பொது --- 1026. சிற்றாயக் கூட்ட

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

சிற்றுஆயக் கூட்ட (பொது)

 

முருகா! 

பிறவி அறத் திருவருள் புரிவாய்

 

தத்தானத் தாத்தத் தனதன

     தத்தானத் தாத்தத் தனதன

          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான

 

 

சிற்றாயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச்

 

சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு

     பித்தேறிக் கூப்பிட் டவர்பரி

          செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை

 

உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு

     பற்றாயப் பூட்டுக் கயிறுகொ

          டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி

 

உக்காரித் தேக்கற் றுயிர்நழு

     விக்காயத் தீப்பட் டெரியுட

          லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ......மொருநாளே

 

வற்றாமுற் றாப்பச் சிளமுலை

     யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு

          மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா

 

மத்தோசைப் போக்கிற் றயிருறி

     நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம்

          வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே

 

கற்றாவிற் காட்டிக் கரைதுறை

     நற்றாயிற் காட்டிப் புகழ்கலை

          கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே

 

கைச்சூலக் கூற்றைக் கணைமத

     னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி

          கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி

          சற்று ஏறப் பார்த்து,சிலபணி ...... விடை ஏவி,

 

சில் தாபத்து ஆக்கைப் பொருள்கொடு

     பித்துஏறி,கூப்பிட்ட அவர் பரிசு

          எட்டாமல்,தூர்த்தத்து அலைபடு ...... சிறுகாலை,

 

உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு

     பற்று ஆயப் பூட்டுக் கயிறுகொடு,

          உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு ...... தடுமாறி,

 

உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி,

     காய் அத் தீப் பட்டு எரி உடல்

          உக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே?

 

வற்றா முற்றாப் பச்சிள முலை-

     யில் பால் கைப் பார்த்துத் தரும் ஒரு

          மைக் காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா!

 

மத்து ஓசைப் போக்கில் தயிர் உறி

     நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இருபதம்

          வைத்து ஆடிக் காட்டிப் பருகுஅரி ...... மருகோனே!

 

கல் தா வில் காட்டிக் கரை துறை 

     நற்றாயில் காட்டிப் புகழ் கலை 

         கற்றார் சொல் கேட்கத் தனி வழி ..... வருவோனே

 

கைச்சூலக் கூற்றை,கணை மத-

     னைத் தூள் பட்டு ஆர்ப்பக் கனல்பொழி

          கர்த்தாவுக்கு ஏற்கப் பொருள்அருள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     வற்றா முற்றாப் பச்சிள முலையில்--- வற்றாததும்முற்றாததும் பசுமையானதும் ஆன முலையில் ஊறுகின்ற

 

     பால் கைப் பார்த்துத் தரும்--- பாலை இடம் பார்த்துத் தந்து அருளியவளும்,

 

     ஒரு மைக் காமக் கோட்டக் குல மயில்--- ஒப்பற்ற மை தீட்டிய கண்களை உடையவளும்காமக் கோட்டத்தில் உறைபவளும் ஆகிய சிறந்த மயிலினைப் போன்ற காமாட்சி அம்மையார்

 

     தரு பாலா --- தந்து அருளிய திருக் குழந்தையே!

 

     மத்து ஓசைப் போக்கில்--- மத்தின் ஓசையினை அறிந்து,

 

     தயிர் உறி நெய்ப் பாலுக்கு--- தயிர்நெய்பால் ஆகியவற்றை உறியில் உள்ளதை அடையவேண்டி,

 

     ஆய்ச்சிக்கு இரு பதம் வைத்து ஆடிக் காட்டி--- தனது தாயாகிய அசோதைக்குத் தனது இருதிருவடிகளை வைத்து ஆடிக்காட்டி, (அவளை மயக்கிப்)

 

     பருகு அரி மருகோனே--- பருகிய திருமாலின் திருமருகரே!

 

     கல் தா வில் காட்டி--- சிறந்த உறுதியான வில்லைத் திருக்கையில் ஏந்தி வேட வடிவம் கொண்டு சென்று,

 

     கரை துறை நற்றாயில் காட்டி--- நல்தாய் இரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டி,

 

     புகழ் கலை கற்றார் சொல் கேட்க--- புகழப்பெறுகின்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்,

 

     தனி வழி வருவோனே --- தனியாக அவர் வந்துகொண்டு இருந்த காட்டு வழியில் வந்து அவரை ஆட்கொண்டவரே!

 

     கைச் சூலக் கூற்றை --- கையில் முத்தலைச் சூலத்தை ஏந்தி உள்ள காலனையும்,

 

     கணை மதனை --- பூங்கணைகளை உடைய மன்மதனையும்

 

     தூள் பட்டு ஆர்ப்ப--- அழிந்து அலறும்படி,

     கனல் பொழி கர்த்தாவுக்கு--- சினம் என்னும் நெருப்பைப் பொழிந்த சிவபரம்பொருளுக்கு,

 

     ஏற்கப் பொருள் அருள் பெருமாளே --- ஏற்பு உடையதாகும்படி மெய்ப்பொருளை உபதேசித்த பெருமையில் மிக்கவரே!

 

      சிற்று ஆயக் கூட்டத் தெரிவையர்--- சிறிய கூட்டமாக உள்ள தோழியர்கள் சூழ்ந்து உள்ள விலைமாதர்கள்,

 

     வித்தாரச் சூழ்ச்சிக் கயல் விழி சற்று ஏறப் பார்த்து--- நயமானசூழ்ச்சிகளைக் கொண்ட கயல்மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் எறிட்டுப் பார்த்து,

 

      சில பணிவிடை ஏவி--- சில பணிவிடைகளை ஏவியும்,

 

     சில் தாபத்து ஆக்கை --- அற்பமான வேட்கையைத் தணிக்கத் தமது உடலை விற்று,

 

     பொருள் கொடு--- பொருளைக் கைக்கொண்டும்,

 

     பித்து ஏறிக் கூப்பிட்டு--- வருபவர்களுக்கு காமப் பித்தை ஏற்றி அழைத்து,

 

     அவர் பரிசு எட்டாமல்--- அவருக்குக் கொடுக்கின்ற பொருள் கிட்டாமையால்,

 

     தூர்த்தத்து அலைபடு சிறு காலை--- கெட்ட நெறியில் (பொருள் தேடி) அலைச்சல் உறுகின்ற இளம் பருவத்தில்,

 

     உற்றார் பெற்றார்க்குப் பெரிது ஒரு பற்றாயப் பூட்டுக் கயிறு கொடு--- நெருங்கிய சுற்றத்தார்தாய் தந்தையர் மீது வைத்த பாசம் என்னும் கயிற்றினால் கட்டுண்டு கிடக்கின்,

 

     உச்சாயத்து ஆக்கைத் தொழிலொடு --- உச்ச நிலையில் இந்த உடலை வைத்துப் புரிகின்ற தொழில்களில் ஈடுபட்டு,

 

     தடுமாறி உக்காரித்து ஏக்கற்று--- அலைந்தும்ஆரவாரித்தும்இளைத்தும் அவதிப்பட்டு,

 

     உயிர் நழுவி--- இறுதியில் உயிரானது இந்த உடலை விட்டு நழுவி,

 

     காய் அத் தீப் பட்டு--- எரிகின்ற தீயிடைப்பட்டு,

 

     எரி உடல் உக்கேன்--- எரியப் போகின்ற இந்த உடலின் மீது வைத்த ஆசையை விடவில்லை.

 

     மெய்க்கு ஆட்டைத் தவிர்வதும் ஒரு நாளே--- இந்த உடலைக் கொண்டு நான் ஆடுகின்ற உள்ள ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் உண்டாகுமா?

 

பொழிப்புரை

 

 

     வற்றாததும்முற்றாததும் பசுமையானதும் ஆன முலையில் ஊறுகின்றபாலை இடம் பார்த்துத் தந்து அருளியவளும்ஒப்பற்ற மை தீட்டிய கண்களை உடையவளும்காமக் கோட்டத்தில் உறைபவளும் ஆகிய சிறந்த மயிலினைப் போன்ற காமாட்சி அம்மையார்தந்து அருளிய திருக் குழந்தையே!

 

     மத்தின் ஓசையினை அறிந்துதயிர்நெய்பால் ஆகியவற்றை உறியில் உள்ளதை அடையவேண்டி,தனது தாயாகிய அசோதைக்குத் தனது இரு திருவடிகளை வைத்து ஆடிக்காட்டி, (அவளை மயக்கிப்) பருகிய திருமாலின் திருமருகரே!

 

     சிறந்த உறுதியான வில்லைத் திருக்கையில் ஏந்தி வேட வடிவம் கொண்டு சென்றுநல்தாய் இரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிபுகழப்பெறுகின்ற கலைகளைக் கற்றுத் தேர்ந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்,தனியாக அவர் வந்துகொண்டு இருந்த காட்டு வழியில் வந்து அவரை ஆட்கொண்டவரே!

 

      கையில் முத்தலைச் சூலத்தை ஏந்தி உள்ள காலனும், பூங்கணைகளை உடைய மன்மதனும்அழிந்து அலறும்படிசினம் என்னும் நெருப்பைப் பொழிந்த சிவபரம்பொருளுக்குஏற்பு உடையதாகும்படி மெய்ப்பொருளை உபதேசித்த பெருமையில் மிக்கவரே!

 

     சிறிய கூட்டமாக உள்ள தோழியர்கள் சூழ்ந்து உள்ள விலைமாதர்கள்நயமான சூழ்ச்சிகளைக் கொண்ட கயல்மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் எறிட்டுப் பார்த்துசில பணிவிடைகளை ஏவியும்அற்பமான வேட்கையைத் தணிக்கத் தமது உடலை விற்று,

பொருளைக் கைக்கொண்டும்வருபவர்களுக்கு காமப் பித்தை ஏற்றி அழைத்துஅவருக்குக் கொடுக்கின்ற பொருள் கிட்டாமையால்,கெட்ட நெறியில் (பொருள் தேடி) அலைச்சல் உறுகின்ற இளம் பருவத்தில்நெருங்கிய சுற்றத்தார்தாய் தந்தையர் மீது வைத்த பாசம் என்னும் கயிற்றினால் கட்டுண்டு கிடக்கின்,உச்ச நிலையில் இந்த உடலை வைத்துப் புரிகின்ற தொழில்களில் ஈடுபட்டுஅலைந்தும்ஆரவாரித்தும்இளைத்தும் அவதிப்பட்டுஇறுதியில் உயிரானது இந்த உடலை விட்டு நழுவிசுடுகாட்டில் எரிகின்ற தீயிடைப்பட்டு,

எரியப் போகின்ற இந்த உடலின் மீது வைத்த ஆசையை அடியேன் விடவில்லை.இந்த உடலைக் கொண்டு நான் ஆடுகின்ற உள்ள ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் உண்டாகுமா?

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார்விலைமாதர் மீது வைத்த ஆசையை ஒழித்துஅழியப் போகின்ற இந்த உடலின் மீது வைத்த பற்றையும் விட்டு ஒழிக்க முருகப் பெருமான் திருவருள் புரியவேண்டுகின்றார்.

 

தூர்த்தத்து அலைபடு சிறுகாலை ---

 

தூர்த்தம் --- தீநெறி.

 

சிறுகாலை --- இளம்பருவம்.

 

"ஊன்அமர் ஆக்கை உடம்புதன்னை உணரில் பொருள்அன்று

தேன்அமர் கொன்றையி னான்அடிக்கே சிறுகாலை ஏத்துமினோ

ஆன்அமர் ஐந்துங்கொண்டு ஆட்டுஉகந்த அடிகள் இடம்போலும்

வானவர் நாள்தொறும் வந்துஇறைஞ்சும் வலம்புர நல்நகரே".

 

எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரப் பாடலில் "சிறுகாலை" என்பது இளம்பருவம் குறித்து வந்துள்ளது காண்க.

 

வற்றா முற்றாப் பச்சிள முலையில் பால் கைப் பார்த்துத் தரும் ஒரு மைக் காமக் கோட்டக் குல மயில்--- 

 

உமையம்மையாரின் திருமுலைகள் பரஞானம் அரபஞானம் என்னும் பாலை உயிர்களுக்கு எப்போதும் வற்றாமல் பொழிகின்றவை. திருவருள் என்றும் குறைவது இல்லை. வற்றுவதும் இல்லை.  யாரையும் பெற்றெடுத்துயாருக்கும் பாலை உண்ணத் தராத முலை என்பதால் அது முற்றாத முலை எனப்பட்டது. 

 

"மாறு இலா வனமுலை உமை" என்றும், "தளரா முலை முறுவல் உமை" என்றும் திருஞானசம்பந்தர் பாடி உள்ளது காண்க.

 

"வார் ஏறு இளமென் முலையாள்" என்று மணிவாசகப் பெருமான் பாடி உள்ளதும் காண்க.

 

     இடம் பார்த்துத் தந்ததுதிருஞானசம்பந்தர் சீகாழியில் பிரமதீர்த்தக் குளக்கரையில், "அம்மே அப்பா" என்று அழுதபோது,சிவபெருமான் பணிக்கதனது துணைமுலைகள் பொழிகின்ற பால் அடிசிலை பொன் வள்ளத்தில் கரந்துஎண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்துஉண்ண அருளிய நிகழ்வைக் குறிக்கும்.

 

கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை கற்றார் சொல் கேட்கத் தனி வழி வருவோனே--- 

 

கற்றாவில் --- கல்+தா+வில். கல்லைப் போன்ற உறுதியான வில்.

 

இந்த வரலாறு பொய்யாமொயிப் புலவருக்கு வேடன் வடிவில் வந்து முருகப் பெருமான் திருவருள் புரிந்தததைக் குறிக்கும்.

 

பொய்யாமொழிப் புலவர் வரலாறு

 

     சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்கஅவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

 

     பொய்யாமொழிப் புலவருக்கு முருகப் பெருமான் அருள் புரிந்த வரலாற்றை சுவாமிகள் பாடுகின்றார்.பொய்யாமொழிப் புலவர்  தொண்டை மண்டலத்தில் சைவவேளாளர் குடியில் தோன்றியவர்.இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியரிடம் கல்வி பயின்று வந்தார். காளியின் அருளால் கல்வியுணர்ச்சியும் பாடல்களைப் புனையும் திறனும் கைவரப் பெற்றார்.  

 

     ஒருநாள் முருகப் பெருமான் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர் "கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ"  என்று மறுத்தார். வேற்று உருவில் வந்த முருகவேள் நாணினார் போன்று விடைகொண்டு சென்றார்.

 

     பின்பு பொய்யாமொழிப் புலவர் மதுரைக்குச் சென்று வர எண்ணிமதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. கல்லும் வேலமுள்ளும் படர்ந்த வெவ்விய அனல் கொளுத்தும் காடு. அதன் வழியாக சென்று கொண்டிருந்தார். முருகப் பெருமான் அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல் உருவங்கொண்டு அவர் முன் தோன்றினார்.  

 

     இவ்வழியாக இக்காட்டில் நீர் செல்வது கூடாது,‘ எனக் கூறினார். பொய்யாமொழியார்,  ‘நாம் இன்றுஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்'  என்று கருதி அஞ்சி நின்றார். அப்போது முருக வேடன் நீர் யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன் "உமக்குப் பாடத் தெரியுமோ?" என்று வினவினார் முருகவேள். "தெரியும்என்றார் புலவர். முருகவேடன்,  "என் மீது ஒரு பாடல் பாடுக"  என்று கூறினார். உடனே புலவர் உன் பெயர் யாதெனக் கேட்டனர். அப்போது முன், "கோழியைப் பாடும் வாயால் குஞ்சையும் பாடுவேனோ"  என்று புலவர் மொழிந்ததை நினைவாகக் கொண்டு முருகவேள், "என் பெயர் முட்டை"  என்றார்.  இந்தப் பாலையைப் சிறப்பித்து “நல் தாய் இரங்கல்” என்ற துறையாகஎன் பேர் முட்டைஎன் பேரையும் அமைத்துப் பாடுக” என்றார் வேடனாக வந்த வேலவர். அப்போது புலவர்,

 

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே

என்பேதை செல்லற்கு இயைந்தனளே --- மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறுஆய தெவ்வர்போம்

கானவேல் முள் தைக்குங் காடு"


என்னும் பாடலைப் பாடினார்.

 

     இச்செய்யுளைக் கேட்டுக்கொண்டிருந்த முருகவேடன்,   "இச் செய்யுளில் பொருள் குற்றம் உள்ளது. அதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேலமுட்கள் வெந்து எரிந்து  போகாமல் கிடப்பது எப்படி?" என்று நகைத்தார். "வேலமுள் வெந்து போகாது கிடந்து காலில் தைக்கஇயலுமோ?  இவ்வாறு  குற்றமுள்ள பாடலைப் புலவர் பாடுவரோயான் பாடுவேன்கேட்டிடுகஎன்று பொய்யாமொழியார் மீது,

 

"விழுந்ததுளி அந்தரத்தே வேம்என்றும் வீழின்

எழுந்து சுடர்சுடும்என்று ஏங்கிச் --- செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்"

 

என்னும் வெண்பாவைப் பாடினார்.  

 

     அப்பால் "நீர் முன் குஞ்சைப் பாடேன் என்றுகூறிய வாயால்  இப்போது முட்டையைப் பாடியது வியப்புக்கு உரியதே"  என்று கூறினார். அப்போது புலவர்,  இவ்வுருவில் வந்துள்ளது  முருகப்பெருமானே எனத் துணிந்தனர். தம் பிழையைப்  பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கினர். முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலங் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தனர்.

 

முற்பட்ட முரட்டுப் புலவனை

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே”    --- (பத்தித்தரள) திருப்புகழ்.

                                                                              

"பொய்யா மொழிப்புலவர் மதுரையில் சங்கம்

     புரக்கா எழுநாள்,மறவனாய்ப்

புறவுற அணைத்துஎனது பெயர் முட்டை பாடுஎனப்

     பொன்போலும் என்றுபாட,

வெய்யான பாலைக்கு இதுஏலாது,நம்பெயர்

     விளம்புஎன விளம்ப, அவர்மேல்

விழுந்த துளி என்று எடுத்துப்பாடி அவர் நாவில்

     வேல்கொடுத்து பொறித்த சதுரா”         --- திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ்.

                                                  

 

கைச் சூலக் கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப,கனல் பொழி கர்த்தாவுக்கு ஏற்கப் பொருள் அருள் பெருமாளே --- 

 

     இயமனைக் காலால் உதைத்துதனது அடியவராகிய மார்க்கண்டேயருக்கு அழியாத வாழ்வைத் தந்து அருளியது சிவபரம்பொருள்.

 

     எல்லாரையும் காமத் தீயால் வாட்டி வதைக்கும் மன்மதனைநெற்றி விழிகள் பொழிந்த சினத் தீயால் அழித்தவர் சிவபரம்பொருள்.

 

     சிவபரம்பொருளை வழிபடும் அடியவர்க்கு எமபயம் இல்லை. மரணவாதனை இல்லை. காமத் தீயானது அவர்களை வாட்டுவதும் இல்லை.

 

ஆட்டி வடவரை வாட்டி அரவொடு

     பூட்டி,திரிபுரம் மூட்டி,மறலியின்

     ஆட்டம் அற சரண் நீட்டி,மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி,மகம் அதை வீட்டி,ஒருவனை

     அட்டின் முகமதை நாட்டி,மறைமக

     ளார்க்கும் வடுவுற வாட்டும் உமை அவன் ......அருள்பாலா! --- (பாட்டில்) திருப்புகழ்.

                                    

காலனை உதைத்துக் காட்டி,ஆவியை வதைத்துக் காட்டி,

     காரணம் விளைத்துக் காட்டி,...... ஒருக்காலம்

கானினில் நடித்துக் காட்டி,ஆலமும் மிடற்றில் காட்டி,

     காமனை எரித்துக் காட்டி ...... தருபாலா!     --- (பால்மொழி) திருப்புகழ்.

                                     

காலனை மெய்ப்பாதம் எடுத்தே உதை இட்டே,மதனைக்

     காய எரித்தேவிதியில் ......தலையூடே,

காசினியில் காண இரப்பு ஓர் மதியைச் சூடி,எருத்து

     ஏறி வகித்து ஊரு திரைக் ...... கடல்மீதில்

 

ஆலம் மிடற்றுனை உரித்தோலை உடுத்துமம் அது உற்று

     ஆடி இடத்தே உமை பெற்று ...... அருள்வாழ்வே!   --- திருப்புகழ்.

                                                    

     ஐம்முகச் சிவத்திற்கு ஏற்புடையதாகும்படிஆறுமுகச் சிவம் மெய்ப்பொருளை உபதேசித்த வரலாறுதணிகைப் புராணம் கூறுமாறு காண்க. 

 

      வேதங்களுக்கு முதல் எழுத்தாக உள்ளது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள். "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும்,வேதங்களுக்கு முதலாகவும்பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும்,காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும்முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது. 

 

     திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே,இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

 

     இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு,"தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

 

     முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்வாழ்வில் மிகுந்தவன் என்றால்,எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால்இப்போதுஎன் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில்,உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும்நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகுபடைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக்

கொண்டார்கள்.

 

     சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கிநான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறிவிடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு இயற்றுதல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

 

     முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

 

     தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை "பிரணவ அருத்த நகர் "என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

 

அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து,அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து,அவனைப் பற்றித்

திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.

 

காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால் தழுவியே,"அயனும் தேற்றா

ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில்,அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.

 

"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள்,உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத்தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,மறையினால் இசைப்பது அல்லால்".

 

என்றலும்,நகைத்து,"மைந்த எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன்,உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.

 

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

 

            "முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.

 

நாத போற்றி எனமுது தாதை கேட்க,அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.     --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

 

நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்   --- கந்தர்அநுபூதி 

 

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....                 --- (விறல்மாரன்) திருப்புகழ்.

 

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது.ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால்அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு,வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

 

அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.

                                                                       --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

 

     "சுசிமாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள்மாணவ பாவத்தை உணர்த்தி,உலகத்தை உய்விக்கும் பருட்டும்,தனக்குத்தானே மகனாகிதனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணரமுருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.

 

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான்,தழங்கி நின்றாடினான்.  --- தணிகைப் புராணம்.

                                                                                                 

மின் இடைசெம் துவர் வாய்கரும் கண்

     வெள் நகைபண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுதுஎங்கள் அப்பன்

     எம்பெருமான்இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன்மகன்தகப்பன்

     தமையன்எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

     பொன் திருச் சுண்ணம் இடித்தும்நாமே!

 

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகிஉபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

 

     அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும்முறையே சிவம்சத்திசதாசிவம்மகேசுவரம்சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால்சத்திக்குச் சிவன் மகன் என்றும்சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும்சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

 

திருக்கோவையாரிலும்,

 

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம்மகனாம்தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

 

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும்சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

 

வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.         --- திருமந்திரம்.

 

கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு,எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....         --- குமரகுருபரர்.

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்,பூத்தவண்ணம்

காத்தவளேபின் கரந்தவளேகறைக் கண்டனுக்கு

மூத்தவளேஎன்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.

                                         

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்,ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனிஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.

 

சிவம்சத்தி தன்னை ஈன்றும்,சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்துங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும்,பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.  --- சிவஞான சித்தியார்.

கருத்துரை

 

முருகா! பிறவி அறத் திருவருள் புரிவாய்

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...