047. தெரிந்து செயல்வகை --- 04. தெளிவு இல் அதனை

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 47 -- தெரிந்து செயல்வகை

 

     அதாவது,தான் செய்யும் செயல்களைச் செய்யும் திறம் அறிந்து செய்தல். இது, பெரியாரைத் துணைக்கொண்ட வழி சிறக்கும்சிற்றினத்தாரோடு சேர்ந்தால் சிறக்காது. என்பதால்சிற்றினம் சேராமையின் பின் இது வைக்கப்பட்டது.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தமக்கு இழிவு என்னும் குற்றப்பாட்டுக்கு அஞ்சுபவர்தெளிவில்லாத எந்தச் செயலையும் செய்யத் தொடங்கமாட்டார்" என்கின்றார் நாயனார்.

 

     ஒரு செய்லைச் செய்யத் தொடங்கிஅதனை இடையில் விட்டு நீங்குதல் தகாது என்பதால், "தொடங்கார்" என்றார்.

 

     தெளியாது தொடங்கிய தொழிலால் பின்னே அழிவைச் சந்திப்பதோடுஅறிவும் மானமும் இல்லாதவர் என்று உலகவர் பழிக்கும் இகழ்ச்சி உண்டாதல் நிச்சயம்தெளிவு கொண்ட பிறகு,செய்யத் தொடங்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

 

     தெளிவு என்பதுதான் தனித்தும்தன்னைச் சர்ந்த இனத்தோடும் கூடி ஆராய்ந்தும் பெறவேண்டியது.

 

திருக்குறளைக் காண்போம்...

  

தெளிவு இல்அதனைத் தொடங்கார்இளிவு என்னும்

ஏதப்பாடு அஞ்சுபவர்.                        

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

      தெளிவு இலதனைத் தொடங்கார் --- இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்

 

     இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் --- தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.

 

            (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழிஅதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின்தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.)

 

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;

தேற்றம் இலாதான் துணிவு இன்னா;ஆங்குஇன்னா

மாற்றம் அறியான் உரை.         --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா --- வலிமை இல்லாதவன் கையில் பிடித்த படைக்கலம் துன்பமாம்நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா --- மணமில்லாத பூவின் அழகானது துன்பமாம்தேற்றம் இலாதான் துணிவு இன்னா --- தெளிவு இல்லாதவன் ஒரு வினை செய்யத் துணிதல் துன்பமாம்;ஆங்கு --- அவ்வாறே மாற்றம் அறியான் உரை இன்னா --- சொல்லின் கூறுபாட்டினை அறியாதவனது சொல் துன்பமாம். 

 

 

ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,

மேஎந் துணை அறியான்,மிக்குநீர் பெய்து இழந்தான்,

தோஓ முடைய தொடங்குவார்க்கு இல்லையே

தாஅம் தரவாரா நோய்.           --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     உலகம் ஆண்டவன் --- உலகத்தினை அரசு செய்த மாவலிமே(வு)ம் துணையறியான் --- தன்னோடு பொருந்தி இருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய்எனக்கு எளிது ஆம் என்று --- மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லிமிக்கு --- செருக்கு மிகுந்துநீர் பெய்து --- தானமாக நீ ர்வார்த்துக் கொடுத்துஇழந்தான் --- உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்),தோம் உடைய தொடங்குவார்க்கு --- குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்குதாம் தர வாரா நோய் இல்லை --- தாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல.

 

      குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார்,தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர்.

 

      துணையறியான் என்றது, சுக்கிரன்,'கண்ணன் வஞ்ச நெஞ்சன். உனது செருக்கை அடக்க வந்து நிற்கின்றான். ஆதலின்அவனுக்கு மூவடி மண்ணும் கொடாது ஒழிகஎன்று கூறித் தடுக்கவும்அறியானாய்கமாவலி உலகத்தை இழந்தமையால் தனக்குக் கேடு தானே தேடிக்கொண்டான் ஆகின்றான். ஆகவேகுற்றமுடைய காரியத்தைத் தொடங்குவார் தமக்கு வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையும் தாமே விளைத்துக் கொள்வர் என்பதாயிற்று.

 

            

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...