சமயப் பூசல் கூடாது.

 

 

சமயப் பூசல் சமயத்துக்கு உதவாது

-----

 

     சமயங்களுக்கு இடையில் பூசல். சமயங்களில் கொள்கைப் பூசல். அவரவர் தாம் கருதியதே சரி என்று கொண்டாடி, தமக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டதால், சமயங்களில் உட்பிரிவுகள் தோன்றின. சமயப் பூசல்களால், மனிதகுலம் இதுவரையில் பட்டபாடு சொல்லிமுடியாது. சமயக் கருத்தையும், கடவுள் உண்மையையும் தெளிந்து கொள்ளாத சமயிகளால் உண்டான இந்த ஊறு இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டே உள்ளது.

 

அங்குஇங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய்,

          ஆனந்த பூர்த்தியாகி,

     அருளொடு நிறைந்தது எது? தன்அருள் வெளிக்குளே

          அகிலாண்ட கோடியெல்லாம்

தங்கும் படிக்குஇச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த்

         தழைத்ததுஎது? மனவாக்கினில்

     தட்டாமல் நின்றதுஎது? சமய கோடிகள் எ(ல்)லாம்

          தம்தெய்வம் எம்தெய்வம் என்று

எங்கும் தொடர்ந்துஎதிர் வழக்குஇடவும் நின்றதுஎது?

          எங்கணும் பெருவழக்காய்

     யாதினும் வல்ல ஒரு சித்தாகி, இன்பமாய்

          என்றைக்கும் உள்ளதுஎது? மேல்

கங்குல்பகல் அறநின்ற எல்லை உளதுஎது, அது

          கருத்திற்கு இசைந்தது, அதுவே

     கண்டன எலாம் மோன உருவெளி அது ஆகவும்

          கருதி அஞ்சலி செய்குவாம்.

 

     இது தாயுமான அடிகளார் அருளிய பாடல். எல்லாப் பொருள்களிலும், எங்கும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்ற பரம்பொருளின் தன்மைகளை இந்தப் பாடலில் விரித்துக் கூறுகின்றார்.

 

        இதன் பொருள் ---

 

      வெளிப்பட்டும் மறைந்தும் உள்ளதாகிய அண்டங்களுள், தொலைவில் உள்ளவை, நிலவுலகம், கீழுலகம் ஆகிய அண்மையில் உள்ளவை என்று சுட்டிக் கூறி அறியமுடியாதபடி, எவ்விடத்திலும் பேரொளியாய், முழுநிறை இன்பமாகி, தனது அறிவு ஆற்றலொடு பிரிப்பு இல்லாமல் நிறைவாய் உள்ளது எந்தப் பொருளோ? தன்னுடைய அருள் வெளியிலே, எல்லா உலகங்களும், நிலைக்குமாறு பெருங்கருணை வைத்து, உயிருக்குள் உணர்வாகி விரிந்து இருப்பது எந்தப் பொருளோ? மனத்தால் நினைப்பற்கும், வாயால் சொல்வற்கும் எட்டாமல் நிலைபெற்று உள்ளது எந்தப் பொருளோ? பல்வேறு சமயங்களும் எம்முடைய தெய்வம், எம்முடைய தெய்வம் என்று, எவ்விடங்களிலும் எப்போதும் விடாது நின்று வழக்கிடும்படியாக அவரவர் கற்பித்துக் கொண்ட தெய்வமாக நின்றது எந்தப் பொருளோ? இம்முறையாக எவ்விடத்தும், முடிவு பெறாத பெரிய வழக்காகி, எத்தொழிலும் வல்லதும், தானே தனக்கு நிகராய் விளங்குகின்ற ஒப்பற்ற  பேரறிவுப் பொருளாக, பேரின்பப் பெருவடிவாக, எக்காலத்தும் ஒன்றாய், மாறா இயல்பாய் இருப்பது எந்தப் பொருளோ? பின்னும், இரவு பகல் அல்லாது (நினைப்பு மறப்பு, இன்பம் துன்பம், பிறப்பு இறப்பு என்ற எல்லா நிலைகளையும் கடந்து) நின்ற ஓரிடத்தினை வாய்ந்தது எந்தப் பொருளோ? அந்தப் பொருளே எல்லாருடைய கருத்திற்கும் இசைவாக உள்ளது. ஆதலால் அப் பரம்பொருளையே, காணப்பட்ட பூதங்களும், பூதத் தொடர்புகளாகவும், மௌன வடிவமான வெளியீடாகவும் தியானித்து நாம் கைகூப்பி வணங்குவாம்.

 

     பள்ளிக்குச் சென்று படிநிலையிலே நின்று அறிவைப் பெற்றுப் பெருக்கிக் கொள்வது போல, பரம்பொருளின் நிறைவான தன்மையை உணர்ந்து, அந்த உணர்விலேயே திளைத்து, நுண்ணுர்வு பெற்று இருப்பதற்கான வழியாக, ஆங்காங்கே சமய நெறிகள் உண்டாயின. நாமம் (NAME) ரூபம் (FORM) இல்லாத கடவுளை, ஒரு குறியில் வைத்து வழிபடுவதற்காக, சமய நெறிகள் வகுக்கப்பட்டன.

 

     அவ்வாறு வகுக்கப்பட்ட, அறுவகைச் சமயங்களும் இறைவனை அடைதற்கு வகுக்கப்பட்ட நெறிகளே. அவற்றின் உண்மையை உள்ளபடி உணர்ந்து தெளியாது, சமய நெறிகளுக்கு உரை சொல்லுகின்ற அறிவற்றவர்கள், அவரவர் உணர்ந்தபடியே, சமய நெறிகளில் நல்லது இது, தீயது இது என்று, சொல்லித் திரிகின்றனர். இவர்களைப் பார்த்து,

 

ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள

என்றது போல இருமுச் சமயமும்;

நன்றுஇது தீதுஇது என்று உரையாளர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

 

என்றார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நயானார்.

 

     சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும், கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைதற்குச் சாதனமாக உள்ளன. நாம் கூறும் இதுவே நன்று, பிறர் கூறும் இது தீது என்று இங்ஙனம் தம்முள் பிணங்குகின்ற சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

 

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று ஒழுகுதற் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு, மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே"  என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பார், 'ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள' என்றார்.

 

     அவரவர் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். இதுவும் இல்லை. அதுவும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத்தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார். மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன?. குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன. தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

 

சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்

 

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், பூசலிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பது இதன் பொருள்.

 

     சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

 

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதனால்தான் "பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

 

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

 

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

 

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

 

     சரயு நதியின் அழகைப் பாடவந்த கம்பர், மேற்குறித்த திருமந்திரப் பாடலின் கருத்தை வைத்துப் பின்வருமாறு பாடியுள்ளார்.

 

கல் இடைப் பிறந்து போந்து

    கடல் இடைக் கலந்த நீத்தம்

எல்லை இல் மறைகளாலும் இயம்பு

    அரும் பொருள் இது என்னத்

தொல்லையின் ஒன்றே ஆகித்

    துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்

பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்

    போல் பரந்தது அன்றே.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     இமய மலையில் தோன்றி, அங்கிருந்து வந்து, கடலிலே கலந்துவிட்ட சரயு நதியின் வெள்ளமானது, அளவிட முடியாத வேதங்களாலும் சொல்லுதற்கரிய பரம்பொருள் போன்றது  இந்த வெள்ளம்  என்று சொல்லும்படியாக, ஆதிமுதலில் ஒன்றாகவே  இருந்து, ஏரி குளம் முதலிய வேவ்வேறு இடங்களில் எல்லாம்; விரிந்த ஆராய்ச்சியுடைய  பல்வேறு சமயவாதிகள் விளக்கி உரைக்கின்ற பரம்பொருள் போலப் பரந்து ஓடியது.

 

     பரம்பொருள் ஒன்று; அதுபோல வெள்ளநீரும் ஒன்றே. பல்வேறு சமய தத்துவங்களின் கருத்துக்கு ஏற்பப்   பரம்பொருளும் வெவ்வேறு நாம,  ரூப பேதங்களாக  விளங்குகிறது.  அதுபோலவே சரயுவின் வெள்ளநீரும் ஏரி,  குளம்,  கால்வாய் போன்ற பல இடங்களில் பல பெயர்களால் பரந்து செல்கிறது.

 

     தாயுமான அடிகளாரும், இக் கருத்தையே வலியுறுத்திப் பாடுகின்றார்...

 

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்,

     விளங்கு பரம்பொருளே! நின் விளையாட்டு அல்லால்,

மாறுபடும் கருத்து இல்லை, முடிவில் மோன

     வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற்று அம்மா.

 

இதன் பொருள் ---

 

     ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பலவகைச் சமயங்கள் அனைத்தினையும் புகுந்து ஆராய்ந்து பார்க்குமிடத்து, அனைத்திற்கும் மேலாகத் திகழும் தனிமுதற்பொருளே!  உன்னுடைய திருவிளையாடலே அல்லாமல் மாறுபாடு எய்தும் கருத்துகள் இல்லையாகும். பல ஆறுகளின் வெள்ளமானது, கடலில் கலந்த போது, கடல் நீரில் உள்ளது எந்த ஆறு என்று பகுத்து அறியமுடியாதவாறு போல முடிவில்லாத மவுனப் பெருங்கடலில், எல்லாச் சமயங்களும் கலந்து வேறுபாடு இன்றி, சமரசம் உற்று விளங்குகின்றன.

 

     எல்லாச் சமயங்களையும் சமரச உணர்வுடன் ஒப்ப மதித்தல் வேண்டும் என அறுவுறுத்தி உள்ளார்கள். "ஆறு அனைத்தும் புகும் கடல்போல் சமய கோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே" என்று தாயுமான அடிகளார் வேறு ஒரு பாடலிலும் காட்டி உள்ளார்.

 

இவ்வுண்மையை வள்ளல்பெருமானும்,  

                       

பொங்குபல சமயம் எனும் நதிகள் எல்லாம்

     புகுந்து கலந்திட, நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்

கங்குகரை காணாத கடலே! எங்கும்

     கண்ணாகக் காண்கின்ற கதியே! அன்பர்

தங்க நிழல் பரப்பி,மயல் சோடை எல்லாம்

     தணிக்கின்ற தருவே! பூந் தடமே! ஞானச்

செங்குமுதம் மலரவரு மதியே! எல்லாம்

     செய்யவல்ல கடவுளே! தேவ தேவே!

 

என்று அருளிச் செய்தார்.

 

     முன்னர் குறிப்பிட்டது போல, சமயங்களின் உண்மையைத் தெளிந்து அறிந்து கொள்ளமாலேயே, அவைகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பிணங்குவதே, சமயவாதிகளின் போக்காக உள்ளது என்பதை, அருணகிரிநாதப் பெருமானும்,     

"கலகல கல என, கண்ட பேரொடு  சிலுகு இடு சமயப் பங்க வாதிகள்" என்றும், "சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள், சமய பஞ்ச பாதகர்" என்றும் தமது அருளிச் செயலாகிய திருப்புகழ்ப் பாடல்களில் ஆங்காங்கே காட்டி உள்ளார்.

 

     கடலானது எப்போதும் ஒவென்று இரைந்து கொண்டே இருக்கும். சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும் கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச் சில கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்குத் துணை பிரிவதற்காக எழுந்தவை ஆகும். சண்டையிட்டுப் பிணங்கி, அறிவழிந்து போவதற்கு அல்ல.

 

"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     பொய்யான சமயங்களும், ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத சாத்திரங்களுமாகிய குழப்பமான கடலில் அகப்பட்டுக் கிடந்து, தடுமாறுகின்ற துன்பத்தைப் போக்கி,  தனது திருவடிகள் இரண்டையும் கொடுத்தருள்கின்ற திருவருட்செயலைப் போற்றி, நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

     , அருளாளர்கள் அனைவரும், அவரவர் சார்ந்து உள்ள சமயத்தின் உட்பொருளை உணர்ந்து தெளிந்து, திருவருள் பெற்று உயரவேண்டும் என்பது அல்லாமல், சமயக் கருத்துக்களைத் தெளியாமல், உயர்வு தாழ்வு கற்பித்து, ஒருவரோடு ஒருவர் பிணக்கம் கொண்டு அறிவிழந்து அழிந்து போதல் கூடாது என்றே அருளி உள்ளனர்.

 

     ஒரு சமயத்தைச் சார்ந்தவர், பிற சமயத்தாரை இகழ்ந்து, பரிகசிப்பது இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அவரவர் கொண்ட சமயத் தெய்வத்தைப் புகழ்ந்து பேசுவதும், பிற சமயத்தார் கருதும் தெய்வங்களை இகழ்ந்து பேசுவதும் நன்மையைத் தராது. ஆனால், இவ்வாறுதான் மனிதர்கள் உள்ளார்கள் என்பதை, கம்பர் காட்டுமாறு காண்போம்.

 

     மிதிலை நகரின் வீதிகளில் அழியா அழகு உடையவனாகிய இராமபிரான், தனது தம்பியோடும், விசுவாமித்திரரோடும் போகின்றான். அவனது அழகைக் கண்டு மயங்கிய பெண்களில், இராமனின் தோளைக் கண்டவர்கள், அதை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தோள்களின் அழகில் மயங்கிய பெண்களுக்கு, மற்ற உறுப்புக்களின் அழகு தோன்றவில்லை. இது எப்படி இருந்தது? ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் கடவுள்தான் உயர்ந்தவர் என்று கொண்டாடுகின்றார்கள். மற்ற மதங்கள் போற்றுகின்ற கடவுளர்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட மாட்டாதவர்களைப் போல் உள்ளது.

 

     சமயவாதிகள் யாரும், நாமரூபம் அற்ற கடவுளின் தன்மையை முழுமையாக உணரவில்லை என்பது போல, மிதிலை நகரில் உள்ள பெண்களில் யாரும் இராமனது முழு அழகைக் கண்டு களிக்கவில்லை.

 

தோள் கண்டார் தோளே கண்டார்;

    தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார்;

    தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே

    வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான்

    உருவு கண்டாரை ஒத்தார்.    --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

     (மிதிலையில் இருந்த மகளிருள்) இராமபிரானது தோள்  அழகைக் கண்டவர்கள் (அவ்வழகை முற்றும் கண்டு, களித்து முடியாமையால், பிற உறுப்புக்களின் அழகைப் பார்க்க  இயலாமையால்) அத்தோள் அழகினையே கண்டவண்ணம் இருந்தார்கள். வீரக் கழல்கள் அணிந்த தாமரைப் பூக்கள்  போன்ற (இராமனது) திருவடிகளைப் பார்த்தவர்கள் (வேறு    பார்க்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அவனது)   பெரிய திருக்கரங்களின் அழகைப் பார்த்தவர்களும் அவ்வாறே  (பிறவற்றை நோக்காது) அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, வாள் போன்ற ஒளி பொருந்திய

கண்களை உடைய பெண்களுள் இராமனது திருமேனி அழகினை முழுவதும் பார்த்தவர்கள் ஒருவரும் இல்லை. (தமக்குத் தாமே ஒவ்வொரு) முறையினைக் கொண்ட சமயங்கள், பிற சமயங்கள் கூறும் தெய்வங்களின் வடிவங்களை நோக்காது, தமது தெய்வ வடிவங்களையே நோக்கியவாறு இருப்பது போல,  இராமனைக் காண வந்த மகளிர் (அப் பெருமானின்) உறுப்புக்கள்  பலவும் நோக்காது, அவர்கள் தாம் தாம் கண்ட ஓர் உறுப்பின்

அழகிலேயே ஊன்றி நின்று விட்டனர்.

 

     எனவே, சார்ந்துள்ள சமயம் பற்றிய உண்மையையே முழுதும் அறியாமல், பிற சமயக் கருத்துக்களோடு பிணங்குவது அறியாமை என்பதை அறிதல் வேண்டும்.

 

     "எம்மதம் (எம் + மதம்) சம்மதம் தான்". (சம் --- நல்ல. சம்மதம் --- நல்ல மதம் தான்). அதே நேரத்தில் "எம்மதமும் "சம்மதம் (எந்த மதம் ஆனாலும் நல்ல மதம்தான்) என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...