பாடல் 3

“குந்தி, நடந்து, குனிந்து,ஒருகை கோலூன்றி,

நொந்துஇருமி, ஏங்கி, நுரைத்துஏறி வந்து,உந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.”


இதன் பொருள் ---


நெஞ்சமே – மனமே! குந்தி நடந்து குனிந்து ஒருகைக் கோல் ஊன்றி - (உடல் வலியின்மையால்) குந்திக் குந்தி நடந்து, உடல் வளைந்து, ஒரு கையில் கோலினை ஊன்றி; நொந்து இருமி ஏங்கி நுரைத்து ஏறி வந்து உந்தி ஐ ஆறு பாயாமுன் - வருந்தி இருமி ஏங்கி நுரைகொண்டு மிக்கு வந்து வலிந்து தள்ளி கோழையானது ஆறுபோலத் தொடர்ந்து வாயின் வழியே பாய்ந்து ஒழுகாத முன்னம்; ஐயாறு வாயால் அழை – சிவபரம்பொருள் எழுந்தருளி உள்ள திருவையாற்றினை வாய் திறந்து கூறி அழைப்பாயாக.


குந்தி நடந்து - தொடர்ந்து நடக்க வலியின்மையால் அடிக்கடி குந்திக்குந்தி நடந்து; குந்துதல் - உட்காரும் நிலை; குனிந்து - உடல் வளைந்து; கூன்கொண்டு; கோல் ஊன்றி – கோலை ஊன்றி, ஊன்றுகோலின் துணை இல்லாமல் துணையில்லாமல் உடல் தாங்கி நடக்க இயலாமை; நொந்து இருமி - நெஞ்சு வருந்தி இருமல் கொண்டு; ஏங்கி - வருந்தி முயன்று; உந்தி - உட்காற்றினால் வலிந்து தள்ளப்பட்டு; ஐ - கோழை - (கபம்). கோழையானது தொண்டையில் அடைக்கும்போது, எளிதில் உமிழ வராது. வருந்தி இருமினால், உள்காற்றினால் உந்தப்பட்டு கோழையானது வழவழ என்று வாய் வழியாக வழுகும். 


“ஈளை மேலிடா, வழவழ என உமிழும் அது கொழகொழ என ஒழுகி விழ  வாடி” என்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சொல்லப்பட்டு உள்ளது. 


“பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்,

ஐமிகுத்த கண்டராய், அடுத்துஇரைப்ப தன்முனம்,

மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்

பைமிகுத்த பாம்புஅரைப் பரமர்காழி சேர்மினே.”           --திருஞானசம்பந்தர்.


இதன் பொருள் ---


மிகுதியாகப் பொய் பேசும் வாயினை உடையவராய், பொறாமையோடு பேசுகின்ற நீங்கள், (முதுமை வந்த காலத்தில்) கோழைமிகுந்த கண்டத்தினை உடையவராய், இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளி உள்ள சீர்காழியை அடைவீர்களாக.


“ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு

     ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,

மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில்

     இடுவதன் முன், மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு, அகம்

     குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே

     கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.”. –அப்பர்.


இதன் பொருள் ---


கோழையினால் குரல்வளையானது அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டி, பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே திருக் கன்றாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள நடுதறி அப்பர் என வழங்கப்படும் சிவபரம்பொருளைக் காணலாமே.


“ஐயாறு வாயால் அழை” என்றது, திருவையாற்றில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வாயார அழைத்தல் ஒன்று. மற்றொன்று, திருத்தலத்தின் பெயரைச் சொல்லுதலும் அங்கு எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயரைச் சொல்லுதலோடு ஒக்கும் என்பது. “ஐயாறே! ஐயாறே! என்பீராகில் அல்ல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்பது அப்பர் தேவாரம். இவ்வாறே, “திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே” எனவும், “திருக் கொடுமுடி என்றலும் தீவினை கருக்கெடும், இது கைகண்ட யோகமே” எனவும் பிற திருத்தலங்கள் குறித்து அப்பர் பெருமான் பாடி உள்ளார் என்பதை அறிக.


No comments:

பாடல் 3

“குந்தி, நடந்து, குனிந்து,ஒருகை கோலூன்றி, நொந்துஇருமி, ஏங்கி, நுரைத்துஏறி வந்து,உந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை.” இதன் ...