50. காலத்தில் உதவாதவை

 


            50. காலத்தில் உதவாதவை

                              -----


"கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்

     கட்டிவைத் திடுகல்வியும்

காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்

     கையிற் கொடுத்தபொருளும்


இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதம்என்

     றிருக்கின்ற குடிவாழ்க்கையும்

ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்

     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்


சொல்லான தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்

     சொல்லும்வஞ் சகர்நேசமும்

சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண

     துரிதத்தில் உதவா துகாண்


வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற

     வள்ளிபங் காளநேயா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வல்ஆன் கொங்கை மடமாது தெய்வானை குறவள்ளி பங்காள நேயா - சூதாடு கருவிபோன்ற கொங்கைகளை உடைய இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும் பங்காளனான காதலனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கல்லாது புத்தகந்தனில் எழுதி வீட்டினில் கட்டி வைத்திடு வித்தையும் - கற்காமலே ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், 

காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அந்நியன் கையில் கொடுத்த பொருளும் - விரும்பியபோது பயனடைய வேண்டும் என்று அயலானிடம் கொடுத்த பணமும், 

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடிவாழ்க்கையும் - தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலை என்று நினைத்து வாழும் வாழ்க்கையும், 

ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் - மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும், 

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றும் ஆ சொல்லும் வஞ்சகர் நேசமும் - சொல்வது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர்களிடத்தில் கொண்ட நட்பும், 

சுகியமாய் உண்டு என்று இருப்பதெ எல்லாம் துரித தருணத்தில் உதவாது - நன்மையாகக் கிடைக்கும் என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கண் வந்த காலத்தில் விரைவாகப் பயன்படமாட்டா.

     (விளக்கவுரை) வல்-சூதாடு கருவி. பாரி-மனைவி. தேச - அந்தரம்: தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு. அந்தரம் - முடிவு. சுகியம் (வட) - நன்மை.


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...