65. உணவில் விலக்கு

 


                      65. உணவில் விலக்கு

                                  -----


கைவிலைக் குக்கொளும் பால், அசப் பால், வரும்

     காராக் கறந்த வெண்பால்,

  காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறு

     காந்திக் கரிந்த சோறு,


செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,

     தென்னை, வெல்லம், மலாவகம்,

  சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடு

     சிறப்பில்வெண் கத்த ரிக்காய்,


எவ்வம்இல் சிவன்கோயில் நிர்மாலி யம்,கிரணம்,

     இலகுசுட ரில்லா தவூண்,

  இவையெலாம் சீலமுடை யோர்களுக் காகா

     எனப்பழைய நூலுரை செயும்.


ஐவகைப் புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---

ஐவகைப் புலன் வென்ற முனிவர் விண்ணவர் போற்றும் அமலனே - ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும் தூயவனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கைவிலைக்குக் கொளும் பால் - கைவிலைக்கு வாங்கும் பாலும், 

அசப்பால் - ஆட்டுப்பாலும், 

வரும் கார் ஆ கறந்த வெண்பால் - வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும், 

காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு, செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம், மலாவகம்,

சீர்இலா வெள் உள்ளி - சிறப்பில்லாத வெள்ளைப் பூண்டு, 

ஈர்உள்ளி - (சிறப்பில்லாத) வெங்காயமும், 

இங்குவொடு - பெருங்காயத்துடன், 

சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் - சிறப்பில்லாத வெள்ளைக் கத்தரிக்காயும், 

எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் - குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட பொருளும், 

கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் - சூரியன் ஒளியும், விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், 

இவையெலாம் சீலம் உடையோர்க்கு ஆகா - இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை, 

எனப் பழைய நூல் உரைசெயும் - என்று பழைமையான நூல்கள் கூறும்.


      ஐவகைப்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அசம் - ஆடு. கொம்மடி - தும்மட்டிக்காய். மலாவகம் - பிண்ணாக்கு. நிர்மாலியம் (வடமொழி) - கழிக்கப்பட்ட பொருள். எவ்வம் - குற்றம். கிரணம் : இங்கு ஞாயிற்றின் கதிரைக் குறிக்கின்றது.


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...