இரவு பகல் அற்ற இடம்

 


இரவுபகல் அற்ற இடம்

-----

 

     இறைவனுடைய திருவருள் இன்பத்தைஇந்த உடம்புடன் இருக்கும்போதே பெறலாம். அதனை அடைவதற்குச் சில படிகள் உண்டு. அந்தப் படிகளை வெவ்வேறு பெயரிட்டுச் சொல்வது வழக்கம். அருணகிரிநாதப் பெருமான் இந்த உடம்பில் இருக்கும்போதே முத்தி இன்பத்தை அடைவதற்கு நான்கு வகையான படிகளைச் சொல்கிறார். சாத்திரங்களில் சொல்வது போலஅழகான தோத்திரமாக அமைந்து இருக்கிறது இந்தப் பாடல். 

 

"அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும்;அவிழ்ந்த அன்பால் 

குராப்புனை தண்டை அம் தாள்தொழல் வேண்டும்கொடிய ஐவர் 

பராக்கு அறல் வேண்டும்மனமும் பதைப்பு அறல் வேண்டும்என்றால் 

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே!"     --- கந்தர் அலங்காரம்.

 

முதல் படி --- அராப்புனை வேணியன் சேய் அருள் வேண்டும்

இரண்டாம் படி ---  அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டை அம் தாள் தொழல் வேண்டும்

மூன்றாவது படி---  கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும்,

நான்காவதுபடி ---  மனமும் பதைப்பு அறல் வேண்டும்,

 

     இந்த நான்கு படிகளைக் கடந்து சென்றால்இராப்பகல் அற்ற இடத்தை அடையலாம். அங்கே நிரதிசய ஆனந்தம் என்னும் பேரின்பம் உண்டாகும். அதுதான் மோட்சம் அல்லது வீடுபேறு அடைந்த நிலை. மேலே குறித்த படிகளைக் கடந்தவர்க்கு இது எளிது. அல்லாதவர்க்கு அவ்வளவு எளிது அல்ல. 

 

     உலகம் கடந்த எல்லையில் மோட்சம் இல்லை. இந்த உடம்பை விட்டுச் சென்ற பிறகு ஏதோ குறிப்பிட்ட ஓர் இடத்தில் மோட்சம் இருக்கிறதது என்று சொல்வதும் தவறு. நம்முடைய சமயத்தில் அப்படிச் சொல்லப்படவும் இல்லை. இந்த உடம்பில் இருக்கும்போதே இறைவனுடைய திருவருள் இன்பத்தை முற்றும் பெறலாம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. உடம்பை விட்டுப் போன பிறகு அடைகின்ற முத்தி இன்பத்தைஇந்த உடம்பில் இருக்கும்போதே பெறலாம். 

 

     புளியம்பழம் நன்றாகக் கனிந்து ஒட்டோடு ஒட்டாமல் இருப்பது போலஉயிர் உடம்பில் இருந்தும் கருவி கரணங்களால் உண்டாகும் உணர்ச்சியோடு தொடர்பு பெறாமல் இருக்கும். "அடியேனுடை யாக்கை புளியம்பழம் ஒத்து இருந்தேன்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த உடம்பைவிட்டுப் போனால்மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராதமீட்டும் உடம்பு எடுக்காத நெறியில் சென்று இன்புறும். உடம்பில் இருக்கும்போதே இந்திரியங்களின் தொடர்பை விட்டுமனத்தை அறுத்துஇன்பத்தைப் பெறுவது சீவன்முத்தி நிலை. இந்த உடம்பில் இருக்கும்போதே அத்தகைய இன்பம் வருவது சாத்தியம் என்பதுதான் அருளாளர்கள் கருத்து.

 

     சீவன்முத்தர்கள் மக்கள் உருவில்தான் இருப்பார்கள்.  ஆனாலும் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு உண்டு. நெல்லை வாணலியில் இட்டுமணலைப் போட்டு வறுத்தால் நன்றாக வறுபடும். பொரியாக ஆவதற்கு முன்னாலே ஓரளவு நன்றாகச் சூடு ஏறும்படி வறுத்து எடுத்தால்வறுத்த நெல்லுக்கும்வறுக்காத நெல்லுக்கும் வேறுபாடு கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக வேறுபாடு உண்டு. வறுத்த நெல் முளைக்காது. அதுபோல்சீவன்முத்த நிலையில் இந்த உடம்பில் வாழ்கிறவர்களுக்கும்மற்றவர்களுக்கும் வேறுபாடு உண்டு. ஞானாக்கினியினால் நன்றாக வறுக்கப்பட்டவர்கள்இருவினையில் இருந்து நீங்கிசீவன்முத்தி நிலையை அடைவார்கள். அவர்கள் வேறு உடம்பை எடுக்கமாட்டார்கள் அவர்கள் மற்ற மக்களைப் போலவே வாழ்வார்கள். உணவு உண்பார்கள். உடை உடுப்பார்கள். இந்த உடம்பை விட்டுச் சென்றால் மீண்டும் பிறவி எடுக்கின்ற நிலை அவர்களுக்கு இல்லை. பிறவித் துன்பத்தினின்றும் நீங்கினவர்கள் அவர்கள். மற்றவர்கள் இந்த உடம்பினின்றும் நீங்குவதுமறுபடியும் வேறு உடம்பை எடுத்து இன்ப துன்பங்களை அடைவதற்குத்தான். 

 

     உடம்பை விட்டுச் சென்று அடைகிற முத்திக்கு விதேகமுத்தி என்று பெயர். சீவன்முத்தி நிலையை இராப்பகல் அற்ற இடம் என்று சொல்வார்கள். அருணகிரிநாதர் இங்கே "இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை" பற்றித்தான் சொல்கிறார். அப்படி ஒரு நிலை கிடைப்பது மிகவும் அரிய செயல். அதற்கு முன் பல முயற்சிகள் செய்து இறைவன் திருவருளால் அந்த நிலையை அடையவேண்டும். எனவேசீவன்முத்தி நிலையை ஒருவன் பெறுவது எளிய காரியம் அல்ல என்று சொல்கிறார். 

 

     அதற்கு வழியை இந்தப் பாட்டில் சொல்கிறார். அதற்கு முதல்படி, இறைவன் திருவருள். இரண்டாவது படிஅந்த அருளினால் உண்டாகிற இன்ப அன்பு. மூன்றாவது படிஐம்புலச் சேட்டைகளை அறுத்தல். நான்காவது படிமனத்தின் பதைப்பு அறுதல். அப்போது மனம் சலனம் இன்றிஅலையற்ற கடல்போல இருக்கும். அதுதான் சிவனந்தக் கடல். "அலை இல்லாச் சிவஞான வாரிதி" என்று வள்ளல்பெருமானும், "ஆனந்த வாரிதி" என்று மெய்கண்ட சாத்திரமும் சொன்னது இதைத்தான்.

 

     உலகத்தில் இரவும் பகலும் உள்ளபோதுஇந்த உடம்போடு இருந்தால் இரவு பகல் இல்லாத ஒரு நிலை எப்படி வரும்? என்ற ஐயம் தோன்றும். சூரியன் உதயம் ஆகும்போது பகல் உண்டாகிறது. அது மறைந்தால் இரவு வருகிறது. இவை எல்லாம் புற உலகத்தில் தோன்றும் ஒளியும்இருளும் ஆகும். அக உலகத்திலும் இரவு உண்டு. பகல் உண்டு. மனிதனின் உள்ளத்தில் அஞ்ஞானம் இருக்கிறது. அஞ்ஞானத்தை இருட்டு என்று சொல்வார்கள். அங்கே உண்டாகிற தெளிவுதான் ஒளி. 

 

     அடுப்பில் நெருப்பை மூட்டினால் புகை கிளம்புகிறது. அது வரும்போது கண்ணை அவிக்கிறது. இருமல் வருகிறது. கண் எரிகிறது. நெருப்புக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டால் உடனே எல்லாம் தீப்பற்றிக் கொண்டு எரிகின்றன. சிறுபுகை தோன்றிப் பின்பு பெரும் புகையாவது போல்சிறுகொழுந்து தோன்றிஅதுவே பெருநெருப்பாகி விடுகிறது. முதலில் ஒரே புகைகொழுந்து தோன்றியவுடன் நெருப்பு உண்டானால்புகை அடங்குகிறதுவெளிச்சம் வந்து விடுகிறது. இருட்டில் இருக்கும் வரைக்கும் ஒரே புகைமயக்கம். கொஞ்சம் ஊதித் தெளிவாக்கியவுடன் வெளிச்சமாகி விடுகிறது. புகை அறியாமை. முதல் நிலைஅறியாமையாகிய இருட்டில் நிற்கின்ற நிலை. பின்நினைவு என்னும் ஒளியினால் தெளிவு உண்டான ஒளிநிலை. இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடைவை.  

 

     ஓர் இடத்தில் ஒரே இருட்டாக இருக்கிறது. விளக்கு வைத்தவுடன் வெளிச்சம் ஆகிறது. விளக்கு அணைந்தவுடன் மீண்டும் இருள் சூழுகிறது. அதுபோலத்தான்நம்முடைய நினைவும்மறதியும் மாறி மாறி வருகின்றன. மறப்புநினைப்பு ஆகிய இரண்டும் நம் மனத்திற்கு இயல்பு. மறப்பை மயக்கம் என்றும்நினைப்பைத் தெளிவு என்றும் சொல்லலாம். மயக்கமே இருள். தெளிவே ஒளி. இருள் ஒளி ஆகிய இரண்டும்அதாவது மயக்கம்தெளிவு ஆகிய இரண்டும்நம் மனத்திற்குள் இருக்கின்றன. இந்த மனம் இப்போது காண்கின்ற பொருளைத் தெரிந்து கொள்வதும்முன்பு தெரிந்து கொண்டதை மீட்டும் நினைப்பதும் ஆகிய இயல்புகளைக் கொண்டிருக்கிறது. 

 

     இன்னும் சில இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்ள எவ்வளவு முயன்றாலும் முடிவது இல்லை. ஒரு நூலைப் படித்தால் சிலருக்கு எளிதில் தெளிவு வந்துவிடுகிறது. சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் வருவது இல்லை. எழுத்துப் பிழையோடு படிப்பவர்களிலும்சிலர் அறிவித்தால்திருத்திக் கொள்வார்கள். சிலர்அறிவித்தாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஆனாலும்அறிவு அந்த அந்தப் பிறவியோடு போய்விடுவது அல்ல. உடம்பு பிறவிதோறும் மாறுகிறது. அறிவோ பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகிறது. அதனால் சிலருக்கு முன்னைக் கூர்மை இருக்கும். "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி,ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்துஎன்று திருவள்ளுவ நாயனார் இதைத்தான் காட்டினார். ஒரு பிறவியில் ஒருவன் கற்கும் கல்வி, எழுகின்ற பிறவிகளிலும் அவனுக்குத் தொடர்ந்து வரும் என்பது கருத்து. 

 

     ஆகையால்பிறவிதோறும் தொடர்ந்து வருவது கல்வி அறிவு. எடுத்தவுடன் ஒரு நூலை ஒருவன் அறிந்துகொண்டு விடுகிறானேதெளிவு பெற்று விடுகின்றானே என்றால்அவனுக்கு முன்னைத் தொடர்பு இருக்கிறது. அதற்கு வேண்டிய அறிவை முன் பிறவியில் தீட்டிக் கொண்டிருக்கிறான். 

 

     முன்பு கண்டு உறவாடிய ஒருவனைத் தெரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம்மனத்திற்கு இயற்கையாகவே மறதி இருப்பதே. அப்படியே பிறவி மயக்கத்தினால் போன பிறவியில் நாம் எப்படி இருந்தோம் என்பது தெரிவதில்லை. நமக்குத் துணையாக இருக்கிற கடவுளை நாம் மறந்து விடுகிறோம்.  இருள் அஞ்ஞானம்அவிச்சை என்று பலப்பல பெயர்களால் சொல்லப்படும் அறியாமையினால் உண்மைப் பொருள் இன்னது என்று தெரிந்து கொள்ள வகையில்லாமல் வாழ்கிறோம். கலக்கம் நீங்கிஇருள் நீங்கி,கொஞ்சம் தெளிவு உண்டானால் ஞானஒளி நமக்குக் கிடைக்கும். மயக்கம் இருக்கும்போது தெளிவு இல்லைஒளி இல்லை. தெளிவு இருக்கும்போது மயக்கம் இல்லைஇருள் இல்லை

 

     ஒளி இருக்கும்போதே நிழலும் உண்டு. ஒளியைத் தருகிற பொருள் வேறு. நிழலைத் தருகிற பொருள் வேறு. ஒளியைத் தருகின்ற பொருளுக்கு முன்னால் நிழலைத் தருகின்ற பொருள் இருந்தால் நிழல் விழும். விளக்குக்கு முன்னால் நாம் இருந்தால் விளக்கின் ஒளியிலே எதிர்ப்புறத்தில் நமது நிழல் தெரியும். கிழக்கே உதிக்கும் சூரியன் முன் நாம் நின்றால்,நமது நிழல் மேற்கே விழும். சூரியன் மாலையில் மேற்கே வரும்போது நமது நிழல் கிழக்கே வரும். ஒளிக்கும் நிழலுக்கும் நேர் விரோதம்.நிழல் இல்லாமல் போகவேண்டும் என்றால் சூரியனுக்கு முன் நிற்கும் எதுவும் இல்லாமல் போக வேண்டும்சூரியன் முன் இருப்பதும் அதற்கு நிகரான ஒளி உடையதாக இருந்தால் நிழல் இல்லை. சூரியனுக்கு முன்னால் நிற்கிறவன் கீழே படுத்துக் கொண்டால்அவன் நிழல் எங்கும் படிவது இல்லை. அப்போது அவன் செயல் இழந்தவனாக இருக்கிறான்.

 

"சீவன் என்ன சிவன் என்ன வேறு இல்லை,

சீவனார் சிவனாரை அறிகிலர்,

சீவனார் சிவனாரை அறிந்தபின்

சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே"

 

என்பது நமது கருமூலம் அறுக்க வந்தருளிய திருமூல நாயனார் திருமந்திரம்.

     

     சீவன் வேறு சிவன் வேறு என்கின்ற வேறுபாடு இருக்கும் வரை அறியாமை உண்டு. இரண்டறக் கலக்கும்போது வேறுபாடு இல்லை. அறியாமை என்கின்ற இருள் இல்லை. இதையே அருணகிரிநாதர், "இராப்பகல் அற்ற இடம்" என்கிறார். ஆன்மாவும் இறைவனும் இரண்டறக் கலந்துவிடுகிற நிலையில்,நினைப்பு மறப்பு இல்லை. "அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே" என்று அடிகளார் திருப்புகழில் வேண்டினார். "சகல கேவலம் இல்லாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய்" என்று வேண்டினார் வள்ளல்பெருமான்.

 

     நாம் இப்போது இருக்கும் இடம் தாழ்ந்த இடம். மிக உயர்ந்த இடத்திற்குப் போகவேண்டும். இடம் என்று சொன்னால்நாம் கண்ணால் காணுகின்ற இடம் என்பது பொருள் அல்ல. அது ஒரு நிலை. உயிர் இன்பத்தில் நிற்கின்ற நிலை எதுவோஅதை முத்திநிலை என்று சொல்வார்கள். இப்போது நம் உயிர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற இடம் தாழ்வான நிலை. இதை விட மிகச் சிறந்த இன்பநிலை ஒன்று உண்டு. அது மேலானநிலை. தாழ்ந்த நிலையில் இருக்கிறவன் மேலான நிலைக்குப் போகவேண்டுமானால் மெல்ல மெல்லப் படியேறிச் செல்ல வேண்டும். 

 

     இந்தப் படிகளை சரியைகிரியையோகம்ஞானம் என்று சொல்வார்கள். சரியை என்பது இறைவனுடைய திருநாமத்தைச் சொல்வதுஅடியார்களோடு சேர்ந்து திருத்தொண்டுகளைப் புரிவது முதலியன. கிரியை என்பது இறைவனுக்குப் பூசை முதலியன செய்தல்யோகம் என்பது உள்ளத்தை இறைவனுக்குப் பீடமாக அமைத்து மனத்தில் பூசை முதலிய செய்தல். ஞானம் என்பது அறிவுச் சிறப்பினாலே உலக நிலைஉயிர்நிலை என்பனவற்றை ஆராய்ந்து இந்திரிய நிக்கிரகம் செய்தல். இந்த நான்கும் ஒன்றுக்கு மேல் ஒன்று உள்ளவை. சரியை நிலையைத் தாண்டிக் கிரியை நிலைக்கு வந்து,கிரியை நிலையைத் தாண்டி யோக நிலைக்கு வந்துயோக நிலையைத் தாண்டி ஞான நிலையை அடைய வேண்டும். இவை நான்கும் சாதனம். ஞானத்திற்கு அப்பால் இறைவனுடைய அருள் இன்பமாகிய சாத்திய நிலை இருக்கிறது. அதுதான் முத்தி. அந்த நிலையை அடைய சாத்திரங்கள் சொல்லுகின்ற படிநிலையை வேறுவிதமாக அருணகிரிநாதர் சொல்லுகிறார்.

 

     முதலில் முருகப் பெருமானுடைய திருவருள் வேண்டும் என்கிறார். அந்த அருள் கிடைத்தால்நமக்கு அன்பு உண்டாகும். முருகப்பெருமானைத் தொழும் இயல்பு வரும். இறைவனுடைய அன்புகொண்டு தொழுவதற்கு முன்னால் அருள் எப்படிக் கிடைக்கும்என்ற ஐயம் தோன்றும். நம்மால் எந்தக் காரியத்தையும் தொடங்கி நிலை நிறுத்துவது முடியாது. இறைவன் திருவருள் துணைக் கொண்டேதான் நாம் இயங்கவேண்டும். இறைவன்பால் அன்பு உண்டாவதற்குக் கூட அவன் அருள் வேண்டும். நமக்கு அவன்பால் அன்பை உண்டாக்குகின்ற அருள் வேறு முடிந்த முடிபாகிய இன்பத்தைத் தருகின்ற அருள் வேறு. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகர் காட்டினார். "பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே" என்றார் அப்பர் பெருமான். "பணிவித்தால் பணிகின்றேன்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     இறைவன் பேரருள் கிடைத்தால் இன்பம் உண்டாகும். ஆனால்அந்த அருள் கிடைப்பதற்கு முன்னால் பல முயற்சிகள் செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக ஆரம்பத்தில் அவன் திருவருள் கிடைத்தால்தான் அந்த முயற்சிகளைச் செய்ய முடியும். அந்த அருள்சாதனத்தைப் பெறுவதற்குரிய அருள்பின்னாலே பெறும் அருள் சாத்தியத்தைப் பெறும் அருள். இராப்பகல் அற்ற இடத்தை அடைவதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் தொடங்கும்போதே அவனுடைய திருவருள் நமக்குத் துணையாக இருக்க வேண்டும். அதை முதற்படியாக "அராப் புனை வேணியன் சேய்அருள் வேண்டும்" என்கிறார் அடிகளார். "அராப் புனை வேணியன்" என்பது ,பாம்புகளை அணிந்துள்ள சிவபெருமானைக் குறிக்கும். அவனது குழந்தையாகிய முருகனுடைய அருள் வேண்டும்.  

 

     நமது மனம் புற்றுக்குள் இருக்கும் பாம்பைப் போன்றது. நஞ்சு கக்குகிற பாம்பு.  நான்குபேர் அறியப் புறப்படாத பாம்பு. கருடனுக்கு அஞ்சுகிற பாம்பு. புற்றில் வாழும் பாம்புஇறைவன் திருச்சடையைச் சார்ந்து இருக்குமானால்அதன் தன்மையே மாறிவிடும். அந்தப் பாம்பைப் போன்று வாழ்க்கை மாறி,  நமது மனத்தின் தீய தன்மைகளும் மாறும்மாறாத இன்பம் விளங்கும். இந்தக் குறிப்பை இப்பாடலில் பொதிய வைத்துள்ளார் அருணகிரிநாதர்.

 

     இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெரியவர்கள்உடம்பில் வாழும் காலத்தில்கருவிகரணங்களோடு பல தொழில்களைச் செய்தாலும்அவர்கள் சிவபிரானிடம் உள்ள பாம்பு போல உயர்ந்த நிலையில் எல்லோரும் போற்றும் பொருளாக இருப்பார்கள். அப்படி இல்லாதவர்கள் தாழ்ந்த நிலையில் எல்லோரும் அஞ்சும் பொருளாக இருப்பார்கள். 

 

     இரண்டாவது படியாக, "அவிழ்ந்த அன்பால் குராப் புனை தண்டை அம் தாள் தொழல் வேண்டும்" என்றார். மனத்தில் உள்ள நல்ல குணங்கள் மலர்ந்துஅதனால் உயிர்கள் நல்ல நெறியை அடையவேண்டும் என்பதே இறைவன் திருவுள்ளம். மனம் என்னும் தாமரைமலராமல் மொட்டாகப் பக்குவம் இன்றி இருந்தால்அதில் ஞானமணம் வீசாது. மனம் பக்குவம் அடையாமல்மலராமல் மொட்டாக இருக்கும்போது 'நான்என்ற தன்முனைப்போடு நிற்கும். அதில் அன்பு என்ற மணம் மலரும் போது அந்த முனைப்பு விரிந்துஇல்லாமல் போய்விடும். 

 

     நமக்கு அன்பு உண்டு. ஆனால் அது மலர்ந்த அன்பு அல்ல.  மனைவி மக்கள்சுற்றம்உற்றார் உறவினர் என்ற நிலையில் குறுகி உள்ள அன்பு. அது அன்பு அல்லபற்று. அன்பு வடிவாக அனைத்து உயிர்க்கும் தலைவனாக இருப்பவன் இறைவன்உயிர்கள் யாவும் அவனது குழந்தைகள்என்னும் உணர்வு வந்தால்உள்ளம் மலரும். இதுதான், "அவிழ்ந்த அன்பு" என்பதாகும். அவிழ்ந்த அன்பின் பயனாகஆன்மநேயமும்சீவகாருண்ணியமும் நிறைந்து இருக்கும்.

 

     முருகப் பெருமானுக்கு உகந்தது குரா மலர். திருவிடைக்கழி என்னும் தலத்தில் குரா மரத்தின் அடியில் முருகன் எழுந்தருளியிருக்கிறான். திருவிசைப்பாவில் சேந்தனார்அப்பெருமானைப் பாடியிருக்கிறார்.  "கொந்து வார் குரவு அடியினும்அடியவர் சிந்தை வாரிச நடுவினும்நெறிபல கொண்ட வேதநல் முடியினும் மருவிய குருநாத" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி உள்ளார். 

 

     இறைவனுடைய திருவருள் துணையினால் அன்பு விரிந்து அந்தப் பெருமானுடைய திருவடியைப் பற்றிக் கொள்ளும் நிலை வந்தால்நாமும் அடியவர்களாகிஐம்பொறிகளை வென்று இறைவனைச் சாரும் நிலை பெறலாம். அப்போது கருவி கரணங்கள் யாவும் இயற்கையாகத் தமக்குள்ள தொழில்களையே செய்து கொண்டிருந்தாலும்அந்தத் தொழில்கள் யாவும் இறைவனைச் சார்ந்தவை ஆகிவிடும்.

 

     மூன்றாவது படியா, "கொடிய ஐவர் பராக்கு அறல் வேண்டும்" என்றார். நம்முடைய ஐந்து இந்திரியங்களின் வழியே நாம் போவதால்அவைநமக்குத் துன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. அதனால் அவை கொடிய ஐவர் ஆயின. அந்த ஐந்தும் நமது வழியில் நின்றால்அவற்றால் நாம் அன்பு பெறுவதற்குரிய நெகிழ்ச்சி நிகழும். இதனைநமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் பின்வருமாறு பாடுகிறார்.

 

"பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்து உண்டு;

மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன;

மேய்ப்பாரும் உண்டாய்,வெறியும் அடங்கினால்,

பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே.” 

 

     வெறியோடு கூடிய மாடுகள் தக்கபடி அடக்கப் பெற்றால் பாலைச் சொரியும். வெறித்த மாடுகளாக நமது ஐந்து இந்திரியங்களும்தமது போக்கில் போய்க் கொண்டிருந்தால் அவற்றைப் பெற்றவனுக்குத் துன்பந்தான் விளையும். அவை அடங்கித் தமது போக்கில் போகாமல் நின்றுவிட்டால்அப்போது இறைவனைத் தொழும் வகையில் அந்த ஐந்து இந்திரியங்களும் செயல்படும். அதனால் அவனுடைய அருள் அனுபவத்திற்கு உரிய வழியில் அவை நிற்கும். பகையாக நின்றவை உறவாக ஆகிவிடும். இதனையே திருமூலர் உருவகமாகச் சொல்லுகிறார். 

 

     அப்படிகொடிய ஐவராக இருக்கிறவர்கள் நமக்கு ஏற்றவர்களாக ஆகவேண்டும் என்றால் இறைவன் திருவருளும்அவன் திருத்தாளிடத்தில் அன்பும் உண்டாக வேண்டும். அவன் திருவடியைத் தொழுதல் வேண்டும். இதுவரை அவனுடைய  திருவருள் இல்லாமையினால் அவை புறப்பொருள் பார்வை உடையனவாக இருந்தன. அந்தப் பார்வை இப்போது அறுந்து போகும். பராக்கு அற்றுப் போகும். "பராக்கு" என்பதுபார்க்க வேண்டியதைப் பார்க்காமல்மற்றவற்றைப் பார்ப்பது. இறைவனுடைய அருளால் அன்பு உண்டான பிறகு இவை யாவும் மாறிவிடும். அவன் அருள் கிடைக்காத வரைக்கும் இந்திரியங்கள் பல வகையில் அலைக் கழித்துத் துன்புறுத்தும். வெளிமுகமாக இருக்கும் நோக்கம் எல்லாம்இறைவன் அருளால் உள்முகமாக மாற வேண்டும். அப்போதுமனத்தில் உள்ள பதைபதைப்பு எல்லாம் அடங்கிப் போகும்.

 

     மனம் பதைப்பு அறுதல் நான்காவது படி. மனம் பதைப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அது விரிந்து விரிந்து செல்கிற பிரபஞ்சச் சுழலில் சிக்குண்டு கிடக்கிறது. விருப்பு வெறுப்புகளால் தாக்குண்டு நிற்கிறது.  இவை மாறவேண்டுமானால்இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பு மலரவேண்டும். அன்பு விரிவடைந்துஇந்திரியங்கள் பராக்கு அற்றால்மனம் பதைப்பு அற்று,ஒருமை நிலைக்கு வரும். அப்போது இராப்பகல் அற்ற நிலை வந்துவிடும். 

 

     சுற்றிச் சுற்றி அலைந்த குழந்தை கண்ட கண்ட இடங்களில் விளையாடி அழுக்கைச் சேர்த்துக் கொண்டு தூய்மை கெட்டுஉடம்பில் புண் உண்டாகி வருந்துகிறபோதுதாய் அதனைத் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு வந்து தூய்மை செய்கிறாள். தொட்டிலில் போட்டுத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். தாயின் தாலாட்டுப் பாட்டில் மனம் செலுத்தி ஒன்றுபடும்போது குழந்தை அப்படியே கிடந்து தூங்கிவிடுகிறது. 

 

     அந்த வகையில் பிரபஞ்சம் முழுவதும் தன் ஆசைக் கரத்தை நீட்டி ஐந்து இந்திரியங்கள் என்னும் வாசல்களின் வழியே எப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற மனம்வெளியே போவதை நீக்கி உள்ளே இருக்கும் எம்பெருமான் திருவடிக் கீழே தூங்கத் தொடங்கினால்இராப்பகல் அற்ற இன்பம் அதற்குக் கிடைத்துவிடும். இது படிப்படியாக வரவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான் மேற்குறித்த பாடலின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்.  இந்தப் பாடலின் பொருள் வருமாறு:-

 

     பாம்பை அணிந்த திருச்சடையை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவருள் முதலில் வேண்டும். (திருவருள் பெற்றதன் பலனாக) உள்ளத்தில் மலர்ந்து நெகிழ்ந்த அன்பால்குராமலர் மாலையைப் பூண்டு உள்ளதும்தண்டையை அணிந்து உள்ளதும் ஆகிய முருகப் பெருமானது அழகிய திருவடிகளை வணங்கவேண்டும். (வணங்கியதன் பலனாக) கொடிய ஐம்புலன்களின் வேடிக்கைச் சேட்டை ஒழிய வேண்டும். அதனால் மனப் பதைப்பு நீங்கப் பெறல் வேண்டும். இந்த நிலைகளை எய்தப் பெறுவோமானால்சகலகேவலம் அற்றநினைப்பு மறப்பு அற்றஇன்பதுன்பம் அற்ற (இரவு பகல் இல்லாத) இடத்தில் (இறைவன் திருவடி இன்பத்தை அனுபவித்துக் கொண்டு) அசைவற்று இருத்தல் எளிது ஆகும். அல்லாதவர்க்கு எளிது அல்ல.

 

     கேவலம்சகலம் என்கிற நினைப்பு மறப்புஅற்று இருக்கும் நிலையே ஒப்பும் உயர்வும் இல்லாத நிலை. அந்த நிலையில் பேரின்பம் ஊற்றெடுக்கும். அதை அனுபவிப்பதற்கு உரிய படிநிலைகளைக் கடந்து மேலேறுதல் வேண்டும். அதற்கு இறைவன் திருவருள் துணை நிற்கவேண்டும்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...