நாலாயிரம் கண் வேண்டும்!

 


நாலாயிரம் கண் வேண்டும்

-----

 

     சிலர் கூடி ஒரு பொருளைப் பற்றிப் பேச்சுத் தொடங்கினால்,தொடர்ந்து அந்தப் பொருளின் சார்பாகவே பேச்சு நிகழும்.  இது மனிதர்களுக்கு இயல்பு. ஒரு எண்ணம் தொடர்ந்து வருவதால்இதை எண்ணத் தொடர்ச்சி (Association of ideas) என்று கூறுவார்கள். 

 

     ஓரிடத்தில் வருவோர்க்கு எல்லாம் வேண்டிய உணவைத் தருவதாகக் கேள்விப்பட்ட ஒருவன்எவ்வளவு தருவார்கள் என்று அவனுக்குத் தோன்றியதோஅந்த அளவுக்கான பாத்திரத்தைக் கொண்டு சென்றான். அந்த இடத்தில் அளவு பார்க்காமல்பாத்திரம் நிரம்பக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதைக் கண்டபோதுஅவன் உள்ளத்தில், 'நாமும் பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்து இருக்கலாமேஎன்று தோன்றியது. இது போன்ற ஓர் எண்ணத்தை அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் அருளிச் செய்கிறார். 

 

     திருச்செங்கோட்டு வேலனின் பெருமையை உணர்ந்தவர் அவர். "செங்கோடு" என்பதற்குச் செங்குத்தான மலை என்று பொருள். "கொடிமாடச் செங்குன்றூர்" என்பது தேவாரப் பெயர். "நாகாசலம்" என்றும் கந்தர் அனுபூதியில் குறிக்கப் பெறும். கந்தர் அனுபூதியில் குறிக்கப்பட்ட ஒரே திருத்தலம் என்ற பெருமையை உடையது. கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் இருக்கிறது. அங்கே முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலை ஏந்திய கோலத்தில் நிற்கிறான். பெரும்பாலான இடங்களில் முருகனுடைய திருவுருவத்தில் வேல் தனியே சாத்தப்பட்டு இருக்கும். ஆனால்அங்கே மூலமூர்த்தியாகிய முருகன்திருக்கையில் வேலைப் பிடித்த கோலத்தில் எழுந்தருளி இருக்கிறான். ஆகையால்,"செங்கோட்டு வேலன்" என்ற திருநாமம் உண்டானது. 

 

     முருகப் பெருமான் மீது அளவு கடந்த பத்தியை வளர்த்துக் கொண்டு இருந்த அருணகிரிநாதர்திருச்செங்கோட்டு வேலனின் சந்நிதியை அடைந்த போது ஆர்வம் மேன்மேலும் பெருகியது. அவருடைய ஆர்வமும்இயற்கையான அன்பும் முருகனுடைய தோற்றமும்எல்லாம் சேர்ந்துஅவருடைய கண்ணுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்தது. அருட்பெருஞ்சோதி வடிவான முருகனுடைய திருக்காட்சியைக் கண்டதுமேசொல்ல ஒண்ணாத பேரானந்தம் பெருக்கெடுத்துப் பொங்கியது. இந்த கொள்ளை அழகைக் காண நமக்கு இரண்டு கண்கள் தானே உள்ளன. நாலாயிரம் கண்கள் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. பிரமன் மீது அவரது எண்ணம் திரும்பியது. இந்த உடம்பைத் தந்த நான்முகன் தனக்கு நாலாயிரம் கண் படைத்திருக்கலாமே என்ற ஏக்கம் உண்டாயிற்று. "நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே" என்று பாடினார்.

 

     நம்முடைய உடம்பில் அறிவுக் கருவிகள் ஐந்தும்தொழிற்கருவிகள் ஐந்துமாகப் பத்துப் புறக் கருவிகள் இருக்கின்றன. அறிவுக் கருவிகள்,மெய்வாய்கண்மூக்குசெவி என்பன ஆகும். இவற்றை ஞானேந்திரியங்கள் என்று சொல்வார்கள்.செயல் செய்யும் கருவிகளாகிய கைகால்நாக்குஎருவாய்கருவாய் என்னும் ஐந்தையும் கர்மேந்திரியங்கள் என்று சொல்வார்கள். அறிவுக் கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் சிறந்தவை. அறிவுக் கருவிகளில் சிறந்த்து கண் ஆகும். பிற கருவிகள் சிறப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்,கண் இல்லாவிட்டால் பயன் இல்லை. "கண்ணிற் சிறந்த உறுப்பு இல்லை" என்பது நான்மணிக்கடிகை. சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டு கண்களையும் இழந்து வருந்தியபோது, "முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்வேன்" என்றுதான் இறைவனிடம் முறையிட்டார்.

 

     "கோள் இல் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" என்னும் திருக்குறளின் வழிஉடம்பைப் பெற்ற பபயன் இறைவனை வழிபடுவதே என்றார் திருவள்ளுவ நாயனார். அதற்கு உரை வரைந்த பரிமேலழகர்"காணாத கண் முதலியன போல,வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துக் கூறினார்" என்று எழுதியுள்ளார். எனவே பொறிகளுக்குள் சிறந்தது கண் என்றும் அதனால் இறைவனைக் காண்பதே பெரும்பயன் என்றும் தெரிய வருகிறது. "கண்காள் காண்மின்களோகடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னைஎண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னைக் கண்காள் காண்மின்களோ" என்று பாடினார் அப்பர் பெருமான். "ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண் எல்லாம் காணாத கண்களே" என்று பாடிஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும் என்று காட்டினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     

     கண் அழகாக இருக்கவேண்டும் என்று பெண்கள் மை தீட்டிக் கொள்வார்கள். இன்னும் பிற விதங்களிலும் அழகு செய்துகொள்ளும் நிலை இப்போது வந்துவிட்டது. பிறர் பார்க்க அழகாக இருக்கும் கண் வேறு. பிறரைப் பார்க்கும் ஆற்றலை உடைய கண் வேறு. பிறர் பார்க்க அழகாக இருக்கும் கண்ணால் எந்த நலமும் விளைவது இல்லை. பார்க்கின்ற பொருள்களுக்கு உள்ள சிறப்பைப் பொருத்தேஅந்தக் கண்ணுக்குச் சிறப்பு அமைகிறது.  கண்களால் காண்பதற்குச் சிறந்தவை பல உண்டு. அவற்றுள் மிகச் சிறந்தது இறைவனுடைய திருவுருவம். 

 

     ஆகமங்களும்சாத்திரங்களும் அவரவர் விரும்பும் இறைவனுடைய திருவுருவத்தைச் சொல்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருமேனியைக் கல்லாலும் செம்பாலும் வடித்துப் பூசிக்கிறார்கள். மந்திரங்களால் அந்தப் படிமங்களுக்குத் தெய்வத் தன்மையை ஏற்றுகிறார்கள். பலவகை வழிபாடுகளைச் செய்கிறார்கள். மூலமூர்த்தியோடுதிருவிழாவுக்கு வேண்டிய உற்சவ மூர்த்திகளையும் அமைத்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும் என்பதே குறிக்கோள்.

 

     ஒரு பையனுக்குத் திருமணம் செய்ய எண்ணிபெண்ணைப் பார்க்க விரும்புகிறார்கள். பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணின் படத்தை அனுப்பி வைக்கிறார்கள். அந்தப் படத்தைக் கண்டு திருப்தி அடைந்தால்பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை உண்டாகும். படத்தைப் பார்க்கிறபோதுஅந்தப் பையனுக்குப் பெண்ணின் உருவம் ஒருவாறு உள்ளத்தில் பதிகிறது. பெண்ணின் படத்தைத் தான் அவன் பார்த்தானே ஒழிபெண்ணை நேரடியாக உள்ளது உள்ளபடி பார்க்கவில்லை. பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதற்கு அந்தப் படம் ஒரு கருவியாக அமைந்தது. நேரில் கண்டதும் கொள்ளை இன்பம் உண்டாகின்றது.

 

     அதுபோலத்தான்இறைவன் திருமேனியைக் கண்ணாரக் கண்டு வழிபடுவதன் பயனாகஅவனை மனக் கண்ணிலும் கண்டு இன்புறும் நிலை உண்டாகும். "அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்" என்று இதைதான் சொன்னார் திருமூல நாயனார். திருக்கோயில்களில் உள்ள திருவுருவத்தைக் கண்டால் சிறிதே உள்ளத்தில் பத்தி எழுகிறது. அந்தப் பத்தி உணர்வு வளர வளரஅகக் கண்ணில் தியானம் செய்யும் பக்குவம் உண்டாகிறது. அதுதான் அக அனுபவம் பெறுவதற்குரிய வழி. மன ஒருமையுடன்புறத்தில் கண்ட உருவத்தைமெல்ல மெல்லத் தியானம் செய்து வந்தால்அதுவே சோதி வடிவமாகக் காணுகின்ற இன்ப அனுபவத்தைப் பெறுவதற்குத் துணை புரியும். இறைவன் திருமேனியைக் கண்ணாரக் கண்டு வழிபடுவதன் பலன் இதுவே.

 

     முருகன் என்றாலே "அழகன்" என்று பொருள். "என்றும் இளையாய் அழகியாய்" என்று அவனைப் பாடினர். அவனுடைய அழகைஅரக்கன் ஆகிய சூரபதுமன் கூட முருகனின் திருமேனி அழகைக் கண்டு வியந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

 

"ஆயிரம் கோடி காமர் அழகு எல்லாம் திரண்டு ஒன்றாகி 

மேயின எனினும்,செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில் 

தூயநல் எழிலுக்கு ஆற்றாதுன்றிடின் இனைய தொல்லோன் 

மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை யார்  வகுக்க வல்லார்"

 

என்பது கந்தபுராணம்.

 

     இராமபிரானது வடிவழகைத் தனது மனக் கண்ணால் கண்ட கம்பர்அந்த அழகை வார்த்தைகளால் வடிக்க முயன்றுமுடியாமல் 'ஐயோஎன்றார். "ஐயோஇவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான்" என்று பாடினார்.

 

     திருவிளையாடல் புராணம்திருமணப் படலத்தில் ஒரு செய்தியினைப் பரஞ்சோதி முனிவர் உணர்த்துகிறார். மதுரையம்பதியில் சொக்கநாதப் பெருமான் திருவுலா வருகிறான். அவன் திருமேனி அழகைக் கண்டு மயங்கிய ஒருத்திஅவன் தன்னைப் பார்க்காமலேயே போகின்றானே என்று ஏங்கினாள். அவனது திருமேனியை எப்போதும் கண்டு மகிழவேண்டும் என்று அவள் எண்ணியபோதுஓவியக் கலையில் வித்தகன் ஒருவனைக் கண்டாள். 'இவனை ஓவியமாக வடித்துத் தந்தால்உனக்கு வேண்டிய பொருளைத் தருகின்றேன்என்றாள். ஓவியனோ, 'அவனை யாரால் எழுத முடியும்என்றான். அதைக் கேட்டதுமே அவள் உயிர் சோர்ந்து போய்விட்டது. 

 

"கவனமால் விடையான் தன்னைக்

     கடைக்கணித் திலன் என்று அங்கு ஓர்

சுவணவான் கொடி ஓர் ஓவத்

     தொழில்வல்லான் குறுக நோக்கி,

இவனை நீ எழுதித் தந்தால்

     வேண்டுவ ஈவன் என்றாள்;

அவனை யார் எழுத வல்லார்

     என்றனன்வி சோர்ந்தாள்".                   --- திருவிளையாடல் புராணம்.

 

இதன் பொருள் ---

 

     சிறந்த பொற்கொடி போன்றஒரு நங்கைவிரைந்து செல்லுகின்ற திருமாலாகிய இடபத்தை உடைய இறைவன்தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றான் என்று கருதினாள். அவ்விடம் ஓவியத் துறையில் கை தேர்ந்த ஒருவன் வரஅவனைப் பார்த்து, 'இதோ இந்த அழகனை நீ எழுதித் தந்தாயானால்,  நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன்என்றாள். 'அவனை யாரால் எழுத முடியும்எழுத வல்லவர் ஒருவரும் இல்லைஎன்று அவன் கூறினான்அது கேட்டுஅவள் உயிர் சோர்ந்தாள்.

 

     பெரியபுராணத்தில் மற்றுமொரு காட்சி. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருமயிலையில் திருவருளால் நிகழ்த்தினார். திருஞானசம்பந்தப் பெருமானாரால் திருவுருக் கொண்டு எழுந்த பூம்பாவையின் அழகு அதி அற்புதமானது. பூம்பாவையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு கண்டார் என்பதைக் கூறவந்த சேக்கிழார் பெருமான் ஒரு புராண நிகழ்வைக் கூறுகிறார்.

 

     மானிட வருடம் ஒன்று தேவர்களுக்கு இரவும் பகலும் கொண்ட ஒரு நாள் ஆகும்மனித வருடம் முந்நூற்று அறுபது கொண்டது தேவர்க்கு ஒரு வருடம். தேவ வருடம் 12000 கொண்டது ஒரு தேவயுகம்தேவயுகம் இரண்டாயிரம் கொண்டதுபடைப்புக் கடவுள் ஆகிய பிரமதேவனுக்கு ஒரு நாள் ஆகும். அதுபோல் நூறு ஆண்டுகளைக் கொண்டது பிரமனது ஆயுட்காலம். பிரமனுடைய ஆயுளை நமது வருடக் கணக்கில் கொண்டால் அளவு கடந்தது ஆகும். அவ்வளவு நீண்ட ஆயுளைக் கொண்ட பிரமன் திலோத்தமை என்னும் அழகிய பெண் ஒருத்தியைப் படைத்தான். தன்னால் படைக்கப்பட்ட அவளது அழகு வெள்ளத்தை அவன் தனது நான்கு முகங்களால் கண்டானாம். 

 

     இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தரோ பதினாறு ஆண்டுப் பருவம் உடையவர். அவர் எலும்பைப் பெண்ணாக்கினார்.  திலோத்தமையை விட அழகில் சிறந்த பூம்பாவையின் அழகில்திருஞானசம்பந்தர் இறைவன் கருணை வெள்ளத்தைக் கண்டாராம். எத்தனை முகத்தால் கண்டார் என்றால்ஆயிரம் முகத்தால் கண்டார் என்கிறார் சேக்கிழார் பெருமான். ஆயிரம் முகம் என்றால்இரண்டாயிரம் கண்களால் பார்த்தார் என்று பொருள்.

 

"எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் 

     படைத்தவள் எழிலின் வெள்ளம்

நண்ணு நான்முகத்தால் கண்டான்,

     அவளினும் நல்லாள் தன்பால்

புண்ணியப் பதினாறு ஆண்டு 

     பேர்பெறும் புகலி வேந்தர்

கண்ணுதல் கருணை வெள்ளம் 

     ஆயிர முகத்தால் கண்டார்".   --- பெரியபுராணம்.

 

     அளவில்லாத ஆண்டுகள் வயது உடைய பிரமன் அழகு வெள்ளத்தைத் தனது எட்டுக் கண்களால் கண்டான். பதினாறு வயது நிரம்பிய பாலறாவாயர்முகத்தில் இரண்டு கண்களே உடையவர். அவர் சிவபரம்பொருளின் கருணை வெள்ளத்தை ஆயிரம் முகத்தால் கண்டார்அதாவது இரண்டாயிரம் கண்களால் கண்டார்.

 

     திருச்செங்கோட்டு வேலனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டவுடன் அருணகிரிநாதருக்கு எல்லை இல்லாத ஆனந்தம் உண்டாயிற்று. அந்த கொள்ளை அழகினைக் காண, தமக்கு இரண்டு கண்கள் தானே இருக்கின்றன. பிரமன் தமக்கு நாலாயிரம் கண்களைப் படைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

 

     ஒரு பெண்ணுக்கு அவளது காதலன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு.அதையே வெறும் காகிதமாகக் கடைக்காரன் வாங்கிச் செல்லும்போது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும்எழுத்தும் ஒன்றுதான். ஆனாலும்எழுதினவனுடைய நினைவும்அவன் மீது அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண்ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதி ஆக்குகின்றன.  

 

     அப்பர் பெருமானுக்குதில்லையில் கூத்தப் பெருமானைக் கண்டவுடன்இந்த மனிதப் பிறவியை விடக் கூடாது என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆனந்தக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு மகிழவேண்டும் என்றால் மனிதப் பிறவிதான் வேண்டும் என்றார்.

 

"குனித்த புருவமும்,கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,                                                                     

பனித்த சடையும்,பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,                                                                                                                         

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,                                                                                                                              

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே." 

 

என்ற அற்புதமான பாடலைப் பாடினார். "தில்லைச் சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே" என்றும் பாடி மகிழ்ந்தார். அதே நடராசப் பெருமானை நாமும் ஒருமுறைக்குப் பலமுறையும் காண்கிறோம். நமக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாவதில்லை. அவனது திருவுருவத்தைக் கண்ணால் காணும்போது நம்முடைய உள்ளத்தில் ஆர்வமும்பக்தியும் நிறைந்திருக்கவில்லை. 

 

     மணிவாசகர் சொல்கிறார். "இறைவா! உன்னுடைய திருநாமத்தைக் கேட்ட மாத்திரத்திலேயேபள்ளத்தை நோக்கிப் பாய்ந்து ஓடும் வெள்ளம் போல பதைத்து உள்ளம் உருகி வழிபடுகின்ற அடியவர்கள் எல்லாம் இருக்கஅடியவன் ஆகிய என்னை நீ எளிதாக வந்து ஆண்டுகொண்டாய். அதை உணர்ந்த பிறகுஉள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையிலும் எனக்கு நெஞ்சாக இருந்து உருகவேண்டும். உடம்பெல்லாம் கண்ணாக இருந்து கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுக்க வேண்டும். ஆனால்எனது நெஞ்சம் கல்லாக இருக்கிறது. இரு கண்களும் மரமாக உள்ளன" என்று புலம்புகிறார்.

 

"வெள்ளம்தாழ் விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் 

பெருமானே! எனக்கேட்டு,வேட்ட நெஞ்சாய்,

பள்ளம்தாழ் உறுபுனலில் கீழ் மேலாகப் 

பதைத்து உருகும் அவர்நிற்க,என்னை ஆண்டாய்க்கு 

உள்ளந்தாள் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 

உருகாதால்,உடம்புஎல்லாம் கண்ணாய்,அண்ணா! 

வெள்ளம்தான் பாயாதால்நெஞ்சம் கல்ஆம்

கண்இணையும் மரம்ஆம்தீவினையி னேற்கே".  --- திருவாசகம்.

 

     அருணகிரிநாதப் பெருமானுக்குத் திருச்செங்கோட்டு வேலனைக் கண்ணாரக் கண்டு வணங்கிய மாத்திரத்தில் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கியது. அந்த ஆனந்தம் ஆராத ஆனந்தமாக இருந்தது. அதை அனுபவிப்பதில் ஒரு குறை இருப்பதாக அவருள்ளத்தில் தோன்றியது.அதை ஒரு பாடலாக வடித்தருளினார். முருகப் பெருமானுடைய கண்கொள்ளாக் காட்சியினைக் கண்டு,கண்களை படைத்த பயனை முழுமையாக அவரால் அனுபவிக்க முடியவில்லை.

 

     சில காட்சிகளைக் காணும்போது அப்படி ஒரு உணர்வு பெருமக்களுக்குத் தோன்றும். சாதாரண மக்களுக்கு அப்படித் தோன்றுவதற்கு வாய்ப்பு இல்லை. பெரிய புராணத்தில் இரண்டு காட்சிகளைக் காணலாம்.

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் திருமணம் நிகழ்வதால், "புத்தூர்" என்ற ஊர் "மணம் வந்த புத்தூர்" ஆனது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணக் கோலத்தோடு குதிரை மீது வீதியில் எழுந்தருளி வருகிறார். வீதிகள் தோறும் நிறைகுடம்தூபம்தீபம்முளைப் பாலிகளைகள்மணமிக்க மலர்கள்அறுகு ஆகிய மங்கலப் பொருள்களை ஏந்தி பெண்கள் எல்லாரும் எதிர்கொள்ள வருகிறார்கள். அந்த மகளிரின் உள்ளத்தில் உண்டான ஆனந்தத்தைப் பின்வருமாறு தெய்வச் சேக்கிழார் பாடுகிறார்.

 

"கண்கள்எண் இலாத வேண்டும்  காளையைக் காண" என்பார்;

"பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை" என்பார்;

"மண்களி கூர வந்த மணம்கண்டு வாழ்ந்தோம்" என்பார்;

பண்களில் நிறைந்த கீதம் பாடுவார்,ஆடுவார்கள்.           --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     திருமணம் எதிர்கொள்ள வந்த மகளிருள் சிலர்இந்த மணமகனைப் பார்க்க எண்ணிறந்த கண்கள் வேண்டும் என்று சொல்லுவார். சிலர்இம் மணமகனைப் பெறுவதற்கு ஏனைய மகளிரினும்அவருக்கு மனைவியாக அமையப் போகின்ற சடங்கவியாரின் மகள் மிகுதியான தவத்தைப் புரிந்தவள் என்று சொல்லுவார். சிலர்இந்த மண்ணுலகத்தார் உள்ளம் மகிழ்வு அடையுமாறு நிகழ்கின்ற இந்த மணக்கோலத்தைக் கண்டு நாம் பெரும்பேறு பெற்றோம் என்பார். சிலர்இசை நிரம்பிய அரிய பாடல்களைப் பாடிக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியால் கூத்தாடுவர்.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்களோடு புனல் வாதம் புரிந்துசைவத்தை நிலைநாட்டிய பின்புபாண்டிய மன்னன்மங்கையர்க்கரசியார்குலச்சிறையார் முதலான தொண்டர்கள் சூழ சொக்கநாதப் பெருமானை வழிபட வேண்டி வருகின்றார். திருஞானசம்பந்தப் பெருமானைக் கண்டு பாண்டி நாட்டு மக்கள் எல்லாரும் கண் படைத்த பயனை அடைந்தார்கள் என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

"எண்அரும் பெருமைத் தொண்டர்

            யாவரும் மகிழ்ச்சி எய்திப்

புண்ணியப் பிள்ளை யாரைப்

            புகழ்ந்துடன் போற்றிப் போத,

மண்ணெ(ல்)லாம் உய்ய வந்த

            வள்ளலார் தம்மைக் கண்டு

கண்ணினால் பயன்கொண் டார்கள்

            கன்னி நாட்டவர்கள் எல்லாம்.   --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     எண்ணுதற்கு அரிய பெருமை உடைய தொண்டர்கள் எல்லோரும் மகிழ்ந்து சிவபுண்ணியப் பிழம்பாகத் திகழும் திருஞானசம்பந்தப் பிள்ளையாரைப் புகழ்ந்துஅவருடைய திருவடிகளை வணங்கிப் போற்றி வரபாண்டிய நாட்டவர் அனைவரும் உலகம் உய்வதற்கு என்றே தோன்றிய திருஞானசம்பந்தரை நேரே காணப் பெற்றதால் கண்கள் படைத்த பயன்களை அடைந்தவர் ஆயினர்.

 

     கம்பராமாயணத்தில் இப்படி இரண்டு காட்சிகளைக் கவிச்சக்கரவர்த்தி காட்டுகிறார். மிதிலை நகரின் கன்னிமாடத்தில் இருந்த சீதாபிராட்டியைக் கண்டவர்கள் வைத்த  கண்ணை வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். இடையிடையே கண்ணை இமைத்துத் தானே இந்த அற்புதக் காட்சியைக் காணவேண்டி இருக்கிறது நமக்கு இமையா நாட்டம் இல்லையே என்று வருந்தினார்களாம். இமையாத கண்ணைப் பெற்றவர்களாகிய தேவர்களாவது சீதையைப் பார்த்துத் திருப்தி அடைந்தார்களா என்றால்அவர்கள் தம்முடைய இமையா நாட்டத்தை உடைய இரு கண்களால் அனுபவித்து மகிழ முடியாது என்று வருந்தினார்களாம்.

 

"உமையாள் ஒக்கும் மங்கையர்

      உச்சிக் கரம் வைக்கும்

கமையாள் மேனி கண்டவர்.

       காட்சிக் கரை காணார்;

இமையா நாட்டம் பெற்றிலம்

       என்றார்; ‘இரு கண்ணால்

அமையாது’ என்றார்அந்தர

       வானத்தவர் எல்லாம்".

 

     இன்னொரு காட்சி. மிதிலையில் சனகன் காட்டிய வில்லை ஒடித்த ஒலியைக் கேட்ட மிதிலை நகர மாந்தர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அவர்களின் கூற்றாகவிச்சக்கரவர்த்தி காட்டும் அருமையான பாடல்....

 

"நம்பியைக் காண நங்கைக்கு

       ஆயிரம் நயனம் வேண்டும்;

கொம்பினைக் காணும்தோறும்.

       குரிசிற்கும் அன்னதே ஆம்;

தம்பியைக் காண்மின்என்பார்;

       தவம் உடைத்து உலகம்என்பார்;

இம்பர் இந் நகரில் தந்த

       முனிவனை இறைஞ்சும்’ என்பார்.

 

     இராமபிரானது வடிவழகைக்காண்பதற்கு சீதைக்குக்  கண்கள் ஆயிரம்  வேண்டும் என்று கூறுவார். பூங்கொம்பு போன்ற சீதையைப்  பார்க்கும்தோறும் புதிய புதிய வடிவழகே புலப்படுவதால்,  அவளைக் காண்பதற்கும் பெருமானாகிய இராமனுக்கும் ஆயிரம் கண்கள் வேண்டும் என்பார். அண்ணன்  இருக்கட்டும். அவன் தம்பியான இலக்குவன் வடிவழகைப் பாருங்கள் என்று சொல்வார் இப்படிப்பட்ட அழகு உள்ளவர்களைப்  பெற்றதால் இந்த நிலவுலகம் தவம் செய்தது ஆயிற்று என்று சொல்லுவார். மற்றும் சிலர் இந்த மிதிலை நகரில் இம் மைந்தர்களை அழைத்து வந்த  விசுவாமித்திர முனிவனை  எல்லாரும் வணங்குங்கள் என்று சொல்லுவார்கள்.

 

     அருணகிரிநாதப் பெருமான்,"நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே" என்று வருத்தப்படுகிறார்.  திருச்செங்கோட்டுக்குப் போக இரண்டு கால்கள் போதும். இறைவனைத் தொழும்போதுகுவித்து வணங்க இரண்டு கைகள் போதும். ஆனால் பெருமானுடைய பேரழகைக் காண இரண்டு கண்கள் போதாது.

 

"அண்ணலார் குமரன் மேனி 

     அடிமுதல் முடியின் காறும் 

எண்ணிலா ஊழி காலம் 

     எத்திறம் நோக்கினாலும் 

கண்ணினால் அடங்காது உன்னில்

     கருத்தினால் அடங்காதுஎன்பால்

நண்ணினான் அமருக்கு என்கை 

     அருள் என நாட்டலாமே

 

என்று சூரபதுமனே தன்னுடன் போர் புரிய வந்த முருகப் பெருமானின் திருமேனி அழகைதிருவடி முதல் திருமுடி வரையிலும் எவ்வளவு காலம் பார்த்தாலும் கண்களுக்கு அடங்காது என்று வியந்தான் என்று கந்தபுராணம் கூறும்.

 

     ஆணவத்தின் மொத்த உருவமான அரக்கனே இவ்வாறு சொன்னான் என்றால்அருள் உள்ளம் கொண்ட அருணகிரிநாதருக்குச் சொல்லவா வேண்டும்திருச்செங்கோட்டு வேலனைக் கண்டு வணங்கி மகிழ்வதற்கு இரண்டு கண்கள் போதா. நாலாயிரம் கண்கள் வேண்டும் என்று தோன்றியது.

 

"மாலோன் மருகனை,மன்றாடி மைந்தனை,வானவர்க்கு 

மேலான தேவனை,மெய்ஞ்ஞான தெய்வத்தை,மேதினியில் 

சேல்ஆர் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ,

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே!"

 

என்று பாடுகிறார்.

 

இதன் பொருள் ---

 

     திருமாலின் திருமருகரும்திருச்சபையில் திருநடனம் புரிந்து அருளும் சிவபரம்பொருளின் திருப்புதல்வரும்தேவர்களுக்கும் தேவராக விளங்குபவரும்உண்மை அறிவான தெய்வமாக விளங்குபவரும்இந்த உலகத்தில் கெண்டை மீன்கள் நிறைந்த வயல்களும்சோலைகளும் சூழ்ந்துள்ள திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவரும் ஆன முருகப் பெருமானைக் கண் குளிரக் கண்டு வழிபடுவதற்குஅந்தப் பிரமதேவன் அடியேனுக்கு நாலாயிரம் கண்களைப் படைக்கவில்லையே! (இரண்டு கண்களைத் தானே படைத்திருக்கிறான்.)

 

     இன்னொரு பாடலில், "பிரமதேவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்அவன் என்னை இவ்வாறு படைத்து விட்டான்" என்று திருத்தணிகை வேலனிடம் முறையிட்டுக் கொள்வார். 

 

     வள்ளல் பெருமான்கந்தம் மிகு நின்மேனி காணாத கயவர் கண்கலம் நீர் சொரிந்த அழுகண்என்றும், "மெய்ய! நின் திருமேனி கண்ட புண்ணியர் கண்கள்மிக்க ஒளி மேவு கண்கள்" என்றும் பாடுவார்.

 

     "கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே!" என்று சிலப்பதிகாரம் கூறும்.

உலகம் இயங்குவது யாரால்?

 


உலகம் இயங்குவது யாரால்?

-----

 

    பண்புடைமை என்பது சான்றாண்மைகளில் வழுவாது நின்றுஎல்லார் இயல்புகளும் அறிந்து ஒழுகுதல் என்று காட்ட"பண்புடைமை" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினார். "பண்பு எனப்படுவது பாடு அறிந்த ஒழுகல்" என்றும்  ‘‘பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" என்றும் கலித்தொகையில் சொல்லப்பட்டு உள்ளது.

 

    தமது பெருமைசான்றாண்மை ஆகியவைகளில் சிறிதும் குற்றப்படாது வாழ்ந்து கொண்டேஉலகத்து மக்களின் இயற்கையையும் அறிந்துஅவரவர்க்குத் தக்க விதமாக ஒழுகி வருதல் நற்பண்பு ஆகும். அவ்வாறு நற்பண்புகளை அமையப் பெற்றவர்கள் வாழ்ந்து வருவதாலேயேஅவர்களுடைய நீதியாலும்அறத்தினாலுமே இந்த உலக இயற்கையானது எக்காலமும் நிலைத்து வருகின்றது. இல்லையேல்இந்த உலகமானது மண்ணுள் மறைந்து மாய்ந்து போய்விடும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

"பண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம்,அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன்"

 

என்னும் திருக்குறளின் வழி தமது மேலான கருத்தை வெளியிட்டு உள்ளார் நாயனார்.

 

    மேலே குறித்த நற்குணங்கள் இல்லாவிட்டாலும்மிகுதியும் கூர்மையான அறிவு உடையவர்களாக சிலர் இருக்கின்றார்களேஅவர்களால் இந்த உலகத்திற்கு ஏதும் பயன் விளையாதா?என்னும் ஐயம் தோன்றலாம். இதனைத் தெளிவிக்கவே,

 

"அரம்போலும் கூர்மைய ரேனும்,மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லாதவர்".

 

என்னும் திருக்குறளை வகுத்துகூர்மை உடைய அரத்தைப் போன்ற அறிவுக் கூர்மை உடையவராக இருந்தாலும்மக்களுக்கு உரிய பண்புகள் இல்லாதவர்ஓர் அறிவினை உடைய மரத்திற்கே சமானமானவர் என்றார். 

 

    அரமானது தன்னிடத்தே வந்த பொருளைத் தேய்த்துத் தேய்த்து மாய்ந்து போகும்படிச் செய்வது போபிறரை அழிப்பதற்காகத் தமது அறிவுக் கூர்மையைப் பயன்படுத்திக் கொள்வார்களே ஒழியஒர் அறிவு உடைய மரம் உலகத்தார்க்குப் பயன்படுகின்ற அளவும் பயன் தராது போவதால்பண்பு இல்லாதவர் மரத்தைக் காட்டிலும் தாழ்ந்தவர் என்பது கருத்து. மரமானது பிறர் தேவை அறிந்து உதவாது. பயன்படுத்திக் கொள்வோர்க்கு உதவும். ஆனால்மனிதன் பிறர் தேவைதுன்பம் அறிந்து உதவ வேண்டிய பண்பு இல்லாது இருத்தலால், "மரம் போல்வர்" என்றார் நாயனார். யாருக்கும் உதவாதவர்பட்டுப் போன மரத்துக்கு ஒப்பானவர் என்றும் கொள்ளலாம்.

 

    இதுதான் வாழ்வியல் என்பதைக் காட்டும்படியாபுறநானூற்றில் ஒரு அற்புதமான பாடல்....

 

"உண்டால் அம்ம! இவ் வுலகம்,இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே;முனிவு இலர்;

துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்;பழி எனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்யர்வு இலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கு என முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே". 

 

இதன் பொருள் ---

 

    இப் பாடலைப் பாடியவன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரசன். கடலில் கலம் செலுத்திப் பிறநாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தலும்மீன் பிடித்தலும்முத்துக் குளித்தலும் பாண்டியர்கள் மேற்கொண்டிருந்த தொழில். பாண்டி வேந்தரும் இத் தொழிற்கு வேண்டும் ஆதரவு புரிந்து வந்தனர். கடாரம்சாவகம்ஈழம் முதலிய நாடுகளுக்குக் கலம் செலுத்திப் படைகொண்டு சென்று போர் புரிந்துஅரசு முறை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. பாண்டிநாட்டு அரசகுமரர்களில்இளம்பெருவழுதிஇளமையிலே கற்பவை கசடறக் கற்று,  "கற்ற பின் நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவர் காட்டியபடிகற்ற நெறியிலே ஒழுகும் மேம்பாடு உடையவனாக விளங்கினான். அவன் அவ்வப்போது பாடிய பாட்டுக்கள் சான்றோர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. அத்தகைய நலம் வாய்ந்த அவன் கடலில் பயணித்த போதுகலம் கவிழ்ந்து மாண்டான்.  அதனால்அவனைச் சான்றோர்  "கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி" என்று குறித்தனர். 

 

    இந்த உலகமானது எத்தனையோ காலமாக இன்னமும் அழியாமல் நிலைபெற்று இருக்கின்றது. இன்னமும் மனிதர்களும்உயிரினங்களும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று கல்வி அறிவில் சிறந்தவனாக விளங்கிய பாண்டியன் இளம்பெருவழுதியின் சிந்தனையில் ஒரு வினா தோன்றியது, "தமக்கென வாழாது,  பிறர்க்கென முயலும் பெரியோர் உள்ளதால் இவ்வுலகம் இன்னமும் நிலைபெற்று உள்ளது" என்பதுதான் அவனுக்குக் கிடைத்த விடை. அதை அவன் மேற்குறித்த பாடலாக வடித்தான்.

 

இப் பாடலின் பொருள் ---

 

    அம்மம்ம! எவ்வளவோ காலமாக இந்த உலக இயக்கம் இன்னமும் நிலைபெற்று இருக்கின்றது. இந்திரர்க்கு உரிய  அமிழ்தமானது தெய்வ அருளாலாவதுதவ ஆற்றலினாலாவதுதமக்கு வந்து கிடைத்தாலும் கூஅதை இனியது எனக் கருதித் தாமே உண்டு பயன் பெறலாம் என்னும் மனம் இல்லாதவர்கள். யாரோடும் வெறுப்புக் கொள்ளாத அன்புள்ளம் படைத்தவர்கள்.  பிறர் அஞ்சத் தகும் பழி பாவங்களுக்குத் தாமும் அஞ்சுபவர்கள். அந்த அச்சத்தால் சோம்பி இருக்காதவர்கள்.  புகழ் உண்டாகும் என்றால்அதற்காகத் தம்முடைய உயிரையும் கொடுப்பவர்கள்.  ஆனால்அதே சமயம்பழிக்கு இடமான இழிந்த செயல் என்றால்அதற்கு விலையாக இந்த உலகமே கிடைப்பதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பாளர்கள். மனத் தளர்சி என்பது சிறிதும் அறியாதவர்கள். இத்தகு குணநலன்கள் வாய்க்கப் பெற்ற மாண்பினை உடையவர் ஆகி,  தமக்கு என வாழுகின்ற தன்னலம் அற்றவர் ஆகிபிறர் வாழத் தானும் வாழும் பொதுநலம் பேணுபவர்கள் ஆகிய நல்லவர்கள் இருந்து கொண்டு இருப்பதால்இந்த உலகம் இன்னமும் இருந்து கொண்டு இருக்கின்றது. இயங்கிக் கொண்டு இருக்கின்றது. (இல்லையேல்திருவள்ளுவ நாயனார் காட்டியபடி,மண்ணோடு மண்ணாக மாய்ந்து போய் இருக்கும்.)

 

    "பிறர் அஞ்சுவது அஞ்சி" என்னும் சொற்றொடர் சிந்தனைக்கு உரியது. எதற்கு எடுத்தாலும் அச்சம் கொள்ளுவதும் மடமை. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாது இருத்தலும் மடமை.

 

    மனிதனாகப் பிறந்தவர் எல்லோருக்கும் உள்ளீடாக இருக்கவேண்டியது அறிவும்அன்பும் ஆகும். அறிவு மட்டும் இருந்துவிட்டால் போதாது. அன்பு இருந்தால் தான் அறிவு பயன் தரும். 


"அறிவினால் ஆகுவது உண்டோபிறிதின் நோய் 

தன் நோய்போல் போற்றாக் கடை" 

 

என்னும் திருக்குறளின் வழி இது புலன் ஆகும். பிறருக்கு வருகின்ற துன்பத்தைத் தனக்கு வந்ததாக மதித்து நடந்து கொள்ளாதபோதுஒருவன் பெற்ற அறிவினால் அவனுக்குப் பயன் ஏதும் இல்லை. பயன் இல்லாதது "பதர்" எனப்படும். அறிவுடைமை நற்பண்புகளை வளர்க்கும். அன்புடைமை பிற உயிர்களுக்கு நன்மை புரியும்.

 

    பொதுவாகப் பெண்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் நான்கு என்று கூறுவர். ஆண்களுக்கும் பொருந்தி இருக்க வேண்டிய நற்பண்புகள் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. ஆனால்இதைப் பெரிதாகக் கொள்ளமால்பெண்களுக்கு உரியதையே வலியுறுத்தும் ஆணாதிக்கம் உள்ளது.

 

    பெண்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள்பொதுவாகஅச்சம்மடம்நாணம்பயிர்ப்பு என்று கூறப்படும். "அச்சம்" என்பதுவர இருக்கும் கேடுதீங்குகளைக் குறித்த அச்சம்.பழிபாவங்களைக் குறித்த அச்சம். "மடம்" என்பதுஅறிந்த ஒன்றைஅறியாதது போல் இருத்தல். (பிறர் உள்ளக் கருத்தை அறிந்துகொள்ள உதவும். இதனால்தான்பெண்களின் உள்ளக் கருத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியாது என்பர். )"நாணம்" என்பது நாணப்பட வேண்டியதற்கு நாணப்படுதல். "பயிர்ப்பு" என்பதுதனக்கு உரியது அல்லாத ஒன்றின் மீது அருவருப்புக் கொள்ளுதல்.

 

    ஆண்மக்களுக்கு அமைந்திருக்க வேண்டிய நற்பண்புகள்அறிவுநிறைஓர்ப்புகடைப்பிடி என நான்காக வகுத்துள்ளனர் பெரியோர். "அறிவு" எனப்படுவதுஎப்பொருளையும் நன்கு கவனித்துஅதன் உண்மைத் தன்மையை அறிவது. "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்றும் "மெய்த் தன்மை காண்பது அறிவு" என்று திருக்குறள் கூறும். "நிறை" எனப்படுவதுகாக்க வேண்டியவற்றைக் காத்துநீக்கவேண்டியதை நீக்கி ஒழுகும் ஒழுக்கம் ஆகும். "ஓர்ப்பு" எனப்படுவதுஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். பொறுமைநினைவுதெளிவு கொள்ளுதல். "கடைப்பிடி" எனப்படுவதுநல்லதை மறவாது கடைப்பிடித்தல். "நன்மை கடைப்பிடி" என்பது ஆத்திசூடி.

 

    தொல்காப்பியம் பெண்மக்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் ஆறு எனக் கூறும். அவை வருமாறு...

 

செறிவு --- மன அடக்கம்.

நிறைவு --- உள்ளத்தில் உள்ளதைப் புலப்படுத்தாமல் அமைதி காத்தல்.

செம்மை --- மனக் கோட்டம் இல்லாது இருத்தல்.

செப்பு --- செய்யத் தகுவனவற்றைக் கூறுதல்.

அறிவு --- நன்மைதீமைகளை அறிதல்.

அருமை --- உள்ளக் கருத்தினை அறிதலில் அருமை. 

 

    இந்த நற்பண்புகள் இல்லாதவர் குற்றம் உள்ளவர்கள்பயனற்றவர்கள்பண்பு அற்றவர்கள்என்று நூல்கள் கூறும்.

 

    நற்பண்புகள் அமையப் பெற்றவர்கள்அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுவார்கள் எனக் காட்ட,

 

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமைஅஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்".

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

    எனவே, "பிறர் அஞ்சுவது அஞ்சி" என்று புறநானூறு கூறுகின்றது. பழி பாவங்களுக்கு அஞ்ச வேண்டும். அறிவு உடையவர்களாக இருந்தால்அவரிடத்தில் பழி பாவங்களுக்கு இடம் கொடுப்பதில் அச்சமும்நாணமும் இருக்கும் என்பதைக் காட்ட"அச்சமும் நாணமும் அறிவு இல்லோர்க்கு இல்லை"என்றது வெற்றிவேற்கை.

 

"அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று".

 

என்று மேலும் கூறுகின்றது "வெற்றிவேற்கை"

 

     கல்வி கற்று வாழ்க்கை உணர்ந்துசெய்யக் கூடாத செயல்களைச் செய்வதற்கு உள்ளத்தில் அச்சத்தை வைத்துக் கொண்டுஅறிவு இல்லாத இழிந்த குணம் உடைய பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும்,அந்தக் குடியானது சந்ததி இல்லாமல் இன்பத்துடன் வாழ்வதே நல்லது.

 

     நல்ல பண்பாளர்கள் இருந்துகொண்டு இருப்பதால்தான் இந்த உலகம்மண்ணோடு மண்ணாகிப் போகாமல்,இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அவர்கள் பொருட்டே அனைத்து நலங்களும் விளங்கிக் கொண்டு இருக்கின்றன. 

 

     "நல்லார் ஒருவர் உளரேல்,அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை"என்றார் ஔவைப் பிராட்டியார். அந்த நல்லாரில் ஒருவராபண்பாளர்களில் ஒருவராக நாம் இருப்பது நல்லது. நமது சந்ததிக்கும் நல்லது. நாம் நல்லவராக வாழ்வதால்இந்த உலகம் இயங்குகிறது என்பது எவ்வளவு பெருமைக்கு உரியது!

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...