பொது --- 1008. இலகி இருகுழை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இலகி இருகுழை (பொது)

 

முருகா! 

எனது ஆவி ஈடேற அருள்வாய்.

 

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

இலகி யிருகுழை கிழிகயல் விழியினு

     மிசையி னசைதரு மொழியினு மருவமர்

     இருள்செய் குழலினு மிடையினு நடையினு ......மநுராக

 

இனிமை தருமொரு இதழினு நகையினு

     மிளைய ம்ருகமத தனகுவ டழகினு

     மியலு மயல்கொடு துணிவது பணிவது ......தணியாதே

 

குலவி விரகெனு மளறிடை முழுகிய

     கொடிய நடலைய னடமிட வருபிணி

     குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ......கொடுபோநாள்

 

குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்

     குதறு முதுபிண மெடுமென வொருபறை

     குணலை யிடஅடு சுடலையில் நடவுத ......லினிதோதான்?

 

மலையில் நிகரில தொருமலை தனையுடல்

     மறுகி யலமர அறவுர முடுகிய

     வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய

 

மவுலி யொருபது மிருபது கரமுடன்

     மடிய வொருசரம் விடுபவபன் மதகரி

     மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ......மதியாதே

 

அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய

     அதுல னிருபத மதுதனி லெழுபுவி

     யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே

 

அவுண ருடலம தலமர அலைகட

     லறவு மறுகிட வடகுவ டனகிரி

     யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இலகி இருகுழை கிழிகயல் விழியினும்,

     இசையின் அசைதரு மொழியினும்ரு அமர்

     இருள்செய் குழலினும்,இடையினும்,நடையினும்,......அநுராக

 

இனிமை தரும்ஒரு இதழினும்,நகையினும்,

     இளைய ம்ருகமத தன குவடு அழகினும்,

     இயலும் மயல்கொடு துணிவது பணிவது ......தணியாதே

 

குலவி,விரகுஎனும் அளறு இடை முழுகிய

     கொடிய நடலையன்டமிட வருபிணி

     குறுகி இட,எமன் இறுதியில் உயிரது ......கொடுபோநாள்

 

குனகி அழுபவர்,அயர்பவர்,முயல்பவர்,

     குதறு முதுபிணம் எடும் என ஒருபறை

     குணலை இடஅடு சுடலையில் நடவுதல் ......இனிதோ தான்?

 

மலையில் நிகர் இலது ஒரு மலை தனை உடல்

     மறுகி அலமர அறஉரம் முடுகிய

     வலிய பெலம் மிக உடையவன்,அடையவும் ......அதிகாய

 

மவுலி ஒருபதும் இருபது கரமுடன்

     மடிய,ஒரு சரம் விடுபவன்,மதகரி

     மடுவில் முறையிட உதவிய க்ருபைமுகில்,...... மதியாதே

 

அலகை உயிர்முலை அமுது செய்து அருளிய

     அதுலன்ருபதம் அது தனில் எழுபுவி

     அடைய அளவிட நெடுகிய அரி,திரு ...... மருகோனே!

 

அவுணர் உடலம் அது அலமர,அலைகடல்

     அறவும் மறுகிட,வடகுவடு அன கிரி

     அடைய இடி பொடிபடஅயில் விடவல ......பெருமாளே.

 

பதவுரை

 

     மலையில் நிகர் இலது ஒரு மலை தனை --- மலைகளில் தனக்கு நிகர் இல்லாததான ஒப்பற்ற திருக்கயிலாய மலையினை,

 

     உடல் மறுகி அலமர --- தனது உடல் வருந்தித் துன்பம் உற,

 

     அற உரம் முடுகிய வலிய பெலம் மிக உடையவன் --- முழு வல்லமையையும் காட்டி எடுக்க முற்பட்ட பலம் பொருந்திய இராவணன்,  

 

     அடையவும் --- போரில் எதிர்த்து வரவும்,

 

     அதிகாய மவுலி ஒருபதும் --- மிகப் பெரிய முடிகள் பத்தும்,

 

     இருபதும் கரமுடன் மடிய --- இருபது கைகளும் இற்று விழ,

 

     ஒரு சரம் விடுபவன் --- ஒப்பற்ற அம்பினைச் செலுத்திய இராமபிரான், 

 

     மத கரி மடுவில் முறை இட உதவிய க்ருபைமுகில் --- (கஜேந்திரம் என்னும்) யானையானது, மடுவில் இருந்து முதலையின் வாயில் பட்டு, முறையிட்டு அழைத்தபோது, வந்து உதவி புரிந்த கருணைமேகமானவன்,

 

     மதியாதே அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் --- தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் ஆகிய பூதனையின் உயிரை முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன்

 

      இரு பதம் அது தனில் --- தனது இரண்டு திருவடிகளால்,

 

     எழு புவி அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே --- ஏழுலகங்கள் முழுமையும் அளக்க ஓங்கி வளர்ந்தவனும் ஆகிய திருமாலின் அழகிய திருமருகரே!

 

      அவுணர் உடலம் அது அலமர--- அரக்கர்களுடைய உடல்கள் துன்புறவும்,

 

     அலை கடல் அறவும் மறுகிட--- அலைகளை வீசும் கடலானது மிகக் கலங்கவும், 

 

     வட குவடு அன்ன கிரி அடைய இடி பொடிபட--- வடக்கில் உள்ள மேருமலையை ஒத்த கிரவுஞ்ச மலையானது முழுதும் இடிந்து பொடிபடவும்,

 

     அயில் விட வ(ல்)ல பெருமாளே--- வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

     இலகி இரு குழை கிழி கயல் விழியினும்--- விளங்குகின்ற இரு காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல்மீன் போன்ற கண்களாலும்,

 

      இசையின் அசை தரு மொழியினும் --- இசை போல அசைந்து அழகாக எழுகின்ற பேச்சினாலும்,

 

     மரு அமர் இருள் செய் குழலினும் --- நறுமணம் பொருந்திய கருத்த கூந்தலினாலும்,

 

     இடையினும் நடையினும் --- (மெல்லிய) இடுப்பிலும்(அன்னத்தை ஒத்த) நடையிலும்,

 

     அநுராக இனிமை தரும் ஒரு இதழினும் --- காம இன்பத்தைத் தரும் வாயிதழிலும்,

 

     நகையினும் --- சிரிப்பிலும்,

 

     இளைய ம்ருகமத தன குவடு அழகினும் --- முதிராத,கஸ்தூரி அணிந்தமலை போன்ற மார்பகங்களின் அழகிலும்,

 

     இயலும் மயல் கொடு --- உண்டாகும் மோகத்தால்,

 

     துணிவது--- துணிந்து ஈடுபட்டு,

 

     பணிவது தணியாதே குலவி --- விலைமாதரைப் பணிந்து இருப்பது சிறிதும் குறையாமல் அவரோடு நெருங்கி உறவாடி,

 

     விரகு எனு அளறு இடை முழுகிய கொடிய நடலையன் --- அவர்கள் புரியும்  தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத துன்பத்துக்கு ஆளாகிய என்னிடம்

 

      நடம் இட வரு பிணி குறுகியிட --- சிறிது சிறிதாக நடமாடுகின்ற பிணிகள் வந்து சேர,

 

     எமன் இறுதியில் உயிரது கொடு போ(ம்) நாள் --- வாழ்நாள் இறுதியில் இயமன் வந்து எனது உயிரைக் கொண்டு போகின்ற அந்த நாளில்,

 

     குனகி அழுபவர் --- அன்போடு அழுபவர்களும்,

 

     அயர்பவர் --- அழுது சோர்ந்து போனவர்களும்,

 

     முயல்பவர் --- ஈமச் சடங்குகளில் முயல்பவர்களும்,

 

     குதறும் முது பிணம் எடும் என --- குலைந்து அழுகிப் போகும் (நிலை வரும் முன்) பிணத்தை எடுங்கள் என்று கூற

 

     ஒரு பறை குணலை இட --- ஒப்பற்ற பறைகள் முழங்க,

 

     அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான் --- உடலை எரித்து அழிக்கின்ற சுடுகாட்டிற்குச் செல்லுதல் நன்மையாகுமா? (ஆகாது).

 

பொழிப்புரை

 

     மலைகளில் தனக்கு நிகர் இல்லாததான ஒப்பற்ற திருக்கயிலாய மலையினை, தனது உடல் வருந்தித் துன்பம் உற முழு வல்லமையையும் காட்டி எடுக்க முற்பட்ட பலம் பொருந்திய இராவணன் போரில் எதிர்த்து வரவும் அவனது மிகப் பெரிய முடிகள் பத்தும், இருபது கைகளும் இற்று விழ,ஒப்பற்ற அம்பினைச் செலுத்திய இராமபிரான். கஜேந்திரம் என்னும் யானையானது, மடுவில் இருந்து முதலையின் வாயில் பட்டு, முறையிட்டு அழைத்தபோது, வந்து உதவி புரிந்த கருணைமேகமானவன். தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் ஆகிய பூதனையின் உயிரை முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன். தனது இரண்டு திருவடிகளால், ஏழுலகங்கள் முழுமையும் அளக்க ஓங்கி வளர்ந்தவன் ஆகிய திருமாலின் அழகிய திருமருகரே!

 

            அரக்கர்களுடைய உடல்கள் துன்புறவும், அலைகளை வீசும் கடலானது மிகக் கலங்கவும், வடக்கில் உள்ள மேருமலையை ஒத்த கிரவுஞ்ச மலையானது முழுதும் இடிந்து பொடிபடவும், வேலாயுதத்தை விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

 

            விளங்குகின்ற இரு காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல்மீன் போன்ற கண்களாலும், இசை போல அசைந்து அழகாக எழுகின்ற பேச்சினாலும், நறுமணம் பொருந்திய கருத்த கூந்தலினாலும், மெல்லிய இடுப்பிலும்அன்னத்தை ஒத்த நடையிலும்,காம இன்பத்தைத் தரும் வாயிதழிலும், சிரிப்பிலும், கஸ்தூரி அணிந்தமலை போன்ற முதிராத மார்பகங்களின் அழகிலும் உண்டாகும் மோகத்தால், துணிந்து ஈடுபட்டு விலைமாதரைப் பணிந்து இருப்பது சிறிதும் குறையாமல் அவரோடு நெருங்கி உறவாடி, அவர்கள் புரியும்  தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத துன்பத்துக்கு ஆளாகிய என்னிடம் சிறிது சிறிதாக நடமாடுகின்ற பிணிகள் வந்து சேர,வாழ்நாள் இறுதியில் இயமன் வந்து எனது உயிரைக் கொண்டு போகின்ற அந்த நாளில், அன்போடு அழுபவர்களும், அழுது சோர்ந்து போனவர்களும், ஈமச் சடங்குகளில் முயல்பவர்களும், குலைந்து அழுகிப் போகும் நிலை வரும் முன் பிணத்தை எடுங்கள் என்று கூற ஒப்பற்ற பறைகள் முழங்க,உடலை எரித்து அழிக்கின்ற சுடுகாட்டிற்குச் செல்லுதல் நன்மையாகுமா? (ஆகாது).

 

 

விரிவுரை

 

இலகி இரு குழை கிழி கயல் விழியினும்--- 

 

பெண்களின் கண்கள் இங்கும் அங்குமாகச் சுழல்கின்ற இயல்பை உடையன என்பதால், இங்கும் அங்குமாகச் சுழன்றுகொண்டே இருக்கின்ற கயல்மீனை அவற்றிற்கு ஒப்பாகக் கூறுவர்.  கயல்மீன் போன்ற கண்கள் காதளவும் நீண்டு இருப்பதால், அவை காதில் அணிந்துள்ள குழைகளைத் தாக்குவது போல விளங்குகின்றன.

 

இசையின் அசை தரு மொழியினும்--- 

 

இசையைப் போல ஏற்றத் தாழ்வுகளோடு பெண்களின் பேச்சு உள்ளது.

அது ஆடவரை மயக்குவது.

 

மரு அமர் இருள் செய் குழலினும்--- 

 

மரு அமர் -- நறுமணம் பொருந்திய.

 

இருள் செய் குழல் --- கருமையான கூந்தல்.

 

இளைய ம்ருகமத தன குவடு அழகினும்--- 

 

இளைய --- முதிராத,தளராத.

 

மிருகமதம் --- கஸ்தூரி.  அல்லது மஞ்சள் என்றும் கொள்ளலாம்.

 

பணிவது தணியாதே குலவி --- 

 

விலைமாதர் தரும் கலவி இன்பத்தில் ஈடுபட்ட மனமானது, அதில் இருந்து விடுபட முடியாமல், அவர்கள் இட்ட பணிவிடைகளைச் செய்து, அவரோடு உறவாடிக் கொண்டு இருக்கவே விரும்பும்.

            

 

விரகு எனு அளறு இடை முழுகிய கொடிய நடலையன் --- 

 

விரகு --- தந்திரம். உபாயம்.

 

சேற்றில் அகப்பட்டவர்கள் மீளமுடியாது.  விலைமாதர்கள் புரியும் தந்திரச் செயல்களில் அகப்பட்டவர்கள் அதில் இருந்து மீளமுடியாது.  

 

நடம் இட வரு பிணி குறுகியிட--- 

 

இப்படி மோகபோகத்தில் உழன்று கொண்டு இருப்பவர்க்கு நாளடைவில் நெய்கள் எல்லாம் வந்து பொருந்தி அவர்களது உடம்பில் நடம் இடும். "மாதர் தரு பூஷணங்கள்" என்பார் அருணை வள்ளலார்.

 

வாதமொடு,சூலைகண்டமாலை,குலை நோவுசந்து

     மாவலி,வியாதிகுன்ம ...... மொடுகாசம்,

வாயு உடனே பரந்த தாமரைகள்பீனசம்பின்

     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

 

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,

     பாயலை விடாது மங்க, ...... இவையால்நின்

பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,

     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

 

எனவரும் திருப்புகழைக் காண்க.

 

பாடுபட்டு, அரிதில் தேடிய பொருளை அறவழியில் செலவழிக்காமல்பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்துஅவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய ஆபரணங்களைப் பூட்டி அனுப்புவர்.

 

வாதம் --- இது பல வகையானது. அண்டவாதம்பட்சவாதம்முடக்குவாதம் முதலியவைகளும்பெரியவர்கள் பேச்சைக் கேளாமல் பிடிவாதம் முதலியவைகளும் அடங்கும்.

 

சூலை--- வயிற்றுநோய் முதலியவை.

 

கண்டமாலை --- கழுத்தில் வரும் ஒருவித கட்டி. இது ஒன்று குணமாகும்பின் மற்றொன்று வரும். இப்படி குணமாகியும் வந்துகொண்டும் இருக்கும். கழுத்தையும் திருப்ப முடியாமல் இருக்கும்.

 

குலை நோவு ---குடலில் எரிச்சல் உண்டாகும் ஒரு விதநோய்.

 

சந்து மாவலி வியாதி ---அடிவயிறும் தொடையும் சந்திக்கும் இடங்களில் இரு பக்கத்திலும் அல்லது ஒரு பக்கத்தில் வரும் கட்டி. இது பெரிய துன்பத்தைத் தரும். நடக்க முடியாது. இதனை அறையாப்புக் கட்டி என்று சிலர் சொல்வார்கள். Bubo என்று ஆங்கிலத்தில் பெயர்.

 

பரந்த தாமரை ---உடம்பில் வயிறு முதுகு கைகள் முதலிய இடங்களில்பவுன் அகலத்திற்குப் பல பலஒன்றுடன் ஒன்று இணைந்து வருவது. படர்தாமரை யென்றும் சொல்வார்கள்.

 

அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து

            பிணி உழன்று சுற்றித் திரிந்தது

    அமையும், உன் க்ருபைச் சித்தமென்று பெறுவேனோ

                                                                      --- (கருவடைந்து) திருப்புகழ்

 

எமன் இறுதியில் உயிரது கொடு போ(ம்) நாள்... இனிதோ தான்--- 

 

வாழ்நாள் இறுதியில் இயமன் வந்து உடம்பில் இருந்து உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு போவான்.  அப்போது, பெற்றார்கள் சுற்றி அழுவார்கள். உற்றார்கள் மெத்த அழுவார்கள். அழுது ஓய்ந்து போய், "காலம் ஆகி விட்டது. பிணம் அழுகும் முன்பாக எடுங்கள்" என்று சொல்வார்கள். முடிவில் சூரையங்காட்டிடைக் கொண்டு போய், சுட்டிட்டு, நீரினில் மூழ்கி, நினைப்பு வழிவார்கள். அந்த நிலை வருவது தகாது, இனியது அல்ல என்கின்றார் அருணை வள்ளலார்.

 

மலையில் நிகர் இலது ஒரு மலை தனை உடல் மறுகி அலமர --- அற உரம் முடுகிய வலிய பெலம் மிக உடையவன்அடையவும், அதிகாய மவுலி ஒருபதும்இருபது கரமுடன் மடியஒரு சரம் விடுபவன்--- 

 

மலைகளில் ஒப்பற்று விளங்குவது சிவபரம்பொருள் வீற்றிருக்கும் திருக்கயிலாய மலை ஆகும்.

 

தசக்ரீவன் என்ற அரக்கன் புஷ்பக விமானத்தில் ஏறி வடதிசை நோக்கிச் சென்றான். திருக்கயிலாய மலைக்கு நேரே விமானம் தடைபட்டு நின்றது. தசக்ரீவன் விமானத்தைப் பலமுறை செலுத்தினான். திருக்கயிலாய மலை சற்றும் அசையவில்லை.

 

கயிலைமலைக் காவல் பூண்டுள்ள திரு நந்திதேவர், “அடே தசக்ரீவா! இது கண்ணுதற்பெருமான் எழுந்தருளியுள்ள திருக் கயிலாயமலை. இதனை நவகோள்களும் வலம் வருகின்றன. இதற்குமேல் செல்வது பாவம். ஆகவே நீ வலமாகப் போ” என்று கூறினார்.

 

இளமைச் செருக்குடைய அந்த அரக்கன், “குரங்கு போல் முகமுடைய மாடே! நீ எனக்குப் புத்தி புகல்கின்றனையாஉன்னையும் இம்மலையையும் பேர்த்து எறிவேன்” என்று கூறினான்.

 

திருநந்திதேவர், “மூடனே!  உனக்கு அறிவுரை கூறினால் என்னைக் குரங்கு முகம் என்று இகழ்கின்றனை.  குரங்கினால் உன் நாடும் நகரமும் அழியக் கடவது” என்று சாபம் இட்டனர்.

 

இதை வீடணன் இராவணனிடம் கூறும் பாடலாலும் அறிக.

 

மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள்

நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,

கூலவான் குரங்கினால் குறுகும் கோளது

வாலிபால் கண்டனம் வரம்பில் ஆற்றலாய்.

 

இதனைக் கேட்ட தசக்ரீவன் வெகுண்டுவிமானத்தைவிட்டு இறங்கிதிருக் கைலாய மலையைப் பேர்த்துத் தோள் மிசை வைத்துக் குலுக்கினான்.

 

அது சமயம் மலைக்குமேல் அமர்ந்துள்ள சுவாமியை அம்பிகைசுவாமி! அகில உலகங்களும் சக்தியால் தானே நடைபெறுகின்றது?” என்று கேட்டார்கள். சுவாமி, “ஆம்” என்றார். அம்பிகை, “எம்பெருமானே! எல்லாம் சிவமயம் என்று வேதம் புகல்கின்றதேநீர் இப்படி என்னை உயர்த்திக் கூறுகின்றீர்” என்று சிறிது பிணங்கினார்கள். பெண்கள் கணவனுடன் பிணங்குவதற்கு ஊடல் என்று பேர்.

 

இவ்வாறு உமாதேவியார் ஊடல் கொண்டிருக்கும் அதே சமயம் மலை குலுங்கியது. ஊடலால் சற்று விலகியிருந்த தேவியானவர், மலை குலுங்குவதால் மனம் கலங்கி இறைவனைத் தழுவிக்கொண்டார். இராவணன் மலையெடுத்த செயல் இறைவனுக்கு உமையவள் ஊடல் தீர்த்து நன்மை செய்தது.

 

தேவி! அஞ்சாதே” என்று கூறி இறைவர் ஊன்றிய திருவடியின் பெருவிரலின் நக நுனியை ஊன்றிச் சிறிது அழுத்தினார். இடுக்கில் அகப்பட்டு உடம்பு நெரிந்துதோள் முறிந்து, “ஓ” என்று கதறினான். ஆயிரம் ஆண்டுகள் கதறியழுதான். அதனால் இராவணன் என்ற பெயர் உண்டாயிற்று. இராவணன் என்ற சொல்லுக்கு ரோதனம் புரிந்தவன் என்று பொருள்.

 

பின்னர் இராவணன், இறைவனை இன்னிசையால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து வாளும் வாழ்நாளும் வழங்கி அனுப்பினார்.

 

வள்ளல் இருந்த மலை அதனை வலம்

            செய்தல் வாய்மை என

உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்துஅன்று

            எடுத்தோன் உரம் நெரிய,

மெள்ள விரல் வைத்து,என் உள்ளம் கொண்டார்

            மேவும் இடம்போலும்,

துள்ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த

            தோணி புரந்தானே.               --- திருஞானசம்பந்தர்.

 

முந்திமா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே

உந்திமா மலரடி ஒருவிரல் உகிர் நுதியால் அடர்த்தார்,

கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத் திவலை

சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலிஉறை செல்வர் தாமே.     ---  திருஞானசம்பந்தர்.

 

தூசுஉடைய அகல்அல்குல் தூமொழியாள் ஊடல்

     தொலையாத காலத்து,ஓர் சொற்பாடாய் வந்து

தேசுஉடைய இலங்கையர்கோன் வரைஎடுக்க அடர்த்து,

     திப்பிய கீதம் பாட, தேரோடுவாள் கொடுத்தீர்.

நேசமுடைய அடியவர்கள் வருந்தாமை அருந்த

     நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசுஅருளிச் செய்தீர்,இன்று எனக்குஅருள வேண்டும்,

     கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.    --- சுந்தரர்

 

மதகரி மடுவில் முறை இட உதவிய க்ருபைமுகில் --- 

 

திருமால்கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

 

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும்பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும்பெரிய ஒளியோடு கூடியதாயும்திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம்மந்தாரம்சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும்இந்திரர் முதலிய இமையவரும்வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக் கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில்வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானதுஅநேக பெண் யானைகளாலே சூழப்பட்டுதாகத்தால் மெலிந்துஅந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து, தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல்லாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்திபக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலைபாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,உடனே கருடாழ்வான் மீது தோன்றிசக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்துகஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். 

 

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

 

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம்நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை, ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய் என்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோதுஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத் தானே அழைத்தான்நான் ஏன் போகவேண்டும் என்று அப்பணியாளன் வாளா இருந்தால்,தலைவனால் தண்டிக்கப் படுவான் அல்லவாஆதலால்சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

 

மதியாதே அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய  அதுலன் ---

 

அதுலன் --- ஒப்பில்லாதவன். இங்கே திருமாலைக் குறிக்கும்.

 

கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டுஎங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்றுமாயையாகிய குழவி சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை யாண்டு உளது என்று அறியானாய்உலகில் உள்ள குழவிகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டுகண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டுகண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.

 

கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்

வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்

புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்

கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.

 

குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி

வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,

மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்

உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.

 

யசோதையின் திருமாளிகையின் முன்இளமேகம் போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு அவள் மனம் கரையவில்லை. இருகரங்களால் எடுத்தாள். மடியில் இருத்திநஞ்சுடன் கூடிய தனது முலையை மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருஷ்ணர் அவளுடைய பால்உணர்வுஉயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர். மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும்அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.

 

இரு பதம் அது தனில் எழு புவி அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே--- 

 

வாமனாவதாரத்தில், திருமால் தனது இரண்டு திருவடிகளால், ஏழுலகங்கள் முழுமையும் அளக்க ஓங்கி வளர்ந்ததைப் புகழ்கின்றார் அடிகளார்.

 

திருமால் உலகளந்த வரலாறு

 

இரணியனுடைய புதல்வர் பிரகலாதர்.  பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய மைந்தன் பலி. இந்த பலி இந்திரனால் எல்லா நலன்களையும் இழந்துபிருகுவமிசத்தில் வந்த மகரிஷிகளை அடுத்துஅவர்களுக்குச் சீடனாக இருந்தான். அம்முனிவர்கள் அப்பலியின் நன்மையைக் குறித்துவிசுவசித்து என்ற ஒரு யாகத்தைச் செய்தார்கள். கதிரவனுடைய குதிரைகட்கு நிகரான குதிரைகள் பூட்டிய பொற்றேரும்சிங்கக்கொடியும்பெரிய வில்லும்குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும்உறுதியான கவசமும் அந்த யாகத்தில் உண்டாயின. இவற்றைப் பலிக்கு முனிவர்கள் வழங்கினர். பிதாமகரான பிரகலாதர் வாடாத பத்மமாலையையும்சுக்கிரர் ஒரு சங்கத்தையும் அவனுக்குக் கொடுத்தனர்பலி பொற்றேரில் ஊர்ந்துசங்கத்தொனி செய்துஉலகங்களை எல்லாம் நடுங்கச் செய்தான். அசுர சேனைகள் சூழ இந்திரன் உலகில் சென்று முற்றுகையிட்டுசங்கத்தை ஊதினான். இந்திரன் பலியின் படை பலத்தையும் முனிவர்கள் தந்த வரங்களையும் உணர்ந்துபயந்து சுவர்க்கலோகத்தை விட்டு தேவர்களுடன் ஒளிந்து ஓடினான். பலியானவன் மூன்று உலகங்களையும் வசப்படுத்திக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். பிறகு நூறு அசுவமேத யாகங்களைச் செய்து பெரும் புகழ் படைத்து சகல சம்பத்துடன் விளங்கினான்.

 

தேவமாதாவாகிய அதிதி தேவிதன் மக்களாகிய தேவர்களுக்கு தைத்யர்களாலே உண்டான துன்பத்தை அறிந்துதன் கணவராகிய காசிபரைக் குறித்துத் தவமிருந்தாள். வெகுகாலத்திற்குப் பின் காசிபர் சமாதியினின்றும் வெளிப்பட்டு அதிதியின்பால் வரஅதிதி கணவனைக் கண்டு முறைப்படி பூசித்து “என் புதல்வர்க்கு வாழ்வு உண்டாகுமாறு அருள்புரிவீர்” என்று வேண்டினாள். காசிபர் “பெண் மணியே! வருந்தற்க. எனது பிதாவாகிய பிரமதேவர் எனக்கு உபதேசித்த இதனை அனுஷ்டிப்பாயாக. பால்குன மாதம் சுக்கில பட்சத்திலேபிரதமை முதல் பன்னிரண்டு நாள் மிகுந்த பயபக்தியுடன்பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனை வழிபாடு செய்வாய். இதற்குப் பயோவிரதம் என்று பேர். இவ்விரத பலத்தால் எண்ணிய நலனை நீ விரைவில் பெறுவாய்” என்று அப் பயோவிரதத்தை நோற்கும் முறைகளையும் துவாதசாக்ஷர மகா மந்திரத்தையும் உபதேசித்து அருள் புரிந்து காசிபர் நீங்கினார்.

 

அதிதிதேவி அந்த அரிய விரதத்தை அன்புடன் அனுஷ்டித்து அரவணைச் செல்வனை வழிபட்டனள். வாசுதேவர் சங்கு சக்கர கட்க கேடகத்துடன் அவள் முன் தோன்றியருளினார். அதிதி பெருமானைத் தெரிசித்துஅஞ்சலி செய்து துதித்துதன் குறைகளை விண்ணப்பித்து நின்றாள். பகவான் “அம்மா! அதிதிதேவியே! நின்னுடைய மைந்தர்களாகிய வானவர்கள் சுவர்க்கத்தை இழந்து,பலியினால் துன்புறுவதைக் கண்டு மிகவும் வருந்தி என்னை ஆராதித்தனை. தேவர்களுக்கு இப்போது நற்காலமில்லை. அவர்களுக்கு பராக்கிரமம் இப்போது உண்டாவது அரிது. ஆயினும்உனது விரதபலத்தால் உண்டாக்கி வைக்கிறேன். உனது பதியினிடத்தில் என்னுடைய இந்த உருவத்தைத் தியானித்து புத்திர பாக்கியத்தை அடைவாயாக. உனது துன்பத்தை நீக்கி தேவர்கட்கு இன்பத்தை தருவதற்காக நான் உனக்கு  மைந்தனாக வருவேன்” என்று சொல்லி மறைந்தருளினார். அதிதி மிகவும் மகிழ்ந்து பகவானைத் தியானித்துதமது பதியாகிய காசிபரை அடைந்தாள். அரியினுடைய அம்சம் தன்னிடம் வந்து சேர்ந்ததை சமாதியினால் அறிந்த காசிபர். அந்த அரியின் அம்சத்தை அதிதியிடம் தாபித்தார். காசிபரால் கர்ப்பதானம் செய்யப்பட்ட அதிதி கரு இருந்தாள். பகவான் நீல நிறத்தை உடையவராயும்இரு மகரகுண்டலங்களை உடையவராயும்ஸ்ரீவத்சம் என்னும் மருவை உடையவராயும்கௌஸ்துப மணியையும் மணிமகுட ஆரகேயூர இரத்தின அலங்க்ருதராயும் அதிதியினிடத்தில்சுக்கிலபட்ச சிரவண துவாதசியில் வாமனமூர்த்தியாகத் திருவவதாரம் புரிந்தார். தேவ துந்துபி முழங்கிற்று. விண்ணவர் தண்மலர் பொழிந்தனர். வாமன மூர்த்தியைக் கண்டு அதிதி தேவியும்காசிப முனிவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். அருந்தவ முனிவர்கள் சாதகருமம் முதலிய வைதிக கருமங்களைச் செய்துவைத்து உபநயனமும் செய்து வைத்தனர். வாமன மூர்த்திக்கு கதிரவன் காயத்திரியை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம சூத்திரத்தைக் கொடுத்தார். காசிபர் முஞ்சியைக் கொடுத்தார். பூமிதேவி கிருஷ்ணாசனத்தைக் கொடுத்தாள். சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான். பிரமன் கமண்டல பாத்திரத்தைக் கொடுத்தார். குபேரன் பாத்திரத்தைக் கொடுத்தான். உமாதேவியார் பிக்ஷையைக் கொடுத்து ஓமம் செய்தார்.

 

வாமனமூர்த்தி அதன் பிறகுபலிச்சக்கரவர்த்தி பிருகுவமிச முனிவர்களைக் கொண்டு செய்கின்ற அசுவமேத யாகசாலையில் புகுந்தார். அவருடைய திருமேனியின் ஒளியால் அக்கினியும் ஆதித்தனும் ஒளி மழுங்கினார்கள். யாகசாலையில் உள்ளோர் அவரைக் கண்டு வியப்புற்றார்கள். அவரைக் கண்டு யாகபதியாகிய பலிச் சக்கரவர்த்திஎழுந்து எதிர் சென்று அடிவணங்கிஆசனம் தந்து திருவடியைப் பூசித்துஅப் பாத நீரைத் தன் தலையிற் தெளித்துக் கொண்டு, “இன்றே அடியேன் புனிதனாயினேன். உங்கள் வரவு நல்வரவு. உமது பார்வையால் அடியேன் பரிசுத்தம் அடைந்தேன். உமது பாதோதகத்தால் என் பாவமெல்லாம் நசித்தன. என் பிதிரர்களும் மகிழ்வுற்றார்கள். யாசிக்க வந்தவராக உம்மைக் குறிப்பினால் உணர்கிறேன்.  வேண்டியதைக் கேளும்.உடனே தருகிறேன்” என்று கூறினான்.

 

பகவான், பலியின் அந்த இதமான வசனங்களைக் கேட்டு மகிழ்ந்து, “மூவுலகாதிபதியே! உனக்கு பிரகலாதரும் பிருகு வமிச முனிவரும் குருவாக இருக்கின்றார்கள். உமது வார்த்தை ஒரு பொழுதும் பொய்க்காது. யாசிக்கும் யாசகனுக்கு எந்த தாதா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் பின் இல்லையென்று அவமானம் பண்ணுகிறானோ,அவன் இந்தக் குலத்தில் இல்லை. பிரகலாதரின் பேரனாகிய நீ சொற்சோர்வு படாதவன். உனது பிதாவாகிய விரோசனன் வேதிய உருக்கொண்ட விண்ணவர்க்குத் தன் ஆயுளை எல்லாம் கொடுத்தான். அத்தகைய புகழ்பெற்ற குலத்தில் பிறந்த உன்னிடத்தில் என்னுடைய அடியினால் அளக்கப்பட்ட மூன்றடி பூமியை யாசிக்கிறேன். சக்கரவர்த்தியும் மகா தாதாவுமாகிய நீ இதனைக் கொடுப்பாயாக” என்றார். 

 

பலிச் சக்கரவர்த்தி புன்முறுவல் கொண்டு “ஐயா! நீர் சிறுபிள்ளையாய் இருப்பதால் சிறு பயனை விரும்புகிறீர். மூன்று த்வீபத்தையும் கொடுக்கும் தகுதியுடைய என்னைப் புகழ்மொழிகளால் பூசித்து மூன்றடியை யாசிக்கிறீர்.  வேண்டாம்.  நிரம்ப விசாலமான பூமியைக் கேளும்” என்றான். 

 

பகவான், “பலியே! ஆசைக்கு ஓர் அளவில்லை. மூன்றடியால் திருப்தி அடையாதவன் மூவுலகங்களாலும் திருப்தி அடையமாட்டான். நான்கேட்ட மூன்றடி இடத்தைக் கொடுத்தால் போதும்” என்றார். 

 

பலிச்சக்கரவர்த்தி “அப்படியே பெற்றுக் கொள்ளும்” என்று பூதானம் செய்ய நீர்ப் பாத்திரத்தைக் கொண்டு  வந்தான். 

 

அப்போது சுக்கிராச்சாரியார் தனது சீடனாகிய பலியை நோக்கி, “அன்பனே! இங்கு வாமனனாய் வந்திருப்பவன் ஸ்ரீமன் நாராயணனே ஆவான். இவன் அதிதி மைந்தனாய் தேவர்கட்கு அநுகூலம் புரிய வந்திருக்கிறான். இவன் வஞ்சனைக்கு மயங்கி விடாதே! வஞ்சனையாய் யாசிப்பவர்கட்குக் கொடுக்கப்படாது. இந்த தானத்தால் நீ அழிவது திண்ணம். உன்னைச் சார்ந்தவர்களும் அழிவார்கள். ஆபத்தில் பொய் சொல்லலாம். ஆதலால், நீ அவசரப்பட்டு இவர் கேட்டதைக் கொடுத்து துன்பத்திற்கு ஆளாகாதே” என்று தடுத்தனர். 

 

     பலிச்சக்கரவர்த்தி “குருநாதா! பிரகலாத பேரனாகிய நான் ஒருபோதும் அசத்தியனாக மாட்டேன். உயிர் நீங்கினும், கொடுக்கிறேன் என்றதைக் கொடுக்காமல் ஒளிக்க மாட்டேன். பூமிதேவி ‘பொய்யனைத் தவிர மற்றவர்களைச் சிரமமின்றி தாங்குகிறேன்’ என்று சொன்னாளல்லவாநரகமே எனக்கு வரினும்"இல்லை" என்று சொல்ல இசையேன். தருமமே சிறந்த துணைவன். ஈந்துவக்கும் இன்பமே பெரிய இன்பம். ஈதலும் இசையுடன் வாழ்தலும் உயிர்க்குச் சிறந்த ஊதியங்களாகும். ஆதலால் இவ் வாமனருக்கு இவனைத் தந்து பொன்றாப் புகழைப் பெறுவேன்” என்றான். 

 

சுக்கிராச்சாரியார் “விதியினால் ஏவப்பட்ட மூடனே! என் ஆணையை அவமதித்து நீ விரைவில் எல்லா ஐசுவரியங்களை இழப்பாயாக” என்று சபித்தார். 

 

பலி அதனால் சற்றும் சலிப்புறாதுவாமனமூர்த்தியை முறைப்படி பூசித்து தண்ணீர்த் தாரைவிட்டு “மூன்றடியைக் கொடுத்தேன்” என்றான். அப்போது பலியின் மனைவியாகிய விந்தியாவலி என்பவள்சுவர்ண கும்பத்தில் நீர் கொண்டு வந்து வாமனர் பாதத்தை அலம்பினாள். அந்த பாதத் தீர்த்தத்தை பலி தலையில் தெளித்துக் கொண்டு புனிதனானான். தேவர்களும் துந்துபிகளை முழக்கி மலர் மாரி பொழிந்தார்கள்.

 

அப்போது வாமன மூர்த்தியின் திருவுரு வளர்ந்து விசுவரூபங் கொண்டது. வாயுமண்டல சூரியமண்டல சந்திரமண்டல வன்னி மண்டலங்களை யெல்லாங் கடந்தன. எல்லாத் தேவர்களையும்ஏழுகடல்களையும் எண்டிசைப் பாலகர்களையும்எல்லா நதிகளையும் பிறவற்றையும்அந்த அரியின் திருவுருவில் பலிச் சக்கரவர்த்தி கண்டான். 

 

திரிவிக்கிரமனான திருமால் பூ மண்டல முழுவதையும் ஓரடியாலும்சுவர்க்கலோகத்தை ஓரடியாலும் அளந்தார். மூன்றாவது அடிக்கு அணுவளவும் இடமில்லாமல் போயிற்று. பகவான், ‘பலியே! உன் சொல்லை நிறைவேற்றுவாயாக. அசத்தியன் நரகிற் சொல்லுவான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்கபலி “தேவசிரேட்டரே! என்னுடைய சொல் பொய்க்காவண்ணம் உமது திருவடியை அடியேனது சென்னியில் வைத்தருள்வீர். நரகத்தை அனுபவிப்பதாயினும் சொன்னதை மாத்திரம் தவற மாட்டேன்” என்றான். 

 

அப்போது பிரகலாதர் தோன்றி பெருமானை வணங்கி, “பலி உம்மால் காப்பாற்றத் தக்கவன்” என்றார். பலியின் மனைவியாகிய விந்தியாவலி, “எம்மை என்றும் காக்கவல்லவர் நீரே.உலக பரிபாலன மூர்த்தியாகிய நீர் உமது இயற்கையான கருணையால் எம்மைக் காத்தருள்வீர்” என்றாள். 

 

பிரமதேவர் “எம்பெருமானே! சர்வ சொத்தையும் உமக்கு சமர்ப்பித்த இந்தப் பலியை விட்டுவிடும். இவன் காக்கத் தக்கவன். அறுகம் புல்லையும் சிறிது நீரையும் கொண்டு பூசித்தவன் உத்தமமான கதியை அடைகின்றான். இந்தப் பலியோ உமக்கு மூன்று உலகங்களையும் கொடுத்தவன். இவனை ஆண்டருள்வீர்” என்றார்.

 

பகவான் “அன்புடைய பலியே! நீ சுதல லோகத்தில் சுகமே இருப்பாயாக.உனது வாசலில் நான் எப்போதும் இருந்து உன்னைக் காப்பாற்றுவேன். உனக்கு நன்மை உண்டாகக் கடவது! இனி வரப்போகிற காவர்ணி மனுவந்திரத்தில் நீ இந்திரனாகப் போகிறாய். நீ எப்போதும் என்னைத் தெரிசித்துக் கொண்டு இருப்பாயாக” என்று அருள் புரிந்தார். பலியை சுதல உலகத்தில் இருத்திபகவான் அமரர்கட்கு அமராவதியைக் கொடுத்துஅதிதியை மகிழ்வித்து இந்திரனுக்குத் தம்பி என்னும் முறையில் உபேந்திரனாகி விளங்கினார்.

 

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு

    துலக்க அரிதிரு                  முருகோனே.  --- (முடித்த) திருப்புகழ்

 

வடிவு குறளாகி மாபலியை

வலிய சிறையிட வெளியின் முகடு கிழிபடமுடிய

 வளருமுகில்”                                  --- சீர்பாத வகுப்பு. 

 

                         .....“படி மாவலிபால்

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்

சேவடி நீட்டும் பெருமான்”             --- கந்தர்அலங்காரம்.



அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட, வட குவடு அன்ன கிரி அடைய இடி பொடிபட அயில் விட வ(ல்)ல பெருமாளே--- 

 

எந்தை கந்தவேள் விடுத்து அருளிய ஞானசத்தியாகிய வேலாயுதம், அஞ்ஞானத்தை வெல்வது. அஞ்ஞானம் பூண்டு இருந்த அரக்கர்களை அழித்தது. கடலில் மரமாய் எழுந்து நின்ற சூரனை அழித்தக் கடல் வற்றிப் போகும்படி செய்தது. மாயமே வடிவமாகி நின்ற கிரவுஞ்ச மலையைப் பொடியாக்கியது.

 

அண்டர் உலகும் சுழலஎண் திசைகளும் சுழல,
அங்கியும் உடன் சுழலவே,
அலை கடல்களும் சுழலஅவுணர் உயிரும் சுழல,
அகில தலமும் சுழலவே,
மண்டலம் நிறைந் தரவி சதகோடி மதி உதிர
மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் அருளச் சிரம
வகை வகையினில் சுழலும் வேல்.     --- வேல் விருத்தம்.

 

கருத்துரை

 


     முருகா! எனது ஆவி ஈடேற அருள்வாய்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...