பொது --- 1127. பத்தேழு எட்டு

 அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பத்தேழு எட்டு (பொது)


முருகா!

பொய்ப்பொருளைத் தேடி அலையாமல்,

மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய்.


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்

     வைத்தே பத்திப் ...... படவேயும்


பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா

     சற்கா ரத்துக் ...... கிரைதேடி


எத்தே சத்தோ டித்தே சத்தோ

     டொத்தேய் சப்தத் ...... திலுமோடி


எய்த்தே நத்தா பற்றா மற்றா

     திற்றே முக்கக் ...... கடவேனோ


சத்தே முற்றா யத்தா னைச்சூர்

     கற்சா டிக்கற் ...... பணிதேசா


சட்சோ திப்பூ திப்பா லத்தா

     அக்கோ டற்செச் ...... சையமார்பா


முத்தா பத்தா ரெட்டா வைப்பா

     வித்தா முத்தர்க் ...... கிறையோனே


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                   பதம் பிரித்தல்


பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால்    

வைத்தே பத்திப் ...... படவேயும்,


பைப் பீறல் கூரைப் பாசத் தா

     சற்காரத்துக்கு ...... இரைதேடி,


எத் தேசத்து ஓடித் தேசத்தோடு

     ஒத்து ஏய் சப்தத் ...... திலும் ஓடி,


எய்த்தே, நத்தா பற்றா, மல் தாது

     இற்றே முக்கக் ...... கடவேனோ?


சத்தே! முற்றாய்! அத்தானைச் சூர்

     கல் சாடிக் கற்பு ...... அணிதேசா!


சட் சோதிப் பூதிப் பாலத்தா!

     அக் கோடல் செச் ...... சைய மார்பா!


முத் தாபத்தார் எட்டா வைப்பா!

     வித்தா! முத்தர்க்கு ...... இறையோனே!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.


பதவுரை



சத்தே –-- உண்மைப்பொருளே!


முற்றாய் --- என்றும் இளையவரே!


அத்தானைச் சூர் --- அத்தனைச் சேனைகளோடும் கூடிப் போர்க்கு வந்த சூரபதுமனையும், (அத்தனை என்பது அத்தானை என்று வந்தது)


கல் --- கிரவுஞ்ச மலையையும்,


சாடி --- அழித்து,


கற்பு அணி தேசா ---  நீதிநெறியை நிலை நாட்டிய ஒளி வடிவானவரே!


சோதிப் பூதி சட் பாலத்தா --- ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திருநெற்றிகளை உடையவரே!


அக் கோடல் செச்சைய மார்பா --- அந்தக் காந்தள்மலர் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த திருமார்பரே!


முத் தாபத்தர் எட்டா வைப்பா --- மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப்பொருளே!


வித்தா --- அறிவில் சிறந்தவரே!


முத்தர்க்கு இறையோனே --- பாசநீக்கம் பெற்றோர்க்கு இறைவரே!


முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!


முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம்

என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 


சுத்தா --- தூயவரே!


முத்தா --- பற்று அற்றவரே!


முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால் வைத்தே --- பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டு,


பத்திப் படவேயும் --- ஒழுங்காக வழபாடு செய்து ஈடேற,


பைப் பீறல் கூரை பாசத் தா ... தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால்


சற்காரத்துக்கு இரை தேடி --- (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி,


எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி --- எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று,


எய்த்தே நத்தா பற்றா --- இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு,


மல் தாது இற்றே முக்கக் கடவேனோ --- வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா?


பொழிப்புரை


உண்மைப்பொருளே! என்றும் இளையவரே! அத்தனைச் சேனைகளோடும் கூடிப் போர்க்கு வந்த சூரபதுமனையும், (அத்தனை என்பது அத்தானை என்று வந்தது) கிரவுஞ்ச மலையையும் அழித்து,நீதிநெறியை நிலை நாட்டிய ஒளி வடிவானவரே! ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திருநெற்றிகளை உடையவரே! அழகிய காந்தள்மலர் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த திருமார்பரே! மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப்பொருளே! அறிவில் சிறந்தவரே! பாசநீக்கம் பெற்றோர்க்கு இறைவரே! முத்தி நிலைக்கு அதிபரே! ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே!  தூயவரே! பற்று அற்றவரே! உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!


பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டு, ஒழுங்காக வழபாடு செய்து ஈடேறப் படைக்கப்பட்ட, கிழிபட்டு அழியக் கூடிய தோலால் ஆன பையும், எப்போதும் சிதைந்து போகக் கூடிய சிறு குடிலாகிய இந்த உடல்மீது வைத்த பாசத்தின் வலிமையால், அந்த உடலைப் பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு வாழ்ந்து, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் நாளடைவில் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா?


விரிவுரை


சத்தே –-- 


சத்து - உண்மை, என்றும் உள்ளது.


முற்றாய் ---


வயதால் மூப்பினை அடையாதவர் முருகப் பெருமான் என்கிறார். ‘என்றும் இளையாய் அழகியாய்’ என்பது திருமுருகாற்றுப்படை வெண்பா.


“இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ! செந்தில் வந்த

     இறைவ! குக! கந்த! என்றும் ...... இளையோனே!” --திருப்புகழ். (அனைவரும்)


 “என்றும் அகலாத இளமைக் கார! “ –திருப்புகழ் (சந்தனசவாது)


“சதா காலமும் இளையோனே!”. –திருப்புகழ் (விடுமதவேள்)


அத்தானைச் சூர் --- 


அத்தனை என்பது அத்தானை என்று வந்தது. சூர் – சூரபதுமன்.


கல் --- 


கல் – மலை. இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது.


கற்பு அணி தேசா ---  


கற்பு – ஒழுக்கம். நீதிநெறி.


தேசு – ஒளி. தேசு என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் தேஜஸ் என்று வழங்கப்படுகிறது. 


சோதிப் பூதி சட் பாலத்தா --- 


பூதி என்பது விபூதியைக் குறிக்கும். சோதி – ஒளி, விளக்கம், அறிவு. 


“மதியைத் தருவது நீறு” என்றார் திருஞானசம்பந்தர். திருநீறு நல்லறிவை விளங்கச் செய்யும்.


பாலம் – நெற்றி. சட் பாலம் – ஆறு திருநெற்றிகளை உடையவராகிய முருகப் பெருமான்.


முத் தாபத்தர் எட்டா வைப்பா ---   


தாபம் – தாகம், வேட்கை, ஆசை. முத் தாகம் – மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று வகையான வேட்கை உள்ளவர்களால் எட்டப்படாத பொருளாக உள்ளவர் முருகப் பெருமான்.  எனவே, “மூ ஏடணை என்று முடிந்திடுமோ” என்று கந்தர் அனுபூதியில் பாடினார் அடிகளார்.


வைப்பு – சேமப் பொருள். “அடியவர்க்கு எய்ப்பினில் வைப்பு” என்பது தேவாரம். “காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க” என்பது மணிவாசகம். “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என்பது திருவருட்பா.


முத்தர்க்கு இறையோனே! முத்தா! முத்தா! முத்திப் பெருமாளே ---


முத்தி என்றால், உடம்பை விட்டுச் செல்வது என்று பொருள் அல்ல. இறப்பது என்று பொருள் அல்ல. இறந்து போகின்றவர்கள் எல்லோரும் முத்தி பெற்றவர்கள் அல்ல. "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். உயிரானது இயல்பாகத் தன்னிடத்தே பொருந்தி உள்ள பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். பாசம் என்னும் சொல்லுக்கு, மும்மலம், ஆணவமலம், பற்று, கட்டு என்றும் பொருள் உண்டு. உடம்பொடு வாழும் காலத்திலேயே பாசநீக்கம் பெற்றவர்களானால், அவர்களை, "சீவன் முத்தர்" என்று சொல்லலாம். அந்த முத்தி நிலைக்கு வித்தாக இருப்பவன் இறைவன். “முத்திக்கு ஒரு வித்துக் குருபர” என்றார் பிறிதொரு திருப்புகழில். 

      முத்தி என்னும் சொல் ஒரு பொருளைக் குறிக்கும்போது முத்து என வந்தது. வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும்."முத்து" என்னும் சொல்லுக்கு,  அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.

       சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

       கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும்,  முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.


பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் (இ)ரட்டால் வைத்தே --- 


பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் (இ)ரட்டு = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால் அமைக்கப்பட்டது உடம்பு.


பத்திப் படவேயும் --- 


பத்தி – ஒழுங்கு, வரிசை, சிறப்பு. பத்திநெறியில் நின்று சிறப்பான முத்திப் பேற்றை அடைவதற்கு அமைந்தது இந்த உடல்.


பைப் பீறல் ---


பீறல் – கிழித்தல், கந்தை. தோலால் ஆன பை இந்த உடம்பு. “கள் வைத்த தோற்பை” என்றார் அடிகாளர் பிறிதொரு திருப்புகழில். பை எதுவும் நாளடைவில் கிழிந்து நைந்து போகும். அது நைந்து போவதற்கு முன்னர், இறைவனை நினைந்து உள்ளம் நைந்து உருக வேண்டும். 


கூரை –-


குடிசை.  இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால் ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலை பேறில்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது. 


ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்

                 ஆகின்ற ஆக்கைநீர்மேல்

      அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்

                 அறியாத காலமெல்லாம்

புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே

                 போந்தநெறி என்றிருந்தேன்

      பூராய மாகநின தருள்வந் துணர்த்தஇவை

                 போனவழி தெரியவில்லை

எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்

                 இறப்பொடு பிறப்பையுள்ளே

      எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா

                 திருவிழியும் இரவுபகலாய்ச்

செந்தழலின் மெழுகான தங்கம்இவை என்கொலோ

                 சித்தாந்த முத்திமுதலே

      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே

                 சின்மயா னந்தகுருவே.            --- தாயுமானவர்.


   `ககனமு மநிலமும் அனல்புனல் நிலமமை

       கள்ளப் புலால்            கிருமிவீடு’        ---  திருப்புகழ்.


பொய்யான உடம்பை மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர்; பரிதாபம்.


காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்

     கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்? எங்கே

     குடியிருப்பீர்? ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே

பாடுபட்டீர். பயன்அறியீர். பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்.

     பட்டதெலாம் போதும்.இது பரமர்வரு தருணம்.

ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.

     எண்மைஉரைத் தேன்அலன், நான் உண்மையுரைத் தேனே.


ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,

     அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,

கூற்றுவருங் கால்அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ!

     கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,

வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,

     வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,

சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற

     தருணம்இது, சத்தியம், சிற்சத்தியைச் சார்வதற்கே.


பொய் விளக்கப் புகுன்றீர், போது கழிக்கின்றீர்,

     புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,

ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்

    அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,

கைவிளக்குப் பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற

     களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,

மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்

       மேவியது, இங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.


என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்


பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ, எம்இறைவர்

மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே.      ---  தாயுமானவர்.


“ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு  ஓட்டி அதில் இரண்டு

கைவைத்த வீடு குலையும்  முன்னே வந்து காத்தருளே"   --கந்தர் அலங்காரம்.


சற்காரத்துக்கு இரை தேடி --- 


சற்காரம் – உபசாரம். இந்த உடம்பை உபகரிப்பதற்கு இரையைத் தேடுகின்றோம்.


எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி --- 


வெங்காளம் பாணம் சேல் கண், பால்

     மென்பாகு அம்சொல், ...... குயில்மாலை

மென்கேசம் தான், என்றே கொண்டார்,

     மென் தோள் ஒன்றப் ...... பொருள்தேடி,

வங்காளம் சோனம் சீனம் போய்

     வன்பே துன்பப் ...... படல் ஆமோ?       --திருப்புகழ்.


பொது மகளிருடைய மெல்லிய தோளைப் பொருந்தும் பொருட்டு அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கப் பொருள் வெண்டுமன்றோ? ஆகவே அருளை மறந்து பொருளை நினைந்து அப்பொருளைத் தேடும் பொருட்டு மாந்தர் பலர் அலைகின்றனர்.

தூய வழியில் பொருள் தேடினாலுங் குற்றமில்லை. தீய வழியில் பொருளை ஈட்டுகின்றார்கள். பலரை இம்சித்தும், பொய்யும் புனை சுருட்டும் புகன்றும், களவு செய்தும், பிறருடைய வயிற்றில் அடித்தும் அழிகின்ற பொருளைத் தேடுகின்றனர். அதனால் இம்மையில் பழியும் மறுமையில் பாவமும் எய்துகின்றன. இங்ஙனம் பாவ வழியில் தேடிய பொருள் மிகுதியைக் காட்டிலும் வறுமையே நல்லது என்கிறார் திருவள்ளுவர்.

“பழிமலைந்து எய்திய ஆக்கத்தில், சான்றோர்

 கழிநல் குரவே தலை.”               ---  திருக்குறள். 

தீய வழியில் ஈட்டிய பொருளை மாதர்க்கும் மனைவி மக்கட்கும் ஈந்து இவன் பாவ மூட்டையைச் சுமந்து கொண்டு நரக உலகில் சென்று பன்னெடுங்காலம் பரிதவிக்கின்றான். இது மதியீனம் அல்லவா? தேடிய பொருளைத் தான்கொண்டு போகின்றானுமில்லை. பிறர் பொருட்டுப் பொருள்தேடி, தான் பாவத்தை சுமந்து செல்கின்றான். இவனைக் காட்டிலும் பேதை இல்லை. மிக்க பொருளுடையவர்களும் மேலும் பழி பாவங்கட்கு அஞ்சாது, வறியவர்கட்கு ஈயாது தீயவழிகளில் பெரும் பொருள் ஈட்டவே முயன்று கொண்டிருக்கிறார்கள். அதனால் பிறவிப் பயனைப் பெறாது அவமே மாண்டு ஒழிகின்றனர்.

பெரும்பொருளை ஈட்ட வேண்டுமென்ற பேராசையால், தன் தேசத்தை விடுத்து அயல் தேசத்தை அடுத்துப் போகின்றான். வங்கம் சோனகம் சீனம் முதலிய தேசங்கட்கெல்லாம் போகின்றான். அயல் தேசஞ் சென்று பஞ்சு படாத பாடு படுகின்றான்.


“பல திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்

    தேடிச் சுகந்த அணை மீதில்துயின்று சுகம்

 இட்டாத ரத்துருகி வட்டார் முலைக்குள்இடை

    மூழ்கிக் கிடந்து மய லாகித்துளைந்து சில பிணியதுமூடி”  ---  (இத்தாரணிக்குள்) திருப்புகழ்.


எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்கக் கடவேனோ --- 


பல திக்குகளிலும் உழன்று பொருளைத் தேடி இளைத்துப் போகின்றான் மனிதன். மனம் இளைப்பதோடு, உடம்பும் இளைத்துப் போகிறது. இந்த நிலையை முருகப் பெருமானிடம் முறையிடுகின்றார் அருணை வள்ளலார்.


கருத்துரை


முருகா! பொய்ப்பொருளைத் தேடி அலையாமல், மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய்.










மூலம் 14

“கொண்டான் வழி ஒழுகல் பெண், மகன் தந்தைக்குத்

தண்டான் வழி ஒழுகல், தன்கிளைஅஃது, - அண்டாதே

வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு

கோல்வழி வாழ்தல் குணம்.”      -- சிறுபஞ்சமூலம்.


இல்வாழ்க்கைக்கு இசைந்த பெண்ணானவள்,  தன்னை மணந்து கொண்டவனுடைய சொல்வழியே நடத்தலும், ஒருவனுக்கு மகனாய் இருப்பவன், தந்தையினது கட்டளையை விட்டு நீங்காதவனாய், அவன் காட்டும் வழியிலேயே நடத்தலும், அத் தந்தையினுடைய சுற்றத்தார்க்கு அவரது குணமே பொருத்தி இருத்தலும், மன்னனுடைய போரைச் செய்யும் வீரர்கள், பகைவரோடு சேர்ந்துகொள்ளாமல், அரசன் பகைவர்மீது ஏவுகின்ற வேல் செல்லும் வழியேபோய் அவனை நீங்காது போர்செய்தலும், அரசன் செங்கோல் முறைப்படி ஒழுகுதலும் நன்மையைத் தருவனவாம்.


கடுகம் 14

“இழுக்கல் இயல்பிற்று இளமை, பழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை, - யாண்டும்

செறுவொடு நிற்கும் சிறுமை,இம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.”    -- திரிகடுகம்.


இளமைப் பருவம் வழுவுதலை இயல்பாக உடையது. அறிவுடையோரால் விலக்கப்பட்டவைகளைச் சொல்லுதல் பேதைமை ஆகும். ஈனத்தன்மை என்பது எக்காலத்தும் சினத்தோடு நிற்பதாகும். ஆதலால், இம் மூவகையினரையும் மேல் விளைவை அறியும் அறிவுடையார் நெருங்கமாட்டார். 


059. ஒற்றாடல் - 05. கடாஅ உருவொடு

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "யாரும் ஐயுறக் கூடாத தோற்றத்தோடு, வெகுளும் கண்ணுக்கு அஞ்சாது, எந்நிலையிலும் கருத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவல்லவனே ஒற்றன் ஆவான்" என்கின்றார் நாயனார்.

ஒற்றன் எனப்படுபவன் தன்னை ஒருவர் கண்ட காலத்தில், அவர் ஐயப்படாதவாறு, பார்ப்பனர், வணிகர் முதலியோரது வடிவைப் போல மாறுவேடம் பூண்டு இருந்தும், ஒருக்கால் சந்தேகம் கொண்டு, இன்னான் என்று அறிய முற்பட்டு, உண்மை அறிந்து கொண்டு இவனைக் கோபித்துப் பார்க்க நேரும்போது, சிறிதும் அஞ்சாது இருப்பதும், உண்மையை அறியவேண்டி சாமம், தானம், பேதம், தண்டம் முதலிய உபாயங்களால் துன்புறுத்திய போதும், தன்னை அறிவிக்காமல், தான் வந்த காரியத்தையும் அறிவிக்காமல் இருக்கும் திறம் படைத்தவனே ஒற்றன் ஆகத் தகுதி உடையவன்.


இதற்குத் திருக்குறள்....

கடாஅ உருவொடு, கண் அஞ்சாது, யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கடாஅ உருவொடு --- ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; 

கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று;

யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று --- நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“இற்றிது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ,

ஒற்றர் வந்து அளவு நோக்கி, குரங்கு என உழல்கின்றாரைப்

பற்றினன் என்ப மன்னோ-பண்டு தான் பல நாள் செய்த

நல் தவப் பயன் தந்து உய்ப்ப, முந்துறப் போந்த நம்பி."--- கம்பராமாயணம், ஒற்றுக் கேள்விப் படலம்.

இதன் பொருள் ---

காலம் இற்று இது ஆக - காலம் இத்தன்மையது ஆக; இலங்கையர் வேந்தன் ஏவ - இலங்கை மக்களின்  தலைவனான இராவணனது ஏவலினால்; ஒற்றர் வந்து -  (வேவு பார்க்கும்) ஒற்றர்கள் (அங்கு) வந்து; அளவு நோக்கி - (வானரப் படையின் திறம், எண்ணிக்கை முதலிய) அளவுகளைப் பார்த்து; குரங்கு என உழல்கின்றாரை -  குரங்குகள் போல வேடமிட்டுப் (பாடி வீடுகட்கிடையே) திரிகின்றவர்களை; தான் பண்டு பலநாள் செய்த - தான்,  முன்பு பன்னெடு நாட்கள் (பொறுமை பூண்டு) செய்த; நல்தவப் பயன்- நல்ல தவத்தின் பயன்; தந்து உய்ப்ப - விளைந்து (பின்னின்று) செலுத்த; முந்து உறப் போந்த நம்பி - முன்னதாக இராமன் திருவடிகளைப் பற்றி உய்ய வந்த புருடோத்தமனாகிய வீடணன்; பற்றினன் - (ஒற்றர் எனக் கண்டு) பற்றிக் கொண்டான்.  

அரக்கர், விரும்பும் வடிவம்  பெற்றுக் கொள்ளும் திறம் உடையவர். விரும்பும் வடிவம் எடுக்கும் திறத்தால் அரக்கர்க்குக் 'காமரூபர்' என்னும் பெயர் உண்டு.


“கூட்டிய விரல் திண்கையால்

    குரங்குகள் இரங்கக் குத்தி,

மீட்டு ஒரு வினை செய்யாமல்,

    மாணையின் கொடியால் வீக்கிப்

பூட்டிய கையர் வாயால்

    குருதியே பொழிகின்றாரைக்

காட்டினன் கள்வர் என்னாக்

    கருணையங் கடலும் கண்டான்.”    ---  கம்பராமாயணம், ஒற்றுக் கேள்விப் படலம்

இதன் பொருள் ---

கூட்டிய விரல் திண்கையால் - சேர்த்து மடக்கி  (முட்டியாக்கிய) வலிய கைகளால்; இரங்கக் குரங்குகள் குத்தி - (காண்போர்) இரங்குமாறு குரங்குகளால் குத்தப் பெற்று; மீட்டு ஒருவினை செயாமல் - பின்பு,  வேறு ஒரு செயல் செய்ய  இயலாதவாறு;  மாணையின் கொடியால் வீக்கி - மாணையின் கொடியினால் (இறுக்கி); பூட்டிய கையர் - சேர்த்துக் கட்டிய கைகளை உடையவராய்;  வாயால் குருதியே பொழிகின்றாரை - வாயினால் இரத்தமே கக்குகின்றவர்களாகிய அந்த ஒற்றர்களை; 'கள்வர்'  என்னாக் காட்டினன் - 'வஞ்சகர்'  இவர்  என்று (வீடணன்) காட்டினான்; அம் கருணைக் கடலும்  கண்டான் – அதனை அழகிய கருணைக் கடலான இராமபிரானும் (திருவிழிகளால்) (அவர்களைப்) பார்த்தான்.

  மாணை --- ஒரு வகைக் கொடி, ஓணான் கொடி என்பர்.


059. ஒற்றாடல் - 03. ஒற்றினால் ஒற்றி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஒற்றரைக் கொண்டு, பகைவர், அயலார், நட்பினர் ஆகிய எல்லாரிடத்தும் நிகழும் செயல்களை அறிந்து வரச் செய்து, அவற்றால் உண்டாகும் பயனை ஆராய்ந்து அறியாத மன்னன், வெற்றி அடையக் கிடந்த ஒரு வழி வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

எதனையும் இடங்கள்தோறும் சென்று பிறர் அறியாமல் கண்டும், கேட்டும், நன்மை தீமைகளைச் சொல்லுகின்ற ஒற்றர்களைக் கொண்டு தெரிந்துகொள்வதன் மூலம், தனது ஆட்சிக்கும் மக்களுக்கும் எதிரான செயல்களை அறிந்து, அவைகளை வெற்றி கொள்ளவேண்டும்.


இதற்குத் திருக்குறள்... 

ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன்

கொற்றம், கொளக் கிடந்ததது இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் --- ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; 

கொற்றம் கொளக் கிடந்தது இல் --- வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.

(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மேகநா தன்செய்த வேள்விதனை ஒற்றினால்

ஏகிஅழித்து உய்ந்தார், இரங்கேசா! --- சேகரித்த

ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.”

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மேகநாதன் செய்த வேள்விதனை - இந்திரசித்தன் செய்த நிகும்பலை யாகத்தை, ஒற்றினால் ஏகி அழித்து உய்ந்தார் - வேவால் உணர்ந்து, சென்று, அழித்து, (இளையபெருமாள் முதலியோர் வெற்றி பெற்றுப்) பிழைத்தார்கள், (ஆகையால், இது) ஒற்றினால் ஒற்றி சேகரித்த பொருள் தெரியாத மன்னவன் - வேவால் பகைவரிடத்து நிகழ்பவைகளை அறிந்து கொண்டு அவற்றின் பிரயோசனத்தை ஆராய்ந்து அறியாத மன்னவன், கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றிபெறத் தக்க வழி வேறு இல்லை (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- அரசன் ஒற்றால் உளவு அறிந்து காரியம் செய்யவேண்டும்.

விளக்கவுரை --- இந்திரசித்தன் நிகும்பலையில் செய்திருந்த யாகத்தை இளையபெருமாள் முதலியோர் அறியாதிருந்தார்கள். அவன் திடீரென்று மாயமாய் மறைந்து இருந்தான். ஆகையால், அவன் இருப்பைப் பற்றி சந்தேகமுற்ற இராமபிரான் விபீடணரை அனுப்பிப் பாம்பறியும் பாம்பின் கால் என்றபடி, இந்திரசித்தன் நிலைமையை அறிந்து வரும்படிக் கட்டளை இட்டார். அப்படியே அவர் சென்று, அவன் நிகும்பலையில் யாகம் செய்வதை உணர்த்தினார். உடனே இளையபெருமாள் முதலியோரை, இராமபிரான் ஏவி, அவ் யாகத்தை அழிக்கக் கட்டளை இட்டார். அதன்படி அவர்கள் சென்று யாகத்தை அழித்து, இந்திரசித்தனோடு போர் புரிந்து அவனையும் கொன்று வென்று விளங்கினார்கள். ஒற்றினால் ஒற்றிச் சேகரித்த பொருள் தெரிந்ததனால் வந்த பயன் இது. ஆகையால், "ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக் கிடந்தது இல்" என்றார் நாயனார்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“பின்னைகரம் வீடியபின் பேதுற்றான் சூரன்,ஒற்றை

முன்இனிது ஆளாமல், முருகேசா! --- அன்னதனால்

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, சூரபதுமன் - சூரபதுமனானவன், ஒற்றை - ஒற்றாடலை, முன் இனிது ஆளாமல் - முன்னரே நன்றாகச் செய்து கொள்ளாதபடியினால், பின்னை கரம் வீடிய பின் - தங்கையாகிய அசமுகியின் கை வெட்டுண்ட பிறகு, பேதுற்றான் - உள்ளம் வருந்தினான். அன்னதனால் - ஆகையால், ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றர்களால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனை அறிந்து கொள்ளாத அரசன், கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றி பெறத்தக்க வழி வேறு இல்லை.

சூரபதுமனானவன் ஒற்றரைக் கொண்டு செய்தி அறிந்துகொள்ளுதலை, முன்னரே மேற்கொள்ளாதபடியினால் தங்கையினுடைய கை வெட்டுண்ட பிறகு வருத்தத்தை அடைந்தான். ஒற்றர்களால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனைத் தெரிந்து கொள்ளாத அரசன் வெற்றி அடைதற்கு வழி ஒன்றும் இல்லை என்பதாம். 

சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் இந்திராணியோடு நிலவுலகத்தை அடைந்து தங்கினான். இந்திராணியை ஐயனார்பால் ஒப்புவித்து விட்டு, தான் திருக்கயிலைக்குச் சென்றான். ஐயனார் கட்டளைப்படி வீரமாகாளர் இந்திராணியைக் காவல் செய்திருந்தார். இந்திரணியைச் சூரபதுமனுடைய தங்கையாகிய அசமுகி ஒருநாள் கண்டாள். அவளைத் தன்னுடைய தமையனுக்கு மனைவியாக்க வேண்டுமென்று எண்ணினான்.  இந்திராணியினுடைய கையைப் பற்றி இழுத்தாள். அவ்வளவில் வீரமாகாளர் அசமுகியினுடைய கைகளை வெட்டினார். அவள் புலம்பிக்கொண்டு போய்ச் சூரபதுமனிடம் முறையிட்டாள்.  அவன் முன்னரே ஒற்றர்களை ஏற்படுத்தி வைத்திருந்தும் பகைவனாகிய இந்திரன் இருக்குமிடத்தையும் அவன் செய்யும் காரியங்களையும் ஒற்றர்கள் உணர்ந்து சென்று சூரனிடம் உரைக்கவில்லை. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டது என்று வருந்தி அவ் ஒற்றர்களைப் பலவாறு கடிந்துரைத்து இகழ்ந்தான்.  ஒற்றர்களால் நன்கு செய்தி உணர்ந்து கொள்ளாதபடியால் சூரபதுமனானவன் பல தொல்லைகளை அனுபவிக்க நேர்ந்தது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே;

முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;

பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல்

வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.”---இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

வெற்றி வேல் வேந்தற்கு ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய அரசனுக்கு ஒற்றராலே எல்லாரிடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றுவித்து, அவற்றின் பயனை ஆராய்தலின், பெருமை இனிது; முன் தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே - தான் குற்றத்தை முன்னர் ஆராய்ந்து தண்டம் செய்தல் மிக இனிது;  பற்று இலனாய் பல் உயிர்க்கும் பூத்து உற்று பாங்கு அறிதல் இனிது - ஒருவர்க்கும் பற்றிலனாய், எல்லார்க்கும் அப் பற்றினைப் பகுத்து,  எல்லாரிடத்தும் தானும் சென்று குற்றம் உளவாயின் அறிதல் இனிது.



“ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும்எனப்

பொன்தோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்

அறிவுஅரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை, சென்று

முறையிடினும் கேளாமை அன்று.”  --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

ஒன்றின் தெரியா - வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை, சிறைப்புறத்து ஒர்தும் என - ஒதுக்கிடங்களில் இருந்து தெரிந்து கொள்வோம் என்று, பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்னாலான வீரவளை அணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக் கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத் தெரிந்து கொண்டும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடிமக்களின் செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங் காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும். (அதுவே முறையாமன்றிச்) சென்று முறையிடினும் கேளாமையன்று - குடிமக்களே போய்த் தமது குறைகளைச் சொல்லிக் கொண்டாலும் அதனைக் கேளாமலிருப்பது முறைமையன்று.

அரசனாவான் குடிமக்களின் நலங்களை அவர்கள் இருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பி வரச்செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதுமன்றி, அவர்களாலும் தெரிந்து கொள்ளப்படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற்சென்று அறிவதும், அங்ஙனம் அறிந்த இடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியாதொழிவதுமே நல்ல அரசாட்சி முறையாம். அன்றி, அவ்வாறு தன் ஒற்றர்கள் மூலமாகவாவது அல்லது தானாகவாவது போய் அவர் நலங்களை அறியாதொழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக் குறையிரக்கும் போதுகூட அதனைக் கேளாமலிருப்பதும் முறையல்ல.



“அருமறை காவாத நட்பும், பெருமையை

வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும், யாண்டானும்

செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும், இம்மூவர்

ஒற்றாள் எனப்படு வார்.” ---  திரிகடுகம்.

இதன் பொருள் ---

அருமறை காவாத நட்பும் - பிறர்க்கு வெளிப்படுத்தக் கூடாத மறைமொழியைக் காப்பாற்றாத நட்பாளனும்; பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்து பெண்பாலும் - பெருமைக்குணத்தை விரும்பாமல் தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, தருமத்தினின்றும் நீங்கிய பெண்ணும்; யாண்டானும் - எங்காயினும், செற்றம் கொண்டு ஆடும் சிறு தொழும்பும் - கோபங்கொண்டு அவன்மேல் குற்றங் கூறுகின்ற குற்றலாளனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர்களை ஒப்பர் என்று சொல்லப்படுவார்.

ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக் கருதும் பெண்ணும் தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் என்பது கருத்து.


65. பிறவிக் குணம் மாறாது

 “வேசியரும், நாயும், விதிநூல், வயித்தியரும்,

பூசுரரும், கோழிகளும், பொன்அனையாய், - பேசில்ஓரு

காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்,

காரணந்தான் அப்பிறப்பே காண்.”  நீதிவெண்பா.


திருமகளைப் போன்ற அழகிய பெண்ணே! சொல்லுமிடத்து, பரத்தையரும், நாய்களும், சட்ட நூலும், மருத்துவரும், பார்ப்பனரும், கோழிகளும் ஒரு காரணமும் இல்லாமலே பார்த்த உடனே பகையாகி விடுவர்.  அவ்வாறு பகை ஆவதற்குக் காரணம், என்ன என்றால், அதனதன் இயல்பே ஆகும். அக் குணம் மாறாது. இதனை அறிந்துகொள்.


ஒரு விலைமகள் மற்றொரு விலைமகளைக் கண்டால் தன் தொழில் போட்டி காரணமாகக் காரணமின்றிப் பகைத்துக் கொள்வாள். 


இரண்டு நாய்கள் ஒன்றுக்கொன்று சந்தித்துக் கொண்டால் எவ்விதக் காரணமுமின்றி குரைத்துக் கொண்டு சண்டையிடத் தொடங்கும். 


விதிநூல் வல்லவர் எனப்படும் சோதிடர்கள் தங்களுக்குள் முரண்பட்டுப் பேசுவர். ஒருவர் கருத்தை மற்றொருவர் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார். திருக்கணித முறை சிறந்தது என்பார் ஒருவர், மற்றொருவர் வாக்கிய பஞ்சாங்க முறைதான் சிறந்தது என்பார். தங்களுக்குள் மாறுபட்டுப் பூசலிட்டுக் கொண்டு இருப்பர்.


வயித்தியர் எனப்படும் மருத்துவர்களும் அவ்வாறே. ஆங்கில மருத்தவர் கருத்து பிறதுறை மருத்துவர்களுக்கு உடன்பாடாக இருக்காது. பிறதுறை என்பன, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் இன்னபிற துறைகள். தங்களின் தொழில் போட்டி மற்றும் அறிவை நிலைநாட்டும் முனைப்பால் ஒரு மருத்துவ வல்லுநர் மற்றொருவரைக் கண்டால் உடன்படாமல் பகைமை உணர்வு கொள்வார். மாறுபட்டுப் பூசல் இடுவார்.


பூசுரர் என்பது உயிர்கள் மீது அழகிய தண்மை உடையவர்களைக் குறிக்கும். இவர்களை “அந்தணர் என்போர் அறவோர், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவார்” என்று குறிப்பிட்டார் திருவள்ளுவ நாயனார். (சுரர் என்பது தேவர்களைக் குறிக்கும். அசுரர் என்பது இரக்கம் என்பது இல்லாத அரக்கர்களைக் குறிக்கும். பூசுரர் என்பது பூவுலகில் வாழும் தேவர்களாகிய அந்தணர்களைக் குறிக்கும். “பூசுரன் ஞானசம்பந்தன்” என்று திருஞானசம்பந்த நாயானார் தம்மைக் குறிப்பிட்டுள்ளார். அறவழியில் ஒழுகுவோரை அந்தணர் ஆவார்.)  இப்போது இது தொழில்முறை ஆகிவிட்டது. சடங்குகளைச் செய்விக்கும் அந்தணர்கள், தங்களுக்குள் வாடிக்கையாளர்கள் மற்றும் தட்சணை என்னும் தக்கணை காரணமாகத் தொழில் போட்டி கொண்டு ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வர். நான் திருமுறை வழியில்/தமிழ்நெறியில் திருமணம் முதலிய சடங்குகளைத் தமிழில் ஏறக்குறைய 50 ஆண்டுகளாகச் செய்து வந்தேன். பலரைப் பயிற்றுவித்தும் உள்ளேன். திருவள்ளுவ நாயனார் பொருள் கருதித் திருக்குறள் இயற்றவில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பொருள் கருதி அருட்பாடல்களைப் பாடவில்லை. அவர்கள் மூலம் அறிந்த தமிழை விற்பது பாவம் என்பதால், தட்சணையாக எதையும் கேட்டுப் பெறமாட்டேன். அவர்களாக மனம் உவந்தளிப்பதை ஏற்றுக் கொள்வேன். அப்படி ஏற்றுக் கொள்வதையும் நான் அனுபவிக்காமல், நல்ல காரியங்களுக்குக் கொடுத்து விடுவேன். இது பிறருக்குப் பொறாமையை உண்டாக்கியது. என்னிடத்தில் பயின்றவர்களே, பொறாமை கொண்டு விலகி, தனியாகத் தொழில் நடத்தியதும் உண்டு. 


இரண்டு சேவல்கள் அல்லது கோழிகள் ஓரிடத்தில் கூடினால், அவை காரணமில்லாமல் உடனே ஒன்றோடொன்று மோதி சண்டையிட ஆரம்பிக்கும். 

சில பிறவிகளின் குணமானது இயல்பாக மாறாது என்பது கருத்து.


(விதிநூல் - சட்ட நூல்.  பூசுரர் - பார்ப்பனர்.  பொன் - இலக்குமி.)


மூலம் 13

“இடர் இன்னா நட்டார்கண், ஈயாமை இன்னா,

தொடர்புஇன்னா நள்ளார்கண், தூயார்ப்-படர்புஇன்னா,

கண்டல் அவிர்பூங் கதுப்பினாய், இன்னாதே

கொண்ட விரதம் குறைவு.”.      – சிறுபஞ்சமூலம்


தாழைமலர் முடிக்கப்பட்டு விளங்குகின்ற அழகிய கூந்தலை உடையவளே! நண்பர்களிடத்துத் துன்பம் செய்தலும், அவர்கள் துன்புறும் காலத்தில் அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடாதிருத்தலும், பகைவரிடத்து நட்புக் கொள்ளுதலும், உள்ளத் தூய்மை உடையவரின் தொடர்பை விட்டுநீங்குதலும், கைக்கொண்ட நோன்பில் குறைவுபடுதலும் ஆகிய இவைகள் தீய பயன்களையே தரும்.


கடுகம் 13

“சீலம் அறிவான் இளங்கிளை, சாலக்

குடியோம்பல் வல்லான் அரசன், - வடுவின்றி

மாண்ட குணத்தான் தவசி, என்று இம்மூவர்

யாண்டும் பெறற்கு அரியார்.” -- திரிகடுகம்.


பிறர் குணத்தை அறிந்து நடக்கிறவன்  இளமைதொட்டு வந்த சுற்றத்தான் ஆவான். குடிகளை நன்கு பேணுதலில் வல்லவன் அரசன் ஆவான். குற்றம் இல்லாத மாட்சிமைப்பட்ட குணத்தை உடையவன் தவசி ஆவான். இப்படிப்பட்ட மூன்று திறத்தாரும் எவ்விடத்தும் பெறுதற்கு அரியவர் ஆவார். (தேடிப் பெற வேண்டியவர் ஆவார்.)


059. ஒற்றாடல் - 02. எல்லார்க்கும் எல்லாம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "எல்லார் இடத்தும் நடப்பவற்றை எல்லாம், நாள்தோறும் ஒற்றரால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.


எல்லார் இடத்தும் என்றது, பகைவர், நண்பர், அயலார் ஆகிய மூவரிடத்தும். எல்லாம் என்றது, நாட்டில் நிகழும் நல்லனவும் தீயனவும் ஆகிய எல்லா நிகழ்வுகளையும், தெரிந்து கொள்ளுதலும், 


வல்லறிதல் ஆவது, தெரிந்துகொண்ட பொழுதே, நல்ல செயல்களுக்கு உண்டான அருளைச் செலுத்தி, அதற்கு உரியோரைக் காத்தலும், தீய செயல்களுக்கு உரியோரைத் தக்க முறைப்படி தண்டித்தல் செய்வதும். காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.


இதற்குத் திருக்குறள்...

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல், வேந்தன் தொழில்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் --- எல்லார் கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்;

வேந்தன் தொழில் --- அரசனுக்கு உரிய தொழில்.

('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விரு தொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“சீர்படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்

பேர்படைத்த சேரர் பெருமான்போல் --- பார்மிசையின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”

இதன் பொருள் ---

சேரர்பெருமான் - சேரமான் பெருமாள் நாயனார்.  பாணபத்திரருடைய வறுமையைத் தீர்த்தல் பொருட்டுச் சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரம் வருமாறு......

திருச்சிற்றம்பலம்

மதிமலி புரிசை மாடக் கூடல்,

பதிமிசை நிலவு பால் நிறவரிச் சிறகு

அன்னம் பயில்பொழில், ஆலவாயில்

மன்னிய சிவன், யான் மொழிதரு மாற்றம்,


பருவக் கொண்மூப்படி எனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்

செருமா உகைக்கும் சேரலன் காண்க,


பண்பால்  யாழ் பயில் பாணபத்திரன்,

தன்போல் என்பால் அன்பன், தன்பால்

காண்பது கருதிப் போந்தனன்,

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.

திருச்சிற்றம்பலம்

இதனைக் கொண்டு சென்ற பாணபத்திரரைச் சேரர் பல உபசாரங்களுடன் வரவேற்று, அவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினார் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“வேதன்இல்லாள் வீந்ததிறம் மீனவற்கு நீதெரித்தாய்,

சோதி,பழி அஞ்சும் சோமேசா - பூதலத்தின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”


இதன் பொருள் ---

சோதி - பரஞ்சோதி வடிவமாகவுள்ளவரே,  பழி அஞ்சும் சோமேசா - முன்பு பாண்டிய மன்னனுக்கு வர வின்ற பழிக்கு அஞ்சிய சோமேசப் பெருமானே! பூதலத்தின் - நிலவுலகத்தில், எல்லார்க்கும் - எல்லார்கண்ணும், நிகழ்பவை எல்லாம் - நிகழ்வன எல்லாவற்றையும், எஞ்ஞான்றும் வல் அறிதல் - நாள்தோறும் ஒற்றான் விரைந்து அறிதல், வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்,

வேதன் - ஓர் அந்தணணுடைய, இல்லாள் வீந்த திறம் - மனைவி இறந்த விதத்தை, மீனவற்கு - குலோத்துங்க பாண்டியனுக்கு, நீ தெரித்தாய் - நீயே தெரிவித்து அருளினாய் ஆகலான் என்றவாறு.

அரசர்க்கு உற்றார் உறவினர் நண்பினர் பகைவர் எல்லாரானும் தீமை விளையக் கூடும் ஆகலின், அவர்கள் செயலையும் ஒற்றான் அறியவேண்டுவது அரசர்க்கு இன்றி அமையாதது ஆயிற்று. காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.

குலோத்துங்க பாண்டியன் என்பான் செங்கோல் செலுத்தும் நாள், ஓர் அந்தணன் தன் மனைவியோடும் கைக் குழந்தையோடும் திருப்புத்தூரினின்றும் புறப்பட்டு மாமனார் வீடு செல்ல மதுரைக்கு வருகிற வழியில் தாகவிடாய் கொண்ட மனைவியைக் குழந்தையுடன் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் விட்டு, நீர் கொணரச் சென்றான். அவ் ஆலமரத்தில் நெடுங்காலமாய்ச் சிக்குண்டு இருந்த ஓர் அம்பு காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து அப் பார்ப்பனியின் வயிற்றில் ஊடுருவிற்று. அவளும் உயிர் இழந்தாள். அத் தருணத்தில் அம்பினைத் தொடுத்த வில் ஏந்தியவனான வேடன் ஒருவன் வெயிற்கு ஒதுங்கி அந்த ஆலமரத்தின் அடியில் நின்றான். நீர் கொணரச் சென்ற அந்தணன் நீரொடு திரும்பி வந்து, தன் மனைவி இறந்து கிடப்பதைக் கண்டான். இது யார் செய்தார் என்று சுற்றிப் பார்த்தான். வேடன் ஒருபுறம் நிற்கின்றான். அவனே செய்தானென்று துணிந்து அரசன் ஆணை கொண்டு அவன் தன்னுடன் வரும்படி செய்து இறந்த மனைவியைத் தன் முதுகில் இட்டுக் குழந்தையை இடுக்கி மதுரை நோக்கி வழி நடந்து வந்து பாண்டியன் அரண்மனை வாயிலில் வேடனை விட்டு, மனைவியின் சவத்தை இட்டு, "நீதி தவறாத மன்னவ! இது முறையோ?" என்று கதறினான். வாயில் காப்போர் நிகழ்ந்தன யாவும் பாண்டியற்குத் தெரிவித்தார்கள். பாண்டியன் உடனே தன் அரியணையினின்றும் போந்து அந்தணன் நிலை கண்டு வருந்தி விசாரித்தான். அந்தணன் நிகழ்ந்தன கூறி "அவ் வேடனே கொன்றான்" என்றான். அதன்பின் அரசன் வேடனது வாய்ப் பிறப்பைக் கேட்டான். அவன் "தான் கொன்றதுமில்லை, கொன்றாரைக் கண்டதுமில்லை" என்றான். மேல் தான் இட்ட கட்டளைப்படி அவ் வேடனைச் சிறையிலிட்டுத் தண்டலாளர்கள் பலவாறு கடும் தண்டனை செய்தும் அவன் ஒரு சொல்லாகச் சொன்னமையானும், கொன்ற குறிப்பு முகத்தில் தோன்றாமையானும், ஒன்றும் தோன்றாது பாண்டியன் சுந்தரேசப் பெருமான் திருமுன் புகுந்து, "மன்றாடு மணியே! ஒன்றாலும் என் ஐயம் தீர்தற்கு இடனில்லை. நீரே என் தாழ்வு கெட நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கவேண்டும்" என்று பிரார்த்தித்தான்.  உடனே, "வணிக வீதியில் ஒரு வீட்டில் மணம் நடக்கிறது. அந்தணனோடு நீ அங்கு வருவாய். உனது ஐயம் தெளியும்" என்று ஆகாயவாணி கூறக்கேட்டு, அவ்வாறே அன்று இரவு அந்தணனோடு அவ் வீட்டில் ஒரு பக்கம் மறைந்து இருந்தான். அன்று அம் மணமகன் ஆயுள் முடிய, யமதூதர்கள் அவனுடைய உயிரைக் கவர வந்தார்கள். பாண்டியனும் அந்தணனும் கேட்கும்படி, வந்த தூதர்களில் ஒருவன், "யாம் எவ்வாறு இம் மணமகன் உயிரைக் கொள்வது? அவன் உடம்பில் பிணி ஏதும் இல்லையே? காரணமின்றி உயிர் கொள்ளப்படாதே" என்றான். அதற்கு மற்றவன், "அன்று ஆலமரத்தில் சிக்குண்டு இருந்த அம்பைக் காற்றால் விழும்படி செய்து எவ்வாறு பார்ப்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ, அவ்வாறு ஓர் உபாயத்தால் இவன் உயிரையும் கவரவேண்டும். ஒன்று செய்க. வாத்திய முழக்கொலியால் அவ் ஈன்றணிமையுடைய இப்பசுவை வெருட்டித் தாம்பு அறுத்துவிட்டு இவன் உயிரைக் கவர்க" என்றான். பாண்டியன் அந்தணனை நோக்கி, "கேட்டீரோ, மனம் தெளிந்ததோ" என்றான். அதற்கு அந்தணன், "நிற்க இம் மணமகன் இவ்வாறு இறப்பானேல், என் மனைவி இறந்தது அவ்வாறெனக் கொள்வன்" என்றான். மணவினை தொடங்கினார்கள். பல வாத்தியங்களும் முழங்கின.  அம்முழக்கொலியால் வெருண்டு கட்டிய தாம்பு அறுந்து போக அப் பசுவானது ஓடிப்போய் மணமகனை முட்டியது. அவன் அக்கணமே உயிர் துறந்தான். ஐயம் நீங்கி யாவர்க்கும் இது கூறி மகிழ்ந்து, அந்தணனுக்கு மறுமணம் முடிக்கப் பொருளுதவி, விடை தந்து,  சிறையிலிருந்த வேடனுக்கு இடப்பட்ட விலங்கைக் கழற்றுவித்து, "தெளியாது யாம் கடும் தண்டம் செய்தோம். பொறுத்துக் கொள்க" என்று இரந்துவேண்டி அவனுக்கு வேண்டியன கொடுத்து விட்டான் பாண்டியன். இது திருவிளையாடல் புராணத்து உள்ளது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...

"நெறிவார் சடையாரைப் போல், நீள்திலத்தோர் செய்கை

அறிவார் கழிறிற்று அறிவார் --- அறிவார்ஆர்

எல்லார்க்கு எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்"

இதன் விளக்கம் ---

மலைநாட்டிலே உள்ள மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே பெருமாக்கோதையார் என்பவர் அவதரித்தார். இளம் வயதிலேயே அவர் வைராக்கியம் உடையவராய்ச் சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டும் என்னும் கருத்தினராய் விளங்கினார்.  திருவஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தை அடைந்தார். பரமசிவனே சுவதந்திரர். நாம் பரதந்திரர் என்று உணர்ந்தார். சிவாதீனமாய் நின்றார். நாள்தோறும் நியமமுடன் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். அப்போது செங்கோல் பொறையன் என்னும் சேர அரசன் தபோவனத்தை அடைந்தான். மன்னன் ஒருவன் இல்லாமல் நாடு இருத்தல் கூடாது என்று எண்ணிய, மந்திரிமார்கள் திருத்தொண்டு செய்துகொண்டு இருக்கும் பெருமாக்கோதையாரிடம் வந்து இம்மலை நாட்டை நீரே முடிசூடி அரசியற்றல் வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.  பெருமாக்கோதையார் அதனைக் கேட்டு ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வணங்கி விண்ணப்பித்தார்.  அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்தி வழுவாது அரசியற்றும் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகள் அனைத்தையும் அறியும் அறிவையும், நாசம் இல்லாத மகா பராக்கிரமத்தையும், பெருங்கொடையையும், அரசருக்கு உரிய படை வாகனம் முதலிய எல்லாவற்றையும் கைவரப் பெற்றார். மீட்டும் இறைவனை வணங்கி விடைபெற்று வெளிப் போந்து, முடிசூடி அரசியற்றினார் சேரமான் பெருமாள். எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

தாய் அறியாத சேய் இருந்தாலும்

தான் அறியாதவர் இல்லை,

ஆய தன்மையினால் அறவழி நிற்கும்

அறிஞரை அறிந்து, அவர்க்குரிய

தேய ஆதிக்கம் தந்து நல் நீதி

செலுத்தி, எங்கணும், மருந்தினுக்கும்

தீயவர் இலர் என்று இசையுற மடக்குந்

திறல்உளோன் பூதல வேந்தே. ---  நீதிநூல்.


  எல்லாக் குடிகளையும் தானறிந்து, நல் அறிவாளரைக் கொண்டு அரசு நடத்தித், தீயவர் பெயருமில்லாமல் நீக்கிப் புகழுடன் ஆள்வோனே மன்னன்.


059. ஒற்றாடல் - 01. ஒற்றும் உரைசான்ற

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


அதாவது, பகைவர், நட்பினர், அயலார் ஆகிய மூன்று சாராரிடத்தும் நிகழுபவைகளை அறிந்து கொள்வதற்கு ஒற்றரை வைத்து ஆளும் முறைமையைச் சொன்னது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒற்றரும், புகழ் சார்ந்த நூல்முறைகளும் ஆகிய இவை இரண்டும் தன்னிரண்டு கண்களாகக் கொண்டு ஒருவன் தெளிவு பெறவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் சென்று, அங்கு நிகழ்வனவற்றை அறிந்து அறிவிப்பதால் ஒற்றரும், அவ் ஒற்றர் சொன்ன செய்திகளை நீதிநூலில் சொல்லப்பட்டுள்ள வழியே சென்று ஆராய்ந்து தெளியவேண்டி உள்ளதால், அந்த நீதிநூல்களும் ஒருவனுக்கு இரு கண்களைப் போன்றவை ஆகும்.

ஒற்றரை ஊனக் கண் என்றும், நீதிநூல்களை ஞானக்கண் என்றும் கொள்வது சிறப்பாக அமையும்.


இதற்குத் திருக்குறள்...

ஒற்றும், உரைசான்ற நூலும், இவை இரண்டும்

தெற்று என்க மன்னவன் கண்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் --- ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; 

மன்னவன் கண் தெற்றென்க --- அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.

(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந் நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளை எல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக் கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாக வந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"எற்றுஇன்றி ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்

தெற்றென்க மன்னவன்கண் என்பர், ஈதுஉன் செயல்பொருந்தும்

முற்றின்ப மன்னர் முறைமை, நின்பாத முளரியின்மேல்

பற்று என்று நான் பெறுவேனோ புல்லாணிப் பதிக்கொண்டலே".

இதன் பொருள் ---

என்னவோ என்று தெளிய முடியாதவைகளை அறிந்து சொல்லுகின்ற ஒற்றரும்,  புகழமைந்த நீதிநூல்களும் ஆகிய இவை இரண்டும், தெளியத் துணை புரிவன என்று பெரியோர் சொன்னதால், உனது தொழிலாகிய காத்தல் தொழிலைப் புரிகின்ற மன்னருக்கு இவை இரண்டும் பொருந்தும். ஒற்று, நீதிநூல் ஆகிய இரண்டில் பற்று வைத்துத் தெளிகின்ற, எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற மன்னர்களைப் போல், திருப்புல்லாணிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருமாலே! அடியேன் உனது திருவடித் தாமரையின் மேல் அன்பு வைத்துத் தெளிந்த ஞானத்தை எப்போது பெறுவேனோ?

முற்றின்ப மன்னர் - எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற அரசர்கள். பாதமுளரி - திருவடித் தாமரை. பற்று - அன்பு.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“எள்ளப் படுமரபிற்று ஆகலும், உள்பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டின்றி

உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும், இம்மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, முறையை உடையதாதலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தைக் கேட்டுப் பின் மறவாத, கூரறிவுடைமையும்; உள் பொருள் முட்டு இன்றி சொல்லும் உணர்ச்சியும் - அப் பொருளை, தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய ஒற்று ஆள் குணம் - அறிவுள்ள வேவுகாரனது தன்மையாம்.


64. நல்லவர் துன்புற்றாலும்...

“பொன்னும், கரும்பும், புகழ் பாலும், சந்தனமும்,

சின்னம்பட வருத்தம் செய்தாலும் - முன்இருந்த

நற்குணமே தோன்றும்; நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து.” -- நீதிவெண்பா


இனிமையானது என்று யாவராலும் புகழ்ந்து சொல்லப்படுகின்ற பொன், கரும்பு, பால், சந்தனம் என்னும் இந்நான்கு பொருள்களையும் உருக் குலைந்து வருந்தும்படி துன்புறுத்தினாலும், முன்னே இருந்த ஒளி, இனிமை, சுவை, நறுமணம் என்னும் நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும். அதுபோல, நல்லோரிடத்தும், அவர்கள் எவ்வளவு துன்புற்றாலும், அவர்களது பழைய நல்ல இயல்புகளே விளங்கித் தோன்றும்.


(சின்னம்பட – நிலைகுலைய.  நலிந்தாலும் - துன்புற்றாலும்.)


மூலம் 12

“கோறலும் நஞ்சு, ஊனைத் துய்த்தல் கொடுநஞ்சு,

வேறலும் நஞ்சு, மாறு அல்லானை, - தேறினான்

நீடாங்கு செயதலும் நஞ்சுஆம், இளங்கிளையை

நாடாதே தீதுரையும் நஞ்சு.”    -- சிறுபஞ்சமூலம்.


ஓர் உயிரை உள்ளத்தில் அருள் இல்லாமல் கொல்லுதலும், ஒருவனுக்கு உயிரைக் கொல்லும் நஞ்சு போன்றது. அங்ஙனம் கொல்லப்பட்ட உயிரின் தசையைத் தின்னுதலும் கொடிய நஞ்சு போன்றது. தனக்கு எதிர் அல்லாதவனை, எதிர்த்து வெல்லுதலும் நஞ்சு போன்றது. ஒரு காரியத்துக்கு உரியவனென்று ஆராய்ந்து தெளியப்பட்டவனாகிய ஒருவன், அக் காரியத்தின் மேல் கால நீட்டிப்பு செய்தலும் நஞ்சு போன்றது. இளைத்த சுற்றத்தாரை ஆராயாமலே பழுது சொல்லுதலும் நஞ்சு போன்றது. (துன்பம் செய்பவை இவை என்று கூறப்பட்டது)


கடுகம் 12

“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,

வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்,

கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது.” -- திரிகடுகம்.


நன்முயற்சியை உடையவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன் படாமல் வாழ்க்கையை நடத்துபவன். உதவியாளன் என்று சொல்லப்படுவோன், வந்த விருந்தினர் பசித்து இருக்கையில், தான் மட்டும் தனித்து உண்ணாதவன். ஆசிரியர் சொல்லக் கேட்டவற்றை மறவாது மனத்தில் கொண்டு இருக்கும் நற்சிந்தை உடையவன் நல்ல கொள்கையாளன் ஆவான்.  இம் மூவரும் தனக்கு நட்பினராயிருக்க ஒருவன் வாழ்வது, அவனுக்கு நன்மை தருவதாகும்.


(தாளாண்மை – ஊக்கம், விடாமுயற்சி. வேளாண்மை -உதவி புரிதல், கொடை. கோள் – கொள்ளுதல். கேள் – உறவு, நட்பு)


கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி. வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி. ஆசிரியர் சொல்லியவற்றை மறவாது மனத்தில் கொண்டிருத்தலே நற்சிந்தை. 


“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே, செக்காரப்

பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே,- முட்டிபுகும்

பார்ப்பாரகத்தை எட்டிப் பாரோமே, எந்நாளும்

காப்பாரே வேளாளர் காண்.”         -- ஏர் எழுபது. (கம்பர்)


63. தீயோர் செல்வம் நல்லோர்க்கு ஆகாது

“பாவிதனம் தண்டிப்போர் பால்ஆகும் அல்லது, அருள்

மேவுசிவன் அன்பர்பால் மேவாதே, - ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்குஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ சொல்.” -- நீதிவெண்பா


சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகுமல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். (ஆகாது) அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.


(தனம் - செல்வம்.  மேவாது - சேராது, பொருந்தாது.)


058. கண்ணோட்டம் - 10. பெயக் கண்டும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர்" என்கின்றார் நாயனார்.

தம்மோடு பழகியவர் தமக்கு விடத்தையே கலந்து உண்ணச் செய்தாலும்,  தாம் சாதற்கு அது இடமாகும் என்று அறிந்து இருந்தும், அவரிடத்தே உள்ள அன்பின் மிகுதியால், "நீர் நஞ்சு வைத்தீர்" என்று கூறாமலும், தாம் இறப்பதை எண்ணாமலும், அவர் கொடுத்த நஞ்சை உண்டு, பின்னும் அன்போடு பழகுவர். எல்லோராலும் விரும்பத்தக்க கண்ணோட்டம் என்னும் நற்பண்பினை உடையவர் இவர் ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் --- பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; 

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் --- யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.

(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"செயத்தக்க பாவத்தினும் மேல்செய்தேனைத் திருவருள்கூர்ந்து

உயத் தக்கவாறு செய்யாய், பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனப் புகன்றார்

பயத்தக் கராசலங் காத்து அருள் புல்லைப் பதிக்கொண்டலே".


இதன் பொருள் ---


பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர் என்று திருவள்ளுவ நாயனார் சொன்னார். எனவே, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள முகில்வண்ணனே! ஆதிமூலமே என்ற யானைக்கு அபயம் தந்த காத்தவனே! செய்யக்கூடிய பாவத்தினை விடவும் மேலான பாவத்தைப் புரிந்து என் மீது திருவருள் வைத்து, பிழைக்க வைத்து அருள்வாய்

மேற்செய்தேனை - மிகுதியாகச் செய்த என்னை.  திருவருள் கூர்ந்து - திருவருள் பொருந்தி. உயத் தக்கவாறு - பிழைக்கத் தக்கபடி. பயத்த - அச்சத்தை அடைந்த. கராசலம் - ஆதிமூலமே என்ற யானை. (கரம் – கை. இங்கே துதிக்கை குறித்தது. அசலம் – மலை. துதிக்கையினை உடைய மலை. அது நானை) புல்லைப் பதிக் கொண்டல் - திருப்புல்லாணியில் எழுந்தருளிய முகில்வண்ணன்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...



“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்     

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர், 

அஞ்சில் ஓதி என் தோழி தோள்துயில் 

நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ 

என்கண் ஓடி அளிமதி, 

நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே.”  ---  நற்றிணை. 


இதன் பொருள் ---

நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டம் உடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீவிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்சு எனக் கண்டு வைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் --- நீ அத்தகைய நட்புடையனாய் இருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயே ஆயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்.

நாகரிகர் - கண்ணோட்டம் உடையவர். 



“செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார்

நயத்தகு நாகரிகம் என்ஆம்? - செயிர்த்து உரைப்பின்

நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்

எஞ்சாது எடுத்து உரைக்கல் பாற்று.”  --- நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---

செயக்கடவ அல்லனவும் செய்தும்மன் - செய்தற்கரிய செயல்களையும் மிகுதியும் செய்து முடிப்போம், என்பார் - (என்று செயலில் காட்டாது) சொல்லளவில் சொல்லி நிற்பாரின், நயத்தகு நாகரிகம் என்ஆம் - முகமனான கண்ணோட்டம் என்ன பயனைத் தரும்? (இச் செய்கை) செயிர்த்து உரைப்பின் - ஒருவரைக் கோபித்துச் சொன்னால், நெஞ்சு நோம் என்று - அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல் - அவர் தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - அது கூசாமல் கூறுந்தன்மையதாகும்.


தன்னை வந்து அடுத்துத் தன் உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவில் சொல்லிச் செயலில் அவ்வாறு செய்யாது ஒழிவது நாகரிகமாகாது.       


058. கண்ணோட்டம் - 09. ஒறுத்து ஆற்றும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தம்மை வருத்தும் வல்லியல்பு உடையாரிடத்தும், கண்ணோட்டம் செய்து, பொறுத்துக் கடமை புரியும் பண்பே தலை சிறந்தது" என்கின்றார் நாயனார்.

தன்னைத் துன்புறுத்துகின்றவர்களைத் துன்புறுத்தாது பொறுத்துக் கொள்வது, கண்ணோட்டத்தின் பயன் ஆகும். அதுவே, தலைசிறந்த குணம்.


இதற்குத் திருக்குறள்...

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும், கண்ஓடி,

பொறுத்து ஆற்றும் பண்பே தலை.


இதற்குப் பரிமேழலழகர் உரை ---

ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் --- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; 

கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை --- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மாலான் முதல்இகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்

தோலா விடம்உண்டாய், சோமேசா! --- சால

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன்பொருள்---


சோமேசா! சால ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை மிகுதியும் வருத்தும் தன்மையுடையாரிடத்தும், கண் ஓடி - கண்ணோட்டம் உடையராய், பொறுத்தாற்றும் பண்பே - குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே, தலை - அரசர்க்குத் தலையாய இயல்பாவது,


மாலான் முதல் - திருமால் முதலிய, இகழ்ந்த வானவர் தீங்கு - தேவரீரை முழுமுதற்கடவுள் என நினையாது செருக்கால் மயங்கி அவமதித்த தேவர்களுடைய குற்றத்தை, பொறுத்தும் - பொறுத்துக் கொண்டும், தோலா விடம் உண்டாய் - தோல்வி அடையாமல் யாவரையும் அழித்தற் பொருட்டு எழுந்து வந்த ஆலகால விடத்தை உண்டு பாதுகாத்து அருளினீர் ஆகலான் என்றவாறு.


சுராசுரர்கள் அமுதம் வேண்டித் திருப்பால் கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி, வாசுகியைக் கயிறாகப் பூட்டிக் கடைந்து இளைத்தார்கள். மந்தரகிரியும் நிலைபெறாது தாழ்ந்தது. அப்போது அங்கு வந்த வாலி உதவியாய் நின்று மேலும் கடையத் திருமால் கூர்வடிவம் கொண்டு மந்தரகிரியைத் தாங்கினார். மிக்க கடுமையாகக் கடையும்போது வாசுகி வருத்தம் பொறாது விடத்தைக் கக்கிப் பெருமூச்செறியக் காளகூடம் என்னும் விடம் கடலினின்றும் எழுந்து கடல் நீரைச் சுவற்றி அண்டகடாகத்தையும் எரித்து உயிர்த் தொகைகளை எல்லாம் சுட்டு வருத்த, வாலி அஞ்சி ஓடினான். பிரம விட்டுணுக்கள் உருக்குலைந்தார்கள். இறைவனை மறந்தமையால் எடுத்த காரியம் இடையூறு உற்றதன்றித் தமக்கெல்லாம் இறுதியும் வரநின்றது என அஞ்சித் திருக்கயிலை புகுந்து நிகழ்ந்தனவற்றை விண்ணப்பித்து, "இது பொழுது காத்திலையேல், எமக்கு இறுதி இன்றே ஆம், விதுமுடித்த பெருங்கருணை வெள்ளமே" என்று இரக்க, பெருமான் இருந்த நிலையில் திருக்கரத்தை நீட்ட, அவ் விடம் திரண்டு அதனுள் அடங்க, அக்கணமே அதனை உண்டு கண்டத்தின் வைத்தார்.



அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“சொல்லுக என்று அங்கதனைத் தூதுஏவி, மாதைவிடல்

இல்லைஅவன் என்றான், இரங்கேசா! --- மெல்ல

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! அங்கதனை - வாலிகுமாரனாகிய அங்கதன் என்பவனை, சொல்லுக என்று - (இராவணனுக்குப் புத்தி) சொல்லி வா என்று, தூது ஏவி - (நீ) தூது அனுப்பியும், (அவன் போய்த் திரும்பி வந்து), அவன் மாதை விடல் இல்லை என்றான் - (நான் என்ன சொல்லியும்) அவன் பிராட்டியை விடுகிற விஷயம் இல்லை என்று சொன்னான், (ஆகையால், இது) ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் - தம்மோடு தண்டம் செய்யும் தன்மையை உடைய பகைவரிடத்தும், மெல்ல கண்ணோடி - நிதானமாய் தாட்சணியம் செலுத்தி, பொறுத்து ஆற்றும் பண்பே தலை - (அவர் குற்றத்தைப்) பொறுத்துக் கொள்ளும் குணமே (அரசர்க்கு) முதன்மையான குணமாகும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- பகைவரிடத்தும் தாட்சணியம் செலுத்துதல் பார்வேந்தர் கடனாம்.


விளக்கவுரை --- இராம்பிரான் சுக்கிரீவனைத் தமக்குப் படைத் துணைவனாகக் கொண்டு, சேதுபந்தனம் செய்து, இலங்கையில் சேர்ந்த போது, இராவணன் அபசாரம் செய்தவனாயிருந்தும், அவனுக்குப் புத்தி சொல்ல, மெத்தப் பொறுமையோடு, அங்கதனைத் தூது அனுப்பினார். அவன் போய் எத்தனையோ திறமான அறிவூட்டியும், "எத்தனைதான் தேய்த்தாலும் பித்தளைக்கு தன்னிறம் இயற்கை" என்றபடி, அவன் ஒரே பிடிவாதமாய்ப் பிராட்டியை விடேன் என்று சொல்லிவிட்டான். அதை அங்கதன் திரும்பி வந்து உரைக்கக் கேட்ட பிறகே, தாசரதி இராவணனோடு போர் புரிகையிஙல், முதற்போரில் இராவணன் சோர்வு பட்டமை அறிந்து, நிராயுதபாணியாக நிற்கும் அவனைக் கொல்லாமல், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி அவனை அனுப்பினார். பின்னர் நிகழ்ந்த போரில் அவனைக் கொன்றார். ஒறுத்தாற்றும் பண்பினான் ஆகிய இராவணனிடத்தும் இராம்பிரானுக்கு கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பு இருந்தமை சால வியக்கற்பாலது.


மூலம் 11

 “நாண்இலான் சால்பு, நடையிலான் நல்நோன்பு,

ஊண்இலான் செய்யும் உதாரதையும், - ஏண்இலான்

சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவிசெயலும்,

நாவகமே நாடின் நகை.”          -- சிறுபஞ்சமூலம்


பழிப்புக்கு இடமாகிய செயல்களுக்கு நாணம் இல்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட நல்ல விரதமும், தனக்கே உண்பொருள் இல்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமை இல்லாதவனது வீரத் தொழிலும், செந்தமிழில் தன் மனதைத் தெளியச் செய்யாதவன் பாட்டுக்களைச் செய்தலும், ஆராய்ந்து பார்த்தால் சிரிப்புக்கு இடமாகும்.


சால்பு என்பது சான்றாண்மை ஆகும். அது நல்ல குணங்களைப் கடைப்பிடித்தல் ஆகும். பழிப்புக்கும் பாவத்துக்கும் இடம் தரும் செயல்களைச் செய்வதற்கு நாணப்படுதல் சிறந்த பண்பு ஆகும். அது ஞான்றோர்களுக்குச் சிறந்த அணிகலம் ஆகும். “அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு, அஃது இன்றேல் பிணி அன்றோ பீடு நடை” எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க. 


நடை என்பது நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நல்லொழுக்கம் இல்லாத ஒருவன் விரதம் மேற்கொள்வது நகைப்புக்கு இடமாகவே முடியும். விரதம் மேற்கொண்டு இறையருளைப் பெற எண்ணுபவன், தன்னிடத்து உள்ள தீய குணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.


சேவகம் என்னும் சொல்லுக்கு வீரம் என்றும் பொருள் உண்டு. ஏண் என்னும் சொல்லுக்கு, திண்மை, வலிமை என்று பொருள். உள்ளத் திண்மையும் உடல் வலிமையும் இல்லாதவன் சேவகம் செந்வது நகைப்புக்கு இடம் ஆகும் என்றார்.


கடுகம் 11

 “விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்

களியாதான் காவாது உரையும், - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும், இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவது உடைத்து.” -- திரிகடுகம்.


தன்னை அழையாதவன் ஆடுகின்ற கூத்தாட்டத்தைச் சென்று பார்ப்பதும், தளர்ந்து விழும்படி மதுவுண்டு களிக்காதவனாய் இருந்தும், கள்ளுண்டவன் போல் வழுப்படப் பேசுதலும், தன்னை நம்பாதவன் வீட்டிற்குப் பலமுறையும் செல்லுதலும், ஆகிய இம் மூன்றும், ஊரிலுள்ளோர் எல்லாரும் துன்பப்படும் குற்றத்தை  உடையன ஆகும். 


62. காணத் தக்கன - தகாதன

 “ஓதுபொருள் கண்டோர்க்கு உறும்ஆசை, நீதியிலாப்

பாதகரைக் கண்டோர்க்குப் பாவமாம், - சீதமலர்

கண்டோர்க்கு உறும்வாசம், கற்றுஅமைந்த நற்றவரைத்

கண்டோர்க்கு உடன் ஆம் கதி.” -- நீதிவெண்பா.


யாவராலும் சொல்லப்படுகின்ற செல்வத்தைப் பார்த்தவர்களுக்கு அதில் ஆசை மிகுதியாகும். நேர்மை இல்லாத தீயவரைக் கண்டவர்களுக்குத் தீமை உண்டாகும். குளிர்ச்சியான மலர்களைப் பார்த்தவர்களுக்கு மணம் உண்டாகும். கற்று அடங்கிய பெரியோர்களைக் கண்டவர்களுக்கு நல்ல கதி உடனே உண்டாகும்.


(பாதகர் - தீயோர்.  கற்று அமைந்த – கற்று அடங்கிய.  கதி - நல்லநிலை.)


058. கண்ணோட்டம் - 08. கருமம் சிதையாமல்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முறைசெய்தலாகிய தமது தொழில் சிதையாமல் கண்ணோட்டம் செய்ய வல்லவர்க்கு, இந்த உலகம் உரிமை உடையதாகும்" என்கின்றார் நாயனார்.

நடுநிலையாக நின்று, நட்பினர், பகைவர், அயலார் என்று எண்ணாது, குற்றம் செய்தவர்களைத் தண்டித்தும், குணம் செய்தவர்களைக் காத்தும் வரவேண்டும். அவ்விதம் செய்யாது, கண்ணோட்டம் வைத்து ஒருவனுக்கு அளவு கடந்த நன்மைகளைச் செய்துவிட்டாலும், குற்றத்திற்காகத் தண்டிக்காவிட்டாலும், "இவன் நடுவுநிலைமை அற்றவன்" என்று, பிறர் அவனை விட்டு நீங்குவார். அவ்வாறு இல்லாமல், கருணை காட்டவேண்டிய இடத்துக் கருணை காட்டியும், தண்டிக்க வேண்டிய இடத்து தக்க வகையில் தண்டித்தும் ஒழுகுதல் வேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு --- முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; 

உரிமை உடைத்து இவ்வுலகு --- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.

(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல், மேல் 'ஓர்ந்து கண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வாணன் இருகரமும் வைத்துப் பணிகருதி

நாதன் அறுப்பித்தரும் நன்னயத்தைப் போலக்

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.”


இதன் பொருளி ---


மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வனாகிய வாணன் என்னும் வாணாசுரன் சிவபெருமானைப் பூசித்து மிகுந்த வலிமை பெற்று, அவரைத் தன் கோட்டைக்குக் காவலாக வைத்து, வலிமையில் தனக்கு ஒப்பார் எவருமில்லை என்று செருக்குற்று இருந்தான். ஒருசமயம் தன் மகள் உஷையின் காரணமாகக் கண்ணபிரானுடைய பேரன் அநிருத்தன் வாணன் ஊர்க்குக் கொண்டு வரப்பெற, அவன் வாணனால் சிறை வைக்கப்பட்டான். இதனை அறிந்த கண்ணபிரான், வாணன் ஊர் வந்து, சிவபிரானை வழிபட்டு உள்ளே நுழைந்து வாணனுடைய ஆயிரம் கைகளுள், சிவனைப் பூசித்துவரும் இரண்டினை வைத்து, எஞ்சியவற்றைக் களைந்து மீண்டார். பிறகு வாணன், திருக்கயிலையில் சிவபிரானுக்கு மத்தளம் கொட்டும் பணியைப் பூண்டான் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“முப்புரத்தை நீறு ஆக்கி, மூவரையும் காத்தநலம்

செப்ப முடியாதே, சிவசிவா! --- ஒப்பில்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் உலகு.”


முப்புரம் - மூன்று கோட்டைகள், இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய வானத்து இயங்கும் கோட்டைகள்.  சிவபெருமான் அவற்றை நகைத்து எரித்தருளினர். முப்புரங்களையும் எரித்து அழிக்கும் கருமமானது, சிதையாமல்படிக்கு, அவற்றை அழித்து, அங்கே சிவபூசையைக் கைவிடாத மூவரையும் காத்தனர்.


058. கண்ணோட்டம் - 07. கண்ணோட்டம் இல்லவர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "கண்ணோட்டம் என்பது இல்லாவதர் கண் என்பதும் இல்லாதவர். கண் உடையவர் என்பவர் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடரே ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர், கண் உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; 

கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.

(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கண்இல் கயவர் கருத்து உணர்ந்து, கைமிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்

எண்ணி இடர்வரும் என்னார், புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.        --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கண்ணில் கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து, கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் - செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) எண்ணி இடர் வரும் என்னார் - துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, புலிமுகத்து உண்ணி பறித்துவிடல் - இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்து விடுதலோடு ஒக்கும்.


கண்ணோட்டம் இல்லாத தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக் கொள்ளுதலாக முடியும். புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றே தீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


058. கண்ணோட்டம் - 06. மண்ணோடு இயைந்த

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொருந்தி இருக்க வேண்டியதாகிய கண்ணோட்டம் இல்லாவதர், மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தைப் போன்றவர்" என்கின்றார் நாயனார்.

மரத்திற்குக் கணுக்கள் இருந்தாலும், காணக் கூடிய கண்கள் இல்லை. கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடர் ஆவார். உள்ளம் உருகாத கண்கள் மரத்திற்குச் சமம்.


இதற்குத் திருக்குறள்...

 மண்ணொடு இயைந்த மரத்து அனையர், கண்ணொடு

இயைந்து கண்ணோடா தவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் --- ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்தி வைத்து அஃது ஓடாதவர்; 

மண்ணொடு இயைந்த மரத்து அனையர் --- இயங்கா நின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.

('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதை மண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.) 


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

    பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்

    பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்

குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்

    உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா

வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்

    கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே."    ---  திருவாசகம்.


இதன் பொருள் ---


கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே ஆம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.



"தன்னெஞ்சம் நினைப்பு ஒழியாத அறிவிலிநான்

ஞானமெ் எனும் தன்மை பேச

உன் நெஞ்சம் மகிழ்ந்து, ஒருசொல் உரைத்தனையே!

     அதனைஉன்னி உருகேன், ஐயா!

வன்நெஞ்சோ? இரங்காத மர நெஞ்சோ?

     இருப்பு நெஞ்சோ? வைரம் ஆன

கல் நெஞ்சோ? அலது மண்ணாங் கட்டிநெஞ்சோ?

    எனதுநெஞ்சம் கருதில் தானே. " --- தாயுமானவர்.


இதன் பொருள் ---


"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல" என்பது போன்று எளியேன் மனமானது (தான் முன் நினைந்த பிறவிக்கு வித்தாகிய பயனில்லாத) தன் எண்ணங்களை நீக்காத நிலையிலுள்ள அறியாமையை அணிகலமாகக் கொண்டவன் அடியேன். திருவடி உணர்வு எனப்படும் மெய்யுணர்வின் தன்மையினைப் பேசுமாறு தேவரீர் திருவுள்ளம் மகிழ்ந்து ஒருசொல் மொழிந்தருளினீர். அத் திருமொழியினை இடையறாது எண்ணி எண்ணி உள்ளம் உருகேன். ஐயோ! எளியேன் மனமானது கருதுமிடத்து இரக்கம் வாய்க்கப்பெறாத மரநெஞ்சமோ? இரும்பாலாகிய வன்னெஞ்சமோ? வைரம் பொருந்திய கல்நெஞ்சமோ? அல்லது ஒன்றுக்கும் பற்றாத மண்ணாங்கட்டி நெஞ்சமோ? இன்னது என்று அறியேன்.


 


058. கண்ணோட்டம் - 05. கண்ணுக்கு அணிகலம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "கண்ணுக்குப் பூணும் நகை போன்றது கண்ணோட்டம். அது இல்லாவிட்டால், அந்தக் கண் ஒரு புண் என்று உணரப்பட வேண்டும்" என்கின்றார் நாயனார்.

கண்ணாகத் தோன்றினாலும், புலனைப் பற்றுதலாலும், நோய்களாலும் தன்னை உடையவனுக்குத் துயர் விளைத்தல் பற்றி, "புண் என்று உரணப்படும்" என்றார்.

இதற்குத் திருக்குறள்...

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல்

புண் என்று உணரப்படும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ---- ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; 

அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் --- அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.

(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.” ---  நல்வழி.


இதன் பொருள் ---


தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.


நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.



“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டுள.)


கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை. அது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.


“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் --- 


கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் கண்ணோடுதல் ஆகும்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமை ஆகும்;

எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல் ஆகும்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தல் ஆகும்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல் ஆகும்.


“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும், - சொல்லின்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.”  --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப - செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை கேட்டறிதும் - காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி - அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.


அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.


“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும், 

பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

கோடையினும், மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' 

என்பது எல்லாம் கருணை அன்றோ?”    --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.


இதன் பொருள் ---


பண் உக்கு வாம் பரித் தேர் ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் – கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?


    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். அருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது.  சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.



மூலம் 10

 “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்,நீள் கோடு

விலங்கிற்குக் கூற்றம், மயிர்தான் - வலம்படா

மாவிற்குக் கூற்றமாம், ஞெண்டிற்குத் தன்பார்ப்பு,

நாவிற்கு நன்றல் வசை.” -- சிறுபஞ்சமூலம்.


சிலந்திப் பூச்சிக்குத் தன்னுடைய கருவாகிய முட்டையே எமனாகும். எருது முதலிய மிருகங்களுக்கு நீண்ட கொம்புகளே எமனாகும். வெற்றி உண்டாகாத கவரிமானுக்கு, அதன் மயிரே எமனாகும். நண்டுக்குத் தன் குஞ்சுகளே எமனாகும். ஒருவனுடைய நாவுக்கு, நன்மையல்லாத பழியைக் கொடுக்கும் பிறரை நன்று அல்லாத வசைமொழிகள் சொல்லுதல்  எமனாகும்.


சிலந்திப்பூச்சி முட்டை இட்டவுடன் அழிதலால், “சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்’’ என்றார். “நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில் கொண்ட கரு அளிக்கும்” என்பது ஔவையார் அருளிய நல்வழி. விலங்குகளுக்கு நீண்ட கொம்பு இருந்தால், மரங்கள் முதலியவற்றில் குத்தி முறிந்து, அதனால் அவை வருத்தம் அடைய நேரும். அல்லது பிற உயிர்களின் மீதோ, மனிதர் மீதோ பட்டாலும் கேடு விளைவிக்கும் என்பதாலும், “நீள்கோடு விலங்கிற்குக் கூற்றம்” என்றும் கொள்ளலாம். கவரிமான் முட்செடி முதலியவற்றில் பட்டுத் தனது உடம்பில் உள்ள மயிர் ஒன்று உதிர்ந்தால், அது உழிரை விட்டுவிடும் என்பதால், “மயிர்தான் வலம்படா மாவிற்குக் கூற்றம்” என்றார். “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா” என்பது திருக்குறள்.  


கடுகம் 10

“கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும், - பாத்து உண்ணும்

தன்மை இலாளர் அயல் இருப்பும், இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல.” -- திரிகடுகம்.


நெடுங்கணக்கு முதலியன கற்பிக்கின்ற ஆசிரியர் இல்லாத  ஊரில் இருத்தலும், பிணக்கை நீக்கி உதவுகின்ற, கல்வி கேள்விகளில் முதிர்ந்தோர் இல்லாத சபையில் இருத்தலும், பகுத்து உண்ணும் குணம் இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும், ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு நன்மையைத் தருவன அல்லவாம். (தீமை பயப்பனவாம்) 


கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு - இது இலக்கணம் முதலியவற்றிற்கும் உபலட்சணம். ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் – ஆராய்.


பிணக்கு – பிணங்குதல், மாறுபடுதல். இருவருக்கும் இடையில் உண்டாகும் மாறுபாடு. அவையில் ஒருவர் சொல்லும் கருத்தால் உண்டாகும் மாறுபாடு. அறுத்தல் – ஐயம் திரிபு அற நீக்குதல். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர். "அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை" என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “நான்மணிக்கடிகை” கூறும். 


பாத்து உண்ணும் தன்மை – தன்னிடத்து உள்ளதைப் பிறருக்கும் பகிர்ந்து அளித்துப் பின் உண்ணுதல். “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" என்கிறது நாலடியார். “பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனவும், “பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது” எனவும் திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிக.


61. இவர் பிரிவால் இது இல்லை

“மாதா மரிக்கின் மகன்நாவின் நற்சுவைபோம்,

தாதா எனில்கல்வி தாம்அகலும், - ஓதில்உடன்

வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம், மனையேல்,

அந்தோ, இவை யாவும் போம்.” -- நீதிவெண்பா


செல்லப் புகுந்தால், தாயார் இறந்து விட்டால், மகனின் நாவிற்குச் சிறந்த சுவைப் பொருள்களை அனுபவிக்க முடியாமல் போகும்.  தந்தை இறந்தான் என்றால், அம் மகனுக்குக் கல்வி கற்க முடியாமல் போகும். உடன்பிறந்தவன் இறந்து விட்டால், தோள் வலிமை கெட்டுப் போகும். மனைவியே இறந்து விட்டாள் என்றால், ஐயோ! மேற்சொன்னவைகள் எல்லாம் ஒருங்கே இல்லாமல் கெட்டுப் போகும்.


(மாதா - தாய்.  தாதா - தந்தை. உடன் வந்தோன் - சகோதரன். வாகுவலி - தோள் வலிமை.)


பின்வரும் ஔவையார் தனிப்பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தாயோடு அறுசுவைபோம், தந்தையொடு கல்விபோம்,

சேயோடு தான்பெற்ற செல்வம்போம், – ஆயவாழ்(வு)

உற்றா ருடன்போம், உடற்பிறப்பால் தோள்வலிபோம்,

பொற்றாலி யோடு எவையும் போம்.”.    – ஔவையார்.


இதன் பொருள் ---

 

தாயோடு அறு சுவை உணவு கிடைப்பது இல்லாது போகும். தந்தை இல்லாவிட்டால் கல்வியைப் பயிலுவது நின்று போகும். தான் பெற்ற பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும். (மனிதன் ஒருவன் பெறவேண்டிய பேறுகளில் பிள்ளைப் பேறும் ஒன்று. அதை “நன்மக்கள் பேறு” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெறும் அவற்றுள் யாம் அறிந்தது இல்லை, அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்னும் திருக்குறளைக் காண்க.) வாழுகின்ற பெரிய வாழ்க்கையானது உறவினர்கள் இல்லாவிடில் பொருள் அற்றதாக அமையும். (“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு.) உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய்விடும். தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


பொது --- 1127. பத்தேழு எட்டு

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பத்தேழு எட்டு (பொது) முருகா! பொய்ப்பொருளைத் தேடி அலையாமல், மெய்ப்பொருளை நாடி இருக்க அருள் புரிவாய். தத்தா...