உலகநீதி - 12

 


"கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;

    கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்;

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;

    துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம்;

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்;

    வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்;

மாறான குறவருடை வள்ளி பங்கன்

    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!"


இதன் பொருள் ---

ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவு படுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே.

பூ தேடி - பூவைத் தேடி, கொண்டை மேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே.

தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை உண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக் கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே.

துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே.

வீறு ஆன - பெருமை மிக்க, தெய்வத்தை - தெய்வத்தை இகழவேண்டாம் - இகழாதே.

வெற்றி உள்ள - மேன்மை உடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்க வேண்டாம் - வெறுக்காதே.

மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமை உடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக.


விளக்கம் ---

ஒரு குடியில் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது. (கூறு - பிளவு; பிரிவு.)  பிறர் காணும்படி கொண்டை மேல் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர் போலத் திரிவது ஆகாது என்று சொல்லப்பட்டது. முன் இருந்து பார்த்தால் தலையில் சூடி உள்ள பூ தெரியாத வகையில் பூச்சூடிக் கொள்ள வேண்டும். மலரைக்  கண்டால் இறைவனுக்குச் சாத்த வேண்டும். பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. (தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல்.) தீய தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர். "தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார்சொல் கேட்பதுவும் தீதே; தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு இணங்கி இருப்பதுவும் தீது." என்னும் ஔவையார் அருள்மொழியைக் கருத்தில் கொள்க.  பெருமையுள்ள தெய்வத்தை இகழ்ந்து உரைத்தல் கூடாது. "தெய்வம் இகழேல்" என்பது ஔவையிர் அருள்மொழி. கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பெரியோரை வெறுத்தல் கூடாது. "பெரியாரைத் துணைக் கோடல்" எனவும், "பெரியாரைப் பிழையாமை" எனவும் திருவள்ளுவ நாயனார் வகுத்துள்ள திருக்குறள் அதிகாரங்களைக் காண்க.


No comments:

Post a Comment

உலகநீதி - 12

  "கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்;     கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம்; தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்;     துர்ச்சன...