040. கல்வி --- 04. உவப்பத் தலைக்கூடி

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 040 -- கல்வி

 

     இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில்"கற்றறிந்தவர்களின் தொழிலாவது எல்லோரும் உள்ளம் மகிழும்படி சேர்ந்து அளவளாவிஇனி இவரை நாம் எவ்வாறுஎப்போது கூடுவோம் என்று நினைக்கும்படி பிரியும் தன்மையை உடையது" என்கின்றார் நாயனார்.

 

     உவப்ப --- உள்ளம் உவந்து மகிழ.

 

     தலைக்கூடி --- சேர்ந்து அளவளாவி.

 

திருக்குறளைக் காண்போம்...

 

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தேபுலவர் தொழில்.

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

     உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே--- யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்துஇனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து

 

     புலவர் தொழில்--- கற்றறிந்தாரது தொழில்.

 

       (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்துஎன்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும்,தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.)

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாகமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு"என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

நாதர்அருள் சேரனொடு நம்பியாரூரரும் முன்

பேதம் அறக் கூடிப் பிரிவதுபோல் ---  தீதின்று

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

 

      சேரமான் பெருமாள் நாயனார் சிவபூசை செய்து வரும்போது ஒரு நாள் இறைவனால் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கேள்வி உற்றுசோழ நாடு சென்று சுந்தரரைக் கண்டு அவருடன் நட்புப் பூண்டார். இருவரும் பின்னர் இன்ப வெள்ளத்திடை நீந்தி ஏறமாட்டாதவராய்என்பும் உருக உயிர் ஒன்றித் தம்முள் கலந்தனர். பல சமயங்களில் இவ்விருவரும் கூடும்போது அன்புடன் கூடியும்பிரியும்போது அரிதில் பிரிந்தும்தாம் ஒருவரில் ஒருவர் கலந்து உள்ளமையைப் புலப்படுத்தினார்கள். 

 

சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு

 

       சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப் பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர்மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்துமுன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார்நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்து அமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுகும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து இறைவனுக்கு நீராட்டிமுன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.

 

    இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள் சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேரமன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப் படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திருவஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திருவஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "மென்மேலும் பெருகும் இன்ப மயமாகிய சிவதொண்டுக்கு இடையூறான ஆட்சி ரிமையை ஏற்றுக்கொள்ளும்படி இவ்வமைச்சர்கள் என்னை வற்புறுத்துகின்றார்கள். இச் சிவத் தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சி புரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத் திருக்கோயிலில் புகுந்து இறைவன் திருமுன்னர் பணிந்து நின்றார். 

 

     இறைவனைப் பேரன்பினால் விரும்பி வழிபடும் இயல்பும்புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுணர்வும்கெடாத வலிமையும்கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈய வல்ல (கொடுக்க வல்ல) கொடை கெடாத வண்மையும்நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும்உயர் திணை மக்களும் கழறிய சொற்பொருளை உய்த்து உணரும் நுண்ணறிவினைப் பெற்றவர் பெருமாக்கோதையாராதலின் அவர்க்கு "கழறிற்றறிவார்" என்பது காரணப்பெயராயிற்று.

 

    உலகுயிர்கள் கழறு சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார்தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவு பெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வேண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடி சூடி நாட்டை ஆட்சி புரியும் பெருவேந்தர் ஆயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக் குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கி வர நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது உடல் முழுவதும் உவர்மண் படிந்து வெளுத்து இருந்தமையால்உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக் கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன்அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச்சேரன்,காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.

 

       சேரமான் பெருமாள் யானை மீது அமர்ந்து நகர்வலஞ் செய்து அரண்மனை அடைந்து அரியணையில் வீற்றிருந்து அரசுபுரிந்து அருளினார். மேல்திசை வேந்தராகிய இப்பெருந்தகையார் கீழ்த்திசை வேந்தராகிய சோழ மன்னரோடும் தென்திசை வேந்தராகிய பாண்டிய மன்னரோடும் நண்பராக விளங்கினார். மூவேந்தரும் தமிழகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள பகைகளைக் களைந்து திருநீற்றொளியாகிய சிவநெறி வளரவும்,வேதநெறி வளரவும் அறநூல் முறையில் ஆட்சி புரிந்தனர்.

 

       பெருமாதைக் கோதையார் தாம் பெற்ற அரச பதவியின் பயனும் நிறைந்த தவமும்தேடும் பொருளும்பெருந்துணையும் ஆகிய இவையெல்லாமாக விளங்குவது தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடித்தாமரை எனத் தெளிந்தார். ஆதலால் நாள்தோறும் சிவபூசை செய்வதைதமக்குரிய கடமையாக மேற்கொண்டார். திருமஞ்சனம்பூபுகைஒளி ஆகியவற்றுடன் செய்யும் அன்பு நிறைந்த சிவபூசை ஏற்றுக்கொண்ட இறைவர்தமது திருவடிச் சிலம்பின் ஒலியினைச் சேரமான் செவிகுளிரக் கேட்டு இன்புறும் வண்ணம் ஒலிப்பித்தலை வழக்கமாகக் கொண்டு அருளினார்.

 

       இவ்வாறு சிவபூசையில் ஈடுபட்ட சேராமான் பெருமான் சிவனடியார்களுக்கு வரையாது கொடுத்தும்சிவவேள்விகள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். இந்நிலையில் பாண்டியனது தலைநகராகிய மதுரையம்பதியிலே திருவாலவாய் என்னும் திருக்கோயிலிலே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் தம்மை இன்னிசையால் பரவிப்போற்றும் பாணபத்திரன் என்னும் இசைப் பாணரது வறுமையை நீக்கத் திருவுளங் கொண்டு அவரது கனவில் தோன்றி "அன்பனேஎன்பால் பேரன்புடைய சேரமான் பெருமாள் என்னும் வேந்தன் உனக்குப் பொன்பட்டாடைகள்நவமணிகலன்கள் முதலாக நீ வேண்டியதெல்லாம் குறைவறக் கொடுப்பான். அவனுக்கு ஒரு திருமுகம் எழுதிக்கொடுத்திருக்கிறோம். நீ அதனைப் பெற்றுக்கொண்டு மலைநாடு சென்று பொருள் பெற்று வருவாயாக" எனக் கூறி "மதிமலிபுரிசை" எனத் தொடங்கும் திருப்பாடல் வரையப் பெற்ற திருமுகத்தைக் கொடுத்தருளினார்.

 

       திருவாலவாயுடையார் அருளிய திருமுகப்பாசுரத்தைப் பெற்ற பாணபத்திரர்சேர நாட்டை அடைந்து சேரமான் பெருமாளைக் கண்டார். பாணர் தந்த திருமுகத்தை வாங்கி முடிமேற் கொண்ட சேரர் பெருமான் அப்பாசுரத்தைப் பலமுறை படித்து உள்ளம் உருகினார். அமைச்சர் முதலியோரை அழைத்து தமது நிதியறையில் உள்ள பலவகைப் பொருள்களையும் பொதி செய்து கொணரச் செய்து ‘இப்பெரும் பொருள்களையும்யானைகுதிரை முதலிய சேனைகளையும்இம்மலை நாட்டு ஆட்சி உரிமையினையும் தாங்களே ஏற்றருள வேண்டும்’ எனப் பாணபத்திரரை வேண்டி நின்றார். அவரது கொடைத் திறத்தைக் கண்டு வியந்த பாணபத்திரர் ‘என் குடும்ப வாழ்விற்குப் போதுமான பொருள்களை மட்டும் அடியேன் தங்கள்பால் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது இறைவனது ஆணை. ஆதலின்அரசாட்சியும் அதற்கு இன்றியமையாத அரச உறுப்புக்களுமாகிய இவற்றைத் தாங்களே கைக்கொண்டருளுதல் வேண்டும்’ என்று கூறினார். இறைவரது ஆணையைக் கேட்ட சேரமான்பெருமாள். அவ்வாணையை மறுத்தற்கு அஞ்சிப் பாணபத்திரது வேண்டுகோளிற்கு இசைந்தார். பாணரும் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் பெற்றுக்கொண்டு அன்பினால் தம்மைப் பின் தொடர்ந்து வந்து வழியனுப்பிய சேரமானிடம் விடைபெற்று மதுரை நகரத்தை அடைந்தார்.

 

       கழறிற்றறிவாராகிய சேராமான் பெருமாள்என்றும் போல ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த பொழுது,வழிபாட்டில் நாள்தோறும் கேட்டு இன்புறுவதாகிய திருச்சிலம்பொலியை அன்று கேட்கப் பெறாது பெரிதும் மனங்கலங்கினார். "அடியேன் என்ன பிழை செய்தேனோ" எனப் பொருமினார். "இறைவனை வழிபடும் ஆசை காரணமாக யான் சுமந்துள்ள இவ்வுடம்பினால் அடியேன் பெறுதற்குரிய இன்பம் வேறென்ன இருக்கிறது" எனக் கலங்கித் தம் உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணத்துடன் உடைவாளை உருவித் தம் மார்பில் நாட்டப் புகுந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய கூத்தப் பெருமான் விரைந்து தனது திருவடிச் சிலம்பொலியைச் சேராமன் பெருமாள் செவிகுளிரக் கேட்டு மகிழும் வண்ணம் ஒலிக்கச் செய்தார். சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்த சேரவேந்தர் தமது உடைவாளைக் கீழே எறிந்துவிட்டுத் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்று, "தேவர்களும் தேடிக் காணுதற்கரிய பெருமானே! இத்திருவருளை முன்பு செய்யாது தவிர்த்தது எது கருதி?" என வினவினார். அந்நிலையில் தோன்றாத் துணையாக மறைந்து நின்றருளிய இறைவர் "சேரனே! வன்தொண்டனாகிய சுந்தரன் தில்லையம்பலத்திலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றிய உணர்வுடன் நின்று புகழமைந்த திருப்பதிகங்களால் நம்மைப் பரவிப் பாடினான். அவன் பாடிய தீஞ்சுவைப் பாடலில் நாம் திளைத்திருந்தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத் தாழ்ந்தோம்" எனத் திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருள் மொழியைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் "அடியார்களுக்கு அருள் புரியும் இறைவனது கருணைத்திறம் என்னே" என வியந்து உளமுருகினார். இறைவன் திருநடம் புரிந்தருளும் பெரும்பற்றப் புலியூரி் அமைந்த பொன்னம்பலத்தையும்,அங்கே இறைவனது ஆடல் கண்டு மகிழ்ந்த தன்னேரில்லாப் பெரியோராகிய வன்தொண்டரையும் கண்டு வழிபடுதல் வேண்டும் எனக் கருதிச் சோழ நாட்டிற்குச் செல்ல விரும்பினார். திருவஞ்சைக் களத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வழிபட்டுச் சேனைகளுடன் புறப்பட்டுச் கொங்கு நாட்டைக் கடந்து சிவனடியார்கள் எதிர்கொண்டு போற்றச் சோழநாட்டை அடைந்தார். காவிரியில் நீராடி அதனைக் கடந்து தில்லைமூதுரின் எல்லையை அடைந்தார். அந்நிலையில் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் எதிர்கொண்டு வரவேற்றனர். அடியார்களோடு தில்லைத் திருவீதியை வலம்வந்து எழுநிலைக் கோபுரத்தை வணங்கி உட்புகுந்த சேரமான்பெருமாள் நாயனார் திருப்பேரம்பலத்தை இறைஞ்சி உள்ளே புகுந்து இறைவன் ஆடல் புரியும் திருச்சிற்றம்பலத்தின் முன் அணைந்தார். அளவில்லாப் பெருங்கூத்தராகிய இறைவரது திருக்கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய ஒருமையுணர்வால் கண்டு உருகிப் போற்றித் திருவருள் இன்பக்கடலில் திளைத்து இன்புற்றார். தாம் பெற்ற பேரின்பத்தை வையத்தார் அனைவரும் பெற்று மகிழும் வண்ணம் கூத்தப்பெருமானது கீர்த்தியை விரித்துரைக்கும் செந்தமிழ்ப் பனுவலாகிய "பொன்வண்ணத் திருவந்தாதி"யினைப் பாடியருளினார். சேரர் பாடிய திருவந்தாதியினைக் கேட்டு மகிழ்ந்த தில்லையம்பலவர் அதற்குப் பரிசிலாகத் தூக்கிய திருவடியில் அணியப் பெற்ற திருச்சிலப்பொலியை நிகழ்த்தியருளினார். ஆடற்சிலம்பு ஒலியினைச் செவிமடுத்து அளவிலாப் பேருவகை உற்ற சேரமான்பெருமாள் காலந்தோறும் கூத்தப்பெருமானைக் கும்பிட்டுத் திருல்லைப்பதியில் சில நாள் தங்கியிருந்தார்.

 

       பின்னர் நம்பியாரூரரைக் கண்டு வணங்குவதற்கு விரும்பித் தில்லையினின்றும் புறப்பட்டுப் பல தலங்களை வணங்கி திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாளது வருகையை உணர்ந்த நம்பியாரூரர்சிவனடியார்களுடன் அவரை எதிர்கொண்டு அழைத்தார். நம்பியாரூரைக் கண்ட சேரவேந்தர் நிலமிசை விழுந்து இறைஞ்சினார். தம்மை வணங்கிய சேரமான் பெருமாளைத் தாமும் வணங்கித் தம் இரு கைகளாலும் தூக்கி எடுத்துத் ஒருவர் ஒருவரில் கலந்த பெரும் நட்பினராய்ப் பெருமகிழ்ச்சி உற்றார்கள். இங்ஙனம் இருவரும் உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என அன்பினால் அளவளாவி மகிழும் தோழமைத் திறத்தைக் கண்ணுற்ற சிவனடியார்கள்,நம்பியாரூரரைச் ‘சேரமான் தோழர்’ என்ற பெயரால் அழைத்து மகிழ்ந்தனர். சேரமான் தோழராகிய சுந்தரர்,சேரமான் பெருமாளது கையினை பற்றி அழைத்துச் சென்றார். இருவரும் திருவாரூர்க் திருக்கோயிலை அடைந்து அடியார்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டபத்தைப் பணிந்து திருக்கோயிலை வலம் வந்தனர். சேரமான் பெருமாள் உடைய நம்பியாராகிய சுந்தரைத் தொடர்ந்து சென்று பூங்கோயில் அமர்ந்த பெருமானை நிலமிசைப் பல முறை விழுந்து இறைஞ்சினார். புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றிக் கண்களில் அன்பு நீர் பொழியத் "திருமும்மணிக்கோவை" என்னும் செஞ்சொல் மாலை புனைந்து ஏத்தினார். தாம் பாடிய செந்தமிழ் நூலைத் தம் தோழராகிய சுந்தரர் திருமுன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார். ஆரூரிடங்கொண்ட இறைவரும் சேரவேந்தர் பாடிய தெய்வப் பாமலையை விரும்பி ஏற்றுக்கொண்டருளினார். பின்பு சுந்தரர்,சேரமான் பெருமாளை அழைத்துக்கொண்டு நங்கை பரவையார் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார்திருவிளக்கு நிறைகுடம் முதலிய மங்கலப் பொருட்களுடன் சேரமான் பெருமானை வரவேற்று வணங்கிச் சேரர் பெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் உடன் வந்த பரிசனங்களிற்கும் தக்க வகையால் திருவமுது அமைத்து அன்புடன் உபசரித்தார். ஆண்ட நம்பியும் சேரமான் பெருமாளும் உடனிருந்து திருவமுது செய்தருளினார். இவ்வாறு சேரமான்பெருமாளும் நம்பியாரூரரும் திருவாரூரில் தங்கியிருக்கும் பொழுது பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய திருத்தலங்களை வழிபடவேண்டும் என்ற எண்ணம் சுந்தரர்க்கு உண்டாயிற்று. அவர்தம் விருப்பத்தினைச் சேரமான்பெருமாளுக்குத் தெரிவித்தார்.

 

       வன்தொண்டரைப் பிரியாத பெருமானாகிய சேரமான் பெருமாள் தமக்குத் திருமுகப் பாசுரம் அனுப்பியருளிய திருவாலவாய்ப் பெருமானைப் போற்றவேண்டுமெனும் பேரார்வத்தால் தாமும் அவருடன் செல்லத் துணிந்தார். ஒத்த உள்ள உடையார் இருவர் அடியர் புடைசூழத் திருமறைக்காடு முதலிய தலங்களை வணங்கித் தென்தமிழ்ப் பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார்கள். அப்போது நாடாள் வேந்தனாகிய பாண்டியனும்பாண்டிய மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனும் எதிர் சென்று இவ்விரு பெருமக்களையும் வரவேற்றுத் திருவாலவாய்த் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். நம்பியாரூரருடன் திருவாலவாய்ப் பெருமானைக் கண்டு மகிழ்ந்த சேரமான் பெருமாள், ‘அடியேனையும் ஒரு பொருளாக எண்ணித் திருமுகம் அருளிய பேரருளின் எல்லையை அறிந்திலேன்’ என எண்ணி உரை தடுமாறிக் கண்ணீர் அரும்ப ஆலவாய் கடவுளைப் பரவிப் போற்றினார். பாண்டியன் இவ்விரு பெருமக்களையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினான்.

 

       இங்ஙனம் சேர சோழ பாண்டியர்களாகிய தமிழ் வேந்தர் மூவரும் நம்பியாரூராகிய சுந்தரரும் ஒருவரோடொருவர் அன்பினால் அளவளாவிப் பாண்டி நாட்டுத் தலங்களைப் பணிந்து இன்புற்றனர். சேரமான் பெருமாளும்சுந்தரரும்பாண்டியர் சோழராகிய இருபெரு வேந்தர்களிடத்தும் விடைபெற்றுத் திருவாரூரரை அடைந்தனர். சேரமான் பெருமாள் அங்குச் சில நாள் தங்கியிருந்து தம் தோழராகிய நம்பியாரூரைத் தங்கள் நாட்டில் எழுந்தருள வேண்டுமென்று பலமுறையும் வேண்டிக்கொண்டனர். அவ்வேண்டுகோளுக்ணகு இங்கிய சுந்தரர்பரவையாரது இசைவு பெற்றுச் சேரவேந்தருடன் புறப்பட்டார். இருவரும் வழியிலுள்ள தலங்களை வணங்கிப் போற்றி மலைநாட்டவர் எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்தார். சேரமான் பெருமாள் தம் ஆருயிர்த் தோழராகிய நம்பியாரூரரை அரியணையில் அமரச் செய்துதம் தேவிமார்கள் பொற்குடத்தில் நன்னீர் ஏந்தி நிற்க நம்பியாரூரருடைய திருவடிகளை விளக்கி மலர்தூவி வழிபட்டார். அவருடன் உடனிருந்து அமுதருந்தி உபசரித்தார். செண்டாடுந் தொழில் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருவிழாவும் பாடல் ஆடல் இன்னியங்கள் முதலாக பலவகை வாத்தியங்கள் விளையாடல்களும் நிகழ்ச்செய்து தம் தோழரை மகிழ்வித்து அளவளாவி மகிழ்வாராயினர்.

 

       இங்ஙனம் நண்பர் இருவரும் அளவளாவி மகிழும் நாட்களில் நம்பியாரூரர்க்குத் திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வணங்க வேண்டுமென்ற நினைவு தோன்றியது. அந்நினைவு மீதூரப் பெற்ற சுந்தரர், "பொன்னும் மெய்ப்பொருளுந் தந்து போகமும் திருவும் புணர்த்தருளும் ஆரூர்ப் பெருமானை மறக்கலும் ஆமேஎனப் பாடித் தமது ஆற்றாமையை தம் தோழராகிய சேரமானுக்கு உணர்த்தி விடைபெற முயன்றார். சுந்தரரின் உளக்குறிப்பறிந்த சேரமான் பெருமாள், ‘இன்று உமது பிரிவாற்றேன் என்செய்வேன்’ என்றுரைத்து மிகவும் வருந்தினார். நம்பியாரூரர் தம் தோழரை நோக்கி ‘இந்நாட்டில் உளவாம் இடர் நீங்கப் பகை நீக்கி அரசாளுதல் உமது கடன்’ என அறிவுத்தினார். அதனைக் கேட்ட வேந்தர் பெருமான் ‘இவ்வுலக ஆட்சியும் வானுலக ஆட்சியுமாக அமைந்து எனக்கு இன்பம் செய்வன உம்முடைய திருவடித் தாமரைகளே. திருவாரூர்க்கு எழுந்தருள எண்ணிய உமது மனவிருப்பத்தை நீக்கவும் அஞ்சுகின்றேன்’ என்றார். "என்னுயிர்க்கு இன்னுயிராம் எழிலாரூர்ப் பெருமானை வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்" என்ற வன்றொண்டரை வணங்கி தம்முடைய திருமாளிகையில் உள்ள பெரும் பொருள்களைப் பொதிசெய்து ஆட்களின் மேல் ஏற்றுவித்து நெடுந்தூரம் சென்று வழியனுப்பினார். சுந்தரரும் தம்தோழரைத் தழுவி விடைபெற்றுத் திருவாரூரை அடைந்தார். சேரமான்பெருமாள் தம் தோழராகிய நம்பியாரூரரை மறவாத சிந்தையுடன் கொடுங்கோளூரிலிருந்து மலைநாட்டை ஆட்சிபுரிந்திருந்தார்.

 

       நெடுநாட்களின் பின் சுந்தரர் மீண்டும் கொடுங்கோளூருக்கு வந்து தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் பல நாட்கள் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சேரமான் பெருமாள் திருமஞ்சனச் சாலையில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலை அடைந்து அஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டுத் ‘தலைக்குத் தலைமாலை’ என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி நின்றார். அந்நிலையில் அவரது பாசத்தளையை அகற்றிப் பேரருள் புரிய விரும்பிய சிவபெருமான்சுந்தரரை அழைத்து வருமாறு திருக்கயிலாயத்தில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி அருளினார். வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலை அடைந்த தேவர்கள்,நம்பியாரூரரைப் பணிந்து நின்று ‘தாங்கள் இவ் வெள்ளையானையின் மீது அமர்ந்து திருக்கயிலைக்கு உடன் புறப்பட்டு வருதல் வேண்டுமென்பது இறைவரது அருளிப்பாடு’ என விண்ணப்பம் செய்தார்கள். இந்நிலையில் நம்பியாரூரர் செய்வதொன்றும் அறியாது தம் உயிர்த்தோழராகிய சேரமான்பெருமாளைத் தம் மனதில் சிந்தித்துக் கொண்டு வெள்ளையானையின் மீது ஏறிச் செல்வாராயினார்.

 

       இவ்வாறு தம் உயிர்த்தோழராகிய சுந்தரர்தம்மை நினைத்துச் செல்லும் பேரன்பின் திறத்தைத் திருவருளாற்றலால் விரைந்து உணர்ந்த கழற்றறிவாராகிய சேர வேந்தர்பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏறித் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணில் செல்லும் தம் தோழரைக் கண்டார். தமது குதிரையின் செவியிலே மந்திரத் திருவைந்தெழுத்தினை உபதேசித்தார். அவ்வளவில் குதிரை வானமீது எழுந்து வன்தொண்டர் ஏறிச்செல்லும் வெள்ளை யானையை வலம் வந்துஅதற்கு முன்னே சென்றது. அப்பொழுது சேரமான் பெருமாளைப் பின்தொடர்ந்து சென்ற படைவீரர்கள்குதிரை மீது செல்லும் தம் வேந்தர் பெருமானைக் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரையிற் கண்டு பின் காணப்பெறாது வருத்தமுற்றார்கள். தம் வேந்தர் பெருமானைத் தொடர்ந்து செல்ல வேண்டுமென்ற மனத்திட்பமுடையராய் உடைவாளினால் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீர யாக்கையைப் பெற்று விசும்பின் மீதெழுந்து தம் அரசர் பெருமானைச் சேவித்து சென்றனர். சேரமான்பெருமாளும் சுந்தரரும் திருக்கையிலாயத்தின் தெற்கு வாயிலை அணுகிக் குதிரையிலிருந்தும் யானையிலிருந்தும் இறங்கி வாயில்கள் பலவற்றையும் கடந்து திருஅணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரமான் பெருமாள் உள்ளே புக அனுமதியின்றி வாயிலில் தடைப்பட்டு நின்றார். அவருடைய தோழராகிய சுந்தரர் உள்ளே போய்ச் சிவபெருமான் திருவடி முன்னர் பணிந்தெழுந்தார். "கங்கை முடிக்கணிந்த கடவுளே! தங்கள் திருவடிகளை இறைஞ்சுதற் பொருட்டுச் சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்த நிற்கின்றார்" என விண்ணப்பம் செய்தார். சிவபெருமான்பெரிய தேவராகிய நந்தியை அழைத்துச் "சேரமானைக் கொணர்க" எனத் திருவாய்மலர்ந்தருளினார். அவரும் அவ்வாறே சென்று அழைத்து வந்தார்.

 

       சேரமான் பெருமாள் இறைவன் திருமுன்பு பணிந்து போற்றி நின்றார். இறைவன் புன்முறுவல் செய்து சேரமானை நோக்கி, "இங்கு நாம் அழையாதிருக்க நீ வந்தது எது கருதி" என வினவியருளினார். அதுகேட்ட சேரவேந்தர் இறைவனைப் பணிந்து “செஞ்சடைக் கடவுளே! அடியேன் இங்கு தெரிவித்து அருளும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. எனது பாசத்தளையை அகற்றுதற் பொருட்டு வன்தொண்டரது தோழமையை அருளிய பெருமானே! மறைகளாலும் முனிவர்களாலும் அளவிடுதற்கரிய பெரியோனாகிய உன்னைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு திருவுலாப்புறம் என்ற செந்தமிழ் நூல் ஒன்றைப் பாடி வந்துள்ளேன். இத்தமிழ் நூலைத் தேவரீர் திருச்செவி சாத்தியருளல் வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்" என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், "சேரனே அவ்வுலாவைச் சொல்லுக" எனப் பணித்தருளினார். சேரமான்பெருமாள் நாயனாரும் தாம் பாடிய "திருக்கைலாய ஞான உலா"வைக் கயிலைப் பெருமான் திருமுன்னர் எடுத்துரைத்து அரங்கேற்றினார். சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப்புறத்தை ஏற்றுக்கொண்ட இறைவன்அவரை நோக்கி,"சேரனே நம்பியாரூரனாகிய ஆலாலசுந்தரனுடன் கூடி நீவிர் இருவீரும் நம் சிவகணத்தலைவராய் இங்கு நம்பால் நிலைபெற்று இருப்பீராக" எனத் திருவருள் செய்யசேரமான்பெருமாள் சிவகணத் தலைவராகவும் திருக் கயிலையில் திருத்தொண்டு புரிந்திருப்பாராயினர்.

 

     அடுத்துஇத் திருக்குறளுக்கு விளக்கமாகதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான சுவாமிகள் பாடி அருளிய,"சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

சம்பந்தர் நாவரசர் பால் கண்டோம் சார்ந்துஉவப்ப

தும்,பிரிவின் உள்ளுவதும்,சோமேசா! --- நம்பி

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.

 

இதன்பொருள்---

 

       சோமேசா! நம்பி --- யாவரையும் விரும்பிஉவப்ப தலைக்கூடி --- உவக்குமாறு கூடிஉள்ள பிரிதல் --- இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும் என நினையுமாறு நீங்குதலாகிய,  அனைத்து --- அத்தன்மைத்து,  புலவர் தொழில் --- கற்றறிந்தாரது தொழில்,

 

       சம்பந்தர் நாவசர்பால் --- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் ஆகிய இவர்களிடத்தில்,  சார்ந்து உவப்பதும் --- கூடி மகிழ்தலையும்,  பிரிவின் உள்ளவதும் --- நீங்கும் காலத்து இனி எங்ஙனம் கூடுதும் என நினைவதும்கண்டோம் --- கண்டறிந்தோம் ஆகலான் என்றவாறு.

 

       தாம் நல்வழி ஒழுகல்பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின் அத்தன்மைத்து என்றார். அத்தன்மை அப்பயனைத் தரும் தன்மை.  நல்லொழுக்கம் காண்டலானும்தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார் மாட்டு எல்லாரும் அன்புடையர் அவர் என்பதாம்.  

 

"நல்தாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம்".             --- ஔவையார்

 

       'உள்ளஎஞ்ஞான்றும் எண்ணிப் பார்க்கும் அரிய கருத்துக்களை எல்லாம் அளவளாவிய காலத்து அறிவித்தமையால் நினைத்துக் கொண்டே இருக்க என்க.

 

       திருநாவுக்கரசு நாயனார் தில்லையில் திருப்பணி செய்து அமரும் நாளில்அம்மையார் ஞானப்பால் ஊட்ட உண்ட சீகாழிப் பிள்ளையாரின் திறத்தைக் கேட்டு,அவரைக் காண விருப்பம் கொண்டு காழிக்குச் செல்லஅவர் வருகை அறிந்த பிள்ளையார் திருக்கூட்டத்தோடு எதிர்கொள்ளநாயனார் கண்டவுடன் அடியில் வீழ்ந்து பணியபிள்ளையார் எடுத்து இறைஞ்சிஅப்பரே எனநாயனாரும் அடியேன் எனஇருவரும் உவகைக் கடலின் மூழ்கினார்கள். பின்வரும் திருப்பாடலை நோக்குக.

 

பிள்ளையார் கழல்வணங்கப் பெற்றேன்என்று

            அரசு உவப்பப் பெருகு ஞான

வள்ளலார் வாகீசர் தமைவணங்கப்

            பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க

உள்ளநிறை காதலினால் ஒருவர்ஒரு

            வரில் கலந்த உண்மை யோடும்

வெள்ளநீர்த் திருத்தோணி வீற்றிருந்தார்

            கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்.  --- பெரியபுராணம்.

 

     அடுத்துஇத் திருக்குளுக்கு விளக்கமாகசிதம்பரம் ஆசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய"முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

                                                            

மன்னிஇன்பம் துய்த்தசங்க வாணர்நக் கீரர்பிரிவை

முன்னி முன்னிச் சோர்ந்தார் முருகேசா - நன்னர்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்.      இதன் பொருள் ---


       முருகேசா --- முருகப் பெருமானேமன்னி --- ஒன்றாகப் பொருந்திஇன்பம் துய்த்த சங்கவாணர் --- இன்பத்தொடு கல்வியில் அளவளாவி இருந்த சங்கப் புலவர்கள்நக்கீரர் பிரிவை முன்னி முன்னி --- நக்கீரர் தங்களை விட்டுப் பிரிந்ததை எண்ணி எண்ணிசோர்ந்தார் --- தளர்ச்சி அடைந்தார்கள். நன்னர் --- நன்றாகஉவப்ப --- மகிழுமாறுதலைக்கூடி --- கூடிப் பழகிஉள்ளப் பிரிதல் --- இனிமேல் இவரை எப்பொழுது காணப் பெறுவேம் என்று எண்ணுமாறு பிரிதல்அனைத்தே புலவர் தொழில் --- அந்தத் தன்மையினதே புலவர் தொழில் ஆகும்.

 

       ஒன்றாகச் சேர்ந்து அளவளாவியிருந்த சங்கப் புலவர்கள் நக்கீரருடைய பிரிவை எண்ணி எண்ணிச் சோர்வடைந்தார்கள்.  மகிழுமாறு ஒன்றாகப் பொருந்தி இருந்து பிரியுங் காலத்திலே இனிமேல் நாம் எப்பொழுது இவரைக் காணப்பெறுவேம் என்று எண்ணுமாறு பிரியும் அத தன்மையினையுடையதாம் புலவர்களுடைய நட்புத் தொழில் என்பதாம்.

 

                                                            நக்கீரர் கதை

 

       நக்கீரர் சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரில் ஒருவராய் அமர்ந்து அப் புலவர்கட்கெல்லாம் தலைமை தன்மையைப் பெற்று இனிது அளவளாவிக் கலந்திருந்தார். பிறகு கால வேறுபாட்டினால் சிவபெருமானுடைய பாடலுக்குக் குற்றம் கூறி அப்பரமனோடு சொற்போரிட்டார். இதனால் வெகுண்ட பரமன் நக்கீரரைப் பொற்றாமரையில் வீழ்த்தியதோடு பொதிய வரைக்குச் சென்று அகத்தியரிடம் இலக்கணம் கற்குமாறும் தம்மை எதிர்த்த குற்றம் நீங்குமாறு திருக்கயிலையைப் போற்றி வழிபடுமாறும் கட்டளை இட்டு அருளினார். இதனால் சங்கப் புலவர்கள் நக்கீரரைப் பிரியுமாறு நேர்ந்தது. அப்பொழுது அவர்கள் நாம் இனிமேல் எப்பொழுது இவரைக் கண்டு உரையாடி மகிழப் போகின்றோமோ என்று உள்ளம் வாடி வருந்தினார்கள்.

 

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.

                                                                        

தேவர் அனையர் புலவருந் தேவர்

தமர் அனையர் ஓரூர் உறைவார் - தமர் உள்ளும்

பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர்

கற்றாரைக் காத லவர்.            ---  நான்மணிக்கடிகை.

 

இதன் பொருள் ---

 

     புலவரும் --- கல்வியறிவுடைய புலவர்களும்தேவர் அனையர் --- தேவருக்கு ஒப்பாவார்கள்ஓர் ஊர் உறைவார் --- அப்புலவர்கள் உள்ள ஊரில் வாழ்பவர்கள்தேவர் தமர் அனையர் --- அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவார்கள்தமருள்ளும் --- அவ்வாறு உறைந்து உறவானார்ள்ளு உம்பேணி வழிபடுவார் --- அப் புலவரை விரும்பி வழிப்பட்டவர்கள்பெற்றன்னர் --- அவர் தம் அருள் பெற்றாரை ஒப்பர்கற்றாரைக் காதலவர் --- புலவரைக் காதலித்து ஒழுகுவார்கற்றன்னர் --- அப்புலவரை ஒப்பக் கற்றவரே ஆவர்.

 

      புலவர்கள் தேவரை ஒப்பர்அவர் ஊரில் உறைவார் அவருடைய உறவினரை ஒப்பர்அவருள்ளும் பேணி வழிபடுவார் அவருள் பெற்றாரை ஒப்பர்;  அவரைக் காதலித்து ஒழுகுவார் அக் கற்றாரையே ஒப்பர்.

 

 

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் --- தொல்சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.  --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின் நல்லறிவு நாளும் தலைப்படுவர் --- தாம் கல்லாதவரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப் பெறுவர்தொல் சிறப்பின் ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புது ஒடு தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு ---இயற்கை மணச் சிறப்பினையுடைய விளக்கமான நிறம் அமைந்த பாதிரி மலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்குத் தான் அம்மணத்தைத் தந்தாற்போல வென்க.

 

            கல்வி பயிலும் பேறில்லாதார் கற்றாரோடு சேர்ந்து பழகுதலாவது மேற்கொள்ள வேண்டும்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...