043. அறிவுடைமை --- 08. அஞ்சுவது அஞ்சாமை

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 43 -- அறிவுடைமை

 

     அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். 

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றதையும் கேட்ட பொருளையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். "அறிவாவது நல்லதன் நலனும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமல் இருப்பது பேதைமை. அஞ்சத் தக்கதை அஞ்சுதல் அறிவு உடையவரின் தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதுஒருவன் தன்னுடைய தகுதியை அதிகமாக மதித்துதீய செயல்களைச் செய்வானாயின்,அது நிறைவேறாது போவதுடன்பழியும்பாவமும்கேடும் உண்டாகும். எனவே, "தீயவை தீய பயத்தலால்,தீயவை தீயினும் அஞ்சப்படும்" என்றது போலதீய செயல்களுக்கு ஒருவன் அஞ்சவேண்டும். அவ்வாறு செய்தால்இகழ்ச்சி இல்லாதுபுகழ்ச்சி உண்டாகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமைஅஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.  

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     அஞ்சுவது அஞ்சாமை பேதைமை--- அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்,

 

     அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்--- அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.

 

       (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும்சாதி பற்றி, 'அஞ்சுவதுஎன்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனை உடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

அன்றுஅமணர் தீவைப்ப,அஞ்சியதுஎன் என்னன்மின்,

துன்றியசீர்ச் சம்பந்தர்,சோமேசா! - நன்றேயாம்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

 

இதன்பொருள்---

 

       சோமேசா! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ---  அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமை ஆகும்அஞ்சுவது அஞ்சுதல் அறிவார் தொழில் --- அவ் அஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்,

 

       சீர் துன்றிய சம்பந்தர் --- சிவடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானங்களாகிய சிறப்புக்கள் மிக்க திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அன்று --- மங்கையர்க்கரசியார் வேண்டுகோளுக்கு இசைந்து திருஆலவாயாகிய மதுரைக்குச் சென்ற அக்காலத்தில்சமணர் தீ வைப்ப --- கொல்லாமையை மறைந்து ஒழுகும் சீலத்தவராகிய சமண சமயத்தவர் தாம் தங்கியிருந்த திருமடத்திலே நெருப்பிட,  அஞ்சியது என் என்னன்மின் --- அச்சம் உற்றமைக்குக் காரணம் யாது எனக் கருதற்கநன்றே ஆம் --- அவ்வாறு நாயனார் அஞ்சியது நன்மையே ஆகும் ஆகலான் என்றவாறு.

 

       அஞ்சாமை --- எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல் --- எண்ணித் தவிர்தல். அது காரியம் அன்று என்று இகழப்படாது என்பார்அறிவார் தொழில் என்றார். பாவத்தைத் தருகின்ற கொடிய தொழில்களைச் செய்வதற்கு அஞ்சி ஒழுகவேண்டும்.

 

       அன்று அமணர் --- பகைத்த சமணர்கள் எனினுமாம்.  வினைத் தொகை. அன்றுதல் --- பகைத்தல்.

 

"என்பொருட்டு அவர்செய்த தீங்கு ஆயினும்,இறையோன்

அன்பருக்கு எய்துமோ என்று,பின்னையும் அச்சம்

முன்புறபின்பு முனிவுற,முத்தமிழ் விரகர்

மன்புரக்கும் மெய்ம்முறை வழுஎன மனம்கொண்டார்".

                                                                                    

என வரும் பெரியபுராணப் பாடலால்சமணர்கள் தாம் அடியாரோடு தங்கி இருந்து மடத்திற்கு தீ வைத்ததை அறிந்து திருஞானசம்பந்தர் முதலில் அச்சம் கொண்டார்பின்பு முனிவு கொண்டார் என்பது அறியலாம்.

 

            பாண்டி நாட்டை சமணக்காடு மூடவேகூன் பாண்டியனும் அவ் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக வருந்தி,"என்று பாண்டியன் நல்வழிப்படுவான்" என்று இருக்கும்கால்திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டுமெனக் குறையிரந்தமையான்பிள்ளையார் அவர்க்கு விடை தந்து பின்னர்த் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிடப் பிள்ளையார் அத்தீயை, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம்புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     பின்வரும் பாடல்இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்தது காணலாம்...

                                                

அறிவுடையார் அன்றி அதுபெறார் தம்பால்

செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்!

வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்

கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.   ---  நன்னெறி.

 

       பிறைமதியைப் போன்ற நெற்றியை உடையவளேகுருட்டுக் கண்கள் இருளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அழகும் ஒளியும் பொருந்திய கண்களே இருளுக்கு அஞ்சவேண்டும். அதுபோலஅறிவில்லாத மூடர் பழியைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அறிவுடையவரே பழிக்கு அஞ்சுவர்.

 

       அது பெறார் --- அறிவிலார். செறி --- பொருந்திய. பிறை நுதால் --- பிறைபோலும் நெற்றியை உடையவளே. 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...