பொது --- 1011. தசையும் உதிரமும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தசையும் உதிரமும் (பொது)

 

முருகா! 

மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்து அருள்வாய்.

 

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

தசையு முதிரமு நிணமொடு செருமிய

     கரும கிருமிக ளொழுகிய பழகிய

     சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ....குடில்பேணுஞ்

 

சகல கருமிகள் சருவிய சமயிகள்

     சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்

     சவலை யறிவினர் நெறியினை விடஇனி.....அடியேனுக்கு

 

இசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு

     வசன முறஇரு வினையற மலமற

     இரவு பகலற எனதற நினதற ......           அநுபூதி

 

இனிமை தருமொரு தனிமையை மறைகளின்

     இறுதி யறுதியி டவரிய பெறுதியை

     இருமை யொருமையில் பெருமையை வெளிபட .....மொழிவாயே

 

அசல குலபதி தருமொரு திருமகள்

     அமலை விமலைக ளெழுவரும் வழிபட

     அருளி அருணையி லுறைதரு மிறையவள் ...... அபிராமி

 

அநகை அநுபவை அநுதயை அபிநவை

     அதல முதலெழு தலமிவை முறைமுறை

     அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே

 

வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி

     மவுன மருளிய மகிமையு மிமையவர்

     மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ......வடிவேலும்

 

மயிலு மியலறி புலமையு முபநிட

     மதுர கவிதையும் விதரண கருணையும்

     வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தசையும் உதிரமும் நிணமொடு செருமிய

     கரும கிருமிகள் ஒழுகிய,பழகிய

     சடல உடல்கடை சுடலையில் இடு சிறு ......குடில்பேணும்

 

சகல கருமிகள்,சருவிய சமயிகள்,

     சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்,

     சவலை அறிவினர் நெறியினை விட,இனி.....அடியேனுக்கு

 

இசைய இதுபொருள் என அறிவு உறஒரு

     வசனம் உறஇருவினை அற,மலம் அற,

     இரவு பகல் அற,எனது அற,நினது அற ...... அநுபூதி

 

இனிமை தரும் ஒரு தனிமையை,மறைகளின்

     இறுதி அறுதி இட அரிய பெறுதியை,

     இருமை ஒருமையில் பெருமையை வெளிபட ......மொழிவாயே.

 

அசல குலபதி தரும் ஒரு திருமகள்,

     அமலை,விமலைகள் எழுவரும் வழிபட

     அருளி,அருணையில் உறைதரும் இறையவள்,......அபிராமி,

 

அநகை,அநுபவை,அநுதயை,அபிநவை,

     அதல முதல் எழு தலம் இவை முறைமுறை

     அடைய அருளிய பழையவள் அருளிய.....சிறியோனே.

 

வசுவ பசுபதி மகிழ்தர ஒருமொழி

     மவுனம் அருளிய மகிமையும்மையவர்

     மரபில் வனிதையும்,வனசரர் புதல்வியும்,......வடிவேலும்,

 

மயிலும்யல்அறி புலமையும்பநிட

     மதுர கவிதையும்,விதரண கருணையும்,

     வடிவும்,இளமையும்,வளமையும் அழகிய ......பெருமாளே.

 

 

பதவுரை

 

 

            அசல குலபதி தரும் ஒரு திருமகள்--- மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி,

 

            அமலை--- இயல்பாகவே மலம் அற்றவள்,

 

             விமலைகள் எழுவரும் வழிபட அருளி--- மலம் நீங்கப் பெற்ற தூயவர்கள் ஆகிய "சத்த கன்னியர்" என்னும் ஏழு மாதர்களும் தன்னை வழிபடஅவர்க்கு அருள் புரிந்து,

 

            அருணையில் உறை தரும் இறையவள்--- திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவள்,

 

            அபிராமி--- பேரழகி,

 

            அநகை --- பாவம் அற்றவள்,

 

            அநுபவை --- ஞானானுபவம் உடையவள்,

 

            அநுதயை --- உயிர்களுக்குக் கருணை புரிபவள்,

 

            அபிநவை --- என்றும் புதுமையானவள்,

 

            அதல முதல் எழு தலம் இவை--- அதலம் முதலான ஏழு உலகங்களையும்,

 

            முறை முறை அடைய அருளிய பழையவள்--- முறைப்படி முழுவதும் அருள் பெறு அருளிய பழமையானவள்,

 

            அருளிய சிறியோனே--- பெற்றருளிய சிறிய பிள்ளையாரே!

 

            வசுவ பசுபதி மகிழ்தர--- நெருப்புத் திருமேனியன் ஆகிய சிவபரம்பொருள் உள்ளம் மகிழுமாறு,

 

            ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும்--- ஒப்பற்ற மொழியை மவுனமாக உபதேசித்து அருளிய பெருமையும்,

 

            இமையவர் மரபில் வனிதையும்--- தேவர்கள் குலத்தில் வந்த தெய்வயானை அம்மையும்,

 

            வனசரர் புதல்வியும் --- வேடர்கள் மகளாக வளர்ந்த வள்ளிநாயகியும்,

 

            வடிவேலும்--- கூர்மையான வேலாயுதமும்,

 

            மயிலும்--- மயிலும்,

 

            இயல் அறி புலமையும்--- இயல்தமிழில் புலமையும்,

 

            உபநிட மதுர கவிதையும்--- உபநிடதக் கருத்துக்கள் கொண்ட இனிமையான தேவாரப் பாடல்களையும்,

 

           விதரண கருணையும் --- கொடைத் திறம் நிறைந்த கருணையும்,

 

            வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே--- வடிவமும்இளமையும்செழுமையும் சிறந்து விளங்கும் அழகால் பெருமை மிக்கவரே!

 

            தசையும் உதிரமும் நிணமொடு செருமிய--- சதைஇரத்தம்கொழுப்போடு கூடிய புலால் ஆகியவை நெருங்கியுள்ள,

 

            கரும கிருமிகள் ஒழுகிய பழகிய சடல உடல்--- (உடம்புள்ளே நிறைந்து இருந்து தமது) செயல்களைப் புரிகின்ற புழுக்கள் பழகும் அறிவில்லாத சடப்பொருளாகிய இந்த உடலானது,

 

            கடை --- வாழ்நாள் இறுதியில்,

 

            சுடலையில் இடு சிறுகுடில் பேணும்--- சுடுகாட்டில் இடப்படுகின்ற சிறிய குடிசை போன்றது ஆகும்.இந்த உடலைப் பேணுகின்,

 

            சகல கருமிகள்--- சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து கருமங்களையும் செய்பவர்கள்,

 

            சருவிய சமயிகள்--- ஒருவருக்கு ஒருவர் போரிடுகின்ற சமயவாதிகள்,

 

            சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்--- சரியைகிரியதவம் என்று சொல்லுகின்ற சிலர்,

 

            சவலை அறிவினர் நெறியினை விட--- தெளிவில்லாத அறிவினை உடையவர்கள் கொண்டுள்ள நெறியில் இருந்து நான் விலகிஇருக்குமாறு,

 

             இனி அடியேனுக்கு இசைய--- இனியாவது அடியேனுக்குப் பொருந்திய வகையில்,

 

            இது ஒரு பொருள் என அறிவு உற--- இதுதான் ஒப்பற்ற ஞான மெய்ப்பொருள் என்று எனது அறிவில் விளங்குமாறு,

 

            ஒரு வசனம் உற--- ஒப்பற்ற ஒரு வார்த்தையை அடியேன் பெறவும்,

 

            இரு வினை அற --- எனது இருவினைகள் அற்றுப் போகவும்,

 

            மலம் அற--- மும்மலங்களும் நீங்கவும்

 

            இரவு பகல் அற---கேவல சகல நிலைகளும் அற்றுப் போகவும்,

 

            எனது அற நினது அற--- நான் என்றும்நீ என்றும் உள்ள இருமை நீங்கி, (ஒருமை உற)

 

            அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை ---. அனுபவஞான ஆனந்தத்தைப் பெறுகின்ற சிறப்பு நிலையை,

 

            மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை--- வேதாந்தங்களாலும் இறுதியாகவும்அறுதியாகவும் தெரிவிக்க முடியாத பேற்றினை,

 

            இருமை ஒருமையில் பெருமையை --- சிவம் சத்தி என்னும் இரண்டு நிலைகளின் ஒன்றான தன்மையில் விளங்கும் பெருமையை,

 

            வெளிபட மொழிவாயே--- அடியேனுக்கு விளங்கும்படியாக உபதேசித்து அருள்வாயாக.

 

பொழிப்புரை

 

     மலைகளுள் சிறந்த இமயமலைக்கு அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதிஇயல்பாகவே மலம் அற்றவள்மலம் நீங்கப் பெற்ற தூயவர்கள் ஆகிய "சத்த கன்னியர்" என்னும் ஏழு மாதர்களும் தன்னை வழிபடஅவர்க்கு அருள் புரிந்து திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவள்பேரழகிபாவம் அற்றவள்ஞானானுபவம் உடையவள்உயிர்களுக்குக் கருணை புரிபவள்என்றும் புதுமையானவள்அதலம் முதலான ஏழு உலகங்களையும்முறைப்படி முழுவதும் அருள் பெறு அருளிய பழமையானவள்பெற்றருளிய சிறிய பிள்ளையாரே!

 

            நெருப்புத் திருமேனியன் ஆகிய சிவபரம்பொருள் உள்ளம் மகிழுமாறுஒப்பற்ற மொழியை மவுனமாக உபதேசித்து அருளிய பெருமையும்,தேவர்கள் குலத்தில் வந்த தெய்வயானை அம்மையும்வேடர்கள் மகளாக வளர்ந்த வள்ளிநாயகியும்கூர்மையான வேலாயுதமும்மயிலும்இயல்தமிழில் புலமையும்உபநிடதக் கருத்துக்கள் கொண்ட இனிமையான தேவாரப் பாடல்களையும்கொடைத் திறம் நிறைந்த கருணையும்வடிவமும்இளமையும்செழுமையும் சிறந்து விளங்கும் அழகால் பெருமை மிக்கவரே!

 

            சதைஇரத்தம்கொழுப்போடு கூடிய புலால் ஆகியவை நெருங்கியுள்ளஉடம்புள்ளே நிறைந்து இருந்து தமது செயல்களைப் புரிகின்ற புழுக்கள் பழகும் அறிவில்லாத சடப்பொருளாகிய இந்த உடலானதுவாழ்நாள் இறுதியில்சுடுகாட்டில் இடப்படுகின்ற சிறிய குடிசை போன்றது ஆகும்.இந்த உடலைப் பேணுகின்,சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து கருமங்களையும் செய்பவர்கள்ஒருவருக்கு ஒருவர் போரிடுகின்ற சமயவாதிகள்சரியைகிரியதவம் என்று சொல்லுகின்ற சிலர்,தெளிவில்லாத அறிவினை உடைய இவர்கள் கொண்டுள்ள நெறியில் இருந்து நான் விலகிஇருக்குமாறுஇனியாவது அடியேனுக்குப் பொருந்திய வகையில்இதுதான் ஒப்பற்ற ஞான மெய்ப்பொருள் என்று எனது அறிவில் விளங்குமாறுஒப்பற்ற ஒரு வார்த்தையை அடியேன் பெறவும்,எனது இருவினைகள் அற்றுப் போகவும்மும்மலங்களும் நீங்கவும்கேவல சகல நிலைகளும் அற்றுப் போகவும்நான் என்றும்நீ என்றும் உள்ள இருமை நீங்கிஒருமை உறும்படியாகஅனுபவஞான ஆனந்தத்தைப் பெறுகின்ற சிறப்பு நிலையைவேதாந்தங்களாலும் இறுதியாகவும்அறுதியாகவும் தெரிவிக்க முடியாத பேற்றினை, சிவம் சத்தி என்னும் இரண்டு நிலைகளின் ஒன்றான தன்மையில் விளங்கும் பெருமையைஅடியேனுக்கு விளங்கும்படியாக உபதேசித்து அருள்வாயாக.

 

 

விரிவுரை

 

 

தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய சடல உடல்--- 

 

சடல உடல் --- இந்த உடம்பு சடமானது. அறிவற்றது. சடப் பொருள் எதுவும் தோன்றி நின்று அழியும் தன்மையை உடையவை.

 

இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும்மிகவும் சிறந்தது என்றும்புனிதமானது என்றும்இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகட்கு அடிகள் அறிவுறுத்துகின்றனர்.

 

இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல.  தோல் எலும்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது.  இத்துடன் வாழவே கருதி அவாவி அலைதல் கூடாது. இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன் கூடியது என்பார்.

 

தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும் என்பதனையும் குறிப்பில் உணர்த்துகின்றனர். அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.

 

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்"

 

என்பார் பழநித் திருப்புகழில்.

 

இவ்வாறு அழியும் உடம்பை நாம் பெற்றது,உடம்புள் உறையும் உத்தமனைக் கண்டு,அழிவற்ற தன்மையை அடையும் பொருட்டே. அதனை மறந்துஉண்டும் உடுத்தும் உறங்கியும் உலாவியும் வீணாக இந்த உடம்பைச் சுமந்து அலைந்து திரிந்து மெலிகின்றேன் என்கின்றார்.

 

கடை சுடலையில் இடு சிறுகுடில் பேணும் --- 

 

கடை --- கடைசியில்வாழ்நாள் இறுதியில். 

 

வாழ்நாறள் முடிந்ததும்இந்த உடம்பை விட்டு உயிர் பிரியும். உயிர் இல்லாத உடம்பு சடம். அழியக் கூடியது. அதனால்சுடுகாட்டில் இட்டு அழியச் செய்வார்கள். இப்படிப்பட்டநிலையற்ற இந்த உடம்பு நெடுநாள் இருக்கும் என்று எண்ணி,உணவு முதலியவைகளால் பெருக்க வளர்ந்ததுஆடைகளால் பாதுகாக்கப்படுகின்றது. நோய் வந்தால்மருந்து முதலியவைகளால் காக்கப் படுகின்றது. அணிகலன்களால் அழகு செய்யப்படுகின்றது. 

 

இந்த உடம்பானது நாம் செய்த வினையின் காரணமாக வந்தது. மேலும் வினைகளைப் புரிவதற்கு விளை நிலமாக உள்ளது. புனையப்படுவன ஆகிய மணப் பொருள்கள் இல்லாமல் போனால்வெற்று உடம்பானது புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது. முதுமை அடைந்து சாகும் தன்மை உடையது. கொடிய நோய்களுக்கு இருப்பிடமாக உள்ளது. பற்றுக்களுக்குப் பற்றும் இடமாக விளங்குவதுகுற்றங்களுக்குக் கொள்கலமாய் உள்ளது. புற்றில் அடங்கியுள்ள பாம்பு போலச் சினம் முதலாகிய உட்பகைஞர்களுக்குத் தங்கும் இடமாக உள்ளது. அவலம்கவலைதுன்பம்கேடு முதலிவை நீங்காத உள்ளத்தைத் தன்னிடத்தில் உடையது. மக்கள் உடம்பின் தன்மை இது என்று உணர்ந்துஇந்த உடம்பைகைப்பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றது மணிமேகலை என்னும் காப்பியம்.

 

வினையின் வந்தது வினைக்குவிளைவு ஆயது,

புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது,

மூத்து விளிவு உடையதுதீப்பிணி இருக்கை     ,     

பற்றின் பற்றிடம்குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து        

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்....

 

நாலடியாரும் இதனையே வலியுறுத்துகின்றது...

 

தோல்போர்வை மேலும் தொளை பலவாய்ப் பொய்ம்மறைக்கும்

மீப்போர்வை மாட்சித்து உடம்பு ஆனால், - மீப்போர்வை

பொய்ம்மறையாக் காமம் புகலாதுமற்றதனைப்

பைம்மறியாப் பார்க்கப் படும்.                          

 

உள் இருக்கும் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையை உடையது இவ்வுடம்பு. என்றால்,அந்த உடம்பைக் கொண்டு காமத்தால் மகிழாமல்,  அம்மேற் போர்வையாகிய ஆடையைஅழுக்கு மறைக்கும் திரையாகவும்மற்றொரு போர்வையாகிய தோல் போர்வையை,ஒரு பையின் திருப்பமாகவும்நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும்.

 

கைப் பை ஒன்றிலே பொருள்களை வாங்கித் திணித்து வைக்கின்றோம்.  வைத்துள்ள பொருள்களால் பையின் உட்புறம் அழுக்கு அடைந்து இருக்கும். ஆனால் பையின் வெளிப்புறம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பையின் உட்புறம் மேற்புறமாகத் திருப்பிப் பார்த்தால் அதில் உள்ள அழுக்கு விளங்கும். அதுபோல,இந்த உடம்பிலேபல அழுக்குகள் நிறைந்து உள்ளன. "சீ வார்ந்துஈ மொய்த்து அழுக்கொடு திரியும் சிறுகுடில்" என்பார் மணிவாசகப் பெருமான். "புன்புலால் உடம்பின் அசுத்தமும்இதில் பொருந்தி நான் இருக்கின்ற புணர்ப்பும்" என்பார் வள்ளல் பெருமான்.

 

இந்த உடம்பின் தன்மையை பட்டினத்து அடிகள், "கோயில் திரு அகவல்" என்னும் பாடலில் விளக்குமாறு காண்க... 

 

விழுப் பொருள் அறியா வழுக்கு உறு மனனும்,

ஆணவ மலத்து உதித்து அளைந்துஅதின் ஊடு

நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும்;

படிறும்,பாவமும்பழிப்பு உறு நினைப்பும்,

தவறும்,அழுக்காறும்இவறு பொய்ச்சாப்பும்,

கவடும்,பொய்யும்சுவடும்பெரும் சினம்,

இகலும்,கொலையும்இழிப்புறு புன்மையும்,

பகையும்,அச்சமும்துணிவும்பனிப்பும்,

முக்குண மடமையும்ஐம்பொறி முயக்கமும்,

இடும்பையும்,பிணியும் இடுக்கிய ஆக்கையை;

உயிர் எனும் குருகு விட்டு ஓடும் குரம்பையை;

எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து,

கொழும் தசை மேய்ந்தும் ஒழுக்கும் விழும் குடிலை;

செம்பு எழு உதிரச் சிறுகுழுக் குரம்பையை;

மல உடல் குடத்தைபல உடல் புட்டிலை;

தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை;

கொலை படைக்கலம் பல கிடக்கும் கூட்டை;

சலிப்பு உறு வினைப் பலசரக்குக் குப்பையை;

கோள்சரக்கு ஒழுகும் பீறல் கோணியை;

கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை;

ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை;

புலராக் கவலை விளை மரப் பொதும்பை;

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை;

காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை;

மக்கள் வினையின் மயங்கும் திகிரியை;

கடுவெளி உருட்டிய சகடக் காலை;

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு

காமக் காற்று எடுத்து அலைப்ப,

கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை;

இருவினை விலங்கொடும் இயங்கு புன்கலனை,

நடுவன் வந்து அழைத்திட நடுங்கிடும் யாக்கையை,

பிணம் எனப் படுத்துயான் புறப்படும் பொழுது

அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்....

 

எனவே,இந்த உடம்பின் மேல் வைக்குப் பற்றினை விட்டுஅதிலே உள்ளிட்டு இருக்கும் காமம்வெகுளி,மயக்கம் என்னும் சரக்குகளைத் தூக்கி எறிந்து விட்டுஇறைவன் குடியிருக்கும் கோயிலாக உள்ளத்தை மாற்ற வேண்டும்.

 

அப்பர் பெருமான் அருளியுள்ளசரக்கு அறைத் திருவிருத்தத் திருப்பதிகத்தை ஓதி உணர்ந்துஇறைவன் திருவருளைப் பெற முயலுதல் வேண்டும். சரக்கு அறைத் திருவிருத்தப் பாடல் ஒன்று இதோ.....

 

விண்டார் புரம் மூன்றும் எய்தாய், என் விண்ணப்பம்,  மேல் இலங்கு

தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும்தொழுது பாதம்

கண்டார்கள் கண்டு இருக்கும் கயிலாயமும்,    காமர் கொன்றைத்

தண் தார் இருக்கும் சரக்கு அறையோ என் தனிநெஞ்சமே.          --- அப்பர்.

 

சகல கருமிகள்--- 

 

சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ள அனைத்து கருமங்களையும் செய்பவர்கள்அவற்றிலேயே கருத்தாக இருப்பவர்கள். 

 

சருவிய சமயிகள்--- 

 

சருவுதல் --- போரிடுதல்வாதம் புரிதல்.

 

சமயங்களுக்கு இடையில் பூசல். சமயங்களுக்குள் கொள்கைப் பூசல். அவரவர் தாம் கருதியதே சரி என்று கொண்டாடிதமக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டதால்சமயங்களில் உட்பிரிவுகள் தோன்றின. சமயப் பூசல்களால்மனிதகுலம் இதுவரையில் பட்டபாடு சொல்லிமுடியாது. சமயக் கருத்தையும்கடவுள் உண்மையையும் தெளிந்து கொள்ளாத சமயிகளால் உண்டான இந்த ஊறு இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது. 


அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,

          ஆனந்த பூர்த்தியாகி,

     அருளொடு நிறைந்தது எதுதன்அருள் வெளிக்குளே

          அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும் படிக்குஇச்சை வைத்து,உயிர்க்கு உயிராய்த்

           தழைத்ததுஎதுமனவாக்கினில்

     தட்டாமல் நின்றதுஎதுசமய கோடிகள் எ(ல்)லாம்

          தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?

          எங்கணும் பெருவழக்காய்

     யாதினும் வல்ல ஒரு சித்தாகி,இன்பமாய்

          என்றைக்கும் உள்ளதுஎதுமேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎதுஅது

          கருத்திற்கு இசைந்ததுஅதுவே

     கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்

          கருதி அஞ்சலி செய்குவாம்.

 

இது தாயுமான அடிகளார் அருளிய பாடல். எல்லாப் பொருள்களிலும்எங்கும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற பரம்பொருளின் தன்மைகளை இந்தப் பாடலில் விரித்துக் கூறுகின்றார்.

இதன் பொருள் ---

 

வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள்,தொலைவில் உள்ளவை,நிலவுலகம்கீழுலகம் ஆகிய அண்மையில் உள்ளவை என்று சுட்டிக் கூறி அறியமுடியாதபடிஎவ்விடத்திலும் பேரொளியாய்முழுநிறை இன்பமாகிதனது அறிவு ஆற்றலொடு பிரிப்பு இல்லாமல் நிறைவாய் உள்ளது எந்தப் பொருளோதன்னுடைய அருள் வெளியிலேஎல்லா உலகங்களும்நிலைக்குமாறு பெருங்கருணை வைத்துஉயிருக்குள் உணர்வாகி விரிந்து இருப்பது எந்தப் பொருளோமனத்தால் நினைப்பற்கும்வாயால் சொல்வற்கும் எட்டாமல் நிலைபெற்று உள்ளது எந்தப் பொருளோபல்வேறு சமயங்களும் எம்முடைய தெய்வம்எம்முடைய தெய்வம்என்றுஎவ்விடங்களிலும் எப்போதும் விடாது நின்று வழக்கிடும்படியாக அவரவர் கற்பித்துக் கொண்ட தெய்வமாக நின்றது எந்தப் பொருளோஇம்முறையாக எவ்விடத்தும்முடிவு பெறாத பெரிய வழக்காகிஎத்தொழிலும் வல்லதும்தானே தனக்கு நிகராய் விளங்குகின்றஒப்பற்ற  பேரறிவுப் பொருளாகபேரின்பப் பெருவடிவாகஎக்காலத்தும் ஒன்றாய்மாறாஇயல்பாய் இருப்பது எந்தப் பொருளோபின்னும்இரவு பகல் அல்லாது (நினைப்பு மறப்புஇன்பம் துன்பம்பிறப்பு இறப்பு என்ற எல்லா நிலைகளையும் கடந்து)நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருளோஅந்தப் பொருளே எல்லாருடையகருத்திற்கும் இசைவாக உள்ளது. ஆதலால் அப் பரம்பொருளையேகாணப்பட்ட பூதங்களும்பூதத் தொடர்புகளாகவும்மௌன வடிவமான வெளியீடாகவும் தியானித்து நாம் கைகூப்பி வணங்குவாம்.


பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போலபரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்துஅந்த உணர்விலேயே திளைத்துநுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாகஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME)ரூபம்(FORM) இல்லாத கடவுளைஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காகசமய நெறிகள் வகுக்கப்பட்டன. 


அவ்வாறு வகுக்கப்பட்டஅறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாதுசமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள்அவரவர் உணர்ந்தபடியேசமய நெறிகளில் நல்லது இதுதீயது இது என்றுசொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து,


"ஒன்றதே பேரூர்வழி ஆறு அதற்கு உள,

என்றது போல இருமுச் சமயங்கள்,

நன்று இதுதீது இது என்ற உரை ஆதர்கள்,

குன்று குரைத்து எழு நாஐ ஒத்தார்களே"

 

என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று,கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்கடவுள் என்னும்ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்றுபிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.


எல்லாச் சமயங்களும்,மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாதுஅவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டுமருண்டு வாதித்துப் பிணங்குவோர்,மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி,"குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உளஎன்றார். அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோபிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால்இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோஅதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,


"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்"


 என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள்பூசலிடுவார்கள்பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள்என்பது இதன் பொருள்.


சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவுஅறிவுஞானம்அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணிமாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோஅந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின.படித்தல் வேறு. ஓதுவது வேறு.


கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்குஅவன் காணும்பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு,நாளை பொய்யாகலாம்மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது. 


"பித்தர்குணம் அதுபோல,ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

 சரயு நதியின் அழகைப் பாடவந்த கம்பர்மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.


கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.   --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

இமய மலையில் தோன்றி,அங்கிருந்து வந்துகடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானதுஅளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்  என்று சொல்லும்படியாகஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்துஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம்விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.

 

பரம்பொருள் ஒன்றுஅதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப் பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களாக விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின் வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.

 

தாயுமான அடிகளாரும்இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

     விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை,முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா.

 

இதன் பொருள் ---

 

ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து,அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானதுகடலில் கலந்த போதுகடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறிய முடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில்எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றிசமரசம் உற்று விளங்குகின்றன. 

 

எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும் என அறுவுறுத்தி உள்ளார்கள். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடிஅத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,

                           

பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

     புகுந்து கலந்திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

     கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

     தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

     செய்யவல்ல கடவுளே! தேவ தேவே! 

 

என்று அருளிச் செய்தார்.

 

முன்னர் குறிப்பிட்டது போலசமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயேஅவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதேசமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதை,அருணகிரிநாதப் பெருமானும்,  "கலகல கல என,கண்ட பேரொடு  சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் ஆங்காங்கே காட்டி உள்ளார்.

 

கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச் சில கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள்,உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்றுஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்துதன் செயல் ஏதும் இன்றிசிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கிஅறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள்ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க்கிடந்து,தடுமாறும்

கவலைக் கெடுத்துகழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவிநாம்தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

பொய்யான சமயங்களும்ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்துதடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி, தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றிநாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

அருளாளர்கள் அனைவரும்அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்துதிருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல்சமயக் கருத்துக்களைத் தெளியாமல்உயர்வு தாழ்வு கற்பித்துஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

ஒரு சமயத்தைச் சார்ந்தவர்பிற சமயத்தாரை இகழ்ந்துபரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும்பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால்இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதைகம்பர் காட்டுமாறு காண்போம்.

 

மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான்தனது தம்பியோடும்விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில்இராமனின் தோளைக் கண்டவர்கள்அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு,மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்ததுஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது. 

 

சமயவாதிகள் யாரும்நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போலமிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை.

 

தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்.   --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

(மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டுகளித்து முடியாமையால்,பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள்வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள் போன்ற(இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு    பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்(அவனது)  பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே  (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்ஆகவேவாள் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள்,பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காதுதமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவும் நோக்காதுஅவர்கள் தாம் தாம் கண்டஓர் உறுப்பின்

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர். 

 

எனவேசார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மையையே முழுதும் அறியாமல்பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.

 

சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்--- 

 

சரியைகிரியை ஆகிய நெறிகளில் நிற்பதே தவம் என்று எண்ணிக் கொண்டு இருப்பவர்களும் உண்டு. சரியைகிரியை யோகம் என்பவைஞானத்தைப் பெறுவதற்கு உண்டான படி நிலைகளே. அந்தப் படிகளில் அப்படியே நின்று விட்டால்அடுத்தடுத்த படிகளில் ஏற முடியாது.

 

மனம் செம்மைப் படுவதற்கு வகுத்த நால்வகை நெறிகளில்சரியைகிரியையோகம் இம்மூன்றும் முறையே தாதமார்க்கம்புத்திரமார்க்கம்சகமார்க்கம் எனப்படும்.  தாதமார்க்கம் - அடிமை நெறி. சரியைகிரியையோக மாரக்கங்களில் நின்று ஒழுகினும்திருவருட் பெருக்கு விளக்கம் உற்றபோதுதான்,  சாலோகசாமீபசாரூபங்களை அடைதல் கூடும். இதனைப் பின்வரும் சிவஞானசித்தியார் சுபக்கப் பாடல்களால் அறியலாம்.

 

தாதமார்க்கம்சாற்றில் சங்கரன்தன் கோயில்

தலம் அலகுஇட்டுஇலகு மெழுக்கும் சாத்தி,

போதுகளும் கொய்து பூந்தார் மாலை கண்ணி

புனிதற்குப் பலசமைத்துபுகழ்ந்து பாடி

தீதுஇல் திரு விளக்கு இட்டுதிருநந்தவனமும்

செய்து திருவேடம் கண்டால் அடியேன் செய்வது

யாது பணியீர் என்று பணிந்து அவர்தம் பணியும்

இயற்றுவதுஇச் சரியை செய்வோர் ஈசன் உலகு இருப்பர்.

 

புத்திரமார்க்கம்புகலில் புதிய விரைப் போது

புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு ஐந்து

சுத்தி செய்து ஆசனமூர்த்தி மூர்த்தி மானாம்

சோதியையும் பாவித்து ஆவாகிச் சுத்த

பத்தியினால் அருச்சித்துபரவிப் போற்றி

பரிவினொடும் எரியில் வரு காரியமும் பண்ணல்

நித்தலும் இக் கிரியையினை இயற்றுவோர்கள்

நின்மலன்தன் அருகு இருப்பர் நிலையும்காலே.

 

சகமார்க்கம்புலன்ஒடுக்கித் தடுத்து வளிஇரண்டும்

சலிப்பு அற்று முச்சதுர முதல் ஆதாரங்கள்

அகமார்க்கம் அறிந்து அவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங்கு

அணைந்து போய் மேல் ஏறி அலர் மதி மண்டலத்திலன்

முகமார்க்க முழுது உடலம் முட்டத்தேக்கி

முழுச்சோதி நினைந்து இருத்தல் முதலாக வினைகள்

உகமார்க்க அட்டாங்க யோகம் உற்றும்

உழத்தல் உழந்தவர் சிவன்தன் உருவத்தைப் பெறுவர்.

 

இறைவனை ஆண்டவனாகவும் உயிராகிய தன்னை அம் முதல்வனது அடிமையாகவும் எண்ணி அன்பினால் வழிபடும் நெறியினைத் தாசமார்க்கம் எனவும்எல்லாம் வல்ல ஆண்டவனைத் தந்தையாகவும் தன்னை அம்முதல்வனது மைந்தனாவும் கருதி அன்பு செலுத்தும் நெறியினைச் சற்புத்திர மார்க்கம் எனவும்இறைவனை ஆருயிர்த் தோழனாகக் கொண்டு வழிபடும் முறையினைச் சகமார்க்கம் எனவும்இறைவனை ஆருயிர்க் காதலனாகவும். அவனது அருளார் இன்பத்தினை விரும்பி நிற்கும் ஆன்மாவாகிய தன்னைக் காதலியாகவும் கொண்டு போற்றும் முறையினைச் சன்மார்க்கம் எனவும் வழங்குதல் சைவசமய மரபு. இந்நெறிகள் நான்கினையும் முறையே,தொண்டு நெறி,மகன்மை நெறி,தோழமை நெறி,அகத்திணை நெறி எனத் தமிழில் வழங்குதல் ஏற்புடையதாகும். மேற்குறித்த நால்வகை மார்க்கங்களையும் சரியை,கிரியையோகம்ஞானம் என்ற பெயர்களால் வழங்குதலே பெருவழக்காகும்.

 

சரியை முதலாக மேற் கூறப்பட்ட நால்வகை நெறிகளும். ஒன்றின் ஒன்று தொடர்புடையனவாய்ச் சத்தாகிய முழுமுதற் பொருளிடத்தே உயிர்களைச் சேர்ப்பிக்கும் நெறிகளாதலின் இந்நான்கினையுமே சன்மார்க்கமென்ற சொல்லால் வழங்குதல் திருமூல நாயனார்தாயுமானார் அருட்பிரகாச வள்ளலார் ஆகிய திருவருட் சான்றோர் அனைவருக்கும் ஒத்த முடிபாகும்.

 

"விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும்

அரும்பு மலர் காய் கனிபோல் அன்றோ பராபரமே"

 

எனவரும் பாடலில்,நால்வகை நெறிகளையும்,சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் எனத் தாயுமான அடிகள் குறித்துள்ள மையால் ஞானத்தில் சரியைஞானத்திற் கிரியைஞானத்தில் யோகம்ஞானத்தில் ஞானம் என்னும் நால் வகை நெறிகளையும் குறித்ததே சன்மார்க்கம் என்ற இச்சொல் என்பது நன்கு புலனாகும்.

 

சவலை அறிவினர் நெறியினை விடஇனி அடியேனுக்கு இசையஇது ஒரு பொருள் என அறிவு உற,  ஒரு வசனம் உறஇரு வினை அற,மலம்,இரவு பகல் அற---

 

சவலை அறிவு --- குழப்பம்.

 

தெளிவில்லாத குழம்பிய அறிவு.

 

வெற்றுச் சமயவாதகிளுடன் கூடியதால் உண்டான சவலை அறிவை விட்டு ஒழிக்கவேண்டும்.

 

பல பிறவிகளையும் எடுத்த உயிர்கள்கொடிய நரகபோகமான துன்பங்களையும்சொர்க்கம் முதலிய உலகங்களில் அநுபவிக்கப்படும் எல்லாப் போக இன்பங்களையும் அநுபவிக்கச் செய்துஇவ்வகையில் ஆன்மாக்கள் அடையும் மலபரிபாகத்தால் முத்தி அடைதற்கு ஏதுவான நல்ல புண்ணியம் சிறிது பொருந்திய அளவில்தம்தம் சமயமே சிறந்தது எனவாதம் புரிதற்கு ஏதுவாக இயற்றப் பெற்று உள்ள பழமையான நூல்களை உடைய புறச்சமயங்கள் தோறும்அவ் அச்சமய நூல்களே வீட்டுநெறி கூறும் உண்மை நூல் என்று அறிந்துஅவற்றில் மனம் அழுந்துமாறு செய்துஅதன்பின்புறச் சமயங்களில் இருந்து அகச்சமயத்துள் புகுத்தி,  முற்பட்ட நூல்களாகிய வேத சிவாகமங்களில் கூறியுள்ள விரதங்கள் முதலிய பலவகைப்பட்ட  உண்மைத் தவத்தின் பயனாக மெய்ந்நெறியினை உணர்த்தும் சிவாகமத்தில் கூறிய சரியைகிரியையோகம் என்னும் மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சார்பு கொள்ளச் செய்து,அவற்றின் வாயிலாகத் திருவருள் மிக்குப் பெருகசிவசாலோகம்சிவசாமீபம்சிவசாரூபம் என்ற மூன்று பரமுத்திகளையும் அநுபவிக்கச் செய்துநான்கு வகைப்பட்ட சத்திநிபாதங்களை அளித்தற்கு ஏதுவாகிய இருவினை ஒப்பு உண்டாகும் காலம் தோன்றிப் பாசத்தைத் தருதற்கு மூலகாரணமான ஆணவமலம் ஒடுங்குதற்குரிய பக்குவகாலம் வரும் வரையில் பலகாலமாக உயிர்கள் இறைவன் அருள் நோக்கி வருந்திக்கொண்டு இருத்தலை நோக்கி அருள் செய்துஉயிர்களுடன் நீங்காது இருந்துஅவற்றின் அறிவினுக்குத் தானே அறிவு ஆகஅந்த ஆன்ம அறிவினாலும் உணர முடியாத வழியில் எங்கும் நிறைந்த நிலையில் இருந்து கீழ் இறங்கி,  தன்னை விட்டு ஒருபோதும் நீங்காத அருளே திருமேனியாக மானிடச் சட்டை தாங்கி,  குருநாதன் ஒரு திருப் பெயர் பூண்டுஇம்மண்ணுலகத்தில் தோன்றிஅருட் பார்வை என்னும் சட்சு தீட்சையினால்ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம் உடைய சகலராகிய ஆன்மாக்கள்,பல பிறவிகளிலும் ஈட்டி வைத்து உள்ள பழைய வினை (சஞ்சித வினை) முழுவதையும் நீக்கி,  ஆணவமலம் என்கின்ற நோயாகிய திரையைக் கிழித்துஆன்ம அறிவால் காண முடியாத மெய்ஞ்ஞானக் கண்ணொளியைத் தந்து அருளிஇறைவன் திருவடிகளை அறிய மேற்கொள்ளும் அன்பாகிய திருவடி ஞானத்தால் பரம்பொருளாகிய தன் நிலையையும் (பதிப் பொருளையும்), ஆன்ம நிலையையும் (பசுப் பொருளையும்)அறியும்படி செய்துஉலகமாகிய பாசப் பொருள்கள் அனைத்தையும் உணரும்படி செய்துஎக்காலத்தும் முடிவடையாதுஎங்கும் தேங்கிநிறைந்த பேரானந்தத்தைத் தருகின்ற தெளிந்த அமுதத்தை ஒத்துதான் உள்ளும் புறமுமாகிய எங்கும் நீக்கம் இல்லாது நிற்கும் பரிபூரண நிலையையும் உணர்த்திஇறப்பும்பிறப்பும்நினைப்பும்மறப்பும்,  பகலும்இரவும் ஆகிய இவற்றைக் கடந்துஅழியாத பேரின்பத்தை அடையச் செய்வது இறைவன் கருணை.

 

 

எனது அற நினது அற--- 

 

சீவனும் சிவனும் அத்துவிதம் உற்று நிற்கும் இரண்டற்ற நிலை.  இருவினையொப்பு மலபரிபாகம் உற்ற பொழுது சத்தி பதியும். அருள்பதிந்த பின் அத்துவித நிலையை அடையும்.

 

இருவினை முமலமும் அற,இறவியொடு பிறவி அற,

      ஏகபோகமாய் நீயும் நானுமாய்

இறுகும்வகை,பரமசுகம் அதனை அருள் இடைமருதில்

      ஏகநாயகா லோகநாயகா        --- (அறுகுநுனி) திருப்புகழ்

 

அநுபூதி இனிமை தரும் ஒரு தனிமையை ---

 

அனுபூதி --- அனுபவ ஞானம்.

 

அனுபூதி என்ற சொல்லுக்குபட்டறிவுஅநுபவஞானம்உடனாதல் என்று பொருள். மெய்யுணர்வோடு அநுபவப்பட்டுஅதனால் வரும் இன்பம்.அனுபவம் என்றால் அழுந்தி அறிதல் என்றும் அனுபவ பூர்வமாய் உணர்தல் என்றும் பொருள்படும். வெறும் சொல்லோடு பொருந்தாமல்சொல் உணர்த்தும் பொருளோடும் பொருந்தாமல்சொல் உணர்த்தும் பொருளிலே பொதிந்துள்ள உண்மையை ஓர்தலே உண்மையான அநுபவ அறிவுக்குத் துணை செய்யும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்று மணிவாசகப் பெருமான் பாடியது இந்தக் கருத்திலேயே என்பதை அநுபவமாக உணரலாம். "சொல்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதான்" என்பார் அப்பர் பெருமான்.  சொல் பாவியுள்ள பொருளை உணர்தல் வேண்டும். இந்த நிலையிலே அருட்பாடல்களைக் குருமுகமாக ஓதிகேட்டுஉணர்ந்து தெளிதல் வேண்டும். அவ்வாறு தெளிவதால் உண்டாகும் இன்பம் தனியானது. ஏகாந்தம்.

 

மறைகளின் இறுதி அறுதி இட அரிய பெறுதியை---

 

வேதங்கள் இறைவனை அடையக் கூடிய வழிகளைத் தான் காட்டும். அந்த வழியில் ஒழுகவேண்டியது அவற்றைக் கடைபிடிப்பவர் கடமை. முத்திப் பேறு என்பது எப்படி இருக்கும் என்பதை அனுபிவித்துத் தான் அறிந்து கொள்ளமுடியும். அது பிறருக்கு வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. "மாற்றம் மனம் கழிய நின்ற பரம்பொருளை" அந்த நிலையில்தான் உணர முடியும்.

 

மறைகளின் முடிவால் வாக்கால்,மனத்தினால் அளக்கொணாமல்

நிறைவுடன் யாண்டும் ஆகிநின்றிடு நிமலமூர்த்தி

அறுமுக உருவாய்த் தோன்றிஅருளொடு சரவணத்தின்

வெறிகமழ் கமலப் போதில்வீற்றிருந்து அருளினானே.          --- கந்தபுராணம்.

 

வாசித்துக் காண ஒணாதது,

பூசித்துக் கூட ஒணாதது,

வாய்விட்டுப் பேச ஒணாதது....          ---  திருப்புகழ்.

 

இருமை ஒருமையில் பெருமையை --- 

 

"இருமையின் ஒருமையும்ஒருமையின் பெருமையும்என்பது திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவெழுகூற்றிருக்கை.

 

இருமையின் ஒருமை --- உயிர்களோடு கலந்து ஒருமைப்பட்டு அத்துவிதம் ஆகி நிற்கின்ற நிலை.

 

ஓருமையின் பெருமை --- எல்லாம் தன்னுள் அடக்கிய எல்லை அற்ற ஒரு பரம்பொருள் ஆகிய சிவத்தின் பெருமை.

 

இருமை --- சிவமும் சத்தியும் ஆகி நின்ற நிலை.

ஒருமை --- சத்தியைத் தன்னுள் கரந்து ஏகச் சிவம் ஆகி நின்ற நிலை.

 

"எத்திறம் நின்றான் ஈசன்,அத்திறம் அவளும் நிற்பள்" என்பது சிவஞானசித்தியார்.

 

அசல குலபதி தரும் ஒரு திருமகள்--- 

 

அசலம் --- மலை.

 

அசல குலபதி --- மலைகளுக்கு எல்லாம் பதியாக உள்ளது இமயமலை. மலையரசன் மகளாக அவதரித்தவர் உமாதேவியார்.

 

வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமை--- 

 

வசுவம் --- நெருப்பு. சுடர்.

 

பசுபதி --- உயிர்களுக்கு எல்லாம் பதியாகிய சிவபரம்பொருள்.

 

சிவபரம்பொருள் மகிழுமாறு வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாத மெய்ப்பொருளைவாய்விட்டுச் சொல்ல உபதேசித்தவர் முருகப் பெருமான்.

 

"சுசிமாணவ பாவம்" அட்டாட்ட மூர்த்தங்களில் ஒன்று என்பார் பாம்பன் சுவாமிகள். 

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது ஆதலால், சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார். எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும்குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டுசிவபரம்பொருள் நிகழ்த்திய திருவிளையாடல் இது  என்று கொள்ளவேண்டும். தேவதேவன் ஆகிய சிவபரம்பொருள்மாணவபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பொருட்டுதனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.          ---  தணிகைப் புராணம்.

 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

அறிவு நோக்கத்தால் காரியப் படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.             --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.        --- அபிராமி அந்தாதி.

  

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

                                          

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துஇங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.         --- சிவஞான சித்தியார்.

 

உபநிட மதுர கவிதையும்--- 

 

உபநிடதங்கள் வேதங்களின் முடிபொருளை அறிவிப்பன. அவற்றை எல்லாம் உயிர்கள் அறிந்து உய்யும் பொருட்டு திருஞானசம்பந்தர் அவதரித்துஅற்புதமான தேவாரப் பாடல்கள் அருளிச் செய்தார்.வேதம் தமிழ் செய்தவர் அவர்.  "பெம்மான் முருகன் பிறவான்இறவான்" என்று அருணை வள்ளலார் அருளிச் செய்து உள்ளதால்முருகப் பெருமான் திருஞானசம்பந்தராக வந்து அவதரித்தார் என்று கொள்ளுதல் பிழை ஆகும். முருகப் பெருமானது திருவருளைப் பெற்ற அபரசுப்ரமண்யம் திருஞானசம்பந்தராக வந்துதிருநீற்றால் அமராடிபரசமய நச்சு வேரை அகழ்ந்துஅருள் நெறியை நிலைநிறுத்தியது.

 

விதரண கருணையும் ---

 

விதரணம் --- கொடை.

 

முருகப் பெருமானது அருளே உலக உயிர்களுக்குப் பெருங் கொடையாக உள்ளது. 

 

கருத்துரை

 

முருகா! மெய்ஞ்ஞானப் பொருளை உபதேசித்து அருள்வாய்.

 

 

 

            

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...