"தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே - தாயினும் நல்லருள் புரியும் மலைமகளாகிய உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்டவனே!, அனகனே - தூயவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு கருமமும் தான் அறிந்து - தன் அரசனுடைய ஆற்றலும், மாற்றரசர் நினைவும், நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் - சிறந்த அறிவும் சூழ்ச்சியும் பொருந்தியவன் தானைத் தலைவன் எனப்படுவான்,
மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும் எல்லாம் - அரசர்களின் உள்ளக் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான மதி மந்திரி - தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சன் ஆவான்,
துன்னிய படைக் குணம் - செறிவான படைகளின் இயல்பும், கரி பரி பரீட்சையே - யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழ் பகைவர் புரி சூழ்ச்சியும் - சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் - பின் வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும், உள சூரனே சேனாதிபன் - உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.
No comments:
Post a Comment