045. பெரியாரைத் துணைக்கோடல் --- 04. தம்மில் பெரியார்

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 45 -- பெரியாரைத் துணைக்கோடல்

 

     உயிர்க்கு இயல்பாக அமைந்த காமம் முதலாகிய ஆறு குற்றங்களையும் முறைப்படி ஒழித்தல் வேண்டிதன்னைத் தீயவழியில் செல்லாதவாறு விலக்கிநன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையவரைத் தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்என்பதால்குற்றங்கடிதல் பற்றிச் சொன்ன நாயனார்அதற்குப் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "அறிவு முதலியவற்றால் தம்மை விடச் சிறந்தவர்களைதமக்கு உரியவராகக் கொண்டுஅவர் காட்டும் வழியில் நிற்றலே ஒருவனுக்குத் தலைசிறந்த வல்லமை ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     தன்னாலும்தம்மைச் சார்ந்தவர்களாலும் உண்டாகும் துன்பத்தோடு அல்லாமல்தெய்வத்தால் உண்டாகும் துன்பத்தையும் நீக்கும் வல்லமை உடைய பெரியோரைத் துணையாகக் கொள்ளுதல் வல்லமைகளுள் சிறந்த வல்லமை ஆகும்.

 

திருக்குறளைக் காண்போம்...

 

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்,

வன்மையுள் எல்லாம் தலை.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

            தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்--- அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழி நின்று ஒழுகுதல்

 

     வன்மையுள் எல்லாம் தலை--- அரசர்க்கு. எல்லா வலி உடைமையினும் தலை.

 

      (பொருள்படைஅரண்களான் ஆய வலியினும் இத் துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத் துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

 

     இத் திருக்குளுக்கு விளக்கமாசிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய"சிவசிவ வெண்பா"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

வன்தொண்டர் சேரரையும் வாவென்று அரன்அழைப்பச்

சென்று தெரிவித்தார்,சிவசிவா! --- என்றும்என்றும்

தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.      

 

     வன்தொண்டர் திருக்கயிலைக்குச் செல்லும்போது உடன் வந்த தனது தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரையும்சிவபெருமானிடம் தன்னிடத்து வருக என்று அழைக்குமாறுசிவபெருமானிடம் விண்ணப்பித்துத் திருமுன் வரச் செய்தார்.

 

கழறிற்றறிவார் என்னும் 

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு

 

      சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப் பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர்மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்துமுன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார்நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்து அமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுகும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டிமுன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையன் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.

 

    இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள் சேர நாட்டின் அரசியல் நலம் குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர் குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திருவஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி, "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான ஆட்சி ரிமையை ஏற்றுக் கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். இச் சிவத் தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணை புரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் புகுந்து இறைவன் திருமுன்னர் பணிந்து நின்றார். இறைவனது திருவருளால்இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடும் இயல்பும்புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும்கெடாத வலிமையும்கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும்நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களுமஉயர் திணை மக்களும் அன்றி,மற்ற உயிர்களும் கழறுவதை விளங்கிக் கொள்ளும் நுண்ணறிவினைப் பெற்றார். ஆதலின் அவர்க்கு "கழறிற்றறிவார்" என்பது காரணப் பெயராயிற்று.

 

    உலகுயிர்கள் கழறுச் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார்தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கிஅமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவு பெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் பட்டத்து யானை மீது அமர்ந்து,வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கி வரநகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம்உவர்மண் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால்உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன்அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச் சேரன்காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

 

       சேரமான் பெருமாள் யானை மீது அமர்ந்து நகர்வலஞ் செய்து அரண்மனை அடைந்து அரியணையில் வீற்றிருந்து அரசு புரிந்து அருளினார். மேல்திசை வேந்தராகிய இப்பெருந்தகையார் கீழ்த்திசை வேந்தராகிய சோழ மன்னரோடும் தென்திசை வேந்தராகிய பாண்டிய மன்னரோடும் நண்பராக விளங்கினார். மூவேந்தரும் தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி வளரவும்வேதநெறி வளரவும் அறநூல் முறையில் ஆட்சி புரிந்தனர்.

 

       பெருமாதைக் கோதையார் தாம் பெற்ற அரச பதவியின் பயனும் நிறைந்த தவமும்தேடும் பொருளும்பெருந்துணையும் ஆகிய இவையெல்லாமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடித் தாமரை எனத் தெளிந்தார். ஆதலால்நாள்தோறும் சிவபூசை செய்வதைதமக்குரிய கடமையாக மேற்கொண்டார். திருமஞ்சனம்பூபுகைஒளி ஆகியவற்றுடன் செய்யும் அன்பு நிறைந்த சிவபூசை ஏற்றுக்கொண்ட இறைவர்தமது திருவடிச் சிலம்பின் ஒலியினைச் சேரமான் செவிகுளிரக் கேட்டு இன்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டு அருளினார்.

 

       இவ்வாறு சிவபூசையில் ஈடுபட்ட சேராமான் பெருமாள்சிவனடியார்களுக்கு வரையாது கொடுத்தும்சிவவேள்விகள் செய்தும்எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திருவாலவாய் என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள்,தம்மை இன்னிசையால் பரவிப்போற்றும் பாணபத்திரன் என்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு,அவரது கனவில் தோன்றி "அன்பனே!  என்பால் பேரன்புடைய சேரமான் பெருமாள் என்னும் வேந்தன் உனக்குப் பொன்பட்டாடைகள்நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாம் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு திருமுகம் எழுதிக் கொடுத்திருக்கிறோம். நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று பொருள் பெற்று வருவாயாக" எனக் கூறி "மதிமலிபுரிசை" எனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார்.

 

       திருவாலவாயுடையார் அருளிய திருமுகப் பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர்சேர நாட்டை அடைந்து சேரமான் பெருமாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான், அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உளமுருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது நிதியறையில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து,"இப் பெரும்பொருள்களையும்யானைகுதிரை முதலிய சேனைகளையும்இம்மலை நாட்டு ஆட்சி உரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும்" எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். அவரது கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பாணபத்திரர் "என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின்அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரசுறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டு அருளுதல் வேண்டும்" என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரபெருமாள். அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினால் தம்மைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தை அடைந்தார்.

 

       கழறிற்றழிவாகியாராகிய சேராமான்பெருமாள்என்றும் போல ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த பொழுதுவழிபாட்டில் நாள்தோறும் கேட்டு இன்புறுவதாகிய திருச்சிலம்பொலியை அன்று கேட்கப் பெறாது பெரிதும் மனங்கலங்கினார். "அடியேன் என்ன பிழை செய்தேனோ" எனப் பொருமினார். "இறைவனை வழிபடும் ஆசை காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன இருக்கிறது" எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித் தம் மார்பில் நாட்டப் புகுந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய கூத்தப் பெருமான் விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேராமன் பெருமாள் செவிகுளிரக் கேட்டு மகிழும் வண்ணம் ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, "தேவர்களும் தேடிக் காணுதற்கரிய பெருமானே! இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்த்தது எது கருதி?" என வினவினார். அந்நிலையில் தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் "சேரனே! வன்தொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்றுபுகழமைந்த திருப்பதிகங்களால் நம்மைப் பரவிப் பாடினான். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்ந்தோம்" எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் "அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது கருணைத் திறம் என்னே" என வியந்து உளமுருகினார். இறைவன் திருநடம் புரிந்தருளும் பெரும்பற்றப் புலியூரிலமைந்த பொன்னம்பலத்தையும்அங்கே இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் பெரியோராகிய வன்தொண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச் சோழ நாட்டிற்குச் செல்ல விரும்பினார். திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளுடன் புறப்பட்டுச் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லை மூதுரின் எல்லையை அடைந்தார். அந்நிலையில் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு வரவேற்றனர். அடியர்களோடு தில்லைத் திருவீதியை வலம் வந்து எழுநிலைக் கோபுரத்தை வணங்கி உட்புகுந்த சேரமான்பெருமாள் நாயனார் திருப்பேரம்பலத்தை இறைஞ்சி உள்ளே புகுந்து இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந்தார். அளவில்லாப் பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய ஒருமையுணர்வால் கண்டு உருகிப் போற்றித் திருவருள் இன்பக்கடலில் திளைத்து இன்புற்றார். தாம் பெற்ற பேரின்பத்தை வையத்தார் அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது கீர்த்தியை விரித்து உரைக்கும் செந்தமிழ்ப் பனுவலாகிய "பொன்வண்ணத் திருவந்தாதி"யினைப் பாடியருளினார். சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர்,அதற்குப் பரிசிலாகத் தூக்கிய திருவடியில் அணியப் பெற்ற திருச்சிலப்பொலியை நிகழ்த்தி அருளினார். ஆடற்சிலம்பொலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகையுற்ற சேரமான்பெருமாள்காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருல்லைப்பதியில் சில நாள் தங்கியிருந்தார்.

 

       பின்னர்நம்பியாரூரரைக் கண்டு வணங்குவதற்கு விரும்பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களை வணங்கி திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாளது வருகையை உணர்ந்த நம்பியாரூரர்சிவனடியார்களுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை விழுந்து இறைஞ்சினார். தம்மை வணங்கிய சேரமான் பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் தூக்கி எடுத்துத் தழுவி,ஒருவர் ஒருவரில் கலந்த பெரும் நட்பினராய்ப் பெருமகிழ்ச்சி உற்றார்கள். இங்ஙனம் இருவரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள்நம்பியாரூரரைச் "சேரமான் தோழர்" என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான் தோழராகிய சுந்தரர்சேரமான் பெருமானது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும் திருவாரூர்த் திருக்கோயிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். சேரமான் பெருமாள் உடைய நம்பியாராகிய சுந்தரரைத் தொடர்ந்து சென்று பூங்கோயில் அமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை விழுந்து இறைஞ்சினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர் பொழியத் "திருமும்மணிக்கோவை" என்னும் செஞ்சொல் மாலை புனைந்து ஏத்தினார். தாம் பாடிய செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார். ஆரூர் இடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்கொண்டருளினார். பின்பு சுந்தரர் சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு நங்கை பரவையார் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார்திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்க வகையால் திருவமுது அமைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்ட நம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய்தருளினார். இவ்வாறு சேரமான்பெருமாளும் நம்பியாரூரரும் திருவாரூரில் தங்கியிருக்கும் பொழுது பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபடவேண்டும் என்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச் சேரமான்பெருமாளுக்குத் தெரிவித்தார்.

 

       வன்தொண்டரைப் பிரியாத பெருமானாகிய சேரமான் பெருமாள் தமக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானைப் போற்றவேண்டும் என்னும் பேரார்வத்தால் தாமும் அவருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ளம் உடையார் இருவர் அடியர் புடைசூழத் திருமறைக்காடு முதலிய தலங்களை வணங்கித் தென்தமிழ்ப் பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார்கள். அப்போது நாடாள் வேந்தனாகிய பாண்டியனும்பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர் சென்று இவ்விருபெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் பெருமாள், "அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன்" என எண்ணி உரை தடுமாறிக் கண்ணீர் அரும்ப ஆலவாய் கடவுளைப் பரவிப்போற்றினார். பாண்டியன் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினான்.

 

       இங்ஙனம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரும் நம்பியாரூராகிய சுந்தரரும் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர். சேரமான் பெருமாளும்சுந்தரரும்பாண்டியர் சோழராகிய இருபெரு வேந்தர்களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரரை அடைந்தனர். சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரைத் தங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டுமென்று பலமுறையும் வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டுகோளுக்கிணங்கிய சுந்தரர்பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார். இருவரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலைநாட்டவர் எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்துதம் தேவிமார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி நிற்கநம்பியாரூரருடைய திருவடிகளை விளக்கி மலர்தூவி வழிபட்டார். அவருடன் உடனிருந்து அமுதருந்தி உபசரித்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழாவும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்கள் விளையாடல்களும் நிகழ்ச்செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர்.

 

       இங்ஙனம் நண்பர் இருவரும் அளவளாவி மகிழும் நாட்களில்நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன்றியது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், "பொன்னும் மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறக்கலும் ஆமேஎனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்றார். சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், "இன்று உமது பிரிவாற்றேன் என்செய்வேன்" என்றுரைத்து மிகவும் வருந்தினார். நம்பியாரூரர் தம் தோழரை நோக்கி "இந்நாட்டில் உளவாம் இடர் நீங்கப் பகை நீக்கி அரசாளுதல் உமது கடன்" என அறிவுத்தினார். அதனைக் கேட்ட வேந்தர் பெருமான் "இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பம் செய்வன உம்முடைய திருவடித் தாமரைகளே. திருவாரூர்க்கு எழுந்தருள எண்ணிய உமது மன விருப்பத்தை நீக்கவும் அஞ்சுகின்றேன்" என்றார். "என்னுயிர்க்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்" என்ற வன்றொண்டரை வணங்கி தம்முடைய திருமாளிகையில் உள்ள பெரும் பொருள்களைப் பொதிசெய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து,நெடுந்தூரம் சென்று வழியனுப்பினார். சுந்தரரும் தம் தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்களூரிலிருந்து மலைநாட்டை ஆட்சிபுரிந்திருந்தார்.

 

       நெடுநாட்களின் பின், சுந்தரர் மீண்டும் கொடுங்கோளூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச் சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுதுசுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலை அடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் "தலைக்குத் தலைமாலை" என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார். அந்நிலையில் அவரது பாசத் தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான்சுந்தரரை அழைத்து வருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலை அடைந்த தேவர்கள்நம்பியாரூரரைப் பணிந்து நின்று"தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு" என விண்ணப்பம் செய்தார்கள். இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதிற் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார்.

 

       இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர்தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவருளாற்றலால் விரைந்து உணர்ந்த கழற்றறிவாராகிய சேர வேந்தர்பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணில் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திர ஐந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீது எழுந்து வன்தொண்டர் ஏறிச்செல்லும் வெள்ளை யானையை வலம் வந்துஅதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள்குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையிற் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள். தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பம் உடையவராய் உடைவாளினால் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர். சேரமான் பெருமாளும் சுந்தரரும் திருக்கயிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையும் கடந்து திருஅணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடி முன்னர் பணிந்தெழுந்தார். "கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த நிற்கின்றார்" என விண்ணப்பம் செய்தார். சிவபெருமான்பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் "சேரமானைக் கொணர்க" எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார்.

 

       சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, "இங்கு நாம் அழையாதிருக்க நீ வந்தது எது கருதி?"என வினவியருளினார். அது கேட்ட சேரவேந்தர், இறைவனைப் பணிந்து "செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்து அருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பாசத் தளையை அகற்றுதற் பொருட்டு வன்தொண்டரது தோழமையை அருளிய பெருமானே! மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்" என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், "சேரனே! அவ்வுலாவைச் சொல்லுக" எனப் பணித்தருளினார். சேரமான்பெருமாள் நாயனாரும் தாம் பாடிய "திருக்கைலாய ஞான உலா"வைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன்அவரை நோக்கி "சேரனே! நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி,நீவிர் இருவீரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்றிருப்பீராக" எனத் திருவருள் செய்யசேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர்.

 

     தம்மினும் பெரியார் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தமக்குத் தோழராக சேராமன் பெருமாள் கொண்டதால்அவரது அருளால் திருக்கயிலையில் சிவபெருமான் திருமுன்பு சென்றுஇறையருளுக்குப் பாத்திரம் ஆக முடிந்தது.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக"திருப்புல்லாணி மாலை"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

தழுவிஎன் தம்மிற் சிறியார்,  தம்மிற் பெரியார் தமரா
ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை என்று உரைத்தனரால்
முழுமுதலோன் பெரும்புல்லையில் கண்ணனை  முற்றும் ஐவர்

தொழுது வலிமை பெற்று ஓங்குதல் நாளும் துலங்குவதே. 

 

இதன் பொருள் ---

 

     சிறியோர்கள் தம்மில் ஒருவருக்கொருவர் தழுவிக் கொள்வதில் எத்தகைய பயனையும் அடையார். பாண்டவர்கள் கண்ணனைத் துணைக் கொண்டு மிகுந்த நன்மையை அடைந்தனர்.                              

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...