பொது --- 1071. குருதி ஒழுகி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குருதி ஒழுகி (பொது)


முருகா! 

காம உணர்வை நீக்கி, 

அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்


கனக மயிலி னழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா


பணில வுததி யதனி லசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா


இரதி பதியை யெரிசெய் தருளு

     மிறைவர் குமர ...... முருகோனே


இலகு கமல முகமு மழகு

     மெழுத வரிய ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே,


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே,


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்,


கனக மயிலின் அழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்.


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா!


பணில உததி அதனில் அசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா!


இரதி பதியை எரி செய்து அருளும்

     இறைவர் குமர! ...... முருகோனே!


இலகு கமல முகமும் அழகும்

     எழுத அரிய ...... பெருமாளே.


பதவுரை


பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா --- சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகோனே --- முருகப் பெருமானே! 

இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை இனிது புகலாலே --- இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே கருதும் --- கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற

எனது விரகம் முழுதும் --- என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, 

கலக மறலி அழியா முன் --- என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக,

கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் --- பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகப் பெருமானே! 

விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக, பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.

விரிவுரை


குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை ---

ஒரு சிற கீரல் உண்டானால் கூட இரத்தமானது ஒழுகி, புண்ணாகி, அழுகிப் போகின்ற அவல நிலையை உடையதும், குடிசே போன்றதுமானது இந்த உடல். 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே --- 

பொருள் ஒன்றையே கருதுகின்றவர் விலைமகளிர். பொருளுக்கு விலையாகத் தமது உடலை விற்பவர்கள். பொருள் உள்ளவரைக் கண்டால், நெடுநாள் பழகியவரைப் போலக் கொஞ்சிக் குலாவுவர்.  தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். விலைமாதரின் மேனி மினுக்கு ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீர ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே? "         ---  கந்தர் அலங்காரம்.


"வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."    ---  திருவாசகம்.


"அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்


சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார், 

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே."   --- திருப்புகழ்.


"மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்


ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ? "  --- திருப்புகழ்.


"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"  --- பட்டினத்தார்.


"சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!"    --- பட்டினத்தார்.


"பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"  ---  கந்தர் அலங்காரம்.


"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. "  --- பட்டினத்தார்.


"மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு. "       --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.                                           


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்."    ---  பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். 

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---

பணிலம் - சங்கு.

முந்திய திருப்புகழ்ப் பாடலில், "கூர் வேலாலே அசுர ஈசர் குலைய, மாக்கடல் அதனில் ஓட்டிய கோவே" என்று அடிகளார் பாடி உள்ளது காண்க.

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- 

இரதிபதி -  இரதிதேவியின் கணவனாகிய மன்மதன்.

மன்மதனை எரித்த வரலாறு

ஒரு சமயம், இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை நான் பார்த்து,  மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை,  கிரியை,  யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, சொல்லால் விளக்க முடியாத ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி,  தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்,  அருவமும், உருவமும்,  உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."     ---  கந்தபுராணம்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்,  சிவபெருமானுடைய  பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவர்க்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால்,

        உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பும்" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி  நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.".    --- கந்தபுராணம்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி,  திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச் செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது. சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில்,  வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?" "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?" "முன் ஒரு நாள்,  தாங்களும், நாராயண மூர்த்தியும்  'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா? சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா? திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா? உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே! தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா? சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகுமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று உளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே." --- கந்தபுராணம்.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்லவேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான். பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான். பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று,  நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதிதேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது,  தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும்,  விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ரீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும்? இதுவும் பெருமான் பெருங்கருணை போலும்? இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 


இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---

ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத பரம்பொருளை, இன்ன வடிவம், இன்ன நிறம் என்று கண்டு சொல்லால் வடிக்கவோ, ஓவியமாகத் தீட்டவோ முடியாது.

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் எண்ணின் அல்லால்,

ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,

     ஓர்ஊரன் அல்லன், ஓர்உவமன் இல்லி,

அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்

     அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்

     இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”--- அப்பர்.

முருகன் என்றாலே "அழகன்" என்று பொருள். "என்றும் இளையாய் அழகியாய்" என்று அவனைப் பாடினர். அரக்கன் ஆகிய சூரபதுமன் கூட முருகனின் திருமேனி அழகைக் கண்டு வியந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

"ஆயிரம் கோடி காமர் அழகு எல்லாம் திரண்டு ஒன்றாகி 

மேயின எனினும்,செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில் 

தூயநல் எழிலுக்கு ஆற்றாது, என்றிடின் இனைய தொல்லோன் 

மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை யார்  வகுக்க வல்லார்"

     இராமபிரானது வடிவழகைத் தனது மனக் கண்ணால் கண்ட கம்பர், அந்த அழகை வார்த்தைகளால் வடிக்க முயன்று, முடியாமல் 'ஐயோ' என்றார். "ஐயோ, இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான்" என்று பாடினார்.

     திருவிளையாடல் புராணம், திருமணப் படலத்தில் ஒரு செய்தியினைப் பரஞ்சோதி முனிவர் உணர்த்துகிறார். மதுரையம்பதியில் சொக்கநாதப் பெருமான் திருவுலா வருகிறான். அவன் திருமேனி அழகைக் கண்டு மயங்கிய ஒருத்தி, அவன் தன்னைப் பார்க்காமலேயே போகின்றானே என்று ஏங்கினாள். அவனது திருமேனியை எப்போதும் கண்டு மகிழவேண்டும் என்று அவள் எண்ணியபோது, ஓவியக் கலையில் வித்தகன் ஒருவனைக் கண்டாள். 'இவனை ஓவியமாக வடித்துத் தந்தால், உனக்கு வேண்டிய பொருளைத் தருகின்றேன்' என்றாள். ஓவியனோ, 'அவனை யாரால் எழுத முடியும்' என்றான். அதைக் கேட்டதுமே அவள் உயிர் சோர்ந்து போய்விட்டது. 

"கவனமால் விடையான் தன்னைக்

     கடைக்கணித் திலன் என்று அங்கு ஓர்

சுவணவான் கொடி ஓர் ஓவத்

தொழில்வல்லான் குறுக நோக்கி,

இவனை நீ எழுதித் தந்தால்

     வேண்டுவ ஈவன் என்றாள்;

அவனை யார் எழுத வல்லார்

     என்றனன்; ஆவி சோர்ந்தாள்".   --- திருவிளையாடல் புராணம்.

இதன் பொருள் ---

     சிறந்த பொற்கொடி போன்ற ஒரு நங்கை, விரைந்து செல்லுகின்ற திருமாலாகிய இடபத்தை உடைய இறைவன், தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றான் என்று கருதினாள். அவ்விடம் ஓவியத் துறையில் கை தேர்ந்த ஒருவன் வர, அவனைப் பார்த்து,  'இதோ இந்த அழகனை நீ எழுதித் தந்தாயானால்,  நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன்' என்றாள். 'அவனை யாரால் எழுத முடியும்? எழுத வல்லவர் ஒருவரும் இல்லை' என்று அவன் கூறினான். அது கேட்டு, அவள் உயிர் சோர்ந்தாள்.


     பெரியபுராணத்தில் மற்றுமொரு காட்சி. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருமயிலையில் திருவருளால் நிகழ்த்தினார். திருஞானசம்பந்தப் பெருமானாரால் திருவுருக் கொண்டு எழுந்த பூம்பாவையின் அழகு அதி அற்புதமானது. பூம்பாவையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு கண்டார் என்பதைக் கூறவந்த சேக்கிழார் பெருமான் ஒரு புராண நிகழ்வைக் கூறுகிறார்.

     திருச்செங்கோட்டு வேலனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டவுடன் அருணகிரிநாதருக்கு எல்லை இல்லாத ஆனந்தம் உண்டாயிற்று. அந்த கொள்ளை அழகினைக் காண, தமக்கு இரண்டு கண்கள் தானே இருக்கின்றன. பிரமன் தமக்கு நாலாயிரம் கண்களைப் படைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

     ஒரு பெண்ணுக்கு அவளது காதலன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. அதையே வெறும் காகிதமாகக் கடைக்காரன் வாங்கிச் செல்லும்போது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்றுதான். ஆனாலும், எழுதினவனுடைய நினைவும், அவன் மீது அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண்ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதி ஆக்குகின்றன.  


"எழுதரிய அறுமுகமும், மணிநுதலும், வயிரம்இடை

     இட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களும், ...... துங்கநீள்பன்

னிருகருணை விழிமலரும், இலகுபதி னிருகுழையும்,

     ரத்னக் குதம்பையும்ன, பத்மக் கரங்களும், ...... செம்பொனூலும்.


மொழிபுகழும் உடைமணியும், அரைவடமும், அடியிணையும்,

     முத்தச் சதங்கையும், சித்ரச் சிகண்டியும், ...... செங்கைவேலும்,

முழுதும் அழகிய குமர! கிரிகுமரி உடன்உருகு

     முக்கட் சிவன்பெரும் சற்புத்ர! உம்பர்தம் ...... தம்பிரானே."


கருத்துரை

முருகா! காம உணர்வை நீக்கி, அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


















No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...