62. சகுனம் - 1

 

                           62. சகுனம் - 1


"சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு

     சூகரம் கீரி கலைமான்

  துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை

     சொற்பெருக மருவும் ஆந்தை


வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

     விளங்கும்இரு நா உடும்பு

  மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்

     வெற்றியுண் டதிக நலம்ஆம்;


ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,

     ஒருதுடை யிருத்தல், பற்றல்,

  ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன

     உபசுருதி சொல்இ வையெலாம்


அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

முதியோர் பரவும் அமலனே --- அறிவில் சிறந்த பெரியோர் வணங்கித் துதிக்கின்ற தூயவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,   சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

சொல்அரிய கருடன் --- சொல்லுதற்கு அரிய கருடன், 

வானரம் --- குரங்கு, 

அரவம் --- பாம்பு, 

மூஞ்சிறு --- மூஞ்சுறு, 

சூகரம் --- பன்றி, 

கீரி - கீரி, 

கலைமான் --- கலைமான், 

துய்ய பாரத்வாசம் --- தூய்மை பொருந்திய கரிக்குருவி என்றும், வலியன் குருவி என்றும் அழைக்கப்படுகின்ற ஆனைச் சாத்தன் என்னும் பறவை,

அட்டை --- அட்டை, 

எலி --- எலி, 

புன்கூகை --- இழிந்த கோட்டான், 

சொல்பெருக மருவும் ஆந்தை --- அதிகம் பேசப்படும் ஆந்தை, 

வெல் அரிய கரடி --- வெல்லுதற்கு அரிய கரடி, 

காட்டு ஆன் --- காட்டுப் பசு, 

பூனை --- பூனை, 

புலி --- புலி,  

மேல் விளங்கும் இரு நா உடும்பு --- மேலாக விளங்குகின்ற இரண்டு நாக்குகளை உடைய உடும்பு, 

மிக உரைசெய் இவையெலாம் --- என்று மிகுதியாகச் சொல்லப்படும் இவை யாவும், 

வலம் இருந்து இடம் ஆகில் வெற்றி உண்டு --- வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் சென்றால் வெற்றி உண்டாகும்.

அதிக நலம் ஆம் --- மிகுந்த நலமும் உண்டாகும், 

ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல் --- விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், 

ஒரு துடை இருத்தல் --- ஒற்றைக் காலில் நிற்றல், 

பற்றல் --- வந்து கையைப் பிடித்தல், 

ஒரு தும்மல் --- ஒற்றைத் தும்மல், 

ஆணையிடல் --- ஆணையிடுதல், 

இருமல் --- இருமுதல், 

போகேல் என்ன உப சுருதி சொல் --- போகாதே என்று காதில் விழும்படியாகக் கூறுதல்,

இவை எல்லாம் அல்லல் தரும் --- இவைகள் எல்லாம் அல்லலைத் தருபவை, 

நல்ல அல என்பர் --- நன்மையை விளைப்பன அல்ல என்று (அறிவில் சிறந்த முதியோர்) கூறுவர்.

விளக்கம் - சகுனம் என்னும் சொல்லுக்கு பறவை என்பது பொருள். பறவைகள் வலம் இருந்து இடமாதல் முதலிய நன்மை தீமைக் குறி என்று பொருள். நிமித்தம் என்றும் பொருள்படும். துர் நிமித்தம், நல்நிமித்தம் என்று சொல்லப்படும். 

உற்பாதம் என்பது விளையப் போகும் தீமைகளை அறிவிக்கும் குறி என்று சொல்லப்படும்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...