053. சுற்றம் தழால் - 10 உழைப் பிரிந்து

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து காரணம் இல்லாமல் பிரிந்து போய், பின்பு ஒரு காரணம் பற்றித் திரும்பி வந்த சுற்றத்தவனை, விரும்பிய உதவியைச் செய்து, பொறுத்துப் பார்த்து, ஆராய்ந்து தழுவிக் கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

யாதொரு காரணமும் கருதாது, எவனாயினும் ஒரு சுற்றத்தவன், தன்னைப் பிரிந்து போய், பின்னர் தனக்கு ஏதேனும் ஒரு நன்மை கருதித் தன்னிடத்து வருவானாயின், அவனுக்கு ஆவன செய்தால் ஒழிய தன்னிடத்து இருக்கமாட்டான். எனவே, அவனுக்கு அவன செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மீண்டும் தன்னை விட்டுப் பிரிந்து போய், ஆகாதவர்களோடு கூடி, தனக்குத் தீங்கு செய்ய முயல்வான். எனவே, ஆவன செய்வதுடன், எக்காரணத்தால் தன்னை வந்து இப்போது கூடினான் என்பதை ஆராயவும் வேண்டும் அவ்வாறு ஆராயுங்கால், இவனைப் போலப் பிரிந்து சென்ற சுற்றத்தாரோடு கூடி, தனக்குத் தீமை செய்யச் சென்று, அத் தீமையை செய்வதற்கு இல்லாதபோது தன்னிடம் வந்தானோ? அல்லது ஒரு காரணமும் இல்லாது போய், மீண்டும் தனக்கு நன்மை செய்ய வந்தானோ என்றும் ஆராய்வதுடன், பகை செய்யச் சென்றவனையும் தழுவிக் கொள்ளுதல் வேண்டும். நன்மை செய்தவனையும் அவனது நன்மைக்காகத் தழுவிக் கொள்ளவேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன்

இழைத்து இருந்து எண்ணிக் கொளல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை --- காரணம் இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்து போய்ப் பின் காரணத்தான் வந்த சுற்றத்தானை, 

வேந்தன் இழைத்து இருந்து எண்ணிக் கொளல் --- அரசன், அக்காரணத்தைச் செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.

(வாளா உழைப்பிரிந்து என்றமையின், பிரிதற்குக் காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச் செய்யாதவழிப் பின்னும் பிரிந்து போய்ப் பகையோடு கூடும் ஆகலின், இழைத்திருந்து என்றும், அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான் வந்தமையின், எண்ணிக் கொளல் என்றும் கூறினார். பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப் போய் அதனை ஒழிய வருவானும், பின் நன்மை செய்ய வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“அன்றுதமர் உள்ளம் அறிந்துஅடைந்த வீடணற்குச்

சென்றுஉறுதி சொன்னான், சிவசிவா! --- ஒன்றும்

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்

இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.”

இதன் பொருள் ---

முன்னர் தமது சுற்றத்தாராகிய இராவணன் முதலானோரின் தீய உள்ளக் கிடக்கையை அறிந்து, அவரிடத்து இருந்து நீங்கி, தன்னைச் சரணாக அடைந்த விபீடண ஆழ்வாரை நன்றாக ஆராய்ந்து, நன்மையானதை இராமபிரான் சொல்லி, அடைக்கலம் தந்து காத்தார்.

தமர் - சுற்றத்தார். தமருள்ளம் - இராவணன் முதலியோர் உள்ளம். வீடணன் - விபீடணன். உறுதி - அடைக்கலம். சொன்னவன் - இராமன்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“பலநாளும் பக்கத்தார் ஆயினும். நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்

நீத்தார் எனக் கைவிடல் உண்டோ? தந்நெஞ்சத்

தியாத்தாரோடு யாத்த தொடர்பு.” ---  நாலடியார்

இதன் பொருள் ---

பலநாளும் பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்து பழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும் நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர் சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப் பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர் பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்று கைவிடப் படுதலுண்டோ?

நெஞ்சுப் பிணிப்பு உடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும்.



“நீக்கம் அறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்,

நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்; - பூக்குழலாய்

நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மைநிலை போம்.”   ---  நன்னெறி.

இதன் பொருள் ---

        மலரணிந்த கூந்தலை உடையவளே,!நெல்லினின்றும் உமியானது சிறிதளவு நீங்கி, முன்போலவே ஒட்டிக் கொண்டாலும், முளைத்தற்கு ஏற்ற வலிமை இல்லாது போய்விடும். அதுபோல, பிரிதல் இல்லாத நண்பர் இருவர், மன வேறுபாட்டால் பிரிந்து, முன்போலவே கூடினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவர் பெருமா அற்பம் உடையதாகவே விளங்கும்.

திண்மை - வலிவு. நொய்து - சிறுமை, இங்கு அற்பமாம். புல்லினும் - தழுவினாலும்.


“தன்னை மதித்துத் தமர் என்று கொண்டக்கால்,

என்ன படினும் அவர்செய்வ செய்வதே,

இன்னொலி வெற்ப! இடர் என்னை? துன்னூசி

போம்வழி போகும் இழை.”    --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

இன் ஒலி வெற்ப - இனிய ஓசையை உடைய மலைநாடனே!, தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் - ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து, என்ன படினும் - எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும், அவர் செய்வ செய்வதே - சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே, துன் ஊசி போம்வழி போகும் இழை - தைக்கின்ற ஊசி போகின்ற வழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; இடர் என்னை - வரும் குற்றம் யாது உள்ளது?


053. சுற்றம் தழால் - 09. பொது நோக்கான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "பொதுவாகப் பார்க்காதவனாய், அவரவர் தனிச் சிறப்புக்கு ஏற்றமுறையில் அரசனது பார்வை அமையுமானால், அந்தப் பண்பை விரும்பிப் பலரும் சுற்றி இருப்பர்" என்கின்றார் நாயனார்.

உயர்ந்தார் இழிந்தார் என்று கருதாது, யாவரையும் ஒரு தன்மையராகக் கருதி நடந்தால், அதனை நோக்கி, உயர்ந்தார் தம்மை இழிவு படுத்தியதாக எண்ணி நீங்கி விடுவது பற்றி, பொது நோக்கு கூடாது என்று விலக்கி, சிறப்பு நோக்கு விதிக்கப்பட்டது. சிறப்பு நோக்கு என்பது, உயர்ந்தார் இழிந்தார் என்று அறிந்து, அவரவரது தகுதிக்கு ஏற்றவண்ணம் நடத்தல்.

சுற்றத்தவரில் உயர்ந்த தகுதியில் இருக்கும் ஒருவன், 'தாழ்ந்த நிலையில் இருப்பவன் ஒருவனையும் என்னையும் ஒன்றாக நடத்தினால், என் பெருமை குறைகின்றது, இனி இவனிடத்தில் இருத்தல் ஆகாது' என்று கருதி விலகிப் போவான். அவ்விதம் ஒவ்வொருவராக விலகிப் போவது சுற்றம் இன்மையில் முடியும். எனவே, சுற்றத்தைத் தழுவும் உபாயம் கூறப்பட்டது. 

இதற்குத் திருக்குறள்...

“பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின்,

அதுநோக்கி வாழ்வார் பலர்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் --- எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், 

அது நோக்கி வாழ்வார் பலர் --- அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.

(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப் பொது நோக்கை விலக்கி,  எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சோமாசிமாற நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...

“சோமாசி மாறனார் சுந்தரரால் யாகம் இனிது

ஆமாறு அரனை அழைப்பித்தார், --- ஆமாம்

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.”

இதன் பொருள் ---

சோழமண்டலத்திலே, திரு அம்பர் என்னும் திருத்தலத்தில், அந்தணர் குலத்திலே சோமாசிமாற நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். இவர் திருவைந்தெழுத்தை அன்பினோடு செபித்து வரும் நித்த நியமம் உடையவர். எக்குலத்தினராயினும் எக்குணமுடையராயினும் சிவபத்தி உடையாராயின் அவரே நம்மை ஆளுடையார் என்னும் உறுதியான மெய்யறிவு உடையவர். அடியவர்கள் தம் வீட்டுக்கு வந்தால் அவர்களை எதிர்கொண்டு வணங்கித் திருவமுது செய்விப்பவர்.  சிவபிரானுக்குப் பிரீதியாகிய யாகங்களைப் புகழ் கருதாமலும், பயன் கருதாமலும் நிட்காமியமாக வேதவிதிப்படி செய்பவர்.  இவர் திருவாரூரில் சென்று சைவசமய ஆசாரியராகிய சுந்தரமூர்த்தி நாயனாரை அடைந்து அவர் திருவடிகளிலே பத்தி பண்ணினார். இவர் இயற்றிய யாகத்திலே சிவபெருமான் நேரே அவிர்ப்பாகத்தை ஏற்று அருளினார். அதனாலே நாயனார் சிவபதத்தைப் பெற்றார்.  

எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

“ஒருதிசை ஒருவனை உள்ளி நால்திசைப்

பலரும் வருவர் பரிசில் மாக்கள்,

வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்

ஈதல் எளிதே மாவண் தோன்றல்

அதுநற்கு அறிந்தனை ஆயின்

 பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே.” --- புறநானூறு.

இதன் பொருள் ---

அள்ளிக் கொடுக்கின்ற ஒருவனை நம்பி நால்திசையில் இருந்து பரிசில் பெறப் பலரும் வருவர். அப்படி ஒருவோருக்கு அள்ளிக் கொடுப்பது மிக எளிது. ஆனால், அவரவர் தரம் அறிந்து பிசில் அளிப்பது மிகவும் அரிய செயல் ஆகும். ஏனவே, வள்ளல் புகழ் உடையவனே! பரிசில் வேண்டி வருவோரின் வரிசை அறிந்து, நீ பரிசில் தர நினைப்பாயானால், எல்லோரையும் ஒன்றாகக் கருதுவதை விட்டு ஒழிப்பாயாக.

 

“மாகம் சிறுகக் குவித்து நிதிக்குவை

ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குஉடைய - மாகொல்

பகைமுகத்த வெல்வேலான் பார்வையில் தீட்டும்

நகைமுகத்த நன்கு மதிப்பு.”    --- நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

பகை முகத்த - பகைப்புலத்து உள்ள, மா - (தன் பகைவராகிய) விலங்குகளை எல்லாம்,  கொல் - கொல்லுந் திறனுடைய, வெள் வேலான் - ஒளிமிக்க வேலேந்திய அரசன், நகை முகத்த - (தன்) மலர்ந்த முகத்திற் காணும், பார்வையின் - பார்வையில், தீட்டும் - தோற்றுவிக்கும், நன்கு மதிப்பு - நன்மதிப்புக்கள், மாகம் - வானும், சிறுக - குறையும்படி, நிதிக் குவை குவித்து - (அவ்வளவு பெரிய) பொருட்குவியலைக் குவித்து, ஈகையின் - அவை முழுமையும் அவரவர் தகுதிக்கேற்ப அவ்வரசன் அள்ளிக் கொடுத்தலைப் பார்க்கிலும், ஏக்கழுத்தம் - செம்மாப்பு, மிக்குடைய – பெரிது உடையவாகும்.


“ஊன் உண்டு உழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப்

புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின்

அரசியான் இன்புறூஉங் கீழ் எல்லாம், தத்தம்

வரிசையான் இன்புறூஉம் மேல்.”   ---  நான்மணிக் கடிகை.

இதன் பொருள் ---

ஊன் உண்டு உழுவை நிறம் பெறூஉம் நீர் நிலத்துப் புல்லினான் இன்புறூஉம் காலேயம் - ஊன் உணவை உட்கொண்டு புலி,  மேனி இன்புறும்; ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள புல்லினை மேய்ந்து ஆனிரைகள் இன்புறும்; நெல்லின் அரிசியான் கீழ் எல்லாம் இன்புறூஉம் - நெல்லரிசிச் சோற்றினால்  கீழ்மக்களெல்லாரும் இன்புறுவர்; மேல் தத்தம் வரிசையால் இன்புறூஉம் - மேன்மக்கள் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற மதிப்புச் செயல்களால் இன்புறுவர்.



பாடல் 22

“தஞ்சாக மூவுலகும் ஆண்டு, தலையளித்திட்டு,

எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்

கரந்துஉண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி

இரந்துஉண் டுஇருக்கப் பெறின்.”

இதன் பொருள் ---

    நஞ்சம் கரந்து உண்ட கண்டர் தம் ஒற்றியூர் பற்றி – திருப்பாற்கடலிலே வந்து எழுந்த ஆலாகால விடமானது மறைந்து இருக்கும்படி, திருவமுது செய்த திருக்கழுத்தினை உடைய சிவபரம்ப்பொருள் எழுந்தருளி உள்ள திருவொற்றியூரினைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இரந்து உண்டு இருக்கப் பெறின் – அங்கே பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து இருக்கும் பெரும்பேற்றினை அடியேன் பெற்றால், தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு – அடியேனிடத்து ஒப்படைக்கப் பெற்ற அடைக்கலப் பொருளாக ஏற்று மூன்று உலகங்களையும் குடிகளை நன்கு காப்பாற்றி ஆட்சி புரியும் செல்வத்தை, எஞ்சாமை பெறினும் யான் வேண்டேன் – குறைவு இன்றிப் பெற்றாலும் அதனை யான் விரும்பமாட்டேன். 

    `ஓடு ஏந்தி இரந்து உண்டல்` என்பது துறவு வாழ்க்கையைக் குறிக்கும். 


“படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பார் எலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து, மும்மைக் கடியிலங்கு

தோடு ஏந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்பது உறும்.”\

என்று மேலே நாயனார் பாடி அருளியதைக் கருத்தில் கொள்க.


மெய்யடியார்கள் இறைவன் திருவடி இன்பம் ஒன்றையே விரும்பி இருப்பார்கள். மண்ணுலக இன்பமும் விண்ணுலக இன்பமும் அவர்க்கு ஒரு பொருட்டு அல்ல. “மலர்க் கொன்றைத் தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே” என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் அருள்வாக்கு. “கூடும் அன்பினில் கும்பிடலே ஆன்றி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று மெய்யடியவர்கள் குறித்துத். தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடி அருளி இருப்பது அறிக.  

“அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்

கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்

வண்டு சேர் மயிலாடுதுறை அரன் 

தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.”

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.


“யான் ஏதும் பிறப்பு அஞ்சேன், இறப்பதனுக்கு என் கடவேன்,

வானேயும் பெறில் வேண்டேன், மண்ணாள்வான் மதித்தும் இரேன், 

தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்

மானே! உன் அருள் பெறும் நாள் என்று என்று இருப்பனே”

என்பர் மணிவாசகப் பெருமான்.


“பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண் 

அச்சுதா!. அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும், 

இச்சுவை தவிர, யான்போய் இந்திர லோகம் ஆளும், 

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகர் உளானே”

என்பது தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருள் வாக்கு.  


    தொண்டை நன்னாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான “திரு ஒற்றியூர்” சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் உள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் உள்ளது. மெட்ரோ இரயில் நிலயமும் உள்ளது. இறைவர் திருநாமம்  - ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத் தியாகர். இறைவியார் திருநாமம் - திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை. தல மரம், மகிழ மரம்.

        தேவார மூவர் முதலிகள் ஆகிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடி வழிபட்டுத் திருப்பதிங்கள் அருள்ப் பெற்ற திருத்தலம்.

        வருடத்தில்மூன் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இலிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஆண்டுதோறும், கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு வழிபடலாம்.

    சுந்தரமூர்த்தி நாயனார் – சங்கிலியார் திருமணம் நடைபெற்ற சிறப்புக்கு உரிய திருத்தலம். ஞாயிறு என்னும் ஊரிலே, ஞாயிறுகிழார் என்னும் வேளாளர் ஒருவர் இருந்தார். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் கண்ணுற்ற மாதர் இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறுகிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார்.  அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. சங்கிலியார் சிவனிடத்து அன்பு உடையவராக வளர்ந்தார்.  திருமணப் பேச்சு வந்தபோது,  "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார்.  மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்கு உடன்பாடில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள்.  இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார்.  பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஞாயிறுகிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது.  அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள். ஒருவாறு இனியமொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறுகிழார். அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது.  இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார்.  அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று.  பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.

திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார். வழக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார். இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார். “மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார்” என்பது பெரியபுராணம். அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள். அவள் யார்" என்று வினவினார்.  அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள். அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை. மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார். திருக்கோயிலுக்குச் சென்றார். "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார். வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார்.  மாலைக் காலம் வந்தது.  

சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம். கவலையை ஒழி" என்றார். நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர். இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.

சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார்.  "நம்பியாரூரன் என்பவன் மேருமலையின் மேம்பட்ட தவத்தான். நம் மாட்டுப் பேரன்பு உடையவன். நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை வேண்டினான்.  அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார். சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன். ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர். இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.    சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.

சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறை உண்டு.  அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார்.  நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன். உமது அருள் வேண்டும்" என்றார்.

இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர்,  சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன்.  அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார். அதற்கிசைந்த இறைவர், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான். உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.

சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார்.  தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள். திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார். சந்நிதியை அடைந்தனர்.

நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும்" என்றார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர்.  "சபதம் எங்கே செய்து தருவது" என்றார். "மகிழின் கீழ் அமையும்" என்றனர்.  நம்பியாரூரர் மருண்டார். வேறு வழியில்லை.  "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கிலியைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார்.  அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார். "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார்.  நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார். அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார். தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.

வசந்த காலம் வந்தது. தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது. "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன.  நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்

     நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது.


கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

அவதாரத் தலம் : திருவொற்றியூர்.

வழிபாடு : இலிங்க வழிபாடு.

முத்தித் தலம் : திருவொற்றியூர்.

குருபூசை நாள் : ஆடி - கேட்டை.

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலைகூறி வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

முற்றத் துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம். பட்டினத்தடிகளின் சமாதிக் கோயில் கடற்கரையில் உள்ளது. பட்டினத்து அடிகளார் அருளிய பினவரும் பாடல்களைச் சிந்தித்தால் திருவொற்றியூரின் சிறப்பு நன்கு விளங்கும்.

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."

        மனமே!  முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பதுதான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


"ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு

இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன் - கடுஅருந்தும்

தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்

போவார் அடியில் பொடி."

        புண்கள் உண்டாகி, சீழானது ஒழுகுகின்ற, ஒன்பது துளைகளை உடைய உடலாகிய இந்தப் புண்ணுக்கு இடவேண்டிய மருந்தினை நான் கண்டுகொண்டேன். அது என்னவென்றால், பால்கடலில் வந்த ஆலகால விடத்தை உண்ட, தேவர்களுக்கு எல்லாம் தலைவனான, சிவபெருமான் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தின் வீதிகளில் நடப்பவர்களுடைய பாத தூளியே ஆகும்.


"வாவி எல்லாம் தீர்த்தம், மணல் எல்லாம் சிவலிங்கம்,

காவனங்கள் எல்லாம் கணநாதர் - பூவுலகில்

ஈது சிவலோகம் என்றுஎன்றே மெய்த்தவத்தோர்

ஓதும் திருவொற்றி யூர்."

        இது பூலோக சிவலோகம் என்று உண்மைத் தவம் உடையார் சொல்லுகின்ற திருவொற்றியூர் என்னும் திருத்தலத்தில் உள்ள  குளங்கள் எல்லாம் தீர்த்தங்கள்.  மணல் அனைத்தும் சிவலிங்கம்.  சோலைகளும், நந்தனவனங்களும் சிவகணநாதர்கள்.


           வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வோடு இயைந்த பதி. எழுத்தறியும் பெருமான் மீது பல திருவருட்பாக்களையும், வடிவுடை அம்மை மீது, “வடிவுடைமாணிக்க மாலை” என்னும் அற்புத நூலையும் பாடி உள்ளார் வள்ளற்பெருமான். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சரமே" என்று போற்றி உள்ளார்.


053. சுற்றம் தழால் - 08. தமராகி

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "முன்னே சுற்றத்தாராக இருந்து, ஏதேனும் ஒரு காரணத்தால் தன்னோடு பொருந்தாமல், தன்னைப் பிரிந்து போனவர், மீண்டும் வந்து சுற்றத்தார் ஆகுதல், அப் பொருந்தாமைக்கான காரணம் தன்னிடத்து இல்லாமையால், தானே உண்டாகும்" என்கின்றார் நாயனார்.

ஒருவன் தான் ஒழுகவேண்டிய நெறியைக் கடந்து தீயவழியில் நடப்பதாலும், எல்லோரும் வெறுக்கக் கூடிய செயல்களைச் செய்வதாலும், சுற்றத்தார் நீங்குவர்.  பின்னர், அவன் நன்னெறியில் ஒழுகுவானாயின், முன்னே அவர்கள் நீங்கிய காரணம் இப்போது ஒழியவே, சுற்றத்தவர்க்கு உள்ள அன்பின் மிகுதியால் பழைய முறைப்படி மீண்டும் சுற்றத்தாராக வந்து நிற்பர்.

தீய வழியில் நடத்தலாவது, அறநூல், பொருள் நூல், நீதிநூல் கூறியவாறு நடக்காது, தான் விரும்பியவாறு நடத்தல்; அறிவு உடையார் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தல்.


இதற்குத் திருக்குறள்....

“தமர்ஆகித் தன்துறந்தார் சுற்றம், அமராமை

காரணம் இன்றி வரும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் --- முன் தமராய் வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும் வந்து சுற்றமாதல், 

அமராமைக் காரணம் இன்றி வரும் --- அவ் அமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத் தானே உளதாம்.

('அமராமைக் காரணம் இன்றி' என்றதனான் முன் அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம்'. அஃதாவது, அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல் என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்' வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம் அதனை யொழிய ஒழியும், ஒழிந்தால் அவர்க்கு அன்பு செய்துகொள்ள வேண்டா, பழைய இயல்பாய் நிற்கும் என்பார் 'வரும்' என்றார்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

“தமர் என்று தாம் கொள்ளப் பட்டவர் தம்மைத்

தம் அன்மை தாம் அறிந்தார் ஆயின், அவரைத்

தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை

தம்முள் அடக்கிக் கொளல்.” --- நாலடியார்.

இதன் பொருள் ---

தமர் என்று தாம் கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம் அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக் கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத் தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல் - அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரது நண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல் தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும்.

நட்பில் பிழைபடுவாரைத் தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்.


“மெய்யா உணரில் பிறர்பிறர்க்குச் செய்வதென்?

மையார் இருங்கூந்தல் பைந்தொடி! எக்காலும்

செய்யார் எனினும் தமர்செய்வர், பெய்யுமாம்

பெய்யாது எனினும் மழை.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மை ஆர் இரும் கூந்தல் பைந்தொடி - கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையவளே! மெய்யா(க) உணரின் - உண்மையாக ஆராயின், பிறர் பிறர்க்குச் செய்வது என் - உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது?, எக்காலும் செய்யார் எனினும் - ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும், தமர் செய்வர் - உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள், பெய்யாதெனினும் பெய்யும் மழை - குறித்த ஒரு பருவகாலத்தில் பெய்யாது ஒழியினும் பின்னையும் பெய்வது மழையேயாதலான்.

உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக வேண்டும். 


053. சுற்றம் தழால் - 07. காக்கை கரவா

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "காக்கைகள் தமக்கு உணவு கிடைத்தவிடத்து, ஒளிக்காமல் தமது இனத்தை அழைத்துக் கூடி உண்ணும். அத்தகைய இயல்பு உடையார்க்கே செல்வம் கூடி வரும்" என்கின்றார் நாயனார்.

காக்கைகள் தமக்கு வேண்டும் இரையைக் கண்டபோது, தன் இனமான காக்கைகளை தானே வலிந்து கூவி, சேர்ந்து உண்டு தனது இனத்தைப் பெருக்கிக் கொள்வதுபோல், ஒருவன் தனது இனத்தவரை வலிந்து கூவி அழைத்து, அவர்க்கு வேண்டுவன கொடுத்து, இன்சொல் கூறி, சினமும் கொள்ளாது இருப்பானாயின், சுற்றத்தவர் அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பார். அவ்விதம் அவன் இருத்தலால், பகைவர் அணுகமாட்டார். செல்வம் பெருகும். அதனால் அவன் அறத்தைச் செய்தல் கூடும். இன்பத்தையும் அடைதல் கூடும். இதனால், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் ஒருவன் அடையும் உத்தியைக் கூறினார்.


இதற்குத் திருக்குறள்... 

“காக்கை கரவா கரைந்து உண்ணும், ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

காக்கை கரவா கரைந்து உண்ணும் --- காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், 

ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள --- சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப் பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.

அவ் ஆக்கங்களாவன:- பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்ச உம்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். "அப் பெற்றித்தாய இயல்பு"  என்றது, தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

“ஆர்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்,

பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,

வேட்கை உடையீர்! விரைந்து ஒல்லை உண்ணன்மின்,

காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.”         --- திருமந்திரம்.

        சுற்றத்தார், சுற்றத்தார் அல்லாதார்,  நாடு, மொழி, பிறப்பில் உயர்வு, தாழ்வு, வறுமை, செல்வம், இளமை, முதுமை முதலிய எவ்வகை வேறுபாடுமின்றி யாவருக்கும் உணவு அளித்தல் கடமை ஆகும். வந்தவர் யார் என்று ஏற்றத் தாழ்வு பாராமல், விருப்பு வெறுப்புக் கொள்ளாமல் மனமகிழ்ச்சியோடு, இல்லை என்று சொல்லாமல், அவரவர் குறிப்பினை அறிந்து கொடுத்து வாழுங்கள். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருந்து உண்ணுங்கள். உண்ணத்தக்க காய்கனி கிழங்கு விதை இலை பூ முதலியவற்றை அவ்வாறே கொண்டும், ஏனையவற்றைத் தக்கவாறு சமைத்தும் உண்ணுங்கள். உண்ட மீதியை மறுவேளைக்கு ஆகும் என்றோ, மறுநாளைக்கு ஆகும் என்றோ, போற்றிப் பாதுகாத்து வைக்காதீர்கள்.

சுவையான உணவைக் கண்டவுடனே (பசி எடுக்கின்றதோ, இல்லையோ) உண்ணவேண்டும் என்னும் ஆவல் உண்டாகும். விரைந்து உண்ணவேண்டாம். விரைந்து உண்ணுவதால், உடல் நலம் கெடும். ஆர அமர இருந்து நன்றாக மென்று தின்னவேண்டும். "நுறுங்கத் தின்றால் நூறு வயது" என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

காக்கையானது உங்கள் வீட்டிலுள்ள பொருள்களைக் கவர்ந்து உண்ணும்போது ஒரு சிறிதும் கரைவதில்லை. வீட்டில் உள்ளவர் காக்கையைக் கூவி அழைத்து, அதற்கென வைத்த உணவினைக் கரையாது உண்பதும் இல்லை. 

ஆருயிர்கள் அனைத்தும் இறைவனுக்கு அடிமை. அவனால் படைக்கப்பட்ட இந்த உலகமும், உலகியற் பொருள்களும் அவனது உடைமை. இறைவன் தந்த பொருள் இது என்று உணர்ந்து, இல்லாதவர்க்குக் கொடுத்து, தாமும் இன்புற்று, பிறரையும் மகிழ்வித்து வாழவேண்டும்.

தாமே தனித்து உண்டு வாழவேண்டும் என்னும் கரவு உள்ளம் கொண்டவர்கள்  தனித்தே உண்பார்கள். இதனை, "வேறு ஒரு சாட்சி அறப் பசியாறியை" என்றார் அருணகிரிநாதப் பெருமான். “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க” என்கிறது நாலடியார். உண்ணும் போது பலரை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். இயலவில்லையேல் ஒருவரையாவது சாட்சி வைத்து அவரோடு கலந்து உண்ண வேண்டும். அப்படிக்கு இன்றி கதவடைத்து விட்டுத் தனியே இருந்து சாப்பிடும் மாக்களை கண்டிக்கின்றனர். பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புவதே மானிட மாண்பு. அதுவே மேலோர் சொல்லி வைத்த அறங்களுள் எல்லாம் தலையாயது. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

இல்லறம் எப்படி நல்லறமாக இயன்றது என்பதைப் பட்டினத்து அடிகள், பதினோராம் திருமுறையில், "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"யில்

"சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்

அறுசுவை அடிசில் வறிது இனிது அருந்தாது,

ஆடினர்க்கு என்றும், பாடினர்க்கு என்றும்,

வாடினர்க்கு என்றும், வரையாது கொடுத்தும்,

பூசுவன பூசியும், புனைவன புனைந்தும்,

தூசின் நல்லன தொடையில் சேர்த்தியும்,

ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்,

மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந்து ஓங்கி

இவ்வகை இருந்தோம்......".

என்று அருளிச் செய்தார்.  

இதன் பொருள் ---

சின்ன முட்டுக்கள் பரப்பியுள்ள பொன்னால் ஆகிய பாத்திரத்தில் அறுவகைச் சுவையுள்ள உணவினை வாளா இருந்து உண்டு பசியினைப் போக்கிக் கொள்ளாது, பசிக்கு உணவினை நாடிக் கொண்டு, ஆடி வந்தவர்க்கும், பாடி வந்தவர்க்கும், இவை இரண்டும் இன்றி மிக்க பசியோடு வாட்டம் கொண்டு வந்தவர்க்கும், அளவு அறுக்காமலும், கைம்மாறு கருதாமலும் கொடுத்து உதவியும், நறுமணப் பூச்சுக்களைப் பூசியும், அணியத்தக்க அணிகலன்களை அணிந்து கொண்டும், உயர்ந்த ஆடைகளை அரையில் உடுத்திக் கொண்டும், மனம் களிக்க, ஐம்புல இன்பங்களை நுகர்ந்தும், புதல்வர்களும், சுற்றத்தவரும் மனமகிழ்ந்து இருக்க, இவ்வாறு இனிது இருந்தோம்...


தான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெறவேண்டும் என்னும் அருள் உள்ளம் கொண்ட தாயுமான அடிகளார், எல்லோரையும் கூவி அழைக்கின்றார்.

"காகம் உறவு கலந்து உண்ணக் 

கண்டீர்! அகண்டா காரசிவ

போகம் எனும் பேரின்பவெள்ளம் 

பொங்கித் ததும்பிப் பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ! 

இன்புற்றிட நாம் இனி எடுத்த

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் 

சேர வாரும் சகத்தீரே".         -- தாயுமான அடிகளார் 

மக்கள் எவ்வாறு வாழ்தல் வேண்டும் என்னும் மெய்ம்மையினை நூல்முறையால் உணர்த்தி அருளியது மட்டும் அல்லாமல், சிற்றுயிர்களின் வாழ்க்கை வழியாகவும் இறைவன் உணர்த்தி அருளுகின்றான். அவற்றுள் ஒன்று காகம். காகமானவை மக்கள் கரைந்து (கூவி அழைத்து) தமக்கென வைக்கப்பட்ட சிறிய அளவு உணவையும் தாமும் "காகா" எனக் கரைந்து தம் உறவுகளை அழைத்துக் கலந்து உண்ணும் முறையினை நாளும் காண்கின்றோம்.  அதுபோல், எங்கணும் நீக்கம் அற நிறைந்து நின்று அருள்கின்ற இறையனுபவம் என்னும் மாறிலாப் பேரின்பப் பெருவெள்ளமானது, நனி மிகப் பொங்கி வழிந்து முழுநிறைவாய், ஒரு வடிவாய், பொதுவாய்க் கிடக்கின்றது.  அந்தோ! திருவருளால் நாம் அதை நுகர்ந்து பேரின்பம் எய்திடக் கிடைத்தற்கு அரிதாய்க் கிடைத்துள்ள இம் மானிட யாக்கை இறந்துவிடுவதன் முன் உலகவரே! சேர வருவீராக. 


காக்கையின் நல் இயல்புகள் குறித்து தனிப்பாடல்கள் கூறுவது காண்க.


"கண்ட இரையைக் கரைந்து, கிளைக்கூட்டி 

உண்டு வருதலால், ஊர்க் காக்கை --- அண்டர்க்குச் 

செய்யும் பலிபூசை செய்துவர நேர்ந்ததுகாண், 

உய்யும் வழிதெரிக ஒர்ந்து". ---  தனிப்பாடல்.

 

"காலை எழுந்திருத்தல், காணாமலே கலத்தல்,

மாலை குளித்து மனை புகுதல், --- சீலமுடன் 

உற்றாரோடு உண்ணல், உறவாடல், இவ்வைந்தும் 

கற்றாயோ காக்கைக் குணம்". --- தனிப்பாடல்.


எல்லோரிடமும் சென்று ஐயம் ஏற்று, எல்லோர்க்கும் ஊட்டித் தானும் உண்ட ஆபுத்திரன் திறத்தை "மணிமேகலை" என்னும் காப்பியம் அருளுமாறு காண்க.


"ஐயக் கடிஞை கையின் ஏந்தி

மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்

காணார், கேளார், கால்முடப் பட்டோர்,

பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்,

யாவரும் வருக என்று இசைத்து, உடன்ஊட்டி

உண்டு, ஒழி மிச்சில் உண்டு, ஓடுதலை மடுத்துக்

கண்படை கொள்ளும் காவலன் தான்என்".

இதன் பொருள் ---

மதுரைமா நகரில்  பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, குற்றமற்ற சிறப்பினை உடைய மாடங்கள்தோறும் சுழன்று,  குருடர், செவிடர், முடவர், பாதுகாப்போர் அற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரும் வருக என்று கூறி அழைத்து  அனைவரும் உண்டு எஞ்சிய உணவை உண்டு, அவ் ஓட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, உறங்குதல் செய்வான் அவ் ஆபுத்திரனாகிய காவலன் என்போன்.




053. சுற்றம் தழால் - 06. பெருங்கொடையான்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "ஒருவன் பெருங்கொடையாளனாகவும், கோபத்தை விரும்பாதவனாகவும் ஆக இருப்பானானால், அவனைப் போல சுற்றத்தால் சூழ இருப்பவர் இந்த உலகில் பிறர் இல்லை" என்கின்றார் நாயனார்.

சுற்றத்தார் ஒருவரும் வறுமை அடையாதபடி கொடுக்கின்ற கொடையாளியாக இருக்கவேண்டும். அளவிறந்து கோபித்துக் கொள்ளுதல் கூடாது.


இதற்குத் திருக்குறள்...

“பெரும் கொடையான், பேணான் வெகுளி, அவனின்

மருங்கு உடையார் மாநிலத்தில் இல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பெருங்கொடையான் வெகுளி பேணான் --- ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், 

அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் --- அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.

(மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்....

பரிவுடன்மற் றிவைகூறும் பவனகுமாரனை

மலர்க்கைபணித்து நோக்கிக்,

குருகுலத்தோர் போரேறே குற்றமது 

பார்க்குங்காற் சுற்றமில்லை,

யொருகுலத்திற் பிறந்தார்களுடன்வாழும்

வாழ்வினைப் போலுறுதியுண்டோ,

விருவருக்கும் வசையன்றோ விருநிலங்காரணமாக

வெதிர்ப்பதென்றான். --- வில்லிபாரதம்.


இதன் பொருள் ---

பரிவுடன் - வருத்தத்துடனே, இவை கூறும் - இவ்வார்த்தைகளைச் சொல்லுகிற, பவன குமாரனை - வாயுபுத்திரனான வீமனை, (தருமன்), மலர்க் கை பணித்து – தாமரை மலர் போன்ற தனது கையால் அமர்த்தி அடக்கி,  நோக்கி - (அவனைப்) பார்த்து, குரு குலத்தோர் போர் ஏறே - குரு என்னும் அரசனது குலத்தில் பிறந்த அரசர்களுள் போரில் சிறந்த ஆண்சிங்கம் போன்றவனே! குற்றமது பார்க்கும்கால் சுற்றம் இல்லை - குற்றத்தையே ஆராய்ந்தால் (எவர்க்கும்) உறவினராவார் இல்லை. ஒரு குலத்தில் பிறந்தார்கள் உடன் வாழும் வாழ்வினை போல் உறுதி உண்டோ - ஒரு குடும்பத்திலே பிறந்தவர்கள் தமக்குள் மாறுபாடின்றி ஒத்து வாழும் இல்வாழ்க்கையைப் போல நன்மை தருவது (வேறு) உண்டோ? (இல்லையன்றோ]; இரு நிலம் காரணம் ஆக எதிர்ப்பது - பெரிய இராச்சியம் காரணமாக எதிர்த்துப்போர் செய்வது, இருவருக்கும் வசை அன்றோ - இருதிறத்தார்க்கும் பழிப்பாகாதோ?' என்றான் - என்று சொன்னான்.

     சினங்கொண்ட வீமனை மேன்மைப்படுத்தி அவனைத் தன் கருத்துக்கு உட்படுத்துமாறு தருமன், 'குருகுலத்தோர் போரேறே' என்று விளித்தான். பவநன் என்ற வடசொல்லுக்கு - சஞ்சரிப்பவன் என்பது காரணப்பொருள். குருகுலத்தோர் ஏறு - விலங்குகளுட் சிறப்புடையதாகிற சிங்கம்போலக் குருகுலத்தாருள் சிறந்தவன். கௌரவர் எனப்படுகிற துரியோதனாதியராகிய யானைகளை ஒழிப்பதற்குச் சிங்கம் போன்றவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

     "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை" என்பது ஒளவையார் அமுதமொழி. உலகத்திற் குற்றமில்லாதவர் ஒருவரும் இல்லையாதலால், ஒவ்வொருவரிடத்தும் குற்றத்தையே நோக்கினால் சுற்றம் என்பதே இல்லையாகும்; ஆதலால், உறவினரிடத்து உள்ள பிழைகளை எல்லாம் பொறுப்பது கடமை என்பது காட்டப்பட்டது.         


053. சுற்றம் தழால் - 05. கொடுக்கலும் இன்சொல்லும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "சுற்றத்தினர்க்குக் கொடுத்தலிலும், அவரிடம் இன்சொல் பேசுதலிலும் ஒருவன் வல்லவனானால், தொடர்ந்த பல திறப்பட்ட சுற்றத்தினரால் அவன் சூழப்படுவான்" என்கின்றார் நாயனார்.

சுற்றத்தாரது அளவு இது என்று ஒவ்வொருவரையும் அறிந்து, அவரவர் வேண்டுவன கொடுத்தல் மிக அரிது என்பதால், அவ்விதம் கொடுக்கும் ஆற்றலும், கொடுத்தல் மாத்திரம் அல்லாமல், அதனினும் அருமையாகிய இனிய சொற்களைக் கூறும் ஆற்றலும், ஆகிய இவ்விரண்டும் உடையவனாய் ஒருவன் இருப்பானானால், அவனிடத்து, நேராகச் சுற்றத்தாராக இருப்பவர்களும், சுற்றத்துக்குச் சுற்றத்தாராக இருப்பவர்களும் அவனது கொடையாலும், இன்சொற்களாலும் வந்து சேருவர் என்றார்.


இதற்குத் திருக்குறள்...

“கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின், அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப் படும்.”

இதற்குப் பரிமேலழகர் உரை ---

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் --- ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், 

அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும் --- தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.

(இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"நத்தால் திகழ்வயல் புல்லாணி நாரணன் நல்கு அருள் இன்--

பத்தால் சொல் ஆதரவால் தொண்டர் சூழப்படு மனநே--

யத்தால் கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்--

றத்தால் சுற்றப்படும் என்றுமுன்னோர் கண்டு அறைந்ததுவே".

நத்தால் --- சங்கினால். சொல் ஆதரவால் --- கூறுகின்ற அன்பு மொழிகளால். தொண்டர் --- அடியவர்கள். திருப்புல்லாணித் திருமால் செய்யும் அன்பாலும் அருளாலும் அடியவர்கள் சூழ்ந்துள்ளனர் என்றபடி.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...


“அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை

எடுக்கலம் என்னார் பெரியோர்;- அடுத்தடுத்து

வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே,

தன்காய் பொறுக்கலாக் கொம்பு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அடுக்கல் மலை நாட - ஒன்றன் மேலொன்றாக அடுக்கிய மலைகளை உடைய நாடனே! தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் - தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்று கூறார் பெரியோர்,  அடுத்தடுத்து வன்காய் பல பல காய்ப்பினும் இல்லையே தன் காய் பொறுக்கலாக் கொம்பு - மேலுமேலும் வலிமை மிக்க காய்கள் பலப்பல காய்த்தாலும் தன் காய்களைத் தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில் இல்லையே.


தம்மைச் சேர்ந்தவரை ஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும்.

“நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்,

விடுக்கும் வினையுலந்தக் கால்.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

செல்வம் - பொருளானது, கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும், வினை உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது,  இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும், நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் - இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள்.

செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது முறையே இறுக்கிப் பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அல்ல. அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு சோர்வு இல்லாமல் செய்துவரல் வேண்டும்.



பாடல் 21

 “கரம்ஊன்றி, கண்இடுங்கி, கால்குலைய, மற்றுஓர்

மரம்ஊன்றி, வாய்குதட்டா முன்னம், - புரம்மூன்றுந்

தீச்சரத்தால் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய

ஈச்சரத்தான் பாதமே ஏத்து.”


இதன் பொருள் ---

    கரம் ஊன்றி  -முதுமையில் எழும்பொழுது, எழுந்திருக்க இயலாமல், கைகளை நிலத்தில் ஊன்றி எழுதலும், கண் இடுங்கி – பொருட்களைத் தெளிவாகப் பார்க்க முடியாமையால் கண்களைக் குழித்துப் பார்ப்பதும், கால் குலைய – நடக்க முடியாமல் கால்கள் தடுமாற்றம் அடைதலும், மற்று ஓர் மரம் ஊன்றி – தள்ளாட்டத்தைத் தவிர்த்தல் பொருட்டு, ஆதரவாக மற்றும் ஒரு ஊன்றுகோலினைப் பற்றிக் கொண்டு நடத்தலும், வாய் குதட்டா முன்னம் – பற்கள் இல்லாமையால் வாயைக் குதட்டுதலும், முன்னம் – ஆகிய இந்நிலை வந்து சேராத முன்னரே, புரம் மூன்றும் தீச்சரத்தால் செற்றான் – திரிபுரங்களையும் தீயினை முனையாக உடைய அம்பினால் எரித்து அழித்த இறைவரும், திருப்பனந்தாள் தாடமைய ஈச்சரத்தான் – திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில், “தாடகை ஈச்சரம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானின், பாதமே ஏத்து – திருப்பாதங்களைப் போற்றி வழிபடுவாயாக.

கரம் ஊன்றுதல் முதலாகச் சொல்லபட்ட ஐந்தும் முதுமையின் குறிகள். தீச்சரம் – தீயினைக் கூராக உடைய அம்பு.

    திருப்பனந்தாள் சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில் செல்லலாம். இறைவர் திருப்பெயர், செஞ்சடையப்பர், தாலவனேசுவரர். செஞ்சடை அப்பர் என்னும் திருநாமம் வடமொழியில் அருணஜடேசுவரர் என்று வழங்கப்படும். இறைவியார் திருப்பெயர், பெரிய நாயகி, தாலவனேசுவரி. பெரிய நாயகி என்னும் திருப்பெயர் வடமொழியில், பிருகன்நாயகி என்று வழங்கப்படும். தல மரம், பனை. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். 

    பனையின் தாளில் (அடியில்) இறைவன் எழுந்தருளி இருத்தலால், பனந்தாள் என்று பெயர் பெற்றது. கோயிலுக்கு தாடகையீசுசுவரம் - தாடகேச்சுரம் என்று பெயர்; தாடகை பூசித்தமையால் இப்பெயர் பெற்றது.

     தாடகை என்னும் (இத் தாடகை என்னும் பெண் இராமாயாணத்தில் வருபவள் அல்லள்) பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி இத்திருத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் வருந்த, அவளுக்கு இரங்கிப் பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார்.  அது முதல் அங்கு சிவலிங்கம் சற்று சாய்ந்த வடிவமாகவே தோற்றமளித்து வந்தது.

சாய்ந்திருக்கும் சிவலிங்கத்தை நேர்பட  நிறுத்தி வணங்க அன்பு கொண்டான் அரசன். பூங்கச்சினை சுற்றி அதன் முனையில் வலிய கயிறு கட்டி இழுத்து நேர்படுத்த முயன்றான். திருமேனி நிமிரவில்லை. அன்பின் மிகுதியால் யானைகளைச் சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஒன்றும் முடிய வில்லை. மன்னன் மனம் வாடினான். இச்செய்தியை அறிந்த குங்குலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்கு புறப்பட்டார். திருப்பனந்தாள் கோயிலை அடைந்த கலயனார் ஆலயத்தை வலம் வந்து ஐந்தெழுத்தை நினைத்தபடியே குங்குலியப் புகையினால் சந்நிதியைத் தூபமிட்டார். கலயனார் பூங்கச்சுடன் கூடிய ஓர் கயிற்றை எடுத்து அப்பூங்கச்சோடு சேர்ந்த கயிற்றின் ஒரு பக்கத்தைச் சிவலிங்கத் திருமேனியில் பாசத்தோடு பிணைத்து, மறுபக்கத்தைத் தம் கழுத்தில் கட்டிக்கொண்டு இழுத்தார். 

அன்புக் கயிற்றுக்கு இறைவன் அசைந்து தானே ஆக வேண்டும். அக்கணமே சாய்வு நீங்கி நேரே நிமிர்ந்தார். கலயனார் கழுத்தில் போடப்பட்டிருந்த கயிறு பூமாலையாக மாறியது.  சிவலிங்கத் திருமேனியின் மீதும், கலயனாரால் கட்டப்பட்டிருந்த பூங்கச்சோடு சேர்ந்த கயிறு, கொன்றைப் பூமாலையாக காணப்பட்டது. குங்குலியக் கலய நாயனாரின் அன்பின் திறத்தினைக் கண்டு மன்னனும் மக்களும் களிப்பெய்தினர். சோழ மன்னன் கலய நாயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  கலயனார் அங்கு சில காலம் தங்கியிருந்து அரனாரை வணங்கி வழிபட்டு திருக்கடவூரை அடைந்தார். இத்தலத்தில்தான் 

    குமரகுருபர சுவாமிகள் நிறுவியுள்ள ஸ்ரீ காசிமடம் உள்ளது. இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் மேற்கு கோபுரத்தின் தென்பால், குங்குலியக்கலய நாயனாரின் கோயில் உள்ளது. இந்நாயனாரின் மனைவியின் பெயர் நீலாயி என்று கல்வெட்டு கூறுகிறது.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தரும மனந்தான் மலரை மருவுவிப்போர் வாழும் பனந்தாளில் பால் உகந்த பாகே" என்று போற்றி உள்ளார்.


053. சுற்றம் தழால் - 04. சுற்றத்தால் சுற்றப்பட

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "சுற்றத்தினரால் சூழப்படுவதாக நடந்து கொள்ளுதல் என்பது, ஒருவன் தான் பெற்ற செல்வத்தினால் பெறுகின்ற பயன் ஆகும்" என்கின்றார் நாயனார். பெற்றத்தால் என்பது,"பெற்ற அதனால்" என்று பொருள்படும்.


இதற்குத் திருக்குறள்....


சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் --- செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, 


சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் --- தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.

(பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப் பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப் பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பது கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“அத்தர் திருவருளால் அன்று படிக்காசு பெற்றார்

பத்தர்கணம் சூழப் பரிந்து இட்டார் ---  இத்தலத்துச்

சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்.


இதன் பொருள் ---


திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்தபொழுது, பஞ்சகாலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள். அப்போது சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று.  அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார்.  இறையருளால் பெற்ற பொருளைக் கொண்டு அடியார்களின் பசியைத் தீர்த்தனர் இருபெருமக்களும்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...


“பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;

தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;

அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்குஇன்னா

மந்திரம் வாயா விடின்.” --- இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா – சுற்றம் இல்லாத இல்வாழ்க்கையின் அழகானது துன்பத்தைத் தரும்; தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா - தந்தை இல்லாத பிள்ளையினது அழகானது துன்பத் தரும்; அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா - துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பத்தைத் தரும்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் வாயாவிடின் இன்னா - மறைமொழியாகிய மந்திரங்கள் பயனளிக்காவிடின் துன்பமாம்.

மனை - மனைவாழ்க்கை. அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன்" என்பதால், சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாதது ஆயிற்று. 

பந்தம் என்பதை அன்பு என்று கொண்டு, அன்பு இல்லாத மனைவியோடு கூடி வாழ்தல் துன்பத்தைத் தரும் என்றும் கொள்ளலாம்.

‘தந்தையொடு கல்வி போம்' என்பதால், தந்தை இல்லாததனால் கல்விப் பேற்றை இழந்த புதல்வனுக்குத் துன்பம்.



“கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும், பைங்கூழ்

விளைவின்கண் போற்றான் உழவும், --- இளையனாய்க்

கள்உண்டு வாழ்வான் குடிமையும், இம்மூன்றும்

உள்ளன போலக் கெடும்.” --- திரிகடுகம்.

இதன் பொருள் ---

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் – சுற்றத்தார்க்கு உதவாதவனுடைய பொருளும்; பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும் - பசிய பயிரானது தனக்குப் பயன் கொடுக்கும் காலத்து, அதனைக் காக்கும் இயல்பு இல்லாதவனுடைய உழவுத் தொழிலும்; இளையனாய் கள் உண்டு வாழ்வான் குடிமையும் - இளையனாய் இருந்து, கள்ளைக் குடித்து வாழ்கின்றவனுடைய குடிப்பிறப்பும்; இ மூன்றும் உள்ளன போலக் கெடும் - ஆகிய இம் மூன்றும் நிலை நிற்பனபோலத் தோன்றி அழியும்.

செழுங்கிளை தாங்காதான் செல்வமும், விளையுங் காலத்தில் காவாதான் பயிரும், இளமைதொட்டே கள்ளுண்கின்றவன் நற்குடி வாழ்க்கையும் கெட்டுப்போம் என்பது சொல்லப்பட்டது.



“சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.”    --- கொன்றை வேந்தன்.

இதன் பொருள் ---

சுற்றத்தார்க்கு அழகாவது நலம் தீங்குகளில் சூழ வந்து இருப்பதாகும்.


“செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.”    --- வெற்றி வேற்கை.

இதன் பொருள் ---

பொருளுடையவர்க்கு அழகாவது நல்ல சுற்றத்தைப் பாதுகாத்தல்.

கிளைபோன்று இருத்தலின் சுற்றம் கிளை எனப்படும். செழுங்கிளை என்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள்படும்.


“அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழல்மரம்போல் நேர்ஒப்பத் தாங்கிப் --- பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் வெப்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல, நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் கொடுமை மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல், பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும் முயற்சியால் உழைப்பு உடையவனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும்.


053. சுற்றம் தழால் - 03. அளவளாவு இல்லாதான்

 திருக்குறள்

பொருட்பால்


அ. அரசியல்


அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகுதல் இல்லாதவனது வாழ்க்கையானது, குளத்தின் பரப்பானது கரை இல்லாமல், நீர் நிறைந்து இருப்பதைப் போன்றதாகும்" என்கின்றார் நாயனார்.


பேறு நலங்களை உள்ளம் கலந்து ஒருவருக்கு ஒருவர் விசாரித்துக் கொள்ளுதல், அளவளாவுதல் ஆகும். இது அன்பின் மிகுதியினால் உண்டாவது. அன்போடு விசாரித்து அறிவதால், குறை இருப்பின் நிறைவாகும் என்பது தெரியவரும். சுற்றத்தவரைத் தழுவுகின்ற ஒருவனுக்குக் கிடைத்த செல்வமானது நீங்காது நிற்பதுடன், கிளைக்கும் என்ற நாயனார், கரை இல்லாத குளத்தில் வந்து சேர்ந்த நீரானது, வெளியே போய்விடுவது போல, சுற்றத்தைத் தழுவுதல் இல்லாதவனது செல்வமானது, தாங்குவார் இல்லாமையால் கிளைக்காமல் நீங்கும் என்றார்.


"அன்பு மிகுதியின் அளவளாய் அவளை" என்று திருக்கோவையார் பாடல் கொளுவில் குறித்தது காண்க. குளவரை --- குளப்பரப்பு. 


இதற்குத் திருக்குறள்...


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை, குளவளாக்

கோடு இன்றி நீர் நிறைந்து அற்று.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


அளவளாவு இல்லாதான் வாழ்க்கை --- அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, 


குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று --- குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற் போலும்.


(சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர். 'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“ஆர்வீ டணனோடு அளவளாவாது அரக்கன்

சோர்வுஇலா வாழ்வுஇழந்தான், சோமேசா! --- நேரே

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று.”


இதன்பொருள்---


சோமேசா! நேரே - தகுதியாகவே,  அளவளாவு இல்லாதன் வாழ்க்கை - சுற்றத்தாரோடு  உள்ளம் கலத்தல் இல்லாதவன் வாழ்க்கையானது, குளவளாக் கோடு இன்றி - குளப்பரப்பானது கரையின்றி, நீர் நிறைந்தற்று - நீர் நிறைந்தாற் போலும்,


அரக்கன் - இலங்கைக்கு அசரனாகிய இராவணன்,  ஆர் வீடணனோடு - அன்பு நிறைந்த விபீடணனாகிய தம்பியுடன், அளவளாவாது - மனம் கலந்து பழகுதல் இன்றி, சோர்வு இலா வாழ்வு இழந்தான் - என்றும் கெடாத பெருஞ் செல்வத்தோடு வாழ்நாளையும் இழந்து விட்டான் ஆகலான். 


இராம பத்தினியாகிய சீதையை இராவணன் அசோக வனத்தில் சிறை வைத்தமை அறிந்த அவன் தம்பியாகிய விபீடணன், "இது அடாத காரியம். சீதையை இராமன்பால் விட்டுச் சரண் புகுவாய்" எனப் பலமுறை கூறியும் கேளானாய், அவனைச் சினந்து பேச, நன்மொழி கொள்ளாத தமையனை விட்டு நீங்கி, இராமனைச் சரணடைந்தான். அதனால், இராவணன் வாழ்வு இழந்தான்.


053. சுற்றம் தழால் - 02. விருப்பு அறாச் சுற்றம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அன்பு நீங்காத சுற்றமானது ஒருவனுக்கு அமையப் பெற்றால், அந்த சுற்றமானது கிளைத்தல் நீங்காத செல்வங்கள் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

உள்ளத்தில் பகைமை உணர்வைக் கொண்டிருந்து, புறத்தில் அன்பு உள்ளவரக்ளைப் போல் காட்டிக் கொள்ளுதல் இல்லாத சுற்றத்தாரைக் குறித்து இங்குச் சொன்னார் நாயனார். சுற்றத்தார் பலர் கூடி வளர்த்தலால், செல்வம் மேலும் மேலும் கிளைக்கும் என்றார்.

"புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வேறு ஆதல் வேண்டும்" என்றார் குமரகுருபர அடிகள். "முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா, வஞ்சகரை அஞ்சப்படும்" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில்.

அரும்புதல் - சிறிதாகத் தோன்றி வளர்தல். அரும்பு என்னும் சொல், விகாரப்பட்டு, "அருப்பு" என வந்தது.


இதற்குத் திருக்குறள்.....

விருப்பு அறாச் சுற்றம் இயையின், அருப்பு அறா

ஆக்கம் பலவும் தரும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்,  அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

(உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....


“வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர்அரக்கு

இல்உற்றும் உய்ந்தார், இரங்கேசா! - நல்ல

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.”


இதன் பொருள் --- 


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வில்லுக்கு அதிபன் - வில்வித்தையில் தன்னை ஒப்பார் இல்லாத விதுரனுடைய, விரகினால் – முன் உபாயத்தினால், ஐவர் - பஞ்சபாண்டவர், அரக்கு இல் உற்றும் - (துரியோதனன் கட்டின வஞ்சக) அரக்கு மாளிகைக்குள் இருந்தும், உய்ந்தார் - பிழைத்துப் போனார்கள்,  (ஆகையால், இது) நல்ல விருப்பு அறா சுற்றம் இயையின் - என்றும் ஒருபடித்தான அன்பு அகலாத சுற்றம் ஒருவனுக்குப் பொருந்தி இருக்குமானால், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - (அது) வளர்ந்துகொண்டே இருக்கும் பலவித செல்வங்களையும் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- ஒருவனைப் பற்றி ஓரகத்திரு. அன்புடைய சுற்றத்தால் ஆக்கம் பலவும் வளரும்.

விளக்கவுரை - எக்காலத்தும் தன் பிள்ளைகளும் பாண்டவர்களும் பகைத்து இருக்கிறார்கள் என்று அறிந்த திருதராட்டின், தருமராசனை நோக்கி, "தம்பீ! நீங்கள் அனைவரும் வாரணாவதம் போய் உங்கள் பிதாவுக்குச் சரம கைங்கரியங்களைச் செய்துகொண்டு, ஒராண்டு தங்கியிருந்து திரும்பி வாருங்கள்" என்று அனுப்பினான். ஐவரும் அப்படியே அங்குப் போயிருந்தார்கள். அதுதான் சமயம் என்று துரியோதனன் அவர்களைக் கொல்ல, வாரணாவதத்தில் ஓர் அரக்கு மாளிகையைக் கட்டுவித்து, அவர்களை அதில் குடியிருக்க வேண்டினான். கள்ளம் கவடு அறியா உள்ளம் உடையவர்களாகிய ஐவரும் அவன் அன்பிற்கு வியந்து, அதற்கு உடன்பட்டு, நாள் ஏற்படுத்தி இருந்தார்கள். ஐவர்மேல் உண்மை அன்புடைய அவர்கள் சிற்றப்பனான விதுரன், துரியோதனனுடைய வஞ்சகச் சூழ்ச்சியை அறிந்து, அம் மாளிகையை நிருமித்த சிற்பிக்கு அந்தரங்க பரிதானம் செய்து, அதிலிருந்து தப்பியோடிப் பிழைக்க ஓர் அந்தரங்கச் சுரங்கம் யார்க்கும் தெரியாமல் அவனைக் கொண்டே செய்வித்து, அதைப் பற்றி வீமனுக்கு மட்டும் சேதி தெரிவித்து இருந்தான். தாங்கள் ஏற்படுத்தியிருந்த நன்னாளில் ஐவரும் குந்தியோடு அரக்கு மாளிகையில் குடி புகுந்தார்கள். குடி புகுந்த அன்றிரவிலேயே துரியோதனன் தன் மந்திரி புரோசனன் என்பவனை அனுப்பி மாளிகையைக் கொளுத்தக் கட்டளை இட்டு இருந்தான்.  அவனும் அப்படியே கொஞ்சமேனும் பழிக்கு அஞ்சாமல் அரையிரவில் ஐவரும் தூங்கும்போது, அதைக் கொளுத்திவிட்டான். ஆயினும் சங்கேதப்படி விழிப்பாயிருந்த வீமன் தன்னுடன் இருந்த ஐவரில் தாயையும் தமயனையும் தோள்களின் மேலும், தம்பியரில் அர்ச்சுனனை ஓர் அக்குளிலும், நகுல சகாதேவர் இருவரையும் மற்றோர் அக்குளிலும் அடக்கித் தூக்கிக்கொண்டு அநாயாசமாய், அந்தரங்க சுரங்க வழியே வெளியேறிப் பிழைத்துப் போனான். விருப்பறாச் சுற்றமாகிய விதுரன் ஒருவன் இருந்ததனால், ஐவருக்கும் அருப்பு அறா ஆக்கம் தந்தது காண்க. 

'அரும்பு அறாத ஆக்கம்' எனப் பிரித்து, என்றும் அரும்புதலை நீங்காத, அதாவது என்றும் அரும்பி வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் பொருள் உரைக்கலாம். 'வில்லுக்கு அதிபன்' என்று விதுரனைக் குறித்தது, அவன் வில்லெடுத்தால் வெல்ல வல்லுநர் ஒருவரும் இல்லாதிருந்தமையால். ஆகையால்,  கண்ணபிரானைப் போலவே அவனும் வில் எடேன் என்று சபதம் கூறி விடுத்தான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“எய்த்து மகத்து இறந்தும் சூரன்இளையோரால்

மொய்த்தவளம் பெற்றான், முருகேசா! --- மெய்த்த

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா

ஆக்கம் பலவும் தரும்.


இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே,  சூரன் - சூரபதுமனானவன், எய்த்து மகத்து இறந்தும் - வருந்தி வேள்வியிலே மாண்ட பின்னரும்,  இளையோரால் - தன்னுடைய தம்பிமார்களால், மொய்த்த வளம் பெற்றான் - மிகுந்த செல்வ நலத்தை அடையப் பெற்றான். மெய்த்த - உண்மை பொருந்திய, விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு நீங்கப் பெறாத உறவினர்களைப் பெற்றால், அருப்பு அறா - வளர்ச்சி குறையாத, ஆக்கம் பலவும் தரும் - செல்வம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

சூரபதுமனானவன் வேள்வியிலே வருந்தி இறந்தும், தன்னுடைய தம்பிமார்களால் மிகுந்த செல்வ வளத்தைப் பெற்றான். ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றத்தார்கள் அமைவார்களானால் அவனுக்கு வளர்ச்சி குறையாத செல்வம் பலவும் உண்டாகும் என்பதை இந்த வரலாறு விளக்கும்.

சூரபதுமன் மிகவும் முயன்று அரிய வேள்வியைச் செய்தான். அவ்வாறு செய்தும் சிவபிரான் எழுந்தருளவில்லை. அதனால் வருந்தி வேள்வித் தீயில் விழுந்து இறந்தான். பிறகு அவனிடத்திலே அன்புள்ள சிங்கமுகன், தாரகன் என்னும் தம்பிமார்கள் அவ் வேள்வியை முடித்தார்கள். அதனால் சிவபிரான் எழுந்தருளி இறந்துபோன சூரபதுமன் உயிர் பெற்று எழச் செய்தார். ஆயிரத்தெட்டு அண்டங்களின் அரசுரிமையையும் பிறவற்றையும் வழங்கினார். அதனால் சூரபதுமன் தன் உடன் பிறந்தார்களோடு மேன்மையுடன் வாழ்ந்தான். அன்புடைய உறவினர்களைப் பெற்றால் அவர்களால் நலமெலாம் உண்டாகும் என்பது சூரபதுமனிடம் நன்கு விளங்கியது.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.விருப்பு அறாச் சுற்றத்தை, "பண்பின் விரவிய கிளை" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். பாடலைக் காண்க...


"அரசுகொள் கடன்கள் ஆற்றி

மிகுதிகொண்டு அறங்கள் பேணி

பரவு அரும் கடவுள் போற்றி

குரவரும் விருந்தும் பண்பின்

விரவிய கிளையும் தாங்கி

விளங்கிய குடிகள் ஓங்கி

வரைபுரை மாடம் நீடி

மலர்ந்து உள பதிகள் எங்கும்" --- பெரியபுராணம்.


இதன் பொருள் ---

தொகுத்த நெற்குவியல்களுள், அரசர்க்குரிய ஆறில் ஒரு பங்கை அரசுக்கு இறையாகக் கொடுத்து, எஞ்சிய ஐந்து பங்குகளில், தாம் செய்தற்குரிய அறங்களைச் செய்தும், வணங்குதற்குரிய இறை வழிபாட்டைச் செய்தும். குரவர்க்கும் விருந்தினர்க்கும், நற்குணம் அமைந்த சுற்றத்தார்க்கும் கொடுத்தும், இவ்வாற்றான் புகழ் விளங்கிய குடிகள் மிக்கு, மலை போலும் உயர்ந்த மாளிகைகள் விளங்க இருந்தன அந்நாடுகள் எல்லாம்.



"ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

ஈரம் இல்லாதது - மனத்தின்கண் அன்பில்லாதது, கிளை (அன்று) - சுற்றமுமன்று; நட்பு அன்று - சினேகமும் அன்று.



“வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்

கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தாஅங்கு

அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்

கேளிரைக் காணக் கெடும். --- நாலடியார்.

இதன் பொருள் ---

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகன் கண்டு தாய் மறந்தாங்கு – கருவுற்றிருந்த போது தோன்றிய மசக்கைத் துன்பமும், இடையில் கருவைச் சுமந்து வந்த வருத்தமும், கருவுயிர்த்த அக்காலத்தில் உண்டான இன்னலும் தாய் தன் தொடையில் மகனைக் கண்டு மறந்து விட்டாற்போல,  அசா தான் உற்ற வருத்தம் --- முயற்சிகளின் இடையே தளர்ச்சியால் ஒருவன் அடைந்த துன்பம், உசா தன் கேளிரைக் காணக் கெடும் - ஆய்ந்து சூழ்தற்கு உரிய தன் சுற்றத்தாரைக் கண்ட அளவில் நீங்கும்.

முயற்சிகளினிடையே தோன்றுந் தளர்ச்சியை நீக்குதற்கு அவ்வப்போதும் ஆராய்ந்து சூழ்தற்குரிய சுற்றத்தார் இன்றியமையாது வேண்டியிருத்தலின், அவரை எஞ்ஞான்றும் தழுவி ஒழுகுதல் வேண்டும்.

மகன் என வழக்கு நோக்கி ஆண்பாலாகக் கூறினாரேனும் ஏனைப் பாலுக்கும் அது ஒக்கும்.


053 - சுற்றம் தழால் - 01. பற்றற்ற கண்ணும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 53 -- சுற்றம் தழால்


அதாவது, வினை செய்பவர்களைப் பற்றிக் கூறிய பிறகு, தனது செயலில் தன்னோடு சூழ்ந்து துணை புரியும் சுற்றத்தார் தன்னை விட்டு நீங்காது இருக்குமாறு தழுவிக் கொள்ளுதலைக் கூறுகின்றார் நாயனார்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தொடர்புடைய செல்வம் நீங்கிவிட்ட நிலையிலும், பழைய உறவைப் போற்றுதல் சுற்றத்தாரிடமே உள்ளதொரு பண்பு ஆகும்" என்கின்றார் நாயனார்.

உலகத்தில் மக்கள் தம் சுற்றத்தவர் செல்வத்தோடு கூடி இருக்கின்ற காலத்தில் அவர்களைத் தழுவி அவர்களிடத்தில் உறவு கொண்டாடுவது இயல்பு. அவ்வாறு இல்லாமல், செல்வம் அற்ற காலத்திலும், முன்னர் அவர் தமக்குச் செய்த உதவிகளை எண்ணி, அவரோடு பற்று அறாமல் இருந்து, தழுவிக் கொள்ளுவார்களானால், அதுவே, சுற்றத்திற்கு அழகு. அதுவே சுற்றத்தைத் தழுவுதல் ஆகும்.

இதற்குத் திருக்குறள்....

பற்று அற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்,

சுற்றத்தார் கண்ணே உள.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள்,  சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.

(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின், ஏகாரம் தேற்றத்தின் கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


“அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்றவர்க்கு

நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல

வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே

மனைமரம் ஆய மருந்து. --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


ஒருவர்க்கு அல்லல் அடைந்தக்கால் - ஒருவர்க்குத் துன்பம் வந்து அமையுமானால், அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார் - அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள், நல்ல வினை மரபின் அதனை நீக்கும் - நல்ல செயல் முறையால் அத் துன்பத்தை நீக்க முற்படுக, அது – அச்செயல் அல்லல் உற்றார்க்கு, மனைமரம் ஆய மருந்து - வீட்டில் உள்ள மரமாகிய மருந்தினை ஒக்கும்.

அல்லல் உற்ற காலத்து அவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார். ஒருவன் அல்லலுற்ற காலத்து அவன் வருந்தாது அவ்வல்லலை நீக்கும் கிளைஞர்கள் மனையின்கண் உள்ள மருந்து மரத்திற்கு ஒப்பாவார்.


“முன் இன்னார் ஆயினும் மூடும் இடர்வந்தால்

பின் இன்னார் ஆகிப் பிரியார் ஒருகுடியார்,

பொன்னாச் செயினும் புகாஅர், புனல் ஊர!

துன்னினார் அல்லார் பிறர். --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


புனல் ஊர - நீர்நாடனே!, ஒரு குடியார் - ஒரு குடியில் பிறந்தவர்கள், முன் இன்னார் ஆயினும் - முன்னர் இனிமையுடையவர் அல்லவராய் இருப்பினும், மூடும் இடர் வந்தால் - மிக்க துன்பம் வந்து உற்ற இடத்து, பின் இன்னார் ஆகிப் பிரியார் - பின்னரும் இனிமை உடையவர் அல்லராகிப் பிரிந்து இரார், துன்னினார் அல்லார் பிறர் - ஒரு குடிப்பிறந்தவர் அல்லாது அயலார் ஆகிய பிறரை, பொன்னா(க)ச் செயினும் புகார் - பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனை நீக்கப்புகுதல் இலர்.

ஒரு குடியில் பிறந்தவர்கள் தம்முள் ஒருவர்க்குத் துன்பம் வந்து நேர்ந்த பொழுது, உள்ளத்தில் முன்பு கொண்டு இருந்த மாறுபாடு நீங்கி உதவி செய்வர் என்பது கருத்து.



“காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து

மேலாடு மீனின் பலர் ஆவர், - ஏலா

இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!

தொடர்பு உடையேம் என்பார் சிலர்.” --- நாலடியார்.


இதன் பொருள் ---


ஈர் குன்ற நாட - குளிர்ந்த மலைகளையுடைய நாடனே!, காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து ஆடு மீனின் பலர் ஆவர் - சாய்கால் உண்டாகி வளமாக வாழுகின்ற காலத்தில், மேலே வானத்தில் விளங்குகின்ற விண்மீன்களைப் போல நெருங்கிய உறவினர் பலர் ஆக இருப்பர்.  ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் - ஆனால் ஒவ்வாத வறுமையை ஒருவர் அடைவராயின், தொடர்பு உடையேம் என்பார் சிலர் - அக்காலத்தில் உறவு என்று சொல்லிக் கொண்டு வந்து உரிமை பாராட்டுவோர் மிகச் சிலரே.

சாய்கால் உள்ளபோது பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தபோது அவர் பிரிந்துபோவது உலக இயற்கை.


“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர்,-அக்குளத்தில்

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு. --- மூதுரை.


இதன் பொருள் ---


அற்ற குளத்தின் - நீர்வற்றிய குளத்தினின்றும், அறு - நீங்கிப் போகின்ற, நீர்ப் பறவைபோல் - நீர்வாழ் பறவைகள் போல, உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - வறுமை வந்தபொழுது நீங்குவோர் உறவினர் ஆகார். அக்குளத்தில் - அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல - கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார் உறவு - நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவினராவர்.

வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பத்தை அனுபவிப்போரே உறவினராவர்.


நாய்க்கு நிகரானவர்கள்

 


நாய்க்கு நிகரானவர்கள்.

-----

    காரியாசான் என்பவர் பாடியது “சிறுபஞ்சமூலம்” என்னும் நூல். இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. மருத்துவ நூலில் கூறப்பட்ட கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சி வேர் பெருமல்லி வேர் ஆகிய பஞ்சமூலங்கள் (வேர்கள்) மக்கள் பிணிகளைத் தீர்ப்பது போல, இந்நூல் தன்னில் அமைந்த ஒவ்வொரு செய்யுளிலும் அடங்கிய ஐந்தைந்து பொருள்களாலும் தன்னைப் படித்து உணர்கின்றவர் பிறவி நோயைப் போக்கத்தக்க நல்லொழுக்க நெறிகளை விளக்கிக் காட்டவல்லதாக இந்நூல் விளங்குகிறது.

        இந்நூலில் நாய்க்கு நிகராக வைத்து எண்ணப்பட வேண்டியவர்கள் ஐவர் குறித்துப் பாடப்பட்டுள்ள பாடல்...

“நாணில னாய்,நன்கு நள்ளாதா னாய், பெரியார்ப்

பேணில னாய்,பிறர் சேவகனாய் - ஏண்இல்

பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான்

பருத்தி பகர்வுழி நாய்.”


இதன் பொருள் ---

    நாண் இலன் நாய் – நாணமில்லாதவன் நாய்க்கு நிகரானவன், நன்கு நள்ளாதான் நாய் – நன்மை ஆகப் பிறரோடு நட்புக் கொள்ளாதவன் நாயோடு ஒப்பாவன், பெரியார்ப் பேணிலன் நாய் - தாய் தந்தையர் முதலிய பெரியாரைப் போற்றிக் காக்காதவன் நாயோடு ஒப்பாவான். பிறர் சேவகன் நாய் - பிறருடைய பணியாளனாய் இருந்து வாழ்பவன் நாயைப் போல்வன், ஏண் இல் பூண் பொருந்திய முலையார் சேரி -  உயர்வு இல்லாத, பூண் பொருந்திய நகைகளை அணிந்த முலைகளை உடைய பரத்தையரது தெருவில், (அவர்களது ஆசையால் திரியும்) கைத்து இல்லான் - கைப்பொருள் இல்லாதவன், பருத்தி பகர்வுழி நாய் - பருத்தி விலை கூறுமிடத்தில் போய் நிற்கின்ற நாய்க்கு நிகரானவன்.

இப் பாடலுக்கான விளக்கத்தைச் சிந்திப்போம்.....


1. நாண் இலன் நாய் – நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பு ஆவான். “நாணம்” என்னும் சொல்லுக்கு, வெட்கம், அறிவு, பயபக்தி, மானம், தணிகை, கூச்சம், பெண்களுக்கு உரிய குணங்களுள் ஒன்று என்று பொருள். “நாணுதல்” என்னும் சொல்லுக்கு, வெட்கப்படுதல், மனம் குன்றுதல், பயபக்தி காட்டுதல், அஞ்சுதல், பிணங்குதல், அடங்குதல், குவிதல் என்று பொருள். திருவள்ளுவ நாயனார், பொருட்பாலில், “நாணுடைமை” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து உள்ளார். நாணுடைமை என்பது, சால்பு முதலிய பண்புகளில் உயர்ந்தோர், தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையாம் தன்மை என்றார் பரிமேலழகர். அறம் பொருள் இன்பங்களில் பிறர் பழியாமல் ஒழுகுதல் என்றார் மணக்குடவர்.சுருங்கச் சொன்னால், தவறி நடத்தலுக்கு மனம் ஒடுக்கம் கொள்ளுதல் என்பர் பெரியோர்.

    உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மற்றவையும் மனினுக்குச் சிறப்பைத் தருவன அல்ல. மனிதனுக்குச் சிறப்பு நாணம் உடைமை என்பதால்,  “ஊண் உடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறு அல்ல, நாணுடைமை மாந்தர் சிறப்பு” என்றும், உயிரினங்கள் அனைத்தும் உடம்பை நிலைக்களமாகக் கொண்டவை. சிறந்த மக்களின் சான்றாண்மை நாணம் என்னும் நலத்தினை நிலைக்களமாக உடையது என்பதால், “ஊனைக் குறித்த உயிர் எல்லாம், நாண் என்னும் நன்மை குறித்தது சால்பு” என்றும், நாணத்திற்கு உறைவிடம் என்று கருதப்படுபவர், பிறரிடத்தில் உண்டாகும் பழியினையும், தம்மிடையே உண்டாகும் பழியினையும் ஒப்பிட்டு நாணுபவரே என்பதால், “பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி என்னும் உலகு.” என்றும், உள்ளத்தில் நாணம் இல்லாதவரது நடமாட்டம், மரத்தினால் உருவாக்கப்பட்ட பாவையானது கயிற்றினால் உயிர் உள்ளது போல் கண்டாரை மயக்குவதைப் போன்றது என்பதால், “நாண் அகத்து இல்லார் இயக்கம், மரப்பாவை நாணால் உயிர் மருட்டி அற்று” என்றும் அருளிச் செய்த திருவள்ளுவ நாயனார்.

     “நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” என்கிறது முதுமொழிக் காஞ்சி என்னும் நூல். வெட்கங்கெட்டு உண்டு வாழும் உயிர் வாழ்க்கையானது பசித்தலாகிய துன்பத்தின் நீங்கி ஒழியாது என்பது இதன் பொருள். வெட்கங்கெட்டு உயிர்வாழ்தலால் உண்டாகின்ற துன்பம் பசித்தலால் உண்டாகின்ற துன்பத்தின் வேறானது அல்ல. அதனோடு ஒத்ததே. துன்ப அளவால் இரண்டும் ஒக்கும் என்றாலும், பசிக்குப் பரிகாரம் உண்டு, அழிந்த நாணுக்கு உயிர்விடுவதன்றி வேறு பரிகாரமில்லை. ஆகவே "உயிரினும் சிறந்தன்று நாணே" என்பது பெறப்படும். “மானம் அழிந்தபின் வாழாமை முனி இனிதே” என்பது இனியவை நாற்பது. பெருமை அழிந்த பிறகு உயிர் வாழாது இருப்பது இனிமையானது. எனவே, நாணம் அற்றவன் நாய்க்கு ஒப்பானவன் என்பது பெறப்படும்.


2. நன்கு நள்ளாதான் நாய் ---

    நன்கு – நலம் விளையும்படி. நள்ளுதல் – நட்புச் செய்தல். நட்பு என்பது இரத்த உறவுகளைக் கடந்து, அன்பால் பிணைக்கப்பட்ட உன்னதமான உறவு ஆகும். சாதி, மதம், வயது மற்றும் இனம் கடந்து, நம்பிக்கை மற்றும் புரிதலை அடிப்படையாகக் கொண்டு, துன்பத்தில் கைகொடுத்து, மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் ஒரு தூய உறவுதான் நட்பு. ஒருவரை நல்வழிப்படுத்தி, வாழ்க்கையை அழகாக்கும் நல்ல நண்பர்கள், வாழ்வில் பாதுகாப்பையும், ஊக்கத்தையும் அளிக்கின்றனர். இன்ப துன்பங்களை சமமாகப் பகிர்ந்து, சுமையைக் குறைப்பது உண்மை நட்பு. தவறு செய்யும்போது திருத்தி, நல்வழிப்படுத்துபவன் உண்மையான நண்பன். ஒரு நல்ல நண்பன் நம்பகமான ஆலோசகராகவும், குடும்ப உறுப்பினரைப் போலவும் செயல்படுவான். இக்கட்டான காலங்களில், “உடுக்கை இழந்தவன் கை போல" துணையாக நிற்பது நட்பு.

நட்பினது சிறப்பை உணர்த்த, திருவள்ளுவ நாயனார், “நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். ஆராய்ந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதை உணர்த்த, “நட்பு ஆராய்தல்” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தீமை தரும் நட்புக் கூடாது என்பதை உணர்த்த, “தீநட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். தகாத நட்பு கூடாது என்பதை உணர்த்த, “கூடா நட்பு” என்னும் ஓர் அதிகாரத்தை வைத்தார். நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் பழகி இருக்க வேண்டுவதில்லை. புறத் தொடர்பும் அவசியம் இல்லை. ஒத்த உள்ளுணர்வு இருந்தால் போதும். பிசிராந்தையார் என்னும் புலவரிடையேயும், கோப்பெருஞ்சோழன் என்னும் அரசரிடையேயும் இருந்த நட்பும், அப்பர் பெருமானும், அப்பூதி அடிகாளரும் கொண்டிருந்த நட்பும் சிந்தனைக்கு உரியவை ஆகும். நல்லாரோடு கொண்ட நட்பு, இன்பத்திலும், துன்பத்திலும் ஒரு தன்மைத்தாகவே இருக்கும். நல்லார் அல்லாரோடு கொண்ட நட்பானது ஆக்கம் உள்ளபோது அகம் மகிழ்ந்து, கொஞ்சிக் குலாவி இருக்கும். அல்லாத காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். நண்பனும் பகைவனாக மாறிப் போகும் நிலையும் வரும். நட்பு செய்வதற்கு உரியவரை அவரது கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கங்களால் தெளிந்து கொள்ளவேண்டும்.


நல்லோர் நட்பு குறித்து, "குமரேச சதகம்" கூறுவதைக் காணலாம்.

“மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,

     வளரும் அப்போது வளரும்;

வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்

     வற்றிடும், பெருகில்உயரும்;


பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,

     பொங்கு காலம் தழைக்கும்;

புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,

     போது உதயம் ஆகில்மலரும்;


தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது

     தேறில் உயிரும் சிறக்கும்;

சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்

     சிநேகம் அப்படி ஆகுமே;


வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய

     வால! குருபர! வேலவா!

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய - குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே! வால - குமாரக் கடவுளே! குருபர – மேலான குருநாதனே! வேலவா - வேலாயுதக் கடவுளே! மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் - பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும். வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் - குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும், அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும். பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் - நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும். புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் - தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்; சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும். தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் - இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும்,  உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும்.  சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் - தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.

ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்தபொழுது தவளைகள் பல வந்து சேரும். நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ளபொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி, எல்லாரும் வந்து ஒருவனை அடுத்து நிற்பர். செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர். 

“அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் 

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில் 

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு.”  

இது ஔவையாரின் "முதுரை". இங்கு நினைவு கூரத் தக்கது.

நீர் உள்ளபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும். அது அற்றபோது அவை அயலே பறந்துபோகும். குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும், அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார். 

பற்று அற்ற நிலைக்கு, நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்து உள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவாக விளக்கியுள்ளது. 


பின்வரும் நாலடியார் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.

“கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,

வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை

நயப்பாரும் நட்பாரும் இல்.”

இதன் பொருள் ---

மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒருமுறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.

நட்பின் அருமையை உணராதவர், ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயைப் போன்றவர் என்பது தெளிவு. ஒருசந்திப் பானையின் அருமையை உணராத நாயானது அதனையும் நக்கும் என்பதால், அந்தப் பானையைப் பரண்மீது வைத்திருப்பர்.


3. பெரியாரைப் பேணாதவன் நாய் ---

"பெரியாரைப் பிழையாமை" என்பது திருக்குறளிலும், நாலடியாராலும் கூறப்பட்டுள்ளது. கல்வி அறிவு ஒழுக்கங்களால் தம்மினும் உயர்ந்த பெரியவர்களை இகழாமல் போற்றிக் கொள்ளுதல் வேண்டும். "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்." --- திருக்குறள்.

கற்று உணர்ந்த பெரியவர்கள் உலகத்தில் இருப்பதே மிக அருமையானது. கற்று உணர்ந்த பெரியவர்களின் தொடர்பு கிடைப்பது மிகமிக அருமையானது. நல்வாய்ப்பாகக் கிடைத்தாலும், அந்த நட்பை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளாமல், "அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கும், ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லை" என்று தள்ளி வைத்து விட்டு, "தாம் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும்" என்று இகழ்ந்து,  அருமையான வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்கிறது "நாலடியார்".

“பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை, 

கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, 

பயம்இல் பொழுதாக் கழிப்பரே நல்ல, 

நயம் இல் அறிவினவர்” 

இதன் பொருள் ---

தம்மிடத்து உள்ள பொன்னைக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்வதற்கு அரிய பெரியோர்கள் நட்புத் தமக்குக் கிடைக்கப் பெற்று இருந்தும், அவர்களின் அரிய நட்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளாது, அந்தோ! நல்லறிவு இல்லாத கீழ்மக்கள் பொழுதை வீணாகக் கழிப்பர்.

செல்வத்தை முயன்று தேடினால் பெறலாம். பெரியவர்கள் நட்பு முயன்று தேடினாலும் கிடைக்கப் பெறாது. கற்று உணர்ந்த பெரியோர்கள் நட்பு ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது என்றால், அது அவன் முற்பிறப்பில் செய்த நல்வினையின் பயன் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படிக் கிடைத்த அருமையான நட்பை உரிய முறையில் பயன்படுத்தி, தமக்கு உறுதியைத் (நன்மையைத்) தேடிக்கொள்ளமால், வாழ்நாளை வீணாக்குவோர் அறிவு அற்ற (நயம் இல்லாத) மூடர்கள் ஆவார். மூடர்களிடத்திலும் அறிவு இருக்கும். ஆனால் அது நன்மை தராத அறிவு. "நயமில் அறிவினவர்" என்கிறது நாலடியார். பொருளையும் புகழையும் தேடி அலவைதால் பயனில்லை. நன்னெறியில் நடவாமையால் புகழானது நாளடைவில் தேய்ந்து போகும். பொருள் நிலையில்லாமல் நீங்கும்.


வள்ளல்பெருமான் இப்படிப்பட்டவர்களைக் கண்கெட்ட குருடர் என்றும், பாழாகிப் போன குட்டிச்சுவர் என்றும் இகழ்ந்து கூறுகிறார்.


"கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்தமைக்

காண்பதே அருமை, அருமை;

கற்பதரு மிடியன்இவன் இடை அடைந்தால் எனக்

     கருணையால் அவர் வலியவந்து,


இற்புறன் இருப்ப அது கண்டும் அந்தோ! கடிது

எழுந்துபோய்த் தொழுது, தங்கட்கு

இயல்உறுதி வேண்டாது, கண்கெட்ட குருடர்போல்

     ஏமாந்து இருப்பர், இவர்தாம்

     

பொற்பினது சுவைஅறியும் அறிவுடையார் அன்று,மேல்

     புல் ஆதி உ(ண்)ணும் உயிர்களும்

போன்றிடார், இவர்களைக் கூரைபோய்ப் பாழாம்

     புறச்சுவர் எனப் புகலலாம்;

     

வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா

     மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர் பவரோகம் அற

     வளர் வயித்திய நாதனே."              --- திருவருட்பா.


இதன் பொருள் ---

     நிலைபெறும்படியாக அறநெறியைச் செலுத்திக் காட்டி உயரும் தவத்தோர்க்குச் சிகாமணி ஆக விளங்கும் உலகநாதத் தம்பிரான் சுவாமிகள் மனம் மகிழும்படியாகவும், மெய்யன்பர்களின் பிறவிப் பிணி போகவும், திருப் புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோயில்) திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வைத்தியநாதப் பெருமானே! கற்பதற்கு உரிய நன்னூல்களைக் கற்று உணர்ந்து ஒழுகும் பெரியோர்களைக் காண்பது மிகவும் அரிதாகும். வறியவன் ஒருவன் இருக்கும் இடம் தேடி கற்பகமரம் வந்ததுபோல, அருள் மிகுதியால் பெரியோர்கள் தாமாகவே வலிய வந்து மனைப் புறத்தே நிற்பார்கள் என்றால்,  விரைந்து எழுந்து அவர்பால் ஓடிக் கைகளால் தொழுது, தங்களுக்கு உறுதியானவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளாமல், கண்ணில்லாத குருடர்போலச் சிலர் ஏமாந்து ஒழிகின்றார்கள்.  இவர்கள் அழகிய சுவையை அறியும் அறிவு உடையவர் ஆகார். மேலும், புல் முதலியவற்றை மேய்ந்து உண்ணும் விலங்குகளுக்கும் இவர் ஒப்பாகார். இவர்களைக் கூரையெல்லாம் போய்ப் பாழ்பட்ட வீட்டின் புறத்தே நிற்கும் குட்டிச்சுவர் என்று சொல்லலாம். 

கற்ப தரு - கற்பக மரம். இது விண்ணுலகத்தில் உள்ளது என்று கூறுவர். தன்னை அடைந்தவர் விரும்பியதை அளிக்கும் வல்லமை வாய்ந்த மரம் இது என்று கூறுவர். இதனால் பயன் அடைய வேண்டுமானால், அது இருக்கும் இடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். கற்கபக மரம் யாரையும் தேடி வராது. (மிடியன் - வறியவன், வறுமை நிலையில் உள்ளவன்) கற்பவை எல்லாம் கற்று உணர்ந்த மிக அருமை வாய்ந்த பெரியவர்களை அறிவில்லாத ஒருவன் தேடிச் சென்று, வலம் வந்து வணங்கி, அழைத்துப் போற்றவேண்டும். கற்பக மரமே இருக்கும் இடம் தேடி வறுமையாளன் ஒருவனிடம் வந்ததைப் போன்று, கற்ற பெரியோர் தாமே ஒருவன் இருக்கும் இடம் தேடி வலிய வருவாராயின், அது எவ்வளவோ உயர்ந்த பேறு என்பதை உணர்த்த, “கருணையால் அவர் வலிய வந்து” எனவும், அப்படி வந்தவர்களை அன்புடன் பணிந்து வரவேற்பது ஒருவனது கடன் என்பதை உணர்த்த,  “கடிது எழுந்து போய்த் தொழுது” எனவும், வீண் பொழுது போக்காமல் தங்கட்கு வேண்டிய உறுதியுரைகளை அவர்களிடத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை “தங்கட்கு இயல் உறுதி வேண்டாது, கண் கெட்ட குருடர்போல் ஏமாந்து இருப்பர்" எனவும் அருளிச் செய்தார் வள்ளல்பெருமான்.

நயம் இல்லாத அறிவினை உடையவர், புலன் இன்பத்தையே பெரிதும் விரும்புவர். அதையும் ஒழுங்காக அனுபவிக்க அறியாதவர்கள் இவர்கள். எனவே, சுவை அறியாத மக்கள் இனத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். புல்லை உண்ணுகின்ற ஆடு, மாடு முதலிய விலங்கினத்திலும் சேர்த்து எண்ணப்படுபவர்கள் அல்லர்.  இவர்களைப் பாழ்பட்ட குட்டிச்சுவர் என்று எண்ணல் வேண்டும் என்பதை, “பொற்பினது சுவை அறியும் அறிவு உடையர் அல்லர்;  புல் ஆதி உண்ணும் உயிர்களும் போன்றிடார்” என்றும், “கூரை போய்ப் பாழாம் புறச்சுவர்” என்றும் காட்டுகின்றார். 

     ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' எனவும், ‘பிள்ளையின் அருமையை மலடி அறிவாளோ?'  எனவும், ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்தது போல' எனவும் வழங்கப்படும் பழமொழிகளை வைத்து, பெரியோர்களின் அருமையை மூடர்கள் அறியமாட்டார் என்பதைக் கூறுகிறது “குமரேச சதகம்” என்னும் நூல்.


"மணமாலை அருமையைப் புனைபவர்களேஅறிவர்,

     மட்டிக் குரங்கு அறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்,

     மலடிதான் அறிவது உண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாது அறிவள்,

     கணிகை ஆனவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதை வரும்

     களவான நாய் அறியுமோ?


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர்,

     கொடிய பூனையும் அறியுமோ?

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்,

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீ என்று குறவள்ளி பின்தொடர

     வனம் ஊடு தழுவும் அழகா!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"

இதன் பொருள் ---

மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனம் ஊடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மைபின்பற்றி வரச் சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே! மயிலேறி விளையாடு குகனே - மயில்மதீது இவர்ந்து அருள் விளையாடல்களைப் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப்புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலைமீது எழுந்தருளி இருக்கும் குமாரக் கடவுளே! 

மணம் மாலை அருமையைப் புனைபவர்களே அறிவர், மட்டிக் குரங்கு அறியுமோ - மணம் பொருந்திய மலர்மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களே அறிவர், அறிவற்ற குரங்கு அறியுமோ?  மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களே அல்லாமல், மலடியானவள் அறிவாளோ?  கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகை ஆனவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்;  விலைமகள் அறிவாளோ? கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவு ஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருட வரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர், கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர், கொடு மூடர் தாம் அறிவரோ? - பழகத் தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினை உடையவரே அறிவார்,  கொடிய கயவர்கள் அறிவார்களோ?

ஒருசந்தி - ஒருவேளை. நோன்பு இருக்கும் நாள் அன்று ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒரு சந்தி,  ஒருவேளை என்பது வழக்கம். நோன்பு நாளன்று ஒரு வேளைக்குச் சமைப்பதற்கு மட்டுமே பயன்படும் "பாண்டத்தை, ஒரு சந்தியின் பாண்டம்" என்று சொல்லப்பட்டது. நாய்க்கு  எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' என்று "தண்டலையார் சதகம்" என்னும் நூலிலும் சொல்லப்பட்டு உள்ளது.

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்று வள்ளல்பெருமான் பிறிதோர் இடத்தில் பாடி உள்ளார். எனவே, கற்ற மேலோரைப் போற்றி, அவருடன் கூடி இருந்து, வாழ்நாளை வீணாகப் போக்காமல், நல்லறிவு பெற்று, குற்றம் அற வாழ்வதே வாழ்க்கை ஆகும். 

4. பிறர் சேவகன் நாய் --- இது சிந்தனைக்கு உரியது. ஒருவரை அண்டிப் பிழைக்காமல் வாழவேண்டும் என்று அறிவுறுத்தியாதகக் கொள்ளலாம்.

5. பருத்தி விற்குமிடத்தில் அங்குக் காத்துக் கிடக்கும் நாய்க்கு ஏதும் உணவுப் பண்டம் கிடைக்காது. அதுபோலப் பொருளுக்குத் தம் உடம்பை விற்கும் பொருட்பெண்டிர் வாழுகின்ற இடத்தில், பொருள் இல்லாதவன் போய் ஆசைப்பட்டு நிற்பது பயன் அற்றது. ஆகலின் அவரைப் பருத்தி பகர்வுழி நாய் என்றார். (சேரி - ஒரு வகுப்பார் சேர்ந்திருக்கும் இடம். இது தாழ்ந்த குலத்தினர் வாழும் இடமாக இக்காலத்தில் கற்பிக்கப்பட்டு விட்டது அறிவீனம்)


053. சுற்றம் தழால் - 10 உழைப் பிரிந்து

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 53 -- சுற்றம் தழால் இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "தன்னிடத்தில் இருந்து க...