71. நிலையாமை

 

"மனுநல்மாந் தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்

     மண்மேல் இருந்துவாழ்ந்து

மடியாதிருந்தபேர் இல்லை;அவர் தேடியதை

     வாரிவைத் தவரும்இல்லை;


பனியதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்

     பாழான உடலைநம்பிப்

பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று

     பல்கோடி நினைவையெண்ணி


அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்

     அன்பாக நின்பதத்தை

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்,

     ஆசைவலை யிற்சுழலுவார்;


வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்,

     மற்றும்ஒரு பகையும்உண்டோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர  ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லாரும் - மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும், மண்மேல் இருந்து வாழ்ந்தும் மடியாது இருந்த பேர் இல்லை - மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; 

தேடியதை வாரி வைத்தவரும் இல்லை - (சிறிது சிறிதாகப் பாடுபட்டுச்) சேர்த்த பொருளைத் (தம்முடன் எடுத்துச் செல்ல)  அள்ளி வைத்தவர்களும் இல்லை; 

பன அதனை நம்பியே ஏர்பூட்டு கதை என - பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மை போல, பாழான உடலை நம்பி - அழியும் உடலை (நிலையானது என்று) நம்பிக்கை கொண்டு, பார்மீதில் இன்னும் வெகுநாள் இருப்போம் என்று - உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல்கோடி நினைவை எண்ணி - பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் - நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்பாக நின் பதத்தை அர்ச்சித்து - அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, முத்தி பெறல்வேண்டும் என்று எண்ணார்கள் - வீடு அடையவேண்டும் என நினையார்கள்; 

ஆசை வலையில் சுழலுவார் - ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்; 

வனிதையர்கள் காமவிகாரமே பகையாகும் - (அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; மற்றும் ஒரு பகைமை உண்டோ? - வேறொரு பகை இல்லை.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...