68. அன்புக்கு எல்லை இல்லை

 

கதிரவன் உதிப்பதெங் கே?நளினம் எங்கே?

     களித்துளம் மலர்ந்ததென்ன?

கார்மேகம் எங்கே? பசுந்தோகை எங்கே?

     கருத்தில்நட் பானதென்ன?


மதியம்எங் கே?பெருங் குமுதம்எங் கே?முகம்

     மலர்ந்துமகிழ் கொண்டதென்ன;

வல்லிரவு விடிவதெங் கே?கோழி எங்கே?

     மகிழ்ந்துகூ விடுதல்என்ன?


நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு

     நேசம்ஒன் றாயிருக்கும்;

நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலும்அவர்

     நிறைபட்சம் மறவார்கள்காண்;


மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ

     மருவுசோ ணாட்டதிபனே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ மருபு சோணாட்டு அதிபனே! - மதிலும் கோபுரமும் பொய்கையும் சூழ்ந்திருக்கும் சோழநாட்டுத் தலைவனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கதிரவன் உதிப்பது எங்கே? - சூரியன் இதிக்கும் இடம் எங்கே?, நளினம் எங்கே? - தாமரை இருக்குமிடம் எங்கே?, உளம் களித்து மலர்ந்தது என்ன ? - மன மகிழ்ச்சியுடன் தாமரை ஏன் மலர்கிறது?, 

கார்மேகம் எங்கே? - கருமையான மேகம் எங்கே உள்ளது?, பசுந்தோகை எங்கே? - பசிய தோகையினை உடைய மயில் எங்கு உள்ளது?, கருத்தில் நட்பு ஆனது என்ன? - மனம் உவந்து நட்புக் கொண்டது ஏன்?

மதியம் எங்கே? - திங்கள் எங்கே உள்ளது? பெருங் குமுதம் எங்கே? - பெரிய அல்லிமலர் எங்கே உள்ளது?, முகம் மலர்ந்து மகிழ்கொண்டது என்ன? - முகமலர்ச்சியுடனே இன்பம் அடைவது ஏன்?

வல்இரவு விடிவது எங்கே - கொடிய இராப்பொழுது நீங்குவது எப்படி?, கோழி எங்கே? - சேவற்கோழியின் நிலைமை எப்படி?, மகிழ்ந்து கூவிடுதல் என்ன? - சேவற்கோழி விடியலை அறிந்து எங்ஙனம் கூவுகிறது?,

நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் - செல்வம் மிக்க அரசர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நட்பு மாறாமலே இருக்கும்; 

நீதிமிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறைபட்சம் மறவார்கள் - நீதிநெறி அறிந்த நல்லோர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்த அன்பை மறந்துவிடமாட்டார்கள்.

     அன்புக்கு எல்லையில்லை என்பது சொல்லப்பட்டது.


No comments:

Post a Comment

உலகநீதி - 12

  "கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;     கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்; தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;     துர்ச்சன...