"கானமரும் கவரியொரு மயிர்படினும்
இறக்கும்! அது கழுதைக் குண்டோ?
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!
சுயோதனனை மறந்தார் உண்டோ?
ஆனகஞ்சேர் ஒலிமுழங்கும் தண்டலையா
ரே! சொன்னேன்! அரைக்கா சுக்குப்
போனஅபி மானமினி ஆயிரம்பொன்
கொடுத்தாலும் பொருந்தி டாதே."
இதன் பொருள் ---
ஆனகம் சேர் ஒலி முழுங்கும் தண்டலையாரே – படகம், துந்துபி கலந்த ஓசை முழங்கும் திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! கான் அமரும் கவரி ஒரு மயிர் படினும் இறக்கும் - காட்டில் இருக்கும் கவரிமான் ஒரு மயிரை இழந்தாலும் இறந்து விடும்; அது கழுதைக்கு உண்டோ - அந்தப் பண்பு கழுதைக்கு இருக்கிறதோ?, மானமுடன் வாழ்பவனே மாபுருடன் - மானத்தோடு வாழ்கின்றவனே ஆடவரில் சிறந்தவன்; சுயோதனனை மறந்தார் உண்டோ - துரியோதனனை மறந்தார் யார்?, அரைக்காசுக்குப் போன அபிமானம் இனி ஆயிரம் பொன் கொடுத்தாலும் பொருந்திடாதே. – அரைக்காசுக்கு ஆசைப்பட்டு இழந்த பெருமையானது, பிறகு ஆயிரம் பொன்னைக் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதே.
விளக்கம் --- ஆனகம் – படகம், துந்துபி முதலிய வாத்திய வகை. கவரி - கவரிமான். சுயோதனன் (சுய ஓதனன்) - சிறந்த போர்வீரன் (காரணப் பெயர்). ஓதனம் – போர். ஓதனன் - போர்வீரன். இவன் தன் சிற்றப்பன் மக்களான பாண்டவருக்கு அடங்கி வாழ விரும்பாமல் இறுதிவரையில் அவர்களைப் பகைத்துப் போர் செய்து உயிர் துறந்தான். பதினெட்டாம் நாட்போரிலே தனித்து நின்ற சுயோதனனைத் தருமன் பார்த்து மனமிரங்கித் தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும் ஒத்துப் போகும்படியும் கூறினான். அதற்கு அவன் தன்னுடன் பிறந்தார் உறவினர் நண்பரையெல்லாம் தனக்காக மடியவிட்டு, நாடு என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாதென்று கூறினான். ஆகவே, அவன் மானமுடையவனாகக் கருதப்பட்டான். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது' என்பது பழமொழி.
பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க...
“என்துணைவருடன் யானும் ஏவிய நின்தொழில் புரிந்து
வன்துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,
இன்துணைவர் குருகுலத்தார் எனும் இசைபோய்த் திசை ஏற,
நல்துணைவா! ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.”
பதினெட்டாம் நாள் போரில் யாவரையும் இழந்து தனியனாய் வருந்தி நிற்கும் துரியோதனனைப் பார்த்து மனம் இரங்கி, தருமன் பின்வருமாறு சொல்லி, போரை விட்டுச் சமாதானமாய் வாழ்வாயாக என்று சொன்னான். “எனது தம்பியரோடு நானும் நீ ஏவிய சிறுபணிகளைச் செய்துகொண்டு, நல்ல துணையாய் நாங்கள் உனக்கு ஊழியம் செய்ய, நீ அரியணையில் வீற்றிருந்து, குருகுலத்து மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிய துணைவர் ஆனார் என்ற புகழ் எங்கும் போய்ப் பரவ, உலகம் முழுவதும் உனது வெண்கொற்றக் குடைக் கீழ் ஆளுவாயாக"
தருமன் எண்ணத்துக்கு உடன்படாமல், சிறிதும் தாட்சணியம் இன்றி மானமுள்ள துரியோதனன் மறுத்தான்.
“தப்பாது என்மொழி என்று தருமன் மாமதலை, முகில்
ஒப்பான திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக
செப்பாத வாய்மை எல்லாம் செப்பினான், செப்பவும், அக்
கைப்பான வல்நெஞ்சக் கொடுங் கண்ணன் மறுத்தான்.”
‘நான் சொன்ன சொல் தவறாது’ என்று சிறந்த தருமன், கரிய மேகத்தை ஒத்த திருமேனி உடைய கண்ணபிரான் சாட்சியாக இதுவரையில் யாரும் சொல்லி இராத உறுதியான சொற்களை எல்லாம் சொன்னான். வெறுப்புக் கொண்ட வலிய மனத்தையும், கொடிய தன்மையையும் உடைய துரியோதனன், தருமன் எண்ணுத்துக்கு உடன்படாமல் தாட்சணியம் இன்றி மறுத்தான். (கொடுங் கண்ணன் – தீமை விளைக்கும் கண்ணை உடையவன் ஆகிய துரியோதனன்)
“எம்கிளைஞர். எம்துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,
உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர் வாழ்வின் இனிது அன்றோ,
அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குருதியின் வாய்,
கங்கமும் காகமும் கொட்ட களத்து அவிந்தான் எனும் பெயரே.”
“எனது உறவினரும், எனது தம்பியரும் என் பொருட்டாக மாண்டு போக, உங்கள் அருளைப் பெற்று, அதனால் நான் வாழ்கின்ற உயிர்வாழ்வைக் காட்டிலும், உடல் உறுப்பு எல்லாம் தனித்தனித் துண்டாகி விடவும், ஆறாக இரத்தம் கொட்டும் புண்களின் வாயிலே கழுகுகளும் காக்கைகளும் அலகால் கொத்தவும், போர்க்களத்தில் இறந்தான் என்ற புகழை அடைதல் சிறந்தது அன்றோ?” (கங்கம் – கழுகு)
No comments:
Post a Comment