கருணை மதம் பொழியும் யானை

கருணை மதம் பொழியும் யானை

-----


சிவனுடைய கோயிலிலே இரண்டு யானைகள் இருக்கும். ஒன்று அசையும் யானை. மற்றொன்று அசையாத யானை. அசையும் யானை இல்லை என்றாலும், அசையாத யானை இல்லாத கோயில் இராது. அசையும் யானை மதம் கொள்ளும்.  துதிக்கையாகிய ஒரே கை அதற்கு உள்ளது. அசையாத யானையானது, மதத்தை அழிப்பது; ஐந்து கைகளை உடையது. அசையும் யானை விலங்கு வகையைச் சேர்ந்தது. அசையாத யானை கடவுள் வரிசையைச் சேர்ந்தது. மூத்த பிள்ளையார் என்றும் கணபதி என்றும் போற்றப்படும் ஆனைமுகக் கடவுளே அந்த யானை. 

சைவர்கள் மூத்தபிள்ளையாரை வணங்கிய பிறகே எந்தக் காரியத்தையும் தொடங்குவது வழக்கம். சைவ நூலாசிரியர்களை மூத்தபிள்ளையாருக்குத் துதியினைப் பாடிய பின்பே நூலைப் பாடுவார்கள். மூத்தபிள்ளையாருடைய துதிகளாகப் பாடியவர்களின் ஆற்றலுக்கும், கற்பனைக்கும் ஏற்றபடி தமிழில் பல பாடல்கள் அமைந்து உள்ளன. 

திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர், விநாயகரைச் சித்திவேழம் என்று பாடுகிறார். விநாயகருக்கு யானைமுகம் மட்டுமே உண்டு. யானைக்கு உரிய உடம்பு இல்லை. ஆனாலும், அவரை யானை என்றும், வேழம் என்றும் பாடுவது வழக்கமாக உள்ளது. அந்த விநாயகரை யானை என்று சொல்வதோடு, யானை கட்டும் கூடம், அதைக் கட்டும் தறி, சங்கிலி, அதற்கு இடும் கவளம் ஆகியவற்றையும் வைத்துப் பாடுகிறார். இந்த யானையானது உலகத்தில் உள்ள பிற யானையைப் போல, மனிதன் கட்டிய பெரிய கூடத்தில் வளர்வது அல்ல. மற்ற யானைகளை விட இது மிகப் பெரிய யானைதான். ஆனாலும், மிகச் சிறிய இடத்திலும் நுழைந்து கொள்ளும். இதற்குப் புதிதாக ஒரு கூடத்தை அமைக்க வேண்டுவது இல்லை. எவ்வளவு சிறியதானாலும், நாம் இருக்கிற இடத்தைக் கொடுத்தாலே போதும். அடியவர்கள் தம்மிடம் உள்ள சிறிய இடத்தில் இந்த யானையைக் கட்டிப் போடுகிறார்கள். அந்தக் கூடம் அடியவர்கள் உள்ளம் ஆகும். அன்பினால் சிறந்த தூய்மையான உள்ளம் அது. இதற்கு இணையான கூடம் வேறு ஒன்றுமே இல்லை. உள்ளமாகிய கூடத்தில் சித்தி வேழத்தைக் கட்டுவதற்கு அன்பர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? மனவுறுதி ஆகிய முளையை அடிக்கிறார்கள். அந்த முளையிலே மிகவும் விருப்பத்தோடு கட்டிப்போடுகின்ற சங்கிலி அன்பே ஆகும். அன்பு இருந்தால்தான் இந்த வேழத்தைக் கட்டலாம். அன்பு என்னும் சங்கிலித் தொடரை அந்த யானையால் தள்ள முடியாதாம். அடியவர்க்குச் சாதுவான இந்த யானையால் தீங்கு இல்லை. அது கட்டுத்தறியை முறிக்காது. மதம் கொள்ளாது. 

சாதுவான யானையாக இருந்தாலும், தீனி தின்னாமல் இருக்க முடியாது. ஆனை கட்டித் தீனி போட ஆராலே முடியும்? என்று ஒரு பழமொழி உள்ளது. யானைக்கு உணவளித்துப் பாதுகாப்பது எவ்வளவு அருமை என்பதை இந்தப் பழமொழி விளக்கும். ஆனை அசைந்து தின்னும் என்பார்கள். இந்த யானை அசையாமலே இருந்து தின்னும். மூத்த பிள்ளையாருக்குத் ‘தொப்பையப்பன்’ என்பது ஒரு பெயர். எத்தனை நிவேதனம் செய்தாலும் வாரிச் சுருட்டி வயிற்றுக்குள் திணிக்கும் இயல்புடையவர் அவர். “கப்பிய கரிமுகன்” என்கிறார் அருணகிரிநாதர். கப்புதல் என்றால், விரைவாக விழுங்குதல் என்று பொருள். அவர் விரைவாக விழுங்குபவை, எவை என்று “கைத்தல நிறைகனி” எனத் தொடங்கும் திருப்புகழில் காணலாம்.

அப்படி விரைவாக விழுங்குகின்ற இயல்பை உடையது அல்ல இந்த சித்திவேழம். அதற்கு உணவு இடவேண்டுமே என்று அஞ்சவேண்டியது இல்லை. ஒரு கவளம் உணவு கொடுத்தாலே போதுமாம். அதற்குக் கவளமாகக் கொடுக்க எதையும் தேடவேண்டியதில்லை. இருக்கிற பொருளையே கொடுக்கலாம். நம்மிடம் உள்ள ஒரு பொருளால் நமக்குத் துன்பமே விளைகிறது. துன்பத்தைத் தருகின்ற அந்தப் பொருளை இந்த யானைக்குக் கொடுத்தால், மிக மகிழ்ந்து உண்டு, திருவருளைப் பொழியும். எல்லா வகையான துன்பங்களுக்கும் விளைவிடமாக இருந்து, மேலும் மேலும் பிறந்து பிறந்து சாவதற்குக் காரணமாக நம்மிடம் உள்ள அந்தப் பொருளுக்குப் “பசுபோதம்” என்று பெயர். 

ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பதனால், வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டு நிலையில் தனது உண்மை இயல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று ஆன்மா மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாக உள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். எடுத்துக்காட்டாக, மேகபடலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விளங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் பசுபோதம் கூறப்படும். 

இவ்வாறு கருவியறிவாகிய பாசஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு, ‘பசு அறிவு’ அல்லது ‘பசுஞானம்’ எனப்படும். இதனைப் ‘பசுபோதம்’ எனவும் குறிப்பிடுவர். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசுஅறிவு அல்லது பசுபோதம் எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரியவொளி அதனுடன் கலந்து அதனை விளக்கி நிற்பதே ஆகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

இந்தப் பசுபோதமானது, நம்மை அறியாமல் நம்மிடம் இருந்து பல தீவினைளைச் செய்யச் செய்து அலைக்கழிக்கும். இறைவனை உணர ஒட்டாமல், இந்த உலக வாழ்வே நித்தியம் என்று நினைக்கச் செய்யும். செம்பிலே களிம்பு இருப்பது போல நம்மிடம் இது இருக்கிறது. இது கழன்று போனால் நமக்கு உண்மை இன்பம் உண்டாகும். இந்தக் கள்ள வினைப் பசுபோதத்தையே, சித்தி வேழத்துக்குக் கவளமாக இட்டுவிட்டால், நமக்குத் துன்பம் தரும் பொருள் நம்மை விட்டுப் போகிறது. இது வேடிக்கையாகத் தோன்றும். அழுகல் பழம் ஐயருக்கு என்பது போல, நமக்கு வேண்டாத, துன்பம் தருகின்ற ஒன்றை விநாயகருக்குக் கொடுக்கலாமா? அதனால் அவருக்குக் கோபம் பிறக்காதா?  என்று தோன்றும். கவளம் இடும்போது கல்லை இட்டால், யானை நெடுநாள் நினைவில் வைத்திருந்து இட்டவனைச் சாடும் என்று சொல்வார்களே! நமக்கு வேண்டாத, அழுக்கான பண்டத்தைச் சித்தி வேழத்துக்குக் கொடுப்பது தகுமா? கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளுமா? - இவ்வாறு பல ஐயவினாக்கள் எழுவதற்கு இடம் உண்டு. உண்மையில், நமக்குத் தீங்கு பயக்கின்ற கள்ளமாகிய வினைகளுக்குக் காரணமாகிய பசுபோதத்தை (சிற்றறிவை)க் கவளமாக்கி விட்டால், இந்த யானை மகிழ்ச்சியோடு உண்ணும். நல்ல உணவை மிகுதியாக உண்டு வளரும் விலங்கு யானைக்குக் கொழுப்பு அதிகமானல் மதம் உண்டாகும். அந்த மதம் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும். இந்தத் தெய்வ யானையானது, நாம் அளிக்கும் பசுபோதக் கவளத்தை உண்டு களிப்பை அடையும். அதனால் அதற்கும் மதம் வெள்ளம் போல உண்டாகும். ஆனால், அது கருணை என்னும் மதம். 

நாம் அளிப்பது, நமக்குக் கொடுமையைச் செய்யும் அழுக்குப் பண்டம். அதை உவந்து பெற்றுக் கொண்டு, அந்த யானை தருவதோ, யமக்கு எல்லா நன்மைகளையும் அளிக்கும் கருணை. இதில் வியப்பு ஒன்றும் இல்லை. நறுமணம் மிகுந்த மலர்ச் செடியைத் தோட்டத்தில் வைத்து வளர்க்கிறோம். அதற்கு மணமுள்ள எருவை இடுவது இல்லை. தீநாற்றம் உள்ள எருவை இடுகிறோம். அதனை ஏற்றுக்கொண்டு வளர்கின்ற செடியானது மிகவும் மணமான மலரை அளிக்கின்றது. ஒரறிவுடைய செடியே நமக்குப் பயன்படாத நாற்றப் பொருளை அளித்தால், நேர்மாறான நறுமணமுள்ள மலரை அது நமக்குத் தருகிறது. அப்படியானால், நிறை அறிவு எனப்படும்  ஞானமயமான விநாயகப் பெருமான், நாம் அளிக்கும் பசுபோதத்தை உள்ளம் உவந்து ஏற்றுக் கொண்டு, நமக்குக் கருணையை வெள்ளமாகப் பொழிவதில் வியப்பு இல்லை. 

திருவிளையாடல் புராணத்தில், பரஞ்சோதி முனிவர் அருளிய பாடலை இனிக் காணலாம்.


“உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந்

     தறிநிறுவி யுறுதி யாகத்

தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி

     யிடைப்படுத்தித் தறுகட் பாசக்

கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்

     களித்துண்டு கருணை யென்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

     நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம்.”

இதன் பொருள் ---

உள்ளம் எனும் கூடத்தில் - உள்ளமாகிய கூடத்தில், ஊக்கம் எனும் தறி நிறுவி – மன உறுதியாகிய கட்டுத் தறியை நிறுத்தி, தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி – பேதித்தல் இல்லாத அன்பாகிய சங்கிலியை உறுதியாக வலிமை பெறப் பூட்டி, இடைப்படுத்தி - அதில் அகப்டுத்தி, தறுகண் பாச - வன்கண்மையை உடைய ஆணவ சம்பந்தமுள்ள, கள்ளவினை - வஞ்சவினையை உடைய. பசுபோதம் – சீவபோதம் (அல்லது ஆன்மபோதம்) ஆகிய, கவளம் இட - கவளத்தைக் கொடுக்க, களித்து உண்டு – மகிழ்ந்து உண்டு, கருணை என்னும் மத வெள்ளம் பொழி - அருளாகிய, மதப்பெருக்கைச் சொரிகின்ற, சித்தி வேழத்தை நினைந்து - சித்திவிநாயகக் கடவுளாகிய யானையைத் தியானித்து, வருவினைகள் தீர்ப்பாம் - பிறவிதோறும் தொடர்ந்து வருகின்ற வினைகளை நீக்கிக் கொள்வோம்.

விநாயகக் கடவுளை வேழம் என்றதற்கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார். கூடம் - யானை கட்டுமிடம். கவளம் - யானை உணவு. ஆணவத்தால் பசுபோதமும், அதனால் கள்ளவினையும் நிகழும். பசுபோதக் கவளம் இடுதலாவது யான் எனது என்னும் செருக்கற்று வணங்குதல். 

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்தொரு புராண வரலாறு ---

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டித் திருக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், மூத்த பிள்ளையார் ஆகிய கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.


“விழிமலர்ப் பூசனை உஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்.”  --- காஞ்சிப் புராணம்.

இதன் பொருள் ---

திருமால் சிவபூசையில் தனது கண்மலரைச் சாத்திப்பெற்ற சக்கரத்தை, விநாயகர் ஓர்வழியால் கொண்டு, அறவழி ஒழுகாத சலந்தரனைத் தடிந்த முடைநாற்றம் நீங்க மதநீரால் மணம் ஏற்றி விகடநடப் பூசை கொண்டு புதிதாக்கித் தந்து பழியை நீக்குகின்ற தனது தந்தையாகிய சிவபரம்பொருளினும் புகழ் படைத்த அவ்விநாயகரை வணங்குவாம்.



திருமகள் வாழிடம்

திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது.....


1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


    வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு விருந்து செய்பவனுடைய வீட்டில், உள்ளம் மகிழ்ந்து திருமகள் தங்கி வாழ்வாள். (Goddess Lakshmi, with joyous mind, shall dwell in the house of that man who with cheerful countenance entertains the good as guests)


2. அறன்அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.


    அறத்தின் பயனை உணர்ந்து, பிறருடைய பொருளை விரும்பாத மேலோரைச் சென்று அடையும் வகையை அறிந்து, அவரிடத்தில் திருமகள் சென்று சேர்வாள். (Goddess Lakshmi, knowing the manner in which she may approach, will immediately come to those wise men who knowing that it is virtue, covet not the property of others)


3. மடிஉளாள் மாமுகடி என்ப, மடிஇலான்

தாள்உளாள் தாமரையினாள்..


    சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் செந்தாமரைச் செல்வியாகிய திருமகள் இருப்பாள். சோம்பல் உள்ளவனிடத்தில் கருமை நிறம் பொருந்திய மூதேவி இருப்பாள். (They say that the black Moodevi (the goddess of adversity) dwells with laziness and that Lakshmi (the Goddess of Prosperity) dwells with the labour of the industrious.)


    நன்னெறியில் வாழப் பொருளை ஈட்டவேண்டுமானால், இறைவன் திருவருள் வேண்டும். திருவருள் இருக்குமானால், திருமகள் அருளும் இருக்கும். திருமகள் இருப்பது எங்கு? அவளது இருப்பால் என்ன விளையும்? என்பது குறித்து, "குமரேச சதகம்" கூறுவது காண்போம்...


"சத்தியம் அது இருப்பவர் இடத்தினில்

     சார்ந்து திருமாது இருக்கும்;

சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்

     தனது பாக்கியம் இருக்கும்;


மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்

     விண்டுவின் களைஇருக்கும்;

விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடம்தனில்

     மிக்கான தயைஇருக்கும்;


பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடம்தனில்

     பகர்தருமம் மிகஇருக்கும்;

பகர்தருமம் உள்ளவர் இடம்தனில் சத்துரு

     பலாயனத் திறல்இருக்கும்;


வைத்துஇசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு

     மன்னுயிர் சிறக்கும் அன்றோ?

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!"


      இதன் பொருள் --- 


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில் திருமாது சார்ந்து இருக்கும் - உண்மை நெறியில் வழுவாமல் வாழ்பவர் இடத்தில் திருமகள் சேர்ந்து இருப்பாள்,  திருமாது இருக்கும் இடந்தனில் சந்ததம் தனது பாக்கியம் இருக்கும் - திருமகள் வாழுகின்ற அந்த இடத்திலே எப்போதும் அவள் அருளால் பெறப்படும் செல்வம் இருக்கும்,  மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்தனில் விண்டுவின் களையிருக்கும் - உண்மையாக அவ்வாறு வருகின்ற செல்வம் இருக்கும் இடத்திலே திருமாலின் அருள் இருக்கும்,  விண்டுவின் களை பூண்டு இருக்கும் இடம் தனில் மிக்கான தயை இருக்கும் - திருமாலின் அருளைப் பெற்றோர் இடத்திலே பெருமைக்குரிய இரக்கம் மிகுந்து இருக்கும்,  பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடந்தனில் பகர் தருமம் மிக இருக்கும் - திருமாலிடத்து வைத்துள்ள அன்பும், இனிய இரக்க குணமும் உள்ளவர் இடத்திலே சிறப்பித்துச் சொல்லப்படும் ஈகை என்னும் அறம் இருக்கும்,  பகர் தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு பலாயனத் திறல் இருக்கும் - புகழ்ந்து கூறப்படும் அற உணர்வு உள்ளவர் இடத்திலே பகைவரை வெல்லும் வலிமை இருக்கும்,  இசை வைத்து மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன் உயிர் சிறக்கும் அன்றோ - புகழ் பெற்று உயர்ந்த வலிமை பெற்றவர் இடத்திலே மிகுதியான நிலைபெற்ற உயிர்கள் சிறப்புற்று வாழும் அல்லவா?

கருத்து --- சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்திலே செல்வ வளமும், இறைவன் அருளும், தானமும், தருமமும் சிறக்கும். அந்த இடத்திலே பகைவருக்கும் அருளும் பண்பு இருக்கும். அதனால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்.


திருமகளின் கடைக்கண் பார்வை உண்டானால் வருகின்ற சிறப்புக்கள் குறித்து, "குமரேச சதகம்" கூறுவது...


"திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்

     சிறப்புண்டு, கனதை உண்டு,

சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்,

     செல்லாத வார்த்தைசெல்லும்


பொருளொடு துரும்பு மரியாதைஆம், செல்வமோ

     புகல் பெருக்காறு போல் ஆம்,

புவியின் முன் கண்டு மதியாதபேர் பழகினவர்

     போலவே நேசம் ஆவார்,


பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும், அனுதினம்

     பேரும் ப்ரதிட்டை உண்டாம்,

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான்,

     பேச்சினில் பிழை வராது,


வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும், அதிக

     வல்லமைகள் மிகவும் உண்டாம்,

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் திருமகளின் கிடைக்கண் நோக்கம் உண்டானால் கீர்த்தி உண்டு;  கனதை உண்டு - பெருமை உண்டு;  சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும் - வாழ்ந்து காட்டும் வழி எல்லாம் எல்லோரும் பின்பற்றும் பெரிய ஒழுக்கநெறி ஆகிவிடும்; செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக் கொள்ளத்தகாத சொற்களும் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும்;  பொருள் ஒரு துரும்பு - எல்லாப் பொருளும் அவருக்கு எளிதில் கிடைக்கும்;  மரியாதை ஆம் - பிறர் போற்றும் சிறப்பு உண்டாகும்;  செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் - அவரிடத்தில் செல்வமானது வற்றாத ஆற்று வெள்ளம் போல் வந்து சேரும், புவியில் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் - இந்த உலகில் வறுமை உடையவனாய் இருந்தபோது, கண்டும் காணாதது போல், மதியாமல் சென்றவர் எல்லாம், முன்பே நெடுநாள் பழகினவர் போல் வந்து நட்புக் கொண்டாடுவர். சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - பிறந்த குலத்தில் பெருமையும், உயர்வும் உண்டாகும், அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் பேரும் புகழும் உண்டாகும்,  பகையாளி கூட பிரியமொடு உறவாகுவான் - பகைவனும் கூட அன்போடு உறவு கொண்டாடுவான்; பேச்சினில் பிழை வராது - பேசும்போது பிழையில்லாத பேச்சு வரும்;  (வந்தாலும் பிழையாக யாரும் கொள்ளமாட்டார்) வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் - வரவேண்டும் என்று எண்ணிய பொருள் யாவும் தவறாமல் கிட்டும், அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த செயலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.


இவ்வளவு சிறப்புக்களையும் அருளுகின்ற திருமகள்  வீற்றிருக்கும் இடங்கள் குறித்து, பின்வரும் பாடல்கள் காட்டும்...


"கடவா ரணத்திலும், கங்கா சலத்திலும்,

     கமலா சனந்தன்னிலும்,

காகுத்தன் மார்பிலும், கொற்றவ ரிடத்திலும்,

     காலியின் கூட்டத்திலும்,


நடமாடு பரியிலும், பொய்வார்த்தை சொல்லாத

     நல்லோ ரிடந்தன்னிலும்,

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்,

     ரணசுத்த வீரர்பாலும்,


அடர்கே தனத்திலும், சுயம்வரந் தன்னிலும்,

     அருந்துளசி வில்வத்திலும்,

அலர்தரு கடப்பமலர் தனிலும்,இர தத்திலும்,

     அதிககுண மானரூப


மடவா ரிடத்திலும் குடிகொண்டு திருமாது

     மாறாது இருப்பள் அன்றோ?

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே." --- குமரேச சதகம்.


      இதன் பொருள் ---


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலைமேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கட வாரணத்திலும் -  மதயானையின் இடத்திலும், கங்கா சலத்திலும் - கங்கையின் தூய நீரிலும், கமல ஆசனம் தன்னிலும் - தாமரை மலராகிய ஆசனத்திலும்,  காகுத்தன் மார்பிலும் - திருமாலின் மார்பிலும்,  கொற்றவர் இடத்திலும் - அரசர் இடத்திலும்,  காலியின் கூட்டத்திலும் - பசுக்களின் கூட்டத்திலும்,  நடம் ஆடு பரியிலும் - நடையில் சிறந்த குதிரையின் இடத்திலும், பொய் வார்த்தை சொல்லாத நல்லோர் இடம் தன்னிலும் - பொய் கூறாத நல்லவர்கள் இடத்திலும்,  நல்ல சுபலக்கணம் மிகுந்த மனை தன்னிலும் - சிறந்த சுப இலக்கணங்கள் பொருந்தி உள்ள வீட்டிலும்,  இரண சுத்த வீரர்பாலும் - போருக்கு உரிய உயர்ந்த வீரர் இடத்திலும், அடர் கேதனத்திலும் - மிகுந்த வெற்றிக் கொடியின் இடத்திலும்,  சுயம்வரம் தன்னிலும் - சுயம் வரத் திருமணத்திலும், அருந் துளசி வில்வத்திலும் - அரிய துளசி மற்றும் வில்வ பத்திரத்திலும், அலர் தரு கடப்ப மலர் தனிலும் - மலர்ந்த கடப்ப மலரிலும்,  இரதத்திலும் - தேரிலும்,  அதிக குணமான ரூப மடவாரிடத்திலும் - நற்குணம் வாய்ந்த அழகிய பெண்கள் இடத்திலும்,  திருமாது குடிகொண்டு மாறாது இருப்பள் அன்றோ - திருமகள் குடிகொண்டு எப்போதும் நீங்காமல் இருப்பாள் அல்லவா?


"நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,

     நாகரிகர் மாமனை யிலே,

  நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,

     நறைகொண்ட பைந்துள விலே,


கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,

     கல்யாண வாயில் தனிலே,

  கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,

     கதிபெறு விளக்க தனிலே,


பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே

     பொய்யாத பேர்பா லிலே,

  பூந்தடம் தன்னிலே, பாற்குடத்து இடையிலே

     போதகத் தின்சிர சிலே


அற்பெரும் கோதைமலர் மங்கைவாழ் இடம் என்பர்

     அண்ணல்எமது அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!" --- அறப்பளீசுர சதகம்.


  இதன் பொருள் --- 


அண்ணல் - தலைவனே! எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - எமது அரிய மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

நல் பரி முகத்தில் - அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் - அரசரின் இடத்திலும்,  நாகரிகர் மாமனையில் - நயத்தகு நாகரிகம் அறிந்தவர்கள் வாழும் வீட்டிலும்,  நளின மலர் தன்னில் - தாமரை மலரிலும், கூவிளந் தருவில் - வில்வ மரத்திலும், நறை கொண்ட பைந் துளவில் - மணமுடைய பசிய திருத் துழாயிலும்,  கற்புடையர் வடிவில் - கற்புடைய பெண்களின் வடிவத்திலும், கடலில் - கடலிலும்,  கொடியில் - துகில் கொடியிலும், கல்யாண வாயில்தனில் - திருமண வீட்டின் வாயிலிலும்,  கடி நகர் இடத்தில் - காவலை உடைய நகரத்திலும், நல் செந்நெல் விளைவில் - நல்ல செந்நெல் விளைவிலும்,  கதிபெறு விளக்கு அதனில் - ஒளி வீசுகின்ற விளக்கிலும்,  பொற்பு உடைய சங்கில் - அழகுள்ள சங்கிலும்,  மிக்கோர்கள் வாக்கில் - பெரியோர் வாயிலிருந்து பிறக்கும் சொல்லில்,  பொய்யாத பேர்பாலில் - பொய் சொல்லாதவர் இடத்திலும், பூந் தடம் தன்னில் - மலர்கள் நிறைந்துள்ள குளத்திலும்,  பால் குடத்திடையில் - பால் குடத்திலும்,  போதகத்தின் சிரசில் - யானையின் மத்தகத்திலும், அல் பெரும் கோதை மலர்மங்கை வாழ் இடம் என்பர் - இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமகள் வாழுகின்ற இடம் என்பர் பெரியோர்.

ஆனால், திருமகள் வாழும் இடம் எது என்று திருவள்ளுவ நாயனார் கூறுவது,

"மடி உளாள் மாமுகடி என்ப, மடி இலான்

தாள் உளாள் தாமரையினாள்" --- திருக்குறள்.

சோம்பல் இருக்கும் இடத்திலே மூதேவி இருப்பாள். சோம்பல் இல்லாதவன் இடத்திலே திருமகள் இருப்பாள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"தாள்" என்னும் சொல்லுக்கு முயற்சி அல்லது சோம்பல் இல்லாமை என்பதைப் பொருளாக் கொண்டால், மேற்படி பொருள் வரும். முயற்சி என்பது, நன்னெறியில் முயலுவதையே குறிக்கும்.  "தாள்" என்னும் சொல்லுக்கு, காலடி, பாதம் என்றும் பொருள் உண்டு. அவ்வாறு கொண்டால், நன்னெறியில் முயலுபவனது காலடியில் திருமகள் தவழ்ந்து கொண்டு இருப்பாள் என்பது பொருளாய் வரும்.

இரண்டாவதாகச் சொன்னதே பொருந்தும் என்பது, பின்வரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலால் அறியலாம்....

"கொய்த அம் மலரடி கூடுவார், தம்

மை திகழ் திருமகள் வணங்க வைத்துப்

பெய்தவன் பெருமழை, உலகம் உய்யச்

செய்தவன் உறைவிடம் திருவல்லமே"

இதன் பொருள் ---

அன்பர்களால் கொய்து அணியப் பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களை, பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

திருமகள் சிவனடியாரைப் பிரியாது இருப்பாள் என்று தெளிவிக்கும், பின்வரும் அப்பர் தேவாரப் பாடலையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

"செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்

வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்

கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக் காரோணம் என்றும்

சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே".

இதன் பொருள் ---

சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும், தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு, செல்வம் மிகுந்ததும், நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த திருநாகைக் காரோணத்தை  என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள்.

ஆக, திருமகள் எங்கு இருப்பதாகக் கொண்டாலும் சரி. நல்லோர் நினைக்கும் இடத்தில் அவள் இருப்பாள். அறவழியில் முயலும் இடத்தில் அவள் இருப்பாள். சத்தியம் தவறாத உத்தமர் வாழும் இடத்தில் நிச்சயம் அவள் இருப்பாள். இறை அடியாருடைய காலடியில் நீங்காமல் இருப்பாள்.

    பலரிடத்தும் மாறி மாறிச் செல்லும் இயல்பினை உடையவள் திருமகள் என்பதை “தவழ் திருமகள்” என்று காட்டினார் திருஞானசம்பந்த நாயனார். இது சிந்தனைக்கு உரியது. எல்லாம் வல்ல பரம்பொருளாகிய இறைவனின் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் திருவடிகளைத் திருமகள் வணங்குவாள் என்பதால், “மடி இலான் தாள் உளாள் தாமரையினாள்” என்று சொல்லப்பட்டது. பின்வரும் கம்பராமாயணப் பாடல் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

“கொடி உளாளோ? தனிக் குடை உளாளோ? குலப்

படி உளாளோ? கடல் படை உளாளோ? பகர்

மடி இலா அரசன் மார்பினில் உளாளோ? வளர்

முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம், முளரியாள். --- கம்பராமாயணம், எதிர்கோள் படலம்.

இதன் பொருள் ---

முளரியாள் - செந்தாமரை மலரில் வதியும் திருமகள்;  பகர் மடி இலா அரசினான் - (புகழ்ந்து) கூறப்படுகிற சோம்பல் இல்லாத அரசாட்சி செய்யும் தசரத மன்னனுடைய;  கொடி உளாளோ - கொடியில் உள்ளாளோ?; தனிக் குடை உளாளோ?  - ஒப்பற்ற வெண் கொற்றக் குடையிலே இருக்கின்றாளோ;   குலப்படி உளாளோ - பரம்பரை பரம்பரையாக வருகின்ற அவனது இராச்சியத்தில் இருக்கின்றாளோ;  கடல் படை உளாளோ? - கடல் போன்ற அவன் சேனையிலே  இருக்கின்றாளோ?;  மார்பு உளாளோ? - அம் மன்னர் மன்னனின் மார்பிடத்தே இருக்கின்றாளோ?; வளர் முடி உளாளோ? - அழகு வளரும் அவன் மணிமகுடத்தில் இருக்கின்றாளோ?;  தெரிந்து உணர்கிலாம் - திருமகள் இருக்குமிடம் இன்னது எனத் தெளிந்தறியக் கூடவில்லை.

மன்னர்களிடம் திருமகள் வாசம் புரியத்தக்க இவையனைத்திலும் ஏதோ ஓரிடத்தில் வசிப்பது அவள் வழக்கம்.  தரசதன் ஆட்சியில் அவள் இன்ன இடத்தில் உள்ளாள் என்று உறுதியாக அறிந்துகொள்ள முடியாத நிலையில், அனைத்திலும் உள்ளாள் என்றதால், “மடியிலான் தாள் உளாள் தாமரையினாள்”என்னும் திருக்குறளை இப்படி வைத்துச் சிந்தித்தால், திருஞானசம்பந்த நாயனார் அருளியது போல, அடியவர்களின் திருவடியில் வணங்கிப் பொருந்தி உள்ளாள் திருமகள் என்பது விளங்கும்.


பின் நிற்பார் இன்மை பேணுதல்


பின் நிற்பார் இன்மை பேணுதல்

-----


    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ‘நாலடியார்’ சமண சமயத்தைச் சார்ந்த பண்டைத் தமிழ்ப் பெரும்புலவர்களால் அருளிச் செய்யப்பட்டது. துறவறத்தையே பெருநெறியாக உடையவர்களf, இல்லறநெறியின் இன்றியமையாமையையும் சிறப்பாக உணர்த்தி, மகளிர்க்குச் சிறந்த கற்புநெறியைக் காட்டி உள்ளனர். “பெறுநசையால் பின் நிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை” என்று வாழ்க்கைத் துணை பற்றிக் கூறுகின்றனர். தன்னைப் பிறர் நோக்காதவாறு நடந்து கொள்ளுதலே கற்புடைமை என்பது இதன் பொருள்.

    கற்புடைமை என்பது, ‘தன் மனம் நெறி தவறாமல் பாதுகாத்தல்’ மட்டுமல்லாமல், ‘பிறர் மனம் தன்னை விரும்பாமல் அமைதியாய் நடந்துகொள்ளுதல்’ என்பது அறிவுறுத்தப்பட்டது. பிறர் மனத்தைத் திரித்த பாவம் இதனால் உண்டாகும். கணவனைத் தவிர்த்த மற்ற யாருடைய மனமும் தன்னை நாடாதவாறு அமைந்த தன்மையுடன் ஒழுகுதல் கற்புடைமை ஆகும் என்கிறது நாலடியார்.

    இக்கலாத்தில் பலரும் காணுமாறு பகட்டு உடை அணிதல் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. பின்நிற்பார் இல்லாமையை விரும்புபவர் பகட்டு உடையைத் தவிர்ப்பர். பின் நிற்பாரைப் பேணுதலும் இக்கால நாகரிகம் போலும். பகட்டு உடை அணிந்து பெருமை தேடிக் கொள்ள நினைப்பது சிறுமையையே உணர்த்தும். இனி, யாவரோடும் கலந்து பழகுதலும் நாகரிகம் என்று கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் ஏழை எளியர்வர்களோடு கலந்து பழகுகின்றார்களா என்றால், இல்லை என்றே சொல்லலாம்.

    பின் நிற்பார் இன்மையைப் பேணுதல் என்பது தமிழர் வாழ்வியல் என்பது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் சிறப்பாகச் சொல்லப்பட்டு உள்ளது. காவிரிப் பூட்பட்டினத்து அரசனாகிய ககந்தன் என்பவனது இளைய மகன், காவிரியில் நீராடிவிட்டுத் தனியே வந்த மருதி என்னும் பார்ப்பனப் பெண்ணைக் கண்டு காமுற்று அவளை அழைத்தான். அவள் மனம் கலங்கினாள். “கற்புடையை மகளிர் என்றால், அவர் பிறர் நெஞ்சில் புகமாட்டார்கள். நானோ இவன் உள்ளத்தில் புகுந்தேன். எனவே, எனக்கு என் கணவருடன் கூடி முத்தீப் பேணும் தகுதி எனக்கு இல்லை” என்று எண்ணி, பெருந்துயரத்தோடு தனது வீட்டிற்குச் செல்லாது, அவ்வூரில் தீயொழுக்கம் உடையவரை அறைந்து உண்ணும் பூதம் உறையும் கோயிலுக்குச் சென்று, “நான் எனது கணவனுக்கு யாதொரு குற்றமும் செய்யவில்லை. அப்படி இருக்க பிறன் ஒருவனுடைய நெஞ்சில் எளிமையாகப் புகுந்தேன். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குப் புலனாகவில்லை. தவறு செய்தவர்களைத் தண்டிக்காது இருப்பதால், நீ கோயிலில் இருப்பது பொய்யோ?” என்று அழுது அரற்றினாள். இதனை மணிகேமலையில் பின்வருமாறு காண்க.


“தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்

பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்

யாப்பறை என்றே எண்ணின் ஆகிக்

காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்

நீவா என்ன, நேரிழை கலங்கி,


மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம்

பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்,

புக்கேன் பிறன் உள்ளம், புரிநூன் மார்பன்

முத்தீப் பேணும் முறை எனக்கு இல் என,

மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாஅள்,


பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக்

கொண்டோன் பிழைத்த குற்றம் தான்இ்(ல்)லேன்,

கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிது ஆயினேன்,

வான்தரு கற்பின் மனையறம் பட்டேன்

யான்செய் குற்றம் யான் அறிகில்லேன்

பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத்

தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும்


மாபெரும் பூதம் தோன்றி, மடக்கொடி!

நீகேள் என்றே நேரிழைக்கு உரைக்கும்,


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்,

பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு

விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக்

கடவுள் பேணல் கடவியை ஆகலின்,

மடவரல் ஏவ மழையும் பெய்யாது,

நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப்

பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை,

ஆங்கவை ஒழிகுவை ஆயின், ஆயிழை

ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது;


பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போலக்

கட்டாது உன்னை என் கடுந்தொழிற் பாசம்,

மன்முறை எழுநாள் வைத்தவன் வழூஉம்

பின்முறை அல்லது என்முறை இல்லை,

ஈங்கு எழு நாளில் இளங்கொடி நின்பால்

வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்

ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என

இகந்த பூதம் எடுத்துரை செய்தது, அப்

பூதம் உரைத்த நாளால் ஆங்கு அவன்

தாதை வாளால் தடியவும் பட்டனன்.”


இதன் பொருள் ---


    தெளிந்த நீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்தில் உள்ளோர் ஒருவரும் இல்லாமையால், அவளை மன உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன், நீ வா என அழைக்க, அவள் கலக்கமுற்று, அணுச்செறிந்த நிலவுலகத்தில், வேண்டியபோது மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிர் ஆயின், பிறர் உள்ளத்தில் புகுதல் இலர். நானோ அயலான் உள்ளத்தில் புகுந்தேன். ஆதலின் முந்நூலணிந்த மார்பினை உடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மிகப் பெரிய துன்பத்துடன் தனது மனைக்குச் செல்லாதவளாய், பூத சதுக்கத்தை அடைந்து வருந்தி, கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், அயலானுடைய உள்ளத்தில் எளிதில் புகுந்தேன், மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்தில் பொருந்தியவளாகிய நான் செய்த குற்றம் ஒன்றையும் அறியேன், நெறியல்லன செய்தோரைப் புடைத்து உண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கத்துக் கடவுளாகிய நீ இங்கு இருப்பது பொய்ம்மையோ என மருதி பலவாறு புலம்புதலும்; மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடியே நீ கேட்பாயாக, பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை, பெய் என்று சொல்லப் பெருமழை பெய்யும் என உரைத்த, தெய்வப் புலவராகிய திருவள்ளுவ நாயனாரது அப் பொருண்மொழியை நீ தெளியவில்லை. பொருளொடு புணராப் பொய்ம்மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழிகளையும் பிறரிடம் கேட்டு, விழாக் காண்டலை விரும்பி, வேறு கடவுளை வணங்கும் தன்மை உடையவள் நீ ஆனாய். எனவே, நீ ஏவினால் மழையும் பெய்யாது, பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மையை உடையவளும் நீ அல்ல. முற்கூறிய நினது செயல்களை நீங்குவாயானால்,  உயர்ந்த வானத்து மழையும் நீ ''பெய்'' எனச் சொன்னால் பெய்யும்.

    தான் விரும்பியவாறே ஒழுகுகின்ற பெண்களைக் கட்டுவதுபோல,  எனது கொடிய தொழிலையுடைய பாசமானது உன்னைக் கட்டாது. அரசன் முறை செய்யத் தவறினால் ஒழிய, நான் அவனை முறைசெய்வது இல்லை. இன்றைக்கு ஏழாம் நாளில் உன்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோன், ககந்தன் கேள்வியுற்று வாளினால் தண்டிக்கப்படுவான் என்று பூதம் எடுத்துக் கூறியது. பூதம் உரைத்த நாளில் அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டான்.

    ஆடம்பரமாக ஒழுகுதலே பிறர் நெஞ்சு புகுதற்குக் காரணம் ஆகிறது என்பது இதனால் சொல்லப்பட்டது. ஒருவனும் ஒருத்தியுமாய் வாழ்கின்ற காதல் வாழ்க்கை சிறப்புற்று மேம்படுவது, நாணம் என்னும் நல்லியல்பினால்தான். பெண்மை தன்மை கெட்டு, ஆண் தன்மையே மிகுந்து, நாணம் அற்று வாழ்வது பொதுமகளிரின் இயல்பு. மகளிர்க்கு நாணமே உயிர்க்குணம் என்பதை நாலடியார் பின்வருமாறு கூறும்.


“எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேற் சேர்ந்து எழினும்,

அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; - எஞ்ஞான்றும்

என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்

பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.


அன்றாடம் என் கணவர் என்னோடு கூடி மகிழ்கின்றார். என்றாலும், அவர் என்னோடு முதன்முதலாக்க் கூடியபோது உண்டான நாணம் என்னை இன்னும் விட்டபாடில்லை. ஆனால், அன்றாடம் பலரோடு கூடி, பணத்துக்காகப் பரத்தையர் இன்றுபுகிறார்களே. இவர்கள் எல்லாம் எப்படித்தான் நாணத்தை விட்டு அனைவரோடும் கூடி இன்புறுகின்றார்களோ? இது எனக்கு விந்தையாய் உள்ளது, என்று தனது நாணுடைமையின் பெருமையை வெளிப்படுத்தினாள் தலைவி.


    இல்வாழ்க்கைக்குத் துணைவியர்க்குச் சிறப்புக்களாவன கணவருடைய வரவின் அளவைத் தெரிதலும், அதற்குத்தக்க செலவு செய்தலும் சுற்றம் தழுவுதலும், விருந்தோம்பலும், தெய்வத்தை வழிபடுதலும் என்பன. இல்லறத்தில் நிற்கும் பெண்டிரின் இயல்பைப் பின்வருமாறு எடுத்து ஓதுகின்றன நமது பண்டைய நூல்கள்.


“கொண்டான் குறிப்பொழுகல், கூறிய நாணுடைமை

கண்டது கண்டு விழையாமை,--விண்டு

வெறுப்பன செய்யாமை, வெஃகாமை நீக்கி

உறுப்போடு உணர்வு உடையாள் பெண். --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


கணவன் குறிப்பறிந்து ஒழுகுதலும், மகளிர்க்குக் கூறிய நாணினை உடைமையும், எப் பொருளையும் கண்டவுடன் மனம் சென்றவழிப் பெற விரும்பாமையும், கணவனுடன் மாறுபட்டு வெறுப்பனவற்றைச் செய்யாமையும் ஆகிய இவற்றை விரும்பி மேற்கொள்ளுதலோடு உடலழகும் அறிவும் உடையவளே பெண்ணாவாள்.


“கட்கு இனியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,

உட்கு உடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி

இடன் அறிந்து ஊடி இனிதின் உணரும்

மடமொழி மாதராள் பெண்.”          --- நாலடியார்


இதன் பொருள் ---


    பார்வைக்கு இனிய இயற்கையழகு உடையவளாய்த் தன் காதலன் விருப்பப்படி ஆடை அணிகலன்களைப் புனைந்து தன்னை அழகுபடுத்திக் கொள்பவளும், தனது கற்பொழுக்கச் சீரினால் கண்டார் எவரும் அஞ்சும் மதிப்பு உடையவளாய்த் தான் வாழும் ஊரிலுள்ள மகளிரெல்லாரும் தன்னுடைய இல்லறச் செய்கைகளின் திறமைக்கு வியந்து நாண்கொள்ளற்கு உரிய மாட்சிமை உடையாளும், தன் கணவன்பால் உள்மதிப்புக் கொண்டு செவ்வியறிந்து ஊடியும், அது இனிது ஆகும்படி அவ்வூடல் நீங்கியும் இன்பம் விளைக்கும் மென்மையான மொழிகளையுடைய பெண்ணே, இல்வாழ்க்கைக்குரியவள் ஆவாள். 


    இங்ஙனம் ஊடியும், உணர்ந்தும், கூடியும் வாழ்வதே நிறைந்த காதல் வாழ்க்கை எனக் காட்ட, “ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின்” என்றும், “துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று” என்றும் அருளினார் திருவள்ளுவ நாயனார். நினைத்ததற்கு எல்லாம் ஊடுதலும், மனம் கனிந்து தேற்றியும் ஊடல் ஒழியாது நிற்றலும் காதல் வாழ்க்கைக்கே அழிவு செய்யும் என்பதால், “இடன் அறிந்து ஊடி, இனிதின் உணரும் மாதராள்” என்று சொல்லப்பட்டது.



பாடல் 7

மாண்டு வாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே!

வேண்டுவாய் ஆகி, விரைந்து,ஒல்லை, பாண்டவாய்த்

தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்

நின்னிடைவாய் வைத்து நினை.


இதன் பொருள் ---


    மாண்டு வாய் அங்காவா முன்னம் - உயிர் பிரிந்து வாய்திறந்து போகாத முன்பு,  மடநெஞ்சே – மடமை உடைய நெஞ்சமே! பாண்டவாய்த் தென் இடைவாய் மேய சிவனார் திருநாமம் – மட்பாண்டம் போன்று விரிந்த வாயினை உடைய காவிரியின் தென்கரையில், திரு இடைவாய் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநாமத்தை, வேண்டுவாயாகி விரைந்து ஒல்லை – விருப்பம் உடையவன் ஆகி மிக விரைவாக; நின்னிடை வாய் வைத்து நினை - உனது மனத்துள்ளே பதிய வைத்து நினைவாயாக.

அங்காத்தல் - திறத்தல். வேண்டுவாயாகி - விரும்புதல் தன்மையை உடையை ஆகி. தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் திருத்தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். திருவிடை வாசல் என்று வழங்குவது, கொரடாச்சேரி நிலயத்திற்கு அருகில் உள்ளது.  நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல்.


34. அற்பர்கள் ஆர்ப்பரிப்பர்

“சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர்; ஆன்றுஅமைந்த

முற்றுணர்வோர் ஒன்றும் மொழியாரே; - வெற்றிபெறும்

வெண்கலத்தின் ஓசை மிகுமே; விரிபசும்பொன்

ஒண்கலத்தில் உண்டோ ஒலி.”


வெண்கலப் பாத்திரத்தினின்று உண்டாகும் ஓசை மிகுதியாகும்.  ஆனால், மேன்மையுள்ள விரிந்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒளி பொருந்திய பாத்திரத்தில் அங்ஙனம் ஓசை மிகுவது உண்டோ?  (இல்லை.)  அதுபோல, குறைந்த அறிவினை உடையவர்கள் எப்பொழுதும் சிடுசிடு என்று இரைந்து பேசுவர். கல்வி கேள்விகளால் நிறைந்து அடங்கிய பேரறிவாளர்கள் அங்ஙனம் இரைச்சலிட்டு ஏதும் பேசமாட்டார்கள்.


(சிலுசிலுத்தல் - சினம் கொண்டு இரைந்து பேசுதல். பொன் ஒண் கலம் – பொன்னால் ஆன ஒளி பொருந்திய பாத்திரம்.)


94. நல்லோர்க்குச் செல்வம் வந்தால்...


ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

     எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்

காலம்அறிந் தருமையுடன் பெருமையறிந்

     துதவிசெய்து கனமே செய்வார்;

மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!

     அவரிடத்தே வருவார் யாரும்!

ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பாற்

     சீட்டெவரே அனுப்பு வாரே?


இதன் பொருள் ---


    மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே - திருமாலும் அறியாத, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால் எவரே சீட்டு அனுப்புவார் - ஆலமரம் பழுத்தால் பறவைகள் வரவேண்டும் என்று சீட்டு எழதி அனுப்புவோர் யார்? (யாரும் இல்லை. அதுபோலவே), ஞாலம் உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால் - உலகில் வாழும் நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால், நாவலோர்க்கும் எல்லவர்க்கும் - புலவர்களுக்கும் இரவலர் முதலிய யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து - காலமும் அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் - பொருள் கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே யாரும் வருவார் - அவரிடம் எல்லோரும் வருவார்கள்.


    ஔவையார் அருளிய நல்வழி என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இங்கு வைத்து எண்ணுக.


“மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்

கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.”


இதன் பொருள் ---


    மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமல் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.


     செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள். பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளஒபோதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர்.


"நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

 படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,

 குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்

 இடுகாட்டுள் ஏற்றைப் பனை." -- நாலடியார்.


இதன் பொருள் ---


ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில், எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள், பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி, பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாது, மிகப் பெரிய செல்வச் செழிப்பில் இருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள், ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்கள்.


பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உள்ளம் படைத்த செல்வந்தர்கள், ஊரின் நடுவிலே பழுத்துள்ள மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன் உடையான்கண் படின்." --- திருக்குறள்.

இதன் பொருள் ---

இரக்கம், தயவு முதலிய நற்குணங்கள் பொருந்திய ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்கள் தருகின்ற பயனுள்ள மரம் ஒன்று ஊரின் உள்ளே பழுத்தால் போன்றது.


இதையே பின்வரும் பாடல்கள் வழிமொழிகின்றன. 


"அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழல்மரம்போல் நேர் ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் துன்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருள் ஈட்டும் முயற்சியால் உழைப்பு உடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமை ஆகும்.


‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்

பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,

கார் மழை பொழியவும், கழனி பாய் நதி

வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.?    ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.


இதன் பதவுரை ---


ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்கு உரிய நீர்நிலை நீரால்  நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில்  வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் - உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி - வயல்களில் பாய்கிற ஆறு;  வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்;  மறுக்கின்றார்கள் யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’


      இந்த எடுத்துக்காடுகளால், இராமன் பிறர்க்கு நன்மை செய்யும்  ஒப்புரவாளன் என்பது  தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் திருக்குறளில்  வரும் உவமையினை,  "ஊருணி நிறையவும்" என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயன் உடையான்கண் படின்” என்றும், "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகையான்கண் படின்" என்றும் வரும் திருக்குறட் பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழு பயன்மரம்” என்றும் கம்பர் சுருங்கச் சொல்லி உள்ளார்.


திருமகள் விரும்பி உறையும் இடங்கள்

    திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது.....



1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு விருந்து செய்பவனுடைய வீட்டில், உள்ளம் மகிழ்ந்து திருமகள் தங்கி வாழ்வாள்.



2. அறன்அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்

திறன்அறிந்து ஆங்கே திரு.


அறத்தின் பயனை உணர்ந்து, பிறருடைய பொருளை விரும்பாத மேலோரைச் சென்று அடையும் வகையை அறிந்து, அவரிடத்தில் திருமகள் சென்று சேர்வாள்.



3. மடிஉளாள் மாமுகடி என்ப, மடிஇலான்

தாள்உளாள் தாமரையினாள்..


சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியில் செந்தாமரைச் செல்வியாகிய திருமகள் இருப்பாள். சோம்பல் உள்ளவனிடத்தில் கருமைநிறம் பொருந்திய மூதேவி இருப்பாள்.


திருமகள் விரும்பாத இடங்கள்

திருமகள் சேராமல் நீங்கி இருக்கும் இடங்கள் எவை என்பதைத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது....  


1. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.


பிறரை வெறுத்து அந்த வெறுப்பினால், அவரது ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத குணம் (பொறாமைக் குணம்) உடையவனிடம் இருந்து  திருமகளானவள் நீங்கி, அவனைத் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விடுவாள்.


பொறாமைக் குணம் உடையவனிடத்திலே திருமகள் இருக்கமாட்டாள்.  மூதேவி இருப்பாள் என்பது கருத்து.



2. வினைக்கண் வினையுடையான் கேண்மை, வேறாக

நினைப்பானை நீங்கும் திரு.


தான் மேற்கொண்ட செயலில் முழு ஈடுபாட்டோடு உரிமையால் தனக்குச் சுற்றமாய் நடக்கின்ற தன்மையை உடையவனுடைய தொடர்பை வேறாக நினைப்பவனை விட்டுத் திருமகள் நீங்குவாள்.


வேறாக நினைத்தல் - அவமதிப்புச் செய்தல், கோபம் கொள்ளுதல். சந்தேகம் கொள்ளுதல்.



3. இருமனப் பெண்டிரும் கள்வரும் கவரும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.


இரண்டுவகை மனங்களைக் கொண்ட பொதுமகளிரும், கள் குடித்தலும், சூதாடுதலும் திருமகளால் புறக்கணிக்கப்பட்டவருடைய தொடர்புகள் ஆகும்.  


33. நல்ல உத்தமன்

“சீலம்இல்லான் ஏதேனும் செப்பிடினும், தான்அந்தக்

காலம் இடம் அறிந்து கட்டுரைத்தே, - ஏலவே

செப்பும்அவ னும்தானே சிந்தைநோ காதுஅகன்று

தப்பும்அவன் உத்தமனே தான்.” -- நீதிவெண்பா


நல்லொழுக்கம் இல்லாதவன் யாதானும் ஒரு தீய சொல்லைச் சொல்ல நேரிடின், அவன் சொன்ன காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து அறிந்து, பொருத்தமான அறிவுரைகளை எடுத்துச் சொல்லி, அவனை அனுப்பி வைப்பவனும், அவன் சொன்ன தீயமொழியால் தன் மனம் வருந்தாமல் அவனிடத்தில் இருந்து நீங்கித் தப்பித்துக் கொள்பவனும் நல்ல உத்தமன் ஆவான்.


(சீலம் - ஒழுக்கம்.  கட்டுரைத்து - எடுத்துச் சொல்லி.  ஏல – பொருந்த.)


93. குறைகுடம் கூத்தாடும்

 



பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்

     விளக்கேற்றிப் புகுத வேண்டும்!

கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து

     நடந்துதலை கீழாய் வீழ்வார்!

வறுமையினும் மறுமையினும் காணலாம்;

     தண்டலையார் வாழும் நாட்டில்

நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே

     கூத்தாடி நிற்ப தாமே!


இதன் பொருள் ---


    தண்டலையாா் வாழும் நாட்டில் – சிவபரம்பொருள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலம் உள்ள நாட்டில், பொறுமையுடன் அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் - பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச் சென்று காணவேண்டும். கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து நடந்து தலைகீழாய் வீழ்வர் - செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து தலைதடுமாறி அழிவார்கள். வறுமையினும் மறுமையினும் காணலாம் - வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம். (எப்போதும் ஒரு தன்மையராகவே இருப்பர்) நிறைகுடமோ தளும்பாது - நீர் நிறைந்த குடம் எனிலோ தளும்புவது செய்யாது; குறைகுடமே கூத்தாடி நிற்பது ஆம் - நீர் குறைந்த குடமே கூத்தாடி நிற்கும்.


      கருவம் என்னும் சொல் எதுகை மோனை நயங்களை நோக்கிக், ‘கெறுவம்' என வந்தது. ‘இருந்த இடம் விளக்கேற்றிப் புகுத வேண்டும்' ‘தலைகீழாய் வீழ்வார்' என்பன மரபு மொழிகள். ‘நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்பது பழமொழி.


    இக் கருத்தையே “பழமொழி நானூறு” என்னும் நூலும் பின்வரும் பாடலால் வலியுறுத்தும்.


“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.”

 

இதன் பொருள் ---

 

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை. (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கொண்டனவே அடக்கத்திற்குரிய செயல்கள் ஆகும். அறியாதார் - நூல்களைக் கற்றதோடு அமைந்து, நூற்பொருளின் உண்மையையும் அனுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.


பாடல் 6

 



காலைக் கரையிழையால் கட்டி, தன் கைஆர்த்து,

மாலை தலைக்குஅணிந்து, மைஎழுதி, மேல்ஓர்

பருக்கோடி மூடிப் பலர்அழா முன்னம்,

திருக்கோடி காஅடைநீ சென்று.


இதன் பொருள் ---


    காலைக் கரை இழையால் கட்டி - காலினைத் துணியின் கரையைக் கிழித்த இழையினாலே கட்டி; தம் கை ஆர்த்து - தமது கையினையும் அவ்வாறே கட்டி; மாலை தலைக்கு அணிந்து – தலைக்கு மாலையை அணிவித்து, மை எழுதி – கண்களுக்கு மையினைத் தீட்டி, மேல் ஓர் பருக்கோடி மூடி – உடலின் மேல் பெரிய புத்தாடையால் மூடி, பலர் அழா முன்னம் – பலரும் கூடி அழும் காலம் வருவதற்கு முன்பாகவே, நீ சென்று திருக்கோடிகா அடை - நீ சென்று திருக்கோடிகா என்னும் திருத்தலத்தினை அடைவாயாக.


    உயிர் பிரிந்தபின், சில நாழிகை அளவு உடல் விரைத்துக் கைகால்கள் ஒழுங்காகப் பாடையிலும் சிதையிலும் அமைக்க வாரா என்பதால், பிணத்தின் காற்பெருவிரல்களையும் கைப்பெருவிரல்களையும் துணியின் வலுவான பகுதியான கரையினைக் கிழித்து அதனால் உடனே கட்டுதல் வழக்கு.  தலைக்கு மாலை சூட்டுதலும், மை எழுதுதலும் பிணத்திற்குச் செய்யும் அலங்காரம். “மையினால் கண் எழுதி மாலை சூட்டி” என்பது அப்பர் தேவாரம். கோடி – புதுத்துணி. பருக்கோடி – பருத்த துணி. பலர் அழா முன்னம் – “கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை” என்பது கந்தர் அனுபூதி. “உற்றர்கள் சுற்றி அழ, பெற்றார்கள் மெத்த அழ” என்பது திருப்புகழ்.


“கயல் விழித்தேன் எனைச் செயல் அழித்தாய் என,

     கணவ கெட்டேன் எனப் ......     பெறுமாது,

கருது புத்ரா என, புதல்வர் அப்பா எனக்

     கதறிட, பாடையில் ......         தலைமீதே


பயில் குலத்தார் அழ, பழைய நட்பார் அழ,

     பறைகள் கொட்டா வர, ......     சமனாரும்

பரிய கைப் பாசம் விட்டு எறியும் அப்போது, எனைப்

     பரிகரித்து ஆவியைத் ......       தரவேணும்.”  -- திருப்புகழ்.


திருக்கோடிகா என்பது சோழநாட்டில், காவிரியின் வடகரையில் உள்ள திருத்தலம். மக்கள் வழக்கில் கோடிகாவல் என்று வழங்குகிறது. மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வந்தும் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் வரலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் பாடிய திருத்தலம்.


பாடல் 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேல் கொண்டுஇருந்து கஞ்சி

அருத்தஒருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.


இதன் பொருள் –


நெஞ்சே – மனமே! வஞ்சியன நுண்ணிடையார் --- வஞ்சிக் கொடியைப் போலும் நுண்மையான இடையினை உடைய பெண்கள், வாள் தடம் கண் ஈர் சோர --- தமது வாளைப் போன்று ஒளியும் கூர்மையும் உடைய கண்களில் இருந்து நீர் வழிய, குஞ்சி குறங்கின்மேல் கொண்டு இருந்து – தலையினைத் தமது துடையின் மேல் வைத்துத் தாங்கிக் கொண்டு, ஒருத்தி – இன்னொரு பெண்ணை, கஞ்சி அருத்தக் கொண்டு வா என்னா முன் – கஞ்சியினை குடிப்பிக்கக் கொண்டு வா என்று சொல்லும் நிலை வருமுன்பாகவே,  திருத்துருத்தியான் பாதம் சேர் – திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை அடைவாயாக.

        வஞ்சி - கொடி; வஞ்சிக்கொடி.  கண் நீர் சோர - நோயின் நிலையினை எண்ணி வருந்திக் கண்ணீர் சோர; குஞ்சி - மயிர்; தலையைக் குறித்தது;  குறங்கு – துடை. கஞ்சி அருத்த - கஞ்சியினை உண்பிக்க.  திருத்துருத்தி என்பது சோழநாட்டில், காவிரித் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும்.  மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 9 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய திருத்தலங்கள் அருகாமையில் உள்ளன.


32. உருவு கண்டு ஏமாறுதல் கூடாது

“கற்பூரம் போலக் கடல்உப்பு இருந்தாலும்,

கற்பூரம் ஆமோ கடல்உப்பு? - பொற்புஊரும்

புண்ணியரைப் போல இருந்தாலும், புல்லியர்தாம்

புண்ணியர் ஆவாரோ? புகல்.” — நீதிவெண்பா


கடல் நீரில் தோன்றும் உப்பானது, உருவத்தால் கற்பூரம் போல வெண்மையாக இருந்தாலும், அது உண்மையில் கற்பூரம் ஆகுமா? ஆகாது.  அதுபோல, தீவினையாளர்கள், கோலத்தால் அழகு மிகுந்த நல்வினையாளர்களைப் போலக் காட்சி தந்தாலும், தன்மையில் அவர்கள் நல்வினையாளர்கள் ஆகமாட்டார்.


(பொற்பு - அழகு.  புல்லியர் - தீவினையாளர்.)


92. மலைமீது இருப்போரைப் பன்றி பாயாது

 

நிலைசேரும் அதிகவித ரணசுமுக

     துரைகளுடன் நேசம் ஆகிப்

பலநாளு மேஅவரை அடுத்தவர்க்குப்

     பலனுண்டாம்! பயமும் இல்லை!

கலைசேரும் திங்கள்அணி தண்டலையா

     ரே! சொன்னேன்! கண்ணிற் காண

மலைமீதில் இருப்பவரை வந்துபன்றி

     பாய்வதெந்த வண்ணந் தானே?”


இதன் பொருள் ---


    கலைசேரும் திங்கள் அணி தண்டலையாரே - (ஒற்றைக்) கலையுடன் பொருந்திய (பிறைச்) சந்திரனைத் திருச் சடையில் அணிந்த திருத்தண்டலை இறைவரே! கண்ணில் காண மலை மீதில் இருப்பவரைப் பன்றி வந்து பாய்வது எந்த வண்ணம் - கண்ணில் காணுமாறு மலைமேல் இருப்பவரைத் தரையிலிருக்கும் பன்றி வந்து எவ்வாறு பாயும்?, (ஆகையால்), நிலைசேரும் அதிக விதரண சுமுக துரைகளுடன் நேசம் ஆகி - நிலைபெற்ற சிறந்த அறிவும் இன்முகமும் உடைய தலைவர்களுடன் நட்புக்கொண்டு, அவரைப் பலநாளும் அடுத்தவர்க்குப் பலன் உண்டாம் - அவர்களைப் பல நாள்களில் அடைந்து இருந்தவர்க்கு நன்மை உண்டு; பயமும் இல்லை - அச்சமும் உண்டாகாது.


      மலை என்றது கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோரைக் குறிக்கும். பன்றி என்றது, கீழோரைக் குறிக்கும்.  விதரணம் என்னும் வடசொல் அறிவு என்னும் பொருளது. சுமுகம் என்னும் வடசொல் இன்முகம் என்னும் பொருளது. ‘ஆம் பிள்ளாய்' எனத் தொடங்கும் பாடலில், பெரியோரை அடுத்தவர் உயர்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இப் பாடலில் ‘பெரியோரை அடுத்தவர்க்குத் தீமையில்லை, நன்மையும் உண்டாகும் என்பது காட்டப்பட்டது.  “பெரியோருடன் கூடல் பேரின்பம் ஆமே” என்பது திருமூலர் திருமந்திரம். நல்லறிவு, நற்பண்பு மற்றும் அனுபவத்தில் சிறந்த பெரியோருடன் பழகுவது அல்லது அவர்களுடன் கூடி இருப்பது பேரின்பத்தைத் தரும், வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் மிக உயர்ந்த நிலை ஆகும். இது அறத்தை அறிந்து செயல்படவும், மனச் செருக்கை அறுத்து சிவநெறியில் நிலைபெறவும் துணைபுரிகிறது. 


பாடல் 4


“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய்

நாளும் அணுகி நலியாமுன், பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க்

கவிழ்க முகம், கூம்புகஎன் கை.”


இதன் பொருள் ---

காளை வடிவு ஒழிந்து - காளைபோன்ற குமாரப் பருவத்தின் வடிவம் நீங்கி; கையறவோடு - முதுமை காரணமாக உண்டான செயலற்ற நிலையோடு, ஐயுறவாய் – கோழை பொருந்தி இருக்க, நாளும் அணுகி நலியா முன் - இறுதி நாளும் வந்து வருத்தும் முன்பாகவே, பாளை அவிழ் கமுகம் பூஞ்சோலை  பாளைகள் அவிழ்கின்ற பாக்கு மரங்கள் சூழ்ந்துள்ள பூஞ்சோலைகள் நெருங்கிய, ஆரூரற்கு ஆளாய்  திருவாரூரில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்கு அடியவன் ஆகி,  கவிழ்க முகம் – (எனது) முகமானது கவிழ்ந்து வணங்கவேண்டும். கூம்புக என் கை – எனது கைகள் கூப்பித் தொழவேண்டும். 

 

      காளை வடிவு - காளைபோன்ற அழகு (வடிவு – அழகு). காளை என்பது மிடுக்கு உடைய குமாரப் பருவத்தைக் குறித்தது. கையறவு – செயலற்ற நிலை.  ஐயுறவு – ஐ  என்பது கோழையைக் குறிக்கும். முதுமையில் கோழையானது நீங்காமல் இருக்கும். “ஐயினால் மிடறு அடைப்புண்டு” என்பது அப்பர் வாக்கு. மற்றும் ஐ என்னும் சொல்லுக்கு ஐயம் அல்லது சந்தேகம் என்பது பொருளாகக் கொண்டால், வாழ்நாள் இன்று முடியுமோ அல்லது நாளைக்கு முடியுமோ என்று சந்தேகித்தல் என்பதாக அமையும். முகம் என்றது தலையைக் குறிக்கும். “தலையே நீ வணங்காய்” எனவும், “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே, வீழ்த்தவா வினையேன நெடுங்காலமே” எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களையும், “வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து” எனவரும் மணிவாசகத்தையும் கருத்தில் கொள்க. கையானது இறைவனை நோக்கிக் கூம்புதல் வேண்டும். “கைகாள் கூப்பித் தொழீர்” என்றார் அப்பர் பெருமான். “கரமலர் மொட்டித்து இருதயம் மலர” என்றார் மணிவாசகப் பெருமான். கையானது மொட்டுப் போலக் கூம்பி இறைவனை வணங்கவேண்டும், இதயமானது இறைவன் மீது கொண்ட அன்பால் மலர வேண்டும். பொருளும், பிறவும் படைத்தவரைப் பார்த்துக் கைகள் கூம்புதலும், இதயம் மலர்தலும் பயனற்ற செயல்கள்.


31. தீ மகளிரின் வாக்கு நிலை

“பெண் ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்;

பெண் இருவர் பேசில்விழும் வான்மீன்கள்; - பெண்முவர்

பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்

பேசில்உலகு என்னாகுமோ பின்.”


பெண் ஒருத்தி பேசினால் பெரிய நிலவுலகமும் நடுங்கும்.  இருவர் பேசினால் விண்மீன்கள் உதிர்ந்து விழும்.  மூவர் பேசினால் கடலும் வறண்டு விடும்.  பெண்மக்கள் பலரும் பேசத் தொடங்கினால் பின்னர் உலகம் என்ன ஆகுமோ?

    (அதிரும் - நடுங்கும்.  சுவறும் - வற்றும்.) மேற்பாடலில் நன்மனையாளுக்கு (குலமகளுக்கு) இலக்கணம் கூறப்பட்டது. இப் பாடலில் தீய குணம் கொண்ட மகளிரின் நிலை குறித்துச் சொல்லப்பட்டது.


91. அரைக் காசுக்குப் போன அபிமானம்


"கானமரும் கவரியொரு மயிர்படினும்

     இறக்கும்! அது கழுதைக் குண்டோ?

மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!

     சுயோதனனை மறந்தார் உண்டோ?

ஆனகஞ்சேர் ஒலிமுழங்கும் தண்டலையா

     ரே! சொன்னேன்! அரைக்கா சுக்குப்

போனஅபி மானமினி ஆயிரம்பொன்

     கொடுத்தாலும் பொருந்தி டாதே."


இதன் பொருள் ---


ஆனகம் சேர் ஒலி முழுங்கும் தண்டலையாரே – படகம், துந்துபி கலந்த ஓசை முழங்கும் திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! கான் அமரும் கவரி ஒரு மயிர் படினும் இறக்கும் - காட்டில் இருக்கும் கவரிமான் ஒரு மயிரை இழந்தாலும் இறந்து விடும்; அது கழுதைக்கு உண்டோ - அந்தப்  பண்பு  கழுதைக்கு இருக்கிறதோ?, மானமுடன் வாழ்பவனே மாபுருடன் - மானத்தோடு வாழ்கின்றவனே ஆடவரில் சிறந்தவன்; சுயோதனனை மறந்தார் உண்டோ - துரியோதனனை மறந்தார் யார்?, அரைக்காசுக்குப் போன அபிமானம் இனி ஆயிரம் பொன் கொடுத்தாலும் பொருந்திடாதே. – அரைக்காசுக்கு ஆசைப்பட்டு இழந்த பெருமையானது, பிறகு ஆயிரம் பொன்னைக் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதே.


விளக்கம் --- ஆனகம் – படகம், துந்துபி முதலிய வாத்திய வகை. கவரி - கவரிமான். சுயோதனன் (சுய ஓதனன்) - சிறந்த போர்வீரன் (காரணப் பெயர்). ஓதனம் – போர். ஓதனன் - போர்வீரன். இவன் தன் சிற்றப்பன் மக்களான பாண்டவருக்கு அடங்கி வாழ விரும்பாமல் இறுதிவரையில் அவர்களைப் பகைத்துப் போர் செய்து உயிர் துறந்தான். பதினெட்டாம் நாட்போரிலே தனித்து நின்ற சுயோதனனைத் தருமன் பார்த்து மனமிரங்கித் தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும் ஒத்துப் போகும்படியும் கூறினான். அதற்கு அவன் தன்னுடன் பிறந்தார் உறவினர் நண்பரையெல்லாம் தனக்காக மடியவிட்டு, நாடு என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாதென்று கூறினான். ஆகவே, அவன் மானமுடையவனாகக் கருதப்பட்டான். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது' என்பது பழமொழி.


பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க...


“என்துணைவருடன் யானும் ஏவிய நின்தொழில் புரிந்து

வன்துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,

இன்துணைவர் குருகுலத்தார் எனும் இசைபோய்த் திசை ஏற,

நல்துணைவா! ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.”


பதினெட்டாம் நாள் போரில் யாவரையும் இழந்து தனியனாய் வருந்தி நிற்கும் துரியோதனனைப் பார்த்து மனம் இரங்கி, தருமன் பின்வருமாறு சொல்லி, போரை விட்டுச் சமாதானமாய் வாழ்வாயாக என்று சொன்னான். “எனது தம்பியரோடு நானும் நீ ஏவிய சிறுபணிகளைச் செய்துகொண்டு, நல்ல துணையாய் நாங்கள் உனக்கு ஊழியம் செய்ய, நீ அரியணையில் வீற்றிருந்து, குருகுலத்து மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிய துணைவர் ஆனார் என்ற புகழ் எங்கும் போய்ப் பரவ, உலகம் முழுவதும் உனது வெண்கொற்றக் குடைக் கீழ் ஆளுவாயாக"


தருமன் எண்ணத்துக்கு உடன்படாமல், சிறிதும் தாட்சணியம் இன்றி மானமுள்ள துரியோதனன் மறுத்தான்.


“தப்பாது என்மொழி என்று தருமன் மாமதலை, முகில்

ஒப்பான திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக 

செப்பாத வாய்மை எல்லாம் செப்பினான், செப்பவும், அக்

கைப்பான வல்நெஞ்சக் கொடுங் கண்ணன் மறுத்தான்.”


‘நான் சொன்ன சொல் தவறாது’ என்று சிறந்த தருமன், கரிய மேகத்தை ஒத்த திருமேனி உடைய கண்ணபிரான் சாட்சியாக இதுவரையில் யாரும் சொல்லி இராத உறுதியான சொற்களை எல்லாம் சொன்னான். வெறுப்புக் கொண்ட வலிய மனத்தையும், கொடிய தன்மையையும் உடைய துரியோதனன், தருமன் எண்ணுத்துக்கு உடன்படாமல் தாட்சணியம் இன்றி மறுத்தான். (கொடுங் கண்ணன் – தீமை விளைக்கும் கண்ணை உடையவன் ஆகிய துரியோதனன்)


“எம்கிளைஞர். எம்துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,

உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர் வாழ்வின் இனிது அன்றோ,

அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குருதியின் வாய்,

கங்கமும் காகமும் கொட்ட களத்து அவிந்தான் எனும் பெயரே.”


“எனது உறவினரும், எனது தம்பியரும் என் பொருட்டாக மாண்டு போக, உங்கள் அருளைப் பெற்று, அதனால் நான் வாழ்கின்ற உயிர்வாழ்வைக் காட்டிலும், உடல் உறுப்பு எல்லாம் தனித்தனித் துண்டாகி விடவும், ஆறாக இரத்தம் கொட்டும் புண்களின் வாயிலே கழுகுகளும் காக்கைகளும் அலகால் கொத்தவும், போர்க்களத்தில் இறந்தான் என்ற புகழை அடைதல் சிறந்தது அன்றோ?” (கங்கம் – கழுகு)


பாடல் 3

“குந்தி, நடந்து, குனிந்து,ஒருகை கோலூன்றி,

நொந்துஇருமி, ஏங்கி, நுரைத்துஏறி வந்து,உந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.”


இதன் பொருள் ---


நெஞ்சமே – மனமே! குந்தி நடந்து குனிந்து ஒருகைக் கோல் ஊன்றி - (உடல் வலியின்மையால்) குந்திக் குந்தி நடந்து, உடல் வளைந்து, ஒரு கையில் கோலினை ஊன்றி; நொந்து இருமி ஏங்கி நுரைத்து ஏறி வந்து உந்தி ஐ ஆறு பாயாமுன் - வருந்தி இருமி ஏங்கி நுரைகொண்டு மிக்கு வந்து வலிந்து தள்ளி கோழையானது ஆறுபோலத் தொடர்ந்து வாயின் வழியே பாய்ந்து ஒழுகாத முன்னம்; ஐயாறு வாயால் அழை – சிவபரம்பொருள் எழுந்தருளி உள்ள திருவையாற்றினை வாய் திறந்து கூறி அழைப்பாயாக.


குந்தி நடந்து - தொடர்ந்து நடக்க வலியின்மையால் அடிக்கடி குந்திக்குந்தி நடந்து; குந்துதல் - உட்காரும் நிலை; குனிந்து - உடல் வளைந்து; கூன்கொண்டு; கோல் ஊன்றி – கோலை ஊன்றி, ஊன்றுகோலின் துணை இல்லாமல் துணையில்லாமல் உடல் தாங்கி நடக்க இயலாமை; நொந்து இருமி - நெஞ்சு வருந்தி இருமல் கொண்டு; ஏங்கி - வருந்தி முயன்று; உந்தி - உட்காற்றினால் வலிந்து தள்ளப்பட்டு; ஐ - கோழை - (கபம்). கோழையானது தொண்டையில் அடைக்கும்போது, எளிதில் உமிழ வராது. வருந்தி இருமினால், உள்காற்றினால் உந்தப்பட்டு கோழையானது வழவழ என்று வாய் வழியாக வழுகும். 


“ஈளை மேலிடா, வழவழ என உமிழும் அது கொழகொழ என ஒழுகி விழ  வாடி” என்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சொல்லப்பட்டு உள்ளது. 


“பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்,

ஐமிகுத்த கண்டராய், அடுத்துஇரைப்ப தன்முனம்,

மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்

பைமிகுத்த பாம்புஅரைப் பரமர்காழி சேர்மினே.”           --திருஞானசம்பந்தர்.


இதன் பொருள் ---


மிகுதியாகப் பொய் பேசும் வாயினை உடையவராய், பொறாமையோடு பேசுகின்ற நீங்கள், (முதுமை வந்த காலத்தில்) கோழைமிகுந்த கண்டத்தினை உடையவராய், இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளி உள்ள சீர்காழியை அடைவீர்களாக.


“ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு

     ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,

மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில்

     இடுவதன் முன், மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு, அகம்

     குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே

     கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.”. –அப்பர்.


இதன் பொருள் ---


கோழையினால் குரல்வளையானது அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டி, பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே திருக் கன்றாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள நடுதறி அப்பர் என வழங்கப்படும் சிவபரம்பொருளைக் காணலாமே.


“ஐயாறு வாயால் அழை” என்றது, திருவையாற்றில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வாயார அழைத்தல் ஒன்று. மற்றொன்று, திருத்தலத்தின் பெயரைச் சொல்லுதலும் அங்கு எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயரைச் சொல்லுதலோடு ஒக்கும் என்பது. “ஐயாறே! ஐயாறே! என்பீராகில் அல்ல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்பது அப்பர் தேவாரம். இவ்வாறே, “திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே” எனவும், “திருக் கொடுமுடி என்றலும் தீவினை கருக்கெடும், இது கைகண்ட யோகமே” எனவும் பிற திருத்தலங்கள் குறித்து அப்பர் பெருமான் பாடி உள்ளார் என்பதை அறிக.


30. இல்லாளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

“அன்னை தயையும், அடியாள் பணியும்,மலர்ப்

பொன்னின் அழகும், புவிப்பொறையும், - வன்னமுலை

வேசி துயிலும், விறல்மந் திரிமதியும்,

பேசில் இவையுடையாள் பெண்.” — நீதிவெண்பா


சொல்லப் புகுமிடத்து, தாயைப் போன்ற அன்பும், வேலையாளைப் போலத் பணிபுரிதலும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளைப் போல அழகும், நிலத்தைப் போல பொறுமையும், அழகிய தனங்களை உடைய விலைமாதரைப் போலத் துயிலும்முன் தரும் இன்பமும்,  திறன் மிகுந்த அமைச்சரைப் போல அறிவும் ஆகிய ஆறு பண்புகளையும் உடையவளே நன்மனையாள் என்று சொல்லத் தக்கவள் ஆவாள்.


(அடியாள் - பணிவிடை செய்பவள்.  பொன் - இலக்குமி.  புவி - பூமி.)


90. புற்றுமண்ணின் பயன்


தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்

     பிரமகுண்டம் தன்னில் ஏய்மண்

மனமேவும் மணியுடனே மந்திரமும்

     தந்திரமும் மருந்தும் ஆகி,

இனமேவும் தண்டலையார் தொண்டருக்கு

     வந்தபிணி யெல்லாம் தீர்க்கும்!

அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம்

     வேறும்உள அவிழ்தந் தானே.


இதன் பொருள் ---


    தனம் மேவும் புற்றடிமண் குருந்தடி மண் பிரமகுண்டம் தன்னில் ஏய் மண் - செல்வம் மிக்க புற்றுமண்ணும், குருந்த மரத்தடி மண்ணும், பிரமகுண்டத்தில் உள்ள மண்ணும், மனம் மேவும் மணியுடனே மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி - உள்ளம் விரும்பும் மணியும் மந்திரமும் ஆராய்ச்சியும் மருந்தும் என ஆகி,  இனம்  மேவும் தண்டலையார் தொண்டருக்கு வந்த பிணி எல்லாம் தீர்க்கும் - உறவாகிய திருத்தண்டலை இறைவரின் அடியவர்க்கு வந்த நோயை எல்லாம் போக்கும்; வேறும் உள அவிழ்தம் அனுபோகம் தொலைந்தவுடன் சித்திஆம் - மற்றும் உள்ள மருந்துகள் (முன்வினைப்) பயன் கழிந்த பிறகே நலந்தரும்.


      இறைவன் இருப்பிடத்தில் உள்ள மண் அடியவர் நோயை எல்லா வகையினும் எப்போதும் போக்கும். வேறு மணியும் மருந்தும் மந்திரமும் பழவினைப் பயன் நன்றாக இருந்தால் மட்டும் நோய்களை நீக்கும்; தீமையாக இருந்தால் நோய்களை நீக்கமாட்டா.


பாடல் 2



                   திருச்சிற்றம்பலம்

“கடுஅடுத்த நீர்கொடுவா, காடிதா என்று,

நடுநடுத்து, நாஅடங்கா முன்னம் பொடியடுத்த

பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்

கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.”

                    திருச்சிற்றம்பலம்

இதன் பொருள் ---

கடு அடுத்த நீர் கொடுவா – கடுக்காய் இட்டுச் சுருங்கக் காய்ச்சிய நீரைக் கொண்டு வா, காடி தா – பழஞ் சோற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்து தருவாயாக, என்று – என்று சூழ்ந்து உள்ளவர்கள் கூறவும்,  நடுநடுத்து நா அடங்கா முன் – நடுக்கத்துடன் பேச்சுக் குழறி அடங்கும் முன்பாக,  பொடி அடுத்த பாழ்க் கோட்டம் சேரா முன் – சாம்பல் நிறைந்த சுடுகாட்டினைச் சென்று அடையாத முன்னமே, பன்மாடத் தென் குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட – பல மாடங்களை உடைய (கும்பகோணம் என வழங்கப்படும்) தென்குடந்தை என்னும் திருத்தலத்தில், “கீழ்க்கோட்டம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள திருநாகேச்சுரப் பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்துக் கிடப்பாயாக.

கடு – கடுக்காய். இது பித்தத்தைப் போக்குவது என்று சொல்லுவர் மருத்துவ நூலார். கடு அடுத்த நீர் - கடுக்காயைப் பொடி ஆக்கி, கொட்டையை நீக்கி, நீரில் இட்டுச் சுருங்க்க் காய்ச்சிய நீர். காடி – பழங்கஞ்சி, சோற்று நீர். நாக்கு வறட்சியால் நடுக்கம் எய்தி, பேச்சு அடங்கும். இது உயிர் போகும் தறுவாயில் நிகழும் குறிகளுள் ஒன்று. “பவனமாய்ச் சோடையாய் நா எழாப் பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு, சிவனதாள் சிந்தியாப் பேதைமார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். பொடி -  சாம்பல். பாழ்க் கோட்டம் – சுடுகாடு.

தென்குடந்தை என்பது, தென்னாட்டில் உள்ள கும்பகோணம் எனப்படும் ஒரு சிறந்த திருத்தலம். அதி திருத்தலத்தில், கீழ்கோட்டம் என்னும் திருக்கோயிலில் திருநாகேச்சுர சுவாமியாகச் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். தென் என்னும் சொல் திசையைக் குறிப்பதோடு, ஞானம் என்னும் பொருளையும் தரும். “கீழ்க்கோட்டம்” என்பது திருமுறையில் ஈடுபாடு உள்ளவர்க்கே விளங்கும். நாகேசுவர சுவாமி கோயில் என்று கேட்டால் எளிதில் வழி சொல்லுவார்கள். 


29. ஞானியரின் சிறப்பு

“வென்றி வரி உகிரும், வெண்கவரி மான்மயிரும்,

துன்றுமத யானைச் சுடர்மருப்பும், - நின்றநிலை

வேறுபடினும் சிறப்பாம்; மெய்ஞ்ஞானி நின்றநிலை

வேறுபடினும் சிறப்பு ஆமே.” — நீதிவெண்பா


வெற்றியை உடைய புலியினது நகமும், வெண்மையான கவரிமானின் மயிரும், நிறைந்த மதத்தை உடைய யானையினது ஒளி பொருந்திய தந்தமும், தாம் நின்ற நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவைகளுக்குப் பெருமையே மிகும்.  அதுபோல, உண்மையான அறிவுடைய பெரியோர் தாம் இருந்த நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவர்களுக்குப் பெருமையே உண்டாகும்.

        (கவரி - ஒருவகை மான்.  துன்று - மிகுந்த.  மருப்பு - பல், தந்தம்.)


89. பொல்லாத சூது


“கைக்கெட்டா தொருபொருளும்! கண்டவர்க்கு

     நகை யாகும்! கனமே! யில்லை!

இக்கட்டாம் வருவதெல்லாம்! லாபமுண்டோ?

     கவறு கையில் எடுக்கலாமோ?

திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்

     வளநாட்டிற் சீச்சீ யென்னச்

சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்

     சூது பொல்லாச் சூது தானே.”


இதன் பொருள் ---


    திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார் வளநாட்டில் - எட்டுத் திக்கினும் பரவிய புகழை உடைய திருத்தண்டலை இறைவரின் வளம்பொருந்திய நாட்டிலே, சீச்சீ என்னச் சொக்கட்டான் எடுத்தவர்க்கு - சீச்சீ என இகழும்படி சொக்கட்டானை எடுத்தவர்க்கு, ஒரு பொருளும் கைக்கு எட்டாது - எப் பொருளும் கிடைக்காது; கண்டவர்க்கு நகை ஆகும் - பார்த்தவர் இகழ்வர்; கனமே இல்லை - மதிப்பே இராது; வருவது எல்லாம் இக்கட்டாம் - வருவது முற்றும் துன்பமே ஆகும்; லாபம் உண்டோ - ஊதியமும் இல்லை; (ஆகையால்), கவறு கையில் எடுக்கலாமோ – சூதாடு கருவியைக் கையாலும் தொடலாமோ?, சொக்கட்டான் சூது பொல்லாச் சூதுதானே - சொக்கட்டான் எனும் சூதாட்டம், தீய சூதாட்டம் ஆகும்.

“இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும் திரு நீக்கப்படார் தொடர்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது அறிக. பின்வரும் பிரமாணங்களையும் கொண்டு சூது தீது என்பதை அறிக.

      

“அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,

     அழகும், வென்றியும், தம்தம்

குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,

     குலமும், இன்பமும், தேசும்,

படியும், மாமறை ஒழுக்கமும், புகழும், முன்

     பயின்ற கல்வியும் சேர

மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின் மேல்

     வைப்பரோ? மனம் வையார்.”    – வில்லிபாரதம் 

இதன் பொருள் ---

      தலைமையும், பராக்கிரமமும், பலமும், சேனையும்-, அழகும் வெற்றியும், ஜயமும்,  அவரவரது  குடிப்பிறப்பின் மேன்மையும்,  மானமும், செல்வமும், பெருமையும், குலமும் இன்பமும்,  புகழும், ஒளியும், நற்குணமும், சிறந்த வேதங்களில் கூறிய விதிமுறைப்படி ஒழுகும் நல்லொழுக்கமும், முன்பு பயின்ற கல்வியும் ஆகிய இவையெல்லாம் சூதாடுவார்க்கு ஒருசேர அழியும். ஆதலால், அறிவினால் அறிய வேண்டுபவற்றை அறிந்தவர்கள், சூதின் மேல் மனத்தைச் செலுத்தமாட்டார்கள்.


“மீதெடுத்த வஞ்சராகி வெகுளி செய்தல், பிறர் பெருங்

கோதெடுத்து உரைத்த நண்பு கொண்டயிர்த்தல், கொடியவெம்

சூதெடுத்து விழைதலுற்ற சூள் பிழைத்தல் இன்னவே

தீதெடுத்த நூலின் முன்பு தீயஎன்று செப்பினார்.”    --வில்லிபாரதம்

இதன் பொருள் ---

    மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் - அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை உடையவர்களாய்க் கோபம் கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல் - பிறரது பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் - (ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது எடுத்து விழைதல் - மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக் கொண்டு விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் - சொன்ன உறுதிமொழி தவறுதலும், இன்ன - (ஆகிய) இச்செயல்களை, முன்பு - முற்காலத்திலேயே, தீது எடுத்த நூலில் - பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாத்திரங்களில், தீய என்று செப்பினார் – தீமையானவை என்று சொன்னார்கள்.

சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத் தொடங்கிய தருமபுத்திரன் அதற்கு இனமாக உள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும் உடன் கூறினான்.


“சூது விரும்பேல்.” ---  ஆத்திசூடி.

“சூதும் வாதும் வேதனை செய்யும்.”  --- கொன்றைவேந்தன்.


“ஓதலும், ஓதி  உணர்தலும், சான்றோரால்

மேதை எனப்படும் மேன்மையும்,-சூது

பொரும் என்னும் சொல்லினால் புல்லப் படுமேல்

இருளாம் ஒருங்கே இவை. --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

    சூதாடுபவன் என்னும் பழிச் சொல்லால் ஒருவன் பற்றப்படுவானாயின், அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும் ஆகிய இவை முழுதும் அவனை விட்டு மறையும்.


பொது --- 1121. தத்துவத்துச் செயலொடு

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

தத்துவத்துச் செயலொடு (பொது)


முருகா! 

அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.


தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

     தத்தனத் தத்ததன ...... தனதான


தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு

     சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ்


சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி

     சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை


சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு

     தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத்


துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி

     சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும்


வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

     வெற்றிசத் திக்கரக ...... முருகோனே


வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

     விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா


கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்

     கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா


கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்

     கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.


                       பதம் பிரித்தல்


தத்துவத்துச் செயலொடு ஒட்டில் பட்டக் குருகு

     சத்து விட்டப்படி பொல் ...... அடியேனும்,


சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி,

     சத்துவத்தைப் பிரிய ...... விடும்வேளை,


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு

     தொக்கு சற்றுக் கடையன் ...... மிடிதீர,


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி

     சுற்ற விட்டுக் கடுகி ...... வரவேணும்.


வித்தக அத்தி, பவள தொப்பை அப்பற்கு இளைய!

     வெற்றி சத்திக் கரக ...... முருகோனே!


வெற்பும் எட்டுத் திசையும் வட்டம் இட்டுச் சுழல

     விட்ட பச்சைச் சரண ...... மயில்வீரா!


கத்தர், நெட்டுச் சடையர், முக்கண் நக்கக் கடவுள்,

     கச்சி அப்பர்க்கு அருள்செய் ...... குருநாதா!


கற்ப தத்தைக்கு உருகி, உன் பதத்துக் குறவர்

     கற்பினுக்கு உற்று புணர் ...... பெருமாளே.


பதவுரை

வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய --- ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!


வெற்றி சத்திக் கர அக முருகோனே --- வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!


வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா --- கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!


கத்தர் --- உயிர்களுக்குத் தலைவரும், 


நெட்டுச் சடையர் --- நீண்ட திருச்சடையை உடையவரும்,


முக்க(ண்) --- மூன்று திருக்கண்களை உடையவரும்,


அக்கக் கடவுள் --- அக்கமணி மாலையினை அணிந்தவரும்,


கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா --- காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!


கற்ப தத்தைக்கு உருகி --- கற்பக மரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு,


உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே --- 

தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1


ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி --- கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிட்டது போன்று,


தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று --- பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, , 


படியில் விட்டு விட்டுக் குளறி --- இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து,


சத்துவத்தைப் பிரிய விடும் வேளை --- உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில்,


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு --- தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு  கூட்டி,


சற்று கடையன் மிடி தீர --- எளிதாக அடியேனது வறுமை தொலைய,


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் --- பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்


பொழிப்புரை

ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!

வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!

கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!

உயிர்களுக்குத் தலைவரும், நீண்ட திருச்சடையை உடையவரும், மூன்று திருக்கண்களை உடையவரும், அக்கமணி மாலையினை அணிந்தவரும், பெருந்தொண்டை நன்னாட்டில் காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!

கற்பகமரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு, தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1

கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்தது போன்று, பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில், தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு  கூட்டி, எளிதாக அடியேனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்

விரிவுரை

வித்தக, அத்திப் பவள, தொப்பை அப்பற்கு இளைய --- 

வித்தகம் – அறிவு. இங்கே ஞானத்தைக் குறிக்கும்.

அத்தி --- யானை. யானை முகத்தை உடையவர் மூத்தபிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமான்.

 மூத்த பிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமானை, “பவள மதயானை” என்றார் பிறிதொரு திருப்பகழில். யானையின் நிறம் கறுப்பு. ஆனால், விநாயகப் பெருமான் திருமேனியின் நிறம் பவளம். அவரது தந்தையார் ஆகிய சிவபரம்பொருளும் "பவளம் போல் மேனியன்" ஆவார்.

 

வெற்றி சத்திக் கர அக முருகோனே --- 

வெல் என்னும்சொல்லை அடிப்படையாக உடையது வேல் என்னும் ஆயுதம். சத்தியாகிய உமையம்மை தந்ததாலும், சத்தியை உடையதாலும், அது சத்திவேல் எனப்பட்டது. 

கரக என்னும் சொல்லை, கர+அக என்று பிரித்துப் பொருள் கொள்க. 



வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா --- 

சரணம் --- மயில் தோகை. அது தோகையினை உடைய மயிலைக் குறிக்கும். 

இங்கே குறித்துள்ள மயிலின் ஆற்றல் குறித்து, அடிகளார் மயில் விருத்தப் பாடலில் பின்வருமாறு காட்டி உள்ளார்...


“சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி

   பட்டு க்ரவுஞ்ச சயிலம்

தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு

   தனி வெற்பும் அம்புவியும் எண்


திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு

   சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர்

   திடுக்கிட நடிக்கு மயிலாம்”


கத்தர் --- 

கர்த்தர் என்னும் சொல், கத்தர் என வந்தது. கர்த்தர் – தலைவர், கடவுள்.


நெட்டுச் சடையர் --

நீண்ட திருச்சடையை உடையவர் சிவபெருமான். “தாழ்சடை எட்டுத் திசையும் வீசி” என்றார் காரைக்கால் அம்மையார்.


முக்கணக்கக் கடவுள் --- 

சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றைத் தனது திருக்கண்களாக உடையவர் உடையவர் சிவபெருமான். எனவே, முக்கண்ணர் எனப் போற்றபடுகிறார். “நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன்” என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் அருளியமை காண்க.

முக்கண் + நக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களை உடைய திகம்பரர் என்று கொள்ளலாம்.

முக்கண் + அக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களையும், அக்கமணி மாலையையும் உடையவர் என்றும் கொள்ளலாம்.


கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா --- 

கச்சி அப்பர் – காஞ்சிபுரம் என வழங்கபடும் திருகச்சியம்பதியில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள். அவருக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்து அருளியவர் முருகப் பெருமான்.

முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசித்த வரலாறு

வேதங்களுக்கு முதல் எழுத்தாக உள்ளது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள். "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும், வேதங்களுக்கு முதலாகவும், பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும், காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும், முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது. 

திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு செய்தல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினீர்?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப்பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப்பொருளை முறையோடு உரைத்தருளினார்.

தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான், ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை என்னும் திருத்தலமானது, "பிரணவ அருத்த நகர்" என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.


“அருள்உரு ஆகும் ஈசன்  அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி  முறுவல் செய்து, அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று  மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித் 

திருமணிக் குறங்கின் மீது  சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.”


“காமரு குமரன் சென்னி  கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால்  தழுவியே, "அயனும் தேற்றா 

ஓம்என உரைக்கும் சொல்லின்  உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில், அதனை இன்னே  புகல்" என இறைவன் சொற்றான்.”


"முற்றுஒருங்கு உணரும் ஆதி  முதல்வ! கேள், உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன்  பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத் தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,  மறையினால் இசைப்பது அல்லால்".


“என்றலும், நகைத்து, "மைந்த!  எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,  சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை  உரைத்தனன், உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப  ஞான நாயகனாம் அண்ணல்.”


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....” --- (விறல்மாரன்) திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


“அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.”  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.


“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.”   ---  தணிகைப் புராணம்.


“மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!”

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


“வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.” --- திருமந்திரம்.


“கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு, எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....” --- குமரகுருபரர்.


“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.”  --- அபிராமி அந்தாதி.


“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.” --- அபிராமி அந்தாதி.


“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.”  --- சிவஞான சித்தியார்.


கற்ப தத்தைக்கு உருகி --- 

கற்பம் – தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகிய கற்பக மரத்தைக் குறிக்கும்.

தத்தை – கிளி. பெண்களைக் கொடி என்றும் கிளி என்றும் கூறுவது பாவலர் மரபு. 

தேவலோகத்தில் வளர்ந்த கிளியாகிய தெய்வயானை அம்மையாரை முருகப் பெருமான் திமணம் புணர்ந்து அவரது அன்புக்கு உளம் உருகினார்.


குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே ---

குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடிச் சென்று அவரை ஆட்கொண்டு திருமணம் புணர்ந்தவர் முருகப் பெருமான்.


ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி --- 

ஒட்டு --- பறவையைப் பிடிக்கும் கண்ணி.

குருகு – பறவை.

சத்து – வலிமை.

கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிடும்.


தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று --- 

பொல் – போல் என்பது பொல் என்று வந்த்தாகக் கொள்ளலாம். பொல்லாதவன் என்றும் கொள்ளலாம்.

சச்சில், சச்சு – சிறுமை, பதர். (சரசுவதி என்னும் அருமையான பெயரை, சச்சு என்று அழைப்பது எவ்வளவு கேவலம் என்று இதன் மூலம் தெரியவரும்.)

உயிரானது உண்மை அறிவைப் பெறுவதற்குத் துணை புரிபவை தத்துவங்கள். அவற்றின் மூலம் அறிவைப் பெற்று, அவற்றைக்ங கடந்து மேல் ஏறிச் சென்று உண்மை ஞானத்தைப்பெற முயலுதல் வேண்டும். ஒரு வகுப்பிலே சிலகாலம் பயின்று மேல்வகுப்புக்குச் செல்வதுபோல இது.  “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான். (சோபானம் – படி)


படியில் விட்டுவிட்டுக் குளறி சத்துவத்தைப் பிரிய விடும் வேளை --- 

படி – உலகம். உலகவாழ்வில் தடுமாற்றத்தை அடைதல் கூடாது.

சத்துவம் – உண்மைப்பொருள். மெய்ப்பொருள். பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள் நிலையில், மெய்ப்பொருள் தோன்றாது.


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு --- 

ஆணவத்தால் அறியாமை அடைந்த உயிர் அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படும்போது பலவித நிலைகளை அடையும். அவ்வாறு அடையும் நிலைக்கு அவத்தை என்று பெயர்.

அவத்தை 1. காரணாவத்தை, 2. காரியாவத்தை என இருவகைப்படும்.

காரணாவத்தை 1. கேவல நிலை, 2. சகல நிலை, 3. சுத்த நிலை என மூவகைப்படும்.

கேவலம் – தனிமை. உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்றதால் கேவல நிலை எனப் பெற்றது. அறிவுப் பொருளாகிய உயிர், அறிவே சிறிதும் இல்லாமல் தன்னையும் உணராமல் கிடக்கும். ஆணவ மலத்தில் மூழ்கிக் கிடப்பதால் கேவல நிலை எனப் பெற்றது.

ஆணவ இருளில் மூழ்கிக் கேவல நிலையில் கிடந்த உயிர்க்கு இரங்கி இறைவன் மாயையிலிருந்து உடல், கருவி, உலகம், நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுப்பான். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் எனக் கூறுவர். இவற்றின் துணையால் ஆணவமல மறைப்புச் சிறிதே நீங்கப் பெற்று அறிவும் செயலும் ஓரளவு விளங்கி உலக வாழ்வில் உயிர் செயல்படும். உலக வாழ்வில் முன்செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தும் நல்வினை, தீவினைகளைச் செய்தும் மாறி மாறி இறந்தும், பிறந்தும் உயிர் சுழன்று கொண்டே இருக்கும். இந்நிலைக்குச் சகல நிலை என்று பெயர்.

உயிர் கேவலம், சகலம் ஆகிய இரண்டையும் நீங்கி இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை சுத்தம் எனப் பெறும். கேவலம் இருள்நிலை; இரவு போன்றது. சகலம் மருள்நிலை; பகல் போன்றது. சுத்தம் தெருள்நிலை; இரவு பகலற்ற நிலை எனப்படும்.


     “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

      மாசறு காட்சி யவர்க்கு”        --- திருக்குறள்.


இருள் – கேவலம், மருள் – சகலம், இரண்டு நீங்கிய மாசறு காட்சியர்க்கு இன்பம் பயத்தல் – சுத்தம். இம்மூன்று அவத்தைகளும் பல பிறப்புக்களில் நடைபெறுவனவாகும்.

அவ்வாறு சுத்த நிலையை அடைந்த ஆன்மா பாசங்களில் இருந்து விடுபட்டு இருக்கும் நிலை முத்திநிலை எனப்படும்.  "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். உடலோடு வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே, பாசநீக்கம் பெற்றோர் “சீவன்முத்தர்” எனப்படுவர். அப்படி சிவன்முத்தப் பதவியைப் பெற்று உள்ள சிறந்த அடியார்களோடு கூடி ஒருவன் இருந்தால், அவனும் அந்த நிலையை அடைவான் என்பதால் அடியார்களோடு கூட்டி வைக்கத் திருவருள் துணை புரியவேண்டும்.


கடையன் மிடி தீர --- 

மிடி – வறுமை. இங்குப் பொருள் வறுமையைக் குறிக்காது. அருள் வறுமையைக் குறிக்கும்.


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் --- 

துப்பு – பவளம்.

சரணம் – மயில்தோகை. 

பச்சை – பச்சைமயில்.

வெற்றிப் புரவி – வேகமாகச் செல்லும் குதிரை. வேகமாகச் செல்லுவது குதிரை என்பதை நாம் அறிவோம். முருகப் பெருமான் ஏறிவரும் மயிலின் வேகத்தை நம்மால் அறியமுடியாது. எனவே, அறிந்த ஒன்றைக் காட்டி, அறியாத ஒன்றை விளக்கினார் சுவாமிகள்.

அருள் புரிதற்கு விரைந்து வருதல் வேண்டும் என்பதைக் குறிக்க, வேகமாகச் செல்லும் மயிலின் மீது வந்து அருள வேண்டும் என்றார்.


கருத்துரை

முருகா! அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.







கருணை மதம் பொழியும் யானை

கருணை மதம் பொழியும் யானை ----- சிவனுடைய கோயிலிலே இரண்டு யானைகள் இருக்கும். ஒன்று அசையும் யானை. மற்றொன்று அசையாத யானை. அசையும் யானை இல்லை என்...