பொது --- 1014. முருகு செறிகுழல்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முருகு செறிகுழல் (பொது)

 

முருகா! 

எந்த நிலையிலும் எனது உயிருக்குத் துணையாக உள்ள 

உமது திருவடிகளை மறவேன்.

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

முருகு செறிகுழ லவிழ்தர முகமதி

     முடிய வெயர்வர முதுதிரை யமுதன

     மொழிகள் பதறிட வளைகல கலவென ......அணைபோக

 

முலையின் மிசையிடு வடமுடி யறஇடை

     முறியு மெனஇரு பரிபுர மலறிட

     முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின்

 

றுருகி யுளமுட லுடலொடு செருகிட

     வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்

     துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக

 

உததி யதனிடை விழுகினு மெழுகினும்

     உழலு கினுமுன தடியிணை எனதுயி

     ருதவி யெனவுனை நினைவது மொழிவது ......மறவேனே

 

எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி

     திடமு மிலையென வுலவிட அலகையின்

     இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ......லிசைபாட

 

இகலி முதுகள மினமிசை யொடுதனி

     யிரண பயிரவி பதயுக மிகுநட

     மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும்

 

வரிசை யதனுடன் வளைதர வொருபது

     மகுட மிருபது புயமுடன் மடிபட

     வலியி னொருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன்

 

மருக குருபர சரவண மதில்வரு

     மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்

     மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

முருகு செறிகுழல் அவிழ்தர,முகமதி

     முடிய வெயர் வர,முது திரை அமுது அன

     மொழிகள் பதறிட,வளைகல கல என,......அணைபோக

 

முலையின் மிசையிடு வடமுடி அறஇடை

     முறியும் என இரு பரிபுரம் அலறிட,

     முகுள அலர் இள நிலவு எழ இலவ இதழ் ......பருகாநின்று,

 

உருகி,உளம் உடல் உடலொடு செருகிட,

    உயிரும் எனது உயிர் எனமிக உறவுசெய்து,

    உதவு மடமகளிர்களொடும் அமளியில்,...... அநுராக

 

உததி அதன் இடை விழுகினும் எழுகினும்,

     உழலுகினும் உனது அடிஇணை எனது உயிர்

     உதவி என உனை நினைவதும் மொழிவதும் ...... மறவேனே.

 

எருவை யொடுகொடி கெருடனும் வெளி சிறிது

     இடமும் இலை என உலவிட,அலகையின்

     இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் ......இசைபாட,

 

இகலி முதுகளம் இனம் இசை யொடு தனி,

     இரண பயிரவி பத யுக மிகு நடம்,

      இடவும்,மிக எதிர் எதிர் எதிர் ஒருதனு ......இருகாலும்,

 

வரிசை அதனுடன் வளை தர,ஒருபது

     மகுடம்ருபது புயமுடன் மடிபட,

     வலியின் ஒருகணை விடு கர முதல் அரி ...... நெடுமாயன்

 

மருக! குருபர! சரவணம் அதில்வரு

     மகிப! சுரபதி பதி பெற,அவுணர்கள்

     மடிய,இயல்கொளும் மயில்மிசை வரவல ...... பெருமாளே.

 

பதவுரை

 

 

      எருவையோடு--- கழுகுகளோடு,

 

     கொடி--- காக்கைகளும்,

 

     கெருடனும்--- கருடன்களும்,

 

     வெளி சிறிது இடமும் இ(ல்)லை என உலவிட--- வானவெளியில் வெற்றிடம் சிறிதும் இல்லை என்னும்படியாக உலவி இருக்கவும்,

 

     அலகையின் இனமும் நிணம் உ(ண்)ண--- பேய் இனங்கள் போர்க்களத்தில் விழுந்து கிடக்கின்ற பிணங்களைத் தின்ன,

 

     எழு குறள்களும் இயல் இசை பாட--- வந்துள்ள பூதங்களும்  கூச்சல் இடவும், மகிழ்ச்சியால் இசையோடு பாடவும்,

 

     இகலி முதுகளம் இனம் இசையொடு --- எதிர்த்துப் போரிடுகின்ற போர்க்களத்தில், இனமன கணங்கள் இசையோடு பாடவும்,

 

     தனி இரண பயிரவி பதயுக(ம்) மிகு நடம் இடவும்--- ஒப்பற்ற இரணபயிரவியின் இரண்டு பாதங்களும் பெரு நடனம் புரியவும்,

 

     மிக எதிர் எதிர் எதிர் ஒரு தனு இரு காலும்--- இராவணனுக்கு நேர் நின்று, மிகவும் எதிர் எதிராக உள்ள வில்லின் இருமுனைகளையும்,

 

      வரிசை அதனுடன் வளை தர--- அழகாக. நாணைப் பூட்டி வளைத்து,

 

     ஒரு ப(த்)து மகுடம் இருபது புயமுடன் மடி பட--- (இராவணனது) பத்து மகுடங்களும், இருபது தோள்களும் மடிந்து விழுமாறு,

 

     வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி--- வலிமையோடு ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருக்கரத்தை உடைய முதல்வன் ஆகிய அரி என்று சொல்லப்படுபவரும்,

 

     நெடு மாயன் மருக--- (வாமனாவதாரத்தில்) நீண்ட வடிவெடுத்த மாயவன் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

     குருபர --- குருநாதரே!

 

     சரவணம் அதில் வரு மகிப--- சரவணப் பொய்கையில் தோன்றிய பெருமைக்கு உரியவரே!

 

      சுரபதி பதி பெற--- தேவர்கள் தலைவனாகிய இந்திரன் தனது பதியை மீளப் பெறவும்,

 

     அவுணர்கள் மடிய--- அவணர்கள் மடியவும்,

 

     இயல் கொ(ள்)ளும் மயில் மிசை வர வல பெருமாளே--- தகுதி வாய்ந்த மயிலின் மீது வந்து அருள வல்ல பெருமையில் மிக்கவரே!

 

      முருகு செறி குழல் அவிழ் தர--- நறுமணம் பொருந்திய கூந்தல் அவிழவும்,

 

     முகம் மதி முடிய வெயர்வர--- திங்களை ஒத்த முகத்தில் வியர்வைத் துளிர்க்கவும்,

 

     முது திரை அமுது அன மொழிகள் பதறிட--- பழமையான,அலைகளை உடைய பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற மொழிகள் குழறவும்,

 

     வளை கலகல என---  (கைகளில் உள்ள) வளையல்கள் கலகல என ஒலிக்கவும்,

 

      அணை போக முலையின் மிசை இடு வட(ம்) முடி அற--- போகத்துக்காக அணைத்துக் கொள்ளுகின்ற முலைகளின் மீது அணிந்துள்ள மாலைகள் முடிச்சு அற்று விழவும்,

 

     இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட--- இடையானது முறிந்துபோகும் என்று காலில் அணிந்துள்ள இரண்டு சிலம்புகளும் புலம்பவும்,

 

      முகுள அலர் இள நிலவு எழ--- அரும்புகளைப் போன்று வாயில் உள்ள பற்கள் நிலவைப் போன்று குளிர்ந்த ஒளியை வீச.

 

     இலவு இதழ் பருகா நின்று உருகி உ(ள்)ளம்--- இலவம் பூவைப் போன்ற சிவந்த வாயிதழின் ஊறலை உண்டு உள்ளம் உருகி,

 

     உடல் உடலொடு செருகிட--- உடலோடு உடல் நெருங்கிப் பொருந்த,

 

     உயிரும் எனது உயிர் என---அவர் உயிரும் எனது உயிர்தான் என்னும்படி,

 

     மிக உறவு செய்து உதவு(ம்)--- மிகவும் உறவு கொண்டு இன்பத்தை உதவுகின்ற,

 

      மட மகளிர்களொடும் --- இளம் பெண்களுடன்,

 

     அமளியில் அநுராக உததி அதன் இடை விழுகினும்--- படுக்கையில் காமக் கலவிக் கடலில் விழுந்து கிடந்தாலும்,

 

     எழுகினும்--- மூழ்கி எழுந்தாலும்,

 

     உழலுகினும் --- அதிலேயே உழன்று கிடந்தாலும்,

            

     உனது அடி இணை எனது உயிர் உதவி என--- தேவரீரது திருவடிகளே எனது உயிருக்கு உதவி என,

 

     உனை நினைவது(ம்) மொழிவது(ம்) மறவேனே --- உம்மை நினைவதைம், வாயாரப் போற்றுவதையும் மறக்கமாட்டேன்.

 

பொழிப்புரை

 

     கழுகுகளோடு, காக்கைகளும், கருடன்களும், வானவெளியில் வெற்றிடம் சிறிதும் இல்லை என்னும்படியாக நெருங்கி உலவி இருக்கவும், பேய் இனங்கள் போர்க்களத்தில் விழுந்து கிடக்கின்ற பிணங்களைத் தின்னவும்வந்துள்ள பூதங்களும்  கூச்சல் இடவும், மகிழ்ச்சியால் இசையோடு பாடவும், எதிர்த்துப் போரிடுகின்ற போர்க்களத்தில், இனமான கணங்கள் இசையோடு பாடவும், ஒப்பற்ற இரணபயிரவியின் இரண்டு பாதங்களும் பெரு நடனம் புரியவும்,

இராவணனுக்கு நேர் நின்று, மிகவும் எதிர் எதிராக உள்ள வில்லின் இருமுனைகளையும், அழகாக. நாணைப் பூட்டி வளைத்து, இராவணனது பத்துத் தலைகளும், இருபது தோள்களும் மடிந்து விழுமாறு, வலிமையோடு ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருக்கரத்தை உடைய முதல்வன் ஆகிய இராமச்சந்திரமூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அரியும், வாமனாவதாரத்தில நீண்ட வடிவெடுத்த மாயவனும் ஆகிய திருமாலின் திருமருகரே!

 

     குருநாதரே!

 

     சரவணப் பொய்கையில் தோன்றிய பெருமைக்கு உரியவரே!

 

     தேவர்கள் தலைவனாகிய இந்திரன் தனது பதியை மீளப் பெறவும், அவணர்கள் மடியவும், தகுதி வாய்ந்த மயிலின் மீது வந்து அருள வல்ல பெருமையில் மிக்கவரே!

 

     நறுமணம் பொருந்திய கூந்தல் அவிழவும், திங்களை ஒத்த முகத்தில் வியர்வைத் துளிர்க்கவும், பழமையான,அலைகளை உடைய பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்ற மொழிகள் குழறவும், கைகளில் உள்ள வளையல்கள் கலகல என ஒலிக்கவும்போகத்துக்காக அணைத்துக் கொள்ளுகின்ற முலைகளின் மீது அணிந்துள்ள மாலைகள் முடிச்சு அற்று விழவும், இடையானது முறிந்துபோகும் என்று காலில் அணிந்துள்ள இரண்டு சிலம்புகளும் புலம்பவும், அரும்புகளைப் போன்று வாயில் உள்ள பற்கள் நிலவைப் போன்று குளிர்ந்த ஒளியை வீச. இலவம் பூவைப் போன்ற சிவந்த வாயிதழின் ஊறலை உண்டு உள்ளம் உருகி, உடலோடு உடல் நெருங்கிப் பொருந்த,அவர் உயிரும் எனது உயிர்தான் என்னும்படி, மிகவும் உறவு கொண்டு இன்பத்தை உதவுகின்றஇளம் பெண்களுடன், படுக்கையில் காமக் கலவிக் கடலில் விழுந்து கிடந்தாலும், மூழ்கி எழுந்தாலும், அதிலேயே உழன்று கிடந்தாலும், தேவரீரது திருவடிகளே எனது உயிருக்கு உதவி எனஉம்மை நினைவதையும், வாயாரப் போற்றுவதையும் மறக்கமாட்டேன்.

 

விரிவுரை

 

முருகு செறி குழல் அவிழ் தர--- 

 

முருகு --- நறுமணம்,

 

செறிதல் --- நிறைதல்.

 

முகமதி முடிய வெயர்வர--- 

 

முகமதி --- திங்களை ஒத்த முகம்.

 

முது திரை அமுது அன மொழிகள் பதறிட--- 

 

பாற்கடல் மிகப் பழமையானது.

 

அதில் இருந்து தோன்றிய அமுதம் போன்று பெண்களின் இனிய சொற்கள் அமைந்துள்ளன. காமக் கலவியில் அந்த அமுதம் பன்ற சொற்கள் குழறுகின்றன.

 

இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட--- 

 

பெண்களின் சிறுத்த இடையானது, மேல் உள்ள பருத்த முலைகளின் பாரம் தாங்காமல் முறிந்து போவன போல் உள்ளதை எண்ணி, கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் புலம்புகின்றன. சிலம்புகள் ஒலிப்பதை இவ்வாறு உருவகப்படுத்தினர்.

 

முகுள அலர் இள நிலவு எழ--- 

 

முகுளம் --- அரும்பு.

 

அரும்புகளைப் போன்று உள்ள பற்கள் குளிர்ந்த நிலவைப் போன்று ஒளி வீசுகின்றன. 

 

இலவு இதழ் பருகா நின்று உருகி உ(ள்)ளம்--- 

 

இலவம் பூவைப் போலும்ப சிவந்த இதழ் பொருந்தி உள்ள வாய்.

 

உடல் உடலொடு செருகிட--- 

 

காற்றும் புகா வகை ஒருவர் உடலோடு மற்றொருவர் உடல் செருகி உள்ளது. 

     

மட மகளிர்களொடும், அமளியில் அநுராக உததி அதன் இடை விழுகினும்.......... உனை நினைவது(ம்) மொழிவது(ம்) மறவேனே --- 

 

அனுராக உததி --- காமக் கடல்.

 

காமத்தில் அனுபவிக்கும் இன்பம் கடலைப் போன்று பெருகுவது என்பதால் இவ்வாறு கூறியருளினார்.

 

"காமம் கடல் மன்னும் உண்டே, அது நீந்தும்

ஏமப் புணை மன்னும் இல்"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

காமம் என்னும் கடல் எப்போதும் உள்ளது. ஆனால் அதை நீந்திக் கடக்கின்ற தோணிதான் உயிர்களிடம் நிலை கொண்டதாக இல்லை.

 

"காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்,

யாமத்தும் யானே உளன்"

 

என்பதும் நாயனார் அருளிய திருக்குறள்.

 

காமமாகிய பெருநீர் வெள்ளத்தை யாராலும் நீத்திக் கரை காண முடியாது. 

 

எனவே, "உனது அடி இணை எனது உயிர் உதவி" என்றார் அடிகளார். இறைவனது திருவடி இணையே காமக் கடலை நீந்திக் கடக்கின்ற தெப்பம் ஆகும். எனவே, இறைவன் திருவடியை எப்போதும் மறவாமல் வழிபட்டு வரவேண்டும்.

 

எருவையோடு---

 

எருவை --- கழுகு.

 

கொடி--- 

 

காக்கை

 

வெளி சிறிது இடமும் இ(ல்)லை என உலவிட--- 

 

இராமச்சந்திரமூர்த்தி இராவணனோடு போர் புரிந்த களத்தில் வானவெளியில் கழுகுகளும், காக்கைகளும், கருடன்களும் நெருங்கி உலாவின.

     

எதிர் எதிர் எதிர் ஒரு தனு இரு காலும் வரிசை அதனுடன் வளை தர--- 

 

இரு காலும் --- இரண்டு முனைகளும்.

 

எதிர் எதிராக உள்ள வில்லின் இருமுனகளையும் அழகாக நாணினால் கட்டினார் இராமபிரான். 

 

கருத்துரை

 

முருகா! எந்த நிலையிலும் எனது உயிருக்குத் துணையாக உள்ள உமது திருவடிகளை மறவேன்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...