"மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
மண்மேல் இருந்துவாழ்ந்து
மடியாதிருந்தபேர் இல்லை;அவர் தேடியதை
வாரிவைத் தவரும்இல்லை;
பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று
பல்கோடி நினைவையெண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்,
ஆசைவலை யிற்சுழலுவார்;
வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்,
மற்றும்ஒரு பகையும்உண்டோ?
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே."
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லாரும் - மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும், மண்மேல் இருந்து வாழ்ந்தும் மடியாது இருந்த பேர் இல்லை - மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை;
தேடியதை வாரி வைத்தவரும் இல்லை - (சிறிது சிறிதாகப் பாடுபட்டுச்) சேர்த்த பொருளைத் (தம்முடன் எடுத்துச் செல்ல) அள்ளி வைத்தவர்களும் இல்லை;
பன அதனை நம்பியே ஏர்பூட்டு கதை என - பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மை போல, பாழான உடலை நம்பி - அழியும் உடலை (நிலையானது என்று) நம்பிக்கை கொண்டு, பார்மீதில் இன்னும் வெகுநாள் இருப்போம் என்று - உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல்கோடி நினைவை எண்ணி - பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் - நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்பாக நின் பதத்தை அர்ச்சித்து - அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, முத்தி பெறல்வேண்டும் என்று எண்ணார்கள் - வீடு அடையவேண்டும் என நினையார்கள்;
ஆசை வலையில் சுழலுவார் - ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்;
வனிதையர்கள் காமவிகாரமே பகையாகும் - (அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; மற்றும் ஒரு பகைமை உண்டோ? - வேறொரு பகை இல்லை.
No comments:
Post a Comment