"சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்
பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும்
அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி
நடந்துகதி அடைய மாட்டார்!
திங்கள் அணி சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய்
நல்லசுரைக் காயா காதே!"
இதன் பொருள் ---
திங்கள் அணி சடையாரே - பிறைச்சந்திரனை திருச்சடையில் தரித்த சிவபரம்பொருளே! தண்டலையாரே - திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரே!, அங்கண் உலகில் சிறியோர் சங்கை அறப்படித்தாலும் கேட்டாலும் பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும் - அழகிய இடத்தை உடைய உலகத்தில் அற்பர்கள் ஐயம் இன்றிப் படித்தாலும் பெரியோர் சொல்வதைக் கேட்டாலும் மற்றவர்களுக்கு நலம் உரைத்தாலும், தாம் அடங்கி நடந்து கதி அடைய மாட்டார் - தாங்கள் மட்டும் அடக்கமாக நடந்து நல்ல கதி சேரமாட்டார்கள், கங்கையிலே பேய்ச் சுரைக்காய் சிறிது காலம் படர்ந்தாலும் நல்ல சுரைக்காய் ஆகாது - கங்கைக் கரையிலே பேய்ச்சுரைக்காய் கொஞ்ச காலம் படர்ந்தாலும் (கங்கை நீரில் வளர்ந்ததால்) இனிய சுரைக்காய் ஆகாது.
பேய்ச்சுரை இயல்பாகக் கசக்குந் தன்மை உடையது. தன்னிடம் முழுகுவோரைத் தூய்மைப் படுத்தும் கங்கை நீர்க்குப் பேய்ச்சுரையின் கசப்பை நீக்கும் ஆற்றல் இல்லாமற் போனாற்போல, அறிவை ஊட்டும் கல்வியாலும் கேள்வியாலும் பிறர்க்குக் கூறுவதனாலும் மட்டும் அற்பர்களுக்கு இயற்கையிலே உள்ள தீய பண்பு விலகாது.
"கற்பூரப் பாத்தி கட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்;
சொற் பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக நடக்கும் தானே."
என்பது விவேக சிந்தாமணி.
No comments:
Post a Comment