நாய்க்கு நிகரானவர்கள்.
-----
காரியாசான் என்பவர் பாடியது “சிறுபஞ்சமூலம்” என்னும் நூல். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் ஆகிய பஞ்சமூலங்கள் (வேர்கள்) மக்கள் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்து உணர்கின்றவர் பிறவி நோயைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்டவல்லதாக இந்நூல் விளங்குகிறது.
இந்நூலில் நாய்க்கு நிகராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்கள் ஐவர் குறித்துப் பாடப்பட்டுள்ள பாடல்...
“நாணில னாய்,நன்கு நள்ளாதா னாய், பெரியார்ப்
பேணில னாய்,பிறர் சேவகனாய் - ஏண்இல்
பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்
பருத்தி பகர்வுழி நாய்.”
இதன் பொருள் ---
நாண் இலன் நாய் – நாணமில்லாதவன் நாய்க்கு நிகரானவன், நன்கு நள்ளாதான் நாய் – நன்மை ஆகப் பிறரோடு நட்புக் கொள்ளாதவன் நாயோடு ஒப்பாவன், பெரியார்ப் பேணிலன் நாய் - தாய் தந்தையர் முதலிய பெரியாரைப் போற்றிக் காக்காதவன் நாயோடு ஒப்பாவான். பிறர் சேவகன் நாய் - பிறருடைய பணியாளனாய் இருந்து வாழ்பவன் நாயைப் போல்வன், ஏண் இல் பூண் பொருந்திய முலையார் சேரி - உயர்வு இல்லாத, பூண் பொருந்திய நகைகளை அணிந்த முலைகளை உடைய பரத்தையரது தெருவில், (அவர்களது ஆசையால் திரியும்) கைத்து இல்லான் - கைப்பொருள் இல்லாதவன், பருத்தி பகர்வுழி நாய் - பருத்தி விலை கூறுமிடத்தில் போய் நிற்கின்ற நாய்க்கு நிகரானவன்.
இப் பாடலுக்கான விளக்கத்தைச் சிந்திப்போம்.....
1. நாண் இலன் நாய் – நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பு ஆவான். “நாணம்” என்னும் சொல்லுக்கு, வெட்கம், அறிவு, பயபக்தி, மானம், தணிகை, கூச்சம், பெண்களுக்கு உரிய குணங்களுள் ஒன்று என்று பொருள். “நாணுதல்” என்னும் சொல்லுக்கு, வெட்கப்படுதல், மனம் குன்றுதல், பயபக்தி காட்டுதல், அஞ்சுதல், பிணங்குதல், அடங்குதல், குவிதல் என்று பொருள். திருவள்ளுவ நாயனார், பொருட்பாலில், “நாணுடைமை” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து உள்ளார். நாணுடைமை என்பது, சால்பு முதலிய பண்புகளில் உயர்ந்தோர், தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையாம் தன்மை என்றார் பரிமேலழகர். அறம் பொருள் இன்பங்களில் பிறர் பழியாமல் ஒழுகுதல் என்றார் மணக்குடவர்.சுருங்கச் சொன்னால், தவறி நடத்தலுக்கு மனம் ஒடுக்கம் கொள்ளுதல் என்பர் பெரியோர்.
உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மற்றவையும் மனினுக்குச் சிறப்பைத் தருவன அல்ல. மனிதனுக்குச் சிறப்பு நாணம் உடைமை என்பதால், “ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறு அல்ல, நாணுடைமை மாந்தர் சிறப்பு” என்றும், உயிரினங்கள் அனைத்தும் உடம்பை நிலைக்களமாகக் கொண்டவை. சிறந்த மக்களின் சான்றாண்மை நாணம் என்னும் நலத்தினை நிலைக்களமாக உடையது என்பதால், “ஊனைக் குறித்த உயிர் எல்லாம், நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு” என்றும், நாணத்திற்கு உறைவிடம் என்று கருதப்படுபவர், பிறரிடத்தில் உண்டாகும் பழியினையும், தம்மிடையே உண்டாகும் பழியினையும் ஒப்பிட்டு நாணுபவரே என்பதால், “பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி என்னும் உலகு.” என்றும், உள்ளத்தில் நாணம் இல்லாதவரது நடமாட்டம், மரத்தினால் உருவாக்கப்பட்ட பாவையானது கயிற்றினால் உயிர் உள்ளது போல் கண்டாரை மயக்குவதைப் போன்றது என்பதால், “நாண் அகத்து இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டி அற்று” என்றும் அருளிச் செய்த திருவள்ளுவ நாயனார்.
“நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” என்கிறது முதுமொழிக் காஞ்சி என்னும் நூல். வெட்கங்கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கையானது பசித்தலாகிய துன்பத்தின் நீங்கி ஒழியாது என்பது இதன் பொருள். வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால் உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறானது அல்ல. அதனோடு ஒத்ததே. துன்ப அளவால் இரண்டும் ஒக்கும் என்றாலும், பசிக்குப் பரிகாரம் உண்டு, அழிந்த நாணுக்கு உயிர்விடுவதன்றி வேறு பரிகாரமில்லை. ஆகவே "உயிரினும் சிறந்தன்று நாணே" என்பது பெறப்படும். “மானம் அழிந்தபின் வாழாமை முனி இனிதே” என்பது இனியவை நாற்பது. பெருமை அழிந்த பிறகு உயிர் வாழாது இருப்பது இனிமையானது. எனவே, நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பானவன் என்பது பெறப்படும்.
2. நன்கு நள்ளாதான் நாய் ---
நன்கு – நலம் விளையும்படி. நள்ளுதல் – நட்புச் செய்தல். நட்பு என்பது இரத்த உறவுகளைக் கடந்து, அன்பால் பிணைக்கப்பட்ட உன்னதமான உறவு ஆகும். சாதி, மதம், வயது மற்றும் இனம் கடந்து, நம்பிக்கை மற்றும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு, துன்பத்தில் கைகொடுத்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் ஒரு தூய உறவுதான் நட்பு. ஒருவரை நல்வழிப்படுத்தி, வாழ்க்கையை அழகாக்கும் நல்ல நண்பர்கள், வாழ்வில் பாதுகாப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றனர். இன்ப துன்பங்களை சமமாகப் பகிர்ந்து, சுமையைக் குறைப்பது உண்மை நட்பு. தவறு செய்யும்போது திருத்தி, நல்வழிப்படுத்துபவன் உண்மையான நண்பன். ஒரு நல்ல நண்பன் நம்பகமான ஆலோசகராகவும், குடும்ப உறுப்பினரைப் போலவும் செயல்படுவான். இக்கட்டான காலங்களில், “உடுக்கை இழந்தவன் கை போல" துணையாக நிற்பது நட்பு.
நட்பினது சிறப்பை உணர்த்த, திருவள்ளுவ நாயனார், “நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். ஆராய்ந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்த, “நட்பு ஆராய்தல்” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தீமை தரும் நட்புக் கூடாது என்பதை உணர்த்த, “தீநட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தகாத நட்பு கூடாது என்பதை உணர்த்த, “கூடா நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் பழகி இருக்க வேண்டுவதில்லை. புறத் தொடர்பும் அவசியம் இல்லை. ஒத்த உள்ளுணர்வு இருந்தால் போதும். பிசிராந்தையார் என்னும் புலவரிடையேயும், கோப்பெருஞ்சோழன் என்னும் அரசரிடையேயும் இருந்த நட்பும், அப்பர் பெருமானும், அப்பூதி அடிகாளரும் கொண்டிருந்த நட்பும் சிந்தனைக்கு உரியவை ஆகும். நல்லாரோடு கொண்ட நட்பு, இன்பத்திலும், துன்பத்திலும் ஒரு தன்மைத்தாகவே இருக்கும். நல்லார் அல்லாரோடு கொண்ட நட்பானது ஆக்கம் உள்ளபோது அகம் மகிழ்ந்து, கொஞ்சிக் குலாவி இருக்கும். அல்லாத காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். நண்பனும் பகைவனாக மாறிப் போகும் நிலையும் வரும். நட்பு செய்வதற்கு உரியவரை அவரது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கங்களால் தெளிந்து கொள்ளவேண்டும்.
நல்லோர் நட்பு குறித்து, "குமரேச சதகம்" கூறுவதைக் காணலாம்.
“மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,
வளரும் அப்போது வளரும்;
வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்
வற்றிடும், பெருகில்உயரும்;
பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,
பொங்கு காலம் தழைக்கும்;
புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,
போது உதயம் ஆகில்மலரும்;
தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது
தேறில் உயிரும் சிறக்கும்;
சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்
சிநேகம் அப்படி ஆகுமே;
வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய
வால! குருபர! வேலவா!
மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய - குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே! வால - குமாரக் கடவுளே! குருபர – மேலான குருநாதனே! வேலவா - வேலாயுதக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் - பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும். வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் - குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும், அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும். பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் - நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும். புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் - தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்; சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும். தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் - இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும், உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும். சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் - தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.
ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்தபொழுது தவளைகள் பல வந்து சேரும். நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ளபொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி, எல்லாரும் வந்து ஒருவனை அடுத்து நிற்பர். செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர்.
“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.”
இது ஔவையாரின் "முதுரை". இங்கு நினைவு கூரத் தக்கது.
நீர் உள்ளபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும். அது அற்றபோது அவை அயலே பறந்துபோகும். குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும், அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார்.
பற்று அற்ற நிலைக்கு, நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்து உள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவாக விளக்கியுள்ளது.
பின்வரும் நாலடியார் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.
“கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,
வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை
நயப்பாரும் நட்பாரும் இல்.”
இதன் பொருள் ---
மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒருமுறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.
நட்பின் அருமையை உணராதவர், ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயைப் போன்றவர் என்பது தெளிவு. ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயானது அதனையும் நக்கும் என்பதால், அந்தப் பானையைப் பரண்மீது வைத்திருப்பர்.
3. பெரியாரைப் பேணாதவன் நாய் ---
"பெரியாரைப் பிழையாமை" என்பது திருக்குறளிலும், நாலடியாராலும் கூறப்பட்டுள்ளது. கல்வி அறிவு ஒழுக்கங்களால் தம்மினும் உயர்ந்த பெரியவர்களை இகழாமல் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.
காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.
"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்." --- திருக்குறள்.
கற்று உணர்ந்த பெரியவர்கள் உலகத்தில் இருப்பதே மிக அருமையானது. கற்று உணர்ந்த பெரியவர்களின் தொடர்பு கிடைப்பது மிகமிக அருமையானது. நல்வாய்ப்பாகக் கிடைத்தாலும், அந்த நட்பை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை" என்று தள்ளி வைத்து விட்டு, "தாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்" என்று இகழ்ந்து, அருமையான வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்கிறது "நாலடியார்".
“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை,
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ,
பயம்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல,
நயம் இல் அறிவினவர்”
இதன் பொருள் ---
தம்மிடத்து உள்ள பொன்னைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வதற்கு அரிய பெரியோர்கள் நட்புத் தமக்குக் கிடைக்கப் பெற்று இருந்தும், அவர்களின் அரிய நட்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, அந்தோ! நல்லறிவு இல்லாத கீழ்மக்கள் பொழுதை வீணாகக் கழிப்பர்.
செல்வத்தை முயன்று தேடினால் பெறலாம். பெரியவர்கள் நட்பு முயன்று தேடினாலும் கிடைக்கப் பெறாது. கற்று உணர்ந்த பெரியோர்கள் நட்பு ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது என்றால், அது அவன் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயன் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைத்த அருமையான நட்பை உரிய முறையில் பயன்படுத்தி, தமக்கு உறுதியைத் (நன்மையைத்) தேடிக்கொள்ளமால், வாழ்நாளை வீணாக்குவோர் அறிவு அற்ற (நயம் இல்லாத) மூடர்கள் ஆவார். மூடர்களிடத்திலும் அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார். பொருளையும் புகழையும் தேடி அலவைதால் பயனில்லை. நன்னெறியில் நடவாமையால் புகழானது நாளடைவில் தேய்ந்து போகும். பொருள் நிலையில்லாமல் நீங்கும்.
வள்ளல்பெருமான் இப்படிப்பட்டவர்களைக் கண்கெட்ட குருடர் என்றும், பாழாகிப் போன குட்டிச்சுவர் என்றும் இகழ்ந்து கூறுகிறார்.
"கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்தமைக்
காண்பதே அருமை, அருமை;
கற்பதரு மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்
கருணையால் அவர் வலியவந்து,
இற்புறன் இருப்ப அது கண்டும் அந்தோ! கடிது
எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு
இயல்உறுதி வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்
ஏமாந்து இருப்பர், இவர்தாம்
பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்று,மேல்
புல் ஆதி உ(ண்)ணும் உயிர்களும்
போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்
புறச்சுவர் எனப் புகலலாம்;
வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா
மணிஉலக நாதவள்ளல்
மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற
வளர் வயித்திய நாதனே." --- திருவருட்பா.
இதன் பொருள் ---
நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டி உயரும் தவத்தோர்க்குச் சிகாமணி ஆக விளங்கும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வைத்தியநாதப் பெருமானே! கற்பதற்கு உரிய நன்னூல்களைக் கற்று உணர்ந்து ஒழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன் இருக்கும் இடம் தேடி கற்பகமரம் வந்ததுபோல, அருள் மிகுதியால் பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப் புறத்தே நிற்பார்கள் என்றால், விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது, தங்களுக்கு உறுதியானவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்து ஒழிகின்றார்கள். இவர்கள் அழகிய சுவையை அறியும் அறிவு உடையவர் ஆகார். மேலும், புல் முதலியவற்றை மேய்ந்து உண்ணும் விலங்குகளுக்கும் இவர் ஒப்பாகார். இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும் குட்டிச்சுவர் என்று சொல்லலாம்.
கற்ப தரு - கற்பக மரம். இது விண்ணுலகத்தில் உள்ளது என்று கூறுவர். தன்னை அடைந்தவர் விரும்பியதை அளிக்கும் வல்லமை வாய்ந்த மரம் இது என்று கூறுவர். இதனால் பயன் அடைய வேண்டுமானால், அது இருக்கும் இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். கற்கபக மரம் யாரையும் தேடி வராது. (மிடியன் - வறியவன், வறுமை நிலையில் உள்ளவன்) கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த மிக அருமை வாய்ந்த பெரியவர்களை அறிவில்லாத ஒருவன் தேடிச் சென்று, வலம் வந்து வணங்கி, அழைத்துப் போற்றவேண்டும். கற்பக மரமே இருக்கும் இடம் தேடி வறுமையாளன் ஒருவனிடம் வந்ததைப் போன்று, கற்ற பெரியோர் தாமே ஒருவன் இருக்கும் இடம் தேடி வலிய வருவாராயின், அது எவ்வளவோ உயர்ந்த பேறு என்பதை உணர்த்த, “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அப்படி வந்தவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது ஒருவனது கடன் என்பதை உணர்த்த, “கடிது எழுந்து போய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளை அவர்களிடத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தங்கட்கு இயல் உறுதி வேண்டாது, கண் கெட்ட குருடர்போல் ஏமாந்து இருப்பர்" எனவும் அருளிச் செய்தார் வள்ளல்பெருமான்.
நயம் இல்லாத அறிவினை உடையவர், புலன் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அதையும் ஒழுங்காக அனுபவிக்க அறியாதவர்கள் இவர்கள். எனவே, சுவை அறியாத மக்கள் இனத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். புல்லை உண்ணுகின்ற ஆடு, மாடு முதலிய விலங்கினத்திலும் சேர்த்து எண்ணப்படுபவர்கள் அல்லர். இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்று எண்ணல் வேண்டும் என்பதை, “பொற்பினது சுவை அறியும் அறிவு உடையர் அல்லர்; புல் ஆதி உண்ணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் காட்டுகின்றார்.
‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' எனவும், ‘பிள்ளையின் அருமையை மலடி அறிவாளோ?' எனவும், ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தது போல' எனவும் வழங்கப்படும் பழமொழிகளை வைத்து, பெரியோர்களின் அருமையை மூடர்கள் அறியமாட்டார் என்பதைக் கூறுகிறது “குமரேச சதகம்” என்னும் நூல்.
"மணமாலை அருமையைப் புனைபவர்களேஅறிவர்,
மட்டிக் குரங்கு அறியுமோ?
மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,
மலடிதான் அறிவது உண்டோ?
கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள்,
கணிகை ஆனவள் அறிவளோ?
கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை வரும்
களவான நாய் அறியுமோ?
குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,
கொடிய பூனையும் அறியுமோ?
குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்,
கொடுமூடர் தாம்அறிவரோ?
மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர
வனம் ஊடு தழுவும் அழகா!
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே!"
இதன் பொருள் ---
மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனம் ஊடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மைபின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே! மயிலேறி விளையாடு குகனே - மயில்மதீது இவர்ந்து அருள் விளையாடல்களைப் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலைமீது எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே!
மணம் மாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ - மணம் பொருந்திய மலர்மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களே அறிவர், அறிவற்ற குரங்கு அறியுமோ? மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களே அல்லாமல், மலடியானவள் அறிவாளோ? கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகை ஆனவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; விலைமகள் அறிவாளோ? கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர், கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர், கொடு மூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினை உடையவரே அறிவார், கொடிய கயவர்கள் அறிவார்களோ?
ஒருசந்தி - ஒருவேளை. நோன்பு இருக்கும் நாள் அன்று ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒரு சந்தி, ஒருவேளை என்பது வழக்கம். நோன்பு நாளன்று ஒரு வேளைக்குச் சமைப்பதற்கு மட்டுமே பயன்படும் "பாண்டத்தை, ஒரு சந்தியின் பாண்டம்" என்று சொல்லப்பட்டது. நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும் ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' என்று "தண்டலையார் சதகம்" என்னும் நூலிலும் சொல்லப்பட்டு உள்ளது.
"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல்பெருமான் பிறிதோர் இடத்தில் பாடி உள்ளார். எனவே, கற்ற மேலோரைப் போற்றி, அவருடன் கூடி இருந்து, வாழ்நாளை வீணாகப் போக்காமல், நல்லறிவு பெற்று, குற்றம் அற வாழ்வதே வாழ்க்கை ஆகும்.
4. பிறர் சேவகன் நாய் --- இது சிந்தனைக்கு உரியது. ஒருவரை அண்டிப் பிழைக்காமல் வாழவேண்டும் என்று அறிவுறுத்தியாதகக் கொள்ளலாம்.
5. பருத்தி விற்குமிடத்தில் அங்குக் காத்துக் கிடக்கும் நாய்க்கு ஏதும் உணவுப் பண்டம் கிடைக்காது. அதுபோலப் பொருளுக்குத் தம் உடம்பை விற்கும் பொருட்பெண்டிர் வாழுகின்ற இடத்தில், பொருள் இல்லாதவன் போய் ஆசைப்பட்டு நிற்பது பயன் அற்றது. ஆகலின் அவரைப் பருத்தி பகர்வுழி நாய் என்றார். (சேரி - ஒரு வகுப்பார் சேர்ந்திருக்கும் இடம். இது தாழ்ந்த குலத்தினர் வாழும் இடமாக இக்காலத்தில் கற்பிக்கப்பட்டு விட்டது அறிவீனம்)