எழுகரை நாடு --- 0993. விரகற நோக்கியும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

விரகற நோக்கியும் (எழுகரைநாடு)


முருகா! 

அன்பு நெறியில் அடியேனைச் சேர்த்து

எல்லாம் கடந்த பொருளை உபதேசித்து அருளுவீர்.

 

தனதன தாத்தன தனதன தாத்தன

     தனதன தாத்தன ...... தந்ததான

 

 

விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்

     விழிபுனல் தேக்கிட ...... அன்புமேன்மேல்

 

மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற

     விழைவுகு ராப்புனை ...... யுங்குமார

 

முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை

     முலைநுகர் பார்த்திப ...... என்றுபாடி

 

மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட

     முழுதும லாப்பொருள் தந்திடாயோ

 

பரகதி காட்டிய விரகசி லோச்சய

     பரமப ராக்ரம ...... சம்பராரி

 

படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய

     பகவதி பார்ப்பதி ...... தந்தவாழ்வே

 

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட

     எழுகிரி யார்ப்பெழ ...... வென்றவேலா

 

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய

     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.

 

 

பதம் பிரித்தல்

 

 

விரகு அற நோக்கியும்,உருகியும்,வாழ்த்தியும்,

     விழிபுனல் தேக்கிட,...... அன்பு மேன்மேல்

 

மிகவும்,இராப் பகல் பிறிது பராக்கு அற,

     விழைவு குராப் புனை- ...... யும் குமார!

 

முருக! சடாக்ஷர! சரவண! கார்த்திகை

     முலை நுகர் பார்த்திப! ...... என்று பாடி

 

மொழி குழறாத் தொழுதுழுது அழுது ஆட்பட

     முழுதும் அலாப் பொருள் தந்திடாயோ?

 

பரகதி காட்டிய விரக! சிலோச்சய!

     பரம பராக்ரம! ...... சம்பராரி

 

பட விழியால் பொரு பசுபதி போற்றிய

     பகவதி,பார்ப்பதி ...... தந்த வாழ்வே!

 

இரைகடல் தீப்பட,நிசிசரர் கூப்பிட,

     எழுகிரி ஆர்ப்கு எழ ...... வென்றவேலா!

 

இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றிய

     எழுகரை நாட்டவர் ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

            பரகதி காட்டிய விரக--- மேலான மோட்ச வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே!!

 

            சிலோச்சய--- குறிஞ்சி நிலத் தலைவரே!

 

            பரம பராக்ரம--- சிறந்த வலிமை உடையவரே!

            சம்பராரி படவிழியால் பொரு பசுபதி போற்றிய--- சம்பரனைக் கொன்ற மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு போர் செய்த சிவபெருமான் போற்றிய

 

             பகவதி--- ஆறு குணங்களை உடைய பகவதியாகிய

 

            பார்ப்பதி தந்த வாழ்வே--- உமாதேவியார் பெற்றளித்த பெருவாழ்வே!

 

            இரைகடல் தீப் பட --- அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும்,

 

            நிசிசரர் கூப்பிட--- இரவிலே சஞ்சரிக்கின்ற அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும்,

 

            எழுகிரி ஆர்ப்பு எழ --- கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் இடிபட்டு ஒலியுண்டாகவும்,

 

            வென்ற வேலா--- சூராதி அவுணர்களை வெற்றி கொண்ட வேலாயுதக் கடவுளே!

 

            இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றிய--- தேவர்களின் உலகில் தேவர்கள் யாவரையும் நிறைவாகக் குடியேற்றிய

 

            எழுகரை நாட்டவர் தம்பிரானே --- எழுகரை நாட்டில் உள்ளவர்க்குத் தனிப்பெரும் தலைவரே!

 

            விரகு அற நோக்கியும்--- கபடம் அற்று உலகத்தை நோக்கியும்,

 

            உருகியும் வாழ்த்தியும்--- மனம் உருகியும்தேவரீரைத் துதித்து வாயார வாழ்த்தியும்,

 

            விழிபுனல் தேக்கிட--- கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்து வழிய,

 

            அன்பு மேன்மேல் மிகவும்---  அன்பு மேன்மேலும் அதிகப்படவும்,

 

            இராப்பகல் பிறிது பராக்கு அற--- இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போகவும்,

 

            விழைவு குராப் புனையும் குமார--- விருப்பமுடன் குராமலரை அணியும் குமாரக் கடவுளே,

 

            முருக--- முருகப் பெருமானே,

 

           ஷடாக்ஷர --- ஆறெழுத்து அண்ணலே,

 

           சரவண--- சரவணபவரே,

 

            கார்த்திகை முலை நுகர் பார்த்திப--- கார்த்திகைப் பெண்களின் முலைப்பால் அருந்தி அருளிய அரசரே!

 

            என்று பாடி--- என்றெல்லாம் துதித்துப் பாடி,

 

            மொழி குழறாத் தொழுது--- மொழிகள் குழறும்படி உன்னைத் தொழுது

 

           அழுது அழுது ஆட்பட--- ஓயாமல் அழுது, யான் தேவரீருக்கு ஆட்படுமாறு,

 

            முழுதும் அலாப் பொருள் தந்திடாயோ --- உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞான உபதேசத்தை அடியேனுக்குத் தரமாட்டீரா?

 

பொழிப்புரை

 

 

            மேலான மோட்ச வீட்டைக் காட்டிய சாமர்த்திய சாலியே!!

 

            குறிஞ்சி நிலத் தலைவரே!

 

            சிறந்த வலிமை உடையவரே!

            சம்பரனைக் கொன்ற மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு போர் செய்த சிவபெருமான் போற்றிய ஆறு குணங்களை உடைய பகவதியாகிய உமாதேவியார் பெற்றளித்த பெருவாழ்வே!

 

            அலை ஓசை ஒலிக்கும் கடல் எரிபடவும்,  இரவிலே சஞ்சரிக்கின்ற அசுரர்கள் அலறி கூப்பாடு போடவும்கிரெளஞ்சமலைக் கூட்டங்களான ஏழு மலைகளும் இடிபட்டு ஒலியுண்டாகவும்சூராதி அவுணர்களை வெற்றி கொண்ட வேலாயுதக் கடவுளே!

 

            தேவர்களின் உலகில் தேவர்கள் யாவரையும் நிறைவாகக் குடியேற்றியஎழுகரைநாட்டில் உள்ளவர்க்குத் தனிப்பெரும் தலைவரே!

 

            கபடம் அற்று உலகத்தை நோக்கியும்மனம் உருகியும்தேவரீரைத் துதித்து வாயார வாழ்த்தியும்கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்து வழிய,  அன்பு மேன்மேலும் அதிகப்படவும்,

இரவும் பகலும் மற்ற விஷயங்களில் சிந்தனை அற்றுப்போகவும்விருப்பமுடன் குராமலரை அணியும் குமாரக் கடவுளேமுருகப் பெருமானேஆறெழுத்து அண்ணலேசரவணபவரேகார்த்திகைப் பெண்களின் திருமுலைப்பால் அருந்தி அருளிய அரசரே என்றெல்லாம் துதித்துப் பாடிமொழிகள் குழறும்படி உன்னைத் தொழுதுஓயாமல் அழுதுயான் தேவரீருக்கு ஆட்படுமாறுஉலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞான உபதேசத்தை அடியேனுக்குத் தரமாட்டீரா?

 

 

விரிவுரை

 

 

விரகு அற நோக்கியும் ---

 

விரகு --- வஞ்சனை. தந்திரம்.

 

துரியோதனன் புதுக்கிய அரக்கு மாளிகையைநோக்கிய தருமர், "விரகினால் நமக்கு ஆலயம் வகுத்ததும் விரகே" என்றார்.

 

அன்பினால் விகாரமற்ற உள்ளத்துடன் உலகைப் பார்க்க வேண்டும். பார்வையினாலேயே பாவங்கள் வரும். "பார்வையில் பாவங்கள்" என்றார் பட்டினத்துச் சுவாமிகள். பார்வையினால் அழிந்தவன் இராவணன். தீய எண்ணத்துடன் சீதையை நோக்கினான். அதனால் அவன் குலத்துடன் மாண்டான்.

 

உருகியும்---

 

இறைவனை நினைந்து நினைந்துஅழலிடைப்பட்ட மெழுகு போல் உள்ளம் உருகுதல் வேண்டும். இளகிய தங்கத்தில் இரத்தினமணி பதிவதுபோல்இளகிய உள்ளத்தில் இறைவனுடைய திருவடி பதியும்.

 

திணியான மனோ சிலை மீது,உனதாள்

அணிஆர் அரவிந்தம் அரும்பும் அதோ  ---  கந்தர் அனுபூதி.

 

தன்னை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுவார் வினையை இறைவன் அறுப்பான்.

 

உருகும் அடியவர் இருவினை இருள்பொரும்

உதய தினகர! இமகரன் வலம்வரும்

உலக முழுது ஒரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.

                                                                                    --- (பகிரநினைவொரு) திருப்புகழ்.

 

மறவாதவர் நினைப்பவை முடிக்கும் அவன்

உருகும் அடியார் இருவினைத் தொகை அறுப்பவன்...  ---  பூதவேதாள வகுப்பு.

                                                                                    

வாழ்த்தியும்---

 

இறைவனை வாயார வாழ்த்தவேண்டும். வாக்கு படைத்த பயன் இறைவனை வாழ்த்துவதே. "வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்" அவனே.  "வாயே வாழ்த்து கண்டாய்" என்பார் அப்பமூர்த்திகள்.

 

எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய்

கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்...   ---  திருவருட்பா

 

ஐயநின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல

தெள்ளமுது உண்டு உவந்த திருவாய்....      ---  திருவருட்பா

 

ஏனைய உயிர்களுக்குத் தந்தது போல் தராமல்,மனிதனுக்கு மட்டும் வசனிப்பதற்குத் தகுதியுடையதாக வாக்கினைத் தந்து அருளினான்.  அதனால்அப் பரமபிதாவை வாயார வாழ்த்தவேண்டும்.

 

விழி புனல் தேக்கிட ---

 

அன்பின் மிகுதியினால் இறைவனை நினைக்கும் தோறும்இறைவனது திருநாமங்களைக் கேட்கும்தோறும்,இறைவனது திருவடிப்புகழைப் பேசும்தோறும் கண்ணீர் பெருகும்.

 

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.            

 

என்பார் செந்நாப் போதார்.

 

அங்கைகொடு மலர்தூவி அங்கமது புளகிப்ப

                    அன்பினா லுருகிவிழிநீர்

      ஆறாக வாராத முத்தியின தாவேச

                ஆசைக் கடற்குள் மூழ்கிச்

சங்கர சுயம்புவே சம்புவே எனவுமொழி

                    தழுதழுத் திடவணங்குஞ்

       சன்மார்க்க நெறியிலாத் துன்மார்க்க னேனையுத்

                    தண்ணருள் கொடுத்தாள்வையோ

துங்கமிகு பக்குவச் சனகன்முதல் முனிவோர்கள்

                    தொழுதருகில் வீற்றிருப்பச்

      சொல்லரிய நெறியைஒரு சொல்லா லுணர்த்தியே

                    சொரூபாநு பூதிகாட்டிச்

செங்கமல பீடமேற் கல்லா லடிக்குள்வளர்

                    சித்தாந்த முத்திமுதலே

      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே

                    சின்மயா னந்தகுருவே.             --- தாயுமானார்.

 

முகமானது கண்ணீரால் நனைந்துநனைந்துஉருகிநெக்கு விட்டு நெகிழும் அன்பரது உள்ளத்தை விட்டு பரமன் நீங்கமாட்டான்.

 

சகம் அலாது அடிமை இல்லை

     தான் அலால்-துணையும் இல்லை;

நகம் எலாம் தேயக் கையால் 

     நாள் மலர் தொழுது தூவி,

முகம் எலாம் கண்ணீர் மல்க 

     முன் பணிந்துஏத்தும் தொண்டர்

அகம் அலால் கோயில் இல்லை

     ஐயன் ஐயாறனார்க்கே.                 ---  அப்பர்.

 

அவ்வாறு கண்ணீர் மல்கிகடவுளை ஏத்தும் அன்பர்க்கு வழுவாமல் இறைவன் திருவடி துணை புரியும்.

 

புழுவினால் பொதிந்திடு குரம்பையில்

            பொய் தனை ஒழிவித்திடும்

எழில்கொள் சோதிஎம் ஈசன்எம்பிரான்,

            என்னுடை அப்பன் என்றென்று,

தொழுத கையினர் ஆகித் தூய்மலர்க்

            கண்கள் நீர்மல்கும் தொண்டர்க்கு

வழு இலா மலர்க் சேவடிக்கண் நம்

            சென்னி மன்னி மலருமே.             --- திருவாசகம்.

 

 

அன்பு மேல்மேல் மிகவும்---

 

இறைவன்பால் அன்பு கணம்தோறும் வளரவேண்டும். ஆராலும் காணாத ஐயனை அன்பினாலேயே காணலாம். அன்பு வலையில் அகப்படும் பரம்பொருள்.

 

அன்பால் கரைந்து கண்ணீர் ஆறுகண்ட புண்ணியருக்கு

உன்பால் வரவழிதான் உண்டோ பராபரமே.   ---  தாயுமானார்.

 

அன்பு வடிவாகிய ஆம்டவனை அன்பு நெறியில் சென்று அடைதல் வேண்டும். என்பு வடிவாய் இருந்த திண்ணனார் காளத்திமலை சென்றார். பொருவில் அன்பு உருவமானார். கண்ணப்பா என்று காளத்தியப்பர் அழைத்தருள இன்பு வடிவமானார்.

 

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே,

     அன்பெனும் குடில்புகும் அரசே,

அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே,

     அன்பெனும் கரத்துஅமர் அமுதே,

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே,

     அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே,

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

     அன்புரு ஆம் பரசிவமே.          ---  திருவருட்பா.

 

 

இராப்பகல் பிறிது பராக்கு அற ---

 

பராக்கு --- கவனம் இன்மைகவனம் மாறுதல்மறதி.

 

வம்பு அறாச் சில கன்னம் இடும்,சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று,...... அருளாலே,

 

தம் பராக்கு அற,நின்னை உணர்ந்துரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?   --- திருப்புகழ்.

 

அராப்புனை வேணியன்சேய் அருள்வேண்டும்அவிழ்ந்த அன்பால்

குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டும்கொடிய ஐவர்

பராக்குஅறல் வேண்டும்,  மனமும் பதைப்புஅறல்வேண்டும்என்றால்

இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிது அல்லவே.   ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                            

திருவருள் நாட்டம் தலைப்படில்உலகநாட்டம் அறுபடும். விழித்து இருந்தும் குருடர் ஆவார். உலகத்தில் இருந்தும் உலக வாசனை இன்றிப் பரவசமாக நிற்பார்.

 

உல்லாச நிராகுல யோக இதச்

சல்லாப விநோதனும் நீ அலையோ,

எல்லாம் அற என்னை இழந்த நலம்

சொல்லாய் முருகா சுரபூபதியே.

 

ஆனா அமுதேஅயில்வேல் அரசே,

ஞானா கரனேநவிலத் தகுமோ,

யான்ஆகிய என்னை விழுங்கிவெறும்

தானாய் நிலைநின்றது தற்பரமே.

 

குறியைக் குறியாது குறித்துஅறியும்

நெறியைக் தனிவேலை நிகழ்த் திடலும்,

செறிவுஅற்றுஉலகோடு உறைசிந்தையும்அற்று,

அறிவுஅற்று அறியாமையும் அற்றதுவே.         

 

என்ற கந்தர் அநுபூதித் திருவாக்குகளை எல்லாம் உற்று நோக்குக.

 

பதிவரும்ஓர் தருணம்இது,தருணம்இது தோழி

     பராக்கு அடையேல்,மணிமாடப் பக்கம்எலாம் புனைக,

அதிகநலம் பெறு பளிக்கு மணிமேடை நடுவே

     அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே,

கதிதருவார் நல்வரவு சத்தியம் சத்தியம்,நீ

     களிப்பினொடு மணிவிளக்கால் கதிர்பரவ நிரைத்தே,

புதியநவ மணிகுயின்ற ஆசனங்கள் இடுக,

     புண்ணியனார் நல்வரவை எண்ணிஎண்ணி இனிதே.   --- திருவருட்பா.

                                             

குராப் புனையும் குமார---

 

முருகவேள் அணியும் மலர்களில் குராமலரும் சிறந்தது. சீர்பாத வகுப்பில்,

 

மொகுமொகன மதுபமுரல் குரவு விளவினதுகுறு

முறியும் மலர் வகுளதள மூழுநீல தீவரமும்,

முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும்,விரத

முனிவர் கருதரிய தவம் முயல்வார் தபோபலமும்...

 

என வருவதும் காண்க.

 

திருவிடைக்கழியில் எம்பெருமான் குராமரத்தின் கீழ் எழுந்தருளி இருப்பதும்பழநியில் இடும்பனுக்கு அருள் புரிந்த முருகமூர்த்திஞானவடிவேலர் என்று இன்றும் காட்சி தருவதும் கண்கூடு.

 

அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையந்

தாள் தொழல் வேண்டும்.....                 ---  கந்தர் அலங்காரம்.

 

மொகுமொ கெனமது கரமுரல் குரவணி

     முருக னறுமுக னெனவரு வனபெயர்

     முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே. ---  (நெடியவட) திருப்புகழ்.

                                                                                                

 

சடாக்ஷர---

 

ஆறெழுத்துக்கு உட்பொருளாய் உறைபவர்.  முருகவேளுடைய மூலமந்திரம் சடக்கரம். அதை அன்புடன் யாவரும் ஓதவேண்டும்.

 

மூலமந்திரம் ஓதல் இங்கிலை....

 

இசைபயில் சடாக்ஷரம் அதாலே

இகபர சௌபாக்கியம் அருள்வாயே...        

 

ஆறெழுத்தை நினைந்து குகாகுகா எனும் வகை வராதோ...

 

என்று வரும் திருப்புகழ் அடிகளால் இம் மந்திரத்தின் பெருமை விளங்கும்.

 

ஆறெழுத்தின் உண்மையை அநேகர் அறிவார்கள்.  கன்மம் அறுக்க வேறு எழுத்து இல்லை. ஆறெழுத்துக்களையும் ஓதிதிருநீறு பூசினால் எல்லா வினைகளும் நீங்கும்.  பிரமன் எழுத்தும் மாறும். இயமன் பாசக்கயிறு வராது.

 

ஆறெழுத்து உண்மை அறியார் கன்மம் அறுக்க,அப்பால்

வேறுஎழுத்து இல்லைவெண்ணீறில்லைமால்சிவ வேடமில்லை

தேறுஎழுத்து ஏதுஅயன் கையும் கருக்குழிச் சேறலும்பின்

மாறுஎழுத்து அந்தகன் தென்புலத்தே என்றும் வௌவுவதே.

 

ஆறெழுத்தில் ஓரெழுத்து பரகதியைத் தரும்.

ஆறெழுத்தில் ஓரெழுத்து வச்சிர உடம்பைத் தரும்.

ஆறெழுத்தில் ஓரெழுத்து செம்பொன்னைத் தரும்.

ஆறெழுத்தில் ஓரெழுத்து திருவருளைத் தரும்.

ஆறெழுத்தில் ஓரெழுத்து சிவஞானம் தரும்.

ஆறெழுத்தில் ஓரெழுத்து திருவடிப் பெருமையைத் தரும்.

 

கதிகாட்டும் ஓர்எழுத்துஓர்எழுத்தே வஜ்ர காயம்தரும்,

நிதிகாட்டும் ஓர்எழுத்துஓர்எழுத்தேஉள் நிரப்பும்அருள்,

மதிகாட்டும் ஓர்எழுத்துஓர்எழுத்தே என்னுள் வைத்த பொற்றாள்

துதிகாட்டுமே குகநின்ஆறெழுத்து உள்ள சூத்திரமே.  ---ஆறெழுத்தந்தாதி.

                                                                                                             

ஆசையில் கை கலந்து சுமா சுமாபவ

     சாகரத்தில் அழுந்தி எழா எழாதுளம்

     ஆறெழுத்தை நினைந்து குகா குகா என ......வகைவராதோ--- (ஓலமிட்ட) திருப்புகழ்.

                                                                                                           

மொழி குழறாத் தொழுது---

 

இறைவன் மீது அன்பு மிகுதியாகிய பொழுது,சொற்கள் குழறும்உரை தடுமாறும்.

 

சங்கர சுயம்புவே எனவும் மொழி

தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்கநெறி....

 

என்றார் தாயுமானார்.

 

அழுது அழுது ஆட்பட ---  

 

அழுதால் உன்னைப் பெறலாமே என்று மணிவாசகப் பெருந்தகை அருளியபடிமாற்றம் மனம் கழிய நின்ற மறைமுடிப் பொருளைஅழுது அழுதுதான் அடையவேண்டும். அதுவே எளிய முறையும் ஆகும்.

 

குழந்தைகள் தமக்கு வேண்டும் பொருளை தாய் தந்தையரிடம் அழுது பெறுவதும்மகளிர் தம் கணவர்பால் தமக்கு வேண்டுவதை அழுது சாதிப்பதும் கண்கூடு. இறைவன்பால் அழல்சேர் மெழுகாய் உருகி அழுதால் அப் பரமபதியின் தண்ணருள் நிச்சயமாகக் கிடைக்கும்.

 

அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய்அழல்சேர்ந்த

மெழுகே அன்னார் பொன்னார் கழல்கண்டு

தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே

பழுதே பிறந்தேன்என்கொண்டு உன்னைப் பணிகேனே. ---  மணிவாசகம்.

                                                                                                                         

ஒழியாப் பிறவி எடுத்துஏங்கி ஏங்கி உழன்ற நெஞ்சே,

அழியாப் பதவிக்கு அவுஷதம் கேட்டிஅநாதியனை

மழுமான் கரத்தனைமால்விடையானை மனத்தில் உன்னி

விழியால் புனல்சிந்திவிம்மிஅழுநன்மை வேண்டும்என்றே.   ---  பட்டினத்தார்.

                                                                                                                        

முழுதும் அல்லாப் பொருள் தந்திடாயோ ---

 

சரம் அசரம் கருவி கரணம் முதலிய எல்லாவற்றையும் கடந்துஅப்பாலைக்கு அப்பாலாய் உள்ள வான்பொருள். அதனை உபதேசிக்குமாறு வேண்டுகின்றார். முருகன் தனக்கு உபதேசித்த உபதேசப் பொருள் ஒன்றும் அன்று என்று கூறுமாறும் காண்க..

 

தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி

கோன்அன்று எனக்கு உபதேசித்தது ஒன்றுஉண்டு கூறவற்றோ

வான்அன்றுகால்அன்றுதீஅன்றுநீர்அன்றுமண்ணும்அன்று,

தான்அன்று நான்அன்று அசிரீரி அன்று சரீரிஅன்றே.      ---  கந்தர் அலங்காரம்.

                                                                                                             

மண்அல்லை விண்அல்லை வலயம் அல்லை

            மலைஅல்லை கடல்அல்லை வாயு அல்லை

எண்அல்லை யெழுத்துஅல்லை எரியும் அல்லை

            இரவுஅல்லை பகல்அல்லை யாவும் அல்லை

பெண்அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை

            பிறிதுஅல்லை ஆனாயும் பெரியாய் நீயே

உள் நல்லை நல்லார்க்குத் தீயை அல்லை

            உணர்வுஅரிய ஒற்றியூர் உடைய கோவே.   --- அப்பர்.

  

பரகதி காட்டிய---

 

அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் முத்திக்கு வழிகாட்டி அருளினார்.

 

சம்பராரி பட விழியால் பொரு பசுபதி போற்றிய பகவதி---

 

சம்பராரி --- மன்மதன்.

 

சம்பரன் என்னும் அசுரனைக் கொன்றதால்மன்மதன்சம்பராரி எனப்பட்டான்.

 

"சம்பராரியைக் கொன்ற தீ விழிச் சம்பு"  --- (அம்புராசி) திருப்புகழ்.

                                

                                    சிவபரம்பொருள் சம்பராரியை நீறாக்கிய வரலாறு

 

     இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வரபிரமதேவர் வைகுந்தம் சென்றுதிருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால்நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார். 

 

     "எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி,மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டுநாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறிபெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி,ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன'என்று கேட்கவேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

 

     சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால்ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து,நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால்,மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டுதிருக்கயிலையை அடைந்துமனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள்ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியைகிரியையோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்துஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டிமோன நிலையை உணர்த்திதானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றிஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல்சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும்பிற தேவர்களையும்,தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல்சிவபரம்பொருள்சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

 

     இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்அருவமும்உருவமும்உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும்எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்றமூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார்உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

 

"ஆவிகள் அனைத்தும் ஆகி,

     அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன 

     மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் 

     செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் 

     தொன்மை போல் இருக்கும்நீரார்".

 

     "சிவமூர்த்தியின் பால் பலப் பல நலன்களைப் பெற்ற தக்கன்ஊழ்வினை வயப்பட்டுசெய்ந் நன்றி மறந்துசிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்யஅந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்துஇன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும்தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டிஉயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கிஎம்பெருமாட்டியை மணந்து கொண்டால்படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால்சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரேஇவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால்உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டுஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால்சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கிஅகிலாண்ட நாயகியை மணந்து,சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

 

     அது கேட்ட பிரமதேவர், "அண்ணலேநன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

 

     திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்துசிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டுதமது மனோவதி நகரை அடைந்து,மன்மதனை வருமாறு நினைந்தார்.

மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி"அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி

நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கிசிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறுஉனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

 

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல்வெற்பின்

மங்கையை மேவ,நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினைஇன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".

 

     பிரமதேவர் கூறிய கொடுமையானதும்நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால்பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

 

     மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி,திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்துவாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

 

     "அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால்பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையாஎன்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும்பூவில் வைகும் சீதேவியையும்,ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப்பு ணருமாறும்திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும்உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும்கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்துஇந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போதுஅவளைக் கண்டு மயங்கச் செய்துசூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து,புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கிமாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர்அத்திரிகோதமன்அறிவில் சிறந்த காசிபர்,வசிட்டர்மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியைஇமைப்பொழுதில் நீக்கிஎன் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும்சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

 

     "சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில்வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல்உய்ந்தவர் யாரும் இல்லை".

 

     "திரிபுர சங்கார காலத்தில்திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரியமுக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

 

     "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனைபெருமான் தனது இடது திருவடியால் உதைத்துமார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

 

     "முன் ஒரு நாள்தாங்களும்நாராயணமூர்த்தியும்'பரம்பொருள் நானே'என்று வாதிட்ட போது,அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்கஉமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

 

     "சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

 

     "உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும்பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

 

     "திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு,நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

 

     "உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

 

     "தாருகா வனத்தில்இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானைபுலிமான்,முயலகன்பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள்,உரியாகவும்போர்வையாகவும்ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

 

     "சர்வ சங்கார காலத்தில்சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?

இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை,நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டுமலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

 

     இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும்நான்முகன் உள்ளம் வருந்தி,சிறிது நேரம் ஆராய்ந்துபெரு மூச்சு விட்டுமன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால்நீ கரும்பு வில்லை வளைத்துபூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல்ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கிஅவருடைய துன்பத்தைக் களையாது,தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால்,அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால்அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து,பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால்அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால்பாவம் மட்டும் அல்லஅகலாத பழியும் வந்து சேரும்.

 

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல்அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே,மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே".

 

     பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்பவிருத்தாசுரனை வதைக்கும் பொருட்டுதனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோபாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது,திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறிஅவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்றுதமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோபிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டுநீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

 

     அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

 

     பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

 

     மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்திஎன்ன செய்யலாம் என்று சிந்தித்துஒருவாறு தெளிந்துபிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால்அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும்,பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவேநீர் சொல்லியபடியே செய்வேன்சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

 

     பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

 

     மன்மதன்பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்றுநிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூறஅவள் போகவேண்டாம் என்று தடுக்கமன்மதன் அவளைத் தேற்றிமலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டிகரும்பு வில்லை எடுத்துகுளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டிகுயில்கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க,மீனக் கொடியுடன் கூடியதும்கிளிகளைப் பூட்டியதும்சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டுஎம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டுகரம் கூப்பித் தொழுதுதேரை விட்டு இறங்கி,தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுஇரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு,பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்துமலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும்விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டுஇது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்'என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும்விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்திதிருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுதுயார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்துவேள்வி புரிந்துமீளவும் அப்பசுவை எழுப்புதல் போல்மன்மதனை எரித்துமலைமகளை மணந்துபின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்'என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்கமன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

 

     மன்மதன் திருநந்தி தேவரை வணங்கிமேலை வாயிலின் உள் சென்று,சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்றுஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்றுஉள் நடுங்கிஉடம்பு வியர்த்துகையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனேஎதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்துகரும்பு வில்லை வளைத்துசுரும்பு நாண் ஏற்றி,அரும்புக் கணைகளைப் பூட்டிசிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

 

     இது நிற்கமனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி"மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்றுசிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும்பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்கநெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.  

 

போற்றுதல் --- உபசரித்தல். சிவபெருமானால் உபசரிக்கப் பெற்ற பகவதி. ஐசுவரியம்வீரியம்புகழ்திருஞானம்வைராக்கியம் என்ற ஆறு குணங்களையும் உடையவர் பகவதி.

 

எழுகரை நாடு ---

 

சரியான இடம் விளங்கவில்லை. திருச்செங்கோட்டைச் சூழ்ந்துள்ள நாட்டை எழுகரை நாடு என்பர்.

 

கருத்துரை

 

முருகா! அன்பு நெறியில் அடியேனைச் சேர்த்துஎல்லாம் கடந்த பொருளை உபதேசித்து அருளுவீர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...