பாடல் 4


“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய்

நாளும் அணுகி நலியாமுன், பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க்

கவிழ்க முகம், கூம்புகஎன் கை.”


இதன் பொருள் ---

காளை வடிவு ஒழிந்து - காளைபோன்ற குமாரப் பருவத்தின் வடிவம் நீங்கி; கையறவோடு - முதுமை காரணமாக உண்டான செயலற்ற நிலையோடு, ஐயுறவாய் – கோழை பொருந்தி இருக்க, நாளும் அணுகி நலியா முன் - இறுதி நாளும் வந்து வருத்தும் முன்பாகவே, பாளை அவிழ் கமுகம் பூஞ்சோலை  பாளைகள் அவிழ்கின்ற பாக்கு மரங்கள் சூழ்ந்துள்ள பூஞ்சோலைகள் நெருங்கிய, ஆரூரற்கு ஆளாய்  திருவாரூரில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்கு அடியவன் ஆகி,  கவிழ்க முகம் – (எனது) முகமானது கவிழ்ந்து வணங்கவேண்டும். கூம்புக என் கை – எனது கைகள் கூப்பித் தொழவேண்டும். 

 

      காளை வடிவு - காளைபோன்ற அழகு (வடிவு – அழகு). காளை என்பது மிடுக்கு உடைய குமாரப் பருவத்தைக் குறித்தது. கையறவு – செயலற்ற நிலை.  ஐயுறவு – ஐ  என்பது கோழையைக் குறிக்கும். முதுமையில் கோழையானது நீங்காமல் இருக்கும். “ஐயினால் மிடறு அடைப்புண்டு” என்பது அப்பர் வாக்கு. மற்றும் ஐ என்னும் சொல்லுக்கு ஐயம் அல்லது சந்தேகம் என்பது பொருளாகக் கொண்டால், வாழ்நாள் இன்று முடியுமோ அல்லது நாளைக்கு முடியுமோ என்று சந்தேகித்தல் என்பதாக அமையும். முகம் என்றது தலையைக் குறிக்கும். “தலையே நீ வணங்காய்” எனவும், “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே, வீழ்த்தவா வினையேன நெடுங்காலமே” எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களையும், “வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து” எனவரும் மணிவாசகத்தையும் கருத்தில் கொள்க. கையானது இறைவனை நோக்கிக் கூம்புதல் வேண்டும். “கைகாள் கூப்பித் தொழீர்” என்றார் அப்பர் பெருமான். “கரமலர் மொட்டித்து இருதயம் மலர” என்றார் மணிவாசகப் பெருமான். கையானது மொட்டுப் போலக் கூம்பி இறைவனை வணங்கவேண்டும், இதயமானது இறைவன் மீது கொண்ட அன்பால் மலர வேண்டும். பொருளும், பிறவும் படைத்தவரைப் பார்த்துக் கைகள் கூம்புதலும், இதயம் மலர்தலும் பயனற்ற செயல்கள்.


No comments:

பாடல் 4

“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன், பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்க முகம், கூம்புகஎன் கை.” இதன்...