046. சிற்றினம் சேராமை --- 10. நல்லினத்தின் ஊங்கும்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 46 -- சிற்றினம் சேராமை

 

     சிற்றினம் சேராமையாவதுசிறியார் இனத்தைப் பொருந்தாமை. 

 

     சிறிய இனமாவதுநல்வினையின் பயனாக சுகமும்,தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும்பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும்உள்ளே பகையும்உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்கூத்தாடிகளும் ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார். 

 

     அறிவினை வேறுபடுத்திதீநெறியில் செலுத்திஇம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால்பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால்பெரியாரைத் துணைக் கொள்வதோடுசிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவனுக்கு நல்ல இனத்தின் மிக்க துணையும் இல்லைதீயினத்தின் மிக்க துன்பத்தைத் தருவதும் வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     நல்லினமானது ஒருவனைஅறியாமையில் இருந்து நீக்கிதுன்பம் அடையாதவாறு காத்தலால்அதனைத் "துணை" என்றார். தீய இனம் ஒருவனது அறிவினை வேறுபடுத்தி,துன்பம் அடையச் செய்தலால்அதனை "அல்லல் படுப்பது" என்றார்.

 

திருக்குறைளக் காண்போம்...

 

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லைதீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.             

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            நல்லினத்தின் ஊங்கும் துணையும் இல்லை--- ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை

 

     தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல்--- தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

 

            (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்குஎன்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர் உறாமல் காத்தலின் அதனைத் 'துணைஎன்றும்தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகைஎன்றும் கூறினார். 'அல்லல் படுப்பதுஎன்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய"முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

குண்டரால் தென்னன் குறைப்பட்டுகண்ணுதலார்

தொண்டரால் மிக்கு உயர்ந்து தோன்றலால் --- எண்திசையும்

நல்இனத்தின் ஊங்கும் துணை இல்லைதீ இனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

 

     குண்டர் --- சமணர். தென்னன் --- கூன்பாண்டியன். தொண்டர் --- திருஞானசம்பந்தர். 

 

     சமணர் சார்பில் இருந்ததால்பாண்டியன் ஆட்சி சிறந்திருக்கவில்லை. தெய்வத்தின் பெயரால்திருஞானசம்பந்தர் அடியார்களுடன் தங்கி இருந்த மடத்திற்கு வஞ்சனையால் தீ இட்ட கொடுமையைபாண்டியன் இசைவால் புரிந்தனர். "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்பதால்அறநெறியில் வழுவிய பாண்டியனைஅவனது தூண்டுதலால் வைக்கப்பட்ட தீயானது வெப்பு நோயாகச் சென்று பற்றியது. திருஞானசம்பந்தர் எழுந்தருளி அவனுடைய வெப்பு நோயை மாற்றியதோடுசமணர்களையும் வாதில் வென்றுஎல்லை இல்லா நீற்று நெறியினை நிறுவினார். "திருஞானசம்பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன்" என்று பாண்டியனும் தேறினான். அவனது கூனும் நிமிர்ந்த்து. 

 

     தீய இனத்தவராகிய சமணரால் பாண்டி நாடு துன்புற்றது. நல்லினத்தவர் ஆகிய திருஞானசம்பந்தரால் பாண்டி நாடு உய்தி பெற்றது.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரானமாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

அற்கா அமண்மொழி கேட்டுஅல்லல்உற்றான் மாறன்,இல்லாள்

சொற்கேட்டு நோய்தீர்ந்தான்,சோமேசா! - தற்காக்கும்

நல்இனத்தின் ஊங்கும் துணையில்லை தீஇனத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.

            

இதன் பொருள் ---

 

       சோமேசா!  தற்காக்கும் --- ஒருவனுக்குத் தன்னைக் காக்கும்நல் இனத்தின் ஊங்கு --- நல்லினத்தின் மிக்கதுணையும் இல்லை --- துணைஆவதும் இல்லை;தீ இனத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல் --- தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

 

       மாறன் --- கூன் பாண்டியன்அற்கா --- அறிவொடு தங்காதஅமண் மொழி கேட்டு --- சமணர்களுடைய சொற்களைக் கேட்டுஅல்லல் உற்றான் --- துன்பம் அடைந்தான்,  இல்லாள் சொல் கேட்டு --- மனைவியாராகிய மங்கையர்க்கரசியார் சொன்ன சொல்லைக் கேட்டுநோய் தீர்ந்தான் --- சுரநோய் நீங்கினான் ஆகலான் என்றவாறு.

 

       நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர் உறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும்தீ இனம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகை என்றும் கூறினார். அல்லல் படுப்பது என்பது ஏதுப் பெயர்.

 

       பெரியோர் தாம் நன்னெறியில் ஒழுகுதலே அன்றித் தம்மைச் சேர்ந்தவர்களையும் தீநெறியினின்று விலக்கி நன்னெறியில் செலுத்துவர்.

 

       "மும்மலங்கள் அஞ்ஞானத்தை உணரத்துதல் இலக்கு வாய்த்துழி ஏது ஆதல் மாத்திரையே,  சிவபத்தர் அல்லாதார் அவ்வாறு இன்றி இலக்கு வாயாத வழியும் வாயக்குமாறு செய்துகொண்டு பலவகை உபாயங்களானும் தம்மோடொப்ப விபரீத உணர்வைத் செலுத்தியே விடுவர்ஆகலான்அம் மலங்களினும் கொடியராகிய இவரை அவற்றினும் அஞ்சி விட்டு ஒழிதலே அறிவுடைமைக்குச் சால்பு என்பதாம்" என்பது சிவஞானபோதம் சிற்றுரை.

 

       பாண்டி நாட்டை சமணக்காடு மூடவேகூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்மந்திரியாகிய குலச்சிறையாரும் மனமிக வருந்தி "என்று பாண்டியன் நல்வழிப்படுவான்" என்று இருக்கும் காலத்தில்திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமென வேண்டி நிற்கபிள்ளையார் அவர்க்கு விடை தந்து,பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுமதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப் போது தீயிடபிள்ளையார் அத்தீ, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க, அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம்புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...                                            

 

வாக்கரசர் சாவகரால் மாழ்கி,தமக்கையால்

மோக்கநிலை பெற்றார்,முருகேசா! - பார்க்கும்கால்

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லைதீயினத்தின்

அல்லல் படுப்பதூஉம் இல்.                  

 

இதன் பொருள் ---

 

            முருகேசா --- முருகப் பெருமானேவாக்கரசர் --- திருநாவுக்கரசர்சாவகரால் மாழ்கி --- சமணர்களால் வருத்தம் அடைந்துதமக்கையால் --- தம்முடைய உடன் பிறந்தாளாகிய அக்காளால்மோக்க நிலை பெற்றார் --- பிறகு வீடுபேற்று நிலை அடைந்தார். பார்க்கும்கால் --- நோக்குமிடத்தில்நல் இனத்தின் --- நல்ல இனத்தை விடஊங்கும் துணையில்லை --- சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லைதீ இனத்தின் --- தீய இனத்தை விடஅல்லல் படுப்பதூஉம் இல் --- துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

 

            திருநாவுக்கரசர் சமணரால் வருத்தம் அடைந்துபிறகு தம்முடைய தமக்கையாரால் வீடுபேற்று நிலையைப் பெற்றார். இவ் உலகத்திலே நல்ல இனத்தார்களுடைய நட்பை விடச் சிறந்த துணையும் இல்லை,தீய இனத்தார்களுடைய கூட்டுறவைப் பார்க்கினும் துன்பப் படுத்துவதும் இல்லை என்பதாம்.

 

                                                திருநாவுக்கரசர் கதை

 

            திருநாவுக்கரசர் முதலில் சமணர்களோடு நட்புக் கொன்டு,அவர்களுடைய சமய நூல்களை ஆராய்ந்துகொண்டும்,அச்சமயத்தாராகியும் விளங்கினார். பிறகு தமது தமக்கையாரை வணங்கிச் சைவசமயம் சார்ந்தார். அதனாலே அவருக்குப் பல வகையான தொல்லைகள் உண்டாயின. அச் சமணர்கள் நஞ்சினை அருத்தியும்நீற்றறையில் இட்டும்யானைக் காலில் இடறியும்,  கல்லினோடு கட்டிக் கடலில் தள்ளியும் திருநாவுக்கரசரைக் கொலை புரிய முயன்றார்கள். எல்லாத் துன்பங்களையும் இறையருளால் வென்று,சைவம் தழைக்க வழிகாட்டிஇறைவன் திருவடி நீழலை அடைந்தார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

                                                            

மனத்தாலும் வாக்காலும் மண்ண ஒண்ணா மோன

இனத்தாரே நல்ல இனத்தார்,- கனத்தபுகழ்

கொண்டவரும் அன்னவரே,கூறரிய முத்திநெறி

கண்டவரும் அன்னவரே காண்.   ---  தாயுமானவர்.

 

இதன் பொருள் ---

 

     செம்பொருள் துணிவாம் மெய்ப்புணர்ப்பு உடைய நல்லார் சுத்தாத்துவித சித்தாந்த வைதிக சைவர் எனப்படுவர். இவரே நன்னெறியினர். இவர்களே மோனம் கைவரப் பெற்றவர். நினைக்கும் மனத்தினாலும் மாற்றமாகிய சொல்லினாலும் அளவுபடுத்த முடியாதது ஒன்றே மோன நிலை எனப்படும்அவற்றான் நிலைபெற முடியாத திருவருளால் நிலை பெறுத்தக் கூடிய மோனநிலை கைவரப்பெற்ற திருக்கூட்டத்தாரே நல்லினத்து நல்லாராவார். மிக்க புகழ்பெற்றவரும் அவரேசொல்லமுடியாத வீடுபேற்றுப் பேரின்ப நுகர்வினரும் அவரே. 

 

 

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தங்

குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்

தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை

தீயினஞ் சேரக் கெடும்.            ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     நிலநலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம் குலநலத்தால் ஆகுவர் சான்றோர் --- நிலத்தின் வளத்தினாற் செழித்து வளர்ந்த நெற்பயிரைப் போல் தத்தம் இனநலத்தால் நல்லோர் மேன்மேலும் சான்றாண்மை உடையோராவர்கலநலத்தைத் தீவளி சென்று சிதைத்தாங்கு --- மரக்கலத்தின் வலிமையைக் கொடிய புயற்காற்றுச் சென்று கெடுத்தாற் போலசான்றாண்மை தீ இனம் சேரக் கெடும் --- தீய இனத்தவரைச் சேர அதனால் அச் சான்றாண்மை அழியும்.

 

     இயல்பாகவே நல்லோராய் இருப்பவர்க்கும் நல்லினச் சேர்க்கை நன்மையையும்,தீயினச் சேர்க்கை தீமையையும் உண்டாக்கும்.

 

 

உணர உணரும் உணர்வு உடையாரைப்

புணரிற் புணருமாம் இன்பம்,- புணரின்;

தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்

பிரியப் பிரியுமாம் நோய்.               ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     புணரின் --- நட்புச் செய்தால்உணர உணரும் உணர்வு உடையாரைப் புணரின் இன்பம் புணரும் --- நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம் பொருந்தும்தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப் பிரியப் பிரியும் நோய் --- நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற் பிரிந்திருக்கும்.

 

 

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்

உடங்கு உடம்பு கொண்டார்க்குஉறலால் - தொடங்கிப்

பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை

உறப்புணர்க அம்மா என் நெஞ்சு.---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அடைந்தார்ப் பிரிவும் அரு பிணியும் கேடும் --- இயற்கையாகவும் செயற்கையாகவும் சார்ந்தவரான உறவினர் நண்பர் முதலியோரைப் பிரிந்து நிற்றலும்தீர்தற்கரிய நோயும்இறப்பும்உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் ---பிறவி எடுத்தவர்க்கு ஒருங்கே பொருந்துதலால்தொடங்கி --- ஆராயத் தொடங்கிபிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை ---பிறப்புத் துன்பந் தருவது என்றுணர்ந்து பற்றற்றொழுகும் பெரிய அறிவினரான ஞானியரைஉறப் புணர்க என் நெஞ்சு --- என் உள்ளம் மிகக் கூடுக.

 

       துன்பந் தரும் பிறப்பை அதன் இயல்பு அறிந்து,பற்று நீங்கி ஒழுகும் ஞானியரான நல்லாரினத்தைச் சார்ந்து ஒழுகுதல் வேண்டும்.

 

 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே,நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே--- நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே,அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.          ---  மூதுரை

 

இதன் பொருள் ---

 

     நல்லாரைக் காண்பதுவும் நன்றே --- நற்குணம் உடையோரைப் பார்ப்பதும் நல்லதேநலம் மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே --- நல்லவருடைய பயன் நிறைந்த சொல்லைக் கேட்டலும் நல்லதேநல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே --- நல்லவருடைய நற்குணங்களைப் பேசுதலும் நல்லதேஅவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று --- அந் நல்லவருடன்கூடியிருத்தலும் நல்லதே.

 

       நல்லவரைக் காணினும்அவர் சொல்லைக் கேட்பினும்அவர் குணங்களைப் பேசினும்அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும்.

 

தீயாரைக் காண்பதுவும் தீதே,திரு அற்ற

தீயார்சொல் கேட்பதுவுந் தீதே,--- தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே,அவரோடு

இணங்கி இருப்பதுவுந் தீது.       ---  மூதுரை

 

இதன் பொருள் ---

 

     தீயாரைக் காண்பதுவும் தீதே--- தீக்குணம் உடையவரைப் பார்ப்பதும் தீயதேதீயார் - தீயவருடைய,  திரு அற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே --- பயன் இல்லாத,தீக் குணம் உடையவர் சொல்லைக் கேட்டலும் தீயதேதீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே ---தீயவருடைய தீய குணங்களைப் பேசுதலும்தீயதேஅவரோடு இணங்கி இருப்பதுவும் தீது --- அத் தீயவருடன் கூடியிருத்தலும் தீயதே.

 

       தீயாரைக் காணினும்அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும்அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும்.

 

நிந்தை இலாத் தூயவரும் நிந்தையரைச் சேரில்,வர் 

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே, --- நிந்தைமிகு 

தாலநிழல் கீழ்இருந்தான் தண்பால் அருந்திடினும் 

பால் அது எனச் சொல்லுவதோ பார்.    --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

       இழிவு மிகுந்த பனைமரத்தின் கீழ் அதன் நிழலில் அமர்ந்து பசுவின் பாலைக் குடித்தாலும்பிறர் அதனைப் பால் அருந்துவதாகச் சொல்லுவார்களோநீ அதனை எண்ணிப்பார்.  கள் குடிப்பதாகவே சொல்லுவார்கள். அதுபோலபழிக்கப்படாத மேன்மக்களும் பழிக்கப்படும் கீழ்மக்களைச் சேர்ந்தால்அப் பழிப்புக்கு உரிய மக்களின் பழிப்புரை தம்மிடமும் வந்து சேர்வதற்கு ஏதுவாகும்.

 

மணமனை சேர்மண மாலை மாண்புறும்,

பிணவனத் தார் இழிவு எய்தும்,பெற்றியார்

கணம் அதில் சேர்ந்தவர் கனங்கொண்டு ஓங்குவர்,

குணமிலார் இனம் உறல் குறை உண்டாக்குமே.  --- நீதிநூல்

            

இதன் பொருள் ---

 

     கலியாண வீட்டைச் சேர்ந்த மணமுள்ள பூமாலை சிறப்படையும். அம்மாலை சுடுகாட்டைச் சேர்ந்தால் மிக்க இழிவடையும். நல்ல தன்மையையுடைய பெரியவர் கூட்டத்தில் சேர்ந்தவர் பெருமை பெற்று உயர்வர். நல்ல பண்பில்லாதவர் கூட்டத்தைச் சேர்ந்தால்இழிவை உண்டாக்கும்.

 

மண் இயல்பால் குணம் மாறும் தண்புனல்,

கண்ணிய பொருள்மணங் கலந்து வீசும் கால்,

புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்

நண் இனத்து இயல்பு என நவிலல் உண்மையே.--- நீதிநூல்

            

இதன் பொருள் ---

 

       குளிர்ச்சி பொருந்திய தண்ணீர் தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும், தாழ்ந்தோர் ஆதலும், அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மையெனக் கூறுவது உண்மையாகும்.

 

 

பாரினில் பிறந்தபோது எவரும் பண்பினார்

பூரியர் எனப்பெயர் பூண்டது இல்லையால்,

சீரியர் என்னலும் தீயர் என்னலும்

சேர் இனத்து இயல்பினால் சேர்ந்த நாமமே.---  நீதிநூல்.

            

இதன் பொருள் ---

 

       உலகில் பிறந்த யார்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெயர் ஏற்பட்டதில்லை. நல்லவர் தீயவர் என்னும் பெயர் அவரவர் சேர்ந்த இனத்தினால் உண்டாயது.

 

 

தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்

ஆயவரை,அந் நிலை அறிந்தனர் துறந்தாங்கு,

ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து,ஒண்

பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே.  ---  கம்பராமாயணம்வரைக் காட்சிப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     தீயரொடு ஒன்றிய --- தீய குணத்தவரோடு (ஆராயாமல்) நட்புக்கொண்ட;  அரு திறந்து நல்லோர் --- அரிய திறமையுடைய நல்லவர்கள்ஆயவரை --- அந்தத்  தீயவரை;  அந்நிலை --- அந்த அளவிலேஅறிந்தனர் --- அவர் தீயவர் என்று அறிந்தவர்களாகிதுறந்தாங்கு ---(அவர்களைக்) கைவிட்டாற்போல;   ஒள் பாய்பரி --- பாய்ந்தோடும் நல்லிலக்கணம் பொருந்திய குதிரைகள்;  ஏய அரு  --- தம் உடலில்பொருந்த;   நுண்பொடி படிந்து --- மண்ணிலே  படிந்ததால் மிக நுண்ணிய  புழுதியைஉடன் எழுந்து --- உடனே எழுந்துவிரைந்து உதறி --- விரைவாக உதறிவிட்டுபரந்து நின்றன --- பரவி நின்றன. 

 

     வழியில் வந்த இளைப்பைப் போக்க வேண்டிக் குதிரைகள் புழுதி படிந்த மண்ணில் புரளுதலும்இளைப்பு நீங்கியதும் அவை தம் மேல்படிந்த புழுதியை உதறி எழுதலும் இயல்பு. இதற்கு நற்குணமுள்ளவர் முதலில் தீயவரோடு நட்புக் கொண்டுபின்பு அவரோடு பழகி, அவர்களின் தீக் குணத்தை உணர்ந்துஅவர்களுடைய நட்பை அறவே துறத்தல் உவமையாகும். 

 

 

ஆயிடை அலகைத் தேரும் 

     அடைந்தவர் வெயர்வும் அன்றித்

தூயநீர் வறந்த வந்தச் 

     சுடுபுலம் தோய்ந்த காலும்

மீயுயர் மதிநி லாவும் 

     வெய்யவாய்ச் சுடும்நல்லோரும்

தீயவர் தம்மைச் சேர்ந்தால் 

     தீயவர் ஆவர் அன்றோ.    --- தி.வி.புராணம்தண்ணீர்பந்தர் வைத்த படலம்.

 

இதன் பொருள் ---

 

     ஆயிடை --- அவ்விடத்துஅலகைத் தேரும் ---பேய்த் தேரும்அடைந்தவர் வெயர்வும் அன்றி --- அங்குச்சென்றவர்களின் வியர் நீரும் அல்லாமல்தூய நீர் வறந்த --- நல்ல நீர்கள்சிறிதுமின்றி வற்றினஅந்த சுடுபுலம் தோய்ந்த காலும் --- அந்த வெப்பு நிலத்திற் படிந்துவரும் காற்றும்மீ உயர்மதி நிலாவும் ---வானின்கண் உயர்ந்து விளங்கும் திங்களின் ஒளியும்வெய்யவாய்ச் சுடும் --- கொடியனவாய்ச் சுடா நிற்கும்நல்லோரும் --- நல்லவரும்தீயவர் தம்மைச் சேர்ந்தால் --- தீயவரைக் கூடினால்தீயவர் ஆவர் அன்றோ -- தீயவராவர் அல்லவா?

 

    குளிர்ந்த காற்றும் மதியின் கிரணமும்,வெப்பமுடைய நிலத்தைச் சார்ந்து வெய்யவாய்ச் சுடும் என்ற பொருளைக் காட்டி ,நல்லோரு ம்தீயவரைச் சேர்ந்தால் தீயவராவர் என்னும் வேறு பொருளைக் கூறினமையால் இது வேற்றுப் பொருள் வைப்பணி. 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...