49. வீண் போகாமல் பயன் விளைப்பவை

49.  வீண் போகாமல் பயன் விளைப்பவை

                                    -----


"பருவத்தி லேபெற்ற சேயும், புரட்டாசி

     பாதிசம் பாநடுகையும்,

பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே

     பயிர்கொண்டு வருகரும்பும்,


கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்

     கடன்இட்டு வைத்த முதலும்,

காலம்அது நேரில் தனக்கு உறுதியாக முன்

     கற்று உணர்ந்திடு கல்வியும்,


விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும்,

     விவேகிகட்கு உபகாரமும்,

வீண் அல்ல, இவை எலாம் கைப்பலன் அதாக,அபி

     விர்த்தியாய் வரும் என்பர்காண்,


மரு உலாவிய நீப மாலையும் தண் தரள

     மாலையும் புனை மார்பனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மரு உலாவிய நீபமாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே --- மணம் பொருந்திய கடப்பமலர் மாலையையும் குளிர்ந்த முத்துமாலையையும் அணிந்த திருமார்பனே! 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

பருவத்திலே பெற்ற சேயும் --- நல்ல இளமைப் பருவத்திலே பெற்றுடுத்த குழந்தையும்,

புரட்டாசி பாதி சம்பா நடுகையும் --- புரட்டாசி மாத நடுவினில் நடவு செய்த சம்பா பயிரும், 

பலம் இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர் கொண்டுவரு கரும்பும் --- நன்மை தரும் ஆடி மாதத்தில் யானையின் வாலைப் போலக் குருத்துக் கொண்டு விரிந்து வரும் கரும்பும், 

கருணையொடு மிக்க நாணயம் உளோர் கையினில் கடன் இட்டு வைத்த முதலும் --- உள்ளத்தில் அருளும் மிகுந்த நல்லொழுக்கமும் உடைய நல்லோரிடம் கடனாகக் கொடுத்து வைத்த முதல் பொருளும், 

காலம் அது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் --- துன்பம் நேர்ந்த காலத்தில் இளமையிலேயே தனக்கு இறுதி வேண்டிக் கற்று உணர்ந்த கல்வியும், 

விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் --- சிறப்புகள் மிக்க அரசர்களைக் கண்டு அவரோடு பழகிய நட்பும், 

விவேகிகட்கு உபகாரமும் --- அறிவு உள்ளவர்களுக்குச் செய்த உதவியும், 

வீண் அல்ல --- வீணாகப் போவன அல்ல.

இவையெலாம் கைப்பலன் அது ஆக அபிவிர்த்தியாய் வரும் என்பர் --- இவைகள் எல்லாம் கைமேல் பலன் தருவனவாக வளர்ச்சி அடையும் என்பர் மேலோர்.

     (விளக்கம்) மரு - மணம். தரளம் - முத்து. புரட்டாசி பாதி - புரட்டாசி பதினைந்து நாட்களுக்குள். விருது - கொடி. குடை முதலிய அடையாளங்கள். 'அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் முன்னாளில் இட்ட பொருளும் பின்னாளிலே பயன்படும்' என்பது பழமொழி


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...