28. நிலையில் தாழாமை

“தலைமயிரும், கூர்உகிரும், வெண்பல்லும் தம்தம்

நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்

தானத்தில் பூச்சியமே சாரும்; நிலைதவறும்

தானத்தில் பூச்சியமோ தான்.” — நீதிவெண்பா.


தலைமயிரும், கூரிய நகமும், வெண்மையான பல்லும், தமக்கு என்று ஒரு நிலையினை உடைய மானமுள்ள பெரியோரும் தாம் இருக்கின்ற நிலையில் இருந்து தவறிப் போகாத போதே நன்மதிப்பு சாரும்.  நிலை தவறும் இடத்தில் நன்மதிப்பு இல்லை.  இழிவே உண்டாகும்.


“தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை” என்பது திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கு.


88. பனையின் கீழ் இருந்து பால் குடித்தல்

“காலம்அறி தண்டலையார் வளநாட்டிற்

     கொலைகளவு கள்ளே காமம்

சாலவரும் குருநிந்தை செய்பவர்பால்

     மேவிஅறந் தனைச்செய் தற்கும்

சீலமுடை யோர் நினையார்! பனையடியி

     லேயிருந்து தெளிந்த ஆவின்

பாலினையே குடித்தாலும் கள்ளென்பார்!

     தள்ளென்பார்! பள்ளென் பாரே.”


இதன் பொருள் ---


    காலம் அறி தண்டலையார் வளநாட்டில் - காலம் அறிந்த திருத்தண்டலை இறைவரின் வளநாட்டிலே, கொலை களவு கள்ளே காமம் சாலவரும் குருநிந்தை செய்பவர் பால் - கொலையும் களவும் கள்குடியும் காமமும் நிறைய வரும் குருநிந்தையும் செய்பவரிடம், மேவி அறந்தனைச் செய்தற்கும் - சென்று அறத்தைக் கூறுவதற்கும்,  சீலம் உடையோர்  நினையார் - ஒழுக்கம் உள்ளோர் எண்ணமாட்டார்;  பனை அடியிலேயிருந்து - பனையின் நிழலிலே தங்கி,  தெளிந்த ஆவின் பாலினையே குடித்தாலும் - தெளிவான பசுவின் பாலையே குடித்தாலும், கள் என்பார் தள் என்பார் பள் என்பார் - (அப் பாலைக்) கள் என்றே கூறிக், ‘குடித்தவனை நீக்குக! அவன் பள்ளன் என்றும் கூறி விடுவர்.


      ஒழுக்கம் கெட்டவருக்கு அறநெறிகளைக் கூறச் சென்று, அவர்களுடன் பழகினால், சென்றவர்க்கும் ஒழுக்கம் கெட்டவர் என்ற பேரே வரும் என்பது கருத்து. ‘பனையடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பர்' என்பது பழமொழி. 


பொது --- 1119. சுட்டதுபோல் ஆசை விட்டு

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சுட்டதுபோல் ஆசை (பொது)


முருகா! 

மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.


தனதனன தானதத்த தனதனன தானதத்த

     தனதனன தானதத்த ...... தனதான


சுட்டதுபோ லாசை விட்டுலகா சார

     துக்கமிலா ஞான ...... சுகமேவிச்


சொற்கரணா தீத நிற்குணமூ டாடு

     சுத்தநிரா தார ...... வெளிகாண


மொட்டலர்வா ரீச சக்ரசடா தார

     முட்டவுமீ தேறி ...... மதிமீதாய்


முப்பதுமா றாறு முப்பதும்வே றான

     முத்திரையா மோன ...... மடைவேனோ


எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ

     னப்பிரமா வோட ...... வரைசாய


எற்றியஏ ழாழி வற்றிடமா றாய

     எத்தனையோ கோடி ...... யசுரேசர்


பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு

     பத்திருதோள் வீர ...... தினைகாவல்


பத்தினிதோள் தோயு முத்தமம றாது

     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


சுட்டது போல் ஆசை விட்டு, உலக ஆசார

     துக்கம் இலா ஞான ...... சுகமேவி,


சொல் கரண அதீத நிற்குணம் ஊடு ஆடு

     சுத்த நிராதார ...... வெளிகாண,


மொட்டு அலர் வாரீச, சக்ர, சட ஆதாரம்

     முட்டவும் மீது ஏறி, ...... மதிமீதாய்


முப்பதும், ஆறுஆறும், முப்பதும் வேறு ஆன

     முத்திரையாம் மோனம் ...... அடைவேனோ?


எட்ட ஒணா வேதனத்தொடு, கோ கோ 

     எனப் பிரமா ஓட, ...... வரைசாய,


எற்றிய ஏழ் ஆழி வற்றிட, மாறு ஆய

     எத்தனையோ கோடி ...... அசுரஈசர்


பட்டு, ஒரு சூர் மாள, விக்ரம வேல் ஏவு

     பத்து இருதோள் வீர! ...... தினைகாவல்


பத்தினிதோள் தோயும் உத்தம! மறாது

     பத்தி செய் வான் நாடர் ...... பெருமாளே.


பதவுரை


எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும்,


வரை சாய --- கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும்,


எற்றிய ஏழாழி வற்றிட --- அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,


மாறு ஆய எத்தனையோ கோடி அசுர ஈசர் பட்டு --- பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து,


ஒரு சூர் மாள --- (அர்க்கர்களில்) ஒப்பற்றவன் ஆன சூரபதுமன் மாளவும்,


விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர --- பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!


தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம --- தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!


மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே --- நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 


சுட்டதுபோல் ஆசை விட்டு --- சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி,


உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி --- உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து,


சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண --- சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத,

தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு,


மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி --- மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று,


மதிமீதாய் --- அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய், 


முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் --- தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய


மோனம் அடைவேனோ --- மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?


பொழிப்புரை


தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து, அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கிய சூரபதுமன் மாளவும், பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!


தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!


நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 


சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி, உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து, சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத, தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு, மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று, அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய், தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?


விரிவுரை


எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---


வேதனம் – வேதனை. சூரபதுனது கொடுமைகளைத் தாங்கமுடியாத வலியோடு வேதன் ஆகிய பிரமன் வேதனையோடு அஞெசி ஓடினான்.


வரை சாய --- 


வரை – மலை. மலைப்பைத் தருவது மலை. அது இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். 


இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்,  தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.


"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.


"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.


கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.


"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."


என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.


"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


எற்றிய ஏழாழி வற்றிட --- 


எற்றுதல் – மோதுதல், எறிதல். ஏழ் ஆழி – ஏழுகடல். அலைகள் மோதுகின்ற ஏழகடல்களும் வற்றிப் போகுமாறு முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார். “வேலை சுவறிட வேலை விட வல்ல பெருமாளே” என்பது திருப்புகழ்.


செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர். "அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு. “பிறவிப் பெருங்கடல்” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெரும்பிறவிப் பௌவம்” என்பார் மணிவாசகப் பெருமான். கடலில் எப்போதும் அலகளை வீசிக் கொண்டே இருக்கும். அதனை, “எவ்வத் தடம் திரை” என்றார் மணிவாசகப் பெருமான். (எவ்வம் – துன்பம்). காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். 


(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கின்றன.


(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.


(3)      கடலில் திமிங்கிலங்கள், முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.


(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.


(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.


(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.


ஒரு சூர் மாள --- 


ஒரு - ஒப்பற்ற. சூர் – சூரபதுமன். அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கியவன் சூரபதுமன்.


விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர --- 


விக்ரமம் – பேராற்றல். பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்ற வேல் பேராற்றல் படைத்தது. பத்து இருதோள் – பன்னிரண்டு திருத்தோள்களை  உடையவர் முருகப் பெருமான்.


தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம --- 


தினைப் புனத்தைக் காவல் புரிந்துகொண்டு இருந்த வள்ளிநாயகியைப் பத்தினி என்றார் அடிகளார். “நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா” என்றார் சிதம்பரத் திருப்புகழில். “திருமால் அளித்தருளும் ஒரு ஞானபத்தினியைத்  திகழ்மார்பு உறத்  தழுவும் அயில்வேலா” என்றார் பிறிதொரு திருப்புகழில்.


சுட்டதுபோல் ஆசை விட்டு --- 


ஆசையே பிறவிக்குக் காரணம். அது எப்போதும் உயிரை விடாது. “ஆசைக்கு ஓர் அளவில்லை” என்பார் தாயுமான அடிகளார். “ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே” என்பது திருவிசைப்பா. அந்த ஆசையே துன்பத்திற்கு மூலம். “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்” என்று அருளிய திருமூலதேவ நாயானர், ஆசையை விட்டுவிட்டால் ஆனந்தம் உண்டாகும் என்பதைக் காட்ட, “ஆசை விட விட ஆனந்தம் ஆமே” என்றார். “அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம்” என்று அருளிய திருவள்ளுவ நாயானர், அந்த ஆசை உண்டானால், துன்பமானது மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கும் என்பதைக் காட்ட, “அஃது உண்டேல் தவா அது மேன்மேல் வரும்” என்று அருளினார்.


ஒரு பொருளை இறுகப் பற்றிக் கொண்டு உள்ள ஒருவனது கையில் சூடுபடுமானால், அவன் தனது கையை உள்ள பொருளைப் பற்றிக் கவலை ஏதும் கொள்ளாமல் உதறிவிடுவான். கையில் உள்ள பொருள் சிதறிப் போகும். அப்படி ஆசையை விட்டுவிட வேண்டும் என்கிறார் அடிகளார்.


உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி --- 


உலகியல் என்பது வேதங்களில் விதித்தபடி ஒழுகுதலே ஆகும். “உலகியல் வேதூல் ஒழுக்கம்” என்பதைக் காட்டத் திருஞானம்பந்தப் பெருமான் திருப்பாசுரம் பாடியதாகத் தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் அருளினார். உலகாசாரமாகிய நடை வேதநூலின் விதித்த ஒழுக்கமே.


“வேதத்தை விட்ட அறம் இல்லை” என்று திருமூலதேவ நாயனார் அருளிபடி, அறநூல் வேதம் ஆகும். வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள அறங்களில் வழுவி, அவரவர் மனம் போன போக்கில் ஒழுகுவது உலக ஆசாரம் அல்லது உலகியல் என்று ஆகிவிட்டது. அதனால் துக்கமே நிறைந்து உள்ளது. அனாசாரத்தால், அஞ்ஞானத்தால் உண்டாகும் துக்கம் நீங்கி ஞானசுகத்தைப் பெற உயிர்கள் முயலவேண்டும்.


சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண ---


சொற்கரண அதீதம் – வாக்கும் மனமும் இல்லா மனோலயம். இறைவனை “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” என்றும், “சொல்லும் பொருளும் இறந்த சுடர்” என்றும் கூறுவார் மணிவாசகப் பெருமான்.  அப்படிப்பட்ட பரம்பொருளை அடையந்து ஆனந்தக்லகடலில் திளைத்து இருக்கவேண்டுமானால், வாக்கும் மனமும் இறந்த நிலையை நாம் அடையவேண்டும். அந்த நிலைஅலை ஓய்ந்த கடல் போல் விளங்கும். அதில் இன்பம் விளையும். அதில் உண்டாகும் இன்பம் இத் தன்மைத்து என்று சொல்லால் விளக்க ஒண்ணாது.


“போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,

வாக்கும் வடிவும் முடிவும் இல்லாது ஒன்று, வந்து வந்து

தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே

ஆக்கும், அறுமுகவா, சொல்லொணாது இந்த ஆனந்தமே. “---  கந்தர் அலங்காரம்.


“ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று மீதானத்தே செல உந்திபற, விமலற்கு இடம் அது என்று உந்திபற" என்று மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான “திருவுந்தியார்” கூறும். யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இருவகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூடுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞானாசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக் கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.


ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.


ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.


மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி ---


மொட்டு அலர் வாரீசம் – மொட்டு மலர்ந்த தாமரை.


சக்ர சடாதாரம் – சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு ஆதாரங்கள்.


சடாதாரம் – ஆறு ஆதாரம். 


ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.


மூலாதாரம் -  இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது,  முக்கோண வடிவுள் நான்கு இதழ்த் தாமரை, மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.


“ஆதார மூலத்து அடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.”


முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.

---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்

வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள  யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன்.

                        ---     பட்டினத்தார் பூரணம்.


சுவாதிட்டானம் - இது குறிக்கும் நாபிக்கும் நடுவில் இருப்பது,  நால்சதுர வடிவுள் ஆறு இதழ்த் தாமரை,  செம்பொன் நிறமாய் உள்ளது,  பிரமன் - சரசுவதி,  'ந' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்

கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்.”


நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது?

                                --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்

சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில், அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.    -- பட்டினத்தார் பூரணம்


மணிபூரகம் - இது நாபிக் கமலத்தில் இருப்பது,  மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்த் தாமரை, மரகத நிறமாய் உள்ளது.  விஷ்ணு - இலட்சுமி, 'ம' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்.”


மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது?

                                                            --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்

ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, மணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.                                        -- பட்டினத்தார் பூரணம்


அநாகதம் -  இது இருதய கமலத்தில் இருப்பது. முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்த் தாமரை, படிக நிறமாய் உள்ளது.  உருத்திரன் - பார்வதி.  'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்.”


முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது?        --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்

கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன். -- பட்டினத்தார் பூரணம்


விசுத்தி - இது கண்டத்தில் இருப்பது.  ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்த் தாமரை.  மேக நிறமாய் உள்ளது.  மகேசுவரன் - மகேசுவரி. 'வ' கரம் என்ற எழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.


“வாயுஅறு கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும் வகை கோட்கத் தொடங்குவதும் எக்காலம்.”


அறுகோண வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து  அவனுடன் இரண்டறக் கலக்கும் வழியை  ஆராய்ந்து தொடங்குவது எப்போது?

                                                                           --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்.

“விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் அதாவது கண்டத்தில் விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.

                                            --- பட்டினத்தார் பூரணம்.


ஆஞ்ஞை - இது புருவ மத்தியில் இருப்பது, வட்ட வடிவமான, மூன்ற இதழ்த் தாமரை. படிக நிறமாய் உள்ளது. சதாசிவன்- மனோன்மணி. 'ய' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று விளங்குவது.


“வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்

கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.”


வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது?                                 ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்

புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவது, நெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.        ---   பட்டினத்தார் பூரணம்.


துவாதசாந்தம் - இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்த் தாமரை. சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவ இவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.


“உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்.”


ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.


“ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை

பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்.”


ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள  அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்து, அதனை அடையப் பெறுவது எப்போது?

                                                                    –   பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்

அச்சமுடன்  நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, உச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல், பயத்துடனே புத்தி கெட்டேன்.                            –   பட்டினத்தார் பூரணம்.


ஆறு ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத்தை உள்ளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால், தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக, ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.


மதிமீதாய், முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் மோனம் அடைவேனோ --- 


மதி மீதாய் – சந்திர மண்டலத்தையும் கடந்து.


முப்பதும் – முப்பதும், ஆறாறு – முப்பத்தாறு, முப்பதும் – முப்பதும் முப்பதாறும் கூட்டி, தொண்ணூற்றாறு தத்துவங்கள். இவைகளையும் கடக்க வேண்டும். “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான்.


ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங்களாய் வகுத்துச் சொல்லப்பட்டன. மூலாதாரமும் சுவாதிட்டானமும் அக்கினி மண்டலம். மணிபூரகமும் அனாகதமும் சூரியமண்டலம். விசுத்தியும் ஆக்கினையும் சந்தர மண்டலம். இந்த மூன்று மண்டலங்களையும் ஊடுருவிச் சென்று மேல் ஏற வேண்டும்.


“மூளும்வினை சேர, மேல்கொண்டிடா, ஐந்து

     பூதவெகு வாய மாயங்கள் தான் நெஞ்சில்

     மூடி, நெறி நீதி ஏதும் செயா. வஞ்சி ...... அதிபார


மோக நினைவான போகம் செய்வேன், அண்டர்

     தேட அரிது ஆய ஞேயங்களாய் நின்ற,

     மூல பரயோக மேல் கொண்டிடா நின்றது ......உளதாகி


நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட,

     வாசி அனல்ஊடு போய்ஒன்றி வானின்கண்

     நாம மதி மீதில் ஊறும் கலா இன்ப .....அமுது ஊறல்


நாடி, அதன் மீது போய் நின்ற ஆநந்த

     மேலை வெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி,

     நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது .....ஒருநாளே”


என்று இந்த யோகநிலையை அடிகளார் பிறிதொரு திருப்புகழில் காட்டுவார்.


மோனநிலை – சொல்லும் செயலும் அற்றுச் சும்மா இருக்கும் நிலை. இதுவே முடிந்த நிலை ஆகும். “சும்மா இருக்கும் சுகம்” என்று இதனைக் கூறவர். “மோனம் என்பது ஞானவரம்பு” என்பது ஔவையின் அருள்மொழி. சும்மா இருப்பதை "மோனநிலை" என்று சொல்லப்படும். உடல் அசையாமல் இருப்பது "காஷ்டமெளனம்".  வாக்குப் பேசாமல் இருப்பது "வாய்மெளனம்". மனம் சிந்திக்காமல் இருப்பது "மனோமெளனம்". இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்.உடம்பு அசையாமல் இருக்கும்.

 

ஒருவன் கட்டை போலப் படுத்து உறங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் விழிப்பு நிலையில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம் முதலியவற்றால்,உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்குத்தான் தியானம் என்று பேர். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி,மனோலயம் உண்டாகும்.

 

"சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே".

 

"சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று

எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே".    --தாயுமானார்.


கருத்துரை


முருகா! மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.

 






ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

=====


    “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்னும் அற்புதமான வாழ்வியல் உண்மையை முதன்முதலில் உலகுக்கு அறிவுறுத்தியவர் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலநாயனார். இறைவன் ஒருவனே. “ஒருவனே போற்றி, ஒப்பு இல் அப்பனே போற்றி” என்றார் மணிவாசகப் பெருமான். “ஏகன், அநேகன்” என்பதும் மணிவாசகர் அருளிய அற்புதான சொற்றொடரே. இறைவன் ஒருவன்தான். அவனை வழிபடும் வழிகள் பல. இந்த உண்மையினை அவரே,  “தென்னா டுடைய சிவனே போற்றி, எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் சொற்றொடரால் விளக்கி அருள்கின்றார். அருள் நாட்டம் உடையவர்கள் சிவன் என்று அழைக்கின்றார்கள். மற்ற எந்த நாட்டமும் உடையவர்கள், அவரவர் வணங்கி வழிபடும் முறையில், அந்தச் சிவனே இறைவனாக (அவரவர் கருதும் பலவிதமான வடிவங்களை உடையவனாக) இருக்கின்றான். 


    இந்த உண்மையினை உணராத காரணத்தினால்தான் நம் நாடு சமயத்தால் பிளவுபட்டதோடு அல்லாமல், சமயத்தின் பேரால் மாறாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. இன்னொரு பக்கம் சமய உணர்வே இல்லாதவர்கள, இறை நம்பிக்கை இல்லாதவர்களும் கூட, இந்த நாட்டின் சனாதன சமயத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகின்ற அவல நிலையும் உள்ளது. எந்தச் சமய அறிவும் இல்லாத ஒருவன் எப்படி, ஒன்றைத் தாழ்த்தியும், மற்றொன்றை உயர்த்தியும் பேச முடியும்? மனிதன் நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்றக் கடமைப் பட்டவன். அவ்வாறின்றி மனம் போன போக்கில் மதி இழந்த நிலையில்தான் பூசல்கள் தோன்றுகின்றன. மனித நேயமும், ஒருமைப்பாட்டு உணர்வும் கொண்டு ஒழுகும் வாழ்வும் தேவை என்பதை பட்டினத்து அடிகளார் உபதேசமாகக் காட்டுகிறார்.


“ஒன்று என்று இரு, தெய்வம் உண்டு என்று இரு, 

உயர் செல்வமெல்லாம்

அன்று என்று இரு, பசித்தோர் முகம் பார், 

நல்லறமும் நட்பும்

நன்று என்று இரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி

என்று என்று இரு, மனமே! உனக்கு உபதேசம் இதே.”


என்று தெய்வம் உண்மையினையும், அது ஒன்றே என்பதையும், பிற செல்வங்களை நம்பி வேறுபாடாகாத நல்வாழ்வும் ஏழைக்கு இரங்கும் உளமும், அறமும், நட்பும் இவையாவும் வேண்டப்படுவன என்று நெஞ்சறிவுறுத்தலாகப் பாடி மனித குலத்தை ஆற்றுப்படுத்துகிறார். 


    இந்த ஒரு தெய்வ உணர்வு உள்ளத்தில் அரும்புமானால், பிற வேறுபாடுகளும் மிருக உணர்வுகளும் காழ்ப்பும் கசப்பும் உலகில் இல்லாமல் போகும். இன்றைய நிலையினை அன்றே எண்ணிய அருளாளர்கள் இவ்வாறு மன உணர்வால் வேறுபட்டவர்கள் இறைவனைக் காணமாட்டார்கள் என்றே கூறுவர். “இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது ஒழிநது ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என்கிறார் அப்பர் பெருமான். “அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைவு அரிய பரிசேபோல்” என்பது கவிச் சக்கரவர்த்தியின் கூற்று. சமய வேறுபாடு கற்பித்து வாழும் மக்களைக் கம்பர் அறிவில்லாதார் என்கிறார். அவர்களுக்குப் பரகதி கிடையாது என்கிறார்.


    சமயப் பிணக்குக் கொண்டு, என் தெய்வம் உயர்ந்தது, என் தெய்வம் உயர்ந்தது என்று மயங்கி வாழும் மாக்கள் (விலங்குத் தன்மை பொருந்திய) உள்ளத்தில் இறைவன் விளங்கமாட்டான். சமரச உணர்வோடு இறைவனைப் போற்றுபவர் உள்ளத்திலேயே அவனைக் காண முடியும். இறைவன் திருவடியைப் புகழ்ந்து பாடிய வள்ளற்பெருமான், “எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கிடு நற்பதம்” என்று பாடுகின்றார்.


    சென்று சேர்வதற்கு உரிய பெரிய ஊர் ஒன்று.  அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன, என்பது போன்று, அறுவகைச் சமயங்களும், முழுமுதற்பொருள் ஒன்றையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. அவ்வாறாகவும் நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் அது தீது என்று சொல்லித் தம்முள் பிணங்கி வாதிட்டுத் திரியும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற இழிந்த நாயினை ஒத்தவர் ஆவர் என்கிறார் திருமூல நாயனார்.


“ஒன்றது பேரூர், வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்று இது, தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே” -- திருமந்திரம்.


    எல்லாச் சமயங்களும் மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து அருளப்பட்டன.. அவற்றிடையே அமைந்த ஒருமை உனர்வினைக் காணமுயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்கள். பிறரைக் குறை கூறுவதன் மூலம் தம்மை உயர்த்திக் கொள்ள எண்ணும் அறிவிலிகளின் செயல் இது.


    அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள். கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு அறியாமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார். மலையின் உண்மை இயல்பை மனிதனே இன்னமும் அறியாது உள்ளபோது, நாய் அறியாதுதானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல்தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,


"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"


 என்கிறார் மணிவாசகப் பெருமான். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.


    சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை. இதைத்தான், "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைக் கருத்து ஊன்றிப் பயிலுகின்றானோ,  அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.


    கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும்பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது. 


"பித்தர்குணம் அதுபோல,ஒரு கால் உண்டாய்ப்

⁠பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

⁠கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

    சரயு நதியின் அழகைப் பாட வந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.


“கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.”    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்’  என்று சொல்லும்படி, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம், விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.

     பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களைக் கொண்டு விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின்  வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது என்கிறார் கம்பர்.

 

தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

“வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

     விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை,முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா.”

 

இதன் பொருள் ---

 

    ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது,  கடலில் கலந்தபோது, கடல்நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறிய முடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன. 

 

    எனவே, எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,

                           

“பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

     புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

     கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

     தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

     செய்யவல்ல கடவுளே! தேவ தேவே! “

 

என்று அருளிச் செய்தார்.

 

முன்னர்க் குறிப்பிட்டது போல, சமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயே, அவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதே, சமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதை, அருணகிரிநாதப் பெருமானும்,  "கலகல கல என, கண்ட பேரொடு  சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள், சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் காட்டி உள்ளார்.

 

    கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச் சில கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை புரிவதற்காக எழுந்தவையே சமய நூல்கள். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க்கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம்தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

    பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி, தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

    ஆக, அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

    ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் அன்றே காட்டிவிட்டார்.

 

    மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில்,  இராமனின் தோளைக் கண்டவர்கள், தோளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. அப்படியே பிற உறப்புக்களைப் பார்த்தவர்களும் இருந்தனர். இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல இருந்தது. சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை.

 

“தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்.”   --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    (மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க   இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு    பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது)  பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே  (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  ஆகவே,  வாள் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவற்றையும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின் அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 


    தாயுமான அடிகளார், இன்றைய நிலையை எண்ணித்தான், “சமய கோடிகள் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து, எதிர் வழக்கு இடவும் நின்றது” என்று அன்றே பாடி வைத்தார். ஆம்! இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று  வழக்கிடுவதையும், அதை நிலைநிறுத்த மேற்கொள்ளும் வாதங்களையும், அது உண்மை அல்ல என்பதை நிலைநிறுத மேற்கொள்ளும் எதிர்வாதங்களையும் எண்ணும்போது, மனிதன் அறியாமையாகிய இருட்கடலுள் மூழ்கி அறிவிழந்து இருப்பது தெளிவாகும். அறியாமையின் இன்னொரு பக்கம் என்பது, எல்லோரும் அறியக் கடவுள் மறுப்புத் தெரிவிப்பதும், யாரும் அறியாமல் கடவுள் வழிபாட்டை மேற்கொள்வதும் ஆகும்.


    இந்த வேறுபாடுகளை மறந்து, மேலே கண்டபடி பல அருளாளர்கள் காட்டிய வாய்மொழிகளையே ஒளி விளக்கங்களாகக் கொண்டு,  அறியாமை இருளை மாற்றி, ஒன்றே தெய்வம் என்ற உணர்விலே, ஒன்றிய செயலிலே, வேறுபாடற்று வாழ்வோமேயானால், அவரவர் வாழும் நாடும், மனித குலமும் நலம் பெறும். 



27. சேர்ந்த இடத்தினால் சிறப்பு

“ஆனை மருப்பும், அருங்கவரி மான்மயிரும்,

கான வரிஉகிரும், கற்றோரும், - மானே!

பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொரு தேசத்தே

செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.”

பெண்ணே! யானையின் கொம்பும், அருமையான கவரிமானின் மயிரும், காட்டில் வாழும் புலியின் நகமும், கற்றவர்களும் தாம் தோன்றிய இடத்தில் அல்லாமல், தாம் சேர்ந்த இடங்களிலேயே சிறப்புப் பெறுவர்.


(மருப்பு - தந்தம். கானவரி - காட்டில் வாழும் புலி.  உகிர் - நகம்.)


87. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமோ?

மையிலே தோய்ந்தவிழி வஞ்சியரைச்

     சேர்ந்தவர்க்கு மறுமை யில்லை!

மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும்

     கேடாகி விழலர் ஆவார்!

செய்யிலே வளந்தழைத்த தண்டலையார்

     வளநாட்டில் தெளிந்த தன்றோ?

கையிலே புண்இருக்கக் கண்ணாடி

     பார்ப்பதென்ன கருமம் தானே?


இதன் பொருள் ---

    செய்யிலே வளம் தழைத்த தண்டலையார் வளநாட்டில் - கழனியிலே நெல் முதலியவற்றின் வளம் மிகுந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில்; மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச் சேர்ந்தவர்க்கு மறுமையில்லை - மை தீட்டிய கண்களை உடைய  பொதுமகளிரைச் சார்ந்தவர்களுக்கு மறுமையில் நன்மை இல்லை, மெய்யிலே பிணியும் உண்டாம் - (இம்மையிலும்) உடலில் நோய்கள் உண்டாகும், கைப்பொருளும் கேடு ஆகி விழலர் ஆவார் - கையில் உள்ள பொருளையும் இழந்து (பிறர்க்குப்) பயனற்றவரும் ஆவார்; தெளிந்தது அன்றோ - இது தெளிவானது தானே?, கையிலே புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பது என்ன கருமம் - கையினிற் புண் இருக்கையில் (அதை நேரே பாராமற்) கண்ணாடியிலே பார்ப்பது என்னசெயல்?

    பொதுமகளிரை விழைவோரின் இல்லறம் கெடும். அவர்கள் கைப்பொருளும் கெட்டுப் போகும். இது கைப்புண் போல வெளிப்படையாகத் தெரிவதால், ‘கைப்புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பது என்ன கருமம் தானே?' என்றார். ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பது பழமொழி.

    இம்மை வாழ்க்கையும், உம்மை வாழ்க்கையும், அம்மை வாழ்க்கையும் செம்மையுற அமைவதற்கு இறைவன் அருளால் இம்மையில் வாழ்க்கைத் துணையாய் வாய்த்த  ஒருத்தியுடன் கருத்து ஒருமித்து இல்லறத்தை நடத்துதலே சிறப்பானதாகும். காம உணர்வு மேலீட்டினால், அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக, அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர். எனவே, “மெய்யிலே பிணி உண்டாம்” என்று சொல்லப்பட்டது. அருணகிரிநாதர், விலைமாதர் தரும் நோய்களைப் பூஷணங்கள் என்கிறார். 


“வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து

     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,

வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்

     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்


பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,

     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்

பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,

     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,


ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,

  ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்

ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்

     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்”         –-திருப்புகழ்


“அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து

     பிணியுழன்று சுற்றித் திரிந்தது    

அமையும்,உன் க்ருபைச் சித்தம்என்று பெறுவேனோ”        --திருப்புகழ்.


நூலறிவும் நுண்ணறிவும்

நூலறிவும், நுண்ணறிவும்

-----


"முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதுஉம் 

கற்றனம் என்று களியற்க,-சிற்றுளியால் 

கல்லும் தகரும், தகரா, கனங்குழாய்! 

கொல் உலைக் கூடத்தினால்” 


குமரகுருபர அடிகளார் பாடி அருளிய ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலில் இவ்வாறு ஒரு பாடல் அமைந்து உள்ளது.


இதன் பொருள் --- பளுவான காதணியை உடைய பெண்ணே!, எல்லாவற்றையும் நன்கு கற்று அறிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை. ஆதலால், நாம் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்று செருக்குக் கொள்ளாதே. ஏனென்றால், மிகச் சிறிய உளியினால் மலைகளும் உடையும். ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் மலைகளும் உடையா.


“பல கற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டா;

அலா்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்.”


என்கிறது ‘அறநெறிச்சாரம்’ என்னும் நூல்.


இதன் பொருள் ---


"நான் பல நூல்களைக் கற்றுவிட்டேன்" என்று செருக்குக்  கொள்ள வேண்டாம். பரந்து விரிந்த கதிர்களை உடைய சூரியனை, கையில் வைத்திருக்கும் சிறிய குடையும் மறைத்துவிடும். அதுபோல, பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும் தேவையான அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல், சில நூல்களைக் கற்றவர் இடத்தும் உண்டு.


“கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்

அடல்ஏறு அனைய செக்கு ஆழ்த்தி – விடலே,

முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்

பனிக்கடலும் உண்ணப் படும்.”            — நன்னெறி


இதன் பொருள் ---


அலை ஒலிக்கின்ற குளிர்ந்த கடலும் முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால் மொண்டு உண்ணப்பட்டது. ஆதலால், நாம் கல்வியால் பெரிய கடலை ஒத்து உள்ளோம் என்று எண்ணுகிற, வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினது செருக்கைப் போலும், செருக்கிலே அமிழ்ந்து விடாது இருக்கவேண்டும்.


முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்சபுராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது.


இவ்வாறே அறவோர் பலரும் அறவுரைகளைத் தத்தம் நூல்களில் காட்டியுள்ளனர். கல்வி, அறிவு, அவற்றின் வழியே பெறும் உணர்வு, இவற்றால் ஆய பயன் அனைத்தும் அளவிடற் கரியன. ஆயினும் உலகில் சிலர், “முந்திரிமேல் காணி மிகினும் கீழ்தன்னை  இந்திரனாப் போற்றி விடும்” என்ற ‘நாலடியார்’ வாக்கின்படி சிறிது கற்று விட்டால் தனக்குத் தானே நிகர் என்று தருக்கி வாழ்பவர் இன்று மட்டுமின்றிப் பழங்காலத்திலேயும் வாழ்ந்திருக்கின்றனர். ஆளவந்தார், மெய்கண்டார் வரலாறுகள் இந்த உண்மையினை உணர்த்துகின்றன. சிறிதளவு கற்று அதனாலேயே அகங்காரம் கொண்டவர் துன்பமே அடைவர் என்பது உலகறிந்த உண்மை. 


“எண் எழுத்து இகழேல்” என்பதும், "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்பதும் ஔவையார் அருள்வாக்கு. “எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும், கண் என்ப வாழும் உயிர்க்கு” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. உலகத்து மக்கள் அறிவு பெறவேண்டி, எண் என்று சொல்லுவனவும், எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய நூல்களைப் பயிலவேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. கல்வியாகிய கண் மேலும் விளக்கம் பெறுவது, கற்றதனால் பெற்ற அறிவால். நுண்ணறிவு வாய்க்கப் பெற்றவர்க்கு நூல் வேண்டியது இல்லை. “நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்க்கே” என்பது அப்பர் அருள் வாக்கு. ஒருவனுக்கு வறுமை என்று சொல்லப்படுவது எது என்றால், “நுண்ணுர்வு இன்மையே” என்கிறாது நாலடியார். “நுண்ணுர்வு இன்மை வறுமை, அது உடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம்” என்பது நாலடியார்.


நீர் வேண்டும் என்று கிணறு எடுக்கத் தொடங்கினால், நீர் வெளிப்படும் அளவும் தோண்டுதல் வேண்டும். தோண்டத் தோண்ட மென்மேலும் மிகுதியாக நீர் ஊற்றெடுக்கும். அதுபோல, சிறிதளவு கற்று, அது போதும் என்று விட்டுவிடாமல், மேலும் மேலும் கற்றுத் தெளிதல் வேண்டும் அறிவுக்கு எல்லை இல்லை. அதுபோல, நீரால் சூழப்பட்டுள்ள உலகத்தில் நீருக்கும் குறைவில்லை. கிணறு தோண்டினால், நாளும் எடுக்க எடுக்க நீர் குறையாது மிகும். நாளும் கற்கக் கற்க அறிவு மிகுந்து கொண்டே செல்லும். 


“தொட்டனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.”

 என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

  

         கற்பதனால் உண்டாகும் நூலறிவு, நுண்ணிய அறிவாக விளங்கவேண்டும். நுண்ணிய அறிவு என்பது, ஒருவன் கற்கின்ற நூல்களின் தன்மையைப் பொறுத்தது. நுண்ணறிவை விளக்கும் நூல்களும் உண்டு. பொழுதுபோக்குவதற்கான நூல்களும் உண்டு. அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல. சிறு முயற்சி செய்து, மணல்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். தோண்டுகின்ற அளவுக்கு நீர் சுரக்கும். 

 

         அறிவு மேலும் மேலும் நுணுகியதாக மாற, நூல்களைக் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். கற்கின்ற நூல் அளவு என்பதைக் கொண்டு, எவ்வளவு நூல்களைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு நுண்ணறிவு மிகும் என்று கொள்ளுதல் கூடாது. கற்கின்ற ஒரு நூலாக இருந்தாலும், எந்த அளவுக்கு அதன் நுண்பொருளை உணர்ந்து கற்கின்றோமோ, அந்த அளவுக்கு அறிவு மிகும். "நூலின் அளவே நுண்ணறிவு" என்று ஔவையார் கூறுகின்றார்.

 

“நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்,தான்கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு --- மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,

குலத்து அளவே ஆகும் குணம்.”      ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

         நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரிலுள்ள அல்லியானது நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் - கூரிய அறிவானது தான் படித்த நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் மேலை தவத்து அளவே ஆகும் - தான் அடைந்த செல்வமானது முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.

 

         இதற்குத் தான் "தொட்டனைத்து ஊறும் மணல் கேணி" என்னும் உதாரணத்தைக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். பத்தடி தோண்டும்போது, கிடைக்கும் நீரை விட, ஐம்பது அடி தோண்டும்போது இன்னும் மேலே கிடைக்கும். தோண்டத் தோண்டத் தண்ணீரானது அளவில் பெருகிக் கொண்டே இருக்கும்.

 

         தோண்டத் தோண்ட என்னும்போது, முயற்சி செய்யச் செய்ய என்பது விளங்கும். முயற்சி செய்யச் செய்யத் தண்ணீர் ஊறும். இந்த முயற்சியானது ஒருவனது ஐந்து வயதில் இருக்கலாம். சாகப் போகின்ற வயதிலும் இருக்கலாம். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல.

 

         சரி, மணல்கேணியை ஏன் சொன்னார்? பாறையைக் குடைந்தால் கூடத் தண்ணீர் ஊறுகின்றதே. மணல் கேணி என்றால், சிறுமுயற்சியும் பெரும்பலன் தரும். பாறையைத் தோண்ட வேண்டுமானால் பெருமுயற்சி வேண்டும். பெருமுயற்சி செய்தாலும், மணல்கேணியில் ஊறுவது போலத் தண்ணீர் ஊறாது.

 

        கற்றல் என்று சொன்ன உடனே, நூல்களைப் படித்தால் போதும் என்று எண்ணிவிடக் கூடாது. படிக்காத மேதைகள் உண்டு என்பதை மறக்கலாகாது. தமிழ் நாட்டிலே அவதரித்த இராமலிங்கர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. வடநாட்டில் இராமகிருஷ்ணர் படித்தவர் இல்லை. ஆனால், அவர்களுக்கு உள்ள அறிவு, மெத்தப் படித்தவர்கள் பலருக்கும் இல்லை.

 

         இதற்கும் மணல்கேணிதான் உதாரணம். பாறையில் கிடைக்கின்ற நீரை விட, மிகச் சுலபமாக, மணல்கேணியில் கிடைக்கின்றது, என்றால், புரிந்து கொள்ளமுடியாதவை எல்லாம் எளிதில் புரிகின்றது என்றால், அதற்குக் காரணம், "திருவருள்" என்று சொல்லலாம். திருவருளைப் பெறுவதிலும் முயற்சி தேவை. அது தானாக வந்துவிடாது.

 

         திருவருளைப் பெறச் சிறுச் சிறிதே முயன்று வந்தால் போதும். அது பெரும்பலனைத் தந்தே தீரும். அது, ஓதாது உணருகின்ற பெருநிலையில் கொண்டு சேர்த்து விடும்."ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து, எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான். ஓதாது உணர்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

         “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்பது பழமொழி. ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்தி நின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான்.

 

         புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 






வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா


வெஞ்சொல்லும் பொய்மையும் வேண்டா
-----

    மனிதன் மனிதனாக வாழ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுகையில், செம்மை நெறியில் நின்று வழிபட வேண்டும் என்றே பாடுகின்றனர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பி, சைவம் வளர்த்த பெருமை தேவார மூவர் முதலிகளைச் சாரும். தலங்கள்தோறும் சென்று, மக்களொடு மக்களாய்ப் பழகி, அவர்தம் வாழ்வைத் தம் வாழ்வாக எண்ணி,  சமுதாயத்துக்கு உரிய அறநெறிகளை ஆங்காங்கே தத்தம் தேவாரப் பாடல்களில் பாடியுள்ளனர். மனிதவாழ்வுக்கு நெறிசார்ந்த இறைவழிபாடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினர். தேவாரம் பாடிய மூவரும் கடவுள் நெறிக்கு இன்னின்ன தேவை - இன்னின்ன ஒதுக்க வேண்டியவை என வற்புறுத்திக் காட்டுகின்றனர். “இன்சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ வன்சொல் வழங்குவது” என்கிறார் திருவள்ளுவ நாயனார். 

    கதிரவனின் வெம்மையான கிரணங்களால் கடல் பொங்குவது இல்லை. குளிர்ந்த நிலவொளியிலேயே கடல் பொங்குகிறது. அதுபோல, இந்தப் பரந்த உலகமானது வன்சொல்லால் மகிழாது. இனிய சொல்லாலேயே மகிழும் என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே, - பொன்செய் 
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால், தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.” -- நன்னெறி.

    அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில், சமணத்தை விடுத்து, சைவம் சார்ந்த ஒன்றிற்காகவே எல்லையற்ற துன்பங்கை அனுபவித்தவர். எந்தவிதமான துன்பத்துக்கு அஞ்சாது வாழ்ந்து, “என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்" என்றும் “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்றும் பாடியவர். அவர் அனுபவித்த அத்தனைத் துன்பங்களுக்கும் இடையில் ஒரு வெஞ்சொல் கூட விளம்பவில்லை. “எப்படி ஆயினும் ஏத்துவன் எந்தையை” என்று இறைவனைப் பாடினாரே ஒழிய, தனக்குத் துன்பத்தை இழைத்தவர்களைப் பார்த்து ஒரு கடுஞ்சொல்லும் கூறவில்லை. “ஈண்ட வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்” என்று அப்பர் பெருமான் இருந்ததாகத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

    திருஞானசம்பந்தர் அடியார்களோடு தங்கி இருந்த மடத்தில், தமது சமயத்துக்கு உரிய மந்திர உச்சாடணையால் தீயை வைப்பதாக மன்னனிடம் சொல்லிச் சென்று, அது பலிக்காமல் போகவே, தீப்பந்தத்தைக் கொண்டு நெருப்பை இட்டார்கள் சமணர்கள். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்களைப் பார்த்து எவ்விதமான வெய்ய சொல்லையும் சொல்லாமால், சமணர்கள் இட்ட தீயை, “பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”  என்று பாடி, தனது இனிமையான அருள்வாக்கால், பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்து அவனை நல்வழிப்படுத்தினார். “வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இல்லாச் சமண்” என்று திருஞானசம்பந்தர் பாடுகின்றார். அப்பர் பெருமான் “வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற” என்று அறிவுறுத்துகின்றார். 

    திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் இறைவர் மீது அருளிய திருப்பதிகத்தின் முதற்பாடலில், உள்ளத்தில் பரபரப்பு ஏதும் இல்லாமல், உள்ளமானது இறைவன் திருவடியில் ஒன்றி இருந்து, கள்ளத்தனத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, கடுமையான சொற்களைத் தவிர்த்து, உள்ளத்தைத் தூய்மை செய்து, காமாதி குற்றச் செயல்களை ஒழித்து, நல்ல முறையில் இறைவன் திருநாமத்தை வாயாரச் சொல்லி வழிபடவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

“ஒல்லைஆறி, உள்ளம்ஒன்றி, கள்ளம் ஒழிந்து,வெய்ய
சொல்லை ஆறி, தூய்மைசெய்து, காமவினை அகற்றி,
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம் மேயவனே.

(ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு)

    எனவே, நல்வாழ்வுக்கு இன்றியமையாதது இன்சொல் என்பது தெளிவாகும். வெஞ்சொல்லை விலக்குவது போல, பொய்ம்மையும் விலக்கப்பட வேண்டும். பொய் நீங்கினாலன்றி, வேறு எத்தகைய வழிபாட்டாலும் இறைவனை அடைய முடியாது என்ற உண்மையினைச் சுந்தர்மூர்த்தி சுவாமிகள் “பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்துள்ளே, மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்” என்று பாடுகிறார். “பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை” என்று பாடுகிறார் அப்பர் பெருமான். பொய்மைகளையும் கைவிட்ட அடியவர்களின் உள்ளத்தே மெய்ப்பொருளாகிய இறைவன் விளங்குவான். 

    எனவே வெம்மையான சொல்லும், பொய்ம்மையும் இன்றி அருளாளர்கள் காட்டிய வழியில் நின்று ஒழுகினால் இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

26. தீயவரை நல்லார் அணுகார்

“குணம் நன்கு உணராக் கொடியோர் இடத்தில்

குணம் நன்கு உடையார் குறுகார்; - குணம்உடைமை

நண்ணாச் சமண நகரத்தில் தூசுஒலிக்கும்

வண்ணானுக்கு உண்டோ வழக்கு.” — நீதிவெண்பா


ஆடையை அணியும் இயல்பு இல்லாத சமண மதத்தினர் இருக்கும் இடத்தில், அழுக்கு ஆடைகளை வெளுக்கும் தொழில் செய்யும் வண்ணானுக்கு வேலை இல்லை. அதுபோல, நல்லியல்பு இல்லாத தீயோரிடத்தில், நல்ல இயல்புகளை உடைய பெரியோருக்கு வேலை இல்லை. 

(தூசு - ஆடை.  ஒலித்தல் - மாசு நீக்கி வெளுக்கச் செய்தல். ஆடை உடுத்தாத சமணர், திகம்பரர் எனப்படுவர், வெள்ளை ஆடை உடுத்துகின்ற சமணர் சுவேதாம்பரர் எனப்படுவர்) 


86. பெண் என்றால் பேயும் இரங்கும்


உரங்காணும் பெண்ஆசை கொடிதாகும்!

     பெண்புத்தி உதவா தாகும்!

திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும்!

     பெண்சென்மம் சென்மம் ஆமோ?

வரங்காணும் தண்டலைநீள் நெறியாரே!

     பெண்ணிடத்தின் மயக்கத் தாலே

இரங்காத பேருமுண்டோ? பெண்என்ற

     வுடன்பேயும் இரங்குந் தானே.


இதன் பொருள் ---


    வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே - நலம் பொருந்திய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே!

     பெண்ணிடத்தில் மயக்கத்தாலே இரங்காத பேரும் உண்டோ - பெண்ணிடம் உண்டாகும் தடுமாற்றத்தினால் (பெண்ணைக் கண்டவுடன்) இரக்கம் காட்டாதவரும் உளரோ?, பெண் என்றவுடன் பேயும் இரங்கும் – பெண் என்றாலே பேயும் இரங்கும் (என்பார்கள்.) (எனினும்), உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும் - விரைவு படுத்தும் பெண் ஆசை கொடியது ஆகும்; பெண்புத்தி உதவாது ஆகும் - பெண்ணின் அறிவுரை பயன் தராது ஆகும்; (ஆகையால்), திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும் – நட்மை தருவது போலக் காணப்படும் பெண்மொழி கொடியதாகும், பெண்சென்மம் சென்மம் ஆமோ - பெண்பிறப்பு இன்பந்தரும் பிறப்பு என்று சொல்ல முடியுமோ?

      வரம் – நன்மை, விருப்பம், மேன்மை. பொருட்பெண்டிர் ஆசையினால் மேல் விளைவு கருதாது தவறான வழியிலே செல்வதுபற்றிக் கொடியது என்றார். ஔவையார் அருளியது போல காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைக் குறை கூறியதாகக் கொள்ளுதல் கூடாது. ஔவையார் குறித்தது குலமகளிரை. பெண்புத்தி உதவாது என்றும், பெண்வார்த்தை தீது என்று கூறியதும் பெண்தரும் இன்பம் ஒன்றையே பெரிது எனக் கருதி அவர் சொல்லில் மயங்குதல் கூடாது என்பது குற்றித்ததே. அவ்வாறு கொள்ளாவிட்டால், அது குலமகளிரை இழிவுபடுத்தியது ஆகிவிடும். உலகிலே பெண் பிறப்பே பல்வகைத் துன்பத்தினும் ஈடுபடுவதால் ‘பெண் சென்மம் சென்மம் ஆமோ' என்றார். ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்' என்பது பழமொழி.

அறத்துப்பாலில், இல்வாழ்க்கைத் துணநலம் என்று மகளிரைச் சிறப்பித்த திருவள்ளுவ நாயனார், பொதுமகளிரை, வரைவில் மகளிர் என்று பொருட்பாலில் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளத் தக்கது. எவர் சிற்றின்பத்ததின் பொருட்டு, தமது மனைவி மீது பெருவிருப்பத்தைக் கொண்டு, அவள் ஏவியபடி நடக்கின்றாரோ, அவர் இம்மை, மறுமை, அம்மையாகிய வீடுபேறு ஆகிய மூன்றையும் அடைவதற்குத் துணையாக இருக்கும் அறத்தினை அடையமாட்டார். அதுவும் அல்லாமல், அறம், இன்பம் ஆகிய இரண்டினையும் அடைவிக்கும் பொருளைச் செய்தலை மேற்கொண்டவர்கள், பொருளைச் செய்வதற்கு, பெண்வழி நிற்றல் என்பது இடையூறாய் உள்ளதால், பொருளையும் அடையமாட்டார் என்பதைப் பெண்வழிச் சேறல் என்றும் குறிப்பிட்டார் திருவள்ளுவ நாயனார் என்பதை அறிக.

தசரதர் தன் மனைவியருள் ஒருவர் ஆகிய கைகேயி மீது வைத்த அதீத ஆசையால் விளைந்த விளைவுகளை எண்ணிப் பார்க்க. பெண்வழிசை சேறலால் விளைந்த கொடுமைகளை இது விளக்கும்.


25. தீயவர் ஒழுக்கத்தைப் போற்றாதே

"ஞானம்ஆ சாரம் நயவார் இடைப் புகழும்

ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில்,

பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்

மேவுநெறி என்றே விடு."


மேலான அறிவையும் ஒழுக்கத்தையும் விரும்பிக் கடைப்பிடிக்காதவரிடத்திலே, புகழ்ந்து சொல்லப்படும் நான்கு வேதங்களின் அருமைகளைக் கற்று வைத்திருக்கின்ற முறைமையைச்  சொல்லுவது என்பது, தீவினை மிக்க பாவிகள் வைத்திருக்கும் மண்பாண்டத்தில், உயர்ந்த கங்கையின் நீரை நிறைத்து வைத்து இருக்கும் முறையைப் போன்றது என்று எண்ணி, அதை விட்டு விடுக.  


"மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்" என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கை எண்ணுக.


85. சிறுநெருப்பு என்று இகழாதே


“அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்

     எக்குலத்தார் ஆனால் என்ன?

உருப்பயிலும் திருநீறும் சாதனமும்

     கண்டவுடன் உகந்து போற்றி,

இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றும்

     சிறியரென்றும் இகழ்ந்து கூறின்

நெருப்பினையே சிறிதென்று முன்றானை

     தனின்முடிய நினைந்த வாறே.”


இதன் பொருள் ---

    தண்டலைவாழ் அருப் பயிலும் சிவன் அடியார் – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் அருவுருவமாக எழுந்தருளி உள்ள, அருவப் பொருளாகிய சிவபரம்பொருளின் தொண்டர்கள், எக்குலத்தார் ஆனால் என்ன - எந்தக் குலத்தவரானாலும் குறை இல்லை, உருப் பயிலும் திருநீறும் சாதனமும் கண்டவுடன் - வடிவிலே விளங்கும் திருநீற்றினையும் மற்றைச் சிவசின்னங்களையும் பார்த்தவுடன், உகந்து போற்றி இருப்பதுவே முறைமை அல்லால் - சிறப்பித்து வாழ்த்தி இருப்பதே தக்கது ஆகும். அல்லாமல், ஏழை என்றும் சிறியர் என்றும் இகழ்ந்து கூறின் – வறியவர் எனவும் உருவத்திலும் அறிவிலும் சிறியவர் எனவும் பழித்துப் பேசுதல் என்பது, நெருப்பினையே சிறிது என்று முன் தானை தனில் முடிய நினைந்த ஆறு - தீயின் வடிவம் சிறியது என எண்ணி முன்தானையில் முடிய நினைத்தற்குச் சமமாகும்.

      அரு : உருவமில்லாத நிலை. சாதனம் : சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள். உகப்பு - உயர்வு (சிறப்பு). ‘நெருப்பைச் சிறிதென்று நினைக்கலாமா!' என்பது பழமொழி.  திருமூலதேவ நாயனார் அருளிய திருமந்திரத்துள் ‘மகேசுர நிந்தை கூடாமை” பற்றிக் கூறப்பட்டு உள்ளதை இங்கு வைத்து எண்ணுக. “அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட மதிமூடி” எனவரும் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


இறைவன் எங்கே இருப்பான் என்றால், எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் அவன் நிறைந்து இருப்பான் என்பர் பெரியோர். 


"ஈறாய்,முதல் ஒன்றாய்,இரு பெண்ஆண்,குணம் மூன்றாய்,

மாறாமறை நான்காய்,வரு பூதம்அவை ஐந்தாய்,

ஆறுஆர்சுவை, ஏழ்ஓசையொடு, எட்டுத்திசை தானாய்,

வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே."

என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய் (ஈறாய்), ஒடுங்கிய உடலைத் தான் ஒருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய் (முதல் ஒன்றாய்), சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய் (இரு பெண் ஆண்), சத்துவம், இராஜசம், தாமதம் என்னும் முக்குண வடிவினனாய் (குணம் மூன்றாய்), எக்காலத்தும் மாறுபடாத நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவினனாய், வான், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பூதங்களாய், நாக்கு என்னும் பொறியைக் கவருகின்ற உப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவைகளாய், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியிலும், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழ் மொழியிலும் வழங்கப் பெறுகின்ற ஓசைகள் ஏழாகவும், நேர்திசைகள் நான்கு,  கோணத் திசைகள் நான்கு என எட்டுத்திசைகள் ஆகியவற்றில் நிறைந்தவனாய், கண்ணும் ஒளியும், கதிரும் சூரியனும், ஒளியும் சூடும் போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளில் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. இது மேற்குறித்த பாடலின் பொழிப்புரை.

எல்லாம் வல்ல தனமையன் ஆன இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்றால், "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" தில்லைக் கூத்தன் என்றார் அப்பர் பெருமான். "மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" ஆகிய இறைவன் திருமுதுகுன்றம் என்று இன்றைக்கு வழங்கப் பெறும் விருத்தாசலத்தில் திருக்கோயில் கொண்டு உள்ளான் என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். “தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி” என்றார் மணிவாசகப் பெருமான். தில்லையிலே திருநடனம் புரிகின்ற பெருமான் எல்லா உயிர்களிலும் விளங்குகின்றான். "இறைவரோ தொண்டருள் ஒடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்றார் ஔவைப் பிராட்டியார். இக் கருத்தை வலியுறுத்தி, இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்பதற்கு விடை பகருகின்றது "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்....


"இந்து இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்

இந்து இரவி காந்தத்து இலங்குமே --- இந்து இரவி

நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்

நேத்திரத்தோர் பாலே நிறைவு."

இதன் பொருள் ---

திங்கள், ஞாயிறு என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்தத் திங்கள், ஞாயிறு ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும்.  அதுபோல, திங்கள் ஞாயிறு என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அக் கடவுளின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.

    (இந்து - சந்திரன். இரவி - சூரியன். கிரணம் - ஒளி. நேத்திரம் - கண். நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன்.  நேத்திரத்தோர் - அடியவர்.)

அடியவர்கள் என்றும் எளிய தோற்றத்துடனேயே இருப்பார்கள். அவர்களிடத்தில் பகட்டு இருக்காது. இறையருளைப் பெறுவதற்கான சாதனங்கள் இருக்கும். அவர்களது தோற்றத்தைக் கண்டதுமே, இறைவனைக் கண்டதாகவே எண்ணி வணங்கி வாழ்தல் வேண்டும். இதை,


"எவரேனும் தாமாக இலாடத்து இட்ட

    திருநீறும் சாதனமும் கண்டால், உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

    உகந்து அடிமைத் திறம்நினைந்து, அங்கு உவந்து நோக்கி,

இவர்தேவர், அவர்தேவர் என்று சொல்லி

    இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணிக்

கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே."

என்னும் திருத்தாண்டகத்தால் காட்டி அருளினார் அப்பர் பெருமான்.

யாவராக இருந்தாலும், நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பி நோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.


அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின்

-----


    மனிதன் உலகில் தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழ வைக்கவும் பிறந்தவன். இந்த உண்மையை உணராத சிலர், தமது வாழ்வே பெரிதென எண்ணி, தம் வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். மனிதராகப் பிறப்பு எடுத்து, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இல்லாத, விலங்கு மனம் படைத்தோரால் இந்த அவலம் ஏற்பட்டது.

    உருவத்தால் ஒத்து இருப்பதாலேயே மக்கள் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் பண்பாகிய, பகுத்தறிவு என்று சொல்லப்படும் ஆறாவது அறிவு பொருந்தி இருக்கவேண்டும். பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவாகிய மன அறிவைக் குறிக்கும். மன அறிவு என்பது, "நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல்" என்று தொல்காப்பிய வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது.


“உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால், வெறுத்தக்க

பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.” -- திருக்குறள்.


    மனிதன் தனக்குள்ள விலங்குத் தன்மையில் இருந்து நீங்கவேண்டுமானால், இலங்கு நூல்களை அவன் படித்து ஒழுகவேண்டும். உள்ளத்தில் உள்ள கசடு அறும்படியாகக் கற்க வேண்டும். கற்ற வழி நிற்றல் வேண்டும்.


"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்"             ---  திருக்குறள்.


இதன் பொருள் ---


     அறிவு துலங்கும் நூல்களைக் கற்றாரோடு, அவற்றைக் கல்லாதவரை ஒப்பு நோக்க விலங்கையும் மக்களையும் போல்வர்.


      மனித வடிவில் இருப்பதாலேயே ஒருவனை மனிதன் என்ற கொள்ள முடியாது. அவரவர்க்கு உள்ள குணங்களை வைத்து, அவர் இன்ன விலங்கு என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவரோடு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்னும் கருத்து அமைய, "குமரேச சதகம்" என்னும் நூலில் ஒரு பாடல் உள்ளது.


“தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி

     தள்ளிச்செய் வோர்குரங்கு;

சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்

     தாம்பயன் இலாதமரமாம்;


வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு

     வெறியர்குரை ஞமலியாவர்;

மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்

     மேன்மையில் லாதகழுதை;


சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்

     தூங்கலே சண்டிக்கடா;

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்

     துட்டனே கொட்டுதேளாம்;


மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை

     வலமாக வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.”


இதன் பொருள் ---

     மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா - முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு - தான் கொண்டது தான் கொள்கை எனக் கொண்டு, பெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர், மனிதர்களில் குரங்கு போன்றவர்.

     சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் - பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில், குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர்.

     வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர் - வேண்டுமென்றே எளியவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள்.

     மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை - தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்.

     சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா - சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்குமூஞ்சியே, மனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான்.

      சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் - மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்யும் கீழ்மகன் தான் மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.


     “பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறினார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.


    வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லை என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.


    அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் உயர்ந்த உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும். நாடு நலம் பெற்றால் வீடும் நலம் பெறும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.  

     

    "மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

 

      திருவள்ளுவ நாயனார்,  "இன்னா செய்யாமை"  என்னும்  அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார்.

 

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."                 --- திருக்குறள்.


    “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்கிறது ‘கொன்றைவேந்தன்’ முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்பட்டது.  முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன்,  செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம். 


    எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளை மட்டுமாவது செய்யாது இருத்தல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது. 


புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.


“பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.


இதன் பொருள் -– 


    பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும்,  தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.


    எனவே, நன்மை செய்து வாழ்வது நல்லது. நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், நன்மையை மனத்தால் விழையலாம். நன்மை செய்ய மனம் இல்லாவிட்டாலும், தீமையாவது செய்யாமல் வாழப் பழகிக் கொள்வது நன்மையைத் தரும். அதுவே அறம் கூறும் ஆக்கம் தரும்.



பொது --- 1118. நீரும் நிலம் அண்டாத

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நீரும்நிலம் அண்டாத (பொது)


முருகா! 

சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.



தானதன தந்தான தானதன தந்தான

     தானதன தந்தான ...... தனதான


நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி

     நீளமக லஞ்சோதி ...... வடிவான


நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல

     நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்


சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத

     சோதிமரு வும்பூமி ...... யவையூடே


தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட

     சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே


வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்

     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல


வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட

     மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே


ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு

     மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா


ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத

     லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.


                         பதம் பிரித்தல்


நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி,

     நீளம் அகலம் சோதி ...... வடிவான


நேசம் மலரும் பூவை, மாது இன் மணமும் போல,

     நேர்மருவி, உண்காதல் ...... உடன்மேவி,


சூரியன் உடன் சோமன் நீழல் இவை அண்டாத,

     சோதி மருவும் பூமி ...... அவை ஊடே,


தோகை மயிலின் பாகன் ஆம் என மகிழ்ந்து ஆட,

     சோதி அயிலும் தாரும் ...... அருள்வாயே.


வாரி அகிலம் கூச, ஆயிர பணம் சேடன்

     வாய்விட ஒட, எண் பாலும் ...... உடுபோல,


வார் மணி உதிர்ந்து ஓடவே, கவின் நிறைந்து ஆட,

     மாமயில் விடும் சேவல் ...... கொடியோனே!


ஆரியன், அவன் தாதை, தேடி இனமும் பாடும்

     ஆடல் அருணஞ் சோதி ...... அருள்பாலா!


ஆனை முகவன் தேடி ஓடியெ, அணங்கு ஆதல்

     ஆசை மருவும் சோதி ...... பெருமாளே.

பதவுரை

வாரி அகிலம் கூச --- கடல்கள் எல்லாம் அஞ்சவும்,

ஆயிரம் பணம் சேடன் வாய் விட ஒட --- ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும்,

எண்பாலும் உடு போல வார் மணி உதிர்ந்து ஓடவே … அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், (ஏ – அசை)

கவின் நிறைந்து ஆட ---  அழகு நிறைந்த நடனம் செய்யும்படி,

மாமயில் விடும் --- பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற,

சேவல் கொடியோனே ---  சேவலங்கொடியை உடையவரே!

ஆரியன், அவன் தாதை தேடி இனமும் பாடும் --- பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற

ஆடல் அருணம் சோதி அருள்பாலா --- ஆடலையுடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனை முகவன் தேடி ஓடியே --- ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும்,

அணங்கு ஆதல் ஆசை மருவும் சோதி பெருமாளே --- வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

நீரும் நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி ... மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல,

நீளம் அகலம் சோதி வடிவான ... நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும்,

நேச மலரும் பூவை ---  அன்பு விரிகின்ற இதயமலரை

மாது இன் மணமும் போல நேர் மருவி --- அழகும் இனிய வாசனையும் போல கலந்து

உண் காதலுடன் மேவி --- உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து,

சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத --- சூரியனுடைய வெயில், சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும்,

சோதி மருவும் பூமி அவை ஊடே --- ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே,

தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட --- தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய

சோதி அயிலும் தாரும் அருள்வாயே --- ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.

பொழிப்புரை

கடல்கள் எல்லாம் அஞ்சவும், ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் வாயைப் பிளந்து ஓடவும், அவனுடைய பணாமகுடத்தில் உள்ள நீண்ட நாகரத்தினங்கள் எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்களைப் போல் சிந்திச் சிதறவும், அழகு நிறைந்த நடனம் செய்யும்படி, பெருமை மிக்க மயிலை ஏவுகின்ற, சேவலங்கொடியை உடையவரே!

பிரமதேவரும் அவருடைய தந்தையாகிய திருமாலும் அடிமுடிகளைத் இன்னமும் துதித்துப் பணிகின்ற ஆடலை உடைய சிவந்த சோதி வடிவாக விளங்கும் சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

ஆனைமுகத்தை உடைய தாரகாசுரன் போர்க்களத்தில் தேடியும் ஓடியும், வருத்தத்தை அடைந்து முடிவு பெறுதலை விரும்புகின்ற சோதி மயமான, பெருமையின் மிக்கவரே!

மண்ணும் தண்ணீரும் கலவாத தாமரைக் கொடி படர்ந்து செல்ல, நீளமும் அகலமும் உடைய ஒளி வடிவாக விளங்கும், அன்பு விரிகின்ற இதயமலரை, அழகும் இனிய வாசனையும் போல கலந்து, உள்ளத்தை உண்ணுகின்ற காதலோடு அடைந்து, சூரியனுடைய வெயில் சந்திரனுடைய சீதகிரணம் என்ற இந்த இரண்டும் பொருந்தாததும், ஞானஒளியுடன் விளங்குவதுமாகிய சகஸ்ராரம் ஆகிய பேரம்பலமாகிய அத்தலத்திலே, தோகையை உடைய மயில்போன்ற உமையை ஒரு பாகத்திலே கொண்ட நடராஜமூர்த்தியைப் போல் இன்புற்று நிருத்தம் புரிய, ஒளிமிக்க வேலையும், உமது திருமார்பில் தரித்த திருமாலையையும் தந்து அருள் புரிவீர்.


விரிவுரை

நீரும் நிலம் அண்டாத தாமரை ---

தாமரை மண்ணில் தண்ணீரில் தொடர்புடன் முளைப்பது. இங்கே தண்ணீரும் மண்ணும் சம்பந்தப்படாத தாமரைக் கொடி என்பது மூலாதாரத்தில் இருந்து முளைத்து எழுகின்ற சுழுமுனையைக் குறிக்கின்றது. அது தாமரைக் கொடிபோல் வளைந்து வளைந்து மேல்நோக்கிச் செல்கின்றது.

“பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்று உண்டு,

தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது,

ஊரில்லை காணும், ஒளியது ஒன்றுண்டு,

கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.”. – திருமந்திரம்


நீளம் அகலம் சோதி வடிவான நேச மலரும் பூ ---

பூ - இதயமலர். இதய புண்டரீக மலர். இதயக் கமலம். அப் புண்டரீகமலர் மீது ஒரு மின்னொளி வடிவாக இடையறாது ஒரு பரம்பொருள் திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றது.


மாதின் மணமும் போல் நேர் மருவி உண்காதல் உடன் மேவி ---

மாது - அழகு. அழகும் இனிய மணமும்போல் அப் பரம்பொருளைச் சார்ந்து அருட்காதலுடன் இதனுடன் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும்.

"அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே" என்ற சிவஞானபோத எட்டாவது சூத்திரத்தின்படி, அதனுடன் அனன்னியம் பெற்று திருவடியில் ஆன்மா தங்கி நிற்கும். அவ்வாறு நின்ற ஆன்மா, பாசநீக்கம் பெற்று பரமானந்தம் எய்தி, பாவனாதீத நிலையில் நிற்கும்.

அவனே தானே ஆகிய அந்நெறி

ஏகன்ஆகி இறைபணி நிற்க

மலமாயை தன்னொடு வல்வினை இன்றே.. ---  சிவஞானபோதம் 9-ஆம் சூத்திரம்.


சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி அவையூடே ---

அவை - சபை.  அது சகஸ்ராரம் ஆகிய பேரம்பலம்.

இதயாகாசம் - சிற்றம்பலம்.

சகஸ்ராரம் - பேரம்பலம்.

சகஸ்ராரம் என்பதைத் திருக்கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உணர்த்துகின்றது.

சகஸ்ராரமாகிய மேலைப் பெருவெளியில் சூரியசந்திரர்களுடைய வெய்யிலும் நிலவும் இல்லை. ஆனால், அங்கு இடையறாத ஒரு பேரொளி விளங்கிக்கொண்டு இருக்கும். இடையறாத சிவயோக சாதனை செய்து சகஸ்ரார சித்தி பெற்றோர்களே அதனை அறிவார்கள்.

"வான்இந்து கதிர் இலாத நாடு அண்டி, நமசிவாய வரை ஏறி" என்று பழநித் திருப்புகழில் இதே கருத்தை அடிகளார் கூறி இருக்கின்றார். “இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத பொன் இடம்” என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார் பாடி உள்ளார். 


தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்தாட ---

தோகைமயில் - தோகைமயில் போன்ற உமையம்மையார். உவமை ஆகுபெயர்.

இனி, மயிலாக இருந்து சிவபெருமானைப் பூசித்தவர் என்றும் பொருள்படும்.  அம்பிகை மயில் உருவுடன் வழிபட்ட திருத்தலம் திருமயிலாப்பூர்.

உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட நடராஜ மூர்த்தியைப் போல் அடியேனும் நடனம் புரிந்து இன்புற வேண்டும் என்று வேண்டுகின்றார். ஆடுவது மகிழ்ச்சியினால் விளையும் மெய்ப்பாடு. துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெற்ற ஆன்மா இன்ப நடம் புரியும்.


சோதி அயிலும் தாரும் அருள்வாயே ---

அயில் - கூர்மை. அது வேலாயுதத்தைக் குறிக்கின்றது. வேலை எனக்கு அருள் புரியும் என்பதன் உட்பொருள், வேல் பரபூரண ஞானமாதலின், ஞானத்தை அருள்புரியும் என்பதாகும். காதல் கொண்ட தலைவி காதலனுடைய மலர்மாலையை விரும்புவாள். இங்கே அருட்காதல் கொண்ட பக்குவம் உள்ள ஆன்மா முருகவேளுடைய மலர்மாலையை விரும்புகின்றது.

மால்கொண்ட பேதைக்குஉன்    மணநாறும்

மார்தங்கு தாரைத்தந்து அருள்வாயே.      ---நீலங்கொள் திருப்புகழ்.


வாரி அகிலம் கூச ---

மயில் ஆடுகின்ற போது எழு கடல்களும் அஞ்சின. அகிலம் - எல்லாம்.  

“குசைநெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்

கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து

அசைபடு கால்பட்டு அசைந்து, மேரு அடியிட, எண்

திசைவரை தூள்பட்ட, அத் தூளின் வாரி திடர்பட்டதே.”

என்ற கந்தர் அலங்காரப் பாடலினால், மயிலின் பெருமையை அறிக.


ஆயிரம் பணம் சேடன் வாய்விட ஓட ---

ஆயிரம் பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் மயிலின் நடனத்தைக் கண்டு அஞ்சி, தனது வாய்களைப் பிளக்கவும், பயந்து ஓடவும் செய்தான். விடவும் ஓடவும் என விரிக்க. 

“செக்கர் அளகேச சிகர ரத்நம் புரி ராசிநிரை

   சிந்தப் புராரி அமிர்தம்

திரும்பப் பிறந்தது என ஆயிரம் பகுவாய்கள்

   தீ விஷங் கொப்புளிப்பச்

சக்ரகிரி சூழ வரு மண்டலங்கள் சகல

   சங்கார கோர நயனத்

தறுகண் வாசுகி பணாமுடி எடுத்து உதறும் ஒரு

   சண்டப் பரசண்ட மயிலாம்”. -– மயில் விருத்தம்.

எண்பாலும் வார்மணி உதிர்ந்து ஓடவே ---

ஆதிசேடனுடைய பணாமகுடங்களில் உள்ள நீண்ட நாகரத்தின மணிகள் உதிர்ந்து, எட்டுத்திக்குகளிலும் சிந்தி ஓடின.  மணிகள் உதிர்கின்ற அளவில் அஞ்சி சேடன் ஓடினான் என்று குறிப்பிடுகின்றார்.


கவின் நிறைந்த மாமயில் விடும் சேவற்கொடியோனே ---

மயிலை ஆடவிடுகின்ற சேவலனே என்று பொருள். மயில் என்ற இடத்தில், இரண்டாம் வேற்றுமை தொக்கி நிற்கின்றது. எனவே, "மயில் விடும்" என்பதற்கு "மயிலை விடும்" என்று பொருள் செய்யப்பெற்றது.

உலகம் இன்புறும் பொருட்டு, நாத தத்துவத்தினின்றும் சுத்தமாயையை கலக்கி, அதினின்றும் ஏனைய தத்துவங்களை இறைவன் உண்டாக்குகின்றான்.

இந்த உட்பொருளை விளக்கவே முருகவேள் மயிலை நடனம் செய்ய விடுகின்றார் என்று அடிகளார் குறிப்பிடுகின்றார்.


சேவல் கொடியோனே ---

சேவல் - நாத தத்துவம். மயில் விந்துத் தத்துவம். நாத தத்துவத்தை உடையவன் முருகன்.

மயில் ஆடுவதனாலும் சேவல் கூவுவதனாலும், சிவதத்துவங்கள் விளக்கமுற்று, அதனால் வித்யா தத்துவங்களும், ஆன்ம தத்துவங்களும் தொழிற்படுகின்றன. 


ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள்பாலா ---

ஆரியன் – பிரமதேவன்.  

அவன் தாதை – பிரமதேவரின் தந்தை ஆகிய திருமால்.

மாலும் அயனும் காணாத சோதி வடிவாய் நின்ற சிவமூர்த்தியின் திருக்குமாரர் முருகவேள்.

பிரமன் - இராஜச குணம். திருமால் - தாமத குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனை அடைய முடியாது.

மால் அயன் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள் வருமாறு ---

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.


ஆடல் அருணம் சோதி ---

அருணம் - சிவப்பு. இறைவர் சிவந்த சோதி வடிவானவர். அது கருணை நிறைந்த சோதி என்க.


அருட்சோதி --- அருள்மயமானது.

சுயஞ்சோதி ---  தானே விளங்குவது.

பரஞ்சோதி --- பெரிய பொருளாக விளங்குவது.

சிவசோதி --- மங்கலத்தைத் தருவது.

ஞானசோதி --- அறிவின் வடிவாயது.

ஏமசோதி --- இன்பத்தை வழங்குவது.

வாமசோதி --- அழகியது.

நடனசோதி --- எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது.

இவ்வாறு பற்பல நாமங்களையும் கொண்டது சோதி ஆகும்.


ஆனைமுகவன் தேடி ஓடியே அணங்கு ஆதல் ---

ஆனைமுகவன் - தாரகாசுரன். அவன் போர் எங்கே என்று தேடி வருபவன். தேவர்கட்குப் பெருந்துயர் செய்தவன். மாயையில் வல்லவன்.

அணங்கு - வருத்தம். அவன் வருத்தத்தை அடைதலை அடியவர்களாகிய அமரர் பொருட்டு ஆறுமுகப் பெருமான் புரிந்தனர்.


கருத்துரை


முருகா! சிவயோக நெறியில் நிற்க அருள்புரிவீர்.









28. நிலையில் தாழாமை

“தலைமயிரும், கூர்உகிரும், வெண்பல்லும் தம்தம் நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத் தானத்தில் பூச்சியமே சாரும்; நிலைதவறும் தானத்தில் பூச்ச...