மனம் என்னும் மலர்



மனம் என்னும் மலர்

-----

அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் ஆழ்கடலின் அடித்தளத்தில் கிடக்கிறது. அந்த அழுக்குப் படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறது. ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக ஆகாது. உயிர் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டே இருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவு உயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும். ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்.  பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால், மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவு உயிராகி நாலறிவு உயிராகி ஐந்தறிவு உயிராகிக் கடைசியில் ஆறறிவு உயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது பிறவிக் கடலின் நீர்மட்டத்தை அடைந்ததாக ஆகும். கடலின் அளவுற்ற ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல அழுக்குக்  குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள்  எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் இலட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். 

மற்றப் பிறவிகளை நினைத்தால் மனிதன் உயர்ந்தவன்தான். ஆனால், அவன் அடைய வேண்டிய  கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே ஆகிறான். பிறவிக் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றலும் அதற்கு இல்லை. மேலே வந்துவிட்டோம், இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. நீர் மட்டத்தின்மேல் மிதப்பதுதான் அவன் விருப்பம் என்றால் அந்த விருப்பமும் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்.  மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும். ஆதலால், கரை தெரிகிறதோ  இல்லையோ, கரை உண்டு என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் முயலும்போது அவன் கை சோரலாம். இடையிலே பல தடைகள் உண்டாகலாம்.  மெல்ல மெல்ல, சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பலப்பல மடங்கு மிகுதி ஆகும். இறுதியில் கரையையே அடைந்துவிடுவான்.  இப்போது நாம் நடுக்கடலில், முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனை அணுக வேண்டும். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். 

இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவன் என்னும் பொருளை அடைய வேண்டும். படியை வடமொழியில் 'சோபானம்' என்பார்கள்.  நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறைவனாகிய இலட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது  ஒழுக்கம் அல்லது நடத்தையைக் குறிக்கும். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். 

பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை அடியவர்கள் என்று சொல்கிறோம். அவர்களின் செயல்களும் வழிபாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவர் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். ஒருவர் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும்  தவறாமல் போய் வருகிறார். ஒருவர் நந்தவனம் வைக்கிறார். ஒருவர்  குளம் வெட்டுகிறார். இவர்கள் யாவரும் அடியவர்களே. ஒருவர் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறார். அவன் புகழைப் பாடுகிறார். ஒருவர் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார். அலங்கரிக்கிறார். நறுமலரால் அருச்சனை செய்கிறார். தூபதீபம் காட்டுகிறார். உணவை நிவேதனம் செய்கிறார். கற்பூர தீபம் காட்டுகிறார். வலம் வந்து பணிகிறார். அவரும் பத்தியுடையவரே. ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு கண்ணீர் வார இறைவனைத் தியானம் செய்கிறார். முதலில் சில நிமிடங்கள் இப்படி இருந்தவர் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறார். அவரும் அடியவரே.  நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எதற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்தையும், எனது என்ற  மமதையும் இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவரும் அடியவர்தான். ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிட, தானே பூசை செய்கிறவர் சிறந்தவர். அவரை விடக் கண்மூடி அமர்பவர் உயர்ந்தவர். அவரைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவர் மிகச் சிறந்தவர். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண்டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்கு உரியவை. 

சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல்மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவது அடுக்குக்கும் தொடர்பு உண்டு.  மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவது உண்டு. அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக்கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்டவனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடையவனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். 

அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும்  ஈடுபடுவது உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான் இணையில்லாத ஞானம் பெற்றவர். அவர் திருத்தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்தார்.  அது சரியை. நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். "சிவஞான சித்தியார்" இந்த உண்மையைச் சொல்கிறது.

"ஞான யோகக் கிரியா சரியை நாலும்

     நாதன்தன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;

ஊனம் இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்

     யோகி; கிரியாவான்தான் ஒண்கிரியை ஆதி

ஆன இரண்டினுக்கு உரியன்; சரியையினில் நின்றோன்

     அச் சரியைக்கே உரியன்; ஆதலினால் யார்க்கும்

ஈனம் இலா ஞானகுருவே குருவும்; இவனே

     ஈசன் இவன்தான் என்றும் இறைஞ்சி ஏத்தே."  

ஆதலின், மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடுதலும் பாடுதலும் ஆகியவற்றை  இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனாமலம்  தாக்காமல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். 

மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய  திருவுருவைத் தானே பூசிப்பது அது.  இறைவனை பிம்பம், தம்பம், கும்பம் என்னும் வகைகளில் ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப்  பத்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவபூசைக்கு உரிய விதிகள் பல. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம்  செல்லும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்பதில்லை. அவர்களும்  ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் "யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்று சொல்லி, பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். 

பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூபதீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப்  படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திருவிளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானைப் பூசை செய்த வரலாற்றை  அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டு இருக்கலாம். ஆயினும்,  பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் உண்டானது. 

முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 

"போத ஆனந்தத் தனிக்கடல் பருகும்

புயல்புரை முனிவனை வசிட்ட

மாதவன் ஆதி முனிவரும் உலோபா

முத்திரை தன்னொடும் வரித்துப்

போதொடு சாந்தம் மான்மதம் தீபம்

புகைமுதற் கருவி கைக்கொண்டு

மேதகு சிறப்பால் அருச்சனை செய்து

பின்னும் ஓர் வினாவுரை செய்வார்."

என்று பாடுகிறார் பரஞ்சோதியார்.  இங்கே முனிவர் பூசை செய்ததையே, "அருச்சனை செய்து" என்று சொன்னார். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது, கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதால்  சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டாகலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் திருநாம வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி,  நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிரம் நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய்வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். 

இந்த வழக்கத்தைச்  சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை  செய்யப் புகுந்தார். ஆயிர நாம அர்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக்  கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனையைத்  தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாக இட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. திருமால் வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடியில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினார் என்பது புராண வரலாறு. 

"பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறைய,

தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே,

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ."    --- திருவாசகம்.

பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை. இறைவன்  திருநாமத்தையும் சொல்லவேண்டும். மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது. அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத்தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும்  அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் உண்டாகும். மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் தூவ, வாய்ப் பழக்கத்தால் திருநாமத்தைச்  சொல்வதும் உண்டு. மனத்தை அலையவிட்டால் பூவைத்  தூவுவதும் நாமம் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன. 

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"   --- பட்டினத்தார். 

மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம்  இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரிநாதர், "தகட்டில் சிறந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்து அருளாய்" என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.

கடம்ப மலர்  முருகனுக்கு உகந்தது. கடம்பன் என்றே சொல்வார்கள்.  முருகனுக்குத் தகட்டைப் போலச்  சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு ஆசை.  இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப்  பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திருவடி பணியவும் அவன் திருவருள் துணை செய்தால்தான் முடியும். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகம்.  மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். பூசையில் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. "அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்  தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க" என்பது திருவாசகம். 

சரியை செய்து முதிர்ந்து கிரியையில் புக வேண்டும். கிரியை பழுத்து யோக  நெறியில் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானம் ஆக வேண்டும். கிரியையில் மனம்  ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று  ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனையில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடையாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல, இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் வளர வளர, மலர் இல்லாமலே மனம் திருவடித்  தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி.

மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. அதனை இறைவன்  திருவடியில் அணியும்போது, அது நமது மனமாகிய மலரை இடுவதற்கு அடையாளம் ஆகிறது. புற மலரை இடுவதனால் பூசை நிரம்பாது. அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்.  அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு  மனக்கணக்குப் போடும் பக்குவம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக்கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திருநாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் திருவடியைப் பற்றும்.  "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்னும் திருக்குறளில், "சேர்தல்" என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது  எளிதிலே கைகூடும் செயல் அல்ல. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள்வதைப் போல, மனம் பூவைக் கொண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டும்.

மனமும்  முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்ப மலர் மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியில் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "கல்மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்" என்பார் அப்பர் பெருமான். மனத்தைத் தாளில் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக  நிகழும்.  மனம் ஆசை வயப்பட்டு உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக்  கரத்தில் அடக்கப் பார்க்கிறது. அதை இறைவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை வள்ளலார். அதற்குத் திருவருள் துணையை நாடுகிறார். 

முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும்  வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபதுமனை அடக்கியவன். சூரபதுமனுடைய ஆசைக்கு  அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழுகின்றன. அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசையாகத்தான்  இருக்கும். அதை அளவிட முடியாது. ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால்  சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.  இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப்  பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரபதுமனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி  போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரபதுமனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர்கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி  நிற்கிறான். தன் மாயத்தால் எல்லாம் செய்யவல்ல அவன், இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்.  இதைச் சார்ந்த கிரகங்களையும் தன்  ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி,  அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன்  அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் (பிரமன்) அண்டத்தின் முகடு இருந்தது. அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: 

கடலையும் மலையையும் நாட்டையும் கடந்து,  வானவெளியைத் தாண்டி, மேலே பறந்து  சந்திரமண்டலத்தில் கொடி கட்ட ஆசைப்படாத அரசு இல்லை. மனிதர்களுக்கே இந்த  ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத்துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக தம்பம் போல  நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே  இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து,  இந்த்ர லோகத்தை முட்ட எட்டி,  சூரபதுமன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிடமாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது, கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல்லாம் படுநாசம். சூரபதுமனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். விண்ணவர் யாவரும் அஞ்சி நடுங்கினர். 

இத்தகைய நிட்டூரம் உடையவனை - பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டினவனை, அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரபதுமன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அப்படிபட்ட முருகப் பெருமானிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் செய்துகொள்கிறார் அருணகிரிநாதர். அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த சூரபதுமனை அடக்கினவன்  முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே  வழி காட்டுவான் என்று எண்ணி, இந்த வரலாற்றை இங்கே நினைத்துப் பின்வருமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.  

"தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள்இணைக்கே

 புகட்டிப் பணியப் பணித்து அருளாய், புண்டரீகன் அண்ட

முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் 

பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே!"           --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரது உலகத்தின் வாயிலைப் பிளந்து, அதுவரை ஓங்கி நின்று, இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று, ஆண்யானை போல் போர் புரிந்த கொடும் குணம் உடையவன் ஆகிய சூரபதுமனுக்குப் பயங்கரத்தை உண்டு பண்ணினவரே! இலைகளோடு கூடி சிவந்த நிறம் உள்ள கடப்பமலர் மாலையையும், அடியேனுடைய மனத்தையும் தேவரீருடைய இரண்டு திருவடிக்கே சேர்த்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளை இட்டு அருள்வீர்.

(தகடு - மென்மையும் தட்டையுமான வடிவு. தகடு என்பதற்குப் பூவின் புற இதழ் என்றும் பொருள் உண்டு. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய)

இறைவன் திருவடிகளில் மலரிட்டு வணங்கும்போது, நமது மனமாகிய மலரையும் சேர்த்து இட்டு வணங்குதல் வேண்டும். புறமலர் மட்டும் திருவடியில் சேர்ந்து, அகமலர் திருவடியில் பொருந்தவில்லையானால், பயனில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில், புறமலர் இல்லாமலே அகமலரால் இறைவனை வழிபாடு செய்யும் பக்குவத்தில் புகுத்தி விடும்.





65. உணவில் விலக்கு

 


                      65. உணவில் விலக்கு

                                  -----


கைவிலைக் குக்கொளும் பால், அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்,

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,


செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை, வெல்லம், மலாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,


எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம்,கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்.


ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---

ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும் அமலனே - ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கைவிலைக்குக் கொளும் பால் - கைவிலைக்கு வாங்கும் பாலும், 

அசப்பால் - ஆட்டுப்பாலும், 

வரும் கார் ஆ கறந்த வெண்பால் - வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும், 

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு, செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம், மலாவகம்,

சீர்இலா வெள் உள்ளி - சிறப்பில்லாத வெள்ளைப் பூண்டு, 

ஈர்உள்ளி - (சிறப்பில்லாத) வெங்காயமும், 

இங்குவொடு - பெருங்காயத்துடன், 

சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் - சிறப்பில்லாத வெள்ளைக் கத்தரிக்காயும், 

எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் - குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட பொருளும், 

கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் - சூரியன் ஒளியும், விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், 

இவையெலாம் சீலம் உடையோர்க்கு ஆகா - இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை, 

எனப் பழைய நூல் உரைசெயும் - என்று பழைமையான நூல்கள் கூறும்.


      ஐவகைப்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அசம் - ஆடு. கொம்மடி - தும்மட்டிக்காய். மலாவகம் - பிண்ணாக்கு. நிர்மாலியம் (வடமொழி) - கழிக்கப்பட்ட பொருள். எவ்வம் - குற்றம். கிரணம் : இங்கு ஞாயிற்றின் கதிரைக் குறிக்கின்றது.


செல்வச் செருக்கு கூடாது

 


செல்வச் செருக்கு கூடாது

----- 

  செல்வம், பொருள், பணம் என்னும் சொற்கள் மனிதனுடைய காதுகளில் விழுந்தாலே இன்பம் விளைகின்றது. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கல்வியும் மேலான செல்வம் என்று எண்ணுவது இல்லை. "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று நாயனார் அறிவுறுத்தியபடி,  கேள்வியைச் செவிச்செல்வம் என்று எண்ணுவதில்லை.

      உண்மையான செல்வம் இறையருளே என்பதை உணர்ந்தவர்கள் அருளாளர்கள். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்,  பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய பாங்கில், இறைவனையே "செல்வமே" என்று கொண்டாடியவர்கள். "திருவே! என் செல்வமே! என்றார் அப்பர் பெருமான். "செல்வமே! சிவபெருமானே!" என்றார் மணிவாசகர்.

  செல்வம், கல்வி முதலிய நலங்கள் ஒருவனுக்கு வாய்த்தால், உள்ளம் கனிந்து, அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண்டும்.   செல்வரை ஒருவன் சார்ந்து எத்தனை காலம் இருந்தாலும், அவன் செல்வன் ஆவதில்லை. ஆனால்,  இறையருளால் செல்வத்தோடு கல்வி நலமும் ஒருங்கே பெற்றுள்ள அறிவாளனிடம் ஒருவன் சேர்ந்து இருந்தால், செல்வ நலமும், கல்வி நலமும் நாளடைவில் ஒருங்கே வாய்க்கும்.

      "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நல்லறிவு இல்லாமல், செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டு திரிபவன், நெஞ்சத் திமிரால் நிலைகுலைந்து போவான்.

நான் (கற்றவன்) என்னும் செருக்கு, "அகங்காரம்" ஆகின்றது.

எனது என்னும் செல்வச் செருக்கு, "மமதை" ஆகின்றது.

      அகங்காரம் கொண்டுள்ளவனுக்கு, அகந்தையே மனைவி. மமதையே மகள். உலோபமே மகன். இடம்பம் பேரன் என்பர் பெரியோர்.

      திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு, குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும், கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். இது எப்படிப்பட்டது?  என்றால், எலும்பைக் கடித்துக் கொண்டு இருந்த நாய்க்கு, சிறு மாமிசத் துண்டம் கிடைத்தது போல.

 

"சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்."           --- நாலடியார்.

இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.   ஆனால், முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

      முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள்.

 

"வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு."

என்று பெரியோர் காட்டினார். வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

"செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்."

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

இதன் பொருள் --- 

    இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும்,  உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்;  எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக  இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையர் ஆவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

 

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே."

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே."   --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார், தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனம் ஆக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?)  பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்)

      வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போல, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

"வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறுநிழல் போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."                   --- கந்தர் அலங்காரம்.

 

      பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

"எத்தனைபேர் கையில் முன்னம் இப்பொருள்தான்

    இருந்தது, அவர் எல்லாம் தத்தம்

அத்தம் என நம்பினார், அவர்களை விட்டு

    அகன்று, உன்கை அமர்ந்தது, இன்னும்

சத்தம் இன்றி உ(ன்)னை மோசம் செய்து, அனந்தம்

    பேர் கரத்தில் சாரும், சொன்னேன்;

சித்தமே! அதுசெல்லும் முன் நீ சற்

    பாத்திரத்தில் செலவி டாயே"    --- நீதிநூல்.

(அத்தம் - பொருள். சற்பாத்திரம் - நற்செயல்.)

          நெஞ்சமே! இப்பொழுது உன்னிடத்தில் உள்ள இப்பொருள் இதற்கு முன் எத்தனைபேர் கையில் இருந்தது? அத்தனை பேரும் இதனைத் தத்தம் பொருள் என்றே நம்பி இருந்தனர். அவர்களை விட்டு அகன்று, இப்போது உன் கையில் வந்திருக்கிறது. இது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்து விடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டு அகலும் முன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.

 

"என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, அதுவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே."     --- நீதிநூல்.

      என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அது உன்னைவிட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

 

 "ஒப்பரும் நற்குணத்தவர்க்கும் கொலை காமம்

    கள் களவை உபதேசிக்கும்

அப்பனாய், நட்பினர்க்குள் பகை விளைக்கும்;

    சத்துருவாய், அகிலத்து உற்ற

செப்பரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்,

    தீவினைக்கு ஓர் செவிலி ஆய

இப்பொருளை, நற்பொருள் என்று எப்படி நீ

    ஒப்புகின்றாய், ஏழை நெஞ்சே. "       --- நீதிநூல்.

      அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை உடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகள் அவர்கள் மனத்தில் அழுந்தப் போதிக்கும் தலைவனாகவும்,  நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாகவும்,  சொல்லமுடியாத உலகியல் துன்பங்களுக்கு எல்லாம் தாயாகவும், கொடுஞ் செயலுக்கு எல்லாம் வளர்ப்புத் தாயாகவும் இருக்கும் இப்பொருளை,  இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருள் என்று, நீ எந்த முறையில் மனம் ஒப்பிக் கூறுகின்றாய்.

 

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே. "      --- நீதிநூல்.

      எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், குற்றமற்றவாய் இருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவராய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும், இந்தத் தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

 

"நிறைசெல்வம் உடையாரை நோய்துன்பம்

    அணுகாவோ? நினைத்தது எல்லாம்

குறை இன்றிப் பெறுவரோ? புவிக்கு அரசு

    செலுத்துவரோ? குறித்த ஆயுள்

பிறை என்ன வளருமோ? இயமன் வர

    அஞ்சுவனோ? பேரின்பத்துக்கு

உறையுளோ? அவர்கிரகம், இவையெ(ல்)லாம்

    மனமே! நீ உன்னுவாயே. "              --- நீதிநூல்.

         நெஞ்சே! நிறைந்த செல்வம் உடையாரைப் பசிநோய்,  உடல்நோய், துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்தது எல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ?  வரையறுக்கப்பட்ட வாழ்நாளானது பிறைபோன்று வளர்ச்சி உறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு இருப்பிடமோ? இவை அனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.

 

      எல்லார்க்கும் நல்லது செய்யவே இறைவன் நம்மை செல்வர் ஆக்கி வைத்தான். எல்லோரிடமும் தாழ்மையாய் நடந்து வந்தால், வாழ்வு வளம் பெறும். நிலைமை இதனை உணராமல் செருக்குக் கொண்டு இருந்தால், விரைந்து அழிந்து போக நேரும்.

 

      செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 

      பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இறக்கும் போதும் கொண்டு செல்வது இல்லை. வாழ்நாளில், உடம்பு உள்ளபோதே அறம் செய்து, அருள் உடையராய் ஆக முயல வேண்டும். பொருளை அருளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


பணிவுடைமை என்னும் செல்வம்



பணிவுடைமை என்னும் செல்வம்

-----

 திருக்குறளில் "அடக்கம் உடைமை" என்னும் ஓர் அதிகாரம். இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பெருமிதம் கொள்ளாமல் அடங்கி இருத்தல் எல்லோர்க்கும் நன்மையைத் தரும்; அவர் எல்லாருள்ளும் செல்வம் உடைவர்களுக்கு, அந்தப் பணிவானது, வேறு ஒரு செல்வமாகத் தோன்றும் சிறப்பினைத் தரும்" என்கின்றது.

அடக்கம் இன்மை, அகந்தை, செருக்கு என்னும் சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களைத் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று கூறுவார்கள். செருக்கு என்பது ஒரு ஆழ்குழி ஆகும். அதில் வீழ்ந்தவர்கள் அழிவது திண்ணம. செருக்கு என்னும் அடக்கம் இன்மை மனிதனிடத்தில் எட்டு விதமாகத் தோன்றும். 


1. அறிவுச் செருக்கு ---

தான் கல்வியில் சிறந்தவன் என்றும் தன்னைவிட எவரும் பெரிய அறிவாளி அல்ல என்று கருதுவதும் ஒருவகைச் செருக்கு. கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு. கற்றவர்களிடம் ஏற்படும் இந்தக் கல்விச் செருக்கைப் போக்குவதற்குத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் "நன்னெறி" என்னும் நூலில் பின்வரும் பாடல் வாயிலாக வழிகாட்டியுள்ளார்.

"கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்

அடல் ஏறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே

முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்

பனிக்கடலும் உண்ணப் படும்."

முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது. "கலைமகளே இன்னமும் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றாள். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.


2. குலச் செருக்கு ---

மற்றவர் குலத்தைவிடத் தனது குலம் உயர்ந்தது என்று எண்ணுதல் ஆகும். "குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதியார்.


3. சாதிச் செருக்கு

தன் சாதிதான் சிறந்தது என நினைப்பது. மகாபுருஷர்கள் என்று போற்றப்படும் பலரையும் எண்ணிப் பார்த்தால் எந்த சாதி உயர்ந்தது என்பது தெளிவாகும். "சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று சொல்லி, சாதி, குலத்தில் உயவர்வு தாழ்வு கற்பிக்கின்ற பாவத்தைச் செய்யவேண்டாம் என்பது இளம்பருவத்திலேயே விளங்கவேண்டும் என்பதாகச் சொல்லி வைத்தார் அமரகவி பாரதியார்.

"சாதி இரண்டு ஒழிய வேறுஇல்லை, சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி"

என்றார் ஔவையார். மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளுகின்ற சாதியை ஔவையார் குறிப்பிடவில்லை. பிறப்பால் எந்தக் குலத்தில் பிறந்தவர் ஆனாலும், ஒருவன் துன்பத்தில் உள்ளான் என்பதை அறிந்து, இல்லை என்று ஒருவன் கேட்கும் முன்பாகவே கொடுத்து உதவுபவர்களே பெரியோர்கள். பொருள் இருந்தும், உதவ வேண்டும் என்ற மனநிலை இல்லாவர்களே தாழ்ந்தவர்கள் என்றும் இவ்வாறு இரண்டு சாதிகளே உலகில் நீதிநெறிகளின்படி பார்த்தால் உண்டு என்றார் ஔவையார்.

“ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.”

என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார். 

சாதிப் பெருமை, குலப்பெருமை பேசுகின்ற ஈனத் தனத்தினால், உள்ளத்தில் ஊனமே உண்டாகும். அந்த ஈனத் தனத்திலே தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்கள் ஈடேற வழியே இல்லை. அவர்களுக்குப் பிறவி என்னும் தடுமாற்றமே உண்டாகும். வெள்ளச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதுபோல, சாதி குலம் பிறப்பு என்கின்ற சுழியிலே, அறியாமையால் தன்னைத் தானே அகப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பதைப் பின்வரும் மணிவாசகப் பாடல் உணர்த்தும்.

"சாதி, குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்

ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு,

பேதைகுணம் பிறருருவம் யான் எனது என் உரைமாய்த்துக்

கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லைக் கண்டேனே".             --- திருவாசகம்.

இதன் பொருள் ---

சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து,  என்னையும் அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும், நான், எனது என்று சொல்லும் சொல்லையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதம் ஆனவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.


4. செல்வச் செருக்கு ---

சிறிது செல்வம் சேர்ந்து விட்டாலே, தன்னை குபேந்திரனாக எண்ணி இறுமாப்பு அடைவது  உண்டு. கல்விச் செருக்கு எவ்வாறு மனிதனிடம் இருக்கக் கூடாதோ அதைப்போல, செல்வச் செருக்கும் ஒருவனிடம் இருக்கக் கூடாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.

"தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று

தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்

இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு

வரைக்கும்வந் தன்று வளைவு."

மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை,  இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது.  பொன்மலை என்று போற்றப்படுவது. இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட, சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார். எனவே, குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார்.


5. வீரச் செருக்கு ---

தான் மட்டுமே வீரன் என்று நினைப்பது வீரச் செருக்காகும். இறுமாப்பால் வீரம் அழியும். அகந்தையால் அழிந்தவர்கள் இராவணன், தக்கன், சூரபதுமன் முதலானோர். வரலாறும் இதனை எடுத்துக் காட்டும்.


6. வலிமைச் செருக்கு ---

தன்னுடைய பலத்திற்கும் வலிமைக்கும் முன் எவருமில்லை என்று ஆணவம் அடைவது. கோவர்த்தன மலையையே குடையாகப் பிடிக்கும் வலிமை படைத்தவர் திருமால். மேருமலையையே வில்லாக வளைக்கும் திறம் கொண்டவர் சிவபெருமான். நம் வலிமை பெரியதா என எண்ணிப்பார்க்க வேண்டும்.


7. வனப்புச் செருக்கு ---

உடல் அழகுடன் இருப்பவர்கள் தன்னை விட வனப்புடன் எவருமில்லை எனக் கருதுவது வனப்புச் செருக்காகும்.  மற்றவர்க்கு வேண்டுமானால் தனது உடல் அழகே பெரிதாகத் தோன்றலாம். அதனை மேலும் மெருகு ஏற்றிக் கொள்ளலாம். ஆனால், கற்றவர்க்கு, கல்வியால் உண்டான நலமே சிறந்த அணிகலம் ஆகும். அவருக்கு வேறு அணிகலன்கள் தேவையில்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.

"கற்றார்க்குக் கல்வி நலனே நலன், அல்லால்

மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; - முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா, யாரே

அழகுக்கு அழகுசெய் வார்".    --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

எக்காலத்திலும் முழுமையான மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு  அழகு செய்ய, வேறு ஆபரணங்கள் தேவை இல்லை. யாராவது அழகுக்கு அழகு செய்வார்களா? அது போல, நன்கு கற்றவர்க்கு, கல்வியால் உண்டாவதே அழகு. அவருக்கு அழகு செய்ய வேறு ஓர் அணிகலன் வேண்டுவது இல்லை.

பிற நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன.

"குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டு அழகும்,

மஞ்சள் அழகும், அழகு அல்ல; - நெஞ்சத்து

நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு."   ---  நாலடியார்.

இதன் பொருள் ---

வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட அழகிய கரையோடு கூடிய வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படுகின்ற மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராய் வாழுகின்ற நடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்துகின்ற கல்வியே சிறந்த அழகு ஊட்டும் அணிகலம் ஆகும்.

இப் பாடல் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எண்ணவேண்டாம். தலைமயிர் அழகு, உடை அழகு இரண்டும் இருபாலர்க்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுக. 

"மயிர்வனப்பும், கண்கவரும் மார்பின் வனப்பும்,

உகிர்வனப்பும், காதின் வனப்பும், --- செயிர்தீர்ந்த

பல்லின் வனப்பும், வனப்புஅல்ல, நூற்குஇயைந்த

சொல்லின் வனப்பே வனப்பு". --- சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

தலைமயிரால் உண்டாகும் அழகும், கண்டவர் கண்களைக் கவர்தற்கு உரிய எடுப்பான மார்பினால் உண்டாகும் அழகும், நகத்தால் உண்டாகும் அழகும், காதினால் உண்டாகும் அழகும், குற்றம் நீங்கின (வெண்மையான) பல்லினால் உண்டாகும் அழகும், அழகு அல்ல. கற்ற நூல்களுக்குப் பொருந்திய சொல்லின் அழகே அழகு ஆகும்.

புற அழகு நாளாக நாளாகக் குன்றும். அக அழகு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்லாமையால் உண்டாகும் இழிவை எடுத்துக் காட்டவே இவ்வளவும் சொல்லப்பட்டது. புற அழகு கூடாது என்று சொல்லவில்லை. புற அழகோடு, கல்வி அறிவினால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் தேவை என்பதே சொல்லப்பட்டது.

"இடைவனப்பும் தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,

நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்

கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு

எழுத்தின் வனப்பே வனப்பு". --- ஏலாதி.


இதன் பொருள் ---

இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடக்கின்ற நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்களில் தசை கொழுவியுள்ள கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா. மக்களுக்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.

தனக்கு ஒரு கேடு அல்லது தாழ்வு வந்தபோது, புற அழகு எவ்விதத்திலும் துணை செய்யாது. கல்வி அறிவு ஒன்றே துணை நிற்கும்.


8. தவச் செருக்கு ---

விரதங்களும் நோன்புகளும் பல இருந்துவிட்டுத் தம்மைவிடத் தவத்தில் சிறந்தவர் எவருமில்லை என்று நினைப்பது தவச் செருக்காகும். 

கல்வி, குடிப்பிறப்பு, செல்வம் ஆகியவற்றால் செருக்குக் கொள்ளாத ஒருவனுக்குப் பெருமை உண்டாகும். கல்வி உடையார், குடிப்பிறப்பு உடையார், செல்வம் உடையார் என்னும் மூவகையினருக்கும் அடக்கம் என்னும் குணம் பொதுவானது என்றாலும், பொருள் உடையார் இடத்தில் செருக்கு மிகுந்து இருக்கும். அவரிடத்திலும் அடக்கம் இருக்குமானால், அது கல்வி உடையாரின் அடக்கத்திலும், குடிப்பிறப்பு உடையாரின் அடக்கத்திலும் மேம்பட்டு விளங்கும். 

"எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."            --- திருக்குறள்.

இதன் பொருள் ---

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்;  அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆகும் சிறப்பினை உடைத்து.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல், 

"ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியைக்கண்டு,

ஏனை அரன் அன்பர் என்றால் என்படுமோ? --- மாநிலத்துள்

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."

அரசு - சேரமான் பெருமாள் நாயனார். போலியைக் கண்டு - முழுநீறு பூசிய சிவனடியாரைப் போல் தோன்றிய வண்ணானைக் கண்டு. இறைஞ்சும் - வணங்குவார். 

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு

சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திரு அஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார், நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுக்கும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து, இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.

    இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள், சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திரு அஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திரு அஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "சிவத்தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத்து இறைவனது திருவருளால், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும்  பெற்றார்.

    உலகுயிர்கள் கழறும் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால், உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச்சேரன், காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து, பெரியபுராணத்தில் வரும் குலச்சிறை நாயனாரின் வரலாற்றினை வைத்துப் பாடிய பாடல்...

"நலச்சிறைநீர் வேணியர் நல்லடியார் யார்க்கும்

குலச்சிறையார் தாம்பணிதல் குன்றார் - இலர்க்குஇகழார்

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து."

இதன் பொருள் ---

பாண்டிய நாட்டிலே மணமேற்குடியிலே குலச்சிறை நாயனார் என்பவர் அவதரித்தார். விபூதி உருத்திராக்கம் தரித்தவர்களும் திரு ஐந்தெழுத்தை இடையறாது ஓதுகின்றவர்களும் ஆகிய சிவனடியார்களை வணங்கித் துதித்து அவர்க்கு வேண்டும் உதவிகளை எல்லாம் செய்யும் பணி பூண்டவர். குணம் இலராயினும் அவரை இகழ்ச்சி செய்யாதவர். பாண்டிய அரசராகிய நின்றசீர்நெடுமாறனுக்கு முதல் மந்திரியாக இருந்து அரசு புரிவித்தார். பரசமய கோளரியாகிய ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தரை வணங்கிப் போற்றி, அவரால் தேவாரத் திருப்பதிகத்திலே வைத்துப் பாராட்டப் பெற்ற சிறப்பினையும் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையிலே "பெருநம்பி" என்று வியந்து உரைக்கப்பட்டார்.  

"நலம்இலர் ஆக நலம் அதுஉண் டாக

நாடவர் நாடுஅறி கின்ற

குலம்இலர் ஆகக் குலம் அதுஉண் டாகத்

தவம்பணி குலச்சிறை பரவும்

கலைமலி கரத்தன் மூஇலை வேலன்

கரிஉரி மூடிய கண்டன்

அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்

ஆலவாய் ஆவதும் இதுவே." --- திருஞானசம்பந்தர்.

பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவ் எல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாம் சிறப்பினை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதி இருந்தும்

    இல்லாரா, வளருங் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சியாரா

ஆக்கும் இந்தத் தனம் அதனை, ஆக்கம்என

    நினைத்தனை நீ அகக் குரங்கே." ---  நீதிநூல்.

 இதன் பொருள் ---

நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந்தும் முடவராய், உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீய பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தனை.

சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 






64. சகுனம் - 3

 


                       64. சகுனம் - 3

                              ---


"தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,

     தவசி, சந்நாசி, தட்டான்,

  தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

     தட்டைமுடி, மொட்டைத் தலை,


கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

     கதித்ததில தைலம், இவைகள்

  காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,

     கனி, புலால் உபய மறையோர்


நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை

     நாளும்வண் ணான்அ ழுக்கு

  நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்

     நாடியெதிர் வரநன் மையாம்;


அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

     அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் - அலையை உடைய கங்கையை அணிந்த திருச்சடையை உடையவனே!, பரசு அணியும் அண்ணலே - மழு ஏந்திய பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப் பிராமணன் தவசி சந்நாசி தட்டான் - தலைவிரி கோலமாக ஒருவர் எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், 

தனம் இலா வெறுமார்பி, மூக்கறை, புல் விறகுதலை, தட்டைமுடி, மொட்டைத் தலை - தனம் இல்லாத மார்பினளும், மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், 

கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான், கதித்த தில தைலம் - அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும், 

இவைகள் காண எதிர் வர ஒணா - இவை கண்காண எதிர் வருதல் தகாதன;

நீர்க்குடம், எருக் கூடை, கனி, புலால், உபய மறையோர் - நீர்க் குடமும், எருக் கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப் பார்ப்பனரும், 

நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை, நாளும் வண்ணான் அழுக்கு - நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், 

நசை பெருகு பால்கலசம், மணி, வளையல், மலர் - விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், 

இவைகள் நாடி எதிர் வர நன்மை ஆம் - இவை தேடி எதிரே வரின் நலம் ஆகும்.


50. காலத்தில் உதவாதவை

 


            50. காலத்தில் உதவாதவை

                              -----


"கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்

     கட்டிவைத் திடுகல்வியும்

காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்

     கையிற் கொடுத்தபொருளும்


இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதம்என்

     றிருக்கின்ற குடிவாழ்க்கையும்

ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்

     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்


சொல்லான தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்

     சொல்லும்வஞ் சகர்நேசமும்

சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண

     துரிதத்தில் உதவா துகாண்


வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற

     வள்ளிபங் காளநேயா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வல்ஆன் கொங்கை மடமாது தெய்வானை குறவள்ளி பங்காள நேயா - சூதாடு கருவிபோன்ற கொங்கைகளை உடைய இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும் பங்காளனான காதலனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கல்லாது புத்தகந்தனில் எழுதி வீட்டினில் கட்டி வைத்திடு வித்தையும் - கற்காமலே ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், 

காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அந்நியன் கையில் கொடுத்த பொருளும் - விரும்பியபோது பயனடைய வேண்டும் என்று அயலானிடம் கொடுத்த பணமும், 

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடிவாழ்க்கையும் - தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலை என்று நினைத்து வாழும் வாழ்க்கையும், 

ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் - மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும், 

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றும் ஆ சொல்லும் வஞ்சகர் நேசமும் - சொல்வது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர்களிடத்தில் கொண்ட நட்பும், 

சுகியமாய் உண்டு என்று இருப்பதெ எல்லாம் துரித தருணத்தில் உதவாது - நன்மையாகக் கிடைக்கும் என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கண் வந்த காலத்தில் விரைவாகப் பயன்படமாட்டா.

     (விளக்கவுரை) வல்-சூதாடு கருவி. பாரி-மனைவி. தேச - அந்தரம்: தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு. அந்தரம் - முடிவு. சுகியம் (வட) - நன்மை.


49. வீண் போகாமல் பயன் விளைப்பவை

49.  வீண் போகாமல் பயன் விளைப்பவை

                                    -----


"பருவத்தி லேபெற்ற சேயும், புரட்டாசி

     பாதிசம் பாநடுகையும்,

பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே

     பயிர்கொண்டு வருகரும்பும்,


கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்

     கடன்இட்டு வைத்த முதலும்,

காலம்அது நேரில் தனக்கு உறுதியாக முன்

     கற்று உணர்ந்திடு கல்வியும்,


விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும்,

     விவேகிகட்கு உபகாரமும்,

வீண் அல்ல, இவை எலாம் கைப்பலன் அதாக,அபி

     விர்த்தியாய் வரும் என்பர்காண்,


மரு உலாவிய நீப மாலையும் தண் தரள

     மாலையும் புனை மார்பனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மரு உலாவிய நீபமாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே --- மணம் பொருந்திய கடப்பமலர் மாலையையும் குளிர்ந்த முத்துமாலையையும் அணிந்த திருமார்பனே! 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

பருவத்திலே பெற்ற சேயும் --- நல்ல இளமைப் பருவத்திலே பெற்றுடுத்த குழந்தையும்,

புரட்டாசி பாதி சம்பா நடுகையும் --- புரட்டாசி மாத நடுவினில் நடவு செய்த சம்பா பயிரும், 

பலம் இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர் கொண்டுவரு கரும்பும் --- நன்மை தரும் ஆடி மாதத்தில் யானையின் வாலைப் போலக் குருத்துக் கொண்டு விரிந்து வரும் கரும்பும், 

கருணையொடு மிக்க நாணயம் உளோர் கையினில் கடன் இட்டு வைத்த முதலும் --- உள்ளத்தில் அருளும் மிகுந்த நல்லொழுக்கமும் உடைய நல்லோரிடம் கடனாகக் கொடுத்து வைத்த முதல் பொருளும், 

காலம் அது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் --- துன்பம் நேர்ந்த காலத்தில் இளமையிலேயே தனக்கு இறுதி வேண்டிக் கற்று உணர்ந்த கல்வியும், 

விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் --- சிறப்புகள் மிக்க அரசர்களைக் கண்டு அவரோடு பழகிய நட்பும், 

விவேகிகட்கு உபகாரமும் --- அறிவு உள்ளவர்களுக்குச் செய்த உதவியும், 

வீண் அல்ல --- வீணாகப் போவன அல்ல.

இவையெலாம் கைப்பலன் அது ஆக அபிவிர்த்தியாய் வரும் என்பர் --- இவைகள் எல்லாம் கைமேல் பலன் தருவனவாக வளர்ச்சி அடையும் என்பர் மேலோர்.

     (விளக்கம்) மரு - மணம். தரளம் - முத்து. புரட்டாசி பாதி - புரட்டாசி பதினைந்து நாட்களுக்குள். விருது - கொடி. குடை முதலிய அடையாளங்கள். 'அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் முன்னாளில் இட்ட பொருளும் பின்னாளிலே பயன்படும்' என்பது பழமொழி


48. நல்லோர் நட்பு

 


                        48. நல்லோர் நட்பு

                                    -----


"மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,

     வளரும் அப்போது வளரும்;

வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்

     வற்றிடும், பெருகில்உயரும்;


பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,

     பொங்கு காலம் தழைக்கும்;

புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,

     போது உதயம் ஆகில்மலரும்;


தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது

     தேறில் உயிரும் சிறக்கும்;

சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்

     சிநேகம் அப்படி ஆகுமே;


வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய

     வால! குருபர! வேலவா!

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய --- குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே!

வால --- குமாரக் கடவுளே!

குருபர --- குருநாதனே!

வேலவா --- வேலாயுதக் கடவுளே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் --- பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும்; 

வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் --- குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும் அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும்; 

பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் --- நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும்; 

புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் --- தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்;  சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும்; 

தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் --- இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும்,  உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும்; 

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் --- தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.

விளக்கம்

ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்த பொழுது தவளைகள் பல வந்து சேரும்.  அங்கே நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ள பொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி எல்லாரும் வந்து ஒருவனை அடுத்து நிற்பர். அவனது செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர். 

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் 

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில் 

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு."

என்னும் ஔவையாரின் முதுரை இங்கு நினைவு கூரத்தக்கது.

நீர் உற்றபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும்; அது அற்றபோது அவை அயலே பறந்துபோம்: குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும் அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார். 

பற்று அற்ற நிலைக்கு நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்துள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவா விளக்கியுளது. எத்தகைய நிலையிலும் மாறாமல் அன்பு புரிகிற இத்தகைய உறவினரைப் பேணி வருபவர் பெருமை உறுவர். உறவு உரமாய் வரின் அரசு உயர்வாய் வரும். 


"பற்றும் வெறுக்கை ஒழிந்துழியும் 

பழைமை எடுத்துப் பாராட்டும் 

சுற்றம்; அதனைப் பெருங்கொடையால் 

தூய மொழியால் தழுவல்உறின், 

அற்றம் அவனுக்கு ஒருகாலும் 

அணுகாது; ஆக்கம் மிகப்பெருகும்; 

முற்ற நினைக்கும் பகைவர் தொழில் 

முற்றாது; ஏம கண்டனே!"       --- விநாயக புராணம்.


பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


"பலநாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்

நீத்தார் எனக் கை விடல் உண்டோ, தம் நெஞ்சத்து 

யாத்தாரோடு யாத்த தொடர்பு."


பலகாலம் நெருக்கமாக இருந்தவர்கள் ஆனாலும், உள்ளன்பு இல்லாதவர்களுடன் பெரியோர் நட்பாக இருக்கமாட்டார்கள். ஆனால், தம்மைப் பிரிந்து சென்று வெகுநாள் ஆகி இருந்தாலும், தம்மோடு ஒத்த நல்லியல்பு உடையவர் நேசத்தை விட்டுவித மாட்டார்கள்.


"கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,

வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை

நயப்பாரும் நட்பாரும் இல்."

மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒரு முறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.


47. அகந்தை அழிவைத் தரும்

 

            47.  அகந்தை அழிவைத் தரும்

                                -----


"சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன்வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,


பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,


ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?


மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர --- மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்து அருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்தவரே!

வடிவேலவா --- கூர்மையான வேலை உடையவரே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சூரபத்மன் பலமும் --- சூரபதுமனுடைய வலிமையும், 

இராவணன் தீரமும் --- இராவணனுடைய நெஞ்சுறுதியும், 

துடுக்கான கஞ்சன் வலியும் --- துடுக்குத்தனம் மிகுந்த கஞ்சனுடைய ஆற்றலும், 

துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் --- துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும், 

தொலையாத வாலி திடமும் --- வாலியின் அழிவற்ற வல்லமையும், 

பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் --- கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும், 

மதுகைடவர் பாரிப்பும் --- மதுகைடவருடைய பெருமையும், 

மாவலி தன் ஆண்மையும் --- மாபலியின் வீரமும், 

சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் --- சோமுகனிடத்தில் இருந்த வலிமையும், 

ஏர் அணவு கீசகன் கனதையும் --- அழகு பொருந்திய கீசகனின் பெருமையும், 

திரிபுரர் எண்ணமும் --- முப்புராதிகளின் நினைவும், 

தக்கன் எழிலும் --- தக்கனுடைய அழகும், 

இவர்களது சம்பத்தும் நின்றவோ --- இவர்களுடைய செல்வமும் நிலைபெற்று இருந்தனவோ?

அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? --- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?


46. விதிவழியே எல்லாம் ஆகும்

 

46.  தன் அளவே ஆகும் தனக்கு.

விதி வழியே எல்லாம் ஆகும்.

                        -----


"வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு

     மட்டன்றி அதிகம் ஆமோ?

வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி

     வண்ணப் பருந்து ஆகுமோ?


கங்கா சலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்

     காய்நல்ல சுரை ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்

     காணுமோ நால்நாழிதான்?


ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே

     அடையாமல் நீங்கிவிடுமோ?

ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்

     அமைத்தபடி அன்றிவருமோ?


மங்காத செந்தமிழ் கொண்டுநக் கீரர்க்கு

     வந்ததுயர் தீர்த்தமுருகா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா! --- நக்கீரதேவர் பாடி அருளிய அழியாத செந்தமிழ்ப் பாடலாகிய திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு அவருக்கும், அவரோடு இருந்த மற்றவர்க்கும்  நேர இருந்த துயரத்தைத் தீர்த்து அருளிய முருகப் பெருமானே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டன்றி அதிகம் ஆமோ? --- ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்றான  வங்காள தேசத்திற்குச் சென்றாலும்  துடைப்பமானது ஒருகாசு அளவு அல்லாமல், பெரிய விலைக்குப் போகுமோ? (அங்கேயும் துடைப்பம் இருக்குமே. இல்லாத பொருள் அல்லவே)

வான் ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ? --- வானத்திலே மிக உயர்ந்த இடத்திலே பறந்து சென்றாலும் ஊர்க்குருவி அழகிய பருந்தாகுமோ? 

கங்கா சலம் தன்னில் மூழ்கினும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ? --- கங்கை நீரிலே மூழ்கி இருந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் நால் நாழி தான் காணுமோ --- நாழி என்னும் அளவை உள்ள ஒரு பாத்திரத்தைக் கடலிலே முழுக அமுக்கி அமுக்கி மொண்டாலும் அது நான்கு நாழி நீரைக் கொள்ளுமோ?

ஐங்காதம் ஓடினும் தன் வினைகள் தன்னோடே அடையாமல் நீங்கி விடுமோ? --- ஐந்து காத தூரம் சென்றாலும் ஒருவன் செய்த வினைகள் அவனைச் சேராமல் நீங்கி விடுமோ?, 

ஆர் இடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றிலும் அமைத்தபடி அன்றி வருமோ? --- யாரிடத்திலே சென்று சேர்ந்தாலும்,  நீண்ட தொலைவு சுற்றி அலைந்தாலும் நமக்கு விதிக்கப்பட்டது அல்லாமல் தான் எண்ணிய வேறு ஒன்று வருமோ?

விளக்கம் --- உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில் தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு இது முரணாக அமையும் என்று தோன்றலாம். உயிர்களின் இருவினைக்கு ஏற்பவே, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என்று அறிக. நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் ஆகும்.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு? என்றும் தோன்றலாம்.  வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனவும் தோன்றலாம். உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே என்றால், எய்தாது. குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா?

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

"நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,

சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி

மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்

அலர்சோகம் செய்கமலத்து ஆம்."

வினையானது, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும். பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினை இடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

    வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் ஆகும். அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும். எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.


ஆகாமியம் - செய்யப்படுவது.

சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.

பிராரத்தம் - அநுபவிப்பது.


    இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள். அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

"கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்

திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்

ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்

ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்."


(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம். அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

"தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்

இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்

அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்

கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்."


(3) ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள். அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

"பனியால் இடியால் படர்வாடை யினாலும்

துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய

நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு

ஓரில் பவுதிகம் ஆகும்."

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1. உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2. வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவற்றை உயிரானது அனுபவித்துக் கழிக்க வேண்டும். மாற்று இல்லை. அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.


"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்

     நெறியே! நின் செயல் உண்டு ஆகில்

எங்கு ஆகில் என்ன? அவர் எண்ணியது எல்-

     லாம் முடியும்!, இல்லை ஆகில்,

பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்

     வெள் எலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன் உடனே ஆகும் தானே." --- தண்டலையார் சதகம்.

"பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும், பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும், சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும் அரும் கதி உதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தான் உயரப் பறந்தாலும்

     பருந்து ஆகாது உண்மை தானே." --- தண்டலையார் சதகம்.

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்." ---  மூதுரை

"எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை." ---  மூதுரை.

"வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." --- திருக்குறள்.


63. சகுனம் - 2

 


                            63. சகுனம் - 2


"நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

     நாவிசிக் சிலியோந் திதான்

  நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

     நாடரிய சுரபி மறையோர்


வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்

     வழிப்பயணம் ஆகை நன்றாம்;

  மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,

     வாய்ச்சொல்வா வாவென் றிடல்,


தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு

     தப்பட்டை ஒலிவல் வேட்டு

  தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

     தனக்கேக நன்மை யென்பர்!


அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

      இதன் பொருள் ---

    அருணகிரண உதயம் தருண பானுவை அனைய அண்ணலே - சிவந்த கதிர்களை உடைய காலை இளஞாயிறு போன்ற பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

    நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை நாவி சிச்சிலி ஓந்திதான் - நரியும் மயிலும் பச்சைக்கிளியும் கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும் ஓணானும், 

    நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி நாட அரிய சுரபி மறையோர் - வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும் சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், 

    வரி உழுவை முயல்இவை அனைத்தும் - வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் 

    வலம் ஆயிடின் வழிப்பயணம் ஆகை நன்று ஆம் - வலமாக வந்தால் வழிச்செலவு நன்மை தரும், 

    மற்றும் - மேலும், 

    இவை அன்றியே - இவையல்லாமலும், 

    குதிரை அனுமானித்தல் - குதிரை கனைத்தலும், 

    வாய்ச்சொல் வாவா என்றிடல் - வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும், 

    தருவளை தொனித்திடுதல் - கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், 

    கொம்பு கிடுமுடி முரசு தப்பட்டை ஒலி - கொம்பும் கிடு முடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் 

    வல்வேட்டு தனிமணி முழக்கு எழுதல் - விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும், 

    இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை என்பர் - இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.


62. சகுனம் - 1

 

                           62. சகுனம் - 1


"சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு

     சூகரம் கீரி கலைமான்

  துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை

     சொற்பெருக மருவும் ஆந்தை


வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

     விளங்கும்இரு நா உடும்பு

  மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்

     வெற்றியுண் டதிக நலம்ஆம்;


ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,

     ஒருதுடை யிருத்தல், பற்றல்,

  ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன

     உபசுருதி சொல்இ வையெலாம்


அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

முதியோர் பரவும் அமலனே --- அறிவில் சிறந்த பெரியோர் வணங்கித் துதிக்கின்ற தூயவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,   சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

சொல்அரிய கருடன் --- சொல்லுதற்கு அரிய கருடன், 

வானரம் --- குரங்கு, 

அரவம் --- பாம்பு, 

மூஞ்சிறு --- மூஞ்சுறு, 

சூகரம் --- பன்றி, 

கீரி - கீரி, 

கலைமான் --- கலைமான், 

துய்ய பாரத்வாசம் --- தூய்மை பொருந்திய கரிக்குருவி என்றும், வலியன் குருவி என்றும் அழைக்கப்படுகின்ற ஆனைச் சாத்தன் என்னும் பறவை,

அட்டை --- அட்டை, 

எலி --- எலி, 

புன்கூகை --- இழிந்த கோட்டான், 

சொல்பெருக மருவும் ஆந்தை --- அதிகம் பேசப்படும் ஆந்தை, 

வெல் அரிய கரடி --- வெல்லுதற்கு அரிய கரடி, 

காட்டு ஆன் --- காட்டுப் பசு, 

பூனை --- பூனை, 

புலி --- புலி,  

மேல் விளங்கும் இரு நா உடும்பு --- மேலாக விளங்குகின்ற இரண்டு நாக்குகளை உடைய உடும்பு, 

மிக உரைசெய் இவையெலாம் --- என்று மிகுதியாகச் சொல்லப்படும் இவை யாவும், 

வலம் இருந்து இடம் ஆகில் வெற்றி உண்டு --- வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் சென்றால் வெற்றி உண்டாகும்.

அதிக நலம் ஆம் --- மிகுந்த நலமும் உண்டாகும், 

ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல் --- விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், 

ஒரு துடை இருத்தல் --- ஒற்றைக் காலில் நிற்றல், 

பற்றல் --- வந்து கையைப் பிடித்தல், 

ஒரு தும்மல் --- ஒற்றைத் தும்மல், 

ஆணையிடல் --- ஆணையிடுதல், 

இருமல் --- இருமுதல், 

போகேல் என்ன உப சுருதி சொல் --- போகாதே என்று காதில் விழும்படியாகக் கூறுதல்,

இவை எல்லாம் அல்லல் தரும் --- இவைகள் எல்லாம் அல்லலைத் தருபவை, 

நல்ல அல என்பர் --- நன்மையை விளைப்பன அல்ல என்று (அறிவில் சிறந்த முதியோர்) கூறுவர்.

விளக்கம் - சகுனம் என்னும் சொல்லுக்கு பறவை என்பது பொருள். பறவைகள் வலம் இருந்து இடமாதல் முதலிய நன்மை தீமைக் குறி என்று பொருள். நிமித்தம் என்றும் பொருள்படும். துர் நிமித்தம், நல்நிமித்தம் என்று சொல்லப்படும். 

உற்பாதம் என்பது விளையப் போகும் தீமைகளை அறிவிக்கும் குறி என்று சொல்லப்படும்.


"நான்" கலந்து பாடவேண்டும்.

 

"நான்" கலந்து பாட வேண்டும்

-----

தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே ஞானிகள் உபதேசம் செய்வார்கள். "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் இதற்கு வழிகாட்டி அருளினார். குருவாக உள்ளவர்கள் தம்முடைய சீடர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்கலாம். இவை யாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். இறைவனைப் பாமாலைகளால் வழிபட்டுத் தமது காலத்தில் வாழ்ந்திருந்த மக்களை நல்வழிப்படுத்தி ஈடேற்றி, எதிர்காலத்தில் தோன்றக் கூடிய மக்களுக்கும் பயன்படும் வகையில் பாமாலைகள் பலவற்றைத் தொடுத்து வைத்துச் சென்று இருக்கிறார்கள் அருளாளர்கள். பூமாலைகள் சிறிது நேரத்தில் வாடிவிடும். பாமாலைகள் என்றுமே வாடாத மாலைகள். அவற்றை "மாத்ருகா புஷ்ப மாலை" என்று சிறப்பித்துப் பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல.

உபதேசம் பெறுவதற்குத் தகுதி உள்ளவர் இன்னார் என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம். அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று "அழித்துப் பிறக்க ஒட்டா அயில்வேலவன் கவியை அன்பால் எழுத்துப் பிழ அறக் கற்கின்றிலீர்" என்னும் அருள்வாசகத்தின் மூலம் புலப்படுத்துகிறார்.

பாமாலை சூட்டப் பெறுபவன் இறைவன். அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான். பார்வதி திருமணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் திருக்கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென்திசைக்குப் போகும்படி பணித்து அருளினான்.  தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கி விழுவோமோ தெரியாது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும். அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான். அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இலக்கணத்தை அவருக்கு அருளினான். "குறுமுனிக்கும் தமிழ் உரைக்கும் குமர! முத்தம் தருகவே" என்பது பிள்ளைத்தமிழ். "சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழ, இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே" என்று பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஓதிய நூல்களை உணரவேண்டும். உணராமலேயே ஓதிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. உணர்ந்ததைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சொல்லுபவர் மனம் அடங்கியவராக இருக்க வேண்டும். “சினம் அடங்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்று, மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் தாயுமான அடிகளார். அந்த வகையில், முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர்.

அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது பிழையோடு பாடலாமா? அருணகிரிநாதப் பெருமான் தமிழிலே வல்லவர். "அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ்தான் அளித்த மயில்வீரா" என்று தமக்கு அருள் புரிந்த முருகனைப் போற்றி உள்ளார். அந்த முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது பாடப் பெற்றப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

"அழித்துப் பிறக்க ஒட்டாஅயில் வேலன் கவியை, அன்பால்

எழுத்துப் பிழைஅறக் கற்கின்றிலீர்! எரிமூண்டது என்ன

விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே?"

என்று அருணகிரிநாதர் பாடி உள்ள கந்தர் அலங்காரப் பாடலைக் கருத்து ஊன்றி ஓதிச் சிந்திக்க வேண்டும். "பழுது அற ஓதிக் கடந்து, பவ வினை தீரத் துறந்து" என்றும் திருப்புகழில் அருணகிரிநாதர் அறிவுறுத்துகின்றார்.

அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், ஞானம் பிறந்து, பிறப்பு ஒழியும். ஞானமே முருகன் திருக்கரத்தில் வேலாக அமைந்து இருக்கிறது. அந்த ஞானவேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும். "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்பது கந்தர் அனுபூதி. "வேலுண்டு வினை இல்லை" என்பது ஆத்த வாக்கியம். "எனது தீவினை எல்லாம் மடிய நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா?" என்கிறார் பழனித் திருப்புகழில். மடங்கல் என்பதை, மடம்+கல் என்று பிரித்துப் பொருள் கொள்வோமானால், (மடம்-அறியாமை; கல்-தோண்டி எடுத்து நீக்குகின்ற) அறியாமையை நீக்குகின்ற  வேலை உடையவரே என்று பொருள்படும். “மடங்கல் வேலா” என்பதற்கு சிங்கத்திற்கு நிகரான வேலாயுதரே என்றும் பொருள் கூறலாம்.

கற்பது எப்படி என்று சற்று சிந்திக்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அனுபவமாக மாறும் போதுதான் அது முற்றுப் பெறும். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். இறைவனுடைய பொருள்சேர் புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அனுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அனுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

பழங்காலத்தில் சனகாதியர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள்  முதலாக அனைத்தையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஐயம் நீங்கினபாடில்லை. அனுபவ நிறைவு உண்டாகவில்லை. ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும் என்று கற்றவர்களை நாடிச் சென்றால், அவர்கள் எல்லாம் தாம் கற்றதையே விரித்துக் கூறிக் கொண்டு இருப்பார்கள். அறிவு நிறையப் பெற்றவர்களால் மட்டுமே ஐயத்தை நீக்கித் தெளிவு உண்டாக்க முடியும். நிறை அறிவு அல்லது பரிபூரண அறிவு வடிவாக உள்ளவன் இறைவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உன் அருண சரணாரவிந்தம் என்று பணிவேனோ" என்று பாடுகிறார் அருணை அடிகள்.  முருகப் பெருமானை  "முதுஞான சொருபகிரி" என்கிறார். ஞானம் - அறிவு. அறிவு சிறிது சிறிதாக நமக்கு வளர்ச்சி உறுகின்றது. இறைவனிடம் உள்ளது முற்றறிவு, பேரறிவு. தானே எல்லாவற்றையும் அறிவது முழுஞானம். பழுத்தஞானம். அந்த ஞானமே இறைவனுக்கு வடிவம். நம்மைப் போன்று, ஏழு தாதுக்களால் ஆன உடம்பு இறைவனுக்கு இல்லை.

"ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?

மோனம் தீர்கலா முனிவரும் காண்கிலர், முழுவதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தன்மை".   --- கந்தபுராணம்.


அறிவே சொரூபமாகிய ஆண்டவனை அறிவினாலேயே தான் அறியவும் அடையவும் முடியும்.

"ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்

      நாட்டமே! நாட்டத்துள் நிறைந்த

வானமே! எனக்கு வந்துவந்து ஓங்கும்

      மார்க்கமே! மருளர்தாம் அறியா

மோனமே! முதலே! முத்திநல் வித்தே!

      முடிவிலா இன்பமே! செய்யும்

தானமே! தவமே! நின்னைநான் நினைந்தேன்,

      தமியனேன் தனை மறப்பதற்கே."        --- தாயுமானார்.

சனகாதியர் அறிவு வடிவாகிய, ஞானமே வடிவாகிய இறைவனைச் சரண் அடைந்தார்கள்.  கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின்முத்திரையினால் விளக்கினான் இறைவன். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.

“கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறை 

ஆறங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்ககு இறந்த 

பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த த(ன்)னை 

இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 

நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்"

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடுகிறார்.

கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இறைவன், கல்வியினால் அறிந்துகொள்ள முடியாத பொருள். அறிந்தேன் என்று கூறிக் கொள்பவர்களாலும் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டு இருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அனுபவம் தோற்றி, மோனம் தலைப்படும். "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றார் மணிவாசகப் பெருமான். "கற்ற கலையால் நிலைதான் காணுமோ? காண்பது எல்லாம் அற்ற இடத்தே வெளி ஆம் அன்றோ பராபரமே" என்கிறார் தாயுமான அடிகளார். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்கிறார் மணிவாசகப் பெருமான். எனவே, கற்பது எப்படி என்று இப்போது விளங்கும்.

இறைவன் அருட்புகழை நூல்களின் வாயிலாகக் கற்றதுமே பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் இறைவனைப் பாடினால் இனிக்கிறது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாடுகின்ற பாடலின் பொருளை உணர்ந்து, அதன் கருத்தாக உள்ள இறைவன் நமது கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும். அவர்கள் சொன்னது உண்மை என்று விளங்கும்.

மணிவாசகர் பாடி அருளிய திருவாசகப் பாடல்களை பலரும் பாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்றும் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களில் பலரும் உருகித்தான் பாடினார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான மெட்டுகளில் பாட வேண்டும் என்ற முனைப்பு இருப்பதால், பாடலின் பொருள் உள்ளத்தில் விளங்குவது இல்லை. திருவாசகம் திருவாசகமாக இருக்கின்றது. பாடுபவர் பாடுபவராக இருக்கின்றார். பாடுபவர் திருவாசகத்தோடு ஒன்றவில்லை, கலக்கவில்லை.

  வள்ளல்பெருமான் திருவாசகத்தை அனுபவித்தார். திருவாசகம் அவருக்கு இனித்தது, உவட்டாமல் இனித்தது. நான் பாடுகின்றேன் என்ற எண்ணம் இல்லாமல், பாடலின் பொருளிலே உள்ளம் தோய்ந்ததால் இனித்தது என்கிறார்.

"வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்துஎன்

ஊன்கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

அவருக்கு மட்டும் இனிக்கின்றது திருவாசகம்.  நமக்கு அப்படி இனிக்காமல் போவது ஏன்?

நான் அன்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கக் காபி தந்தார்கள். அதைக் கொஞ்சம் குடித்தபோது இனிப்புத் தெரியவில்லை. எனது முகக் குறிப்பை அறிந்து கொண்ட அன்பர், “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது.  கலந்து குடியுங்கள்" என்றார். காபியை இன்னொரு குவளைக்கு மாற்றியபோது, அடியில் சர்க்கரை இருப்பது தெரிந்தது. கலக்கினேன். சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட்டபோது காபி இனித்தது. சர்க்கரை வேறு, காபி வேறாக இருந்தால் இனிக்காது. 'நான் பாடுகின்றேன்' என்ற முனைப்பு இல்லாமல், பாடலின் பொருளோடு கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று வள்ளல்பெருமான் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

மனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று திருவள்ளுவ நாயனார் பேசுகிறார். சாகிறவன் மரணத் தருவாயில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவத்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும் - கண் பிதுங்கும். மரண வேதனையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவை.

தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் இயமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள்.  உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும்போது, அது தானாகப் போகாது. உடம்பில் இருந்து கூறுபடுத்திக் கொண்டு போவது இயமனுக்கு விதிக்கப்பட்ட தொழில். இயமன் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால், பெரியவர்கள் அவனைத் தருமராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவன். ஆதலால் தருமராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம்.

இயமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண்கள் நெருப்புக்  கொப்புளிக்கும் - புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே நமது உள்ளத்தில் பயம் உண்டாகிறது. மரணம் பயம் உடையது என்று எண்ணுகிற நமக்குக் இயமனும் அச்சம் தரும் கோலத்துடன் இருக்கிறான்.

"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரர் தேவாரம். அப்படி இருக்க மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மரணத்தை வரவேற்கத் தானே வேண்டும்  என்று கூறலாம். மரணத்தைப் பற்றிய பயன் உண்டானால்தான் அதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை தோன்றும். மரணம் இல்லாப் பெருவாழ்வை அருள்கின்ற இறைவனிடத்தில் பத்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற  இறைவனிடத்தில் பத்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் பெரியோர்கள். பத்தியை மிகுவிப்பவை அருளாளர்கள் பாடிய அருட்பாடல்கள்.

பத்திச் சுவை ததும்ப அருளாளர்கள் பாடி வைத்துச் சென்ற அருட்பாடல்களை அவற்றின் பொருளை உணர்ந்து ஓதி வழிபடுதல் வேண்டும். வித்தையைக் காட்டுவது கூடாது. 'நான் பாடுகின்றேன்' என்பதை மறந்து, பாடலோடு ஒன்றிப் பாடுதல் வேண்டும். 'நான்' என்பது தோன்றக் கூடாது. அது பாடலின் பொருளோடு கலந்துவிட வேண்டும். "நான் கலந்து பாடுங்கால்" என்று வள்ளல்பெருமான் அருளியதைச் சிந்திக்கவேண்டும். பொருள் உணர்ந்து ஓதி நாம் உருகுவதோடு கேட்பவர்களையும் உருகச் செய்தல் வேண்டும். "படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே" என்கிறார் வள்ளல்பெருமான்.

எனவே, எழுத்துப் பிழை இன்றி, பாடலின் பொருளை உணர்ந்து ஓதி நலம் பெறுதல் வேண்டும். பிறரையும் நலம் பெறுவித்தல் வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்பது மணிவாசகம். பொருள் உணர்ந்து ஓதி, அருள்நலத்தைப் பெறுவோம்.

மனம் என்னும் மலர்

மனம் என்னும் மலர் ----- அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத...