64. சகுனம் - 3

 


                       64. சகுனம் - 3

                              ---


"தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,

     தவசி, சந்நாசி, தட்டான்,

  தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறகுதலை,

     தட்டைமுடி, மொட்டைத் தலை,


கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,

     கதித்ததில தைலம், இவைகள்

  காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,

     கனி, புலால் உபய மறையோர்


நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதகமங்கை

     நாளும்வண் ணான்அ ழுக்கு

  நசைபெருகு பாற்கலசம், மணி, வளையல் மலர்இவைகள்

     நாடியெதிர் வரநன் மையாம்;


அலைகொண்ட கங்கைபுனை வேணியாய்! பரசணியும்

     அண்ணலே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அலைகொண்ட கங்கைபுனை வேணியாய் - அலையை உடைய கங்கையை அணிந்த திருச்சடையை உடையவனே!, பரசு அணியும் அண்ணலே - மழு ஏந்திய பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தலைவிரித்து எதிர்வருதல் ஒற்றைப் பிராமணன் தவசி சந்நாசி தட்டான் - தலைவிரி கோலமாக ஒருவர் எதிர்வருதலும், ஒற்றைப் பார்ப்பானும், தவம் புரிவோனும், துறவியும், தட்டானும், 

தனம் இலா வெறுமார்பி, மூக்கறை, புல் விறகுதலை, தட்டைமுடி, மொட்டைத் தலை - தனம் இல்லாத மார்பினளும், மூக்கில்லாதவனும், புல்தலையனும், விறகு தலையனும், சப்பைத் தலையும், மொட்டைத் தலையும், 

கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான், கதித்த தில தைலம் - அணிகலம் இல்லாத பெண்களும், குசவன் பாண்டமும், வாணியன் மிகுந்த எண்ணெயும், 

இவைகள் காண எதிர் வர ஒணா - இவை கண்காண எதிர் வருதல் தகாதன;

நீர்க்குடம், எருக் கூடை, கனி, புலால், உபய மறையோர் - நீர்க் குடமும், எருக் கூடையும், பழமும் இறைச்சியும், இரட்டைப் பார்ப்பனரும், 

நலம்மிகு சுமங்கலை, கிழங்கு, சூதக மங்கை, நாளும் வண்ணான் அழுக்கு - நன்மைமிக்க மங்கல மடந்தையும், கிழங்கும், பூப்புப் பெண்ணும், நாளும் எடுக்கும் வண்ணான் அழுக்கும், 

நசை பெருகு பால்கலசம், மணி, வளையல், மலர் - விருப்பம் ஊட்டும் பாற்குடமும், மணியும், வளையலும், மலரும், 

இவைகள் நாடி எதிர் வர நன்மை ஆம் - இவை தேடி எதிரே வரின் நலம் ஆகும்.


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...