பாடல் 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்

குஞ்சி குறங்கின்மேல் கொண்டுஇருந்து கஞ்சி

அருத்தஒருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே

திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.


இதன் பொருள் –


நெஞ்சே – மனமே! வஞ்சியன நுண்ணிடையார் --- வஞ்சிக் கொடியைப் போலும் நுண்மையான இடையினை உடைய பெண்கள், வாள் தடம் கண் ஈர் சோர --- தமது வாளைப் போன்று ஒளியும் கூர்மையும் உடைய கண்களில் இருந்து நீர் வழிய, குஞ்சி குறங்கின்மேல் கொண்டு இருந்து – தலையினைத் தமது துடையின் மேல் வைத்துத் தாங்கிக் கொண்டு, ஒருத்தி – இன்னொரு பெண்ணை, கஞ்சி அருத்தக் கொண்டு வா என்னா முன் – கஞ்சியினை குடிப்பிக்கக் கொண்டு வா என்று சொல்லும் நிலை வருமுன்பாகவே,  திருத்துருத்தியான் பாதம் சேர் – திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை அடைவாயாக.

        வஞ்சி - கொடி; வஞ்சிக்கொடி.  கண் நீர் சோர - நோயின் நிலையினை எண்ணி வருந்திக் கண்ணீர் சோர; குஞ்சி - மயிர்; தலையைக் குறித்தது;  குறங்கு – துடை. கஞ்சி அருத்த - கஞ்சியினை உண்பிக்க.  திருத்துருத்தி என்பது சோழநாட்டில், காவிரித் தென்கரையில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும்.  மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து 9 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய திருத்தலங்கள் அருகாமையில் உள்ளன.


No comments:

பாடல் 5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக் குஞ்சி குறங்கின்மேல் கொண்டுஇருந்து கஞ்சி அருத்தஒருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே திருத்துருத்தி ய...