தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்
பிரமகுண்டம் தன்னில் ஏய்மண்
மனமேவும் மணியுடனே மந்திரமும்
தந்திரமும் மருந்தும் ஆகி,
இனமேவும் தண்டலையார் தொண்டருக்கு
வந்தபிணி யெல்லாம் தீர்க்கும்!
அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம்
வேறும்உள அவிழ்தந் தானே.
இதன் பொருள் ---
தனம் மேவும் புற்றடிமண் குருந்தடி மண் பிரமகுண்டம் தன்னில் ஏய் மண் - செல்வம் மிக்க புற்றுமண்ணும், குருந்த மரத்தடி மண்ணும், பிரமகுண்டத்தில் உள்ள மண்ணும், மனம் மேவும் மணியுடனே மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி - உள்ளம் விரும்பும் மணியும் மந்திரமும் ஆராய்ச்சியும் மருந்தும் என ஆகி, இனம் மேவும் தண்டலையார் தொண்டருக்கு வந்த பிணி எல்லாம் தீர்க்கும் - உறவாகிய திருத்தண்டலை இறைவரின் அடியவர்க்கு வந்த நோயை எல்லாம் போக்கும்; வேறும் உள அவிழ்தம் அனுபோகம் தொலைந்தவுடன் சித்திஆம் - மற்றும் உள்ள மருந்துகள் (முன்வினைப்) பயன் கழிந்த பிறகே நலந்தரும்.
இறைவன் இருப்பிடத்தில் உள்ள மண் அடியவர் நோயை எல்லா வகையினும் எப்போதும் போக்கும். வேறு மணியும் மருந்தும் மந்திரமும் பழவினைப் பயன் நன்றாக இருந்தால் மட்டும் நோய்களை நீக்கும்; தீமையாக இருந்தால் நோய்களை நீக்கமாட்டா.
No comments:
Post a Comment