --- பெரியபுராணம்.


“மன்உயிர் புரந்து வையம்

பொதுக்கடிந்து அறத்தில் நீடும்

என்நெறி நன்றால் என்னும்

என்செய்தால் தீரும் என்னும்

தன்இளம் கன்று காணாத்

தாய்முகம் கண்டு சோரும்

அந்நிலை அரசன் உற்ற

துயரம்ஓர் அளவிற்று அன்றால்.”   --- பெரியபுராணம்.


இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள். 


“மந்திரிகள் அதுகண்டு

மன்னவனை அடிவணங்கிச்

சிந்தை தளர்ந்து அருளுவது

மற்றுஇதற்குத் தீர்வுஅன்றால்

கொந்துஅலர்த்தார் மைந்தனைமுன்

கோவதை செய்தார்க்கு மறை

அந்தணர்கள் விதித்த முறை

வழிநிறுத்தல் அறம்என்றார்.”   --- பெரியபுராணம்.


அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, தனது பரிசனங்களாலாவது, பகைவர்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார். 


“வழக்குஎன்று நீர்மொழிந்தால்

மற்றுஅதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்துஅலறுங்

கோஉறுநோய் மருந்துஆமோ

இழக்கின்றேன் மைந்தனைஎன்று

எல்லீரும் சொல்லியஇச்

சழக்குஇன்று நான்இயைந்தால்

தருமம் தான் சலியாதோ?”   --- பெரியபுராணம்.


“மாநிலம்கா வலன்ஆவான்

மன்உயிர்காக் கும்காலைத்

தான்அதனுக்கு இடையூறு

தன்னால்தன் பரிசனத்தால்

ஊனமிகு பகைத்திறத்தால்

கள்வரால் உயிர்தம்மால்

ஆனபயம் ஐந்தும் தீர்த்து

அறம் காப்பான் அல்லனோ?”   --- பெரியபுராணம்.


“என்மகன்செய் பாதகத்துக்கு

இருந்தவங்கள் செயஇசைந்தே

அன்னியன்ஓர் உயிர்கொன்றால்

அவனைக்கொல் வேன்ஆனால்

தொன்மனுநூல் தொடைமனுவால்

துடைப்புஉண்டது எனும்வார்த்தை

மன்உலகில் பெறமொழிந்தீர்

மந்திரிகள் வழக்கு என்றான்.”   --- பெரியபுராணம்.


மன்னரின் மனோநிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.


“அவ்வுரையில் வருநெறிகள்

அவைநிற்க அறநெறியின்

செவ்விய உண்மைத்திறம் நீர்

சிந்தை செயாது உரைக்கின்றீர்

எவ் உலகில் எப் பெற்றம்

இப்பெற்றித்து ஆம் இடரால்

வெவ் வுயிர்த்துக் கதறிமணி

எறிந்து விழுந்தது விளம்பீர்.”  --- பெரியபுராணம்.


“போற்றி இசைத்துப் புரந்தரன்மால்

அயன்முதலோர் புகழ்ந்துஇறைஞ்ச

வீற்றுஇருந்த பெருமானார்

மேவிஉறை திருவாரூர்த்

தோற்றம்உடை உயிர்கொன்றான்

ஆதலினால் துணிபொருள்தான்

ஆற்றவும் மற்று அவற்கொல்லும்

அதுவே ஆம் எனநினைமின்.”  --- பெரியபுராணம்.


அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.


“ஒருமைந்தன் தன்குலத்துக்கு

உள்ளான்என் பதும்உணரான்

தருமம்தன் வழிச்செல்கை

கடன்என்று தன்மைந்தன்

மருமம் தன் தேர்ஆழி

உற ஊர்ந்தான் மனுவேந்தன்

அருமந்த அரசாட்சி

அரிதோ மற்று எளிதோதான்.”  --- பெரியபுராணம்.


கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.


“தண்அளிவெண் குடைவேந்தன்

செயல்கண்டு தரியாது

மண்ணவர்கண் மழைபொழிந்தார்

வானவர்பூ மழைசொரிந்தார்

அண்ணல்அவன் கண்எதிரே

அணிவீதி மழவிடைமேல்

விண்ணவர்கள் தொழநின்றான்

வீதிவிடங் கப்பெருமான்.”    --- பெரியபுராணம்.


“சடைமருங்கில் இளம்பிறையும்

தனிவிழிக்கும் திருநுதலும்

இடம் மருங்கில் உமையாளும்

எம்மருங்கும் பூதகணம்

புடைநெருங்கும் பெருமையும்முன்

கண்டுஅரசன் போற்றிஇசைப்ப

விடைமருவும் பெருமானும்

விறல்வேந்தற்கு அருள்கொடுத்தான்.” --- பெரியபுராணம்.


“அந்நிலையே உயிர்பிரிந்த

ஆன்கன்றும் அவ்அரசன்

மன்உரிமைத் தனிக்கன்றும்

மந்திரியும் உடன்எழலும்

இன்னபரிசு ஆனான் என்று

அறிந்திலன் வேந் தனும் யார்க்கும்

முன்னவனே முன்நின்றால்

முடியாத பொருள்உளதோ.”   --- பெரியபுராணம்.



அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்துள் வரும் கழற்சிங்க நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை

விழச்சென்று அரிந்து விடுத்தார் --- கழற்சிங்கர்,

ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.”

இதன் பொருள் ---

கழற்சிங்க நாயனார் காடவர் குலத்தில் அவதரித்தவர்.  சிவபெருமான் திருவடிகளையே அன்றி மற்றொன்றும் அறியாத வாய்மையாளர். சிவபெருமானது திருவருளால் வடபுலத்தார்களைப் போரில் வென்றார். எங்கும் சைவசமயம் தழைத்து ஓங்குமாறு அரசு புரிந்தார். அவர் தனது மாதேவியோடு சிவதரிசனம் செய்யுமாறு தலங்கள்தோறும் சென்று வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்தார். பூங்கோயிலின் உள்ளே சென்று புற்றிடங்கொண்டாரை வணங்கினார். அவருடைய மாதேவி திருக்கோயிலை வலம் வந்தாள். திருமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப் பூவை எடுத்து மோந்தாள். அதனைச் செருத்துணை நாயனார் கண்டு விரைந்து ஓடிவந்து, பூமண்டபத்திலிருந்த பூவை எடுத்து மோந்ததாகக் கருதி அவளைக் கூந்தலைப் பிடித்து இழுத்து வீழ்த்தி அவளுடைய மூக்கை அரிந்தார். திருக்கோயில் வலம் வந்துகொண்டிருந்த கழற்சிங்க நாயனாரும் இதனைக் கண்டார். நடந்ததை விசாரித்து அறிந்து, பூவை எடுத்த பூவை கையை அன்றோ முதலில் துணிக்கவேண்டும் என்றார். உடைவாளை உருவிக் கையைத் துணித்தார்.  

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராயந்து அவ்வளவிற்றாகச் செயவதே முறையாம் என்று திருவள்ளுவ நாயனார் அருளியச் செவ்வியை நோக்குக.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்த்துளதை அறியலாம்...

“வழிபடு வோரை வல் அறிதீயே,

பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே,

நீமெய் கண்ட தீமை காணின்

ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி...”  --- புறநானூறு

இதன் பொருள் ---

நின்னை வழிபட்டு ஒழுகுவோரை நீ விரைவில் அறிந்து கொள்வாய். புறங்கூறுவோர் பிறர்மேல் சொல்லும் பழிச் சொற்களை நீ சற்றும் ஏற்றுக் கொள்ளமாட்டாய். தவறு உடையது என்று நீ ஆராய்ந்து தெளிந்த தீமையை யாரேனும் செய்யக் கண்டால், முறை தவறாது, நடுநிலையோடு நின்று, அவர்க்குத் தண்ட்னை தருவாய்.



“எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்,

தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்

வன்கண்ணன் ஆகி ஒறுக்க, ஒறுக்கல்லா

மென்கண்ணன் ஆளான் அரசு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

எம்கண் இனையர் என கருதின் - அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நண்பர், பகைவர்) இத்தன்மையை உடையார் என்று கருதுவானாயின், ஏதம் - அது செங்கோன்மைக்குக் குற்றமாகும். தம் கண்ணரானும் - தமது கண்போல்வார் ஆயினும், தகவு இல கண்டக்கால் - தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது, வன்கண்ணனாகி – மனக் கொடுமையை உடையவன் ஆகி, ஒறுக்க - அவர்களைத் தண்டிக்கவேண்டும்.  ஒறுக்கல்லா மென் கண்ணன் - தண்டஞ் செய்யாத கண்ணோட்டம் உடையான், அரசு ஆளான் - அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான்.


“சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலைக் கழிந்ததன் பின்றையும், - மேலைக்

கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்

முறைமைக்கு மூப்பிளமை இல்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

சான்றவர் - அறிவு நிரம்பிய அமைச்சர்கள். சால மறைத்து ஓம்பி கை கரப்பவும் - மிகுதியானவைகளைக் கூறி இது பெருங் குற்றமல்ல என்று மறைத்து, அதற்கு மறை மொழிந்தபடி செய்தலே அறமென்று பாதுகாவலும் செய்து அரசன் நினைத்திருந்த செயலைக் கரப்பவும், காலை கழிந்ததன் பின்றை - அன்றிரவு கழிந்த பின்னர், மேலை - முன்னாள், கறவை கன்று ஊர்ந்தானை - பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை, தந்தையும் ஊர்ந்தான் - அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்), முறைமைக்கு மூப்பு இளமை இல் - செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி, இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.

“வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுட .....

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்”

--- சிலப்பதிகாரம்.

“பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார்,

கிழமை பிறிதுஒன்றும் கொள்ளார், வெகுளின்மன்

காதன்மை உண்டே, இறைமாண்டார்க்கு ஏதிலரும்

ஆர்வலரும் இல்லை அவர்க்கு.”   --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால், பழமை - (இவர் நமக்கு அரசியலில்) தொன்றுதொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும், கடைப்பிடியார் - நிலைநிறுத்தார்,  கேண்மையும் பாரார் - (இவர் நமக்கு) நண்பர் என்பதையும் கவனியார், பிறிது - (அவை) ஒழிய, கிழமை - (இவர் நமக்கு) உரியவர் என்பதையும், ஒன்றும் கொள்ளார் – சிறிதும் நினையார், (ஆதலால்) இறை - அரசியலில், மாண்டார்க்கு - அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமை உண்டோ?,அவர்க்கு - அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலார் எனவும், ஆர்வலரும் - (இவர்) அன்பு உடையர் எனவும், இல்லை - கிடையாது.

அரசர் சினம் கொள்வாராயின், அயலார் எனவும் அன்புடையார் எனவும் பாரார் என்பதற்குச் சோழ மன்னன் ஒரு பசுவினது கன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். 


“மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன

மகிழ்வொடு தாங்கி, யாரேனும்

இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்,தன்

இருவிழி நீரினை உகுப்பான்,

அன்ன வெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று

அயின்றிடான், துயின்றிடான், எவரும்

நன்னகர் எங்கும் உளன் எனப் பகர

நாடொறும் இயங்குவோன் கோனே. ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகரெங்கும் காணும்படி வருவோன் மன்னன்.


 

“காது இறைவனுக்குக் கண் எனலான்,மெய் 

காண்குறான் எனுமொழி மாற்றி,

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் 

வகைவகை இனிதுகேட்டு அமைந்த

மேதினிக்கிழமை நீங்கிடுந் தன்மை 

விளையினும் நடுவில் நீங்காது

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே

பார்த்திபன் கடமையாம் அன்றோ.” ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  ஒற்றர் சொல்லுவது அன்றிப் பிறர் மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.

 



அன்பு என்பது மனிதப் பண்பு

அன்பு என்பது மனிதப் பண்பு

---


"துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்,

பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு"


கலித்தொகை என்னும் நூலில், புலவர் கபிலர் பாடிய பாடல் வரிகளின் விளக்கம் --- நெருப்புப் போலும் வெப்பம் உடைமையால் அடிபொறுக்க இயலாத கொடுமை உடைய காட்டில், துடிபோலும் வடிவுடைய கால்களைக் கொண்ட கன்று கலக்கிச் சேறாக்கிய சிறிது நீரையும், காதலியாகிய பெண்யானைக்கு முன்னே ஊட்டிவிட்டு, பிறகே தான் உண்ணும் ஆண்யானையும் உள்ளது.


ஐந்தறிவு உடைய விலங்குக்கே இத்தகைய அன்பு விளங்கும் என்றால், ஆறு அறிவு உடைய மனிதனுக்கு உள்ளத்தில் அன்பு விளங்கத்தானே வேண்டும். உண்மை அன்பு தன்னலம் கருதாது. தனது துயரைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன்னைச் சேர்ந்தோரின் துயரைத் துடைப்பது உயர்ந்த மனிதப் பண்பு ஆகும். 


“அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை, வன்பால்கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று” என்றார் திருவள்ளுவ நாயனார்.  உள்ளத்தில் அன்பு இல்லாமல், இல்லறத்தில் ஒருவன் பொருந்தி வாழ்வது என்பது, கொடிய பாலை நிலத்தில் உலர்ந்து வற்றிப் போய் நிற்கும் ஒரு மரமானது தளிர்த்து விளங்கியது என்பதைப் போன்றதாகும்.  பாலை வனத்தில் பட்ட மரம் தளிர்க்காது. அன்பு என்பது புறத்தில் காணப்படுவது அல்ல. “யாக்கை அகத்து உறுப்பு அன்பு” என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பு என்பது உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய உறுப்பு ஆகும். அது புறத்து உறுப்பு அல்ல.


“அன்பின் வழியது உயிர்நிலை, அஃது இல்லார்க்கு என்பு தோல் போர்த்த உடம்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதை கருத்துப் பொருந்தி உணர்தல் வேண்டும்.  உள்ளத்தில் பொருந்தி இருக்க வேண்டிய அன்பு ஒன்றுதான் உயிர்நிலை ஆகும். அன்பு இல்லாத ஒருனுக்குப் பொருந்தி உள்ள உடம்பு என்பது, உயிர் இல்லாத்தும், எலும்பைத் தோலால் மூடி இருப்பதும் ஆகிய உடம்பு. அப்படி என்றால், அது நடைப்பிணம் தானே.


பேச வராத ஊமைகளுக்கு, பழைமையான நூல்கள் என்ன பயனைத் தரும்? பார்வை அற்றவனுக்கு விளக்கால் என்ன பயன் விளையும்? அதுபோல, இந்த உலகில் பெரிய இடமும், நிறைந்த பொருளும், எவல் தொழில் செய்பவர்களும் நிறைந்து இருந்தாலும், அன்பு இல்லாதவனுக்கு அவைகளால் ஒரு பயனும் இல்லை என்கிறார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.


இராமாயணத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஒரு பாடலின் மூலம் கலித்தொகையில் கூறிய நிகழ்வைக் காட்சிப் படுத்தி நமக்குக் காட்குகிறார். பம்பை வாவிப் படலத்தில் ஒரு பாடல்....


“வார் அளித் தழை மாப் பிடி வாயிடை,

கார் அளிக் கலுழிக் கருங் கைம் மலை

நீர் அளிப்பது நோக்கினன், நின்றனன்,

பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான்.”


இதன் பொருள் ---


மிக்க பெருங்கருணைக்குப் பிறப்பிடமாக உள்ள இராமபிரான், கரிய வண்டுகள் மொய்க்கப் பெற்ற மதநீர்ப் பெருக்கை உடைய கரிய ஆண்யானைகள், நீண்ட குளிர்ந்த தழைகளை உண்ணும் பெரிய பெண்யானைகளின் வாயில் தண்ணீரை முகந்து கொடுத்து ஊட்டுவதை நோக்கி நின்றான்.

இராமபிரான் கருணையின் பிறப்பிடமானவன். 'கருணையின் நிலையும் அன்னான்' என்று கூறுவார் கம்பர். மதநீர்ப் பெருக்குடைய ஆண்யானை, தனது துணையாகிய பெண்யானை வருந்தா வண்ணம் நீர் ஊட்டி அன்பு காட்டுவதைக் கண்ட இராமன், அறிவும் ஆண்மையும் மிக்க தன்னால் சீதையின் துயர் நீக்கிப் பாதுகாக்க இயலாமை எண்ணி வருந்தி நின்றான் என்பதைக் குறித்த பாடல் இது.


054. பொச்சாவாமை - 09. இகழ்ச்சியின் கெட்டாரை

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அளவு கடந்த மகிழ்ச்சியின் காரணமாக ஒருவன் மிகுந்த செருக்குக் கொள்ளும்போது, முற்காலத்தில், அந்த மகிழ்ச்சியினால் உண்டாகிய மறதியால் கெட்டவர்களை நினைவில் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தமக்குப் பெரியதோர் செல்வம் கிடைக்குமானால், அந்த செல்வத்தின் மிகுதியால், அளவு கடந்த மகிழ்ச்சியை அடைந்து, செய்யவேண்டிய காரியங்களை மறந்து, செருக்குக் கொண்டு இருப்பதால், ஒருவன் கேட்டினை அடைவது திண்ணம். எனவே, அவ்வித மறப்பும், அதனால் உண்டாகின்ற கேடும் உண்டாகாது இருக்கவேண்டும் என்று எண்ணுகின்ற நல்லறிவினை உடையவன், முற்காலத்தில் இவ்வாறான அளவு கடந்த களிப்பினால், செய்யவேண்டிய காரியங்களைச் செய்யாது கேட்டினை அடைந்தவர்களது வரலாறுகளை எண்ணிப் பார்க்கவேண்டும்.

ஆற்றலின் களிப்பால் இரணியன் கெட்டான்.

வீரக் களிப்பால் சூரபதுமன் கெட்டான்.

காமக் களிப்பால் இராவணன் கெட்டான்.

மமதைக் களிப்பால் துரியோதனன் கெட்டான்.


களிப்பினால் கெட்டவர் வரலாற்றை, பின்வரும் பாடல் காட்டுவது காண்க.


“சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன்வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,


பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,


ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?


மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.”


    இப் பாடலில் குறித்துள்ளவர்கள் எல்லாருக்கும் அளவில்லாத செல்வமும் ஆற்றலும் வந்து அடைந்தது அவரவருடைய தவலிமையாலும், பிறப்பினாலுமே. அவர்கள் கேடு அடைந்த்தும் அவரவர் கொண்டு இருந்த அகந்தையால் தான். ஆக, இடும்பு, இடும்பைக்கு இடமாகும் என்பதை அறிக.


இதற்குத் திருக்குறள்...

“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம் தம்

மகிழ்ச்சியின் மைந்து உறும் போழ்து.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து --- அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது, 

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக --- முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க.

(காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் தம் மகிழ்ச்சியின் என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து'  என்றும் கூறினார். கெட்டாரை உளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து. எண்ணுக என்று பாடம் ஓதுவாரும் உளர்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“முப்புரத்தோர் வேவ உடன்இருந்த மூவரே

துப்பினால் கண்டுஅறிந்தார், சோமேசா! --- வெப்பால்

இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.”

இதன் பொருள்---

சோமேசா! தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து - அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது, இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக - முற்காலத்து அதனின் ஆய சோர்வால் கெட்டவர்களை நினைக்க,  வெப்பால் முப்புரத்தோர் வேவ - சிவபெருமானுடைய புன்சிரிப்பில் தோன்றிய தீயினால் திரிபுரத்தசுரர்கள் வெந்தொழிய, உடன் இருந்த மூவரே - அத் திரிபுரத்தசுரர்களுடன் வாழ்ந்திருந்த சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்னும் மூன்று அசுரர்களுமே, துப்பினால் கண்டு அறிந்தார் - சிவபூசை வலிமையினாலே உண்மையைக் கண்டு அறிந்து உய்ந்தனர் ஆகலான் என்றவாறு.

துப்பு - வலிமை. சிவபூசையின் பயனால் அவர்கட்கு அது விளைந்தது.

தாருகாட்சன், கமலாட்சன், வித்தியுன்மாலி என்னும் அசுரர் மூவர் மிக்க சிவபத்தியுடையார். தேவர்களைத் துன்புறுத்தியதுடன், பொன், வெள்ளி, இரும்பு ஆகிய இவற்றாலாகிய மூன்று அரண்களில் இருந்து எங்கெங்கும் பறந்து சென்று கீழிறங்கி உயிர்களுக்குக் கேடு செய்தனர். திருமால் புத்தனாய்த் தோன்றி அவர்கள் சிவபத்தி கெடப் போதித்தார்.  அதனால் அவர்களும் மயங்கினார்கள். அதன் பின் திருமாலாதி தேவர்கள் திருக்கயிலை சென்று சிவபெருமானை அடைந்து, அவர்கள் செய்யும் துன்பத்தை விண்ணப்பித்து அவர்களை அழிக்கவேண்டினார்கள். சிவபெருமான் அதற்கு இன்றியமையாத கருவிகள் அமைக்க என ஏவத் தேவர்கள் பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களை உருளைகளாகவும், மேலுவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவை அம்பாகவும், அக்கினியை அம்பின் நுனியாகவும் செய்து கருவிகள் அமைத்தார்கள்.  பெருமான் அவை கொண்டு பூரதமீது ஏறிச் சென்று திரிபுரத்தை அடைந்து, நகைத்த அளவில், அப்புரம் மூன்றும் வெந்து நீறாயின. அவ்வாறாக, அப்புரத்தாருள் மற்றையோரெல்லாம் வெந்து அழியவும், புத்தன் போதனையால் மயங்கிச் சிவபூசையைக் கைவிடாத சுதன்மன், சுபுத்தி, சிசீலன் என்னும் மூவரே பிழைத்துப் பெருமான் பணித்தவாறே காஞ்சியில் இலிங்கப் பிரதிட்டை செய்து பூசித்தபின் கயிலையில் இருவர் துவாரபாலகர்களாகவும், மற்றொருவர் முழா முழக்குபவராகவும் நியமிக்கப் பெற்றனர்.


இதனை,


“பூஆர்மலர் கொண்டு அடியார் தொழுவார் 

புகழ்வார் வானோர்கள்

மூவார்புரங்கள் எரித்த அன்று 

மூவர்க்கு அருள்செய்தார்

தூமாமழைநின்று அதிரவெருவித் 

தொறுவின் நிரையோடும்

ஆமாம் பிணைவந்து அணையும்சாரல் 

அண்ணா மலையாரே.”


என்னும் திருஞானசம்பந்தப் பெருமானாரின் அருட்பாடலாலும்,


“மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என்று ஏவிய பின்னை

ஒருவன் நீகரி காடு அரங் காக

மானை நோக்கிஓர் மாநடம் மகிழ

மணிமு ழாமுழக்க அருள் செய்த

தேவ தேவநின் திருவடி அடைந்தேன்

செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.”


என்னும் நம்பியாரூர் திருவாக்காலும்,


“உய்யவல் லார் ஒரு மூவரைக் காவல்கொண்டு,

எய்யவல் லானுக்கே உந்தீபற!

இளமுலை பங்கன் என்று உந்தீபற.”


என்னும் திருவாசகப் பாடலாலும்


“முப்பு ரங்களின் மூவர் புத்தன்

மொழித்தி றத்தின் மயங்கிடாது

அப்பு அணிந்தவர் தாள் பணிந்து அருள்

ஆற்றின் நின்றனர், ஆதலால்

பொய்ப்புரம் தபு காலை, நீற்றறை

நாவின் மன்னவர் போல்,எரி

தப்பி வாழ்ந்தனர், ஈசன் ஆணையில்

நிற்பவர்க்கு இடர் சாருமோ?.”


“சுதன்மன் என்று சுசீலன் என்று

சுபுத்தி என்று சொலப்படும்

அதன்மம் நீத்தஅம் மூவருக்கும்

அருள் சுரந்து, உமை பாகனார்

இதம் விளங்க வரங்கள் வேட்ட

விளம்புமின் என, அங்கு அவர்

பதம் வணங்குபு நின் திருப்பணி

வாயில் காப்பருள் என்றனர்.”

எனவரும் காஞ்சிப் புராணச் செய்யுட்காளாலும் அறிக.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“தண்ணார் சடைமுடியைத் தக்கன் இழ்ந்தான், அரனை

எண்ணாமல் அன்றோ? இரங்கேசா! --- மண்ணோர்

இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக, தாம்தம்

மகிழ்ச்சியில் மூந்து உறும் போழ்து.”

இதன் பொருள் ---

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! தக்கன் - தட்சப் பிரஜாபதி, அரனை எண்ணாமல் அன்றோ - சிவனை இகழ்ந்து மதிக்காமையினால் அல்லவோ, தண் ஆர் சடைமுடியை இழந்தான் - (தனது) குளிர்ச்சி பொருந்திய சடைத் தலையை இழந்தான், (ஆகையால், இது) தாம் தம் மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து - ஒருவர் தமது செல்வச் செருக்கில் இறுமாந்து இருக்கும்போது, இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக - அதனாலாகிய மறதியினால் இகழ்ந்து விட்டவர்களை (எப்படியேனும்) நினைக்கக் கடவர் (என்பதை விளக்குகின்றது).

கருத்து --- செல்வச் செருக்கினால் யாரையும் இகழ்ந்து மறந்து விடக் கூடாது.

விளக்கம் --- தக்கன் என்பவன் பரமசிவனுக்கு மாமன்.  அவன் தன் செல்வச் செருக்கினால் பரமசிவனை இகழ்ந்து மறந்து விட்டு ஓர் யாகம் செய்யத் தொடங்கினான். யாகம் நல்ல காரியம். ஆனாலும் அதைச் செய்தவன் அழுக்காறை மேற்கொண்டு இருந்தமையால்,  அவனுக்கு அது கெட்ட காரியமாகவே முடிந்தது. பரமசிவனைத் தவிர மற்றைத் தேவர்களுக்கெல்லாம் அவிப்பாகம் தரவேண்டி அவர்களை வரவழைத்திருந்தான். அவர்களும் அவனைப் போலவே எண்ணித் துணியாமல் யாகத்துக்கு வந்திருந்தார்கள். அது தெரிந்த சிவபிராற்குக் கோபம் மூண்டது. கோபமே உருவெடுத்து வந்து போல அகோர வீரபத்திரர் தோன்றினார். அவரை ஏவி யாகத்தை அழிக்கக் கட்டளை இட்டார் சிவபிரான். அவர் அவ்விடத்திற்குப் போய், யாகத்தை அழித்ததும் அன்றித் தக்கன் தலையையும் அறுத்து எறிந்தார். அவரைக் கண்டவுடனே மற்றைத் தேவர்கள் எல்லாம் கை இழந்தவர்களும் - கண் இழந்தவர்களும் - பல் இழந்தவர்களும் - மூக்கு இழந்தவர்களும் - நாக்கு இழந்தவர்களும் ஆகி ஓட்டம் பிடித்தார்கள். ஆகையால், ஒருவன் தன் மகிழ்ச்சியில் மைந்துறும்போது இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளவேண்டும். இல்லாவிட்டால் தக்கனுக்கு வந்த கேடு வரும் என்க.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையினால்

பொச்சாவாப் போற்றித்தாம் நோற்பாரை--மெச்சா(து)

அலந்துதம் வாய்வந்த கூறும் அவரின்

விலங்குகள் நல்ல மிக.”    --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

இக்காலத்து இவ்வுடம்பு செல்லும் வகையின் - இவ்வுடல் இப்பொழுதே அழியும் தன்மையாயிருத்தலை அறிந்து, பொச்சாவாப் போற்றி நோற்பாரை - மறவாமல் குறித்துக் கொண்டு பாவம் தங்கண் நிகழாவழித் தம்மைப் பாதுகாத்துத் தவம் முயல்கின்றவரை, மெச்சாது - புகழாமல், அலந்து - நொந்து, தம் வாய் வந்த கூறும் அவரின் - தம் வாயில் வந்த சொற்களைச் சொல்லி இகழுகின்றவர்களைக் காட்டிலும், விலங்குகள் மிக நல்ல - மிருகங்கள் மிக நல்லனவாகும்.


054. பொச்சாவாமை - 8. புகழ்ந்தவை

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், " உயர்ந்தவை என்று சான்றோரால் புகழப்பட்ட செயல்களை எண்ணிக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் இகழ்ந்தார்க்கு எழுபிறப்பிலும் நன்மை என்பது இல்லை" என்கின்றார் நாயனார்.

புகழ்ந்த செயல்களாவன - ஆறிவு, ஆண்மை, பொருள் என்னும் மூன்று வகையான ஆற்றல்களும், கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், தண்டித்தல் என்னும் நால்வகை உபாயங்களும் கூடிய இடத்து செய்யக்கூடிய தொழில்கள். அவை, எளிய முயற்சியால் முடிபவை. செய்தால் பயன் விளைபவை, பெரும்பயன் தருபவை, ஐயத்திற்கு இடம் இல்லாதவை, முடித்த பின் இன்பம் தருபவை ஆகிய ஐந்து கூறுகளை உடைய தொழில்கள் ஆகும்.

இவற்றில் இருந்து வழுவியவருக்கு நரகத் துன்பமே வரும். எனவே, "எழுமையும் இல்" என்றார். ஏனவே, செயலில் இகழ்ச்சி கூடாது.


இதற்குத் திருக்குறள்...

“புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும், செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் --- நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, 

செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.

(அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)


பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியாலம்...

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே;

முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;

பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்

வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.    --இனியவை நாற்பது.

இதன் பொருள் --

வெற்றி வேல் வேந்தற்கு - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய அரசனுக்கு, ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிது - ஒற்றராலே எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை) ஒற்றுவித்து,  அவற்றின் பயனை ஆராய்தலின் பெருமை, இனிது; முன் தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிது - தான் குற்றத்தை முன்னர் ஆராய்ந்து தண்டஞ் செய்தல் மிக இனிது; பற்று இலனாய் பல் உயிர்க்குப் பாத்து உற்றுப் பாங்கு அறிதல் இனிது - ஒருவர்க்குப் பற்றிலனாய்,  எல்லார்க்கும் அப் பற்றினைப் பகுத்து, எல்லாரிடத்தும் தானும் சென்று குற்றம் உளவாயின் அறிதல் இனிது.


48. ஞானிக்குத் துன்பம் இல்லை - துட்டனுக்கு இன்பம் இல்லை

 “தூய அறிவினர்முன் சூழ்துன்பம் இல்லையாம்;

காயும் விடம் கருடர்க்கு இல்லையாம்; - ஆயுங்கால்,

பன்முகன்சேர் தீமுன் பயில்சீதம் இல்லையாம்;

துன்முகனுக்கு உண்டோ சுகம்.” -- நீதிவெண்பா


ஆராய்ந்து பார்க்குமிடத்து, கொல்லுகின்ற பாம்பின் விடம் கருடனுக்கு ஒன்றும் செய்வதில்லை.  அதுபோல, நல்ல அறிவு உடையோருக்கு வரும் துன்பம் ஒன்றும் தீமை செய்வதில்லை.  நாலாபக்கங்களிலும் சுடர்விட்டு எரியும் நெருப்பின் முன் குளிர்ச்சி ஏதும் இல்லை. அதுபோல, தீவினையாருக்கு இன்பம் என்பது உண்டோ? (இல்லை.)


109. இரக்கப் போனாலும் சிறக்கப் போ


“இரக்கத்தால் உலகுஆளும் தண்டலையா

     ரே! சிவனே! எந்த நாளும்

இரக்கததான் புறப்பட்டீர்! என்றனையும்

     இரக்கவைத்தீர்! இதனால் என்ன?

இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீ

     தென்றாலும், இன்மை யாலே

இரக்கப்போ னாலுமவர் சிறக்கப்போ

     வதுகருமம் என்னல் ஆமே.”


இதன் பொருள் ---


     இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே சிவனே – அருட்பெருங் கருணையால் உலக உயிர்களைக் காத்து ஆண்டு அருள் புரிபவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில்  எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளே! எந்தநாளும் இரக்கத்தான் புறப்பட்டீர் – நீர் எப்போதும் பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சை எடுக்கச் செல்வீர். என் தனையும் இரக்கவைத்தீர் - என்னையும் இரந்து உண்ண அமைத்து விட்டீர்!, இதனால் என்ன - இவ்வாறு செய்ததனால் என்ன பயன்?, இரக்கத்தான் அதிபாவம் – பிச்சை எடுப்பது பெரிய பாவம். (ஆகையால்) இரப்பது தீது – இரந்து உண்டு வாழ்வது தீயது, என்றாலும் - என்று மேலோர் கூறினாலும், இன்மையாலே இரக்கப் போனாலும் - வறுமையாலே பிச்சை எடுக்கச் சென்றாலும், அவர் சிறக்கப் போவது கருமம் என்னல் ஆமே - அவ்வாறு இரக்கப் போவோர் சிறப்புடன் செல்வது தகுதி என்று கூறுதல் வேண்டும்.

     "இரக்கப் போனாலும் சிறக்கப் போ" என்பது பழமொழி. பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் நல்அறிவு நல்லொழுக்கங்களில் தவறுதல் கூடாது. கண்ணியமான முறையில் பிச்சை கேட்கவேண்டும். பொருள் உள்ளோரைத் தேடிச் சென்று இரத்தல் கூடாது. அருள் உள்ளம் கொண்டோரை நாடி இரந்து உண்ணுதல் சிறப்பு. இரப்போர்க்கு ஈவது சிறப்பு. ஈகை உள்ளம் கொண்டோரிடம் இரத்தலும் சிறப்பு எனவே, இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது” என்றார்.


பாடல் 24

 


"உய்யும் மருந்துஇதனை உண்மின் எனவுற்றார்

கையைப் பிடித்துஎதிரே காட்டியக்கால், - பைய

எழுந்து,இருமி, யான்வேண்டேன் என்னாமுன், நெஞ்சே,

செழுந்திரும யானமே சேர்."

இதன் பொருள் ---

    உய்யும் மருந்து – இறவாமல் வாழ்வதற்கு உரிய மருந்து,  இதனை உண்மின் என – இதனை உண்ணுங்கள் என்று, உற்றார் – சுற்றத்தார், கையைப் பிடித்து எதிரே காட்டியக்கால் – கையினைப் பிடித்து எதிரே காட்டி நிற்கும்போது, பைய எழுந்து – மெல்லப் படுக்கையிலு இருந்து எழுந்து, இருமி – எழுகின்ற முயுற்சியால் இருமல் உண்டாகிய நிலையில், யான் வேண்டேன் என்னா முன் – உண்ண முடியாமையால் எனக்கு இது வேண்டாம் என்று சொல்லும் நிலை வருவதற்கு முன்பாகவே, நெஞ்சே – நெஞ்சமே! செழும் திருமயானமே சேர் – செழிப்பு உடைய திருமாயனம் என்னும் திருத்தலத்தைச் சென்று அடைவாயாக.

    நோய் முற்றிய நிலையில் படுக்கையில் கிடப்போர்க்கு அவரது சுற்றத்தார் எவ்வகையிலாவது தேற்றி விட வேண்டும் என்னும் எண்ணத்தால், நோயில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கு உரிய மருந்து இது என்று சொல்லி, நோயின் மிகுதியால் கண்மூடிப் படுத்துக் கிடக்கும் ஒருவரை, அவரது கையைப் பிடித்து இந்த மருந்தினை உண்ணுங்கள் என்று கையைப் பிடித்துக் காட்டிய நிலையில், படுக்கையில் இருந்து மெல்ல எழும்போது, இயலாமையால் இருமல் வந்து நிற்கும். மருந்தினை உண்ண மனம் வராமையால் இது எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நிலை உண்டாகும். அந்த நிலை வராத முன்னரே, திருமாயனம் என்று சொல்லப்படும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருளை வழிபட்டு உய்ய வேண்டும்.

'திருமயானம்' என்பது சில திருத்தலங்களில் உள்ள திருக் கோயில்களைக் குறிக்கும். திருக் கச்சி மயானம், திருக் கடவூர் மயானம்,  திரு நாலூர் மயானம் ஆகிய இவை காண்க.


054. பொச்சாவாமை - 07. அரிய என்று

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "மறவாத மனத்தோடு, செய்யும் செயலை நன்கு மதித்து எண்ணிச் செய்தால், செய்வதற்கு அரிய செயல்கள் என ஆகாதவை எவையும் இல்லை" என்கின்றார் நாயனார்.

உள்ளத்தில் மறதி இல்லாதவர்களுக்கு, செயலின்மேல் இடைவிடாத நினைப்பு இருக்கும். இருக்கவே, அதனை முடித்தற்கு உரிய உபாயங்களைத் தேடிக் கொள்வர். கருமத்தில் கண்ணாக உள்ளவர்க்கு, செயலானது எளிதில் முடியும்.


இதற்குத் திருக்குறள்...

“அரிய என்று ஆகாத இல்லை, பொச்சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அரிய என்று ஆகாத இல்லை --- இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை, 

பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.

(பொச்சாவாத என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

“பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளலாகா

மறந்தேயும் மாண்பு ஒழியும் நெஞ்சே! -சிறந்த

ஒழுக்கத்தோடு ஒன்றி உயப்போதி அன்றே

புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து. ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மாண்பு ஒழியும் நெஞ்சே – பெருமை இல்லாத நேஞ்சே!, பிறந்த இடம் - இதற்கு முன் பிறந்த இடங்களை, நினைப்பின் - நீ நினைந்து பார்த்தாயானால், மறந்தேயும் பேர்த்து உள்ளலாகா - அவற்றை மறந்தும் திரும்ப எண்ணுதலாகாது (ஆதலின் நீ), புழுக்கூட்டுப் பொச்சாப்பு உடைத்து - புழுக்கள் கூடி வாழும் இடமாகிய இவ்வுடலைப் பெற்றதால் உண்டான மறதியைக் கெடுத்து, சிறந்த ஒழுக்கத்தோடு ஒன்றி - பெரியோர் ஒழுக்கத்தில் நின்று, உயப் போதி - துன்பத்தினின்றும் உய்தி பெறுவாயாக.


054. பொச்சாவாமை - 05. முன்னுறக் காவாது

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "வரக் கூடிய துன்பங்களை முன்னரே அறிந்து, தன்னைக் காத்துக் கொள்ளமால் மறந்து இருந்தவன், பின்னர் துன்பம் வந்த காலத்தில் அவற்றைத் தடுத்துக் கொள்ள இயலாமையால், தனது பிழைக்கு வருந்துவான்" என்கின்றார் நாயனார்.

முன்னரே அறிந்து காக்காவிட்டால், அவனது சோர்வினை எதிர்பார்த்து இருந்த பகைவர் காலம் அறிந்து தாக்குதல் கூடும். பகைவர் தாம் வரும்போது சொல்லிவிட்டு வரமாட்டார். அக்காலத்தில், இவனுக்கு ஆற்றல் இருந்தாலும், தக்க துணையைத் தேடிக்கொள்ள அவகாசம் இல்லாமையால், காத்துக் கொள்ள இயலாமல் போய்விடும்.


இதற்குத் திருக்குறள்...

“முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை

பின் ஊறு இரங்கி விடும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முன்னுறக் காவாது இழுக்கியான் --- தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், 

பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் --- பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.

(காக்கப்படும் துன்பங்களாவன: சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், இரங்கிவிடும் என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மறந்து மறந்து ஈசன் மலரடியைப் பேணாது

இறந்து இறந்து மாலும் இடர் எய்தும், ---  அறிந்துஅறிந்து

முன்உறக் காவாது இழுக்கியான், தன் பிழை

பின் ஊறு இரங்கி விடும்.”

திருமால் தசாவதாரங்கள் எடுத்தமையை நினைந்து, இவ்வாறு பாடினார்.

ஒருகாலத்திலே தேவர்கட்கும் அசுரர்கட்கும் போர் மூண்டது.  அப்போரில் தேவர்கள் தோல்வியடைந்து திருமாலிடம் சென்று தங்களுடைய துன்பங்களைக் கூறி முறையிட்டுக் கொண்டார்கள்.  திருமால் அசுரர்களோடு போருக்குச் சென்று அசுரர்களை விரட்டியடித்தார். திருமாலோடு போர் செய்ய முடியாத அசுரர்கள் தங்களுடைய குலகுருவாகிய சுக்கிராசாரியரின் தந்தையான பிருகு முனிவருடைய இருப்பிடத்தை அடைந்து, முனிவருடைய மனைவியாகிய கியாதி என்பவளிடம் அடைக்கலம் புகுந்தனர்.  கியாதி அவர்களைக் காப்பதாகக் கூறி மறைத்து வைத்தனள்.  திருமால் துரத்திக்கொண்டே அங்கு வந்தார். கியாதி உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்ததையும் பொருட்படுத்தாமல், அவள் தமக்கு மாமியாக இருத்தலோடு முனிவருடைய மனைவியாகவும் உள்ளாள் என்பதையும் நோக்காமல் அவளையும் கொன்று உள்ளே போய் அசுரரையும் கொன்று சென்றார். இச் செய்தியை உணர்ந்த பிருகு முனிவர், "திருமாலே, நீ நிலவுலகத்தின்கண் பத்துப் பிறவிகளை எடுப்பாயாக" என்று வசவுரை வழங்கினார். இவ்வசவுரையை உணர்ந்த திருமால் இதனைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபிரானைப் பூசித்து வழிபட்டார். ஆயினும் முனிவருடைய தீ மொழியிலிருந்து விடுபட முடியவில்லை. நிலவுலகில் பத்துப் பிறப்புக்கள் எடுக்க வேண்டியதாகவே முடிந்துவிட்டது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“கோடியர்தன் போல்தோன்ற குன்றிமதர்க் கும்பமுனி

மூடுவெண் நோய்உற்றான், முருகேசா! - நாடுங்கால்

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை

பின்ஊறு இரங்கி விடும்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, மதர்க் கும்பமுனி - களிப்பினை உடைய அகத்திய முனிவர், கோடியர் தன் போல் தோன்ற குன்றி - கோடி அகத்தியர்கள் தம்போல் காணப்பட, அதனால் மனம் சோர்ந்து, மூடு வெண்நோய் உற்றான் - உடலெல்லாம் மூடுவதாகிய வெண்குட்ட நோயைப் பெற்றார்.  நாடுங்கால் - ஆராயுமிடத்திலே, முன் உறக் காவாது - காக்கப்பட வேண்டிய துன்பங்களை எல்லாம் அவை வருவதற்கு முன்னரே காத்துக் கொள்ளாது, இழுக்கியான் - மறந்து சோர்ந்து இருந்தவன், பின் தன் பிழை ஊறு இரங்கி விடும் - பிறகு தன் தவற்றினாலே இடையூறு உண்டாகியதை எண்ணி வருந்துவான்.

ஆணவக் களிப்புக் கொண்டிருந்த அகத்திய முனிவர், தம்போல் கோடிக்கணக்கான அகத்தியர் தோன்றக் கண்டு அதனால் உள்ளம் குன்றி வெண்நோய் அடைந்தார். காக்க வேண்டிய இடையூறுகளை எல்லாம் முன்னரே காத்துக் கொள்ளாமல் மறந்திருந்தவன் பிறகு தன் பிழையால் இடையூறு ஏற்பட்டதைக் கண்டு உள்ளம் இரங்குவான் என்பதாம்.

அகத்திய முனிவர் பல சிவப்பதிகளையும் வணங்கித் திருக்கோடிகா என்னும் பதியை அடைந்தார். மனத் தூய்மையோடு நாளும் சிவபெருமானைப் பூசித்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்குள்ள பெரியோர்களைத் தாம் பணியாமல் அவர்களை ஏவல் கொண்டார். 'கற்பில் சிறந்த மனைவி வாய்க்கப்பெற்ற நம் போல் சிறந்தவரில்லை' என்னும் செருக்கையும் உள்ளத்திலே கொண்டார்.  

ஒருநாள் சிவபெருமானைப் பூசிக்கும்போது சிவபெருமான் அகத்தியருடைய செருக்கை அடக்க எண்ணினார். சிவலிங்கத்திலே கோடி அகத்திய முனிவர் மனைவியரோடு விரைவாகத் தோன்றி அதைப் பூசித்து அதிலே மறையும்படி ஒரு புதுமையைக் காட்டி அருளினார். அதனை நோக்கிய அகத்திய முனிவர் நாணம் கொண்டார். அதனால் உடல் முழுவதும் விளர்த்தது. தம்முடைய தீய எண்ணத்தைப் பலவாறாக இகழ்ந்து கொண்டார். உருவிலி (அசரீரி) வாக்குப்படி திருவாவடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு அந்நோய் நீங்கப் பெற்றார்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தன்னுடம்பு தாரம் அடைக்கலம் தன்னுயிர்க்கென்

றுன்னித்து வைத்த பொருளோ டிவைநான்கும்

பொன்னினைப் போல்போற்றிக் காத்துய்க்க உய்க்காக்கால்

மன்னிய ஏதந் தரும்.” --- ஆசாரக்கோவை.

இதன் பொருள் ---

தன் உடம்பு - தன்னுடைய உடம்பும், தாரம் - மனைவியும். அடைக்கலம் - அடைக்கலமாக வைத்த பொருளும், தன் உயிர்க்கு என்று - தன் உயிர்க்கு உதவியாகுமென்று, உன்னித்து - நினைத்து, வைத்த பொருளோடு – சேர்த்து வைத்த பொருளும், இவை நான்கும் - இந்த நான்கையும், பொன்னினைப் போல் - பொன்னைக் காப்பதுபோல, போற்றி காத்து உய்க்க - ஆதரித்துப் பாதுகாத்து ஒழுகுக, உய்க்காக்கால் - அவ்விதம் பாதுகாத்து ஒழுகாவிடின், மன்னிய - மிகுந்த. ஏதம் - துன்பத்தை, தரும் - கொடுக்கும்.

தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும்.



054. பொச்சாவாமை - 04. அச்சம் உடையார்க்கு

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "உள்ளத்தில் அச்சம் உடையவர்க்கு எந்த ஒரு அரணாலும் பயனில்லை; அதுபோல, நல்ல செல்வத்தைப் படைத்தவராக இருந்தாலும், உள்ளத்தில் மறதியை உடையவர்க்கு, அவர் படைத்துள்ள செல்வத்தால் எவ்வகையிலும் நன்மை இல்லை" என்கின்றார் நாயனார்.

பிற காவல்கள் ஒருவனுக்கு அமைந்து இருந்தாலும், உள்ளத்தில் சோர்வு உடையவனுக்கு அவற்றால் எந்தவிதமான பயனும் இல்லை. அதுபோலவே, நிறைந்த செல்வம் உடையனாய் இருந்தாலும், அதன் பயனை அறியாது உள்ளத்தில் சொர்வு கொண்டு இருப்பவனுக்கு, அவனது செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை.


இதற்குத் திருக்குறள்..

“அச்சம் உடையார்க்கு அரண் இல்லை, ஆங்கு இல்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அரண் அச்சம் உடையார்க்கு இல்லை --- காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை, 

ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.

(நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.)



பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்.

“அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற

இலையின்கண் நீர் நி(ல்)லாது ஆகும்--அலைவில்

புலன்களில் நிற்பினும் பொச்சாப்பு இலரே,

மலங்கடி வாளா தவர்க்கு.”    ---  அறநெறிச்சாரம்

இதன் பொருள் ---

அலை புனலுள் நிற்பினும் - அலைகளையுடைய நீரிலே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண் - தாமரை இலையிடத்து, நீர் நில்லாது ஆகும் - நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவில் புலன்களில் நிற்பினும் -சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு - முனிவர்களை, கடிவு மலம் ஆளா - அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமை கொள்ள மாட்டா; பொச்சாப்பு இலர் – அந்த அறவோர்களும் மறதியால் கூட அவற்றின் வயப்படுதலும் இலர்.


47. வினையின் பயன் செய்தவனையே சாரும்

 “தானே புரிவினையால் சாரும் இருபயனும்,

தானே அனுபவித்தல் தப்பாது, - தான்நூறு

கோடிகற்பம் சென்றாலும், கோதையே! செய்தவினை

நாடிநிற்கும் என்றார் நயந்து.” -- நீதிவெண்பா.


பெண்ணே! எண்ண முடியாத கோடி கோடி யுகங்கள் கடந்து விட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகளின் பயன் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் கூறுவர். ஆதலால், ஒருவன் தானே செய்த நல்வினை தீவினை என்னும் இருவினையினால் வந்து சேரக் கூடிய புண்ணிய பாவப் பயன்களும், செய்த அவனே அடைந்து அனுபவித்தல் தவறாது.


(புரிவினை - செய்த நல்வினை தீவினை இரண்டும்.  இருபயன் - இன்பமும் துன்பமும். கற்பம் - ஊழி, யுகம்.)


108. கல்யாணப் பஞ்சம் இல்லை

 


சலியாமல் தண்டலையில் தாயகனார்

     அருள்கொண்டு தருமம் செய்யப்

பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்

     ஈந்தவைதாம் போக மீந்தால்

மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்

     விளைந்திடும் நன்மாரி ஆகும்!

கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்

     இல்லையொரு காலுந் தானே.


இதன் பொருள் ---

        தண்டலையில் தாயகனார் அருள்கொண்டு சலியாமல் தருமம் செய்ய – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில்  எழுந்தருளிய தாயகனார் ஆகிய சிவபரம்பொருளின் திருவருளை வாழ்த்தி உள்ளத்தில் சோர்வு கொள்ளாமல் அறச் செயல்களைச் செய்ய, கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள் - உழவுத் தொழிலிலே அழகுறக் கிடைத்த செல்வத்தில், ஈந்தவை தாம் போக மீந்தால் - (தென்புலத்தாருக்கும் தெய்வத்திற்கும் விருந்தினருக்கும் சுற்றத்தாருக்கும் தனக்கும் அரசனுக்கும் என ஆறு பங்காக்கிக்) கொடுத்தவை போக மிச்சமானால், மலிவாகிச் செல்வம் உண்டாம் - மிகுதியாகிச் செல்வம் கிடைக்கும்; வயல்முழுதும் விளைந்திடும் நன்மாரி ஆகும் - நிலம் எங்கும் விளையத் தக்க மாரியாக அந்த அறம் இருக்கும், கலியாணப் பஞ்சம் இலை - அவர்கள் வீட்டிலே மங்கல நிகழ்வுகள் குறைவில்லாமல் நடைபெறும், களப்பஞ்சம் ஒருகாலும் இல்லை - விளைவு கொண்டு நெல்லடிக்கும் களத்திற்கும் ஒருபோதும் வறுமை இராது.

அறநெறியில் வழுவாமல் வாழ்வோர் எல்லா நலங்களையும் பெற்று வாழ்வர் என்பது சொல்லப்பட்டது. நமது பழந்தமிழரின் வாழ்வியல் நெறி இதுவே ஆகும். இல்லறத்தில் நிற்கின்ற ஒருவர், மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினர் இடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே தலையானது ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

 

"தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்றுஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை".

 என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 தென் --- அழகு, ஞானம், சிறப்பு. புலம் --- அறிவு.

         தென்புலத்தார் என்பது, மெய்யறிவு உடையவர், சான்றோரைக் குறித்தது என்கின்றார், கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

         தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையில் இருப்பவர் என்பது பொருள். இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதனால், நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களைத் தென்திசையில் உள்ளவர் எனக் கூறுவது மரபு. பொதுவாக சுடுகாடு/இடுகாடு என்பது, ஓர் ஊரின் தெற்குத் திசையில் அமையும். இதுவும் தென்புலம் என்ற வழக்குக்குக் காரணமாகலாம்.

         நம்மோடு வாழ்ந்து இருந்து மறைந்த முன்னோர்களைத் தென்புலத்தார் அல்லது பிதிரர் என்போம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் தேவசாதியர் என்கின்றார் பரிமேலழகர். அவர்க்கு இருக்கும் இடம் தெற்கு என்பதால் தென்புலத்தார் எனப்பட்டார். இறந்து போனவரது புத்திரர் முதலியோர் செய்யும் கருமங்களினால் மகிழ்ச்சி உற்று, இறந்தவர்க்கும் அவரது இனத்தவர்க்கும் நேர்ந்த துர்க்கதியை நீக்கவும், நற்கதியை அளிக்கவும் வல்ல ஒருவகை தேவசாதியார் பிதிர்க்கள் எனப்படுவர். இவர்கள் இயற்கைத் தேவர்களில் ஒரு வகையினராய் இருத்தல் பற்றி, பிதிரராவார் படைப்புக் காலத்தில் பிரமனால் படைக்கப்பட்டதோர் கடவுள் சாதி என்று கூறப்பட்டது. இயற்கைத் தேவர்கள் அல்லாதார், கருமத் தேவர்கள் எனப்படுவர். அவர்கள், புண்ணியத்திற்கு ஏற்ப, சுவர்க்காதி போகங்களை அனுபவித்து, புண்ணியம் கழிந்த உடனே, அவ்விடத்தினின்றும் நீங்கி விடுபவர்கள். 

        இல்லறத்தானின் கடமைகளில் ஒன்று, நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை, குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவர்களும் அன்பிற்குரியவர்களும் இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதல் ஆகும். இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினை ஆகும். தென்புலத்தாரை நினைத்து அடையாள முறையில் சில உணவுகளைப் படைத்து, அவர் பெயரால், இரப்போர்க்கு சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல் ஆகும். நம்முடைய வாழ்க்கை முறையில், முன்னோர்களை என்றும் மறத்தல் கூடாது. எனவேதான், திருவள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார். "தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்" என்பது புறநானூறு. இதனால்,முன்னோரை வழிபடுகின்ற நல்ல புதல்வர்களைப் பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

     விருந்து என்பது சுற்றத்தாரையும், நண்பர்களையும் குறிக்காது. விருந்து என்ற சொல்லுக்கு, புதிதாய் வருபவரை உணவளித்துப் போற்றுதல் என்று பொருள். விருந்தினர் என்றால், புதியவர், அதிதி என்ற பொருள். 

 “அட்டுஉண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்றும்

அட்டு உண்ணா மாட்சி உடையவர், --- அட்டு உண்டு

வாழ்வார்க்கு வாழ்வார் அதிதிகள் என்று உரைத்தல்,

வீழ்வார்க்கு வீழ்வார் துணை. “      --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் --- 

        சமைத்து உண்டு வாழும் இல்லறத்தார்க்கு, விருந்தினர் என்போர், எந்தக் காலத்திலும் சமைத்து உண்டு வாழ இயலாத பெருமையினை உடைய துறவறத்தினரே ஆவார். சமைத்து உண்டு வாழும் இல்லறத்தாருக்கு, அவ்வாறு வாழும் இல்லறத்தாரே விருந்தினர் ஆவார் என்று சொல்லுதல், மலை உச்சியில் இருந்து நிலத்தின் மீது விழுகின்றவர்க்கு, அவ்வாறு விழாமல் நின்றவரே துணை ஆவார் என்று எண்ணுதல் போன்றது ஆகும்.

     "ஓர் இராத்திரி பரியந்தம் புதிதாக வந்தவன் அதிதி எனத் தக்கவன். நாள்தோறும் வாராது, ஒரு காலத்து வருபவனுக்கு அதிதி என்று பெயர்" என்று மனுநூல் சொல்லுகின்றது. "அறவோர்க்கு அளித்தலும்,அந்தணர் ஓம்பலும்,தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும்" என்று சிலப்பதிகாரம் கூறுவதால், தொன்றுதொட்டே விருந்தினரை எதிர் கொள்ளுதல் இல்லறத்தானுடைய கடமை ஆயிற்று என்பது பெறப்படும்.

     இல்லறத்திற்கு உரிய நெறிகளிலே நின்று வாழ்ந்தவர்கள் நமது முன்னோர்கள் என்பதை,

 

“அரசுகொள் கடன்கள் ஆற்றி 

      மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி 

      குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி 

      விளங்கிய குடிகள்ஓங்கி

வரைபுரை மாடம் நீடி மலர்ந்து 

      உள பதிகள் எங்கும்.”

 எனப் பெரியபுராணத்தில், திருநாட்டுச் சிறப்பு என்னும் பகுதியில் வரும் பாடல் கூறும்.

 இதன் பொருள் --- 

        (உழவர்கள் தாங்கள் அறுவடை செய்து குவித்து வைத்துள்ள நெல்லில்) அரசர்க்குச் செலுத்தவேண்டிய ஆறில் ஒரு பங்கு கடமையைச் செலுத்திய பின், எஞ்சிய விளைவைக் கொண்டு,முதலில் செய்யத் தக்கன ஆகிய அறங்களை விரும்பிச் செய்து, வழிபாட்டிற்கு உரிய கடவுள் பூசையைப் பாராட்டிச் செய்து, தென்புலத்தார்களையும் விருந்தினரையும் ஒழுக்கமுடைய சுற்றத்தாரையும் ஓம்பி, அதனால் விளக்கம் பெறும் குடிகளால் செழுமையாக அமைக்கப்பட்ட மலைபோன்ற மாடங்களை உடைய ஊர்கள் எங்கும் நிறைந்திருப்பது சோழ நாடு.

      அரசுகொள் கடன்கள் ஆற்றுதல், அரசுக்குச் சேரவேண்டிய பகுதியாகிய ஆறில் ஒரு பங்கு இறைப்பொருளின் கடமையைச் செலுத்துவது ஆகும். இறைப் பொருளை முறையாகச் செலுத்துதல் குடிமக்களின் கடமையாகும். அவை காலத்தாலும் இடத்தாலும் மற்றும் பலவற்றாலும், வேறு வரி வகைகளும் கூட்டி,மேலும் பலவாய்ப் பின்னரும் அதிகரிக்கக் கூடும் என்பதால் "கடன்கள்" என்றும் சொல்லப்பட்டது. இது குடிகளின் கடமைகளில் முதல் கடமையாகும். எனவேதான், தெய்வத்தின் முன்னர் வைத்து முதலில் கூறப்பட்டது. 

      வரிகொடா இயக்கம் முதலிய இக்காலத் தோற்றங்கள், அந்நாள் தமிழ்மக்களுக்கு உடன்பாடு அல்ல என்பது இதனால் விளங்கும்.

      வருவாயில் ஒரு பங்கை அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியாகச் செலுத்தி, எஞ்சியதைக் கொண்டு,  தென்புலத்தார்,  தெய்வம், விருந்து ஒக்கல், தான் என்னும் ஐம்புலத்து ஆறினை ஓம்பினார்கள் மக்கள் என்று அறியப்படுகின்றது. ஆக, வருவாயை ஆறு பங்காகப் பிரித்து, ஒரு பங்கினை அரசுக்குச் செலுத்தி,  எஞ்சியதைக் கொண்டு அறநெறியில் வாழ்ந்தார்கள்.

 

      திருவிளையாடல் புராணத்தில் வரும் பாடல்களாலும்,  நமது முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நன்கு உணரலாம்.

 

“கற்றை வை களைந்து தூற்றி,

         கூப்பி, ஊர்க் காணித் தெய்வம்,

அற்றவர்க்கு அற்றவாறு ஈந்து,

         அளவை கண்டு, ஆறில் ஒன்று

கொற்றவர் கடமை கொள்ள,

         பண்டியில் கொடுபோய்த் தென்னாடு

உற்றவர்,சுற்றம்,தெய்வம்

         விருந்தினர்க்கு ஊட்டி உண்பார்.”

 

        பாண்டி நாட்டிலே வாழ்ந்த குடிகளைப் பற்றிக் கூறுகின்ற இப் பாடலின் பதப்பொருள் ---

       கற்றை வை களைந்து தூற்றி - அறுவடை செய்து கற்றையாக வைக்கப்பட்டுள்ள வைக்கோலைக் கட்டு நீக்கி அடித்து, பதர் போகத் தூற்றி,  கூப்பி - நெல்லைப் பொலிகளாகக் குவித்து வைத்து, (அவ்விடத்திலேயே) ஊர்க் காணித் தெய்வம் - கிராம தேவதைகளுக்கும்,  அற்றவர்க்கு - வறியவர்களுக்கும்,  அற்றவாறு ஈந்து - வரையறுத்தபடி கொடுத்து, அளவை கண்டு - அளந்து பார்த்து, கொற்றவர் கடமை ஆறில் ஒன்று கொள்ள - மன்னருக்கு இறைப்பொருளாக ஆறில் ஒரு கூறு கொள்ளக் கொடுத்து,  பண்டியில் கொடுபோய் - மிகுதியை வண்டிகளில் கொண்டு போய் தமது இருப்பிடத்திலே சேர்த்து,  தென்னாடு உற்றவர் - தென்புலத்தைச் சேர்ந்தவர்களையும், சுற்றம் - சுற்றத்தாரையும்,  தெய்வம் - தேவரையும்,  விருந்தினர்க்கு - விருந்தினரையும்,  ஊட்டி  -உண்பித்து,  உண்பார் - (அந்நாட்டினர்) தாமும் உண்பார்.

 

“பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை அந்த

நன்மலை மானக் கூப்பி நல்கிப் பல் குடியும் ஓம்பித்

தென்மலைக் கிழவன் தெய்வம் தென்புல வாணர் ஒக்கல்

தன்மனை விருந்து காத்துத் தருக்கினால் இருக்கும் நாளில்.

                  --- தி.வி.புராணம், மேருவைச் செண்டால் அடித்த படலம்.

 இதன் பொருள் --- 

      பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை - மேருமலைத் தெய்வம் ஆகிய சிவபரம்பொருள் கொடுத்த அத் தூய்மையாகிய பொருளை, அந்த நல்மலை மானப் கூப்பி - அந்த நல்ல மேருமலையைப் போலக் குவித்து, பல் குடியும் நல்கி ஓம்பி - பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து, தென்மலைக் கிழவன் -பொதிகை மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி, தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்து காத்து - தெய்வத்தையும், தென்புலத்தாரையும், சுற்றத்தாரையும், தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் - களிப்புடன் இருக்கும் காலத்தில்.         

 

“மின்னார் சடையான் தமர்,ஆய்ந்தவர், வேதச் செல்வர்,

தென்னாடர் தெய்வம், விருந்து, ஒக்கல்,செறிந்து நட்டோர்,

முன்னாம் எவர்க்கும் முகில்போல் வரையாமல் நல்கி,

எந்நாளுநம் நோயின்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான்.”

                     --- தி.வி.புராணம், உலவாக்கோட்டை அருளிய படலம்.

இதன் பொருள் ---

         மின் ஆர் சடையான் தமர் - மின் போன்ற சடையை உடைய சிவபெருமானது அடியார்களும், ஆய்ந்தவர் வேதச் செல்வர் - வேதத்தை ஆராய்ந்தவர்களாகிய அந்தணர்களும், தென்னாடர் தெய்வம் விருந்து ஒக்கல் - பிதிரரும் தெய்வமும் விருந்தும் சுற்றத்தாரும், செறிந்து நட்டோர் - நெருங்கி நட்புச் செய்தோரும், முன் ஆம் எவர்க்கும் - முதலாகிய யாவர்க்கும், முகில் போல் வரையாமல் நல்கி - மேகம் போல் வரைவின்றிக் கொடுத்து, எந்நாளும் நோய் இன்று அளகாதிபன் என்ன வாழ்ந்தான் - எஞ்ஞான்றும் வறுமை நோயின்றிக் குபேரன் போல வாழ்ந்து வந்தான்.

    இல்லறத்தார்க்கு உரிய இந்தத் தலையாய கடமைகளை ஆற்றாமல், ஒருவன் தனியாக இருந்து உண்பது, கொக்கு தான் பிடித்த மீனைத் தனியாக இருந்து தின்பதற்கு ஒப்பாகும் என்கின்றது "நீதிவெண்பா" என்னும் நூல்.       

                        

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் என்று இவரோடு

இன்புறத்தான் உண்டல் இனிதாமே --- அன்புறவே

தக்கவரை இன்றித் தனித்து உண்டல் தான் கவர்மீன்

கொக்கு அறுத்தல் என்றே குறி. “         --- நீதிவெண்பா.


பாடல் 23

"நூற்றுஅனைத்து ஓர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்

வீற்றுஇருந்த செல்வம் விழையாதே, கூற்றுதைத்தான்

ஆடுஅரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான்தன்

பாடுஅரவம் கேட்ட பகல்."

இதன் பொருள் ---

    கூற்று உதைத்தான் – மார்க்கண்டேயருக்காகு இயமனைத் தனது திருவடியால் உதைத்து அருள் புரிந்தவரும், ஆடு அரவம் கச்சா அரைக்கு அசைத்த அம்மான் - ஆடுகின்ற பாம்பினைக் கச்சாக இடையிலே கட்டிய அம்மானாரும் ஆகிய, தன் பாடு அரவம் கேட்ட பகல் - சிவபெருமானது அருட்புகழைப் போற்றும் படலாகிய வேத கீதத்தினைக் கேட்ட ஒரு பகலின் விளைவுக்கு ஈடாகிய பயனாக, நூற்றனைத்து ஓர் பல் ஊழி - நூற்றுக் கணக்காகிய பல ஊழிக் காலம், நுண் வயிர வெண்குடைக் கீழ் வீற்று இருந்த செல்வம் விழையாதே -- நுண்ணிய வயிரமணிகள் வரிசை பெறக்  வெண்கொற்றக் குடையின் நிழலின் கீழே வீற்றிருந்து அரசாண்ட அரசச் செல்வம் பெற்றபயனை ஏற்றுக் கொள்ளாது.


விளக்கம் --- 

அனைத்து - அளவு; ஊழி - நீண்ட கால அளவு – யுகம். காலத்தின் பேரெல்லை. பகல் – காலத்தின் ஒரு சிற்றெல்லை. பாடு அரவம் – பாட்டின் ஒலி.   வயிரமணிகள் பதிக்கப்பெற்ற வெண்கொற்றக் குடைக்கீழ் பல ஊழிக் காலம் வீற்றிருந்த அரச போகமானது, காலத்தின் ஒரு சிறு கூறாகிய பகல் பொழுதில் சிவபரம்ப்பொருளின் அருட்புகழைக் கூறும் பாடலைக் கேட்டதால் உண்டான இன்பத்துக்கு ஈடாகாது என்றார்.


054. பொச்சாவாமை - 02. பொச்சாப்புக் கொல்லும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறிவினை நித்திய வறுமை கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்கின்றார் நாயனார்.

நாள்தோறும் பிச்சை எடுப்பதால் வருத்தம் அடைந்து, தனது வயிற்றினை நிறைத்து வருகின்ற ஒருவன், அறிவு உடையவனாக இருந்தாலும், அவன் பிச்சை எடுக்கின்ற காரணம் பற்றி, இழித்துக் கூறப்படுகின்றான். எனவே, அவனுடைய மதிப்பினை அவன் இழக்க நேர்கின்றது. அதுபோல், ஒருவனுடைய மறப்பு அல்லது சோர்வும், அவன் புகழை அடையக் கூடியவனாய் இருந்தாலும், அவன் தன்னை மறதி அல்லது சோர்வில் இருந்து காத்துக் கொள்ளாததால் உண்டாகும் காரியக் கேட்டால், அவனுக்கு இழிவை உண்டாக்கி, அவனுக்கு உள்ள நன்மதிப்பையும் கெடுக்கும்.


இதற்குத் திருக்குறள்....

“பொச்சாப்புக் கொல்லும் புகழை, அறிவினை

நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

புகழைப் பொச்சாப்புக் கொல்லும் --- ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும், 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்றாங்கு --- அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல.

(நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து. அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்: அது போல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அவற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

“இப்புவிமேல் கோயில் இறந்தது அயனார் மறந்து

செப்புதலால் அன்றோ, சிவசிவா! --- எப்பொழுதும்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்சல் நிரப்புக்கொன் றாங்கு.”

அயன் --- நான்முகன். அவனுக்கு உலகத்தில் கோயில் இல்லை. அவன் செருக்கால் தன்னை மறந்து சிவனுக்குப் பெருமையை மறுத்தல்.

ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். அது முற்றிப் போரில் முடிந்தது. இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் அனற்பிழம்பாய் காட்சி அளித்தது. ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று கூறி போர்புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச்சோதிப் பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

“பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.”   --- திருவாசகம்.

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரமனோ அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காண முடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் அத்தீப் பிழம்பின் முடியைக் கண்டதாக பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"   --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம் அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்து, பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், திருமால் பிரமன் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 

திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள்.

(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7) பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

பிரமன் தனது அறிவுச் செருக்கால், புகழினை இழந்தான் என்பது அறியப்படும்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"உறுதியுள் வள்ளுவர் ஓதல் பொச்சாப்புக் கொல்லும் புகழை 

அறிவினை நிச்ச நிரப்புக் கொன்று ஆங்கு எனலால், உனது

நறுமலர்ப் பாதத்தை நான்மறந்தால் புகழ் நன்மை இனிப்

பெறுவதற்கு ஓர்செயல் காணேன் புல்லாணிப் பெருந்தகையே".

இதன் பொருள் ---

"அறிவினை நித்திய வறுமையால் கெடுப்பது போல, ஒருவருடைய பெருமைக்கு உரிய புகழை அவரிடம் உள்ள மறதியானது கொன்றுவிடும்" என்று உயிர்களுக்கு உறுதி பயக்கும் சொல்லாகத் திருவள்ளுவர் அருளி இருப்பதால், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் கோயில் கொண்டு இருக்கும் பெருமாளே! உனது தாமரை மலர் போன்ற திருவடிகளை நான் மறப்பேனானால், புகழையும், நன்மையையும் அடைவதற்கு வேறு ஒரு செயலையும் நான் அறியமாட்டேன்.

உறுதியுள் - உறுதிச் சொல்லான திருக்குறளுள். நறு மலர்ப்பாதம் - நறிய மலர் போன்ற திருவடி. செயல் - செய்கை. பெருந்தகை - பெரிய தன்மைகளை உடையவன்.


054. பொச்சாவாமை - 01. இறந்த வெகுளியின்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 54 -- பொச்சாவாமை


அதாவது, தொழிலில் மறதி கொள்ளாமல் இருத்தல். அழகு, செல்வம், ஆற்றல் முதலியவற்றால் மகிழ்ந்து தன்னைக் காத்துக் கொள்ளுதலிலும், மாற்றாரை ஆழித்தல் முதலிய காரியங்களிலும் மறதி கொள்ளாமல் இருத்தலைக் குறித்தது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "மிக்க இன்பக் களிப்பால் உண்டாகும் மறதியானது, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது" என்கின்றார் நாயனார்.

அதாவது பகைவரை வெல்வதற்கும், கொடியவரைத் தண்டிப்பதற்கும் வேண்டுவதாகிய அளவான கோபம், அளவு கடந்து போகுமானால் எத்தகைய தீமையை அது விளைக்குமோ, அத்தகைய தீமை ஒருவனுக்குத் தன்னிடத்து உள்ள பெருஞ்செல்வம், அழகு, ஆற்றல் முதலியவற்றால் ஆன அளவிறந்த மகிழ்ச்சியானல் உண்டாகும் மறதி அல்லது சோர்வினால் உண்டாகும்.


இதற்குத் திருக்குறள்.....


“இறந்த வெகுளியின் தீதே, சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு --- மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி, 

இறந்த வெகுளியின் தீது - அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது.

(மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்,  இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை அறியலாம்...


“வெகுளியே உயிர்க்கு எல்லாம் விளைக்கும் தீவினை,

வெகுளியே குணம்தவம் விரதம் மாய்க்குமால்,

வெகுளியே அறிவினைச் சிதைக்கும், வெம்மைசால்

வெகுளியில் கொடும்பகை வேறொன்று இல்லையால். --- காஞ்சிப் புராணம்.


இதன் பொருள் ---

கோபமே உயிர்களுக்கெல்லாம் பாபமாகிய பைங்கூழை விளைவிக்கும்  வித்தாம். மேலும், கோபமே நற்குணம், தவம், நோன்பு முதலிய புண்ணியச் செயல்களை அழிக்கும் கருவியாம்; கோபமே அறிவினை அழிக்கும் மயக்கப் பொருளாம். கொடுமை மிக்க கோபத்தினும் கொடிய பகை ஒருவற்குப் பிறிதொன்றும் இல்லை. (அதுவே என்க)


“சில்சொல் பெருந்தோள் மகளிரும், பல்வகையுந்

தாளினால் தந்த விழுநிதியும், --- நாடோறும்

நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும், இம்மூன்றும்

காப்பு இகழல் ஆகாப்பொருள். ---  திரிகடுகம்.


இதன் பொருள் ---


சில்சொல் பெருந்தோள் மகளிரும் - மெல்லிய சொல்லையும், பெரிய தோள்களையுமுடைய, பெண்டிரும்; பல்வகையும் தாளினால் தந்த விழுநிதியும் - பலவகையாலும் தமது முயற்சியினால் தேடிய சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் நாத் தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் - எப்பொழுதும் நாக்கில் நீர் அருந்தும்படி சமைத்த உணவும்; இ மூன்றும் - ஆகிய இம்மூன்றும், காப்பு இகழல் ஆகாப் பொருள் - காத்தலைத் தாழ்த்திக் கூறுதலாகாத பொருள்களாம்.


பெண்டிரும், பொருளும், உண்டியும் காப்பாற்ற வேண்டி முறையில் காப்பாற்றப்படாமற் போனால் கெட்டுப்போம் என்றபடி.


ஏவா மக்கள் மூவா மருந்து


ஏவா மக்கள் மூவா மருந்து

-----


        எளிய சிறுசிறு தொடர்களே மக்களின் தேவையைக் குறித்து உணர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை என்று வால்ட்டர் பேட்டர் என்னும் மேனாட்டு அறிஞர் ஒருவர் பின்னாளில் கூறியதை, அந்நாளிலேயே காட்டியவர் நமது ஔவைப் பிராட்டியார். எளிய சொற்களால் வாழ்க்கைப் பாடத்தை மக்களுக்குப் புகட்டியவர் பிராட்டியார்.

    தாயும் தந்தையும் நமது கண் எதிரில் காணும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களே நமது கண் கண்ட தெய்வங்கள். இவர்களைப் போற்றினால், தெய்வத்தைப் போற்றியதாகும் என்பதை அறிவுறுத்த, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று சொன்னார். தாயும் தந்தையுமே நமது கண்முன்பு காணப்படும் தெய்வங்களாவார்.

எங்கும் நீக்கம் அற நிறைந்து விளங்கும் பரம்பொருள் பொதுவான தெய்வம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக அது விளங்குகின்றது. அதுவே உயிர்களைப் படைத்துக் காத்து, அருளுகின்றது. அதனை நம்பி பயபத்தியுடன் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால், யாரும் நேரில் காணவில்லை. கண்டவரைக் கேட்டும் யாரும் அறிந்தது இல்லை. “கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டு அறியோம் உன்னைக் கண்டு அறிவாரை” என்கிறார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட பரம்பொருள்தான், தாயாகியும் தந்தையாகியும் வந்து, நம்மை ஈன்று, புறம் தந்து, இனிய கல்வியினைத் தந்து சான்றோக்கி, நல்லோர் போற்றச் சபை நடுவே வீற்றிருக்கச் செய்து, நலம் பலவும் தந்து அருளுகின்றது. "ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்" என்று அருளினார் அப்பர் பெருமான். நாம் நமது கண் எதிரில் காணுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையர் என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தாயாகி, தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.

தந்தை தாயைப் பேணும் ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, இயல்பாகவே, தந்தைக்கு ஒப்பவும், தாய்க்கு ஒப்பவும் மதித்துப் போற்றுதற்கு உரியவர்களையும் மதித்துப் போற்றும் நற்குணம் விளங்கும். இராமன் பரதனுக்கு அறிவுறுத்தியதாக வரும் கம்பராமாயணப் பாடல்களால் தாய்தந்தையரின் பெருமை அறியப்படும்.

“பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,

விரவு சீலமும், வினையின் மேன்மையும்,

உர வி(ல்)லோய்! தொழற்கு உரிய தேவரும்,

குரவரே எனப் பெரிது கோடியால்.” – கம்பராமாயணம்

வலிமை பொருந்திய வில்லை உடையவனே! புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; குற்றமற்ற நல்லுணர்வும்;  உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; செய்தொழிலின் சிறப்பும்; வணங்குதற்கு உரிய தேவர்களும்; பெரியோர்களே என்று மிகவும் மனத்தில் கொள்வாய்.

“அந்த நல் பெருங் குரவர் ஆர்? எனச்

சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,

தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்,

எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.” --கம்பராமாயணம்.

(என் அன்பில் சிறந்த பரதனே! நான் கூறிய) சிறந்த பெருமையுடைய குரவர்கள் யார் என்று மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால், தந்தையும் தாயுமே அல்லாமல், சிறப்பித்துக் கூற வேறு ஒருவரும் இல்லை. அத்தகைய பெற்றோர் துயரம் இன்றி வாழ்வதற்கு ஒரு அருமருந்தாக, அமுதமாக உதவுவது, அவர்கள் ஈன்றெடுத்த நல்ல மக்களே ஆவர். “ஏவா மக்கள் மூவா மருந்து” என்று அருளினார் ஔவைப் பிராட்டியார். பெற்றவர் இதைச் செய் என்று ஏவுதற்கு முன்பாகவே அவர்தம் குறிப்பு அறிந்து செய்கிற பிள்ளைகள் பெற்றவருக்குத் தேவாமிர்தம் போல்வார்.

இதைத் தசரத மன்னன் கூற்றாக நமக்குத் தெளிவுபடுத்துகிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

‘மன்னர் ஆனவர் அல்லர் ;  மேல் வானவர்க்கு அரசு ஆம்

பொன்னின் வார் கழல்  புரந்தரன் போலியர் அல்லர் ; 

பின்னும், மா தவம் தொடங்கி, நோன்பு இழைத்தவர் அல்லர் ; 

சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார்.  -- கம்ப. அயோத்தியா. மந்திரப் படலம்

        (தசரதன் இராமனுக்குச் சொல்லியது)  அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்;  மன்னர் ஆனவர் அல்லவர் – அரசர்களாக வாழ்கின்றவர்கள் அல்லர்; மேல் வானவர்க்கு அரசு ஆம் பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் - மேலுலகில் உள்ள தேவர்களுக்கு அரசனாகிய பொன்னாலான நீண்ட வீரக்கழல் அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர்;  பின்னும் – அன்றியும்; மாதவம் தொடங்கி நோன்பு இழத்தவர் அல்லர் - பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி, பல விரதங்களைச் செய்தவரும் அல்லர்;  சொல் மறா மகப் பெற்றவர் - (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத் தட்டாத மக்களைப் பெற்றவரே ஆவர்.

    நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கி வாழ்வர் என்பது அழகாக விளக்கப்பட்டது.  


055. செங்கோன்மை - 02. வான் நோக்கி வாழும்

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல்  அதிகாரம் 55 -- செங்கோன்மை இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "மேகம் பொழியும் மழையை ...