79. மழைநாள் குறித்து

 


"சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்ல

     சீரான பரணி மழையும்,

  தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்

     சேரும்நா லாநா ளினில்


ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்

     ஓங்கும்ஏ காத சியினில்

  ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,

     உண்டா யிருந்தாடியில்


பத்திவரு தேதி ஐந்தினில் ஆதி வாரமும்

     பகரும்ஆ வணிமூ லநாள்

  பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திடப்

     பாரில்வெகு விளைவும் உண்டாம்;


அத்தனே! பைங்குவளை மாலையணி மார்பன் ஆம்

     அண்ணல் எமதருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அத்தனே - தலைவனே!, பைங் குவளை மாலை அணி மார்பன் ஆம் அண்ணல் எமது அருமை மதவேள் - பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

சித்திரை திங்கள் பதின்மூன்றுக்கு மேல் நல்ல சீரான பரணி மழையும் - சித்திரை மாதத்திலத் பதின்மூன்று நாட்களுக்கு மேல் புகழ்பெற்ற பரணி நாளில் பெய்யும் மழையும், 

தீது இல் வைகாசியில் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும் மழையும் - குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும் நாலாம் நாளில் சரியாகி வரும் மழையும், 

அ ஆனியில் தேய் பிறையில் ஓங்கும் ஏகாதசியினில் ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும் - அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும் ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், உண்டாயிருந்து - பெய்திருந்து, 

ஆடியில் பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதிவாரமும் - ஆடித் திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக் கிழமையும், 

பகரும் ஆவணி மூலநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திட - கூறப்படும் ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும் நேர்ந்தால், 

பாரில் வெகு விளைவும் உண்டாம் - உலகில் மிகுந்த விளைவு உண்டாம்.


No comments:

Post a Comment

14. அற்பருக்கு நல்ல புத்தி வராது

  "சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்      பிறர்க்குறுதி தனைச்சொன் னாலும் அங்கண்உல கினிற் சிறியோர் தாமடங்கி      நடந்துகதி அடைய மாட்டார்!...