மூடனைத் திருத்த இயலாது

 

பேதையைத் திருத்த இயலாது,

 தன்னாலேயே கொட்டுப் போவான்

-----

 

     திருக்குறளில் "பேதைமை" என்னும் ஓர் அதிகாரம். பேதைமை என்பது அறிய வேண்டுவது ஏதும் அறியாமை ஆகும்.

 

     நட்பு என்பது காமத்தால் உண்டாவது. பகை என்பது கோபத்தால் உண்டாவது. காமம், கோபம் என்னும் இவ்விரண்டு குற்றங்களையும் முழுதும் நீக்குவது அரிது. கோபத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களாலும், காமத்தால் வரும் பகையினை ஐந்து அதிகாரங்களால் கூறினார். கோபத்திற்கும் காமத்திற்கும் அடிப்படையாக உள்ள மயக்க அறிவினை இரண்டு விதமாக்கி, ஒன்றைப் பேதைமை என்றும், மற்றொன்றைப் புல்லறிவாண்மை என்றும் கூறினார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "அறிவிலியானவன் செயல்முறை அறியாத ஒரு செயலை மேற்கொண்டால், அது நிறைவேறாமல் போவது மட்டுமா? மேலும் விலங்கு என்னும் தளையையும் அவனே பூணுவான்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவில்லாத ஒருவன், தனக்கு ஒரு பயன் வேண்டி, ஒரு செயலை மேற்கொள்வானானால், எடுத்த செயலை முடிக்கும் விதத்தை அறியாமல், தொழிலைக் கெட்டுப் போகச் செய்வதுடன், அதற்கு உரிய தண்டனையையும் அவனே தேடிக் கொள்ளுவான் என்று காட்ட,

 

பொய்படும் ஒன்றோ, புனை பூணும், கை அறியாப்

பேதை வினை மேல்கொளின்.           

 

என்னும் திருக்குறளை அருளினார் நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தன்தலைமேல் தன்கைவைத்துஓர் தானவன்முன் பெற்றவரம்

சென்றுஇறக்கல் ஆச்சே, சிவசிவா - என்றென்றும்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்

பேதை வினைமேல் கொளின்.                

 

இதன் பொருள் ---

 

     பஸ்மாசுரன் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, தான் யார் தலைமேல் கை வைத்தாலும் அவர் மாளவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். சிவன் தலையிலேயே கை வைக்கத் துணிந்தான். சிவன் மறைந்தனன். திருமால் செய்த வஞ்சனையால் தன் தலைமேல் கைவைத்து மாண்டான்.

 

     தான் எண்ணியதும் முடியவில்லை. தானும் அழிந்து போனான்.

 

     மணலுள் மறைந்திருக்கும் தவளையானது தனது குரலால் கெட்டுப் போனது போ, அறிவில்லாதவன் தனது சொல்லாலேயே தனக்குத் துயரத்தைத் தேடிக் கொள்வான் என்கின்றது பின்வரும் பாடல்...   

 

பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை,தன்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும், - நல்லாய்!

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலும்தன் வாயால் கெடும்.        --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     நல்லாய் --- நற்குணம் உடையாய்!, மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும் --- மணலுள் பதிந்து மறைந்திருக்கும் தவளையும், தன் வாயால் கெடும் --- தன் குரலைக் காட்டுதலால் தன் வாயாலேயே தன்னைத் தின்பார்க்கு அகப்பட்டு இறந்து ஒழியும், (அதுபோல) பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை --- தீயனவற்றைக் கூறி ஒளித்து நிற்கும் அறிவிலான், தன் சொல்லாலே தன்னைத் துயர்ப் படுக்கும் --- தான்கூறும் சொற்களாலேயே தன்னைத் துன்பத்தின்கண் அகப்படுத்திக் கொள்வான்.

 

         அறிவில்லான் தன் வாயாலேயே தனக்குத் தீங்கு தேடிக்கொள்வான்.  இதற்குக் காரணம் ஆணவம். அது அறிவை மறைக்கும் என்பர் பெரியோர். ஆணவம் என்பது அறிவை விளங்க ஒட்டாமல் செய்யும். ஆணவம் என்னும் சொல்லுக்கு அறியாமை, அவிச்சை என்றும் பொருள் உண்டு. எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அறியாமை நிறைந்துள்ள மூடர்களைத் திருத்துவது இயலாத காரியம் என்கின்றது "அறப்பளீசுர சதகம்".

 

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!

     நெருப்பைநீர் போல் செய்யலாம்!

  நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!

     நீள்அர வினைப்பூ ணலாம்!

 

பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்

     பட்சமுட னேஉண்ண லாம்!

  பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்

     பாவைபே சப்பண் ணலாம்!

 

ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்

     எடுக்கலாம்! புத்தி சற்றும்

  இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே

     எவருக்கும் முடியாது காண்!

 

ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

     மேவு ஆர் கொன்றை புனை வேணியா --- விரும்பிய ஆத்தி மலரையும் கொன்றை மாலையையும் புனைந்துள்ள சடைமுடியை உடையவனே! சுரர் பரவும் அமலனே --- தேவர்கள் போற்றுகின்ற தூயவனே!,  அருமை மதவேள் --- அருமை பொருந்திய மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- சதா காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே ---- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

 

     நீர் மேல் நடக்கலாம் --- தண்ணீரின் மேல் நடந்து செல்லலாம்;  எட்டியும் தின்னலாம் --- மிகுந்த கசப்புச் சுவையை உடைய எட்டிக் காயையும் தின்னலாம்;  நெருப்பை நீர் போல் செய்யலாம் --- நெருப்பைத் தண்ணீர் போல் குளிரச் செய்யலாம்; நெடிய பெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம் --- நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்; நீள் அரவினைப் பூணலாம் --- நஞ்சு உடைய  நீண்ட பாம்பை, அது கடிக்காமல் பண்ணி, தோள் மேலே அணிந்து கொள்ளலாம்;  பார் மீது மணலைச் சோறு எனச் சமைக்கலாம் --- உலகத்திலே உள்ள மணலைச் சோறாகச் சமைக்கலாம்; பட்சமுடனே உண்ணலாம் --- அப்படிச் சமைத்ததை அன்புடன் உண்ணலாம்; பாணமொடு குண்டு விலகச் செய்யலாம் --- அம்பையும் துப்பாக்கி, பீரங்கி ஆகியவற்றின் குண்டுகளையும் நம் மீது படாமல் விலகும்படிச் செய்யலாம்; மரப்பாவை பேசப் பண்ணலாம் --- மரத்தால் செய்யப்பட்ட பதுமையைப் பேசும்படி செய்யலாம்;  ஏர் மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும் எடுக்கலாம்  --- அழகிய காடியையும் கடைந்து  அதிலிருந்து வெண்ணெயையும் எடுக்கலாம்;

 

     புத்தி சற்றும் இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே எவருக்கும் முடியாது --- அறிவு என்பது சிறிதும் இல்லாத பேதையரின் மனத்தைத் திருத்த யாவராலும் முடியாது.

காண் --- இதை நீ அறிவாயாக.

 

          நீர்மேல் நடத்தல், நெருப்பை நீர்போல் குளிர வைத்தல் ஆகிய சித்திகளை அரிதில் ஒருவன் முயன்று பெறலாம். கொடிய விலங்கும் நஞ்சுடைய பாம்பும் கூட வசியத்தால் வசமாகும். இவை எல்லாம் உலகிலே நாம் காணக் கூடிய வித்தைகளே. ஆனால், ஒருவன் செய்தற்கு அரிய செயல் என்பது அறிவற்ற ஒருவனின் மனத்தைத் திருத்துவதுதான். அதுதான் யாராலும் முடியாத ஒன்று.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...