பொது --- 1071. குருதி ஒழுகி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குருதி ஒழுகி (பொது)


முருகா! 

காம உணர்வை நீக்கி, 

அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்


கனக மயிலி னழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா


பணில வுததி யதனி லசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா


இரதி பதியை யெரிசெய் தருளு

     மிறைவர் குமர ...... முருகோனே


இலகு கமல முகமு மழகு

     மெழுத வரிய ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே,


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே,


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்,


கனக மயிலின் அழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்.


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா!


பணில உததி அதனில் அசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா!


இரதி பதியை எரி செய்து அருளும்

     இறைவர் குமர! ...... முருகோனே!


இலகு கமல முகமும் அழகும்

     எழுத அரிய ...... பெருமாளே.


பதவுரை


பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா --- சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகோனே --- முருகப் பெருமானே! 

இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை இனிது புகலாலே --- இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே கருதும் --- கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற

எனது விரகம் முழுதும் --- என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, 

கலக மறலி அழியா முன் --- என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக,

கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் --- பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகப் பெருமானே! 

விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக, பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.

விரிவுரை


குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை ---

ஒரு சிற கீரல் உண்டானால் கூட இரத்தமானது ஒழுகி, புண்ணாகி, அழுகிப் போகின்ற அவல நிலையை உடையதும், குடிசே போன்றதுமானது இந்த உடல். 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே --- 

பொருள் ஒன்றையே கருதுகின்றவர் விலைமகளிர். பொருளுக்கு விலையாகத் தமது உடலை விற்பவர்கள். பொருள் உள்ளவரைக் கண்டால், நெடுநாள் பழகியவரைப் போலக் கொஞ்சிக் குலாவுவர்.  தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். விலைமாதரின் மேனி மினுக்கு ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீர ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே? "         ---  கந்தர் அலங்காரம்.


"வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."    ---  திருவாசகம்.


"அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்


சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார், 

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே."   --- திருப்புகழ்.


"மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்


ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ? "  --- திருப்புகழ்.


"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"  --- பட்டினத்தார்.


"சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!"    --- பட்டினத்தார்.


"பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"  ---  கந்தர் அலங்காரம்.


"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. "  --- பட்டினத்தார்.


"மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு. "       --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.                                           


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்."    ---  பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். 

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---

பணிலம் - சங்கு.

முந்திய திருப்புகழ்ப் பாடலில், "கூர் வேலாலே அசுர ஈசர் குலைய, மாக்கடல் அதனில் ஓட்டிய கோவே" என்று அடிகளார் பாடி உள்ளது காண்க.

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- 

இரதிபதி -  இரதிதேவியின் கணவனாகிய மன்மதன்.

மன்மதனை எரித்த வரலாறு

ஒரு சமயம், இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை நான் பார்த்து,  மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை,  கிரியை,  யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, சொல்லால் விளக்க முடியாத ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி,  தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்,  அருவமும், உருவமும்,  உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."     ---  கந்தபுராணம்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்,  சிவபெருமானுடைய  பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவர்க்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால்,

        உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பும்" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி  நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.".    --- கந்தபுராணம்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி,  திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச் செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது. சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில்,  வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?" "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?" "முன் ஒரு நாள்,  தாங்களும், நாராயண மூர்த்தியும்  'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா? சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா? திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா? உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே! தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா? சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகுமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று உளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே." --- கந்தபுராணம்.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்லவேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான். பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான். பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று,  நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதிதேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது,  தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும்,  விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ரீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும்? இதுவும் பெருமான் பெருங்கருணை போலும்? இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 


இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---

ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத பரம்பொருளை, இன்ன வடிவம், இன்ன நிறம் என்று கண்டு சொல்லால் வடிக்கவோ, ஓவியமாகத் தீட்டவோ முடியாது.

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் எண்ணின் அல்லால்,

ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,

     ஓர்ஊரன் அல்லன், ஓர்உவமன் இல்லி,

அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்

     அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்

     இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”--- அப்பர்.

முருகன் என்றாலே "அழகன்" என்று பொருள். "என்றும் இளையாய் அழகியாய்" என்று அவனைப் பாடினர். அரக்கன் ஆகிய சூரபதுமன் கூட முருகனின் திருமேனி அழகைக் கண்டு வியந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

"ஆயிரம் கோடி காமர் அழகு எல்லாம் திரண்டு ஒன்றாகி 

மேயின எனினும்,செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில் 

தூயநல் எழிலுக்கு ஆற்றாது, என்றிடின் இனைய தொல்லோன் 

மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை யார்  வகுக்க வல்லார்"

     இராமபிரானது வடிவழகைத் தனது மனக் கண்ணால் கண்ட கம்பர், அந்த அழகை வார்த்தைகளால் வடிக்க முயன்று, முடியாமல் 'ஐயோ' என்றார். "ஐயோ, இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான்" என்று பாடினார்.

     திருவிளையாடல் புராணம், திருமணப் படலத்தில் ஒரு செய்தியினைப் பரஞ்சோதி முனிவர் உணர்த்துகிறார். மதுரையம்பதியில் சொக்கநாதப் பெருமான் திருவுலா வருகிறான். அவன் திருமேனி அழகைக் கண்டு மயங்கிய ஒருத்தி, அவன் தன்னைப் பார்க்காமலேயே போகின்றானே என்று ஏங்கினாள். அவனது திருமேனியை எப்போதும் கண்டு மகிழவேண்டும் என்று அவள் எண்ணியபோது, ஓவியக் கலையில் வித்தகன் ஒருவனைக் கண்டாள். 'இவனை ஓவியமாக வடித்துத் தந்தால், உனக்கு வேண்டிய பொருளைத் தருகின்றேன்' என்றாள். ஓவியனோ, 'அவனை யாரால் எழுத முடியும்' என்றான். அதைக் கேட்டதுமே அவள் உயிர் சோர்ந்து போய்விட்டது. 

"கவனமால் விடையான் தன்னைக்

     கடைக்கணித் திலன் என்று அங்கு ஓர்

சுவணவான் கொடி ஓர் ஓவத்

தொழில்வல்லான் குறுக நோக்கி,

இவனை நீ எழுதித் தந்தால்

     வேண்டுவ ஈவன் என்றாள்;

அவனை யார் எழுத வல்லார்

     என்றனன்; ஆவி சோர்ந்தாள்".   --- திருவிளையாடல் புராணம்.

இதன் பொருள் ---

     சிறந்த பொற்கொடி போன்ற ஒரு நங்கை, விரைந்து செல்லுகின்ற திருமாலாகிய இடபத்தை உடைய இறைவன், தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றான் என்று கருதினாள். அவ்விடம் ஓவியத் துறையில் கை தேர்ந்த ஒருவன் வர, அவனைப் பார்த்து,  'இதோ இந்த அழகனை நீ எழுதித் தந்தாயானால்,  நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன்' என்றாள். 'அவனை யாரால் எழுத முடியும்? எழுத வல்லவர் ஒருவரும் இல்லை' என்று அவன் கூறினான். அது கேட்டு, அவள் உயிர் சோர்ந்தாள்.


     பெரியபுராணத்தில் மற்றுமொரு காட்சி. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருமயிலையில் திருவருளால் நிகழ்த்தினார். திருஞானசம்பந்தப் பெருமானாரால் திருவுருக் கொண்டு எழுந்த பூம்பாவையின் அழகு அதி அற்புதமானது. பூம்பாவையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு கண்டார் என்பதைக் கூறவந்த சேக்கிழார் பெருமான் ஒரு புராண நிகழ்வைக் கூறுகிறார்.

     திருச்செங்கோட்டு வேலனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டவுடன் அருணகிரிநாதருக்கு எல்லை இல்லாத ஆனந்தம் உண்டாயிற்று. அந்த கொள்ளை அழகினைக் காண, தமக்கு இரண்டு கண்கள் தானே இருக்கின்றன. பிரமன் தமக்கு நாலாயிரம் கண்களைப் படைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

     ஒரு பெண்ணுக்கு அவளது காதலன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. அதையே வெறும் காகிதமாகக் கடைக்காரன் வாங்கிச் செல்லும்போது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்றுதான். ஆனாலும், எழுதினவனுடைய நினைவும், அவன் மீது அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண்ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதி ஆக்குகின்றன.  


"எழுதரிய அறுமுகமும், மணிநுதலும், வயிரம்இடை

     இட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களும், ...... துங்கநீள்பன்

னிருகருணை விழிமலரும், இலகுபதி னிருகுழையும்,

     ரத்னக் குதம்பையும்ன, பத்மக் கரங்களும், ...... செம்பொனூலும்.


மொழிபுகழும் உடைமணியும், அரைவடமும், அடியிணையும்,

     முத்தச் சதங்கையும், சித்ரச் சிகண்டியும், ...... செங்கைவேலும்,

முழுதும் அழகிய குமர! கிரிகுமரி உடன்உருகு

     முக்கட் சிவன்பெரும் சற்புத்ர! உம்பர்தம் ...... தம்பிரானே."


கருத்துரை

முருகா! காம உணர்வை நீக்கி, அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


















உடம்பின் பயனை அடைந்தார் உயிர் விட அஞ்சார்

 

உடம்பின் பயன் அடைந்தார் உயிர் விட அஞ்சார்

-----

திருக்குறளில், துறவு என்னும் அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "பிறவியை நீக்கும் தவமுயற்சியை மேற்கொண்டார்க்கு, அதற்கு உதவியாக உள்ள உடலும் மிகை ஆகும் என்று ஆன பின்னர், அதற்கும் மேலே சம்பந்தம் இல்லாத பொருள்கள் தொடர்புப் படுதல் என்ன ஆகும்" என்கின்றார் நாயனார்.

பிறப்பினை ஒழித்தலே தகுதி எனத் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவனுக்கு, அவ்விதம் ஒழித்தற்குக் கருவியாகிய உடம்பும் எதற்கு என்று வெறுக்கின்ற காலம் வந்தபோது, அதற்கு உரியன ஆகிய பொருள்கள் மீது எதற்குப் பற்று வைத்தல் வேண்டும் என்பதால், துறவு கொண்டவன் இருவிதப் பற்றும் அறுத்தல் வேண்டும் என்று அறியப்படும். அதாவது, 'அரு உடம்பு' ஆகிய மனமும், 'உரு உடம்பு' ஆகிய உடலும் ஆகிய இரண்டின் இடத்தும், நிலையாமையை உணர்ந்தும், அவற்றின் இடத்தே பற்றைச் செலுத்தி, அவைகளால் வரும் துன்பத்தையும், இடையூறுகளையும் அடையாது, வீடு பேற்றினை விரைந்து அடைய ஆசை கொள்வார்க்கு, இந்த உடம்புகள் பயனற்றவை ஆகும்.

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல், பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை." 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

'உடம்பு' என்ற பொதுமையால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் சொல்லப்படும். இதன்கண் பற்று நிலையாமை உணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது" என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறிய விளக்கம்.

பரிமேலழகரால் குறிப்படப்படும் பத்து வகை இந்திரிய உணர்வு:-- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்கள். வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் ஐவகைக் கன்மேந்திரியங்கள்.

ஐவகை வாயுக்களாவன:-- பிராணன, அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை. வாயுக்கள் பத்து என்று சைவசித்தாந்தம் கூறும்.

காமவினை விளைவு எனப்படுவது:-- பொருள்களை விரும்புவதாகிய காமமும், நல்வினை தீவினை வாயிலாக வரும் சுகதுக்கங்களும்.

கட்டு எனப்படுவது, முத்திநெறியில் செல்லவொட்டாது தடுத்து, மனைவி மக்கள் முதலியவரிடத்துப் பற்று உண்டாகச் செய்து, ஆன்மாவை முத்தி அடையாமல் கட்டுவது.

இந்த உடம்பை, "புன்புலால் யாக்கை"  என்றும், "சினம் என்னும் கள் வைத்த தோல்பை"  என்றும், "கள்ளப் புலக் குரம்பை" என்றும், அருளாளர்கள் கூறுவார்கள். உடம்பின் அசுத்தம் இதனால் தெளிவாக விளங்கும். ஆதலினால், அறிஞர்கள் விரைவில் ஞானத்தைப் பெற்று இவ் ஊனுடம்பை உதறித் தள்ளுவர்.  இவ் ஊனுடம்புடன் என்றும் வாழ்வதற்கு ஒருப்படார். உடம்பினால் ஆன பயனைப் பெற்ற பின், உடம்பு வேண்டப்படாத பொருள் ஆகிவிடும்.  வாழை இலையின் பயன் உணவு உண்பது. உணவு உண்ட பின் அது எச்சில் இலை.  அதை விரும்புவார் யாரும் இல்லை.  எச்சில் இலையை எடுத்துப் புறங்கடையில் எறிய வேண்டியது தான். அதுபோல், ஆன்ம இலாபம் ஆகிய இறையின்பத்தை அனுபவித்தார்க்கு, இவ் உடம்பு மிகையே. நாலுபேர் சுமக்கும் மூட்டையாகிய இவ் உடம்பை ஒருவன் சுமந்து அலைவது என்றால் அது துன்பம் தான். சுமையை இறக்குவதற்குத்தான் யாரும் விரும்புவர். இந்த உடம்பை "நரம்பால் பொதிந்த பொதி" என்கிறார் அருணகிரிநாதர். பொதியினை நீண்ட நேரம் சுமந்து இருக்க யாருமே விரும்பமாட்டார்கள். இறக்கி வைத்து இளைப்பாறும் நேரத்தை எண்ணி இருப்பார்கள்.

ஒரு வகுப்பில் பயிலும்போது, அதற்கு உரிய புத்தகம் தொலைந்து விட்டால், மாணவனுக்கு வருத்தம் தோன்றும். வேறு புத்தகத்தை வாங்கிக் கொள்வான். அதுபோல, பிறந்த இந்தப் பிறவியில் உடம்பின் மீது பற்றுக் கொண்டவனுக்கு அதை விட மனம் வராது. அவன் மீண்டும் மீண்டும் பிறந்து வேதனைப்படுவான். புத்தகத்தைப் படித்துத் தேறிவிட்ட மாணவன் அடுத்த வகுப்புக்குச் செல்வான். அந்த நிலையில் அவன் ஏற்கெனவே படித்த புத்தகத்தைச் சிறுதும் விரும்பமாட்டான். காரணம், அந்தப் புத்தகத்தின் பயனை அவன் பெற்றுவிட்டான். அதுபோல, உடம்பினால் ஆன பயனைப் பெற்று விட்டவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். உடம்பை விடுவது பற்றிக் கவலை கொள்ள மாட்டார்கள். இந்த உடம்போடு இருப்பது அவர்களுக்கு அவருப்பையே தரும்.

"மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ்குருவும்

கோனாகி என்னைக் குடிஏற்றிக் கொண்டனன், குற்றமில்லை,

போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய் அன்றுகாண்,

ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!"

என்கிறார்   பட்டினத்து அடிகளார்.

இதன் பொருள் ---

மான் போலும் விழிகளை உடைய மாதரின் கண்வலையில் இருந்து தப்பி, சற்குரு நாதரின் அருள் பார்வையைப் பெற்று விட்டேன். அதனால் முத்தி பெறுவது நிச்சயம். குற்றம் இல்லை. இந்த உடம்பு போனாலும் இனி நான் அடைவது திருவடிப் பேற்றைத்தான். அழியாது இருந்தாலும் அடைவது திருவடிப் பேற்றினால் உண்டாகும் இன்பத்தையே. இருந்தாலும், இந்த உடம்போடு இருப்பது வெறுப்புக்கு இடமானதே ஆகும்.

இந்த உடம்பு நாமாகப் பெற்றது இல்லை. நாமாகப் பெறுகின்ற சுதந்திரம் இருக்குமானால், குருடனாகவோ, முடவனாகவோ பிறப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். இந்த உடம்பு நாம் செய்துள்ள வினைகளின் பயனாக, வினைகளின் பயனை அனுபவித்துக் கழிப்பதற்கு ஏதுவாக இறைவனால் படைத்து அளிக்கப் பெற்றது. நாமாகக் கொண்டு வந்தது இல்லை. எனவே, இந்த உடம்பு படைத்து அளிக்கப் பெற்றதன் பயனை அடைந்து விட்டால், பின்னர் உடம்பு தேவைப் படாது. 

பள்ளிப் படிப்பை நல்லவிதமாக முடித்துக் கொண்டவன், பள்ளியை விட்டுக் கல்லூரியைத் தேடுவான். பள்ளியிலேயே இருக்க விரும்பினாலும் அது ஈடேறாது. படித்துப் பயன் பெறுவதற்கே பள்ளி. பள்ளியானது மாணவனுக்குச் சொந்தமானது அல்ல. அதுபோலவே, இந்த உடம்பும் நமக்குச் சொந்தமானது அல்ல. வாழ்நாள் முடிவில், படைத்தவனே எடுத்துக் கொள்வான். நாம் விரும்பினாலும் அது திரும்பக் கிடைக்காது.

இந்த உடம்பினால் ஆன உண்மைப் பயனை அடைந்தவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். சுமையை இறக்கவே யாரும் விரும்புவார்கள். இதனை, ஒரு பாடலால் அறுவுறுத்துகின்றார் குமரகுருபர அடிகளார்.

"புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும் 

கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் 

விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர்; மெய்ப்பயன் கொண்டார் 

சுளியார் சுமைபோடு தற்கு."               --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

புழு நெளிந்து - புழுக்கள் நெளியப் பெற்று, புண் அழுகி - புண்கள் அழுகி, யோசனை நாறும் - நெடுந் தூரத்துக்கு நாறுகின்ற, கழி முடை நாற்றத்த ஏனும் - மிகுந்த கெட்ட நாற்றத்தை உடையதாய் இருந்தாலும், விழலர் - (உடம்பினால் ஆன பயனை உணராத) வீணர், விளிவு உன்னி - இறந்து விடுவோமே என நினைத்து நினைத்து, வெய்து உயிர்ப்பர் - பெருமூச்சு விட்டுக் கவலை உறுவர்.  மெய்ப் பயன் கொண்டார் - உடம்பினால் பெறவேண்டிய பயன் இன்னது என்று அறிந்து, அதனைப் பெற்றுக்  கொண்ட அறிஞர், சுமை போடுதற்குச் சுளியார் - இந்த உடம்பு ஆகிய சுமையைத் தூக்கிப் போடுவதற்கு வெறுப்புக் கொள்ள மாட்டார். உயிரை விடுவதற்கு மகிழ்வர்.

உடம்பின் பயனைப் பெற்ற பிறகு, மாதம் முழுதும் வேலை செய்த வேலைக்காான் தனக்கு எஜமானன் சம்பளம் கொடுக்கும் நாளை எதிர்பார்ப்பது போலத் தன் தேகநாச காலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டும். சுமை சுமைக்கின்ற ஒருவன் சுமைப்பாரம் தாங்காது அதைக் கொண்டு இறக்குமிடம் வரும் வரையில் வருந்தி நடந்து, இடம் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீது இருக்குஞ் சுமையை இறக்கி மனம் மகிழ்தல்போல், உடம்பு எடுத்த பயனை அடைந்த அறிஞர், அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தம் அடைந்து, அச் சுமையைப் போடும் காலம் கண்டால் மகிழ்ச்சி கொள்வார். ஆகையால் சுமை போடுதற்குச் சுளியார்" என்றார் அடிகளார்.

"அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,

பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பு ஊர்ந்த 

சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன் 

கோதுபோல் போகும் உடம்பு."        --- நாலடியார்.

பெறுதற்கு அரிய இந்த மானுட உடம்பைப் பெற்றதன் பயன் பற்றிக் கூறுகிறது இந்தப் பாடல். "அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்தில் வந்ததால்,  உடம்பின் பயன் அறவாழ்வு வாழ்தலே என்கிறது. 

இதன் பொருள் ---

பெறுவதற்கு அருமையானது இந்த மானுடப் பிறவி. இந்த அரிய பிறவியைப் பெற்றதன் பயனை அடைந்து விடுதல் வேண்டும். இல்லையானால், இந்த உடல் வலுவிழந்து, ஒருநாள் சாறு பிழிந்த கரும்புச் சக்கைபோல் ஆகிவிடும்.

கரும்பினைப் பெற்றவன் அது உலர்ந்து போவதற்குள் சாறு பிழிந்து, அதனால் ஆன பயனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். கரும்பு உலர்ந்து வாடிப் போனால் பயன் இல்லை. கரும்பினை ஆட்டிச் சாறு பிழிந்து, அதனை கட்டிவெல்லம் ஆக்கிக் கொண்டவர்கள், சக்கை தீப்பிடித்து எரிந்தால் வருந்தமாட்டார்கள் என்பதைக் காட்டி, ஒரு பாடல்...

"கரும்பு ஆட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்,

துரும்பு எழுந்து வேம்கால் துயர் ஆண்டு உழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவது இலர்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

கரும்பை ஆலையில் இட்டு ஆட்டிச் சாறு பிழிந்து காய்ச்சி வெல்லக் கட்டி ஆக்கிக் கொண்டவர்கள், சாறு பிழிந்த கரும்புச் சக்கையை அடுப்பு எரிக்க ஆலைத் தீயில் போடும்போது, இது வெல்லத்தைத் தந்த கரும்பின் சக்கை ஆயிற்றே என்று எண்ணிக் கவலை கொள்ளமாட்டார்கள். அதுபோலத்தான், வாழ்நாளில் உடம்பின் பயனை அடைந்து விட்டவர்கள், ஒருநாள் வரப்போகின்ற சாவை எண்ணி வருந்தமாட்டார்கள்.

உடம்பின் பயன் என்ன என்றால், உயிர்க்கு உறுதியைத் தருகின்ற இறைவனை நாடி இருப்பதே ஆகும். "உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே, அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

"படிறு ஆயின சொல்லிப் பாழ்உடல்

    ஓம்பி, பலகடைச் சென்று,

இடறாது ஒழிதும், எழு நெஞ்சமே!

    எரி ஆடி எம்மான்

கடல் தாயின நஞ்சம் உண்ட

    பிரான்கழல் சேர்தல்கண்டாய்,

உடல்தான் உளபயன் ஆவசொன்

    னேன் இவ் வுலகின் உள்ளே."

என்பது சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்து அந்தாதியில் வரும் ஒரு பாடல்,

இதன் பொருள் ---

செல்வம் மிகுந்து, உலோப குணமும் மிகுந்து உள்ளவர்களைத் தேடிச் சென்று, பாரியே, வள்ளலே என்று அவர்களைப் புகழ்ந்து, பல பொய்களைக் கூறி, அவர் தரும் அற்பப் பொருளை இரந்து சென்று, பிறிது ஒன்றுக்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற்படிகளில் ஏறி இடறுதல் நேராதபடி, அதில் இருந்து விடுபடுவோம். நெஞ்சமே! புறப்படு. (எதற்கு என்றால்) அனலைத் திருக்கையிலே ஏந்தி ஆடுபவனும், கடலில் தோன்றிய விடத்தை உண்டு அருளியவனும் ஆன சிவபரம்பொருளினது திருவடிகளைச் சார்வதே, இந்த உலகத்தில் கிடைத்ததாகிய இந்த உடலால் பெறப்படும் பயன் ஆகும். இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

"எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால் ஆம்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு."

என்கின்றார் "நல்வழி" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் சிந்தித்துப் பார்த்தால், இந்த உடம்பானது கொடிய புழுக்களும் நிறைந்த நோய்களும் நிலைத்து இருக்கும் சிறு குடிசை போல இருக்கின்றது. நல்ல அறிவினை உடையவர்கள் இதன் இயல்பினை அறிந்து இருப்பர். ஆகையால், தாமரை இலையில் தண்ணீர் போல இவ்வுடம்புடன் கூடி இருந்தாலும் பற்று இல்லாமலே இருப்பர். ஆனால், அதனைப் பற்றிப் பிறரிடம் பேசமாட்டார்.

விழல் என்னும் சொல்லுக்கு, விழுதல், பயன் இன்மை என்று பொருள். "விழல்" என்பது பசு முதலிய விலங்குகளுக்கும் பயன்படாத ஒருவகைப் புல். அது போன்று ஒன்றுக்கும் பயன்படாதவரை "விழலர்" என்று கூறினார்.

பிறந்தவர் யாரும் இறக்கத்தான் வேண்டும். நிலையாக இவ்வுலகில் இருந்துவிட முடியாது. மரணத்திற்கு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், உடம்பைக் கொண்டு பெறவேண்டிய நற்பயனைப் பெற்று விட்டவர்கள் உடம்பினை விடுவதற்கு அச்சம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இந்த உடம்பு ஒரு சுமையாகத் தோன்றும். "பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை" என்று திருவள்ளுவ நாயனாரும், "மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமை போடுதற்கு" என்று குமரகுருபர அடிகளாரும் கூறியதை மனதில் வைத்து, பயனுற வாழ்தல் வேண்டும்.


பொது --- 1070. மறலி போற்சில

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மறலி போற்சில (பொது)

முருகா! 

அடியேனைக் காத்து அருள்வீர்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


மறலி போற்சில நயன வேற்கொடு

     மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்


வகையு மார்க்கமு மறமு மாய்த்திட

     வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர


விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்

     வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே


விழுவி னாற்களை யெழும தாற்பெரு

     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய்


மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம

     மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே


மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்

     வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே


குறவர் காற்புன அரிவை தோட்கன

     கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர்


குலைய மாக்கட லதனி லோட்டிய

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


மறலி போல், சில நயன வேல்கொடு,

     மாயா தோயா வேய் ஆர் தோளார், ...... மறைஓதும்


வகையும், மார்க்கமும், அறமும் மாய்த்திட

     ஆறு ஆராயாதே போம் ஆறா ...... திடம் தீர


விறலும், மேல் பொலி அறிவும் ஆக்கமும்

     வேறாய், நீர் ஏறாது ஓர் மேடாய், ...... வினையூடே


விழுவினால் களை எழும் அதால், பெரு

     வீரா! பாராய், வீணே மேவாது ...... எனை ஆளாய்.


மறலி சாய்த்தவர், இறை பராக்ரமம்

     மால் காணாதே, மாதோடே வாழ் ...... பவர் சேயே!


மறு இலாத் திருவடிகள் நாள் தொறும்

     வாய்ஆர் நாவால் மாறாதே ...... ஓதினர் வாழ்வே!


குறவர் கால் புன அரிவை தோள் கன

     கோடு ஆர் மார்பா! கூர் வேலாலே ...... அசுரஈசர்


குலைய, மாக்கடல் அதனில் ஓட்டிய

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

மறலி சாய்த்தவர் --- எமனைத் திருவடியால் உதைத்தவர்

இறை --- அந்த இறைவர்,

பராக்ரம மால் காணாதே --- வல்லமை மிக்க திருமாலால் காண முடியாதவர்,

மாதோடே வாழ்பவர் சேயே --- உலக அன்னையாகிய உமாதேவியாருடன் உறைபவரின் குழந்தையே!

மறு இலா திருவடிகள் நாள் தோறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே --- குற்றம் இல்லாத திருவடிகளை நாள்தோறும் வாயார நாவால் தவறாமல் ஓதுகின்றவர்களின் அருட்செல்வமாகத் திகழ்பவரே!

குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா --- குறவர்கள் வாழுகின்ற காட்டிலே தினைப்புனம் காத்திருந்து வள்ளிநாயகியின் தோள்களையும், பருத்த மார்பகங்களையும் தழுவிய திருமார்பினரே!

கூர் வேலாலே அசுர ஈசர் குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே --- கூர்மையான வேலினாலை அழிந்து படுமாறு அசுரேசர்களைப் பெரிய கடலிடையே ஓட்டிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- உயிர்களால் விரும்பப்படுபவரே!

வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

மறலி போல் சில நயன வேல் கொடு --- எமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தைக் கொண்டு,

மாயா தோயா --- காம மயக்கத்திலே தோயுமாறு,

வேய் ஆர் தோளார் மறை ஓதும் வகையும் மார்க்கமும் மறமும் --- மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காமசாத்திரத்தைப் படிக்கும் வகையையும், அதிலேயே ஈடுபடும் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் 

மாய்த்திட ஆறு ஆராயாதே --- போக்குகின்ற நன்னெறி இன்னது என்று ஆராய்ந்து அறியாமல்,

போம் ஆறா --- மனம் போகின்ற வழியிலேயே சென்று,

திடம் --- மனத் திண்மையும்,

தீரம் --- துணிவும்,

விறலும் --- பெருமையும்,

மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் --- மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி,

நீர் ஏறாதே ஓர் மேடாய் --- நீர் ஏற்றம் காணமுடியாத ஓரு மேடு போல இருந்து,

வினை ஊடே விழுவினால் --- ஊழ்வினையின் ஊடே கிடந்து,

களை எழும் அதால் --- (ஓயாது உண்டாகும் பிறப்பு இறப்புக்களால்) களைத்துப் போய் (இருக்கின்ற அடியேனை)

பெருவீரா பாராய் --- பெரு வீரரே! திருக்கண்ணோக்கம் வைப்பீராக.

வீணே மேவாது எனை ஆளாய் --- அடியேன் வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆண்டு அருள்வீராக.

பொழிப்புரை

எமனைத் திருவடியால் உதைத்தவர் இறைவர். அவர் வல்லமை மிக்க திருமாலால் காண முடியாதவர். உலக அன்னையாகிய உமாதேவியாருடன் உறைபவரின் குழந்தையே!

குற்றம் இல்லாத திருவடிகளை நாள்தோறும் வாயார நாவால் தவறாமல் ஓதுகின்றவர்களின் அருட்செல்வமாகத் திகழ்பவரே!

குறவர்கள் வாழுகின்ற காட்டிலே தினைப்புனம் காத்திருந்து வள்ளிநாயகியின் தோள்களையும், பருத்த மார்பகங்களையும் தழுவிய திருமார்பினரே!

கூர்மையான வேலினாலை அழிந்து படுமாறு அசுரேசர்களைப் பெரிய கடலிடையே ஓட்டிய தலைவரே!

கடவுளே!

உயிர்களால் விரும்பப்படுபவரே!

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

எமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தைக் கொண்டு, காம மயக்கத்திலே தோயுமாறு செய்கின்ற, மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காமசாத்திரத்தைப் படிக்கும் வகையையும், அதிலேயே ஈடுபடும் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் போக்குகின்ற நன்னெறி இன்னது என்று ஆராய்ந்து அறியாமல், மனம் போகின்ற வழியிலேயே சென்று, மனத் திண்மையும், துணிவும், பெருமையும், மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி, நீர் ஏற்றம் காணமுடியாத ஓரு மேடு போல இருந்து, ஊழ்வினையின் ஊடே கிடந்து, ஓயாது உண்டாகும் பிறப்பு இறப்புக்களால் களைத்துப் போய் இருக்கின்ற அடியேனை, பெரு வீரரே! திருக்கண்ணோக்கம் வைத்து, அடியேன் வீணாக வாழ்நாளைக் கழிக்காமல் ஆண்டு அருள்வீராக.

விரிவுரை

மறலி போல் சில நயன வேல் கொடு --- 

மறலி - எமன். 

மாதரின் கண்களை வேல்விழி என்பர். வெல்லும் தொழிலை உடையது வேல். குலமாதாரின் கண்கள், ஆடவர் உள்ளத்தில் படிந்து உள்ள குற்றங்களை மாய்த்து நல்வழிப் படுத்தும். விலைமாதரின் கண்களை துறந்தோர் உள்ளத்தையும் பதைக்கப் பதைக்க வதைத்துக் கொல்லும். 

எமன் உயிரைக் கொல்லுவான். விலைமாதரின் வேல் போன்ற கண்கள் உள்ளத்தைக் கொல்லும்.


நீர் ஏறாதே ஓர் மேடாய் --- 

நீரின் போக்கானது பள்ளத்தை நோக்கியே இருக்கும். மேட்டில் ஏறாது. அதுபோல, இறைவனுடைய திருவளைத் தேக்கி வைக்கும் இடமாக உள்ளம் இல்லை என்பதை அடிகளார் காட்டுகிறார்.

"பள்ளம் தாழ் உறு புனலில் கூழ் மேலாகப் பதைத்து உருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்" என்பார் மணிவாசகப் பெருமான்.


களை எழும் அதால் --- 

எண்ணரிய பிறவிகளில் உழன்று உழன்று கதி காணாமல் உயிரானது களைத்துப் போகும். "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்றார் மணிவாசகப் பெருமான்.


மறலி சாய்த்தவர் ---

மார்க்கண்டருக்காக எமனைத் திருவடியால் உதைத்தவர் சிவபரம்பொருள்.

இயமனை உதைத்த வரலாறு

அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புதல்வர் ஆகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர், முற்கால முனிவரது திருமகளாகிய மருத்துவதியை மணந்து, தவத்தையே பெருந் தனமாகக் கொண்டு, சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தார். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசி என்னும் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தார்.

வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விசுவநாதப் பெருமான், விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நீர் வேண்டும் வரம் யாது?” என்றார். முனிவர் பெருமான் புரம் மூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திரவரம் வேண்டும் என்றனர். அதுகேட்ட ஆலம் உண்ட அண்ணல் புன்னகை பூத்து “தீங்குறுகுணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும் கோல மெய்வனப்புடையவனும் குறைவிலா வடிவுடையவனும் நோயற்றவனும் எம்பால் அசைவற்ற அன்புடையவனும் பதினாறாண்டு உயிர்வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர். 


"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",

"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான்.  --- கந்தபுராணம்.


முனிவர், "வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.


மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான்.  --- கந்தபுராணம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர்; முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். 

ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது நினக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென எண்ணி ஏங்குகின்றோம்’ என்றனர். 

மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிடேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது,  ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சுதல் வேண்டாம்” என்று கூறி விடைபெற்று, காசியில் மணிகர்ணிகையில் நீராடி சிவலிங்கத்தைத் தாபித்து நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம்இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா, உனக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,


“ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’      --- கந்தபுராணம்.


“சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் "ஐயனே! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை. மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அவர் அடைவதற்கு நியாயமில்லை, அவர் திருக்கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவரே! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்து உள்ளார். உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவார்,  வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார். நீர் மோகலாம்" என்றார்.


“நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”

                                     

அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து புருவம் நெறித்து விழிகளில் கனற்பொறி சிந்த எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம்ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன். 

அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.

மார்க்கண்டேயர் “அந்தகா! அரன் அடியார் பெருமை நீ அறிந்திலை போலும். அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி, எம்புரத்தை அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.


"தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான். "      --- கந்தபுராணம்


"இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி மிகுந்த சினங்கொண்டு, "என்னையா அச்சுறுத்துகின்றாய்?  என் வலிமையைக் காண்பாயாக” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய்! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் உனது உயிரை வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை யணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.


மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்

சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.   --- கந்தபுராணம்.


நலமலி தருமறை மொழியொடு

நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

தருபொழில் அணிதிரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.


நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே. ---  திருஞானசம்பந்தர்.


நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.  --- அப்பர்.


மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.


அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,அடியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

செழும்பொழில் திருப்புன் கூர்உளானே --- சுந்தரர்.


தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட 

உதைத்துக்கோத்த தோள்உடை 

என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே.       ----(வார்குழல்) திருப்புகழ்



பராக்ரம மால் காணாதே --- 

பராக்கிரமம் - வல்லமை.


குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா --- 

கால் - இடம், வனம், புனம்.


கருத்துரை

முருகா! அடியேனைக் காத்து அருள்வீர்.






உயிருக்கு உரிய உணவு

உயிருக்கு உரிய உணவு

-----

மனித உடம்பானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டு, ஆக்கப்பட்டது என்பதால் யாக்கை என்று சொல்லப்பட்டது. இந்த யாக்கை ஏன் வந்தது? இதனுள் புகுந்து இருக்கும் உயிரானது, நல் ஊக்கமும், நல் உணர்ச்சியும் கொண்டு வாழ்ந்து, ஊன உடம்பை, ஒளி உடம்பாக மாற்றி, "ஆக்கம்" என்று சொல்லப்படும், உலகியல் பொருளையும், அருளியல் பொருளையும் ஒருசேரப் பெற்று, வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்நாள் இறுதியில், அருளியல் ஆக்கம் ஆகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு உபாயமாக வந்ததால், இந்த உடலுக்கு "ஆக்கை" என்றும் பொருள்  உண்டு.

ஏழாவது தாதுவான மூளை ஒழுங்காக இயங்க வேண்டியது அவசியம். அதற்கு, முதல் ஆறு தாதுக்களும் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. சுவை என்றால், இனிப்பு என்று மட்டுமே கொள்ளக் கூடாது. ஆறு சுவைகளுமே சுவைகள்தான். ஒவ்வொன்றும் பயன் விளைப்பனவே. 

இனிப்புச் சுவையானது, தசையை வளர்க்கின்றது. புளிப்புச் சுவையானது. உடலுக்குக் தேவையான கொழுப்பினை உண்டாக்குகின்றது. கார்ப்புச் சுவையானது, எலும்புகளை வளர்க்கின்றது உவர்ப்புச் சுவையானது, உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது துவர்ப்புச் சுவையானது குருதியைப் பெருக்குகின்றது. கசப்புச் சுவையானது நரம்புகளை வலுப்படுத்துகின்றது.

உடலுக்குத் தேவையானதை அறிந்து, கூட்டியோ குறைத்தோ மேற்குறித்த சுவைப் பொருள்களை உண்ணுதல், உடல் நலத்திற்குத் துணை புரிவதோடு, உயிர் நலமும் சிறக்கத் துணை புரியும். உடல் நலம், உயிர் நலம் ஆகிய இரண்டையும் கருதியே உண்ணுதல் வேண்டும். நாவின் சுவைக்கு அடிமையாதல் கூடாது. ஐம்புலன்களையும் அவித்து ஒழுகுதல் குறித்துக் கூறவந்த திருவள்ளுவ நாயனார், முதலில் சுவை உணர்வைக் குறித்துத் தான், "சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு" என்று, சுவையை முதலில் வைத்துக் கூறினார். சுவைக்கு அடிமைப்பட்டு உடம்பைக் கெடுப்பதோடு அல்லாமல், உயிர் உணர்வையும் மங்கச் செய்தல் கூடாது என்னும் அருள் உள்ளம் நாயனாருக்கு இயல்பாகவே அமைந்து இருந்ததால், அந்த அருள் உள்ளத்தோடு மக்கட்கு அறிவுறுத்தினார். 

மேற்குறித்த ஆறுசுவைகளுள்,  இனிப்புச் சுவை மனிதர்களால் அதிகம் விரும்பப்படுவது. மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவை இதுவே ஆகும். எனவேதான், விருந்துணவில் இனிப்பு முதலிடம் பெறுகின்றது. மனத்திற்கு இன்பமான நிகழ்வுகளைக் கொண்டாட முதலில் இனிப்பு வழங்கப்படுவதும் இதனால்தான். செயற்கையாக உள்ளத்தில் இனிப்பை உண்டு பண்ணும். 

உப்புச் சுவையானது, உணவில் தவிர்க்க இயலாதது. ஆனால் அளவோடு இருக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு ஆகும். உடலில் அதிகமாகச் சேர்ந்த உப்புத் தன்மையைக் குறைக்க வேண்டுமானால்,  தண்ணீரை அதிகமாகக் குடிக்கவேண்டும். "உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும்" என்னும் சொலவடை இதனால் வந்தது.

உண்ணப்படுவது ஊண். உண்பதும் ஒரு பணியே ஆகும். அது பயன் கருதிச் செய்ய வேண்டிய பணி. பயன் அடையத்தக்க வகையில் செய்ய வேண்டிய பணி. உணவு பலவகை ஆகும். வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதிக்கும் உணவு தேவை. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவையே உணவு என்று பலர் கருதுகிறார்கள். மற்ற உணவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. அது மட்டுமல்ல. உண்ணுகின்ற உணவையும் கூடப் பலரும் அது உடலின் செம்மையான இயக்கத்திற்குத் தேவையானது என்று கருதி உண்பதில்லை. சுவைத்து உண்பது நல்லதுதான். ஆனாலும் சுவைக்காக உண்ணக்கூடாது. "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்பது புறநானூறு. "உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். ஏன் உடம்பினை ஓம்பவேண்டும்? என்றால், உடம்பிலே உத்தமன் ஆகிய இறைவன் கோயில் கொண்டு இருக்கின்றான் என்கிறார். "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்றும் கூறுகிறார். உயிரானது உடம்பினுள் பொருந்தி இருக்கிறது. அந்த உயிர் வளர வேண்டும். உயிர் அறிவு வடிவமனாது. அறிவு வடிவமானது என்றாலும், அதற்கு உள்ள அறிவு சிற்றறிவுதான். அந்த அறிவு விளக்கம் பெற்றுப் பேரறிவாகத் திகழவேண்டும். அதுவே உயிரின் வளர்ச்சி ஆகும். உயிர் அறிவினை, அறியாமை என்னும் இருள் மூடிக் கிடக்கின்றது. அறிவு விளக்கம் என்னும் ஒளி உதயம் ஆக ஆக, அறியாமை நீங்கும். அதுதான் உயிரின் வளர்ச்சி. அதற்கு உயிரின் இடமாக உள்ள உடம்பை செம்மையாக இருக்கவேண்டும். ஏனவே, உயிரை வளர்க்கும் முகமாக உடம்பை வளர்த்தேன் என்கிறார் திருமூல நாயனார். 

உடல் இயக்கத்திற்கும், பணிக்கும் தேவைப்படும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு உணவு முறை அமையவேண்டும். உண்ணும் உணவு, உடலுக்கு அது இயங்கும் ஆற்றலை வழங்குவதாக இருக்க வேண்டும். உடல் இயக்கத்திற்காகவே உண்கின்றோம். உண்பதற்காக அல்ல. உடல் இயக்கத்திற்கு உண்ணப்பெறும் உணவைப் போலவே அறிவு இயக்கத்திற்கு உண்ணவேண்டிய உணவும் உண்டு. அதனைத் திருவள்ளுவ நாயனார், ‘செவியுணவு’ என்கிறார். வாய் உணவில் சுவை காண்பது போலவே செவியாலும் சுவை கண்டு உண்ணவேண்டும். அறிவுடைய வாழ்க்கை வாழ வேண்டும். செவிச் சுவை உணராதவர்கள்,  வாய்ச்சுவை உணவு உண்பது பயனற்றுப் போகிறது.

"செவியில் சுவை உணரா, வாய் உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?"

என்பார் திருவள்ளுவ நாயனார்.  செவியால் சுவைத்து வாழாத வாழ்க்கை அறியாமையின் காரணமாக அவலத்தில் ஆழ்ந்து அழியும்.

கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், இது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன. மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும். "மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

உயிரியல் வாழ்க்கைக்கு உடல் கருவியே ஆகும். உடல் கருவி இல்லாத உயிர் வாழ்க்கை பயன்படுதல் இல்லை.  பயன் கொள்ளுதலும் இல்லை. வளமான உயிர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே உடலியல் வாழ்க்கை அமைகிறது. உடல் செழித்து வளர செழிப்பான உணவு தேவைப்படுவதுபோல, உயிர் செழித்து வளரவும் உணவு தேவைப்படுகிறது.  உடல் வளர்ச்சிக்குரிய உணவை ஒருபொழுது மட்டும் உண்டால் போதாது. உடலின் உழைப்புக்கு ஏற்ப வேளா வேளைக்கு உண்ணவேண்டும். பசி தோன்றிக் கொண்டே இருக்கும். பசிக்கும்போது எல்லாம் உணவு கொள்ள வேண்டும். இல்லையேல் உடல் சோர்வு உண்டாகும். பசித்து உண்பவர்க்கு மீண்டும் பசி வரும். பசிக்காமலேயே வாய்ச் சுவையை மட்டுமே கருதி, கிடைக்கும்போதெல்லாம் கண்டதையும் உண்ணுகின்றவர்க்குப் பசி எடுக்காமலேயே உயிர் விட நேரும். உடல் இயக்கத்திற்குப் பயன்படும் உணவு, சிற்றுணவு என்று சொல்லப்படும். "கழிபேர் இரையான் கண் நோய் மிகும்" என்றார் திருவள்ளுவ நாயனார். எனவே, தேவையான அளவுக்கே உண்ணுதல் வேண்டும். இந்த சுவை உணவுக்குப் பசியை ஆற்றுகின்ற ஆற்றல் உண்டு. பசி உண்டாகாமல் செய்கின்ற ஆற்றல் இல்லை. 

"செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்றார் நாயனார். எனவே, செவிக்கும் உணவு தேவைப்படுகிறது. செவி வழியாக உண்ணப்படும் உணவும் நல்ல உணவாக இருக்கவேண்டும். அது எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செவிச் சுவை முற்றுப் பெறுவது இல்லை. உணவை உண்டால் வாய் வலிக்கலாம். எனவே, அது ஓர் அளவொடு முற்றுப் பெறும். ஆனால், செவியால் எவ்வளவு நுகர்ந்தாலும் வலிப்பது இல்லை. 

"கழிபேர் இரையான்கண் நோய்மிகும்" என்று திருவள்ளுவ நாயனார் கூறினார். மிகப் பெரிய அளவில் உண்பதை 'இரை' என்றார். எனவே, உணவைத் தேவையறிந்து சிறிய அளவிலையே கொள்ளுதல் வேண்டும் என்பது தெளிவாகும். பெரிய அளவு உணவை, 'மொத்துணா' என்கிறார் குமரகுருபர அடிகளார்.

"துயில்சுவையும், தூநல்லார் தோள்சுவையும், எல்லாம்

அயில்சுவையின் ஆகுவஎன்று எண்ணி - அயில்சுவையும்

பித்துஉணாக் கொள்பபோல்கொள்ப, பிறர்சிலர்போல்

மொத்துணா மொய்ம்பின் அவர்."  --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

பிறர் சிலர் போல் - வேறு சிலர் போல, மொத்துணா மொய்ம்பினவர் - ஐம்புல இன்பங்களால் அடிபடாத தவவலிமை உடையோர், துயில் சுவையும் - தூக்கத்தின் இன்பமும், தூ நல்லார் தோள்சுவையும் - அழகிய பெண்களது தோளைத் தழுவும் இன்பமும்,  எல்லாம் - மற்றுமுள்ள எல்லா இன்பங்களும், அயில்சுவை இன் - உணவினால் உண்டாகும் இன்பத்தால், ஆகுவ என்று எண்ணி - வருவன என்று நினைத்து, அயில் சுவையும் - உணவு கொள்ளுதலையும், பித்து உணா கொள்வ போல கொள்ப - மிகச் சிறுகவே உண்பார்கள்.

வாயுணவும் செவியுணவும் உடல் வாயில்களான வாய் வழியாகவும், செவி வழியாகவும் உண்ணப்பெறுவன.  இரண்டுமே உயிரானது  நிறைவை நோக்கி நடத்தும் பயணத்திற்குத் துணை செய்வன. ஆனால் உயிருக்கு நேரடியான உணவாகா இவை. செவியுணவு இறைவன் திருவருளைப் பெறுதற்குத் துணை புரியும். எனவே, உயிருக்கு உணவு திருவருளே ஆகும். உயிருக்கு உற்ற குறையை நீக்கி, நிறைநலம் வழங்கத் திருவருளாகிய உணவாலேயே இயலும். குறைவில்லாத நிறைவான வாழ்க்கைக்கு, துன்பத் தொடர்பு இல்லாத நிறை இன்ப வாழ்க்கைக்கு நேரடியாகத் துணை புரியும் ஆற்றல் வாயுணவுக்கும் செவியுணவுக்கும் இல்லை. ஆயினும், இவை இரண்டும் இன்றி உயிர் நலம் பெறமுடியாது. 

இறைவன் திருவருளை நினைந்து வழிபட்டு வாழ்தலே உயிர் உண்ணுதற்கு உரிய சிறந்த உணவாகும். இறைவனை நினைப்பதன் மூலம் உண்ணும் உணவு,  உயிர் உண்ணத்தக்க உணவாகும். இந்த உணவு குறைந்தாலும், மிகுதியானாலும் துன்பம் வரவே வராது. உடலுக்கு இடுகின்ற உணவை உடல் ஏற்று, முறையாகச் செரித்து, உணவின் பயன்கொள்ளும்பொழுது, உடல் நலம் பெறுகிறது. உயிரானது, இறைவன் திருவருளை நினைந்து வழிபடுவதன்மூலம், தவவாழ்க்கையை மேற்கொண்டு பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுகிறது.  உடல் வாழ்க்கையின் முடிந்த பயன் இதுவே ஆகும்.

உண்ணவேண்டும் என்பதற்காக யாரும் உண்ணுதல் கூடாது. உணவினால் உடலே பயன்பெறுகிறது.  உணவிற்கு யாதொரு பயனும் இல்லை. அதுபோலத் திருவருளால் உயிரே வளம் பெறுகிறது.  உயிருக்கே ஆக்கம் உண்டாகிறது. எனவே, உயிருக்கு உயிருக்கு நிறைவைத் தரும் வகையில் இறைநெறியில் நின்று வழிபாடு இயற்றுதல் வேண்டும். இதனைத் திருஞானசம்பந்தப் பெருமான் பின்வரும் தேவாரப் பாடலின் வழி நமக்கு அறிவுறுத்துகின்றார். 

"இறை ஊண் துகளோடு இடுக்கண்எய்தி,

இழிப்புஆய வாழ்க்கை ஒழியத், தவம்

நிறைஊண் நெறிகருதி நின்றீர் எல்லாம்

நீள்கழ லேநாளும் நினைமின், சென்னிப்

பிறைசூழ் அலங்கல் இலங்குகொன்றை

பிணையும் பெருமான் பிரியாத நீர்த்

துறைசூழ் கடந்தைத் தடம்கோயில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே."

இதன் பொருள் ---

குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழி யாது என மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த் துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

இறை ஊண் - சிற்றுணவு. துகள் - தூளி. இடுக்கண் - துன்பம். தவம் நிறை ஊண் நெறி - தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் மார்க்கம். அலங்கல் - மாலை. பிணையும் - விரும்பும்.

உடலுக்குப் பசி உண்டாக உண்டாகச் சிறிதளவு உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். அது 'இறை ஊண்' எனப்படும். 'பித்து உணா' என்றும் சொல்லப்படும். பித்தர்கள், சுவை கருதி உணவை மிகுதியாக உண்ணமாட்டார்கள். செவி உணவை சலிக்காமல் கொள்ள வேண்டும். அதுவும் நல்ல உணவாக இருக்கவேண்டும். அதுவே உயிருக்கு உரிய உணவு.  "எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்" நல்லவை கேட்டால் பெருமை உண்டாகும். தீயவை கேட்டால் சிறுமை உண்டாகும். நல்லவற்றைச் சலிக்காமல் கேட்டு, நல்வழியில் நின்று, இறையருளைப் பெற்று உய்வோமாக.






மற்றவர் சிந்தனைக்கும் மதிப்புத் தருக!

 

மற்றவர் சிந்தனைக்கும் மதிப்புத் தருக!

-----

'நடுவு நிலைமை' என்பது ஒரு வாழ்வியல் அறம். நண்பர், பகைவர், அயலார் என்னும் ஒவ்வொரு பிரிவிலும் முறை தவறாமல் நின்று, ஒருதலைப் பட்சமாக இல்லாமல் வாழ்ந்து வருவதே 'நடுவுநிலைமை' என்னும் அறம் ஆகும். அது ஒன்றுதான் நன்மை தரவல்லது. நடுவு நிலைமை என்பது வாழ்வியலின் சிறந்த பண்புகளில் ஒன்று. நடுவு நிலை என்றால் எதிலும் சேராத இரண்டும் கெட்டான் நிலை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருதலைப் பட்சமான சார்பு நிலை, நடுவு நிலைக்கு எதிரானது. அதாவது, உள்ளத்தில் விருப்பையோ வெறுப்பையோ அடிப்படையாக வைத்து, ஒரு முடிவை எடுத்துக் கொண்டு, அதையே செயல்படுத்த முனைந்து, அந்த முடிவு நிலையின் அடிப்படையிலேயே மற்றவர்களை ஆய்வதும்  மற்றவர்களுடைய கருத்துக்களை ஆய்வதும் தவறான அணுகுமுறை. அது மட்டும் அல்ல. உள்நோக்கம் ஒன்றைக் கற்பித்துக் கொண்டும் ஆய்வு செய்தல், அணுகுதல் இருபாலும் நன்மையைத் தராது.

ஒரு பொருளை ஆராயும்போது, விருப்பு வெறுப்பு இன்றி நடுவு நிலையில் இருந்து ஆராய்தல் வேண்டும்.

"காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண்

ஆய்தல் அறிவுடையார் கண்ணதே, - காய்வதன்கண்

உற்ற குணம் தோன்றாது ஆகும், உவப்பதன்கண்

குற்றமும் தோன்றாக் கெடும்."

என்கிறது "அறநெறிச்சாரம்" என்னும் நீதிநூல்.

இதன் பொருள் ---

காய்வதன்கண் உற்ற  குணம் தோன்றாது ஆகும் - ஒரு பொருளின் மீது வெறுப்புக் கொண்டால், அப் பொருளில் உள்ள நன்மையான குணம் ஆராய்பவனுக்குத் தோன்றாது. உவப்பதன்கண்  குற்றமும் தோன்றாக் கெடும் - அதுபோல, ஒரு பொருளின் மீது விருப்பம் வைத்தால், அப் பொருளில் உள்ள குற்றமானது ஆராய்பவனுக்குத் தோன்றாமல் மறையும். காய்தல் உவத்தல் அகற்றி - (எனவே) வெறுப்பு விருப்பு இல்லாமல், ஒரு பொருட்கண் ஆய்தல் - ஒரு பொருளிலுள்ள குணம் குற்றங்களை ஆராய்ந்து அறிதல், அறிவுடையார் கண்ணதே - அறிவுடையார் செயல் ஆகும்.

மனிதன் எந்த வகையிலும் சுதந்திரம் உடையவன்தான்.. ஒவ்வொரு மனிதனும் அவன் நிலையில் சிந்திக்கும் உரிமை உடையவனே. ஆனால், விருப்பு வெறுப்போடு எதையும் சிந்திக்கும்போது, அவனுக்கு உண்மைப் பொருள் விளங்காமல் போகிறது. எனவே, அவனைச் சிந்திக்கத் தூண்டி அந்தச் சிந்தனையில் தவறு இருந்தால், மடை மாற்றம் செய்ய வேண்டும்.  சிந்திக்கிற பழக்கத்தையே வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. அதுமட்டுமல்ல, மற்றவர்களின் சிந்தனையின் மதிப்பைத் தனது விருப்பு வெறுப்பின் காரணமாகவோ,  அல்லது வேறுசில காரணங்களின் அடிப்படையிலோ குறைவாக எண்ணுதலும் கூடாது. சமநிலையோடு இருந்து, அவர்களுடைய சிந்தனைக்கு மதிப்பைத் தந்து, அவர்கள் சிந்தனையை எடுத்துக் கொள்ளும் மனப் போக்கு வேண்டும்.

மற்றவர் சிந்தனையையும் மதிக்கும் நிலை உண்டானால்தான், அறிவு வளரும். முதலில் விருப்பு வெறுப்பு அற்ற சமநிலையில் மனதை வைத்துக் கொண்டு, மதிப்புணர்வுடன் எண்ணி ஆய்வுசெய்து ஒப்புநோக்கி, நல்லதைத் துணிந்து முடிவு செய்ய வேண்டும். ஆய்வு செய்த பிறகு தமது கருத்துடனும் மற்ற கருத்துக்களுடனும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்ய வேண்டும். இதற்குப் பிறகுதான், எது சரியானது, எது சரியில்லை என்ற முடிவுக்கு வர வேண்டும். 

வேண்டியவர் என்றால் அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், வேண்டாதவர் என்று வந்துவிட்டால், அவர் சொல்கிற எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எண்ணுகின்ற மனப்பாங்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதானல் எத்தனையோ தீங்குகள் நிகழ்கின்றன. நல்லவர் தீயவர் என்று இகழப்படுவதும், தீயவர் நல்லவர் என்று போற்றப்படுவதும், சமநோக்கு இல்லாமையால் உண்டாகும் தீமை ஆகும். 

"இருவர்தம் சொல்லையும் எழுதரம் கேட்டே,

இருவரும் பொருந்த உரையார் ஆயின்,

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்

மனமுற மறுகி நின்று அழுத கண்ணீர்

முறையுறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதோர் வாள் ஆகும்மே."

என்கிறது "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை"

இதன் பதவுரை ---

இருவர் தம் சொல்லையும் - (வாதி எதிர்வாதி என்னும்) இருவருடைய சொற்களையும்; எழு தரம் கேட்டு - ஏழு முறை கேட்டு (உண்மை உணர்ந்து), மனுமுறை நெறியின் - மனு நீதி வழியால், இருவரும் பொருந்த உரையார் ஆயின் -  இருவரும் ஒத்துக்கொள்ளும்படியாக முடிவு சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் - நீதியின்றி வழக்கினை இழந்தவர், மனம் உற மறுகி நின்று - மனமானது  மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் - அழுத கண்ணீரானது, முறை உற தேவர் மூவர் காக்கினும் - முறையாக மூன்று தேவர்களும் காத்தாலும், வழி வழி ஈர்வது ஓர் வாள் ஆகும் - (அவர்) சந்ததி முழுதையும் அறுப்பதாகிய ஒரு வாளைப் போன்றது ஆகும்.

இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மை உணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வியுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத்தாலும், அநீதியானது, முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும்.

"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே, மெய் போலும்மே"

"மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே, பொய்போலும்மே."   --- நறுந்தொகை.

பொய்ம்மையை உடைய ஒருவன்,  தனக்கு உள்ள வாக்கு வன்மையால் கூறும் பொய்யானது உண்மையைப் போலவே தோன்றக் கூடும். சொல் சாதுரியத்தைக் கொண்டு ஒருவன் கூறும் பொய்யை மெய் என்று நம்பக் கூடாது. மெய்ம்மை உடைய ஒருவன் திறம்படச் சொல்ல மாட்டாமையால், அவன் கூறும் மெய்யானது பொய்யே போலத் தோன்றும். சொல்வன்மையாலும் சொல்ல மாட்டாமையாலும் பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், 'எழுதரம் கேட்டு' என்றார்.

கடைகளில் பண்டங்கள் எடை போடப் பயன்படுத்தும் தராசைத் தூக்கிச் சரிபார்த்தல் போல, தராசு நிலையில், அதாவது எடைக் கற்களும், பண்டங்களும் இல்லாமல் வெறும் நிலையில் தராசைத் தூக்கிச் சரிபார்த்து, தராசு பழுதில்லாமல் இருப்பதையும், சீராக எடை அளவு காட்டுகிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள முதலில் வெறும் தராசைச் சரிபார்த்து, அதன்பிறகு பொருள்களை நிறுத்துப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதுமே முறை. அதுபோலவே தனது மனநிலையை விருப்பு வெறுப்பு இல்லாமல், சமநிலையில் வைத்துக் கொண்டு பிறகுதான் மற்றவர் கருத்தை மதித்து ஆராய்ந்து அறிய வேண்டும்.

"சமன்செய்து சீர்துரக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி."

என்னும் திருக்குறளின் மூலம் நம்மை நெறிப்படுத்துகின்றார் நாயனார்.

"முன்னர் தான் சமனாக நின்று, பின்னர் தன்னிடத்தில் வைத்த பாரத்தை அளவு செய்யும் துலாக்கோல் போல், இலக்கணங்களால் நிறைந்து, ஒரு பக்கம் சாயாமல் இருத்தல் அறிவால் நிறைந்த சான்றோருக்கு அழகு ஆகும்" என்கின்றார் நாயனார்.

"இலக்கணம்" என்னும் சொல் வடமொழியில், "இலக்ஷணம்" எனப்படும்.

"துலாக்கோல் இயல்பே தூக்கும் காலை

மிகினும் குறையினும் நில்லாது ஆகலும்,

ஐயம் தீர்த்தலும், நடுவு நிலைமையோடு

எய்தக் கூறுப இயல்பு உணர்ந்தோரே."  --- தொல்காப்பியம்.


"ஐயம் தீரப் பொருளை உணர்த்தலும்

மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே." --- நன்னூல்.


"ஆவலித்து அழுத கள்வர் 

வஞ்சரை வெகுண்டு நோக்கிக்

காவலன் செங்கோல் நுண்ணூல் 

கட்டிய தருமத் தட்டில்

நாஎனும் துலைநா இட்டு, எம் 

வழக்கையும், நமராய் வந்த

மேவலர் வழக்கும் தூக்கித் 

தெரிக என விதந்து சொன்னார்."     --- தி.வி.புராணம்.

இதன் பதவுரை ---

ஆவலித்து அழுத கள்வர் - அவலம் கொட்டி அழுத பொய் வேடமுடைய இறைவர், வஞ்சரை வெகுண்டு நோக்கி - கொடியராகிய ஞாதிகளைச் (சுற்றத்தினரை) சினந்து பார்த்து(ப் பின்), காவலன் செங்கோல் நுண்நூல் கட்டிய தருமத் தட்டில் - புரவலனது செங்கோலாகிய நுண்ணிய நூலினால் கட்டப்பட்ட அறமாகிய தட்டிலே,  நா எனும் துலைநா இட்டு - உங்கள் நாவாகிய துலைக்கோலை இட்டு, எம் வழக்கையும் - எமது வழக்கையும்,  நமராய் வந்த மேவலர் வழக்கும் - எமது பங்காளிகளாய் வந்த இப்பகைவர்களின் வழக்கையும், தூக்கித் தெரிக என - தூக்கி அறிவீர் என்று, விதந்து சொன்னார் - (நூலோரை நோக்கித்) தெளிவுபடக் கூறியருளினார்.

     ஆவலித்தல் --- வாய் புடைத்து ஆர்த்தல். அரசன் செங்கோலுக்கும் அறத்திற்கும் பழுது உண்டாகாமல் நடுவு நிலையுடன் ஆராய்ந்து கூறு வேண்டியதை துலாக் கோலைக் காட்டி இவ்வாறு உருவகப்படுத்தினார். 

"தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;

செத்துக, சாந்து படுக்க, மனன் - ஒத்துச்

சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே

நுகத்துப் பகலாணி போன்று." ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

தத்தமக்குக் கொண்ட குறி தவம் அல்ல - தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவம் ஆகா; செத்துக - தன்னை ஒருவன் வாளால் செத்தினாலும், சாந்து படுக்க - அன்றி மற்றொருவன் குளிர்ந்த சந்தனத்தைப் பூசினாலும், மனன் ஒத்து - மனம் பொருந்தி, நுகத்துப் பகல் ஆணி போன்று - நுகத்தின்கண் நடுவு நிற்கும் நுகத்து ஆணியை ஒப்ப, சகத்தனாய் நின்று ஒழுகும் சால்பே தவம் - ஒன்று பட்டவனாகி நடுவுநிலையினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.

தவம் என்று சொல்லப்படுவது, அவரவர் கொண்டுள்ள புற வேடங்களைப் பொறுத்தது அல்ல. தன்னை ஒருவன் சிதைத்துத் துன்புறுத்தினாலும், மற்றொருவன் சந்தனம் பூசி மகிழ்வித்தாலும், அந்த இருவரிடத்தும் ஒத்த மனம் உடையவனாக, மாடுகளைப் பூட்டுகின்ற நுகத்தடியின் நடுவிலை நிற்கும் பகலாணியைப் போல, இரு திறத்தார்க்கும் நடுநிலையில் நின்று ஒழுகும் சான்றாண்மையே சிறந்த தவம் ஆகும்.

"முறைதெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்

இறைதிரியான், நேர் ஒக்க வேண்டும், - முறைதிரிந்து

நேர் ஒழுகான் ஆயின் அதுவாம் ஒருபக்கம்

நீர் ஒழுகிப் பால்ஒழுகு மாறு." ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

முறை தெரிந்து - கூறும் முறைமையை ஆராய்ந்து அறிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் - செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும், இறை திரியான் - அரசன்,  செல்வம் வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய், நேர் ஒக்க வேண்டும் - இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும், முறை திரிந்து - கூறும் முறையினின்றும் வழுவி, நேர் ஒழுகானாயின் - நடுவுநிலையாக ஒழுகாது ஒழிவானாயின், அது - அங்ஙனம் ஒழுகாத தன்மை, ஒரு பக்கம் நீரொழுகி - தாயின் முலையிலே வாய்வைத்து உண்ணும் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீர் ஒழுகி; பால் ஒழுகும் ஆறு - மற்றொரு பக்கம் பாலும் ஒழுகுவதை ஒக்கும்.

ஒரு தாய் தன் குழந்தைகளுக்குள், நல்ல குழந்தை இது, தீய குழந்தை இது என்று அறிந்து பாலும் நீரும் அளித்தல் இல்லாமைபோல் அரசனும் செல்வம், வறுமை நோக்கி ஒருவற்கு நன்மையும் மற்றவற்குத் தீமையும் வர நீதி கூறலாகாது. வழக்கு இட்ட இருவருள் வென்றவர் மகிழ்தல் இயல்பே. தோற்றார் வருந்துதல் இயல்பே. தீர்ப்புக் கூறுகின்றவர் தனது மனத்தில் 'அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கி' கூறுதல் வேண்டும். அப்படிப்பட்ட சான்றோர்கள் மதுரையில் இருந்தார்கள் என்று "மதுரைக் காஞ்சி" என்னும் நூல் கூறு்ம்.

"அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து

ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி

சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும்"              

நடுவு நிலையுடன் தீர்ப்புக் கூறுவாரோ, கூறமாட்டாரோ என்று அஞ்சி வந்த அச்சத்தையும், அவர்க்குத் தோல்வியால் நெஞ்சில் தோன்றும் வருத்தத்தையும், அவர்தம் நெஞ்சு கருதின பொருள் மேல் தோற்றிய பற்று உள்ளத்தையும் போக்கி, ஓரிடத்தில் வெறுப்புக் கொள்ளாமல், ஓரிடத்தில் விருப்புக் கொள்ளாமல், தமது நெஞ்சினைப் பாதுகாத்து,  துலாக்கோலைப் போல நடுவு நிலைமை உடையவராய் இக்குணங்களால் சிறந்த விரதங்களை உடைய அறநூலைச் சொல்லும் சான்றோர்களும் – மதுரை நகரில் வாழ்ந்தனர்.

மற்றவர் கருத்துக்கு மதிப்புத் தராத ஒருவனுக்கு, அதே நிலை பின்னாளில் வாய்க்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்தானே. முதலை தான் கொண்டதை விடாது. முட்டாளும் தான் கொண்டதை விடமாட்டான். தான் கொண்டதுதான் சரி என்று எண்ணாமல், மற்றவர் சொல்லுக்கும் மதிப்புத் தருகின்ற மனநிலை ஒருவனுக்கு அமைதல் வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் சமநிலையில் மனதை வைத்துக் கொண்டு எதையும் ஆராய்கின்றவர்கள் சான்றோர். அல்லாதவர்கள் அல்லாதவர்களே.

திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தில், தனது தந்தையார் செய்யப் போகும் வேள்விக்குப் பொருள் வேண்டி, சிவபரம்பொருளைப் பாடினார் திருஞானசம்பந்தர். அவருக்கு இறைவன் ஆயிரம் பொன்னைத் தந்து அருளினார். அதே திருஞானசம்பந்தர் அப்பர் பெருமானோடு திருவீழிமிழலையில் எழுந்தருளி இருந்தபோது, அவருக்கு வாசி உள்ள காசினையும், அப்பருக்கு வாசியில்லாக் காசினையும் தந்து அருளினார். அப்பர் பெருமான் கைத்தொண்டு புரிந்தவர். ஆதலினால், அவருக்கு வாசியில்லாக் காசு தந்து அருளினார். இது இறைவரின் நடுவுநிலையைக் குறிக்கும்.

தரும்புர ஆதீன கர்த்தராக விளங்கிய கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் மேற்குறித்த திருக்குறளையும், மேற்குறித்த வரலாற்றையும் வைத்து ஒரு பாடல் பாடி உள்ளார். .

"பிள்ளையினும் கைத்தொண்டு பேணுதலால், அப்பருக்கு

நல்ல படிக்காசு நல்குமால், --- எல்லாம்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல், அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி."

திருஞானசம்பந்தப் பெருமானை, பிள்ளையார் என்றும் ஆளுடைய பிள்ளையார் என்றும் வழங்குவது சைவமரபு. கைத்தொண்டு - கையினால் செய்யும் உழவாரப்பணி. அப்பர் பெருமான் உழவாரப் படை கொண்டு திருத்தொண்டு புரிந்தார். 

திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசு பெருமானும் திருவீழிமிழலையில் இருந்த பொழுது, பஞ்ச காலம் வர, இருபெருமக்களும் சிவபிரானிடம் பொற்காசு பெற்று அடியார்களை உண்பிக்கும் தொண்டினை மேற்கொண்டார்கள். அப்போது, சிலநாள் திருஞானசம்பந்தப் பெருமானார் மாற்றுக் குறைந்த காசு பெற்று வந்தார். அதனால் அதனை மாற்றி உணவுப் பொருள்களை வாங்குவதில் நேரம் வீணாயிற்று. அதற்குள் அடியவர்கள் அப்பர் பெருமானாரின் திருமடத்திலேயே உணவு அருந்திச் சென்றனர். "வாசி தீரவே காசு நல்குவீர், மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே" என்று இறைவரைத் திருப்பதிகம் பாடி, திருஞானசம்பந்தப் பெருமானார் வாசியில்லாக் காசு பெற்றார். திருஞானசம்பந்தப் பெருமானைத் தம் புதல்வர் என்று எண்ணி, சிவபெருமான் நடுவுநிலை பிறழாமை இங்கே கருதத் தக்கது.




இல்லறமே சிறந்த தவம்

இல்லறமே சிறந்த தவம்

-----


"கற்பு உடுத்து, அன்பு முடித்து, நாண் மெய்ப்பூசி 

நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பேறு

என்பதோர் ஆக்கமும் உண்டாயின், இல்லன்றே 

கொண்டாற்குச் செய்தவம் வேறு." 

"நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளிய பாடல் இது.

இதன் பதவுரை ---

கற்பு உடுத்து - கற்பினேயே  ஆடையாக உடுத்துக் கொண்டு, அன்பு முடித்து - அன்பினேயே  மலராகச் சூடிக் கொண்டு,  நாண் மெய்ப்பூசி - உடம்பில் நாணம் எனப்படும் பெண்மைப் பண்பையே கலவைச் சாந்தாகப் பூசிக் கொண்டு,  நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு - நல்ல குணங்களையும், நல்ல செயல்களையுமே ஆபரணங்களாக அணிந்த மனையாளுக்கு, மக்கட்பேறு என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின் --- நன்மக்கள் பேறு என்னும் ஒப்பற்ற செல்வமும் உண்டானால், கொண்டாட்கு - அவளை மனைவியாகக் கொண்ட ஒருவனுக்கு, செய் தவம் வேறு இல் அன்றே - அவன் செய்ய வேண்டிய தவம் வேறு இல்லை. (சிறந்த இல்லறமே முடிந்த தவம் ஆகும்)

கற்புடைய மனைவியாலேயே ஒருவனுக்கு எல்லாத் தவப் பேறும் வந்து பொருந்தும் என்பது கருத்து. அவ்வாறு இல்லறத்தை நடத்துகின்ற பேறு கிடைக்குமானால், அதுவே மங்கையர்க்கும் சிறந்த தவம் ஆகும் என்பதால், 

"மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல 

மாதவம் செய்திட வேண்டும்; அம்மா! 

பங்கயக் கைந்நலம் பார்த்தலவோ - இந்தப் 

பாரில் அறங்கள் வளரும் அம்மா!"

என்று பாடினார் கவிமணி தேசிக விநாயம் பிள்ளையவர்கள்.

வீட்டில் விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்ற சொல்லைக் கொண்டே குடும்பம் சார்ந்து பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும். குடும்பத்தைத் திறம்ட நிர்வகிக்கும் பாங்கு பெண்களுக்கே உண்டு. அவர்கள்தான் அல்லும் பகலும் உழைப்பவர்கள். அன்பு ததும்பி எழுபவர்கள்.  கல்லும் கனியக் கசிந்துருகிக் கடவுளைத் தொழுபவர்கள். அத்தகு சிறப்பு வாய்ந்த மனைவியின் துணைக் கொண்டு சிறப்பான இல்லறத்தை ஒருவன் நடாத்துதல் வேண்டும் என்றார்.

"மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித்து ஆயினும் இல்" --- திருக்குறள்.

இல்லறத்திற்கு உரிய நற்பண்புகள் மனைவியிடத்தினில் இல்லையானால், வாழ்க்கையானது எவ்வளவு மேன்மை உடையதாக இருந்தாலும் பயனில்லை.

"மழைதிளைக்கும் மாடமாய், மாண்பு அமைந்த காப்பாய்,

இழைவிளக்கு நின்று இமைப்பின் என்னாம்? - விழைதக்க

மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்

காண்டற்கு அரியதோர் காடு." ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

மழை திளைக்கும் மாடமாய் - மேகங்கள் தவழுகின்ற உயர்ந்த மாளிகையாய், மாண்பு அமைந்த காப்பாய் - சிறப்பான பாதுகாப்பினை அடையதாய், இழை விளக்கு நின்று இமைப்பின் என்னாம் --- அழகாக இழைக்கப்பட்டு ஒளி வீசும் விளக்குகள் அங்கங்கும் இருந்தும் என்ன பயனாகும்? விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் - மாட்சிமை வாய்ந்த விரும்பத்தக்க இல்லக் கிழத்தியை இல்லாதவனது வீடு, காண்டற்கு அரியதோர் காடு --- கண்கொண்டு பார்த்தற்கு இயலாத ஒரு கொடிய காடாகும்.

மனைவியானவள் சிறப்புக்கு உரியவளாக அமைந்து விட்டால் இல்லாததது என்ன? மனைவியானவள் நற்குண நற்செய்கைகளால் சிறப்பு அடையாதபோது உள்ளது என்ன? என்று திருவள்ளுவ நாயனார் வினவுகின்றார்.

"இல்லது என் இல்லவள் மாண்பானால், உள்ளது என்

இல்லவள் மாணாக் கடை" --- திருக்குறள்.

இத் திருக்குறள் கருத்துக்கு ஏற்ப, ஔவையார் அருளிய "மூதுரை" என்னும் நூலில் ஒரு பாடல் உண்டு.

"இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்."

இதன் பொருள் ---

நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றும் இல்லை. மனையாள் இல்லாமல் போனாலோ,  மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.

நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் என்னும் நூலும் இந்த உலகியல் முறையையே காட்டி, திருவருட் சத்தியின் அருளைப் பெறுகின்ற பேற்றினைப் பற்றிப் பேசுகின்றது.

"கொண்டு அங்கு இருந்தனர், கூத்தன் ஒளியினைக்

கண்டு அங்கு இருந்தனர், காரணத்து உள்ளது,

பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்,

இன்று என் மனத்து உள்ளே இல் அடைந்து ஆளுமே." 

இதன் பொருள் ---

சிவனது விளக்கமாக விளங்குகின்ற சத்திகளையும், அவள் வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதாரத் தாமரைகளிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற்பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்றது.

அம்பலவாணப் பெருமானின் அருள் ஒளியினைக் கொண்டு அங்கு எழுந்தருளி இருக்கும் திருவருள் அம்மையை அகத்தவம் உடையோர் கண்டிருந்தனர். கூத்தனாரும் திருவருள் அம்மையாகிய சிவகாமியாரும் கலந்த கலப்பால் உலகு உடல் பொருள்கள் எல்லாம் காரியப்பட்டுத் தோற்றுகின்றன. தொன்மையான செந்தமிழ்த் திரு நான்மறைகள் எல்லாம் அம்மையின் திருவடியையே எங்கும் தேடுகின்றன. அத்தகைய அம்மையானவள், என் உள்ளத்தைக் குடியிருப்பாகக் கொண்டு என்னை ஆண்டருளினள்.

"இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை,

இல் அடைந்தானுக்க் இரப்பது தான் இல்லை,

இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்,

இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்ஆன்ஐயே."  ---  திருமந்திரம்.

இதன் பொருள் ---

இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கே அன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. எல்லா நன்மைகளும் குறைவின்றி விளங்கும். அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராக மாட்டார்.

பராசத்தியைத் தன் உடம்பினுள் குடிகொள்ளப் பெற்றவனுக்கு, இல்லாத செல்வம் இல்லை. அவன் இறப்பது இல்லை. அவனுக்கும் தேவரும் நிகர் ஆவார். அவனிடம் சிவம் இல்லாமல் இல்லை. 

என்றும் நிலைத்த மாறாத இல்லாகிய திருவருள் அம்மையின் திருவடியைப் பெற்றவர் 'இல் அடைந்தார்' ஆவர். அத்தகைய திருவடியாகிய இல்லத்தை அடைந்தார் எங்கும் எவரிடத்தும் ஒன்றினையும் இரந்து பெறவேண்டியது இல்லை. அத்தகையோர்க்கு தேவலோகத்தில் வாழும் இமையவரும் ஒப்பாக மாட்டார். தாழ்ந்தவரே ஆவர். அவர்களுக்குக் கிடைத்தற்கு அரிய பொருள் என்று ஏதும் இல்லை. 

இல்லறத்தின் பெருமை குறித்து "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க.

"தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உ(ள்)ள மனைவியை,

  தவறாத சுற்றத்தை, ஏவாத மக்களை,

     தனைநம்பி வருவோர் களைச்

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களை,

     தென்புலத் தோர், வறிஞரை,

  தீது இ(ல்)லா அதிதியை, பரிவுடைய துணைவரை,

     தேனுவை, பூசுரர் தமைச்

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான் புரிந்திடல் இல்லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரி ஆயிடார்!

அந்தரி உயிர்க்கெலால் தாய்தனினும் நல்லவட்கு

     அன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

இதன் பதவுரை ---

அந்தரி --- பார்வதி தேவியும், உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே --- எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான உமைதேவிக்குக் காதலனே! அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு - அரிய மதவேள் எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள்ள மனைவியை - நல்லொழுக்கம் உடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், த(ன்)னை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகல் அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை -பசுக்களையும், பூசுரர் தமை - எவ்வுயிர்க்கும் செம்மை பூண்டு ஒழுகும் அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, என்றும் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் - பொருந்திய நன்மையை உடையவராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      "அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை" என்றார் திருவள்ளுவ நாயனார். பழுத்த துறவியான பட்டினத்து அடிகளாரும் இல்லறத்தைச் சிறப்பித்தே பாடி உள்ளார். துறவறத்தில் நின்றவர்களை இறையருளைப் பெறுகின்றார்களோ, இல்லையோ, சிறப்பான இல்லறத்தை முறையாக நடத்துகின்றவர்கள் பெருந்தவம் புரிபவர்கள் என்பதால் அவர்கள் இறையருளை எளிதாகப் பெறமுடியும் என்கிறார்.

"மங்கையர் இல்லா மனைக்கு எத்தனை அருஞ்செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை" என்கிறது "குமரேச சகதம்" என்னும் நூல்.


முத்திக்கு வழிகாட்டும் பத்திநெறி

 முத்திக்கு வழிகாட்டும் பத்திநெறி

-----

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு கூடாமல், பத்திநெறியில் வாழுகின்ற வாழ்க்கை எளிமையான ஒன்று அல்ல. பத்திநெறியில், அதற்குரிய வேடத்தைப் புனைந்து கொண்டு, பாடல்களைப் பாடிக்கொண்டு மேற்கொண்டு ஒழுகுவோர் பலராக இருக்கலாம். ஆனாலும், அவர்களில் பத்திமைப் பண்பு என்னும் அருள்நீரில் தோய்ந்து எழுந்தவர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அருள்நீரில் தோய்கின்ற தகுதியைப் பெறாதவர்களை எண்ணிவிட முடியாது. சமயச் சின்னங்களும், சடங்குகளும் சமயநெறியில் பழகுவதற்கான கருவிகளே. சின்னங்களைத் தரித்துக் கொள்வதாலோ, சடங்குகளை இயற்றுவதாலோ இறைவன் திருவருளைப் பெற்றுவிட முடியாது. அது ஞானமார்க்கமும் ஆகாது. மணிவாசகப் பெருமான் அருளியது போல, "சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவு இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டுப் போலச் சுழன்றும், விழுந்தும் கிடக்கின்ற வாழ்க்கைதான் அது.

பாடுவதும் ஆடுவதும் ஒருபுறம் இருக்க, பத்திநெறியில் பழகுவோர் புலன்களை வென்றாக வேண்டும். வென்றவர்கள் திருக்கூட்டத்தில் இருந்தாக வேண்டும். "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" என்று மணிவாசகப் பெருமான் அருளியது போல, அடியார் போல நாடகமாடிக் கொண்டு திரிவதால் பயனில்லை.  நம்முடைய உடல் வாழ்க்கை மிகவும் விந்தையானது. உடலில் புறத்தே பொருந்தி உள்ள பொறிகளும், அகத்தே உள்ள புலன்களும், ஒன்றுக்கு ஒன்று வேற்றுமை இயல்பை உடையன. ஆனால், நோக்கத்தால் ஒற்றுமை இயல்பை உடையன. கண் ஒன்றைக் காணும். காது ஒன்றைக் கேட்கும், வாய் ஒன்றைப் பேசும், மூக்கு ஒன்றை முகரும், கை ஒன்றைச் செய்யும். இந்த நிலையில் செய்யும் இறை வழிபாடு பொய்யாகத்தான் இருக்கும். அதனை இறைவன் ஏற்றுக் கொள்வது இல்லை.

"கை ஒன்று செய்ய, விழி ஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய் ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவி ஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே."

என்கிறார் பட்டினத்து அடிகளார்.

இந்தப் புலன்களை வாழ்வியல் பழக்கத்தால் பண்படுத்தி, ஒருமைப்படுத்த வேண்டும். அதுவே உத்தமமான வாழ்க்கை ஆகும். அதுவே பத்திநெறியும் ஆகும். "ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்" என்பார் வள்ளல்பெருமான்

உலகியலில் இன்று எங்கும் எதிலும் புலன்களுக்ளான சுவை ஊற்றுக்கள் மலிந்து காணப்படுகின்றன. அச் சுவையினை மோப்பம் பிடித்துப் புலன்கள் செல்கின்றன. தமக்கு உரிய தலைவனையும் அவை இழுத்துச் சென்று இழுக்கைக் கொடுத்து நிற்கின்றன. புலன்கள் இழுக்கும் பொழுது,  அவற்றின் வழிச் செல்லாமல், செல்லும் நெறி தேர்ந்து அவ்வழியில் மட்டும் புலன்களைச் செலுத்தி, தாமும் செல்ல வேண்டியது மனித வாழ்க்கையின் கடமை. வேளாண்மைக்குக் களையானது கேடு தரும் பகை ஆகும். நல்ல பத்திமை வாழ்க்கைக்கு உயிர்ப் பகையாகிய காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளையும் வெற்றி பெறுதல் வேண்டும். 

அடுத்து,  இறவாத இன்ப அன்பை அடையத் தடையாக இருப்பவை குணங்கள். அரச குணம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த குணம், அறிவு விருப்பம் உடையது.  ஆள்வினை ஆற்றல் உடையது.  விரைந்து தொழிற்படும் இயல்பினை உடையது. ஆயினும் இக் குணம்,  உலகியல் இன்பத்திற்கு ஏற்புடையதே. நிறை இன்பமான இறை இன்பத்திற்குத் தடையாகவே அமையும்.. வானில் இருந்து விழும் துளிகள் ஒன்று சேர்ந்தால் பயன் உண்டு. பலப்பலவாகச் சிதறிப் போனால் உரிய பயனை அவை தரமாட்டா. அந்த நீர்த்துளிகள் ஒன்று கூடிச் சென்று ஒரு வாய்க்காலாக, ஓர் ஆறாக, ஓர் ஏரியாக உருமாறும் பொழுதே உண்மையில் அவை பயன்படுகின்றன. அதுபோலவே, சிந்திக்கும் திறனுடைய நமது சித்தமானது, சிந்தனையை ஒரு நெறியில் செலுத்தத் தவறினால் சிந்தனைத் திறன் பயனற்றுப் போய்விடும். அதனால்தான்,  “ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன்” என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். “ஒன்றி இருந்து நினைமின்கள் உம் தமக்கு ஊனம் இல்லை” என்றார் அப்பர் பெருமான். “ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்றார் வள்ளல்பெருமான். எனவே,  நுண்ணுடலின் செயல் உறுப்புக்கள் என்றும் அந்தக் கரணங்கள் என்றும் சொல்லப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளையும் ஒருநெறிப்படுத்த வேண்டும். 

பத்திநெறி என்பது உழவுத் தொழிலைப் போன்றது. மனம் என்னும் வயலைப் பாழ்நிலமாக ஆக்கிவிடாமல்,  இதயத்தின் ஆழத்தில் பத்தி என்னும் விதையை விதைக்க வேண்டும். "பத்தித் தனி வித்து" என்பார் பட்டினத்து அடிகளார். விதைத்த பிறகு ஆர்வும் என்னும் நல்ல நீரைப் பாய்ச்ச வேண்டும். "ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி" என்பார் பட்டினத்து அடிகளார். 

"மெய்ம்மையாம் உழவைச் செய்து, விருப்பு என்னும் வித்தை வித்தி,

பொய்ம்மையாம் களையை வாங்கி, பொறை என்னும் நீரைப் பாய்ச்சி,

தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு என்னும் வேலி இட்டு,

செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே."

என்றார் அப்பர் பெருமான்.

பொய்யான வாழ்க்கையால், ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்து, நல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும் என்று மேலும் விரிவாகச் சொல்கிறார் பட்டினத்து அடிகளார்.

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி, முன்புற

மெய் எ(ன்)னும் எருவை விரித்து, ஆங்கு, ஐயமில்

பத்தித் தனி வித்து இட்டு, நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, உள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு, அம் எனக்

கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து, புண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி; நஞ்சுபொதி

காள கண்டமும், கண் ஒரு மூன்றும்,

தோள் இரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப; சிலர்இதின் வாராது,

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி, தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர,

இச்சை வித்து உகுத்துழி, யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்

பாவப் பல்தழை பரப்பி, பூ எனக்

கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி, பின்பு

மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

எனவரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை" என்னும் அருள் நூலில், மெய்ம்மையான உழவு குறித்தும், அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

இதன் பதவுரை ---

     நெஞ்சப் புனத்து - மனமாகிய கொல்லைப் புறத்தில், வஞ்சக் கட்டையை வேர் அற அகழ்ந்து போக்கி - (அநாதியே முளைத்து வேர் விட்டு இருந்த) வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி, தூர்வை செய்து - நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்தி, அன்பு என் பாத்தி கோலி - அன்பு என்னும் பாத்தியைச் செய்து, முன்புற மெய் எ(ன்)னும் எருவை விரித்து - முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டு, ஆங்கு - அந்தக் கொல்லையில், ஐயம் இல் பத்தித் தனிவித்து இட்டு - பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாத, பத்தி எனப்படுகின்ற விதையை விதைத்து,  நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி - நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர் நின்று - எதிரில் நின்று, தடுக்குநர்க்கு அடங்காது - உள்ளே புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காது, இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி - துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டிமாடுகளுக்குப் (புலன்களுக்குப்) பயந்து, உள் சென்று - அவைகளைத் தடுப்பதற்கு, கொல்லையின் உள்ளே சென்று, சாந்த வேலி கோலி - சாந்தம் என்னும் வேலியினை அமைத்து, வாய்ந்த பின் - (இவை அனைத்தும்) முடிந்த பின்னர், ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து - ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்து, கருணை இளந்தளிர் காட்ட - அது வளர்ந்து, கருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து, அருகா - எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்ற, காமக் குரோதக் களை அறக் களைந்து - காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வேரோடு பறித்து எறிந்து, சேமப் படுத்துழி - அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர், செம்மையின் ஓங்கி - செம்மையாக வளர்ந்து, மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு - உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னும் அரும்பு உண்டாகி, அம் எனக் கண்ணீர் அரும்பி - அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டு, கடிமலர் மலர்ந்து - ஞானமணம் உள்ள மலர் மலர்ந்து,  புண்ணிய அஞ்செழுத்து அருங்காய் தோன்றி - புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகி, நஞ்சு பொதி காள கண்டமும் - ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும், கண் ஒரு மூன்றும் - ஒப்பற்ற மூன்று திருக்கண்களும், தோள் இரு நான்கும் - எட்டுத் திருத்தோள்களும், சுடர்முகம் ஐந்தும் - அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும், பவளநிறம் பெற்று - பவள நிறத்தோடு விளங்கி, தவள நீறு பூசி - வெண்மையான திருநீற்றினைப் பூசி, அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் - கைப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய், காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் - கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்ற, சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி - மிக உயர்ந்த மருத மாணிக்கம் என்னும் இனிய கனியானது, பையப் பையப் பழுத்துக் கைவர - மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்க, எம்மனோர்கள் இனிது இனிது அருந்திச் செம்மாந்து இருப்ப - எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியை) இன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

     சிலர் இதின் வாராது - இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர், இந்த உழைப்பினை முயலாது, மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி - மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ் நிலமாக இருக்கவிட்டு, காமக் காடு மூடி - காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால், தீமை செய் ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக - தீமைகளைப் புரிகின்ற ஐம்புலன்களாகிய வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்க, இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட - சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட,  கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர - கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படி, இச்சை வித்து உகுத்துழி - ஆசை என்னும் வித்தை (அந்தப் பாழ் நிலத்தில்) உதிர்த்த காலத்தில், யான் எனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்து - நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சுமரமானது மிகவும் முளைத்து, பொய் என் கவடுகள் போக்கி - பொய்ம்மையாகிய கிளைகளைப் பரப்பி, செய்யும் பாவப் பல்தழை பரப்பி - செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்து, பூ எனக் கொடுமை அரும்பி - கொடுமை என்னும் அரும்புகளை விட்டு, கடுமை மலர்ந்து - தீமையே மலர்ந்து, துன்பப் பல்காய் தூக்கி - துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டு, பின்பு - அதன் பின்பு, மரணம் பழுத்து - மரணம் என்கின்ற பழமானது பழுத்து, நரகிடை வீழ்ந்து - நரகத்தில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது - தமக்கும், மற்றவர்க்கும் பயன்படாது, இமைப்பில் கழியும் - இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின்ற, இயற்கையோர் உடைத்தே - குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

இப்படி மெய்ம்மையான உழவினைச் செய்வதன் மூலம், மெய்ப்பொருளை நிலையான உணர்வில் நினைவு கூர்தல் வேண்டும். தனக்கு உவமையில்லாத் தலைவனாக, சிவன் என்னும் நாமம் தனக்கே உடைய செம்மனி அம்மானாக விளங்கும் சிவபரம்பொருளை நீள நினைந்தும், நினையாமல் நினைந்தும் வாழ்த்தி வணங்குதல் வேண்டும். இங்ஙனம் வாழக் கற்றுக் கொண்டால் இறைவன் வாழ்க்கையை மட்டும் அளிப்பதில்லை. சிவபெருமான் தனக்கு உரியனவாகப் பெற்றிருக்கும் நலன்களை எல்லாம் உயிர்க்கு வழங்கி வாழ்வித்து அருளுவான். 

இந்த இனிய பேற்றினை அடைய, பொறிகள் வழி செல்லக் கூடாது. மனம் போன போக்கில் போதல் கூடாது என்கிறார் அப்பர் பெருமான்.  

"பொறிப் புலன்களைப் போக்கு அறுத்து, உள்ளத்தை

நெறிப் படுத்து நினைந்தவர் சிந்தையுள்

அறிப்பு உறும் அமுது ஆயவன் ஏகம்பம்

குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே."    --- அப்பர்.

இதன் பொருள் ---

பொறிகளைப், புலன்களின் வழிப் போதலைத் தவிர்த்து, உள்ளத்தை ஒருமை நெறியில் நிற்கச் செய்து, தன்னை நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறும் அமுது ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினால் சென்று கூடித் தொழுவோமாக. (அறிப்பு - உணர்தல். அறிப்பு உறும் அமுது - உணர்வால் பருகக் கூடிய அமுது)

மனத்தை ஒருநெறிப்படுத்தி, இறைபணியில் நின்றால், மாளாத துன்பத்தைப் போக்கி நம்மைத் திருவடி இன்பத்தில் ஆழ்த்துவான் இறைவன் என்பதை உணர்ந்து, சித்தத்தை சிவன்பால் வைத்து பத்தி நெறியில் நின்று ஒழுகவேண்டும். பின்வரும் பாடலில் திருஞானசம்பந்தப் பெருமான் அழகாக வைத்துக் காட்டுகிறார்.

"பத்திப்பேர் வித்து இட்டே, பரந்த ஐம்புலன்கள் வாய்ப்

பாலே போகாமே காவா, பகைஅறும் வகைநினையா,

முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்

மூடா ஊடா நால்அந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்

சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள்

சேர்வார் தாமே தான்ஆகச் செயும் அவன் உறையும்இடம்

கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல்பொருள்

காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே."

இதன் பதவுரை ---

பத்திப் பேர் வித்து இட்டே - அன்பாகிய விதையை ஊன்றி, பரந்த ஐம்புலன்கள் வாய் போகாமே காவா - பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது  தம்மைக் காத்து, பகை அறும் வகை நினையா - காமம் முதலிய பகைகளை அறுக்கும் வகையில் இறைவனை நினைந்து,  முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய் மூடா ஊடா நால் அந்தக் கரணமும் ஒரு நெறியாய் - முத்திக்கு இடையூறாக உள்ள முக்குணங்களின் வழி ஒழுகாது, அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்தி, சித்திக்கே உய்த்திட்டு - சிந்தனையில் செலுத்தி, திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே - மெய்ப்பரம்பொருள் ஆகிய தன்னையே எண்ணுபவர்களை,  தானாக செய்யும் அவன் உறையும் இடம் - தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம்,  ஒர் சட்டங்கம் கத்திட்டோர் கலந்து இலங்கும் நற்பொருள் - ஆறு அங்கங்களையும் கற்று உணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின், காலே ஓவாதார் மேவும் கழுமல வளநகரே - திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் அடியார்கள் வாழுகின்ற கழுமலம் (சீகாழி) என்னும் வளம் பொருந்திய நகரம் ஆகும்.

மனம் என்னும் நிலத்தில், அன்பாகிய விதையை இட்டு, புலன்வழி பொருந்தாது, காமம் முதலாகிய பகைகள் ஆறையும் கடிந்து, முத்திக்கு இடையூறாகிய சத்துவ, இராஜச, தாமசங்கள் ஆகிய மூன்று குணங்கள் மூடாதபடி, அந்தக்கரணங்கள் ஒரு நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் உறையும் இடம் கழுமல வளநகர் என்கின்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

அருளாளர்கள் பாடி அருளிய பாடல்கள்,  பாடுவதற்கும், ஆடுவதற்குமே உரியவை அல்ல. பாடல்களின் ஊடே உணர்த்தப்பட்டு உள்ள பொருளை நன்கு உணர்ந்து, பத்திநெறியில் நின்று மன ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளும் வழியில் ஒழுக வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்றதை அறிதல் வேண்டும். முத்திநெறியினை அறியாதவர்களை மூர்க்கர் என்கிறார் மணிவாசகப் பெருமான். எனவே, முத்திநெறி அறியாத மூர்க்கர் கூட்டத்தில் கூடி இருத்தல் கூடாது.

நான் அறிந்த பாடல்களைக் காட்டி இருப்பதால், இது சிவன் அடியார்களுக்கே உரியது என்றோ, சைவத்தைப் பரப்புவதாகவோ கருத வேண்டாம். ஒரு வடிவமும், ஒரு நாமமும் இல்லாத பரப்பொருளை, அவரவர் தாம்தாம் கருதிய வடிவத்தில் நினைந்து, அவரவர் கொண்ட சமயநெறியில் நின்று வழிபடுகின்றார்கள். ஆறுகள் பலவாக இருந்தாலும், அவை எல்லாம் இறுதியில் சென்று கலப்பது கடலில்தான். அதுபோலவே, சமயநெறிகள் பலவாக இருந்தாலும், அவை எல்லாம் காட்டுவது ஒன்று எனப்படும் பரம்பொருளையே. இதைத் திருமூல நாயனார் காட்டுகிறார்.

"ஒன்றுஅது பேரூர்; வழிஆறு அதற்குஉள;

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது, தீதுஇது என்று உரை யாளர்கள்,

குன்று குரைத்துஎழு நாயை ஒத்தார்களே." --- திருமந்திரம்.

ஓர் ஊருக்குப் போவதற்கு ஆறு வழிகள் உள்ளன. எந்த வழியில் போனாலும் அந்த ஊரை அடையலாம். யார் யாருக்கு எந்தெந்த வழி வசதியான வழியோ, அந்த வழியாக ஊரை அடையலாம் ‘எனக்குத் தெரிந்த வழி இந்த வழி ஒன்றுதான்; ஆகவே, இந்த வழியாகத்தான் அந்த ஊரை நீங்கள் அடைந்தாக வேண்டும். வேறு வழிகளில் போகக் கூடாது' என்று அடம் பிடிக்கிறவர்கள் மூடர்கள். எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முயலாமல், இந்த மதம் நல்லது, அந்த மதம் தீயது என்று கிறுக்குத்தனமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசுகிறவர்களைக் குன்றைப் பார்த்துக் குரைக்கும் நாயோடு ஒப்பிடுகின்றார் திருமூல நாயனார். சைவம்தான் உயர்ந்தது என்று குரைப்பவர்களும் நாய்தான்.

திருமூல நாயனார் காட்டிய கருத்தை அப்படியே வழிமொழிகிறது சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'சிவஞான சித்தியார்.'

"சுத்தவடிவு இயல்பாக உடைய சோதி

         சொல்லிய ஆகமங்கள் எலாம் சூழப் போயும்,

ஒத்து முடியும் கூட ஓர் இடத்தே,

         ஒருபதிக்குப் பலநெறிகள் உள ஆனால் போல்,

பித்தர் குணம் அதுபோல ஒருகால் உண்டாய்ப்

         பின்ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில் பட்டோர்

         கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்."    --- சிவஞான சித்தியார் - பரபக்கம்.          

      ஞானமே தனக்குச் சுதந்திர வடிவாக உடையவன் இறைவன். சமய பேதங்கள்தோறும் அவன் அருளிச் செய்த ஆகமங்கள் எல்லாம் பலபேதங்களை உடையன. ஆயினும், ஞானபாதம் எல்லா ஆகமங்களிலும் தம்முள் ஒத்துச் சென்று ஒரு பொருளையே நோக்கி முடியும். அது எதைப் போல என்றால், ஓர் ஊருக்கு உண்டாகிய வழிகள் எல்லாம் பலவகைப் பட்டாலும், அவைகள் எல்லாம் அந்த ஊரைச் சென்று சேர்வதற்கே உள்ளதைப் போல என்று அறிதல் வேண்டும்.  எல்லா ஆகமங்களிலும் ஞானபாதம் ஒன்றாகவே அமைந்திருக்கும் என்ற உண்மையைத் தெளிந்து அறிந்து இருப்பவர் முத்தி அடைவர். அல்லாமல் பித்து ஏறினவர் போல, தெளிந்த அறிவு இல்லாமல், முத்திநெறியை அறியாமலேயே, அதனை அறிந்தவர் போலக் கூவித் திரிகின்ற அறிவிலிகள் பேச்சில் கட்டுப்பட்டவர்கள் மகாமேருவைக் குறித்துப் போக மனம் கொண்டு,  அவ்வழியைச் சென்று அடையும் அறிவைப் பெறாமல், தான் அறிந்ததாகக் கொண்டு, மற்றொரு திசையில் போய் கடலில் விழுந்ததைப் போல் ஆகும். 

ஓர் ஊருக்குப் பல வழிகள் இருக்கலாம். எந்த வழியில் போனாலும் ஊரை அடைவதுதான் நோக்கம் என்பது விளங்காத பேதைகள், ‘ஊருக்குப் போகின்ற வழி என்ன தெரியுமா? அந்த வழியில் எப்படிப் போக வேண்டும் தெரியுமா?’ என்று எல்லாம் தெரிந்ததுபோல முழங்குவார்கள். இந்த அறிவிலிகளின் பேச்சில் மயங்கியவர்கள் அவர்கள் பின்னால் போவார்கள். பொன்மலைக்குப் போகவேண்டும் என்று கிளம்பி, அதற்கான வழி தெரியாமல், கண்ட வழியில் சென்று, கடைசியில் கடலில் போய் விழுவார்கள்.


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...