பொது --- 1077. புரக்க வந்த

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புரக்க வந்த (பொது)

முருகா! 

உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.


தனத்த தந்தனம் தனத்த தந்தனம்

     தனத்த தந்தனம் ...... தனதான


புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்

     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப்


புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்

     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே


செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்

     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந்


த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்

     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ


குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்

     குவட்டி லங்கையுந் ...... துகளாகக்


கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்

     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்


துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்

     துரத்த னும்பிறந் ...... திறவாத


சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்

     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புரக்க வந்த, நம் குறக் கரும்பை, மென்

     புனத்தில் அன்று சென்று ...... உறவாடி,


புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண்

     புதுக் குரும்பை, மென் ...... புயம் மீதே


செருக்க நெஞ்சகம் களிக்க, அன்புடன்

     திளைக்கும் நின் திறம் ...... புகலாது, இந்-


த்ரியக் கடம் சுமந்து, அலக்கண் மண்டிடும்

     தியக்கம் என்று ஒழிந் ...... திடுவேனோ?


குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும்

     குவட்டு இலங்கையும் ...... துகளாக,


கொதித்த கொண்டலும், த்ரி அட்சரும், கடம்

     கொதித்து மண்டு வெம் ...... பகை ஓட,


துரக்கும் விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்-

     துரத்தனும், பிறந்து ...... இறவாத


சுகத்தில் அன்பரும், செக த்ரயங்களும்

     துதிக்கும் உம்பர் தம் ...... பெருமாளே.

பதவுரை

குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும்,

திரி அட்சரும் --- (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும்,

கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், 

விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும்,

பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும்,

செக த்ரயங்களும் --- மூவுலகங்களும் துதிக்கின்றவரும்,

துதிக்கும் --- துதிக்கின்ற

உம்பர்தம் பெருமாளே --- தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

புரக்க வந்த நம் குறக் கரும்பை --- உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி

மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி,

புடைத்து --- பக்கங்களில் பருத்து விளங்கி,

அலங்க்ருதம் படைத்து எழுந்த ---  அலங்காரத்தோடு எழுந்துள்ளதும்,

திண் புதுக் குரும்பை --- வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய மார்பகங்களின் மீதும், 

மென் புய(ம்) மீதே --- மென்மையான தோள்களின் மீதும்,

செருக்க நெஞ்சகம் களிக்க --- மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய,

அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது --- அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல்,

இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

பொழிப்புரை

குரங்கு இனத்தைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேகநிறம் கொண்ட திருமாலும், சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும், மதநீர் கொதித்து, நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும்,  ஒளி பொருந்தியதும், பூண் உடைய தந்தங்களை உடையதும் , வீரம் நிறைந்ததும் ஆன அயிராவதம் என்னும் யானைக்குத் தலைவனாகிய இந்திரனும், பிறப்பு இறப்பு அற்றப் பேரின்ப சுகத்தில் திளைத்து இருக்கும் அடியார்களும், மூவுலகங்களும் துதிக்கின்றவரும், தேவர்களுக்கு எல்லாம் பெருமையின் மிக்கவரே!

உயிர்களை ஆண்டு காக்க வந்தவரும், நமது குறவர் குலக் கரும்பாகியவரும் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி, அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு அன்று ஒரு நாள் சென்று பார்த்து உறவாடி, பக்கங்களில் பருத்து விளங்கி, அலங்காரத்தோடு எழுந்துள்ளதும், வலிமையும் எழிலும் வாய்ந்ததும்,  இளநீர் போன்றதும் ஆகிய அவரது மார்பகங்களின் மீதும், மென்மையான தோள்களின் மீதும், மகிழ்ச்சியால் மனம் களிப்பு அடைய, அன்புடன் தழுவுகின்ற தேவரீரது திறத்தைப் பாடிப் புகழாமல், ஐம்பொறிகளோடு கூடிய உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பிய அறிவுக்கலக்கத்தை அடியேன் நீங்கி இருப்பேனோ?

விரிவுரை


புரக்க வந்த நம் குறக் கரும்பை --- 

புரத்தல் - ஆண்கொண்டு காத்து அருளுதல்.

குறக் கரும்பு என்பது குறமகளாகிய வள்ளிநாயகியைக் குறிக்கும்.


மென்புனத்தில் அன்று சென்று உறவாடி --- 

மென்மை - அமைதி. மென்புனம் - அமைதி வாய்ந்த தினைப் புனம்.


புடைத்து --- 

"புடை பரந்து ஈர்க்கு இடை போகா இளமுலை" என்பது மணிவாசகம். 


அலங்க்ருதம் ---

அலங்காரம். 


திண் புதுக் குரும்பை --- 

திண்மை - வலிமை.

புது - அழகு பொருந்திய,

குரும்பை - இளநீர்.

"மிருகமத புளகித இளநீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்" என்பது தேவேந்திர சங்க வகுப்பு.

செருக்க நெஞ்சகம் களிக்க ---

செருக்கு - மகிழ்ச்சி. 


அன்புடன் திளைக்கு(ம்) நின் திறம் புகலாது இந்திரியக் கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ --- 


நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக

     நாயக மாமயில் ...... உடையோனே.     --- (ஏவினைநேர்) திருப்புகழ்.

 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்து, உரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ,

 

மார சரம் பட, மோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும், தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.  --- (பாரநறுங்) திருப்புகழ்.

 

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி வள்ளிநாயகி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

  தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கைதொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.


வள்ளி என்பது ஜீவான்மா;

முருகன் பரமான்மா;

நாரதர் வள்ளியினது தவ வலிமை.

தவ வலிமை ஆண்டவனை அருள்புரிய அழைத்துவரும்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே! நின் பெயர் யாது? நின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார். என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   இவ்வாறு பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.


"தாய்துயில் அறிந்து, தங்கள்

     தமர்துயில் அறிந்து, துஞ்சா

நாய்துயில் அறிந்து, மற்றுஅந்

     நகர்துயில் அறிந்து, வெய்ய

பேய்துயில் கொள்ளும் யாமப்

     பெரும்பொழுது அதனில், பாங்கி

வாய்தலில் கதவை நீக்கி

     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்."

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி,  எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.

அருள்வள்ளல் ஆகிய முருகப் பெருமானின் அருள்திறத்தைப் பேசிப் பணிந்து வழிபடுவதால் நற்கதி அடையாலம், அதை விடுத்து, பொறிகளின் வழியே மனதைச் செலுத்தி, ஆசைக் கடலில் விழுந்து, அறிவு மயங்கி அல்லல் படுதல் கூடாது என்று அடிகளார் அறிவுறுத்துகின்றார்.


குரக்கினம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாகக் கொதித்த கொண்டலும் --- 

குரக்கினம் - குரங்கு இனம்.

தண்டம் - படை.

குவடு - மலை. குவட்டு இலங்கை - மலைகளால் சூழப்பட்டுள்ள இலங்கை.

இலங்கையர் கோனை வெற்றி கொண்ட, மேக நிறத்தவர் ஆன திருமால்.


திரி அட்சரும் --- 

அட்சம் - கண். திரி அட்சம் - முக்கண். 

சூரியன், சந்திரன், அக்கினி என்பதையே தமக்கு மூன்று கண்களாக உடைய சிவபெருமான். 

முக்கண்ணன். திரியம்பகன்.


கடம் கொதித்து மண்டு வெம்பகை ஓடத் துரக்கும் --- 

கடம் - மதநீர்.


விம்ப கிம்புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் --- 

விம்பம் - ஒளி.

கிம்புரி - யானையில் கொம்பில அணியப்படும் பூண். பிரசண்டம் - வேகம்.

சிந்துரம் - யானை. அயிராவதம் என்னும் யானை.

சிந்துரத்தன் --- சிந்துரம் எனப்படும் யானையை வாகனமாக உடைய இந்திரன்.


மூம்மூர்த்திகளும் இந்திரனும் முருகப் பெருமானைத் துதிக்கின்றனர்.

படைத்து அளித்து அழிக்கும் திரிமூர்த்திகள் தம்பிரானே --- திருப்புகழ்.

மூவர் தேவாதிகள் தம்பிரானே - திருப்புகழ்.


பிறந்து இறவாத சுகத்தில் அன்பரும் --- 

பிறப்பும் இறப்பும் துன்பத்திற்கு இடமானவை. துன்பத்தைத் தருபவை. 

அற்ப இன்பத்தை உடையது மானிடப் பிறவி. பிறவாத பேரின்பத்தை அடையத் துணையாக வாய்த்தது. இறையருளால் அரிதாகப் பெறப்பட்டது. பெற்ற இந்த உடம்பைக் கொண்டு, நன்னெறியில் வாழ்ந்து, பிறப்பும் இறப்பும் அற்ற பெருநிலையை அடைந்தால் பேரின்பம் வாய்க்கும். அந்தப் பெருநிலையை உடம்பு உள்ளபோதே பெறுகின்ற நிலை சீவன் முத்த நிலை எனப்படும். சீவன் முத்தர்களாக உள்ள அடியார்கள் இறைவனைப் போற்றுவதை அடிகளார் இங்கே குறிக்கின்றார்.


செக த்ரயங்களும் --- 

செகம் - உலகம. திரயம் - மூன்று.  

மூவுலகங்களிலும் உள்ளவர்கள் முருகப் பெருமானைத் துதிக்கின்றார்கள்.


கருத்துரை

முருகா! உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள்.








இறைவன் உள்ள பொருளா? கற்பிக்கப்பட்ட பொருளா?

 கடவுள் உள்ள பொருளா? கற்பிக்கப்பட்டதா?

----

இந்த ஐயம் காலகாலமாக, இந்த நாட்டில் மட்டுமல்ல; எல்லா இடங்களிலும் நிகழ்ந்து வருவதுதான். ஏற்றுக் கொண்டவர்கள் எப்படித் தெளிந்தார்கள் என்னும் ஐயம் ஒருபுறம் இருக்க, இல்லை என்று சொன்னவர்களில் பலர் காலப்போக்கில், தமது கருத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு. இல்லை என்று சொன்ன சிலரை, நான் திருத்தலங்களுக்கு வழிபாட்டிற்காகச் சென்ற திருக்கோயில்களில் பார்த்ததும் உண்டு.

ஆக, தெய்வம் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை. எல்லாம் அவரவர் புரிதலில்தான் உள்ளது. இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஒருவர் ஆங்கிலத்தில், "God is nowhere" என்று எழுதிவைத்தார் என்றால்,  அதனைப் படிக்க வருபவர் "God is now here" என்று படித்துக் கொள்ள இடம் உண்டு.

கடவுள் என்பது எள்ளில் எண்ணெய் போல், பாலில் நெய் போல், பழத்தில் இன்சுவை போல், எங்கும் கலந்து நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருள். எங்கும் நிறைந்து உள்ள பரம்பொருள் கல்லிலும் செம்பிலும் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரிலும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்றது.. எனவேதான், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்றார் மணிவாசகப் பெருமான். "நீங்காதான்" என்னும் சொல்லை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். அவனாகப் போகமாட்டான்,  அவனைப் போகச் செய்யவும் நம்மால் முடியாது. ஏனெனில், அவனுக்கு இருப்பிடம் ஒவ்வொரு உயிருமே தான். உயிர்கள் இல்லை என்றால்,  கடவுளுக்கு வேலை இல்லை. அவனை நினைப்போரும் இல்லை. அந்த நிலையில் அவன், இல்லாத பொருளே ஆவான். "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா" என்பார் மணிவாசகப் பெருமான். ஓங்காரப் பொருளாக உள்ளத்தில் நின்றவன் இறைவன்.

வெளியில் நாம் காணும் பொருள்களில் இறைவன் உள்ளான் என்றால், உள்ளத்திலும் உள்ளான் என்பது விளங்கும்.

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பார்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பார்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே"

என்று தெளிவாக அருளிச் செய்தார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

இதற்குப் பெரியோர், தருக்க ரீதியாகச் சொல்லும்போது, "சற்காரிய வாதம்" என்பார்கள். "சற்காரியம்" என்றால் "உள்ள பொருள்" என்று பொருள். சத்து - உள்ளது. நிலையானது, காரியம் - பொருள். "சற்காரிய வாதம்" என்றால், "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது. இப்படியும் சொல்லலாம்... உள்ள பொருள் தோன்றும். இல்லாத ஒரு பொருள் தோன்றுவதற்கு இல்லை.

சத்து என்னும் சொல்லுக்கு, உள்ளது, நிலையானது என்று கண்டோம். நிலையானது என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். சித்து என்றால், அறிவு உள்ளது என்று பொருள். சத்து+சித்து+ஆனந்தம் என்னும் மூன்று சொற்களும் கூடி, சச்சிதானந்தம் என்று ஆனது. 

சத்து - நிலையானதாகவும், அழிவற்றதாகவும் உள்ள பொருளை; சித்து - அறிவு நிலையில் கண்டு, ஆனந்தம் - ஆனந்தம் அடைவது. இந்த அருள் நிலையை சச்சிதானந்தம் என்றனர் பெரியோர்.

தமிழில், 'சத்து' என்றால் மெய்ம்மை, 'சித்து' என்றால் அறிவு, ஆனந்தம் - ஆனந்தம், ஆகக் கூடி, "சச்சிதானந்தம்" என்பது "உண்மை அறிவு ஆனந்தம்" எனப்படும். சச்சிதானந்தப் பரம்பொருள் என்றால், உண்மை அறிவில் கண்போர்க்கு ஆனந்தம் தரும் பொருள்.

சத்து என்றால் உண்மையானது, நிலையானது, அழிவு இல்லாதது என்று கண்டோமல்லவா? உலகில், உண்மையான, நிலையான, அழிவற்ற பொருள்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று, இறைவன். மற்றொன்று, உயிர்.

சித்து என்றால் அறிவு என்ற கண்டோமல்லவா? உலகில், அறிவு உள்ள பொருள்கள் இரண்டு உள்ளன. ஒன்று இறைவன். மற்றொன்று உயிர்.

இறைவனும் அழியாத பொருள், அறிவு உள்ள பொருள். உயிரும் அழியாத பொருள், அறிவு உள்ள பொருள்.

இறைவனுக்கும் வயது இல்லை. உயிருக்கும் வயது இல்லை. இரண்டும் சமம். எனவேதான், இறைவனை, அவன் இவன் என்று ஒருமையில் அழைக்கின்றோம். இது சொரூப நிலை.

அறிவு நிலையில் மட்டும் இறைவனுக்கும், உயிருக்கும் வேற்றுமை உண்டு. இறைவன் முற்றறிவினன், உயிர் சிற்றறிவினை உடையது. இறைவன் தூய அறிவை உடையவன். (வாலறிவினன் - மெய்யறிவினன்). உயிர் அறிவு தூய்மை அற்றது. இறைவன் எல்லாவற்றையும் ஒருங்கே அறிபவன். உயிர் அறிவித்தால் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும். இறைவனுக்கு மறதி இல்லை. உயிருக்கு, மறதி உண்டு. அறிந்ததை அப்போதே மறக்கும். காலப்போக்கிலும் மறக்கும். அறிவு விளங்க விளங்க, மறதி குறைந்துகொண்டே வரும். அறிவு விளங்க விளங்க, தூய்மை பெறும்.

பண்புகள் எல்லாம் ஒருபொருளின் மூலமாகத் தான் விளங்கும். அதைத் தனியாகக் காணமுடியாது. காட்டவும் முடியாது. அது உணர வேண்டிய ஒன்று. அறிவு, அன்பு, ஆற்றல், முதலானவைகள் எல்லாம் பண்புகள். இவற்றுக்கு மாறானவை தீய பண்புகள்.

சொரூப நிலை, தடத்த நிலை என்று இருநிலைகள் இறைவனுக்கும், உயிர்களுக்கும் உண்டு. "சொரூப நிலை" என்பது இயல்பு நிலை, சூட்சும நிலை (சூக்கும நிலை), நுண்மை நிலை என்றெல்லாம் பொருள்படும். சிறப்பு நிலை என்றும் சொல்லப்படும். வடிவு, பெயர் முதலியன இல்லாத நிலை. கண்ணால் காணப்படாத நிலை. இந்த நிலையில் இறைவன் அறியப்படுபவன் அல்ல. அறியப்படாதவனும் அல்ல. "தடத்த நிலை" என்பது, பொது இயல்பு ஆகும். வடிவோடு இருப்பது. அயல் இடத்து இருப்பது. இந்த நிலையில் உருவமும், பெயரும் உண்டு.

சொரூப நிலையில் இறைவனுக்கு ஓர் உருவம் இல்லை. உருவம் இல்லை என்றதனாலேயே ஒரு பெயரும் இல்லை. சொரூப நிலையில் இறைவனுக்கு ஒரு வடிவமும், பெயரும் இல்லாமை பற்றியே, "ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மணிவாசகர் திருவாசகத்தில் காட்டினார். சொரூப நிலையில் உயிருக்கும் ஒரு வடிவம் இல்லை. ஒரு பெயரும் இல்லை. அது ஒரு உடம்பை எடுக்கும் போதுதான், பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் உண்டாகின்றது. பொதுப் பெயர் என்பது, வர்க்கப் பெயர். மரம், செடி, கொடி, மனிதன் என்பது போல. சிறப்புப் பெயர், அரச மரம், மல்லிகைக் கொடி, முருகன், வள்ளி என்பன போல.

இந்த உடம்போடு உயிர் ஒன்றி இருக்கும்போதுதான், அந்த வடிவத்திற்கு, "சுப்பன்" "குப்பன்" என்று ஒரு பெயர் வழங்கப்படுகின்றது. உயிர் போனபிறகு, உடம்பு பிணம் எனப்படும். உயிரானது உடலில் எப்படி இருந்தது? உடம்பை விட்டு எங்கே போனது? எப்படிப் போனது? என்பதை நாம் அறிய முடியாது. உடம்பு இயங்கியதால், உயிர் இருந்தது என்று கொண்டோம். உடம்பு இயங்காததால், உடம்பில் உயிர் இல்லை என்று கொண்டோம். உயிர் உடம்பில் இருக்கும்போது தடத்த நிலை. உயிரை விட்டு நீங்கியபோது சொரூப நிலை. அது போலவே, சொரூப நிலையில் இறைவன் அறிய முடியாதவன். உணரத் தான் முடியும்.

அவனை உணர்ந்து கொள்ளும் அறிவு நிலைக்கு உயிர்கள் வந்து, உணர்வு நிலையில் திகழும் பொருட்டு, தனது பெருங்கருணை காரணமாக இறைவன், ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று பஞ்சகிருத்தியம் என்று சொல்லப்படுகின்ற ஐந்து தொழில்களை மேற்கொள்ள வேண்டியே, இறைவன் திருமேனி கொண்டு எழுந்து அருள்கின்றான்.

இயங்குகின்ற பொருள்களை அனைத்திற்கும் இருவகையான ஆற்றல் உண்டு. ஒன்று நிலை ஆற்றல் அல்லது சாத்திய ஆற்றல் (Potential Energy). இன்னொன்று, இயக்க ஆற்றல் (Kinetic Energy). சாத்திய ஆற்றல் இல்லாமல் இயக்க ஆற்றல் இல்லை.

சாத்திய ஆற்றல்தான் பரம்பொருள். அது சிவம் என்று சொல்லப்படும். 'சிவமே என்று கிடக்கின்றான்' என்றால், செயல் இல்லாமல் சும்மா இருக்கின்றான் என்று பொருள். ஒரு சாரார் சிவம் என்கிறார்கள். அதுபோலவே, அவரவரும் அவரவருக்குப் பிடித்த வடிவில் கற்பனை செய்து வழிபடுகிறார்கள். நமது வீடுகளில் சும்மா இருக்கின்ற ஆற்றல் உள்ளவர்களான பெரியவர்கள், தனக்குக் கீழ் உள்ளவர்களை ஏவல் கொள்கின்றனர். சாத்திய ஆற்றல் நினைப்பதை எல்லாம், இயக்க ஆற்றல் செயல்படுத்துகின்றது. இறைவனுக்கு இயக்க ஆற்றல் என்பது சக்தி எனப்படுகின்றது. அது பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, கிரியாசத்தி, ஞானசத்தி என்று ஐவகைப்படும். இந்த ஐவகைச் சத்திகள் தாம், ஐந்தொழில் எனப்படும் பஞ்ச கிருத்தியங்களை, இறைவன் ஆணைப்படி இயற்றுகின்றன.

ஐந்து தொழில்களை வடமொழியில், "பஞ்ச கிர்த்தியம்" என்பர். ஆக்கல் என்பது சிருஷ்டி அல்லது சிருட்டி. காத்தல் என்பது திதி அல்லது ஸ்திதி. அழித்தல் என்பது, சங்காரம், சம்மாரம், சம்ஹாரம். மறைத்தல் என்பது திரோபவம், அருளல் என்பது அனுக்கிரகம். இவ்வாறு சொல்லப்பட்ட ஐந்தொழில்கள், தூல ஐந்தொழில், சூக்கும ஐந்தொழில், அதிசூக்கும ஐந்தொழில் என்று மூவகைப்படும். அவற்றையும் விரித்தால் மிகப் பெருகும்.

இறைவன் திருமேனி கொண்டு எழுந்தருள்வதை, சமய நெறிகள் ஒவ்வொரு விதமாகத் தமக்கு வகுத்துக் கொண்டன. அவரவர் விருப்பப்படி இறைவனுக்குப் பெயரையும் அமைத்துக் கொண்டன. எந்தெந்த வடிவில் இறைவனை வழிபடுகின்றார்களோ, அந்த வடிவில் எழுந்து அருள் புரிவது ஒரு பரம்பொருள்தான். மனித குலம் ஒன்று என்று கொண்டால், இறைவனும் ஒருவனே. மனித குலம் பலவேறு பிரிவாக இருப்பதால், அந்தந்தப் பிரிவினர் அவரவருக்குத் தோன்றும் வடிவில் இறைவன் வழிபடுகின்றார்கள். இறைவனும், அவ்வாறு கற்பிக்கப்பட்ட வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றான். "அன்பால் நினைவாரது இதயக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேருதல்" என்று, "மலர்மிசை ஏகினான்" என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகர் வடித்த உரையைக் காண்க.

கோதுமை மாவு ஒன்று. அதை சப்பாத்தி, பூரி, பரோட்டா என்பன போன்ற வடிவங்களில் மக்கள் வடித்துக் கொள்கின்றார்கள். அரிசி மாவு ஒன்றுதான். அதை, இட்டகளியாகவும் (இட்லி), தோசைகளில் பலவிதமாகவும், மற்றும் பல்வேறு பண்டங்களாகவும் ஆக்கிக் கொள்வது போல, இறைவனுக்கு உருவத்தையும், பெயரையும் படைத்துக் கொண்டவை பலவேறு சமயங்கள். கல் ஒன்றுதான், அதை பல வடிவங்களில் சிலைகளாக வடிக்கின்றார்கள். வடித்த பின், சிவன், திருமால் முதலிய  பெயர்களை வழங்குகின்றோம். வடிப்பதற்கு முன் கல் என்ற ஒரு பெயரே உண்டு. உண்மையில் சிவன் கல் என்றும், திருமால் கல் என்றும் ஒன்று இல்லவே இல்லை. பொருள் ஒன்றுதான். அது பல பண்டங்களாக வரும்.

சமயம் கடந்த ஒப்பற்ற முதல் ஞானியாகிய திருவள்ளுவ நாயனார், முதல் அதிகாரத்தில், இறைவனை "மலர் மிசை ஏகினான்" என்றார். எந்த வடிவத்தையும் அவர் குறிக்கவில்லை. "மலர்" என்று குறித்ததும், ஆன்மாக்களின் இதயத் தாமரையையே. பொதுவாக, "மலர்" என்று சொன்னால், அது தாமரையையே குறிக்கும். எண்ணெய் என்று சொன்னால், எள்ளில் இருந்து வடித்த எண்ணெயையே (எள்+நெய்) குறிக்கும். மேற்குறித்த திருக்குறளுக்கு உரை வடித்த பரிமேலழகர், பிறப்பால் வைணவராக இருந்தும், தனக்கு ஏற்றவாறு கொள்ளாமல், இறை உண்மையை உள்ளபடி உணர்ந்து, "அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண், அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின்" என்று உண்மை கண்டார். "அவர் நினைந்த வடிவம்" என்னும் சொற்றொடரைக் கருத்தில் இருத்திக் கொண்டால் போதும்.

"ஆர் உருவ உள்குவார் உள்ளத்து உள்ளே

அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்"

என்றார் அப்பர் பெருமான். யார் யார் எந்த எந்த வடிவில் நினைக்கின்றார்களோ அந்த வடிவில் நிற்பான் இறைவன் என்கின்றார்.

"சுருதி வானவனாம், திருநெடு மாலாம்,

சுந்தர விசும்பின் இந்திரனாம்,

பருதி வானவனாம், படர்சடை முக்கண்

பகவனாம், அகஉயிர்க்கு அமுதாம்,

எருது வாகனனாம், எயில்கள்மூன்று எரித்த

ஏறு சேவகனுமாம், "பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம்", கங்கை

கொண்டசோ ளேச்சரத் தானே."   --- திருவிசைப்பா.

கங்கைகொண்ட சோளேச்சரத்தானே வேதங்களை ஓதும் பிரமனாகவும் மேம்பட்ட நீண்ட வடிவு எடுத்த திருமாலாகவும், அழகிய தேவர்கள் தலைவனாகிய இந்திரனாகவும், சூரிய தேவனாக வும், பரவிய சடைமுடியையும் மூன்று கண்களையும் உடைய சிவ பெருமானாகவும், உயிரகத்து அதனைத் தளிர்ப்பிக்கும் அமுதமாக வும், காளை வாகனனாகவும், மும்மதில்களையும் அழித்த, மேம்பட்ட வீரனாகவும், "இவற்றைத் தவிர வேண்டுவார் வேண்டும் உருவத்தில் தோற்றம் வழங்குபவனாகவும் உள்ளான்".

"நூல் அறிவு பேசி நுழைவு இலாதார் திரிக

நீல மணிமிடற்றான் நீர்மையே - மேல்உலந்தது

எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்

அக்கோலத்து அவ்வுருவே ஆம்."

இது காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி. "தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்கு அருளுதலே இறைவனது இயல்பு" என்பதை அறியாதார், "பொடி பூசி, எலும்பணிந்து, சுடலை ஆடுதலையே இவனது உண்மை இயல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர். அது பற்றி எமக்கு வருவதோர் இழுக்கில்லை" என்றார் காரைக்கால் அம்மையார்.

முன்னர், இறைவனது சொரூப நிலை, தடத்த நிலை பற்றிப் பார்த்தோம். சொரூப நிலை என்பது சாத்திய ஆற்றல். தடத்த நிலை என்பது இயக்க ஆற்றல். இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு நிலை உள்ளது. அது அட்டமூர்த்த நிலை. மூர்த்தம் என்றால் உடல், உறுப்பு, அல்லது வடிவு உடைய பொருள் என்று கொள்ளவேண்டும். அட்டமூர்த்தத்தை எட்டுநிலை அல்லது எண்மை நிலை என்பர் பெரியோர். இங்குதான் ஒரு சூட்சுமம் உள்ளது.

எட்டு மூர்த்தங்கள் என்பது, மண், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள். சூரியன் சந்திரன் ஆகிய ஒளிப் பொருள்கள் இரண்டு. ஆன்மா ஆகிய அறிவுப் பொருள் ஒன்று.

"அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்

அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே

இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய், ஞான

மயனாகி நின்றானும் வந்து."

என்பது காரைக்கால் அம்மையார் பாடல். பல பாடல்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் இங்கே கொண்டுள்ளேன்.

"அறிவே வடிவமான பெருமான் இறைவன். இது அவனது உண்மை நிலை (சொரூப நிலை). அவன் தான் உலக உயிர்களுக்கு ஐம்பெரும் பூதங்கள், இருசுடர், உயிர் ஆகிய எட்டு உருவானவன். இது எண்மை நிலை." "எண்மைநிலை" என்றால், "எட்டு நிலை" என்றும், நாம் எண்ணுகின்ற, கருதுகின்ற, வடிக்கின்ற, கற்பித்துக் கொள்ளுகின்ற நிலை என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த எட்டுப் பொருள்களில் இறைவன் விளங்குவதை அறியலாம். ஐம்பெரும் பூதங்களாகிய வானில் கலப்பு நிலையிலும், காற்றில் இயக்க நிலையிலும், நீரில் குளரிச்சி நிலையிலும், தீயில் வெம்மை நிலையிலும், மண்ணில் திண்மை நிலையிலும் விளங்குவது இறைவன். கதிரவனில் சோதி அமைத்தவனும், சந்திரன் ஒளியில் குளிர்ச்சியை வைத்தவனும் அவன்தான். உயிரிகளில் (ஆன்மாக்களில்) அறிவு நிலையில் விளங்குகின்றான். இந்த எட்டுப் பொருள்களில், உயிரைத் தவிர, பிற ஏழு பொருள்களும் அறிவுற்ற பொருள்கள். ஆன்மா ஒன்றே அறிவுள்ள பொருள். சிற்றறிவு கொண்ட ஆன்மாவின் அறிவு விளக்கம் பெறுவதற்காக, சடமான ஏழு பொருள்களில் இறைவனது விளக்கம் நிகழ்கிறது. நாம் படிக்கின்ற புத்தகம் சடப் பொருள். அது எதற்காக உள்ளது? உயிருள்ள பொருளாகிய ஆன்மா அறிவு விளக்கம் பெறுவதற்காக.

கடவுளும் உயிரும் சித்து அல்லது அறிவுப் பொருள்கள் என்ற வகையில் ஓர் இனம். என்றாலும், அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டன ஆகும்.  கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது.  உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது.  கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது.  உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது.

இறைவனுக்கு உள்ள கோயில்கள், படிமங்கள் எல்லாம் மனிதனால் கற்பித்து உருவாக்கப்பட்டவை. அவைகளிலே, நமது வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் எழுந்தருள் புரிகின்றான். எழுந்தருளப் பண்ணுவதை, வடமொழியில் "ஆவாகனம்" என்பர். கற்பிக்கப்பட்டவை "படமாடக் கோயில்". வேண்டினாலும், வேண்டாவிட்டாலும், இறைவன் அந்தர்யாமியாக (உள்ளுறை பொருளாக) எல்லா உயிர்களிலும் உள்ளான். நினையாதவர் உள்ளத்தில் ஒளித்து இருக்கின்றான். நினைப்பவர் உள்ளத்தில், அறிவு உருவாக வெளிப்பட்டுத் தோன்றுகின்றான். எனவே, உயிர்களை "நடமாடக் கோயில்" என்பர்.

ஒரு பொருளைக் காணாத காலத்தில், கருத்தினாலே காண்பதற்குத் தூண்டு கோலாக இருப்பது அதனுடைய பெயர் மற்றும் உருவம்.  யாரேனும் மிகவும் அன்பு உடையவர்கள் இறந்து போனால் அவர்களுடைய நினைவாகவே இருக்கிறோம். அதனுடைய பயனாக நம்முடைய நனவிலும்,  கனவிலும் அவர்களுடைய உருவம் அடிக்கடி வந்து தோன்றுகிறது. இதற்குக் காரணம் நமக்கு அவர்களிடத்தில் உள்ள அன்புதான். அந்த அன்பு எவ்வளவுக்கு எவ்வளவு உரமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுடைய உருவம் நம்முடைய கனவில் வந்து நிற்கும். இது மனிதன் தன்னுடைய அனுபவத்தில் காண்பது. இது போலவே இறைனுடைய திருக்கோலத்தைக் கண்ணாலே கண்டு, மீதூர்ந்த காதலினால் நெஞ்சத்தில் வைத்துத்  தியானம் பண்ணிப் பழகினால், கண்ணாலே காணாத காலத்தும் அக்கோலத்தோடு நினைவில் வந்து நிற்பான்.  கனவிலும் வந்து நிற்பான். அவன் திருவுருவத்தைக் காணும் பேறு நமக்குக் கிடைக்கும். பழகப் பழக நெஞ்சிலே தோன்றும் உருவமே கண் முன்னாலும் தோன்றும். அந்தத் தோற்றத்தை உருவெளித் தோற்றம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். "நனவினும் கனவினும், நம்பா, உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்" என்றார் திருஞானசம்பந்தர்.

கவிச்சக்கரவர்த்தி,  இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்துள்ளார்.  சூர்ப்பனகை இராமனைக் கண்டு ஆசை கொள்கிறாள். அவனை அணுகியபோது இலட்சுமணனால் தண்டிக்கப் பெற்றுத் திரும்புகிறாள். இராவணனிடம் வந்து, தான் மூக்கை இழந்ததற்குக் காரணம் ஒன்றைக் கற்பித்துக் கூறுகிறாள். பேரழகியாகிய சீதையைத் தூக்கிக் கொண்டு வந்து, இராவணனுக்கு இன்பம் தரும் பொருளாக ஆக்க முயன்றதாகவும், அப்போது இலட்சுமணன் தன்னை இந்தக் கோலம் செய்ததாகவும் கூறுகிறாள். சீதையைப் பற்றி சூர்ப்பனகை பலபடியாக வருணிக்கக் கேட்ட இராவணனுக்கு சீதாதேவியிடம் ஆசை உண்டானது. அவளுடைய உருவத்தை அவன் கற்பனை செய்து கொள்கிறான். காமம் மிகுதியால் அவன் மிகவும் துன்பப்படுகிறான். அப்போது அவனுக்கு உருவெளித் தோற்றமாக ஒரு பெண்ணின் உருவம் தோன்றுகிறது. சீதையை அவன் இதற்கு முன்பு பார்த்தது இல்லை. ஆனாலும் முன்னால் தோற்றுகின்ற பெண்ணின் உருவம் மிக அழகாக இருக்கிறது. அதை அவன் கண்டபோது அவள்தான் சீதையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, உடனே சூர்ப்பனகையை அழைத்துவரச் சொல்கிறான். சீதை சீதை என்று எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தமையினால் அவனுக்குப் பார்க்கும் இடம் எங்கும் சீதையாகத் தோன்றும் நிலை வந்து விட்டது. இராவணன் ஏவலின்படி சூர்ப்பனகை அங்கே வந்தாள். அவளோ இராமனிடத்தில் தீரா விருப்பம் கொண்டவள். அவளைப் பார்த்ததும் இராவணன்  "இதோ பார் இவள்தானா நீ சொன்ன சீதை" என்று கேட்கிறான்.  

சூர்ப்பனகைக்கு எப்போதும் இராமனுடைய நினைவாகவே இருக்கிறது. இராவணனுக்குச் சீதையிடத்தில் உள்ள ஆசை எத்தனை வலியதோ, அத்தனை வலியது சூர்ப்பனகைக்கு இராமனிடத்தில் உள்ள ஆசை. இராவணன் தான் கண்ட உருவெளித் தோற்றத்தைக் காட்டி,  'இவள்தானே சீதை' என்று கேட்டபோது சூர்ப்பனகை பார்க்கிறாள். அவளுக்கு அங்கே சீதை தோன்றவில்லை. இராமன்தான் தோன்றுகிறான். உடனே அவள் வியப்பு மீதுர்ந்து,  'இவன்தான் அந்த வல்வில் இராமன்'  என்கிறாள்.

அற்ப சிற்றின்பத்தில் நாட்டம் உள்ள காமிகளுக்கே மனக்கண்ணிலும்,  புறத்திலும் அவர்கள் நினைத்த உருவம் தோற்றம் தருமானால்,  இறைவன்பால் எல்லை இல்லா அன்பு கொண்ட அடியார்களுக்குத் தோற்றுவதற்குத் தடை இருக்காது. மனம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். பத்தி உணர்ச்சி மிக்கவர்கள் இறைவனுடைய தியானத்தினால் அவன் திருக்கோலத்தை நினைத்த இடம் எல்லாம் காண்பதற்குரிய நிலையை அடைவார்கள். 

நம்மிடத்து அன்பு பூண்டுள்ள ஒருவரை நாம் அன்போடு அடிக்கடி எண்ணுகின்றோம். அப்படி எண்ணும்போது, அவரது உருவம் நமது மனக்கண்ணில் தோன்றுகிறது. வேண்டாதவரை நாம் நினைப்பது இல்லை. அதுபோலவே, இறைவனை நாம் கருதுகின்ற வடிவத்தில், உள்ளத்தில் தியானிக்க முற்பட்டால், அவனது உருவம் நாம் காணுகின்ற பொருள்களில் எல்லாம் தோன்றும். 

"காக்கை சிறகினிலே, நந்தலாலா! – நின்றன் 

கரிய நிறம் தோன்றுதையே, நந்தலாலா! 

பார்க்கும் மரங்களெல்லாம், நந்தலாலா! – நின்றன் 

பச்சை நிறம் தோன்றுதையே, நந்தலாலா!"

என்று பாரதியார் பாடியதைச் சிந்தித்தால் விளங்கும்.

எனவே, இறைவன் என்பது உள்ள பொருள்தான். இல்லை என்பது இல்லை. அவரவர் கற்பித்துக் கொண்ட வடிவிலே அவன் எழுந்தருள் புரிவதால், இறைவன் கற்பிக்கப்பட்ட பொருளே என்பதில் ஐயம் ஏதும் இல்லை.




பொது --- 1076. கருவாய் வயிற்றில்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கருவாய் வயிற்றில் (பொது)


முருகா! 

உபதேசம் அருள்வாய்.


தனனா தனத்த தனனா தனத்த

     தனனா தனத்த ...... தனதான


கருவாய் வயிற்றி லுருவா யுதித்து

     முருகாய் மனக்க ...... வலையோடே


கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த

     தலைபோய் வெளுத்து ...... மரியாதே


இருபோது மற்றை யொருபோது மிட்ட

     கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி


இறவாத சுத்த மறையோர் துதிக்கு

     மியல்போத கத்தை ...... மொழிவாயே


அருமாத பத்தஅமரா பதிக்கு

     வழிமூடி விட்ட ...... தனைமீள


அயிரா வதத்து விழியா யிரத்த

     னுடனே பிடித்து ...... முடியாதே


திருவான கற்ப தருநா டழித்து

     விபுதேசர் சுற்ற ...... மவைகோலித்


திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


                   பதம் பிரித்தல்


கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து,

     முருகு ஆய், மனக்க ...... வலையோடே


கலைநூல் பிதற்றி, நடுவே கறுத்த

     தலைபோய் வெளுத்து ...... மரியாதே,


இருபோதும் மற்றை ஒருபோதும் இட்ட

     கனல்மூழ்கி, மிக்க ...... புனல்மூழ்கி,


இறவாத சுத்த மறையோர் துதிக்கும்

     இயல் போதகத்தை ...... மொழிவாயே.


அரும் ஆதபத்த அமரா பதிக்கு

     வழிமூடி விட்டு, ...... அதனை மீள


அயிராவதத்து விழி ஆயிரத்தன்

     உடனே பிடித்து ...... முடியாதே


திருவான கற்ப தரு நாடு அழித்து,

     விபுதேசர் சுற்றம் ...... அவைகோலித்


திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


பதவுரை

அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு --- அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை மூடிவிட்டு, 

அதனை மீள --- அதனை மீளவும் தாக்கி,

அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே ---ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனும், ஆயிரம் கண்களை உடையவனும் ஆன இந்திரனை உடனே பிடிக்க முயன்று, முடியாமல் போன காரணத்தால், 

திருவான கற்பதரு நாடு அழித்து --- செல்வம் நிறைந்ததும், கற்பக மரத்தைக் கொண்டதும் ஆன தேவர் உலகை அழித்து,

விபுதேசர் சுற்றம் அவை கோலி --- தேவர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, 

திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே --- வலிமையுடன் அசுரர்களைக் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் தேவர்களை மீட்ட பெருமையில் மிக்கவரே!

கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து --- தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகி வந்து பிறந்து,

முருகு ஆய் --- இளமைப் பருவத்தை அடைந்து, 

மனக் கவலையோடே --- மனக் கவலையோடே,

கலைநூல் பிதற்றி --- கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து 

நடுவே --- வாழ்நாளின் இடையிலே

கறுத்த தலை போய் வெளுத்து --- கருமையாக இருந்த தலைமயிரானது நரைத்து,

மரியாதே --- இறந்து போகாமல், 

இருபோதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி --- காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் யோகப் பயிற்சியால் வளர்த்த மூலாக்கினியில் முழுகி, சிறந்த மதி மண்டலத்தில் ஊறும் அமுத நீரில் முழுகி இருக்கின்ற, 

இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே --- மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைந்த மறையவர்கள் போற்றுகின்ற தகுதி வாய்ந்த அறிவுப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.

பொழிப்புரை

அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை மூடிவிட்டு, அதனை மீளவும் தாக்கி, அயிராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனும், ஆயிரம் கண்களை உடையவனும் ஆன இந்திரனை உடனே பிடிக்க முயன்று, முடியாமல் போன நிலையில் செல்வம் நிறைந்ததும், கற்பக மரத்தைக் கொண்டதும் ஆன தேவர் உலகை அழித்து, தேவர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, வலிமையுடன் அசுரர்களைக் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் தேவர்களை மீட்ட பெருமையில் மிக்கவரே!

தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகி வந்து பிறந்து, இளமைப் பருவத்தை அடைந்து,  மனக் கவலையோடே கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து, வாழ்நாளின் இடையிலே கருமையாக இருந்த தலைமயிரானது நரைத்து, இறுதியில் இறந்து போகாமல், காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் யோகப் பயிற்சியால் வளர்த்த மூலாக்கினியில் முழுகி, சிறந்த மதி மண்டலத்தில் ஊறும் அமுத நீரில் முழுகி இருக்கின்ற, மரணம் இல்லாப் பெருவாழ்வை அடைந்த மறையவர்கள் போற்றுகின்ற தகுதி வாய்ந்த அறிவுப் பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருள்வாயாக.


விரிவுரை

முருகு ஆய் --- 

முருகு - இளமை. 

கலைநூல் பிதற்றி --- 

கலைநூல் - அறிவு நூல்கள்.

பிதற்றுதல் - அறிவின்றிக் குழறுதல், 

கலை நூல்களைப் படித்தும் உண்மை அறிவு விளங்காமல் அவற்றையே திரும்பத் திரும்பப் படித்து அறிவு விளங்காத நிலையை அடிகளார் குறிக்கின்றார்.

நடுவே --- 

வாழ்நாளின் இடையிலே

கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே --- 

எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்களில் எந்த உயிர்க்கும் நரை கிடையாது. பன்றி, யானை, காக்கை முதலியவைகட்கு உரோமம் நரைப்பதில்லை.

உயர்ந்த பிறப்பு என்று கருதப்படுகின்ற மனிதனுக்கு மட்டும் நரையுண்டு. நரைப்பதின் காரணத்தை ஆராய்ந்தால்,  இது இறைவன் நமக்குத் தரும் அறிவிக்கை என்பது விளங்கும். மற்ற பிராணிகள் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வந்தவை. மனிதன் பிறவாமையைப் பெற வந்தவன். ஏன் பிறந்தோம் என்பதை மறந்திருந்தவனுக்கு இறைவன் செய்யும் எச்சரிக்கை நரை என்று கொள்ளவேண்டும். நரை உண்டானவுடனே ஆசாபாசங்களை அகற்றி தவநெறியில் நாட்டம் உண்டாக வேண்டும். காதின் அருகில் ஒரு நரையைக் கண்ட மாத்திரத்தில தசரதர் தவம் மேற்கொள்ள முயன்றார் என்கிறது இராமாயணம். 

நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முதன்மையான காரணம், முடிக்கு கருநிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைந்து வருவதுதான். இந்த மெலனின் முதுமையில்தான் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும். முதுமை நெருங்க நெருங்க, மனக் கவலை மிகுவதால், முடி நரைத்தலும், தோல் திரைதலும் உண்டாகும். மனக் கவலையை மாற்றுகின்றவன் தனக்கு உவமை இல்லாத இறைவன் வருவனே. அவனை அடைந்தால், கவலைகள் மிகுவதில்லை.

இயல்பாகவே முதுமையில் தலைமயிரானது கொக்குக்கு ஒக்க நரைத்துப் போகும். முதுமை வந்துவிட்ட பின்னராவது, நல்வினைகளைச் செய்து, போகும் நெடுவழிக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். சிலர் நரைத்து வெளுத்த முடியைக்  கறுப்பாக்குவதில் கருத்தைச் செலுத்துவார்கள். நல்வினைகளைச் செய்யத் தலைப்பட மாட்டார்கள். அறிவு உடையவர்கள், எப்படியும் தமக்கு முதுமை வரும் என்றும், அதன் அறிகுறியாக முடி நரைத்துப் போகும் என்பதை உணர்ந்து, இளமைக் காலத்திலேயே நற்செயல்களைச் செய்து ஆக்கத்தைத் தேடிக் கொள்வார்கள்.

"நரைவரும் என்று எண்ணி, நல்அறிவாளர்

குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்".              --- நாலடியார்.

இதன் பொருள் ---

பழுதற்ற அறிவினை உடையோர், தமக்கு மூப்பு வரும், அதற்கு அறிகுறியாக தலைமுடி நரைத்துப் போகும் என்பதை அறிந்து, இளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில் பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம் நீங்குதல் இல்லாததும், நிலையில்லாததும் ஆகிய இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல், இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி, உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள், முதுமை வந்து,  தலைமுடியும் நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

இளமைப் பருவத்தை அறவழியில் பயன் படுத்தாமல் மனம் போன போக்கில் நுகர்ந்து அறிவு மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து. இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" என்ற பெயரை உடையவன் ஆயினான். 

மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். காரணம், அவைகள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளில் முழுகி இருப்பது இல்லை. 

எல்லாம் இருந்தாலும், இன்னமும் வேண்டும் என்று ஆசைக்கடலில் அகப்பட்டு அலைபவன் மனிதன் மட்டும்தான். ஆசைக்கடலில் அகப்பட்டுக் கொண்டதால், அருள் அற்ற அந்தகன் ஆகிய இயமனின் கையில் உள்ள கயிற்றினால் பிணிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பிறந்து அல்லல் படுகின்றான். முதுமை வந்துவிட்டது என்பதை உணர்ந்த பிறகாவது, ஆசைகளை விட்டு, அருள் வழியில் முயலுதல் வேண்டும்.

திருக்காளத்தி மலையை இருப்பிடமாகக் கொண்டு, நாகன் என்னும் மலையரசன் வேடர்களுக்குத் தலைவனாய் ஆட்சி புரிந்து வந்த காலத்தில், மூப்பு வந்து சேரவும், வேட்டைத் தொழிலில் முயற்சி குன்றியவன் ஆனான். அந்நிலையில், அங்குள்ள மலைகளின் பரந்த பக்கங்களிலும், பயிர் விளையும் காடுகளிலுமாக எங்கும் கொடிய பன்றி, புலி, கரடி. காட்டுப்பசு, காட்டெருது,  கலைமான் ஆகிய இவை முதலாக உள்ள விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்திட, அது கண்டு, முறையான வேட்டையின் தொழில் இம்முறை தாழ்ந்து போனதால் இந்த நிலை நேர்ந்தது என்று அங்குள்ள வில்லேந்திய வேடர்கள் அனைவரும் திரண்டு, தங்கள் குலத்தின் தலைவனாக உள்ள நல்ல நாகன்பால் சென்று, நேர்ந்த அழிவு பற்றிச் சொன்னார்கள்.

வேடர்கள் சொன்னதைக் கேட்டதுமே, நாகன் என்பான், தன்னைப் பற்றி வரும் தனது மூப்பின் தொடர்ச்சியை நோக்கி, தனது மக்களைப் பார்த்து, "என் மக்களே! மூப்பினால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலவில்லை. ஆதலின், என் மகன் திண்ணனை உங்களுக்குத் தலைவனாக ஆக்குகின்றேன். ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.

சிலர், முதுமை வந்தாலும், தனது நிலையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் காணலாம். வீட்டில்தான் அப்படி என்றால், சில பதவிகள் கிடைத்து விட்டால் போதும். எதையும் சாதிக்க முயலாமல், இறுதிக் காலம் வரை பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டு இருப்பவர்களை இன்றும் காணலாம். எதையும் சாதிக்கவில்லை என்றாலும், முதுமை வந்த பிறகாவது, பொறுப்புக்களை இளையவர்களிடம் விட்டு, அவர்களை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.

நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். நரைத்த முடியை மாற்றுவதில் கருத்து வைத்தல் கூடாது. மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்து, சன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "நரை வந்து விட்டதே? இனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே? கூற்றுவன் பாசக் கயிறும் வருமே? இதுவரையிலும் எனது ஆவி ஈடேற்றத்திற்கு உரிய சிந்தனையை அறிவில்லாத நான் கொள்ளவில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

வள்ளியம்மையார் வாழ்ந்திருந்த "குறவர் கூட்டதில் வந்து, கிழவனாய்ப் புக்கு நின்று, குருவி ஓட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கி, சிறந்த வடிவு காட்டிப் புணர" விரும்பி, கிழவேடம் தாங்கி வந்த முருகப் பெருமானைப் பார்த்து, "நத்துப் புரை முடியீர்! நல்லுணர்வு சற்றும் இலீர்!" என்று சாடினார். (நத்துப் புரை முடி --- சங்குபோல் நரைத்த முடி) முடி நரைத்த பிறகாவது நல்லுணர்வு வரவேண்டும்.


இருபோதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி --- 

இருபோதும் - காளை மாலை ஆகிய இருவேளைகளிலும்,

மற்றை ஒரு போதும் - அவை திவர்ந்த உச்சப் போதிலும்,

கனல் - மூலாக்கினி,

புனல் - அமுத ஊற்று.

இதன் விளக்கத்தை, "மூளும்வினை சேர" எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழ், "சூலம் என ஓடு சர்ப்ப" எனத் தொடங்கும் திருக்கடவூர்த் திருப்புகழ், "இந்துகதிர் சேர் அருண" எனத் தொடங்கும் கும்பகோணத் திருப்புகழ் முதலான பாடல்களில் கண்டு கொள்க.


இறவாத சுத்த மறையோர் ---

இறவாத பெருநிலையை அடைந்த சீவன்முத்தர்கள். 


அரும் ஆதபத்த அமரா பதிக்கு வழி மூடி விட்டு --- 

ஆதபம் - சூரியன். இங்கே ஒளியைக் குறித்து வந்தது.

அயிராவதத்து விழி ஆயிரத்தன் ---

அயிராவதம் என்பது நான்கு தந்தங்களை உடைய வெள்ளை யானை. தேவலோக அதிபதியாகிய இந்திரனுக்கு வாகனமாக உள்ளது. ஆயிரம் கண்களை உடையவன் இந்திரன். இதன் விளக்கத்தை "கொள்ளை ஆசைக்காரிகள்" எனத் தொடங்கும் திருப்புகழில் காணலாம்.

திருவான கற்பதரு நாடு அழித்து --- 

கற்ப தரு - கற்பக மரம். இது தோவலோகத்தில் உள்ளது. நினைத்ததை அளிப்பது. 

விபுதேசர் சுற்றம் அவை கோலி திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே --- 

விபுதர் - தேவர். 

கோலுதல் - வளைத்தல்.

சூரபதுமன் திக்கு விஜயம் செய்தபோது விண்ணுலகுக்குச் சென்றான். அப்போது இந்திரன் அவனுக்குப் பயந்து தன் மனைவியுடன் குயில் உருவம் கொண்டு ஒடி ஒளிந்துக் கொண்டான். அதனால் இந்திரனைப் பிடிக்க முடியவில்லை. தேவர்கள் எல்லாம் சூரபதுமனால் துன்புறுத்தப் பட்டனர். தேவர்கள் சூரனது ஏவல்களைச் செய்யும் பணியில் அமர்ந்தனர். அதனால் அமராபதி வழி மூடிக் கிடந்தது.  தேவர்களைச் சிறைமீட்டு அருளினார் முருகப் பெருமான்.

கருத்துரை

முருகா! உபதேசம் அருள்வாய்.


பொது --- 1075. ஒழுகூன் இரத்தம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஒழு கூனிரத்தம் (பொது)


முருகா! 

தேவரீரது திருநாமத்தை ஓதி உய்ய அருள்.


தனனா தனத்த தனனா தனத்த

     தனனா தனத்த ...... தனதான


ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி

     உயர்கால் கரத்தி ...... னுருவாகி


ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து

     உழல்மாய மிக்கு ...... வருகாயம்


பழசா யிரைப்பொ டிளையா விருத்த

     பரிதாப முற்று ...... மடியாமுன்


பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்

     பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே


எழுவா னகத்தி லிருநாலு திக்கில்

     இமையோர் தமக்கு ...... மரசாகி


எதிரேறு மத்த மதவார ணத்தில்

     இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ்


செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து

     செழுதீ விளைத்து ...... மதிள்கோலித்


திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


ஒழுகு ஊன், இரத்தமொடு, தோல் உடுத்தி,

     உயர்கால், கரத்தின் ...... உருவாகி,


ஒருதாய் வயிற்றின் இடையே உதித்து

     உழல், மாய மிக்கு ...... வருகாயம்,


பழசாய், இரைப்பொடு இளையா, விருத்த

     பரிதாபம் உற்று ...... மடியாமுன்,


பரிவால் உளத்தில் முருகா எனச்சொல்

     பகர்வாழ்வு எனக்கும் ...... அருள்வாயே.


எழு வானகத்தில் இருநாலு திக்கில்

     இமையோர் தமக்கும் ...... அரசாகி,


எதிர் ஏறு மத்த மதவாரணத்தில்

     இனிது ஏறு கொற்றம் ...... உடன்வாழும்


செழுமா மணிப் பொன் நகர் பாழ் படுத்து,

     செழுதீ விளைத்து, ...... மதிள்கோலித்


திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த

     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

பதவுரை

எழுவானகத்தில் இருநாலு திக்கில் --- விளங்கும் விண்ணுலகில் எட்டுத் திசையிலும் உள்ள 

இமையோர் தமக்கும் அரசாகி --- தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி, 

எதிர் ஏறு மத்த மதவாரணத்தில் இனிதேறு கொற்றமுடன் வாழும் --- அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாகிய ஐராவதத்தின் மீது இனிதாக ஏறிவரும் வெற்றியோடு வாழ்ந்த 

செழுமா மணிப்பொன் நகர்பாழ் படுத்து --- செழிப்பான அழகிய அமராவதி நகரைப் பாழ்படுத்தி,

செழு தீ விளைத்து மதிள்கோலி திடமோடு அரக்கர் கொடுபோய் அடைத்த --- பெரும் தீயிலிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் தேவர்களைக் கொண்டுபோய் அடைத்து வைத்த, 

சிறைமீள விட்ட பெருமாளே --- சிறையை நீக்கி தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி --- பரந்து உள்ள ஊனும்,  இரத்தமும் சேர்ந்து குழைத்துத் தோலால் மூடப்பட்டு, 

உயர்கால் கரத்தின் உருவாகி --- உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி, 

ஒருதாய் வயிற்றின் இடையே உதித்து உழல் --- ஒரு தாயின் வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து உழலுகின்ற, 

மாய மிக்கு வருகாயம் பழசாய் --- மாயையால் ஆன இந்த உடலானது முதுமையை அடைந்து, 

இரைப்பொடு இளையா விருத்த பரிதாபம் உற்று --- மூச்சு இரைப்பால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து,

மடியா முன் --- இறந்து போவதற்கு முன்பாக, 

பரிவால் உளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ்வு எனக்கும் அருள்வாயே --- உள்ளத்தில் அன்போடு "முருகா" என்ற தேவரீரது திருநாமத்தைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை அடியேனுக்கும் அருள்வாயாக.

பொழிப்புரை

பரந்து விளங்கும் விண்ணுலகில் எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி,  அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாகிய ஐராவதத்தின் மீது இனிதாக ஏறிவரும் வெற்றியோடு வாழ்ந்த செழுமை உடைய அழகிய அமராவதி நகரைப் பாழ்படுத்தி, பெரும் தீயிலிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் தேவர்களைக் கொண்டுபோய் அடைத்து வைத்த, சிறையை நீக்கி தேவர்களை விடுவித்த பெருமையில் மிக்கவரே!

பரந்து உள்ள ஊனும்,  இரத்தமும் சேர்த்துக்  குழைத்துத் தோலால் மூடப்பட்டு, உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி,  ஒரு தாயின் வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து உழலுகின்ற, மாயையால் ஆன இந்த உடலானது முதுமையை அடைந்து,  மூச்சு இரைப்பால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக, உள்ளத்தில் அன்போடு "முருகா" என்ற தேவரீரது திருநாமத்தைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை அடியேனுக்கும் அருள்வாயாக.

விரிவுரை

ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி..... மாய மிக்கு வருகாயம்  --- 

ஒழுகுதல் - பரந்து படுதல், வளர்தல். 

ஊன் - தசை, இறைச்சி.

நமது உடம்பில் பரந்துள்ள தசையானது, உணவால் வளர்ச்சி அடைந்து, இறுதியில் தளர்ச்சி அடைகிறது. இது மாயையால் ஆனது. மண் புனல் தீ காற்று வெளி என்ற ஐம்பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய உடம்பு.

“ஐந்துவிதம் ஆகின்ற பூதபேதத்தினால்

   ஆகின்ற யாக்கை”                        --- தாயுமானார்.


கருத்துரை

முருகா! தேவரீரது திருநாமத்தை ஓதி உய்ய அருள்.




பொது --- 1074. மைந்தர் இனிய

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மைந்தர் இனிய (பொது)


முருகா! 

திருவடியைத் தந்து அருள்.


தந்த தனன தந்த தனன

     தந்த தனன ...... தனதான


மைந்த ரினிய தந்தை மனைவி

     மண்டி யலறி ...... மதிமாய


வஞ்ச விழிகள் விஞ்சு மறலி

     வன்கை யதனி ...... லுறுபாசந்


தந்து வளைய புந்தி யறிவு

     தங்கை குலைய ...... உயிர்போமுன்


தம்ப முனது செம்பொ னடிகள்

     தந்து கருணை ...... புரிவாயே


மந்தி குதிகொ ளந்தண் வரையில்

     மங்கை மருவு ...... மணவாளா


மண்டு மசுரர் தண்ட முடைய

     அண்டர் பரவ ...... மலைவோனே


இந்து நுதலு மந்த முகமு

     மென்று மினிய ...... மடவார்தம்


இன்பம் விளைய அன்பி னணையு

     மென்று மிளைய ...... பெருமாளே.


                 பதம் பிரித்தல்


மைந்தர், இனிய தந்தை, மனைவி,

     மண்டி அலறி, ...... மதிமாய,


வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி,

     வன் கை அதனில் ...... உறு பாசம்


தந்து வளைய, புந்தி அறிவு

     தங்கை குலைய ...... உயிர் போமுன்,


தம்பம் உனது செம்பொன் அடிகள்

     தந்து, கருணை ...... புரிவாயே.


மந்தி குதிகொள் அம்தண் வரையில்

     மங்கை மருவு ...... மணவாளா!


மண்டும் அசுரர் தண்டம் உடைய,

     அண்டர் பரவ ...... மலைவோனே!


இந்து நுதலும் அந்த முகமும்

     என்றும் இனிய ...... மடவார்தம்


இன்பம் விளைய, அன்பின் அணையும்,

     என்றும் இளைய ...... பெருமாளே.


பதவுரை

மந்தி குதிகொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா --- குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த வள்ளிமலையில் இருந்த வள்ளிநாயகியை அணைந்த மணவாளரே!

மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே --- நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போர் புரிந்தவரே!

இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம் இன்பம் விளைய --- பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவரும், தேவரீருக்கு என்றும் இனியவராய் உள்ள தேவயானை, வள்ளிநாயகி ஆகிய இரண்டு மாதர்களுக்கும் இன்பம் உண்டாக,

அன்பின் அணையும் என்றும் இளைய பெருமாளே --- அன்புடன் அணைகின்ற, என்றும் இளம்பூரணராக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய --- பிள்ளைகள், இனிய தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி,

வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன்கை அதனில் உறு பாசம் தந்து வளைய --- வஞ்சத்தைக் காட்டும் கண்களையும் விஞ்சும்படியாக விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை அடியேனை வளைக்க வீச, (அந்த வேளையில்)

புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போமுன் --- எனது புத்தியும், அறிவும் ஒருவழிப்பட்டுத் தங்காமல் நடுங்கி  எனது உயிர் உடலை விட்டு நீங்கும் முன்பாக,

தம்ப(ம்) உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே --- பற்றுக்கோடாகத் தேவரீரது அழகிய திருவடிகளைத் தந்து கருணை புரியவேண்டும்.

பொழிப்புரை

குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த வள்ளிமலையில் இருந்த வள்ளிநாயகியை அணைந்த மணவாளரே!

நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போர் புரிந்தவரே!

பிறைச்சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவரும், தேவரீருக்கு என்றும் இனியவராய் உள்ள தேவயானை, வள்ளிநாயகி ஆகிய இரண்டு மாதர்களுக்கும் இன்பம் உண்டாக அன்புடன் அணைகின்ற, என்றும் இளம்பூரணராக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

பிள்ளைகள், இனிய தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி, வஞ்சத்தைக் காட்டும் கண்களையும் விஞ்சும்படியாக விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை அடியேனை வளைக்க வீச, அந்த வேளையில் எனது புத்தியும், அறிவும் ஒருவழிப்பட்டுத் தங்காமல் நடுங்கி  எனது உயிர் உடலை விட்டு நீங்கும் முன்பாக, பற்றுக்கோடாகத் தேவரீரது அழகிய திருவடிகளைத் தந்து கருணை புரியவேண்டும்.


விரிவுரை


மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய...... செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே ---

உயிர் பிரிந்தவுடன் செல்வமும் வீடும் மனைவி மக்களும் நமக்கு அயலாகி விடுகின்றன. வாழ்நாள் முழுவதும் இரவு பகலாக உழைத்தும், அறநெறி நீங்கியும் தேடிச் செல்வத்தைச் சேமித்து வைக்கின்றார்கள். 

அதி அற்புதமாக மாளிகையைப் புதுக்குகின்றார்கள். மனைவி மக்கள் பொருட்டே உழைக்கின்றார்கள். அப்படிப் பாடுபட்ட ஒருவன் ஒரு கணத்தில் மாள்கின்றான். மாண்டவன் எதிர் வீட்டில் ஒரு வண்டி இழுக்கின்றவனுக்கு மகனாகப் பிறக்கின்றான். பிறந்த அவனுக்குத் தான் தேடிய பொன்னும் புதுக்கிய மாளிகையும், அருமையாகத் தொகுத்து வைத்த பொருள்களும் சொந்தம் என்று சொல்ல முடியாது. இது என் வீடு,  இவள் என் மனைவி, இவன் என் மகன் என்று கூறினால் அவனுக்கு உதைதான் கிடைக்கும். ஒரு விநாடியில் அத்தனையும் அயலாகி விடுகின்றன. இதனை அறியாது, மாந்தர் மதியிழந்து கதியிழந்து உழல்கின்றார்கள். 

வாழ்நாள் முடிவில் உயிரைப் பறித்துச் செல்லக் காத்து இருக்கும் இயமன் வந்து தனது வலிய கையில் உள்ள பாசத்தை வீசி எறிந்து நிற்பான். புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்து நிற்கின்ற அந்த வேளையில், இறைவன் திருக்காட்சி கொடுத்து அருள் புரிய வேண்டுகின்றார் அடிகளார்.


தமமரும் அமரும் மனையும் இனிய 

தனமும் அரசும்       அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு 

தலையை வளைய  எறியாதே”   --- திருப்புகழ்.


இல்லும் பொருளும் இருந்த மனை அளவே,

சொல்லும் அயலார் துடிப்பு அளவே - நல்ல

கிளை குளத்து நீர் அளவே, கிற்றியே, நெஞ்சே!

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.       --- ஐயடிகள் காடவர்கோன் நாயனார்


தம்பம் ---

பற்றுக்கோடு.


கருத்துரை

முருகா! திருவடியைத் தந்து அருள்.


நல்லதைச் செய்ய நாள் பார்க்க வேண்டாம்

 


நல்லதைச் செய்ய நாள் பார்க்கவேண்டாம்.

-----

அறச் செயலைச் செய்ய ஒருவனுக்கு வாய்ப்பு வருமானால் சற்றும் சிந்திக்காமல் உடனே செய்ய முனைய வேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்று எண்ணினால், நாளைக்கு நாம் இருப்போமா என்பது உறுதியில்லை. இன்றைய பொழுதுதான் நம்முடையது. இயமன் இன்று வருவானா, நாளைக்கே வருவானா தெரியாது. இந்த உடம்பும் உலகப் பொருள்களும் நிலையாமையை உடையன. எனவே, நிலையற்ற உடம்பு உள்ளபோதே, நிலையான அறத்தை ஒருவன் செய்துகொள்வதே அறிவுடைமை ஆகும்.

"கபிலர் அகவல்" கூறும் அறிவுரையைக் காண்போம்.

"நான்முகன் படைத்த நானாவகை உலகில்

ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்,

ஆண் முதிதோ? பெண் முதிதோ? அன்றி அலி முதிதோ?

நாள் முதிதோ? கோள் முதிதோ? 

நல்வினை முதிதோ? தீவினை முதிதோ?

செல்வம் சிறப்போ? கல்வி சிறப்போ? 

அல்லது, உலகில் அறிவு சிறப்போ?


தொல்லை மாஞாலம் தோற்றமோ? படைப்போ?

எல்லாப் பிறப்பும் இயற்கையோ? செயற்கையோ?

காலத்தால் சாவரோ? பொய்ச் சாவு சாவரோ?

நஞ்சுஉறு தீவினை துஞ்சுமோ? துஞ்சாதோ?

துஞ்சும்போது, அந்தப் பஞ்சேந்திரியம்


என் செயா நிற்குமோ? எவ்விடத்து ஏகுமோ?

ஆற்றல் உடையீர்! அருந்தவம் புரிந்தால்

வேற்று உடம்பு ஆகுமோ? தமது உடம்பு ஆகுமோ?

உண்டியை உண்குவது உடலோ? உயிரோ?

கண்டு இன்புறுவது கண்ணோ? கருத்தோ?"

இதன் பொருள் ---

நான்கு திருமுகங்களை உடைய பிரமதேவனால் படைக்கப்பட்ட பல வகையான உலங்களில், நிறைந்த சிறப்பினை உடைய அருமையான பொருளை ஆராய்ந்து அறிந்து சொல்லப் புகுந்தால், ஆண் பிறப்பு உயர்ந்ததோ? பெண் பிறப்பு உயர்ந்ததோ?  ஆணும் பெண்ணும் அல்லாத பேடிப் பிறப்பு உயர்ந்ததோ?  பிறந்த நாள் உயர்ந்ததோ? கிரகங்கள் உயர்ந்தனவோ,?  செய்த புண்ணியச் செயல்கள் உயர்ந்தனவோ? செய்த பாவச்செயல்கள் உயர்ந்தனவோ? ஈட்டிய செல்வம் உயர்ந்ததோ? கற்ற கல்வியால் பெற்ற அறிவு உயர்ந்ததோ? அல்லது இந்த உலகில் பெற்ற அனுபவ அறிவு உயர்ந்ததோ? பழமையான இந்த உலகமானது இயற்கையாகத் தோன்றியதா? அல்லது நான்முகனால் படைக்கப்பட்டதா? உலகத்தில் தோன்றும் எல்லாமும் இயற்கையாகவே உண்டாயினவா? அல்லது செயற்கையாக உண்டாக்கப்பட்டனவா? மனிதர்கள் அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் அழிந்து போவார்களோ? அல்லது உடல் மட்டும் அழிவதான பொய்யான சாவினை அடைவார்களோ?விடத்தைப் போன்ற கொடுமை வாய்ந்த தீவினைகளானவை, நல்வினைகளைச் செய்வதனால் ஒழியுமோ? ஒழியாமல் நிற்குமோ? தூங்குகின்ற போது அந்த ஐந்து ஞானேந்திரியங்களுக்கு இடமான கன்மேந்திரியங்கள் ஐந்தும் என்ன செய்யுமோ? எந்த இடத்தில் செல்லுமோ? தவத்தைப் புரிதலில் ஆற்றல் மிகுந்தவர்களே! செய்வதற்கு அருமையான தவத்தைப் புரிந்தால், இந்த மனித உடம்பு போய் வேறு உடம்பு ஆகுமோ? அல்லது இந்த மனித உடம்பே நிலைக்குமோ? உணவை உண்பது இந்த உடலா? அல்லது உடம்பிலே உறையும் உயிரா? பொருள்களைக் கண்டு இன்பத்தை அடைவது உடம்பில் பொருந்தி உள்ள கண்ணா? அல்லது மனமா?


"உலகத்திரே! உலகத்தீரே! 

நாக்கடிப்பாக வாய்ப்பறை அறைந்து

சாற்றக் கேண்மின், சாற்றக் கேண்மின்,

மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;

ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;

எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;"

இதன் பொருள் ---

இந்த உலகில் வாழ்பவர்களே! நாவில் தழும்பு உண்டாகும்படி, வாயால் பறையை முழக்குவது போல, நான் சொல்தைச் செவி மடுப்பீர்களாக. பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும். பொருந்தி வந்த இளமைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும், வாலிபப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும்.  ஆக, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே,


"அவற்றுள்

இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று

துன்புறு நாளும் சிலவே, ஆதலால்

பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று

இடிகரை ஒத்தது இளமை,

இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்

ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்

நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்

இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

            

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்

நாளை நாளை என்பீர் ஆகில், நாளை

நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!


எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்,

அப்போது அந்தக் கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான், பொருள்தரப் போகான்,

சாற்றவும் போகான், தமரொடும் போகான்,

நல்லார் என்னான், நல்குரவு அறியான்,

தீயார் என்னான், செல்வர் என்று உன்னான்,


தரியான் ஒருகணம் தறுகணாளன்,

உயிர்கொடு போவான், உடல்கொடு போகான்,

ஏதுக்கு அழுவீர்? ஏழை மாந்தர்காள்!

உயிரினை இழந்தோ? உடலினை இழந்தோ?

உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீர் ஆகில்


உயிரினை அன்றும் காணீர்! இன்றும் காணீர்!

உடலினை அன்றும் கண்டீர்! இன்றும் கண்டீர்!"

இதன் பொருள் ---

அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும், மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே. அதுவும் அல்லாமல், துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே. தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும். நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை. செல்வத்தோடு இருந்து நீங்கள் வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும். ஆகையினாலே, நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலும் நன்மையைத் தரும் அறச் செயலாகவே செய்ய வேண்டும்,  அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும். அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும். அந்தப் பொழுதையும் நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால், நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள்தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.  நாளை என்கின்ற அந்த நாள்,  நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது,

எந்த சமயத்திலும் உயிரைக் கொண்டு போக, கூற்றுவன் என்பான் வருவான். அந்த சமயத்தில், அந்தக் கூற்றுவன் ஆனவன், தன்னைப் புகழ்ந்து துதித்தாலும் போகமாட்டான்.  வேண்டிய பொருளைத் தருகின்றோம், விட்டுவிடு என்று மிக்க பொருளைக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக் கொண்டு போகமாட்டான். உபசாரமான சொற்களைக் கூறினாலும் வந்த வேலையை விட்டுப் போகமாட்டான். நமது சுற்றத்தார்களை நாளடைவில் அவன் பிடித்துச் சென்று இருந்தாலும், நம்மை மட்டுமாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகாது, ஆகையினால், நமது சுற்றத்தாரைப் பிடித்துச் செல்வதோடு போய்விட மாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் நல்லவர் என்று பார்க்கமாட்டான். தன்னால் பிடிக்கப்படுபவர் வறுமையில் உள்ளவராயிற்றே என்பதையும் உணர மாட்டான். தன்னால் கொண்டு செல்ல உள்ளவர் தீயவர் என்று கருதி விரைந்து கொண்டு போகமாட்டான். மிகுந்த செல்வம் படைத்தவர் என்று விட்டுவிட மாட்டான்.

ஒருவனுடைய வாழ்நாள் முடிந்துவிட்டால், ஒரு கணப் பொழுதும் தாமதிக்கமாட்டான். அவன் அஞ்சாநெஞ்சம் படைத்தவன். உயிரைத் தன்னோடு கொண்டு போவான். உடம்பைக் கொண்டு போக மாட்டான். (அது அவனுக்குத் தேவேயற்றது)

(மேற்சொன்னவாறு அறத்தைச் செய்யாது இருந்து வாழ்நாளை வீணாக்கிவிட்டு, நீங்கள் நிலைத்திருக்கும் என்ற கருதி இருந்த உடலை விட்டு விட்டு, உயிரைக் கொண்டு போன மாத்திரத்திலேயே நீங்கள் எதையோ இழந்து விட்டதாக எண்ணி)

அறிவுற்ற மனிதர்களே! நீங்கள் எதற்கு அழுவீர்கள்? உயிரை இழந்தது கருதி அழுவீர்களா? உடம்பை இழந்தது கருதி அழுவீர்களா? உயிரை இழந்து விட்டது கருதி அழுகின்றோம் என்று நீங்கள் சொல்வீர்களானால், உயிர் எப்படி இருக்கிறது என்பதை அன்றும் நீங்கள் கண்டீர்கள் இல்லை, இன்றும் நீங்கள் காணவில்லை. அழியாது எப்போதும் நிலைத்து இருக்கும் என்று கருதிப் போற்றிய உடம்பானது உயிர் நீங்கின உடனே அழிந்து போகின்றது. அதனை முன்னரும் பார்த்தீர்கள்.  இப்போதும் பார்க்கின்றீர்கள்.


"உயிரினை இழந்த உடல் அதுதன்னைக்

களவு கொண்ட கள்வனைப் போலக்

காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து கோவணம் கொளுவி

ஈமத் தீயை எரி எழமூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனல் இடைமூழ்கிப்

போய், தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப்படுமோ? சதுர் எனப்படுமோ?"

இதன் பொருள் ---

உயிர் நீங்கிய உடம்பினைத் திருட்டுத் தொழிலை மேற்கொண்ட திருடனைக் கட்டுவது போல, இருகால்களையும் இரு கைகளையும் சேர்த்துக் கட்டி, அவனது ஆடைகளைக் களைந்து, கோவணத்தையும் நீக்கி, சுடுகாட்டு நெருப்பை மூட்டி, உடம்பு சாம்பல் ஆகும்படி சுட்டுப் பொசுக்கி, நீரிலே முழுகி எழுந்து போய், சுற்றத்தார்களோடும் கூடி, அறிவு கலங்கி அழுவது, அறியாமை என்று சொல்லப்படுமோ?  அறிவுடைமை என்று சொல்லப்படுமோ?


"மணிமேகலை" என்னும் காப்பியம் அறிவுறுத்துவதைக் காண்போம்....

"தவத்துறை மாக்கள், மிகப் பெரும் செல்வர்,

ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்,

முதியோர் என்னான், இளையோர் என்னான்,

கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப, இவ்

அழல்வாய் சுடலை தின்னக் கண்டும்,

கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து

மிக்க நல்லறம் விரும்பாது வாழும்

மக்களில் சிறந்த மடவார் உண்டோ?

இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா,

வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா,

புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்,

மிக்க நல்லறமே விழுத்துணை ஆவது"

இதன் பொருள் ---

தவநெறியில் செல்லும் துறவியர், மிக்க பெருஞ் செல்வம் உடையோர்,  ஈன்ற அணிமையைய உடைய இளமகளிர், ஆற்றாத இளஞ்சிறார் என்று வேறுபாடு கருதாமலுப், ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும்,  இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலை உடைய காலன் கொன்று குவிப்ப, அழல் வாயினையுடைய சுடலையானது இந்த உடலைத் தின்னக் கண்டும், மிக்க பெருஞ்செல்வம் என்னும் கள்ளை உண்டு களித்து விளையாடுதலைச் செய்து,  மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற மக்களிலும் சிறந்த அறிவிலிகள் உளரோ? இளமையும் நிலை பெறாது. உடம்பும் நிலைபெறாது. வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது. தேவர் உலகத்தைப் புதல்வராலும் பெற இயலாது.  எவற்றினும் மேம்பட்ட அறமே சிறந்த துணை ஆகுவது.

ஆகவே, உடம்புடன் வாழும் காலத்திலேயே அறச் செயல்களைச் செய்து உயிருக்கு உறுதியைத் தேடிக் கொள்ள வேண்டும்.

உயிர் விடும் காலத்தில் ஒருவன் தன்னோடு கொண்டு செல்லவேண்டும் என்று எண்ணினால் அது அவன் செய்த புண்ணியம் மட்டுமே. உறவினர் யாரும் கூட வரமாட்டார்கள். தேடிய செல்வமும் உடன் வராது. ஆகவே,  உடன் வருகின்ற அறத்தைச் செய்தாக வேண்டும். "தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க" என்று "நான்மணிக் கடிகை" என்னும் நூல் வலியுறுத்துகிறது.


"ஈட்டிய ஒண்பொருளும் இல்ஒழியும், சுற்றத்தார்

காட்டுவாய் நேரே கலுழ்ந்து ஒழிவர், -- மூட்டும்

எரியின் உடம்பு ஒழியும் ஈர்ங்குன்ற நாட!

தெரியின் அறமே துணை."  ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

குளிர்ந்த மலைநாட்டுக்கு அரசே! தேடிய சிறந்த செல்வமும் மனையிலேயே நின்றுவிடும். உறவினர் சுடுகாட்டு வரை கூடவே அழுதுகொண்டு வந்து நீங்குவர்.  மூட்டப்படுகின்ற நெருப்பால் உடல் அழியும்.  ஆராயின், ஒருவனுக்கு துணையாவது அறமே ஆகும்.


"பெருங்கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன்

ஓசை அவிந்தபின் ஆடுதும் என்ற அற்றால்,

இற்செய் குறைவினை நீக்கி, அறவினை

மற்று அறிவாம் என்று இருப்பார் மாண்பு." --- நாலடியார்.

இதன் பொருள் ---

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய குறைகளைச் செய்து தீர்த்து, பின்னர் அறச்செயல்களைப் பின்பு கருதுவோம் என்று காலத்தை எதிர்நோக்கி இருப்பாரது இழிதகைமை,  பெரிய கடலில் நீராடுதற்குச் சென்றவர், முழுதும் ஒருசேர அலையொலி அடங்கிய பின் நீராடுவோம் என்று கருதினாற் போன்றது.

வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அறத்தினை இயற்றலாம் என்பது நடவாது. நடவாதது ஒன்றை நினைவது பேதைமையின் இயல்பு.


"மற்று அறிவாம் நல்வினை, யாம்இளையம் என்னாது,

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம்செய்ம்மின்;

முற்றி இருந்த கனி ஒழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு." ---  நாலடியார்.

இதன் பொருள் ---

நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம்.  இப்போது நாம் இளமைப் பருவத்தைக் கொண்டு இருக்கிறோம் என்று கருதாமல்,  கையில் பொருள் உண்டான பொழுதே, ஒளியாமல் அறம் செய்யுங்கள். ஏனென்றால், பழுத்திருந்த பழங்களே அல்லாமல்,  கோடைக் காற்றினால்,  வலிய காய்களும் மரங்களிலிருந்து உதிர்ந்து விழுதல் உண்டு.

மூத்தோரே அல்லாமல் இளையோரும் திடும் என இறந்துபோதல் உண்டு. இளமை இன்பங்களை நுகர்தற்கு, இப்போது பொருள் தேவை. முதுமை வந்தபோது, அறம் செய்யலாம் என்று இருத்தல் கூடாது. கையில் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும்.


"ஆள் பார்த்து உழலும் அருள்இல் கூற்று உண்மையால்,

தோட்கோப்புக் காலத்தால் கொண்டு உய்ம்மின், - பீட்பிதுக்கிப்

பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்

கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, அதே வேலையாகத் திரிகின்ற இரக்கம் இல்லாத கூற்றுவன்  ஒருவன் இருக்கின்றான். ஆதலால்,  மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை இளமையாகிய தக்க காலத்திலேயே உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள். முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, தாய் அலறி அழும்படி குழந்தையின் உயிரைக் கொள்ளுதலால்,  அக்கூற்றுவனது கடுமையை நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது.

இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் இருக்கின்றான் என்னும் உண்மையால், இளமை நிலையாமை விளங்கும். இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை உடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும்.


"காலைச் செய்வோம் என்று அறத்தைக் கடைப்பிடித்து

சாலச் செய்தவரே தலைப்படுவார், ---  மாலைக்

கிடந்தான் எழுதல் அரிதால், மற்று என்கொல்,

அறம் காலைச் செய்யாதவாறு." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

அறச் செயல்களை இளமைப் பருவத்திலேயே செய்வோம் என்று உறுதியாகக் கருதி, நிரம்பச் செய்பவரே உயர்ந்தோர் ஆவர். இரவில் படுத்தவன் மறுநாள் காலையில் எழுந்திருப்பது உலகத்தில் அருமையாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து இருந்தும், இளமைப் பருவத்திலேயே அறத்தினைச் செய்யாது இருப்பது. இது, அறிவுடைமை ஆகாது, அறியாமையே ஆகும்.


"சென்றநாள் எல்லாம் சிறுவிரல் வைத்து எண்ணலாம்

நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது -- என்றுஒருவன்

நன்மை புரியாது நாள்உலப்ப விட்டுஇருக்கும்

புன்மை பெரிது புறம்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

வாழ்நாளில் சென்ற நாள்கள் எல்லாவற்றையும் சிறிய விரல்களைக் கொண்டே, இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கின்றோம் என்று கணக்கிட்டு விடலாம். ஆனால், இனி வாழ உள்ள நாள்களை, இவ்வளவு என எண்ணி அறிய யாராலும் இயலாது. இதனை நன்கு அறிந்து இருந்தும், ஒருவன் நல்வினையை விரைந்து செய்யாமல், வாழ்நாள் வீணே கெடும்படி விட்டிருப்பதால் வரும் துன்பம், பின்னர் மிகுதியாகும்.


"மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து

பின்னை அறிவென் என்றல் பேதைமை, - தன்னைத்

துணித்தானும் தூங்காது அறஞ்செய்க, கூற்றம்

அணித்தாய் வருதலும் உண்டு." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

இளமைப் பருவம் மின்னலைப் போன்றது. அது, நிலைத்து இருக்கக் கூடியது என்று எண்ணி மகிழ்ந்து, வயதான பின்னர் அறத்தினைச் செய்வேன் என்று இருப்பது அறிவின்மையே ஆகும். எமன் இளமைப் பருவத்திலேயே உயிரைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு. ஆதலால், உடலை வருத்தி உழைத்தாவது, கால தாமதம் செய்யாமல், உயிரோடு உள்ள காலத்திலேயே அறத்தினை ஒவ்வொருவரும் செய்தல் வேண்டும்.


"பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்

பற்றின் கண் நில்லாது அறம் செய்க -- மறறு அது

பொன்றாப் புகழ்நிறுத்தி, போய்ப்பிறந்த ஊர்நாடிக்

கன்றுடைத் தாய்போல் வரும்."   ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மனமே! நீ நற்குணம் மிக்க நல்ல செயல்களைத் தவறாமல் செய்யக் கருதினால், ஆசையை விடுத்து, அறத்தினைச் செய்வாயாக. அந்த அறமானது, இந்தப் பிறப்பில் அழியாத புகழை நிலைபெறச் செய்து, மறுபிறப்பில் நீ சென்று, பிறந்த ஊரைத் தேடி, தாய்ப் பசு, தன் கன்றைத் தேடி அடைந்து பாலைக் கொடுக்க வருவது போல, தன் பயனாகிய இன்பத்தைச் சேர்க்க, உன்னிடம் விரைந்து வரும்.


"நாளைச் செய்குவம் அறம் எனில், இன்றே

கேள்வி நல் உயிர் நீங்கினும் நீங்கும்,

இது என வரைந்து வாழும் நாள் உணர்ந்தோர்

முதுநீர் உலகில் முழுவதும் இல்லை."  --- சிலப்பதிகாரம்.

இதன் பொருள் ---

அடுத்த நாளில் அறம் செய்வோம் என்று நாம் கருதினால்,,  இன்றைப் பொழுதிலேயே கேள்வி அளவே ஆன நல்ல உயிரானது விலகினும் விலகும்,  தம் வாழ்நாள் இத்துணைத்து என வரையறை செய்து அறிந்தவர் கடல்சூழ்ந்த உலகத்தின்கண் எங்கும் இல்லை.

மேற்குறித்த பாடல்களின் கருத்தை எல்லாம் உள் வைத்து, இத்தினச் சுருக்கமாகத் திருவள்ளுவ நாயனார்,

"அன்று அறிவாம் என்னாது அறம் செய்க, மற்று அது

பொன்றுங்கால், பொன்றாத் துணை".

என்னும் திருக்குறளை அருளிச் செய்து, "மற்றொரு நாள் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தைச் செய்க. மற்றபடி, அவ்வாறு செய்யப்படும் அந்த அறமானது, இறக்கும் போது அழியாத துணையாக விளங்கும்" என்றார்.







பொது --- 1073. பணிகள் பணமும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பணிகள் பணமும் (பொது)

முருகா! 

உடலை விட்டு உயிர் பிரியும்முன்பாக, 

உனது திருவடியை வழிபட்டு உய்ய அருள்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


பணிகள் பணமு மணிகொள் துகில்கள்

     பழைய அடிமை ...... யொடுமாதும்


பகரி லொருவர் வருக அரிய

     பயண மதனி ...... லுயிர்போகக்


குணமு மனமு முடைய கிளைஞர்

     குறுகி விறகி ...... லுடல்போடாக்


கொடுமை யிடுமு னடிமை யடிகள்

     குளிர மொழிவ ...... தருள்வாயே


இணையி லருணை பழநி கிழவ

     இளைய இறைவ ...... முருகோனே


எயினர் வயினின் முயலு மயிலை

     யிருகை தொழுது ...... புணர்மார்பா


அணியொ டமரர் பணிய அசுரர்

     அடைய மடிய ...... விடும்வேலா


அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


பணிகள், பணமும், அணிகொள் துகில்கள்,

     பழைய அடிமை ...... யொடு, மாதும்,


பகரில் ஒருவர் வருக அரிய

     பயணம் அதனில் ...... உயிர்போக,


குணமும் மனமும் உடைய கிளைஞர்

     குறுகி விறகில் ...... உடல்போடா,


கொடுமை இடுமுன் அடிமை அடிகள்

     குளிர மொழிவது ...... அருள்வாயே.


இணை இல் அருணை, பழநி, கிழவ!

     இளைய! இறைவ! ...... முருகோனே!


எயினர் வயினின் முயலும் மயிலை

     இருகை தொழுது ...... புணர்மார்பா!


அணியொடு அமரர் பணிய, அசுரர்

     அடைய மடிய ...... விடும்வேலா!


அறிவும், உரமும், அறமும், நிறமும்,

     அழகும் உடைய ...... பெருமாளே.

பதவுரை

இணை இல் அருணை பழநி கிழவ --- ஒப்பற்ற திருவண்ணாமலை, திருப்பழனி ஆகிய திருத்தலங்களை உரிமை உடையவர் ஆகியவரே!

இளைய இறைவ --- இளம்பூரணரே!

முருகோனே --- முருகப் பெருமானே!

எயினர் வயினின் முயலு(ம்) மயிலை இருகை தொழுது புணர் மார்பா --- வேடர்கள் இடத்தே தினைப்புனத்தைக காக்கும் தொழிலில் முயன்று இருந்த மயில் போன்ற வள்ளிநாயகியை இரு கைகளையும் கூப்பித் தொழுது, தழுவிய திருமார்பரே!

அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா --- வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே --- மெய்யறிவு, சர்வ வல்லமை,  அறநெறி,  புகழ், அழகு ஆகியவற்றை உடைய பெருமையில் மிக்கவரே!

பணிகள் பணமும் அணிகொள் துகில்கள் --- அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள்,

பழைய அடிமையொடு மாதும் பகரில் --- பழைய வேலை ஆட்கள் ஆகிய இவைக ளோடு மனைவியும் என்று சொல்லப்போனால்,

ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக ---இவர்களில் ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான இறுதிப் பயணத்தில் அடியேனது உயிர் பிரிய,

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி --- நற்குணங்களும், நல்ல மனமும் உடைய உறவினர் கூடி,

விறகில் உடல் போடாக் கொடுமை இடுமுன் --- விறகின் இடையே இந்த உடலைப் போடும் கொடுமையான செயலைச் செய்வதற்கு முன்பாக,

அடிமை --- அடியேன் 

அடிகள் குளிர மொழிவது அருள்வாயே --- தேவரீரது திருவடிகளை உள்ளம் குளிர வழிபட்டுத் துதிக்கும் அருளைத் தருவிராக.


பொழிப்புரை


ஒப்பற்ற திருவண்ணாமலை, திருப்பழனி ஆகிய திருத்தலங்களை உரிமை உடையவரே!

இளம்பூரணரே!

முருகப் பெருமானே!

வேடர்கள் இடத்தே தினைப்புனத்தைக காக்கும் தொழிலில் முயன்று இருந்த மயில் போன்ற வள்ளிநாயகியை இரு கைகளையும் கூப்பித் தொழுது, தழுவிய திருமார்பரே!

வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

மெய்யறிவு, சர்வ வல்லமை,  அறநெறி,  புகழ், அழகு ஆகியவற்றை உடைய பெருமையில் மிக்கவரே!

அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள், பழைய வேலை ஆட்கள் ஆகிய இவைகளோடு மனைவியும் என்று சொல்லப்படுகின்ற இவர்களில் ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான இறுதிப் பயணத்தில் அடியேனது உயிர் பிரிய, நற்குணங்களும், நல்ல மனமும் உடைய உறவினர் கூடி விறகின் இடையே இந்த உடலைப் போடும் கொடுமையான செயலைச் செய்வதற்கு முன்பாக, அடியேன் தேவரீரது திருவடிகளை உள்ளம் குளிர வழிபட்டுத் துதிக்கும் அருளைத் தருவிராக.

விரிவுரை

பணிகள் பணமும் அணிகொள் துகில்கள்..... ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக ---

மனித வாழ்வில் பாடுபட்டுத் தேடி வைத்த பொன்னும் பொருளும், மாடமாளிகைகளும், மனைவி மக்களும் ஆகிய எவையும், உயிர் உடலில் இருந்து பிரிந்து, தொலையாத வழிக்கு நெடும்பயணத்தை மேற்கொள்ளும் போது கூட வருவது இல்லை. இந்தப் பயணத்தை அடிகளார், பிறிதொரு திருப்புகழில் "மறலி ஊர்ப்புகும் மரண யாத்திரை" என்றார். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே, இறைவன் திருவடிகளை வழிபட்டு மெய்நிலையைப் பெறவேண்டும் என்கின்றார் அடிகளார்.


"நாளாய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம், மடநெஞ்சே! அரன்நாமம்

கேளாய், நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்

கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே."


"நீ நாளும், நன்னெஞ்சே! நினைகண்டாய், யார் அறிவார்

சா நாளும் வாழ்நாளும், சாய்க்காட்டு எம்பெருமாற்கே 

பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப

நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே நல்வினையே."


என வரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருட்பாடல்களையும்,


"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழி அம்பு ஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு

கைத் தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே!

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!"


என வரும் பட்டினத்து அடிகளார் பாடலையும்,


"நாடு நகர் மாடுவீடு நற்பொருள் எல்லாம்

நமன் வரும்போது நாடி வருமோ?

கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னோ?

கூத்தன்பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே."


என வரும் பாம்பாட்டிச் சித்தர் பாடலையும் கருத்தில் கொள்க.


மற்றபடி, இப் பாடலின் பொருள் வெளிப்படையானதுதான்.

கருத்துரை

முருகா! உடலை விட்டு உயிர் பிரியும்முன்பாக, உனது திருவடியை வழிபட்டு உய்ய அருள்.









பொது - 1072. துயரம் அறும்நின்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

துயரம் அறும்நின் (பொது)

முருகா! 

இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


துயர மறுநின் வறுமை தொலையு

     மொழியு மமிர்த ...... சுரபானம்


சுரபி குளிகை யெளிது பெறுக

     துவளு மெமது ...... பசிதீரத்


தயிரு மமுது மமையு மிடுக

     சவடி கடக ...... நெளிகாறை


தருக தகடொ டுருக எனுமி

     விரகு தவிர்வ ...... தொருநாளே


உயரு நிகரில் சிகரி மிடறு

     முடலு மவுணர் ...... நெடுமார்பும்


உருவ மகர முகர திமிர

     வுததி யுதர ...... மதுபீற


அயரு மமரர் சரண நிகள

     முறிய எறியு ...... மயில்வீரா


அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


துயரம் அறும், நின் வறுமை தொலையும்,

     மொழியும் அமிர்த ...... சுரபானம்,


சுரபி குளிகை எளிது பெறுக,

     துவளும் எமது ...... பசிதீர,


தயிரும் அமுதும் அமையும் இடுக,

     சவடி கடகம் ...... நெளிகாறை


தருக தகடொடு உருக எனும், இவ்

     விரகு தவிர்வது ...... ஒருநாளே?


உயரும் நிகர்இல் சிகரி மிடறும்,

     உடலுமு, அவுணர் ...... நெடுமார்பும்


உருவ, மகர முகர திமிர

     உததி உதரம் ...... அதுபீற,


அயரும் அமரர் சரண நிகளம்

     முறிய எறியும் ...... மயில்வீரா!


அறிவும் உரமும் அறமும் நிறமும்

     அழகும் உடைய ...... பெருமாளே.

பதவுரை

உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் உருவ --- உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக,

மகர முகர திமிர உததி உதரம் அது பீற --- மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும்,

அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா --- சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய பெருமாளே --- ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

துயரம் அறு(ம்) --- உனது துன்பம் ஒழியும், 

நின் வறுமை தொலையும் --- உனது வறுமை நீங்கும்.

மொழியும் அமிர்த சுரபானம் --- தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம்,

சுரபி --- காமதேனு, (ஆகியவற்றை நீ எளிதில் பெறலாம்)

குளிகை எளிது பெறுக --- மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக.

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் --- வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  

இடுக --- அதை எமக்கு இடுக.

சவடி --- பொன்னால் ஆன சரடு,

நெளி --- விரலில் அணியும் வளைந்த மோதிரம்,

காறை --- கழுத்து அணிகலம், 

தருக தகடொடு உறுக --- ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுக.

எனும் --- என்று சொல்லுகின்ற, (இரசவாதிகளின்)

இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே --- சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

                                                                  பொழிப்புரை

உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும், சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

உனது துன்பம் ஒழியும். உனது வறுமை நீங்கும். தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம், காமதேனு, ஆகியவற்றை நீ எளிதில் பெரலாம். மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக. வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  அதை எமக்கு இடுவாயாக. பொன்னால் ஆன சரடு, விரலில் அணியும் வளைந்த மோதிரம், கழுத்து அணிகலம், ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுவாயாக என்று சொல்லுகின்ற இரசவாதிகளின் சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

விரிவுரை

துயரம் அறும், நின் வறுமை தொலையும்.....விரகு தவிர்வதும் ஒரு நாளே --- 

உலகத்தில் துன்பப்படுகின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை. துன்பம் என்பது அவரவர் முன்செய்த வினையின்படிக்கு இறையருளால் வந்து சேர்வது. அப்படியே, வறுமை நிலையில் உள்ளவர்களும் இல்லாமல் இல்லை. அதுவும் அவரவர் முன்செய்த வினையின்படிக்கு வந்து சேர்வது. ஆசையே பிறவிக்கு வித்து. ஆசை இருக்கின்ற வரையில் வறுமையும் துன்பமும் இருக்கத்தான் செய்யும். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, அல்கா நல்குரவு அவா எனப்படுமே" என்பது குமரகுருபர அடிகளார் அருள்வாக்கு. உள்ளது போதும் என்று மனநிறைவு கொள்ளாதவர்கள், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று அலைவார்கள். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயானார். "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்றார் திருமூல நாயனார்.

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி

  ஆளினும், கடல்மீதிலே

ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக

        அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;

        நெடுநாள் இருந்தபேரும்

நிலை ஆகவே இன்னுங் காயகற்பம் தேடி

        நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

        உறங்குவதும் ஆகமுடியும்;

உள்ளதே போதும்; நான் நான்எனக் குளறியே

        ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்

பாசக் கடற்கு உ(ள்)ளே வீழாமல், மனது அற்ற

        பரிசுத்த நிலையை அருள்வாய்;

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகி்ன்ற

        பரிபூரண ஆனந்தமே."

என்கிறார் தாயுமான அடிகளார்.

ஆரா இயற்கை அவா என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. எப்போதும் நிறைவு பெறாதது ஆசையே. அதற்கு ஒரு வரம்பு இல்லை. "ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே" என்பது ஒன்பதாம் திருமுறையில் வரும் அருள்வாக்கு. எனவே, ஆசைக்கு எங்கும் ஒரு வரம்பு என்பது இல்லை. இந்த நிலவுலகம் அனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், ஆளுகின்ற வேந்தனின் எண்ணமானது, கடல் நடுவிலே காணப்படுகின்ற தீவுகள் அனைத்தையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதில் இருக்கும். கடலையும் தனது ஆணைக்கீழ் கொண்டு வந்து விட்டாலும், அளகேசன் என்னும் குபேரனுக்கு நிகராக பொன்னும் பொருளும் படைத்து இருந்தாலும், மேலும் மேலும் பொருளைக் குவிக்க எண்ணி, செம்பு முதலிய பொருள்களைப் பொன்னாக மாற்றும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்து அலைந்து வாடுவர். இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாது அனுபவித்து வாழ்ந்தவரும் கூட  மனநிறைவு எய்தாது இன்னும் என்றும் அழியாமல் உடம்போடு நெடுங்காலம் வாழவேண்டும் என்னும் ஆசையால் காயகற்பம் என்னும் மருந்தைத் தேடி அலைந்து, மனம் புண்ணாகி வருந்துவர். எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது, வயிற்றுப் பசி தீர உண்பதற்கும், காம இன்பத்தில் திளைத்து இருந்து, அதனால் உண்டான உடல் இளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதற்கும் ஆகவே முடியும். வினைக்கு ஈடாகவே எதுவும் கிடைக்கும் என்று எண்ணி, உள்ளதே போதும் என்று மனநிறைவு கொள்ளாமல், ஆணவ முனைப்பினால், ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி அலைகின்ற நிலையே எஞ்சி இருக்கும். ஆசைக் கடலில் விழுந்து அல்லல் படாமல், மனம் அடங்கி நின்றால் எல்லை இல்லாத இன்பம் வந்து சேரும். இறையருளால் மட்டுமே அப்படிப்பட்ட மனநிலை வாய்க்கும்.

"அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?

தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே."

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.

இறையடியார்களைத் துன்பமோ வறுமையோ வறுத்தாது. அருள் உள்ளம் கொண்டோர்க்கு இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் ஒரு துன்பமும் உண்டாகாது என்பதைக் காட்ட, "அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

என்னதான் அறிவு நூல்களைப் படித்தாலும், கற்றவர்பால் கேட்டாலும், மனம் அடங்காதவர்கள் உள்ளது உலக இயல்பு. அப்படிப்பட்டவர்களின் அறிவை மயக்கி, தமது வறுமையைத் தீர்த்துக் கொள்ள எண்ணுகின்றவர்கள் இல்லாமல் இல்லை. 

தாயத்து முதலானவைகளைக் கொண்டு, இது இருந்தால் அள்ளபரிய செல்வம் சேரும், பொன்னும் பொருளும் குவிந்து கொண்டே இருக்கும் என்று சொல்லி, ஆசை வயபட்டவர்களின் அறிவை மயக்கி, வயிற்றுப் பிழைப்புக்காக அலைகின்றவர்கள் நிலையை இந்தப் பாடலில் அருணகிரிநாதர் விளக்கிக் காட்டி அருளுகின்றார்.

தேவாமிர்தம், காமதேனு, பொன் முதலியவை கிடைக்கு என்று சொல்லி குளிகையை விற்று வயிறு வளர்ப்பவர்கள், தாமே அந்தக் குளிகையை வைத்துக் கொண்டு ஏன் சுகமாக வாழமுடியாது? குளிகையை விற்றுத்தான் வயிற வளர்க்க வேண்டுமா?

        அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு என்னும் தொகுப்பில், "சித்து வகுப்பு" ஒன்று. அதில், எமக்குப் பச்சிலை முதலியவைகளைக் கொண்டு இரசவாதம் செய்யத் தெரியும். உன்னிடம் இருக்கும் பழைய நகை வகைகள், பித்தளை சாமான், பணம் முதலிய எல்லாவற்றையும்  கொண்டு  வந்து என்னிடம் தருக.  நான் என் இரசவாத சக்தியால் வெகுகோடி பொன் உண்டாக்கி உனக்குத் தருவேன்.  அது கொண்டு ஏழுநிலை மாடவீடு நீ கட்டிக் கொள்ளலாம். நான் பார்வதி கலியான தினத்தன்றுதான் உணவு கொண்டேன். இப்போது எனது பசி தீர அமுது படை. நல்ல கறிகாய், நிரம்ப நெய், பொரியல், பால், தேன், கறி வகை, பழ வகை, வெற்றிலை பாக்கு இவையெலாம் எமக்குக் கொடு. நீ சுகமாய் இரு" என இரசவாதி கூறுவதாக வருகின்றது.

        பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில், "வரதா! மணி நீ என ஓரில் வருகாது (எது). எதுதான் அதில் வாராது, இரத ஆதிகளால் நவலோகம் இடவே கரி ஆம். இதில் ஏது" என்று அடிகளார் பாடி உள்ளதை இங்கே கருத்தில் கொள்ளுதல் நலம். எல்லா வரங்களையும் எண்ணியவாறு வழங்குகின்ற வரதராக உள்ள முருகப் பெருமானே எண்ணியவற்றைத் தருகின்ற சிந்தாமணி போன்றவர் என்று ஆராய்ந்து, அரவது திருவடியில் அன்பு செய்தால் எப்பொருள்தான் கிடைக்காது? எல்லாம் கிடைக்கும். இதனை அறியாமல், நவலோகங்களையும் நெருப்பில் இட்டு ஊதி இரசவாதம் செய்து அலைவதனால் கரிதான் மிஞ்சுமே அல்லாது, அதனால் அடையும் பயன் வேறு ஒன்றுமில்லை என்பது இப்பாடலின் கருத்து.

பொன் பொருள் மீது ஆசை வைத்து இரசவாத வித்தைகளைச் செய்து மேலும் பொன்னுனையும் பொருளையும் குவிப்பதற்காக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து, இரசவாதம் செய்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பொய்யர்களை, வேடதாரிகளை நாடி, உள்ள பொருளையும் அவர்களிடத்தில் தொலைத்து வருந்துவது கூடாது. இறைவனே பெரும் சித்தன். அவனது அருட்புகழைப் பாடி வழுத்துவதன் மூலம் எல்லா நலங்களையும் பெறலாம் என்கிறார் அருணகிரிநாதர், தாம் அருளிய சித்து வகுப்பில்.....


"மிடைதரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக

விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை

விரவு மணநாறு பாதார விந்த

விதரண விநோத மாதாவின் மைந்தன்,

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்

தான வாரிதி சரவண சம்பவன்,  

விகிர்தி வேதனன், மவுன சுகாதனன்,

அகில காரணன், அகில கலாதரன்,

விகசித சுந்தர சந்தன பாளித

ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி 

வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம்

மேவுறு குறமகள் மேவும் திண்புயன், 

விரிகடல் துகள்எழ வெகுளி விக்ரமன்.

அரிதிரு மருமகன், அறுமு கத்தவன்,

வெட்சி கொண்ட தோளன், வெற்புஊடுஉற

விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்,

வெருவு நக்கீரர் சரண்என வந்துஅருள்

முருகன், நிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன

மேதகு புராணவேத அங்குரன்,

ஓதரிய மோன ஞானஅங்குரன், 

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட

அகத்திய முநிக்குஒரு தமிழ்த்ரயம் உரைத்தவன், 

வேத மூர்த்தி, திருத்தணி வெற்புஉறை

சோதி, கார்த்திகை பெற்ற விளக்குஒளி,   

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற

விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி,

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்,

விகட அசுரேசர் சாமோது சண்டன்,

மேக வாகன மிகுமத வெண்கய

பாக சாதனன் நகரி புரந்தவன்,  

விபுத தாரகன், விபுத திவாகரன்,

விபுத தேசிகன், விபுத சிகாமணி, 

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்,

அபிநவ கந்தன், அடைந்தவர் தாபரன், 

மேருவை இடிபட மோதும் சங்க்ரம

தாரகன், மகுட விபாடன், புங்கவன், 

வெயில்உமிழ் கொடியொடு வினை முகத்தினில்

மயில்மிசை வரும்ஒரு வரதன், நிர்ப்பயன்,  

வித்தகன், சுவாமி, நிர்ப்பாவகன்,

சத்தியன், ப்ரதாப வித்யாதரன், 

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்,

நிருத நிட்டூரன், நிருதர் பயங்கரன், 

வீரமத லோக வேள் காங்கெயன்,

சூர ரண சூர சூராந்தகன், 

வினைப்பகை அறுப்பவன், நினைத்தது முடிப்பவன்,

மனத்துயர் கெடுத்துஎனை வளர்த்து அருள் க்ருபைக்கடல், 

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்

சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே. --- சித்துவகுப்பு.

எனவே, நம்முடைய ஆசைகளையே முதலாக வைத்து, அடியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு, ஒரு துன்பமும் இல்லாமல், உழைக்காமல், எளிதாக வயிறு வளர்க்கின்றவர்களிடத்தில் ஏமாறாமல், இறைவன் அருட்புகழை ஓதியே எல்லா நலமும் பெறலாம் என்பது அடிகளார் கருத்து. சாமியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு மக்களை வெருட்டிப் பணம் பறிக்கும் வேடதாரிகளிடம் மயங்காமல், அவர்களின் சூழ்ச்சி மொழிகளில் இருந்து தப்பிக்க இறைவன் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.

கருத்துரை

முருகா! இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.






பொது --- 1077. புரக்க வந்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் புரக்க வந்த (பொது) முருகா!  உமது திருப்புகழைப் பாடி உய்ய அருள். தனத்த தந்தனம் தனத்த தந்தனம்      தனத்த த...