சத்தியம் வத, தர்மம் சர.

 


வாய்மையே பேசு - அறத்தைச் செய்

-----

 

     சத்யம் வததர்மம் சரஎன்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்டியது மானிடப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும். வாய்மையைக் கைக்கொண்டுஅறவழியில் ஒழுகுதல் வேண்டும். உள்ளத்தில் பொய்ம்மையை வைத்துக் கொண்டு எத்தனை அறங்களைத் தான் ஒருவன் செய்தாலும்அவற்றிற்கு உரிய பலன்களைப் பெறமுடியும்ஆனால்உள்ளத்தில் கொண்டிருந்த பொய்க்கு உரிய தீய பலனையும் பெற்றே ஆகவேண்டும். எனவேநற்கதியை ஒருவன் அடையமுடியாது.

 

     வாய்மை எனப்படுவது உண்மையின் தன்மை ஆகும். பெரும்பாலும் காமும் பொருளும் பற்றி உள்ளத்தில் உண்டாவதாகிய பொய்ம்மையை விலக்குவது.

 

     இல்லற இயலில்வாக்கின் குற்றங்களாகிய பொய்,குறளை,கடுஞ்சொல்பயனில் சொல் ஆகிய நான்கின் உள்ளும்பொய்யானதுதுறந்தார்க்கு அல்லாமல்கடிதல் முடியாது என்று 'பயனில் சொல்என்னும் அதிகாரத்தில் கூறினார். ஆதலால்இங்குகாமத்தினாலும்பொருளின் காரணமாகவும் உண்டாவதாகிய பொய்மையை விலக்கவேண்டும் என்று கூற வந்த நாயனார்காமத்தின் காரியமாகிய "கூடா ஒழுக்கம்"பொருளின் காரியமாகிய "கள்ளுதல்" ஆகிய இரண்டு அதிகாரங்களின் பின்னர், "வாய்மை" என்னும் இத்தை வைத்தார்.

 

     பொய்யாமை ஆகிய அறத்தைச் செய்யாமல்பொய்ம்மையை உள்ளத்தில் நிரம்ப வைத்துக் கொண்டுஅறச் செயல்களைச் செய்து விட்டு, "நான் அந்த அறத்தைச் செய்தேன்இந்த அறத்தைச் செய்தேன். எந்த அறத்தைச் செய்தும் எனக்கு நற்பயன் விளையவில்லை" என்று சலித்துக் கொள்வோர் உண்டு. அது அவர்களின் அறியாமை. "உண்மையைப் பேசுஅறத்தைச் செய்" என்றுதான் அறநூல்கள் கூறுகின்றன. பொய்யாமைதான் முதன்மையான அறம். பொய்யாமையைக் கடைப்பிடித்து ஒழுகி வரும் ஒருவனுக்குஅதுவே அறமாக அமையும். அவன் வேறு எந்த அறத்தையும் செய்யவேண்டுவது இல்லை. இதனால், வாய்மையைக் கடைப்பிடிப்பவன், அறம் செய்ய வேண்டுவது இல்லை என்று கொள்ளுதலும் கூடாது.

 

     "வாய்மை" என்னும் அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவன் உள்ளத்தால் பொய்யாமை என்னும் அறத்தை உண்மையாகவே கடைப்பிடித்து வந்தால்அதுவே அவனுக்குப் பிற அறங்களைச் செய்வதால் வரும் பயனை நல்கும். அவன் பிற அறங்களைச் செய்ய வேண்டுவதில்லை" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவன் பொய் கூறாது எக்காலத்தும் நிற்பானேயாயின்அவன் பிற அறங்களைச் செய்தலே அவசியம் இல்லை. ஏனெனில்பல தரப்பட்ட அறங்களை ஒருவன் செய்ய முயன்றுஅவ்விதம் செய்யுங்கால்ஏதேனும் ஒன்றில் சிறிது குற்றப்பட்டுகுறைபட்டுப் போகும். பொய்யாமை என்னும் ஒரு அறமேஎல்லா அறங்களின் பயனையும் ஒருங்கே தரவல்லது என்றார்.

 

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று.        --- திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய,"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

மாழ்கித் தருமன்ஒரு பொய்உரைத்தே வன்துயருள்

மூழ்கிமிகச் சோரந்தான்,முருகேசா! - தாழ்கல் இன்றிப்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

 

இதன் பொருள் ---

 

     முருகேசா --- முருகப் பெருமானேதருமன் --- பாண்டவர்களில் முதல்வராகிய தருமர்,  ஒரு பொய் உரைத்து --- ஒரு பொய்யைக் கூறிவிட்டுமாழ்கி --- பிறகு வருத்தத்தை அடைந்துவன் துயருள் மூழ்கி மிகச் சோர்ந்தான் --- வலிய துன்பத்துள் அமிழ்ந்து மிகத் தளர்ச்சியை அடைந்தான். தாழ்கல் இன்றி --- தாழ்த்துதல் இல்லாமல்பொய்யாமை பொய்யாமை ஆற்றின் --- பொய்யைமையாகிய அறத்தை உண்மையாகவே செய்தால்பிற அறம் --- பிற அறங்களைசெய்யாமை செய்யாமை நன்று --- செய்யாதிருத்தலும் நன்மையே ஆம்.

 

       தருமர் ஒரு பொய்யைக் கூறிவிட்டுப் பிறகு மனம் வருந்தி மிகுந்த துன்பத்தை அடைந்து சோர்ந்தார். ஒருவன் பொய் சொல்லாமை ஆகிய அறத்தை மேற்கொண்டு ஒழுகுவானாயின் அவன் வேறு அறங்களைச் செய்யாதிருந்தாலும் கூட அவனுக்கு நன்மையே உண்டாகும் என்பதாம்.

 

                                    தருமர் பொய்யுரைத்த கதை

 

       பாரதப் போரில் துரோணரை வெற்றி கொள்வது மிகக் கடினமாக இருந்தது. அவர் மிகக் கொடுமையாகப் போர் புரிந்தார். அசுவத்தாமா இறந்துவிட்டான் என்றால் துரோணர் தளர்ந்து விடுவார். அச் சமயத்தில் அவரைக் கொன்றுவிடலாம் என்று கண்ணன் முதலியோர் முடிவு செய்தனர். ஒருநாள் அசுவத்தாமா என்னும் யானை ஒன்று இறந்து போய்விட்டது. இச்சமயத்தில் கண்ணன் முதலியோர்தருமரிடம் வந்துஅசுவத்தாமா மாண்டு போன செய்தியைத் துரோணருடைய காதிலே விழுமாறு கூறவேண்டும் என்று வற்புறுத்தினர். வாய்மையே பேசுபவன் ஆகிய தருமன்இதனால் தீமை உண்டாகும் என்று முதலில் மறுத்தான். ஆயினும் பிறகு, "அசுவத்தாமா என்னும் யானை இறந்து போனது" என்று உண்மையைத் தான்கூறினான். "யானை" என்னும் சொல்துரோணருடைய காதில் விழாதவாறுகண்ணன் தனது சங்கினை ஊதினான். (சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்) துரோணரின் காதில், "அசுவத்தாமா இறந்து போனான்" என்பதுதான் விழுந்தது. அதனால் தளர்ச்சி உற்ற துரோணர் நிராயுதபாணியாக நின்றார். ஏற்கெனவேபெற்ற வரத்தின்படிக்குதிட்டத்தூய்மனால் கொல்லப்பட்டு துரோணர் இறந்தார். போர் முடிந்து அரசுரிமை பெறத் தொடங்கும் சமயத்தில், "பொய் கூறிய தீவினையை அகற்றாமல் அரசாளுதற்கு உரியவனாக மாட்டாய்" என்று விண்ணொலி (அசரீரி) விளம்பியது. தருமர் மனம் கலங்கினார். வியாசர் விளம்பியவாறே சேதுவுக்குப் போய் நீராடி அத் தீவினையைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு..

 

     அசுவத்தாமா என்னும் யானை பீமனால் கொல்லப்பட்டது. "முதல்நாள் போரின்போதுதுரோணர் கூறியதை எண்ணிப் பார். யானை இறந்த உண்மையைதுரோணபுத்திரனான அசுவத்தாமா இறந்ததாகத் தோன்றும்படி நீ துரோணனுக்குக் கூறி,அதனால் அவன் மனம் வருந்திப் போர் செய்வதைத் தவிர்த்து இறக்கும்படி செய்திடவேண்டும்" என்று கண்ணன் தருமனுக்குக் கூறினான்.                              

 

'மதலை பேர் எடுத்துப் போரில் 

     மடிந்தவாறு உரைத்த போதே,

விதலையன் ஆகிபின்னை 

     வில் எடான்வீதல் திண்ணம்;

முதல் அமர்தன்னில் அந்த 

     முனிவரன் மொழிந்த மாற்றம்

நுதலுதிநீயே சென்று 

     நுவலுதிவிரைவின்!என்றான். 

 

இதன் பொருள் ---

 

     மதலை பேர் எடுத்து --- துரோணன் மகனான அசுவத்தாமா என்றபேரை எடுத்து,  போரில் மடிந்த ஆறு உரைத்த போதே ---போரில் இறந்ததாகக் கூறிய பொழுதே, (துரோணன்)விதலையன் ஆகி --- மனச் சஞ்சலம் உடையவனாய்பின்னை வில் எடான் --- பின்பு  வில்லை எடுத்துப் போர் செய்யாமல் வீதல் திண்ணம் -இறத்தல் நிச்சயம் முதல் அமர் தன்னில் --- முதல்நாள் போரில். அந்த முனிவரன் - சிறந்த முனிவனான அந்தத் துரோணன்,மொழிந்த மாற்றம் --- சொன்ன வார்த்தையைநுதலுதி ---கருதுவாயாக: நீயே சென்று விரைவின் நுவலுதி ---  நீயே (துரோணன் முன்) சென்று விரைவில் (அங்ஙனம்) கூறுவாய்என்றான் ---என்று (கண்ணன் தருமனை நோக்கிச்) சொன்னான்.

 

     சிறந்த முனிவரும்வில்வித்தையில் வல்லவரும் ஆன துரோணர்பாரதப் போரின் முதல் நாளன்று சொன்னது என்ன என்பதை வில்லிபாரதம் கூறுமாறு காண்க. கண்ணன் பாண்டவருடன்துரோணரிடம் செல்கின்றான். துரோணன் அஸ்திர சஸ்திரங்களில் அதிசாமர்த்தியம் உடையவராய்யாராலும் அழிக்க முடியாதவராக இருப்பதால்அவரைக் கொல்ல அவரிடத்திலேயே உபாயம் கேட்கின்றான் மாயவன். 

 

     "தேரில் ஏறிவில்லைப் பிடித்து நான் நின்றால்என்னைக் கொல்ல வல்லவர் யாரும் இல்லை. ஆதலால்நம்பத் தகுந்த ஒருவனைக் கொண்டுஎன் மகன் இறந்தான் என்று சொன்னால்அதனால் உண்டான சோகத்தால்எனது கையில் பிடித்த வில்லை விட்டு விடுவேன். அப்போது என்னைக் கொல்லலாம்" என்னும் உபாயத்தைத் துரோணர் கண்ணனுக்குக் கூறினார்.

 

'மன் மகன் தருமன் வென்று

     வையகம் எய்தி நிற்பான்;

என் மகன் எனக்கு முன்னே 

     இறந்தனன் என்றுவானில்

வில் மகபதியை ஒக்கும் 

     வேந்தன் முன் சொல்லின்சூரன்

தன் மகன் மகனே! பின்னைச் 

     சாபம் ஒன்று எடுக்கிலேனே.

 

இதன் பொருள் ---

 

     சூரன் தன் மகன் மகனே --- சூரன் என்னும் அரசனது புத்திரனானவசுதேவனது குமாரனாகிய கண்ணனே! மன் மகன் தருமன்வென்று --- பாரதப் போரில் பகைவரை வென்று,வையகம் எய்த நிற்பான் --- இனிப் பூமியைஅடைய நிற்பவன் வானில் --- சுவர்க்கத்தில் வாழ்கிறவில் --- ஒளியை உடையமகபதியைஒக்கும்--தேவேந்திரனைப் போன்றவேந்தர் முன் --- அரசர்களது முன்னிலையில். என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று சொல்லின் --- எனது மகனான அசுவத்தாமா நான் இறப்பதற்கு முன்னே போரில் இறந்தான் என்று தகுந்தவர் யாராவது சொன்னால்பின்னை சாபம் என்று எடுக்கிலேன் --- அதன் பின்பு  வில்லினை எனது கையில் எடுக்கவும் மாட்டேன்.

     

'என் பெருஞ் சாபம் கைவிட்டு 

     யான் எதிர் நிற்றலானும்,

தன் பெருஞ் சாபத்தாலும்

     சமரிடைத் திட்டத்துய்மன்

வன்புடன் எனக்குக் கூற்றாய் 

     மலைகுவன்மலைந்த அன்றே,

நின் பெருங் கருத்து முற்றும்

     ஏகுவீர்நீவிர்!என்றான்.

 

இதன் பொருள் ---

 

     என் பெரு சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் --- அவ்வாறு எனது பெருமையை உடைய வில்லை நான் கையில் இருந்து ஒழித்துவிட்டு நிராயுதபாணியாய் எதிரிலே நிற்பதாலும்தன் பெரு சாபத்தாலும் --- பாஞ்சாலன் மகனான திட்டத்தூய்மன் என்னைக் கொல்லும் பொருட்டே யாகத்தில் தோன்றியவன் என்னும் சாபத்தாலும்சமரிடை திட்டத்துய்மன் - போரிலே திட்டத்துய்மன்வன்புடன் ---மிக்க வலிமையுடனேஎனக்கு கூற்று ஆய் மலைகுவன் --- எனக்கு யமனாக வந்து போர் செய்வான்மலைந்த அன்றே --- அவ்வாறு போர் செய்கின்ற அப்பொழுதேநின் பெரும் கருத்து முற்றும் --- உனது பெரிய எண்ணம் நிறைவேறி விடும்நான் இறந்திடுதல் திண்ணம்நீவிர் ஏகுவீர் என்றான் --- இப்போது நீங்கள் போகலாம் என்று துரோணர் கண்ணனையும் பாண்டவரையும் நோக்கிக் கூறினார்.

 

     இவ்வாறு கண்ணன் கூறவும்நான் பொய் சொல்ல மாட்டேன் என்று தருமன் மறுக்கின்றான். அவனைச் சமாதானப் படுத்திபொய் சொல்லுமாறு வறுபுறுத்துகின்றான் கண்ணன். 

 

வையினால் விளங்கும் நேமி,

     வலம்புரி வயங்கு செம்பொன்

கையினான்அந்தணாளன் 

     கையறல் புகன்ற காலை,

மெய்யினால் வகுத்தது அன்ன

     மெய்யுடை வேந்தன் கேட்டு,

"பொய்யினால் ஆள்வது இந்தப்

     புவிகொலோ?"என்று நக்கான்.     --- வில்லிபாரதம், 15-ஆம் நாள் போர்.

இதன் பொருள் ---

     வையினால் விளங்கும் நேமி --- கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும்வலம்புரி --- சங்கமும்வயங்கு --- விளங்கப் பெற்றசெம் பொன் கையினான் --- சிவந்த அழகிய திருக்கைகளை உடையவனான கண்ணன்அந்தணாளன் கையறல் புகன்ற காலை --- (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும் வகையைச் சொன்னபொழுதுமெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் ---சத்தியத்தினால் அமைந்தது போன்ற உடம்பை உடைய தருமன்கேட்டுபொய்யினால் ஆள்வது இந்த புவி கொலோ என்று --- இந்தப் பூமியைப் பொய் கூறிஅதனால் பெற்று ஆளுவது தகுதியோஎன்று கூறிநக்கான் --- சிரித்தான்.


     பொய்யைக் கூறுவதால் உண்டாகும் தீமைகளைத் தருமன் எடுத்துக் கூறி மறுக்கின்றார்.

 

'அண்ணிய கிளையும்இல்லும்

     அரும் பெறல் மகவும்அன்பும்,

திண்ணிய அறிவும்சீரும்

     செல்வமும்திறலும்தேசும்,

எண்ணிய பொருள்கள் யாவும் 

     இயற்றிய தவமும்ஏனைப்

புண்ணியம் அனைத்தும் சேர

     பொய்மையால் பொன்றும் அன்றே.

                           ---  வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பொருள் ---

 

     இல்லும் --- மனைவாழ்க்கைத் துணையும் (தாரமும்)அரும் பெறல் மகவும் --- அரிய பெரிய சந்தானமும்அண்ணிய கிளையும் --- நெருங்கிய மற்றை உறவின் முறையும்அன்பும் ---அன்பும்திண்ணிய சீரும் --- உறுதியுள்ள அழியாத புகழும்மிக்க செல்வமும் --- மிகுதியாக உள்ள செல்வமும்திறலும் ---வலிமையும்,  தேசும் --- ஒளியும்எண்ணிய பொருள்கள் யாவும் --- மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும்இயற்றிய தவமும் --- செய்ததவமும்ஏனை புண்ணியம் அனைத்தும் --- மற்றைப் புண்ணியங்கள் யாவையும்சேர --- ஒரு சேரபொய்ம்மையால் --- பொய் சொல்லுதலினால்பொன்றும்அன்றே --- அப்பொழுதே அழிந்துவிடும் அல்லவா?

 

     இவ்வாறு தருமன் மறுத்துக் கூறவும்இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்ப துன்பங்களினால் முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்து அறியலாம் என்பதும்இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டுவருபிறப்பில் அவர் அடையும் இன்ப துன்பங்பளை ஊகித்து அறியலாம் என்பதும் சொல்லிஒருவருக்கு உற்ற துன்பத்தை நீக்கிகுற்றமற்ற நன்மையை விளைக்குமானால்பொய் சொல்லுவதும் நல்லதுதான் என்று கண்ணன் பின்வருமாறு தருமனுக்குக் கூறுகின்றார். 

 

'உம்மையில் மறுமை தன்னில் 

     உறு பயன் இரண்டும் பார்க்கின்,

இம்மையில் விளங்கும் யார்க்கும் 

     அவர் அவர் இயற்கையாலே

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற 

     விபத்தினை மீட்கும் ஆகின்,

பொய்ம்மையும் மெய்ம்மை போலப் 

     புண்ணியம் பயக்கும் மாதோ!         ---  வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பதவுரை ---

 

     உம்மையில் --- கழிந்த பிறப்பிலும்மறுமை தன்னில் ---வரும் பிறப்பிலும்உறு பயன் இரண்டும் --- பொருந்திய வினைப் பயன்கள் ஆகிய நன்மை தீமை என்னும் இரண்டும்பார்க்கின் ---ஆராய்ந்து பார்த்தால்இம்மையில் அவர் அவர் இயற்கையாலே ---இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலேயார்க்கும் விளங்கும் ---எல்லார்க்கும்,  விளங்கும்ஒருவர்க்கு உற்ற விபத்தினை --- ஒருவர்க்கு மிக்கஆபத்தைபொய்ம்மையும் மெய்ம்மையே மீட்கும் ஆகில் --- அசத்தியமும்உண்மையாகவே போக்குமானால்மெய்ம்மை போல --- சத்தியம் போலவே,

புண்ணியம் பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.

     

'வல்லவர் அனந்த கோடி 

     மறைகளின்படியே ஆய்ந்து,

சொல்லிய அறங்கள் யாவும் 

     நின்னிடைத் தொக்க ஆற்றால்,

புல்லிய பொய் ஒன்று என் ஆம்

     பொரு பெரு நெருப்புக்கு ஈரம்

இல்லைநீ ஒன்றும் எண்ணாது 

     இயம்புதிஇதனை!என்றான்.   --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.

 

இதன் பதவுரை ---

 

     வல்லவர் --- அறிந்த பெரியோர்கள்அனந்த கோடி மறைகளின்படயே ---அளவிறந்த கோடிக் கணக்கான வேத வாக்கியங்களில் கூறியபடியேஆய்ந்து ---ஆராய்ந்துசொல்லிய 

--- சொன்னஅறங்கள் யாவும் --- தருமங்கள் எல்லாம்நின்னிடை தொக்க ஆற்றால் --- உன்னிடத்துக் கூடியுள்ளபடியால்புல்லிய பொய் ஒன்று ---(இப்பொழுது நேர்கிற) இந்த ஒருபொய்யானதுஎன் ஆம் --- (உனக்கு) என்னை தீங்குதருவதாகும்?  பொரு பெரு நெருப்புக்கு ஈரம் இல்லை --- மூண்டெழுந்த மிக்க நெருப்புக்கு ஈரத்தால் ஆகும் அபாயம் இல்லை; (ஆகவே)நீ ஒன்றும் எண்ணாது --- நீ யாதொன்றையும் சிந்திக்காமல்இதனை இயம்புதி --- இப் பொய் ஒன்றைக் கூறக் கடவாய்என்றான் --- என்று (கண்ணன் தருமனுக்குக்) கூறினான்.

 

     'நான் கூறுவது நம்முடைய பக்கத்தார்க்கு நன்மை தருவதானாலும் எதிர்ப்பக்கத்தார்க்குத் தீமையை விளைத்தலால் இது பொய்யே அல்லவா!" என்று தருமனுக்குத் தோன்றும் சந்தேகத்தை இதனால் மாற்றுகின்றான் கண்ணன். அசுவத்தாமன் இறந்தமை கூறுதல்நிகழாத ஒன்றைக் கூறுதல் அன்றிநிகழ்ந்ததனையே மாறுபடக் கூறுதல் ஆதலால், 'புல்லிய பொய்எனப்பட்டது. 'பெரு நெருப்புக்கு ஈரமில்லைஎன்பதுபழமொழி. பெரியோர் கூறிய அறங்கள் யாவும் உன்னிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதனால்இச்சிறு பொய்யினால் சிறிதும் தவறு உண்டாகாதுபெருநெருப்புக்குச் சிறிய ஈரத்தினால் சிறிதும் கெடுதியில்லாதவாறு போல என்றான் கண்ணன்.

 

     இதனால்மெய்ம்மையின் இலக்கணம் கூறப்பட்டது. யாதொரு உயிர்க்கும் யாதொரு தீங்கும் நேரக் கூடாது என்றதனால்நடந்ததைச் சொல்லுதல் நீக்கப்பட்டது. நடந்ததைக் கூறுவதிலும் ஓர் உயிருக்கும் தீங்கு விளையாமல் இருத்தல் வேண்டும். தீமையினை உண்டுபண்ணுமாயின் பொய்ம்மை. தீமையினை உண்டு பண்ணாதாயின் வாய்மை. இங்கே தருமன் கூறிய சிறு பொய்யானதுஅதருமத்தை அழித்துதருமத்தை நிலைநாட்டக் கண்டது. குற்றமற்ற நன்மையை விளைத்ததால்தருமன் கூறிய சிறு பொய்யும் வாய்மை ஆனது.

கயவர் குணத்தை மாற்ற முடியாது

 


கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது

-----

 

            பதர் குறித்த பதிவுகளைப் பார்த்தோம் "துட்டனைக் கண்டால் தூர விலகு" என்னும் முதுமொழியும் உண்டு. பதர்களையும் துட்டர்களையும் இந்தக் கலியுகத்தில் அடையாளம் கண்டுகொள்வது எவ்வாறு என்னும் ஐயம் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

 

    கிருத யுகத்தில் மக்கள் அறநெறியுடன்  வாழ்ந்தார்கள். அறிவுதியானம்தவம் என்பன சிறந்து இருந்த யுகம் இது. 


     திரேதா யுகத்தில்,  நான்கில்மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். இராமாவதாரம் இந்த யுகத்தில் நிகழ்ந்த்து என்று கூறுவர். 

 

     துவாபர யுகத்தில்,  சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்ந்தார்கள். மகாபாரதம் தோன்றியது இந்த யுகத்தில்தான் என்று கூறுவர். 

 

     கலியுகத்தில்,  நான்கில்ஒரு பகுதி அறநெறியுடனும்,மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகம் 4,32,000  ஆண்டுகளைக் கொண்டதாகும். இந்த யுகத்தில் மக்கள் அவரவர் தமது சுயநலத்திற்காக அதர்ம வழியில் சென்று பாவங்களை செய்வதால் பகைமைக் குணமும்பொறாமைக் குணமும்மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கே சிரமப்படுவர்.

 

     "கலி" என்னும் சொல்லுக்குஆரவாரம்துன்பம்,செருக்குவஞ்சகம்,வறுமை என்னும் பொருள்கள் உண்டு. எனவேகலியுகத்தில் இவை எல்லாம் உண்டு. இவற்றோடு தான் நமது வாழ்நாளைக் கழிக்கவேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்கஇறையருள் உண்டு என்பதையும் மறக்கலாகாது. 

 

        யுகங்கள்தோறும் மக்களில் தீயவர்களும்கீழானவர்களும் உண்டு.  கீழ்மக்கள் என்பவரைஅவரது உருவத்தால் அடையாளம் காணமுடியாது. அவரது சொல்லையும்செயல்களையும் கொண்டே அடையாளம் காணமுடியும்.

 

       இங்குஇரு புராண நிகழ்வுகளைச் சொல்லியாக வேண்டும்.முதலில் மகாபாரத நிகழ்வு ஒன்றைக் காண்போம்.

 

       உள்ளத்தில் கள்ளம் என்பது சிறிதும் இல்லாத பாண்டவர்கள் மீது பொறாமையும்வெறுப்பும் உள்ளூரக் கொண்டு இருந்தவன் திருதராஷ்டிரன். அதை அவ்வப்போது வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு இருந்தவர்கள் துரியோதனன்சகுனிகர்ணன்துச்சாதனன் ஆகியவர்கள்.இந்த ஐவரும் கூடிபாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புவதன் மூலம்அத்தினாபுரத்தை விட்டு வெளியேற்ற எண்ணினர்.

 

       சிறிய தந்தையாகிய திருதராஷ்டிரன்தங்களை வாரணாவதம் செல்லுமாறு பணித்ததுதமது நன்மை கருதியே என்றுஉள்ளத்தில் தூயவரான தருமபுத்திரர் நம்பினார். ஆனால்,

திருதராட்டிரன் முதலானோரின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்தவிதுரர்,அவர்களுடைய வஞ்சகத்தை அறிந்துசூசகமாக, "காடு பற்றி எரியும் போதுஎலிகள் வளைக்குள் புகுந்து தப்பிவிடும்" என்று சொல்லி பாண்டவர்களை வாரணாவதம் செல்ல வழியனுப்பி வைக்கின்றார். அத்தோடு அவர்கள் உய்யும் உபாயத்தையும் செய்து வைத்தார்.

 

       திருதராஷ்டிரன் சொன்ன சொல்லில் வஞ்சகம் தெரியவில்லை. அவனது செயலில்தான் வஞ்சகம் ஒளிந்து இருந்தது.

 

       அடுத்துபெரியபுராணத்தில் ஒரு நிகழ்வைக் காண்போம்...

 

       மெய்ப்பொருள் நாயனாரின் புகழையும்பெருமையையும் சகியாதுபலமுறையும் அவரை எதிர்த்துதோற்ற முத்தநாதன் என்னும் ஓர் அரசன்வஞ்சனையால் அவரை வெல்லக் கருதிசிவசின்னங்கள் தாங்கி"தொழுத கை உள்ளும் படை ஒடுங்கும்" என்று திருவள்ளுவ நாயனார் குறிப்பிட்டது போலஉடைவாளைப் புத்தகக் கவளியில் மறைத்துக் கட்டித் தவவேடத்தோடு அவர் அரண்மனை புகுந்தான். அந்தப்புர வாயில் காப்போனான தத்தன் தடுப்பவும்நாயனார்க்கு ஞானோபதேசம் செய்ய வந்ததாகக் கூறி உள்சென்று நாயனாரைக் கண்டான். அவனுடைய சிவவேடத்தைக் கண்டுஉண்மை தெளியாத நாயனார்அந்த வஞ்சகனை ஓர் ஆசனத்தில் இருத்திஎதிரில் வணங்கி நிற்கஅப் பாதகன் புத்தகம் எடுப்பது போல உடைவாளை எடுத்துத் தன் எண்ணத்தை முடித்தான். நடந்தவற்றை எல்லாம் கருத்தோடு பார்த்திருந்த தத்தன் ஒரு கணப் பொழுதினுள் வந்து தன் வாளை ஓச்ச,பூமியில் வீழ்கின்ற நாயனார், "தத்தா நமர்" என்று தடுத்து வீழ்ந்தார். நாயனார் பணியை மேற்கொண்டு தத்தன் அவனை அழைத்து வெளிச்சென்று அவன் செய்கை அறிந்து அவனைக் கொல்லச் சூழ்ந்தவர்களை எல்லாம் விலக்கிஅந் நகர் எல்லையளவும் உடன் சென்று வழிவிட்டுமீண்டு வந்து, "சிவனடியாரை இடையூறின்றி நகர்ப்புறத்து விட்டனன்" என்று சொல்லும் வரை உயிர்தாங்கி இருந்த நாயனார், "திருநீற்று அன்பு பாதுகாத்து அளிப்பீர்" என்று மந்திரி முதலியவர்க்குச் சொல்லிசிவனடி நீழல் அடைந்தார்.

 

       வேடத்தைக் கண்டு ஏமாந்தார் மெய்ப்பொருள் நாயனார். ஆனால்முத்தநாதனை நன்றாக கவனித்தவாயில் காப்போன் அவனது வஞ்சகத்தை அறிந்து கொண்டான்.

 

       எனவேதீயவர்களை,மூர்க்கர்களைகீழ்மக்களை அவர்களது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிட முடியாது.அவர்களது செயல்களை வைத்தே மதிப்பிட்டுக் கொள்ள முடியும் என்பது தெளிவாகும். புறத் தோற்றத்தில் தீயவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிவார்கள். புறத் தோற்றத்திற்கு எல்லாரும் மனிதராகத் தான் தோற்றுவார்கள். யாரிடத்தில் என்ன குணம் பொருந்தி உள்ளது என்பதைஅவர்களது செயல்களால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். விலங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். அவனிடத்தில் பிறவிகள்தோறும் பொருந்தி வந்த விலங்குத் தன்மை இருக்கும். அதில் இருந்து விடுபட்டுதன்னை மனிதனாக்கிக் கொள்ளநல்லறிவு பெற வேண்டும். நல்லறிவு பெறுவதற்கு அறிவுநூல்களைப் பயிலவேண்டும்.

 

     "அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்றவரோடுகல்லாதவரை ஒப்பிட்டு நோக்கஅவர் நன்மை உடைய மனிதர்,இவர் தீமையை உடைய விலங்கு போல்பவர்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். மனிதர் யாவரும் உருவத்தால் ஒத்து இருக்கின்றனர். நன்மை உடையவர் நூல்களைக் கற்று வல்லவர்கள் கல்லாதவர் மனித உருவில் இருந்தாலும்தீமை தரும் விலங்கு மனத்தை உடையவர் என்பதை அறிவுறுத்த,

 

விலங்கொடு மக்கள் அனையர்இலங்கு நூல்

கற்றாரோடு ஏனை அவர்.         

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார்.

 

     இரக்கம் கொள்ளாமலிருப்பது மிருகங்களின் இயற்கையும் அல்லபட்சிகளின் இயற்கையும் அல்ல . அவைகளுமே இரக்கம் கொள்ளுகின்றன.விலங்கு வடிவில் இருந்தாலும்எல்லா நன்னெறிகளையும் அறிந்து இருந்தவன் வாலி. அப்படி இருந்தும்அறநெறிக்கு மாறாக நடந்துகொண்டது வாலியின் குற்றம். இராமபிரானிடம் அவன் அறநெறிகளை உரைத்துக் கூறிஇராமனது செயலில் குற்றம் கண்டுபிடித்ததில் இருந்து இது தெளிவாகும். இராமபிரானிடத்தில் அவன் கூறிய சொற்களே அவன் அறநெறி எது என்பதை நன்கு அறிந்தவன் என்பதைப் புலப்படுத்தி விட்டது. தன்பால் குற்றம் இல்லை என்று வாலி கூறிய சொற்களை மறுத்துஅவனுடைய செயல் குற்றம் உடையதே என்கின்றார் இராமபிரான். நல்லது தீயது பகுத்தறியும் அறிவு இல்லாமல் வாழ்வதுதான் விலங்கின் தன்மை என்பது காட்டப்பட்டது.                                 

 

"நன்றுதீதுஎன்று இயல் தெரி நல் அறிவு

இன்றி வாழ்வது அன்றோவிலங்கின் இயல்?

நின்ற நல் நெறிநீ அறியா நெறி

ஒன்றும் இன்மைஉன்வாய்மை உணர்த்துமால்".  --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     விலங்கின் இயல் --- விலங்குகளின் இயல்பாவதுநன்று தீது என்று ---நல்லது இதுதீயது இது என்றுஇயல் தெரி --- அதனதன் இயல்புகளைஉள்ளபடி உணர்கின்றநல் அறிவு இன்றி --- நல்ல அறிவில்லாமல்வாழ்வதுஅன்றோ --- (மனம் போனவாறு) வாழ்வது அல்லவாநின்ற நல் நெறி ---நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்நீ அறியா நெறி --- நீ ஆராய்ந்து உணராதஅறவழி;  ஒன்றும் இன்மை --- ஒன்றும் இல்லை என்பதைஉன் வாய்மைஉணர்த்தும் --- இப்பொழுது நீ பேசிய உனது வாய்மொழியே உணர்த்தும்.     

 

'தக்க இன்னதகாதன இன்னஎன்று

ஒக்க உன்னலர் ஆயின்உயர்ந்துள

மக்களும் விலங்கேமனுவின் நெறி

புக்கவேல்அவ் விலங்கும் புத்தேளிரே.   --- கம்பராமாயணம்வாலிவதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     தக்க இன்ன --- ஏற்கத் தகுதியானவை இவைதகாதன இன்ன --- ஏற்கத்தகுதியில்லாதவை இவைஎன்று --- என்று தெளிந்துஒக்க --- நீதி நூல் முறைமைக்கு ஏற்பஉன்னலர் ஆயின் --- எண்ணாதவர்களானால்உயர்ந்துள மக்களும் --- உருவத்தாலும் பிறப்பாலும் உயர்ந்துள்ள மனிதர்களும்விலங்கே ---விலங்குகளுக்கு ஒப்பானவரே ஆவர்மனுவின் நெறி புக்கவேல் ---மனுதர்மம் வகுத்த நன்னெறியில் நடக்குமாயின்அவ் விலங்கும் ---அஃறிணைப் பிறப்பினவாகிய விலங்குகளும்புத்தேளிரே --- தேவர்களுக்குஒப்பானவையே.

 

     ஐம்பொறி உணர்வும்உணவு உறக்கம் போன்ற செயல்களும்மக்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாய் அமைந்தவை. நல்லவை இவைதீயவை இவை எனப் பகுத்துணர்ந்து வாழும் முறை விலங்குகளினும்மனிதர்களுக்கு இருப்பதால் மனித இனம் சிறப்புடைய இனமாகக் கருதப்படுகிறது. ஆதலால்மனிதராய்ப் பிறந்தும் பகுத்துணர்ந்து வாழும் அறவாழ்வு அமைத்துக் கொள்ளவில்லையானால் அம் மனிதர் விலங்கு நிலையில் எண்ணப்படுவர்.  

 

     விலங்காய்ப் பிறந்தும் நீதி நெறியோடுவாழுமாயின் விலங்கும் தேவர்கட்குச் சமமாக மதிக்கப்படும் என்பதாம். நன்று தீது உணர்ந்த விலங்குக்கு உள்ள சிறப்பு விளக்க 'விலங்கும் புத்தேளிரேஎன்றார்.

 

     இதனைபின்வரும் திருக்குறளால்நாயனார் நம்மைத் தெளிவுபடுத்துகின்றார்.

 

"கணை கொடிதுயாழ்கோடு செவ்விதுஆங்குஅன்ன

வினைபடு பாலால் கொளல்".

 

இதன் பொருள் ---

            

     அம்பு வடிவில் நேராக இருப்பினும்செயலால் தீங்கு விளைவிப்பது. கழுத்தில் வளைந்து யாழ் இருப்பினும்அது தரும் இனிமையான இசை இன்பத்தைத் தரும். 

 

     அதுபோலவேஒருவரை நல்லவர் தீயவர் என்பதை அவருடைய புறத்தோற்றத்தால் கூற இயலாது. ஆகவேஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும்பிற நிலைகளாலும்மதிப்பிடக் கூடாது. அவர் செய்யும் செயலைக் கொண்டே நல்லவராதீயவரா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

 

     புறத்தோற்றத்தில் எல்லோரும் மனித வடிவில் தான் உள்ளனர். அவர் சொல்லும் சொல் கூட மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால்அவரது சொல் வேறுசெயல் வேறாக இருக்கும் என்பதை வாழ்வியலில் நாம் அறிந்திருக்கலாம். 

 

      காட்டில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் வடிவத்தாலும்செயலாலும் வேறுபட்டு இருப்பவை. அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கு உபாயங்கள் உள்ளன. ஆனால்கயவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான உபாயத்தைஅறிவு நூல்களை ஓதுவதன் மூலமாகவும்கற்ற பெரியோர்கள் சகவாசத்தாலுமே அறிந்து கொள்ள முடியும்.

 

       எந்த விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால்கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல்"குமரேச சதகம்" என்னும் நூலில் வருகிறது.

 

"குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டு உட்படுத்தி விடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,

 

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்து கூத்தாட்டி விடலாம்,

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்

 

பிணமதை எழுப்பலாம்அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம்காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,

 

மணலையும் கயிறாத் திரிக்கலாம்கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே".

 

இதன் பொருள் ---

 

       மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

       குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் --- நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.

கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் --- கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம். உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் --- நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களைஅவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்துஅவைகளை  நீக்கிவிடலாம். உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் --- தக்க முறைகளைக் கையாண்டுகிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம்.உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் --- பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம். அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் --- அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பைமிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம். பிணியையும் அகற்றலாம் --- நோயையும் அகற்றலாம். கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் --- காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம். மணலையும் கயிறாத் திரிக்கலாம் --- மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம். கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ  -- கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

 

     எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால்கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் ஓர் அதிகாரத்தில்

 

"மக்களே போல்வர் கயவர்அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல்"

 

என்னும் திருக்குறளின் வழிகீழ்மக்கள் என்பவர் தோற்றத்தால் மக்களைப் போலவே இருப்பர். அவரைப் போல ஒப்பினை நாம் வேறு எங்கும் கண்டது இல்லை என்கின்றார்.

 

"தேவர் அனையர் கயவர்அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலால்"

 

என்னும் திருக்குறளின் வழிகீழ்மக்கள் என்பவர் எப்படியாவது தாம் விரும்புவனவற்றையே செய்து வாழ்ந்து வருவர். அத் தன்மையால் அவரகள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்கின்றார். 

 

 

 

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...