பொது --- 1120. மைச்சுனமார் மாமனைச்சி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மைச்சுனமார் மாமனைச்சி (பொது)


முருகா! 

உடலை விட்டு உயிர் பிரியும் முன்னர், 

தேவரீரை உள்ளம் உருகி வழிபட்டு உய்ய அருள்வாய்.


தத்ததனா தான தத்ததனா தான

     தத்ததனா தான ...... தனதான


மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு

     மக்களுமா றாத ...... துயர்கூர


மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ

     வைத்தவர்தா மேக ...... மதிமாய


நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு

     நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன்


நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி

     நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே


நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத

     னற்றவர்தா நாட ...... விடையேறி


நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு

     நற்றுணைவா ஞால ...... மிகவாழப்


பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக

     பத்தியதா மாறு ...... முகநாளும்


பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத

     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


மைச்சுனமார், மா மனைச்சியும், மாதாவும்,

     மக்களும் மாறாத ...... துயர்கூர,


மட்டு இலது ஓர் தீயில் இக் குடில்தான் வேவ

     வைத்தவர் தாம் ஏக, ...... மதிமாய,


நிச்சயமாய் நாளும் இட்டு, ஒரு தூது ஏவும்

     நெட்டு அளவாம் வாதை ...... அணுகாமுன்,


நெக்கு உருகா ஞானம் உற்று, உன தாள் ஓதி,

     நித்தலும் வாழ்மாறு ...... தருவாயே.


நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன்,

     நல் தவர் தாம் நாட, ...... விடை ஏறி


நல் புதல்வா! சூரர் பட்டிட வேல் ஏவு

     நல் துணைவா! ஞாலம் ...... மிகவாழ,


பச்சு எனும் நீள் தோகை மெய்ப் பரி ஊர் பாக!

     பத்தி அது ஆம் ஆறு ...... முக! நாளும்


பக்ஷமும் மேலாய் ஷடக்ஷர! சூழ் பாத!

     பத்தி செய் வான் நாடர் ...... பெருமாளே.


பதவுரை


நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி நல் புதல்வா --- விடம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, இடப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய அருட்புதல்வரே!


சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா --- சூரர்கள் அழியும்படி வேலை விடுத்து அருளிய நல்ல துணைவரே!


ஞாலம் மிக வாழப் பச்செனும் நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக --- உலக உயிர்கள் சிறப்பாக வாழும்படி, பச்சை நிறமுள்ளதும், நீண்ட தோகையினை உடையதும் ஆகிய மயிலாகிய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகரே!!


பத்தியது ஆம் ஆறு முக --- வரிசையாக அமைந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!


நாளும் பக்ஷமும் மேலாய் --- நாள்தோறும் உயிர்களிடத்து அன்புவைத்து அருள் புரிபவரே!


 ஷடாக்ஷர --- ஆறு எழுத்துக்கு உரியவரே!


சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே --- வான நாடர்கள் திருவடியை வலம் வந்து பத்தி செய்கின்ற பெருமையில் மிக்கவரே!


மைச்சுனமார் மாமனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர --- மைத்துனன்மார்களும், சிறந்த மனைவியும், தாயும், மக்களும் நீங்காத துயரத்தை அடைந்து,


மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக --- குறைவில்லாமல் நன்கு எரியும் நெருப்பில் இந்த உடம்பை வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் இருப்பிடம் செல்லுமாறு,


மதி மாய --- அடியேனது அறிவானது கலக்கம் அடைந்து இருக்க 


நிச்சயமாய் நாளும் இட்டு --- உறுதியாக ஒரு நாளை நிர்ணயித்து,


ஒரு தூது ஏவு(ம்) --- (அந்த நாளில் அடியேனது உயிரைக் கொண்டு செல்ல) எமன் தனது தூதர்களை ஏவுவான்,


நெட்டு அளவாம் வாதை அணுகா முன் --- (அந்த வேளையில்) நெடிய வேதனையானது அடியேனை அணுகுவதற்கு முன்பாகவே,


நெக்கு உருகா --- உள்ளம் நெக்கு உருகி (தேவரீருடைய திருவடிகளை வழிபட்டு)


ஞானம் உற்று --- ஞான நிலையினை அடைந்து,


உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே --- தேவரீருடைய திருவடியை நாள்தோறும் ஓதி வழிபட்டு வாழுமாறு திருவருள் புரிவாயாக.


பொழிப்புரை

    விடம் கொண்ட பாம்பணையில் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, இடப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய அருட்புதல்வரே!

    சூரர்கள் அழியும்படி வேலை விடுத்து அருளிய நல்ல துணைவரே!

    உலக உயிர்கள் சிறப்பாக வாழும்படி, பச்சை நிறமுள்ளதும், நீண்ட தோகையினை உடையதும் ஆகிய மயிலாகிய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகரே!

    வரிசையாக அமைந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!

    நாள்தோறும் உயிர்களிடத்து அன்புவைத்து அருள் புரியும் மேலோனே!

     ஆறு எழுத்துக்கு உரியவரே!

    வான நாடர்கள் திருவடியை வலம் வந்து பத்தி செய்கின்ற பெருமையில் மிக்கவரே!

    மைத்துனன்மார்களும், சிறந்த மனைவியும், தாயும், மக்களும் நீங்காத துயரத்தை அடைந்து, குறைவில்லாமல் நன்கு எரியும் நெருப்பில் இந்த உடம்பை வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் இருப்பிடம் செல்லுமாறு, அடியேனது அறிவானது கலக்கம் அடைந்து இருக்க. உறுதியாக ஒரு நாளை நிர்ணயித்து, அந்த நாளில் அடியேனது உயிரைக் கொண்டு செல்ல) எமன் தனது தூதர்களை ஏவுவான். அந்த வேளையில் நெடிய வேதனையானது அடியேனை பற்றிக் கொள்ளும். அதற்கு முன்பாகவே, உள்ளம் நெக்கு உருகி தேவரீருடைய திருவடிகளை வழிபட்டு ஞான நிலையினை அடைந்து, தேவரீருடைய திருவடியை நாள்தோறும் ஓதி வழிபட்டு வாழுமாறு திருவருள் புரிவாயாக.


விரிவுரை


பச்செனும் நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக --- 

மெய்ப்பரி – பரி – குதிரை. இங்கே வெகமாக முருகப் பெருமான் செலுத்துகின்ற மயிலைக் குறிக்கும்.

பாக – பாகரே.


பத்தியது ஆம் ஆறுமுக --- 

பத்தி – வரிசை, அழகு.

“பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுது கண்டேன்” என்று கந்தர் அலங்காரத்தில் பாடி உள்ளார் அடிகளார்.


நாளும் பக்ஷமும் மேலாய் --- 

பட்சம் – அன்பு. பட்சம் என்னும் தமிழ்ச் ச=சொல் வடமொழியில் “பக்ஷம்” என வழங்கப்படும்.


மைச்சுனமார் மாமனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர....

மைத்துனர்கள் என்னும் சொல், “மைச்சுனமார்” என வந்தது.

மா – பெருமை, அழகு. மாமனைவி – அழகும் பெருமையும் மிக்க மனைவி.


மதி மாய --- 

உயிர் பிரிகின்ற நேரத்தில் மாளாத துயரத்தால் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியோர் அழுது புலம்புவர். அந்த நேரத்தில் நமது அறிவு கலங்கி நிற்கும்.  “புலன் ஐந்து பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு.... அலமந்த போதாக" என்பார் திருஞானசம்பந்தப் பெருமான்.


நிச்சயமாய் நாளும் இட்டு --- 

“தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம்.

கரு உண்டான நாளிலேயே, உயிரின் வாழ்நாளானது வரையறுக்கப்பட்டு விடும். வினைப் போகம் உள்ளவரையில் உடம்பு இருக்கும். அது முடிந்தால், உடம்பில் உயிரானது தினைப்போது அளவும் நில்லாது. இன்ன நாளில் இன்னவகையில் உயிர் போகும் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.


ஒரு தூது ஏவு(ம்) ---

வாழ்நாள் முடிவில் உடம்பில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு செல்லத் தனது தூதர்களை எமன் அனுப்புவான். 


நெட்டு அளவாம் வாதை அணுகா முன் --- 

மரணம் சம்பவிக்கும் காலத்தில் நெடிய வேதனையை உயிரானது அனுபவிக்கும். ஐம்புலன்களும் தமதுசெயலை இழ்ந்த நிலையில் தான் படும் வேதனையைச் சொல்லவும் முடியாது. சொல்ல முடியாத நிலையே மேலும் வேதனையை மிகுக்கும்.  உடம்பு எடுத்த அத்தனை பேருக்கும் உரியது இது. அந்த நேரத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்லவும் வாய்வராது. நினைக்கவும் மனம் இராது.


நெக்கு உருகா, ஞானம் உற்று, உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே --- 

வாழுமாறு என்னும் சொல் வாழ்மாறு என வந்தது.

அரிய பெரிய தவங்களைச் செய்தும், அட்டாங்க யோகத்தைப் பயின்றுமே இறைவன் திருவடியை அடையலாம் என்பது ஒரு கடின வழி. ஆனால், மிக எளிமையாக பத்திமார்க்கத்தில் நின்றே இறைவன் திருவடியை அடையலாம். இறைவன் திருவடி ஞானத்தைப் பெறச் சிறந்த உள்ளம் உருகி வழிபடுதலே ஆகும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறிக.

“வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்

வாடில் ஞானம்என் ஆவதும், எந்தைவ லஞ்சுழி

நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை

பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே.”        --திருஞானசம்பந்தர்.

இதன் பொருள் –

    வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

கடுமையான தவத்தைப் புரிந்தவர்க்கும் காணமுடியாத பரம்பொருள் எளிதாக வந்து தம்மை ஆட்கொண்ட தன்மையை நினைந்து உருகி, மணிவாசகப் பெருமான், தமக்கு உண்டான அருள் அனுபவத்தைப் பாடி மகிழ்கிறார்.

"வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும் 

கான்நின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்பரிய 

தான்வந்து நாயேனத் தாய்போல் தலையளித்திட்டு, 

ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து, 

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த 

வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்" --திருவாசகம்.

இதன் பொருள் ---

    வானுலகத்தில் உள்ள தேவர்களும் திருமாலும் பிரமனும் இந்திரனும் காட்டில் பலகாலம் நின்று உணவில்லாமல் உடம்பு வற்றியும், சுற்றிலும் புற்று எழுந்து நிற்கத் தவம் செய்தும் காண்பதற்கு அரிய இறைவன், அடியேன் இருக்கும் இடத்துக்கு வந்து, நாய் போல இழிந்த அடியேனைத் தாயைப் போலச் சிறந்த அன்பு காட்டி, என் உடம்புக்குள் புகுந்து, என் மயிர்க்கால்களுக்கு உள்ளே உயிரைப் புகுத்தி அவை புளகம் போர்க்கச் செய்து, தேனின் சுவை வரவும், தெளிந்த அமுதத்தின் சுவையும் ஒளியும் வரவும் செய்த, தம்மைப் போற்றினவர்களுக்கு இன்பம் வரும்படி செய்யும் பெருமையை உடைய நீண்ட திருவடியை, அம்மானை ஆடும் பெண்ணே, நாம் பாடுவோமாக!".


"ஊன் வாட உண்ணாது, உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து,

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா;

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்!

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே! 

என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். உடலை வருத்தித் தவம் செய்யவேண்டாம். தில்லைச் சித்திரகூடத்தைச் சென்று வழிபடுங்கள், இமையோர் உலகை ஆளலாம் என்கின்றார் ஆழ்வார்.   

யோகம் என்பது ஞானத்தை அடைவதற்கு உரிய படிநிலைகளில் ஒன்றுதான். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிகளில் மூன்றாவது படியாக இருப்பது யோகம். யோகத்தின் முடிவில் ஞானம் வர வேண்டும். யோகத்தினால் உடம்பில் உண்டாகிற தடை முறியுமே ஒழிய, இறைவன் திருவருள் நேராகக் கைகூடாது. அந்த மூன்றாவது படியிலேயே அத்தகைய துன்பம் என்றால், அதற்குமேல் ஞானத்தை எப்படி அடைய முடியும்?  யோகத்தை மாத்திரம் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் உடம்புக்கும் உள்ளதிற்கும் கேடு. ஒரளவு அதில் வெற்றி பெற்றுவிட்டாலோ அகந்தை தலைக்கேறி விடும். 

யோகமுயற்சியினால் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்குப் போய் அவன் திருவடியைச் சார்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். காலில் பலமுடைய குழந்தைகளாக எண்ணி, இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். காலில் திண்மை இல்லாவிட்டாலும், மனத்தில் திண்மை இல்லாவிட்டாலும் தடுக்கி விழ நேரும். அப்போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடலாம். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடனே தாய், எத்தனை வேலை இருந்தாலும், தான் எந்த இடத்தில் இருந்தாலும், வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் குழந்தை உள்ள இடத்திற்கு ஓடிவந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படி இறைவன் தன்னை நினைந்து புலம்புகிற அடியவரைக் காப்பாற்ற நிச்சயம் வருவான். குழந்தையாகி நாம் அவனை நினைந்து அழுதால், நாம் இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைத்துவிடலாம். அது எளிய காரியம். 

மோட்ச வீட்டில் புகுவதற்காக மிகவும் அரிய காரியத்தைச் செய்கின்ற யோகிகளைப் பார்த்து, பத்திநெறியில் நின்றால் வீட்டில் புகுதல் மிக எளிது என்கிறார். பத்திநெறியில் நிற்கவேண்டுமானால், தவிர்க்க வேண்டியது ஒன்று மட்டுமே உண்டு. முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயலக் கூடாது.

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்து, பழவினைகள் பாறும் வண்ணம்,

சித்தபலம் அறுவித்து, சிவம் ஆக்கி, என்னை ஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே"

என்று மணிவாசகப் பெருமான் பாடியருளியதை உள்ளத்தில் உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்.

காட்டிலே வாழ்ந்திருந்த குறத்தியாகிய வள்ளியம்மை, தான் வளர்ந்த குறவர் குலத்திற்கு ஏற்ற வகையில் முருகனை உள்ளத்தில் வைத்துப் பக்தி பண்ணினாள். அவள் இந்திரிய நிக்கிரகம் செய்ய வில்லை. தவம் செய்யவில்லை. குலத்திற்கு ஏற்ற முறையில் முருகனை நினைந்து மனத்திற்குள் அன்பை வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு யோகம் தெரியாது. தவமுறைகளைத் தெரிந்த குலத்தில் அவள் வளரவில்லை. வேட்டுவ குலத்தைச் சார்ந்து,  புன்செய்த் தானியமாகிய தினை முதலியவற்றைக் காப்பாற்றுவதற்காகக் கிளிகளை ஒட்டிக் கொண்டிருந்தாள். தன் குலத்திற்குத் தனித் தெய்வமாக இருப்பவன் முருகன் என்பதை நன்றாக உணர்ந்தும் நம்பியும் இருந்தாள். முருகனை எவ்வாறு வழிபடுவது என்னும் முறை அவளுக்குத் தெரியாது. குழந்தை தன் தாயை நினைந்திருப்பது போல எல்லாக் காலத்தும் முருகனை நினைந்திருக்க அவளுக்குத் தெரியும். கருத்தை முருகனிடத்தில் வைத்தபடி, காட்டில் குறத்தியாகத் தினைக் கொல்லையைக் காவல் செய்து வந்தாள். இறைவன் திருவருளுக்குப் பாத்திரம் ஆவதற்கு என்ன என்ன பயிற்சி வேண்டுமென்று சொல்லப்பட்டு உள்ளதோ, அவற்றில் ஒன்றுகூட எம்பிராட்டி செய்யவில்லை. அவள் ஆசனம் பயிலவில்லை. ஆனால், தனது உள்ளத்தை இறைவன் இருக்கத் தகுந்த ஆசனமாக மாற்றி இருந்தாள். 

அந்த ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு முருகப்பெருமான் அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். தன்னை உள்ளத் தாமரையில் வைத்து உண்மையாக வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய நிலையைப் பாராமல் தானே வலிய வந்து ஆட்கொள்வான் முருகன் என்பதைக் காட்டுவதற்காகவே அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது. "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில்வீரனே" என்று முருகனின் பெருங்கருணையைப் போற்றித் திருப்புகழ் பாடினார் அருணகிரிநாதர். 

"கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி,  நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான். தேவர்களுக்கு எல்லாம் அரியவன் ஆக இருக்கின்ற பெருமான், அடியவர்களை எளிவந்து இரங்கி ஆட்கொண்டு அருள்புரிகின்றான். பெருங்கருணை மிகுதியினால், அடியவர்களைத் தேடி வந்து ஆட்கொள்ளுகின்ற இறைவனை, அன்பு மிகுதியால் வழிபட்டு வந்தால், எளிதில் வீட்டின்பத்தைப் பெற்று விடலாம். 

வீடு என்பது எந்த வழியில் சென்றாலும் ஒன்றுதான். அதன் உள்ளே நுழைந்தவர்களுக்குள் வேறுபாடு இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைவதற்குப் பல கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் கதவு உண்டு. ஆனால் ஒவ்வொரு கதவுக்கும் நேரே ஒவ்வொரு வகையான பாதை இருக்கிறது. உண்மையில் மற்ற நெறிகளை எல்லாம்விடப் பக்திநெறி, செல்லும்போதே இன்பத்தைத் தருவது. முத்தி என்று தனியே ஒர் இன்பம் இருக்கிறதென்றும், பக்தி நெறியினாலே அடைவதற்கு உரியது அது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் பத்திநெறியில் சென்றவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. பக்தியே முத்தி இன்பம் ஆகிவிடும் என்பது அவர்கள் கொள்கை. "இறவாத இன்ப அன்பு" என்றார் சேக்கிழார். இவ்வளவு எளிதான வழி ஒன்று இருக்கும்போது, அரியவற்றுள் எல்லாம் அரிதான யோக நெறியில் சென்று மாட்டிக் கொண்டு வாடவேண்டாம் என்பதே அருணகிரிநாதருடைய கருத்து.


"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின், 

வீட்டில் புகுதல் மிக எளிதே; விழி நாசி வைத்து 

மூட்டிக் கபால மூலாதார நேர்அண்ட மூச்சை உள்ளே 

ஒட்டிப் பிடித்து, எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே".     --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

கண் பார்வையை நாசியின் நுனியில் வைத்து, மூலக்கனலை மூள்வித்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை உள்ளிடத்தே உலாவுமாறு செய்து, அந்தப் பிராணவாயு வேறு எங்கும் ஓடிவிடாதபடி பிடித்து சாதிகம் செய்கின்ற யோகநெறியில் நின்றவர்களே! காட்டில் வாழுகின்ற வள்ளிநாயகியின் நலைவர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடித் தாமரைகளில் உள்ளத்தைச் செலுத்தினால், முத்தி உலகில் செல்லுதல் மிகவும் எளிமையான காரியம் ஆகும்.


கருத்துரை


முருகா! உடலை விட்டு உயிர் பிரியும் முன்னர், தேவரீரை உள்ளம் உருகி வழிபட்டு உய்ய அருள்வாய்.









No comments:

பொது --- 1121. தத்துவத்துச் செயலொடு

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் தத்துவத்துச் செயலொடு (பொது) முருகா!  அடியாரோடு கூட்டி அருள் புரிவாய். தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன      த...