கதிரவன் உதிப்பதெங் கே?நளினம் எங்கே?
களித்துளம் மலர்ந்ததென்ன?
கார்மேகம் எங்கே? பசுந்தோகை எங்கே?
கருத்தில்நட் பானதென்ன?
மதியம்எங் கே?பெருங் குமுதம்எங் கே?முகம்
மலர்ந்துமகிழ் கொண்டதென்ன;
வல்லிரவு விடிவதெங் கே?கோழி எங்கே?
மகிழ்ந்துகூ விடுதல்என்ன?
நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு
நேசம்ஒன் றாயிருக்கும்;
நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலும்அவர்
நிறைபட்சம் மறவார்கள்காண்;
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
மருவுசோ ணாட்டதிபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
இதன் பொருள் ---
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ மருபு சோணாட்டு அதிபனே! - மதிலும் கோபுரமும் பொய்கையும் சூழ்ந்திருக்கும் சோழநாட்டுத் தலைவனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கதிரவன் உதிப்பது எங்கே? - சூரியன் இதிக்கும் இடம் எங்கே?, நளினம் எங்கே? - தாமரை இருக்குமிடம் எங்கே?, உளம் களித்து மலர்ந்தது என்ன ? - மன மகிழ்ச்சியுடன் தாமரை ஏன் மலர்கிறது?,
கார்மேகம் எங்கே? - கருமையான மேகம் எங்கே உள்ளது?, பசுந்தோகை எங்கே? - பசிய தோகையினை உடைய மயில் எங்கு உள்ளது?, கருத்தில் நட்பு ஆனது என்ன? - மனம் உவந்து நட்புக் கொண்டது ஏன்?
மதியம் எங்கே? - திங்கள் எங்கே உள்ளது? பெருங் குமுதம் எங்கே? - பெரிய அல்லிமலர் எங்கே உள்ளது?, முகம் மலர்ந்து மகிழ்கொண்டது என்ன? - முகமலர்ச்சியுடனே இன்பம் அடைவது ஏன்?
வல்இரவு விடிவது எங்கே - கொடிய இராப்பொழுது நீங்குவது எப்படி?, கோழி எங்கே? - சேவற்கோழியின் நிலைமை எப்படி?, மகிழ்ந்து கூவிடுதல் என்ன? - சேவற்கோழி விடியலை அறிந்து எங்ஙனம் கூவுகிறது?,
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் - செல்வம் மிக்க அரசர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நட்பு மாறாமலே இருக்கும்;
நீதிமிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறைபட்சம் மறவார்கள் - நீதிநெறி அறிந்த நல்லோர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்த அன்பை மறந்துவிடமாட்டார்கள்.
அன்புக்கு எல்லையில்லை என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment