“ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார், மூப்பும் குறுகிற்று, நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே!
தில்லைச்சிற் றம்பலமே சேர்.”
இதன் பொருள் ---
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் – ஓடவும் நடக்கவும் இருந்த தன்மை (உடலில்) நீங்கியதுமே, இந்தப் பிறவியிலே அன்புடையவராய்ப் பொருந்தின மனைவி, மக்கள் சுற்றத்தார் முதலாயினார் முகமும் அகமும் திரிந்து வேறுபடுகின்றார்கள். மூப்பும் குறுகிற்று – கிழத் தன்மையும் வந்து சேர்ந்தது. நல் நெஞ்சமே – (ஆதலால்) எனது நல்ல மனமே! நாடுகின்ற நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமுன் – மிகவும் விரும்பப்படுகின்றதும், வண்டியில் பாரத்தைத் தாங்குகின்ற நல்ல அச்சாணியைப் போல, உயிரானது இருந்து செயல்படுவதற்கு இடமான இந்த உடம்பு செயலற்று வீழ்ந்து இறந்து, யாவருக்கும் பொதுவான இடமாகிய சுடுகாட்டினை அடையும் முன்பாகவே, தில்லைச் சிற்றம்பலமே சேர் – திருச்சிற்றம்பலத்தில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் பெருமான் எழுந்தருளி உள்ள தில்லை என்னும் திருத்தலத்தைச் சேர்வாயாக.
ஓடுகின்ற நீர்மை – ஒடுகின்ற தன்மை. நடத்தலோடு ஓடுகின்ற தன்மையும் உள்ள உடம்பு நோயும் முதுமையும் வந்த காலத்துத் தளர்ந்து போகும். முதுமை வந்த பிறகு மூன்று கால் என்பது போல, தடி ஊன்றி நடக்க நேரிடும். பிறர் துணை இல்லாமல் இயங்கமுடியாது. மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாவரும் நம்மை வெறுக்கத் தலைப்பட்டுவிட்டார் என்பது அவருடைய முகம் திரிந்த நிஙலையால் அறியலாம். அகம் திரியவே முகமும் திரிந்து விடும். எனவே, “ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார்” என்றார். உற்றாரும் என்று உம்மை கொடுத்திருப்பது, மனைவி மக்கள் முதலாயினாரையும் குறிக்கும்.
வண்டியானது இயங்குவதற்கு அச்சாணி என்கிற அச்சு அவசியம். அது போலவே, உயிர் இயங்குவதற்கு அச்சாக அமைந்துள்ளது இந்த உடம்பு. நோய், நொடி, முதுமை காரணமாக, விதிக்கப்பட்ட வாழ்நாள் முடிவில் இந்த உடம்பு இற்றுப் போகும். உயிர் பிரிந்த உடம்பை இடுகின்ற இடம் எல்லோருக்கும் பொதுவானது என்பதால் “அம்பலம்” என்றார்.
தில்லையைத் தரிசிக்க முத்தி என்பது பெரியோர் வாக்கு. தில்லையை அடைந்து, திருச்சிற்றம்பலத்தில் பெருமானை வணங்கப் பெறுவாயானால், அப்பெருமான் உன்னை இறப்பு பிறப்பு என்னும் இன்னல்களில் இருந்து நீக்கி, என்றும் இன்பம் பெருகும் நிலையில் வைத்து அருளுவார் என்பது அறிவுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment